கிளகிளவி
”இளையராஜா பாட்டுக்கு மெட்டு போட்டாரா? மெட்டுக்குப் பாட்டெழுதி வாங்குனாரான்னு தெரியலையே” என்று எத்தனையெத்தனையோ படங்களுக்கு இசையமைத்த மெல்லிசை மன்னரே வியந்து பாராட்டிய பாடல் இது.
வளையோசை கலகலகலவெனக் கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலுசிலுசிலு எனச் சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்
படம் – சத்யா
பாடல் – வாலி
பாடியவர்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், லதா மங்கேஷ்கர்
இசை – இசைஞானி இளையராஜா
பாடலின் சுட்டி – http://youtu.be/DDyA2_Grjp4
அருமையான இந்தப் பாடலை வைத்து ஒரு இலக்கண வகுப்பே நடத்தி விடலாம். அப்படிக் கிடைத்த வாய்ப்பை நழுவ விடலாமா?
இந்தப் பாட்டின் பல்லவியில் நிறைந்திருப்பது இரட்டைக் கிளவிகள். முதலில் என்னென்ன சொற்கள் இரட்டைக்கிளவியாக வந்திருக்கின்றன என்று பார்க்கலாம்.
கலகலகலவென
குளுகுளு
சிலுசிலுசிலு
வரிக்கு ஒன்றாக பல்லவியில் மூன்று இரட்டைக் கிளவிகள் வந்துள்ளன.
கிளவி என்பதற்குச் சொல் என்ற பொருள் உண்டு. கிளைத்து வருவதால் கிளவி. இரண்டிரண்டு சொற்களாகக் கிளைத்து வருவதால் அது இரட்டைக் கிளவி.
இந்த இரட்டைக் கிளவிக்கு இலக்கணம் என்னவென்று தொல்காப்பியம் தெளிவாகச் சொல்கிறது.
இரட்டைக் கிளவி இரட்டிற்பிரிந் திசையா
அதிகாரம் – சொல்லதிகாரத்தில் கிளவியாக்கம்
நூல் – தொல்காப்பியம்
பொருள் இல்லாத சொல் இரட்டையாகக் கிளைத்து வந்து பொருள் கொடுப்பதுதான் இரட்டைக்கிளவி. அவைகளைப் பிரித்தால் பொருள் கிடைக்காது.
”குளுகுளு தென்றல் காற்று” என்ற வரியை எடுத்துக் கொண்டால், குளுகுளு என்ற இரட்டைக் கிளவி தென்றலின் குளுமையைப் பற்றிச் சொல்கிறது.
அதையே ”குளு தென்றல் காற்று” என்று சொன்னால் அதே பொருள் வராது. ”குளுமையான தென்றல் காற்று” என்று சொல்ல வேண்டும். ஆனால் குளுமையான தென்றல் காற்றை விட குளுகுளு தென்றல் காற்று மிகப் பொருத்தமாக இருக்கிறது.
அதனால்தான் இரட்டைக் கிளவியை இலக்கணப்படுத்தி வைத்திருக்கிறது தமிழ். சொல்ல வந்த கருத்தை எளிமையாகச் சொல்ல இரட்டைக் கிளவி மிகவும் பயன்படும். கீழே ஒரே பொருளைத் தரும் இரண்டு விதமான வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன். நீங்களே பார்த்துப் படித்து எது சொல்ல வந்த பொருளை அழுத்தமாகச் சொல்லிப் புரியவைக்கிறது என்று முடிவு செய்யுங்கள்.
வேகமாக ஓடினான் – விடுவிடுவென ஓடினான்
அளவுக்கு அதிகமாகப் பேசினான் – வளவளவெனப் பேசினான்
அவளுக்கு நிறைய கோவம் வந்தது – கடுகடுவென கோவப்பட்டாள்
அழகாகச் சிரித்தாள் – கலகலவெனச் சிரித்தாள்
அறை சூடாக இருந்தது – அறை கதகதப்பாக இருந்தது
இப்போது இரட்டைக் கிளவியின் அருமையைப் பற்றி நீங்களே முடிவுக்கு வந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இப்படி நாம் பேசும் ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னால் ஒரு இலக்கணம் இருக்கிறது என்பது நாம் பேசும் தமிழுக்குப் பெருமைதான்.
சரி. வேறெந்த பாடல்களில் எல்லாம் இப்படி இரட்டைக் கிளவிகள் வருகின்றன? உங்களுக்குத் தெரிந்த பாடல்களைப் பட்டியல் இடுங்களேன்.
அன்புடன்,
ஜிரா
148/365
Arun Rajendran 10:17 am on April 28, 2013 Permalink |
”இசைவழி இலக்கணம்” பதிவுல கோடிட்டு காட்டியிருந்தார் நிரஞ்சன் பாரதி.
1) கண்ணோடுக் காண்பதெல்லாம் -ஜீன்ஸ்
2) நதியே நதியே காதல் நதியே நீயும் – ரிதம்
3) மன்னார்குடி கலகலக்க – சிவப்பதிகாரம்
GiRa ஜிரா 10:44 pm on April 29, 2013 Permalink |
மூன்றுமே நல்ல பாட்டுகள். சரியா எடுத்துக் குடுத்திங்க
கிரி ராமசுப்ரமணியன் (@rsGiri) 11:23 am on April 28, 2013 Permalink |
பளபளக்குற பகலா நீ
படபடக்குற அகலா நீ
அனலடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ
மழையடிக்கிற முகிலா நீ
திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா
🙂
கிரி ராமசுப்ரமணியன் (@rsGiri) 11:50 am on April 28, 2013 Permalink |
இந்தாங்கோ https://soundcloud.com/rsgiri/5i3kax0sigvt :)) (ஏதோ நம்மாலான இன்ஸ்டண்ட் முயற்சி)
GiRa ஜிரா 10:42 pm on April 29, 2013 Permalink |
பாட்டுக்குப் பாட்டு எடுக்கவான்னு கலக்கிட்டிங்க. 🙂 உங்க பாட்டுத் திறமை இன்னும் சிறந்து பெருமை கொள்ள எனது வாழ்த்துகள்.
பாண்டியன் 1:55 pm on April 28, 2013 Permalink |
படபடவென பொறிந்து தள்ளிட்டீங்க போங்க.
பாட்டும் சும்மா கிடுகிடுத்துப்போகிற பாட்டு.
கேட்டா இதயமே அதில் ஊறி மறமறத்துப்போய்விடும்.
இதை வைத்து இலக்கணத்தை கடகடவென நடத்தலாம் என்கிற உமது எண்ணம் அடஅட
GiRa ஜிரா 10:44 pm on April 29, 2013 Permalink |
அடடடடா! இப்பிடி கொளுத்திப்பிட்டிகளே பாண்டியரே 🙂
amas32 8:51 pm on April 28, 2013 Permalink |
சூப்பர் பாட்டு ஜிரா! இந்தப் பாடலை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. இந்தப் பாட்டில் உள்ள சொற்களுக்கு இணையாக இசையும் நல்ல ஸ்பீட். நல்ல வெயில் காலத்தில் இந்தப் பாடலைக் கேட்டாலே உடலும் மனமும் குளிர்ந்து விடும் 🙂
amas32
GiRa ஜிரா 10:43 pm on April 29, 2013 Permalink |
செம பாட்டு. இளையராஜா ஊட்டியில் உக்காந்துக்கிட்டு டியூன் போட்டிருப்பாரு. லாலாலான்னு லதா பாடுறது நல்லாருக்கும். அதை விடத் தெலுங்கில் இன்னும் நல்லாருக்கும். பாடியது பி.சுசீலா.
anonymous 10:50 am on April 29, 2013 Permalink |
இரட்டைக்கொரு பாடல் இஃதே! என்ன அழகு!
*பாடிய பெண்ணும் இரட்டையே! = “லதா” (எ) ஈரெழுத்து;
*எழுதிய ஆணும் இரட்டையே! = “வாலி” (எ) ஈரெழுத்து;
“குளுகுளுகுளுவென, கலகலகலவென” – இதையே மூனு முறை வேகமாச் சொல்லிப் பாருங்க; திணறும்:)
பாடுற பெண்ணோ, வேற்று மொழி இசை-அரசி;
அவங்க வாயில் பிடி குடுக்குற மாதிரி easy பாட்டா எழுதாம, “குளுகுளுகுளுவென, கலகலகலவென” -ன்னு எழுதினா, பாவம் அவுங்க திணற மாட்டாங்களா?:)
—-
தமிழின் சொற் சிலம்பங்களையெல்லாம்,
“வாலி” கொண்டு வந்தது போல்,
திரையிசையில் வேறு எவரும் செய்துள்ளனரா? -என்பதைத் தேடித் தான் பாக்கணும்;
எதுகை-மோனை-இயைபு (Rhyming) இல்லாத வாலியின் பாட்டே அரிது;
*கண்ணதாசன் = கருத்துச் சிலம்பம்
*வாலி = சொற் சிலம்பம்
வாலியின் தனிப்பட்ட துதிப் போக்கு எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், அவர் தம் தமிழ்ப் போக்குக்குக் கட்டாயம் தலை வணங்கியே ஆக வேண்டும்;
anonymous 10:56 am on April 29, 2013 Permalink |
ஓர் ஐயம்!
//கலகலகல-வென
குளுகுளு தென்றல்
சிலுசிலுசிலு-வென
வரிக்கு ஒன்றாக பல்லவியில் மூன்று இரட்டைக் கிளவிகள் வந்துள்ளன//
இவை “இரட்டைக் கிளவி” தானா?
—–
குளுகுளு = இரட்டைக் கிளவி தான்; இரண்டு முறை கிளந்து வந்திருக்கு;
ஆனா, கலகலகல-வென =?
மூன்று முறை வந்திருக்கே! “இரட்டை”க் கிளவி எனல் எப்படி?:)
anonymous 11:17 am on April 29, 2013 Permalink |
Jokes apart,
தமிழ் = “உணர்ச்சி” -க்கு, ரொம்ப மதிப்பு குடுக்கும் மொழி;
மனசுல முதலில் தோன்றுவது = “உணர்ச்சி” தானே?
அப்பறம் தான் அது “சொல்லா” வாயில் வருது; “எழுத்தா” கையில் வருது; அப்படியே கவிதை, இலக்கியம் -ன்னு என்னென்னமோ ஆகுது;
அது காமமோ/ காதலோ/ பக்தியோ/ வீரமோ… எது-ன்னாலும் = “உணர்வே” தலை!
நெஞ்சு “படபட” -ன்னு அடிச்சிக்குது = இது “உணர்வு”
*”படபட” தான் முதலில் தோன்றுவது (உள்ளுக்குள்)
*அதை, “நெஞ்சு அடிச்சிக்குது” -ன்னு we end up translating the feeling;
But translation never translates the wholesome heart;
அந்தக் குறையை நிறை செய்தது தமிழ் மொழி = “உணர்ச்சி”யை, அப்படியே மொழிக்குள்ளும் கொண்டு வந்தது;
Very few languages have this “heart talk”
—–
படபட = “உணர்வொலிக் கிளவி”
படபடபட = “உணர்வொலிக் கிளவி”
இது இரட்டையா வரும் போது = “இரட்டைக் கிளவி” என்கிறோம்
anonymous 11:41 am on April 29, 2013 Permalink |
The beauty of Tamizh is:
பிரிச்சாப் பொருள் தராத இந்தக் கிளவியை வச்சிக்கிட்டே, பலப்பல புதுச் சொல்லும் உருவாக்கும் “அக நேர்மை”
For example:
“நெஞ்சு அடிச்சிக்குச்சி” -ன்னு simpleஆச் சொல்லிட்டுப் போயீறலாம்;
சரிப்பா, ஏதோ உணர்ச்சிக்கு மதிப்பு குடுக்குற மொழியாம்; சொல்லுறானுங்க; “நெஞ்சு படபட-ன்னு அடிச்சிக்குச்சி” -ன்னு மாத்திச் சொல்லலாம்;
But Tamizh doesn’t stop here; It even goes beyond
படபடப்பு
படபடத்தான்
படபடக்கின்றது
….ன்னு புதுப்புதுச் சொல்லே உருவாக்கி விடுகிறது, அகமொழிகளை வைத்துக் கொண்டு! இதான் “அக நேர்மை”-க்கு மதிப்பு குடுக்கும் போக்கு!
வெறுமனே “பட” = பொருள் ஒன்னும் இல்ல;
பிரிச்சாப் பொருள் தராத ஒன்னை…
பொருளே இல்லீன்னாலும், “அகமொழி” என்பதால் மதிப்பு; அதையே சொல்லாக்கி வைக்கும் தமிழ்த் தொல்காப்பியம்!
காதல் “படபடப்பு” = பெயர்ச்சொல்
இராகவன் “படபடத்தான்” = வினைச்சொல்
“படபடக்கின்ற” முருகன் சேவற்கொடி = வினையெச்சம்
—-
“உணர்வு-ஒலிக்-கிளவி” = தமிழின் பெருமை!
“வெடுக்” என்று பேசினான் = ஒற்றை
“குளுகுளு” = இரட்டை = இரட்டைக் கிளவி -ன்னு சிறப்புப் பெயர்
வளையோசை “கலகலகல” என = மூன்று; “மூட்டைக் கிளவி” -ன்னு சிறப்புப் பெயர் இல்ல:) அவ்ளோ தான்:)
anonymous 11:52 am on April 29, 2013 Permalink |
“இரட்டைக் கிளவி” என்ற பேச்சு வந்துட்டதால,
“அடுக்குத் தொடர்” பத்தியும் just two lines….
“வாழ்க வாழ்க” = இது அடுக்குத் தொடர்; பிரிச்சாப் பொருள் தரும்;
ஆனா ரெட்டையாத் தான் வரணும்-ன்னு இல்ல;
தமிழ்த் தாய் வாழ்த்தை எடுத்துக்குங்க;
“வாழ்த்துதுமே, வாழ்த்துதுமே; வாழ்த்துதுமே……” = இதுவும் அடுக்குத் தொடர் தான்!
(விருதே “வாங்காத” MSV-க்கு அழியாப் பெருமை குடுத்த அடுக்குத் தொடர்!
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, “செயல் மறந்து வாழ்த்துதுமே” -ன்னு ஒற்றையாத் தான் பாட்டை எழுதுனாரு;
ஆனா, அந்த “வாழ்த்துதுமே”வை, அடுக்கி வைத்த அடுக்குத் தொடர்ப் பெருமை = MSV-க்கே போய்ச் சேர வேண்டிய தமிழ்த் தாய்ச் சிறப்பு)
anonymous 12:03 pm on April 29, 2013 Permalink |
ஒரே சொல்லு, அடுக்குத் தொடராவும் வந்து, இரட்டைக் கிளவியாவும் வருமா?
Just Guess:)
“திருதிரு”-ன்னு முழிச்சான்
“திருத்திரு” குன்றக்குடி அடிகளார்
இதான் வேறுபாடு;
தமிழ் அறிஞரான அடிகளார், “திருதிரு”-ன்னு முழிப்பாரா?:)
அதனால் அடுக்குத் தொடரில் எப்பமே = வலி மிகும் = “திருத்திரு”
(வல்லினம் மிகும்)
———
வல்லினம் மிகாத அடுக்குத் தொடரும் உண்டு = “விடு விடு” (டேய் விடுறா விடுறா, கோச்சிக்காத என்னும் பொருளில்)
இதுவே இரட்டைக் கிளவியாவும் வரும் = “விடுவிடு” -ன்னு நடந்தான்! (பொருள் வேற; வேகம் என்னும் பொருளில்)
“உணர்வொலிக் கிளவி” (அதிலும் குறிப்பா இரட்டைக் கிளவி)
= தமிழின் அகமொழி
என்று சொல்ல வாய்ப்பளித்த இந்தச் “சுறுசுறு” பதிவுக்கு மிக்க நன்றி!