கொடி அசைந்ததும்…
- படம்: போலீஸ்காரன் மகள்
- பாடல்: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
- எழுதியவர்: கண்ணதாசன்
- இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
- பாடியவர்: பி. பி. ஸ்ரீனிவாஸ்
- Link: http://www.youtube.com/watch?v=BBEHY5WAbSc
குலுங்கும் முந்தானை,
சிரிக்கும் அத்தானை விரட்டுவ(து) ஏனடியோ?
உந்தன் கொடி இடை இன்று,
படைகொண்டு வந்து கொல்வவதும் ஏனடியோ!
காதலியின் கொடி இடையைப் பார்த்தால், பெரும்பாலானோர் கிளுகிளுப்பாக உணர்வார்கள், அல்லது கிறுகிறுத்துப்போவார்கள், ஏனோ, இந்தக் காதலனுக்குமட்டும் அவள் இடையைப் பார்த்துக் கிலி பிடித்துவிடுகிறது!
இடையைப் பார்த்தால் இச்சைதானே வரணும், அச்சம் ஏன் வந்தது? கண்ணதாசன் ஏன் இப்படி எழுதவேண்டும்?
போர் வந்தால் இரு தரப்பினரும் கொடி பிடித்துச் செல்வார்கள், அதில் ஈடுபடுகிற தேர்களின்மீதும் அந்தந்த அரசர்களின் கொடி பறக்கும்.
அதனால், இங்கே காதலியின் கொடி போன்ற இடையைப் பார்த்தவுடன், காதலனுக்குப் போர் ஞாபகம் வந்துவிடுகிறது. ’அடியே, இப்படிக் கொடி இடையை அசைத்து அசைத்து நடக்கிறாயே, இதன் அர்த்தம் என்ன? அடுத்து ஒரு பெரிய படையைக் கொண்டுவரப்போகிறாயா? என்மீது காதல் போர் தொடுக்கப்போகிறாயா?’ என்று கேட்கிறான்.
ஒரு பெண்ணை வர்ணிக்கும்போது போர், ராணுவமெல்லாம் ஞாபகம் வரலாமா?
தாராளமாக வரலாம். இந்த விஷயத்தில் கண்ணதாசனுக்கு முன்னோடிக் கவிஞர்கள் பலர் உண்டு. உதாரணமாக, புகழேந்தி எழுதிய நளவெண்பாப் பாடல் ஒன்றில், ஆட்சி இயல் சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களையும் பெண்மீது பொருத்திச் சொல்கிறார். இப்படி:
நால்குணமும் நால் படையா, ஐம்புலனும் நல் அமைச்சா,
ஆர்க்கும் சிலம்பே அணி முரசா, வேல் படையும்
வாளுமே கண்ணா, வதன மதிக் குடைக் கீழ்
ஆளுமே பெண்மை அரசு!
தமயந்தி என்கிற பெண்ணை அன்னம் வர்ணிக்கிறது, ‘அவள் ஒரு பெரிய மஹாராணி, தெரியுமா?’
’நிஜமாகவா?’ நளன் ஆச்சர்யப்படுகிறான், ‘எந்த நாட்டுக்கு மஹாராணி?’
‘இன்னொரு நாடு தேவையா? அவளே ஒரு நாடு, அதற்கு அவளே மஹாராணி!’ என்கிறது அன்னம்.
’கொஞ்சம் விளக்கமாகச் சொல்லேன், ப்ளீஸ்!’
’அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்கிற பெண்மைக்குரிய நான்கு குணங்களும் அவளுக்கு உண்டு, அவையே அவளது நான்கு வகைப் படைகளைப்போல.’
‘வெறும் ராணுவம்மட்டும் போதுமா? அமைச்சர்கள் வேண்டுமே!’
‘கண், காது, மூக்கு, வாய், உடல் என்ற ஐந்து புலன்களும்தான் அவளுடைய அமைச்சர்கள்.’
’அப்படியானால், அரசர்களுக்கே உரிய முரசு?’
‘அதுவும் உண்டு! நடக்கும்போது சத்தமிடும் சிலம்புதான் அவளுடைய முரசு.’
’அரசர்கள் எப்போதும் வேல், வாள் போன்ற ஆயுதங்களை வைத்திருப்பார்களே.’
’அது இல்லாமலா? அவளுடைய ஒரு கண்ணில் வேல், இன்னொரு கண்ணில் வாள்.’
‘எல்லாம் சரி, வெண்கொற்றக் குடை?’
’நிலவு போன்ற அவளுடைய அழகிய முகம், அதைவிடச் சிறந்த வெண்கொற்றக் குடை எங்கே உண்டு?’
‘அப்படியானால்…’
’ராணுவமும் அமைச்சர் படையும் முரசும் ஆயுதங்களும் வெண்கொற்றக்குடையுமாக, தன்னுடைய பெண்மை அரசாங்கத்தை ஆட்சி செய்கிறாள் அந்தத் தமயந்தி!’
***
என். சொக்கன் …
198/365
rajnirams 12:26 pm on June 17, 2013 Permalink |
ஆஹா,பிரமாதம்.நளவெண்பா பாடலின் சுவையை அறிந்து கொண்டேன்.என்ன ஒரு வர்ணனை.”கொடியை”கட்சிக்காரர்களை விட இடையை வர்ணிக்க கவிஞர்கள் அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்கள் போலும்.”பூவறையும் பூங்கொடியே-வாலி. இடை ஒரு கொடி,இதழ் ஒரு கனி-கண்ணதாசன்,இடை நூலாடி செல்ல செல்ல ஓஹோ-வாலி.இது என்ன கூத்து அதிசயமோ-இளநீர் காய்க்கும் கொடி இதுவோ-வைரமுத்து இப்படி.
Arun Rajendran 3:00 am on June 18, 2013 Permalink |
சொக்கன் சார்,
இன்று இடையிலக்கணமா?
வண்ண மேகலைத் தேர் ஒன்று வாள் நெடுங்
கண் இரண்டு கதி முலை தாம் இரண்டு
உள் நிவந்த நகையும் என்று ஒன்று உண்டால்
எண்ணும் கூற்றினுக்கு இத்தனை வேண்டுமோ!
—–மிதிலைக் காட்சிப் படலம்
ஆக, பெண்ணின் உடலே படைக்கலன் தான்..சிறுத்தக் கொடியிடை, மற்றப் போர் கருவிகளை அழகுற வெளிப்படுத்தும்..அத்தகைய மலர்கொடியிடை, ’பதாகை’ போன்று அசைந்து ”அந்திப்போர்” துவக்க வழிவகை செய்தலால் காதலன் சிறிது அச்சப்பட்டுதானே ஆக வேண்டும்?
இவண்,
அருண்
amas32 (@amas32) 2:28 pm on June 19, 2013 Permalink |
உடலே ஒரு கோவில் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கு பெண் உடலே ஒரு சாம்ராஜ்ஜியமாக வர்ணிக்கும் பாடலைக் கொடுத்திருக்கிறீர்கள். பெண்ணை வர்ணிக்கும் புலவனின் கண்ணிற்கும் கற்பனை வளத்திற்கும் இந்தப் பாடல்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
பெண்ணென்றால் பேயும் இறங்கும் என்ற பழமொழி பெண்ணிடம் இருக்கும் இந்த பவரினால் தானோ? :-)))
amas32
freevariable 4:44 am on June 21, 2013 Permalink |
அடடா அருமை!