Updates from August, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • என். சொக்கன் 11:37 pm on August 31, 2013 Permalink | Reply  

    மனக் கணக்கு 

    • படம்: கோபுர வாசலிலே
    • பாடல்: தாலாட்டும் பூங்காற்று
    • எழுதியவர்: வாலி
    • இசை: இளையராஜா
    • பாடியவர்: எஸ். ஜானகி
    • Link: http://www.youtube.com/watch?v=326Usof7ZOQ

    நள்ளிரவில் நான் கண் விழிக்க,

    உன் நினைவில் என் மெய் சிலிர்க்க,

    பஞ்சணையில் நீ முள் விரித்தாய்,

    பெண் மனதை நீ ஏன் பறித்தாய்?

    உங்கள் வீட்டின் பின்புறத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதை உங்களுக்கு மிகவும் பிடிக்கும். இதை வாக்கியமாக்கச் சொன்னால் எப்படிச் சொல்வீர்கள்?

    ‘எனக்கு அந்த மரத்தை மிகவும் பிடிக்கும்’.

    இதில் மற்ற வார்த்தைகள் ஒருபுறமாக இருக்கட்டும், அந்த ‘மரத்தை’ என்ற வார்த்தையைமட்டும் எடுத்துக்கொள்வோம். அது எப்படி வந்தது?

    மரம் + ஐ என்கிற வேற்றுமை உருபு, மரமை என்றுதானே மாறவேண்டும்? ஏன் ‘மரத்தை’ என்று ஆனது?

    தமிழ் இலக்கணத்தில் இதற்குச் ‘சாரியை’ என்று பெயர். ஒரு சொல்லின் நிறைவு எழுத்தாக ‘ம்’ இருந்து, அதோடு ஐ, ஆல், கு, இன், அது, கண் போன்ற வேற்றுமை உருபுகள் சேர்கிறபோது, இந்த இரண்டுக்கும் இடையே ’அத்து’ என்கிற சாரியை கூடும்.

    ஆக, மரம் + ஐ = மரம் + அத்து + ஐ = மரத்தை

    இதேபோல், மரம் + இல் = மரம் + அத்து + இல் = மரத்தில், மரம் + கு = மரம் + அத்து + கு = மரத்துக்கு… இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

    இந்தப் பாட்டில், மரம் இல்லை, மனம்தான் இருக்கிறது. அதுவும் ‘ம்’ என்ற எழுத்தில் முடிவதால், இதே விதிமுறை பொருந்தும். அதாவது, மனம் + அத்து + ஐ = மனத்தை. ‘பெண் மனத்தை நீ ஏன் பறித்தாய்’ என்றுதான் எழுதவேண்டும்.

    அப்படியானால் பாரதியார் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்று எழுதியதும் தவறா? அந்த வரி ‘மனத்தில் உறுதி வேண்டும்’ என்று இருக்கவேண்டுமா?

    உண்மைதான். ஆனால், கவிதைக்கு வேறு இலக்கணங்கள் உண்டு என்பதால், இதுபோன்ற சில மீறல்கள் அனுமதிக்கப்படுகின்றன. எல்லாக் கவிஞர்களும் தெரிந்தே மீறியிருக்கிறார்கள்.

    கொஞ்சம் பொறுங்கள், மனம் + ஐ என்று எழுதினால்தானே ‘மனத்தை’ என்று வரும்? அதையே நான் மனது + ஐ என்று எழுதினால்? அப்போது ‘மனதை’ என்பது சரிதானே?

    வடமொழியில் ‘மனஸ்’ அல்லது ‘மன்’ என்ற வடமொழிச் சொல் உள்ளது. ஆனால் தமிழில் அது பயன்படுத்தப்படுவதில்லை, ‘மனம்’ என்ற வேறு சொல் உள்ளது. இதைப் பலர் ‘மனது’ என்றும் எழுதுகிறார்கள். ஆனால் அது சரியான பயன்பாடாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

    உண்மையில், மனம் + ஐ = மனம் + அத்து + ஐ = மனத்தை என்பதுதான் இலக்கணம். இது தெரியாத யாரோ, ‘மனத்தை’ என்ற வார்த்தையை மனது + ஐ என்று தவறாகப் பிரித்து ‘மனது’ என்று ஒரு வார்த்தையை உருவாக்கிவிட்டார்கள் என்று தோன்றுகிறது. பின்னர் அதை இன்னும் கொச்சையாக்கி ‘மனசு’ என்று வேறு மாற்றிவிட்டார்கள்.

    தற்போது, ‘மனம்’க்கு இணையாக, ‘மனது’ என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் அதைச் சரி என்று ஏற்றுக்கொண்டால் ‘மனதை’, ‘மனதில்’ என்று எழுதுவதும் சரி. ’மனம்’ என்பதுதான் வேர்ச்சொல் என்று வைத்துக்கொண்டால், ‘மனத்தை’, ‘மனத்தில்’ என்பதுதான் மிகச் சரி!

    ***

    என். சொக்கன் …

    31 08 2013

    273/365

     
    • Venugopal 11:49 pm on August 31, 2013 Permalink | Reply

      Wow! thank you!Totally something new! But ‘மனத்தை’, ‘மனத்தில்’ sounds different and we used to மனதை and மனதில்.

    • rajinirams 12:32 am on September 1, 2013 Permalink | Reply

      நல்ல பதிவு.”தேடினேன் வந்தது”-ஊட்டி வரை உறவு கண்ணதாசன் பாடலில் என் மனத்தில் ஒன்றை பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி என்று வரும்.சந்தத்துக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொள்கிறார்கள் போலும். நன்றி.

    • Niranjan 12:31 pm on September 1, 2013 Permalink | Reply

      நல்ல பதிவு சார். ஆனால், மனம் என்பது தூய தமிழ்ச்சொல். மனஸ் என்ற வடமொழியிலிருந்து வந்ததல்ல.

    • amas32 6:02 pm on September 2, 2013 Permalink | Reply

      நீங்கள் வேறு ஒரு இடத்தில் இதைப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தீர்கள். அது முதற்கொண்டு நான் மனத்தில், மனத்தை என்றே முடிந்த வரை தவறு செய்யாமல் எழுதி வருகிறேன். நன்றி 🙂
      amas32

  • G.Ra ஜிரா 6:04 pm on August 30, 2013 Permalink | Reply  

    பொருத்தம் 

    எல்லாம் நன்றாகப் பொருந்தி வந்தால் மட்டுமே எதுவும் பெரும் வெற்றி பெறும்.

    எது பொருந்த வேண்டும்? அப்படிப் பொருந்தினால் எது வெற்றி பெறும்?

    காதலைத்தான் சொல்கிறேன். காதல் வெற்றி பெற மனப் பொருத்தம் வேண்டும். இல்லையென்றால் தோல்விதான். அதனால்தான் இலக்கியம் கூட பொருந்தாக் காமம் என்று ஒரு வகையையே வைத்திருக்கிறது. பெயரிலேயே தெள்ளத்தெளிவாக அது பொருந்தாது என்பதையும் முடிவு செய்திருக்கிறது இலக்கியம்.

    அப்படி உள்ளம் சிறப்பாகப் பொருந்திய காதலர்கள் பாடினால் எப்படி பாடுவார்கள்? கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் உடனடியாக என் நினைவுக்கு வருகிறது.

    என்ன பொருத்தம் நமக்குள் என்ன பொருத்தம்
    காதல் என்னும் நாடகத்தில் கல்யாணம் சுகமே
    படம் – ரகசிய போலீஸ் 115
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

    காதலர் இருவருக்கும் மனப் பொருத்தம் மிகப் பொருத்தமாக இருந்தால் திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டியதுதான்.

    அதெல்லாம் சரி. கல்யாணத்தில் பத்து பொருத்தங்கள் பார்ப்பார்களாமே. அவை எவையெவை?

    வைதிக முறைப்படி நடக்கும் திருமணங்களில் பார்க்கப்படும் பொருத்தங்கள் பத்து மட்டுமல்ல. மொத்தம் பதினாறு. அந்தப் பதினாறில் பத்து பொருந்தினாலே திருமணம் செய்யலாம் என்பது கருத்து. அந்த பதினாறு பொருத்தங்கள் எவையெவை எனப் பார்க்கலாமா?

    1. கிரக பொருத்தம்
    2. நட்சத்திர பொருத்தம்
    3. கண பொருத்தம் (மணமக்களின் குணப் பொருத்தத்தை இது குறிக்கும்)
    4. மகேந்திர பொருத்தம் (குழந்தைப் பேறு)
    5. ஸ்திரி தீர்க்க பொருத்தம் (தீர்க்க சுமங்கலியாக இருக்கும் பெருமை)
    6. யோனி பொருத்தம் (இன்பமான இல்லறவாழ்க்கைக்காக)
    7. இராசி பொருத்தம்
    8. இராசியதிபதி (மணமக்களின் மனவொற்றுமைக்கு)
    9. வசிய பொருத்தம் (ஒருவர் மீது ஒருவருக்கு உண்டாகும் ஈர்ப்பு)
    10. இரஜ்ஜு பொருத்தம் (மாங்கல்ய பலம்)
    11. வேதை பொருத்தம் (வாழ்வில் வரும் இன்பதுன்பங்களைக் காட்டும்)
    12. விருஷ பொருத்தம் (வம்சா விருத்தி)
    13. ஆயுள் பொருத்தம்
    14. புத்திர பொருத்தம்
    15. நாடி பொருத்தம்
    16. கிரக பாவ பொருத்தம் (செய்த செய்யப் போகும் பாவங்கள் பற்றியது)

    மனப்பொருத்தம் மட்டும் இருந்தால் போதாது. ஒவ்வொருவருக்குமான உடற் பொருத்தமும் தேவை. அது இருந்தால்தான் இன்பம் பெருகி இல்லறம் நிலைக்கும். அதையும் கவியரசர் கண்ணதாசன் ஒரு பாட்டில் சொல்லியிருக்கிறார்.

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
    மனது மயங்கியென்ன உனக்கும் வாழ்வு வரும்
    பொருத்தம் உடலிலும் வேண்டும்
    புரிந்தவன் துணையாக வேண்டும்
    படம் – மன்மதலீலை
    இசை – திரையிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.விசுவநாதன்

    இப்படியெல்லாம் பொருந்தி வாழும் கணவன் மனைவியரைக் கண்டால் எல்லாருக்கும் மகிழ்ச்சி வரும். சிலருக்கு மட்டும் பொறாமை வரும். அதற்கும் உண்டு ஒரு கண்ணதாசன் பாட்டு.

    எனக்கும் உனக்குந்தான் பொருத்தம்
    அதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்
    படம் – முகராசி
    இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்

    காதலரோடுதான் பொருத்தம் பார்க்க வேண்டுமா? கடவுளோடும் பொருத்தம் பார்க்கிறார் வள்ளலார்.

    எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ
    இந்தப் பொருத்தம் உலகில் பிறருக்கு எய்தும் பொருத்தமோ

    முருகப் பெருமானின் திருவருள் முழுமையாகப் பெற்றவர் வள்ளலார். வெற்றுக் கண்ணாடியில் மயிலேறி கந்தன் வரக்கண்ட மாமணி அவர்.

    ஆனால் பாடலில் முருகனை மெய்ப்பொருள் வடிவமாகவே எழுதியிருக்கிறார். அந்த மெய்ப்பொருளோடு தனக்கு உண்டான பொருத்தத்தை வியந்து பாராட்டுகிறார்.

    ஆண்டவனோடு பொருந்திய உள்ளத்தில் துன்பமில்லை. துயரமில்லை. வலிகள் இல்லை. வேதனை இல்லை. எல்லாம் இன்ப மயம். பேரின்பமயம்.

    வள்ளலார் அருளிய திருவருட்பாவின் இந்த அற்புத வரிகள் நம்ம வீட்டு தெய்வம் திரைப்படத்தில் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் இந்தப் பாடல் இடம் பெற்றது. என்ன… ஒரு திருமண மேடையில் விலைமகளொருத்தி ஆடிப்பாடுவதாக அமைந்த காட்சியில் பாடல் இடம் பெற்றது.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    1. என்ன பொருத்தம் (டி.எம்.எஸ், பி.சுசீலா) – http://youtu.be/KJobbwySqRI
    2. எனக்கும் உனக்குந்தான் (டி.எம்.எஸ், பி.சுசீலா) – http://youtu.be/b_6C2Z3-8XQ
    3. மனைவி அமைவதெல்லாம் (கே.ஜே.ஏசுதாஸ்) – http://youtu.be/f4VxmTuaztQ
    4. எனக்கும் உனக்கும் இசைந்த (பி.சுசீலா) – http://youtu.be/m0urUMBv_ZA

    பின்குறிப்பு – என்ன பொருத்தம் பாடலிலும் எனக்கும் உனக்குந்தான் பொருத்தம் பாடலிலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் நடித்தது என்ன அதிசயப் பொருத்தமோ!

    அன்புடன்,
    ஜிரா

    272/365

     
    • uma chelvan 9:57 pm on August 30, 2013 Permalink | Reply

      Very interesting post! ஆனால், கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா இல்ல ஓடி போய் கல்யாணம் தான் கட்டிக்கலமா என்ற கால கட்டத்லில் பொருத்தம் எங்கே பார்கிறது???? எது எப்படி இருப்பினும், காதலின் போது நாம் ஒருவர் மீது வைக்கும் “பேரன்பு என்றும் பெரும் துன்பம் தான்”!!!

    • uma chelvan 11:42 pm on August 30, 2013 Permalink | Reply

      நாம் ஒன்றா வேறா? ஒன்றெனில் சரியானதைச்செய்யும் சக்தி வரட்டும், வேறெனில் வீணாய் கனவுகளில் காலம் கரையாதிருக்கட்டும்…. அன்பு சத்தியம் என்பதால் என் அவசரத்துக்கு உடனே வராது, ஆனாலும் காத்திருக்க திடம் கிடைக்கும் சன்னதியில்.
      நானென்றால் அது அவளும் நானும், ஆதலால் காத்திருத்தலும் அவளால், காத்திருத்தலும் அவளே !! A wonderful post by Dr. Rudhran….I think it is most appropriate for this post !!!

    • rajinirams 4:32 am on August 31, 2013 Permalink | Reply

      பதினாறு பொருத்தங்களையும் பட்டியலிட்டு.அதற்கு”பொருத்தமான”பாடல்களையும் கொன்டு அருமையான பதிவை தந்திருக்கிறீர்கள்.புருஷன் பொஞ்சாதி பொருத்தம் தான் வேணும்-பொருத்தம் இல்லாட்டி வருந்த தான் வேணும் என்ற வாலியின் வரிகளும்.பொருத்தமென்றால் புதுப்பொருத்தம் பொருந்தி விட்ட ஜோடி-நான் புலவனென்றால் பாடிடுவேன் கவிதை ஒரு கோடி என்ற கவியரசரின் வரிகளும் நினைவிற்கு வருகிறது.நன்றி.

    • amas32 6:10 pm on September 2, 2013 Permalink | Reply

      சூப்பர் போஸ்ட் ஜிரா 🙂 ரொம்ப ரசித்துப் படித்தேன் 🙂 சமையல் குறிப்பில் தான் நீங்கள் வல்லவர் என்று நினைத்தேன், ஜோசியப் பொருத்தங்கள் பார்ப்பதிலும் நீங்கள் காழியூர் நாராயணன் என்று இன்று தான் தெரிந்து கொண்டேன் 🙂

      //பொருத்தம் உடலிலும் வேண்டும்
      புரிந்தவன் துணையாக வேண்டும்// அடுத்த வரிகள் “கணவனின் துணையோடு தானே, காமனை வென்றாக வேண்டும்” என்று வரும் இல்லையா? கண்ணதாசன் கண்ணதாசன் தான்!

      amas32

    • Rajarajeswari jaghamani 5:50 pm on February 25, 2014 Permalink | Reply

      அருமையாக ரசிக்கவைத்த பாடல்களும் , பகிர்வுகளும் ..பாராட்டுக்கள்..!

  • mokrish 11:48 am on August 29, 2013 Permalink | Reply  

    கண்ணன் பிறந்தான் 

    இன்று கண்ணன் பிறந்த நாள். ஆவணிப் பொன்னாளில் ரோகிணி நன்னாளில் அஷ்டமி திதி பார்த்துக் கண்ணன் வந்த நாள்.

    அந்த ஒரு நாள் இரவில் நடந்த சம்பவங்கள்,  பல திருப்பங்கள் கொண்ட ஒரு த்ரில்லர். கடும் மழை பெய்ய, அருகிலிருந்த யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோட, இருள் சூழ்ந்த ஒரு சிறைச்சாலைக்குள், குழந்தை ஒன்று பிறந்தது. இரவோடு இரவாக, தந்தையாகிய வாசுதேவர் அக்குழந்தையை ஒரு கூடையில் வைத்து, அதைத் தமது தலை மேல் சுமந்து கழுத்தளவு நீர் ஓடிய யமுனை ஆற்றைக் கடந்து, அக்கரை சென்று நந்தகோபரிடம் ஒப்படைத்தார்.

    ஒப்பற்ற தேவகியின் மகனாகப் பிறந்து அந்த இரவிலேயே மற்றோர் ஒப்பற்ற பெண்ணாகிய யசோதையிடம் வந்து வளர்ந்தாய்.என்று சொல்லும் ஆண்டாள் பாசுர வரிகள்

    ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்-

    ஒருத்தி மகனாய் ஒளித்து வளர

    யசோதைக்கு அடித்தது மிகப்பெரிய ஜாக்பாட். அந்த மாயன் கோபாலகிருஷ்ணனை,  ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்டும் பெரும்பாக்கியம் அவளுக்கு கிடைத்தது. இதை  பாபநாசம் சிவன் ஒரு அற்புதமான பாடலில் http://www.youtube.com/watch?v=efsqGgf2KUg

    என்ன தவம் செய்தனை யசோதா

    எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க

    என்ன தவம் செய்தனை யசோதா

     என்ற வரிகளில் சொல்கிறார்.

    பிறந்தது ஓரிடம். வளர்ந்தது வேறிடம். இந்த core கருத்தை  கண்ணதாசன் அன்னை என்ற படத்தில் வரும் ஒரு காட்சிக்கு ஏற்றபடி கொஞ்சம் மாற்றி எழுதுகிறார் (இசை ஆர். சுதர்சனம், பாடியவர் பானுமதி)

    http://www.youtube.com/watch?v=wigeyu943kM

    பூவாகி காயாகிக் கனிந்த மரம் ஒன்று

    பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று

    காய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா

    கனிந்து விட்ட சின்ன மரம் கண்ணீரில் ஆடுதடா

    வளர்க்கும் அன்னையின் வாழ்வில் தேனாறு என்கிறார்

    பத்து மாத பந்தம் என்ற படத்தில் ‘இரண்டு தாய்க்கு ஒரு மகள்’ என்ற பாடலில் இதே கருத்தை மறுபடியும் சொல்கிறார். (இசை சங்கர் கணேஷ் பாடியவர் பானுமதி)

    ஒருத்தியின் கண்ணீரில் பிறந்தவள் கண்ணே நீ

    ஒருத்தியின் கையோடு வளர்ந்திட வந்தாய் நீ

    கண்ணனும் உனைப்போலே பிள்ளை தானம்மா

    பிறப்பும் வளர்ப்பும் வேறு வேறம்மா

    படத்தின் காட்சிக்கு ஏற்ற வரிகள். பாடல் வரிகளில் கண்ணன் கதையும் ஆண்டாள் பாசுரமும்  அடுக்கி எழுதுகிறார்.

    மோகனகிருஷ்ணன்

    271/365

     
    • pvramaswamy 11:57 am on August 29, 2013 Permalink | Reply

      All song selections superbly blend with excellent description. Great

    • Nagarajan 1:42 pm on August 29, 2013 Permalink | Reply

      annai – music by R Sudarsanam and not by KVM

    • rajinirams 3:06 pm on August 29, 2013 Permalink | Reply

      கிருஷ்ண ஜெயந்திக்கான பதிவு தாங்கள் இடுவதும் நல்ல பொருத்தமே:-)) தேவகி மகனாய் பிறந்து யசோதையிடம் வளர்ந்த கண்ணன் நிலையை வைத்து உருக்கமான பாடல்கள் கொண்ட நல்ல பதிவு. (பாடலின் சூழல் தெரியாது என்றாலும்) புகுந்த வீடு படத்தில் கவிஞர் வாலி எழுதிய “கண்ணன் பிறந்த வேளையிலே தேவகி இருந்தாள் காவலிலே” பாடலும் அருமையான பாடல். நன்றி.

    • Kennedynj 4:34 pm on August 29, 2013 Permalink | Reply

      wonderful research Mohan. Can feel your enjoying the old epics. Thanks for passing the benefit of your readings to us. These writings keeps us enlightened.

    • amas32 4:44 pm on August 29, 2013 Permalink | Reply

      யசோதை பிரசவித்தாள். குழந்தை மாறியது அவள் தவறல்லவே. ஆனால் பிரசவித்த தேவகி குழந்தையைப் பிரிந்து அந்த தெய்வக் குழந்தையின் பால பருவத்தை அனுபவிக்காமல் போனது அவளுக்குப் பெரும் இழப்பு தான்.

      பல சமயம் நாம் யசோதை குழந்தை பாக்கியம் இல்லாதவள், அவளுக்கு ஓசியில் குழந்தை பாக்கியம் கிடைத்த மாதிரி எண்ணுவோம்.

      அவளின் பாக்கியம் இறைவனை சீராட்டிப் பாலூட்டி வளர்த்து, நெஞ்சார அணைத்து, அவன் செய்யும் தவறுகளையும் தண்டிக்கும் பேற்றினைப் பெற்றது தான்.

      யசோதா – கிருஷ்ணன் உறவு என்னை மிகவும் நெகிழச் செய்யும்.

      அற்புதப் பாடல்கள் மோகன கிருஷ்ணா! நன்றி 🙂

      amas32

  • என். சொக்கன் 11:51 pm on August 28, 2013 Permalink | Reply  

    கொடிமேல் காதல் 

    • படம்: கிழக்கே போகும் ரயில்
    • பாடல்: மாஞ்சோலைக் கிளிதானோ
    • எழுதியவர்: முத்துலிங்கம்
    • இசை: இளையராஜா
    • பாடியவர்: ஜெயச்சந்திரன்
    • Link: http://www.youtube.com/watch?v=6CPH_pnHqB8

    மஞ்சம் அதில், வஞ்சிக்கொடி வருவாள்,

    சுகமே தருவாள், மகிழ்வேன்,

    கண் காவியம் பண் பாடிடும் பெண்ணோவியம்,

    செந்தாமரையே!

    வஞ்சிக்கொடி என்பது பல பாடல்களில் பெண்களுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் உவமை.

    மற்ற பல கொடிகளைப்போலவே, வஞ்சியும் மெலிதானது, எளிதாகத் துவள்வது. ஆகவே, இடை சிறுத்த கதாநாயகிகளை வர்ணிக்கும் தேவை ஏற்படும்போதெல்லாம் கவிஞர்கள் வஞ்சிக்கொடியை அழைத்துவிடுவார்கள்.

    உதாரணமாக, பாரதிதாசனின் அருமையான காதல் பாடல் ஒன்று, ‘வஞ்சிக் கொடி போல இடை அஞ்சத்தகுமாறு உளது!’ என்று தொடங்கும்.

    பொதுவாக எல்லாருக்கும் காதலி இடையைப் பார்த்தால் ஆசை வரும். ஆனால், பாரதிதாசனுக்கு அச்சம் வருகிறது, ‘உன் இடுப்பைப் பார்த்து நான் பயந்தேபோய்ட்டேன் தெரியுமா?’ என்கிறார்.

    ஏன் அப்படி? பொண்ணு செம குண்டோ? காதல் பரிசாக ஒட்டியாணம் செய்து தரச் சொல்லிவிடுவாளோ என்று நினைத்துக் கவிஞர் பயந்துவிட்டாரோ?

    அந்தச் சந்தேகமே வரக்கூடாது என்பதற்காகதான், ‘வஞ்சிக்கொடி போல இடை’ என்கிறார் பாரதிதாசன். ‘இத்தனை மெல்லிய இடையா’ என்றுதான் அவருக்கு அச்சம்!

    அதோடு நிறுத்தவில்லை, தொடர்ந்து கண்களுக்கு உவமையாக என்னவெல்லாம் வருமோ அத்தனையையும் அடுக்குகிறார், பின்னர், ‘ம்ஹூம், உனக்கு இணையாக எதையும் சொல்லமுடியாது’ என்று கை தூக்கிவிடுகிறார். சந்தம் கொஞ்சும் அந்த அழகான பத்தி முழுமையாக இங்கே:

    வஞ்சிக்கொடி போல இடை

    அஞ்சத் தகுமாறு உளது!

    நஞ்சுக்கு இணையோ, அலது

    அம்புக்கு இணையோ, உலவு

    கெண்டைக்கு இணையோ, கரிய

    வண்டுக்கு இணையோ விழிகள்!

    மங்கைக்கு இணை ஏது உலகில்,

    அம் கைக்கு இணையோ மலரும்?

    ஆனால், கிட்டத்தட்ட இதேமாதிரிதானே கொடி இடை, நூலிடை, துடி இடை என்றெல்லாம் இடுப்பை வர்ணிப்பார்கள்?

    உண்மைதான். ஆனால் அவற்றுக்கு இல்லாத ஒரு சிறப்பு ‘வஞ்சி’க்கு உண்டு. இடுப்பைமட்டுமல்ல, ஒரு பெண்ணையே ‘வஞ்சி’ என்று அழைப்பதும் உண்டு.

    இதற்கு உதாரணமாக, ‘குற்றாலக் குறவஞ்சி’ என்ற நூலே இருக்கிறது. அதன் பொருள், குற்றாலம் என்கிற பகுதியில் வாழ்கிற, குறவர் இனத்தைச் சேர்ந்த, வஞ்சி போன்ற ஒருத்தி.

    சினிமாப் பாட்டு உதாரணம்தான் வேண்டுமா? அதுவும் நிறைய உண்டு. ‘வண்ணக்கிளி சொன்ன மொழி, என்ன மொழியோ? வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ!’

    ஆக, ஒரு பெண், அவளுடைய மெலிதான இடுப்பு, அதற்கு உவமை வஞ்சி, அதுவே அந்தப் பெண்ணையே அழைக்கும் பெயராகிவிடுகிறது. ஆகவே, இலக்கண அறிஞர்காள், இது சினையாகுபெயரா, உவமையாகுபெயரா, அல்லது சினையுவமையாகுபெயர் என்று ஒன்றை உருவாக்கவேண்டுமா? 🙂

    ***

    என். சொக்கன் …

    28 08 2013

    270/365

     
    • Murugesan 7:05 am on August 29, 2013 Permalink | Reply

      நல்ல பதிவு நன்றி திரு.சொக்கன். வஞ்சி கொடிக்கு அருமையான விளக்கம் இப்பாடலை வைத்து.

    • rajinirams 12:12 pm on August 30, 2013 Permalink | Reply

      வஞ்சி கொடி யை விளக்கிய நல்ல பதிவு.இந்த வஞ்சி மகள் ஒரு ஊதாப்பூ என்ற வாலியின் பாடலும் வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்னும் என்ற டி.ஆரின் வரிகளும் நினைவிற்கு வருகிறது. “வஞ்சி”என்ற வார்த்தைக்கு ஏமாற்றுவது என்ற பொருளும் உண்டு.அப்படி ஏமாற்றும் கட்சி கொடியை “வஞ்சி கொடி”என்று சொல்லலாமோ:-)))

    • amas32 6:14 pm on September 2, 2013 Permalink | Reply

      அப்போ நான் “வஞ்சி” இல்லை :-)) துடி இடையாளும் இல்லை வஞ்சிப்பவலும் அல்லள் 🙂

      ஆனால் என் பழைய புகைப்படங்கள் வஞ்சியாக் இருந்திருக்கிறேன் என்று பறைசாற்றும் 🙂

      amas32

  • என். சொக்கன் 4:35 pm on August 27, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு: கண்ணதாசன் எழுத்தைப்போல 

    படம்: வேட்டைக்காரன்

    இசை: விஜய் ஆண்டனி

    பாடல்: கபிலன்

    பாடகர்கள்: சுசித் சுரேசன், சங்கீதா ராஜேஸ்வரன்

    கரிகாலன் காலப் போல கருத்திருக்குது குழலு

    குழலில்ல குழலில்ல தாஜு மஹால் நிழலு

    சேவலோட கொண்ட போல சிவந்திருக்குது உதடு

    உதடில்ல உதடில்ல மந்திரிச்ச தகடு

    பருத்திப் பூவப் போல பதியுது உன் பாதம்

    பாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்

    வலம்புரி சங்கப் போல வழுக்குது உன் கழுத்து

    கழுத்தில்ல கழுத்தில்ல கண்ணதாசன் எழுத்து

    கார் குழலை கரிகாலன் காலுக்கு இதற்கு முன்னால் யாரவது ஒப்பிட்டு இருக்கிறார்களா தெரியாது, ஆனால் நல்ல கற்பனை! காதலன் சொல்லும் அந்த வரிக்கு காதலி, இல்லையில்லை அந்த கருமை தாஜ் மஹாலின் நிழைலை ஒத்து இருக்கிறது என்கிறாள். காதல் சின்னமான தாஜ் மஹால் மிகப் பெரியக் கட்டிடமும் கூட. அதன் நிழல் அடர்த்தியாகத் தன இருக்கும்.

    சேவலோட கொண்டை நல்ல சிவப்பு நிறம். உதடும் அதே நிறம் என்று சொல்வது மிகவும் பொருத்தம். ஆனால் காதலி தன உதடுகளை மந்திரித்தத் தகடு என்கிறாள். உண்மை தானே? காதலனைக் கிறங்க வைக்கும் செவ்வாய் அவளுடையது, மேலும் அவள் உதடுகள் சொல்வதைக் கேட்டு பூம் பூம் மாடு போல தலையை ஆட்டத் தானேப் போகிறான். அதனால் அவள் உதடு மந்திரித்தத் தகடு தான் 🙂

    பருத்திப்பூ வெடித்து அதில் வரும் இலவம் பஞ்சு மெத்து மெத்தென்று இருக்கும். காதலியின் பட்டுப் பாதங்களுக்கு பஞ்சை உவமையாக்குகிறான் காதலன், ஆனால் காதலியோ வெந்த பச்சரிசி சோற்றைப் போல மெதுவாக தன் கால்கள் இருப்பதாகச் சொல்கிறாள். வடித்தப் பச்சரிசி சாதம் எப்பொழுதும் ரொம்ப மென்மையாக இருக்கும்.

    இந்தப் பாடலின் பல்லவியில் வரும் கடைசி இரண்டு வரிகள் தான் என்னை இந்தப் பாடலுக்கே ஈர்த்தது. வலம்புரி சங்கு வளைந்து வெண்மையாகவும் மழ மழவேன்றும் இருக்கும். காதலியின் கழுத்தை வலம்புரி சங்கைப் போல வழுக்குகிறது உன் கழுத்து என்கிறான் காதலன்.  அவளோ வழுக்கும் அவள் கழுத்தை கண்ணதாசன் எழுத்து என்கிறாள். எனக்கு இந்த வரி ஏனோ ரொம்பப் பிடித்தது. கவிஞன் கற்பனைக்கு சுதந்திரம் உண்டு. தீவிர கண்ணதாச ரசிகர்கள் என்ன சொல்வார்களோ தெரியாது. ஆனால் இந்த உவமை கச்சிதமாக இந்த இடத்தில் பொருந்துவதாக எனக்குத் தோன்றுகிறது.  கண்ணதாசனின் கவிதைகள் மிகவும் மென்மையாகவும் படிக்க நெருடல் இல்லாமல் எளிமையாகவும் இருக்கும்.

    சுஷிமா சேகர்

    பிறந்தது பாண்டிச்சேரியில், வளர்ந்தது சென்னையில். கலிபோர்னியாவில் பத்து வருடங்களும் சிங்கப்பூரில் மூன்று வருடங்களும் இருந்துவிட்டுத் தற்போது வசிப்பது சென்னையில். குழந்தைகள் பிறந்த பிறகு MBA படித்தேன். நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் உண்டு. இணையத்துக்கு (டவிட்டருக்கு) வந்து இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. அதன் மூலம் எனக்குக் கிடைத்த நண்பர்களை எண்ணி மகிழ்கிறேன். இணையத்துக்கு வந்த பிறகுதான் தமிழ் பயில்கிறேன். நேசிப்பது என் தொழில், பொழுதுபோக்கு 🙂

    சுஷிமா சேகர் வலைப்பதிவு: http://amas32.wordpress.com/

     
    • உமாக்ருஷ் (@umakrishh) 5:11 pm on August 27, 2013 Permalink | Reply

      இந்தப் பாடலை இந்த வயதிலும் இப்படிக் கூட அணு அணுவாக ரசிக்க முடியுமா ?:)மிகவும் ரசித்தேன் !பெரிதாக இவ்வளவு கூர்ந்து கவனித்தது இல்லை இந்தப் பாடலை..இவங்க சொன்ன பிறகு இனி கூர்ந்து கேட்கணும்னு இருக்கும்..இளைஞர்களுக்கு ஈடு கொடுக்கறீங்க..:)) அனுஷ்காவையே ஆன்னு பார்த்தவங்களுக்கு வரிகள் இனி கவனத்தில் படியும் :))

    • @penathal 9:11 pm on August 27, 2013 Permalink | Reply

      இந்தப்பாட்டு இன்னும் அழகாக எழுதி இருக்க முடியும் என்பதே என் எண்ணம். கொஞ்சம் கம்பேரபிளான உவமைகளைப் போட்டிருக்கவேண்டும். குழலுக்கும் நிழலுக்குமாவது கருமை என்று ஒரு சம்பந்தம் இருக்கிறது. உதட்டுக்கும் மந்திரிச்ச தகடுக்கும் என்ன சம்பந்தம்?

      • amas32 6:20 pm on September 2, 2013 Permalink | Reply

        நிழல் கருப்பாகத் தானே இருக்கும். அது போல கார் குழல் சரியாத்தானே இருக்கு 🙂
        ஒருவர் வீட்டில் மந்திரிச்ச தகடை வைத்தால் மந்திரித்த நபர் பேச்சுக்கெல்லாம் தலையாட்டுவார் அந்த வீட்டுக்காரர் என்பது நம்பிக்கை. அது போல இந்த உதடுகள் காதலனை mesmarise பண்ணிவிடுகிறது 🙂

        amas32

    • sukanya (@sukanya29039615) 11:52 am on August 28, 2013 Permalink | Reply

      Indha padalai kettuirkkiren. Idhai Padithappin pramadham. Thanks sushi.

    • rajinirams 2:46 pm on August 29, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு.இந்த வித்தியாசமான பாடலின் வரிகளை நன்கு திறனாய்வு செய்திருக்கிறீர்கள்.உண்மையில் வாலி “குடந்தையில் பாயும் காவிரி அலை தான் உன் பூங்குழலோ -நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ” என்றெல்லாம் வர்ணித்திருக்கிறார்.கரிகாலன் காலை போல என்பது கபிலனின் வித்தியாசமான வர்ணனையே. மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ,சேலத்தில் விளையும் மாங்கனி சுவை தான் உன் செவ்விதழோ என்ற கற்பனைக்கு மத்தியில் சேவலோட கொண்டை போல என்றும் மந்திரிச்ச தகடு என்றும் கலக்கி இருக்கிறார்.ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ என்ற வாலியின் கற்பனையை வலம்புரி சங்கு என்றும் இறுதியில் கண்ணதாசன் எழுத்து என்றும் முடித்தும் சூப்பர்.உங்கள் நல்ல ரசனைக்கு பாராட்டுக்கள். நன்றி.

      • amas32 6:26 pm on September 2, 2013 Permalink | Reply

        நீங்க என் பதிவை பாராட்டியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ரொம்ப நன்றி :-))

        amas32

  • G.Ra ஜிரா 4:28 pm on August 27, 2013 Permalink | Reply  

    தீக்கனவும் நற்கனவும் 

    ஆணை விட பெண்ணுக்கு உள்ளுணர்வு அதிகம் என்று பெண்கள் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். ஆம்.

    “ஒங்க நண்பரோட முழியே சரியில்ல. அவரோட பழகாதிங்க” என்று சொல்லி சண்டையைக் கிளப்பும் மனைவியரும் உண்டு. பெரும்பாலும் அவர்கள் சொல்வது உண்மையாக இருந்துவிடும். அதற்குப் பிறகு “அன்னைக்கே சொன்னேன்ல” என்று இன்னொரு சண்டை கிளம்பும்.

    உப்பை சிந்தி விட்டாலோ கண்ணாடிப் பாத்திரத்தை உடைத்து விட்டாலோ தயிர் உறையாவிட்டாலோ பதறிப் போவதென்னவோ பெண்கள்தான். அதீத பயம் என்று எளிதாக அந்தப் பதட்டத்தைப் புறந்தள்ள முடியாது. ஏனென்றால் அந்தப் பதட்டங்களுக்குப் பின்னால் இருப்பது குடும்ப அக்கறை.

    இதையெல்லாம் விட கனவுகள் அவர்களைப் பாடாய்ப் படுத்திவிடும். கனவு நல்லவிதமாக இல்லாவிட்டால் அடுத்து ஒரு செயலைச் செய்யவே அச்சப்படுவார்கள்.

    இந்த அச்சத்தை வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் ஒரு பாடலாக கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியன் கொடுத்திருந்தார்.

    கட்டபொம்மனை அழிக்க வேண்டுமென்று வெள்ளைக்காரன் படையெடுத்து வருகிறான். போர் முரசு கொட்டி விட்டார்கள். பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் எல்லாம் போருக்குப் புறப்படுகிறார்கள். வெள்ளையத்தேவனும் புறப்படுகிறான். அவனுடைய மனைவி வெள்ளையம்மான் அவனைப் போகவிடாமல் தடுக்கிறாள். ஏனென்றால் அவள் கண்டது பொல்லாத சொப்பனம்.

    போகாதே போகாதே என் கணவா
    பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்
    கூந்தல் அவிழ்ந்து விழவும் கண்டேன் – அய்யோ
    கொண்டையில் பூவும் கருகிடக் கண்டேன்
    கொண்டையில் பூவும் கருகிடக் கண்டேன்
    ஆந்தை இருந்து அலறக் கண்டேன்
    யானையும் மண்ணிலே சாயக் கண்டேன் – பட்டத்து
    யானையும் மண்ணிலே சாயக்கண்டேன்

    இப்படி வரிசையாகச் சொல்கிறாள் வெள்ளையம்மாள். கண்ணீர் விட்டுத் தடுக்கிறாள். ஆனாலும் கேட்காமல் போகிறான் வெள்ளையத்தேவன். போரின் முடிவு தமிழ் மண்ணுக்கு எதிராகவே அமைந்து விடுகிறது. வெள்ளையத்தேவன் வீரசுவர்க்கம் போகிறான். அவன் வழியே வெள்ளையம்மாளும் போய்விடுகிறாள்.

    தமிழ் பெண்கள் இன்று நேற்றல்ல… ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே கனவு கண்டுகொண்டுதான் இருக்கிறார்கள். அதையும் ஒரு சங்கப் பாடல் சொல்லும். சங்க காலத்தில் அமங்கலங்களாகக் கருதப்பட்ட கனவுகள் எவையெவை என்று பார்க்கலாமா?

    திசையிரு நான்கு முற்க முற்கவும்
    பெருமரத், திலையி னெடுங்கோடு வற்றல் பற்றவும்
    வெங்கதிர்க் கனலி துற்றவும் பிறவும்
    அஞ்சுவரத் தகுந புள்ளுக்குர லியம்பவும்
    எயிறுநிலத்து வீழவு மெண்ணெ யாடவும்
    களிறுமேல் கொள்ளவுங் காழக நீப்பவும்
    வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்
    திணை – வஞ்சி; துறை – கொற்றவள்ளை.
    பாடல் – காலனுங் காலம் பார்க்கும்
    நூல் – புறனானூறு
    பாடியவர் – கோவூர்கிழார் பாடியது

    பாட்டின் ஆழமான பொருளுக்குப் போகாமல் பாட்டில் தீய கனவுகளாக சொல்லப்படுகின்றவைகளை இங்கு விவரிக்கிறேன்.

    திசை இரு நான்கு முற்க முற்கவும் – இரு நான்கு என்பது எட்டு. எட்டுத் திசைகளிலும் கொள்ளி விழுந்து பற்றியதாம்
    பெருமரத்திலையின் நெடுங்கோடு வற்றல் பற்றவும் – ஓங்கி வளர்ந்து இலைகளை உதிர்த்து விட்டு வற்றலாய் நிற்கும் மரம் தீப்பற்றி எரிந்தது
    வெங்கதிர்க் கனலி துற்றவும் – பகலவன் சுடர் விட்டு நெருப்பாய்க் கொளுத்தியது
    பிறவும் அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரலியம்பவும் – மற்றும் அஞ்சுகின்ற பறவைகள் அந்த அச்சத்தை வெளிப்படுத்தி ஓலியெழுப்பின
    எயிறு நிலத்து வீழவும் – பல் உடைந்து நிலத்தில் வீழ்ந்தது
    எண்ணெய் ஆடவும் – கனவில் தலையை விரித்து எண்ணெய் தேய்த்து தலை முழுகுவது போலவும்
    களிறுமேல் கொள்ளவும் – பன்றி சிங்கத்தைப் புணரவும்
    காழக நீப்பவும் – ஆடைகள் அவிழ்த்து அம்மணமாய் இருப்பதும்
    வெள்ளி நோன்படை கட்டிலொரு கவிழவும் – சிறந்த படைக்கலன்கள் அவைகள் அடுக்கப்பட்டிருந்த கட்டிலோடு (அலமாரி) கவிழ்ந்து விழுந்தது.

    மேலே உள்ளவை அந்தக் காலத்தில் தீய கனவுகளாகக் கருதப்பட்டன. இப்படி பழந்தமிழரின் நம்பிக்கைகளை தெரிந்து கொள்வதும் சுவையாகத்தான் இருக்கிறது.

    பதிவில் இடம் பெற்ற பாடல்
    பாடல் – போகாதே போகாதே என் கணவா
    வரிகள் – கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம்
    பாடியவர் – ரத்னமாலா
    இசை – ஜி.இராமநாதன்
    படம் – வீரபாண்டிய கட்டபொம்மன்
    பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=a861UAQfX0w

    அன்புடன்,
    ஜிரா

    269/365

     
    • amas32 4:42 pm on August 27, 2013 Permalink | Reply

      பெண்களுக்கே intuition அதிகம். உள்ளுணர்வு சொல்லும் எதோ தீங்கு நடக்கப் போகிறது என்று. அதே போல் ஒரு பரபரப்பும் தொற்றிக் கொள்ளும் நல்லதை எதிர்பார்த்தும். எனக்கே நடந்திருக்கு. அமெரிக்காவில் ஒரு பெரிய விபத்து ஆன போது அந்த விவரம் ஒன்றுமே தெரியாமல் இங்கே இந்தியாவில் அன்று நிலைகொள்ளாமல் இருந்தேன். விரதமும் இருந்தேன். அதனால் இந்த மாதிரி சிச்சுவேஷன்களை படங்களிலும் கதைகளிலும் சித்தரிப்பது உண்மை தான். பெண்ணின் இந்த அரிய குணத்தையும் கவிஞர்கள் போற்றுகின்றனர்!

      amas32

    • MumbaiRamki 9:57 pm on August 27, 2013 Permalink | Reply

      Nothing about women . In general , people who observe the environment & others can make sub conscious intuitions which works – because the mind can make so many combinations, calculations beneath the conscious 🙂

      “களிறுமேல் கொள்ளவும் – பன்றி சிங்கத்தைப் புணரவு” – wow !! What an imagination .

    • rajinirams 3:16 pm on August 29, 2013 Permalink | Reply

      கு.மா.பா.அவர்களின் வரிகளையும் சங்க கால பாடலையும் விளக்கிய “கனவு பதிவு”மிக மிக வித்தியாசமான பதிவு.அப்பப்பா-எப்படியெல்லாம் யோசித்திருக்கிறீர்கள்-சூப்பர் சார்.சிவகங்கை சீமையில்-கனவு கண்டேன் என்று சந்தோஷமான சோகமான இரண்டு பாடல்களும் நன்றாக இருக்கும். நன்றி.

  • mokrish 8:54 pm on August 26, 2013 Permalink | Reply  

    கங்கை தலையினில் மங்கை இடையினில் 

    நண்பர் @nchokkan னுடன் பேசிக்கொண்டிருந்தபோது  ‘ஜனனி ஜனனி ஜகம் நீ’ பாடல் வரிகள் பற்றி அவருடைய நண்பர் கேட்டதாக ஒரு கேள்வி எழுப்பினார். சிவன் அக்னி வடிவம். அடிமுடி காணாத ஜோதிஸ்வரூபம்.  ஆனால் கவிஞர் வாலி பாடலின் முதல் சரணத்தில் http://www.youtube.com/watch?v=PFPX9OgqEG4

    கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே..

    நின்ற நாயகியே இட பாகத்திலே..

    என்ற வரிகளில் ஏன் குளிர் தேகத்திலே என்று சொல்கிறார்?

    சிவபெருமான் உஷ்ணமான திருமேனியை உடையவர். அந்த நெருப்பின் கடுமை குறையவே குளிர்ச்சியான திருக்கயிலையை இருப்பிடமாகக் கொண்டிருக்கிறார். மேலும் தேவலோகத்திலிருந்து கங்கை பூமிக்கு வரும் பொழுது எழும் பிரவாகத்தினை கட்டுப்படுத்தி தன் சடாமுடியில் தாங்கி  பூமி தாங்கும் அளவில் மட்டும் வெளிவிட்டார். இருப்பது கயிலையில், கங்கையின் பிரவாகம் தலையில் என்னும்போது குளிர் தேகம் என்பது சரிதானே?

    விஷ்ணு அலங்காரப் பிரியர். அனுமன் ஸ்தோத்திரப் பிரியர். சிவ பெருமான் அபிஷேகப் பிரியர். தன்னைத் துதித்துச் செய்யப்படும் அபிஷேக ஆராதனைகளால் மனம் மகிழ்ந்து  வேண்டியதை தருபவன். சிவபெருமானுக்கு என்னென்ன பொருட்களால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்பதை அண்ணாமலைச் சதகம் என்ற நூல் சொல்கிறது. பேரொளி மயமான அவன் திருமேனி குளிர்ந்தால், அண்ட சராசரங்களும் குளிர்ந்து, காலம் தவறாமல் மழை பொழிந்து, பயிர்கள் நல்ல முறையில் விளைந்து உலகை வாழ்விக்கும் என்பது நம்பிக்கை. தொடர்ந்து அபிஷேகங்கள் என்னும்போது குளிர் தேகம் என்பது சரிதானே?

    நீரும் நெருப்பும் மட்டுமல்லாமல் ‘இருநிலனாய்த் தீயாகி நீருமாகி’ என்ற தேவாரப் பாடல் பரமசிவனின் எட்டு வடிவங்கள் சொல்லும். பஞ்சபூதங்களுக்கும் உரிய தலங்களில் அமைந்துள்ள சிவாலயங்களில், மூலவர் பஞ்ச பூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகிறார். இதில் திருவானைக்கா  நீர்த்தலம் ஆகும். மூலஸ்தான லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

     Phosphorus என்ற பொருள் பற்றி நாம் படித்திருக்கிறோம். இது நீரில் கரைவதில்லை. காற்றில் தானாக எரியும் தன்மை உடையது. எரிவதற்கான தாழ்ந்த வெப்ப நிலை ஏறக்குறைய அறை வெப்ப நிலையாக இருப்பதால் இதை நீரில் இட்டு வைத்திருப்பார்கள். சிவனும் எப்போதும் ஒரு அபிஷேக mode ல் இருப்பதால் குளிர் தேகம் என்பது சரிதானே?

    இருக்கும் இடத்தையும் தன் மேனியையும் குளிர்விக்க எல்லா ஏற்பாடுகளும் செய்த பிறகே உமையவளுக்கு இட பாகத்தை அளிக்கிறான். அட!

    மோகனகிருஷ்ணன்

    268/365

     
    • amas32 4:59 pm on August 27, 2013 Permalink | Reply

      கர்நாடகாவில் பல கோவில்களில் மேலிருந்து சொட்டு சொட்டாக நீர் லிங்கத்தின் மேல் படும்படியாக ஒரு சொம்பில் துளையிட்டு மேலே கட்டி வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். சிவபெருமானை சதா குளிர்விக்க நல்ல ஒரு வழி. திருமாலோ பாற்கடலில் பள்ளிக் கொண்டிருப்பவன். சிவன் சுடும் மயானத்தில் மகிழ்ச்சியாக இருப்பவன். அதனால் வெளி உபகரணங்களால் தான் அவனை குளிர்விக்க வேண்டும்.

      amas32

    • rajinirams 2:52 pm on August 29, 2013 Permalink | Reply

      குளிர் தேகத்திலே என்ற வார்த்தைக்கான தங்களின் விரிவாக்கம் அருமை. amas32 அவர்கள் கூறியதை போல இங்கு எல்லா கோவில்களிலுமே இறைவனை குளிர்விக்கிரார்கள்.கவிஞர் வாலியின் இந்த பாடலை ராஜா ஸ்பஷ்டமாக உச்சரித்து பாடும்போது மெய் சிலிர்க்கும் என்பது உண்மை.நன்றி.

  • என். சொக்கன் 11:43 pm on August 25, 2013 Permalink | Reply  

    நெஞ்சை அள்ளும் முன்னுரை 

    • படம்: மகாநதி
    • பாடல்: ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம்
    • எழுதியவர்: வாலி
    • இசை: இளையராஜா
    • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், உமா ரமணன், ‘மகாநதி’ ஷோபனா
    • Link: http://www.youtube.com/watch?v=itZ1ESboqOk

    அந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கிவைத்தனர் ஆலயம்,

    அம்மாடி என்ன சொல்லுவேன், கோயில் கோபுரம் ஆயிரம்,

    தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வப் பூந்தமிழ்ப் பாயிரம்

    வாலியின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று இது. சொந்த ஊரைப்பற்றிய பாடல் என்பதாலோ என்னவோ, மனிதர் ரவுண்டு கட்டி விளையாடியிருப்பார். ஒவ்வொரு சொல்லும் அத்துணை அருமையாக வந்து உட்கார்ந்திருக்கும், ஒன்றை எடுத்துவிட்டு இன்னொன்றை வைப்பது சாத்தியமே இல்லை.

    அச்சுப்பிச்சு தங்கிலீஷ் வரிகளுக்காக வாலிமீது குற்றம் சாட்டுபவர்கள் அவருடைய இதுபோன்ற பாடல்களை ஒருமுறையாவது நிதானமாகக் கேட்கவேண்டும். இப்படியும் எழுதக்கூடியவர்தான் அவர். பிறகு அவர் கொட்டிய குப்பைகளுக்குக் கேட்டவர்கள் பொறுப்பா, எழுதியவர் பொறுப்பா?

    அது நிற்க. நாம் குறை சொல்லாமல் நல்லதைத் தேடி ரசிப்போம், இந்தப் பாடலைப்போல.

    ஸ்ரீரங்கத்தில் தொடங்கினாலும், அங்கே நின்றுவிடாமல், பொதுவாகவே சோழ மண்ணின் வர்ணனையாக அமைந்த பாட்டு இது. அன்றைய ஆலயங்களின் கோபுரங்களை வர்ணித்த கையோடு, அவற்றில் நுழையும்போது கேட்கும் தேவாரம், திருவாசகம், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், திருப்புகழ் போன்ற தெய்வப் பூந்தமிழ்ப் பாடல்களைக் குறிப்பிடுகிறார் கவிஞர்.

    கொஞ்சம் பொறுங்கள், அவர் பாடல்கள் என்று சொல்லவில்லை. ‘பாயிரம்’ என்கிறார். அதற்கு என்ன அர்த்தம்?

    இப்போது எல்லாருக்கும் புரியும்படி சொல்லவேண்டுமானால், ‘முன்னுரை’ அல்லது ‘அறிமுக உரை’ என்று சொல்லலாம். அன்றைய கவிஞர்கள் ஒரு நூல் எழுதினால், அதற்குள் என்ன இருக்கிறது என்று விளக்கும்விதமாகப் ‘பாயிரம்’ என்கிற முன்னுரையைப் பாடல் வடிவிலேயே எழுதிச் சேர்ப்பார்கள். இந்தப் பாயிரத்தை நூலின் ஆசிரியரே எழுதலாம், அல்லது, அவருடைய நண்பரோ, சிஷ்யரோ, குருநாதரோகூட எழுதலாம். வாசகர்களுக்கு நூலைச் சரியாக அறிமுகப்படுத்தவேண்டும். அதுதான் நோக்கம். ஆர்வமுள்ளோர் இந்த இலக்கணத்தை முழுமையாகப் படிக்க இங்கே செல்லுங்கள்: http://365paa.wordpress.com/2012/05/07/306/

    ஆனால் ஒன்று, ஒருவர் வெறுமனே பாயிரத்தைப் படித்தால் போதாது. நூலையும் படிக்கவேண்டும்.

    நிலைமை அப்படியிருக்க, இங்கே வாலி ‘பாயிரம்’ என்ற சொல்லை எடுத்துப் பயன்படுத்தவேண்டிய அவசியம் என்ன? அது ‘ஆயிரம்’க்கு எதுகை, இயைபாக இருக்கிறது என்பதால்மட்டுமா?

    இருக்கலாம். ஆனால் எனக்கு இதை எப்படிப் பார்க்கத் தோன்றுகிறது என்றால், கடவுளைப்பற்றி எத்துணை பாடல்கள் பாடப்பட்டாலும் சரி, அவையெல்லாம் வெறும் பாயிரம்தான், அறிமுகம்தான். அவற்றைப் படித்தால் முழு அனுபவம் கிடைக்காது. கோயிலுக்குள் சென்று இறைவன் முன்னே கை கூப்பி நிற்கும்போது நாம் அடையப்போகும் அந்த உணர்வுதான் நிஜமான கவிதை.

    ***

    என். சொக்கன் …

    25 08 2013

    267/365

     
    • uchelvan 1:35 am on August 26, 2013 Permalink | Reply

      நீர் வண்ணம் எங்கும் மேவிட – நஞ்சை புஞ்சைகள் பாரடி
      ஊர் வண்ணம் என்ன கூறுவேன் – தெய்வ லோகமே தானடி
      வேறெங்கு சென்ற போதிலும் – இந்த இன்பங்கள் ஏதடி

    • rajinirams 9:03 pm on August 26, 2013 Permalink | Reply

      “பாயிரம்”என்றால் பா ஆயிரம் என்று நினைத்துகொண்டிருந்தேன்.தங்கள் விளக்கத்திற்கு நன்றி. கவிஞர் வாலியின் அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று.

    • amas32 6:33 pm on September 2, 2013 Permalink | Reply

      //இருக்கலாம். ஆனால் எனக்கு இதை எப்படிப் பார்க்கத் தோன்றுகிறது என்றால், கடவுளைப்பற்றி எத்துணை பாடல்கள் பாடப்பட்டாலும் சரி, அவையெல்லாம் வெறும் பாயிரம்தான், அறிமுகம்தான். அவற்றைப் படித்தால் முழு அனுபவம் கிடைக்காது. கோயிலுக்குள் சென்று இறைவன் முன்னே கை கூப்பி நிற்கும்போது நாம் அடையப்போகும் அந்த உணர்வுதான் நிஜமான கவிதை.//

      நீங்கள் நான் ட்விட்டர் வந்த புதிதில் சில கோயில்கள் போய் அந்ததந்த கோவில்களின் சிறப்புக்களை ட் வீட்டுக்களாகப் போட்டு வந்தீர்கள். அப்போ நான் வேண்டுதல்/பக்தி பற்றிக் கேட்டேன், எனக்குக் கோவிலின் அழகையும் தல புராணத்தையும் தெரிந்து கொள்ளும் ஆர்வமே அதிகம் என்று பதில் சொல்லியிருந்தீர்கள்.

      மேலே நீங்கள் எழுதியுள்ள வரிகள் உங்கள் உள்ளத்தை எனக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது 🙂
      நல்ல பதிவு!

      amas32

  • G.Ra ஜிரா 9:57 pm on August 24, 2013 Permalink | Reply  

    கை, செய் 

    கை என்னும் உறுப்புக்கு தெலுங்கில் செய் என்றே பெயர். வேலைகளை எல்லாம் செய்வதனால் அது செய் என்றழைக்கப்படுகிறது. பழைய தமிழ்ப் பெயர்தான். தமிழில் வழக்கொழிந்து தெலுங்கில் மட்டும் நிலைத்து விட்ட பெயர்.

    அந்தக் கையை நிறைய தமிழ்ப் பாடல்களில் காணலாம் என்றாலும் இந்தக் கட்டுரையில் மூன்று பாடல்களை மட்டும் எடுத்துப் பார்க்க நினைக்கிறேன்.

    முதலில் புலமைப்பித்தன் எழுதிய வரிகளைப் பார்க்கலாம்.

    எதுகை அது உனது இருகை அதில் எனது பெண்மை ஆடட்டுமே
    ஒருகை உடல் தழுவ மறுகை குழல் தழுவ இன்பம் தேடட்டுமே
    (பாடல் – அமுதத் தமிழில். படம் – மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். இசை-எம்.எஸ்.வி)

    எதுகை பொருந்தி வரும். தொடர்ந்து வரும். நயமும் தரும். அப்படி அவன் கைகள் அவள் பெண்மைக்குப் பொருந்தியும் தொடர்ந்தும் நயமாகவும் வரட்டும் என்று விரும்புகிறாள். அவ்வாறாக ஒரு கை உடலையும் மறுகை குழலையும் தழுவும் போது அங்கு தவழும் இன்பத்துக்கு குறைவேது?

    அடுத்தது கண்ணதாசன் எழுதிய வரிகளைப் பார்ப்போம். பாடலுக்கான காட்சியை முதலில் சொல்லி விடுகிறேன். அவள் பெயர் பத்மாவதி. அவள் அலர் அமர் திருமகளின் வடிவம். அவள் மணக்க விரும்புவது ஸ்ரீநிவாசனை. அந்த ஸ்ரீநிவாசனே ஒரு குறத்தியாக வந்து பத்மாவதிக்கு குறி சொல்லி ஆடிப் பாடும் பாடல் இது. அதற்கு கண்ணதாசன் எழுதிய வரிகளைப் பாருங்களேன்.

    மங்கை தண்கை மலர்க்கை
    அந்த மலர்மகள் வழங்கும் திருக்கை
    பங்கய மலரே இருக்கை
    அந்த பாற்கடல் நாயகன் துணைக்கை
    (படம் – தெய்வத் திருமணங்கள், இசை – எம்.எஸ்.விசுவநாதன்)

    அவளுடைய பெயரிலேயே குளிர்ந்த தாமரை இருக்கிறது. பத்மாவதியல்லவா. அந்த மங்கையின் கையும் குளிர்ந்த மலர்க்கையாம். அலைமகள் அள்ளி வழங்கும் செல்வம் நிறைந்த கை. அவளுடைய இருக்கை பங்கய மலர். அவளுக்கு பாற்கடல் பரந்தாமனே துணைக்கை.

    ஏன் இத்தனை கைகள்? குறத்தி கை பார்த்துதானே குறி சொல்ல முடியும்!

    இதையெல்லாம் விட என்னை ஆச்சரியப்படுத்தியது டி.ராஜேந்தரின் வரிகள். அவர் கைக்கு உவமை சொன்னது போல வேறு யாரும் சொன்னார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

    அஞ்சுதலை நாகமென நெளிகின்ற கையானது
    (பாடல் – மோகம் வந்து தாகம் வந்து, படம் – உயிருள்ளவரை உஷா, இசை – டி.ராஜேந்தர்)

    ஐந்து விரல்களை ஐந்து தலைகளாக்கி கையை நாகம் என்று உவமித்தது நல்ல கற்பனை. மோகம் கொண்ட வேளையில் அவளுடைய கை ஐந்துதலை நாகம் போல நெளிவதாகச் சொல்வதும் பொருத்தம் தானே!

    இதுவரை திரையிலக்கியம் பார்த்தோம். இனி பழந்தமிழ் இலக்கியம் கொஞ்சம் பார்க்கலாமா?

    கை என்ற சொல் ஒரு அகவுணர்வைக் குறிக்கும். அந்த உணர்வு நிலைக்கு கைந்நிலை என்று பெயர்.

    அதென்ன கைந்நிலை?

    காமம் பாடாய்ப் படுத்தும் உடல் வாதையைக் கூடல் கொண்டு தீர்க்க யாரும் இல்லாத நிலை கைந்நிலை.

    அந்த நிலையில் வருந்திடும் பெண்களைத்தான் சமூகம் கைம்பெண் என்று அழைக்கிறது.

    அந்த உணர்வுநிலையை முன்னிறுத்தி சங்கம் மருவிய காலத்தில் ஒரு நூல் எழுந்தது. பதினென் கீழ்க்கணக்கு வரிசையில் கடைசியாக வைக்கப்பட்ட அந்த நூலின் பெயரே கைந்நிலை என்பதுதான்.

    இந்த நூலை இயற்றியவர் பெயர் புல்லங்காடர். குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை ஆகிய ஐந்து திணைகளிலும் கைந்நிலையை முன்னிறுத்தி எழுந்த ஒரே நூல் கைந்நிலை மட்டுமே எனலாம். அந்த நூலில் ஒரு அழகான பாடலைப் பார்க்கலாமா?

    நாக நறுமலர் நாள்வேங்கைப் பூவிரவிக்
    கேச மணிந்த கிளரெழிலோ ளாக
    முடியுங்கொ லென்று முனிவா னொருவன்
    வடிவேல்கை யேந்தி வரும்

    புன்னை மரத்து நன்மலரையும்
    வேங்கை மரத்தின் பூவினையும்
    சூடிக் கொண்ட கிளர் எழில் கூந்தலாள் நான்
    பிரிவாற்றாமை துன்பம் வருத்துவதால்
    அழிந்து போய்விடுவேனோ என்று அஞ்சி
    எதற்கும் அஞ்சாதவனாய் தன்னுயிரை வெறுத்து
    கையில் வேலேந்தி காட்டு விலங்குகளைத் தாண்டி
    இரவில் வருவான்! இன்பம் தருவான்!

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – அமுதத் தமிழில் எழுதும் கவிதை
    வரிகள் – புலவர் புலமைப்பித்தன்
    பாடியவர்கள் – ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – மதுரை மீட்ட சுந்தரபாண்டியன்
    பாடலின் சுட்டி – http://youtu.be/RDARFimmHLg

    பாடல் – மங்கை தண்கை மலர்க்கை
    வரிகள் – கவியரசு கண்ணதாசன்
    பாடியவர் – வாணி ஜெயராம்
    இசை – திரையிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – தெய்வத் திருமணங்கள் (ஸ்ரீநிவாச கல்யாணம்)
    பாடலின் சுட்டி – கிடைக்கவில்லை

    பாடல் – மோகம் வந்து தாகம் வந்து
    பாடியவர் – எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    வரிகள், இசை – டி.ராஜேந்தர்
    படம் – உயிருள்ளவரை உஷா
    பாடலின் சுட்டி – http://youtu.be/1S3XGSA4qTk

    அன்புடன்,
    ஜிரா

    266/365

     
    • rajinirams 9:01 pm on August 26, 2013 Permalink | Reply

      “கை” தட்டி பாராட்ட வேண்டிய நல்ல பதிவு. முக்கியமான மற்ற இரண்டு பாடல்கள்-ஹோ ஹோ ஹோ -கை கை மலர் கை, இது நாட்டை காக்கும் கை:-))

  • mokrish 6:52 pm on August 23, 2013 Permalink | Reply  

    கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் 

    இந்த ஆடி மாதம் சென்னையில் சென்ற இடமெல்லாம் சாலையோரம் பந்தல் , சீரியல் விளக்கு அலங்காரம் எல்லாம் அமைத்து பூஜைகள் நடப்பதைப் பார்த்தேன். இதில் சில  ஆட்டோ ஸ்டாண்டை ஒட்டி சின்ன இடத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி மட்டும் வைத்து கட்டப்பட்ட makeshift  கோவில்கள். நம்பிக்கையுடன் பலர் கூடியிருந்தனர்.

    Never question someone’s faith என்று சொல்வார்கள். ஆனால் சிவவாக்கியர் என்ற சித்தர் கேள்வி எழுப்பினார்

    நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே

    சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா

    நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்

    சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

    தெய்வம் நமக்குள்ளே இருக்கும்போது ஏன் கல்லை வணங்கவேண்டும் என்கிறார்.  நடிகர் விவேக் ஒரு படத்தில் மைல் கல்லை வணங்கும் கூட்டத்திடம் இதே கேள்வியை எழுப்புவார். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் அடிக்கடி ‘கடவுள் என் கல்லானான்’ என்ற  கேள்வியை எழுப்புவது வழக்கம்.

    கண்ணதாசன் இது நம்பிக்கை சார்ந்த விஷயம் என்கிறார்.   பார்த்தால் பசி தீரும் படத்தில் உள்ளம் என்பது ஆமை என்ற பாடலில் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் டி எம் எஸ்)

    http://www.youtube.com/watch?v=Jicjjb8Co7k

    தெய்வம் என்றால் அது தெய்வம்

    அது சிலை என்றால் வெறும் சிலை தான்

    உண்டென்றால் அது உண்டு

    இல்லையென்றால் அது இல்லை

    வாலியும் இது அவரவர் பார்வை சம்பந்தப்பட்ட விஷயம் என்கிறார். தசாவதாரம் படத்தில் (இசை ஹிமேஷ் ரெஷாம்மியா பாடியவர் ஹரிஹரன் )

    http://www.youtube.com/watch?v=GiLjLX03jWY

    கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது,

    கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது..

    ஹாஸ்டலில் தனியாக தங்கிப் படிக்கும் மூன்று மாணவர்கள். ஒருவன் தன் தாயின் ஞாபகம் வரும்போது புகைப்படத்தைப்  பார்த்துக்கொள்வான். இன்னொருவன் தாயின் புடவையை தன் பெட்டியில் வைத்துக்கொண்டிருப்பான். மூன்றாமவன் எந்த ஒரு பொருளின் துணையும் இல்லாமல் தாயை நினைத்துக்கொள்வான். எல்லாரும் தாயை நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் கடைப்பிடிக்கும் வழி வேறு. (சோ சொன்ன விளக்கம்  என் வார்த்தைகளில்)

    அதே போல் கல்லாய் வந்தவன் கடவுளடா என்று வழிபடுவதும் சரிதானே?

    மோகனகிருஷ்ணன்

    265/365

     
    • amas32 7:20 pm on August 23, 2013 Permalink | Reply

      மகர தீபத்தைக் கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை என்று கூறுவர்!

      கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்பது நாயை அடிக்கக் கல் இருக்கும்போது நாய் தென்படாது, நாய் தென்படும்போது கல் கிடைக்காது என்பது அல்ல பொருள். கற்சிற்பத்தில் நாயை மட்டும் நாம் கவனிக்கும் பொழுது கல்லை நாம் கவனிக்கமாட்டோம். கல்லாக பார்த்தால் நாய் தெரியாது.

      அப்படித்தான் சிலையாக நினைத்தால் சிலை, இறைவனாக நினைத்தால் இறைவன்.

      amas32

    • successfulsathya 10:15 am on August 24, 2013 Permalink | Reply

      சூப்பர் மச்சி

    • rajinirams 1:26 am on August 25, 2013 Permalink | Reply

      இதோ எந்தன் தெய்வம் முன்னாலே என்று குழந்தையின் புன்னகையை குறித்த வாலியின் வரிகளும் ஏழையின் சிரிப்பில் இறைவன் என்ற வாலியின்(அண்ணா)வரிகளையும் நினைவுபடுத்திய நல்ல பதிவு.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel