Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • mokrish 9:17 pm on November 21, 2013 Permalink | Reply  

    நீ பார்த்த பார்வைக்கொரு 

    இந்த மாதம் கமல்ஹாசன் பிறந்த நாளன்று ஏதோ ஒரு டிவி சானலில் விஸ்வரூபம் படத்தில் வரும்  உன்னைக் காணாது நான் என்ற பாடலை (இசை சங்கர் – ஈசான்- லாய் பாடியவர்கள்  கமல்ஹாசன், சங்கர் மகாதேவன்)  ஒளிபரப்பினார்கள் பண்டிட் பிர்ஜு  மகராஜ் வடிவமைத்த அருமையான கதக் நடனம். கமல்ஹாசனே நாயகி பாவத்தில் எழுதிய பாடல். அதில் வரும் வரிகள்

    http://www.youtube.com/watch?v=XuOgG2QWAgQ

    அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாணுவேன்

    கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்

    ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்

    ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்

    இந்த 2013ல் ‘எவ்வாறு நாணுவேன்’ என்று ஒரு நாயகி யோசிப்பதும் கண்ணாடி முன் ரிகர்சல் செய்து பார்ப்பதும் என்ற interesting கவிதை.

    ஆணும் பெண்ணும் பரிமாறிக்கொள்ளும் காதல் பார்வை கவிஞர்களின் கற்பனைக்கு நிறைய தீனி போட்டிருக்கிறது. உடனே நம் நினைவுக்கு வருவது கம்பன் சொன்ன அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள். இது கண்டதும் காதல் இல்லை தற்செயலாக (Accidentally) ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்’ என்கிறார் புலவர் கீரன்.

    வள்ளுவர் ஒரு முழு அதிகாரமே எழுதியிருக்கிறார். பெண்ணின் ஒரு பார்வை காதல் நோயைத் தரும். அதுவே நோய்க்கு மருந்தளிக்கும்.  நான் பார்க்கும்போது மண்ணை பார்க்கின்றாயே என்று எல்லாமே  ஒரு ஆணின் Point of View. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் என்ற குறளில் பெண்ணின் பார்வை ஒரு படையுடன் வந்து தாக்குவதுபோல் இருக்கிறது என்பதும் ஆண் சொல்வதே.

    இதில் ஒரு பெண்ணின் நிலை என்ன? சில திரைப்பாடல்களில் கிடைத்த சுவாரஸ்ய முத்துகள். இவன் என்ற படத்தில் பழனிபாரதி எழுதிய பாடல்  (இசை இளையராஜா பாடியவர்கள் மாதங்கி, உன்னிகிருஷ்ணன் )

    http://www.youtube.com/watch?v=Tu7Hjb8NOmo

    அப்படி பாக்குறதுன்னா வேணாம்

    கண் மேலே தாக்குறது வேணாம்
    தத்தி தாவுறதுன்னா னா னா
    தள்ளாடும் ஆசைகள் தானா
    என்ன கேட்காமல் கண்கள் செல்ல
    உன் பக்கம் பார்த்தேன்
    மிச்சம் இல்லாமல் வெட்கம் தின்ன
    காணாமல் போனேன்

    கமலின் 2013 நாயகி எப்படி நாணுவது என்று practise செய்கிறாள். பழனிபாரதியின் 2002 நாயகி வெட்கம் தின்ன காணாமல்  போகிறாள். டைம் லைனில் கொஞ்சம் முன்னே போய் 60களில் வந்த சில பாடல்களைப் பார்த்தால் pleasant surprise. பணக்கார குடும்பம் என்ற படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்  (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர்கள் டி எம் எஸ், பி சுசீலா)

    http://www.youtube.com/watch?v=ABRw-iSaCJI

    இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்  தானா

    இப்படி என்று சொல்லி இருந்தால் தனியே வருவேனா …..

    இது ஏய் அப்படி பாக்காதே mode தான். ஆனால் வல்லவன் ஒருவன் படத்தில் கண்ணதாசன் எழுதிய இன்னொரு பாடல் bold & beautiful.  (இசை வேதா பாடியவர்கள் டி எம் எஸ், பி சுசீலா)

    http://www.youtube.com/watch?v=Lu8FNldHluA

    இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது

    இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது

    நான் கேட்டதை தருவாய் இன்றாவது

    கவியரசர் பெண்ணின் கோணத்தில் சொல்லும் அதிரடி வரிகள். 1966ல் வெளிவந்த பாடல் வரிகள் என்று நம்பவே முடியவில்லை. இதை மக்கள் எப்படி விமர்சனம் செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

    மோகனகிருஷ்ணன்

     
    • Uma Chelvan 12:47 am on November 22, 2013 Permalink | Reply

      நினைக்க மறந்தாய் , தனித்து பறந்தேன்
      மறைத்த முகத்திரை திறப்பாயோ
      திறந்து அகத்திரை இருப்பாயோ!!
      இருந்து விருந்து இரண்டு மனம் இணைய …….

      உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன்…

      ராஜா ஒரு மழை போல்!! மழைக்கு காடென்ன, கடெலென்ன, பாரபட்சம் இல்லாமல் எங்கும் பொழிவது போல் .ராஜாவும்…….மோகன், முரளி, ராமராஜன், சிவகுமார், விஜயகாந்த் முதற்கொண்டு அனைவரையும் கட்டி காத்த எல்லைச் சாமி. நல்ல குரல் வளம் கொண்ட வடிவேலும் ராஜவினால்தான் சினிமாவில் பாட ஆரம்பித்தார் என்று நினைகிறேன்.

      மாமழை போற்றுதும்!!!! ராஜாவையும் !!!!!

    • rajinirams 10:38 am on November 22, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு. நீங்கள் சொன்னது போல “ஆணும் பெண்ணும் பரிமாறிக்கொள்ளும் காதல் பார்வை கவிஞர்களின் கற்பனைக்கு நிறைய தீனி போட்டிருக்கிறது”.கவியரசரின் “பார்வையிலேயே”ஏராளம். பார்த்தேன் ரசிந்தேன் என்று ஆரம்பித்து ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்,என்ன பார்வை உந்தன் பார்வை,பார்வை யுவராணி கண்ணோவியம் இப்படி பல. எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன என்ற கேள்விக்கு உன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது என்பது கண்ணதாசனின் பார்வை தான்.ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்,கண் தேடுதே சொர்க்கம்-வாலியின் பார்வை.உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில்-இது கங்கை அமரனின் கற்பனை.பார்வையாலே நூறு பேச்சு,வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு-வைரமுத்துவின் பார்வை. விழிகள் மேடையாம்,இமைகள் திரைகளாம் “பார்வை”நாடகம் அரங்கில் ஏறுமாம்-இது டி.ராஜேந்தரின் பார்வை.பார்க்காதே பார்க்காதே-நீ பார்த்தா பறக்குறேன் பாதை மறக்குறேன்-இது யுகபாரதியின் வருத்தப்படாத வாலிபர் சங்க பார்வை. நன்றி.
      “மார்கழி பார்வை பார்க்கவா” என்ற வார்த்தைகளும் நல்ல கற்பனையே-ராஜாவின் இசையில் உள்ள இந்த பாடலை கேட்டிருக்கிறேன்,எந்த படம் என்று தெரியவில்லை.(உயிரே உனக்காக என்ற பெயரில் எடுக்கப்பட்டு நின்று போனது என்று நினைக்கிறேன்) http://youtu.be/XEvlj_vvgoM

    • amas32 11:57 am on November 22, 2013 Permalink | Reply

      //இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது

      இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது

      நான் கேட்டதை தருவாய் இன்றாவது//

      இந்த வரிகள் தான் நீங்கள் இன்று கொடுத்திருப்பதிலேயே பெஸ்ட். என்ன ஒரு கற்பனை, உண்மைக்கு மிக அருகில். கண்ணதாசனைப் பெற்ற இத் தமிழகம் புண்ணிய பூமி!

      amas32

    • srimathi 10:54 pm on November 22, 2013 Permalink | Reply

      I’m glad that there are so many songs where a woman’s perspective is portrayed. To be exactly in woman’s shoes is possible only when a woman writes it herself. Ondra renda aasaigal from kaakha kaakha is a popular example. Thamarai writes it this way “thoorathil nee vandhaale en manadhil mazhai adikkum, miga piditha paadal ondru udhadugalil munumunukkum”

  • என். சொக்கன் 10:02 pm on November 4, 2013 Permalink | Reply  

    ”ஓ” போடு 

    • படம்: பார்த்தேன் ரசித்தேன்
    • பாடல்: எனக்கென ஏற்கெனவே
    • எழுதியவர்: வைரமுத்து
    • இசை: பரத்வாஜ்
    • பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், ஹரிணி
    • Link: http://www.youtube.com/watch?v=Y2_9E4M4zWo

    எனக்கென ஏற்கெனவே பிறந்தவள் இவளோ!

    இதயத்தைக் கயிறு கட்டி இழுத்தவள் இவளோ!

    தமிழில் ’ஓ’ என்ற எழுத்து ஒரு பெயர்ச் சொல்லோடு ஒட்டி வந்தால், அது சந்தேகத்தைக் குறிப்பிடும்.

    ‘நான்’ என்றால் உறுதிப்பொருள், ‘நானோ’ என்றால் சந்தேகம்! (”டாடா நானோ” அல்ல!)

    ‘அவன்’ என்றால் உறுதிப்பொருள், ‘அவனோ’ என்றால் சந்தேகம்!

    ஆகவே, இந்தப் பாடலில் ‘எனக்கென ஏற்கெனவே பிறந்தவள் இவளோ’ என்றால், காதலனுக்கு இன்னும் அவள்தான் தன்னுடைய காதலி, பின்னர் தன் மனைவியாகப்போகிறவள் எனும் நம்பிக்கை வரவில்லையோ? அதனால்தான் கொஞ்சம் சந்தேகமாகவே பாடுகிறானோ?

    காதலனுக்குச் சந்தேகம் வரலாம், கவிஞருக்கு வரலாமா? அவள்தான் என்று உறுதியாக அடித்துச் சொல்லவேண்டாமோ?

    வைரமுத்து அதைதான் செய்திருக்கிறார், தண்டியலங்காரத்தில் ‘அதிசய அணி’ என்று குறிப்பிடப்படும் அணியின்கீழ் வருகிற ‘ஐய அதிசயம்’ என்ற வகையில் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார்.

    ’ஐய அதிசயம்’ என்றால் ஐயப்படுவதன்மூலம் (சந்தேகப்படுவதன்மூலம்) ஒரு பொருளை உயர்த்திச் சொல்வது. ‘இவளோ’ என்றால், இங்கே ‘இவள்தான்’ என்று அர்த்தம்!

    உதாரணமாக, காதலியைப் பார்த்து ஒருவன், ‘அடியே நீ வெண்ணிலவோ, பூங்கொத்தோ, தேவதையோ, அப்ஸரஸோ, ஹன்ஸிகாவோ, நஸ்ரியாவோ’ என்றெல்லாம் வரிசையாக “ஓ” போட்டால், அதெல்லாம் சந்தேகம் அல்ல, நீதான் வெண்ணிலவு, நீதான் பூங்கொத்து, நீதான் தேவதை என்று உறுதியாகச் சொல்லி அவளை உயர்த்திப் பேசுவதாக அர்த்தம்!

    ஆஹா, இதுவல்லவோ கவிதை!

    ***

    என். சொக்கன் …

    04 11 2013

    337/365

     
    • Kannan 10:45 pm on November 4, 2013 Permalink | Reply

      Super. O Podu

    • rajinirams 11:45 pm on November 4, 2013 Permalink | Reply

      “ஐய அதிசயம்’ பற்றி எடுத்துரைத்த அருமையான பதிவு.-நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற “அழகோ”…குடந்தையில் பாயும் காவிரி அலை தான் காதலியே உன் “பூங்குழலோ”-மதுரையில் பிறந்த -பாடல் இப்படி ….. நன்றி.

    • amas32 9:18 pm on November 5, 2013 Permalink | Reply

      நீ தான் என் நஸ்ரியாவோ, நயந்தாராவோ என்றால் காதலியிடம் இருந்து அடி தான் கிடைக்கும். காதலி has to be exclusive/special 🙂 நிலவோடு, காப்பியத் தலைவிகளோடு தைரியமாக ஒப்பிடலாம் ஏனென்றால் நிலவு ஒரு அற்புத அழகின் சின்னம், காவியத் தலைவிகளோ இன்று உயிருடன் இல்லை 🙂

      amas32

    • lotusmoonbell 9:20 pm on November 6, 2013 Permalink | Reply

      ஓ ஓ போட்டுவிட்டேன். நாலு வரிக்கு ஜே போடு!

  • என். சொக்கன் 9:38 pm on October 25, 2013 Permalink | Reply  

    கங்கையும் காவிரியும் 

    • படம்: ஞானப்பழம்
    • பாடல்: யாரும் இல்லாத தீவொன்று வேண்டும்
    • எழுதியவர்: பா. விஜய்
    • இசை: கே. பாக்யராஜ்
    • பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சுஜாதா
    • Link: http://www.youtube.com/watch?v=QRWeVVy-rMk

    காவிரியில் வந்து கங்கை

    கை சேர்க்க வேண்டும்,

    நாமும் அதில் சென்று காதல்

    நீராடவேண்டும்!

    இன்று மாயவரம் மயூரநாதர் ஆலயம் சென்றிருந்தேன். அத்தலத்தின் வரலாற்றுப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தபோது, சட்டென்று இந்தப் பாடல், இந்த வரியை நோக்கிச் சென்றேன்.

    காவிரியில் கங்கை வந்து சேரவேண்டும் என்பது ஒரு சுவையான கற்பனை. புவியியல் ரீதியில் சிரமம், ஆனால் கவி மனத்துக்குச் சாத்தியம், காதல் நோக்கமோ, பக்தி நோக்கமோ!

    மனிதர்கள் செய்த குற்றங்களைக் கழுவ கங்கைக்குச் சென்று நீராடுவார்கள். ஆனால், இப்படி எண்ணற்றோரின் அழுக்குகளைச் சேர்த்துக்கொண்ட கங்கை என்ன ஆகும்?

    தவறு செய்த மனிதர்கள் கங்கையில் குளித்துக் குளித்து அந்த நதியே அழுக்காகிவிட்டதாம். அதனைப் புனிதமாக்க, மாயவரம் நகரில் உள்ள காவிரிக்கு வந்து மூழ்கி எழுந்ததாம். இப்படிச் செல்கிறது இந்நகரின் தல புராணம்.

    கிட்டத்தட்ட இதையே பிரதிபலிப்பதுபோல, ‘மகாநதி’ படத்தில் வாலி எழுதிய இரு வெவ்வேறு பாடல்கள், ஒன்றில் ‘கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம்’ என்பார், இன்னொரு பாடலில், ‘இங்கே குளிக்கும் மனிதர் அழுக்கில் கங்கை கலங்குது’ என்பார்.

    இதற்கெல்லாம் அர்த்தம், கங்கையை இழிவுபடுத்துவது அல்ல. நம் அழுக்குகளை ஒரு நதி கழுவிவிடும் என்ற சிந்தனை ஒரு வசதியாக அமைந்துவிடக்கூடாது. ‘தப்புச் செஞ்சுட்டு, அப்புறமா மன்னிப்புக் கேட்டுக்கலாம்’ என்று நினைக்காமல், உண்மையிலேயே திருந்துகிறவர்களாக நாம் இருக்கவேண்டும் என்றுதான் வாலியும், மாயவரத் தல புராணமும் சொல்வதாக நான் நினைக்கிறேன்!

    ***

    என். சொக்கன் …

    25 10 2013

    327/365

     
    • Uma Chelvan 2:12 am on October 26, 2013 Permalink | Reply

      கண்ணதாசன் இதையே கொஞ்சம் மாற்றி எழுதியுள்ளார்

      கங்கையின் வெள்ளம் தண்ணீரோ -இல்லை
      கன்னியர்கள் விடும் கண்ணீரோ ……………………………….

      பிருந்தா வனத்திற்கு வருகிறேன்

    • amas32 8:30 pm on October 27, 2013 Permalink | Reply

      கங்கையை விட காவிரி உயர்ந்தது என்ற எண்ணம் நமக்குப் பெருமையே. ஏனென்றால் கங்கையைப் புகழாத இதிகாசமோ புராணமோ கிடையாது. கங்கை தன் பாவத்தைப் போக்கக் காவிரி நதியிடம் வருகிறாள் என்றால் காவிரியின் மகத்துவம் தான் என்னே!

      amas32

    • kannan 10:40 pm on November 5, 2013 Permalink | Reply

      Pulamai Pithan has thought about it much before Vijay.

      //கங்கையும் தெற்கே பாயாதா? காவிரியோடு சேராதா?//

      Film – Unnal Mudiyum Thambi.

  • என். சொக்கன் 4:32 pm on September 26, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு: காதல் மயக்கம் 

    காதலை பற்றி பல்வேறு கவிஞர்கள் பலவிதமாக பாடியிருக்கிறார்கள் –

    உலகமெங்கும் ஒரே மொழி,உண்மை பேசும் காதல் மொழி-கவியரசர் கண்ணதாசன்.

    காதல் எனும் தேர்வெழுதி  என்று தேர்வுக்கு ஒப்பாக எழுதியவர் காவியக்கவிஞர் வாலி.

    காதலித்துப் பார்-உன்னை சுற்றி ஒளி வட்டம் தோன்றும்,உனக்கும் கவிதை வரும் என்று கவிதை எழுதியவர் கவிப் பேரரசு வைரமுத்து.

    திரைப்படங்களில் காதல் வயப்பட்டவர்களின் சிந்தனையை நம் கவிஞர்கள் தங்கள் கற்பனையில் வெளிப்படுத்தும் விதம் அலாதியானது.இந்த வகையில் ஆயிரக்கணக்கான பாடல்கள் இருந்தாலும் எனக்கு உடனே தோன்றியது இந்த மூன்று பாடல்கள். உணவிருந்தாலும் உண்பதற்கு மனமிருக்காது பசியுமிராது என்பதை எளிமையாக கூறும் பாலிருக்கும் பழமிருக்கும் பாடல்.  

    “கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களை தேடும்,பாதி கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும் என்று” தன் நிலையை எடுத்துசொல்வது மட்டுமல்லாமல்  

                                  “காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே,

                                    கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே 

                                     வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே “என்று காதலுக்கு வக்காலத்து வாங்கும் கவியரசரின் வரிகள் நிறைந்த பாடல் 

                                    பாடல்:பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது 

                                     படம்- பாவ மன்னிப்பு 

                                      இயற்றியவர்-கவியரசர் கண்ணதாசன் 

                                     பாடியவர்:பி.சுசிலா 

                                       இசை-விஸ்வநாதன் ராமமூர்த்தி 

    இரண்டாவது பாடல்-தன் இதயம் தொலைந்து போனதாக கூறும் “என்னவளே” பாடல்:-காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உன்னை கண்டதும் கண்டு கொண்டேன்-கழுத்து வரை எந்தன் காதல் வந்து இரு கண்விழி பிதுங்கி நின்றேன்.”வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் வசப்படவில்லையடி 

                                                   வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும் 

                                                    உருளுதடி, என்றும்  ,காதலுக்கு காத்திருக்கும் தருணத்தை-“காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி” என்று தன் உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.”

                                                                    பாடல்-என்னவளே அடி என்னவளே 

                                                                     படம்-காதலன் 

                                                                     இயற்றியவர்-கவிப்பேரரசு வைரமுத்து 

                                                                      பாடியவர்-உன்னிகிருஷ்ணன் 

                                                                       இசை-ஏ.ஆர்.ரகுமான்.

    மூன்றாவது பாடல் : “விழிகளின் அருகினில் வானம்-தொலைவினில் தொலைவினில் தூக்கம்,இது ஐந்து புலன்களின் ஏக்கம்,என் முதல் முறை அனுபவம்.”தன்னாலும் பேச முடியவில்லை,பிறர் கேட்பதும் தன் காதில் விழவில்லை,என்ற விக்கித்து நிற்கும் நிலையை வெளிப்படுத்தும் வார்த்தை வரிகள் 

    “கேட்காத ஓசைகள்,இதழ் தாண்டாத வார்த்தைகள்,இமை மூடாத பார்வைகள்-இவை நான் கொண்ட மாற்றங்கள்” அருமை.மேலும் “பசி நீர் தூக்கம் இல்லாமல் உயிர் வாழ்கின்ற மாற்றங்கள்” என்று அதிசயித்து  “இருதயமே துடிக்கிறதா-துடிப்பது போல் நடிக்கிறதா”என்று வெளிப்படுத்தும் விதம் அபாரம்.

                                                                 பாடல்-விழிகளின் அருகினில் வானம் 

                                                                  படம்-அழகிய தீயே 

                                                                 இயற்றியவர்-கவிவர்மன் 

                                                                  இசையமைத்து பாடியவர்-ரமேஷ் விநாயகம்.

            பாடல்களுக்கான சுட்டிகள்:

                     பாலிருக்கும் பழமிருக்கும் –      http://youtu.be/xqofnfgytws

                      என்னவளே அடி என்னவளே:   http://youtu.be/tvZi0fd_1IY

                     விழிகளின் அருகினில் வானம்: http://youtu.be/nb_v7W4HfCw

    பின்குறிப்பு: “விழிகளின் அருகினில் வானம்”பாடலை எழுதிய கவிவர்மன், என் சொந்த அண்ணன்!

    நா. ராமச்சந்திரன்

    பிறந்தது கடலூர், என்றாலும் வளர்ந்ததெல்லாம் சிங்காரச் சென்னைதான். ஒரு தனியார் நிறுவனத்தில் பணி. தற்போது பெங்களுரில் வசிக்கிறேன்.

     
    • Uma Chelvan 8:55 pm on September 26, 2013 Permalink | Reply

      Very nice post on ” Kadhal” As mokrish asked ” இன்னக்கு என்ன காதலர் தினமா”. முடிவே இல்லாத அளவுக்கு இந்த topic li பாடல்கள் உண்டு.

      என்னாளும் வாழ்விலே கண்ணான காதலே
      என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே

      கண்ணானால் நான் இமையாவேன்
      காற்றானால் நான் கொடியாவேன்
      மண்ணென்றால் நான் மரமாவேன்
      மரமென்றால் நான் தளிராவேன் ………

      ..சுகராகமே என் சுகபோகம் நீயே
      கண்ணே கலைமானே கதை பேச வருவாயோ
      அன்பே அனல் வீசும் விழி வாசல் குளிராதோ……….and so on and on and on……….

      The movie ” அழகிய தீயே” is a wonderful movie and the song is very beautiful too. It’s Nice to know that your own brother penned that song.!!!

    • rajinirams 11:21 pm on September 27, 2013 Permalink | Reply

      நன்றி umachelvan

    • amas32 4:18 pm on September 29, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு ரஜினிராம் 🙂 மற்ற எந்த உணர்வையும் பிறருக்கு விளக்கிச் சொல்ல வேண்டும், காதலை எவர்க்கும் விளக்க வேண்டாம். வாழ்வில் ஒரு முறையேனும் அதை அனுபவித்து இருப்பார். மேலும் அந்த உணர்வு செய்யும் தாக்கம் என்றும் நம் நெஞ்சத்தை விட்டு அகலாது, காதலில் ஜெயிக்கவில்லை என்றாலும்.

      காதல் பாட்டுக்கள் ஏராளம். அதில் அழகான மூன்று செய்துள்ளீர்கள். விழிகளின் அருகினில் வானம், என் மனதுக்கு அருகினில் இருக்கும் ஒரு பாடல் 🙂

      amas32

    • rajinirams 7:58 pm on September 29, 2013 Permalink | Reply

      amas32 மிக்க நன்றி-அருமையான பின்னூட்டம்.

  • G.Ra ஜிரா 8:04 pm on September 17, 2013 Permalink | Reply  

    இதோ! இதோ! இதோ! இதோ!! 

    எங்கள் அலுவலகத்தில் புல் தரைகளும் செடிகளும் மரங்களும் மிகச்சிறப்பாகப் பேணப்படும். ஒரு கட்டிடத்திலிருந்து இன்னொரு கட்டிடத்துக்கு நடந்து செல்லும் போது கல் பாவிய புல் தரை மீதுதான் நடந்து செல்ல வேண்டும்.

    அந்தக் கல் பாவிய தரையில் சில பூச்சிகளும் நத்தைகளும் அடிக்கடி செல்லும். அவைகளில் சிலபல நடப்பவர் கால் பட்டு நசுங்கிப் போயிருக்கும்.

    அதனால்தான் நடக்கும் போது பார்த்துப் பார்த்து நடப்பேன். ஆனால் அதில் ஒரு ஆச்சரியம். ஆம். ஊர்ந்து செல்லும் நத்தைகள் முதுகில் கூடுகளே இருந்ததில்லை. முதன்முதலில் பார்த்த போது அட்டையோ என்று நினைத்ததும் வாஸ்தவம் தான்.

    ஆனால் அவை நத்தை என்று தெரிந்து வியந்து போனேன். நத்தை என்றால் முதுகில் ஓடு இருக்கும் என்ற நம்பிக்கை தகர்ந்தது அன்றுதான்.

    சிறுவயதில் நான் படித்த நத்தைக்கோட்டை இளவரசி புத்தகத்தின் அட்டைப்படம் இன்னும் நினைவிருக்கிறது. அதில் மிகப்பெரிய நத்தை ஒன்றை குதிரை போல ஏறி இளவரசி ஒருத்தி ஓட்டிச் செல்வது போல வரையப்பட்டிருந்தது.

    நத்தை என்றதும் என்னுடைய சிந்தனை அடுத்து ஓடியது ”என் சுவாசக் காற்றே” திரைப்படத்தில் கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதி ஏ.ஆர்.ரகுமான் இசையில் இடம் பெற்ற “திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே நாமும்” என்ற பாடலுக்குதான்.

    காட்டுக்குள் ஓடிய இருவர் … இருவர் என்ன இருவர்? அவர்கள் காதலர்கள். இந்தக் காலத்தில் ஆணும் பெண்ணுமாகிய காதலர்கள் என்றும் குறிப்பிட்டு சொல்ல வேண்டியிருக்கிறது.

    காட்டின் அழகை இருவரும் ரசித்து கண்களால் ருசித்துப் பாடி ஆடுகிறார்கள். பாடல் முழுவதும் இயற்கை வருணனை விவரிப்புதான். அந்தப் பாட்டிலும் நத்தை வருகிறது. அந்த வரிகளைக் கீழே தருகிறேன். நீங்களே படித்துப் பாருங்கள்.

    என் காலடியில் சில வீடுகள் நகருது
    இதோ இதோ இதோ இதோ இதோ
    ஆஹாஹா வீடுகள் இல்லை நத்தைக் கூடுகளோ
    அவை நத்தைக் கூடுகளோ வீடுகள் இடம் மாறுமோ

    நத்தைக்கூடு என்று எளிமையாகச் சொல்லி விடுகிறோம். அந்தக் கூடுதான் அதன் வீடு என்பது மட்டும் நமக்குப் புரிவதேயில்லை. நாமெல்லாம் சொந்தமாக ஒரு வீடு வாங்குவற்கு என்னென்ன பாடுபடுகிறோம். ஆனால் நத்தைக்கு மட்டும் பிறக்கும் போதே கடவுள் ஒரு வீட்டைக் கொடுத்து அனுப்புகிறான்.

    நத்தைக்கு மட்டுமல்ல… சிப்பிகளுக்கும் சங்குப்பூச்சிகளுக்கும்தான். அவைகள் எங்கு போனாலும் வீட்டைத் தூக்கிக் கொண்டு செல்லும் அழகுதான் என்ன.

    அப்படி சங்குப்பூச்சிகள் அழகாக ஊர்ந்த ஒரு வீதிக்கு சங்குவீதி என்றே பெயர். என்ன? அந்த வீதி எங்கிருக்கிறது என்றா கேட்கிறீர்கள்? திரிகூடராசப்பக் கவிராயரைக் கேட்டிருந்தால் உடனே சொல்லியிருப்பார். அந்த சங்குவீதி இருந்தது குற்றாலத்தில்.

    குற்றாலநாதர் சங்கநெடு வீதி தனிலே
    உல்லாச மாது ரதிபோல் வசந்தவல்லி
    உருவசியும் நாணவே வந்தாள்

    அந்தச் சங்கு வீதியில்தான் குற்றாலநாதர் கோயில் இருக்கிறது. அந்த வீதியில் வசந்தவல்லி ஊர்வசியைப் போல ஒய்யாரமாக வந்தாள் என்கிறார் கவிராயர்.

    இன்னொரு அழகுமிகு சொல்லாடலும் குற்றாலக் குறவஞ்சியில் இருக்கிறது. எளிமையாகவும் சுருக்கமாகவும் விளக்கிக் கூறுகிறேன்.

    நடைகண்டா லன்னம் தோற்கு
    நன்னகர் வசந்த வல்லி
    விடைகொண்டா னெதிர்போய்ச் சங்க
    வீதியிற் சங்கம் தோற்றாள்

    வசந்த வல்லியிடம் ஒன்று தோற்றது. ஆனால் வசந்தவல்லி ஓரிடத்தில் தோற்றாள். ஆம். வசந்தவல்லியில் எழிலான நடை கண்டு அன்னம் தோற்றது. அப்படியான அழகு நடையாள் குற்றாலநாதரைக் கண்டு சங்குவீதியில் சங்குவளை பசலையால் தோற்று கீழே விழக்கொண்டாள்.

    அதுதான் சங்கவீதியில் சங்கம் தோற்றாள் என்பது. சங்கினால் ஆன வளையல் என்பதால் வளையலுக்குப் பதில் சங்கு என்ற சொல்லையே திரிகூடராசப்பக் கவிராயர் பயன்படுத்தியிருக்கிறார்.

    எதையோ சொல்லத் தொடங்கி எங்கேயோ போய் ஏதோவொரு இடத்தில் முடிப்பது நமக்கென்ன புதிதா! இந்தப் பதிவும் அப்படித்தான் இருக்கிறது.

    பாடல் – திறக்காத காட்டுக்குள்ளே
    வரிகள் – வைரமுத்து
    பாடியவர்கள் – உன்னி கிருஷ்ணன், கே.எஸ்.சித்ரா
    இசை – ஏ.ஆர்.ரகுமான்
    படம் – என் சுவாசக் காற்றே
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=JkRyuEbmXd8கா

    அன்புடன்,
    ஜிரா

    290/365

     
    • amas32 9:29 pm on September 18, 2013 Permalink | Reply

      பரிணாம வளர்ச்சி (evolution) யினால் நிறைய விலங்குகளும் பறவைகளும் முன்பிருந்த தலைமுறையிலிருந்து மாறுபட்ட ஆரம்பிக்கிறது. அது போலத் தான் இந்த வீடில்லா நத்தைக்களுமோ? சமீபத்தில் நானும் கூட்டோடு நத்தைகளைக் காணவேயில்லை.

      //என் காலடியில் சில வீடுகள் நகருது// அழகான கற்பனை!

      amas32

  • என். சொக்கன் 10:24 am on July 8, 2013 Permalink | Reply  

    புல்லினுள் சுழலும் இசை 

    • படம்: காதலர் தினம்
    • பாடல்: ரோஜா ரோஜா
    • எழுதியவர்: வாலி
    • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
    • பாடியவர்: உன்னி கிருஷ்ணன்
    • Link: http://www.youtube.com/watch?v=QwCEXv1TXqo

    இளையவளின் இடை ஒரு நூலகம், படித்திடவா பனி விழும் இரவுகள் ஆயிரம்!

    இடைவெளி எதற்கு, சொல் நமக்கு, உன் நாணம் ஒருமுறை விடுமுறை எடுத்தால் என்ன?

    ’என்னைத் தீண்டக் கூடாது’ என வானோடு சொல்லாது வங்கக்கடல்,

    ’என்னை ஏந்தக் கூடாது’ என கையோடு சொல்லாது புல்லாங்குழல்!

    தமிழில் ‘குழல்’ என்ற பெயர்ச்சொல், ‘குழலுதல்’ என்கிற வினைச்சொல்லில் இருந்து வந்தது. இதன் அர்த்தங்கள், சுருள்தல், வளைதல் போன்றவை.

    கம்ப ராமாயணத்தில் சீதையைச் சந்திக்கும் அனுமன், அவளுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக ராமனைப்பற்றி நிறைய பேசுகிறான், அவரது தோற்றத்தை வர்ணிக்கிறான். அதில் ஒரு பாடல், ராமனின் தலைமுடியைப்பற்றியது, ‘நீண்டு, குழன்று, நெய்த்து, இருண்டு…’ என்று தொடங்கும்.

    அதாவது, ராமனின் தலைமுடி நீண்டது, சுருண்டது, நெய் பூசியதுபோல் பளபளப்பானது, இருண்டது (கருமையானது)… இப்படித் தொடங்கி இன்னும் நிறைய வர்ணிக்கிறான் அனுமன்.

    இங்கே நமக்கு முக்கியம், ‘குழன்று’ என்ற வார்த்தை, ‘சுழன்று’ அல்ல, ‘குழன்று’, அதாவது, சுருண்டு, அல்லது வளைந்து!

    இப்படிக் குழன்று வருவதால்தான், தலைமுடிக்கே ‘குழல்’ என்று பெயர் வந்தது. ‘கட்டோடு குழலாட ஆட’ போன்ற பல பாடல்களில் இதைப் பார்த்திருக்கிறோம்.

    அது சரி, ஆனால் அதே பெயரை இசைக்கருவியாகிய குழலுக்கும் வைத்தது ஏன்?

    ஒன்றல்ல, இரண்டு காரணங்கள் சொல்லலாம்:

    முதல் காரணம், வடிவ அமைப்பில் பார்த்தால், குழல் / குழாய் என்பது, ஒரு நீண்ட பட்டை சுருண்டு சுருண்டு அமைந்ததுபோல்தான் தெரியும், சின்ன வயதில் பென்சிலின்மீது நீளப் பட்டைக் காகிதத்தைச் சுற்றி விளையாடியவர்களுக்கும், ஒரு குழலின்மீது உட்கார்ந்திருக்கும் இருவண்ண ஜவ்வு மிட்டாயை இழுத்து வாங்கித் தின்றவர்களுக்கும் இது நன்றாகத் தெரியும்!

    இன்னொரு காரணம், குழலின் ஒரு முனையில் ஊதப்படும் காற்று, உள்ளே வளைந்து ஓடி (அதாவது, குழன்று) வெவ்வேறு துளைகளின் வழியே வெளிவந்து இனிமையான இசையாகக் கேட்கிறது, ‘வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே’ என்று பழநிபாரதி எழுதினாற்போல!

    ‘குழல்’ சரி, அதென்ன ’புல்லாங்குழல்’?

    இந்தச் சொல்லை நாம் புல் ஆம் குழல் என்று பிரியும். அதாவது, புல்லால் ஆன குழல் என்று பொருள்.

    என்னது? புல்லா? அது மூங்கிலால் ஆனதல்லவா?

    உண்மைதான். ஆனால், தாவரவியல்ரீதியில் பார்த்தால், மூங்கில் என்பதே மரம் அல்ல, ஒருவகைப் புல்தான், என்ன, கொஞ்சம் தடிமனான புல்!

    அப்படியானால், குழல்போல இனிமையாகக் கூவும் குயிலைப் ‘புள்ளாங்குழல்’ என்றுகூட நாம் அழைக்கலாமோ?

    ***

    என். சொக்கன் …

    08 08 2013

    219/365

     
    • சிவா கிருஷ்ணமூர்த்தி 3:04 pm on July 8, 2013 Permalink | Reply

      //குழல்போல இனிமையாகக் கூவும் குயிலைப் ‘புள்ளாங்குழல்’//
      கண்டிப்பாய்!

    • rajinirams 10:36 am on July 9, 2013 Permalink | Reply

      புல் ஆம் குழல் -அருமையான விளக்கம். வாலியின் அருமையான வரிகளை எடுத்து காட்டியதோடு “வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே”என்ற பழனிபாரதியின் வரிகளையும் இணைத்தது சூப்பர்.

    • amas32 5:41 pm on July 10, 2013 Permalink | Reply

      இப்பொழுதெல்லாம் கூந்தலைக் குழல வைக்க (hair curling) ஓர் ஐயாயிரமோ பத்தாயிரமோ (Rs) தேவைப் படுகிறது 🙂 பிறகு அதை நீட்டிவிட (hair straightening) அதே amount! நேசுரலாகவே அப்படி இருந்தால் பெற்றோர்களுக்கு பணம் மிச்சம் 🙂

      amas32

  • என். சொக்கன் 8:48 pm on July 2, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு : சீனத்துக் காதல் 

    ’பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக் கூட்டம் அதிசயம்’ என்ற பாடலை எல்லாரும் கேட்டிருப்பீர்கள். வைரமுத்து எழுதி, ஏ. ஆர். ரஹ்மான் இசையில் உன்னி கிருஷ்ணன், சுஜாதா பாடிய சூப்பர் ஹிட் பாட்டு.

    அந்தப் பாடலின் தொடக்கத்தில், சீனப் பெருஞ்சுவரில் நாயகனும் நாயகியும் ஆடுவதுபோன்ற காட்சி அமைப்பு இருக்கும். அப்போது பின்னணியில் ஒரு கோரஸ் கேட்கும், ‘Wo Ai Ni… Wo Ai Ni…’ என்று திரும்பத் திரும்ப வரும், கவனித்துப்பாருங்கள்.

    இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

    ’அடப் போங்க சார், விட்டா ஒமாகஸீயாவுக்கெல்லாம் அர்த்தம் கேட்பீங்கபோல!’ என்று கோபிக்கவேண்டாம். நிஜமாகவே இந்தக் கோரஸ் வரிகள் சும்மா உல்லுலாக்காட்டிக்குப் போட்டவை அல்ல, அதற்கு அர்த்தம் உண்டு.

    தமிழில் அல்ல, சீன மொழியில்.

    ஆமாம், சீனர்கள் பேசும் மாண்ட்ரின் பாஷையில் ‘Wo Ai Ni’ என்றால், ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று அர்த்தமாம்.

    சீனப் பெருஞ்சுவர்ப் பின்னணியில் இந்தக் காட்சி படமாக்கப்படப்போகிறது என்று தெரிந்து இந்தக் கோரஸை இங்கே பொருத்தமாகப் பயன்படுத்தியது யார்? இசையமைப்பாளரா? கவிஞரா? அல்லது, இயக்குநரா?

    யாராக இருந்தாலும், அவர்களுக்கு ஒரு வந்தனம்!

    சுதர்ஷன்

    https://twitter.com/SSudha_

     
    • amas32 7:50 pm on July 4, 2013 Permalink | Reply

      இந்த சீன வரிகளை படிக்கும் பொழுது பாடலை எழுதியது அவர் மகன் மதன் கார்க்கியோ என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா? 🙂 தந்தையிடம் இருந்து தான் அந்த டேலன்ட் மகனுக்கு வந்துள்ளது போலும்!

      நீங்கள் தமிழ் பதங்களுக்கு உரை எழுதுவதோடு சீன மொழி வரை போய் உள்ளது பெருமைக்குரியதே 🙂

      amas32

    • Mano red 9:34 pm on July 2, 2017 Permalink | Reply

      இத்தனை நாள் அது என்ன வார்த்தை என்றே தெரியாமல் இருந்தது. ஓமகசீயா கூட புரிந்திருந்தது. Wo ai ni செம..😍

  • G.Ra ஜிரா 1:18 pm on June 22, 2013 Permalink | Reply  

    காதல் காற்று 

    காற்றே என் வாசல் வந்தாய்
    மெதுவாகக் கதவு திறந்தாய்
    காற்றே உன் பேரைக் கேட்டேன்,
    ”காதல்” என்றாய்!

    வைரமுத்து அவர்களின் வைர வரிகள். காதலர்களுக்கு எல்லாமே காதல்தான். மெதுவாகக் கதவைத் திறந்து வரும் காற்றுக்கும் காதல் என்று பெயர் வைக்க காதலர்களால் மட்டுமே முடியும். அதே காற்றுக்கு மற்றவர்கள் குளிர் என்றோ வாடை என்றோ பெயரிட்டிருப்பார்கள்.

    கடவுள் நம்பிக்கை உள்ளவனும் இல்லாதவனுமாக இருவர் பேசிக் கொண்டார்கள்.

    “என்னுடைய செயல்கள் எல்லாம் என்னாலேயே செய்யப்படுகின்றன. அவைகளைக் கட்டுப்படுத்தவும் அதிகப்படுத்தவும் என்னால் முடியும்.” என்றான் கடவுளை நம்பாதவன்.

    “அப்படிச் சொல்லாதே. உன்னுடைய மூச்சு கூட உன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. அதைப் புரிந்துகொள்.” என்றான் உண்மையான நம்பிக்கையாளன்.

    “அதெப்படி? நானே மூச்சை இழுக்கிறேன். நானே வெளியே விடுகிறேன். இது என் கட்டுப்பாட்டில் உள்ளதுதானே”

    “உன் தாத்தனும் இப்படித்தானே மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டுக் கொண்டிருந்தான். அவன் கடைசியாக இழுத்த மூச்சை ஏன் வெளியே விடவில்லை? இப்போதாவது நம்முடைய கட்டுப்பாட்டை மீறிய ஒன்று நம்மை இயக்குவதை புரிந்து கொள்” என்றான் இவன்.

    காற்றுதான் உயிர். நாசி வழியாகச் சென்றாலும் உடல் முழுவதும் பரவி வாழ்விப்பதும் காற்றுதான்.

    இப்படி உயிராக இருக்கும் காற்றுக்குக் காதல் என்று பெயர் வைப்பது பொருந்துமா?

    இந்தக் கேள்விக்கு விடை தேட எனக்குச் சிரமம் இருக்கவில்லை. காற்றுதான் காதல் என்று மகாகவி பாரதி என்றைக்கோ காற்று என்ற தலைப்பில் வசன கவிதை எழுதிவைத்துவிட்டான். வீட்டின் உத்தரத்தில் ஆடுகின்ற இரண்டு துண்டு கயிறுகளை வைத்து காற்று காதலாவதை அழகாக நிரூபித்து விட்டான். அதை அப்படியே தருகிறேன். படித்துப் பாருங்கள். பிறகு காற்றுக்குப் பெயர் காதலா இல்லையா என்று சொல்லுங்கள்.

    ஒரு கயிறா சொன்னேன்? இரண்டு கயிறு உண்டு.
    ஒன்று ஒரு சாண். மற்றொன்று முக்கால் சாண்.
    ஒன்று ஆண்; மற்றொன்று பெண்; கணவனும், மனைவியும்.
    அவையிரண்டும் ஒன்றையொன்று காமப்பார்வைகள் பார்த்துக்கொண்டும், புன்சிரிப்புச் சிரித்துக் கொண்டும், வேடிக்கைபேச்சுப் பேசிக்கொண்டும் ரசப்போக்கிலேயிருந்தன.
    அத்தருணத்திலே நான் போய்ச்சேர்ந்தேன்.
    ஆண் கயிற்றுக்குக் ‘கந்தன்’ என்று பெயர்.
    பெண் கயிற்றுக்குப் பெயர் ‘வள்ளியம்மை’.
    (மனிதர்களைப் போலவே துண்டுக் கயிறுகளுக்கும் பெயர் வைக்கலாம்.)

    கந்தன் வள்ளியம்மைமீது கையைப்போட வருகிறது. வள்ளியம்மை சிறிது பின்வாங்குகிறது. அந்த சந்தர்ப்பத்திலே நான் போய்ச்சேர்ந்தேன்.
    “என்ன, கந்தா, சௌக்கியந்தானா? ஒரு வேளை, நான் சந்தர்ப்பந் தவறி வந்துவிட்டேனோ, என்னவோ? போய், மற்றொருமுறை வரலாமா?” என்று கேட்டேன்.
    அதற்குக் கந்தன்: — “அட போடா, வைதிக மனுஷன்! உன் முன்னேகூட லஜ்ஜையா? என்னடி, வள்ளி, நமது சல்லாபத்தை ஐயர் பார்த்ததிலே உனக்குக் கோபமா?” என்றது.
    “சரி, சரி, என்னிடத்தில் ஒன்றும் கேட்கவேண்டாம்” என்றது வள்ளியம்மை.
    அதற்குக் கந்தன், கடகடவென்று சிரித்துக் கைதட்டிக் குதித்து, நான் பக்கத்திலிருக்கும்போதே வள்ளியம்மையைக் கட்டிக்கொண்டது.

    வள்ளியம்மை கீச்சுக்கீச்சென்று கத்தலாயிற்று. ஆனால், மனதுக்குள்ளே வள்ளியம்மைக்கு சந்தோஷம். நாம் சுகப்படுவதைப் பிறர் பார்ப்பதிலே நமக்கு சந்தோஷந் தானே? இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கும் மிகவும் திருப்திதான், உள்ளதைச் சொல்லிவிடுவதிலே என்ன குற்றம்? இளமையின் சல்லாபம் கண்ணுக்குப் பெரியதோர் இன்பமன்றோ?

    வள்ளியம்மை அதிகக் கூச்சலிடவே, கந்தன் அதைவிட்டு விட்டது. சில க்ஷணங்களுக்குப்பின் மறுபடிபோய்த் தழுவிக்கொண்டது. மறுபடியும் கூச்சல், மறுபடியும் விடுதல்; மறுபடியும் தழுவல், மறுபடியும் கூச்சல்; இப்படியாக நடந்து கொண்டே வந்தது.

    “என்ன, கந்தா, வந்தவனிடத்தில் ஒரு வார்தைகூடச் சொல்ல மாட்டேனென்கிறாயே? வேறொரு சமயம் வருகிறேன், போகட்டுமா?” என்றேன்.
    “அட போடா! வைதிகம்! வேடிக்கைதானே பார்த்துக் கொண்டிருக்கிறாய். இன்னும் சிறிதுநேரம் நின்று கொண்டிரு. இவளிடம் சில வ்யவஹாரங்கள் தீர்க்க வேண்டியிருக்கிறது. தீர்ந்தவுடன் நீயும் நானும் சில விஷயங்கள் பேசலாம் என்றிருக்கிறேன். போய் விடாதே, இரு” என்றது. நின்று மேன்மேலும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

    சிறிதுநேரம் கழிந்தவுடன், பெண்ணும் இன்ப மயக்கத்திலே நான் நிற்பதை மறந்து நாணத்தை விட்டுவிட்டது. உடனே பாட்டு. நேர்த்தியான துக்கடாக்கள். ஒரு வரிக்கு ஒரு வர்ணமெட்டு.
    இரண்டே ‘சங்கதி’. பின்பு மற்றொரு பாட்டு.

    கந்தன் பாடிமுடிந்தவுடன், வள்ளி. இது முடிந்தவுடன் அது. மாற்றி மாற்றிப் பாடி — கோலாஹலம்!சற்றுநேரம் ஒன்றையொன்று தொடாமல் விலகிநின்று பாடிக்கொண்டே யிருக்கும். அப்போது வள்ளியம்மை தானாகவேபோய்க் கந்தனைத் தீண்டும். அது தழுவிக்கொள்ளவரும். இது ஓடும். கோலாஹலம்!

    இங்ஙனம் நெடும்பொழுது சென்றபின் வள்ளியம்மைக்குக் களியேறி விட்டது. நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்துவிட்டு வரப் போனேன். நான் போவதை அவ்விரண்டு கயிறுகளும் கவனிக்கவில்லை.

    நான் திரும்பிவந்து பார்க்கும்போது வள்ளியம்மை தூங்கிக் கொண்டிருந்தது. கந்தன் என் வரவை எதிர்நோக்கியிருந்தது.

    என்னைக் கண்டவுடன், “எங்கடா போயிருந்தாய், வைதிகம்! சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டாயே” என்றது.

    இதுதான் அந்த வசனகவிதையின் ஒரு பகுதி.

    இரண்டு அறுந்த கயிறுகள் உத்தரத்திலிருந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. வீசுகின்ற காற்றுக்கு ஏற்றவாறு கயிறுகள் ஆடுகின்றன. அந்த ஆட்டத்தை ஒரு காதல் கதையாக்கி, அந்தக் கதையை ஒரு வசன கவிதையாக்கி.. காற்றைக் காதல் தேவனாக்கிய பாரதியை எப்படித்தான் பாராட்டுவது!

    பாடல் – காற்றே என் வாசல் வந்தாய்
    பாடியவர் – கவிதா கிருஷ்ணமூர்த்தி, உன்னி கிருஷ்ணன்
    வரிகள் – வைரமுத்து
    இசை – ஏ.ஆர்.ரகுமான்
    படம் – ரிதம்
    பாடலின் சுட்டி – http://youtu.be/oD16SYpgL7A

    அன்புடன்,
    ஜிரா

    203/365

     
    • rajnirams 12:30 pm on June 23, 2013 Permalink | Reply

      காற்றை காதலுக்கு உற்ற தோழன் போல தான் பல பாடல்களில் உருவக படுத்தி பயன்படுத்தி இருக்கிறார்கள்.காற்றையே காதலாக பாரதி எழுதியதை வைரமுத்து கையாண்டிருப்பதை “இதமாக”சொல்லிஇருக்கிறீர்கள். அற்புதமான பாடல், அருமை.

    • amas32 8:14 pm on June 23, 2013 Permalink | Reply

      காற்று நுழைவதுத் தெரியாமல் உள்ளே வந்துவிடும். அது போலத் தானே காதலும் 🙂

      amas32

  • என். சொக்கன் 9:17 am on May 23, 2013 Permalink | Reply  

    காலையும் மாலையும் 

    • படம்: சித்திரையில் நிலாச்சோறு
    • பாடல்: காலையிலே மாலை வந்தது
    • எழுதியவர்: புலமைப்பித்தன்
    • இசை: இளையராஜா
    • பாடியவர்: சப்தபர்ணா சக்ரபர்த்தி

    காலையிலே மாலை வந்தது, நான் காத்திருந்த வேளை வந்தது!

    இனி காலமெல்லாம், உன்னைத் தொடர்ந்துவர,

    உன் காலடிதான் இனி சரணமென,

    இந்த வானமும் பூமியும் வாழ்த்துச் சொல்ல!

    சென்ற நூற்றாண்டில் சிலேடை என்றால், கிவாஜ. அவர் எழுதிய, பேசிய, அல்லது பேசியதாகச் சொல்லப்பட்ட ஏராளமான சிலேடைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளன. அந்தப் புத்தகமும் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது.

    அது சரி, நாலு வரி நோட்டுக்கும் கிவாஜவுக்கும் என்ன சம்பந்தம்?

    கிவாஜா சினிமாப் பாட்டு ஒன்று எழுதியிருக்கிறார். ஆனால் இங்கே நாம் பார்க்கவிருப்பது, அவருடைய புகழ் பெற்ற சிலேடை ஒன்று.

    வெளியூரில் ஒரு நிகழ்ச்சி. அதில் கலந்துகொள்வதற்காக ரயிலேறிச் சென்றார் கிவாஜ. அதிகாலையில் ரயிலிலிருந்து இறங்கியதும், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அவரை வரவேற்று, ஒரு பூமாலையை அணிவித்தார்கள்.

    கிவாஜ மகிழ்ச்சியுடன் புன்னகை செய்தார். பின்னர், ‘என்ன இது அதிசயம்! காலையிலேயே மாலை வந்துவிட்டதே!’ என்றார் சிலேடையாக.

    இந்த வார்த்தை விளையாட்டைப் பழநிபாரதி ஒரு திரைப்பாடலில் பயன்படுத்தினார், ‘சேது’ படத்தில் வரும் ‘சிக்காத சிட்டொண்ணு’ என்ற பாடலில், ‘காலையிலே மாலை வர ஏங்குதடி’ என்று எழுத, அதை உன்னி கிருஷ்ணன் பாடியிருந்தார்.

    பல வருடங்கள் கழித்து, இப்போது ‘சித்திரையில் நிலாச்சோறு’ படத்தில் புலமைப்பித்தனும் அதே கற்பனையைப் பயன்படுத்தியிருக்கிறார், ‘காலையிலே மாலை வந்தது’ என்று தொடங்கி, ‘நான் காத்திருந்த வேளை வந்தது’ என்று அழகாகத் தொடர்கிறார்.

    ‘காத்திருந்த வேளை வந்தது’ என்பதில் உள்ள ‘வந்தது’ என்ற வார்த்தையை, வேளையோடு சேர்த்து வாசித்தால் ‘the day I was waiting for… இதோ வந்துவிட்டது’ என்ற பொருள் வரும். அப்படியில்லாமல், முதல் வரியோடு சேர்த்து, ‘நான் மாலைக்காகக் காத்திருந்தவேளையில், மாலை வந்து சேர்ந்தது’ என்றும் வாசிக்கலாம். அதுவும் அழகிய சிலேடைதான்!

    அதன்பிறகும் ஓர் அழகான வார்த்தை விளையாட்டு உண்டு, ‘உன் காலடிதான் இனி சரணமென’ என்று பாடுகிறாள் அந்தக் கதாநாயகி… உண்மையில், ‘சரண்’ என்ற வார்த்தைக்குப் பொருளே ‘காலடி’தான் 🙂 ‘நின்னைச் சரணடைந்தேன்’ என்றால், உன் காலடியில் பணிந்தேன் என்று பொருள்!

    ***

    என். சொக்கன் …

    23 05 2013

    173/365

     
    • amas32 9:38 am on May 23, 2013 Permalink | Reply

      “காலையிலே மாலை வர ஏங்குதடி” நீங்கள் குறிப்பிடும் வரை நான் பொருளைக் கூர்ந்து கவனித்ததில்லை. ராகத்தில் மயங்கியிருந்தேன். இப்பொழுதுப் புரிந்து ரசிப்பேன் 🙂

      “காலையிலே மாலை வந்தது, நான் காத்திருந்த வேளை வந்தது!” ரொம்ப அழகான வரி! நீங்கள் சொல்லியிருப்பதுப் போல இரண்டு பொருள்களில் எதை எடுத்துக் கொண்டாலும் மொத்தத்தில் காதலனின் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் சூப்பர் வரி 🙂

      சுடச் சுட போண்டா 🙂 பாடல் வந்தவுடன் நாலு வரி நோட்டு!

      amas32

    • GiRa ஜிரா 11:08 pm on May 23, 2013 Permalink | Reply

      அழகான பாடல் நாகா. இது டிபிகல் எஸ்.ஜானகி பாட்டு. 80களின் எஸ்.ஜானகி பாடியிருந்தா மாஸ்டர் பீசாகியிருக்கும் இந்தப் பாட்டு.

      சிலேடை மிக அழகு. காலையிலேயே மாலை வந்தது. ரெண்டு பொருளும் பொருத்தமாதான் இருக்கு.

    • rajinirams 1:25 am on May 25, 2013 Permalink | Reply

      காலையிலே மாலை வந்தது-புலமைப்பித்தனின் அருமையான வரிகள்.இதே போன்ற வாலியின் சிலேடை- தென்றல் மெல்ல மெல்ல நீந்துகின்ற மாலை.இவள் மார்பினில் நான் ஏந்துகின்ற மாலை. நன்றி.

  • G.Ra ஜிரா 8:46 am on May 18, 2013 Permalink | Reply  

    பனிப் பானு 

    நிலவைப் பார்த்தால் கவிஞனுக்குக் கவிதை வரும். குழந்தைக்கு தூக்கம் வரும். காதலர்களுக்கு ஏக்கம் வரும். ஏழைகளுக்குப் பசி வரும். கோழைகளுக்கு பயம் வரும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று வரும்.

    அந்த நிலவைப் பாடாத கவிஞன் இல்லை. பாடாவிட்டால் கவிஞன் இல்லை. இலக்கியச் சுவைகள் எத்தனை உண்டோ, அத்தனை விதமான சுவைகளையும் வெளிப்படுத்தும் கவிதைகளிலும் நிலவு இருக்கும். இது மறுக்க முடியாத உண்மை.

    அப்படியிருக்க திரைப்படக் கவிஞர்கள் மட்டுமென்ன நிலவோடு கோவித்துக்கொண்டவர்களா?

    அவன் மனைவியை இழந்தவன். நெஞ்சமெல்லாம் சோகம். அவனை விரும்புகிறாள் ஒருத்தி. அவள் காதலை மறுக்க வேண்டும். அதே நேரத்தில் சோகத்தையும் சொல்ல வேண்டும். இரண்டையும் ஒரே வரியில் சொல்ல கவியரசர் கண்ணதாசனுக்கு கைகொடுக்கிறது நிலவு. “நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை”.

    அதே கவியரசர். வேறொரு கதாநாயகன். திருமணமானவன். பிடிக்காத கல்யாணம். தொடாதே என்று சொல்லிவிட்டாள் மனைவி. அவனுடைய ஆத்திரத்தையும் ஆற்றாமையையும் ஒரே வரியில் சொல்ல வேண்டும். மறுபடியும் நிலா உதவுகிறது. “நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே”.

    நல்லவர்கள் இருவர். தவறு செய்கிறார்கள். அவர்கள் செய்வது கடத்தல். கடலில் தோணி கட்டி தோணியில் பாட்டு கட்டி ஆடிப்பாடி வருகிறார்கள். அவர்கள் களிப்புக்கும் கும்மாளத்துக்கும் நிலவு உதவுகிறது. “நிலா அது வானத்து மேலே. பலானது ஓடத்து மேலே” என்று எழுதினார் இளையராஜா.

    குழந்தைகளுக்கும் கோவம் வரும். அந்தக் கோவத்தை மாற்றுவது எளிதான செயலா? கோவித்தது சேயாக இருந்தாலும் ஆடியும் பாடியும் சமாதானப்படுத்துவது தாயாகத்தான் இருக்கும். அப்படிச் சமாதான வரிகளைச் செதுக்க கவிஞர் வாலிக்குத் துணை வந்ததும் நிலாதான். “மண்ணில் வந்த நிலவே, என் மடியில் பூத்த மலரே” என்று எழுதினார்.

    தூக்கத்துக்குக் காரணமாகும் நிலவுதான் ஏக்கத்தும் காரணமாகிறது. காதலர்கள் பிரிந்தாலும் துன்பம். கூடினாலும் பிரியப் போவதை எண்ணித் துன்பம். அந்தத் துன்பம் அவனைத் தூங்கவிடவில்லை. அப்படியொரு பாட்டெழுத வேண்டும். ”நிலவு தூங்கும் நேரம். நினைவு தூங்கிடாது” என்று எழுதினார் வாலிபக் கவிஞர் வாலி.

    காதலர்கள் உள்ளத்தில் எப்போதும் ஒரு பெருமிதம் இருக்கும். இந்தக் காதலனுக்கும் அப்படிதான். அவன் காதலி பேரழகி. அப்படியொரு பிரபஞ்ச அழகி அவனுக்குக் காதலி என்ற பெருமிதத்தைப் பாட்டில் சொல்ல வேண்டும். இந்த முறை நிலவோடு கை கோர்த்தவர் வைரமுத்து. “சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்டிராங்கா? அடி ஆம்ஸ்டிராங்கா? சத்தியமாய் தொட்டது யார்? நான்தானே” என்று எழுதினார்.

    அவனுக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. வாழ்க்கை எப்படியெல்லாம் ஏமாற்றியது என்ற வெறுப்பைப் பாட்டில் சொல்ல வேண்டும். இந்த முறை நிலவை துணைக்கழைத்தவர் புலவர் புலமைப்பித்தன். “சந்திரனப் பாத்தா சூரியனாத் தெரிகிறது. செங்கரும்பு கூட வேம்பாகக் கசக்கிறது” என்று எழுதினார்.

    கும்மாளக் காதலர்களுக்குத் திருமணமும் ஆகிவிட்டது. குதித்துக் கொண்டிருந்தவர்களுக்குக் கால்கட்டு போட்டாயிற்று. இன்று முதல் இரவு. அந்த அளவுக்கு மீறிய உற்சாகத்தை மகிழ்ச்சியின் உச்சத்தை வரிகளில் கொண்டு வர முடியுமா? நிலவிருக்க பயமேன். “நிலவைக் கொண்டு வா கட்டிலில் கட்டி வை” என்று வைரவரிகளை வைரமுத்து கொடுத்தார்.

    இப்படியாக சோகம், ஏக்கம், ஆதங்கம், மகிழ்ச்சி, கொண்டாட்டம், உல்லாசம், ஆத்திரம், தாலாட்டு என்று எந்த வகை உணர்ச்சியையும் கவிதையில் வடிக்க உதவுவது நிலவு.

    என்ன? பக்திச் சுவை விட்டுப் போயிற்றா? யார் சொன்னார்கள்? இறையருளைப் பெற்றதும் சுந்தரரே “பித்தா பிறைசூடி” என்றுதான் பாடத் தொடங்கினார். சின்னஞ்சிறு குழந்தையாய் திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்டு பாடிய பொழுது “தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடி” என்றுதான் பாடினார்.”

    ஓ! திரைப்படப் பாடலாக இருந்தால்தான் ஒத்துக் கொள்வீர்களா? சரி. அதற்கும் பாடல்கள் பல உண்டு. ஆனாலும் ஒன்று சொல்கிறேன். ஆதிபராசக்தி திரைப்படத்தில் அபிராமி பட்டர் எப்படிப் பாடுகிறார்? ”சொல்லடி அபிராமி நில்லடி முன்னாலே முழு நிலவினைக் காட்டு உன் கண்ணாலே” என்று கண்ணதாசன் எழுதிக் கொடுத்தபடிதானே பாடினார்?

    இந்தப் பாடல்கள் மட்டுந்தானா? இல்லை. இன்னும் எத்தனையெத்தனையோ பாடல்கள். “வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா” என்று பாட்டு முழுக்க எழுதினார் கவியரசர் கண்ணதாசன்.

    இந்த நிலவுக்கு எத்தனையெத்தனை பெயர்கள். மதியென்பார். சந்திரனென்பார். பிறையென்பார். வெண்ணிலா என்பார். முழுமதி, நிறைமதி, வளர்மதி, வெண்மதி என்று எத்தனையெத்தனையோ பெயர்கள்.

    ஈசனார் சூடிய பிறைச் சந்திரனை ஞானக்கண்ணால் பார்க்கிறார் அருணகிரிநாதர். அந்தப் பிறைச் சந்திரனை என்ன சொல்லிப் பாடுவது? உடனே ஒரு திருப்புகழ் பிறக்கிறது.

    பாதிமதி நதி போது மணிச்சடை நாதர் அருளிய குமரேசா
    பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா

    பிறைச்சந்திரன் பாதியாகத்தானே இருக்கிறது. அதனால் பாதிமதி என்றே பெயர் சூட்டிவிட்டார் அருணகிரிநாதர்.

    அதே அருணகிரி கந்தரந்தாதியில் நிலவுக்கு இன்னொரு பெயரைச் சொன்னார். அந்தப் பெயரை அவருக்கு முன்னாலும் பின்னாலும் யாரும் சொன்னதில்லை.

    சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்தசெந்திற்
    சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்தவென்னிற்
    சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்
    சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே

    இந்தப் பாடலில் நிலவுக்கு அவர் சொல்லியிருக்கும் பெயர் பனிப்பானு. பானு என்றால் சூரியனைக் குறிக்கும். பனி குளுமையைக் குறிக்கும். நிலவு என்பது குளுமையான சூரியனாம். அதனால்தான் பனிப்பானு என்று புதுப்பெயர் சூட்டியிருக்கிறார் அருணகிரி. அழகான பெயரல்லவா?

    நிலா நிலா ஓடி வா! நில்லாமல் ஓடி வா! மலை மேலே ஏறி வா! மல்லிகைப்பூ கொண்டு வா!

    பதிவில் இடம் பெற்ற பாடலின் சுட்டிகள்.

    பாதிமதிநதி (யாமிருக்க பயமேன்) – http://youtu.be/FDMcv6CjglI
    நிலவே என்னிடம் நெருங்காதே (ராமு) – http://youtu.be/Z8MYbZVETDU
    நிலவைப் பார்த்து வானம் (சவாலே சமாளி) – http://youtu.be/FSdL74sUCNE
    நிலா அது வானத்து மேலே (நாயகன்) – http://youtu.be/ldPFymzsVd8
    நிலவு தூங்கும் நேரம் (குங்குமச் சிமிழ்) – http://youtu.be/0k6lUIhIqPo
    சந்திரனைத் தொட்டது யார் (ரட்சகன்) – http://youtu.be/ZIQXtyJQMIE
    சந்திரனப் பாத்தா (பிரம்மச்சாரிகள்) – http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=3278
    மண்ணில் வந்த நிலவே (நிலவே மலரே) – http://youtu.be/UmCcv-4uv7k
    நிலவைக் கொண்டு வா (வாலி) – http://youtu.be/QOcrng-CkmE
    தோடுடைய செவியன் (ஞானக்குழந்தை) – http://youtu.be/-OT2RCgAvVA
    சொல்லடி அபிராமி (ஆதிபராசக்தி) – http://youtu.be/fCltNDw_oFA
    வான் நிலா நிலா அல்ல (பட்டினப்பிரவேசம்) – http://youtu.be/bV8V2oowwwI

    அன்புடன்,
    ஜிரா

    168/365

     
    • rajnirams 11:45 am on May 18, 2013 Permalink | Reply

      பனிப்பானு-புதுமையான தலைப்பில் அருமையான பதிவு.தமிழ் கவிஞர்கள் நிலவை வைத்துக்கொண்டு ஏராளமான பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.அதுவும் புலமைப்பித்தன் “ஆயிரம் நிலவிற்கு” ஒப்பாக பெண்ணை பாடியது தான் உச்சம்.வாலியின் நிலவு ஒரு பெண்ணாகி,நிலாவே வா,கண்ணதாசனின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்,இரவும் நிலவும் வளரட்டுமே இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.நன்றி.

      • GiRa ஜிரா 8:29 am on May 21, 2013 Permalink | Reply

        ஆயிரம் நிலவே வான்னு அவர் எழுதிட்டாரேன்னு இன்னும் லட்சம் நிலவுகள்னு யாரும் எழுதலையா? 🙂

    • Arun Rajendran 12:38 pm on May 18, 2013 Permalink | Reply

      ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது -> love at first sight
      கல்யாணத் தேனிலா காய்ச்சாதப் பால் நிலா -> தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் எண்ணித் திளைத்தல்
      வானிலே தேனிலா ஆடுதே பாடுதே -> தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு மகிழ்தல்
      அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன் -> பரிசில்கள் பரிமாறுதல்
      அமுதைப் பொழியும் நிலவே -> பிரிவு; வருத்தம் காதல் கலந்து வெளிப்பட பாடல்
      நாளை இந்த வேளைப் பார்த்து ஓடி வா நிலா -> தலைவி ஆற்றியிருத்தல்; காதலாகி கசிந்துருகி..
      நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் -> மீண்ட தலைவன் தலைவியின் கோபம் தனித்தல்
      மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் -> காதல் கனிந்து மணமுடித்தல்
      நிலா காயுது நேரம் நல்ல நேரம் -> விரகம்; கூடி களித்தல்
      வாராயோ வெண்ணிலாவே நீ கேளாயோ -> தலைவன் தலைவி ஊடல்;வாழ்வியல்
      நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் -> and their love story continues

      இவண்,
      அருண்

      • GiRa ஜிரா 8:30 am on May 21, 2013 Permalink | Reply

        அடா அடா அடா… என்னவொரு பட்டியல்…. நிலாவுல கட்டில் போட்டேன்னு என்னச் சொன்னீங்களே… நீங்க வீடே கட்டியிருக்கீங்களே 🙂

    • amas32 7:04 pm on May 19, 2013 Permalink | Reply

      திரை இசைப் பாடல்களில் வரும் நிலவுப் பாடல்கள் மட்டுமே, கணக்கிட்டால் ஓராயிரம் தேறும் போல இருக்கிறதே! ஜோதிட சாஸ்திரப் படி கூட சந்திரன் மனத்தையாளும் ஒரு கிரகம். சந்திரனின் கிரக நிலை ஒருவனுக்குச் சரியாக இல்லாவிட்டால் அவன் பித்துப் பிடித்து அலைவான். காதல் வசப்படுவதும் அதனின் mild form தானே? 🙂

      Lovely post Gira 🙂

      amas32

      • GiRa ஜிரா 8:31 am on May 21, 2013 Permalink | Reply

        அப்போ இந்தக் காதல் கீதல் எல்லாத்துக்கும் சந்திரந்தான் காரணமா? இத மொதல்லயே சொல்லிருந்தா நாட்டுல சந்திரனுக்கு பெரிய பெரிய கோயில்கள் கெட்டியிருப்பாங்களே காதலர்கள். 🙂

    • Saba-Thambi 6:21 pm on May 20, 2013 Permalink | Reply

      பனிப்பானு , இன்று புதிதாக படித்த சொல்!
      நன்றி.

      • GiRa ஜிரா 8:32 am on May 21, 2013 Permalink | Reply

        பனிப்பானு – அருணகிரி வைத்த பெயர். ஓசையை மொழியாக்கி அதிலும் பொருளாக்கி அந்தப் பொருளும் அருளாக வைத்த பெருமான். அருணகிரிப் பெருமான்.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel