Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • என். சொக்கன் 9:23 pm on November 10, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு: இரட்டைப் பிறவிகள் 

    தாமரை இலை-நீர் நீதானா?
    தனியொரு அன்றில் நீதானா?|
    புயல் தரும் தென்றல் நீதானா?
    புதையல் நீதானா?
     
    பாடல்: கருகரு விழிகளால்
    படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
    இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
    பாடலாசிரியர்: தாமரை
    பாடியவர்: கார்த்திக்
     
    தலைவன் தலைவியை மையப்படுத்தி எண்ணற்ற சங்ககாலப் பாடல்கள் வந்திருக்கும். சில திரைப்பாடல்களிலும் உவமையாக அவ்வப்போது தலை காட்டுவது வழக்கம். தாமரை இலை-நீர் என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த உவமை. (ஒட்டியும்-ஒட்டாமலும்)

    தனியொரு அன்றில் என்றால்?

    இதற்கும் சங்கப் பாடல்களில் குறிப்புகள் உள்ளன. அன்றில் என்பது ஓருடல்-இருதலையாக வாழும் பறவை என்று பஞ்சதந்திரக்கதைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சங்ககாலப் பாடல்களில், இணைபிரியாதிருக்கக் கூடிய பறவைகள் என்கிற அர்த்தத்தில் (இரண்டில் ஒன்று இறந்தால், மற்றொன்று(ம்) இறக்கும். அல்லது சோகத்தோடு வாழும் ) பாடல்கள் உள்ளன.

    அன்றில் போல் ‘புன்கண் வாழ்க்கை’ வாழேன்  (நற்றிணை-124 | மோசிகண்ணத்தனார்)

    கவிஞர் வைரமுத்து கூட, ஒரு பாடலில் (கண்ணோடு காண்பதெல்லாம்/ஜீன்ஸ்/ ஏ.ஆர்.ரஹ்மான்)
    “அன்றில் பறவை ரெட்டைப்பிறவி
    ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
    பிரியாதே..விட்டுப்பிரியாதே”
    என்று எழுதியிருக்கிறார்.
    சாத்தியமோ, இல்லையோ ஆனால் (இணை) பிரியாத வரம் வேண்டும்தானே?
    தமிழ்

    நான் தமிழ். @iamthamizh என்கிற பெயரில் ட்விட்டரில் எழுதுகிறேன்.

    பயணப்படுதலும் அதன் சுவாரசியங்களும் மிகப் பிடிக்கும். பயணப்படுதலின் பொருட்டு பாடல்கள் கேட்கத் துவங்கிய இப்போது அவை குறித்து எழுதியும் வருகிறேன்.

    பார்க்க:

    thamizhg.wordpress.com

    isaipaa.wordpress.com

     
    • rajinirams 10:14 am on November 11, 2013 Permalink | Reply

      சங்கப்பாடல்,திரைப்பாடல் கொண்டு “அன்றில் பறவை”யின் சிறப்பை விளக்கிய அருமையான பதிவு-வாழ்த்துக்கள் “தமிழ்”.

    • amas32 7:18 pm on November 11, 2013 Permalink | Reply

      “அன்றில் பறவை” பாட்டில் கேட்டிருந்தும் கவனித்து அர்த்தம் யோசித்ததில்லை. நல்ல ர்டுத்துக்காட்டுக்களுடன் விளக்கி உள்ளீர்கள் 🙂

      சங்க இலக்கியங்களில் தான் எவ்வளவு இருக்கின்றன! படித்துப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.

      நன்றி

      amas32

  • G.Ra ஜிரா 9:47 pm on October 27, 2013 Permalink | Reply  

    உரசிவிட்டேன் சந்தனத்தை! 

    மேகத்த தூது விட்டா
    தெச மாறிப் போகுமோன்னு
    தண்ணிய நான் தூது விட்டேன்
    தண்ணிக்கு இந்தக் கன்னி
    சொல்லி விட்ட சேதியெல்லாம்
    எப்ப வந்து தரப்போற
    எப்ப வந்து தரப்போற

    இசையரசி பி.சுசீலாவின் குரல் தேனாறாய் ஓடிக் கொண்டிருந்தது. எல்லாருக்கும் தெரிந்த பாட்டுதான். அச்சமில்லை அச்சமில்லை திரைப்படத்தில் வி.எஸ்.நரசிம்மன் இசையில் வைரமுத்துவின் வைரவரிகள்.

    மேகம் வானத்தில் மிதந்து போகும். காற்றடித்து திசை மாறிப் போய் விட்டால் அத்தானுக்கு அனுப்பிய சேதியும் திசை மாறிப் போய்விடுமல்லவா! அதுதான் அவளது கவலை. அதனால்தான் மேகத்துக்கு பதிலாக பழகிய வழியில் ஓடிக் கொண்டிருக்கும் ஆற்று நீரை தூதாக அனுப்பினாள் அந்தப் பெண்.

    ஆனால் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகும் ஒரு யட்சனுக்கு அந்தக் கவலை எல்லாம் இல்லை. மோகங்களைத் தூதனுப்ப அவன் நம்பியது தாகங்கள் கொண்டு நீர் குடித்த மேகங்களைத்தான்.

    யார் இந்த யட்சன்?

    செல்வத்துக்கெல்லாம் அதிபதி குபேரன். அந்தக் குபேரன் இருப்பது இமயமலையில் உள்ள அளகாபுரி. அந்த அளகாபுரியில் ஒரு ஏரி. அதற்கு மானச ஏரி (மானசரோவர்) என்று பெயர். செல்வத் திருநாட்டின் ஏரி என்பதாலோ என்னவோ… அந்த ஏரியில் பூக்கும் தாமரை மலர்கள் கூட தங்கத் தாமரைகளா இருக்கின்றன. பறவைகளும் பொற்பறவைகளே!

    அந்த ஏரியைக் காவல் காக்க வேண்டிய பொறுப்பில் இருந்தவன் தான் நாம் பார்க்கும் யட்சன். அன்றொரு நாள் அவன் காவல் காத்துக்கொண்டுதான் இருந்தான். இரவு வந்தது. மனதில் உறவின் நினைவு வந்தது. முதலில் உடம்பை விட்டுவிட்டு மனம் மட்டும் மனைவியிடம் சென்றது. பின்னர் மனம் போன வழியிலேயே உடம்பும் போனது.

    அவன் போன நேரம் பார்த்து அந்தப் பக்கம் வந்தன சில யானைகள். ஏரிக்குள் இறங்கி விளையாடின. அந்த விளையாட்டில் தங்கத் தாமரைகள் சிதைந்து போயின. பொற்பறவைகள் பறந்து போயின. அத்தோடு ஏரி சிதைந்த சேதியும் குபேரனுக்குப் பறந்தது.

    அந்த யட்சனை அழைத்தான்.

    “கடமை தவறிய யட்சனே! உன்னால் அல்லவோ ஏரி கலங்கியது. தாமரைகள் அழிந்தன. எதை நினைத்து நீ கடமையை மறந்தாயோ அதைப் பிரிந்து ஓராண்டுகாலம் ராமகிரி காட்டுக்குள் வசிப்பாயாக. இதுவே உனக்குத் தண்டனை”

    அந்த சாபத்தினால் காட்டுக்கு வந்தவனே நாம் முன்னம் சொன்ன யட்சன். அது ஆடி மாதம் வேறு.

    காட்டுக்கு வந்தாலும் வீட்டு நினைப்புதான் அவனுக்கு. மெல்லியலாள் இன்சொல்லாள் தேனிதழாள் நினைப்பு அவனை வாட்டி வதைத்தது. அந்த வேதனையில் அவன் உள்ளத்தில் பிறந்த ஏக்கங்களையெல்லாம் மனைவிக்குச் சொல்ல விரும்பினான்.

    யாரிடம் சொல்லி அனுப்புவது. அந்தரங்கமான ஏக்கங்கள் அல்லவா? ஜிமெயிலோ மொபைல் போனோ இல்லாத காலம் அது. மனிதர்களிடம் சொல்லியனுப்ப முடியாது. அப்போது அவன் கண்ணில் பட்டவைதான் மேகங்கள்.

    அவன் இருந்த அதே மனநிலையில்தான் அவன் மனைவியும் இருந்தாள். அந்தப் பெண்ணின் மனநிலையை நினைக்கும் போது எனக்கு கவிஞர் தாமரை எழுதிய பாடல் நினைவுக்கு வருகிறது.

    தூது வருமா தூது வருமா
    காற்றில் வருமா கரைந்து விடுமா
    கனவில் வருமா கலைந்து விடுமா
    …………….
    கருப்பிலே உடைகள் அணிந்தேன்
    இருட்டிலே காத்துக்கிடந்தேன்
    யட்சன் போலே நீயும் வந்தாய்
    ………………
    மறுபடி வருவாய் என்று துடித்தேன்
    நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன்
    பிரிய மனமில்லை
    இன்னும் ஒரு முறை வா…..

    தன்னுடைய மனைவியின் ஏக்கங்களைப் புரிந்த கணவனால்தான் தன்னுடைய ஏக்கங்களை வெளிக்காட்ட முடியும். நாம் பார்த்துக் கொண்டிருக்கும் யட்சனும் அந்த வகைதான். காட்டில் இருந்த போது அந்த வழியாக வந்த மேகங்களை அழைத்து தன் ஏக்கங்களை தூது விடுகிறான். ஒருவேளை அந்த மேகங்கள் வழி மாறிப் போய்விட்டால்?

    அதற்காகத்தான் அவன் போகும் வழியையும்… போவது சரியான வழிதானா என்பதை உறுதி செய்யும் அடையாளங்களையும் சொல்லியே மேகங்களை தூதனுப்புகிறான்.

    இதுதான் காளிதாசர் எழுதிய மேகதூதத்தின் கதை.

    ஒவ்வொரு பாடலும் அதன் பொருளும் மிக அழகானவை. ஒரு சிறு பகுதியை உங்களுக்காக ஆங்கில மொழிபெயர்ப்பின் உதவியோடு தமிழாக்கம் செய்து தருகிறேன்.

    “மேகங்களே, கடம்ப மலர்கள் பூத்த நிச்ச மலையில் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு வடக்கே செல்க. அங்கே நாகநதி வரும். ஓட்டத்தில் அது வேகநதி. அங்கிருக்கும் வெயிலுக்கு அது தாகநதி.

    அந்த நதிக்கரையிலே, அல்லி மலர்களைக் கிள்ளி மெல்லிய செவித்துளையில் தள்ளி கம்மலாக அணிந்து கொண்டு துளித்துளியாய் வியர்வை வழிய துள்ளித் துள்ளி ஓடுகிறாள் பூ விற்கும் இளம்பெண். நீ போகும் வழியில் அவளுக்கும் சற்று நிழல் தந்து களைப்பை நீக்குவாயாக!”

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர்கள் – இசையரசி பி.சுசீலா, மலேசியா வாசுதேவன்
    இசை – வி.எஸ்.நரசிம்மன்
    படம் – அச்சமில்லை அச்சமில்லை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=w_obVXcywTo

    பாடல் – தூது வருமா தூது வருமா
    வரிகள் – கவிஞர் தாமரை
    பாடியவர் – சுனிதா சாரதி
    இசை – ஹாரிஸ் ஜெயராஜ்
    படம் – காக்க காக்க
    பாடலின் சுட்டி – http://youtu.be/BFv9wo4s4jw

    அன்புடன்,
    ஜிரா

    329/365

     
    • Uma Chelvan 10:28 pm on October 27, 2013 Permalink | Reply

      நீரும் மாறும் நிலமும் மாறும்
      அறிவோம் கண்ணா !!!!
      மாறும் உலகில் மாறா இளமை
      அடைவோம் கண்ணா !!!!

      மேகத்தையும் நீரையும் போல எண்ணங்களையும் தூது விடலாம். In fact, thoughts travel faster then clouds and water !!!!!

      ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே ……ஓடோடி சென்று காதல் பெண்ணின் உறவை சொல்லுங்களே !

    • rajinirams 4:41 pm on October 28, 2013 Permalink | Reply

      யட்சனின் கதையை விளக்கி காளிதாசனின் மேகதூதத்தோடு கூடிய அருமையான “தூது”பதிவு. கிழக்கே போகும் ரயிலின் தூது போ ரயிலே பாடலும் உயிருள்ள வரை உஷாவின் வைகை கரை காற்றே நில்லு வஞ்சிதனை பார்த்தால் சொல்லு மன்னன் மனம் வாடுதென்று மங்கை தனை தேடுதென்று காற்றே பூங்காற்றே அவள் காதோரம் போய் சொல்லு வரிகளும் தூது சொல்ல ஒரு தோழி பாடலும் நினைவிற்கு வருகின்றன.நன்றி.

    • Saba-Thambi 12:56 pm on October 29, 2013 Permalink | Reply

      உங்கள் பதிவு வைரமுத் து எழுதிய ஓர் பாடலையும் நினைவுக்கு தருகிறது.
      இங்கு முகவரியை தொலைத்து விட்ட மேகமாக……

      முகிலினங்கள் அலைகிறதே
      முகவரிகள் தொலைந்தனவோ
      முகவரிகள் தவறியதால்
      அழுதிடுமோ அது மழையோ

      @2.5 நிமிடம்

      சுட்டி:

  • G.Ra ஜிரா 4:50 pm on September 23, 2013 Permalink | Reply  

    இன்னொரு நேசம் 

    அவனுக்கும் முன்பு திருமணம் ஆகியிருந்தது. அவளுக்கும் திருமணம் ஆகியிருந்தது. மனைவியைப் பறிகொடுத்தவன் அவன். கணவனால் துன்புறுத்தப்பட்டவள் அவள். கையிலோ சிறு குழந்தை.

    ஏதோவொரு நெருக்கம். ஏதோவொரு ஏக்கம். சாப்பிட்டவர்களுக்கு திரும்பத் திரும்பப் பசிக்கும் என்பது உலகவிதியல்லவா! சாப்பிடாமல் இருப்பதும் தவறல்லவா!

    தலைவாழையிலையிருக்கிறது. இலையில் பலவகை உணவுகள் இருக்கின்றன. சாப்பிடும் ஆசையும் இருக்கிறது. நன்றாகச் சாப்பிடும் உடல்வாகும் இருக்கிறது. ஆனாலும் சாப்பாடு அப்படியே இருக்கிறது.

    கண்களில் பசி இருந்தாலும் கைகளில் ஏதோவொரு தயக்கம். ஆனால் இருவரும் பழகப் பழக அந்தத் தயக்கம் உடைகிறது. காதல் புரிகிறது.

    நான் சொல்லிக் கொண்டிருப்பது வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் உண்டாகும் பாடல் காட்சி.

    பொதுவாக தமிழ்ச் சமூகத்தில் ஆணுக்கு இரண்டாம் காதல் என்பது இரவு முடிந்து பகல் வருவது போல இயல்பானது. ஆனால் பெண்ணுக்கு? வந்துவிட்டதே. அதுவும் எப்படி?

    உயிரிலே எனது உயிரிலே
    ஒரு துளி தீயை உதறினாய்

    தீயை உதறினால் என்னாவகும்? பக்கென்று பற்றிக் கொள்ளும். அப்படித்தான் பற்றி எரிகிறது அவளது உயிர். தீயென்றால் அணைக்கத்தான் வேண்டும். அணைப்பதற்கு அவன் வரவேண்டுமே!

    அவன் வந்தான். ஆனால் அவள் உணர்வினில் வந்தான். ஒவ்வொரு அணுவிலும் கலந்தான். உணர்வில் மட்டும் கலந்தால் போதுமா?

    உணர்விலே எனது உணர்விலே
    அணுவென உடைந்து சிதறினாய்

    பக்கத்தில்தான் அவன் இருக்கிறான். ஆனால் தொடமுடியவில்லை. கடலுக்கும் வானத்துக்கும் இடையே எவ்வளவோ தூரம். ஆனாலும் ஒன்றையொன்று தொட்டுக்கொள்கின்றன. முட்டிக் கொள்கின்றன.

    அருகினில் உள்ள தூரமே
    அலைக்கடல் தீண்டும் வானமே

    சுவாசிப்பதற்கு கூட காற்று வேண்டும். ஆனால் நேசிக்கத்தான் இதயத்தைத் தவிர எதுவுமே தேவையில்லை. அந்த நேசம் கூட ஒருமுறை மட்டும் தான் வரவேண்டுமா? மறுமுறை வரக்கூடாதா? காதல் போயின் சாதல் மட்டும் தானா? ஒருமுறைதான் காதல் வரும் என்பதுதான் தமிழ்ப் பண்பாடா? இல்லையென்றால் கண்ணதாசன் சொன்னது போல் மறுபடியும் வருமா?

    நேசிக்க நெஞ்சம் ரெண்டு போதாதா!
    நேசமும் ரெண்டு முறை வாராதா!

    காதல் வந்தாலும் கூடவே பண்பாட்டுக் கவலைகளும் ஒட்டிக் கொண்டு வந்துவிடும். அதுவும் குறிப்பாக பெண்களுக்கு. அவளுக்கும் அந்தக் கவலை உண்டு.

    ஏதோ ஒன்று என்னைத் தடுக்குதே
    பெண்ணாடீ நீ என்று முறைக்குதே
    என்னுள்ளே காயங்கள் ஆறாமல் தீராமல் நின்றேனே!

    தாமரை எழுதிய இந்தப் பாடலை படிக்கும் போது எனக்கு இன்னொரு திரைப்பாடல் நினைவுக்கு வருகிறது. மழலைப்பட்டாளங்கள் படத்தில் வரும் “கௌரி மனோகரியைக் கண்டேன்” என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடல்.

    அதிலும் கிட்டத்தட்ட இதே காட்சிதான். ஆறுகுழந்தைகளுக்குத் தாயான விதவைக்கும் ஆறு குழந்தைகளுக்கு தந்தையான மனைவியை இழந்தவனுக்கும் இடையே காதல் வருகிறது. அந்த நாயகியும் வேட்டையாடு விளையாடு நாயகியைப் போலத்தான் புலம்புகிறாள்.

    பருவங்கள் சென்றாலும் ராதை
    அவள் கவிராஜ சங்கீத மேதை
    கண் முன்பு அழகான ஆண்மை
    நான் கல்லல்ல கனிவான பெண்மை
    பண்பாடு என்பார்கள் சிலரே
    இந்தப் பெண் பாடு அறிவார்கள் எவரே
    என் பாடு நான் தானே அறிவேன்
    உயர் அன்போடு மனம் போல இணைந்தேன்

    இப்படியாக ஏக்கப் பெருமூச்சு நாயகிகளைக் காதலிக்காத விடாத பண்பாட்டையும் சமூகத்தையும் என்ன சொல்வது! காதலிக்க வேண்டியவர்களை காதலிக்க விடாததாலோ என்னவோ குழந்தைக் காதலும் பொறுப்பற்ற விடலைக் காதலுமே காதல் என்று ஆகிவிட்டது.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – உயிரிலே என் உயிரிலே
    வரிகள் – தாமரை
    பாடியவர் – ஸ்ரீநிவாஸ், மகாலஷ்மி ஐயர்
    இசை – ஹாரிஸ் ஜெயராஜ்
    படம் – வேட்டையாடு விளையாடு
    பாடலின் சுட்டி – http://youtu.be/vNy2IQ7RD-M

    பாடல் – கௌரி மனோகரியைக் கண்டேன்
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – வாணி ஜெயராம், எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – மழலைப் பட்டாளம்
    பாடலின் சுட்டி – http://youtu.be/rn7wDu5IOe0

    அன்புடன்,
    ஜிரா

    296/365

     
    • amas32 9:26 pm on September 24, 2013 Permalink | Reply

      தாமரையின் பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு பெண்ணினால் பெண்ணின் உணர்வை அழகாகச் சொல்ல முடியும். மேலும் பெண் கவிஞர்களே அரிது.

      ஆனால் கண்ணதாசனும் ஒரு பெண் கவிஞருக்கு ஈடாகவோ அதற்கும் மேலோ நீங்கள் குறிப்பிட்டுள்ளப் பாடலில் உணர்வுகளை விவரித்து இருக்கிறார்!

      //பண்பாடு என்பார்கள் சிலரே
      இந்தப் பெண் பாடு அறிவார்கள் எவரே
      என் பாடு நான் தானே அறிவேன்
      உயர் அன்போடு மனம் போல இணைந்தேன்//

      அற்புதமான வரிகள். கவியரசர் கவியரசர் தான்!

      amas32

    • Uma Chelvan 3:32 am on September 25, 2013 Permalink | Reply

      Nice and decent write up on a complicated subject. Kudos.

    • rajinirams 10:37 am on September 25, 2013 Permalink | Reply

      நீங்கள் எடுத்துக்கொண்ட பதிவும் அதற்கேற்ற பாடல்களும் வித்தியாசம் மட்டுமல்ல,சென்சிடிவான விஷயமும் கூட.மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.கவியரசரின் வரிகள் அற்புதம்,வைதேகி காத்திருந்தாள் படத்தின் வாலியின் வரிகளும் அருமையாக இருக்கும்-“தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று சங்கீதம் காணாமல் தவிக்கின்றது” என்று நாட்டிய பெண் அவர் மொழியில் பாடுவது போலவே எழுதியிருப்பார்.

  • G.Ra ஜிரா 7:51 pm on September 14, 2013 Permalink | Reply  

    இல்லமும் உள்ளமும் 

    1990களின் மத்தியில் வந்த ஒரு இந்திப் பாடல் திடீரென நினைவுக்கு வந்தது. எனக்கு மிகவும் பிடித்த பாடலும் கூட.

    Ghar se nikalte hi
    kuch door chalte hi
    Raste main hai uska ghar

    இந்த வரிகளின் பொருள் என்ன?

    வீட்டில் இருந்து புறப்பட்டு
    சற்று தொலைவு போனால்
    வழியில் அவள் வீடு உள்ளது

    மெட்டுக்குள் அழகாக உட்கார்ந்து கொண்ட இந்தி வரிகளை என்ன நினைத்து கவிஞர் எழுதினார் என்று யோசித்துப் பார்க்கிறேன். அவர் என்ன நினைத்தாரோ தெரியாது. ஆனால் எனக்கு இப்படித் தோன்றுகிறது.

    All roads lead to Rome என்று ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. எந்தச் சாலையில் போனாலும் அது ரோம் நகரத்துக்குச் செல்லும் என்பது அதன் பொருள். அதாவது ரோம் நகரம் அந்த அளவுக்குப் புகழ் வாய்ந்ததாம்.

    உலகத்துக்கு ரோம் நகரம் என்றால் அவனுக்கு அவள் வீடு. அவன் எந்தத் தெருவில் போனாலும் கால்களும் மனமும் அவனைக் கொண்டு சேர்க்கும் இடம் அவளுடைய வீடு. All roads lead to lover’s house.

    வீடு வரை உறவு என்று கண்ணதாசன் சொன்னதை உறவு இருக்கும் இடம் தான் வீடு என்று மாற்றிக் கொள்ளலாம்.

    ஜெண்டில் மேன் திரைப்படத்தில் செஞ்சுருட்டி ராகத்தில் “நாதவிந்து கலாதீநமோ நம” என்ற திருப்புகழின் சாயலில் அமைந்த பாடல் “என் வீட்டுத் தோட்டத்தில்” என்ற பாடல்.

    காதலி அவளுடைய காதலை அவளுடைய வீட்டுக்குச் சொல்லியிருக்கிறாள். வீடு என்றால்? தோட்டத்துப் பூக்கள், ஜன்னல் கம்பிகள், தென்னை மரங்கள், அந்த மரங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகிறாள்.

    என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்
    என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப் பார்
    என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப் பார்
    உன் பேரைச் சொல்லுமே!

    வீட்டில் உள்ளவர்களால் காதலுக்கு உதவி இருக்கிறதோ இல்லையோ. வீட்டால் உதவி இருக்கிறது. அவன் பெயரை அவள் அத்தனை முறை வீட்டிடமும் வீட்டில் இருக்கின்ற பொருட்களிடமும் சொல்லியிருக்கிறாள்.

    இதை வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் “நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை” பாடலில் இன்னும் அழகாகச் சொன்னார் கவிஞர் தாமரை.

    காதலன் தன்னுடைய காதலை காதலியிடம் சொல்கிறது போல காட்சியமைப்பு.

    நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
    நீருக்குள் மூழ்கிடும் தாமரை
    சட்டென்று மாறுது வானிலை
    பெண்ணே உன் மேல் பிழை

    ரசனை மிகுந்த வரிகள். தாமரை நீருக்குள் மூழ்குவதே இல்லை. வெள்ளத்து அணையது அதன் மலர் நீட்டம். ஆனால் காதல் வெள்ளம் பெருக்கெடுக்கும் போது தாமரையாவது தாவும் மரையாவது?

    அப்படிப் பட்ட காதலைச் சொல்லும் போது தன்னுடைய வீட்டைப் பற்றி அழகாகச் சொல்கிறான் அவன்.

    என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்

    அட! அசத்தி விட்டானே! ஆம். ஒருவருடைய வீட்டுக்குப் போனாலே அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். வீட்டை வைத்திருக்கும் பாங்கு மட்டுமல்ல… வீட்டில் இருப்பவர்களின் பாங்கினாலும்.

    இந்த ஒருவரியையே ஒரு நாள் ஒரு கனவு திரைப்படத்துக்காக ஒரு முழுப் பாடலாக்கித் தந்தார் வாலி. காதலன் காதலியை அவனுடைய வீட்டுக்கு கூட்டிச் செல்கிறான். அது வீடே அல்லது என்பது போல இருக்கிறது அவளுடைய அனுபவம். வீட்டில் மனிதர்கள் வாழ்கிறார்களா அல்லது தெய்வங்கள் குடியிருக்கின்றனவா என்று அவள் ஆனந்தமாக ஆச்சரியப்படுகிறாள்.

    ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன்
    அதுக்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்
    ஸ்ருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
    உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்

    திறந்த கதவு என்றும் மூடாது
    இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
    இது போல் இல்லம் ஏது சொல் தோழி

    வீடு என்ற சொல்லுக்கு என்ன பொருள் தெரியுமா? மிகமிகப் பழக்கமான சொல்தான். ஆனால் பொருள் பலருக்கும் தெரியாது. விடுவதனால் அது வீடு எனப்பட்டது. எதை விடுவதனால்? நமது துன்பங்களை விடுவதால் வீடு. நாம் துன்பங்களைப் படுவதால் அதற்குப் பெயர் பாடு. அது போல நாம் துன்பங்களை விடுவதால் அதற்குப் பெயர் வீடு.

    வாலி எழுதிய பாடலைப் போல ஒரு வீடு இருந்தால் துணிந்து காதலிக்கலாம். காதற்துணையையும் வீட்டுக்கு கூட்டிச் செல்லலாம்.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – என் வீட்டுத் தோட்டத்தில்
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுஜாதா
    இசை – ஏ.ஆர்.ரகுமான்
    படம் – ஜெண்டில்மேன்
    பாடலின் சுட்டி – http://youtu.be/Qg3uqQgizyI

    பாடல் – நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
    வரிகள் – கவிஞர் தாமரை
    பாடியவர் – ஹரிஹரன், தேவன், பிரசன்னா
    இசை – ஹாரிஸ் ஜெயராஜ்
    படம் – வாரணம் ஆயிரம்
    பாடலின் சுட்டி – http://youtu.be/QqI2woQjWK4

    பாடல் – காற்றில் வரும் கீதமே
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம், பவதாரிணி
    இசை – இளையராஜா
    படம் – ஒரு நாள் ஒரு கனவு
    பாடலின் சுட்டி – http://youtu.be/pnteqlhXlS4

    பாடல் – Ghar se nikhalte hi
    பாடியவர் – உதித் நாராயணன்
    பாடலின் சுட்டி – http://youtu.be/arK4ybYfH4k

    அன்புடன்,
    ஜிரா

    287/365

     
    • rajinirams 11:52 pm on September 14, 2013 Permalink | Reply

      இல்லத்தின் பெருமையை விளக்கும் அழகான பதிவு.கவியரசர் கண்ணதாசனின் அற்புத வரிகள்-இல்லம் சங்கீதம் அதில் ராகம் சம்சாரம்.கவிஞர் வாலியும் வீட்டை கோவிலாகவும் தன் பிள்ளைகளை தீபங்களாகவும் எடுத்துரைத்த வரிகள்-வீடு என்னும் கோவிலில் வைத்த வெள்ளி தீபங்களே-நாளை நமதே.ஒருவர் ஒரு வீட்டிற்கு புதிதாக போவதை வைத்தும் பாடல் உள்ளது-புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்-எங்க பாப்பா. இன்னொரு செண்டிமெண்டான பாடல்-வீடு தேடி வந்தது நல்ல வாழ்வு என்பது-பெண்ணின் வாழ்க்கை-வாலி எழுதியது.

    • Uma Chelvan 12:31 am on September 15, 2013 Permalink | Reply

      very nice write up!!!

      “மணி விளக்காய் நான் இருக்க! மாளிகையாய் தான் இருக்க” !!! தன் காதலனை மாளிகையாகவும் அதில் ஒளிரும் மணி விளக்காய் தன்னையும் …என்ன ஒரு அழகான, அருமையான உவமானம்!. வெள்ளி மணியாக ஒலிக்கும் சுசிலாவின் குரலில்!!

    • Uma Chelvan 5:36 pm on September 15, 2013 Permalink | Reply

      I tried to give the video link, instead the video clip it self is popping up due to some reason. I am sorry about that!!

    • amas32 9:24 am on September 17, 2013 Permalink | Reply

      அசத்திட்டீங்க ஜிரா இன்னிக்கு. அனைத்துப் பாடல்களும் அருமையான தேர்வு! வீடு என்று தமிழில் சொல்வது house என்ற பொருளிலும் இல்லம் என்பது home என்றும் கொள்ளலாமா? அன்புள்ள உறுப்பினர்கள் இருக்கும் வீடு அன்பான இல்லம் ஆகிறது. வீடு வெறும் கட்டிடம் தான். ஆனால் வீடு என்பது home என்ற பொருளில் தான் பெரும்பாலும் பயன்படுத்தப் படுகிறது.

      வீடு பேறு பெறுவதற்கு முதலில் நல்ல வீடு அமைந்து இல்லற சுகத்தை அனுபவித்துப் பின் துறக்க ரெடியாகலாம். நிறைய துறவிகள் இளம் வயதிலேயே மனம் பக்குப்படுவதற்கு முன்பே துறவறத்தை நாடி பின் பல வீடுகளை அழிக்க முற்படுகின்றனர். அவர்களுக்கு நிச்சயம் கிடைக்காது வீடு பேறு!

      amas32

  • G.Ra ஜிரா 10:33 am on April 4, 2013 Permalink | Reply  

    எப்பொழுதும் உன் கற்பனைகள் 

    சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்த ஜேம்ஸ் வசந்தன், ஒரு இசையமைப்பாளராக உருமாறிய திரைப்படம் அது. பாடலும் மிக இனிய பாடல். கவிஞர் தாமரை எழுதி பெள்ளி ராஜும் தீபா மரியமும் இனிமையாகப் பாடிய பாடல்.

    பாடலை ரசித்துக் கொண்டிருந்த போது நடுவில் வந்த ஒருவரி என் சிந்தனையைத் தூண்டியது.

    இரவும் அல்லாத பகலும் அல்லாத
    பொழுதுகள் உன்னோடு கழியுமா

    மேலே சொன்ன வரிகள்தான் என்னுடைய சிந்தனையைத் தூண்டியவை. இன்னும் சொல்லப் போனால் இந்த வரிகளுக்குள் தனக்கும் கவிதை இலக்கணம் தெரியும் என்று நிருபித்திருக்கிறார் தாமரை.

    ஆம். காதல் பாடல்களை எழுதுவதற்கும் இலக்கணம் உண்டு. அதற்கு அகத்திணையியல் என்று பெயர். எல்லா தமிழ் இலக்கண நூல்களிலும் பொதுவாக விளக்கப்படும். இருப்பதில் பழையதான தொல்காப்பியத்திலும் அகத்திணையியல் உண்டு. அகத்தியம் என்னும் அழிந்த நூலிலும் அகத்திணையியல் இருந்தாலும் தொல்காப்பியர் தனது தொல்காப்பியத்தில் புதுமைகளைச் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

    சரி. இலக்கணத்துக்கு வருவோம். அகத்திணைப் பாடல்கள் என்று சொல்லிவிட்டாலும், அவைகளை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து திணைகளாகப் பிரிக்கின்றார்கள்.

    இந்தத் திணைகளைக் குறிக்கும் பொருட்கள் பாடலில் இருக்க வேண்டும். கண்டிப்பாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக முருகக் கடவுளைப் பற்றி வந்தால் அந்தப் பாடல் குறிஞ்சித்திணையைச் சேர்ந்தது. வயல்வெளிகளையும் அங்குள்ள விளைபொருட்களையும் சொன்னால் அந்தப் பாடல் மருதத்திணையைச் சேரும்.

    இப்படியாகத் திணைகளைக் குறிக்கும் பொருட்களையும் மூன்று வகைகளாகப் பிரித்தார்கள். அவை முதற்பொருள், உரிப்பொருள் மற்றும் கருப்பொருள் எனப்படும்.

    இந்த முதற்பொருளில் வரும் ஒரு பொருள்தான் பொழுது. பொதுவில் முதற்பொருள் என்பது நிலத்தையும் பொழுதையும் குறிக்கும்.

    முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
    இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே

    ஒரு பாடலின் முதற்பொருளாவது அந்தப் பாடல் சொல்லும் நிகழ்ச்சிகள் நடக்கும் நிலம் மற்றும் நடக்கின்ற பொழுது.

    குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த நிலமும்
    முல்லை – காடும் காடு சார்ந்த நிலமும்
    மருதம் – வயலும் வயல் சார்ந்த நிலமும்
    நெய்தல் – கடலும் கடல் சார்ந்த நிலமும்
    பாலை – மணலும் மணல் சார்ந்த நிலமும் அல்லது தம் இயல்பில் திரிந்த ஏனைய நிலங்கள்

    இந்த ஐவகை நிலங்களுக்குப் பொழுதுகள் உண்டு. அவைகளும் இரண்டு வகைப்படும். அவை பெரும்பொழுது என்றும் சிறு பொழுது என்றும் வகைப்படும்.

    ஒவ்வொரு நிலத்துக்குரிய பொழுதுகளைப் பார்க்கும் முன்னர் பெரும்பொழுதுக்கும் சிறுபொழுதுக்கும் விளக்கத்தைப் பார்க்கலாம்.

    ஒரு ஆண்டைப் பிரித்தால் வருகின்றவை பெரும்பொழுதுகள். ஒரு நாளைப் பிரித்தால் வருகின்றவை சிறுபொழுதுகள்.

    பெரும் பொழுதுகள் – கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், வேனில்
    சிறு பொழுதுகள் – மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல், பிற்பகல்

    ஆறு பெரும் பொழுதுகளையும் ஆறு சிறுபொழுதுகளையும் புரிந்து கொண்டோம். இனி எந்தெந்தத் திணைக்கு எந்தெந்தப் பொழுதுகள் என்று பார்க்கலாம்.

    முல்லைத் திணை – கார்காலமும் மாலைப் பொழுதும்
    குறிஞ்சித் திணை – கூதிர் காலமும் யாமப் பொழுதும்
    மருதத் திணை – வைகறையும் எல்லாப் பருவ காலங்களும்
    நெய்தல் திணை – பிற்பகலும் எல்லாப் பருவ காலங்களும்
    பாலைத் திணை – நண்பகலும் வேனிற் காலமும்

    கங்கை அமரன் எழுதிய ”அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்” என்றொரு பாடல் உண்டு. அந்தப் பாடலில் அந்தி வந்திருக்கிறது. அந்தி சாய்வது மாலை நேரம். அப்படியானால் இந்தப் பாடல் வரி முல்லைத்திணை என்று சொல்லலாம்.

    வைரமுத்துவின் ஒரு பாடலைச் சொல்கிறேன். முயற்சி செய்து பாருங்கள்.
    பகலும் இரவும் உரசிக் கொள்ளும்
    அந்திப் பொழுதில் வந்துவிடு
    அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
    உயிரைத் திருப்பித் தந்து விடு

    என்ன, கண்டுபிடித்து விட்டீர்களா? கண்டுபிடிக்க முடியவில்லையா? இந்தப் பாடலில் அந்திப் பொழுது வருவதால் முல்லைத்திணையிலும் சேர்க்கலாம். அலைகளும் கடற்கரையும் பாடலில் வருகின்றன. அதனால் நெய்தற் திணையிலும் சேர்க்கலாம். ஆனால் இலக்கணப்படி ஒரு பாடல் ஒரு திணையில்தான் இருக்க வேண்டும். ஆனால் திணை மயக்கமாக ஒன்றிரண்டு பொருட்கள் கலந்து வரலாம். ஆனாலும் பெரும்பாலான பொருட்களின் படிதான் திணையை முடிவு செய்ய வேண்டும்.

    சரி. தொடங்கிய இடத்துக்கு வருவோம். இரவும் அல்லாத பகலும் அல்லாத வரிகளை வைத்து கண்கள் இரண்டால் பாடல் எந்தத் திணை என்று சொல்லுங்களேன் பார்க்கலாம்!

    கண்கள் இரண்டால் பாடலின் சுட்டி – http://youtu.be/XgA6NgC-vN0

    அன்புடன்,
    ஜிரா

    124/365

     
    • Saba 11:06 am on April 4, 2013 Permalink | Reply

      Hi Gira
      Hope you wont mind me typing in English. To write in Tamil I have to use my whole lunch hour without my meal. 😦
      I have learnt ஐவகை நிலங்கள் at school, but never learnt to apply it properly. I was confused when you have mentioned ” thinai” on most of your previous posts and I have referred a dictionary too, but was unsuccessful. Today after reading your post it had dawn to me. Thanks for the விளக்கம்.

      அய்யாம் பிலானிங் டு டேக் எ பிரிண்டு 🙂

      சபா

      • GiRa ஜிரா 1:10 pm on April 6, 2013 Permalink | Reply

        உங்களுக்கு எதுல எழுதுறதுக்கு வசதியோ அதுல எழுதுங்க. 🙂

        உங்களுக்கு இந்த பதிவு உதவியா இருந்ததுன்னு தெரிஞ்சு மிக்க மகிழ்ச்சி.

    • amas32 10:00 pm on April 4, 2013 Permalink | Reply

      /இரவும் அல்லாத பகலும் அல்லாத/ முல்லைத் திணை, மருதத் திணை இரண்டும் வருகிறதே!
      அந்தி மாலை, வைகறை இரண்டுமே இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் தாமே 🙂

      amas32

      • GiRa ஜிரா 1:11 pm on April 6, 2013 Permalink | Reply

        சரியாச் சொன்னிங்க. இரண்டில் எதையும் சொல்லலாம். ஆனா பாட்டுல எந்தத் திணைக்குரிய பொருட்கள் நிறைய இருக்கோ அதை வெச்சு முடிவுக்கு வரனும் 🙂

  • G.Ra ஜிரா 11:04 am on March 19, 2013 Permalink | Reply
    Tags: நேதாஜி   

    மன்னிப்பு எனும் மாண்பு 

    காதலர்களுக்குள் காதல் இருக்கும். அந்தக் காதலுக்குள் என்னவெல்லாம் இருக்கும்?

    கூடல், பாடல், நாடல், ஊடல் எல்லாமிருக்கும்.

    இந்த ஊடல் வந்துவிட்டால் போதும்… எப்படியாவது மன்னிப்பு கேட்டுக்கொள்ள மனம் தவிக்கும். மன்னிப்பு கிடைக்கும் வரை ஊடல் தீர்வதில்லை. மன்னிப்பு கிடைத்த பின் கூடல் விடுவதில்லை. இந்த மன்னிப்பெல்லாம் உள்ளங்கள் ஒத்திணைந்த காதலர்களிடத்தில்தான் வேலைக்காகும்.

    ஆனால் எப்படியெல்லாம் மன்னிப்பு கேட்கலாம்? எதற்கெல்லாம் மன்னிப்பு கேட்கலாம்? காலங்காலமான விதம்விதமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள் திரைப்படக் காதலர்கள்.

    ஒரு நாள் சிரித்தேன்
    மறுநாள் வெறுத்தேன்
    உனைக் கொல்லாமல் கொன்று புதைத்தேன்
    மன்னிப்பாயா மன்னிப்பாயா
    படம் – விண்ணைத் தாண்டி வருவாயா
    பாடல் – தாமரை
    பாடியவர்கள் – ஏ.ஆர்.ரஹ்மான், ஷ்ரேயா கோஷல்
    இசை – ஏ.ஆர்.ரஹ்மான்

    காதலின் கூடலில் சிரிப்பும் ஊடலில் வெறுப்பும் வரும். அதுதான் கூடிய ஒருநாளில் சிரித்தேன் என்றும் ஊடலாடிய மறுநாளில் வெறுத்தேன் என்றும் பாடல் வரிகளாயிற்று.

    எப்போதும் கூட இருக்க முடியாத பிரிவு என்னும் சித்திரவதை மிகுந்து ஒருவரையொருவர் கொல்லும் காதலை இதயத்தில் புதைத்தால் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டியதுதானே.

    இந்த மன்னிப்பெல்லாம் எல்லாக் காதலிலும் உண்டு. எங்கும் இல்லாத புதுமையான மன்னிப்பை ஒரு காதலி கேட்கிறாள். ஆம். இருமலர்கள் படத்திற்காக பி.சுசீலாவின் குரலில் அந்தக் காதலி மன்னிப்பு கேட்கிறாள்.

    மன்னிக்க வேண்டுகிறேன்
    உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்
    என்னைச் சிந்திக்க வேண்டுகிறேன்
    கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
    மன்னிக்க வேண்டுகிறேன்
    படம் – இருமலர்கள்
    பாடல் – வாலி
    பாடியவர்கள் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

    இது ஒரு சீண்டல் மன்னிப்பு. அவளுக்கு அவன் மேல் காதல். அவன் அவளைப் பார்க்க வேண்டும். அவளைப் பற்றியே சிந்திக்க வேண்டும். அவள் கண்களைக் கண்களால் நோக்க வேண்டும். இப்படியெல்லாம் சீண்டிச் சீண்டி காதல் செய்வதால் அவளை அவன் மன்னிக்க வேண்டுமாம். நல்ல கூத்தாக இருக்கிறது அல்லவா.

    இப்படி மன்னிப்பு கேட்டால் காதலன் சும்மாயிருப்பானா? அவன் மன்னிப்பதற்குப் பேரம் பேசுகிறான்.

    தித்திக்கும் இதழ் உனக்கு
    என்னென்றும் அது எனக்கு
    நாம் பிரிவென்னும் ஒருசொல்லை மறந்தாலென்ன

    இப்படிப் பேரம் பேசி மன்னித்தாலும் அது இன்பத்தில்தான் முடியும் என்று அந்தக் காதலர்களுக்குத் தெரியும்.

    இன்னொரு காதலன். அவனுக்கொரு காதலி. அடிக்கடி சண்டை. முதலில் அவன் தவறு செய்தான். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டான். அவள் மன்னிக்கவில்லை. இருவரும் பிரிந்தனர். சில காலம் சென்று அவளுக்கு தவறு புரிந்தது. அவனைச் சேர நினைத்தாள். அவன் எப்படி மன்னிப்பு கேட்டாளோ அதே வரிகளால் இவளும் மன்னிப்பு கேட்டாள். பிறகென்ன. பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ!

    மன்னிக்க மாட்டாயா
    உன் மனமிரங்கி
    நீயொரு மேதை
    நானொரு பேதை
    நீ தரும் சோதனை
    நான் படும் வேதனை போதும்
    மன்னிக்க மாட்டாயா
    படம் – ஜனனி
    பாடல் – நேதாஜி
    பாடியவர்கள் – பி.சுசீலா, கே.ஜே.ஏசுதாஸ் (தனித்தனிப் பாடல்கள்)
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

    நல்ல வேளை. காதலர்களுக்கு மன்னிப்பு என்றொரு சொல் இருக்கிறது. வாழ்க மன்னிப்பு! வளர்க மன்னிப்பு!

    பதிவில் இடம் பெற்ற பாடல்களின் சுட்டிகள்.

    ஒரு நாள் சிரித்தேன் – http://youtu.be/4XXPy_VmCME
    மன்னிக்க வேண்டுகிறேன் – http://youtu.be/BkzwCuG3HP0
    மன்னிக்க மாட்டாயா – http://youtu.be/JYVMapK0ChU
    ஜனனி திரைப்படம் பற்றிய ஒரு பார்வை – http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=4723

    அன்புடன்,
    ஜிரா

    108/365

     
    • Sharmmi Jeganmogan 1:38 pm on March 19, 2013 Permalink | Reply

      சுவாரசியமான பாடல்களும் விலக்கங்களும்.. நன்றி..

    • Arun Rajendran 2:21 pm on March 19, 2013 Permalink | Reply

      ரகுமான் ஒரு பேட்டியின் போது கூட “பெண்கள் அவ்வளவு சுலபமா மன்னிப்பு கேட்க மாட்டாங்க …அதுக்காகவே இந்தப் பாட்ட வெச்சா கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்னு தோனுச்சு”னு சொன்னார்..அதுவும் ஒரு பெண் கவிஞர வெச்சுப் பாட்ட எழுதச் சொன்னது ரொம்ப சிறப்பு…இலக்கிய குறிப்புகள் இந்தத் தடவ தரல ஜிரா சார்? 😦

    • amas32 (@amas32) 6:23 pm on March 19, 2013 Permalink | Reply

      விண்ணைத் தாண்டி வருவாயாவில் தாமரை எழுதிய பாடல் இன்றைய இளைஞர்களின் ஊடலைப் பற்றியது. மன்னிப்பாயா என்று கேட்பதில் கெஞ்சலை விட ஒரு உரிமை அதிகம் உள்ளது. எனக்கு மிகவும் பிடித்தப் பாடல். ரஹ்மான் & ஷ்ரேயா கோஷல் பாடிய விதம், வரிகள் இரண்டுமே பிடிக்கும். இதில் நடுவில் அன்பின் பெருமையைச் சொல்லும் மூன்று குறள்கள் வருவது மனத்திற்கு இதம். It talks about unconditional love, so where is the need to forgive?

      “வரம் கிடைத்தும் நான் தவறவிட்டேன், மன்னிப்பாயா” அருமையான வரி!

      வாலி வரிகளில் “மன்னிக்க வேண்டுகிறேன்” என்று சுசீலா தேன் குரலில் பாடும் பாடலும் அதி அற்புதம்.
      “கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்” எவ்வளவு உண்மையான வரி! கோபத்தில் பாராமுகமே உச்சக் கட்ட வலி. இந்தப் பாடலும் காதலர்களிடம் இருக்கும் அன்னியோனியத்தைக் காட்டும் ஒரு பாடலே. மிகவும் இனிமை.

      எப்பவும் போல மூளைக்கு விருந்து கொடுத்திருக்கும் உங்களுக்கு நன்றி ஜிரா 🙂

      amas32

    • psankar 4:38 pm on March 20, 2013 Permalink | Reply

      மன்னிப்பது நல்ல செய்கை 🙂 #அவ்ளோதான்

  • என். சொக்கன் 2:36 pm on February 27, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு : கேளாமல் 

    பாடல்: கேளாமல் கையிலே …

    படம்: அழகிய தமிழ்மகன்

    பாடலாசிரியர்: தாமரை

    இசை: இரகுமான்

    இயக்கம்: பரதன்

     

    ஆண்டாள், வெள்ளிவீதியார், வெண்ணிக்குயத்தியார் என்று பல்வேறு பெண்பாற் புலவர்களைக் கொண்ட நம் தமிழ் மொழியில்,திரைப்பாடல் என்னும் துறையில் மட்டும் ஏனோ பெண்கள் பங்களிப்பு அதிகம் இருந்ததில்லை. இந்த குறையை நீக்க மலர்ந்தவர்தான் தாமரை. கொங்கு தமிழும், குளிரும் மாற்றி மாற்றி கொஞ்சும் கோவை நகரில் பிறந்து வளர்ந்த்தாலோ என்னவோ இவருடைய வரிகள் சிறுவாணி நீராய் இனிக்கும்.

     

    தமிழகத்தின் வருங்கால முதல்வர் என்பதற்குரிய தகுதி உடையவராக அவரது இரசிகர்களால் கருதப்படும் இளைய தளபதி விசய் அவர்களும், உடுக்கை உடலால் உளத்தை உருக்கும், உத்தராகந்து உதிர்த்த உத்தமி சிரேயா அவர்களும், அழகிய நியூசிலாந்து கிராமங்களில் நடனமாடும்படி படமாக்கப்பட்ட பாடல் இது.

     

    இந்த பாடலின் ஒவ்வொரு அடியுமே குறிப்பிடும்படி அமைந்திருந்தாலும், நீள-நேர காரணங்களால் இரண்டு இடங்களைப் பற்றி மட்டும் இப்பதிவில் பார்ப்போம்.

     

    1)

     

    பார்த்தும் பாராமலே ஓடும் மேகங்களே,

    ஏதோ நடக்கின்றதே குதித்துப் போவதேன் ? நில்லுங்களேன்.

    பார்த்தும் பாராமலே ஓடும் மேகங்களே !

     

    தலைவனும் தலைவியும் ஏதோ செய்துகொண்டிருக்கிறார்கள். மேலே வானத்தில் செல்லும் மேகங்கள் இதனை கண்டும் காணாமலும் ஓடிக் கொண்டிருக்கின்றன.  தமிழ் இலக்கணத்தில், இயல்பாய் நிகழும் ஒரு நிகழ்ச்சியின் மேல் கவிஞர் தன் கற்பனையை ஏற்றிப் பாடுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும். (தமிழ் இலக்கணம் பற்றி மேலும் ஆழமாக அறிய வாங்கிப் படியுங்கள் கொத்தனார் நோட்ஸ், கொத்தனார் நோட்ஸ், கொத்தனார் நோட்ஸ்,  டிடிங்) .

     

    இந்த அழகான வரிகளை மெட்டில் உட்கார வைப்பதற்காக இரகுமான் உச்சரிப்பில் கொஞ்சம் சிதைத்து விட்டார். ஆனால் இயக்குனரோ, பாடலாசிரியரின் கற்பனையை தெளிவாக உள்வாங்கிக் கொண்டு, மிகப் பொருத்தமாக இங்கு ஒரு முத்தக்காட்சியை வைக்கிறார்.  அதாவது காதலன் காதலியை முத்தமிட முயல்கிறான், இதனை கண்டும் காணாமலும் மேகங்கள் ஓடுகின்றன. காதலி வெட்கத்துடன் மேகங்களை ஓடாமல் நிற்கச் சொல்லுகின்றாள். அப்படி நின்றாலாவது காதலன் முத்தமிடுவதை தவிர்க்கலாம் என்று நினைக்கிறாள். ஆனால் மேகங்கள் ஓடி விடுகின்றன. அதனால் காதலியும், “நனைந்த பிறகு நாணம் எதற்கு” என்று, மேகங்களும் நின்று பார்க்கப்போவதில்லை என்று உணர்ந்து, முத்தமிட்டு வைக்கிறாள். கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சி /முத்தம் என்று நடிக்க எந்த தயக்கமும் இல்லை என சிரேயாவும் தாராளமாக வெட்கப்புன்னகையுடன் நடித்து கொடுத்திருக்கிறார்.

     

     

    2)

     

    மேற்கு திசையை நோக்கி நடந்தால்

    இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா ?

     

    இந்த வரியை முதன் முதலில் கேட்ட போதே, மிகவும் ஈர்த்து விட்டது. கிழக்கில் கதிரவன் உதிப்பதால், கிழக்கு நோக்கி நடந்தால் காலையும், மேற்கு நோக்கி நடந்தால் இரவும் சீக்கிரம் வருமா, என்று தலைவி கவித்துவமாய் ஏங்குகிறார். ஆனால் மீண்டும் மீண்டும் கேட்டு யோசித்த போது, இதில் பிழை உள்ளதாகவே தெரிகிறது.

     

    இரவு வர வேண்டும் என்று பெண் ஏங்குகிறாள் எனில், அங்கு இருப்பது  பகல் பொழுது என்று அறிந்து கொள்ளலாம். நாள் என்பது கிழக்கில் தொடங்குவதால், நாம் சப்பான் நாட்டை Land of Rising Sun என்கிறோம். நம்மூரில் காலை/மாலை என்றால் சப்பானில் (கிழக்கில்) மாலை/இரவு இருக்கும். ஆதலால் இந்த வரியில் நயம் மிகுந்திருந்தாலும் பொருட்பிழை உள்ளது. இது,

     

    கிழக்கு திசையை நோக்கி நடந்தால்

    இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா ?

     

    என்று இருக்க வேண்டும். இல்லையேல்,

     

    மேற்கு திசையை நோக்கி நடந்தால்

    இனிக்கும் இரவு இன்னும் நீளுமா ?

     

    என்று இருக்கலாம். ஆனால் இரவு நேரத்தில் நடன காட்சி அமைப்பது சிரமமாகியிருக்கும்.

     

    Video Link : http://www.youtube.com/watch?v=WCekqEGzeTM

    சங்கர்

    சங்கர் சேமிப்பியல் பொறியாளராக (File Systems Engineer) பணியாற்றி வருகிறார். இறை நம்பிக்கை அற்றவர். தேவதைகள் (அமலா, சுருதிகாசன் முதலானோர்) நம்பிக்கை உற்றவர். கிரந்தம்தவிர் கூட்டத்தில் ஒரு சிறுவன். கட்டற்ற மென்பொருட்கள் (Free Software), கவிதைகள், திரைப்பாடல்கள் மற்றும் தமிழ் இலக்கண ஆர்வலர். பின்னொருநாளில் தமிழ் வழியில் அறிவியலில் முனைவர் பட்டம் பெற கனவு காண்பவர்.

    டுவிட்டர்: twitter.com/psankar
    வலைப்பூ: psankar.blogspot.com

     
    • amas32 (@amas32) 2:46 pm on February 27, 2013 Permalink | Reply

      நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு 🙂
      பாடலைப் பற்றிய பதிவை விட உங்களைப் பற்றிய தொகுப்பு இன்னும் அதிகமாக ஈர்த்தது 🙂

      amas32

      • psankar 4:02 pm on February 27, 2013 Permalink | Reply

        நன்றி 🙂 இதில் அந்த “இறை-தேவதை” கருத்துக்கு சொந்தக்காரர் கார்க்கி அவர்கள். நான் கொஞ்சம் திருத்தம் செய்து பயன்படுத்திக் கொண்டேன் 🙂

    • karki 5:18 pm on February 27, 2013 Permalink | Reply

      brilliant..

      மேற்கு திசையை நோக்கி நடப்பதை விட, கிழக்கு திசை நோக்கி நடந்தால் சீக்கிரம் இரவு வரும்தான்.

      இதை கவனிச்ச நீங்க முக்கியமான விஷயத்த கவனிக்கல. இத நாயகி ஒரு கேள்வியாதான் கேட்பாங்க. அதுக்கு பதில் சொல்லும் விதமாக விஜய் “ம்ஹூம்” என தலையாட்டுவார். நாயகி ஆசை காரணமாக ஒரு தவறான விஷயத்தை செய்ய தயாராகிறார். காதலில் விழுந்திருந்தாலும் நாயகன், இல்லை. அது நடக்காது என தெளிவாக எடுத்துரைக்கிறார்.

      இதனால்தான் விஜயை முதலமைச்சர் ஆக்க வேண்டுமென்கிறோம் அவர்தம் ரசிகர்கள் சொல்றோம்.

      பழகுவதில் கனிவு. முடிவில் தெளிவு.
      வாழ்க இளைய தளபதி

      :))))

      • Pradeep 12:25 pm on June 17, 2015 Permalink | Reply

        என் ஐயப்பாடு தீர்ந்தது , நன்றி !

  • G.Ra ஜிரா 11:48 am on February 10, 2013 Permalink | Reply  

    மலையாளக் காற்று 

    தமிழ்மொழிக்கும் மலையாளத்துக்கும் நிறைய நெருக்கங்கள் உண்டு. அதனால்தானோ என்னவோ மலையாளப் படங்களில் தமிழ்ப்பாத்திரங்களும் தமிழ்ப்படங்களில் மலையாளப் பாத்திரங்களும் விரவிக்கிடக்கும். மணிச்சித்ரதாழு, ஒரு யாத்ராமொழி மற்றும் மேலேபரம்பில் ஆண்வீடு ஆகிய படங்கள் சிறந்த உதாரணம். தமிழிலும் நிறைய சொல்லலாம்.

    ஆனால் பாடல்கள்? மலையாளப் பாத்திரங்கள் கதையோடு ஒட்டி வருகையில்தான் மலையாளப் பாடல்கள் தமிழ்த்திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளன. ஆகையால் அந்தப் பாடல்களின் எண்ணிக்கை மிகக்குறைவு.

    அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் பி.பானுமதி பாடிய “லட்டு லட்டு மிட்டாய் வேணுமா” என்ற பாடலின் நடுவில் மலையாள வரிகளையும் பாடுவார். இதே கதை நீரும் நெருப்பும் படமாக வந்த போது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையில் எல்.ஆர்.ஈசுவரி “விருந்தோ நல்ல விருந்து” என்று பாடும் போது மலையாளத்து வரிகளையும் பாடுவார். இந்தப் பாடல்களைப் பற்றி Multi Cuisine Songs என்ற பதிவில் முன்பே பார்த்தோம்.

    பாரதவிலாஸ் என்றதொரு திரைப்படம் ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் வந்த போது அதில் மலையாள முஸ்லீமாக வி.கே.ராமசாமியும் அவரது மனைவியாக ராஜசுலோசனாவும் நடித்தார்கள். அந்தப் படத்தில் இடம்பெற்ற ”இந்திய நாடு என் வீடு” என்ற பலமொழிக் கதம்பப் பாட்டில் தமிழும் மலையாளமும் கலந்து எம்.எஸ்.விசுவநாதனும் எல்.ஆர்.ஈசுவரியும் பாடுவார்கள்.

    படச்சோன் படச்சோன் எங்கள படச்சோன்
    அல்லாஹு அல்லா எங்கள் அல்லா
    தேக்கு தென்னை பாக்குமரங்கள் இவிடே நோக்கனும் நீங்க
    தேயிலை மிளகு விளைவதைப் பார்த்து வெள்ளையன் வந்தான் வாங்க… படச்சோன் படச்சோன்

    அடுத்து வந்தது கே.பாலச்சந்தர் இயக்கத்தில் நான் அவன் இல்லை என்ற திரைப்படம். இது பல பெண்களை ஏமாற்றிய ஒருவனின் கதை. மலையாள தேசத்துக்கும் போகிறான் அவன். நீராடுகிறாள் ஒருத்தி. அவளோடு ஆட விரும்புகிறான். முள்ளை முள்ளால் எடுப்பது போல மலையாளத்து நாரியை மலையாளத்தால் எடுக்கிறான் அவன்.

    மந்தார மலரே மந்தார மலரே
    நீராட்டு களிஞ்ஞில்லே
    மன்மத்த ஷேத்ரத்தில் இன்னானு பூஜா நீ கூடவருனில்லே
    என்று அவள் பாடும் போது
    மன்மதன் இவிடத்தன்னே உண்டு
    என்று அவன் பாடத்தொடங்குவான்.

    ஜெயசந்திரனும் வாணிஜெயராமும் பாடிய இந்த இனிய பாடலுக்கு இசையமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன். இந்தப் பாடலில் “மன்மதன் இவிடத்தன்னே உண்டு” என்று ஜெயச்சந்திரன் பாடியதும் ஒரு அழகிய இசைக்கோர்ப்பு வரும். அதைத்தொடர்ந்து “ஓ எந்தோ” என்று எல்.ஆர்.ஈசுவரி சொல்வது மிக மிக அழகு.

    கடைசியில் சிலவரிகள் தமிழில் இருந்தாலும் இப்படி மலையாள மொழி தமிழ்ப் படத்தில் மிகச்சிறந்த இசையோடு வந்தது இதுவே முதன்முறை.

    இதே திரைப்படம் நான் அவனில்லை என்று பல ஆண்டுகளுக்குப் பின் எடுக்கப்பட்டது. அதில் இதே காட்சியமைப்பு உண்டு. ஆனால் மந்தாரமலரே பாடல் அளவுக்கு ஒரு கலைநயம் மிகுந்த பாடலாக இல்லை. கடலினக்கரே போனோரே என்ற மலையாளைப் பாடல்களைக் கேலி செய்வது போல பாடியிருப்பார்கள். சற்றும் கற்பனைத்திறம் இல்லாத இது போன்ற பாடல்கள் தமிழ்த்திரையிசையின் தேய்வுக்கு எடுத்துக்காட்டு.

    சரி. மறுபடியும் பின்னோக்கிச் செல்வோம். எழுபத்து ஒன்பதில் மீண்டுமொரு இனிய மலையாளப்பாடல் தமிழில் இளையராஜாவின் கைவண்ணத்தில் வந்தது. எம். ஜி. வல்லபன் எழுத, ஜென்சி ஆண்டனி என்ற கேரளநாட்டுப் பாடகியின் குரலில் “ஞான் ஞான் பாடனும் ஊஞ்ஞால் ஆடனும்” என்று தேவராஜ்-மோகன் இயக்கத்தில் பூந்தளிர் பூத்தது.

    கேரளத்துக்குச் செல்லும் சிவகுமாரின் பாத்திரம் அங்கிருக்கும் சுஜாதாவின் மீது காதல் கொள்கிறது. சுஜாதாவும் காதலை ஏற்றுக் கொள்ளும் போது அவரை ஓவியமாக வரையும் காட்சியில் இந்தப் பாடல் வரும். நல்ல பாடலாக இருந்தாலும் இதே படத்தில் வந்த “மனதில் என்ன நினைவுகளோ”, “வா பொன்மயிலே” மற்றும் “ராஜா சின்ன ராஜா” போன்ற பிரபல பாடல்களால் அமுக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.

    அதற்குப் பிறகு பெரிய இடைவெளி. ஏ.ஆர்.ரகுமான் வரவினால் தமிழில் இரண்டு பாடல்களில் மலையாளம் கலந்து வந்தது. முத்து திரைப்படத்தில் வரும் குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ என்ற பாடலில் “ஓமணத்திங்ஙள் கிடாவோ” என்ற சுவாதி திருநாளின் சாகித்யம் பயன்படுத்தப்பட்டது. இதுவொரு தாலாட்டுப் பாட்டு. அதே போல உயிரே திரைப்படத்தில் நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடலில் ”கொஞ்ஞிரி தஞ்ஞிக் கொஞ்ஞிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ” என்று மலையாள வரிகள் நடுநடுவாக வரும்.

    ஆனால் தனிப்பாடல் என்றால் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தில் வந்த ஆரோமோளே என்ற பாடலைத்தான் சொல்ல வேண்டும். கேரளத்துக்குக் காதலியைத் தேடிச் செல்லும் தமிழ்க் காதலனின் ஏக்கக் குரலாக ஒலித்தது அந்தப் பாடல்.

    பொதுவாகவே தமிழ்ப்பாடல்கள் கேரளத்தில் பிரபலம் ஆகும் அளவுக்கு மலையாளப்பாடல்கள் தமிழ்நாட்டில் பிரபலமாவதில்லை. அதற்குக் காரணம் சதுக்க காலத்து நடையும் எந்தப் பாட்டுக்குள்ளும் ஒளிந்திருக்கும் ஒருவித சோகமும் மென்மையாக ஒலிக்கும் ஆண்பாடகர்களின் குரலும் காரணம் என்பது என் கருத்து. ஆரோமோளே பாட்டில் ஏ.ஆர்.ரகுமான் அந்தச் சோகத்தை மெல்லியதாகப் புகுத்தியதும் கரகரப்பான பெண்குரல் போல ஆண்குரல் ஒலிக்கச் செய்திருப்பதும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

    இதற்கு நடுவில் ஒரு வித்யாசமான இனிய பாடல் ஆட்டோகிராப் வழியாக நமக்குக் கிடைத்தது. இந்த முறை இசையமைத்தவர் பரத்வாஜ். சிநேகன் எழுதி ஹரிஷ் ராகவேந்திராவும் ரேஷ்மியும் பாடிய ”மனசுக்குள்ளே காதல் வந்துச்சா வந்துச்சா” பாடல் அந்த பொழுதின் இனிய பாடலாக இருந்தது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பாடலில் கேரளக் காதலி மலையாளத்தில் பாடவும் தமிழ்க்காதலன் தமிழில் பாடவும் தொடங்கும். இருவருடைய உள்ளமும் இணைந்து விட்டது என்பதைக் காட்டுவது போல பாடல் முடியும் போது ஆண் மலையாளத்திலும் பெண் தமிழிலும் பாடுவதாக இருக்கும்.

    இத்தனை பாடல்கள் இருந்தாலும் அத்தனையிலும் உச்சப் பாடலாக நான் கருதுவது அந்த ஏழு நாட்கள் படத்தில் வரும் கவிதை அரங்கேறும் நேரம் பாடலைத்தான்.

    தமிழில் எடுக்கப்பட்ட படம் பின்னால் எல்லா மொழியிலும் எடுக்கப்பட்டது என்பது அந்தக் கதையமைப்பின் சிறப்பையும் கே.பாக்கியராஜின் இயக்கும் திறமையையும் சொல்லும்.

    மேலே இத்தனை பாடல்களைப் பட்டியல் இட்டிருக்கிறோம். ஆனால் எந்தப் பாத்திரமும் நமக்கு மனதில் தங்காதவை. ஆனால் பாலக்காட்டு மாதவன் நாயரை தமிழ் சினிமா விரும்பிகள் மறக்க முடியுமா? சரியோ முறையோ குறையோ பிழையோ, அந்தப் பாத்திரம் ஓட்டைத் தமிழில் சொல்லும் “எண்டே காதலி நிங்கள் மனைவியாகும். ஆனால் நிங்கள் மனைவி எனிக்கி காதலியாக மாட்டாள்” என்ற வசனம் அவ்வளவு பிரபலமானது.

    அப்படியொரு பாத்திரத்துக்கு “கவிதை அரங்கேறும் நேரம்” பாடல் மிகப் பொருத்தம். பாடலின் தொடக்கத்தில் ஜெயச்சந்திரனின் ஆலாபணை ஒன்று போதும். அது முடித்து ஷப்த ஸ்வரதேவி உணரு என்று பாடல் தொடரும் பொழுது மீளா இசைச்சுழலில் நாம் மூழ்கிவிடுகிறோம்.

    இந்தப் பாடலை எழுதியது யார் தெரியுமா? இந்தப் படத்தில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய “தென்றல் அது உன்னிடத்தில்” என்ற பாடலும் வைரமுத்து எழுதிய “எண்ணில் இருந்த ஈடேற” என்ற பாடலும் மிகமிகப் பிரபலம்தான். ஆனால் அந்தப் பாடல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்ட இந்தப் பாடல் அந்த அளவுக்குப் பிரபலமாகாத குருவிக்கரம்பை சண்முகம் அவர்களால் எழுதப்பட்டது. அவர் திறமைக்கு இந்த ஒரு பாட்டு எடுத்துக்காட்டாய் எப்போதும் நிற்கும்.

    இந்தப் படத்தில் இன்னொரு அழகான பாட்டு உண்டு. “மனசுக்குள்ளே காதல் வந்தல்லோ” பாடலைப் போல தமிழும் மலையாளமும் கலந்த பாடல். ஆனால் படத்தில் இடம் பெறவில்லை. ஏனென்று தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடலைக் கேட்ட யாரும் இந்தப் பாடலில் மயங்காமல் இருக்கவே முடியாது. ஜெயச்சந்திரனும் வாணி ஜெயராமும் பாடிய இந்தப் பாடலின் தமிழ் வரிகளைக் கண்ணதாசன் எழுதியிருக்கிறார். மலையாள வரிகளை எழுதியவர் தெரியவில்லை. மெல்லிசை மென்னரும் இந்தப் பாடலை வேறு எந்தப் படத்திலும் பயன்படுத்தாதது நமக்கெல்லாம் இழப்பே. இந்தப் பாடலின் தாளமாக ஒலிக்கும் செண்டை மேளங்களின் பயன்பாடு மிகமிக நேர்த்தியானது. நல்லவேளையாகப் பாடலின் ஒலிவடிவம் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

    இப்படிப் பட்ட பாடல்களை நாம் ரசித்துக் கேட்கிறோம் என்பதே நமக்கு மகிழ்ச்சியானது.

    இந்தப் பதிவில் உள்ள பாடல்களைப் பார்க்க கேட்க….

    மந்தார மலரே மந்தார மலரே (நான் அவன் இல்லை) – http://youtu.be/46KA5mwksMs
    கடலினக்கர போனோரே (நான் அவன் இல்லை-ரீமேக்) – http://youtu.be/V_tlLfligkw
    இந்திய நாடு என் வீடு (பாரதவிலாஸ்) – http://youtu.be/kG2Get7rZuU
    ஞான் ஞான் பாடனும் (பூந்தளிர்) – http://youtu.be/S0dXtaX0FX0
    குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ (முத்து) – http://youtu.be/C89P-eN9CCw
    நெஞ்சினிலே நெஞ்சினிலே (உயிரே) – http://youtu.be/YhmsG_2yudk
    ஆரோமோளே (வின்னைத் தாண்டி வருவாயா) – http://youtu.be/_9exfKUDt6Y
    மனசுக்குள்ளே காதல் வந்துச்சா (ஆட்டோகிராப்) – http://youtu.be/KLQk4jacuVk
    ஷப்த ஸ்வரதேவியுணரு (அந்த ஏழு நாட்கள்) – http://youtu.be/OvSdzh2S12w
    ஸ்வர ராக சுத தூகும் (அந்த ஏழு நாட்கள்) – http://youtu.be/MqcbOgkS4m0

    அன்புடன்,
    ஜிரா

    071/365

     
    • gbsivakumar 12:31 pm on February 10, 2013 Permalink | Reply

      manasukkule thaagam vanthucha song written by snehan. Not pa.vijay

      • என். சொக்கன் 5:33 pm on February 10, 2013 Permalink | Reply

        Corrected now, Thanks for pointing out the info error

    • Rajnirams 9:50 am on February 11, 2013 Permalink | Reply

      super.அபாரம்.

      • Kaarthik Arul 2:30 pm on July 16, 2013 Permalink | Reply

        How come sundari neeyum sundaran nyAnum from MMKR is missing in this post?

    • Kana Praba 4:55 pm on July 16, 2013 Permalink | Reply

      kalakkals

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel