Updates from October, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • G.Ra ஜிரா 8:27 pm on October 15, 2013 Permalink | Reply  

    வாழ்க்கையைக் காதலி! 

    ஒருவர் ஒன்றைச் சொல்லி விட்டார் என்பதற்காக அதை அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை.

    காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல்” என்ற பாரதியின் வரிகளைத்தான் சொல்கிறேன் நான். அதை அப்படியே ஏற்றுக் கொள்ளத் தயக்கமாக இருக்கிறது.

    காதல் இல்லையென்றால் உயிரை விடத்தான் வேண்டுமா? சற்றே யோசித்துப் பார்த்தால் சரியென்றுதான் தோன்றும். காதல் போன அந்த ஒரு நொடியில் உயிரே போனது போல வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அது உண்மையா? சரியா?

    கண்ணதாசன் இதை இன்னும் அழகாக அணுகியிருக்கிறார் என்று தோன்றுகிறது. பாட்டுப் போட்டி நடக்கிறது. பாட்டுப் போட்டி என்றுதான் பெயர். ஆனால் அது காதல் போட்டி. இறந்த காதலியை நினைத்துக் கொண்டிருக்கும் காதலனுக்கும் அந்தக் காதலனை நினைத்துக் கொண்டிருக்கும் பெண்ணுக்கும் நடக்கும் பாட்டுப் போட்டி.

    பாடலில் காதலை எத்தனையோ விதமாகச் சொல்லிப் பார்க்கிறாள். அவன் கேட்கவில்லை. ஏனென்றால் அவன் மனம் சமாதானம் ஆகவில்லை. ஆகையால் ஒரு பிரம்மாஸ்திரத்தை எடுத்து விடுகிறான்.

    அவன்: ஒரு முறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு

    பண்பாடு என்ற வட்டத்துக்குள் வந்துவிட்டால் எதையும் கேள்வி கேட்கவே முடியாது. கேட்டால் பண்பாட்டுக் காவலர்கள் சின்னாபின்னமாக்கி விடுவார்கள்.

    ஆனால் அவள் அழகானவள் மட்டுமல்ல. அறிவானவளும் கூட. மிக அழகானதொரு விடை சொல்கிறாள்.

    அவள்: அந்த ஒன்று என்பதுதான் கேள்வி இப்போது!

    போனதுதான் காதலா? இல்லை. இருப்பதுதான் காதல் என்பதை இதைவிட எளிமையாக எப்படிச் சொல்ல முடியும்?

    அவனும் விடவில்லை. தமிழ் படித்தவன்.

    அவன்: வருவதெல்லாம் காதலித்தால் வாழ்வதெவ்வாறு?

    அவளும் விடவில்லை. அவளும் தமிழ் படித்தவள். ஆனால் தமிழோடு சேர்த்து வாழ்க்கையையும் படித்தவள்.

    அவள்: தன் வாழ்க்கையையே காதலித்தால் புரியும் அப்போது

    இதற்கு மேல் அவனால் சமாளிக்க முடியவில்லை. அவளுடைய காதலை ஏற்றுக் கொள்கிறான்.

    கண்ணதாசரே… கவிதைக் கடவுளய்யா நீர்!

    எல்லாருக்கும் இப்படி விளக்கமாக புரியும்படி எடுத்துச் சொல்லும் காதலனோ காதலியோ கிடைக்க வேண்டுமல்லவா! கிடைக்காதவர்களுக்கு?

    காதலில் மிதப்பது என்பதற்கும் கடல் மேல் பறப்பது என்பதற்கும் வேறுபாடு இருப்பது போலத் தோன்றவில்லை.

    அப்படி கடல் மேல் பறக்கும் பறவை வழி தவறுவது போலத்தான் காதலில் உண்டாகும் தோல்விகள். அந்தத் தோல்வியில் துவண்டு விட்டால் கடலோடு கடலாக பறவை சமாதி ஆக வேண்டியதுதான்.

    அந்தக் கடலைத் தாண்டிக் கடக்க வேண்டும். பிழைப்பதற்கும் வாழ்க்கையைச் சுவையாக வாழ்வதற்கும் அதுதான் ஒரே வழி. இதே கருத்தை நா.முத்துக்குமார் ஒரு பாடலில் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

    கதைப்படி அவள் விவாகரத்தானவள். பழைய கொடிய நினைவுகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரும் போது இனிமையாக வருகிறான் ஒருவன். அவன் மேல் வருகிறது காதல். தனக்குத் தானே சமாதானமும் துணிச்சலும் சொல்லிக் கொடுத்து காதலை ஏற்றுக் கொள்ளும் போது இந்தப் பாடல் வருகிறது.

    கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
    இளைப்பார மரங்கள் இல்லை
    கலங்காமலே கண்டம் தாண்டுமே

    முற்றுப்புள்ளி அருகில் நீயும்
    மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
    முடிவென்பதும் ஆரம்பமே

    வளைவில்லாமல் மலை கிடையாது
    வலி இல்லாமல் மனம் கிடையாது
    வருந்தாதே வா

    கவிஞர் சுட்டிக் காட்டிய கண்டம் தாண்டும் பறவையின் கலங்காத உள்ளம் இருந்தால் எதையும் தாண்டி வரலாம். வாழ்க்கையை வண்ணமயமாக தீட்டிக் கொள்ளலாம்.


    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

    பாடல் – ஆண்கவியை வெல்ல வந்த பெண்கவியே
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்
    படம் – வானம்பாடி
    பாடலின் சுட்டி – http://youtu.be/8GTpHGuobXo

    பாடல் – பேசுகிறேன் பேசுகிறேன்
    வரிகள் : நா.முத்துகுமார்
    பாடியவர் : நேஹா பாஷின்
    இசை : யுவன் சங்கர் ராஜா
    படம் : சத்தம் போடாதே
    பாடலின் சுட்டி – http://youtu.be/F6v8HpkMQaA

    அன்புடன்,
    ஜிரா

    317/365

     
    • amas32 9:44 pm on October 15, 2013 Permalink | Reply

      நீங்கள் இன்று எடுத்துக் கொண்டிருக்கும் கண்ணதாசன் பாடல் சற்றே கடினமானது – புரிந்து கொள்வதற்கு. அதை அழகாக விளக்கிச் சொல்லியிருக்கிறீர்கள். பாடலின் ஆரம்ப வரியே “ஆண்கவியை வெல்ல வந்த பெண்கவியே” பாட்டின் முடிவை சொல்லி விடுகிறது 🙂

      நா.முத்துக்குமார் பாடலும் அருமை!
      ‘முற்றுப்புள்ளி அருகில் நீயும்
      மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
      முடிவென்பதும் ஆரம்பமே’

      இதே போல பார்த்தாலே பரவசம் படத்தில் பிரிந்த கணவனும் மனைவியும் தனிமையின் துயரத்தை அனுபவித்துப் பின் பாடும் வைரமுத்துவின் பாடல் – கண்ணே சுகமா உன் கோபங்கள் சுகமாவிலும் வரும் வரிகள் அருமை.

      “பழைய மாலையில் புதிய பூக்கள் தான் சேராதா?
      பழைய தாலியில் புதிய முடிச்சுகள் கூடாதா?
      வாழ்க்கை ஓர் வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடங்காதா?”

      amas32

    • Uma Chelvan 1:10 am on October 16, 2013 Permalink | Reply

      எடுத்து சொன்னாலும் புரிந்து கொள்ள தெரியாத / முடியாத மக்குகளும், கல் மனது கொண்டவர்களும் (இந்த படத்து ஹீரோ போல) இருக்கத்தானே செய்கிறார்கள்.

      “எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது
      அதுதான் உன்னை என்னிடம் சேர்த்தது
      தொலைந்தது நானா!! கிடைத்திடு வேனா?
      கிடைத்திடும் போதும் தொலைந்திடு வேனா?
      பெண்கள் மனம் ஒரு ஊஞ்சல் இல்ல்லை…
      ஊஞ்சல் தன்னால் அசைவது இல்லை..
      இழுப்பது நீயா!! வருவது நானா?
      திசை அறியாது.. திரும்பிடு வேனா?
      காதலில் பொன் ஊஞ்சலில் அசைவதே சுகம் சுகம்

      No one can’t explain better then This!!!!!!!!!!!!!!!

    • rajinirams 10:44 pm on October 16, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு.”தன் வாழ்க்கையை காதலித்தால் புரியும் அப்போது”-கவியரசரின் சூப்பர் டச். இதே போல வேறொருவளை நினைத்து வாடும் தன் காதலுனுடன் பாடும் ஒரு பாடல் டி.ராஜேந்தரின் “மைதிலி என்னை காதலி”பாடல் வரிகள்-“தண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே”பாடல் வரிகள்-
      பாலைவனத்தில் சோலை எதற்கு- காளை மனதில் சோகம் எதற்கு?
      திரிந்திட்ட பால் குடத்தில் வெண்ணை அதை தேடாதே-ஒரு தலை ராகத்திலே காலம் தன்னை கழிக்காதே
      நினைத்ததை மறப்பதற்கு நெஞ்சத்திற்கு தெரியாதே-கண்களை மூடிக்கொண்டு இருட்டென்று சொல்லாதே
      நினைத்தது நான் நினைத்தது தான்-,மறந்து விட்டால் மாற்றம் வரும் …இப்படி அருமையாக இருக்கும்.
      காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற ஒருவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கவிஞர் வைரமுத்து எழுதிய வசூல் ராஜா பாடலான ஆழ்வார்பேட்டை ஆண்டவா வரிகளும் அருமையாக இருக்கும்
      ஒரே காதல் ஊரில் இல்லையடா,காதல் போயின் சாதலா,இன்னோர் காதல் இல்லையா-தாவணி போனால் சல்வார் உள்ளதடா-கட்சி தாவல் இங்கே தர்மமடா …என்று நகைச்சுவை கலந்து எழுதியிருப்பார். நன்றி.

  • என். சொக்கன் 8:13 pm on September 24, 2013 Permalink | Reply  

    யாரோ ஆட்டும் பொம்மை 

    • படம்: பார்த்தாலே பரவசம்
    • பாடல்: பார்த்தாலே பரவசமே
    • எழுதியவர்: நா. முத்துக்குமார்
    • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
    • பாடியவர்கள்: ரெஹானா, கங்கா, ஃபெபி, ஃபெஜி, பூர்ணிமா
    • Link: http://www.youtube.com/watch?v=65jlOHVvg9A

    ராத்திரியின் சொந்தக்காரா, ரகசியப் போர் வித்தைக்காரா,

    முத்தத்தால் வன்முறை செய்வாயா?

    பார்த்தாலே பரவசமே!

    ’வசம்’ என்ற சொல்லை, ஏதோ ஒன்றைத் தன்னிடம் வைத்திருப்பது என்கிற பொருளில் பயன்படுத்துகிறோம். உதாரணமாக, ‘இந்தப் பையன் கைவசம் நிறைய திறமைகள் இருக்கு!’

    இதையே செயலாகவும் குறிப்பிடலாம், ‘என்ன மாயமோ, அந்தப் பொண்ணு என் பையனை அப்படியே வசப்படுத்திட்டா!’

    இப்படிப்பட்ட ஒரு நிலையைதான் ‘பரவசம்’ என்கிறோம், பர + வசம், அதாவது, ஒருவர் தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை, சுய வசத்தில் இல்லை, இன்னொருவருடைய, அல்லது இன்னொன்றுடைய (பர) வசத்தில் இருக்கிறார். தேசி, பரதேசிபோல, வசம், பரவசம்.

    இந்தப் பாடலில் காதலனைச் சூழும் பெண்கள் உன்னைப் ‘பார்த்தாலே பரவசம்’ என்கிறார்கள். அதாவது, ‘டேய், உன்னைப் பார்த்தாலே போதும், அடுத்த விநாடி எங்க மனசு எங்க கையில இருக்கறதில்லைடா!’

    இதையே கோயிலில் கடவுள் முன்னால் நிற்கும்போதும் சொல்லலாம். கண்ணனைப்பற்றி ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் ‘பால் வடியும் முகம், நினைந்து நினைந்து என் உள்ளம், பரவசம் மிக ஆகுதே’ என்று பாடுவார்.

    இந்தப் பரவசத்துக்கு ‘இன்னொருவர் வசம்’ என்பதைத்தவிர இன்னோர் அர்த்தமும் சொல்லலாம்: பரவசம் = பரன் + வசம்.

    பரன் என்றால் கடவுள், பரவசம், பரன் + வசம் என்றால் கடவுளின் வசம், ‘நானா இயங்குகிறேன்? என்னை ஆட்டுவிப்பவன் அவன் அல்லவா?’ என்கிறார்கள் பக்தர்கள்!

    ***

    என். சொக்கன் …

    24 09 2013

    297/365

     
    • amas32 9:07 pm on September 24, 2013 Permalink | Reply

      பரஸ்தானம், பரஸ்திரீ, பரப்ரம்மம் இதிலெல்லாமும் பர என்பதற்கு நீங்கள் கூறிய பொருள் தான். ஆனால் ஸ்திரீயும், ஸ்தானமும் பிரம்மமும் வடமொழி சொற்கள்.

      amas32

  • mokrish 9:22 pm on September 22, 2013 Permalink | Reply  

    கூட்டம் கூட்டமாக 

    சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றித் திரிந்த காட்டு யானைகளை  பிடித்து முதுமலை வனச் சரணாலயம், ஆனைமலை வனச் சரணாலயத்தில் விட தமிழக அரசு ‘ஆபரேஷன் மலை’ என்ற நடவடிக்கை எடுத்தது. இது பற்றிய செய்திகளை ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் படித்த எனக்கு ஒரு விஷயம் கண்ணில் பட்டது. ஆங்கில ஊடகங்கள் ‘herd of elephants’ என்று எழுத தமிழில்  யானைக் கூட்டம் என்றே இருந்தது.

    ஆங்கிலத்தில் இந்த Collective Nouns மிகவும் சுவாரசியமானது. ஒவ்வொரு பறவை, விலங்கு குழுவுக்கும் ஒரு ஸ்பெஷல் பெயர். பல சொற்கள் கவிதை போல் இருக்கும். Colony of Ants, Troop of Apes, Swarm of bees, Flock of Birds, Pack of Hounds, Pride of Lions , School of fish என்று கேட்கும் போதே ஒரு graphic பிம்பம் தோன்றும். காக்கை கூட்டத்திற்கு என்ன பெயர் தெரியுமா ? A murder of Crows! யாரோ ஒரு ரசிகன் யோசித்து வைத்த பெயர்கள்.

    http://users.tinyonline.co.uk/gswithenbank/collnoun.htm#Birds

    தமிழில் எல்லாவற்றையும் கூட்டம் என்றே சொல்கிறார்களா? இலக்கியத்தில் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் திரைப்பாடல்களில்  அப்படித்தான் என்று தோன்றுகிறது.

    எங்க வீட்டு பிள்ளை படத்தில் வாலி எழுதிய நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்ற பிரபலமான பாடலில் காக்கைகள் கூட்டம் என்று எழுதி பின்னர் மாற்றப்பட்ட வரி ஒன்று வரும்

    அரச கட்டளை படத்தில் முத்துக்கூத்தன் எழுதிய ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் என்ற பாடலில் (இசை கே வி மகாதேவன் பாடியவர் டி எம் எஸ்)  முயல் கூட்டம் என்கிறார்

    http://www.inbaminge.com/t/a/Arasa%20Kattalai/Aadi%20Vaa%20Aadi%20Vaa.eng.html

    மயிலாட வான்கோழி தடை செய்வதோ
    மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ
    முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
    அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ

    வைரமுத்து சிவப்பு மல்லி படத்தில் எரிமலை எப்படி பொறுக்கும் என்ற பாடலில் (இசை சங்கர் கணேஷ் பாடியவர் டி எம் எஸ் டி எல் மகராஜன்) சிங்க கூட்டம் என்கிறார்

    http://www.inbaminge.com/t/s/Sivappu%20Malli/Erimalai%20Eppadi.eng.html

    சிங்க கூட்டம் நிமிர்ந்தால்
    துன்ப சிறையின் கதவு தெறிக்கும்
    நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
    இனி அழுதால் வராது நீதி

    கண்ணதாசன் அக்கரை பச்சை படத்தில் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் SPB, எல் ஆர் ஈஸ்வரி) கிளிக் கூட்டம் என்கிறார்

    http://www.inbaminge.com/t/a/Akkarai%20Pachai/Oorgolam%20Poginra.eng.html

    ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்

    ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று

    நா முத்துக்குமார் உனக்கும் எனக்கும் படத்தில் பூப்பறிக்க நீயும் போகாதே என்ற பாடலில் (இசை தேவி ஸ்ரீபிரசாத் பாடியவர் சங்கர் மகாதேவன்)

    http://www.youtube.com/watch?v=xAWGS5tB9Lw

    காட்டுக்குள்ள நீயும் போகாதே

    கொட்டுகிற தேனீ கூட்டம்

    தேனெடுக்க உதட்ட சுத்துமடி

    இப்படி இன்னும் பல பாடல்கள். பறவைக்  கூட்டம், நரிகள் கூட்டம்  குயில் கூட்டம் குட்டி போட்ட ஆட்டுக் கூட்டம், மான் கூட்டம், கடல்மீன் கூட்டம், வண்டுகள் கூட்டம், பட்டாம்பூச்சி கூட்டம் – என்று எல்லா கவிஞர்களும் முன் தீர்மானிக்கப்பட்ட மெட்டின் நெளிவில் எழில் கோலச்சரிவில் கர்வம் தொலைத்து கூட்டம் என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்கள். இது சரியா?

    ஆடுகளும் மாடுகளும் மந்தை. கொஞ்சம் தேடினால் flock என்ற வார்த்தைக்கு இணைந்து உண்ணும் பறவைத்திரள், உருங்குசெல்லும் புட்குழாம் என்ற அர்த்தம் கண்ணில் படுகிறது.  Swarm என்றால் வண்டின் மொய்திரள் என்ற அழகான விளக்கம்  கண்ணில் படுகிறது.

    தமிழில் Collective nouns உண்டா? தெரிந்தவர்கள் சொல்லவும்

    மோகனகிருஷ்ணன்

    295/365

     
    • rajinirams 11:41 pm on September 22, 2013 Permalink | Reply

      யானைக்கூட்டத்தை பார்த்து ஒரு நல்ல பதிவை இட்டதற்கு பாராட்டுக்கள்.இளம்பெண்கள் கூட்டமாக இருப்பதை பார்த்து காதல் மலர் கூட்டம் ஒன்று என்றதெய்வமகன் வரிகள் நினைவு வருகிறது. போருக்கு செல்லும் கூட்டத்தை மட்டும் படை என்றே கூறுவர்..வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்”படை” வெல்லும். நன்றி.

    • rajinirams 11:45 pm on September 22, 2013 Permalink | Reply

      இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற வித்துவான் வெ.லட்சுமணன் வரிகள் கட்சி தொண்டர் படையையும் குறித்து எழுதினார்.

    • Niranjan 11:47 pm on September 22, 2013 Permalink | Reply

      தொல்காப்பியத்தில் இருக்கிறது. நான் கூட புதிய தலைமுறை நிகழ்ச்சியில் செய்திருக்கிறேன்.

      • amas32 9:52 am on September 23, 2013 Permalink | Reply

        லிங்க் ப்ளிஸ் 🙂

        amas32

    • amas32 9:52 am on September 23, 2013 Permalink | Reply

      சிங்கம் சிங்கிளா தான் வரும் பன்னிங்க தான் கூட்டமா வரும் என்று தலைவர் அன்றே சொல்லிவிட்டார்! 🙂 அதனால் விலங்குகள்/பறவைகள் கூட்டம் என்பது தான் நானும் கேள்விப்பட்ட ஒன்று. ஆனால் ஆட்டு மந்தை, மாட்டு மந்தை இன்றும் வழக்கில் உண்டு.

      amas32

      • rajinirams 5:56 pm on September 23, 2013 Permalink | Reply

        ஹா ஹா,சூப்பர்:-))

      • Mohanakrishnan 6:57 pm on September 23, 2013 Permalink | Reply

        சிங்கம் சிங்கிளா தான் வரும் என்பது factually wrong. சுஜாதா என்ற யானைக்கும் அடி சறுக்கும் !

        • amas32 9:11 pm on September 24, 2013 Permalink

          அதெல்லாம் poetic liberty மாதிரி சூப்பர் ஸ்டாருக்கு டயலாக் எழுதும் போது இதெல்லாம் கண்டுக்கக் கூடாது ;-))

          amas32

        • mokrish 10:17 pm on September 24, 2013 Permalink

          அது சரி! மத்த படமெல்லாம் உலக சினிமா மாதிரி வேணும். இங்க வேற ரூலா?

    • Uma Chelvan 3:30 am on September 25, 2013 Permalink | Reply

      சிங்கிளா வந்த சிங்கத்தின் நிலையை பாரீர்!!!

      Sorry about the words at the bottom, since I copied this image from another site!!!):

  • G.Ra ஜிரா 11:43 am on July 14, 2013 Permalink | Reply  

    படைத்தவன் யாரோ? 

    நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஐயம். தமிழ்க் கவிஞர்கள் அதிகமாகப் பாடிய கடவுள் யார்?

    முருகன், அம்மன், சிவன், கிருஷ்ணன் என்று அடுக்கலாம். ஆனால் அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களால் பாடப்பட்டவர்கள்.

    கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் இல்லாதவர்களும் ஒத்த எண்ணத்தோடு எந்தக் கடவுளைப் பாடியிருக்கிறார்கள்?

    அப்படியொரு ஒரு கடவுள் இருக்கிறார். அவருக்கு கோயில் கிடையாது. வழிபாடு கிடையாது. திருவிழா கிடையாது. பலிகளோ படையல்களோ கிடையாது. ஆனால் கவிஞர்கள் மட்டும் அவரைப் போற்றிக் கொண்டாடுவார்கள்.

    யார் அந்தக் கடவுள்? ஏன் அவரைக் கொண்டாடுகிறார்கள்?

    கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலின் வரியைச் சொல்கிறேன். உங்களுக்குச் சட்டென்று புரிந்து போகும்.

    படைத்தானே பிரம்மதேவன் பதினாறு வயது கோலம்!

    புரிந்து விட்டதல்லவா? நான்முகன் பிரம்மன் என்றெல்லாம் அழைக்கப்படும் படைப்புக் கடவுள்தான் அந்தக் கடவுள்.

    ஏன்? ஏனென்றால் அந்தப் படைப்புக் கடவுள்தான் காதலர்களுக்குத் தக்க காதலிகளைக் கொடுக்கிறார். இல்லை இல்லை. படைக்கிறார்.

    மடப்பாவையார் நம் வசமாகத் தூது நடப்பாரே தெய்வம் நமக்கு” என்று ஆதிநாதன் வளமடலில் செயங்கொண்டார் சொன்னதும் அதே கருத்துதான்.

    கொன்றை அணிந்த சிவனோ உலகளந்த கோபலனோ எமக்குத் தெய்வமல்ல. அழகான காதல் பாவையருக்காக தூது நடப்பவரே நமக்குத் தெய்வம்.

    சரி. வாருங்கள். இனி ஒவ்வொரு கவிஞரும் பிரம்மனை எப்படியெல்லாம் புகழ்ந்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

    அப்படி பிரம்மனைப் புகழ்ந்தவர்களில் என்னை மிகவும் வியக்க வைத்தவர் டி.ராஜேந்தர். அவரே எழுதி இசையமைத்த இரண்டு பாடல்களில் மிகமிகக் கவிநயத்தோடு பிரம்மனைக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வரிகளை நீங்களே படித்துப் பாருங்கள். நான் சொல்வதை ஒப்புக் கொள்வீர்கள்.

    தேவலோக அமுதத்தை குழம்பாக எடுத்து
    தங்க நிற வர்ணத்தில் குழைக்கின்ற போது
    பிரம்மனுக்கு ஞானம் வந்து உன்னை படைக்க
    அட பிரமிப்புடன் நானும் வந்து உன்னை ரசிக்க

    மேலே குறிப்பிட்டுள்ள பாடல் உயிருள்ளவரை உஷா படத்தில் இடம் பெற்ற “மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க” பாடல். விளக்கமே தேவைப்படாத அழகிய வரிகள் அல்லவா!

    அதே போல மைதிலி என்னைக் காதலி படத்தில் இடம் பெற்ற “ஒரு பொன்மானை நான் காணத் தகதிமித்தோம்” பாடலிலும் பிரம்மனைப் பாராட்டுகிறார் விஜய டி.ராஜேந்தர்.

    தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி
    தாமரைப் பூ மீது விழுந்தனவோ
    இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
    படைத்திட்ட பாகந்தான் உன் கண்களோ

    அடடா! என்ன கற்பனை! அவள் கண்ணைப் படைப்பதற்கே பிரம்மனுக்கு இப்படியொரு காட்சி தேவைப்பட்டிருக்கிறது. அவள் முழுவுடலையும் பளிங்குச் சிலையாய் படைப்பதற்கு எதையெதையெல்லாம் பார்த்துக் கற்றானோ!

    வைரமுத்துவின் சிந்தனை சற்று வேறுவிதமாகச் செல்கிறது. ஒரு எலக்ட்ரானிக் கண் கொண்டு காதலியைப் பார்க்கிறார். அவள் சிரிப்பு கூட டெலிபோன் மணி போலக் கேட்கிறது. அப்படி ஒரு பெண்ணை பிரம்மன் எதை அடிப்படையாகக் கொண்டு படைத்திருப்பான்? வேதங்களா? குருவருளா? சிவனருளா?

    கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா

    பிரம்மனும் காலமாற்றத்துக்குத் தக்க ஓலைச் சுவடிகளை வீசி எறிந்து விட்டு கம்ப்யூட்டரில் அனிமேஷன் செய்யத் துவங்கி விட்டானோ என்று வைரமுத்துவின் கற்பனை ஓடுகிறது.

    இன்னொரு பாட்டில் சற்று கொச்சையாக பிரம்மனின் படைப்புக் கதையைச் சொல்கிறார் வைரமுத்து. அண்ணாமலை திரைப்படத்தில் இடம் பெற்ற “அண்ணாமல அண்ணாமல” பாடல் வரிகளைக் கொஞ்சம் பார்க்கலாம்.

    பிரம்மனுக்கு மூடு வந்து உன்னை படைச்சிட்டான்
    அடி காமனுக்கு மூடு வந்து என்னை அனுப்பிட்டான்

    பிரம்மனின் வள்ளல் திறமையையும் கஞ்சத்தனத்தையும் இன்னொரு பாட்டில் கொண்டுவருகிறார் வைரமுத்து. ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற “அன்பே அன்பே கொல்லாதே” பாடல் வரிகளைக் கொடுக்கிறேன். பிரம்மன் எங்கு கஞ்சத்தனத்தையும் எங்கு வள்ளல் தன்மையையும் காட்டினான் என்று நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

    பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
    அடடா பிரம்மன் கஞ்சனடி
    சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
    ஆஹா அவனே வள்ளலடி

    அத்தோடு விடவில்லை வைரமுத்து. பிரம்மனைப் பார்த்து “தகுமா? முறையா? நீதியா?” என்று ஜெமினி படத்து நாயகனுக்காக முறையிடுகிறார்.

    பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
    என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
    உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
    நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா

    இந்தப் பாட்டில் சொல்வது போன்ற அழகான பெண்ணை பிரம்மன் கொடுத்தால் அது வரமா? சாபமா? இரண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

    இன்னொரு வித்தியாசமான கவிஞர் இருக்கிறார். அவர் இசையில் அவர் எழுதி இசையமைத்த பாடல் தான் நாடோடித் தென்றல் படத்தில் வந்த “மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரழகே” பாடல். ஆம். இசைஞானி இளையராஜா தான் எழுதிய பாடலிலும் பிரம்மனை இழுக்கிறார்.

    மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரழகே
    கொடியே கொடிமலரே கொடியிடையில் மணியழகே
    ………………..
    பொன்னில் வடித்த சிலையே பிரம்மன் படைத்தான் உனையே

    இன்றைய கவிஞர்களும் பிரம்மனை விடுவதாக இல்லை. முதலில் பா.விஜய் எழுதிய பாடல்களைப் பார்க்கலாம்.

    அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
    நீ என் மனைவியாக வேண்டும் என்று
    ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
    ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்

    அரசாங்க அலுவலகத்தில் மனு கொடுத்தால் அது எங்கு போகும் என்று தெரியும். ஆனால் பிரம்மனிடத்தில் மனு கொடுத்தால் கண்டிப்பாக அது நடக்கும் என்றொரு நம்பிக்கையை தேவதையைக் கண்டேன் திரைப்படப் பாடல் வரிகளில் கொண்டு வந்திருக்கிறார்.

    பிரியமான தோழி படத்துக்காகவும் பிரம்மனைப் புகழ்ந்திருக்கிறார் பா.விஜய்.

    பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
    ………………..
    பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது

    இந்த உலகத்தையே படைத்து, அதில் அத்தனை உயிர்களையும் படைத்ததை விட ஓவியம் போன்ற அழகான காதலியைப் படைத்ததுதான் மிகப் பெரிய சாதனை என்று காதலன் பார்வையில் பா.விஜய் எழுதியதும் ரசிக்கத்தக்கதுதான்.

    நா.முத்துக்குமாரும் வழக்கு எண் 18/9 படத்துக்காக பிரம்மன் கையைப் பிடித்து இழுத்திருக்கிறார்.

    வானத்தையே எட்டி புடிப்பேன்
    பூமியையும் சுத்தி வருவேன்
    …………………
    அடி பெண்ணே நீயும் பெண்தானோ
    இல்ல பிரம்மன் செய்த சிலைதானோ

    வழக்கமாக பாட்டெழுதும் கவிஞர்கள் மட்டுமல்ல, புதிதாகப் பாட்டெழுதுகின்றவர்களுக்கும் பிரம்மனே துணை. தானே இயக்கிய கச்சேரி ஆரம்பம் திரைப்படத்தில் ஒரு பாடலை இயக்குனர் திரைவாணன் எழுதியிருக்கிறார். அங்கும் பிரம்மனுக்குப் போற்றி மேல் போற்றி.

    பிரம்மா உன் படைப்பினிலே…
    எத்தனையோ பெண்கள் உண்டு
    ஆனாலும் அசந்துவிட்டேன் அழகினிலே
    இவளைக் கண்டு
    அழகினிலே.. இவளைக்கண்டு
    வாடா வாடா பையா

    இப்படியெல்லாம் பாடல்களைப் பார்க்கும் போது எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா?

    இதுதான் பிரம்மனுக்கு வந்த வாழ்வு! வாழ்வோ வாழ்வு!

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

    பாடல் – மோகம் வந்து தாகம் வந்து
    படம் – உயிருள்ளவரை உஷா
    பாடியவர்கள் – எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    பாடல் & இசை – டி.ராஜேந்தர்
    பாடலின் சுட்டி – http://youtu.be/1S3XGSA4qTk

    பாடல் – அன்பே அன்பே கொல்லாதே
    படம் – ஜீன்ஸ்
    பாடல் – வைரமுத்து
    பாடியவர் – ஹரிஹரன்
    இசை – ஏ.ஆர்.ரகுமான்
    பாடலின் சுட்டி – http://youtu.be/_QzDFtWVf3c

    பாடல் – படைத்தானே பிரம்மதேவன்
    படம் – எல்லோரும் நல்லவரே
    பாடல் – கண்ணதாசன்
    பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    இசை – வி.குமார்
    பாடலின் சுட்டி – http://youtu.be/qamttiCClsc

    பாடல் – அழகே பிரம்மனிடம் மனு
    படம் – தேவதையைக் கண்டேன்
    பாடல் – பா.விஜய்
    பாடியவர்கள் – ஹரீஷ் ராகவேந்திரா, கங்கா
    இசை – தேவா
    பாடலின் சுட்டி – http://youtu.be/lrCW8fOcXVQ

    பாடல் – அண்ணாமல அண்ணாமல
    படம் – அண்ணாமலை
    பாடல் – வைரமுத்து
    பாடியவர்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா
    இசை – தேவா
    பாடலின் சுட்டி – http://youtu.be/OQ3RdFU5vsQ

    பாடல் – வானத்தையே எட்டி புடிப்பேன்
    படம் – வழக்கு எண் 18/9
    பாடல் – நா.முத்துக்குமார்
    பாடகர் – தண்டபாணி
    இசை – ஆர்.பிரசன்னா
    பாடலின் சுட்டி – http://youtu.be/a-ohRTF8CeI

    பாடல் – பெண்ணொருத்தி பெண்ணொருத்தி
    படம் – ஜெமினி
    பாடல் – வைரமுத்து
    இசை – பரத்வாஜ்
    பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    பாடலின் சுட்டி – http://youtu.be/XNiS5Zxj_RY

    பாடல் – பிரம்மா உன் படைப்பினிலே(வாடா வாடா பையா)
    படம் – கச்சேரி ஆரம்பம்
    பாடல் – திரைவாணன் (இயக்குனர்)
    பாடியவர் – கார்த்திகேயன் எம்.ஐ.ஆர், அந்திதா
    இசை – டி.இமான்
    பாடலின் சுட்டி – http://youtu.be/ho-4PCJnQ6k

    பாடல் – பெண்ணே நீயும் பெண்ணா
    படம் – பிரியமான தோழி
    பாடல் – பா.விஜய்
    பாடியவர்கள் – கல்பனா, உன்னி மேனன்
    இசை – எஸ்.ஏ.ராஜ்குமார்
    பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=KSM9aCJFVTo

    பாடல் – மணியே மணிக்குயிலே
    படம் – நாடோடித் தென்றல்
    பாடியவர்கள் – எஸ்.ஜானகி, மனோ
    பாடல் & இசை – இளையராஜா
    பாடலின் சுட்டி – http://youtu.be/UNIb8Pblu7w

    பாடல் – ஒரு பொன் மானை நான் காண
    படம் – மைதிலி என்னைக் காதலி
    பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    பாடல் & இசை – டி.ராஜேந்தர்
    பாடலின் சுட்டி – http://youtu.be/S-XvP9p9mOs

    பாடல் – டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா
    படம் – இந்தியன்
    பாடியவர் – ஹரிணி, ஹரிஹரன்
    பாடல் – வைரமுத்து
    இசை – ஏ.ஆர்.ரகுமான்
    பாடலின் சுட்டி – http://youtu.be/SfHbknfOOuA

    அன்புடன்,
    ஜிரா

    225/365

     
    • மணிகண்டன் துரை 2:19 pm on July 14, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு

    • rajinirams 2:49 pm on July 14, 2013 Permalink | Reply

      அடடா பிரமாதம். எல்லா பாடல்களுமே சூப்பர். புதியவன் படத்தில் வைரமுத்துவின் “நானோ கண் பார்த்தேன்” பாடலில் பருவம் அடடா பஞ்சம் இல்லை,அடடா பிரம்மன் அவன் கஞ்சன் இல்லை என்று வரும். எல்லோரும் நல்லவரே பாடல் படைத்தானே பிரம்மதேவன் பாடல் கவியரசர் கண்ணதாசன் எழுதியது. (பகை கொண்ட உள்ளம்,சிகப்புகல்லு போன்றவை புலமைப்பித்தன் எழுதியவை).திருவருள் படத்தில் வரும் கந்தன் காலடியை பாடலில் “அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்” என்ற வரி வரும். நன்றி.

    • amas32 5:49 pm on July 14, 2013 Permalink | Reply

      எத்தனை எத்தனைப் பாடல்களைத் தேடி எடுத்து அடுக்கியிருக்கிறீர்கள்! படைப்புக் கடவுளான பிரம்மா சும்மா இல்லை! 🙂 அவருக்குக் கோவிலோ வழிபாடோ இல்லை என்றாலும் திரைப் பாடல்கள் அவரை துதிப்பது அவருக்குப் பெருமை தான் 🙂

      amas32

  • G.Ra ஜிரா 11:02 am on May 13, 2013 Permalink | Reply  

    மருதாணிச் சாறெடுத்து… 

    சென்னை தியாகராயநகரில் பனகல் பூங்காவின் ஓரமாக வரிசையாக வடக்கத்தி இளைஞர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் இளம் பெண்கள் கைகளில் விதம்விதமாக மெஹந்தி இட்டுக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் திருமண அலங்காரத்திலும் மெஹந்தி முக்கியமாக இருக்கிறது.

    மெஹந்தி என்ற சொல் வேண்டுமானால் தமிழர்களுக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் மெஹந்தி புதியதல்ல. மிகமிகப் பழையது.

    என்னுடைய சிறுவயதில் வீடுகளில் மருதாணி அரைத்து பெண்களும் சிறுமிகளும் இட்டுக் கொள்வார்கள். சிறுவர்களும் கூடத்தான்.

    மருதாணி இலையை நன்கு கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை அப்படியே அம்மியில் அரைப்பவர்களும் உண்டு. அத்தோடு கொட்டைப்பாக்கு, புளி, தயிர் ஆகியவைகளையும் சேர்த்து அரைப்பவர்களும் உண்டு.

    வீட்டில் ஒருவர்தான் எல்லாருக்கும் மருதாணி இடுவார். இட்டு முடித்திருக்கும் போது அவர் விரல்கள் தாமாகவே சிவந்திருக்கும். அதெல்லாம் அந்தக்காலம். பிறகு மருதாணிச் செடிகள் வைக்க வீடுகளில் இடமில்லாமல் போன போது மருதாணிப் பொடி பாக்கெட்டுகளில் வந்தது. ஆனால் அது அவ்வளவு பிரபலமாகவில்லை. அதற்குப் பின்னால் வந்த மெஹந்தி கூம்பு மிகவும் பிரபலமாகி விட்டது.

    கை படாமல் இட்டுக் கொள்ள முடியும். மெல்லிதாகவும் இட முடியும். இப்படி வசதிகள் வந்த பிறகு மருதாணி அரைப்பது என்பதே இல்லாமல் போனது. அரைக்க விரும்பினாலும் எத்தனை வீடுகளில் அம்மி இருக்கிறது?

    இந்த மருதாணி திரைப்படங்களில் நிறைய வந்திருக்கிறது.

    மருதாணி விழியில் ஏன்” என்று கண்கள் சிவந்திருப்பதை வாலி அழகாக சக்கரக்கட்டி படத்தில் உவமித்திருக்கிறார்.
    மருதாணி பூவைப் போல குறுகுறு வெட்கப்பார்வை” என்று காதலியின் பார்வையை வம்சம் படத்தில் நா.முத்துக்குமார் வர்ணித்திருக்கிறார்.
    மருதாணி வெச்ச பொண்ணு இவதான்” என்று கிராமத்துப் பெண்ணை அன்னை வயல் படத்தில் இனங்காட்டுகிறார் பழனிபாரதி.
    மருதாணி அரைச்சேனே உனக்காக பதமா” என்று கூட பாட்டு உண்டு.
    இன்னும் எத்தனையெத்தனையோ பாடல்கள் உண்டு. பட்டியல் பெரிது.

    மருதாணிக்கு மருதாணி என்று பெயர் வந்தது எப்படி என்று தெரியுமா? அதன் பழைய பெயர் மருதோன்றி.

    இலையின் சாறினால் சிவந்த மரு தோன்றுவதால் மருதோன்றி என்று அதற்குப் பெயர். பழைய இலக்கியங்களில் சுருக்கமாக தோன்றி என்றே அழைத்திருக்கிறார்கள். ஒரேயொரு எடுத்துக்காட்டு மட்டும் பார்க்கலாம். பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக மதுரை கண்ணங்கூத்தனால் எழுதிய கார் நாற்பதில் இப்படியொரு பாட்டு.

    கருவிளை கண்மலர் போற் பூத்தன கார்க்கேற்
    றெரிவனப் புற்றன தோன்றி – வரிவளை
    முன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறும்
    இன்சொற் பலவு முரைத்து

    இந்தப் பாடலுக்கு இரண்டு விதப் பொருள்கள் தோன்றுகின்றன. இரண்டையும் தருகிறேன். பொருத்தமானதைக் கொள்க.

    கார்காலம் வந்து விட்டது. கருவிளை மலர்கள் மாதரார் மாவடுக் கண்கள் போல விழித்துப் பூத்திருக்கின்றன. எரிகின்ற காட்டைப் போல செக்கச் சிவந்திருக்கிறது மருதாணிப்பூக்கள். ஆனாலும் வளையலை நழுவ விட்டன காதலியின் கைகள். பிரிந்து சென்ற தலைவன் வரவைச் சொல்ல முடியாத நிலையால் எதையும் சொல்லாமல் தவிர்த்தாள் தலைவி.

    அடுத்த பொருள். கார்காலம் வந்து விட்டது. தலைவியின் கண்கள் கருவிளை மலர்களைப் போன்று பூத்து தலைவன் வருகைக்காக விழித்திருக்கின்றன. எரிகின்ற காட்டைப் போன்று செக்கச் சிவந்த மருதாணி அணிந்த கைகளில் வளையல்கள் நழுவி விழுந்தன. பிரிந்து சென்ற தலைவன் வரவைச் சொல்ல முடியாத நிலையால் எதையும் சொல்லாமல் தவிர்த்தாள் தலைவி.

    இந்தச் செய்யுளில் தோன்று என்று அழைக்கப்படுவது மருதோன்றி.

    அது சரி. யாரெல்லாம் தங்கள் கைகளில் மருதாணி இட்டு மகிழ்ந்திருக்கின்றீர்கள்? 🙂

    அன்புடன்,
    ஜிரா

    163/365

     
    • amas32 11:17 am on May 13, 2013 Permalink | Reply

      மருதாணியை மிக்சியில் போட்டு அரைப்பது கடினம். சரியாகவே அரைபடாது. திப்பி திப்பியாக இருக்கும். அதற்கு அம்மி அல்லது கல்லுரல் தான் சரி. மருதாணி இட்டுக் கொள்ள பிடிக்காத பெண்களே இருக்க முடியாது என்று சொல்லல்லாம். சில வீடுகளில் சிறுவர்களும் முன் காலத்தில் இட்டுக் கொள்வர் 🙂 மணமகனுக்கு நலுங்கு வைப்பது போல கையில் மருதாணி இடுவதும் வழக்கம்.

      மருதாணி பூக்களுக்கு நல்ல நறுமணம் உண்டு. இரவு நேரத்தில் கும்மென்று மணம் வீசும். கதம்ப மாலையில் சேர்த்துக் கட்டுவது வழக்கம்.

      மருதாணி இட்ட கைகளால் உண்ணும்போது அந்த உணவுக்கும் தனி மணம் வரும். கையில் இட்ட மெஹந்தி கோலங்கள முதல் சில நாட்கள் நன்றாக இருந்தாலும் அதன் பின் கை மோர்குழம்பு மாதிரி ஆகிவிடும். ஆனால் அரைத்து இட்டுக் கொள்ளும் மருதாணி ரொம்ப நாட்கள் அழியாமல் அழகாகக் காட்சியளிக்கும் 🙂

      amas32

      • GiRa ஜிரா 9:47 am on May 15, 2013 Permalink | Reply

        உண்மை. உரல் அல்லது அம்மியில்தான் அரைக்க வேண்டும். ஒரேயொரு கொட்டைப்பாக்கையும் வைத்து அரைத்துவிட்டால் அட்டகாசம்.

    • vaduvurkumar 1:48 pm on May 13, 2013 Permalink | Reply

      பல முறை இட்டுக்கொண்டுள்ளேன்.

      • GiRa ஜிரா 9:47 am on May 15, 2013 Permalink | Reply

        சிறுவயதில் எல்லாரும் வெச்சிருப்போம்னு நெனைக்கிறேன். 🙂

    • kamala chandramani 2:29 pm on May 13, 2013 Permalink | Reply

      மருதாணிப்பூக்கள் இளம் மஞ்சள் நிறத்தில் சிறியதாக இருக்கும். நல்ல மணம் வீசும். 15 நாட்களுக்கு ஒருமுறை இட்டுக்கொள்ள நகங்கள் நகப்பூச்சு(nailpolish) பூசியதுபோல் அழகாக இருக்கும். கால் நகங்களுக்கு பாதுகாப்பு. கால் ஆணிக்கு மருந்து. உடலுக்கு குளிர்ச்சி. மெஹந்தி சீக்கிரம் போய்விடும். கைமணக்க நிறைய நாள் இருக்கும் மருதாணி.

      • GiRa ஜிரா 9:48 am on May 15, 2013 Permalink | Reply

        மெஹந்தியில் ஏதோ கெமிக்கல் சேக்கிறாங்களாம். அதான் பக்குன்னு ஒடனே பிடிச்சுக்குதுன்னு சொல்றாங்க. என்னைக் கேட்டா மருதாணிதான் சிறப்புன்னு சொல்வேன் 🙂

    • saba 7:54 pm on May 14, 2013 Permalink | Reply

      இயற்கையாக இருக்கும் மருதாணிச் சாறு சந்ததி சந்ததியாக பாவிக்கப்பட்டது. ஒரு பக்க விளைவயும் தோற்றுவிக்கவில்லை.
      தற்போது கூம்புகளில் விற்கப்படும் ஒரு வகை black “ஹென்னா” தோல்களில் கெடுதலை விளைவிக்கிற்து.
      A chemical PPD is added to make the stain darker for the temporary tattoo and it creates rashes on the skin. these are mainly use in Bali , an Indonesian Island.
      check the link below:
      (http://www.expat.or.id/medical/blackhennareactions.html)

      • GiRa ஜிரா 9:48 am on May 15, 2013 Permalink | Reply

        சரியான தகவலை எடுத்துக் கொடுத்தீர்கள். இயற்கையான முறைகளை விட்டுவிடக்கூடாது என்பது எவ்வளவு உண்மை.

  • G.Ra ஜிரா 10:39 am on March 22, 2013 Permalink | Reply  

    தேசிங்கு ராஜா! 

    வரலாற்றுப் பின்னணியில் இப்போதெல்லாம் படங்கள் வருவதேயில்லை. ஆனாலும் காதற் பாடல்களில் நாயகனை வீரமுள்ளவனாகக் காட்ட வரலாற்று நாயகர்களாகக் குறிப்பிடுவதும் உண்டு. அதிலும் அதிகமாக குறிப்பிடப்பட்டது கட்டபொம்மனாகத்தான் இருக்கும். பாரி வள்ளலும் ராஜராஜசோழனும் திருமலை மன்னனும் கூட பாட்டில் வந்திருக்கிறார்கள்.

    இப்படி இவர்கள் வந்த பிறகு புதிதாக யாரையாவது குறிப்பிட வேண்டும் என்று நா.முத்துக்குமாருக்கு தோன்றியிருக்கலாம். அதனால் தேசிங்குராஜாவை அழைத்து வந்து விட்டார்.

    தேசிங்குராஜா தேசிங்குராஜா
    திருதிருதிருன்னு முழிப்பது ஏன்
    தஞ்சாவூரு ராணி தஞ்சாவூரு ராணி
    குறுகுறுன்னு பார்ப்பதென்ன
    படம் – டும் டும் டும்
    பாடல் – நா.முத்துக்குமார்
    பாடியவர்கள் – ஹரிஷ் ராகவேந்திரா, சுஜாதா
    இசை – கார்த்திக் ராஜா
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=JHTZ43dRtLc

    சரி. யார் இந்த தேசிங்கு ராஜா? எந்த ஊர் ராஜா? அதை விளக்கமாகச் சொல்ல சிறிய வரலாற்றுப் பாடம் எடுக்க வேண்டும்.

    18ம் நூற்றாண்டிலே செஞ்சியை ஆண்ட சிற்றரசன் தேசிங்கு ராஜா. இன்றைய செஞ்சியில் நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டிய கோட்டைகளும் இடிபாடுகளும் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. ஆனால் நாயக்கர்கள் ஆட்சி மறைந்த பிறகும் செஞ்சியில் சுவாரசியமான வரலாற்று நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.

    தென்னாட்டையும் பிடிக்க வேண்டும் என்று ஔரங்கசீப்புக்குக் கனவு. அதனால் அடிக்கடி தாக்குதல்கள். மதுரை, தஞ்சை மற்றும் செஞ்சி நாயக்கர் ஆட்சிகள் வீழ்ந்தன. மராட்டிய சிவாஜியின் மகன் ராஜாராம் ஔரங்கசீப்பிடம் இருந்து தப்பித்து செஞ்சிக் கோட்டைக்கு வந்து பதுங்கியிருந்தார்.

    இராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த சொரூப்சிங் தலைமையில் ஔரங்கசீப்பின் படை செஞ்சிக்கோட்டையைத் தாக்குகிறது. கிட்டத்தட்ட பதினோறு மாத முற்றுகைக்குப் பின்னர் செஞ்சிக்கோட்டை வீழ்ந்தது. அந்த வெற்றியைப் பாராட்டி செஞ்சி ஆட்சியை சொரூப்சிங்குக்கே கொடுத்து விடுகிறார் ஔரங்கசீப்.

    அந்த சொரூப்சிங்குக்கும் ராதாபாய்க்கும் பிறந்த மகன் தான் தேஜ்சிங். அதாவது தமிழர்கள் உச்சரிப்பில் தேசிங்கு.

    வடக்கில் அதற்குள் ஔரங்கசீப் ஆட்சி முடிந்து ஷாஆலம் ஆட்சி தொடங்கியிருந்தது. அவரிடம் ஒரு குதிரை வந்தது. பரிகாரி என்று பெயரிடப்பட்ட குதிரை அழகும் கம்பீரமும் சேர்ந்த உயர்ந்த வகை. ஆனால் அதை யாரும் அடக்கி ஓட்ட முடியவில்லை.

    குதிரைப் பயிற்சியில் சிறந்திருந்த சொரூப்சிங் அழைக்கப்பட்டார். சொருப்சிங்காலும் அந்தக் குதிரையை பழக்க முடியவில்லை. ஆனால் அதை முடித்துக் காட்டினான் பதினெட்டு வயது தேஜ்சிங். அந்த வெற்றிக்குப் பரிசாக தேஜ்சிங்குக்கு பரிகாரியே கிடைத்தது. அதுமட்டுமல்ல, தேஜ்சிங்கின் ராஜபுத்ர இனத்திலிருந்தே பெண்ணெடுத்து திருமணமும் செய்து வைத்தார் ஷாஆலம்.

    அந்த பெண்ணின் பெயர் ராணிபாய். இவருடைய பெயரில் உருவானதுதான் இன்றைய ராணிப்பேட்டை என்று சொல்கிறார்கள். தலையைச் சுற்றுகிறதா? வரலாற்றுச் சம்பவங்களைச் சுருக்கமாகச் சொன்னால் கொஞ்சம் சுற்றத்தான் செய்யும். 🙂

    மிகச் சிறுவயதிலேயே ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை வந்தது தேஜ்சிங்குக்கு. அவனுடைய நண்பன் முகமதுகான் தேஜ்சிங்குக்கு எல்லா வகையிலும் துணையாக இருந்தான். அவனிடமும் ஒரு குதிரை இருந்தது. அதன் பெயர் நீலவேணி. அதன் மேல் முகமதுகானுக்கு உயிர்.

    எல்லாம் நன்றாகப் போவது போலத்தான் இருந்தது ஆர்க்காட்டு நவாப் பிரச்சனையைத் தொடங்கும் வரை. ஆர்க்காட்டு நவாய் யார் வரி கேட்பதற்கு என்று போர் தொடங்கியது.

    எத்தனையோ திரைப்படங்களிலும் கதைகளிலும் வருவது போன்ற காட்சிதான். முகமதுகானுக்குத் திருமணம் வைத்த நாளில் போர் முரசு கொட்டியதாம். ஆகையால் திருமணத்தை நிறுத்தி விட்டு போருக்குப் புறப்பட்டானாம் முகமதுகான்.

    கொடும் போர் நடந்தது. போரில் வீர மரணம் அடைந்தான் தேஜ்சிங். அவனது மனைவி ராணிபாய் தீப்பாய்ந்து உயிர் விட்டார். முகமதுகானும் போரில் உயிரிழந்தான். அவனுடைய குதிரை நீலவேணியும் கொல்லப்பட்டது.

    நீலாம்பூண்டி என்னும் சிற்றூரில் தேஜ்சிங்கின் சமாதி உள்ளது. அருகிலேயே முகமதுகானுக்கும் அவனுடைய குதிரை நீலவேணிக்கும்.

    அன்புடன்,
    ஜிரா

    111/365

     
    • Arun Rajendran 4:08 pm on March 22, 2013 Permalink | Reply

      தமிழ் வகுப்புல வரலாறு பாடத்த நடாத்திக் காட்டி இருக்கீங்க…ஒரு நல்லப் பாட்ட எடுத்து ஞாபகப்படுத்துனதுக்கு நன்றி…தேசிங்கு கதை அரசல் புரசலாத்தான் கேள்விப்பட்டு இருக்கேன்..சுருக்கமா நிகழ்வுகள கோர்த்து கொடுத்து இருக்கீங்க..நன்றிகள் ஜிரா..

      • GiRa ஜிரா 11:04 pm on March 23, 2013 Permalink | Reply

        தேசிங்குராஜனைப் பற்றிய விவரங்களைத் தேடுனா அதீத புனிதப்படுத்துதலோட பக்தி ஜாலம் கலந்துதான் விவரங்கள் கிடைச்சது. பிறகு வேறு இடங்களில் தேடித்தான் பெயர் முதற்கொண்டு சரியான தகவல்களைக் கொடுக்க முடிந்தது 🙂

    • Saba-Thambi 5:32 pm on March 22, 2013 Permalink | Reply

      சிறு வயதில் படித்த ராஜா தேசிங்குவையும் அவனது குதிரையயும் நினவு படுத்தியதற்கு நன்றி. ஆனால் அதன் பின்னால் இருந்த சோகம் இன்று தான் அறிந்தேன். வரலாறு வகுப்பிற்கு நன்றி.

      • GiRa ஜிரா 11:06 pm on March 23, 2013 Permalink | Reply

        ஒவ்வொரு வரலாற்று நாயகனுக்கும் பின்னாடி ஒவ்வொரு சோகம் இருக்கத்தான் செய்யுது. அதுதானே வரலாறு. படாதபாடு பட்டு ஆட்சியைக் காப்பாற்றி ஒப்படைத்த மங்கம்மாளையே சந்தேகப்பட்டு சோறு போடாமல் கொடுமைப் படுத்திய பேரனையும் கண்டதுதான் தமிழகம்

    • amas32 (@amas32) 7:14 pm on March 22, 2013 Permalink | Reply

      கார்த்திக் ராஜாவுக்குத் திறமை இருந்தும் வாய்ப்புகள் இல்லை என்பது என் எண்ணம். அவர் இசையமைப்பில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே அருமை. இந்தப் பாடலில் நடன அமைப்பும் நன்றாக இருக்கும். பூவா தலையா, காயா பழமா என்று வரிகள் வரும் பாடல்களை #4VariNoteல் எடுக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும்? சைலண்டா யாரும் கவனிக்காத போது எஸ்கேப் ஆகி தேசிங்கு ராஜா (Tej Singh Raja) பற்றி சரித்திரக் குறிப்பை அழகாகக் கொடுத்து சூப்பரா ஸ்கோர் செய்து விட வேண்டும்!:-)))) வாழ்க ஜிர!

      amas32

      • GiRa ஜிரா 11:08 pm on March 23, 2013 Permalink | Reply

        கார்த்திக் ராஜா திறமையுள்ள இசையமைப்பாளர். மாணிக்கம் என்ற முதற்படத்தில் பி.சுசீலாவைப் பயன்படுத்தி முற்றிலும் புதுமையாக ஒலிக்கச் செய்த இசையமைப்பாளர் அவர்.

        // பூவா தலையா, காயா பழமா என்று வரிகள் வரும் பாடல்களை #4VariNoteல் எடுக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும்? சைலண்டா யாரும் கவனிக்காத போது எஸ்கேப் ஆகி //

        என்னம்மா செய்யச் சொல்றிங்க? பாட்டுல எதாச்சும் நல்லது இருந்தா எடுத்துச் சொல்லாம போறதில்லையே. இல்லாதப்போ இந்த மாதிரி விவரங்களைச் சொல்ல பாடல்களைப் பயன்படுத்திக் கொள்கிறோம் 🙂

  • mokrish 11:56 am on February 14, 2013 Permalink | Reply  

    நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை 

    குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க வாடகை என்ன தர வேண்டும் என்று குழம்புவர்களுக்கும் யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போனது என்று உருகும் உள்ளங்களுக்கும் இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய் என்று கலங்கும் இதயங்களுக்கும் காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கும் அனைவருக்கும் #4வரிநோட் ன் இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்

    காற்றெல்லாம் இன்று காதல் வாசம். இன்று உலகமெங்கும் ஒரே மொழி அது  உள்ளம் பேசும் காதல் மொழி.

    ஆனால் திரைப்பாடல்களில் எப்போதுமே காதல் வாசம்தான். மூன்றில் இரண்டு காதல் பாட்டுதான். கண்ணதாசன் ‘அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை’ என்று தெளிவாக சொல்கிறார். வாலி ‘காற்று வாங்க போனால்கூட கவிதைதான் வாங்கி வருகிறார்.  அவருக்கு வளையோசை சத்தமே கவிதைதான் . வைரமுத்துவும் கால காலமாக வாழும் காதலுக்கு அர்ப்பணம் என்கிறார்.

    பல ஆயிரம் காதல் பாடல்கள். பல ஆயிரம் வர்ணனைகள். காதல் என்பது  கல்யாணம் வரைதான்  என்று சொன்ன ஒரு பாட்டு. காதல் கசக்குதையா என்ற இன்னொரு பாடல். காதலின் ஏழு நிலை சொன்ன என்னுயிரே என்னுயிரே என்று இன்னொரு பாடல்.

    காதலின் Symptoms பற்றி கவிஞர்கள் என்ன சொல்கிறார்கள் ? கண்ணதாசன் (அந்தக் கால?) காதலின் symptoms என்ன என்பதை

    பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது

    பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது

    நாலுவகை குணமிருக்கும் ஆசை விடாது

    நடக்கவரும் கால்களுக்கு துணிவிருக்காது

    என்ற வரிகளில் அழகாக விவரிக்கிறார். நா முத்துகுமார் காதல் பட பாடலில் இந்தக்கால அவஸ்தைகள் என்னவென்று சொல்கிறார் பாருங்கள்

    இதயத்தின் உள்ளே இமயத்தை போலே

    சுமைகளை வைத்தால் … காதல்

    உலகத்தில் உள்ள சித்ரவதைக்கெல்லாம்

    செல்லப்பெயர் வைத்தால்… காதல்

    இதயத்தின் உள்ளே சுமையை வைப்பதும் சித்திரவதைக்கு செல்லப்பெயர் வைப்பதும் – காதல் விரும்பி ஏற்றுக்கொண்ட வலி  என்ற தொனியில் அட ..

    திரைப்பாடல்களில் காதலுக்கு கிடைத்த சுவாரஸ்யமான dimensions என்ன?

    காதலை கடவுள் என்று சொன்ன பாடல்கள் உண்டு. நா முத்துகுமார் ‘காதல்’ படத்தில் தொட்டு தொட்டு பாடலில்

    தொடக்கமும் இல்லை முடிவுகள்  இல்லை

    கடவுளைப்போல காதல்

    என்கிறார். வைரமுத்து ஒரு பாடலில்

    நீரினை நெருப்பினை போல விரல் தொடுதலில் புரிவதும் அல்ல

    காதலும் கடவுளைப்போல அதை உயிரினில் உணரனும் மெல்ல

    என்று காதலை கடவுள் போல என்கிறார்.   (அதனாலதான் இதில் நம்பிக்கையில்லாத சிலர் இருக்கிறார்களோ?) இந்த கடவுளையும் நிராகரிக்கும் ஒரு பகுத்தறிவு கூட்டமும் உண்டு.

    அடுத்த பரிமாணம் Secrecy. கோடம்பாக்கம் பட பாடலில்

    ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்

    முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்

    என்றும் வைரமுத்து பூவெல்லாம் உன் வாசம் படத்தில்

    காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்,
    காதலை யாருக்கும் சொல்வதில்லை,
    புத்தகம் மூடிய மயிலிறகாக

    புத்தியில் மறைப்பாள்  தெரிவதில்லை,

    என்று உணர்வுகளை மயிலிறகால் வருடுகிறார்.

    சரி காதலர் தினத்துக்கு என்ன பரிசு கொடுப்பது என்று யோசிப்பவருக்கு யுகபாரதி சதுரங்கம் படத்தின்  என்ன தந்திடுவேன், பாடலில் http://www.inbaminge.com/t/s/Sathurangam/Enna%20Thanthi.eng.html அந்தக்கால barter trade போல ஒரு ஐடியா கொடுக்கிறார். இந்த உரையாடலை கேளுங்கள்

    நீ வானவில் தந்தால் நான் வானம் தந்திடுவேன்
    நீ ஓரிடம் தந்தால் நான் உலகை தந்திடுவேன்
    நொடிகள் நீ தந்தால் நான் யுகங்கள் தந்திடுவேன்
    விதைகள் நீ தந்தால் நான் விருட்சம் தந்திடுவேன்

    அதுமட்டுமா? கோபமிருந்தால் எப்படி சமாதானப்படுத்துவது என்று சொல்கிறார்

    நீ கோப பார்வை பார்க்கும் போது கொஞ்சல் தந்திடுவேன்
    என் தோளில் நீயும் சாய தொட்டில் தந்திடுவேன்

    கவிதையில் தொடர்ந்து

    நீ பார்த்திடும் போது பாராமல் நான் பார்வை தந்திடுவேன்
    நீ பேசிடும் போது பேசாமல் நான் மௌனம் தந்திடுவேன்

    என்ற புரிதலை சொல்கிறார். மேலும்

    உன் நெற்றி வருட கேசம் ஒதுக்க காற்று தந்திடுவேன்
    நீ இருட்டில் நடக்க எந்தன் விழியில் வெளிச்சம் தந்திடுவேன்
    நீ ஜன்னலின் ஓரம் நின்றிடும் போது சாரல் தந்திடுவேன்
    நீ தூங்கிடும் நேரம் லேசாய் கேட்கும் பாடல் தந்திடுவேன்

    என்று இதமான வரிகளில் காதலின் முழு வீச்சு. எனக்கென்னவோ அட்டை பெட்டியில் கலர் பேப்பர் சுற்றி கலர் ரிப்பன் கட்டி கொடுக்கப்படும் பரிசுகளை விட யுகபாரதி சொல்லும் பரிசுகளில் காதல் மிகுந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. கொடுத்துப்பாருங்கள். அப்புறம் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை.

    மோகன கிருஷ்ணன்

    075/365

     
    • rajinirams 12:08 pm on February 14, 2013 Permalink | Reply

      அட்டகாசம்.

    • @npodiyan 12:13 pm on February 14, 2013 Permalink | Reply

      super!

    • amas32 9:42 pm on February 14, 2013 Permalink | Reply

      உங்கள் பதிவே ஒரு கவிதை பூங்கொத்ததாய் உள்ளது! காதலர் தினத்துக்கு வாசகர்களாகிய எங்களுக்குக் நீங்கள் கொடுக்கும் பூங்கொத்து, நன்றி 🙂

      //ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்

      முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்//

      எனக்கு மிக மிக பிடித்தப் பாடல். ஒரு முறை கேட்ட பிறகும் மறுமுறை உடனே கேட்கத் தூண்டும் பாடல். (of course the tune is awesome!)

      நீங்கள் குறிப்பிட்டிருக்கும் யுகபாரதியின் பாடலை நான் கேட்டதில்லை என்றே நினைக்கிறேன். அறிமுகப் படுத்தியதற்கு நன்றி 🙂

      amas32

  • என். சொக்கன் 10:46 pm on February 13, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு : முத்தான படிமங்கள் 

    படிமங்கள் என்று சொன்னால் பெரிய வார்த்தையாக இருக்கும் (குறைந்தபட்சம் எனக்கு). ஒரு வரியைக் கேட்கும்போது, எழுதியவர் என்ன சொல்ல வந்தாரோ அந்தச் சூழலை படிப்பவரும் உணரவேண்டும். அதற்கு பத்திபத்தியாக விளக்காமல் சிறு எளிய வரிகளில் சொல்லிச் செல்வது சாதாரண விஷயம் இல்லை. தமிழ்த் திரைப்பாடல்களில் தத்துவத்தை அழகாகச் சொன்ன கவிஞர்கள் நிறைய. ஆனால் இந்த விஷயத்தில் என்னுடைய சிற்றறிவுக்கு, நா முத்துக்குமார் தவிர வேறெந்தப்பெயரும் ஞாபகம் வரவில்லை.

    எல்லா இசையமைப்பாளர்களிடமும் பாடல் எழுதி இருக்கிறார், நிறைய மீட்டர் வரிகள் உண்டு என்றாலும் திடீரெனப் பளிச்சிடும் சில அபூர்வமான வரிகளே இவருடைய அடையாளமாக இருக்கிறது.

    கூவும் செல்ஃபோனின் நச்சரிப்பை அணைத்து, கொஞ்சம் சில்வண்டின் உச்சரிப்பைக் கேட்போம் … எங்கும் சந்தம் பிறழவில்லை, ஆனால் எளிமையாக நேற்றைய வாழ்க்கைக்கும் இன்றைய வாழ்க்கைக்குமான வித்தியாசத்தை உடைத்துப்போட்டு விடுகிறார்.

    அவர் மனம் உணர்ந்த விஷயங்களை நமக்குக் கடத்தும் சில என்னைக்கவர்ந்த வரிகளை மட்டும் சுட்டுகிறேன்…

    ஒரு வண்ணத்துப்பூச்சி என் வழி தேடி வந்தது, அதன் வண்ணங்கள் மட்டும் என் விரலோடு நின்றது.. பாட்டை கவனித்துக்கேட்டால் என் விரல் நுனியில் வண்ணத்துப்பூச்சியின் பிசுபிசுப்பை உணர்கிறேனே, அதுதான் எழுதியவரின் வெற்றி.

    பசி வந்தா குருவி முட்டை; தண்ணிக்கு தேவன் குட்டை

    பறிப்போமே சோளத்தடடை; புழுதி தான் நம்ம சட்டை

    என்று வெயிலைப் பொருட்படுத்தாது ஓடும் சிறுவர்களை, எந்தக் காட்சிப்படுத்தலும் தேவைப்படாமலேயே புரிந்துகொள்ள முடிகிறதே, அதுதான் படிமம்.

    பறவை பறந்தபிறகும் இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே … ஆடும் இலை உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை?

    தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்குச் சொந்தமில்லை… என்று படிமத்தையும் தத்துவத்தையும் சேர்த்துவைத்தும் ஆட்டம் போடுகிறார்.

    இது என்ன காற்றில் இன்று ஈரப்பதம் குறைகிறதே, ஏகாந்தம் பூசிக்கொண்டு அந்திவேளை அழைக்கிறதே.. தினமும் பார்க்கும் விஷயம்தான், சாயங்கால வேளை கடல்காற்று.. அங்கே நம்மை அழைத்துப்போக இரண்டே வரிதான் தேவைப்படுகிறது இவருக்கு.

    கையை மீறும் ஒரு குடையாய், காற்றோடுதான் நானும் பறந்தேன்… மழைக்காற்று மனசுக்குள் வீச வைக்கிறார்.

    சொல்லிக்கொண்டே போகலாம் என்றாலும்…

    பெனாத்தல் சுரேஷ்

    புத்தகங்களில் ‘ராம் சுரேஷ்’ எனப் பெயர் வாங்குவதற்கு முன்பாகவே (பின்பாகவும்) இணையத்தில் ‘பெனாத்தல் சுரேஷ்’ ரொம்பப் பிரபலம். உலகம் சுற்றும் (நிஜ) வாத்தியார். சீவக சிந்தாமணியைச் சுவையான நாவல் வடிவத்தில் தந்தவர். சமீபத்தில் இவரது இரண்டு த்ரில்லர் நாவல்கள் வெளிவந்துள்ளன.

    பெனாத்தல் சுரேஷ் இணைய தளம்: http://penathal.blogspot.in/
    ட்விட்டர்: https://twitter.com/penathal
     
  • என். சொக்கன் 1:51 pm on December 31, 2012 Permalink | Reply  

    தும்பு துலக்குதல் 

    • படம்: சத்தம் போடாதே
    • பாடல்: அழகுக் குட்டிச் செல்லம்
    • எழுதியவர்: நா. முத்துக்குமார்
    • இசை: யுவன் ஷங்கர் ராஜா
    • பாடியவர்: ஷங்கர் மகாதேவன்
    • Link: http://www.youtube.com/watch?v=GOc05aY_OWs

    நீ சிணுங்கும் மொழி கேட்டால், சங்கீதம் கற்றிடலாம்!

    தண்டவாளம் இல்லாத ரயிலை,

    தவழ்ந்தபடி நீ ஓட்டிப் போவாய்!

    வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்!

    ’என்கிட்ட வம்பு, தும்பு வெச்சுக்காதே’ என்று அடிக்கடி சொல்கிறோம். அதற்கு என்ன அர்த்தம்?

    ‘வம்பு’ என்றால் வீண் சண்டை என்று பொருள், அது நமக்குத் தெரியும். அதென்ன தும்பு? ’காசு, கீசு’, ‘காப்பி, கீப்பி’ என்று சும்மா இணைத்துச் சொல்வதுபோல் பொருளற்ற ஒரு சொல்லா அது?

    தமிழில் சும்மா ஓசை நயத்துக்காகச் சேர்க்கப்படும் இதுபோன்ற பொருளற்ற சொற்கள் ‘கிகர’ வரிசையில் அமைவதுதான் வழக்கம். குழந்தை, கிழந்தை, கல்யாணம், கில்யாணம், கம்ப்யூட்டர், கிம்ப்யூட்டர், பாட்டு, கீட்டு…

    அந்த வழக்கத்தின்படி, வம்புக்குத் துணையாகக் கிம்புதானே வரணும்? ஏன் தும்பு? அப்படியானால் ‘தும்பு’வுக்கு வேறு அர்த்தம் இருக்கிறதோ?

    என்னிடம் உள்ள தமிழ் அகராதியில் தும்புக்கு இரண்டு பொருள்கள் தந்துள்ளார்கள்: கயிறு / நார்.

    உதாரணமாக, ‘தும்பை விட்டு வாலைப் பிடி’ என்று நம் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதன் அர்த்தம், மாட்டைப் பிடிக்க விரும்புகிறவர்கள் அதன் கழுத்தில் உள்ள கயிறை(தும்பு)தான் பிடிக்கவேண்டும், அதை விட்டுவிட்டு வாலைப் பிடித்தால் பலன் இருக்காது.

    வீட்டைச் சுத்தப்படுத்தும்போது, ‘ஒரு தூசு தும்பு இல்லாம க்ளீன் பண்ணிட்டேன்’ என்கிறோம். இங்கே ’தும்பு’வின் பொருள் நார், அல்லது அதுபோன்ற ஏதோ ஒரு சின்னஞ்சிறிய குப்பை.

    ஒரே பிரச்னை, கயிறு, நார் என்ற இந்த இரண்டு விளக்கங்களும் ’வம்பு தும்பு’வுக்குப் பொருந்தாது. மூன்றாவதாக இன்னோர் அர்த்தம் இருக்கிறதா? கொஞ்சம் துப்(ம்)பு துலக்க முயற்சி செய்தேன்.

    ’தும்பு’ என்று நேரடியாக இல்லாவிட்டாலும், ‘தும்பு பிடுங்குதல்’ என்று ஒரு பயன்பாடு இருக்கிறதாம். அதன் பொருள் ஒருவர்மீது குற்றம் சொல்லுதல், Accusing, போட்டுக்கொடுத்தல்.

    இந்தத் தும்பு அந்த வம்புவுடன் அழகாகப் பொருந்துகிறது. ‘அவன்கிட்ட வம்பு தும்பு வெச்சுக்காதே’ என்றால், அவனை வீண் சண்டைக்கு அழைக்காதே, அவனாக ஏதாவது தப்புச் செய்தாலும் இன்னொருவரிடம் சென்று போட்டுக்கொடுக்காதே’ என்று அர்த்தம் என ஊகிக்கிறேன்.

    சரிதானா? உங்களுடைய விளக்கங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!

    ***

    என். சொக்கன் …

    31 12 2012

    030/365

     
    • Rie 2:40 pm on December 31, 2012 Permalink | Reply

      சீவக சிந்தாமணியில் இருக்குதாம் இந்த வார்த்தை. “தும்பறப் புத்தி சேன சொல்லிது குரவற் கென்ன”. தும்பு அற இது சொல், அதாவது குழப்பாமல் தெளிவாகச் சொல்.

    • elavasam 11:40 am on January 1, 2013 Permalink | Reply

      ஐயா

      என்னிடம் உள்ள அகராதியில் தும்பு என்ற சொல்லுக்குப் பொருளாக இப்படி இருக்கிறது.

      தும்பு (p. 536) [ tumpu ] , s. fibre of vegetables; stings, நார்; 2. a rope to tie beasts with கயிறு; 3. a button; 4. dust, தும்; 5. a fringe to a shawl; 6. blemish, a fault, குற்றம்.

      தூசு தும்பில்லாது எனச் சொல்லும் பொழுது 4. dust என்பது பொருத்தமாக இருக்கிறது. வம்பு தும்பு எனும் பொழுது கடைசி பொருளான குற்றம் என்பது சரியாக வருகிறது.

    • ச.சொக்கப்பா 9:58 am on June 4, 2021 Permalink | Reply

      அருமை. நல்ல ஆராய்ச்சி. பல சொற்களைப் பொருள் தெரியாமல் பயன் படுத்தும் தேவை இனி இல்லை என்னும் வண்ணம் விளக்கப் பட்டமைக்கு மிக்க நன்றி

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel