Updates from October, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • mokrish 7:54 pm on October 23, 2013 Permalink | Reply  

    இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால் 

    அன்றொரு நாள் ட்விட்டரில் ஒரு அட்டகாசமான வெண்பா விளையாட்டு. நண்பர் @nchokkan கண்ணன் பற்றி வெண்பா எழுத நண்பர் @elavasam அதில் ஒரு கேள்வி கேட்க — இவர் பதில் சொல்ல என்று பரபரப்பான one day மாட்ச்  போல சுவாரசியமாக இருந்தது.

    எனக்கு வெண்பாவும் தெரியாது விருத்தமும் தெரியாது. ஆனால் விவாதிக்கப்பட்ட விஷயம் கண்ணனும் ராமனும். கண்ணன் பற்றிய பாட்டில் ஏன் ராமர் பற்றிய Reference என்று முதல் கேள்வி.. இருவரும் ஒன்றுதானே என்று ஒரு பதில். தப்பு செய்தவன் ஒருவன் மாட்டிக்கொண்டவன் வேறொருவன் என்று ஒரு மறுமொழி.  ஒரே பாட்டில் பல அவதாரங்கள் என்று ஒரு தனி track. அட அட

    அதே கேள்விகளுக்கு நாமும் பதில் தேடலாம் என்று ஒரு (விபரீத) ஆசை. ஆண்டாள் திருப்பாவையில் கொக்கு உருவத்தில் வந்த பகாசுரனை வதம் செய்த கண்ணனைக் குறித்தும், பொல்லா அரக்கனாகிய ராவணனைக் கொன்ற ராமனைக் குறித்தும்

    புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக்

    கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்

    என்று ஒரே பாசுரத்தில் பாடியுள்ளதாகப் படித்தேன். மணாளன் எப்படி இருக்க வேண்டும் ஆண்டாள் கலங்குகிறாள். கண்ணனா ராமனா ? கண்ணுக்கு இனிய கண்ணனுக்கு ஒரு வரி மனத்துக்கு இனிய ராமனுக்கு ஒரு வரி என்று மாறி மாறி உருகுகிறாள்.  கண்ணதாசன் சுமைதாங்கி என்ற படத்தில் ஒரு matrimonial விளம்பரம் போல எழுதுகிறார் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் எஸ் ஜானகி)

    http://www.youtube.com/watch?v=lsY6sJPpAF0

    ராதைக்கேற்ற கண்ணனோ

    சீதைக்கேற்ற ராமனோ

    கோதைக்கேற்ற கோவலன் யாரோ அழகு

    கோதைக்கேற்ற காவலன் யாரோ

    அன்னை இல்லம் படத்தில் நடையா இது நடையா என்ற பாடலிலும் (இசை கே வி மகாதேவன் பாடியவர் டி எம் எஸ்) பொருத்தம் பார்க்கிறார்.

    தேரோட்டும் கண்ணனுக்கு ராதா

    சிங்கார ராமனுக்கு சீதா

    காரோட்டும் எனக்கொரு கீதா

    கல்யாணம் பண்ணிக்கொள்ளத் தோதா

    நம்மாழ்வார்  ராமன் கூனி மேல் மண் உருண்டை எறிந்த பழியை

    மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் மாதவா

    கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!

    என்ற பாடலில் கண்ணன் மேல் போடுகிறார். .

    ராமன் ஒரு வகை கண்ணன் ஒரு வகை என்பது ஆண்டாள் கட்சியா? நம்மாழ்வார் அதெல்லாம் இல்லை இருவரும் ஒன்றே என்கிறாரா? இன்னும் நிறைய படிக்க வேண்டும்.

    கண்ணதாசன் அந்த Bride / Bridegroom தேவை என்பதையெல்லாம் தள்ளிவைத்து இருவேடம் போட்டாலும் திருமால் ஒன்றே என்று உயர்ந்தவர்கள் படத்தில் (இசை சங்கர் கணேஷ் பாடியவர் எம் பாலமுரளிகிருஷ்ணா)

    http://www.palanikumar.com/filmsongdetails.phtml?filmid=2697&songid=13160

    ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே

    ராதையின் வடிவம் சீதையும் தாயே

    நால் வேதம் அவனாக உருவானதோ

    நாலாகும் குணம் பெண்மை வடிவானதோ

    என்று சொல்கிறார்.

    தசாவதார வரிசை ஒரு evolution செய்தி சொல்லும் என்று படித்தேன் . முதலில் நீர் வாழ் உயிரினம் அடுத்து ஒரு amphibian அப்புறம் ஒரு நிலத்தில் வாழும் வராகம் அடுத்து கொஞ்சம் மிருகம் கொஞ்சம் மனிதன் என்று அது ஒரு அழகான வரிசை. இதில் ராமனுக்கு அடுத்து கண்ணன். இதில் இருக்கும் evolution செய்தி என்ன?

    மோகனகிருஷ்ணன்

    325/365

     
    • amas32 8:12 pm on October 23, 2013 Permalink | Reply

      மோகனக்ரிஷ்ணனனான உங்களுக்கு அது விளங்காதா? 😉 இராமன் ரூல்ஸ் ராமனுஜன். கிருஷ்ணன் சகலகலா வல்லவன். அடுத்த பரிணாம வளர்ச்சி அதுவாகத் தானே இருக்க வேண்டும். ஆறு அறிவுள்ள மனிதன் இன்னும் இன்னும் சாமர்த்தியத்தையும் செயல் திறனையும் அதிகப் படுத்திக் கொள்ள வேண்டிய நிலையை இன்று நாம் கண் கூடாகப் பார்க்கவில்லையா? அதைத் தான் கிருஷ்ணனின் அவதாரம் நமக்குக் கட்டியுள்ளது. இன்றைய காலக் கட்டத்திற்குத் தேவையான நெளிவு சுளுவோடு வாழ கிருஷ்ணன் கற்றுத் தருகிறார் என்பது என் தாழ்மையானக் கருத்து.

      இராமனின் வாழ்க்கை ஒரு பாடம். கிருஷ்ணன் உபதேசம் செய்யவே அவதாரம் எடுத்தார். சிலது கேட்டுத் தான் கற்றறிய முடியும். அதை நமக்கு அருளியவர் கண்ணன்.

      அருமையானப் பாடல்கள் :-)) நன்றி!

      amas32

    • rajinirams 7:35 pm on October 24, 2013 Permalink | Reply

      ராமன்,கிருஷ்ணன் என்ற அவதாரங்களை வைத்து அருமையான பதிவை தந்திருக்கிறீர்கள்.
      “டபுள்ஸ்”படத்தில் நாயகனை-ராமனாக சித்தரித்து மனைவியும் கிருஷ்ணனாக காதலியும் நினைத்து பாடும் வைரமுத்துவின் பாடல் நன்றாக இருக்கும். “ராமா ராமா ராமா சீதைக்கேத்த ராமா உன் வில்லாய் நானும் வந்தேன் அம்பு பூட்டடா… கிருஷ்ணா கிருஷ்ணா உன் புல்லாங்குழலாய் வந்தேன் நீ வாசிடா என்று வரும். தசாவதாரம் படத்தில் வாலியின் வரிகள் “ராவணன் தன் தலையை கொய்ய ராமனாக வந்தாய்,கண்ணனாக நீயே வந்து காதலையும் தந்தாய்”.இன்னொரு பாடல் வரிகள்: ஒருத்திக்கு ஒருவன் என்ற தத்துவமே ஸ்ரீ ராமன்,காதல் உணர்வுக்கு பேதமில்லை என்றவனே பரந்தாமன், ஸ்ரீ ராமனாக நாயகியோடு வாழ்வது ஓரின்பம்,ஸ்ரீ கிருஷ்ணனாக கோபியரோடு வாழ்வது பேரின்பம்-வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன். http://youtu.be/XkM4zfgSBDg

  • G.Ra ஜிரா 1:18 pm on October 18, 2013 Permalink | Reply  

    சினம் ஏனோ சின்னவளு(னு)க்கு! 

    மெல்லியதோர் உணர்வினை இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். பூவினும் மெல்லியது. பனியினும் மெல்லியது. நம் கண்கள் காணாத தென்றலிலும் மெல்லியது.

    குழந்தைகளுக்கு வரும் கோவத்தைதான் சொல்கிறேன். சட்டியில் விழுந்த வெண்ணெய் உருகிவிடாமல் எடுப்பது போன்றது கோவம் கொண்ட குழந்தைகளை சமாதானப்படுத்துவது.

    குழந்தைகளே அழகு. அதிலும் கோவம் கொண்டு முகத்தைத் தூக்கி வைத்திருக்கும் போது பாருங்கள்…. அதை விட அழகு உலகில் இல்லவேயில்லை என்ற முடிவுக்கு வருவீர்கள்.

    அந்தக் குழந்தைகளை எப்படியெல்லாம் பாடி கவிஞர்கள் சமாதானப்படுத்தியிருக்கிறார்கள் என்று இன்று பார்க்கப் போகிறோம்.

    எதையும் கண்ணதாசனிடம் இருந்தே தொடங்கிப் பழகிவிட்டோம். இதையும் அவரிடமிருந்தே தொடங்குவோம்.

    தாயிடம் முகம் காட்டாமல் திரும்பி ஓடும் மகளை அழைக்க வேண்டும். திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும். எப்படி பாடுவாள் தாய்?

    சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா
    உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா

    அழைத்தால் திரும்பிப் பார்க்குமா கோவம் கொண்ட குழந்தைகள். அவர்களைத் தூக்கி வைத்து புகழ்ந்தால்தானே காது கொஞ்சமாவது கேட்கும்.

    நீ தங்கம் போலே அழகு
    நீ எங்கள் வானில் நிலவு
    இளம் தாமரைப் பூவே விளையாடு
    காவிரி போலே கவி பாடு

    விளையாடச் சொன்னால் போதாதா குழந்தைகளுக்கு? அதுவரை இருந்த கோபமும் அழுகையும் மறைந்து சமாதானம் பிறக்கிறது. சமாதானம் ஆனபிறகு என்னாகும்? அணைத்துக் கொண்டு பாட வேண்டியதுதானே!

    அணைக்கும் அன்பான கைகள்
    அங்கே சொந்தம் கொண்டாட வேண்டும்
    வரும் நாளை வாழ்விலே உயர் மேன்மை காணலாம்
    நல்ல காலம் தோன்றினால் இந்த உலகை வெல்லலாம்

    கிட்டத்தட்ட ஒரு கதையாகவே பாடலை எழுதியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.

    சரி. நாம் அடுத்த குழந்தைக்குப் போவோம். ஏதோவொரு செல்லச் சண்டை. அம்மாவோடு கோவம். கண் நிறைய கண்ணீர். யாரோடும் பேசாமல் ஒதுங்கி நிற்கும் பெண்குழந்தை. எப்படியெல்லாம் கொஞ்சி சமாதானப் படுத்தலாம்? புலவர் புலமைப்பித்தனைக் கேட்போமா

    மண்ணில் வந்த நிலவே
    என் மடியில் பூத்த மலரே
    அன்பு கொண்ட செல்லக்கிளி
    கண்ணில் என்ன கங்கைநதி… சொல்லம்மா….
    நிலவே… மலரே….
    நிலவே மலரே.. மலரின் இதழே… இதழின் அழகே!

    ச்சோ ச்வீட் என்று புலவர் புலமைப்பித்தனைப் பாராட்டத் தோன்றுகிறதல்லவா? அதிலும் அந்தாதி போல “நிலவே மலரே… மலரின் இதழே… இதழின் அழகே” என்று அடுக்குவது அட்டகாசம்.

    அதென்ன பெண் குழந்தைகள் தான் கோவித்துக் கொள்வார்களா? ஆண்குழந்தைகளுக்குக் கோவம் வராதா? அம்மா திரைப்படத்தில் வந்ததே. இந்த முறை சமாதானப்படுத்துவது கவிஞர் வைரமுத்து.

    ஆனால் ஒரு சின்ன பிரச்சனை. அவளுடைய மகன் தான் அந்தச் சிறுவன். ஆனால் இருவருக்கும் தாங்கள் தாய்-மகன் என்று தெரியாது. அவர்களுக்குள் ஏதோவொரு சண்டை. அதனால் கோவம். கோவத்தின் விளைவாக சோகம். சரி பாட்டைப் பார்க்கலாம்.

    பூமுகம் சிவக்க
    சோகமென்ன நானிருக்க

    குழந்தைகளே மென்மை. அந்த மென்மையான முகம் அழுதால் செக்கச் சிவந்து போய்விடுகிறதே! அதைப் பார்க்கத் தான் முடியுமா? பார்த்துவிட்டு சும்மாயிருக்கத்தான் முடியுமா? எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாவது அந்தப் பூமுகத்தில் புன்னகையை அல்லவா பார்க்கத் துடிக்கும் தாயுள்ளம்!

    தாயின் வடிவில் என்னை நினைத்து விடு
    எனக்கும் அழுகை வரும் துடைத்து விடு

    எப்போதுமே பிள்ளைகளை அடித்து விட்டு அதற்கு வருத்தப்படுவது தாயாகத்தான் இருக்கும். அப்படியிருக்கும் போது மகன் அழும் போது தாய் அழாமல் இருந்தால்தான் அதிசயம். அதைக் கண்டு கண்ணீரைத் துடைக்க மகன் வருவான் என்ற நம்பிக்கைதான் இந்தத் தாயின் நம்பிக்கையும். அதே போல மகனும் வந்தான். கண்ணீரைத் துடைத்தான்.

    எவ்வளவு மென்மையான உணர்வுகள் இவை. இவற்றைப் பாடலிலும் குரலிலும் இசையிலும் கொண்டு வருவது எவ்வளவு கடினமாக இருந்திருக்கும். ஆனால் பாருங்கள்… நாம் பார்த்த மூன்று பாடல்களையுமே பாடியவர் இசையரசி பி.சுசீலா தான். இந்த ஒற்றுமை தற்செயலானதாக இருக்கும் என்று நினைக்கவில்லை. ஒவ்வொரு பாடலிலும் அவர் காட்டியிருக்கும் குழைவும் உணர்வுகளும் போதும் அவர் பெருமையைச் சொல்ல.

    இன்னொரு வகையான குழந்தைகள் உண்டு. ஆம். “நானொரு குழந்தை நீயொரு குழந்தை” என்று கவிஞர் வாலி சொன்ன கணவன் மனையர் தான் அந்தக் குழந்தைகள். அந்தக் குழந்தைகளில் ஒரு குழந்தை கோவித்துக் கொண்டால் எப்படி சமாதானப்படுத்துவது?

    பச்சப்புள்ள அழுதுச்சுன்னா பாட்டுப் பாடலாம்
    இந்த மீசை வெச்ச கொழந்தைக்கு என் பாட்டு போதுமா!

    புலமைப் பித்தன் கேட்கும் கேள்வியும் நியாயமானதுதான். குழந்தைகளுக்கு பொம்மையைக் கொடுத்து அழுகையை அடக்கலாம். காதலர்களுக்குள் அழுகை வரும் போது ஒருவரையொருவர் கொடுத்துத்தான் சமாதானப் படுத்த வேண்டும்.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – பொல்லாதவன்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=VPM_AqzmZr0

    பாடல் – மண்ணில் வந்த நிலவே
    வரிகள் – புலவர் புலமைப்பித்தன்
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – நிலவே மலரே
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=UmCcv-4uv7k

    பாடல் – பூமுகம் சிவக்க
    வரிகள் – கவிப்பேரரசு வைரமுத்து
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    இசை – இன்னிசை வேந்தர்கள் சங்கர் – கணேஷ்
    படம் – அம்மா
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=o70tn84msTs

    பாடல் – பச்சப்புள்ள அழுதுச்சுன்னா
    வரிகள் – புலவர் புலமைப் பித்தன்
    பாடியவர் – வாணி ஜெயராம்
    இசை – சந்திரபோஸ்
    படம் – புதிய பாதை
    பாடலின் சுட்டி – http://youtu.be/ae3gVTQwWDk

    அன்புடன்,
    ஜிரா

    320/365

     
    • suri 2:13 pm on October 18, 2013 Permalink | Reply

      if i am not mistaken, nilave malare was written by Pulamaipitthan. Pl check

    • amas32 9:34 pm on October 18, 2013 Permalink | Reply

      என் மகன் சிறுவனாக இருக்கும்போது அவனுடனேயே நான் இருக்க வேண்டும் என்று நினைப்பான். நான் வீட்டு வேலையில் ஈடுப்பட்டிருந்தாலோ தொலைபேசியில் உரையாடினாலோ முணுக்கென்று கோபம் வந்துவிடும். நிறைய இராமாயண மகாபாரதக் கதைகள் கேட்டு வளர்ந்தவன், அதனால் நீ என்னுடன் இல்லையென்றால் நான் சாமியாராகிவிடுவேன் என்று சொல்லி வீட்டின் முன் உள்ளத் தெருவோர நடைபாதையில் போய் சாமியார் மாதிரி உட்கார்ந்து தோம் தோம் என்று உச்சரிக்க ஆரம்பித்து விடுவான். இரண்டரை, மூன்று, வயது ஓம் என்று சொல்ல வராது 🙂

      நீங்கள் சொல்வது உண்மை, குழந்தைகள் கோபித்துக் கொள்வதும் கொள்ளை அழகு 🙂

      amas32

    • rajinirams 11:07 am on October 19, 2013 Permalink | Reply

      கோபம் கொள்ளும் குழந்தைகளையும்,கணவனையும் சமாதானப்படுத்தும் பாடல்களை கொண்ட அருமையான பதிவு-அதுவும் தமிழ் திரையுலகின் தலைசிறந்த “நான்கு”கவிஞர்களை ஒருங்கிணைத்தது சூப்பர். கோபம் கொள்ளும் காதலியை சமாதானப்படுத்தும் ஒரு அருமையான பாடல் கவிஞர் வைரமுத்து அவர்களின் “பொன் மானே கோபம் ஏனோ”-ஒரு கைதியின் டயரி.கோபமான கணவனை மனைவி சமாதனப்படுத்தும் பாடல்-தென்ன மரத்துல தேளு கொட்ட பனைமரத்துல நெறி கட்டும்-வீட்டுக்குள்ள கோபம் வேணாம் கோர்ட்டுக்குள்ள இருக்கட்டும்-சாட்சி-வைரமுத்து.
      இன்னொரு பாடல் எந்த படம் தெரியவில்லை-கோபம் ஏனோ கண்ணே உன் துணைவன் நானல்லவா..அன்பே எந்தன் தவறல்ல….. நன்றி.

  • G.Ra ஜிரா 8:26 pm on October 11, 2013 Permalink | Reply  

    குடும்பம்: ஒரு கதம்பம் 

    70களிலும் 80களிலும் வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத அம்சமாக விளங்கியவை குடும்பப் பாடல்கள்.

    இந்தப் பாடல்களில் குடும்பப் பாசம் முன்னிறுத்தப் படும். நேர்மையும் நல்ல பண்புகளும் ஒழுக்கம் போற்றப் படும். பொதுவாகவே ஒரே பாடல் மகிழ்ச்சியோடு முதலில் சோகத்தோடு பிறகும் பாடப்படும்.

    மகிழ்ச்சியாகப் பாடிய பின்னர் குடும்பம் பிரியும். சோகமாகப் பாடிய பிறகு சேர்ந்துவிடும். இது படம் பார்க்கும் சராசரி ரசிகனுக்கும் தெரிந்த உலக உண்மை.

    சோகமான பாடலைப் பாடினால் இளகிய மனம் உடையவர்கள் அழுது விடவும் வாய்ப்புண்டு. ஆகையால்தான் இந்த மாதிரி பாடல்களைக் கேட்கும் போது கையில் கைக்குட்டை…. இல்லை இல்லை. கைத்துண்டு இருந்தால் நல்லது.

    குடும்பப் பாட்டு என்றதும் முதலில் எனக்குத் தோன்றியது நாளை நமதே படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் தான்.

    அன்பு மலர்களே
    நம்பி இருங்களேன்
    தாய் வழி வந்த சொந்தங்கள் எல்லாம்
    ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே

    இந்தப் பாடலைப் பாடி முடித்ததும் குடும்பம் முழுவதுமே பிரிந்து விடும். குழந்தைகள் பெரியவர்களாகித்தான் ஒன்று சேர்வார்கள்.

    இன்னொரு பாடல் உண்டு. இதுவும் குடும்பப் பாட்டுதான். ஆனால் வளர்ந்தவர்களின் குடும்பப்பாட்டு. அண்ணன் தம்பிகள் பாடும் பாட்டு. மகிழ்ச்சியாக பாட்டைப் பாடிய பின்னால் குடும்பத்தில் சண்டை வந்து அவர்களும் பிரிந்துதான் போனார்கள். படம் முடியும் முன்னர் மூத்த அண்ணன் இறக்கும் போது ஒன்று சேர்வார்கள்.

    முத்துக்கு முத்தாக
    சொத்துக்கு சொத்தாக
    அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
    கண்ணுக்குக் கண்ணாக
    அன்பாலே இணைந்து வந்தோம்
    ஒன்னுக்குள் ஒன்னாக

    இவர்கள் அண்ணன் தம்பிகள் என்றால், அண்ணனுக்கும் தங்கைக்கும் கூட குடும்பப் பாட்டு வைத்தது தமிழ் சினிமா.

    பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
    ஊர்வலம் வருகின்றது
    அன்பு பொங்கிடும் அன்புத் தங்கையின் நெற்றியில்
    குங்குமம் ஜொலிக்கின்றது

    சினிமா வழக்கப்படி அண்ணனும் தங்கையும் பிரிந்து விடுகிறார்கள். பின்னொரு காட்சியில் அண்ணன் அந்தப் பாடலை ஒரு திருமண வரவேற்பில் பாடும் போது காலில்லாத தங்கை நடக்க முடியாமல் நடந்து ஓடமுடியாமல் அழ முடியாத அளவுக்கு அழுது…. கடைசியில் அண்னனைக் காண முடியாமல் போன போது திரையரங்குகளில் சிந்திய கண்ணீர் ஆற்றிலேயே ஆடிப்பெருக்கு கொண்டாடியிருக்கலாம்.

    கிட்டத்தட்ட இதே போல இன்னொரு குடும்பம். தாய் தந்தை இழந்து அனாதைகளான அக்காவும் தம்பிகளும். அவர்களுக்கும் ஒரு பாடல் எழுதினார் கலைஞர் கருணாநிதி.

    காகித ஓடம் கடலலை மேலே
    போவது போலே மூவரும் போவோம்

    இந்தப் படத்தில் முதலில் மகிழ்ச்சியாகவும் பிறகு சோகமாகவும் பாட மாட்டார்கள். முதலில் சோகமாகவும் அடுத்து பெரும் சோகமாகவும் பாடி படம் பார்த்த மக்களை கதறக் கதறக் கூக்குரலிட்டு அழவைத்ததை மறக்க முடியுமா? எப்போதோ பிரிந்து போன தம்பி குடிபோதையில் எதிரில் இருப்பது அக்கா என்று தெரியாமலே தவறிழைக்க நெருங்குவான். சோகத்தின் உச்சியில் அந்நேரம் அக்கா அந்தப் பாடலைப் பாட திருந்துகிறான் தம்பி. அரிவாள்மனையில் கழுத்தை அறுத்துக் கொண்டு குடும்பத்தை இணைக்கிறாள் அக்கா.

    இன்னொரு குடும்பப் பாடல் உண்டு. இந்தப் பாடல் நடிகர் திலகத்துக்கு. மகிழ்ச்சியான குடும்பம். சந்தர்ப்பத்தால் மூலைக்கொன்றாய் பிரிகிறது. பிறகென்ன… படம் முடியும் போது எல்லாம் சுபம்.

    ஆனந்தம் விளையாடும் வீடு
    இது ஆனந்தம் விளையாடும் வீடு
    நான்கு அன்பில்கள் ஒன்றான கூடு
    இது ஆனந்தம் விளையாடும் வீடு

    பிரிந்தால் குடும்பமாகத்தான் பிரிய வேண்டுமா? கணவனும் மனைவியும் பிரிந்தால்? நிறைமாதமாக இருக்கும் மனைவிக்கு கணவன் ஒரு பாடல் பாடுகிறான். அவன் பாடலைப் பாடிய வேளை இருவரும் பிரிய வேண்டியதாயிற்று.

    மலர் கொடுத்தேன்
    கை குலுங்க வளையலிட்டேன்
    மங்கை எந்தன் ராஜாத்திக்கு நானே
    இதுவொரு சீராட்டம்மா
    என்னையும் தாலாட்டம்மா

    பிரிந்த கணவன் காஷ்மிரில் இருக்க… மனைவி டில்லியில் இருக்க.. ஒரு தற்செயலான தொலைபேசி அழைப்பு இருவரையும் பேச வைக்கிறது.

    எதிர்முனையில் பேசுவது கணவன் என்று தெரிந்ததும் கே.ஆர்.விஜயா அதிர்ச்சியில் போனை கீழே போட்டு விடுவார்… அப்போது “சுமதீஈஈஈஈஈஈஈஈஈஈ” என்று நடிகர் திலகம் சிம்ம கர்ஜனை செய்யும் போது அடுத்த காட்சிக்காக வெளியே காத்திருந்தவர்கள் காதிலும் விழும். இந்தக் காட்சியில் கீழே விழுந்துவிட்ட கே.ஆர்.விஜயா கை நழுவவிட்ட தொலைபேசியை எடுப்பாரா இல்லையா என்ற அதிர்ச்சி தாங்காமல் திரையரங்கில் ஒருவருக்கு மாரடைப்பு வந்ததாகச் சொல்வார்கள்.

    தமிழ்த் திரைப்படத்தின் தன்மை மாறிக் கொண்டிருந்த எழுபதுகளின் இறுதியில் மிகப் பழம் பெருமை வாய்ந்த இயக்குனர் டி.ஆர்.சுந்தரம் ஒரு திரைப்படம் எடுத்தார். அந்தப் படத்திலும் ஒரு குடும்பப் பாட்டு. அவர்கள் குடும்பத்தோடு இன்னொரு உறுப்பினராக நிலா.

    வெண்ணிலா வெள்ளித்தட்டு
    வானிலே முல்லை மொட்டு

    இந்தப் படத்திலும் பிரிந்த அண்ணன் தம்பி தங்கைகள் படம் முடிவதற்கு முன்னால் குய்யோ முய்யோ என்று கதறிக் கொண்டு ஒன்று சேர்ந்தார்கள் என்றும் அவர்களின் மூத்த அண்ணன் உயிரைக் கொடுத்து மற்றவர்களைக் காப்பாற்றினான் என்றும் சொல்லி கிண்டலடிக்க விரும்பவில்லை.

    இது போன்ற குடும்பப் பாட்டுகள் குறைந்து விட்ட காலத்தில் ஒரு குடும்பப் பாட்டு வந்தது. அதுவும் கலைப்பட இயக்குனர் ஒருவரால் கொண்டுவரப்பட்டது. பாலுமகேந்திரா இயக்கிய நீங்கள் கேட்டவை திரைப்படப் பாடலைத்தான் சொல்கிறேன்.

    சிறுவயதில் அம்மா பாடிய பாட்டை நினைவில் வைத்துக் கொண்டு பின்னாளில் அண்ணனும் தம்பியும் சேர்கிறார்கள். அம்மாவைக் கொன்றவனைப் பழி வாங்குகிறார்கள்.

    பிள்ளை நிலா
    இரண்டும் வெள்ளை நிலா
    அலை போலவே
    மனம் விளையாடுதே

    இதில் அம்மாவாக பாடும் எஸ்.ஜானகி குரலில் பிள்ளை நிலா என்றும் மகனுக்காக ஏசுதாஸ் அவர்கள் பாடும் போது பில்லை நிலா என்றும் உங்கள் காதில் விழுந்தால் என்னைக் குற்றம் சொல்லாதீர்கள்.

    இதுவரை நாம் பார்த்ததெல்லாம் குடும்பப் பாட்டுகளே அல்ல என்னும் அளவுக்கு 90களில் ஒரு குடும்பப் பாட்டு வந்தது. இதுவரை நாம் மனிதர் உணர்ந்து கொள்ள மனிதக் குடும்பப் பாட்டுகளைப் பார்த்தோம்.

    ஆனால் ”காக்கை குருவி எங்கள் சாதி” என்று பாரதி சொன்னதை ஒவ்வொரு படத்திலும் பாம்பை டைப் அடிக்க வைத்தும் குரங்கை பைக் ஓட்ட வைத்தும் யானையை சைக்கிள் ஓட்ட வைத்தும் நிரூபித்துக் கொண்டிருக்கும் இயக்குனர் இராம.நாராயணன் எடுத்த படமான துர்காவில் ஒரு குடும்பப் பாட்டு உண்டு.

    பாப்பா பாடும் பாட்டு
    கேட்டு தலைய ஆட்டு
    மூணு பேரும் ஒன்னுதானே
    அம்மாவுக்கு கண்ணுதானே
    ஒன்னா விளையாடலாம்

    அந்தப் பாடலைக் கேட்டதுமே பிரிந்து போன நாயும் குரங்கும் எங்கெங்கோ இருந்து ஓடி வந்து பேபி ஷாமிலியைச் சேரும் காட்சி படம் பார்க்கின்றவர்களின் நெஞ்சை உருக்கும். மனதை கிறுகிறுக்க வைக்கும். சித்தத்தை பைத்தியம் பிடிக்க வைக்கும்.

    எப்படியெல்லாம் நாம் சிக்கியிருக்கிறோம் பார்த்தீர்களா?!?

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – அன்பு மலர்களே நம்பி இருங்களேன்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர் – (மகிழ்ச்சி – பி.சுசீலா, அஞ்சலி, ஷோபா, சசிரேகா) (சோகம் – டி.எம்.சௌந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்ரமணியம்)
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – நாளை நமதே
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=ED6zDjOZXtw

    பாடல் – முத்துக்கு முத்தாக
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – கண்டசாலா
    இசை – கே.வி.மகாதேவன்
    படம் – அன்புச் சகோதரர்கள்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=-gyJT1nQDnM

    பாடல் – பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
    வரிகள் – புலவர் புலமைப்பித்தன்
    பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – நினைத்ததை முடிப்பவன்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Azrz41LaLeo

    பாடல் – ஆனந்தம் விளையாடும் வீடு
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – சந்திப்பு
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=bzRQIs5OIuA

    பாடல் – மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன்
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – திரிசூலம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=-oUNmu4edLA

    பாடல் – வெண்ணிலா வெள்ளித்தட்டு
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – மலேசியா வாசுதேவன், பி.எஸ்.சசிரேகா, எஸ்.பி.ஷைலஜா
    இசை – ராஜேஷ்
    படம் – காளி கோயில் கபாலி
    பாடலின் சுட்டி – http://youtu.be/GfWzFhWRuHs

    பாடல் – பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர் – எஸ்.ஜானகி (மகிழ்ச்சி), கே.ஜே.ஏசுதாஸ்(சோகம்)
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – நீங்கள் கேட்டவை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=XvrB5UA0Kl0

    பாடல் – பாப்பா பாடும் பாட்டு
    வரிகள் – தெரியவில்லை
    பாடியவர் – எம்.எஸ்.ராஜேஸ்வரி
    இசை – சங்கர் – கணேஷ்
    படம் – துர்கா
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Vg0kYE6CnWA

    அன்புடன்,
    ஜிரா

    314/365

     
    • Uma Chelvan 9:36 pm on October 11, 2013 Permalink | Reply

      It is really funny to read your post GiRa., .பொதுவாக காதலன் காதலி அன்பைத்தான் ” செம்புல பெயல் நீர் போல் ” னு சொல்லுவாங்க. ஆனால் இங்கே அண்ணன் தங்கை பாசத்தயும் “செம்மணிலே தண்ணீரை போல் உண்டான சொந்தம் இது ” என்று பாடுகிறார் ஒரு அண்ணன். என்ன ஒரு அருமையான பாடல்!!! இந்த ராஜா வேற எல்லாத்துக்கும் ஒரு பாட்ட போட்டு வைச்சு நம்மை படுத்தி எடுக்கிறார் !!!!!!:::::)))))))))

    • rajinirams 2:12 am on October 12, 2013 Permalink | Reply

      செம பதிவு.வித்தியாசமான சிந்தனை.நல்ல திறனாய்வு.இது போல பல பாடல்களிருந்தாலும் சட்டென நினைவு வரும் சில பாடல்கள்-என் பங்கிற்கு-1,நான் அடிமை இல்ளை-ஒரு ஜீவன் தான்-வாலி2,மவுன கீதங்கள்-மூக்குத்தி பூ மேலே-வாலி 3,சின்னதம்பி-நீ எங்கே-வாலி.4,ப
      ட்டிக்காடா பட்டணமா-அடி என்னடி ராக்கம்மா-கண்ணதாசன் 5,நீதிக்கு தலை வணங்கு-இந்த பச்சைக்கிளிக்கொரு(சோகமில்லை)-புலமைப்பித்தன் 6,கல்யாண ராமன்-ஆஹா வந்துருச்சு-காதல் தீபம் ஒன்று-பஞ்சு அருணாசலம்.7,கல்யாண பரிசு-உன்னைக்கண்டு-பட்டுக்கோட்டையார்.8,உழைப்பாளி-அம்மாஅம்மா-வாலி 9,புதுக்கவிதை-வெள்ளைப்புறா ஒன்று-வைரமுத்து 10,கொக்கரக்கோ-கீதம் சங்கீதம்-வைரமுத்து 11,வீட்ல விசேஷங்க-மலரே தென்றல் பாடும்-வாலி.நீங்கள் குறிப்பிட்ட பாப்பா பாடும் பாட்டு உள்ளிட்ட துர்கா படப்பாடல்கள் வாலி எழுதியவையே. நன்றி

    • amas32 9:01 pm on October 14, 2013 Permalink | Reply

      நீங்க எந்த ஒரு டாபிக் எடுத்தாலும் அலசி ஆராய்ந்து சூப்பராக எழுதுகிறீர்கள் ஜிரா! குடும்பப் பாடல்கள் அந்தக் காலப் படங்களில் கண்டிப்பாக இருந்தன, இந்தக் கால டாஸ்மாக்கில் குடித்துப் பாடும் பாடல்கள் போல.

      காற்றில் வரும் கீதமே http://www.youtube.com/watch?v=pnteqlhXlS4 இதுவும் அழகான ஒரு குடும்பப் பாடல் 🙂

      amas32

  • mokrish 9:22 pm on September 22, 2013 Permalink | Reply  

    கூட்டம் கூட்டமாக 

    சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றித் திரிந்த காட்டு யானைகளை  பிடித்து முதுமலை வனச் சரணாலயம், ஆனைமலை வனச் சரணாலயத்தில் விட தமிழக அரசு ‘ஆபரேஷன் மலை’ என்ற நடவடிக்கை எடுத்தது. இது பற்றிய செய்திகளை ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் படித்த எனக்கு ஒரு விஷயம் கண்ணில் பட்டது. ஆங்கில ஊடகங்கள் ‘herd of elephants’ என்று எழுத தமிழில்  யானைக் கூட்டம் என்றே இருந்தது.

    ஆங்கிலத்தில் இந்த Collective Nouns மிகவும் சுவாரசியமானது. ஒவ்வொரு பறவை, விலங்கு குழுவுக்கும் ஒரு ஸ்பெஷல் பெயர். பல சொற்கள் கவிதை போல் இருக்கும். Colony of Ants, Troop of Apes, Swarm of bees, Flock of Birds, Pack of Hounds, Pride of Lions , School of fish என்று கேட்கும் போதே ஒரு graphic பிம்பம் தோன்றும். காக்கை கூட்டத்திற்கு என்ன பெயர் தெரியுமா ? A murder of Crows! யாரோ ஒரு ரசிகன் யோசித்து வைத்த பெயர்கள்.

    http://users.tinyonline.co.uk/gswithenbank/collnoun.htm#Birds

    தமிழில் எல்லாவற்றையும் கூட்டம் என்றே சொல்கிறார்களா? இலக்கியத்தில் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் திரைப்பாடல்களில்  அப்படித்தான் என்று தோன்றுகிறது.

    எங்க வீட்டு பிள்ளை படத்தில் வாலி எழுதிய நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்ற பிரபலமான பாடலில் காக்கைகள் கூட்டம் என்று எழுதி பின்னர் மாற்றப்பட்ட வரி ஒன்று வரும்

    அரச கட்டளை படத்தில் முத்துக்கூத்தன் எழுதிய ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் என்ற பாடலில் (இசை கே வி மகாதேவன் பாடியவர் டி எம் எஸ்)  முயல் கூட்டம் என்கிறார்

    http://www.inbaminge.com/t/a/Arasa%20Kattalai/Aadi%20Vaa%20Aadi%20Vaa.eng.html

    மயிலாட வான்கோழி தடை செய்வதோ
    மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ
    முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
    அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ

    வைரமுத்து சிவப்பு மல்லி படத்தில் எரிமலை எப்படி பொறுக்கும் என்ற பாடலில் (இசை சங்கர் கணேஷ் பாடியவர் டி எம் எஸ் டி எல் மகராஜன்) சிங்க கூட்டம் என்கிறார்

    http://www.inbaminge.com/t/s/Sivappu%20Malli/Erimalai%20Eppadi.eng.html

    சிங்க கூட்டம் நிமிர்ந்தால்
    துன்ப சிறையின் கதவு தெறிக்கும்
    நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
    இனி அழுதால் வராது நீதி

    கண்ணதாசன் அக்கரை பச்சை படத்தில் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் SPB, எல் ஆர் ஈஸ்வரி) கிளிக் கூட்டம் என்கிறார்

    http://www.inbaminge.com/t/a/Akkarai%20Pachai/Oorgolam%20Poginra.eng.html

    ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்

    ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று

    நா முத்துக்குமார் உனக்கும் எனக்கும் படத்தில் பூப்பறிக்க நீயும் போகாதே என்ற பாடலில் (இசை தேவி ஸ்ரீபிரசாத் பாடியவர் சங்கர் மகாதேவன்)

    http://www.youtube.com/watch?v=xAWGS5tB9Lw

    காட்டுக்குள்ள நீயும் போகாதே

    கொட்டுகிற தேனீ கூட்டம்

    தேனெடுக்க உதட்ட சுத்துமடி

    இப்படி இன்னும் பல பாடல்கள். பறவைக்  கூட்டம், நரிகள் கூட்டம்  குயில் கூட்டம் குட்டி போட்ட ஆட்டுக் கூட்டம், மான் கூட்டம், கடல்மீன் கூட்டம், வண்டுகள் கூட்டம், பட்டாம்பூச்சி கூட்டம் – என்று எல்லா கவிஞர்களும் முன் தீர்மானிக்கப்பட்ட மெட்டின் நெளிவில் எழில் கோலச்சரிவில் கர்வம் தொலைத்து கூட்டம் என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்கள். இது சரியா?

    ஆடுகளும் மாடுகளும் மந்தை. கொஞ்சம் தேடினால் flock என்ற வார்த்தைக்கு இணைந்து உண்ணும் பறவைத்திரள், உருங்குசெல்லும் புட்குழாம் என்ற அர்த்தம் கண்ணில் படுகிறது.  Swarm என்றால் வண்டின் மொய்திரள் என்ற அழகான விளக்கம்  கண்ணில் படுகிறது.

    தமிழில் Collective nouns உண்டா? தெரிந்தவர்கள் சொல்லவும்

    மோகனகிருஷ்ணன்

    295/365

     
    • rajinirams 11:41 pm on September 22, 2013 Permalink | Reply

      யானைக்கூட்டத்தை பார்த்து ஒரு நல்ல பதிவை இட்டதற்கு பாராட்டுக்கள்.இளம்பெண்கள் கூட்டமாக இருப்பதை பார்த்து காதல் மலர் கூட்டம் ஒன்று என்றதெய்வமகன் வரிகள் நினைவு வருகிறது. போருக்கு செல்லும் கூட்டத்தை மட்டும் படை என்றே கூறுவர்..வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்”படை” வெல்லும். நன்றி.

    • rajinirams 11:45 pm on September 22, 2013 Permalink | Reply

      இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற வித்துவான் வெ.லட்சுமணன் வரிகள் கட்சி தொண்டர் படையையும் குறித்து எழுதினார்.

    • Niranjan 11:47 pm on September 22, 2013 Permalink | Reply

      தொல்காப்பியத்தில் இருக்கிறது. நான் கூட புதிய தலைமுறை நிகழ்ச்சியில் செய்திருக்கிறேன்.

      • amas32 9:52 am on September 23, 2013 Permalink | Reply

        லிங்க் ப்ளிஸ் 🙂

        amas32

    • amas32 9:52 am on September 23, 2013 Permalink | Reply

      சிங்கம் சிங்கிளா தான் வரும் பன்னிங்க தான் கூட்டமா வரும் என்று தலைவர் அன்றே சொல்லிவிட்டார்! 🙂 அதனால் விலங்குகள்/பறவைகள் கூட்டம் என்பது தான் நானும் கேள்விப்பட்ட ஒன்று. ஆனால் ஆட்டு மந்தை, மாட்டு மந்தை இன்றும் வழக்கில் உண்டு.

      amas32

      • rajinirams 5:56 pm on September 23, 2013 Permalink | Reply

        ஹா ஹா,சூப்பர்:-))

      • Mohanakrishnan 6:57 pm on September 23, 2013 Permalink | Reply

        சிங்கம் சிங்கிளா தான் வரும் என்பது factually wrong. சுஜாதா என்ற யானைக்கும் அடி சறுக்கும் !

        • amas32 9:11 pm on September 24, 2013 Permalink

          அதெல்லாம் poetic liberty மாதிரி சூப்பர் ஸ்டாருக்கு டயலாக் எழுதும் போது இதெல்லாம் கண்டுக்கக் கூடாது ;-))

          amas32

        • mokrish 10:17 pm on September 24, 2013 Permalink

          அது சரி! மத்த படமெல்லாம் உலக சினிமா மாதிரி வேணும். இங்க வேற ரூலா?

    • Uma Chelvan 3:30 am on September 25, 2013 Permalink | Reply

      சிங்கிளா வந்த சிங்கத்தின் நிலையை பாரீர்!!!

      Sorry about the words at the bottom, since I copied this image from another site!!!):

  • mokrish 11:48 am on August 29, 2013 Permalink | Reply  

    கண்ணன் பிறந்தான் 

    இன்று கண்ணன் பிறந்த நாள். ஆவணிப் பொன்னாளில் ரோகிணி நன்னாளில் அஷ்டமி திதி பார்த்துக் கண்ணன் வந்த நாள்.

    அந்த ஒரு நாள் இரவில் நடந்த சம்பவங்கள்,  பல திருப்பங்கள் கொண்ட ஒரு த்ரில்லர். கடும் மழை பெய்ய, அருகிலிருந்த யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோட, இருள் சூழ்ந்த ஒரு சிறைச்சாலைக்குள், குழந்தை ஒன்று பிறந்தது. இரவோடு இரவாக, தந்தையாகிய வாசுதேவர் அக்குழந்தையை ஒரு கூடையில் வைத்து, அதைத் தமது தலை மேல் சுமந்து கழுத்தளவு நீர் ஓடிய யமுனை ஆற்றைக் கடந்து, அக்கரை சென்று நந்தகோபரிடம் ஒப்படைத்தார்.

    ஒப்பற்ற தேவகியின் மகனாகப் பிறந்து அந்த இரவிலேயே மற்றோர் ஒப்பற்ற பெண்ணாகிய யசோதையிடம் வந்து வளர்ந்தாய்.என்று சொல்லும் ஆண்டாள் பாசுர வரிகள்

    ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்-

    ஒருத்தி மகனாய் ஒளித்து வளர

    யசோதைக்கு அடித்தது மிகப்பெரிய ஜாக்பாட். அந்த மாயன் கோபாலகிருஷ்ணனை,  ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்டும் பெரும்பாக்கியம் அவளுக்கு கிடைத்தது. இதை  பாபநாசம் சிவன் ஒரு அற்புதமான பாடலில் http://www.youtube.com/watch?v=efsqGgf2KUg

    என்ன தவம் செய்தனை யசோதா

    எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க

    என்ன தவம் செய்தனை யசோதா

     என்ற வரிகளில் சொல்கிறார்.

    பிறந்தது ஓரிடம். வளர்ந்தது வேறிடம். இந்த core கருத்தை  கண்ணதாசன் அன்னை என்ற படத்தில் வரும் ஒரு காட்சிக்கு ஏற்றபடி கொஞ்சம் மாற்றி எழுதுகிறார் (இசை ஆர். சுதர்சனம், பாடியவர் பானுமதி)

    http://www.youtube.com/watch?v=wigeyu943kM

    பூவாகி காயாகிக் கனிந்த மரம் ஒன்று

    பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று

    காய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா

    கனிந்து விட்ட சின்ன மரம் கண்ணீரில் ஆடுதடா

    வளர்க்கும் அன்னையின் வாழ்வில் தேனாறு என்கிறார்

    பத்து மாத பந்தம் என்ற படத்தில் ‘இரண்டு தாய்க்கு ஒரு மகள்’ என்ற பாடலில் இதே கருத்தை மறுபடியும் சொல்கிறார். (இசை சங்கர் கணேஷ் பாடியவர் பானுமதி)

    ஒருத்தியின் கண்ணீரில் பிறந்தவள் கண்ணே நீ

    ஒருத்தியின் கையோடு வளர்ந்திட வந்தாய் நீ

    கண்ணனும் உனைப்போலே பிள்ளை தானம்மா

    பிறப்பும் வளர்ப்பும் வேறு வேறம்மா

    படத்தின் காட்சிக்கு ஏற்ற வரிகள். பாடல் வரிகளில் கண்ணன் கதையும் ஆண்டாள் பாசுரமும்  அடுக்கி எழுதுகிறார்.

    மோகனகிருஷ்ணன்

    271/365

     
    • pvramaswamy 11:57 am on August 29, 2013 Permalink | Reply

      All song selections superbly blend with excellent description. Great

    • Nagarajan 1:42 pm on August 29, 2013 Permalink | Reply

      annai – music by R Sudarsanam and not by KVM

    • rajinirams 3:06 pm on August 29, 2013 Permalink | Reply

      கிருஷ்ண ஜெயந்திக்கான பதிவு தாங்கள் இடுவதும் நல்ல பொருத்தமே:-)) தேவகி மகனாய் பிறந்து யசோதையிடம் வளர்ந்த கண்ணன் நிலையை வைத்து உருக்கமான பாடல்கள் கொண்ட நல்ல பதிவு. (பாடலின் சூழல் தெரியாது என்றாலும்) புகுந்த வீடு படத்தில் கவிஞர் வாலி எழுதிய “கண்ணன் பிறந்த வேளையிலே தேவகி இருந்தாள் காவலிலே” பாடலும் அருமையான பாடல். நன்றி.

    • Kennedynj 4:34 pm on August 29, 2013 Permalink | Reply

      wonderful research Mohan. Can feel your enjoying the old epics. Thanks for passing the benefit of your readings to us. These writings keeps us enlightened.

    • amas32 4:44 pm on August 29, 2013 Permalink | Reply

      யசோதை பிரசவித்தாள். குழந்தை மாறியது அவள் தவறல்லவே. ஆனால் பிரசவித்த தேவகி குழந்தையைப் பிரிந்து அந்த தெய்வக் குழந்தையின் பால பருவத்தை அனுபவிக்காமல் போனது அவளுக்குப் பெரும் இழப்பு தான்.

      பல சமயம் நாம் யசோதை குழந்தை பாக்கியம் இல்லாதவள், அவளுக்கு ஓசியில் குழந்தை பாக்கியம் கிடைத்த மாதிரி எண்ணுவோம்.

      அவளின் பாக்கியம் இறைவனை சீராட்டிப் பாலூட்டி வளர்த்து, நெஞ்சார அணைத்து, அவன் செய்யும் தவறுகளையும் தண்டிக்கும் பேற்றினைப் பெற்றது தான்.

      யசோதா – கிருஷ்ணன் உறவு என்னை மிகவும் நெகிழச் செய்யும்.

      அற்புதப் பாடல்கள் மோகன கிருஷ்ணா! நன்றி 🙂

      amas32

  • mokrish 11:18 pm on August 8, 2013 Permalink | Reply  

    உறவுகள் தொடர்கதை 

    நண்பரின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் கலந்துகொண்டேன். எளிய நிகழ்ச்சி.. அவர்கள் குடும்ப வழக்கப்படி அவரின் தந்தையின் பெயரையே தேர்வு செய்திருந்தார். தாத்தா, பாட்டி பெயரை பேரக் குழந்தைகளுக்கு வைக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் உண்டு என்பது தெரிந்த விஷயம்தான். மூத்தவர்கள் பெயரை வைத்துக் கூப்பிட இயலாததால் கூப்பிடுவதற்கு என்று இன்னொரு வீட்டுப் பெயரும் கூட வைத்துக் கொள்வார்கள்.

    ஆனால் இப்போது மாடர்ன் பெயர்களை வைக்கும் ட்ரெண்டிலிருந்து மாறுபட்டு, பழமையான ஒரு பெயரை அவர் தேர்வு செய்தது எனக்கு கொஞ்சம் ஆச்சரியம். ஏன் என்று கேட்டபோது அவர் இது பல தலைமுறைகளாக வரும் வழக்கம் என்றும் அந்த சங்கிலியை உடைக்க மனமில்லையென்றும் சொன்னார்.

    சங்கிலி என்ற வார்த்தை சொல்லும் செய்தி முக்கியம் .சொந்தங்கள் எல்லா பிறவிகளிலும் தொடர்கிறது என்பது நம்பிக்கை. நம்மைவிட்டுப் பிரிந்த முன்னோர்கள் மீண்டும் நம் வீட்டில் பிறக்கிறார்கள் என்ற நம்பிக்கை.

    கண்ணதாசன் பிராப்தம் படத்தில் சொன்ன சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் என்ற நம்பிக்கை. (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் டிஎம்எஸ், பி சுசீலா)

     http://www.inbaminge.com/t/p/Praptham/Sonthom%20Yepothum.eng.html

    சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்

    முடிவே இல்லாதது

    எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்

    இனிய கதை இது

    என்னை உன்னோடு சேர்த்த தெய்வம்

    எழுதும் புதுக்கதை இது

    இறைவன் எழுதும் முடிவே இல்லாத தொடர்கதை என்ற வரி அருமை. அதே படத்தில் வரும் இன்னொரு பாடல் நேத்து பறிச்ச ரோஜா.  (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் டிஎம்எஸ், பி சுசீலா ) இதிலும் அதே போல் வரிகள்

    http://www.inbaminge.com/t/p/Praptham/Nethu%20Paricha.eng.html

    எந்தக் கோலம் கொண்டால் என்ன

    சொந்தம் சொந்தம் தான்

    எந்தப் பிறவி வந்தால் என்ன

    பந்தம் பந்தம் தான்

    எல்லா கவிஞர்களும் இந்த ‘ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம்’ பற்றி பாடியிருக்கிறார்கள். இது இன்னார்க்கு இன்னாரென்ற காதல் உறவுகளுக்கு மட்டுமா? இல்லை. வாலியின் ‘அம்மா என்றெழைக்காத’ என்ற பாடலில் (இசை இளையராஜா பாடியவர் கே ஜே ஜேசுதாஸ்)

     http://www.inbaminge.com/t/m/Mannan/Amma%20Amma.eng.html

    அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்

    மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே

    என்று வேண்டிக்கொள்கிறார். கண்ணதாசன் ஒரு படி மேலே சென்று எல்லா உறவுகளும் தொடர வேண்டும் என்று வேண்டுகிறார். அடுக்கு மல்லி படத்தில் (இசை சங்கர் கணேஷ் பாடியவர் வாணி ஜெயராம்)

    ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள்

    பூமியில் பிறந்திட வேண்டுகிறேன்

    அத்தனை பிறப்பிலும், இத்தனை உறவும்

    அருகினில் இருந்திட வேண்டுகிறேன்

    அற்புதமான வேண்டுகோள். இத்தனை உறவும் அருகினில் இருந்திட என்று தான் வேண்டுகிறார். உறவாகவோ நட்பாகவோ அருகினில் இருந்திட வேண்டுகிறார். உறவு என்பது உணர்வுதானே? ‘பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா’ என்பதுதானே நிஜம்?

    மோகனகிருஷ்ணன்

    250/365

     
    • Uma Chelvan 2:50 am on August 9, 2013 Permalink | Reply

      எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்

      இனிய கதை இது……….this is the knot for all relationships!

    • rajinirams 1:04 pm on August 9, 2013 Permalink | Reply

      அருமை.பாசமிகு உறவுகளின் எண்ணம் தான் பந்தம் தொடரவேண்டும் என்பது. சில கவிஞர்கள் சூழல் அமையும் போது அதை அழகாக வெளிப்படுத்தி விடுகிறார்கள். சந்திப்பு பட பாடல்-ஆனந்தம் விளையாடும் வீடு-எடுத்தாலும் என்ன ஏழேழு பிறவி நீ தானே கண்ணே எனக்கேற்ற துனைவி. பூவே பூ சூடவா-மீண்டும் ஜென்மங்கள் மாறும் போது நீ என் மகளாக வேண்டும். ஊரெல்லாம் உன் பாட்டு-இந்த பிறப்பிலும் எந்த பிறப்பிலும் எந்தன் உயிர் உனைச்சேரும். என்னென்பதோ ஏதென்பதோ பாடலில் என்றும் நீ இங்கு என் அண்ணன் என்றால் கோடி ஜென்மங்கள் குருடாக பிறப்பேன்.மனைவியின் சிறப்பை வாலி-எந்த கடனிலும் மிகப்பெரிது நல்ல மனைவியின் சேவை அதை அடைத்திட எண்ணும் போது பல பிறவிகள் தேவை என்று கலக்கியிருப்பார். நன்றி

    • GiRa ஜிரா 3:43 pm on August 10, 2013 Permalink | Reply

      பைலட் பிரேம்நான் படத்தில் எனக்குப் பிடித்த வரிகள் (இலங்கையின் இளம்குயில் என்னோடு பாடலில்)

      என்றும் இந்த பூமியிலே
      உனக்காக நான் பிறப்பேன்
      நீதான் துணைவன் என்றால்
      நூறு ஜென்மம் நானெடுப்பேன்
      கடல் வானம் உள்ளவரை
      நடந்தேறும் காதல் கதை
      தமிழ் போலும் ஆயிரம் காலம்
      திகட்டாத மோகன ராகம்

    • amas32 6:23 pm on August 14, 2013 Permalink | Reply

      உறவுகள் தொடர்கதை தான்! எத்தனையோ இல்லங்களில் பாட்டனார் இறந்தவுடன் அது நாள் வரை குழந்தை பேறு இல்லாத தம்பதியருக்குக் குழந்தை பாக்கியம் கிட்டும். பல உண்மை கதைகளில் உனக்கே மகனாகப் பிறப்பேன் என்று சொல்லி உயிர் விட்ட உறவினர்கள் வந்து பிறப்பதையும் பார்த்திருக்கிறேன். அதாவது இறந்தவர் முக சாயல், குணாதிசயங்களைக் கொண்டு பிறந்திருக்கும் குழந்தை. அதை என்னவென்று சொல்லி விளக்குவது?

      மறு பிறவியில் நம்பிக்கை இருந்தால் பல நிகழ்சிகள் உண்மையாக்கத் தோன்றும்!

      amas32

  • G.Ra ஜிரா 11:48 pm on August 6, 2013 Permalink | Reply  

    பட்டை(யை)க் கிளப்புதல் 

    பெண்ணின் சருமத்து மென்மையை பாட்டில் எழுதச் சொன்னால் பெரும்பாலான கவிஞர்கள் பட்டைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

    பட்டுக் கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும் (முத்துலிங்கம், காக்கிச் சட்டை, இளையராஜா)
    சீனத்துப் பட்டுமேனி இளம் சிட்டு மேனி (வாலி, தாய்மூகாம்பிகை, இளையராஜா)
    பட்டுப் பூவே மெட்டுப் பாடு (முத்துலிங்கம், செம்பருத்தி, இளையராஜா)
    பட்டு வண்ண ரோசாவாம் (புலமைப்பித்தன், கன்னிப் பருவத்திலே, சங்கர்-கணேஷ்)
    பட்டினும் மெல்லிய பூவிது (கண்ணதாசன், ஞாயிறும் திங்களும், எம்.எஸ்.விசுவநாதன்)

    இன்னும் எத்தனையெத்தனையோ பாடல்கள்.

    பட்டுத் துணியின் மென்மையும் பளபளப்பும் பெண்ணின் சருமத்தோடு ஒப்பிடச் சிறந்ததுதான்.

    அதனால் தானோ என்னவோ பட்டு என்றாலே பெண்களுக்கு அவ்வளவு பிடிக்கிறது. ஊருக்கு ஊர் எத்தனை பட்டுச்சேலைக் கடைகள். சென்னையை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். தியாகராய நகர் உஸ்மான் சாலை ஒன்று போதுமே தமிழ்ப் பெண்களின் பட்டு மோகத்தை எடுத்துக் எடுத்துக்காட்ட.

    அதை விடுங்கள். பட்டு என்று பெண்களுக்குப் பெயர் வைக்கும் வழக்கமும் முன்பு இருந்திருக்கிறதே. பருத்தி கம்பளி என்றெல்லாம் பெண்களுக்கோ ஆண்களுக்கோ பெயர் வைக்கும் வழக்கமே இல்லையே! ஆங்கிலத்தில் சில்க் என்றால் தமிழர்களுக்கு நினைவுக்கு வருவது நடிகை சில்க் சுமிதா தானே! அதுதான் பட்டின் வெற்றி.

    கந்தன் கருணை திரைப்படத்தில் சிவனிடம் பார்வதி சொல்வதாக “பெண்ணாகப் பிறந்து விட்டால் பட்டாடைகளும் பொன்னாபரங்களும் போதும் என்று சொல்வாளா சுவாமி” என்று ஒரு வசனம் உண்டு.

    பார்வதி தேவியையே பட்டுத்துணி பற்றிப் பேச வைத்த பெருமை தமிழர்களையே சாரும். சகோதரி வழியில் சகோதரனாகிய பாற்கடல் சீனிவாசன் கட்டியிருப்பதும் பட்டுப் பீதாம்பரம் தானாம்.

    பட்டுத்துணி சீனாவிலிருந்து வந்தது என்று படித்திருக்கிறோம். கேள்விப்பட்டிருக்கிறோம். பாசமலர்களான பார்வதியும் பரந்தாமனும் சீனாக்காரர்களா என்று சோதிக்க வேண்டும். பார்வதி இமவான் மகள். இமயத்தின் உச்சி இன்று சீனாவில்தான் இருக்கிறது. அதே போல பாற்கடலும் அங்குதான் இருக்க வேண்டும்.

    அப்படியானால் தமிழர்களுக்கு பட்டு பற்றியெல்லாம் சமீபத்தில்தான் தெரியுமா? தமிழ் மக்கள் எவ்வளவு காலமாக பட்டுத்துணியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்? பட்டு என்ற சொல் சங்க இலக்கியங்களில் உள்ளதா? இந்த மூன்று கேள்விகள்தானே அடுத்து நமக்குத் தோன்றுகின்றன.

    பட்டு பழந்தமிழர் அறிந்த துணிவகையே. சங்க இலக்கியங்களில் இதற்குக் குறிப்புகள் உள்ளன. ஆனால் பெயர்தான் வேறு.

    பட்டுத்துணிக்குப் பழந்தமிழர் கொடுத்த பெயர் நூலாக் கலிங்கம். அதாவது நூற்காத துணி.

    ஏன் அந்தப் பெயர்? பருத்தியிலிருந்து நூல் உண்டாக்கும் முறையும் பட்டுநூலை உண்டாக்கும் முறையும் வெவ்வேறு.

    மென்மையான பஞ்சுப் பொதியைத் திரித்து மெலிதாக்கி ராட்டையின் உதவியால் நூலாக்குவார்கள். ஆனால் பட்டுநூலை அப்படித் திரிப்பதில்லை. கொதிக்கின்ற நீரில் பட்டுப்புழுக்களின் கூடுகளைப் போட்டு பட்டு இழையை அப்படியே உருவி விடுவார்கள். இணையத்தில் பட்டுநூல் உருவும் முறைக்கு நிறைய காணொளிக் காட்சிகள் உள்ளன. தேடிப் பார்த்தால் நான் சொல்வது புரியும்.

    பருத்தி நூலோ கம்பளி நூலோ இந்த வகையில் செய்யப்படுவதில்லையே. ஆகையாதால் பட்டுத் துணிக்கு நூலாக் கலிங்கம் என்று பெயர்.

    அன்புடன்,
    ஜிரா

    248/365

     
    • amas32 8:28 am on August 7, 2013 Permalink | Reply

      அதனால் தான் பட்டை உடுத்த வேண்டாம் என்று பரமாச்சாரியார் அறிவுறுத்தினார். அனால் கேட்பவர்கள் யார்? அவரை தரிசிக்க வந்தவர்கள் காஞ்சிபுரத்தில் கல்யாணத்துக்குப் பட்டுப் புடவை வாங்க வந்தோம் அப்படியே உங்களையும் வணங்கி விட்டுச் செல்ல வந்திருக்கிறோம் என்று அவரிடமே கூறுவார்களாம்!

      ஆனால் பட்டுக்கு இருக்கும் மென்மையும் பளபளப்பும் பணக்காரத் தன்மையும் வேறு எந்த துணிக்கும் இல்லை என்பது உண்மை. அதனால் தான் பட்டு பெண்களின் அங்கங்களுக்கு உவமையகிறது.

      amas32

    • rajinirams 10:22 am on August 7, 2013 Permalink | Reply

      வித்தியாசமான பதிவு.வழக்கம் போலவே கலக்கியிருக்கிறீர்கள்.பட்டுச்சேலை காத்தாட.காஞ்சி பட்டுடுத்தி என்று பட்டு சேலை பற்றியும்.பட்டு வண்ண சேலைக்காரி என்று காதலியையும் நீங்கள் சொன்னது போல நிறைய வர்ணித்து இருக்கிறார்கள். நீ பட்டுப்புடவை கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும் என்பது வைரமுத்துவின் உட்சபட்ச வர்ணனை:-)) நன்றி.

      • amas32 4:26 pm on August 7, 2013 Permalink | Reply

        ‘பட்டுப்புடவை கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும் என்பது வைரமுத்துவின் உட்சபட்ச வர்ணனை:-))” அழகாக சொல்லியுள்ளார்!
        amas32

    • Saba-Thambi 10:34 am on August 7, 2013 Permalink | Reply

      நன்றாக பட்டை(யை)க் கிளப்பியிருக்கிறீர்கள். 🙂

      உங்கள் பதிவு – பட்டு நெசவாளர்களின் திரைப்படத்தை நினைவூட்டுகிறது. Pirakash Raj நடித்த படம். பெயர் நினைவில் இல்லை.

    • kamala chandramani 4:30 pm on August 7, 2013 Permalink | Reply

      பட்டுப் புடவை, தங்க நகை இரண்டையும் பெண்களால் விட முடிவதில்லை. ஒரு முறை பட்டுப் புழு வளர்க்கும் கூட்டுறவு நிலையம் போய்ப் பார்த்தால் வெறுத்து விடுவார்கள். ஆனாலும் -பிரிக்க முடியாதவை பெண்களும் பட்டும்தான்!

  • mokrish 6:35 pm on August 5, 2013 Permalink | Reply  

    அறிந்தும் அறியாமலும் 

    உடல் நலம் பாதிக்கப்பட்ட 94 வயதான ஒருவரை சமீபத்தில் சந்தித்தேன். அவர் முதலில்  சொன்ன வார்த்தைகள் ‘ போன ஜன்மத்தில் என்ன பாவம் செய்தேனோ இப்படி கஷ்டப்பட வேண்டியிருக்கிறது’. இந்த போன ஜன்ம புண்ணியம் / பாவம் என்பது நாம் எல்லாரும் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள்.

    எல்லா முற்பிறப்புகளிலும் நாம் செய்த, செய்ய நினைத்த, செய்ய விரும்பிய செயல்களின் பலன்கள்தான் ஊழ்வினை என்பது இந்து மத நம்பிக்கை. இதை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். பிரமனால் நெற்றியில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் தலைவிதி என்பது இதுதான். ‘விதியின் பிழை நீ இதற்கு என் கொல் வெகுண்டது’ என்று இராமன் இலக்குவனுக்குச்சொல்வதாக கம்பன் சொல்வது இந்த ஊழ்வினையைத்தான். வள்ளுவர் சொல்லும் ‘ஊழிற்பெருவலி யாவுள’ இவ்வினையைத்தான்.

    பொன்னகரம் என்ற படத்தில் பொன்னடியான் எழுதிய ‘வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள்’ என்ற பாடலில் (இசை சங்கர் கணேஷ் பாடியவர் கே ஜே ஜேசுதாஸ்) சொல்லும் வரிகள் http://www.inbaminge.com/t/p/Ponnagaram/Vazhukinra%20Makkalukku.eng.html

    வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி

    பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளை சேருமடி

    சேர்த்து வைத்த புண்ணியம் தான் சந்ததியை காக்குமடி

    அந்த வகையில் இந்த நிலையில் எனக்கோர் காவல் ஏதடி

    கொங்கு வேளாள இன மக்களிடயே பிரபலமாக இருக்கும் நாட்டுப்புற பாடலான  ‘அண்ணான்மார் சுவாமி கதையில்  இந்தப் பிறவியில் கஷ்டப்படும் ஒரு பெண்ணின் ஆதங்கம் சொல்லும் வரிகள்

    கூலி குறைத்தோமோ குறை மரக்கால் அளந்தோமோ

    பிச்சைக்கு வந்தவனை பின்னே வரச்சொன்னோமோ

    அன்னமென்று வந்தவரை அடித்துத் துரத்தினோமோ

    ஆண்டியை அடித்தோமா அநியாயம் செய்தோமா

    பார்ப்பாரை அடித்தோமா  பால் பசுவை கொன்றோமா

    பங்காளி வயல்பரப்பை பாதி வெட்டிப் போட்டோமா

    அறிந்தும் அறியாமலும் நாம் செய்யும் எல்லா செயல்களையும் பட்டியலிடும் வரிகள்.

    நம் செயல்களின் பலன் நம் சந்ததியை காக்கும் அல்லது பாதிக்கும் என்ற எண்ணம் மனிதனை நல்வழிப்படுத்தும் என்ற நம்பிக்கை சரி என்றே தோன்றுகிறது.

    மோகனகிருஷ்ணன்

    247/365

     
    • Vasu 6:08 am on August 6, 2013 Permalink | Reply

      … பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
      பயணம் முடித்துவிடு மறைந்திடும் பாவம் …

      கண்ணதாசன் – “ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல்” என்ற பாட்டில்

    • amas32 6:39 pm on August 14, 2013 Permalink | Reply

      தாய் தந்தை செய்வது மக்கள் தலை மேலே என்பார்கள், இந்த வசனத்தை நம்பினால் நாம் அப்பழுக்கற்ற வாழ்க்கை வாழ்வோம். ஏனென்றால் மற்ற எவர் மீது வைக்கும் பாசத்தை விட நமக்குப் பிறக்கும் பிள்ளைகள் மீது தான் அதிகம் பாசம் வைக்கிறோம்.

      மேலும் பலப் பல செயல்களின் பலன்களை நாமே தான் அனுபவிக்கிறோம். அர்த்தமுள்ள இந்து மதத்தில் கண்ணதாசன், நான் வீட்டை விட்டுக் கிளம்பும் பொழுது படியில் கால் தடுக்கி விழுந்தால், யாரையோ நான் முன்பு தள்ளிவிட்டுருக்கிறேன் என்று கொள்க என்று கூறியிருப்பார்.

      முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!

      amas32

  • G.Ra ஜிரா 1:19 pm on July 22, 2013 Permalink | Reply  

    மணக்கோலம் 

    பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கும் தகப்பனுடைய மனநிலை எப்படியிருக்கும்? பஞ்சுப் பொதி போல அந்தப் பிஞ்சுக் குழந்தையைக் கையில் வாங்கிய நாளிலிருந்து வளர்த்து ஆளாக்கி ஒருவன் கையில் பிடித்துக் கொடுக்கும் போது எந்தத் தகப்பனும் கோழையாகித்தான் போகிறான்.

    சமீபத்தில் அபியும் நானும் என்றொரு திரைப்படம் வந்தது. அந்தப் படம் ஒற்றை மகளை வளர்த்து ஆளாக்கித் திருமணம் செய்து வைக்கும் தந்தையின் மனநிலையை அழகாகக் காட்டியது. அந்தப் படத்திற்காக வித்யாசாகர் இசையில் வைரமுத்து அவர்களால் எழுதப்பட்டு மதுபாலகிருஷ்ணன் பாடிய ஒரு பாடலின் வரிகளைக் கீழே தந்திருக்கிறேன்.

    மூங்கில் விட்டு சென்ற பின்னே
    அந்த பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன
    பெற்ற மகள் பிரிகின்றாள்
    அந்தப் பெண்ணோடு தந்தைக்குள்ள உரிமை என்ன

    மூங்கிலில்தான் இசை பிறக்கிறது. ஆனால் அது மூங்கிலோடு இருந்துவிடுவதில்லை. அப்படிப் பிறந்து மூங்கிலைப் பிரிந்த இசைக்கும் மூங்கிலுக்கும் என்ன தொடர்பு? ஏன் மூங்கிலுக்கு இப்படியொரு நிலை? ஆண்டவனே அறிவான். கடவுள் தகப்பனாகப் பிறக்க வேண்டும். பெண்குழந்தைக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும்.

    இன்னொரு தந்தை. இவனும் மகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறான். தாயில்லாத மகளை தாய்க்குத் தாயாய் தந்தைக்குத் தந்தையாய் வளர்த்தவன். அவளுக்குப் பூச்சூட்டிச் சீராட்டி வளர்த்ததால் அவன் சோகத்தை வேறுவிதமாகச் சொல்கிறான்.

    காலையில் கதம்பங்கள் அணிந்திருப்பாள்
    மாலையில் மல்லிகை முடிந்திருப்பாள்
    திங்களில் சாமந்தி வைத்திருப்பாள்
    வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள்
    கட்டித்தங்கம் இனிமேல் அங்கெ என்ன பூவை அணிவாளோ
    கட்டிக்கொண்ட கணவன் வந்து சொன்ன பூவை அணிவாளோ

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாங்கித் தந்த தகப்பனுக்கு மகள் கணவன் வீடு போனால்.. கணவன் சொன்ன பூவைத்தான் சூடிக் கொள்வாள் என்பதே பெருஞ்சோகமாகத் தாக்குகிறது. மருமகன் மேல் ஒரு பொறாமை கலந்த கோவம் உண்டாவதைத்தான் இந்த வரிகள் காட்டுகின்றன. இப்படியான அருமையான வரியை சங்கர்-கணேஷ் இசையில் வைரமுத்து அவர்கள் எழுத ஏசுதாஸ் உணர்வுப்பூர்வமாக பாடியிருப்பார்.

    மேலே பாடியவர்கள் எந்தக் குறையுமில்லாத மகளைப் பெற்ற தகப்பன்கள். ஆனால் அடுத்து பார்க்கப் போகும் தகப்பன் நிலை வேறு மாதிரி. இவன் மகள் அழகுச் சிலைதான். திருமகள் அழகும் கலைமகள் அறிவும் மலைமகள் திறமையும் கொண்டவளே. ஆனால் பேச்சு வராத பதுமையாள். இப்படிப் பட்ட பெண் போகுமிடத்தில் எப்படியிருப்பாளோ என்று தகப்பனும் தாயுமாக கலங்குகிறார்கள். நீதிபதி படத்துக்காக கங்கையமரன் இசையில் வாலி எழுதிய டி.எம்.சௌந்தரராஜனும் பி.சுசீலாவும் பாடிய உயர்ந்த பாடல்.

    தந்தை: அன்பை உரைத்திட வாயில்லாத அழகுச் சிலை இவள்
    தாய்: கொண்ட பசியையும் கூறிடாத குழந்தை போன்றவள்
    உன் வசத்தில் இந்த ஊமைக்குயில்
    இவள் இன்பதுன்பம் என்றும் உந்தன் கையில்
    காவல் நின்று காத்திடுக கண் போலவே பொன் போலவே

    மருமகனே, உன் மேல் உள்ள அன்பைச் சொல்லக் கூட வாயில்லாத அழகுச் சிலையப்பா என் மகள்” என்று தகப்பன் கதறுகிறான். அடுத்தது தாயின் முறை. தாயல்லவா. குழந்தையின் பசியை உலகில் முதலில் தீர்க்கும் தெய்வமல்லவா! அதனால்தான் “தனக்குப் பசிக்கிறது என்று கூட கூறிடாத குழந்தை போன்றவள் என் மகள். அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்கத் தெரியாது. ஐயா, மருமகனே. நீயே நாங்கள் வணங்கும் கடவுள். அவளுக்கு வேண்டியதையெல்லாம் செய்ய வேண்டியது உன் கடமை.

    பெற்றால்தான் பிள்ளை. வளர்த்தாலும் பிள்ளைதான். அப்படி வளர்த்த ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கிறான் ஒரு செல்வந்தன். அவன் புலம்பும் வரிகளைப் பாருங்களேன்.

    நான் வளர்த்த பூங்குருவி வேறிடம் தேடி
    செல்ல நினைத்தவுடன் அமைந்ததம்மா அதற்கொரு ஜோடி
    நிழற்படமாய் ஓடுது என் நினைவுகள் கோடி
    அந்த நினைவுகளால் வாழுகிறேன் காவியம் பாடி

    மேலே வாலி எழுதிய வரிகள்தான் நிதர்சனம். மோகனப் புன்னகை திரைப்படத்துக்காக மெல்லிசை மன்னர் இசையில் டி.எம்.எஸ் அவர்கள் இந்தப் பாடலைப் பாடினார்.

    எத்தனை காலங்களாக மகளைக் கட்டிக் கொடுக்கும் பெற்றோர்கள் இப்படியிருக்கிறார்கள்? சங்ககாலத்துக்கும் முன்னாடியிருந்தே இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அகனானூற்றில் ஒரு அழகான பாடல் நமக்கு விளக்கமாக கிடைத்திருக்காது.

    தொடிமாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்
    நெடு மொழித் தந்தை அருங் கடி நீவி,
    ————————————–
    நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி,
    வைகுறு மீனின் தோன்றும்
    மை படு மா மலை விலங்கிய சுரனே?
    பாடல் – கயமனார்
    திணை – பாலை
    கூற்று – செவிலித்தாயின் கூற்று
    நூல் – அகனானூறு

    மேலே கொடுத்துள்ள வரிகள் புரியவில்லையா? விளக்கமாகச் சொல்கிறேன். மகள் ஒருவனை விரும்பி களவு மணம் செய்து அவனோடு சென்றுவிட்டாள். அந்தச் சோகத்தை தந்தையின் சார்பாகவும் ஒரு தாய் புலம்புகிறாள்.

    ”என்னையும் சுற்றத்தாரையும் கொஞ்சம் கூட உள்ளத்தில் எண்ணிப் பார்க்காமல், ஊரில் புகழ் மிகுந்த தந்தையின் காவலையும் தாண்டிக் கிளம்பிச் சென்றாளே! இவள் இங்கு இருந்த வரைக்கும் தோழியரோடு பந்தாடுவதால் உண்டாகும் களைப்பைக் கூடத் தாங்க மாட்டாளே! இன்று கொதிக்கும் மலைக்காட்டில் அவனோடு கிளம்பிப் போனாளே!”

    கோதை நாச்சியாரை அரங்கனுக்கு மணம் செய்து கொடுத்த பெரியாழ்வாரும் பெண்ணைப் பெற்ற பாசத்தில் “ஒரு மகள் தன்னை உடையேன் (நான்). உலகம் நிறைந்த புகழால்
    திருமகள் போல் வளர்த்தேன். செங்கண்மால் தான் கொண்டு போனான்” என்று புலம்புகிறார். ஆண்டவனுக்கே பெண் கொடுத்தாலும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு புலம்பல்தான் மிச்சம் போலும்.

    பிள்ளையைப் பெற்றால் கண்ணீர் என்று சொல்வதும் இதனால்தான் போலும். ஆண்டாண்டு காலமானாலும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இதுதான் நிலை. தான் ஒருத்தியை இன்னொரு வீட்டிலிருந்து கொண்டு வந்ததை நினைக்காத ஆண்கள் தன் மகள் இன்னொரு வீடு போகும் போது கலங்குவது வியப்பிலும் வியப்புதான்!

    இப்படிப் புலம்பிய பெரியாழ்வார் பாத்திரம் திரைப்படமாக வந்த போது அதிலும் தந்தையாக நடித்துச் சிறப்பித்தர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அதுமட்டுமல்லாமல் இந்தப் பதிவில் பார்த்த நான்கு பாடல்களில் மூன்று பாடல்கள் நடிகர் திலகம் தந்தையாக நடித்த சிறப்பு பெற்றவை.

    மூங்கில் விட்டுச் சென்ற (அபியும் நானும்) – http://youtu.be/Jv2ZUsGQpWw
    மரகதவல்லிக்கு மணக்கோலம்(அன்புள்ள அப்பா) – http://youtu.be/MNx6Oz7KDxc
    பாசமலரே அன்பில் விளைந்த (நீதிபதி) – http://youtu.be/YKo4y7B1iWI
    கல்யாணமாம் கச்சேரியாம் (மோகனப் புன்னகை) – http://youtu.be/v5MyR7lX30E

    அன்புடன்,
    ஜிரா

    233/365

     
    • rajinirams 11:13 pm on July 23, 2013 Permalink | Reply

      பதிவு அருமை.தந்தை மகள் பாசத்தை விளக்கும் உன்னத பாடல்கள். கல்யாணமாம் கச்சேரியாம் வாலி எழுதிய பாடல்.

      • GiRa ஜிரா 2:58 pm on July 24, 2013 Permalink | Reply

        உண்மைதான். கல்யாணமாம் கச்சேரியாம் பாடல் வாலி எழுதியதுதான். தவறுக்கு மன்னிக்க 🙂

    • amas32 6:28 pm on July 24, 2013 Permalink | Reply

      மகளுக்கும் தந்தைக்கும் உள்ள உறவு அலாதியானது. கமலஹாசன் வாய்க்கு வாய் எனக்கு கடவுள் பக்தி இல்லை என்பார் ஆனால் தாய் பக்தி அதிகம். பெற்ற மகளுக்கு வைத்தப் பெயர் ராஜலக்ஷ்மி. தாயிடம் காட்டிய பாசத்தை மகளிடம் இருந்துப் பெறுகின்றனர் ஆண்கள். இதில் பெரியாழ்வாரும் விலக்கல்ல!

      பாடல்கள் அனைத்தும் அருமை!

      amas32

  • என். சொக்கன் 10:04 pm on June 14, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு : காலீல்முதல் வாலிவரை 

    முன்னைய அமரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடி(John F.Kennedy) அமரிக்க காங்கிரசுக்கு அளித்த அங்குரார்ப்பன சொற்பொழிவில் (Inaugural address to the Congress) ஒர் தத்துவத்தை முன் வைத்தார்.

    “சக அமரிக்கர்களே!

    நாடு உங்களுக்கு என்ன செய்கிறது என்று கேட்காதீர்கள்,

    நாட்டுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேளுங்கள்” (JFK ஜனவரி 20 1961)

     

    “And so my fellow Americans!

    Ask not what your country can do for you;

    Ask what you can for your country.”

     

    இந்த 30 செக்கன் தத்துவம் 52 வருடங்ககளுக்கு முன்பு சொன்னது ஆயினும் இன்றும் உலக மூலை முடுக்கெங்கும் எதிரொலிக்கிறது. விசேஷமாக அரசியல்வாதிகளின் ஒலி பெருக்கிகளில்!

    முழங்கியது என்னவோ JFK யின் உதடுகள் – ஆனல் அதை எழுதிக் கொடுத்த தியோடர் சொரென்சன் (THEODORE C Sorensen – TCS) இன் பெயர் பலருக்கு தெரியாது. JFK -TCS  கூட்டு எங்கிருந்து இந்த வசனங்களை கடன் வாங்கினார்கள்?

    ஒரு சாரர் JFK யின் பள்ளி வாத்தியார் என்று வாதிட்டாலும் அது எழுத்து வடிவில் காலீல் ஜிப்ரான் (Khalil Gibran 1813-1913) என்ற இலக்கியவாதியின் புதையலில் காணப்படுகிறது. லெபனானில் பிறந்து அமரிக்காவுக்கு கடல் கடந்த ஜிப்ரானின் விசிறி JFK.  அக்கால மத்திய நாட்டு அரசியல் நிலை குறித்து,1925 இல் ஜிப்ரான், தெ நியூ ஃப்ரொன்டியர் (The New Frontier) எனும் ஆங்கில படைப்பில் கீழ்வரும் வரிகளைப் படைத்தார்.

    “Come and tell me who and what are you. Are you a politician asking what your country can do for you or a zealous one asking what you can do for your country? If you are the first, then you are a parasite; is the second, then you are an oasis in a desert.” -The New Frontier 1925

    தமிழாக்கம்:

    “யார் நீ?, நாடென செய்தது எனக்கு என்று கேட்கும் அரசியல் வாதியா?

    அல்லது நாட்டுக்கு நான் என்ன செய்யமுடியும் என கேட்கும் அக்கறைவாதியா?

    முற் கட்சியாயின் நீ ஒரு ஒட்டுண்ணி, பிற் கட்சியாயின் நீயொரு பாலைவனைச்சோலை”.

    இதற்கும் நாலு வரி நோட்டுக்கும் என்ன தொடர்பு?

    இருக்கு!

    தமிழ் நாட்டு அரசியலுக்கு வருவோம். காலம் சென்ற மக்கள் திலகம் அரசியல் தத்துவங்களை தனது திரைப்படங்களின் மூலம் பாமர மக்களுக்கு எடுத்துச் சென்றது யாவரும் அறிந்ததே. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஒழுங்காக வாத்தியாரின் படங்களில் குறைந்தது ஓர் அரசியல்-தத்துவ பாடலாவது அமையும். புரட்சி நடிகர் MGR இன் இடைவிடாமுயற்சி அவருக்கு தமிழ் நாட்டு முதலமைச்சர் பதவியை இறுதியில் பெற்றுத் தந்தது.

    அந்த வரிசையில் இடம் பெற்ற ஓர் தத்துவ பாடலுக்கு ஜிப்ரான்-JFK வரிகளை பாடலாசிரியர் வாலி பாவித்துள்ளார்.

    திரைப்படம் : நான் ஏன் பிறந்தேன் (1972)

    குரல்: T.M சவுந்தரராஜன்

    பாடலாசிரியர்:  வாலி

    இசை: சங்கர் கணேஷ்

    பாடல் வரிகள்:

    “நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு?

    நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு”

    ஆமாம் நாங்கள் எல்லோரும் எந்த வர்க்கம்?  ஒட்டுண்ணி வாசமா அல்லது பாலைவனைச்சோலையா?

    *****

    ஒலியும் ஒளியும் சுட்டி: நான் ஏன் பிறந்தேன் (http://www.youtube.com/watch?v=m_d5bAbO0fM)

    JFK அங்குரார்ப்பன சொற்பொழிவு இணையம் : (4.00-4.30 நிமிடங்கள்) http://www.youtube.com/watch?v=3s6U8GActdQ&list=PL6235AFD53E9301B7

    காலீல் ஜிப்ரான்:  http://leb.net/~mira/

     பிற்குறிப்பு:

    நான் ஏன் பிறந்தேன் திரைப்படத்தில் பல அட்டகாசமான பாடல்கள். பிரபலம் பெற்ற பல பாடலாசிரியர்கள் இப் படத்திற்கு பாடல்கள் எழுதினார்கள். வாலி, புலமைப்பித்தன், பாரதிதாசன்,  என பட்டியல் நீள்கிறது. (http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001486)

     

    நன்றியுடன்

    சபா-தம்பி

    சபா-தம்பி பிறந்து வளர்ந்தது இலங்கையில். கால் நூற்றாண்டு காலத்துக்குமுன்னால் ஆஸ்திரேலியாவில் குடியேறியவர், தற்போது பெர்த் நகரத்தில் வசிக்கிறார். தமிழார்வம் ஏராளம், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆங்கிலத்தில்மட்டுமே எழுதிவந்திருக்கிறார், கண்ணதாசனும் #4VariNoteம் தந்த ஊக்கத்தில் தமிழிலும் எழுதத் தொடங்கியுள்ளார்.

    Twitter: @SabaThambi
     
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel