Updates from October, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • G.Ra ஜிரா 1:18 pm on October 18, 2013 Permalink | Reply  

    சினம் ஏனோ சின்னவளு(னு)க்கு! 

    மெல்லியதோர் உணர்வினை இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். பூவினும் மெல்லியது. பனியினும் மெல்லியது. நம் கண்கள் காணாத தென்றலிலும் மெல்லியது.

    குழந்தைகளுக்கு வரும் கோவத்தைதான் சொல்கிறேன். சட்டியில் விழுந்த வெண்ணெய் உருகிவிடாமல் எடுப்பது போன்றது கோவம் கொண்ட குழந்தைகளை சமாதானப்படுத்துவது.

    குழந்தைகளே அழகு. அதிலும் கோவம் கொண்டு முகத்தைத் தூக்கி வைத்திருக்கும் போது பாருங்கள்…. அதை விட அழகு உலகில் இல்லவேயில்லை என்ற முடிவுக்கு வருவீர்கள்.

    அந்தக் குழந்தைகளை எப்படியெல்லாம் பாடி கவிஞர்கள் சமாதானப்படுத்தியிருக்கிறார்கள் என்று இன்று பார்க்கப் போகிறோம்.

    எதையும் கண்ணதாசனிடம் இருந்தே தொடங்கிப் பழகிவிட்டோம். இதையும் அவரிடமிருந்தே தொடங்குவோம்.

    தாயிடம் முகம் காட்டாமல் திரும்பி ஓடும் மகளை அழைக்க வேண்டும். திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும். எப்படி பாடுவாள் தாய்?

    சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா
    உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா

    அழைத்தால் திரும்பிப் பார்க்குமா கோவம் கொண்ட குழந்தைகள். அவர்களைத் தூக்கி வைத்து புகழ்ந்தால்தானே காது கொஞ்சமாவது கேட்கும்.

    நீ தங்கம் போலே அழகு
    நீ எங்கள் வானில் நிலவு
    இளம் தாமரைப் பூவே விளையாடு
    காவிரி போலே கவி பாடு

    விளையாடச் சொன்னால் போதாதா குழந்தைகளுக்கு? அதுவரை இருந்த கோபமும் அழுகையும் மறைந்து சமாதானம் பிறக்கிறது. சமாதானம் ஆனபிறகு என்னாகும்? அணைத்துக் கொண்டு பாட வேண்டியதுதானே!

    அணைக்கும் அன்பான கைகள்
    அங்கே சொந்தம் கொண்டாட வேண்டும்
    வரும் நாளை வாழ்விலே உயர் மேன்மை காணலாம்
    நல்ல காலம் தோன்றினால் இந்த உலகை வெல்லலாம்

    கிட்டத்தட்ட ஒரு கதையாகவே பாடலை எழுதியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.

    சரி. நாம் அடுத்த குழந்தைக்குப் போவோம். ஏதோவொரு செல்லச் சண்டை. அம்மாவோடு கோவம். கண் நிறைய கண்ணீர். யாரோடும் பேசாமல் ஒதுங்கி நிற்கும் பெண்குழந்தை. எப்படியெல்லாம் கொஞ்சி சமாதானப் படுத்தலாம்? புலவர் புலமைப்பித்தனைக் கேட்போமா

    மண்ணில் வந்த நிலவே
    என் மடியில் பூத்த மலரே
    அன்பு கொண்ட செல்லக்கிளி
    கண்ணில் என்ன கங்கைநதி… சொல்லம்மா….
    நிலவே… மலரே….
    நிலவே மலரே.. மலரின் இதழே… இதழின் அழகே!

    ச்சோ ச்வீட் என்று புலவர் புலமைப்பித்தனைப் பாராட்டத் தோன்றுகிறதல்லவா? அதிலும் அந்தாதி போல “நிலவே மலரே… மலரின் இதழே… இதழின் அழகே” என்று அடுக்குவது அட்டகாசம்.

    அதென்ன பெண் குழந்தைகள் தான் கோவித்துக் கொள்வார்களா? ஆண்குழந்தைகளுக்குக் கோவம் வராதா? அம்மா திரைப்படத்தில் வந்ததே. இந்த முறை சமாதானப்படுத்துவது கவிஞர் வைரமுத்து.

    ஆனால் ஒரு சின்ன பிரச்சனை. அவளுடைய மகன் தான் அந்தச் சிறுவன். ஆனால் இருவருக்கும் தாங்கள் தாய்-மகன் என்று தெரியாது. அவர்களுக்குள் ஏதோவொரு சண்டை. அதனால் கோவம். கோவத்தின் விளைவாக சோகம். சரி பாட்டைப் பார்க்கலாம்.

    பூமுகம் சிவக்க
    சோகமென்ன நானிருக்க

    குழந்தைகளே மென்மை. அந்த மென்மையான முகம் அழுதால் செக்கச் சிவந்து போய்விடுகிறதே! அதைப் பார்க்கத் தான் முடியுமா? பார்த்துவிட்டு சும்மாயிருக்கத்தான் முடியுமா? எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாவது அந்தப் பூமுகத்தில் புன்னகையை அல்லவா பார்க்கத் துடிக்கும் தாயுள்ளம்!

    தாயின் வடிவில் என்னை நினைத்து விடு
    எனக்கும் அழுகை வரும் துடைத்து விடு

    எப்போதுமே பிள்ளைகளை அடித்து விட்டு அதற்கு வருத்தப்படுவது தாயாகத்தான் இருக்கும். அப்படியிருக்கும் போது மகன் அழும் போது தாய் அழாமல் இருந்தால்தான் அதிசயம். அதைக் கண்டு கண்ணீரைத் துடைக்க மகன் வருவான் என்ற நம்பிக்கைதான் இந்தத் தாயின் நம்பிக்கையும். அதே போல மகனும் வந்தான். கண்ணீரைத் துடைத்தான்.

    எவ்வளவு மென்மையான உணர்வுகள் இவை. இவற்றைப் பாடலிலும் குரலிலும் இசையிலும் கொண்டு வருவது எவ்வளவு கடினமாக இருந்திருக்கும். ஆனால் பாருங்கள்… நாம் பார்த்த மூன்று பாடல்களையுமே பாடியவர் இசையரசி பி.சுசீலா தான். இந்த ஒற்றுமை தற்செயலானதாக இருக்கும் என்று நினைக்கவில்லை. ஒவ்வொரு பாடலிலும் அவர் காட்டியிருக்கும் குழைவும் உணர்வுகளும் போதும் அவர் பெருமையைச் சொல்ல.

    இன்னொரு வகையான குழந்தைகள் உண்டு. ஆம். “நானொரு குழந்தை நீயொரு குழந்தை” என்று கவிஞர் வாலி சொன்ன கணவன் மனையர் தான் அந்தக் குழந்தைகள். அந்தக் குழந்தைகளில் ஒரு குழந்தை கோவித்துக் கொண்டால் எப்படி சமாதானப்படுத்துவது?

    பச்சப்புள்ள அழுதுச்சுன்னா பாட்டுப் பாடலாம்
    இந்த மீசை வெச்ச கொழந்தைக்கு என் பாட்டு போதுமா!

    புலமைப் பித்தன் கேட்கும் கேள்வியும் நியாயமானதுதான். குழந்தைகளுக்கு பொம்மையைக் கொடுத்து அழுகையை அடக்கலாம். காதலர்களுக்குள் அழுகை வரும் போது ஒருவரையொருவர் கொடுத்துத்தான் சமாதானப் படுத்த வேண்டும்.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – பொல்லாதவன்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=VPM_AqzmZr0

    பாடல் – மண்ணில் வந்த நிலவே
    வரிகள் – புலவர் புலமைப்பித்தன்
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – நிலவே மலரே
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=UmCcv-4uv7k

    பாடல் – பூமுகம் சிவக்க
    வரிகள் – கவிப்பேரரசு வைரமுத்து
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    இசை – இன்னிசை வேந்தர்கள் சங்கர் – கணேஷ்
    படம் – அம்மா
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=o70tn84msTs

    பாடல் – பச்சப்புள்ள அழுதுச்சுன்னா
    வரிகள் – புலவர் புலமைப் பித்தன்
    பாடியவர் – வாணி ஜெயராம்
    இசை – சந்திரபோஸ்
    படம் – புதிய பாதை
    பாடலின் சுட்டி – http://youtu.be/ae3gVTQwWDk

    அன்புடன்,
    ஜிரா

    320/365

     
    • suri 2:13 pm on October 18, 2013 Permalink | Reply

      if i am not mistaken, nilave malare was written by Pulamaipitthan. Pl check

    • amas32 9:34 pm on October 18, 2013 Permalink | Reply

      என் மகன் சிறுவனாக இருக்கும்போது அவனுடனேயே நான் இருக்க வேண்டும் என்று நினைப்பான். நான் வீட்டு வேலையில் ஈடுப்பட்டிருந்தாலோ தொலைபேசியில் உரையாடினாலோ முணுக்கென்று கோபம் வந்துவிடும். நிறைய இராமாயண மகாபாரதக் கதைகள் கேட்டு வளர்ந்தவன், அதனால் நீ என்னுடன் இல்லையென்றால் நான் சாமியாராகிவிடுவேன் என்று சொல்லி வீட்டின் முன் உள்ளத் தெருவோர நடைபாதையில் போய் சாமியார் மாதிரி உட்கார்ந்து தோம் தோம் என்று உச்சரிக்க ஆரம்பித்து விடுவான். இரண்டரை, மூன்று, வயது ஓம் என்று சொல்ல வராது 🙂

      நீங்கள் சொல்வது உண்மை, குழந்தைகள் கோபித்துக் கொள்வதும் கொள்ளை அழகு 🙂

      amas32

    • rajinirams 11:07 am on October 19, 2013 Permalink | Reply

      கோபம் கொள்ளும் குழந்தைகளையும்,கணவனையும் சமாதானப்படுத்தும் பாடல்களை கொண்ட அருமையான பதிவு-அதுவும் தமிழ் திரையுலகின் தலைசிறந்த “நான்கு”கவிஞர்களை ஒருங்கிணைத்தது சூப்பர். கோபம் கொள்ளும் காதலியை சமாதானப்படுத்தும் ஒரு அருமையான பாடல் கவிஞர் வைரமுத்து அவர்களின் “பொன் மானே கோபம் ஏனோ”-ஒரு கைதியின் டயரி.கோபமான கணவனை மனைவி சமாதனப்படுத்தும் பாடல்-தென்ன மரத்துல தேளு கொட்ட பனைமரத்துல நெறி கட்டும்-வீட்டுக்குள்ள கோபம் வேணாம் கோர்ட்டுக்குள்ள இருக்கட்டும்-சாட்சி-வைரமுத்து.
      இன்னொரு பாடல் எந்த படம் தெரியவில்லை-கோபம் ஏனோ கண்ணே உன் துணைவன் நானல்லவா..அன்பே எந்தன் தவறல்ல….. நன்றி.

  • G.Ra ஜிரா 8:26 pm on October 11, 2013 Permalink | Reply  

    குடும்பம்: ஒரு கதம்பம் 

    70களிலும் 80களிலும் வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத அம்சமாக விளங்கியவை குடும்பப் பாடல்கள்.

    இந்தப் பாடல்களில் குடும்பப் பாசம் முன்னிறுத்தப் படும். நேர்மையும் நல்ல பண்புகளும் ஒழுக்கம் போற்றப் படும். பொதுவாகவே ஒரே பாடல் மகிழ்ச்சியோடு முதலில் சோகத்தோடு பிறகும் பாடப்படும்.

    மகிழ்ச்சியாகப் பாடிய பின்னர் குடும்பம் பிரியும். சோகமாகப் பாடிய பிறகு சேர்ந்துவிடும். இது படம் பார்க்கும் சராசரி ரசிகனுக்கும் தெரிந்த உலக உண்மை.

    சோகமான பாடலைப் பாடினால் இளகிய மனம் உடையவர்கள் அழுது விடவும் வாய்ப்புண்டு. ஆகையால்தான் இந்த மாதிரி பாடல்களைக் கேட்கும் போது கையில் கைக்குட்டை…. இல்லை இல்லை. கைத்துண்டு இருந்தால் நல்லது.

    குடும்பப் பாட்டு என்றதும் முதலில் எனக்குத் தோன்றியது நாளை நமதே படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் தான்.

    அன்பு மலர்களே
    நம்பி இருங்களேன்
    தாய் வழி வந்த சொந்தங்கள் எல்லாம்
    ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே

    இந்தப் பாடலைப் பாடி முடித்ததும் குடும்பம் முழுவதுமே பிரிந்து விடும். குழந்தைகள் பெரியவர்களாகித்தான் ஒன்று சேர்வார்கள்.

    இன்னொரு பாடல் உண்டு. இதுவும் குடும்பப் பாட்டுதான். ஆனால் வளர்ந்தவர்களின் குடும்பப்பாட்டு. அண்ணன் தம்பிகள் பாடும் பாட்டு. மகிழ்ச்சியாக பாட்டைப் பாடிய பின்னால் குடும்பத்தில் சண்டை வந்து அவர்களும் பிரிந்துதான் போனார்கள். படம் முடியும் முன்னர் மூத்த அண்ணன் இறக்கும் போது ஒன்று சேர்வார்கள்.

    முத்துக்கு முத்தாக
    சொத்துக்கு சொத்தாக
    அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
    கண்ணுக்குக் கண்ணாக
    அன்பாலே இணைந்து வந்தோம்
    ஒன்னுக்குள் ஒன்னாக

    இவர்கள் அண்ணன் தம்பிகள் என்றால், அண்ணனுக்கும் தங்கைக்கும் கூட குடும்பப் பாட்டு வைத்தது தமிழ் சினிமா.

    பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
    ஊர்வலம் வருகின்றது
    அன்பு பொங்கிடும் அன்புத் தங்கையின் நெற்றியில்
    குங்குமம் ஜொலிக்கின்றது

    சினிமா வழக்கப்படி அண்ணனும் தங்கையும் பிரிந்து விடுகிறார்கள். பின்னொரு காட்சியில் அண்ணன் அந்தப் பாடலை ஒரு திருமண வரவேற்பில் பாடும் போது காலில்லாத தங்கை நடக்க முடியாமல் நடந்து ஓடமுடியாமல் அழ முடியாத அளவுக்கு அழுது…. கடைசியில் அண்னனைக் காண முடியாமல் போன போது திரையரங்குகளில் சிந்திய கண்ணீர் ஆற்றிலேயே ஆடிப்பெருக்கு கொண்டாடியிருக்கலாம்.

    கிட்டத்தட்ட இதே போல இன்னொரு குடும்பம். தாய் தந்தை இழந்து அனாதைகளான அக்காவும் தம்பிகளும். அவர்களுக்கும் ஒரு பாடல் எழுதினார் கலைஞர் கருணாநிதி.

    காகித ஓடம் கடலலை மேலே
    போவது போலே மூவரும் போவோம்

    இந்தப் படத்தில் முதலில் மகிழ்ச்சியாகவும் பிறகு சோகமாகவும் பாட மாட்டார்கள். முதலில் சோகமாகவும் அடுத்து பெரும் சோகமாகவும் பாடி படம் பார்த்த மக்களை கதறக் கதறக் கூக்குரலிட்டு அழவைத்ததை மறக்க முடியுமா? எப்போதோ பிரிந்து போன தம்பி குடிபோதையில் எதிரில் இருப்பது அக்கா என்று தெரியாமலே தவறிழைக்க நெருங்குவான். சோகத்தின் உச்சியில் அந்நேரம் அக்கா அந்தப் பாடலைப் பாட திருந்துகிறான் தம்பி. அரிவாள்மனையில் கழுத்தை அறுத்துக் கொண்டு குடும்பத்தை இணைக்கிறாள் அக்கா.

    இன்னொரு குடும்பப் பாடல் உண்டு. இந்தப் பாடல் நடிகர் திலகத்துக்கு. மகிழ்ச்சியான குடும்பம். சந்தர்ப்பத்தால் மூலைக்கொன்றாய் பிரிகிறது. பிறகென்ன… படம் முடியும் போது எல்லாம் சுபம்.

    ஆனந்தம் விளையாடும் வீடு
    இது ஆனந்தம் விளையாடும் வீடு
    நான்கு அன்பில்கள் ஒன்றான கூடு
    இது ஆனந்தம் விளையாடும் வீடு

    பிரிந்தால் குடும்பமாகத்தான் பிரிய வேண்டுமா? கணவனும் மனைவியும் பிரிந்தால்? நிறைமாதமாக இருக்கும் மனைவிக்கு கணவன் ஒரு பாடல் பாடுகிறான். அவன் பாடலைப் பாடிய வேளை இருவரும் பிரிய வேண்டியதாயிற்று.

    மலர் கொடுத்தேன்
    கை குலுங்க வளையலிட்டேன்
    மங்கை எந்தன் ராஜாத்திக்கு நானே
    இதுவொரு சீராட்டம்மா
    என்னையும் தாலாட்டம்மா

    பிரிந்த கணவன் காஷ்மிரில் இருக்க… மனைவி டில்லியில் இருக்க.. ஒரு தற்செயலான தொலைபேசி அழைப்பு இருவரையும் பேச வைக்கிறது.

    எதிர்முனையில் பேசுவது கணவன் என்று தெரிந்ததும் கே.ஆர்.விஜயா அதிர்ச்சியில் போனை கீழே போட்டு விடுவார்… அப்போது “சுமதீஈஈஈஈஈஈஈஈஈஈ” என்று நடிகர் திலகம் சிம்ம கர்ஜனை செய்யும் போது அடுத்த காட்சிக்காக வெளியே காத்திருந்தவர்கள் காதிலும் விழும். இந்தக் காட்சியில் கீழே விழுந்துவிட்ட கே.ஆர்.விஜயா கை நழுவவிட்ட தொலைபேசியை எடுப்பாரா இல்லையா என்ற அதிர்ச்சி தாங்காமல் திரையரங்கில் ஒருவருக்கு மாரடைப்பு வந்ததாகச் சொல்வார்கள்.

    தமிழ்த் திரைப்படத்தின் தன்மை மாறிக் கொண்டிருந்த எழுபதுகளின் இறுதியில் மிகப் பழம் பெருமை வாய்ந்த இயக்குனர் டி.ஆர்.சுந்தரம் ஒரு திரைப்படம் எடுத்தார். அந்தப் படத்திலும் ஒரு குடும்பப் பாட்டு. அவர்கள் குடும்பத்தோடு இன்னொரு உறுப்பினராக நிலா.

    வெண்ணிலா வெள்ளித்தட்டு
    வானிலே முல்லை மொட்டு

    இந்தப் படத்திலும் பிரிந்த அண்ணன் தம்பி தங்கைகள் படம் முடிவதற்கு முன்னால் குய்யோ முய்யோ என்று கதறிக் கொண்டு ஒன்று சேர்ந்தார்கள் என்றும் அவர்களின் மூத்த அண்ணன் உயிரைக் கொடுத்து மற்றவர்களைக் காப்பாற்றினான் என்றும் சொல்லி கிண்டலடிக்க விரும்பவில்லை.

    இது போன்ற குடும்பப் பாட்டுகள் குறைந்து விட்ட காலத்தில் ஒரு குடும்பப் பாட்டு வந்தது. அதுவும் கலைப்பட இயக்குனர் ஒருவரால் கொண்டுவரப்பட்டது. பாலுமகேந்திரா இயக்கிய நீங்கள் கேட்டவை திரைப்படப் பாடலைத்தான் சொல்கிறேன்.

    சிறுவயதில் அம்மா பாடிய பாட்டை நினைவில் வைத்துக் கொண்டு பின்னாளில் அண்ணனும் தம்பியும் சேர்கிறார்கள். அம்மாவைக் கொன்றவனைப் பழி வாங்குகிறார்கள்.

    பிள்ளை நிலா
    இரண்டும் வெள்ளை நிலா
    அலை போலவே
    மனம் விளையாடுதே

    இதில் அம்மாவாக பாடும் எஸ்.ஜானகி குரலில் பிள்ளை நிலா என்றும் மகனுக்காக ஏசுதாஸ் அவர்கள் பாடும் போது பில்லை நிலா என்றும் உங்கள் காதில் விழுந்தால் என்னைக் குற்றம் சொல்லாதீர்கள்.

    இதுவரை நாம் பார்த்ததெல்லாம் குடும்பப் பாட்டுகளே அல்ல என்னும் அளவுக்கு 90களில் ஒரு குடும்பப் பாட்டு வந்தது. இதுவரை நாம் மனிதர் உணர்ந்து கொள்ள மனிதக் குடும்பப் பாட்டுகளைப் பார்த்தோம்.

    ஆனால் ”காக்கை குருவி எங்கள் சாதி” என்று பாரதி சொன்னதை ஒவ்வொரு படத்திலும் பாம்பை டைப் அடிக்க வைத்தும் குரங்கை பைக் ஓட்ட வைத்தும் யானையை சைக்கிள் ஓட்ட வைத்தும் நிரூபித்துக் கொண்டிருக்கும் இயக்குனர் இராம.நாராயணன் எடுத்த படமான துர்காவில் ஒரு குடும்பப் பாட்டு உண்டு.

    பாப்பா பாடும் பாட்டு
    கேட்டு தலைய ஆட்டு
    மூணு பேரும் ஒன்னுதானே
    அம்மாவுக்கு கண்ணுதானே
    ஒன்னா விளையாடலாம்

    அந்தப் பாடலைக் கேட்டதுமே பிரிந்து போன நாயும் குரங்கும் எங்கெங்கோ இருந்து ஓடி வந்து பேபி ஷாமிலியைச் சேரும் காட்சி படம் பார்க்கின்றவர்களின் நெஞ்சை உருக்கும். மனதை கிறுகிறுக்க வைக்கும். சித்தத்தை பைத்தியம் பிடிக்க வைக்கும்.

    எப்படியெல்லாம் நாம் சிக்கியிருக்கிறோம் பார்த்தீர்களா?!?

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – அன்பு மலர்களே நம்பி இருங்களேன்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர் – (மகிழ்ச்சி – பி.சுசீலா, அஞ்சலி, ஷோபா, சசிரேகா) (சோகம் – டி.எம்.சௌந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்ரமணியம்)
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – நாளை நமதே
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=ED6zDjOZXtw

    பாடல் – முத்துக்கு முத்தாக
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – கண்டசாலா
    இசை – கே.வி.மகாதேவன்
    படம் – அன்புச் சகோதரர்கள்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=-gyJT1nQDnM

    பாடல் – பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
    வரிகள் – புலவர் புலமைப்பித்தன்
    பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – நினைத்ததை முடிப்பவன்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Azrz41LaLeo

    பாடல் – ஆனந்தம் விளையாடும் வீடு
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – சந்திப்பு
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=bzRQIs5OIuA

    பாடல் – மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன்
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – திரிசூலம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=-oUNmu4edLA

    பாடல் – வெண்ணிலா வெள்ளித்தட்டு
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – மலேசியா வாசுதேவன், பி.எஸ்.சசிரேகா, எஸ்.பி.ஷைலஜா
    இசை – ராஜேஷ்
    படம் – காளி கோயில் கபாலி
    பாடலின் சுட்டி – http://youtu.be/GfWzFhWRuHs

    பாடல் – பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர் – எஸ்.ஜானகி (மகிழ்ச்சி), கே.ஜே.ஏசுதாஸ்(சோகம்)
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – நீங்கள் கேட்டவை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=XvrB5UA0Kl0

    பாடல் – பாப்பா பாடும் பாட்டு
    வரிகள் – தெரியவில்லை
    பாடியவர் – எம்.எஸ்.ராஜேஸ்வரி
    இசை – சங்கர் – கணேஷ்
    படம் – துர்கா
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Vg0kYE6CnWA

    அன்புடன்,
    ஜிரா

    314/365

     
    • Uma Chelvan 9:36 pm on October 11, 2013 Permalink | Reply

      It is really funny to read your post GiRa., .பொதுவாக காதலன் காதலி அன்பைத்தான் ” செம்புல பெயல் நீர் போல் ” னு சொல்லுவாங்க. ஆனால் இங்கே அண்ணன் தங்கை பாசத்தயும் “செம்மணிலே தண்ணீரை போல் உண்டான சொந்தம் இது ” என்று பாடுகிறார் ஒரு அண்ணன். என்ன ஒரு அருமையான பாடல்!!! இந்த ராஜா வேற எல்லாத்துக்கும் ஒரு பாட்ட போட்டு வைச்சு நம்மை படுத்தி எடுக்கிறார் !!!!!!:::::)))))))))

    • rajinirams 2:12 am on October 12, 2013 Permalink | Reply

      செம பதிவு.வித்தியாசமான சிந்தனை.நல்ல திறனாய்வு.இது போல பல பாடல்களிருந்தாலும் சட்டென நினைவு வரும் சில பாடல்கள்-என் பங்கிற்கு-1,நான் அடிமை இல்ளை-ஒரு ஜீவன் தான்-வாலி2,மவுன கீதங்கள்-மூக்குத்தி பூ மேலே-வாலி 3,சின்னதம்பி-நீ எங்கே-வாலி.4,ப
      ட்டிக்காடா பட்டணமா-அடி என்னடி ராக்கம்மா-கண்ணதாசன் 5,நீதிக்கு தலை வணங்கு-இந்த பச்சைக்கிளிக்கொரு(சோகமில்லை)-புலமைப்பித்தன் 6,கல்யாண ராமன்-ஆஹா வந்துருச்சு-காதல் தீபம் ஒன்று-பஞ்சு அருணாசலம்.7,கல்யாண பரிசு-உன்னைக்கண்டு-பட்டுக்கோட்டையார்.8,உழைப்பாளி-அம்மாஅம்மா-வாலி 9,புதுக்கவிதை-வெள்ளைப்புறா ஒன்று-வைரமுத்து 10,கொக்கரக்கோ-கீதம் சங்கீதம்-வைரமுத்து 11,வீட்ல விசேஷங்க-மலரே தென்றல் பாடும்-வாலி.நீங்கள் குறிப்பிட்ட பாப்பா பாடும் பாட்டு உள்ளிட்ட துர்கா படப்பாடல்கள் வாலி எழுதியவையே. நன்றி

    • amas32 9:01 pm on October 14, 2013 Permalink | Reply

      நீங்க எந்த ஒரு டாபிக் எடுத்தாலும் அலசி ஆராய்ந்து சூப்பராக எழுதுகிறீர்கள் ஜிரா! குடும்பப் பாடல்கள் அந்தக் காலப் படங்களில் கண்டிப்பாக இருந்தன, இந்தக் கால டாஸ்மாக்கில் குடித்துப் பாடும் பாடல்கள் போல.

      காற்றில் வரும் கீதமே http://www.youtube.com/watch?v=pnteqlhXlS4 இதுவும் அழகான ஒரு குடும்பப் பாடல் 🙂

      amas32

  • என். சொக்கன் 9:30 pm on September 18, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு: பூச்சரமே 

    சாதி மல்லிப் பூச்சரமே ..சங்கத் தமிழ்ப் பாச்சரமே ஆசையின்னா ஆசையடி அவ்வளவு ஆசையடி ”

    சிறு வயதில் பாரதிதாசன் பற்றி பாட நூலில் படித்த பொழுது ஒரு பெண் எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்று “இருண்ட வீடு” கதையிலும் எப்படி இருக்க வேண்டும் என்று “குடும்ப விளக்கு ” கதையிலும் ொல்லி இருப்பார் என்று தேர்வு நிமித்தம் படித்ததோடு சரி . அதன் பிறகு அதனை மறந்தே போனேன்.

    கணவருக்கு ஊட்டி விடுவது பற்றி @amas32 ஒரு ட்வீட் போட நான் பதிலுக்கு அப்படி ஒரு கற்பனை செய்து பார்த்தேன் என்று கிண்டலடிக்கவும் @nchokkan நீங்கள் பாரதிதாசனின் குடும்ப விளக்கு படியுங்கள் என்று காரணம் சொல்லாமல் ிங்க் கொடுத்துவிட்டுப் போய்விட்டார் .சரி என்று படித்துக் கொண்டிருக்கும் பொழுதே “குடும்ப விளக்கு” க்குத் தக்கவாறு இந்தப் பாடல் வெகுவாகப் பொருந்திப் போவதை உணர்ந்தேன். ஒருவேளை அவர் இப்பொழுது எழுதி இருந்தால் பெண்ணீய வாதிகள் எவரேனும் சண்டைக்கு வந்தாலும் வரலாம் 🙂 ஆனால் இப்பொழுது படித்தாலும் இனிக்கவே செய்கிறது 🙂

    ஆணோ , பெண்ணோ இருவரும் அன்புக்குக் கட்டுப்பட்டு அடிமைத் தனத்தை விரும்பி ஏற்கும் பொழுது ஆணாதிக்கம் பெண்ணீயம் அனைத்தும் ஒரு புள்ளியில் மறைந்தே போகின்றது .

    “குடும்ப விளக்கில்”பகல் முழுக்க அவள் செய்யும் வேலைகள் அவள் குடும்பம் நடத்தும் பாங்கு என்று விவரித்து விட்டு சின்னச் சின்ன அன்புப் பரிமாற்றங்களையும் சொல்லி விட்டு இரவு நேரத்தில் ஓர் அறைக்குள் நாயகனும் நாயகியும் இணைந்து நிற்கும் தருணம் , சற்றே ஆர்வக்கோளாறில் நாற்காலியை இழுத்துப் போட்டு சீட்டின் நுனியில் அமர்கிறேன் அடுத்து என்ன சொல்லப் போகிறாரோ என்று 🙂

    ஆனால் நாயகி கவலையுடன் நாட்டுக்கு என்ன செய்தோம் என்ற பேச்சை ஆரம்பிக்கிறாள் இந்தக் காட்சியின் அடிப்படையில் சற்றே உல்டாவாக , தலைவன் தலைவிக்கு சொல்லும் விதமாக கவிஞர் புலமைப் பித்தன் வெகு அழகாகஎழுதியுள்ள பாடலே இது .

    ​எனக்கு இது மறக்க முடியாத பாடலாகிப் போனதற்கு காரணம் ஒன்று உண்டு ​.கல்லூரியில் பாட்டுப் போட்டியில் தோழிக்கு இந்தப் பாடலைப் பரிந்துரை செய்திருந்தேன். அவளும் சரி என்று சொல்லி விட்டு அங்கே பாடறியேன் படிப்பறியேன் பாடி விட்டாள் .மைக் முன்பு அவள் நிற்கும் வரை பாடலை மாற்றுவதைப் பற்றி அவள் சொல்லவே இல்லை. அதிலே ஒரு வருத்தம் அவள் மீது. அதனால் பாடலைக் கேட்கும் பொழுது அந்த நினைவுகளும் கோர்வையாக வந்து விழும் .

    “சாதி மல்லிப் பூச்சரமே ” முத்ல் வரியே தகராறாக ஒரு முறை விவாதித்தோம் ட்விட்டரில் 🙂 சாதி மல்லி என்பது பிச்சி என்று @anu_twits சொல்ல இல்லை இல்ல மல்லிகையில் உயர் தரம் வாய்ந்த மல்லிகை என்று நான் சொல்ல ஒரே பூ வாசனை டைம் லைனில் ஒரு மணி நேரத்திற்கும் மேல். இன்றுவரை பிச்சியை சாதி மல்லியாக நான் ஒத்துக் கொள்ளவே இல்லை போலவே அவரும் 🙂

    புதுப் புது அர்த்தங்களில் விளைந்த கருத்து வேறுபாடுக்குப் பிறகு ராஜாவும் பாலசந்தரும் கை கோர்க்கவே இல்லை .ராஜா ஜாம்பாவானாக வலம் வந்து கொண்டிருந்ததருணத்தில் துணிந்து வேறு ஒருவரை இசையமைப்பாளராகப் போட்டு பால சந்தர் எடுத்த ரிஸ்க்குக்கு தான் தகுதியானவன் என்று நிரூபித்து இருக்கிறார் மரகத மணி . பாடல்களெல்லாம் முத்துகள் . MSV யோ இளையராஜாவோ ,மரகதமணியோ ,AR ரகுமானோ தனக்குத் தேவையான பாடல்களைக் கறந்து விடுவதில் இயக்குநர் KB வல்லவர் என்றே அவரின் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பறை சாற்றுகின்றன .

    இந்தப் பாடலுக்கான பின்னணி வெகு சுவ்ராசியம்.அதிலே பாரதிதாசனின் பாடலைப் புகுத்த வேண்டும் என்ற யோசனைக்காக இயக்குனருக்கு ஒரு ஷொட்டு. ஒருவர் ட்வீட் கூட RT ஆகி வந்தது இது போன்று சினிமாவில் புகுத்தப் பட்ட பாரதியார் பாரதிதாசன் பாடல்களை மட்டுமே பெரும்பாலோனோர் இதுவரை அறிந்திருக்கிறோம் என்று . .நிதர்சனமான உண்மை. ஆக சினிமா என்ற மாபெரும் ஊடகம் மூலமாக எடுத்துச் செ(சொ)ல்லப் படும் சேதிகள் தக்க வீரியத்தோடு மக்களைச் சென்றடையும்.அதனால் படத்திற்குத் தகுந்தாற்போல் மிகப் பொருத்தமாக உறுத்தாமல் KB உட்புகுத்தியதைப் போல வரும் தலைமுறை இயக்குனர்களும் செய்தால் நலம் .

    வெள்ளை &வெள்ளை கருப்புக் கண்ணாடியில் மம்முட்டி இன்னும் அழகுடன் மிளிர பாடலின் வீணை இடையிசைக்கெல்லாம் துள்ளலுடன் பானுவின் இடையும் அசைகிறது.தான் விரும்பிய் காதலன் தன் பெயரை உச்சரிக்க வேண்டும் என்று கண்மணி என்று மாற்றி எழுதுவதும் அதை வேறு ஒருவருக்குச் சமர்ப்பிப்பதில் அதிர்ந்தும் போவதுமாக கீதாவின் நடிப்பு கனகச்சிதம் .

    “எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
    இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா ”
    “யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
    பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது கண்மணி”

    யாதும் ஒரே யாவரும் கேளிர் எனச் சொன்னது கணியன் பூங்குன்றனார் ..பாரதிதாசனோடு அவரையும் உள்ளிழுத்து விட்டார் புலமைப் பித்தன்

    பாடல் ஆரம்பிப்பதுக்கு முன்பு அழகான உச்சரிப்போடு ஏற்ற இறக்கத்துடன் மம்முட்டி சொல்வதும் அழகு.உதாரணம் கன்னித் தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று “பின்பு ” என்பதை நிறுத்திச் சொல்லி கட்டிலில் தாலாட்டு என்பார்.

    தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் கொதிப்பினை நினைவூட்டும் விதமாக “உலகம் யாவும் உண்ணும் போது நாமும் சாப்பிட எண்ணுவோம் ” என்ற வரிகள் இருக்கின்றது .காதல் மொழி பேச வேண்டிய தருணத்தில் நாட்டைப் பற்றிக் கவலைப் பற்றி அக்கறைப் படுவது நமக்கு இந்த காலத்தில் மிகை தான் . குறைந்த பட்சம் இப்படி கற்பனையிலாவது நடக்க்கிறதே என்று எண்ணிக் கொள்ள வேண்டியதுதான் 🙂

    ஒரு இசைக்கு பானு சரிவான பகுதியில் சடசடவென ஆடிக்கொண்டே இறங்குவார் ..அந்த இசைக்கு அக்காட்சியமைப்பு அவ்வளவு பொருத்தம் . பொதுவாக ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால் என் செல்லம் இல்ல கண்மணி,ராசாத்திஎன்ற அழைப்புகள் சொல்லிக் காரியம் சாதிப்பதுண்டு தலைவனும் தலைவியை அவ்வாறே கொஞ்சி காரியம் சாதிக்கப் பார்க்கிறார் 🙂 “கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு ”

    வெறும் பாடலோடு நிறுத்தாம பாரதிதாசனின் அந்தக் கவிதையோடும் ,பின்னணிக் காட்சியோடு சேர்த்தே ரசிக்க ​
    http://www.youtube.com/watch?v=9G8e0uaWzLw

    உமா கிருஷ்ணமூர்த்தி

    தென் மதுரைச் சீமையைச் சேர்ந்தவர். ட்விட்டரில் பெரியாள். தன்னுடைய வலைப்பதிவுக்கு (http://umakrishhonline.blogspot.in/) ”நிச்சயம் புரட்சிப்பெண் அல்ல, மனித கூட்டங்களின் நடுவே எனக்கென்று ஒரு அடையாளத்தை மட்டுமே விரும்புகின்றேன்” என்று Tagline வைத்திருக்கிறார்.

    ”வேற எதாவது சொல்லுங்க” என்றால் இப்படிப் பதில் வருகிறது: “மண் சட்டியில் சோறு ஆக்கி விளையாடுவது பிடிக்கும். பல்லாங்குழி வீட்டில் வைத்து இருக்கிறேன். மழை நின்றபிறகு மரத்தில் உள்ள நீரை உதிர்த்து விளையாடுவது பிடிக்கும். ஆற்று மணலில் வீடு கட்டி விளையாடுவது பிடிக்கும்”

     
    • GiRa ஜிரா 9:41 pm on September 18, 2013 Permalink | Reply

      அட்டகாசம். உங்களை நாலு வரி நோட்டு எழுத வைத்த பாரதிதாசனுக்கும் புலமைப் பித்தனுக்கும் கனியன் பூங்குன்றனுக்கும் நன்றி. எழுதத் தூண்டிய நாகாவுக்கும் தான். 🙂

    • amas32 9:45 pm on September 18, 2013 Permalink | Reply

      உங்கள் குரலிலேயே முழுவதும் கேட்டு முடித்தேன். அப்படியே பேசுவதுபோல் உள்ளது உங்கள் எழுத்து 🙂

      அருமையாக எழுதியிருக்கிறீர்கள் என்று சொல்லவும் வேண்டுமோ?

      ஒரு பாடல் வெற்றிபெற வேண்டும் என்றால் பாடல் வரிகள், இசை, பாடகர்களின் தெளிவான உச்சரிப்பு, காட்சியமைப்பு, நடிகர்களின் பங்களிப்பு அனைத்தும் A 1 ஆக இருக்க வேண்டும். இந்தப் பாடல் அதற்கு ஒரு சான்று! எவ்வளவு தடவை பார்த்தாலும் அலுக்காது.

      சூப்பர் பதிவு உமா 🙂

      amas32

    • Uma Chelvan 3:00 am on September 19, 2013 Permalink | Reply

      Very Beautifully written Uma!

      ஏட்டிக்கு போட்டியாக பேசுவதும், ஆண்களை பொது வெளியில் அவமான படுத்துவதும் தான் “பெண்ணியம்” என்று இன்று பல பேர் நினைக்கிறாங்க! அதிகம் படித்தவர்களே இந்த தப்பை ரொம்ப பண்ணறாங்க !”தேவதாசி முறை இருக்கட்டும் ” என்று சொன்ன திரு.சத்திய மூர்த்தியிடம் ” அப்படி என்றால் உன் வீட்டு பெண்களை அனுப்பு இவர்களை விட்டு விடு” என்று சொன்ன Dr. .முத்து லக்ஷ்மி ரெட்டி அவங்க பேசுனது பெண்ணியம். து .இன்று மத்தவங்க பேசுறது எல்லாம் என்ன வென்று பேசுறவங்கதான் சொல்லணும் !!!!

      “ஆணோ , பெண்ணோ இருவரும் அன்புக்குக் கட்டுப்பட்டு அடிமைத் தனத்தை விரும்பி ஏற்கும் பொழுது ஆணாதிக்கம் பெண்ணீயம் அனைத்தும் ஒரு புள்ளியில் மறைந்தே போகின்றது …………………………அதுதான் அமைதிக்கும் நிம்மதிக்கும் வழி!!!

      காலடியில் விழுந்தது மட்டும் அல்லாமல் எழவும் முடியாமல் இருப்பதுவும் சிறப்புதான்!!

    • Uma Chelvan 3:19 am on September 19, 2013 Permalink | Reply

      Just 3 minutes video, watch and enjoy!!!!

    • umakrishh 7:59 am on September 19, 2013 Permalink | Reply

      மிக்க நன்றி ஜிரா 🙂 மிக்க நன்றி அம்மா 🙂 மிக்க நன்றி உமா 🙂
      உமா நீங்க சொன்ன மாதிரி சொன்னா அப்போ என் வீட்டுப் பெண்ணும் தேவதாசியும் ஒன்றா எப்படி ஒப்பிடப் போச்சு என்று டைம் லைனில் கட்டி உருளுவார்கள் ..அப்படி பல சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன 🙂
      ட்விட்டரில் என்னை உயிர்ப்புடன் வைத்திருப்பது இது போன்றவைகள் தாம்..பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் விசயம் நாம் நிறைய அறியலாம் இங்கே..ஊக்கம் கொடுக்கும் உங்களைப் போன்ற நண்பர்களே என்னை இந்த அளவுக்கு எழுத வைப்பது ..இச்சிறு விளக்கை கோபுரத்தில் வைத்து அழகு பார்க்கும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி ..:)

    • Chari Iqbal Emendis (@Rasanai) 9:15 am on September 19, 2013 Permalink | Reply

      அட்டகாசம் உமா..இந்த பாட்டுன்னோன நேராவே அர்த்தம் புரிஞ்சுடுதே, என்ன புதுசா இருக்கப்போகுதுன்னு தோனிச்சு..எல்லாம் கலந்து செம ரைட்டப்.

      குறிப்பா இந்த வரிகள் கிளாஸ். எனக்கு அவ்வளவு ஒத்துப்போகுது 😉

      ”ஆணோ , பெண்ணோ இருவரும் அன்புக்குக் கட்டுப்பட்டு அடிமைத் தனத்தை விரும்பி ஏற்கும் பொழுது ஆணாதிக்கம் பெண்ணீயம் அனைத்தும் ஒரு புள்ளியில் மறைந்தே போகின்றது .”

      வெல்டன் உமா..

    • rajinirams 10:54 am on September 19, 2013 Permalink | Reply

      amas32 அவர்கள் கூறியது போல பேசுவது போலவே இருந்த யதார்த்தமான பதிவு.பாரதிதாசனையும் கணியன் பூங்குன்றனாரையும் தன் எழுத்துக்களில் கொண்டுவந்த புலவர் புலமைப்பித்தனின் திறமைக்கு இந்த பாடல் நல்ல சான்று. பூச்சரம்,பாச்சரம் என தூய தமிழில் பாடல்கள் இப்போது வராததும் கவலையளிக்கிறது. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

      • kamala chandramani 11:57 am on September 19, 2013 Permalink | Reply

        அருமையான பதிவு உமா அவர்களே. மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.பாரதிதாசனையும், கணியன் பூங்குன்றனாரையும் தன் எழுத்துக்களில் இணைத்த புலமைப் பித்தன், அருமையான நடிப்பு. எடுத்துச் சொல்லியிருக்கும் பாணி அருமை.

    • Prabhu 9:27 pm on September 19, 2013 Permalink | Reply

      Somebody just confused ‘Pulamai pithan’ with ‘Pudhumai pithan’. I imagine chokkan’s reaction. Ha.. Ha…

      • என். சொக்கன் 9:40 pm on September 19, 2013 Permalink | Reply

        Corrected 😉

    • jroldmonk 11:31 pm on September 19, 2013 Permalink | Reply

      ஆனாலும் பாத்துட்டு தான் இருக்கோம் முன்பு “மாலையில் யாரோ மனதோடு பேச ..” பதிவு இப்போ இந்த பதிவு, பானுப்ரியாவை கொஞ்சம் ஓவரா தான் ரசிக்கிறீங்க 😛

      • umakrishh 4:02 pm on September 23, 2013 Permalink | Reply

        நன்றி மாங்கு…பானு ஒரு வித அழகு ..அவங்க நடனம் பிடிக்கும் :))

    • Deva 7:18 am on September 20, 2013 Permalink | Reply

      I was under impression that’s this song was written by vairamuthu. My respect towards pulamaipithan increasing day by day.

    • Thiyagarajan 7:38 am on September 20, 2013 Permalink | Reply

      எல்லோராலும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் உங்கள் பார்வையை பதிவு செய்திருக்கிரிர் . குறிப்பாக நீங்கள் பயன்படுத்திய இரண்டு வரி மிகவும் அருமை ” ஆணோ , பெண்ணோ இருவரும் அன்புக்குக் கட்டுப்பட்டு அடிமைத் தனத்தை விரும்பி ஏற்கும் பொழுது ஆணாதிக்கம் பெண்ணீயம் அனைத்தும் ஒரு புள்ளியில் மறைந்தே போகின்றது”. இந்த வரிக்காவே அவரை நிச்சயம் பாராட்ட வேண்டும் ” வாழ்த்துகள் உமாகிருஷ்”.

      • umakrishh 4:02 pm on September 23, 2013 Permalink | Reply

        நன்றி தியாகராஜன் :))

    • umakrishh 4:01 pm on September 23, 2013 Permalink | Reply

      நன்றி 🙂 ரசனைக்காரரே :))நன்றி ரஜினிராம்ஸ் நன்றி கமலா மேடம் 🙂

  • G.Ra ஜிரா 9:57 pm on August 24, 2013 Permalink | Reply  

    கை, செய் 

    கை என்னும் உறுப்புக்கு தெலுங்கில் செய் என்றே பெயர். வேலைகளை எல்லாம் செய்வதனால் அது செய் என்றழைக்கப்படுகிறது. பழைய தமிழ்ப் பெயர்தான். தமிழில் வழக்கொழிந்து தெலுங்கில் மட்டும் நிலைத்து விட்ட பெயர்.

    அந்தக் கையை நிறைய தமிழ்ப் பாடல்களில் காணலாம் என்றாலும் இந்தக் கட்டுரையில் மூன்று பாடல்களை மட்டும் எடுத்துப் பார்க்க நினைக்கிறேன்.

    முதலில் புலமைப்பித்தன் எழுதிய வரிகளைப் பார்க்கலாம்.

    எதுகை அது உனது இருகை அதில் எனது பெண்மை ஆடட்டுமே
    ஒருகை உடல் தழுவ மறுகை குழல் தழுவ இன்பம் தேடட்டுமே
    (பாடல் – அமுதத் தமிழில். படம் – மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். இசை-எம்.எஸ்.வி)

    எதுகை பொருந்தி வரும். தொடர்ந்து வரும். நயமும் தரும். அப்படி அவன் கைகள் அவள் பெண்மைக்குப் பொருந்தியும் தொடர்ந்தும் நயமாகவும் வரட்டும் என்று விரும்புகிறாள். அவ்வாறாக ஒரு கை உடலையும் மறுகை குழலையும் தழுவும் போது அங்கு தவழும் இன்பத்துக்கு குறைவேது?

    அடுத்தது கண்ணதாசன் எழுதிய வரிகளைப் பார்ப்போம். பாடலுக்கான காட்சியை முதலில் சொல்லி விடுகிறேன். அவள் பெயர் பத்மாவதி. அவள் அலர் அமர் திருமகளின் வடிவம். அவள் மணக்க விரும்புவது ஸ்ரீநிவாசனை. அந்த ஸ்ரீநிவாசனே ஒரு குறத்தியாக வந்து பத்மாவதிக்கு குறி சொல்லி ஆடிப் பாடும் பாடல் இது. அதற்கு கண்ணதாசன் எழுதிய வரிகளைப் பாருங்களேன்.

    மங்கை தண்கை மலர்க்கை
    அந்த மலர்மகள் வழங்கும் திருக்கை
    பங்கய மலரே இருக்கை
    அந்த பாற்கடல் நாயகன் துணைக்கை
    (படம் – தெய்வத் திருமணங்கள், இசை – எம்.எஸ்.விசுவநாதன்)

    அவளுடைய பெயரிலேயே குளிர்ந்த தாமரை இருக்கிறது. பத்மாவதியல்லவா. அந்த மங்கையின் கையும் குளிர்ந்த மலர்க்கையாம். அலைமகள் அள்ளி வழங்கும் செல்வம் நிறைந்த கை. அவளுடைய இருக்கை பங்கய மலர். அவளுக்கு பாற்கடல் பரந்தாமனே துணைக்கை.

    ஏன் இத்தனை கைகள்? குறத்தி கை பார்த்துதானே குறி சொல்ல முடியும்!

    இதையெல்லாம் விட என்னை ஆச்சரியப்படுத்தியது டி.ராஜேந்தரின் வரிகள். அவர் கைக்கு உவமை சொன்னது போல வேறு யாரும் சொன்னார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

    அஞ்சுதலை நாகமென நெளிகின்ற கையானது
    (பாடல் – மோகம் வந்து தாகம் வந்து, படம் – உயிருள்ளவரை உஷா, இசை – டி.ராஜேந்தர்)

    ஐந்து விரல்களை ஐந்து தலைகளாக்கி கையை நாகம் என்று உவமித்தது நல்ல கற்பனை. மோகம் கொண்ட வேளையில் அவளுடைய கை ஐந்துதலை நாகம் போல நெளிவதாகச் சொல்வதும் பொருத்தம் தானே!

    இதுவரை திரையிலக்கியம் பார்த்தோம். இனி பழந்தமிழ் இலக்கியம் கொஞ்சம் பார்க்கலாமா?

    கை என்ற சொல் ஒரு அகவுணர்வைக் குறிக்கும். அந்த உணர்வு நிலைக்கு கைந்நிலை என்று பெயர்.

    அதென்ன கைந்நிலை?

    காமம் பாடாய்ப் படுத்தும் உடல் வாதையைக் கூடல் கொண்டு தீர்க்க யாரும் இல்லாத நிலை கைந்நிலை.

    அந்த நிலையில் வருந்திடும் பெண்களைத்தான் சமூகம் கைம்பெண் என்று அழைக்கிறது.

    அந்த உணர்வுநிலையை முன்னிறுத்தி சங்கம் மருவிய காலத்தில் ஒரு நூல் எழுந்தது. பதினென் கீழ்க்கணக்கு வரிசையில் கடைசியாக வைக்கப்பட்ட அந்த நூலின் பெயரே கைந்நிலை என்பதுதான்.

    இந்த நூலை இயற்றியவர் பெயர் புல்லங்காடர். குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை ஆகிய ஐந்து திணைகளிலும் கைந்நிலையை முன்னிறுத்தி எழுந்த ஒரே நூல் கைந்நிலை மட்டுமே எனலாம். அந்த நூலில் ஒரு அழகான பாடலைப் பார்க்கலாமா?

    நாக நறுமலர் நாள்வேங்கைப் பூவிரவிக்
    கேச மணிந்த கிளரெழிலோ ளாக
    முடியுங்கொ லென்று முனிவா னொருவன்
    வடிவேல்கை யேந்தி வரும்

    புன்னை மரத்து நன்மலரையும்
    வேங்கை மரத்தின் பூவினையும்
    சூடிக் கொண்ட கிளர் எழில் கூந்தலாள் நான்
    பிரிவாற்றாமை துன்பம் வருத்துவதால்
    அழிந்து போய்விடுவேனோ என்று அஞ்சி
    எதற்கும் அஞ்சாதவனாய் தன்னுயிரை வெறுத்து
    கையில் வேலேந்தி காட்டு விலங்குகளைத் தாண்டி
    இரவில் வருவான்! இன்பம் தருவான்!

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – அமுதத் தமிழில் எழுதும் கவிதை
    வரிகள் – புலவர் புலமைப்பித்தன்
    பாடியவர்கள் – ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – மதுரை மீட்ட சுந்தரபாண்டியன்
    பாடலின் சுட்டி – http://youtu.be/RDARFimmHLg

    பாடல் – மங்கை தண்கை மலர்க்கை
    வரிகள் – கவியரசு கண்ணதாசன்
    பாடியவர் – வாணி ஜெயராம்
    இசை – திரையிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – தெய்வத் திருமணங்கள் (ஸ்ரீநிவாச கல்யாணம்)
    பாடலின் சுட்டி – கிடைக்கவில்லை

    பாடல் – மோகம் வந்து தாகம் வந்து
    பாடியவர் – எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    வரிகள், இசை – டி.ராஜேந்தர்
    படம் – உயிருள்ளவரை உஷா
    பாடலின் சுட்டி – http://youtu.be/1S3XGSA4qTk

    அன்புடன்,
    ஜிரா

    266/365

     
    • rajinirams 9:01 pm on August 26, 2013 Permalink | Reply

      “கை” தட்டி பாராட்ட வேண்டிய நல்ல பதிவு. முக்கியமான மற்ற இரண்டு பாடல்கள்-ஹோ ஹோ ஹோ -கை கை மலர் கை, இது நாட்டை காக்கும் கை:-))

  • mokrish 9:49 pm on August 20, 2013 Permalink | Reply  

    நடந்தாய் வாழி 

    போன வாரம் சென்னை கம்பன் கவிமன்றம் சந்திப்பில் நண்பர் @RagavanG காப்பிய இலக்கணம் என்ன என்பதை விளக்கினார்.   தொடர்ந்து பல விஷயங்களை பேசும்போது, கம்பன் சரயூ நதியை விவரிக்கும் அழகை குறிப்பிட்டார்.  காப்பிய இலக்கணம் பற்றி மேலே படிக்கலாம் என்று தேடியபோது தண்டியலங்காரம் கண்ணில் பட்டது.

    பெருங்காப் பியநிலை பேசுங் காலை

    வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றினொன்று

    ஏற்புடைத் தாகி முன்வர வியன்று

    நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித்

    தன்னிகர் இல்லாத் தலைவனை யுடைத்தாய்

    மலைகடல் நாடு, வளநகர் பருவம்

    இருசுடர்த் தோற்றமென்று இனையன புனைந்து

    என்று தொடங்கி தெளிவான இலக்கணம் வகுக்கிறது. அப்புறம் லேசாக மனமிறங்கி ‘கூறிய உறுப்பிற் சிலகுறைந் தியலினும்’ என்று ஒரு விதிவிலக்கு அளிக்கிறது. இந்த விதியில்

    தன்னிகர் இல்லாத தன்மை உடையவனைக் காப்பியத் தலைவனாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

    மலை, கடல், நாடு, நகர், ஆறு பருவங்கள், கதிரவன் தோற்றம், சந்திரனின் தோற்றம் ஆகியவற்றைப் பற்றிய வருணனைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

    என்ற விளக்கம் படித்தவுடன் ஏனோ எனக்கு சம்பந்தமேயில்லாமல் இதயக்கனி படத்தில் புலமைப்பித்தன் எழுதிய நீங்க நல்லாயிருக்கோணும் என்ற பாடல் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் சீர்காழி கோவிந்தராஜன் எஸ் ஜானகி டி எம் எஸ்’) நினைவுக்கு வந்தது. http://www.youtube.com/watch?v=Fi_I4UgfOAA  இதுவும் ராமச்சந்திரன் என்ற நாயகன் பற்றிய பாடல்தான்.  இதிலும் மலை, ஆறு , நாடு, நகர் என்று ஒரு Reference இருக்கிறது.  பாடலின் துவக்கத்தில் வரும் வரிகள்

    தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்

    கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி

    தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி

    ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர

    நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்

    வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட

    கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று

    அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து

    கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்

    தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்

    தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல்

    காவிரியை வர்ணிக்கும் விதம் அருமை. இந்த நதியைப்போல்  எங்கள் வாழ்வை வளமாக்கும் தலைவா நீங்க நல்லாயிருக்கோணும் என்று பாடும் பாடல்

    செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி

    கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்

    பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே

    வள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி

    எங்கள் இதயக் கனி இதயக் கனி

    நீங்க நல்லாயிருக்கோணும்

    ஒருவேளை புலமைப்பித்தன் எம்ஜிஆர் என்ற ஜானகி மணாளனைப் பற்றி காப்பியம் எழுதலாம் என்று ஆரம்பித்தாரோ? தெரியவில்லை

    மோகனகிருஷ்ணன்

    262/365

     
    • uchelvan 5:51 pm on August 21, 2013 Permalink | Reply

      கரை புரண்டு ஓடும் காவிரியை காண கண் கோடி வேண்டும். I had a surgery 3 weeks at Trichy, Surgeon ஸ்ரீ ரெங்கத்துகாரர். அவரை follow -up க்கு பார்க்க சென்ற போது..வாங்கம்மா!!!! என்றவர் உடனே, காலைலருந்து மனசு ரொம்ப சந்தோசமா இருக்குதம்மா, ஆறில் தண்ணீ போகுது என்றார்.. என்னாது ……..காலைலருந்து சந்தோசமா இருக்கீங்களா !!!! சொல்லவே இல்லை என்று வடிவேலு காமெடி போல் அதிர்ச்சியும் கொஞ்சம் நிம்மதியும் சுற்றி இருந்த junior டாக்டர்ஸ், நர்சுகளின் முகத்தில் !!! அடுத்த 45 நிமிடங்கள் தனது வாழ்கை வரலாறை சொல்லி முடித்து விட்டார்.. கிளம்புபோது. US வந்தா, கட்டாயம் வீட்டுக்கு வாங்க சார்,என்றேன். என்னை தவிர என் குடும்பத்தினர் அனைவரும் அங்கேதான் என்றார். நான் அவரை பார்த்து., உங்களுக்கு ( வைஷ்ணவர்களுக்கு ) அமெரிக்க தானே 109 திவ்ய தேசம் அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை சார் என்றேன் . !!!!!. :)))))

  • G.Ra ஜிரா 11:48 pm on August 6, 2013 Permalink | Reply  

    பட்டை(யை)க் கிளப்புதல் 

    பெண்ணின் சருமத்து மென்மையை பாட்டில் எழுதச் சொன்னால் பெரும்பாலான கவிஞர்கள் பட்டைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

    பட்டுக் கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும் (முத்துலிங்கம், காக்கிச் சட்டை, இளையராஜா)
    சீனத்துப் பட்டுமேனி இளம் சிட்டு மேனி (வாலி, தாய்மூகாம்பிகை, இளையராஜா)
    பட்டுப் பூவே மெட்டுப் பாடு (முத்துலிங்கம், செம்பருத்தி, இளையராஜா)
    பட்டு வண்ண ரோசாவாம் (புலமைப்பித்தன், கன்னிப் பருவத்திலே, சங்கர்-கணேஷ்)
    பட்டினும் மெல்லிய பூவிது (கண்ணதாசன், ஞாயிறும் திங்களும், எம்.எஸ்.விசுவநாதன்)

    இன்னும் எத்தனையெத்தனையோ பாடல்கள்.

    பட்டுத் துணியின் மென்மையும் பளபளப்பும் பெண்ணின் சருமத்தோடு ஒப்பிடச் சிறந்ததுதான்.

    அதனால் தானோ என்னவோ பட்டு என்றாலே பெண்களுக்கு அவ்வளவு பிடிக்கிறது. ஊருக்கு ஊர் எத்தனை பட்டுச்சேலைக் கடைகள். சென்னையை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். தியாகராய நகர் உஸ்மான் சாலை ஒன்று போதுமே தமிழ்ப் பெண்களின் பட்டு மோகத்தை எடுத்துக் எடுத்துக்காட்ட.

    அதை விடுங்கள். பட்டு என்று பெண்களுக்குப் பெயர் வைக்கும் வழக்கமும் முன்பு இருந்திருக்கிறதே. பருத்தி கம்பளி என்றெல்லாம் பெண்களுக்கோ ஆண்களுக்கோ பெயர் வைக்கும் வழக்கமே இல்லையே! ஆங்கிலத்தில் சில்க் என்றால் தமிழர்களுக்கு நினைவுக்கு வருவது நடிகை சில்க் சுமிதா தானே! அதுதான் பட்டின் வெற்றி.

    கந்தன் கருணை திரைப்படத்தில் சிவனிடம் பார்வதி சொல்வதாக “பெண்ணாகப் பிறந்து விட்டால் பட்டாடைகளும் பொன்னாபரங்களும் போதும் என்று சொல்வாளா சுவாமி” என்று ஒரு வசனம் உண்டு.

    பார்வதி தேவியையே பட்டுத்துணி பற்றிப் பேச வைத்த பெருமை தமிழர்களையே சாரும். சகோதரி வழியில் சகோதரனாகிய பாற்கடல் சீனிவாசன் கட்டியிருப்பதும் பட்டுப் பீதாம்பரம் தானாம்.

    பட்டுத்துணி சீனாவிலிருந்து வந்தது என்று படித்திருக்கிறோம். கேள்விப்பட்டிருக்கிறோம். பாசமலர்களான பார்வதியும் பரந்தாமனும் சீனாக்காரர்களா என்று சோதிக்க வேண்டும். பார்வதி இமவான் மகள். இமயத்தின் உச்சி இன்று சீனாவில்தான் இருக்கிறது. அதே போல பாற்கடலும் அங்குதான் இருக்க வேண்டும்.

    அப்படியானால் தமிழர்களுக்கு பட்டு பற்றியெல்லாம் சமீபத்தில்தான் தெரியுமா? தமிழ் மக்கள் எவ்வளவு காலமாக பட்டுத்துணியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்? பட்டு என்ற சொல் சங்க இலக்கியங்களில் உள்ளதா? இந்த மூன்று கேள்விகள்தானே அடுத்து நமக்குத் தோன்றுகின்றன.

    பட்டு பழந்தமிழர் அறிந்த துணிவகையே. சங்க இலக்கியங்களில் இதற்குக் குறிப்புகள் உள்ளன. ஆனால் பெயர்தான் வேறு.

    பட்டுத்துணிக்குப் பழந்தமிழர் கொடுத்த பெயர் நூலாக் கலிங்கம். அதாவது நூற்காத துணி.

    ஏன் அந்தப் பெயர்? பருத்தியிலிருந்து நூல் உண்டாக்கும் முறையும் பட்டுநூலை உண்டாக்கும் முறையும் வெவ்வேறு.

    மென்மையான பஞ்சுப் பொதியைத் திரித்து மெலிதாக்கி ராட்டையின் உதவியால் நூலாக்குவார்கள். ஆனால் பட்டுநூலை அப்படித் திரிப்பதில்லை. கொதிக்கின்ற நீரில் பட்டுப்புழுக்களின் கூடுகளைப் போட்டு பட்டு இழையை அப்படியே உருவி விடுவார்கள். இணையத்தில் பட்டுநூல் உருவும் முறைக்கு நிறைய காணொளிக் காட்சிகள் உள்ளன. தேடிப் பார்த்தால் நான் சொல்வது புரியும்.

    பருத்தி நூலோ கம்பளி நூலோ இந்த வகையில் செய்யப்படுவதில்லையே. ஆகையாதால் பட்டுத் துணிக்கு நூலாக் கலிங்கம் என்று பெயர்.

    அன்புடன்,
    ஜிரா

    248/365

     
    • amas32 8:28 am on August 7, 2013 Permalink | Reply

      அதனால் தான் பட்டை உடுத்த வேண்டாம் என்று பரமாச்சாரியார் அறிவுறுத்தினார். அனால் கேட்பவர்கள் யார்? அவரை தரிசிக்க வந்தவர்கள் காஞ்சிபுரத்தில் கல்யாணத்துக்குப் பட்டுப் புடவை வாங்க வந்தோம் அப்படியே உங்களையும் வணங்கி விட்டுச் செல்ல வந்திருக்கிறோம் என்று அவரிடமே கூறுவார்களாம்!

      ஆனால் பட்டுக்கு இருக்கும் மென்மையும் பளபளப்பும் பணக்காரத் தன்மையும் வேறு எந்த துணிக்கும் இல்லை என்பது உண்மை. அதனால் தான் பட்டு பெண்களின் அங்கங்களுக்கு உவமையகிறது.

      amas32

    • rajinirams 10:22 am on August 7, 2013 Permalink | Reply

      வித்தியாசமான பதிவு.வழக்கம் போலவே கலக்கியிருக்கிறீர்கள்.பட்டுச்சேலை காத்தாட.காஞ்சி பட்டுடுத்தி என்று பட்டு சேலை பற்றியும்.பட்டு வண்ண சேலைக்காரி என்று காதலியையும் நீங்கள் சொன்னது போல நிறைய வர்ணித்து இருக்கிறார்கள். நீ பட்டுப்புடவை கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும் என்பது வைரமுத்துவின் உட்சபட்ச வர்ணனை:-)) நன்றி.

      • amas32 4:26 pm on August 7, 2013 Permalink | Reply

        ‘பட்டுப்புடவை கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும் என்பது வைரமுத்துவின் உட்சபட்ச வர்ணனை:-))” அழகாக சொல்லியுள்ளார்!
        amas32

    • Saba-Thambi 10:34 am on August 7, 2013 Permalink | Reply

      நன்றாக பட்டை(யை)க் கிளப்பியிருக்கிறீர்கள். 🙂

      உங்கள் பதிவு – பட்டு நெசவாளர்களின் திரைப்படத்தை நினைவூட்டுகிறது. Pirakash Raj நடித்த படம். பெயர் நினைவில் இல்லை.

    • kamala chandramani 4:30 pm on August 7, 2013 Permalink | Reply

      பட்டுப் புடவை, தங்க நகை இரண்டையும் பெண்களால் விட முடிவதில்லை. ஒரு முறை பட்டுப் புழு வளர்க்கும் கூட்டுறவு நிலையம் போய்ப் பார்த்தால் வெறுத்து விடுவார்கள். ஆனாலும் -பிரிக்க முடியாதவை பெண்களும் பட்டும்தான்!

  • என். சொக்கன் 10:59 am on August 1, 2013 Permalink | Reply  

    ஒரே ஜீவன் 

    • படம்: நாயகன்
    • பாடல்: நீ ஒரு காதல் சங்கீதம்
    • எழுதியவர்: புலமைப்பித்தன்
    • இசை: இளையராஜா
    • பாடியவர்கள்: மனோ, கே. எஸ். சித்ரா
    • Link: http://www.youtube.com/watch?v=E2NA3TzvQsM

    வானம்பாடி பறவைகள் ரெண்டு, ஊர்வலம் எங்கோ போகிறது,

    ’காதல்’, ‘காதல்’ எனும் ஒரு கீதம், பாடிடும் ஓசை கேட்கிறது

    இசை மழை எங்கும் பொழிகிறது,

    எங்களின் ஜீவன் நனைகிறது!

    ஊர்வலம் சென்ற வானம்பாடிப் பறவைகள் இரண்டு, பன்மை, அப்படியானால், ‘போகின்றன’ என்றல்லவா எழுதியிருக்கவேண்டும்? ‘போகிறது’ என்பது தவறல்லவா?

    ’எங்களின் ஜீவன்’ என்று சொல்லும்போதே, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் (பன்மை) என்பது புரிகிறது. அப்படியானால், ‘நனைகின்றன’ என்றல்லவா எழுதியிருக்கவேண்டும்? நனைகிறது என்பது தவறல்லவா?

    இந்த வரிகளை எழுதியவர் சாதாரண கவிஞர் அல்ல, புலமைப் பித்தன், அதுவும் ”புலவர்” புலமைப் பித்தன். மெட்டுக்குப் பொருந்தவேண்டும் என்பதற்காக அவர் இலக்கண சுத்தமற்ற வரிகளை எழுதியிருப்பாரா?

    கவிதை இருக்கட்டும், கொஞ்சம் லோக்கலாக வருவோம். தினமும் காலை எழுந்தவுடன் பல் தேய்க்கிறோம். ஒரு பல்லா, முப்பத்திரண்டு பற்களா? ‘பற்களைத் தேய்க்கிறோம்’ என்று பன்மையில் சொல்லாமல் ஒருமையில் சொல்வது ஏன்?

    ‘சொந்தக் காலில் நிற்கிறேன்’ என்று சபதம் செய்கிறார் ஒருவர். ஒற்றைக் காலில் நிற்க அவர் என்ன கொக்கா? அவருக்கு இரண்டு கால்கள் உள்ளனவே, அவர் ஏன் ‘சொந்தக் கால்களில் நிற்கிறேன்’ என்று சொல்வதில்லை?

    ‘கண்ணால் பார்த்தேன்’ என்று சாட்சி சொல்கிறார் இன்னொருவர். ஏன் ஒருமை? ஒரு கண்ணை மூடிக்கொண்டு இன்னொரு கண்ணால் பார்த்தாரா?

    தமிழில் ஒன்றாகச் செயல்படும் விஷயங்களைச் சொல்லும்போது, பன்மை அவசியமில்லை. இரண்டு கண்கள், இரண்டு கைகள், இரண்டு கால்கள், முப்பத்திரண்டு பற்கள் என்றாலும், பேசும்போதும் எழுதும்போதும் ‘கண்ணால் பார்த்தேன்’, ‘கையால் சமைத்தேன்’, ‘பல்லால் சிரித்தேன்’ என்று ஒருமையில் சொல்லலாம்.

    அதுபோல, இந்தப் பாடலில் வரும் காதல் ஜோடி ஒன்றாக இணைந்துவிட்ட தருணம். ‘எங்களின் ஜீவன் நனைகிறது’ என்று ஒருமையில் சொல்லி அவர்கள் ஒன்று கலந்துவிட்டதைச் சொல்லிவிடுகிறார் புலமைப்பித்தன்.

    கை(களைத்) தட்டி வரவேற்கவேண்டிய வரி இது!

    ***

    என். சொக்கன் …

    01 08 2013

    243/365

     
    • Mahendiran 11:11 am on August 1, 2013 Permalink | Reply

      Arumai, naNbarE!

    • amas32 11:19 am on August 1, 2013 Permalink | Reply

      அருமை! இந்த 4 வரி நோட்டில் எழுதும் உங்கள் ஸ்டைல் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. பாடலில் ஒரு சொல்லை மட்டும் தேர்ந்தெடுத்து அதன் விளக்கத்தை ரத்தினச் சுருக்கமாக சொல்லி மகிழ்விக்கிறீர்கள்! நன்றி 🙂

      amas32

    • Azhagan 11:45 am on August 1, 2013 Permalink | Reply

      இன்னைக்கு ஏன் இவ்வளோ புளோவா வருதுன்னு உங்களுக்கே தெரியலயோ

    • Vaishnavi 1:05 pm on August 1, 2013 Permalink | Reply

      Arumai nanbarae…..

    • GiRa ஜிரா 2:35 pm on August 1, 2013 Permalink | Reply

      ”கை(களைத்) தட்டி வரவேற்கவேண்டிய வரி இது”ன்னு முடிச்சிங்க பாருங்க. அங்க நிக்கிறிங்க நீங்க 🙂

      புலவர் புலமைப்பித்தன் பாடல்களையா எடுத்துப் பாத்துக்கிட்டிருந்தேன். ரொம்ப எளிமையா அழகா பாடல்களை எழுதியிருக்காரு. சுயவிற்பனை தெரியாதவர் போல.

    • tcsprasan 2:44 pm on August 1, 2013 Permalink | Reply

      அருமை 🙂

    • app_engine 5:19 pm on August 1, 2013 Permalink | Reply

      நல்ல சுவை 🙂

      இனிய, எளிய விளக்கம்!

    • kamala chandramani 9:20 pm on August 1, 2013 Permalink | Reply

      எனக்கு மிகவும் பிடித்த பாடல். இனிய இசையில் ஜீவனை நனைக்கும்! எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது.

    • பாலா அறம்வளர்த்தான் 10:58 pm on August 1, 2013 Permalink | Reply

      உங்களுக்கு முன்பே அனுப்பியதுதான் – சும்மா இங்கேயும் 🙂

      ‘வதனமே சந்திர பிம்பமோ’ என்று MKT காலம் முதல் இன்று வரை வந்த காதல் டூயட் பாடல்களில் பெண்களின் கண், கூந்தல், பல் என்று அங்கங்களை வர்ணிக்கும் வரிகள் இல்லாத காதல் பாடல் எதாவது இருக்குமா தெரியவில்லை. சமீபத்தில், பாடலாசிரியர் புலமைப் பித்தன் சொன்னது:

      ‘நாயகன்’ படத்தில் வரும் இந்த பாடலுக்கு பாடல் எழுத புலமைப்பித்தனை கூப்பிட்ட போது இளையராஜா – “ரகுபதி ராகவ ராஜாராம் மாதிரியான புனிதமான ட்யூன் இது. காதல் பாட்டுத்தான்.. ஆனால் உடல் அங்கங்களை வர்ணித்து ஒரு வரி கூட வராமல் எழுதித் தர முடியுமா? ” என்று கேட்டாராம். அப்படி எழுதிய பாட்டுத்தான் இது. இந்த பாடல் ‘ஷ்யாம்’ என்றொரு ஹிந்துஸ்தானி ராகத்தில் அமைந்தது.

      ‘நாயகன்’ படத்தில் இந்த பாடல் வரும் காட்சியை நினைத்துப் பாருங்கள். ஹீரோ ஹீரோயினை விபச்சார விடுதியில் பார்த்து, இரக்கம்/காதல் கொண்டு அவளை மீட்டு, காதலித்து, கல்யாணம் பண்ணிக் கொண்டு குழந்தை பெரும் வரை காட்சிகள் அமைந்திருக்கும் (Including few highly romantic scenes). இந்த உறவு உடல் கவர்ச்சியினால் அல்ல என்பதை, ராஜா ட்யூன், வரிகள் என்று எல்லாவற்றிலும் சொல்லி ‘audience’ ஐ வேறு நிலைக்கு கொண்டு போகிறார்.

      I’ve absolutely no idea whether there is any other music director who thinks like this 🙂

    • Ravi_aa 4:08 pm on August 2, 2013 Permalink | Reply

      Like in English à pair of specs ?

    • rajinirams 4:48 pm on August 4, 2013 Permalink | Reply

      சூப்பர்.கை(களைத்) தட்டி வரவேற்கவேண்டிய வரி இது-செம பஞ்ச்:-))

  • mokrish 8:53 am on July 25, 2013 Permalink | Reply  

    மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ? 

    நீதிமன்றங்களை கடக்கும்போது அங்கே கண்ணுக்கு தெரியும் மக்கள் கூட்டம் எப்போதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அதெப்படி தினமும் இவ்வளவு பேர் வழக்காட வருகிறார்கள்? எதிராளியை பணிய வைக்க வழக்கு, அப்பீல், என்று முட்டி மோத இவ்வளவு பேர் தயாராக இருக்கிறார்களா?

    இதில் வேதனையான விஷயம் – பெரும்பான்மையான வழக்குகள் உறவுகளுக்குள் தான். ஒரே குடும்பத்தில் உள்ள சொந்தங்கள், திருமண பந்தத்தால் இணைந்தவர்கள். சில தினங்களுக்கு முன் வரை இணைந்திருந்து பின் ஏதோ காரணங்களால் பிரிந்து, மனம் கசந்து வழக்காட வருகிறார்கள். நீதிமன்றம் தரும் அனுபவங்கள் அவர்களுக்கு நிம்மதியை அளிக்கிறதா?

    வள்ளுவர் உட்பகை என்று ஒரு அதிகாரமே எழுதுகிறார்,அதில் ஒரு குறள்

    உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்

    ஏதம் பலவும் தரும்

    உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும் என்கிறார். மனம் நிறைய கோபமும் பகையும் பொங்கினால் என்ன ஆகும்? எல்லோரும் நல்லவரே என்ற படத்தில் பகை கொண்ட உள்ளம் (இசை வி குமார், பாடியவர் கே ஜே ஜேசுதாஸ்) என்ற பாடலில் புலமைப்பித்தன் இதை அருமையாக விளக்குகிறார். http://www.youtube.com/watch?v=YuhOzHP6Af8

    பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்

    தீராத கோபம் யாருக்கு லாபம்

    முதல் வரியிலேயே நிம்மதி இழந்த மனம் பற்றி சொல்கிறார். தீராத கோபம் பகையை வளர்க்கும். அதனால் வேதனை அதிகரிக்கும் என்கிறார்.

    வீட்டுக்கு வெளிச்சம் வருவதற்காக கூரையை எரிப்பாரோ

    வேதனை தன்னை விலை தந்து யாரும் வாங்கிட நினைப்பாரோ

    இதயத்தை திறந்து நியாயத்தை பேசு வழக்குகள் முடிவாகும்

    இருக்கின்ற பகையை வளர்த்திட தானே வாதங்கள் துணையாகும்

    பட்ட பின்னாலே வருகின்ற ஞானம் யாருக்கும் உதவாது

    ஏனோ இந்த பாடலை கேட்கும்போது எனக்கு மகாபாரதத்தில் துரியோதனன் பொறாமையால் வெந்து கோபப்பட்டு பகை வளர்த்து வீழ்ந்தது நினைவுக்கு வரும்.

    இதில் சரி தவறு என்பது பற்றி பேசவில்லை.இந்த பாதை சம்பந்தப்பட்டவர்களுக்கு என்ன தருகிறது? நிச்சயமாக நிம்மதியைத் தரவில்லை. மாறாக வேதனையையும் கண்ணீரையும் தருகிறது. நீதி தேவதை தன் கண்ணைக் கட்டிக்கொண்டிருப்பது இதையெல்லாம் பார்க்க வேண்டாம் என்பதற்காகவும் தானோ?

    மோகனகிருஷ்ணன்

    236/365

     
    • Uma Chelvan 9:52 am on July 25, 2013 Permalink | Reply

      Very nice one!

    • Yashaswini 12:42 pm on July 25, 2013 Permalink | Reply

      Very nice post, Mohan Uncle. And truly there is no better support system than one’s own family!

    • Prabhu 8:08 pm on July 28, 2013 Permalink | Reply

      Well written Mohan Anna. Excellent thought in connecting High Court scene, Thirukkural, Mahabaratha and finally Pulamaipithan.

  • என். சொக்கன் 10:52 pm on July 15, 2013 Permalink | Reply  

    என்றும் இளமை 

    • படம்: ஆட்டோ ராஜா
    • பாடல்: சங்கத்தில் பாடாத கவிதை
    • எழுதியவர்: புலமைப்பித்தன்
    • இசை: இளையராஜா
    • பாடியவர்கள்: இளையராஜா, எஸ். ஜானகி
    • Link: http://www.youtube.com/watch?v=eEQa7c4UAx4

    மூவாத உயர் தமிழ்ச்

    சங்கத்தில் பாடாத கவிதை, அங்கத்தில் யார் தந்தது?

    சந்தத்தில் மாறாத நடையொடு, என்முன்னே யார் வந்தது?

    பிரபலமான பாடல்தான். ஆனால் கொஞ்சம் உன்னிப்பாகக் கேட்காவிட்டால், சரணத்துக்கும் பல்லவிக்கும் நடுவே வரும் அந்த வார்த்தையைக் கவனிக்கக்கூடமாட்டோம், ‘மூவாத’!

    அதென்ன மூவாத?

    ’மூவாத் தமிழ்’ என்று கேட்டிருக்கலாம், மூப்பு அடையாத, என்றைக்கும் வயது ஆகாமல் இளமையோடிருக்கிற தமிழ் என்று பொருள்!

    ’ஏவா மக்கள் மூவா மருந்து’ என்று ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம், அப்பா, அம்மா ஒரு செயலைச் செய் என்று ஏவாத முன்பே அதைச் செய்து முடிக்கிற குழந்தைகள் இருந்துவிட்டால், அந்தப் பெற்றோர் அமிர்தம் சாப்பிட்டதுபோல் தலை நரைக்காமல், உடம்பு தளராமல் வாழ்ந்துவிடுவார்களாம்!

    மூவா மருந்து என்றால், நம்மை மூப்பு அடையாதபடி இளமையாகவே வைத்திருக்கும் மருந்து!

    திருநாவுக்கரசர் சிவபெருமானைப் பாடும்போது, ‘மூவா மேனியான்’ என்பார். நம்மாழ்வாரும் திருமாலை ‘மூவா, முதல்வா!’ என்று அழைத்து நெகிழ்வார்.

    புலமைப்பித்தனுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது, ஆனால் இதையெல்லாம் படித்திருக்கிறார், ‘மூவாத உயர் தமிழ்’ என்று அதே சொற்களால் அவருக்குப் பிடித்த கடவுளைப் பாடிவிடுகிறார்!

    ‘மூவா’ எப்படி ‘மூவாத’ ஆனது?

    ம்ஹூம், ‘மூவாத’தான், ‘மூவா’ ஆனது, ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்!

    டென்டிஸ்ட் சமாசாரம் இல்லை, ‘மூவாத’ என்ற வார்த்தைக்குப்பின்னே ஒரு பெயர்ச் சொல் வந்தாகவேண்டும் (மூவாத மேனியான், மூவாத முதல்வன், மூவாத மக்கள், மூவாத தமிழ்… இப்படி), ஆகவே, அது ‘பெயரெச்சம்’ எனப்படும்.

    இந்தப் பெயரெச்சம் எதிர்மறையாக வரும்போது, அதாவது ‘பாடும் கவிதை’ என்று இல்லாமல், ‘பாடாத கவிதை’ என்று Negative பொருளில் எதிர்மறைப் பெயரெச்சமாக வரும்போது, அதன் நிறைவில் (அதாவது ஈறாக) உள்ள எழுத்து, ‘த’, அது கெடும், அதாவது நீங்கும், ‘மூவாத தமிழ்’ என்பது, ‘மூவாத் தமிழ்’ என்று மாறிவிடும், அதைதான் ‘ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்’ என்பார்கள்!

    இதேபோல், ‘எழுதாத கவிதை’ என்பது ‘எழுதாக் கவிதை’ எனவும், ’பேசாத பேச்சு’ என்பது ‘பேசாப் பேச்சு’ எனவும் மாறும். எல்லாம் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்!

    தமிழுக்கு ஈறு ஏது? அந்த விதத்திலும் அது மூவாத் தமிழ்தான்!

    ***

    என். சொக்கன் …

    15 07 2013

    226/365

     
    • app_engine 2:10 am on July 16, 2013 Permalink | Reply

      மிக அருமையான கட்டுரை!

      தொடரட்டும் உம் தமிழ்த்தொண்டு!

      வாழ்த்துகள்!

    • rajinirams 10:04 am on July 16, 2013 Permalink | Reply

      அடடா,அருமை.எவ்வளவு எளிமையாக ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சத்தை விளக்கி விட்டீர்கள்.
      புலமைப்பித்தன் பல்லாண்டு வாழ்க படத்தில் என்ன சுகம் பாடலில் “எழுதா”கவிதை இவள் தான் அடடா என்றும் ஊருக்கு உழைப்பவனில் அழகெனும் ஓவியம் இங்கே பாடலில் கவி கம்பன் “எழுதா”பாட்டெல்லாம் கேட்டேன் கிளி மொழியில் என்றும் அழகாக எழுதியிருப்பார்,அம்பிகாபதியில் கே.டி.சந்தானம் எழுதிய “வாடா”மலரே தமிழ் தேனே பாடலையும் சொல்லலாம்.நன்றி.

    • amas32 8:17 pm on July 17, 2013 Permalink | Reply

      அப்போ இந்தப் பாடலில் மூவா உயிர் தமிழ் என்று வராமல் மூவாத உயிர் தமிழ் என்று வந்துள்ளதே அதுவும் ஒகே தானா?

      amas32

      • என். சொக்கன் 11:30 pm on July 17, 2013 Permalink | Reply

        மூவாத என்பதுதான் அடிப்படை, அதன் ஈறு கெடுவது இன்னொரு வடிவம், ரெண்டும் சரிதான்

  • mokrish 11:39 am on June 27, 2013 Permalink | Reply  

    இதுதான் எங்கள் வாழ்க்கை 

    அடிக்கடி பார்க்கும் காட்சிதான். ஆபிசில் ஏழாவது மாடியில் ஜன்னலில் திடீரென்று முளைக்கும் முகங்கள். கட்டடத்தின் உச்சியில் இருந்து தொங்கும் கயிற்றில் இணைத்துக்கட்டிகொண்டு,  வெளிப்புற கண்ணாடிகளை  துடைப்பவர்கள்.

    எவ்வளவு அபாயமான வேலை? Occupational hazard, safety என்று நிறைய ஜல்லி அடித்தாலும் இது தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. இந்த தொழில் சார்ந்த இடையூறு / அபாயங்கள் பல வகைப்படும். இவை உடல் / மனம் இரண்டையும் பாதிக்கும். பஞ்சாலை அல்லது சிமெண்ட் ஆலைகளில் வேலை செய்பவர்கள் சுவாசிக்கும் மெல்லிய தூசு அவர்கள் உடல்நலம் கெடுக்கும்.

    திரைப்படங்களில் / பாடல்களில் இது பற்றி ஏதாவது இருக்குமா என்று தேடினேன். கண்ணில் பட்ட சில பாடல்கள். படகோட்டி படத்தில் வாலி எழுதிய தரை மேல் பிறக்க வைத்தான் என்ற மறக்கவே முடியாத ஒரு பாடல் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் டி எம் எஸ்)

    http://www.youtube.com/watch?v=Z6DKos7t_V4

    தரை மேல் பிறக்க வைத்தான்

    எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்

    கரை மேல் இருக்க வைத்தான்

    பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்

    என்று அலை கடல் மேலே அலையாய் அலைந்து உயிரை கொடுப்பவர்களின் வாழ்க்கை பற்றி எழுதுகிறார்

    கடல் நீர் நடுவே பயணம் போனால்

    குடிநீர் தருபவர் யாரோ

    தனியா வந்தோர் துணிவை தவிர

    துணையாய் வருபவர் யாரோ

    ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்

    ஒவ்வொரு நாளும் துயரம்

    ஒரு ஜாண்  வயிற்றை வளர்ப்பவர் உயிரை

    ஊரார் நினைப்பது சுலபம்

    நீண்ட கடல் பயணம் முடித்து திரும்பும் ஒரு மாலுமியின் நிலை பற்றி Samuel Taylor Coleridge எழுதிய The Rime of Ancient Mariner என்ற ஆங்கில கவிதை வரிகளைப் பாருங்கள்

    Water, water, everywhere,

    And all the boards did shrink;

    Water, water, everywhere,

    Nor  any drop to drink.

    கடலை நம்பி பிழைக்கும்  தொழில் மீன் பிடித்தல். மீனவர்களின் துயர் இன்றும் தொடரும் ஒரு அவலம். மிக ஆபத்தான வேலை என்று  United States Department of Labor குறிப்பிடுவது மீனவர்களைத்தான். அழகன் படத்தில் வரும் கோழி கூவும் நேரமாச்சு என்ற பாடலில் (இசை மரகதமணி பாடியவர்கள் சித்ரா மலேசியா வாசுதேவன், சீர்காழி சிவ சிதம்பரம்)  புலமைப்பித்தன் இந்த சோகத்தை பதிவு செய்கிறார். KB அடிக்கடி பயன்படுத்தும் ‘மேடை நிகழ்ச்சி’ உத்தியில் கதை சொல்லும் ஒரு பாடல்

    http://www.youtube.com/watch?v=q7AufD8pSPc

    காதலி சொன்னது வேதம் என்று

    புயல் வரும் வேளையில் அவன் போனான்

    இந்திய எல்லையை தாண்டும் போது

    பாவிகள் சுட்டதில் பலியானான்

    புலமைப்பித்தன் பாடலின் நடுவே போகிறபோக்கில் அழுத்தமாக இப்படி ஏதாவது சொல்வார். ‘ஏர் பூட்டி தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து’ என்று உழவன் வறுமையை சொல்வார். நாயகன் படத்தில் வரும் நான் சிரித்தால் தீபாவளி (இசை இளையராஜா பாடியவர்கள் வசந்தா எம் எஸ் ராஜேஸ்வரி) பாடலை கவனியுங்கள்.  http://www.youtube.com/watch?v=UH1yjlnWTu4

    எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை

    இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை

    வந்தது எல்லாம் போவது தானே சந்திரன் கூட தேய்வது தானே

    காயம் என்றால் தேகம் தானே உண்மை இங்கே கண்டேன் நானே

    யார் விரல் என்றா வீணைகள் பார்க்கும்

    யார் இசைத்தாலும் இன்னிசை பாடும்

    மீட்டும் கையில் நானோர் வீணை

    காயம் என்றால் தேகம்தானே என்ற வரியில் அந்தப்பெண்களின் அத்தனை சோகமும் சொல்லும் திறமை.

    புது புது அர்த்தங்கள் படத்தில் வாலி எழுதிய கல்யாண மாலை பாடலில் சில வரிகள் தன்  சோகத்தை மறைத்து மக்களை மகிழ்விக்கும் ஒரு கலைஞனின் மனம் பற்றி சொல்கிறது

     http://www.youtube.com/watch?v=VchhlBn9wjg

    நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்

    காவல்கள் எனக்கில்லையே

    சோகங்கள் எனக்கும்  நெஞ்சோடு இருக்கும்

    சிரிக்காத நாளில்லையே

    துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்

    மக்கள் மனம் போல பாடுவேன் கண்ணே

    என் சோகம் என்னோடு தான்…

    சாதரண மஞ்சள் ஹெல்மெட் அணிந்த மெட்ரோ ரயில் வேலை செய்பவர்கள், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வீடு தேடி வந்து தென்னை மரம் ஏறுபவர், கட்டட வேலை செய்பவர்கள், சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்பவர்கள் என்று எல்லாரும் ‘இதுதான் எங்கள் வாழ்க்கை’ என்று சொல்வது போல் இருக்கிறது.

    மோகனகிருஷ்ணன்

    208/365

     
    • Saba-Thambi 12:16 pm on June 27, 2013 Permalink | Reply

      வித்தியாசமான பார்வை.
      சில வேலைகள் பரிதாபதுக்குரியவை. மிக மிகப் பரிதாபமானது- விளையாடும் பருவத்தில் சிறுபிள்ளைகள் வீட்டுச் சுமையை தூக்குவது.
      இதையும் பாடல்களில் பாடியுள்ளார்கள்

      உதாரணம் : ஆண் பிள்ளையென்றாலும் சாண் பிள்ளையண்றோ
      படம்: ஆறிலிருந்து அறுபதுவரை
      (http://www.youtube.com/watch?v=4Y07weGohR0)

    • G.Vinodh 6:57 pm on June 27, 2013 Permalink | Reply

      Hi Mokrish,

      Nice choice of song & explanation…love this beauty.

      Cheers.
      Vinodh G

    • G.Vinodh 7:06 pm on June 27, 2013 Permalink | Reply

      The reference to window cleaning was good, I see them every week at office & get scared every time.

      Regards,
      Vinodh G

    • rajnirams 7:35 pm on June 27, 2013 Permalink | Reply

      ஆஹா,சான்சே இல்லை,எப்படி யோசித்து சரியான பாடல்களை லிங்க் செய்து கலக்கி விட்டீர்கள். நல்ல நேரம் படத்தில் புலமைப்பித்தனின் வரிகள்-“வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்துலாடுறான் பாரு,ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு”. பாராட்டுக்கள்.நன்றி.

    • rajnirams 7:43 pm on June 27, 2013 Permalink | Reply

      சூப்பர் பாட்டு ஒன்னு இருக்கு:-)) அம்மா தாய்மாரே ஆபத்தில் விடமாட்டேன்,”வெயிலோ புயல் மழையோ மாட்டேன்னு சொல்ல மாட்டேன்”-அங்கங்கே பசி எடுத்தா பலகாரம்,அளவு சாப்பாடு ஒரு நேரம்-ஆட்டோ தொழிலாளர்களை பற்றிய வைரமுத்து அவர்களின் வரிகள்.

    • amas32 10:20 pm on June 27, 2013 Permalink | Reply

      பல தொழில்களில் பிரச்சினைகள் இருந்தாலும், சில தொழில்களில் அதிக ஆபத்து உள்ளது. அழகாக வரிசையிட்டுக் காட்டியிருக்கிறீர்கள். வீட்டில் உலை கொதிக்க வேண்டும் என்றால் many have to put their life on line.

      amas32

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel