Updates from April, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • mokrish 10:29 am on April 6, 2013 Permalink | Reply
    Tags: சினேகன், , மாலன்,   

    அன்பாலே அழகாகும் வீடு 

    எண்பதுகளின் துவக்கத்தில் மெர்க்குரிப் பூக்கள் நாவலில் வீடென்று எதனைச் சொல்வீர் என்ற மாலனின் கவிதை வந்தபோது ரசித்து நண்பர்களுடன் House Vs Home என்று விவாதித்தது உண்டு. இன்றும் முதல் வரியைச் சொன்னதும் சட்டென்று உடனே நினைவுக்கு வரும் கவிதை.

    வீடென்று எதனைச் சொல்வீர்?

    அது இல்லை எனது வீடு.

    ஜன்னல் போல் வாசல் உண்டு.

    எட்டடிக்கு சதுரம் உள்ளே

    பொங்கிட மூலை ஒன்று புணர்வது மற்றொன்றில்

    நண்பர்கள் வந்தால் நடுவிலே குந்திக் கொள்வர்

    தலை மேலே கொடிகள் ஆடும் கால்புறம் பாண்டம் முட்டும்

    கவி எழுதி விட்டுச் செல்ல கால்சட்டை மடித்து வைக்க

    வாய் பிளந்து வயிற்றை எக்கிச் சுவரோரம் சாய்ந்த பீரோ……

    இப்போது யோசித்தால் இந்த கவிதை பாதியில் நின்றது போலிருக்கிறது. வெறும் சோகம் சொல்லும் Status Update. தொடர்ந்து காணி நிலமும் பத்துப் பனிரெண்டு தென்னைமரமும் கேட்ட பாரதியார் போல ஒரு கனவையோ இலட்சியத்தையோ சொல்லி முடித்திருக்கலாம்.

    திரைப்பாடல்களில் வீடு பற்றி சில அழகான பாடல்கள். பாண்டவர் பூமி படத்தில் வரும் விரும்புதே மனசு விரும்புதே என்ற சினேகன் எழுதிய பாடல் பாரதியின் காணி நிலம் கனவைப்போலவே அமைந்த வரிகள்.

    http://www.inbaminge.com/t/p/Paandavar%20Bhoomi/Virumbudhae%20Manasu%20Virumbudhae.eng.html

    கவிஞன் வழியில் நானும் கேட்டேன்

    கவிதை வாழும் சிறு வீடு

    விரும்புதே மனசு விரும்புதே

    ஒரு பக்கம் நதியின் ஓசை

    ஒரு பக்கம் குயிலின் பாஷை

    ஒரு பக்கம் தென்னையின் கீற்று

    ஜன்னலை உரசும்

    என்று தொடங்கி தென்றல் வாசல் தெளிக்கும், கொட்டும் பூக்கள் கோலம் போடும் , நிலா வந்து கதைகள் பேசும், பறவைகள் தங்க மரகத மாடம், தங்க மணித்தூண்கள் என்று – சனிக்கிழமை Property Plus விளம்பரம் போல வர்ணனைகள்.

    பூவெல்லாம் உன் வாசம் படத்தில் வைரமுத்துவின் பாடல் ஒன்றில் சில சுவாரஸ்யங்கள்.

    http://www.inbaminge.com/t/p/Poovellam%20Un%20Vaasam/Chella%20Namm%20Veetuku.eng.html வானவில்லை கரைச்சு வண்ணம் அடிக்கலாம், தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும் செடி என்று அதீத கற்பனைகளோடு தொடங்கும் பல்லவியில் ஒரு ட்விஸ்ட் வைத்து

    அட கோயில் கொஞ்சம் போரடித்தால்

    தெய்வம் வந்து வாழும் வீடு

    காற்று வர ஜன்னலும் செல்வம் வர கதவும் என்று வசீகரமான வாஸ்து சொல்கிறார். மறு ஜென்மம் இருந்தால் இதே வீட்டில் அட்லீஸ்ட் நாய்க்குட்டியாக பிறக்க வரம் வேண்டுகிறார். காரணம்?

    எங்கள் இதயம் அடுக்கி வைத்து இந்த இல்லங்கள் எழுந்ததம்மா

    நீ சுவரில் காது வைத்தால் மனத் துடிப்பு கேட்குமம்மா

    பசங்க படத்தில் யுகபாரதியின் பாடல் சொல்வதுதான் மிகவும் சரியானதென்று தோன்றுகிறது

    http://www.inbaminge.com/t/p/Pasanga/Anbaale%20Azhagagum%20Veedu.eng.html

    அன்பாலே அழகாகும் வீடு

    ஆனந்தம் அதற்குள்ளே தேடு

    சொந்தங்கள் கை சேரும்போது

    வேறொன்றும் அதற்கில்லை ஈடு

    வாடகை வீடே என்று

    வாடினால் ஏது இன்பம்

    பூமியே நமக்கானது

    என்று எளிமையான பாசிடிவ் பார்வை. அன்பும் சொந்தங்களும் இருந்தாலே வீடு இனிமையாகும் – தென்னைமரம், தென்றல், நிலா வெளிச்சம், நட்சத்திரம் பூக்கும் செடி, கிளப் ஹவுஸ், நீச்சல் குளம், ஜிம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.

    மோகன கிருஷ்ணன்

    126/365

     
    • rajnirams 10:39 am on April 6, 2013 Permalink | Reply

      அருமை. வைரமுத்துவின் “அட கோயில் கொஞ்சம் போரடித்தால் தெய்வம் வந்து வாழும் வீடு”வரிகளை சுட்டி காட்டியிருந்தது அருமை.சந்திப்பு படத்தில் வாலியின் “ஆனந்தம் விளையாடும் வீடு,நான்கு அன்பில்கள் ஒன்றான கூடு”பாடலும் அருமையாக இருக்கும் .

    • amas32 (@amas32) 10:02 pm on April 6, 2013 Permalink | Reply

      /சனிக்கிழமை Property Plus விளம்பரம் போல வர்ணனைகள்./ LOL

      /எங்கள் இதயம் அடுக்கி வைத்து இந்த இல்லங்கள் எழுந்ததம்மா/ Home is where the heart is!

      /அன்பாலே அழகாகும் வீடு

      ஆனந்தம் அதற்குள்ளே தேடு/

      அற்புதமான வரிகள். என் எண்ணத்தை நூறு சதவிதம் பிரதிபலிக்கும் வரிகள்.

      “Mid pleasures and palaces
      Though we may roam.
      Be it ever so humble,
      There is no place like home”
      அன்னையின் அன்பினால் குழந்தைகளின் பாசத்தினால் தகப்பனின் பாதுகாப்பினால் நம் வீடு சின்னக் குடிலாக இருந்தாலும் அது தங்கமும் வைரமும் பதித்த அழகிய அரண்மனை தான் 🙂

      amas32

    • GiRa ஜிரா 11:09 pm on April 6, 2013 Permalink | Reply

      மிக அருமையான பதிவு. அழகான வரிகள்.

      ‘’அட கோயில் கொஞ்சம் போரடித்தால் தெய்வம் வந்து வாழும் வீடு’ – அற்புதமான வரிகள். அன்புள்ள பெரியவர்களும் அடக்கமுள்ள இளவயதினரும் குறும்புள்ள குழந்தைகளும் இருக்கும் வீடு கோயிலே ஆகும்.

      இல்லம் சங்கீதம்
      அதில் ராகம் சம்சாரம்
      அவள் நாயகன் பாவம்
      பிள்ளை சிருங்கார ராகம் – என்று கண்ணதாசன் எழுதியிருக்கிறார்.

      பாசமில்லாத வீடு நீரில்லாத காடு. அதனால்தான் வீட்டை செங்கலையும் சுண்ணாம்பையும் வைத்துக் கட்டுவதை விட அன்பாலும் அருளாலும் கட்ட வேண்டும்.

      ஆனந்தம் விளையாடும் வீடு
      நான்கு அன்பில்கள் விளையாடும் கூடு

      மேலே உள்ள பாடலை சிறுவயதில் எங்கேயோ கேட்டுவிட்டு… மதுரை டி.ஆர்.வோ காலனி பக்கமுள்ள மாரியம்மன் கோயில் அருகிலுள்ள போலீஸ் கிரண்டைப் பார்த்து

      போலீஸ்கள் விளையாடும் கிரவுண்டு
      இது போலீஸ்கள் விளையாடும் கிரவுண்டு
      நான்கு சுவர் கொண்டு உருவான கிரவுண்டு – என்று பாடியது நினைவுக்கு வருகிறது.

  • mokrish 11:27 am on March 24, 2013 Permalink | Reply
    Tags: நாணம்   

    ஜாடை நாடகம் 

    ஒரு பக்கம் பார்த்து, ஒரு கண்ணை சாய்த்து, உதட்டையும்  நகத்தையும்  கடித்து, மெதுவாக சிரித்து கால் பெருவிரலால் கோலமிட்டு என்று இலக்கியத்திலும் கதையிலும் கவிதையிலும் திரைப்படங்களிலும் பதிவாக்கப்பட்ட ஒரு பிம்பம் – பெண்களின் Exclusive உணர்வு-நாணம்! பெண்களுக்கு வகுக்கப்பட்ட நால் வகை பண்புகளில் ஒன்று . பெண்மை என்பதால் நாணம் வந்ததா நாணம் வந்ததால் பெண்மை ஆனதா என்று கவிஞர்கள் வியந்த ஒன்று.

    திரைப்பாடல்களில் நிறைய காதல் பாடல்கள் உண்டென்பதால் நாணம் / வெட்கம் பற்றியும் அவள் கன்னம் சிவந்தது பற்றியும் சொல்லும் வரிகள் ஏராளம். ஆண் எப்போதும் பெண்ணை இந்த வட்டத்தை விட்டு வரச்சொல்வதும் பெண் இந்த ‘சங்கிலியை’ உடைக்கமுடியாமல் மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல என்று  தவிப்பதும் ஐயோ நாணம் அத்துப்போக புலம்புவதும் என்றும் பல பாடல்கள்.

    முதலில் ஒரு definition. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் நாணமோ இன்னும் நாணமோ என்ற கண்ணதாசன் பாடல்.

    நாணமோ இன்னும் நாணமோ
    இந்த ஜாடை நாடகம் என்ன
    அந்தப் பார்வை கூறுவதென்ன
    நாணமோ நாணமோ

    இந்த ஜாடை நாடகமும் பார்வை சொல்லுவதும் என்ன என்று ஆண் கேட்கும் கேள்வி. பெண் என்ன பதில் சொல்லுவாள்? அதை உன்னால் புரிந்து கொள்ள முடியாது என்கிறாள்

    ஆடவர் கண்களில் காணாதது
    அதுகாலங்கள் மாறியும் மாறாதது
    காதலன் பெண்ணிடம் தேடுவது
    காதலி கண்களை மூடுவது அது இது

    தொடர்ந்து எதெல்லாம் நாணம் என்று ஒரு லிஸ்ட் கொடுக்கிறார். கண்ணதாசன் விளைந்து நிற்கும் வயலை பார்த்து பச்சை வண்ண சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா ‘பருவம் வந்த பெண்ணைப்போல நாணம் என்ன சொல்லம்மா என்று சொன்னவர். நாணம் பற்றி இவர் சொல்வதென்ன?

    ராஜா ராஜஸ்ரீ ராணி வந்தாள் என்ற ஊட்டி வரி உறவு படத்தின் பாடலில்

    மேகம் வந்த வேகத்தில் மோகம் வந்தது

    மெல்ல மெல்ல நாணத்தின் தேரும் வந்தது

    இடையொரு வேதனை நடையொரு வேதனை கொள்ள

    இதழொரு பாவமும் முகமொரு பாவமும் சொல்ல

    என்று பெண்ணின் eternal conflict பற்றி அழகாக சொல்கிறார். வாலியும் ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ என்ற பாடலில் இதே conflict பற்றி சொல்லும் வரிகள்

    மெல்லத் திறந்தது கதவு என்னை வாவென சொன்னது உறவு
    நில்லடி என்றது நாணம் விட்டுச் செல்லடி என்றது ஆசை

    சிவந்த மண் படத்தில் ஒரு கன்னம் சிவந்த பெண்ணைப்பற்றி கண்ணதாசன் சொல்வதைப் பாருங்கள் http://www.youtube.com/watch?v=_rXdHS5a5iY

    ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டான்

    அவன் வேண்டும் வேண்டும் என்றான் அவள் நாளை நாளை என்றாள் ஆசையுள்ள மேனியிலும் ஒரு பக்கம் அச்சமுள்ள மானினமோ

    நாடுவிட்டு நாடு வந்தால் பெண்மை நாணமின்றிப் போய் விடுமோ

    வள்ளுவன் நாணென ஒன்றோ அறியலம் என்று சொன்ன கருத்தை பாலும் பழமும் படத்தின் காதல் சிறகை காற்றினில் விரித்து என்ற பாடலில் (வழக்கம் போல) எளிமையாக சொல்கிறார்

    முதல் நாள் காணும் புதுமணப் பெண் போல்
    முகத்தை மறைத்தல் வேண்டுமா
    முறையுடன் நடந்த கணவர் முன்னாலே
    பரம்பரை நாணம் தோன்றுமா

    இதையே ஆயிரத்தில் ஒருவன் பாடலில் சொல்கிறார்

    தன்னை நாடும் காதலன் முன்னே
    திரு நாளைத் தேடிடும் பெண்மை
    நாணுமோ நாணுமோ

    சமீபத்தில் வந்த சிவப்பதிகாரம் படத்தில் சித்திரையில் என்ன வரும் என்ற பாடலில் http://www.youtube.com/watch?v=UrvBQz-hPRc

    கேணி கயிறாக ஒங்க பார்வ என்ன மெலிழுக்க

    கூனி  முதுகாக  செல்ல வார்த்தை வந்து கீழிழுக்க

    என்று பெண் பாட ஆண் சொல்வதாக யுகபாரதியின்  ஒரு அருமையான கற்பனை.

    மாவிளக்கு போல நீ மனசையும் கொளுத்துற

    நாவிடுக்கு ஓரமா நாணத்தப் பதுக்குற…

    அட இது Sustained Release மருந்து போல் நாவிடுக்கில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி …படுத்தி – ஆஹா

    இது பெண்களின் Intrinsic குணம் என்றே தோன்றுகிறது. வைரமுத்து  ஏன் அச்சம் நாணம் என்பது ஹைதர் கால பழசு என்று சொன்னார் ?

    மோகனகிருஷ்ணன்

    113/365

     
    • rajnirams 11:30 am on March 24, 2013 Permalink | Reply

      நாணமோ பாடல் கண்ணதாசன் எழுதியது.

      • rajnirams 11:38 am on March 24, 2013 Permalink | Reply

        அருமை.வித்தியாசமான பார்வை.பாராட்டுக்கள்.சி.ஐ.டி.சங்கரில்,கண்ணதாசனின் “நாண த்தாலே கன்னம் மின்ன”பாடலும் அருமையாக இருக்கும்.பார்த்தால் பசி தீரும் -கண்ணதாசனின் கொடி அசைந்ததும் பாட்டிலும் பெண்மை என்பதால் நாணம் வந்ததாவும் ஒரு உதாரணம். நன்றி:-))

    • amas32 1:10 pm on March 24, 2013 Permalink | Reply

      நாணம் இன்றைய யுவதிகளிடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் நேற்று ஒரு Stand up comedy நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன் வந்திருந்தவர்களில் 99விழுக்காடுகள் இளைஞர்கள். ஆண் பெண் ஜோடியாக தான் வந்திருந்தனர். சிலர் தனித் தனியாக வந்திருந்தனர். “நேர் கொண்ட பார்வை நிமிர்ந்த நன்னடை” இதைத் தான் அங்கிருந்த பெண்களிடம் கண்டேன். காதல் சூழல் இல்லை, நீங்கள் சொல்ல வரும் கருத்தை பரிசோதிக்க. ஆனால் தயக்கமில்லாமல் பெண்கள் ஆண்களுடன் பேசுகிறார்கள், பழகுகிறார்கள். அதற்குப் பதிலாக ஆண்கள் பெண்களிடம் பேசத் தயங்குவதை கவனிக்கிறேன் 🙂 வாழ்க்கை ஒரு வட்டம் தான் :-)) வைரமுத்து அதைத் தான் சொல்லியிருக்கிறார் 🙂

      நீங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பாடல்கள் அனைத்தும் சூப்பர்.

      amas32

    • அழகேசன் 5:57 pm on March 24, 2013 Permalink | Reply

      சார்.. வர வர ரொம்ப அறுக்கறீங்க

  • G.Ra ஜிரா 10:20 am on March 4, 2013 Permalink | Reply  

    ஆனந்தம், ஆரம்பம்! 

    ஆண்களுக்குக் காதல் வந்தால் என்னாகும்? அதைப் பாடலில் சொல்ல முடியுமா? நினைத்தேன் துடித்தேன் பலமுறை அழுதேன் தொழுதேன் மனத்தில் உழுதேன் என்றெல்லாம் எழுதுவது அக்காலம். இக்காலத்துக் கவிஞர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று அறிந்து கொள்ள ஒரு எண்ணம் வந்தது.

    நண்பர்களிடம் பிடித்த பாடல் எது என்று கேட்ட போது நிறைய பேர் கும்கியைக் கை காட்டினார்கள். அதிலும் குறிப்பாக அய்யய்யய்யோ ஆனந்தமே பாடலை. டி.இமான் இசையமைத்த அந்தப் பாடலை நானும் கேட்டிருக்கிறேன். பார்த்திருக்கிறேன்.

    அதை வரிவரியாகத் திரும்பவும் கேட்டேன். கவிஞர் யுகபாரதியின் எளிய வரிகள் ஒரு எளிய பாத்திரத்தின் காதலுக்கு மிகப் பொருத்தமாகவே இருந்தது.

    அய்யய்யயோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே – என்ற எளிய தொடக்கமே அழகு.

    அவன் யானை வளர்ப்பவன். காட்டில் இருக்கிறான். அதனால் சிந்தனையில் ஐரோப்பாவும் அமெரிக்காவும் வரவில்லை. இயற்கையான காட்சிகளில் காதலைச் சொல்கிறான். அந்த வரிகளில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை.

    நூறுகோடி வானவில் மாறிமாறிச் சேருதே
    காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கிப் போகுதே

    இந்த வரியிலும் இரண்டாவது வரி மிகச் சிறப்பானது. ஏன் தெரியுமா?

    காதல் உள்ளத்துக்குள்ளே ஏதோ ஒரு இடம் தெரியாத மர்மப்புள்ளியில் தொடங்குவது போலத்தான் இருக்கும். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக படர்ந்து ஆளையே மூழ்கடித்து விடும். அப்படி நடப்பதை என்ன செய்தாலும் தடுக்கவே முடியாது.

    சின்னச் சின்னத் தூறல்களாக எண்ண அலைகள் சிதறிச் சிதறிப் பெருவெள்ளமாகி அந்த வெள்ளத்தில் அவன் மூழ்கிப் போனான் என்று செல்கிறது கற்பனை. இது காதலில் உண்டாகும் உண்மை நிலையும் கூட.

    இதை மிக எளிமையாக ”காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கிப் போகுதே” என்று சொன்ன கவிஞர் யுகபாரதியை பாரட்டத்தான் வேண்டும்.

    இன்றைக்கு நேற்றா ஆண் இப்படியிருக்கிறான்? இல்லை. எப்போதுமே ஆண் இப்படித்தான். காதல் வந்தால் புலம்பலிலேயே மூழ்கிப் போய்விடுவான்.

    இதே சூழ்நிலை சங்ககாலத்தான் ஒருவனுக்கும் வந்தது. ஆம். அவனுக்கும் வந்தது காதல். தன்னை மறந்தான். தந்தை தாய் மறந்தான். தன் கடமை மறந்தான். தன்னைச் சுற்றியுள்ளதையெல்லாம் மறந்தான். உலகை மறந்தான். காதலுக்குள் தன்னைத் தொலைத்தான்.

    நண்பர்கள் கண்டித்தனர். ஆற்றும் கடமையே ஆண்மைக்கழகு என்று அறிவுறுத்தினர். அவன் கேட்டானா? இல்லையே. செந்தமிழில் சொல் செதுக்கி சொல்லியவர்க்குத் தன்னிலையை விளக்கமாகச் செப்பி விட்டான்.

    கையில்லாதவன் ஒருவன். அவனுக்குச் சொந்தமாய் ஒரு உருண்டையளவு வெண்ணெய். அந்தக் கட்டி வெண்ணெய் சட்டியில் இல்லை. வெட்டுப்பாறையில் இருக்கிறது. பொழுதோ உச்சிப்பகல். முதலில் இளகுகிறது வெண்ணய். பிறகு நெய்யாய் உருவிப் பரவுகிறது. அதைக் காப்பாற்ற விரும்புகிறான் அந்தக் கையில்லாதவன். அது முடியுமா?

    அந்த வெண்ணெய் நெய்யாகிப் பரவுவததைப் போல காதல் அவன் மீது பரவிக்கொண்டிருக்கிறது. கையில்லாதவன் அந்த வெண்ணையைக் கண்களாப் பார்த்தே காப்பாற்ற முடியுமா? முடியவே முடியாது. வெண்ணெய் உருகுவதைத் தடுக்கும் வழி(கை) இல்லாதவனாய் மூழ்கிப் போகிறான். காதலில் மூழ்கிப் போகிறான்.

    இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
    நிறுக்கல் ஆற்றினோ நன்று மன் தில்ல
    ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்
    கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
    வெண்ணெய் உணங்கல் போலப்
    பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே
    நூல் – குறுந்தொகை
    திணை – குறிஞ்சி
    கூற்று – தலைவன்
    எழுதியவர் – வெள்ளிவீதியார்

    வெள்ளிவீதியாரும் யுகபாரதியும் எடுத்துச் சொன்ன எடுத்துக்காட்டுகள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் பொருள் ஒன்றுதான்.

    காதல் வந்தால் அதில் ஆண் மூழ்கித்தான் போவன். அப்படி மூழ்குவதுதான் சுகமானது. இன்பமானது. வாழ்க்கைக்கும் ரசமானது. அப்படி மூழ்காத ஆணுக்கு இன்பமில்லை. இல்லறமில்லை. வாழ்க்கையில் எதுவுமேயில்லை.

    அய்யய்யோ பாடலின் ஒளிச்சுட்டி – http://youtu.be/xh8PByTv9kw

    அன்புடன்,
    ஜிரா

    093/365

     
    • kamala chandramani 4:14 pm on March 4, 2013 Permalink | Reply

      சங்க இலக்கியங்களில் காதல் மிக மென்மையாக சொல்லப்பட்டுள்ளது. அற்புதமான மனதைத் தொடும் காதல். திரைப்படப் பாடல்களில் அதைத் தேடுவது …….ஒரிரு முத்துக்கள் கிடைக்கலாம்….

      • GiRa ஜிரா 8:12 am on March 5, 2013 Permalink | Reply

        உண்மைதானம்மா.. இன்றைய பாடல்களில் தேடித்தான் பிடிக்க வேண்டியிருக்கிறது. அவ்வளவு உயிர்ப்புள்ள வரிகள் இன்றைய பாடல்களுக்குத் தேவையேயில்லை. டச் ஸ்கிரீன் பெண்ணே சார்ஜர் நானேன்னு எதையாச்சும் எழுதிக்கிட்டு போய்க்கிட்டேயிருக்கலாம்.

    • amas32 (@amas32) 4:45 pm on March 4, 2013 Permalink | Reply

      //நினைத்தேன் துடித்தேன் பலமுறை அழுதேன் தொழுதேன் மனத்தில் உழுதேன் என்றெல்லாம் எழுதுவது// விவிசி

      நீங்க சொல்ல வந்தது வேற என்றாலும் எனக்கென்னமோ வைரமுத்துவின் அந்தி மழை பொழிகிறது பாடல் தான் உங்கள் பதிவைப் படிக்கும் பொழுது ஞாபகத்துக்கு வருகிறது 🙂
      “தண்ணீரில் முழ்கிக் கொண்டே தாகம் என்றாய்”

      amas32

      • GiRa ஜிரா 8:15 am on March 5, 2013 Permalink | Reply

        தண்ணீர் மூழ்கிக் கொண்டே தாகம் என்றாய்.. நல்ல அழகான முரண். அட்டகாசமான வரியைப் பிடிச்சிங்க 🙂

    • anonymous 11:05 pm on March 4, 2013 Permalink | Reply

      யுக-பாரதி – இந்தப் பேரே ஒரு நல்ல சொல்லு;

      “ஆனந்தம் ஆரம்பம்” -ன்னு நீங்க குடுத்த தலைப்பு மெய்யாலுமே உண்மை தான்!
      யுகபாரதியின் ஆரம்பம் = ஆனந்தம் -ங்கிற படத்தில் தான்!

      பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
      புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
      -பாட்டுல, நடுவாப்புல ஒரு வரி வரும்; அது சொல்லீரும் “ஒரு ஆணின் காதல்” எப்படி-ன்னு?

      அடி காலம் முழுவதும் காத்திருப்பேன்
      நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன்

      காலம் முழுசுமே, பூவா இருக்க முடியாது; ரொம்பக் கடினம்
      மகரந்தச் சேர்க்கை, அறிஞ்சோ அறியாமலோ நடந்துக்கிட்டு தான் இருக்கும்;
      அப்படி நடக்கும் போது, பூ -> காய் ஆகும் ->கனி ஆயீரும்;
      அவரவர் வாழ்க்கை; அதுல கொஞ்சம் கொஞ்சம் அவரவர் இன்ப நலங்கள்!

      ஆனா, இந்த “ஆணின் காதல்”?
      = பூவாகவே இருப்பானாம்
      = அதுலயும், அவ காணும் இடத்தில் மட்டுமே பூத்து இருப்பானாம்
      (ஏன்னா, மகரந்தச் சேர்க்கை, அவ கிட்ட தான்; காற்றில் பரவி வருதல் கூட அவனுக்கு வேணாம்; அதுக்காக ஒடுக்கிக் கொள்கிறான்)

      இந்த ஆரம்ப வரிகள், மனசுல பண்ண மாயமோ என்னமோ..
      யுகபாரதியை ரொம்ப ரொம்பப் பிடிச்சிப் போயிருச்சி
      (i don’t hesitate to say this even to my friend, who is a big lyric writer himself, of course with smiles:)
      —-

      நீங்க குடுத்த வரிகளும் அழகோ அழகு!

      நூறுகோடி வானவில் மாறிமாறிச் சேருதே
      = இப்புடிச் சேர்ந்தா, என்ன வண்ணம்-ன்னு சொல்லுறதாம்? காதலை, “இதான்” ன்னு சொல்லீற முடியாது;

      காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கிப் போகுதே
      = தூறல்-ல நனையலாம்; லேசாத் தலையைத் துவட்டிக்கிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம்!
      ஆனா தூறல்-ல யாராச்சும் “மூழ்கிப்” போயிருவாங்களா? = அதான் “ஆணின் காதல்”

      வாழ்க்கையே இல்லீன்னாலும், கடைசி வரைக்கும் அவனே-ங்கிற உறுதி;
      இது ஆண் காதலில் அதிகம்!
      KB Sundarambal அம்மா என்னும் பெண் காதலிலும் உண்டு! அந்தப் பெண்ணுக்கு ஆண்மையின் உள்ள உறுதி!

      • anonymous 11:43 pm on March 4, 2013 Permalink | Reply

        நடுவுல, மன்மத ராசா, காதல் பிசாசு -ன்னுல்லாம் யுகபாரதி எழுதுனது வேற; அங்கிட்டு நான் போவலை:) chummaa time pass!

        மைனா, கும்கி பாடல்கள் மிக்கு அழகு!
        ——

        பொதுவா, ஆண், “ஆசை” அதிகம் வச்சிப் பாடுவதால், ஆண் காதலில், “காதலை” விடக் “விரகம்” கலந்து இருப்பதாத் தான் பலருக்கும் தோனும்!

        ஆனா, “ஆணின் காதல்” -ன்னு திரை-இலக்கியப் பாடல்கள், கொஞ்சமே கொஞ்சம்; அத்தனையும் மூழ்கி எடுக்கும் முத்துக்கள்!

        ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் -ன்னு ஒரு பாட்டு; அதுல ஒரு வரி

        வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது – உனது கிளையில் பூவாவேன்
        இலையுதிர்காலம் முழுதும் – உனக்கு மகிழ்ந்து வேராவேன்
        -ன்னு வரும்;
        இதே பூ-வேர் உவமை தானோ என்னமோ, ஒரு ஆணின் காதலுக்கு?
        ——

        பூமி தான் நிலாவுக்கு ஏங்கும்; ஆனா நிலா ஏங்குமா?

        பெண் தான் எப்பமே “ஏங்குறாப்” போலப் பல பாடல்கள்;
        சுசீலாம்மாவின் சாகாத வரம் = நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா

        ஆனா, ஒரு ஆணின் ஏக்கம்; அது கண்ணதாசன் மெட்டு
        = நீ இல்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா

        தேய்ந்த வெண்ணிலா = தன்னையே தேய்த்துக் கொள்ளும் ஆண் காதலைத் தொட்டுக் காட்டி இருப்பாரு கண்ணதாசன்;
        But, என்ன நடுவுல, காமம் உள்ள வரிகளும் வரும் = இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா

        அதனால், ஆண் காதலில் “ஏக்கமே இல்லை” -ன்னு ஆயீறாது;
        சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா?
        வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
        -ன்னு, கொஞ்சம் உன்னிச்சிப் பாத்தாத் தான் தெரியும், “ஆணின் காதல்”!
        ——

        ஆணின் தவிப்பு அடங்கி விடும்
        பெணின் தவிப்பு தொடர்ந்து விடும்
        -ன்னு ஒரு பாட்டு இருக்கு;

        ஆனா பல ஆண்களின் உடல் தவிப்பு அடங்கீருமே தவிர,
        காதல் நெறைஞ்ச ஒரு ஆணின் தவிப்பு = அது அடங்குவதேயில்லை என்பது தான் உண்மை!

    • anonymous 12:18 am on March 5, 2013 Permalink | Reply

      சங்கப் பாடல் பத்தி, ஒன்னுமே சொல்லாமப் போயிறணும் -ன்னு நெனைச்சேன்; முடியலை; தோல்வி!

      வெள்ளி வீதியார் = என் உள்ள வீதியார்!
      ———

      இவரு ஒரு பொண்ணு தான்;
      ரொம்பவும் காதலில் அழிஞ்சி போன பொண்ணு;

      ஆனா, இந்தப் பாட்டை மட்டும், பொண்ணாப் பாடாம, ஒரு ஆணாப் பாடுறா; ஏன்?

      ஒரு தோழன், என்னடா, ஏன் இப்பிடி ஆயிட்ட? -ன்னு கேக்குறான்;
      அதுக்குத் தலைவன் கூற்றாகத், தன் காதலை ஏத்திச் சொல்லுறா!

      = “நாயகி பாவம்” தானே கேட்டு இருக்கீக?
      = இது “நாயகன் பாவம்” பாட்டு;
      ———

      ஏன்-ன்னா, சங்க காலத்தில் (கொஞ்சம் இந்தக் காலத்தில் கூட), காதலை இழந்த ஒரு பொண்ணைச், சமூகம் அப்படியே விட்டுறதில்லை!
      என்னென்னமோ பண்ணி, எப்படியும் “மகரந்தச் சேர்க்கை” செஞ்சீரும்!

      ஆனா, ஒரு “உண்மையான ஆணை”, அப்படிப் பண்ணுறது மெத்த கடினம்!

      ஆண் கிட்டேயும், சமூகம் தன் வித்தையைக் காட்டும்;
      ஆனா, அவன் “காதல் ததும்பும் ஆணாக” இருந்தா? = அவன் கிட்ட சமூகத்தின் பாச்சா பலிப்பதில்லை; அவன் அப்படியே “நின்னுருவான்”;

      இந்தக் “காதல் உறுதி”;
      அதான், தன் காதலும் “நின்னுற” வேண்டி, “ஆண் காதல்” ஆக்கிப் பாடுறா, இந்த வெள்ளி வீதியார் என்னும் பொண்ணு;

      இது, சங்கத் தமிழ், “உண்மையான ஆண்”களுக்குச் செய்த மிகப் பெரும் மரியாதை;
      அதுவும் ஒரு புரட்சிப் பொண்ணு மூலமாவே செய்த பெருமிதம்;

      ஆண்கள் மட்டுமே அந்தரங்க உறுப்பு/ முலை-ன்னு பாடிய காலத்தில்… என் அல்குலில் வெள்ளைப் படுதே -ன்னு கூச்சம் துணிஞ்சி பாடிய புரட்சிப் பொண்ணு இவ;
      (கன்றும் உணாது, கலத்தினும் படாது….திதலை அல்குல் என் மாமைக் கவினே)
      ———

      (இந்தச் சங்க இலக்கிய உளவியல் – ஆணாகிப் பாடும் பெண் – தாயம்மாள் அறவாணன் என்கிற பெண் தமிழறிஞரின் நூலிலே காண்க)

      • anonymous 12:49 am on March 5, 2013 Permalink | Reply

        //கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
        வெண்ணெய் உணங்கல் போலப்//

        இது போலவொரு உவமை, ஆனானப்பட்ட கவிச் சக்கரவர்த்தி கம்பன் கூடிய காட்டியதில்லை… இன்னிக்கி வரை இலக்கியத்தில்! என்னமா ஒரு வீச்சு!

        கண்ணின் காக்கும் = கண்ணால மட்டும் காவல் காக்குறானா(ளா)ம்
        பாத்துப் பாத்து ஏங்குறா!
        ஆனா, வெளிய சொல்லவும் முடியல!
        சொன்னா, தனக்கு இழுக்கோ? இல்லை, அவனுக்கு இழுக்கோ?

        வெண்ணைய் என்னும் காதல்-களி; உருகி, ஒன்னுமில்லாமப் போவப் போகுது;

        ஆனா, எடுத்துக் காப்பாத்த முடியல = கை இல்லை!
        மத்தவங்க கிட்ட சொல்லி ஆத்தவும் முடியல = வாய் இல்லை!

        அப்போ, என்ன தான் வழி? = கண்ணின் காக்கும்!
        ————

        //கை இல் ஊமன், கண்ணின் காக்கும்// – ஒத்த வரி!

        வெறுமனே காக்கும் -ன்னு போட்டிருக்கலாம்! காதலிற் காக்கும் -ன்னு போட்டிருக்கலாம்!
        ஆனா, “கண்ணின் காக்கும்”…

        நம்ம கண்ணு முன்னாடியே, காதல்-களி அழிஞ்சி உருகுவதைப் பாக்குற கொடுமை யாருக்கும் வரக் கூடாது;
        அதை விட, அதை ஆத்திக்க, வெளியில் கூட சொல்லி அழ முடியாத நெலமை யாருக்கும் வரக் கூடாது, முருகா!

        இப்படி வாழ்வது எளிதா? = நோன்று கொளற்கு அரிதே!
        சமூகத்துக்குப் புரியுமா? = நிறுக்கல் ஆற்றினோ!

        கையும் சிறையில், வாயும் சிறையில்
        கண்கள் மட்டும், “ஆணின் காதல்”!

        இதுவொரு சங்கத் தமிழ் வாசிப்பு – சங்கத் தமிழ் சுவாசிப்பு!

        வெள்ளி வீதி முதல், யுகபாரதி வரை… குறிஞ்சிப் பூவென பூக்கும் “உண்மையான ஆண்களின் காதல்”
        பெண்ணின் தவிப்பு தொடர்ந்து வரும்…
        ஆணின் தவிப்பும் அடங்கி விடாது!

        ஆண் காதல் வாழ்க!

    • psankar 12:38 pm on March 6, 2013 Permalink | Reply

      வெள்ளிவீதியார் ஏன் தலைவன் கூற்றாக பாடியிருக்கிறார், தலைவி கூற்றாக பெண் பாடினால் இன்னும் உசிதமாக இருக்குமே என்று கருத்து சொல்ல வந்தேன். பாடும் பெண்களே குறைவு, ஆண்டாளே ஆண் என்று ஒரு கதை உண்டு. இப்படிப்பட்ட பெண்பாற் புலவர் பஞ்சத்தில் ஒழுங்காக பெண் மனத்தை மட்டும் கூறும் விதமாக தலைவி கூற்றாகவே பெண்பாற் புலவர்கள் பாடி இருந்தால், நிறைய பெண்ணிய கருத்துகள் பரவி இருக்குமே. பெண்களின் ஒழுக்கம், கற்பு, காமம், காதல் பற்றி ஆண்களின் பார்வையில் உள்ள பாடல்களினால் பெண்களின் உண்மையான எண்ணங்கள் வெளியிலே தெரியாமலே போய் விடுமோ, என்று யோசித்தேன்.

      பார்த்தால் இங்கு ஏற்கனவே அனானி (அவனா(ரா)நீ?) எழுதி வைத்து விட்டார்.

      @அனானி: இங்கு வந்து இவ்வளவு எழுதுகிறீரே, உமக்கு ஒரு கடிதம் அனுப்பினேனே, பதில் எங்கே !? 😉

  • mokrish 11:56 am on February 14, 2013 Permalink | Reply  

    நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை 

    குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க வாடகை என்ன தர வேண்டும் என்று குழம்புவர்களுக்கும் யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போனது என்று உருகும் உள்ளங்களுக்கும் இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய் என்று கலங்கும் இதயங்களுக்கும் காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கும் அனைவருக்கும் #4வரிநோட் ன் இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்

    காற்றெல்லாம் இன்று காதல் வாசம். இன்று உலகமெங்கும் ஒரே மொழி அது  உள்ளம் பேசும் காதல் மொழி.

    ஆனால் திரைப்பாடல்களில் எப்போதுமே காதல் வாசம்தான். மூன்றில் இரண்டு காதல் பாட்டுதான். கண்ணதாசன் ‘அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை’ என்று தெளிவாக சொல்கிறார். வாலி ‘காற்று வாங்க போனால்கூட கவிதைதான் வாங்கி வருகிறார்.  அவருக்கு வளையோசை சத்தமே கவிதைதான் . வைரமுத்துவும் கால காலமாக வாழும் காதலுக்கு அர்ப்பணம் என்கிறார்.

    பல ஆயிரம் காதல் பாடல்கள். பல ஆயிரம் வர்ணனைகள். காதல் என்பது  கல்யாணம் வரைதான்  என்று சொன்ன ஒரு பாட்டு. காதல் கசக்குதையா என்ற இன்னொரு பாடல். காதலின் ஏழு நிலை சொன்ன என்னுயிரே என்னுயிரே என்று இன்னொரு பாடல்.

    காதலின் Symptoms பற்றி கவிஞர்கள் என்ன சொல்கிறார்கள் ? கண்ணதாசன் (அந்தக் கால?) காதலின் symptoms என்ன என்பதை

    பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது

    பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது

    நாலுவகை குணமிருக்கும் ஆசை விடாது

    நடக்கவரும் கால்களுக்கு துணிவிருக்காது

    என்ற வரிகளில் அழகாக விவரிக்கிறார். நா முத்துகுமார் காதல் பட பாடலில் இந்தக்கால அவஸ்தைகள் என்னவென்று சொல்கிறார் பாருங்கள்

    இதயத்தின் உள்ளே இமயத்தை போலே

    சுமைகளை வைத்தால் … காதல்

    உலகத்தில் உள்ள சித்ரவதைக்கெல்லாம்

    செல்லப்பெயர் வைத்தால்… காதல்

    இதயத்தின் உள்ளே சுமையை வைப்பதும் சித்திரவதைக்கு செல்லப்பெயர் வைப்பதும் – காதல் விரும்பி ஏற்றுக்கொண்ட வலி  என்ற தொனியில் அட ..

    திரைப்பாடல்களில் காதலுக்கு கிடைத்த சுவாரஸ்யமான dimensions என்ன?

    காதலை கடவுள் என்று சொன்ன பாடல்கள் உண்டு. நா முத்துகுமார் ‘காதல்’ படத்தில் தொட்டு தொட்டு பாடலில்

    தொடக்கமும் இல்லை முடிவுகள்  இல்லை

    கடவுளைப்போல காதல்

    என்கிறார். வைரமுத்து ஒரு பாடலில்

    நீரினை நெருப்பினை போல விரல் தொடுதலில் புரிவதும் அல்ல

    காதலும் கடவுளைப்போல அதை உயிரினில் உணரனும் மெல்ல

    என்று காதலை கடவுள் போல என்கிறார்.   (அதனாலதான் இதில் நம்பிக்கையில்லாத சிலர் இருக்கிறார்களோ?) இந்த கடவுளையும் நிராகரிக்கும் ஒரு பகுத்தறிவு கூட்டமும் உண்டு.

    அடுத்த பரிமாணம் Secrecy. கோடம்பாக்கம் பட பாடலில்

    ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்

    முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்

    என்றும் வைரமுத்து பூவெல்லாம் உன் வாசம் படத்தில்

    காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்,
    காதலை யாருக்கும் சொல்வதில்லை,
    புத்தகம் மூடிய மயிலிறகாக

    புத்தியில் மறைப்பாள்  தெரிவதில்லை,

    என்று உணர்வுகளை மயிலிறகால் வருடுகிறார்.

    சரி காதலர் தினத்துக்கு என்ன பரிசு கொடுப்பது என்று யோசிப்பவருக்கு யுகபாரதி சதுரங்கம் படத்தின்  என்ன தந்திடுவேன், பாடலில் http://www.inbaminge.com/t/s/Sathurangam/Enna%20Thanthi.eng.html அந்தக்கால barter trade போல ஒரு ஐடியா கொடுக்கிறார். இந்த உரையாடலை கேளுங்கள்

    நீ வானவில் தந்தால் நான் வானம் தந்திடுவேன்
    நீ ஓரிடம் தந்தால் நான் உலகை தந்திடுவேன்
    நொடிகள் நீ தந்தால் நான் யுகங்கள் தந்திடுவேன்
    விதைகள் நீ தந்தால் நான் விருட்சம் தந்திடுவேன்

    அதுமட்டுமா? கோபமிருந்தால் எப்படி சமாதானப்படுத்துவது என்று சொல்கிறார்

    நீ கோப பார்வை பார்க்கும் போது கொஞ்சல் தந்திடுவேன்
    என் தோளில் நீயும் சாய தொட்டில் தந்திடுவேன்

    கவிதையில் தொடர்ந்து

    நீ பார்த்திடும் போது பாராமல் நான் பார்வை தந்திடுவேன்
    நீ பேசிடும் போது பேசாமல் நான் மௌனம் தந்திடுவேன்

    என்ற புரிதலை சொல்கிறார். மேலும்

    உன் நெற்றி வருட கேசம் ஒதுக்க காற்று தந்திடுவேன்
    நீ இருட்டில் நடக்க எந்தன் விழியில் வெளிச்சம் தந்திடுவேன்
    நீ ஜன்னலின் ஓரம் நின்றிடும் போது சாரல் தந்திடுவேன்
    நீ தூங்கிடும் நேரம் லேசாய் கேட்கும் பாடல் தந்திடுவேன்

    என்று இதமான வரிகளில் காதலின் முழு வீச்சு. எனக்கென்னவோ அட்டை பெட்டியில் கலர் பேப்பர் சுற்றி கலர் ரிப்பன் கட்டி கொடுக்கப்படும் பரிசுகளை விட யுகபாரதி சொல்லும் பரிசுகளில் காதல் மிகுந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. கொடுத்துப்பாருங்கள். அப்புறம் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை.

    மோகன கிருஷ்ணன்

    075/365

     
    • rajinirams 12:08 pm on February 14, 2013 Permalink | Reply

      அட்டகாசம்.

    • @npodiyan 12:13 pm on February 14, 2013 Permalink | Reply

      super!

    • amas32 9:42 pm on February 14, 2013 Permalink | Reply

      உங்கள் பதிவே ஒரு கவிதை பூங்கொத்ததாய் உள்ளது! காதலர் தினத்துக்கு வாசகர்களாகிய எங்களுக்குக் நீங்கள் கொடுக்கும் பூங்கொத்து, நன்றி 🙂

      //ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்

      முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்//

      எனக்கு மிக மிக பிடித்தப் பாடல். ஒரு முறை கேட்ட பிறகும் மறுமுறை உடனே கேட்கத் தூண்டும் பாடல். (of course the tune is awesome!)

      நீங்கள் குறிப்பிட்டிருக்கும் யுகபாரதியின் பாடலை நான் கேட்டதில்லை என்றே நினைக்கிறேன். அறிமுகப் படுத்தியதற்கு நன்றி 🙂

      amas32

  • mokrish 11:47 am on January 21, 2013 Permalink | Reply
    Tags: , காதல், கீதை,   

    கீதையும் காதலின் கீதமும் 

    பாண்டவ – -கௌரவ யுத்தம். போர்க்களம் வந்த விஜயன், எதிரில் நின்ற அணியை பார்வையிட்டு மனம் தளர்கிறான். ‘கண்ணா, எதிரே பார் என் மாமன் இருக்கிறார் ,என் ஆசான் நிற்கிறார் , மற்றும் நம் உறவினரெல்லாம் வந்திருக்கிறார்கள்’ என்று வில்லை வீசி எறிந்து போரிட மறுக்கும்போது, தர்மத்திற்காகப் போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்பது குறித்து விளக்கி கண்ணன் அவனுக்கு கீதையை உபதேசிக்கிறார். ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் ‘விபூதி யோகம்’ என்ற கடவுளின் பெருமையை சொல்லும் பகுதியில்

    ‘வேதங்களில் நானே சாம வேதம், தேவரில் நானே இந்திரன்

    மலைகளில் நானே மேரு முனிகளில் நானே வியாசன்
    மந்திரங்களின் நான் காயத்ரி, மாதங்களில் நான் மார்கழி;
    பருவங்களில் மலர் சான்ற இளவேனில்’

    என்று தன்னைப்பற்றி கண்ணன் சொல்லும் வரிகள் ரசம் . ஒரு Groupல் உன்னதமானது எதுவோ அது நானே என்னும் பொருளில் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவதை பட்டியல் போல சொல்லும் உபதேசம்.

    தமிழகத்தில் இந்த வரிகள் கீதை படிக்காதவர்க்கும் பரிச்சயமானவை. காரணம் ? கண்ணதாசன் இந்த வரிகளை காதலியை பற்றி ஒரு பிரபலமான பாடலில் எழுதுகிறார். http://www.youtube.com/watch?v=baVvb4zJixg

    காலங்களில் அவள் வசந்தம்
    கலைகளிலே அவள் ஓவியம்
    மாதங்களில் அவள் மார்கழி
    மலர்களிலே அவள் மல்லிகை

    என்ற எவர்க்ரீன் பாடலாக்குகிறார். இது கீதையின் அதே best of the Group பாணியில் ஆனால் எளிமையான வார்த்தைகள் கொண்ட பாடல். கீதையில் கண்ணன் ‘ பறவைகளில் நானே கருடன்’ என்று சொன்னதை

    பறவைகளில் அவள் மணிப்புறா

    பாடல்களில் அவள் தாலாட்டு

    கனிகளிலே அவள் மாங்கனி

    காற்றினிலே அவள் தென்றல்

    என்று சற்றே மாற்றி காதலியைப்பற்றி ஒரு description சொல்வது கண்ணதாசன் டச்

    இதையே சமீபத்தில் யுகபாரதி ஒரு பாடலில் http://www.youtube.com/watch?v=042ztDjEGB4 வித்தியாசமாக வேறு கோணத்தில் சொல்கிறார். இவர் சிறந்தவற்றை பட்டியல் போடாமல், மனசுக்கு உகந்த மனசுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களை, பட்டியலாக சொல்கிறார். முக்கியமாக இதை monologue ஆக சொல்லாமல் இன்றைய வாழ்வின் உன்னதமான விஷங்களை வைத்து உரையாடல் போல் சொல்கிறார்.

    பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
    பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
    விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
    விளையாட்டு பிள்ளைகளின் செல்லக்கோபம்
    ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
    அன்பே அன்பே நீயே

    சட்டென்று ‘அட ஆமாம்’ என்று கவிஞன் கருத்தோடு ஒத்துபோக வைக்கும் வரிகள். எந்த வயதிலும் எல்லாருக்கும் பிடித்தமான ஜன்னலோரத்தையும் அமைதியான பின்னிரவில் கேட்கும் பாடலையும் நீதான் என்று காதலியிடம் சொல்லும் விதம் அருமை. விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம் என்பதை நினைத்தாலே இனிக்கும். (நான் ஒரு கோடை விடுமுறையில் ஸ்கூல் கிரௌண்டில் கிரிக்கெட் விளையாடி, கலைந்த தலை சீவி நடந்த கதை சொல்லவா?)

    தொடர்ந்து பயணத்தில் வருகிற சிறு தூக்கம், பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம், பரீட்சைக்கு படிக்கிற அதிகாலை எல்லாமே நீதானே அன்பே என்று விவரிப்பதில் ஒரு நயம்.

    அடைமழை நேரத்தில் பருகும் தேனீர்
    அன்பே அன்பே நீதானே
    தினமும் காலையில் எனது வாசலில்
    இருக்கும் நாளிதழ் நீ….தானே

    என்பது ultimate. நாளிதழ் reference அருமை.

    பேருந்தில் என்று ஆரம்பிக்கும் இந்த பாடல் கேட்பவர்க்கு கட்டாயம் ஒரு நினைவு பயண அனுபவம் தரும்.

    எனக்கு என் வாழ்வில் கிடைக்கும் எல்லா மகிழ்ச்சியான தருணங்களும் உன்னை நினைவுபடுத்துகிறதே என்று காதலன் காதலி பேசிக்கொள்ளும் இந்த கவிதை காதலின் கீதமா கீதையா?

    மோகனகிருஷ்ணன்

    051 / 365

     
    • Venkat 5:48 pm on January 21, 2013 Permalink | Reply

      ஆம் . நீ இதுதான் நீ அதுதான் என்று சொல்வது அழகுதான்.
      நாமே முடிவு செய்யாமல் நீ உப்பா சக்கரையா என்று கேட்டு தெரிந்து கொள்வது இன்னொரு விதமான அழகில்லையா ?

    • amas32 9:37 pm on January 21, 2013 Permalink | Reply

      You are such a connoisseur of poetry! நீங்கள் இங்கே குறிப்பிட்டிருக்கும் இரண்டு பாடல்களுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுவும் கீதையில் கண்ணன் சொன்னது போல இருப்பதை உதாரனமாக்கியது அருமை.

      amas32

    • GiRa ஜிரா 11:13 am on January 23, 2013 Permalink | Reply

      அழகு! இதுக்கு மேல இந்தப் பதிவைப் பத்தி எதுவும் சொல்லக்கூடாது. 🙂

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel