Updates from June, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • என். சொக்கன் 11:57 am on June 17, 2013 Permalink | Reply  

    கொடி அசைந்ததும்… 

    • படம்: போலீஸ்காரன் மகள்
    • பாடல்: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
    • எழுதியவர்: கண்ணதாசன்
    • இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    • பாடியவர்: பி. பி. ஸ்ரீனிவாஸ்
    • Link: http://www.youtube.com/watch?v=BBEHY5WAbSc

    குலுங்கும் முந்தானை,

    சிரிக்கும் அத்தானை விரட்டுவ(து) ஏனடியோ?

    உந்தன் கொடி இடை இன்று,

    படைகொண்டு வந்து கொல்வவதும் ஏனடியோ!

    காதலியின் கொடி இடையைப் பார்த்தால், பெரும்பாலானோர் கிளுகிளுப்பாக உணர்வார்கள், அல்லது கிறுகிறுத்துப்போவார்கள், ஏனோ, இந்தக் காதலனுக்குமட்டும் அவள் இடையைப் பார்த்துக் கிலி பிடித்துவிடுகிறது!

    இடையைப் பார்த்தால் இச்சைதானே வரணும், அச்சம் ஏன் வந்தது? கண்ணதாசன் ஏன் இப்படி எழுதவேண்டும்?

    போர் வந்தால் இரு தரப்பினரும் கொடி பிடித்துச் செல்வார்கள், அதில் ஈடுபடுகிற தேர்களின்மீதும் அந்தந்த அரசர்களின் கொடி பறக்கும்.

    அதனால், இங்கே காதலியின் கொடி போன்ற இடையைப் பார்த்தவுடன், காதலனுக்குப் போர் ஞாபகம் வந்துவிடுகிறது. ’அடியே, இப்படிக் கொடி இடையை அசைத்து அசைத்து நடக்கிறாயே, இதன் அர்த்தம் என்ன? அடுத்து ஒரு பெரிய படையைக் கொண்டுவரப்போகிறாயா? என்மீது காதல் போர் தொடுக்கப்போகிறாயா?’ என்று கேட்கிறான்.

    ஒரு பெண்ணை வர்ணிக்கும்போது போர், ராணுவமெல்லாம் ஞாபகம் வரலாமா?

    தாராளமாக வரலாம். இந்த விஷயத்தில் கண்ணதாசனுக்கு முன்னோடிக் கவிஞர்கள் பலர் உண்டு. உதாரணமாக, புகழேந்தி எழுதிய நளவெண்பாப் பாடல் ஒன்றில், ஆட்சி இயல் சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களையும் பெண்மீது பொருத்திச் சொல்கிறார். இப்படி:

    நால்குணமும் நால் படையா, ஐம்புலனும் நல் அமைச்சா,

    ஆர்க்கும் சிலம்பே அணி முரசா, வேல் படையும்

    வாளுமே கண்ணா, வதன மதிக் குடைக் கீழ்

    ஆளுமே பெண்மை அரசு!

    தமயந்தி என்கிற பெண்ணை அன்னம் வர்ணிக்கிறது, ‘அவள் ஒரு பெரிய மஹாராணி, தெரியுமா?’

    ’நிஜமாகவா?’ நளன் ஆச்சர்யப்படுகிறான், ‘எந்த நாட்டுக்கு மஹாராணி?’

    ‘இன்னொரு நாடு தேவையா? அவளே ஒரு நாடு, அதற்கு அவளே மஹாராணி!’ என்கிறது அன்னம்.

    ’கொஞ்சம் விளக்கமாகச் சொல்லேன், ப்ளீஸ்!’

    ’அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்கிற பெண்மைக்குரிய நான்கு குணங்களும் அவளுக்கு உண்டு, அவையே அவளது நான்கு வகைப் படைகளைப்போல.’

    ‘வெறும் ராணுவம்மட்டும் போதுமா? அமைச்சர்கள் வேண்டுமே!’

    ‘கண், காது, மூக்கு, வாய், உடல் என்ற ஐந்து புலன்களும்தான் அவளுடைய அமைச்சர்கள்.’

    ’அப்படியானால், அரசர்களுக்கே உரிய முரசு?’

    ‘அதுவும் உண்டு! நடக்கும்போது சத்தமிடும் சிலம்புதான் அவளுடைய முரசு.’

    ’அரசர்கள் எப்போதும் வேல், வாள் போன்ற ஆயுதங்களை வைத்திருப்பார்களே.’

    ’அது இல்லாமலா? அவளுடைய ஒரு கண்ணில் வேல், இன்னொரு கண்ணில் வாள்.’

    ‘எல்லாம் சரி, வெண்கொற்றக் குடை?’

    ’நிலவு போன்ற அவளுடைய அழகிய முகம், அதைவிடச் சிறந்த வெண்கொற்றக் குடை எங்கே உண்டு?’

    ‘அப்படியானால்…’

    ’ராணுவமும் அமைச்சர் படையும் முரசும் ஆயுதங்களும் வெண்கொற்றக்குடையுமாக, தன்னுடைய பெண்மை அரசாங்கத்தை ஆட்சி செய்கிறாள் அந்தத் தமயந்தி!’

    ***

    என். சொக்கன் …

    198/365

     
    • rajnirams 12:26 pm on June 17, 2013 Permalink | Reply

      ஆஹா,பிரமாதம்.நளவெண்பா பாடலின் சுவையை அறிந்து கொண்டேன்.என்ன ஒரு வர்ணனை.”கொடியை”கட்சிக்காரர்களை விட இடையை வர்ணிக்க கவிஞர்கள் அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்கள் போலும்.”பூவறையும் பூங்கொடியே-வாலி. இடை ஒரு கொடி,இதழ் ஒரு கனி-கண்ணதாசன்,இடை நூலாடி செல்ல செல்ல ஓஹோ-வாலி.இது என்ன கூத்து அதிசயமோ-இளநீர் காய்க்கும் கொடி இதுவோ-வைரமுத்து இப்படி.

    • Arun Rajendran 3:00 am on June 18, 2013 Permalink | Reply

      சொக்கன் சார்,

      இன்று இடையிலக்கணமா?

      வண்ண மேகலைத் தேர் ஒன்று வாள் நெடுங்
      கண் இரண்டு கதி முலை தாம் இரண்டு
      உள் நிவந்த நகையும் என்று ஒன்று உண்டால்
      எண்ணும் கூற்றினுக்கு இத்தனை வேண்டுமோ!
      —–மிதிலைக் காட்சிப் படலம்

      ஆக, பெண்ணின் உடலே படைக்கலன் தான்..சிறுத்தக் கொடியிடை, மற்றப் போர் கருவிகளை அழகுற வெளிப்படுத்தும்..அத்தகைய மலர்கொடியிடை, ’பதாகை’ போன்று அசைந்து ”அந்திப்போர்” துவக்க வழிவகை செய்தலால் காதலன் சிறிது அச்சப்பட்டுதானே ஆக வேண்டும்?

      இவண்,
      அருண்

    • amas32 (@amas32) 2:28 pm on June 19, 2013 Permalink | Reply

      உடலே ஒரு கோவில் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கு பெண் உடலே ஒரு சாம்ராஜ்ஜியமாக வர்ணிக்கும் பாடலைக் கொடுத்திருக்கிறீர்கள். பெண்ணை வர்ணிக்கும் புலவனின் கண்ணிற்கும் கற்பனை வளத்திற்கும் இந்தப் பாடல்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

      பெண்ணென்றால் பேயும் இறங்கும் என்ற பழமொழி பெண்ணிடம் இருக்கும் இந்த பவரினால் தானோ? :-)))

      amas32

    • freevariable 4:44 am on June 21, 2013 Permalink | Reply

      அடடா அருமை!

  • G.Ra ஜிரா 9:55 am on May 22, 2013 Permalink | Reply  

    தையல் 

    அக்கடான்னு நாங்க உடை போட்டா
    துக்கடான்னு நீங்க எடை போட்டா
    தடா… உமக்குத் தடா…
    பாடலின் சுட்டி – http://youtu.be/u6zywS5ptm4

    இந்தியன் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வாலி எழுதிய பாடல் இது. பாடல் முழுக்கவே பெண் விடுதலை வரிகளாக வரும். சுவர்ணலதாவின் குரலில் கேட்க அட்டகாசமான கைமுறுக்குப் பாடல்.

    மேடை ஏறிடும் பெண் தானே.. நாட்டின் சென்சேஷன்
    ஜாடை பேசிடும் கண் தானே… யார்க்கும் டெம்ப்ட்டேஷன்
    ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம்… ஹோய் ஹோய் ஓல்டையெல்லாம் ஓரங்கட்டும்
    தய்யதக்க தய்யதக்க தோம்… ஹோய் ஹோய் தையலுக்கு கையத்தட்டுவோம்

    ஆங்கிலமும் தமிழும் கலந்து எழுதப்பட்ட இந்தப் பாடலில் “தையலுக்கு கையத் தட்டுவோம்” என்றும் ஒரு வரி எழுதியிருக்கிறார் வாலி.

    தையல் என்ற சொல் பெண்ணையும் குறிக்கும் என்று நம்மில் பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்.

    தையல் தளிர்க்கரங்கள்” என்று தமயந்தியின் கைகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறாரே புகழேந்திப் புலவர்.

    தையலைப் பற்றி தையல் ஒருத்தி சொன்ன கருத்து இன்றும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மையல் கொண்ட பையல் எவனாயினும் இப்படிச் சொல்லியிருந்தால் அவனைப் பிய்த்து எடுத்திருப்பார்கள். அப்படிப் பட்ட ஒரு கருத்தைச் சொன்னார் ஔவையார்.

    தையல் சொல் கேளேல்
    நூல் – ஆத்திச்சூடி
    எழுதியவர் – ஔவையார்

    இப்படி ஔவை சொன்னதை ஆண் கவி ஒருவர் ஒத்துக் கொள்ளவில்லை. இவர் சற்றுப் பின்னால் வந்த கவியானாலும் தவறு என்று தனக்குப் பட்டதைத் தவறு என்றே சொன்னவர். பெண்களின் உயர்வுதான் உண்மையிலேயே நாட்டை உயர்த்தும் என்று நம்பியவர். அதனால் அவர் ”தையல் சொல் கேளேல்” என்பதை ஏற்காமல் மாற்றிச் சொல்கிறார்.

    தையலை உயர்வு செய்
    நூல் – புதிய ஆத்திச்சூடி
    எழுதியவர் – பாரதியார்

    பெண்களைப் பற்றிய கருத்து மாறிக் கொண்டே வருவதை இது போன்ற பலதரப்பட்ட காலகட்டங்களில் வந்த நூல்களிலிருந்து நாம் தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

    ஒரு குடும்பத்தில் புதிதாக ஒரு பிரச்சனை வந்து அதற்கு தீர்வே புரியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? அந்தக் குடும்பத்திலேயே மிகமிக மூத்த பெண்ணாகப் பார்த்து வழி கேட்க வேண்டும். அந்தப் பெண் அனுபவத்தில் சொல்லும் வழி சரியாகவே இருக்கும் என்பதும் ஒரு கருத்து.

    அந்தக் காலத்தில் போர்களின் காரணமாக ஆண்களை விட பெண்களின் வாழ்நாள் நீடித்திருந்ததால் பெண்கள் உலக நடப்புகளை அதிகமாக புரிந்து வைத்திருந்தார்கள். தெரிந்து வைத்திருந்தார்கள். நல்லதையும் கெட்டதையும் அனுபவித்துப் பக்குவமாகியிருந்தார்கள். ஆகையால் அவர்கள் சொல்லும் வழி சரியாகவே இருந்திருக்கும்.

    ஆனால் இன்று தொலைக்காட்சித் தொடர்களில் சிக்கிக் கொண்டிருக்கும் பெண்களிடம் கருத்து கேட்டால் என்னாகுமோ என்று பயமாகத்தான் இருக்கிறது. ஒரு பெண்ணாகிய ஔவையாருக்கே பயம் வரும் அளவுக்கு அந்தக் காலத்துப் பெண்கள் என்ன பார்த்திருப்பார்கள்?!

    சரி. முடிப்பதற்கு முன் ஒரு சிறிய நகைச்சுவைத் துணுக்கு.

    ஒரு புலவருக்கு ஒருவர் வேட்டி தானம் கொடுத்தாராம். அந்த வேட்டியை வாங்கிப் பார்த்திருக்கிறார் புலவர்.

    தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்க்கக் கூடாதுதான். ஆனாலும் அது கிழிந்த வேட்டி. எக்கச்சக்கமாக தையல்கள் வேறு. அதைப் பார்த்ததும் அந்தப் புலவர் வருத்தத்தை மறைத்துக் கொண்டு சிலேடையாக ஒரு வரி சொன்னாராம்.

    சோமனுக்கு இருபத்தேழு தையல்

    வேட்டிக்கு சோமன் என்றொரு பெயர் உண்டு. சோமனுக்கு இருபத்தேழு தையல் என்றால் வேட்டியில் அத்தனை தையல்கள் இருக்கின்றன என்று பொருள்.

    சந்திரனுக்கும் சோமன் என்றொரு பெயர் உண்டு. சோமனுக்கு இருபத்தேழு தையல் என்றால் சந்திரனுக்கு இருபத்தேழு மனைவிகள் என்று பொருள். அதுவும் புராணப்படி உண்மைதான்.

    ரோகிணி முதலான இருபத்தேழு நட்சத்திரங்களையும் சந்திரன் மணந்து கொண்டான். ஆகையால் சோமனுக்கு இருபத்தேழு தையல்.

    இப்போது புரிந்திருக்குமே புலவரின் சிலேடை.

    அன்புடன்,
    ஜிரா

    172/365

     
    • Saba 11:23 am on May 22, 2013 Permalink | Reply

      பெண்களின் உயர்வுதான் உண்மையிலேயே நாட்டை உயர்த்தும் -இதே தத்துவத்தை இந்திரா காந்தியும் பல கிராம விஜயங்களில் பாவித்துள்ளார்.

      ஆமா உண்டி சுருங்குதல் தையலுக்கு அழகு என்று சொன்னதும் அதே தையல் தானே 🙂

      எல்லாம் moderate ஆக இருந்தால் எல்லோர்க்கும் நலம்.

    • Arun Rajendran 1:00 pm on May 22, 2013 Permalink | Reply

      தமிழ் “கலாச்சாரம்”-னு என்னென்னவோ சொல்றாங்க..ஆனா தமிழ்நாட்டுல தான் தமிழன் பண்பாட தேடி கண்டுபிடிக்க வேண்டி இருக்கு…முந்நாள் தமிழ் இந்நாள் கேரள நாட்டில் கூட இன்னும் நம் பண்பாடு போற்றிப் பாதுகாக்கப்படுது…அதுல மிகவும் போற்றுதற்குரியது பெண்வழிச் சமுகம்…பெண் தான் குடும்பத்தலைவியாக இருப்பார்..சொத்தில் பங்கும் பெண்களுக்குத்தான்..வயதான மூதாட்டி தான் குடும்ப முடிவுகளை எடுப்பார்..இத்தகைய கட்டமைப்பில் மிகவும் இனறியமையாததும் சிறப்பானதும் கூட்டுக்குடும்ப முறை…ஆண் வழிச்சமுகம் விரவி இருந்த காலத்திலும் இத்தகைய பெண்வழிச்சமுகங்களும் தழைத்திருந்தன..எவ்வளவு தான் இழந்துட்டோம்..:-(

    • amas32 10:46 pm on May 22, 2013 Permalink | Reply

      புலவர்களுக்குத் தான் எவ்வளவு சாதுர்யம் வேண்டியிருக்கிறது, தங்கள் இன்னல்களை மறைக்க!
      ஒரு புலவர் அரசினடம் தங்கத் தட்டு எனக்கா உங்களுக்கா என்று தனக்குப் பரிசுக் கொடுத்தத் தட்டும் தனக்கா அல்லது தங்கத்தட்டுப்பாடு அரசனுக்கா என்ற பொருளில் கேட்டதாகவும் படித்திருக்கிறேன். அரசன் என்ன செய்வான், தங்கத் தட்டு உமக்கே என்று சொல்லிவிட்டான் :-))

      பெண்களுக்குப் பொதுவில் எதிர்கால விளைவுகளை ஆராய்ந்து செயல்படும் திறன் அதிகம்.

      Nice post Gira 🙂

      amas32

    • Sudhakar 12:43 pm on May 24, 2013 Permalink | Reply

      Ki-Va-Ja type “siladai”

  • என். சொக்கன் 12:57 pm on March 5, 2013 Permalink | Reply  

    கண்ணே, கொஞ்சம் சிரி! 

    • படம்: உயிருள்ளவரை உஷா
    • பாடல்: இந்திர லோகத்து சுந்தரி
    • எழுதியவர்: டி. ராஜேந்தர்
    • இசை: டி. ராஜேந்தர்
    • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. எஸ். சசிரேகா
    • Link: http://www.youtube.com/watch?v=jpoafTkAwv4

    பொன் உருகும் கன்னம் குழிய,

    ஒரு புன்முறுவல் சிந்திச் சென்றாள்,

    இந்த மானிடனும் மயங்கிவிட்டான்,

    அந்த மானிடமே மனதை விட்டான்!

    ’முறுவல்’ என்றால், அட்டகாசமாக வாய் விட்டுச் சிரிக்காமல், உதட்டால்மட்டும் (கொஞ்சம்போல்) சிரிப்பது, பேச்சுவழக்கில் அதிகம் இல்லாவிட்டாலும், இன்றைக்கும் எழுத்தில் நிறையப் பயன்படுத்துகிற ஒரு சொல்தான் இது.

    அதே சொல்லுக்கு, ‘பல்’ என்றும் ஓர் அர்த்தம் உண்டு, தெரியுமா?

    நளவெண்பாவில் புகழேந்தியின் பாடல் ஒன்று, ‘முந்நீர் மடவார் முறுவல் திரள் குவிப்ப’ என்று தொடங்குகிறது. கடற்கரைக்கு வரும் அலைகள், அங்கே பல முத்துகளை விட்டுச் செல்கின்றன, அவற்றைப் பார்க்கும்போது, அழகிய பெண்களின் பற்களைப்போல் இருக்கின்றனவாம்.

    இங்கே ‘முறுவல்’ என்றால் பல், ’திரள்’ என்றால் ஒன்றுசேர்தல், பல கவிதைகளைத் தொகுத்துள்ள ஒரு நூலைத் ‘திரட்டு’ என்று சொல்கிறோமே, அதன் வேர்ச்சொல் இதுதான். ஆக, ‘முறுவல் திரள்’ என்றால், பற்களின் கூட்டம், அல்லது தொகுப்பு.

    ’முறுவல்’ சரி, அதென்ன ‘புன்’?

    ராமாயணத்தில் ராமனும் ராவணனும் முதன்முறையாகச் சந்தித்துக்கொள்ளும் காட்சியில், ‘புன் தொழில் ராவணன்’ என்கிறார் கம்பர். அதாவது, (இன்னொருவருடைய மனைவியை விருப்பமில்லாமல் கடத்திவந்து சிறைப்படுத்தியதன்மூலம்) சிறுமையான தொழிலைச் செய்துவிட்ட ராவணன்.

    ‘புன்’ என்றால் சிறிய / சிறுமையான / அதிகம் இல்லாத என்று பொருள் சொல்லலாம். புன்சிரிப்பு, புன்முறுவல், புன்னகை (புன் நகை) என்று சிரிப்புக்கு அடைமொழியாகவே நாம் மிகுதியாகப் பயன்படுத்தும் ஒரு சொல் இது.

    ’முறுவல்’போலவே, சிரிப்பைச் சொல்லும் இன்னொரு சொல் ‘மூரல்’. இதுவும் ‘புன்’ என்கிற அடைமொழியுடன் சேர்ந்து ‘புன்மூரல்’ என்று குறிப்பிடப்படுகிறது.

    சில பழந்தமிழ் இலக்கியங்களில் இந்த இரண்டையும் சேர்த்து, அதாவது ’மூரல் முறுவல்’ என்றும் படிக்கிறோம், இது ‘கேட்டு வாசல்’, ‘நடுசென்டர்’போல அபத்தமாகத் தோன்றும், ஆனால் அங்கெல்லாம் ‘மூரல் = பல்’, ‘முறுவல் = சிரிப்பு’ (Or, Vice Versa) என்று புரிந்துகொள்ளவேண்டுமாம், அதாவது, பல் தெரியச் சிரிப்பது.

    இவ்வளவு தூரம் வந்துவிட்டோம், இன்னும் இரண்டு வார்த்தைகளைப் பார்த்துவிடலாம்!

    முதலில், முறுகு.

    ஹோட்டலில் நுழைந்தவுடன் ‘முறுகலா ஒரு தோசை’ என்று ஆர்டர் செய்கிறோம், இது ‘முள்’ என்பதிலிருந்து வந்தது, நாம் கடித்துத் தின்னும் முறுக்கு, நமீதா விளம்பரம் செய்கிற முறுக்குக் கம்பிகள் எல்லாமே இந்தக் குடும்பம்தான்.

    இந்தச் சொல்லுக்கு இரண்டு பொருள்கள் உள்ளன:

    1. நேராக இல்லாமல் திரிக்கப்பட்டது / முறுக்கப்பட்டது
    2. சூட்டினால் கடினமானது.

    அரிசி முறுக்குக்கும், வீடு கட்டும் கம்பிக்கும் இந்த இரண்டு பொருள்களும் பொருந்துகின்றன, ஆனால் தோசைக்கு இரண்டாவது அர்த்தம்மட்டும்தான் என்று நினைக்கிறேன்.

    அடுத்து, முருகு.

    கடினமான ‘முறுகு’வில் வல்லின ‘ற’க்குப் பதில் இடையின ‘ர’ சேர்த்தால், அர்த்தமே மாறிவிடுகிறது. இந்த ‘முருகு’வின் பொருள், அழகு, இளமை.

    அதனால்தான், ’அழகன் முருகன்’ என்கிறோம், இடுகுறிப் பெயர் அல்ல, காரணப் பெயர்!

    இப்போ, மாப்பிள்ளை முறுக்கு, மாப்பிள்ளை முருக்கு… இரண்டில் எது சரி? 😉

    ***

    என். சொக்கன் …

    094/365

     
    • Arun Rajendran 11:38 am on March 6, 2013 Permalink | Reply

      என் போன்ற இளைஞர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படி நமீதாவின் முருக்கு கம்பி..இல்லை இல்லை..முறுவல்கள் மூலம் விளக்கியமைக்கு என் புன்மூரல்களை சமர்பிக்கிறேன்..

  • என். சொக்கன் 10:39 am on February 15, 2013 Permalink | Reply  

    சின்னவளை, முகம் சிவந்தவளை… 

    • படம்: அந்த ஒரு நிமிடம்
    • பாடல்: சிறிய பறவை சிறகை விரித்து
    • எழுதியவர்: வைரமுத்து
    • இசை: இளையராஜா
    • பாடியவர்கள்: S. P. பாலசுப்ரமணியம், S. ஜானகி
    • Link: http://www.youtube.com/watch?v=rAfDNE3QKMk

    சொர்ணமே, அரச அன்னமே, இதழின் யுத்தமே முத்தமே!

    நெற்றியில் வியர்வை சொட்டுமே, கைகள் பற்றுமே, ஒற்றுமே!

    சோழன் குயில் பாடுகையில், சோலைக் குயில் ஓய்வெடுக்கும்,

    மெல்லினங்கள் பாடு கண்ணே, வல்லினங்கள் வாய் வலிக்கும்!

    சிறு பின்னணியுடன் வாசிக்கவேண்டிய வரிகள் இவை. இந்தப் பாடலின் இந்தக் குறிப்பிட்ட பகுதி (சரணம்), கம்பர் மகன் அம்பிகாபதியும், சோழன் மகள் அமராவதியும் பாடுவதாகக் கற்பனை செய்து எழுதப்பட்டுள்ளது.

    அதனால்தான், தன் காதலியைச் ‘சோழன் குயில்’ என்று வர்ணிக்கிறான் காதலன். ‘அரச அன்னமே’ என்றும் விளிக்கிறான்.

    ‘அரச அன்னம்’ என்பது வடமொழியில் உள்ள ‘ராஜ ஹம்ஸம்’ என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பு. இதை இந்த வடிவத்திலேயே பல இலக்கியங்கள் பயன்படுத்தியுள்ளன. உதாரணமாக, மணிமேகலையில், ‘அரச அன்னம் ஆங்கு இனிது இருப்ப…’, குமர குருபரர் எழுதிய ‘சகலகலாவல்லி மாலை’யில், ‘அரச அன்னம் நாண நடை கற்கும்…’

    அழகான இந்த இலக்கியச் சொல்லைச் சினிமாவுக்குக் கொண்டுவந்து, மிகப் பொருத்தமான இடத்தில் பயன்படுத்தியிருக்கிறார் வைரமுத்து. இதற்கு என்ன அர்த்தம்?

    ‘அரசன்’ என்பது இங்கே சோழனைக் குறிக்கலாம், ‘சோழன் மகளே’ என்ற அர்த்தத்தில் ‘அரச அன்னம்’ என்று காதலன் அவளைப் பாடலாம். அல்லது, ’அன்னங்களுக்கெல்லாம் அரசியைப்போன்றவளே’ என்று வர்ணிக்கலாம்.

    இவைதவிர, ‘அரச அன்னம்’ என்றே ஒரு வகை இருக்கிறதாம்.

    பொதுவாக அன்னப் பறவைகள் முழுவதும் வெண்மையாகதான் இருக்கும் என்று சொல்வார்கள். அரச அன்னம் கொஞ்சம் ஸ்பெஷல், அதன் அலகும், கால்களும் செக்கச்செவேல் என்று காணப்படும்.

    நான்காவதாக ஒரு நகைச்சுவை விளக்கமும் உண்டு, ’அரச அன்னம்’ என்பதில் அன்னத்தைச் சாதமாகக் கொண்டு ‘ராஜ போஜனம்’ என்றும் மொழி பெயர்க்கலாம். அதாவது, அரசர்கள் உண்ணக்கூடிய, அறுசுவையும் நிறைந்த Rich, Multi Course Meal. காதலன் ஒரு சாப்பாட்டு ராமனாக இருக்கும்பட்சத்தில் காதலியை ‘அடியே, அன்லிமிட்டெட் மீல்ஸே’ என்று வர்ணிப்பது பொருத்தமாக இருக்குமல்லவா?

    அடுத்து, நான்காவது வரியில் ‘மெல்லினங்கள் பாடு கண்ணே, வல்லினங்கள் வாய் வலிக்கும்’ என்று ஓர் அழகான கற்பனை உள்ளது. ஆனால், திடீரென்று காதலன் ஏன் அப்படிப் பாடவேண்டும்?

    காரணம் இருக்கிறது, இரண்டாவது வரியைக் கவனியுங்கள், ‘நெற்றி’, ‘சொட்டுமே’, ‘பற்றுமே’, ‘ஒற்றுமே’ என்று வல்லினமாகப் பாடுகிறாள் காதலி. அந்த அழுத்தத்தை அவள் தேகம் தாங்குமா என்று காதலனுக்குக் கவலை, ’இனிமேல் வல்லினம் பாடாதே கண்ணே, உனக்கு மெல்லினம் போதும்’ என்கிறான்.

    ‘வல்லினம் பாடினாலே வாய் வலிக்குமா? என்ன கதை விடறீங்க?’ என்று சண்டைக்கு வராதீர்கள். இந்தப் பாடல் எழுதப்பட்ட நேரத்தில் பெண்கள் அத்துணை மெல்லியர்களாக இருந்திருக்கிறார்கள். சாட்சிக்கு, இதேபோல் ஓர் அன்னத்தை முக்கியப் பாத்திரமாகக் கொண்ட நளவெண்பாவிலிருந்து ஒரு பாடல்:

    கொய்த மலரைக் கொடுங்கையினால் அணைத்து

    மொய்குழலில் சூட்டுவான் முன்வந்து, தையலாள்

    பாதார விந்தத்தே சூட்டினான் பாவை இடைக்(கு)

    ஆதாரம் இன்மை அறிந்து.

    காதலன் ஒரு மலரைப் பறிக்கிறான். அதை உள்ளங்கையில் ஏந்தி வருகிறான், காதலியின் அடர்த்தியான கூந்தலில் அதைச் சூட்டப் பார்க்கிறான்.

    திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை, மனத்தை மாற்றிக்கொண்டுவிடுகிறான், காதலியுடைய கால்களில் அந்த மலர்களைச் சூட்டிவிடுகிறான்.

    ஏன்?

    தலையில் பூவைச் சூட்டப்போன அந்த விநாடியில்தான், அவன் அவளது இடையைப் பார்த்திருக்கிறான், அத்தனை மெலிதான இடை, பூவின் பாரத்தைத் தாங்குமா?!

    இப்போது சொல்லுங்கள், வல்லினம் பாடினால் சோழன் குயில் என்னவாகும்!

    ***

    என். சொக்கன் …

    15 02 2013

    076/365

     
    • mokrish 7:49 pm on February 15, 2013 Permalink | Reply

      வல்லினம் மெல்லினம் தவிர இடையினம் பற்றியும் சொல்லிவிட்டீர்கள் .

      நல்லபெண்மணி என்ற படத்தில் ஒரு பழைய பாடல் நினைவுக்கு வருகிறது ‘ இனங்களிலே என்ன இனம் பெண்ணினம் (‘புலமைப்பித்தன் என்று நினைக்கிறேன் ).

      மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
      மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
      என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்

    • amas32 (@amas32) 10:07 pm on February 16, 2013 Permalink | Reply

      //காதலியை ‘அடியே, அன்லிமிட்டெட் மீல்ஸே’// LOL

      அன்பே அன்பே கொல்லாதே….பாட்டில் கவிஞர் வைரமுத்து, பெண்ணே உந்தன் மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி என்று எழுதியிருப்பார். அந்த வரிகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும், அதைத் தொடர்ந்து வரும் அடுத்த வரியினால். சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி..விரசமில்லாமல் அதே சமயம் அழகாக அழகைச் சொல்லியியிருக்கிறார்.

      amas32

    • Saba-Thambi 10:15 am on February 19, 2013 Permalink | Reply

      …….”பொதுவாக அன்னப் பறவைகள் முழுவதும் வெண்மையாகதான் இருக்கும் என்று சொல்வார்கள். அரச அன்னம் கொஞ்சம் ஸ்பெஷல், அதன் அலகும், கால்களும் செக்கச்செவேல் என்று காணப்படும்.”……

      அவுஸ்திரேலியாவில் அந்நாட்டுக்ககுரிய (Native) ஒர் அன்னம் உண்டு. அதன் நிறம் கறுப்பு, கறுப்பென்றால் கரிக்க-று -று-ப்பு. ஆனால் அதன் அலகு மட்டும் செக்கச்செவேல் என்றிருக்கும். ( Black swan )

      இவ் நீர்ப்பறவை மேற்கு அவுஸ்திரேலியாவில் பல உண்டு. பூங்காவில் அல்லது “றிசேவில்”
      (Reserves) காணப்படும் இப்பறவையை வெண் அன்னத்துடன் ஒப்பிடும் பொழுது பார்வைக்கு அழகல்ல. பலர் அவதானமாக தான் அதற்கு தீனி போடுவார்கள் .
      காரணம் – யாரையும் திரத்துவதில் வீரன் அதனால் சிறுவைர்கள் மிக்க அவதானத்துடன் பழகுவர்.

      ஓர் யோசனை – வைரமுத்து இப் பறவையை பார்த்தால் என்னத்திற்கு ஒப்பிடுவார்?

      http://en.wikipedia.org/wiki/Black_Swan

    • gopiraji@gmail.com 8:07 pm on February 24, 2013 Permalink | Reply

      Oru Chinna correction. Padathin peyar “Andha Sila Nimidangal”

      Sent from BlackBerry® on Airtel

    • மகாலிங்கம் ஆ 11:11 pm on July 27, 2013 Permalink | Reply

      நளவெண்பா கீழ்க்கண்டவாறு வெண்பா இலக்கணத்தோடு இருக்கவேண்டும்.

      கொய்த மலரைக் கொடுங்கை யினாலணைத்து
      மொய்குழலில் சூட்டுவான் முன்வந்து தையலாள்
      பாதார விந்தத்தே சூட்டினான் பாவையிடைக்
      காதார மின்மை யறிந்து.

      • என். சொக்கன் 12:16 pm on July 28, 2013 Permalink | Reply

        நன்றி ஐயா, காரணமாகதான் சொல் பிரித்துக் கொடுத்தேன், சிலருக்கு அப்படிப் பிரித்துத் தந்தால் பார்த்தவுடன் பொருள் புரியும்

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel