நிலவைப் பார்த்தால் கவிஞனுக்குக் கவிதை வரும். குழந்தைக்கு தூக்கம் வரும். காதலர்களுக்கு ஏக்கம் வரும். ஏழைகளுக்குப் பசி வரும். கோழைகளுக்கு பயம் வரும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று வரும்.
அந்த நிலவைப் பாடாத கவிஞன் இல்லை. பாடாவிட்டால் கவிஞன் இல்லை. இலக்கியச் சுவைகள் எத்தனை உண்டோ, அத்தனை விதமான சுவைகளையும் வெளிப்படுத்தும் கவிதைகளிலும் நிலவு இருக்கும். இது மறுக்க முடியாத உண்மை.
அப்படியிருக்க திரைப்படக் கவிஞர்கள் மட்டுமென்ன நிலவோடு கோவித்துக்கொண்டவர்களா?
அவன் மனைவியை இழந்தவன். நெஞ்சமெல்லாம் சோகம். அவனை விரும்புகிறாள் ஒருத்தி. அவள் காதலை மறுக்க வேண்டும். அதே நேரத்தில் சோகத்தையும் சொல்ல வேண்டும். இரண்டையும் ஒரே வரியில் சொல்ல கவியரசர் கண்ணதாசனுக்கு கைகொடுக்கிறது நிலவு. “நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை”.
அதே கவியரசர். வேறொரு கதாநாயகன். திருமணமானவன். பிடிக்காத கல்யாணம். தொடாதே என்று சொல்லிவிட்டாள் மனைவி. அவனுடைய ஆத்திரத்தையும் ஆற்றாமையையும் ஒரே வரியில் சொல்ல வேண்டும். மறுபடியும் நிலா உதவுகிறது. “நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே”.
நல்லவர்கள் இருவர். தவறு செய்கிறார்கள். அவர்கள் செய்வது கடத்தல். கடலில் தோணி கட்டி தோணியில் பாட்டு கட்டி ஆடிப்பாடி வருகிறார்கள். அவர்கள் களிப்புக்கும் கும்மாளத்துக்கும் நிலவு உதவுகிறது. “நிலா அது வானத்து மேலே. பலானது ஓடத்து மேலே” என்று எழுதினார் இளையராஜா.
குழந்தைகளுக்கும் கோவம் வரும். அந்தக் கோவத்தை மாற்றுவது எளிதான செயலா? கோவித்தது சேயாக இருந்தாலும் ஆடியும் பாடியும் சமாதானப்படுத்துவது தாயாகத்தான் இருக்கும். அப்படிச் சமாதான வரிகளைச் செதுக்க கவிஞர் வாலிக்குத் துணை வந்ததும் நிலாதான். “மண்ணில் வந்த நிலவே, என் மடியில் பூத்த மலரே” என்று எழுதினார்.
தூக்கத்துக்குக் காரணமாகும் நிலவுதான் ஏக்கத்தும் காரணமாகிறது. காதலர்கள் பிரிந்தாலும் துன்பம். கூடினாலும் பிரியப் போவதை எண்ணித் துன்பம். அந்தத் துன்பம் அவனைத் தூங்கவிடவில்லை. அப்படியொரு பாட்டெழுத வேண்டும். ”நிலவு தூங்கும் நேரம். நினைவு தூங்கிடாது” என்று எழுதினார் வாலிபக் கவிஞர் வாலி.
காதலர்கள் உள்ளத்தில் எப்போதும் ஒரு பெருமிதம் இருக்கும். இந்தக் காதலனுக்கும் அப்படிதான். அவன் காதலி பேரழகி. அப்படியொரு பிரபஞ்ச அழகி அவனுக்குக் காதலி என்ற பெருமிதத்தைப் பாட்டில் சொல்ல வேண்டும். இந்த முறை நிலவோடு கை கோர்த்தவர் வைரமுத்து. “சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்டிராங்கா? அடி ஆம்ஸ்டிராங்கா? சத்தியமாய் தொட்டது யார்? நான்தானே” என்று எழுதினார்.
அவனுக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. வாழ்க்கை எப்படியெல்லாம் ஏமாற்றியது என்ற வெறுப்பைப் பாட்டில் சொல்ல வேண்டும். இந்த முறை நிலவை துணைக்கழைத்தவர் புலவர் புலமைப்பித்தன். “சந்திரனப் பாத்தா சூரியனாத் தெரிகிறது. செங்கரும்பு கூட வேம்பாகக் கசக்கிறது” என்று எழுதினார்.
கும்மாளக் காதலர்களுக்குத் திருமணமும் ஆகிவிட்டது. குதித்துக் கொண்டிருந்தவர்களுக்குக் கால்கட்டு போட்டாயிற்று. இன்று முதல் இரவு. அந்த அளவுக்கு மீறிய உற்சாகத்தை மகிழ்ச்சியின் உச்சத்தை வரிகளில் கொண்டு வர முடியுமா? நிலவிருக்க பயமேன். “நிலவைக் கொண்டு வா கட்டிலில் கட்டி வை” என்று வைரவரிகளை வைரமுத்து கொடுத்தார்.
இப்படியாக சோகம், ஏக்கம், ஆதங்கம், மகிழ்ச்சி, கொண்டாட்டம், உல்லாசம், ஆத்திரம், தாலாட்டு என்று எந்த வகை உணர்ச்சியையும் கவிதையில் வடிக்க உதவுவது நிலவு.
என்ன? பக்திச் சுவை விட்டுப் போயிற்றா? யார் சொன்னார்கள்? இறையருளைப் பெற்றதும் சுந்தரரே “பித்தா பிறைசூடி” என்றுதான் பாடத் தொடங்கினார். சின்னஞ்சிறு குழந்தையாய் திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்டு பாடிய பொழுது “தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடி” என்றுதான் பாடினார்.”
ஓ! திரைப்படப் பாடலாக இருந்தால்தான் ஒத்துக் கொள்வீர்களா? சரி. அதற்கும் பாடல்கள் பல உண்டு. ஆனாலும் ஒன்று சொல்கிறேன். ஆதிபராசக்தி திரைப்படத்தில் அபிராமி பட்டர் எப்படிப் பாடுகிறார்? ”சொல்லடி அபிராமி நில்லடி முன்னாலே முழு நிலவினைக் காட்டு உன் கண்ணாலே” என்று கண்ணதாசன் எழுதிக் கொடுத்தபடிதானே பாடினார்?
இந்தப் பாடல்கள் மட்டுந்தானா? இல்லை. இன்னும் எத்தனையெத்தனையோ பாடல்கள். “வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா” என்று பாட்டு முழுக்க எழுதினார் கவியரசர் கண்ணதாசன்.
இந்த நிலவுக்கு எத்தனையெத்தனை பெயர்கள். மதியென்பார். சந்திரனென்பார். பிறையென்பார். வெண்ணிலா என்பார். முழுமதி, நிறைமதி, வளர்மதி, வெண்மதி என்று எத்தனையெத்தனையோ பெயர்கள்.
ஈசனார் சூடிய பிறைச் சந்திரனை ஞானக்கண்ணால் பார்க்கிறார் அருணகிரிநாதர். அந்தப் பிறைச் சந்திரனை என்ன சொல்லிப் பாடுவது? உடனே ஒரு திருப்புகழ் பிறக்கிறது.
பாதிமதி நதி போது மணிச்சடை நாதர் அருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா
பிறைச்சந்திரன் பாதியாகத்தானே இருக்கிறது. அதனால் பாதிமதி என்றே பெயர் சூட்டிவிட்டார் அருணகிரிநாதர்.
அதே அருணகிரி கந்தரந்தாதியில் நிலவுக்கு இன்னொரு பெயரைச் சொன்னார். அந்தப் பெயரை அவருக்கு முன்னாலும் பின்னாலும் யாரும் சொன்னதில்லை.
சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்தசெந்திற்
சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்தவென்னிற்
சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்
சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே
இந்தப் பாடலில் நிலவுக்கு அவர் சொல்லியிருக்கும் பெயர் பனிப்பானு. பானு என்றால் சூரியனைக் குறிக்கும். பனி குளுமையைக் குறிக்கும். நிலவு என்பது குளுமையான சூரியனாம். அதனால்தான் பனிப்பானு என்று புதுப்பெயர் சூட்டியிருக்கிறார் அருணகிரி. அழகான பெயரல்லவா?
நிலா நிலா ஓடி வா! நில்லாமல் ஓடி வா! மலை மேலே ஏறி வா! மல்லிகைப்பூ கொண்டு வா!
பதிவில் இடம் பெற்ற பாடலின் சுட்டிகள்.
பாதிமதிநதி (யாமிருக்க பயமேன்) – http://youtu.be/FDMcv6CjglI
நிலவே என்னிடம் நெருங்காதே (ராமு) – http://youtu.be/Z8MYbZVETDU
நிலவைப் பார்த்து வானம் (சவாலே சமாளி) – http://youtu.be/FSdL74sUCNE
நிலா அது வானத்து மேலே (நாயகன்) – http://youtu.be/ldPFymzsVd8
நிலவு தூங்கும் நேரம் (குங்குமச் சிமிழ்) – http://youtu.be/0k6lUIhIqPo
சந்திரனைத் தொட்டது யார் (ரட்சகன்) – http://youtu.be/ZIQXtyJQMIE
சந்திரனப் பாத்தா (பிரம்மச்சாரிகள்) – http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=3278
மண்ணில் வந்த நிலவே (நிலவே மலரே) – http://youtu.be/UmCcv-4uv7k
நிலவைக் கொண்டு வா (வாலி) – http://youtu.be/QOcrng-CkmE
தோடுடைய செவியன் (ஞானக்குழந்தை) – http://youtu.be/-OT2RCgAvVA
சொல்லடி அபிராமி (ஆதிபராசக்தி) – http://youtu.be/fCltNDw_oFA
வான் நிலா நிலா அல்ல (பட்டினப்பிரவேசம்) – http://youtu.be/bV8V2oowwwI
அன்புடன்,
ஜிரா
168/365
Uma Chelvan 12:47 am on November 22, 2013 Permalink |
நினைக்க மறந்தாய் , தனித்து பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகத்திரை இருப்பாயோ!!
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய …….
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன்…
ராஜா ஒரு மழை போல்!! மழைக்கு காடென்ன, கடெலென்ன, பாரபட்சம் இல்லாமல் எங்கும் பொழிவது போல் .ராஜாவும்…….மோகன், முரளி, ராமராஜன், சிவகுமார், விஜயகாந்த் முதற்கொண்டு அனைவரையும் கட்டி காத்த எல்லைச் சாமி. நல்ல குரல் வளம் கொண்ட வடிவேலும் ராஜவினால்தான் சினிமாவில் பாட ஆரம்பித்தார் என்று நினைகிறேன்.
மாமழை போற்றுதும்!!!! ராஜாவையும் !!!!!
rajinirams 10:38 am on November 22, 2013 Permalink |
அருமையான பதிவு. நீங்கள் சொன்னது போல “ஆணும் பெண்ணும் பரிமாறிக்கொள்ளும் காதல் பார்வை கவிஞர்களின் கற்பனைக்கு நிறைய தீனி போட்டிருக்கிறது”.கவியரசரின் “பார்வையிலேயே”ஏராளம். பார்த்தேன் ரசிந்தேன் என்று ஆரம்பித்து ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்,என்ன பார்வை உந்தன் பார்வை,பார்வை யுவராணி கண்ணோவியம் இப்படி பல. எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன என்ற கேள்விக்கு உன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது என்பது கண்ணதாசனின் பார்வை தான்.ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்,கண் தேடுதே சொர்க்கம்-வாலியின் பார்வை.உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில்-இது கங்கை அமரனின் கற்பனை.பார்வையாலே நூறு பேச்சு,வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு-வைரமுத்துவின் பார்வை. விழிகள் மேடையாம்,இமைகள் திரைகளாம் “பார்வை”நாடகம் அரங்கில் ஏறுமாம்-இது டி.ராஜேந்தரின் பார்வை.பார்க்காதே பார்க்காதே-நீ பார்த்தா பறக்குறேன் பாதை மறக்குறேன்-இது யுகபாரதியின் வருத்தப்படாத வாலிபர் சங்க பார்வை. நன்றி.
“மார்கழி பார்வை பார்க்கவா” என்ற வார்த்தைகளும் நல்ல கற்பனையே-ராஜாவின் இசையில் உள்ள இந்த பாடலை கேட்டிருக்கிறேன்,எந்த படம் என்று தெரியவில்லை.(உயிரே உனக்காக என்ற பெயரில் எடுக்கப்பட்டு நின்று போனது என்று நினைக்கிறேன்) http://youtu.be/XEvlj_vvgoM
amas32 11:57 am on November 22, 2013 Permalink |
//இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது
நான் கேட்டதை தருவாய் இன்றாவது//
இந்த வரிகள் தான் நீங்கள் இன்று கொடுத்திருப்பதிலேயே பெஸ்ட். என்ன ஒரு கற்பனை, உண்மைக்கு மிக அருகில். கண்ணதாசனைப் பெற்ற இத் தமிழகம் புண்ணிய பூமி!
amas32
srimathi 10:54 pm on November 22, 2013 Permalink |
I’m glad that there are so many songs where a woman’s perspective is portrayed. To be exactly in woman’s shoes is possible only when a woman writes it herself. Ondra renda aasaigal from kaakha kaakha is a popular example. Thamarai writes it this way “thoorathil nee vandhaale en manadhil mazhai adikkum, miga piditha paadal ondru udhadugalil munumunukkum”