Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • G.Ra ஜிரா 11:41 pm on November 28, 2013 Permalink | Reply  

    பெண்களின் பண்கள் 

    தமிழ் சினிமாவில் இரண்டு பெண்கள் சேர்ந்து பாடினால் அது ஒரே ஆணைப் பற்றியதாக மட்டுமே இருக்கும். இது ஆண்டாண்டு காலமாக மாறாத விதி. விதிவிலக்குப் பாட்டுகள் உண்டு என்றாலும் கதையில் இரண்டு பெண்கள் இருந்தால் ஒரு ஆண் என்று முக்கோணக் காதலை வைப்பது இன்றைக்கும் இயக்குனர்களுக்கு மிகவும் பிடித்த செயல்.

    வழக்கம் போல முதலில் நினைவுக்கு வருவது கவியரசர் தான். இதைச் சொல்வது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டது. பாதகாணிக்கை படத்தில் இரண்டு பெண்கள் ஒருவனையே நினைத்துப் பாடுவார்கள்.

    உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
    உனது நிலா விண்ணிலே எனது மலர் கண்ணிலே

    எப்படி அடித்துக் கொள்கிறார்கள் பார்த்தீர்களா? ஒருத்தி அத்தை மகளாகப் பிறந்தவள். இன்னொருத்தி அவனோடு உறவாக வளர்ந்தவள். அதையும் போட்டியில் இழுத்துவிடுகிறார்கள்.

    ஒருத்தி: பிறந்த போது பிறந்த சொந்தம் இருந்ததம்மா நினைவிலே
    இன்னொருத்தி: வளர்ந்த போது வளர்ந்த சொந்தம் வளர்ந்ததம்மா மனதிலே

    அடுத்ததாக கவிஞர் வாலி இரண்டு பெண்களை சண்டை போட வைக்கப் போகிறார். அந்த இரண்டு பெண்களையும் ஏமாற்றியது ஒருவன் தானோ என்று அவர்கள் பாடுகிறார்கள்.

    ஒருத்தி: மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
    நிலவுக்கு வானம் பகையானல் அது நடந்திட வேறே வழி ஏது
    இன்னொருத்தி: பறவைக்குச் சிறகு பகையானால் அது பதுங்கி வாழ்ந்திட கால்களுண்டு
    உறவுக்கு நெஞ்சே பகையானால் மண்ணில் பெருகிட வகையேது

    அவர்கள் இரண்டு பேர்களின் வாழ்க்கையையும் ஒருவன் ஏமாற்றி அழித்து விட்டது போல ஒப்பாரி. ஆனாலும் இனிய பாடல்.

    அடுத்து நாம் பார்க்கப் போவது ஒருவருக்குத் தெரியாமல் ஒரே ஆணை விரும்பிய இரண்டு தோழிகளை. ஆனால் ஒருத்தியின் காதல்தான் கைகூடுகிறது. சில நாட்கள் கழித்து ரகசியம் தோழிக்குத் தெரிந்து விடுகிறது. தோழியின் ஆசையைத் திருடிவிட்டோமோ என்று அவளுக்கு ஒரு வருத்தம். தோழியர் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டிருந்தாலும் புரியாதது போலவே பாடுகிறார்கள். நீங்களே பாட்டைப் பாருங்கள்.

    ஒருத்தி:
    அடி போடி பைத்தியக்காரி
    நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா

    இன்னொருத்தி
    அடி போடி பைத்தியக்காரி
    நான் புரிந்தவள் தான் உன்னைத் தெரிந்தவள் தான்

    இவர்கள் நல்ல தோழிகள். சண்டையிட்டுக் கொள்ளவில்லை. தன் காதல் வெற்றி பெற்றதே என்று எண்ணாமல் தோழியில் காதல் தோற்றுப் போனதே என்று வருந்திப் பாடுகிறாள் ஒருத்தி.

    இறைவன் ஒரு நாள் தூங்கிவிட்டான்
    எழுத்தைக் கொஞ்சம் மாற்றிவிட்டான்

    இப்படியெல்லாம் யார் எழுதியிருப்பார்கள்? வேறு யார்? கவியரசரேதான்.

    இன்னும் இரண்டு பேர்கள் இருக்கிறார்கள். இவர்களும் தோழிகள். இவர்கள் இருவரையும் திருமணம் செய்தவன் ஒருவனே. ஆனால் அது இருவருக்குமே தெரியாது. அந்த உண்மை தெரியாமல் இருவரும் சேர்ந்து சுமங்கலி பூஜை செய்கிறார்கள்.

    மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
    மங்கல மங்கை மீனாட்சி
    உள்ளம் ஒருவன் சொந்தம் என்றாள்
    தேவி எங்கள் மீனாட்சி

    பாவம். பின்னால் அவர்கள் உண்மை தெரிந்து கொதிக்கப் போவதை அப்போது அறியாமல் பாடியிருக்கிறார்கள். இதே கதை பின்னால் கற்பூரதீபம் என்ற பெயரில் வந்தது. அங்கும் உண்மை தெரியாமல் இரண்டு தோழிகளும் பூஜை செய்கிறார்கள்.

    காலகாலமாய்ப் பெண் தானே கற்பூர தீபம்
    காவல் கொண்ட மன்னன் தானே தெய்விக ரூபம்

    இரண்டு பெண்டாட்டிக்காரன் கதைகள் என்றால் மக்களுக்குப் பிடித்திருக்கிறது என்றே தோன்றுகிறது. நம்மூர் சாமிகளே அப்படித்தானே!

    இவர்களாவது திருமணம் ஆனவர்கள். திருமணம் ஆகும் முன்னமே அக்காவும் தங்கையும் ஒருவனையே நினைத்துப் பாடிய கதைகளும் உண்டு. நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தைத்தான் சொல்கிறேன். இந்த முறை பாட்டெழுதியது கவிஞர் வைரமுத்து.

    மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு
    தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு

    இந்த வரிசையில் இருகோடுகள் திரைப்படத்தை எப்படி மறக்க முடியும்? வாலியின் வார்த்தை விளையாட்டுகளில் ஒளிரும் “புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்” பாட்டை விட்டு விட்டு இந்தப் பதிவை எழுத முடியுமா? சாமிகளையே சண்டைக்கு இழுத்துப் பாடிய பாட்டாயிற்றே.

    அவள்: தேவன் முருகன் கோயில் கொண்டது வள்ளியின் நெஞ்சத்திலே
    இவள்: அவன் தெய்வானை என்றொரு பூவையை மணந்தது திருப்பரங்குன்றத்திலே

    வள்ளியும் தெய்வானையும் கூட இப்படிச் சண்டை போட்டிருக்க மாட்டார்கள்!

    இன்னொரு அக்கா தங்கையைப் பார்க்கப் போகிறோம். அக்காவுக்குப் பார்த்த மாப்பிள்ளை அவன். ஆனால் திருமணம் நின்றுவிடுகிறது. தங்கையோடு அவனுக்குக் காதல் உண்டாகிறது. அப்போது அவர்களுக்குள் போட்டிப் பாட்டு வைக்காமல் இருக்க முடியுமா?

    ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
    திருமாலைத்தானே மணமாலை தேடி
    எந்த மங்கை சொந்த மங்கையோ
    ஓ எந்த கங்கை தேவ கங்கையோ

    போன பாட்டில் முருகன் மாட்டிக் கொண்டால் இந்தப் பாட்டில் மகாவிஷ்ணு மாட்டிக் கொண்டார். அவருக்கும் இரண்டுதானே!

    இன்னும் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிச் சொல்லாமல் பதிவை முடிக்க விரும்பவில்லை. அவன் அவளைத்தான் விரும்பினான். விதி பிரித்தது. அத்தை மகளை மணந்தான். மகிழ்வாகத்தான் இருந்தான். போனவள் வந்தாள். பிரச்சனையும் வந்தது. அத்தை மகளோ அப்பாவி. தெரியாத்தனமாக “ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அவளைக் கேட்டு விடுகிறாள்.” உடனே ஒரு பாட்டு.

    கடவுள் தந்த இருமலர்கள்
    கண் மலர்ந்த பொன் மலர்கள்
    ஒன்று பாவை கூந்தலிலே
    ஒன்று பாதை ஓரத்திலே

    சோகத்தைக் கூட அழகாகச் சொல்லியிருக்கிறார்கள் கவிஞர்கள். அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.

    இந்தச் சக்களத்திச் சண்டை பழைய படங்களோடு முடிந்து போகவில்லை என்று நிருபிக்க வந்ததோ பஞ்சதந்திரம் திரைப்படம்! ஒருத்தி மனைவி. இன்னொருத்தி மனைவியாக நடிப்பவள். அவர்களுக்குள் ஒரு போட்டிப் பாட்டு.

    வந்தேன் வந்தேன் மீண்டும் மீண்டும் வந்தேன்
    வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
    எனது கனவை எடுத்துச் செல்ல வந்தேன்

    நல்லவளைப் போல அமைதியாகப் பாடுகிறாள் நடிக்க வந்தவள். கட்டிக் கொண்டவள் சும்மா இருப்பாளா? புலியாய்ப் பாய்கிறாள்.

    பந்தியில பங்கு கேட்டா விட்டு தருவேன்
    என் முந்தியில பங்கு கேட்டா வெட்டிப் புடுவேன்
    அடி கண்டவளும் வந்து கைய வைக்க
    அவர் கார்பரேஷன் பம்ப் அல்ல

    இவர்கள் கதை இப்படியிருக்க இன்னும் இரண்டு பெண்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அவர்களைப் பற்றிச் சொல்லவில்லை என்றால் இந்தப் பதிவு முழுமை பெறவே பெறாது. ஒருத்தி மேடையில் ஆடிக் கொண்டிருக்கிறாள். அந்த ஆட்டத்தை இன்னொருத்தி விரும்புகிறவன் ரசிக்கிறான். அதை இன்னொருத்தியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவளும் மேடையில் குதித்து சரிக்குச் சரி ஆடுகிறாள். சபாஷ் சரியான போட்டி என்று தமிழுலகம் ரசித்த பாடல் இது.

    முதலாமவள் அமைதியாகத்தான் ஆடுகிறாள். பாடுகிறாள்.

    கண்ணும் கண்ணும் கலந்து இன்பம் கொண்டாடுதே
    என்னும் போதே உள்ளம் பந்தாடுதே

    அடுத்தவள் ஆங்காரமாக வரும் போதே ஆர்ப்பாட்டமாகத்தான் பாடுகிறாள்.

    ஜிலுஜிலுஜிலுவென நானே ஜெகத்தை மயக்கிடுவேனே
    கலகலகலவென்று ஜோராய் கையில் வளை பேசும் பாராய்

    இன்னொருத்தி வந்ததும் முதலாமவள் தன்மானம் உரசப்படுகிறது. அவளும் போட்டியில் குதிக்கிறாள்.

    ஆடும் மயில் எந்தன் முன்னே என்ன ஆணவத்தில் வந்தோயோடி
    பாடுங்குயில் கீதத்திலே பொறாமை கொண்டு படமெடுத்து ஆடாதேடி

    பார்த்தீர்களா… தான் விரும்புகிறவன் இன்னொருத்தியின் நடனத்தை ரசித்தான் என்று தெரிந்ததும் ஆடல் அரங்கத்தைப் போட்டி போடல் அரங்கமாக மாற்ற பெண்களால்தான் முடியும்.

    எது எப்படியோ! காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறினாலும்… கவிஞர் முத்துலிங்கம் எழுதியதைப் போல “என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான்” என்று இரண்டு பெண்கள் சண்டையிட்டுக் கொண்டால் அதை மக்கள் ரசிக்கத்தான் செய்வார்கள் என்பது மட்டும் மாறவே மாறாது போல!

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

    பாடல் – உனது மலர் கொடியிலே
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.இராமமூர்த்தி
    படம் – பாதகாணிக்கை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=grVbM9WJZks

    பாடல் – மலருக்குத் தென்றல் பகையானால்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன், டி.கே.இராமமூர்த்தி
    படம் – எங்க வீட்டுப் பிள்ளை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=jlGlD41oxJg

    பாடல் – அடி போடி பைத்தியக்காரி
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – தாமரை நெஞ்சம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=gxU3uBgng-E

    பாடல் – மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – ஜிக்கி, எஸ்.ஜானகி
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – தேனும் பாலும்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=KzcZFwOZSuk

    பாடல் – காலம் காலமாய் பெண் தானே
    வரிகள் – கங்கையமரன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, எஸ்.ஜானகி
    இசை – கங்கையமரன்
    படம் – கற்பூரதீபம்
    பாடலின் சுட்டி – http://youtu.be/SeZ6Z5ysm20

    பாடல் – மல்லிகையே மல்லிகையே
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர்கள் – அனுராதா ஸ்ரீராம், சித்ரா
    இசை – தேனிசைத் தென்றல் தேவா
    படம் – நினைத்தேன் வந்தாய்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Nu3uPoeEuss

    பாடல் – ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, வாணி ஜெயராம்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – தேவியின் திருமணம்
    பாடலின் சுட்டி – http://www.inbaminge.com/t/d/Deiviyin%20Thirumanam/Sridevi%20Varam%20Ketkiral.vid.html

    பாடல் – கடவுள் தந்த இருமலர்கள்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – இருமலர்கள்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=X7RxuQ4tUwU

    பாடல் – புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – ஜமுனாராணி, பி.சுசீலா
    இசை – வி.குமார்
    படம் – இருகோடுகள்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=hCR7rD4-K7c

    பாடல் – வந்தேன் வந்தேன் மீண்டும்
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர்கள் – நித்யஸ்ரீ, சுஜாதா
    இசை – தேனிசைத் தென்றல் தேவா
    படம் – பஞ்சதந்திரம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=sErsh9Kg7bk

    பாடல் – கண்ணும் கண்ணும் கலந்து
    வரிகள் – கொத்தமங்கலம் சுப்பு
    பாடியவர்கள் – ஜிக்கி, பி.லீலா
    இசை – சி.இராமச்சந்திரா
    படம் – வஞ்சிக்கோட்டை வாலிபன்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=AMotc9NQ9B8

    பாடல் – என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான்
    வரிகள் – கவிஞர் முத்துலிங்கம்
    பாடியவர்கள் – பி.எஸ்.சசிரேகா, எஸ்.பி.ஷைலஜா
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – கோபுரங்கள் சாய்வதில்லை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=_XjWcWHbB7A

    அன்புடன்,
    ஜிரா

    361/365

     
    • prabakar 6:42 am on November 29, 2013 Permalink | Reply

      படம் பெயர் நினைவில் இல்லை.கே.ஆர். விஜயாவும் ஜெயசுதாவும் பாடியிருக்கும் பாட்டு. அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து தீபம். எப்படி வேண்டுமானாலும் பெண்கள் வாழலாம் என்பதற்கும் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை கவிஞர் கண்ணதாசன் அருமையாக கூறியிருப்பார். கோடி பெண்களை பூமி கண்டது தெய்வமானவள் சீதை. என்ற அற்புதமான வரிகள் உள்ள பாடல் இந்த பாடலில் ஆண் நாயகன் குறித்து பாடப் படவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

    • Uma Chelvan 7:33 am on November 29, 2013 Permalink | Reply

      இரண்டு பெண்கள் ஒரு ஆணுக்காக பாடியது போலவே, இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணுக்காக ஏங்கி பாடியதும் உண்டே.!!! நம்ம அல்லா ரெக்ஹா இசையில் அருமையான “சஹானா” ராகத்தில் .

      என்னை கேட்டு காதல் வரவில்லையே ,
      நான் சொல்லி காதல் விடவில்லையே !!
      மறந்தாலும் காதல் மறக்காதம்மா !!

      ஒ வெண் நிலா …..இரு வானிலா !!

    • kamala chandramani 8:31 am on November 29, 2013 Permalink | Reply

      பன்னிரண்டு பாடல்கள் ஒரே பதிவில் முதன்முறையாக? என்ன ஆராய்ச்சி? நிஜமாகவே என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. வாழ்த்துகள் ஜி.ரா.

    • umakrishh 9:56 am on November 29, 2013 Permalink | Reply

      நல்ல ஆராய்ச்சி..:) புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக பாமா விஜயம்..அப்புறம் மல்லுவேட்டி மைனர் ல கூட ஒரு பாடல் வருமே..

    • rajinirams 10:05 am on November 29, 2013 Permalink | Reply

      ஆஹா,சான்சே இல்லை சார்.செம பதிவு.பாராட்டுக்கள்.நீங்கள் தேர்ந்தெடுத்த பெண்களின் பண்கள் எல்லாமே அருமை. என்னை நெகிழ வைக்கும் இன்னொரு பாடல் சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் பாட முடியாமல் தவிக்கும் பெண்ணிற்காக “மீரா”என்று பாடலை தொடரும் “பல்லவி ஒன்று மன்னன்” பாடல்.கே.பாலசந்தரின் இயக்கத்திலேயே இன்னொரு பாடல் வெள்ளி விழாவில் “கை நிறைய சோழி”பாடல்.டபுள்ஸ் படத்திலும் வைரமுத்துவில் ஒரு பாடல் நன்றாக இருக்கும்-ராமா ராமா ராமா என்று ஒரு பெண்ணும்,கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா என்று ஒருவரும் பாடும் பாடல். நன்றி.

    • பாலராஜன்கீதா 11:55 am on November 29, 2013 Permalink | Reply

      கந்தன் கருணை – மனம் படைத்தேன் (கே.ஆர்.வி – ஜெ.ஜே) 🙂

    • amas32 7:13 pm on November 29, 2013 Permalink | Reply

      இந்தப் பதிவு முடிவுக்கு வரும் சமயத்தில் சான்சே இல்லாமல் ஒரு சூப்பர் போஸ்ட் 🙂 எந்தப் பாட்டையும் விடு வைக்கவில்லை. ரசிகர்களுக்கு ஒரு கல்யாண சமையல் விருந்தே பரிமாறி விட்டீர்கள். இன்னும் சொல்ல என்ன இருக்கு! அற்புதம் 🙂

      இத்தனைப் பாடல்களிலும் என் மனத்தில் நிற்கும் பாடல் என்னவோ புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் மட்டுமே. அதற்குப் பல காரணங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.

      இன்னும் திரும்ப வந்து உங்கள் பதிவை பொறுமையாக இரண்டு முறை படிக்க வேண்டும் 🙂

      amas32

    • ராஜேஷ் 1:29 am on December 4, 2013 Permalink | Reply

      பாடல் – மல்லிகையே மல்லிகையே
      வரிகள் – கவிஞர் வைரமுத்து
      பாடியவர்கள் – அனுராதா ஸ்ரீராம், சித்ரா
      இசை – தேனிசைத் தென்றல் தேவா
      படம் – நினைத்தேன் வந்தாய்

      வரிகள் பழநிபாரதி

    • santhosh 10:47 am on August 8, 2021 Permalink | Reply

      hi sir ,
      I would like to talk with u for some ideas, kindly if u wish pls contact me-9585504287

  • என். சொக்கன் 11:51 pm on August 28, 2013 Permalink | Reply  

    கொடிமேல் காதல் 

    • படம்: கிழக்கே போகும் ரயில்
    • பாடல்: மாஞ்சோலைக் கிளிதானோ
    • எழுதியவர்: முத்துலிங்கம்
    • இசை: இளையராஜா
    • பாடியவர்: ஜெயச்சந்திரன்
    • Link: http://www.youtube.com/watch?v=6CPH_pnHqB8

    மஞ்சம் அதில், வஞ்சிக்கொடி வருவாள்,

    சுகமே தருவாள், மகிழ்வேன்,

    கண் காவியம் பண் பாடிடும் பெண்ணோவியம்,

    செந்தாமரையே!

    வஞ்சிக்கொடி என்பது பல பாடல்களில் பெண்களுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் உவமை.

    மற்ற பல கொடிகளைப்போலவே, வஞ்சியும் மெலிதானது, எளிதாகத் துவள்வது. ஆகவே, இடை சிறுத்த கதாநாயகிகளை வர்ணிக்கும் தேவை ஏற்படும்போதெல்லாம் கவிஞர்கள் வஞ்சிக்கொடியை அழைத்துவிடுவார்கள்.

    உதாரணமாக, பாரதிதாசனின் அருமையான காதல் பாடல் ஒன்று, ‘வஞ்சிக் கொடி போல இடை அஞ்சத்தகுமாறு உளது!’ என்று தொடங்கும்.

    பொதுவாக எல்லாருக்கும் காதலி இடையைப் பார்த்தால் ஆசை வரும். ஆனால், பாரதிதாசனுக்கு அச்சம் வருகிறது, ‘உன் இடுப்பைப் பார்த்து நான் பயந்தேபோய்ட்டேன் தெரியுமா?’ என்கிறார்.

    ஏன் அப்படி? பொண்ணு செம குண்டோ? காதல் பரிசாக ஒட்டியாணம் செய்து தரச் சொல்லிவிடுவாளோ என்று நினைத்துக் கவிஞர் பயந்துவிட்டாரோ?

    அந்தச் சந்தேகமே வரக்கூடாது என்பதற்காகதான், ‘வஞ்சிக்கொடி போல இடை’ என்கிறார் பாரதிதாசன். ‘இத்தனை மெல்லிய இடையா’ என்றுதான் அவருக்கு அச்சம்!

    அதோடு நிறுத்தவில்லை, தொடர்ந்து கண்களுக்கு உவமையாக என்னவெல்லாம் வருமோ அத்தனையையும் அடுக்குகிறார், பின்னர், ‘ம்ஹூம், உனக்கு இணையாக எதையும் சொல்லமுடியாது’ என்று கை தூக்கிவிடுகிறார். சந்தம் கொஞ்சும் அந்த அழகான பத்தி முழுமையாக இங்கே:

    வஞ்சிக்கொடி போல இடை

    அஞ்சத் தகுமாறு உளது!

    நஞ்சுக்கு இணையோ, அலது

    அம்புக்கு இணையோ, உலவு

    கெண்டைக்கு இணையோ, கரிய

    வண்டுக்கு இணையோ விழிகள்!

    மங்கைக்கு இணை ஏது உலகில்,

    அம் கைக்கு இணையோ மலரும்?

    ஆனால், கிட்டத்தட்ட இதேமாதிரிதானே கொடி இடை, நூலிடை, துடி இடை என்றெல்லாம் இடுப்பை வர்ணிப்பார்கள்?

    உண்மைதான். ஆனால் அவற்றுக்கு இல்லாத ஒரு சிறப்பு ‘வஞ்சி’க்கு உண்டு. இடுப்பைமட்டுமல்ல, ஒரு பெண்ணையே ‘வஞ்சி’ என்று அழைப்பதும் உண்டு.

    இதற்கு உதாரணமாக, ‘குற்றாலக் குறவஞ்சி’ என்ற நூலே இருக்கிறது. அதன் பொருள், குற்றாலம் என்கிற பகுதியில் வாழ்கிற, குறவர் இனத்தைச் சேர்ந்த, வஞ்சி போன்ற ஒருத்தி.

    சினிமாப் பாட்டு உதாரணம்தான் வேண்டுமா? அதுவும் நிறைய உண்டு. ‘வண்ணக்கிளி சொன்ன மொழி, என்ன மொழியோ? வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ!’

    ஆக, ஒரு பெண், அவளுடைய மெலிதான இடுப்பு, அதற்கு உவமை வஞ்சி, அதுவே அந்தப் பெண்ணையே அழைக்கும் பெயராகிவிடுகிறது. ஆகவே, இலக்கண அறிஞர்காள், இது சினையாகுபெயரா, உவமையாகுபெயரா, அல்லது சினையுவமையாகுபெயர் என்று ஒன்றை உருவாக்கவேண்டுமா? 🙂

    ***

    என். சொக்கன் …

    28 08 2013

    270/365

     
    • Murugesan 7:05 am on August 29, 2013 Permalink | Reply

      நல்ல பதிவு நன்றி திரு.சொக்கன். வஞ்சி கொடிக்கு அருமையான விளக்கம் இப்பாடலை வைத்து.

    • rajinirams 12:12 pm on August 30, 2013 Permalink | Reply

      வஞ்சி கொடி யை விளக்கிய நல்ல பதிவு.இந்த வஞ்சி மகள் ஒரு ஊதாப்பூ என்ற வாலியின் பாடலும் வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்னும் என்ற டி.ஆரின் வரிகளும் நினைவிற்கு வருகிறது. “வஞ்சி”என்ற வார்த்தைக்கு ஏமாற்றுவது என்ற பொருளும் உண்டு.அப்படி ஏமாற்றும் கட்சி கொடியை “வஞ்சி கொடி”என்று சொல்லலாமோ:-)))

    • amas32 6:14 pm on September 2, 2013 Permalink | Reply

      அப்போ நான் “வஞ்சி” இல்லை :-)) துடி இடையாளும் இல்லை வஞ்சிப்பவலும் அல்லள் 🙂

      ஆனால் என் பழைய புகைப்படங்கள் வஞ்சியாக் இருந்திருக்கிறேன் என்று பறைசாற்றும் 🙂

      amas32

  • G.Ra ஜிரா 11:48 pm on August 6, 2013 Permalink | Reply  

    பட்டை(யை)க் கிளப்புதல் 

    பெண்ணின் சருமத்து மென்மையை பாட்டில் எழுதச் சொன்னால் பெரும்பாலான கவிஞர்கள் பட்டைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

    பட்டுக் கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும் (முத்துலிங்கம், காக்கிச் சட்டை, இளையராஜா)
    சீனத்துப் பட்டுமேனி இளம் சிட்டு மேனி (வாலி, தாய்மூகாம்பிகை, இளையராஜா)
    பட்டுப் பூவே மெட்டுப் பாடு (முத்துலிங்கம், செம்பருத்தி, இளையராஜா)
    பட்டு வண்ண ரோசாவாம் (புலமைப்பித்தன், கன்னிப் பருவத்திலே, சங்கர்-கணேஷ்)
    பட்டினும் மெல்லிய பூவிது (கண்ணதாசன், ஞாயிறும் திங்களும், எம்.எஸ்.விசுவநாதன்)

    இன்னும் எத்தனையெத்தனையோ பாடல்கள்.

    பட்டுத் துணியின் மென்மையும் பளபளப்பும் பெண்ணின் சருமத்தோடு ஒப்பிடச் சிறந்ததுதான்.

    அதனால் தானோ என்னவோ பட்டு என்றாலே பெண்களுக்கு அவ்வளவு பிடிக்கிறது. ஊருக்கு ஊர் எத்தனை பட்டுச்சேலைக் கடைகள். சென்னையை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். தியாகராய நகர் உஸ்மான் சாலை ஒன்று போதுமே தமிழ்ப் பெண்களின் பட்டு மோகத்தை எடுத்துக் எடுத்துக்காட்ட.

    அதை விடுங்கள். பட்டு என்று பெண்களுக்குப் பெயர் வைக்கும் வழக்கமும் முன்பு இருந்திருக்கிறதே. பருத்தி கம்பளி என்றெல்லாம் பெண்களுக்கோ ஆண்களுக்கோ பெயர் வைக்கும் வழக்கமே இல்லையே! ஆங்கிலத்தில் சில்க் என்றால் தமிழர்களுக்கு நினைவுக்கு வருவது நடிகை சில்க் சுமிதா தானே! அதுதான் பட்டின் வெற்றி.

    கந்தன் கருணை திரைப்படத்தில் சிவனிடம் பார்வதி சொல்வதாக “பெண்ணாகப் பிறந்து விட்டால் பட்டாடைகளும் பொன்னாபரங்களும் போதும் என்று சொல்வாளா சுவாமி” என்று ஒரு வசனம் உண்டு.

    பார்வதி தேவியையே பட்டுத்துணி பற்றிப் பேச வைத்த பெருமை தமிழர்களையே சாரும். சகோதரி வழியில் சகோதரனாகிய பாற்கடல் சீனிவாசன் கட்டியிருப்பதும் பட்டுப் பீதாம்பரம் தானாம்.

    பட்டுத்துணி சீனாவிலிருந்து வந்தது என்று படித்திருக்கிறோம். கேள்விப்பட்டிருக்கிறோம். பாசமலர்களான பார்வதியும் பரந்தாமனும் சீனாக்காரர்களா என்று சோதிக்க வேண்டும். பார்வதி இமவான் மகள். இமயத்தின் உச்சி இன்று சீனாவில்தான் இருக்கிறது. அதே போல பாற்கடலும் அங்குதான் இருக்க வேண்டும்.

    அப்படியானால் தமிழர்களுக்கு பட்டு பற்றியெல்லாம் சமீபத்தில்தான் தெரியுமா? தமிழ் மக்கள் எவ்வளவு காலமாக பட்டுத்துணியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்? பட்டு என்ற சொல் சங்க இலக்கியங்களில் உள்ளதா? இந்த மூன்று கேள்விகள்தானே அடுத்து நமக்குத் தோன்றுகின்றன.

    பட்டு பழந்தமிழர் அறிந்த துணிவகையே. சங்க இலக்கியங்களில் இதற்குக் குறிப்புகள் உள்ளன. ஆனால் பெயர்தான் வேறு.

    பட்டுத்துணிக்குப் பழந்தமிழர் கொடுத்த பெயர் நூலாக் கலிங்கம். அதாவது நூற்காத துணி.

    ஏன் அந்தப் பெயர்? பருத்தியிலிருந்து நூல் உண்டாக்கும் முறையும் பட்டுநூலை உண்டாக்கும் முறையும் வெவ்வேறு.

    மென்மையான பஞ்சுப் பொதியைத் திரித்து மெலிதாக்கி ராட்டையின் உதவியால் நூலாக்குவார்கள். ஆனால் பட்டுநூலை அப்படித் திரிப்பதில்லை. கொதிக்கின்ற நீரில் பட்டுப்புழுக்களின் கூடுகளைப் போட்டு பட்டு இழையை அப்படியே உருவி விடுவார்கள். இணையத்தில் பட்டுநூல் உருவும் முறைக்கு நிறைய காணொளிக் காட்சிகள் உள்ளன. தேடிப் பார்த்தால் நான் சொல்வது புரியும்.

    பருத்தி நூலோ கம்பளி நூலோ இந்த வகையில் செய்யப்படுவதில்லையே. ஆகையாதால் பட்டுத் துணிக்கு நூலாக் கலிங்கம் என்று பெயர்.

    அன்புடன்,
    ஜிரா

    248/365

     
    • amas32 8:28 am on August 7, 2013 Permalink | Reply

      அதனால் தான் பட்டை உடுத்த வேண்டாம் என்று பரமாச்சாரியார் அறிவுறுத்தினார். அனால் கேட்பவர்கள் யார்? அவரை தரிசிக்க வந்தவர்கள் காஞ்சிபுரத்தில் கல்யாணத்துக்குப் பட்டுப் புடவை வாங்க வந்தோம் அப்படியே உங்களையும் வணங்கி விட்டுச் செல்ல வந்திருக்கிறோம் என்று அவரிடமே கூறுவார்களாம்!

      ஆனால் பட்டுக்கு இருக்கும் மென்மையும் பளபளப்பும் பணக்காரத் தன்மையும் வேறு எந்த துணிக்கும் இல்லை என்பது உண்மை. அதனால் தான் பட்டு பெண்களின் அங்கங்களுக்கு உவமையகிறது.

      amas32

    • rajinirams 10:22 am on August 7, 2013 Permalink | Reply

      வித்தியாசமான பதிவு.வழக்கம் போலவே கலக்கியிருக்கிறீர்கள்.பட்டுச்சேலை காத்தாட.காஞ்சி பட்டுடுத்தி என்று பட்டு சேலை பற்றியும்.பட்டு வண்ண சேலைக்காரி என்று காதலியையும் நீங்கள் சொன்னது போல நிறைய வர்ணித்து இருக்கிறார்கள். நீ பட்டுப்புடவை கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும் என்பது வைரமுத்துவின் உட்சபட்ச வர்ணனை:-)) நன்றி.

      • amas32 4:26 pm on August 7, 2013 Permalink | Reply

        ‘பட்டுப்புடவை கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும் என்பது வைரமுத்துவின் உட்சபட்ச வர்ணனை:-))” அழகாக சொல்லியுள்ளார்!
        amas32

    • Saba-Thambi 10:34 am on August 7, 2013 Permalink | Reply

      நன்றாக பட்டை(யை)க் கிளப்பியிருக்கிறீர்கள். 🙂

      உங்கள் பதிவு – பட்டு நெசவாளர்களின் திரைப்படத்தை நினைவூட்டுகிறது. Pirakash Raj நடித்த படம். பெயர் நினைவில் இல்லை.

    • kamala chandramani 4:30 pm on August 7, 2013 Permalink | Reply

      பட்டுப் புடவை, தங்க நகை இரண்டையும் பெண்களால் விட முடிவதில்லை. ஒரு முறை பட்டுப் புழு வளர்க்கும் கூட்டுறவு நிலையம் போய்ப் பார்த்தால் வெறுத்து விடுவார்கள். ஆனாலும் -பிரிக்க முடியாதவை பெண்களும் பட்டும்தான்!

  • G.Ra ஜிரா 12:18 pm on August 3, 2013 Permalink | Reply  

    திகிலோ திகில் 

    முன்னெச்சரிக்கை – பலவீனமானவர்கள் இந்தப் பதிவைப் படிப்பதைத் தவிர்க்கவும். பின்னால் என்னைக் குற்றம் சொல்லக்கூடாது.

    இருக்கிறதா? இல்லையா?

    எது?

    பேய்தான்.

    என்னதான் சொல்லுங்கள். பேய் பிசாசு என்று சொல்லும் போது ஏதோ ஒரு இனம் புரியாத திகில் மனதில் உண்டாகத்தான் செய்கிறது. அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் இருட்டுப் பகுதிகளில் அந்தத் திகிலின் அளவு கூடும்.

    அப்படிப் பட்ட நிலையில் ஒரு கவிஞரை அழைத்து, “நீங்கள் பாட்டெழுத வேண்டும். திரைப்படத்தில் அந்தப் பாட்டைப் பாடப் போவது ஒரு பேய்” என்று சொன்னால் அவர்கள் என்ன எழுதியிருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தேன். தமிழ்த் திரைப்படங்களில் பேய்கள் பாடிய பாடல்கள் எல்லாம் கண்முன் ஒரு நிமிடம் வந்து சென்றன.

    சிலிர்த்துப் போன முதுகுத் தண்டோடு அந்த பாடல் வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். என்னைப் போல் இல்லாமல் நீங்கள் துணிச்சலாக இருக்க வேண்டும். சரியா?

    வேறுவழியே இல்லாமல் கண்ணதாசனைத்தான் வழக்கம் போல முதலில் பார்க்க வேண்டியிருக்கிறது. நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தில் அவர் எழுதிய பாடலை மக்கள் நெஞ்சம் மறப்பதில்லை.

    நெஞ்சம் மறப்பதில்லை
    அது நினைவை இழப்பதில்லை
    காத்திருந்தேன் எதிர்பார்த்திருந்தேன்
    கண்களும் மூடவில்லை
    என் கண்களும் மூடவில்லை

    இந்தப் பாடலுக்காக எம்.எஸ்.விசுவநாதன் அதிக நாட்கள் எடுத்துக் கொண்டாராம். அமானுஷ்யம் மட்டும் இல்லாமல் பாடலில் காதலும் வரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த மெனக்கிடல். பி.சுசீலாவின் குரலில் கண்ணதாசன் வரிகள் ஒருவித மர்மத்தையும் திகிலையும் கிளப்பிவிடுவது உண்மைதான்.

    யார் நீ படத்திலும் ஒரு பாடல். அவன் பூங்காவில் அமர்ந்திருக்கிறான். அருகில் ஒரு ஏரி. அது மலைப்பகுதி. மெல்லிய பனி மூடியிருக்கிறது. குரல்களிலெல்லாம் இனிய குரல் உருவமில்லாமல் ஒலிக்கிறது. யாருமில்லாத படகு ஏரியில் தானக நகர்கிறது. அந்தப் படகிலிருந்தால் குரல் வருகிறது. ஆனால் யாரும் இல்லை. பாடும் குரலில் ஒரு ஏக்கம். அந்த ஏக்கத்துக்கான வரிகளைக் கண்ணதாசன் இப்படி எழுதுகிறார்.
    நானே வருவேன் இங்கும் அங்கும்
    உன் மங்கல மாலைப் பெண்ணாக
    உன் மஞ்சள் குங்குமம் மலராக
    நான் வந்தேன் உன்னிடம் உறவாட

    கணவனோடு இன்பமாக வாழ்ந்து கொண்டிருந்த ஒருத்தி இறந்து போகிறாள். இல்லை இல்லை. இறந்தாள். ஆனால் போகவில்லை. அவளில்லாமல் கணவன் படும்பாட்டை அவளால் காணச் சகிக்கவில்லை. ஆவியாய் வருகிறாள். ஆனால் ஆறுதலாய் வருகிறாள். அழுகின்ற கணவனை சமாதானப் படுத்துகிறாள். இந்தக் காட்சிக்கு மெல்லிசை மன்னரின் இசைக்கு வரிகளைக் கொடுத்தது வாலி. குரலைக் கொடுத்தது பி.சுசீலா.
    மன்னவனே அழலாமா
    கண்ணீரை விடலாமா
    உன்னுயிராய் நானிருக்க
    என்னுயிராய் நீயிருக்க

    குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும். அதிலும் கொலைக்குற்றம் செய்தவர் நெஞ்சம்? அதிலும் இறந்தவர் ஆவியாய் வந்தால்? அப்படி ஒரு நிலையில் மாட்டிக் கொள்கிறான் கொலை செய்தவன். விடாது துரத்துகிறது இறந்தவள் ஆவி. தன்னைக் கொன்றவன் இன்னும் உயிருடன் இருப்பதை அந்த ஆவி விரும்பவில்லை. அவன் வரவை விரும்பிக் காத்திருக்கிறது ஆவி. இந்தக் காட்சிக்கு எஸ்.எம்.சுப்பையாநாயுடு இசையில் வாலி என்ன வரிகளை எழுதியிருப்பார்?
    நீ எங்கே என் நினைவுகள் அங்கே
    நீ ஒருநாள் வரும் வரையில்
    நானிருப்பேன் நதிக்கரையில்

    என்ன இது? எல்லா பேய்ப் பாடல்களையும் சுசீலாம்மாவே பாடிவிட்டாரா? இல்லை. எழுபதுகளின் இறுதியில் எம்.எஸ்.வி ஒரு மாற்றத்தைக் கொண்டு வருகிறார். இந்த முறை பேய்க்கு குரல் கொடுத்தது எஸ்.ஜானகி. ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படத்தில் பேய்ப்பாட்டு எழுதியவர் கண்ணதாசன். கதாநாயகிக்கு மட்டும் பேய்ப்பாட்டு கேட்கிறது. ஏனென்றால் இறந்து போனவளின் காதலனை அவள்தான் திருமணம் செய்திருக்கிறாள்.
    வெண்மேகமே வெண்மேகமே
    கேளடி என் கதையை
    மோகம் சோகம் என் விரகதாபம்
    தாகத்தில் பிறக்கும் இனிய ராகம்

    எம்பதுகளின் ராஜாவான இளையராஜா இசையிலும் பேய்களுக்குப் பாட விருப்பம் இருந்திருக்கின்றன. நூறாவது நாள் படத்தில் முத்துலிங்கம் பாட்டெழுத வாணி ஜெயராமின் குரலில் வெளிவந்தது ஒரு புதுமையான பேய்ப் பாட்டு. கொலை செய்யப்பட்டு இறந்தவள் அக்காள். தன்னுடைய தங்கைக்கு கொலையைப் பற்றிய செய்தியைச் சொல்ல வருகிறாள். அக்காவே என்றாலும் ஆவி என்றால் நடுக்கம் வரத்தானே செய்யும்.
    உருகுதே இதயமே அருகிலே வா வா
    நான் பாடும் ராகம் கேட்கும் நேரம்
    ஏன் இந்த ஈரம் விழியின் ஓரம்

    குறும்புக்கார ஆவி ஒன்று. அவளைப் பாலியல் துன்பத்துக்கு ஆளாக்கிக் கொன்று விட்டார்கள் இருவர். அவளைக் கொடுமைப் படுத்தி அவர்கள் பாடிய பாடலை அவர்களுக்கே திருப்பிப் பாடுகிறது ஆவி. கங்கையமரனின் குறும்பு வரிகளில் எஸ்.ஜானகியின் குரலில் அமர்க்களம் பண்ணும் ஆவிக்கு மெட்டுப் போட்டுக் கொடுத்தவர் இளையராஜா.
    சும்மா வரவும் மாட்டேன்
    வந்தா விடவும் மாட்டேன்
    புடிச்சேன்னா புடிச்சதுதான்
    நான் நெனச்சேன்னா நெனச்சதுதான்
    மனசுக்குள்ள நெனச்சேன்னா நெனச்சதுதான்

    அது ஒரு பெரிய மாளிகை. அந்த மாளிகையில் தனியாக இருக்கப் போகிறான் ஒருவன். ஆனால் அவனை இருக்க விடாமல் விரட்டப் பார்க்கிறது ஒரு ஆவி. அவனுடைய மனதைப் பிழியும் வகையில் சோகத்தோடும் நெஞ்சுக்குள் ஊசியாய் இறங்கும் திகிலோடும் பாடுகிறது ஆவி. இந்த முறை ஆவிக்குக் குரல் கொடுத்தவர் எஸ்.ஜானகி.
    அன்பே வா அருகிலே
    என் வாசல் வழியிலே
    உல்லாச மாளிகை மாளிகை
    இங்கே ஓர் தேவதை தேவதை
    நீதானே வேண்டுமென்று ஏங்கினேன்

    நடுவிலேயே வழக்கொழிந்து போயிருந்த ஆவியை மறுபடியும் கையைப் பிடித்து திரைப்படத்துக்கு கூட்டி வந்த படம் காஞ்சனா. இந்தப் படத்தில் ஒரு திருநங்கையின் ஆவி ஒருவன் உடம்பில் ஏறிக்கொள்கிறது. அவளது குடும்பத்தை அழித்தவனைப் பழிவாங்கப் பாடுகிறது. ராகவா லாரண்ஸ் இசையில் விவேகா பேய்ப்பாட்டு எழுத பேய்க்குரல் காட்டியவர்கள் ஸ்ரீகாந்த் தேவா,எம்எல்ஆர்.கார்த்திகேயன், மாலதி.
    கொடியவனின் கதைய முடிக்க
    கொரவளையத்தேடிக்கடிக்க
    நாரு நாரா ஒடம்ப கிழிக்க
    நடுத்தெருவில் செதற அடிக்க
    புழுவப்போல நசுக்கி எரிய

    வா அருகில் வா என்றொரு படம் வந்தது. அந்தப் படத்தில் கலைவாணன் கண்ணதாசன் இசையில் எஸ்.ஜானகி குரலில் ஒரு பேய்ப்பாட்டு உண்டு. மூத்தமனைவி கொலை செய்யப்படுகிறாள். அது தெரியாமல் அவள் ஓடிப் போய்விட்டதாக நினைக்கும் கணவன். அவனுக்கு இன்னொரு திருமணமும் ஆகிறது. அப்போது தன் கணவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் பேய் பாடுகிறது. இந்தப் படத்தில் கலைவாணன் கண்ணாதாசன், பஞ்சு அருணாச்சலம், உமா கண்ணதாசன், கண்மணி சுப்பு ஆகியோர் பாட்டெழுதியிருக்கிறார்கள். ஆனால் இந்தப் பாட்டை எழுதியது யாரென்று தெரியவில்லை.

    என்ன வேதன என்ன சோதன” என்று தொடங்கும் பாடல் இணையத்தில் கிடைக்கவில்லை. அதன் வரிகளும் கிடைக்கவில்லை.

    அதெல்லாம் சரி. இதுவரையில் பார்த்த பாடல்களில் வந்த பேய்கள் எல்லாம் பெண் பேய்களாகவே இருக்கிறதே! அதிலும் பெரும்பாலும் காதல் ஏக்கத்தில் பாடும் பாடல்களாகவே இருக்கின்றன. இரண்டு பாடல்கள்தான் பழிவாங்கும் பாடல்கள்.

    அப்படியானால் பெண் பேய்கள் மட்டும்தான் இருக்கின்றனவா? ஆண் பேய்கள் இல்லையா? அவைகள் பாடுவதில்லையா? ஆடுவதில்லையா?

    ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் ஒரு ஆண்பேய் வந்தது. ஆனால் அது நல்ல பேய். குறும்பு பிடித்த பேய். அது யாரையும் அச்சுறுத்தவில்லை. யாரையும் பழிவாங்கவில்லை. ஜப்பானுக்குப் போன அந்த பேய்க்கு தூங்க நல்ல முருங்கைமரம் கிடைக்கவில்லை. ஒருவழியாக அங்கு பேய்கள் இருக்கும் பாழடைந்த மாளிகையைக் கண்டுபிடிக்கிறது. அங்கு ஏற்கனவே தங்கியிருக்கும் பேய்களோடு மகிழ்ச்சியாக ஆடிப்பாடுகிறது.
    வாய்யா வாய்யா போய்யா போய்யா
    பூலோகமா மேலோகமா ஆகாயாமா பாதாளமா
    அம்மாடி ஆத்தாடியோவ் வேட்டி வரிஞ்சுகட்டு

    இவை மட்டுமல்ல 13ம் நம்பர் வீடு, யார், மை டியர் லிசா, பிட்சா போன்ற படங்களும் மக்களுக்கு பீதி கலந்த மகிழ்ச்சியைக் கொடுத்தன. ஆனால் அந்தப் படங்களில் எல்லாம் பேய்கள் பாடுவது போலக் காட்சி அமையவில்லை.

    சரி. இத்தோடு இந்தப் பதிவை முடித்துக் கொள்கிறேன். ஒரே நேரத்தில் இத்தனை பேய்ப்பாட்டுகளைப் படித்திருக்கின்றீர்கள். தனியாக எங்கும் போகாதீர்கள். பயந்து கொள்ளாதீர்கள். இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டு நிம்மதியாக இருங்கள்.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    1. நெஞ்சம் மறப்பதில்லை – கண்ணதாசன் – விஸ்வநாதன்-ராமமூர்த்தி, பி.சுசீலா – நெஞ்சம் மறப்பதில்லை http://youtu.be/TyPPUBH6otg
    2. நானே வருவேன் – பி.சுசீலா – கண்ணதாசன் – வேதா – யார் நீ – http://youtu.be/sF0bRsHrRJU
    3. மன்னவனே அழலாமா – வாலி – பி.சுசீலா – எம்.எஸ்.வி -கற்பகம் – http://youtu.be/6SRv7XESHZM
    4. நீ எங்கே என் நினைவுகள் அங்கே – வாலி, பி.சுசீலா, எஸ்.எம்.சுப்பையா நாயுடு, மன்னிப்பு – http://youtu.be/OJqRM7UPd3A
    5. வெண்மேகமே வெண்மேகமே – கண்ணதாசன் – எஸ்.ஜானகி – எம்.எஸ்.வி – ஆயிரம் ஜென்மங்கள் – http://youtu.be/yENYEusswXs
    6. உருகுதே இதயமே அருகிலே – முத்துலிங்கம் – வாணி ஜெயராம் – இளையராஜா – நூறாவது நாள் – http://youtu.be/BEOI0xX9GBk
    7. என்ன வேதன என்ன சோதன – வா அருகில் வா – எஸ்.ஜானகி – கலைவாணன் கண்ணதாசன் – http://www.musicalaya.net/imgviewer.php?mod=lpcovers/1173/3/1/1
    8. அன்பே வா அருகிலே – வாலி – எஸ்.ஜானகி – இளையராஜா – கிளிப்பேச்சு கேட்கவா- http://youtu.be/Fpg1IeUCMvs
    9. சும்மா வரவுமாட்டேன் – கங்கை அமரன் – எஸ்.ஜானகி – இளையராஜா – முதல் வசந்தம் – http://youtu.be/54xk4v52Q68
    10. கொடியவனின் கதைமுடிக்க – காஞ்சனா – விவேகா – ஸ்ரீகாந்த் தேவா,எம்எல்ஆர்.கார்த்திகேயன், மாலதி – ராகவா லாரன்ஸ் – http://youtu.be/DtowKXH8oJs
    11. வாய்யா வாய்யா போய்யா போய்யா – வாலி – எஸ்.பி.பி – இளையராஜா – http://youtu.be/RIkBc57vo_s

    அன்புடன்,
    ஜிரா

    245/365

     
    • saravanamani 2:52 pm on August 4, 2013 Permalink | Reply

      adhe kangal-vaa arugil vaa missing

    • rajinirams 4:52 pm on August 4, 2013 Permalink | Reply

      செம பதிவு. மற்ற விஷயங்களுக்கு போடற பதிவையும் பாடல்களையும் விட இதுக்கு அதிகம்,”பேய்”க்கு ரொம்ப இடம் கொடுத்துட்டீங்க:-))
      கொஞ்சம் பேய் சாயல்ல வர்ற இன்னும் சில பாடல்கள்-ஆகாயத்தில் தொட்டில் -துணிவே துணை.2)கண்டேன் எங்கும்-காற்றினிலே வரும் கீதம்.

    • krish 12:31 pm on August 12, 2014 Permalink | Reply

      super sir

  • G.Ra ஜிரா 7:30 am on July 7, 2013 Permalink | Reply  

    வாழ்க! வாழ்க!! 

    வாழ்த்துவதற்கு இதயம் வேண்டும். ஒருவரை உளமாற உணர்வாற “வாழ்க! வாழ்க!!” என்று வாழ்த்துவதற்கும் ஒரு நல்ல இதயம் வேண்டும்.

    வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் யாரையாவது வாழ்த்திக் கொண்டுதான் இருக்கிறோம். அப்படியிருக்கும் போது திரைப்படத்தில் வாழ்த்துப்பாடல்கள் வராமலா இருக்கும்!

    நல்வாழ்த்து நான் சொல்லுவேன். நல்லபடி வாழ்கவென்று” என்று கவியரசர் கண்ணதாசன் எழுதினாரே. ஒருவரை எதற்காக வாழ்த்துகிறோம் என்பதற்கான காரணத்தை இதைவிட சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்ல முடியுமா!

    சரி. வாழ்த்தை எப்படிச் சொல்ல வேண்டும்? வாழ்க வாழ்க என்று எல்லாச் சூழ்நிலையிலும் ஒரே மாதிரி சொன்னால் அதில் சுவை இருக்காது. ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொரு விதமாகச் சொல்ல வேண்டும். திரைப்படத்தில் கவிஞர்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் எப்படி வாழ்த்தியிருக்கிறார்கள் என்று சில பாடல்களைப் பார்த்துத் தெரிந்து கொள்வோமா!

    முதலில் பிறந்தநாள். கையில் ஒரு பரிசைக் கொடுத்து விட்டு வாழ்க என்றால் சரியாக இருக்கும். ஆனால் அது அந்தச் சூழலின் மகிழ்ச்சியைப் பெருக்குமா? இல்லை. இப்போதெல்லாம் கேக் வெட்டும் போது சுற்றி நின்று அனைவரும் “Happy Birthday To You” என்று பாடும் போது அந்த இடமே மகிழ்ச்சியில் மூழ்கிவிடுகிறது அல்லவா.

    அதையே அழகாக “என்னோடு பாடுங்கள். நல்வாழ்த்துப் பாடல்கள்” என்று நான் வாழவைப்பேன் திரைப்படத்தில் இடம் பெற்ற பிறந்தநாள் காட்சிக்காக எழுதினார். எல்லாரும் சேர்ந்து நல்வாழ்த்துப் பாடினால் பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்புறும் என்பது வாலியின் கருத்து.

    அடுத்தது திருமணம். புதுவாழ்க்கை தொடங்கும் மகிழ்ச்சியான தருணம் என்றாலும் ஒரு மெல்லிய சோககும் இருக்கும். பிறந்த வீட்டை விட்டுப் புகுந்த வீட்டுக்குக் கணவனே எல்லாம் என்று செல்லும் பெண். இதுவரையில் பாராட்டிச் சீராட்டி வளர்த்த பெண்ணைப் பிரியும் பெற்றோர்கள் என்று உணர்ச்சிக் கலவையாக இருக்கும் அந்த இடம்.

    இந்தச் சூழ்நிலையில் எப்படி வாழ்த்துவது? நெஞ்சிருக்கும் வரை திரைப்படத்தில் “பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி” என்ற பாடலில் கண்ணதாசன் இப்படியெல்லாம் வாழ்த்துகள்.

    கொட்டியது மேளம்
    குவிந்தன கோடி மலர்கள்
    கட்டினான் மாங்கல்யம்
    மனை வாழ்க துணை வாழ்க குலம் வாழ்க
    கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ்க
    கடமை முடிந்தது கல்யாணம் வாழ்க
    அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ்க
    ஆண்டவன் போலுன்னைக் கோயில் கொண்டாட
    பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி

    திரையிசைப் பாடல்களை எழுதுகின்றவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் வந்தால் படிக்க வேண்டிய அகராதியாக கவியரசர் இந்தப் பாட்டிலும் இருக்கிறார்.

    திருமணத்தின் முதற்பலன் குழந்தை. மக்கட்பேறு என்றே வள்ளுவர் குறிப்பிடுகிறார். அப்படியொரு பெண் வயிறு நிறைந்து சுமக்கும் காலகட்டத்தில் அவள் மகிழ்ச்சிக்காக வளைகாப்பு நடத்துவது வழக்கம். அந்த வளைகாப்பில் அந்தப் பெண்ணை எப்படியெல்லாம் வாழ்த்தலாம்? கர்ணன் படத்தில் “மஞ்சள் முகம் நிறம் மாறி” என்ற பாடலில் கவியரசர் கண்ணதாசன் வாழ்த்துவதைப் பாருங்கள்.

    மலர்கள் சூட்டி
    மஞ்சள் கூட்டி
    வளையல் பூட்டி
    திலகம் தீட்டி
    மா தின்று வாழ் என்று வாழ்த்துப் பாடுவோம்

    குழந்தையைச் சுமக்கும் அந்தப் பெண்ணுக்கு மலர்களைச் சூட்டி மஞ்சளைப் பூசி கையிரண்டும் நிறைய வளையல்களை அடுக்கி திலகமிட்டு அலங்கரிப்பார்கள். இத்தனை செய்தாலும் அந்தப் பெண்ணின் மனம் மாங்காய் கடிப்பதிலேயே இருக்கும். அதைத்தான் கவியரசர் பாட்டில் காட்டுகிறார்.

    திருமணம் முடிந்தது. குழந்தையும் பிறந்தது. அது மட்டும் போதுமா? நீடு வாழ வேண்டாமா? பீடு வாழ வேண்டாமா? அப்படி வாழ்வாங்கு வாழ்ந்தாலும் உலகம் பெண்ணைத்தான் தீர்க்க சுமங்கலி என்று வாழ்த்துகிறது. சரி. அந்த தீர்க்கசுமங்கலியை எப்படி வாழ்த்துவது? மறுபடியும் கண்ணதாசனையே கேட்போம்.

    தீர்க்க சுமங்கலி வாழ்கவே
    அந்தத் திருமகள் குங்குமம் வாழ்கவே
    காக்கும் தேவதை வாழ்கவே
    அவள் காக்கும் நல்லறம் வாழ்கவே

    தீர்க்கசுமங்கலி படத்துக்காக எழுதிய இந்த வரிகளிலிருந்து குடும்பத்தின் நல்லறத்தைக் காப்பது பெண்ணே என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

    சரி. பதவியில் இருக்கும் பெரியவர்களை எப்படி வாழ்த்த வேண்டும்? ஆண்டு அரசாளும் மன்னனை எப்படி வாழ்த்த வேண்டும்? இந்த முறை கவிஞர் முத்துலிங்கத்திடம் பாடம் கேட்கலாம். ராஜரிஷி படத்தில் கௌசிக மன்னனை எப்படி வாழ்த்திப் பாடுகிறார்கள் என்று பார்க்கலாம்.

    கருணைக்கடலே வாழ்க வாழ்க
    காக்கும் நிலமே வாழ்க வாழ்க
    அறத்தின் வடிவே வாழ்க வாழ்க
    அரசர்க்கரசே வாழ்க வாழ்க
    அழகிய கலை நிலவே என்றும் வாழ்க வாழ்கவே
    அருள் மழை தரும் முகிலே என்றும் வாழ்க வாழ்கவே
    இமயமலை போல் புகழில் உயர்ந்தாய்
    உனது கொடையால் மனதில் நிறைந்தாய்

    அரசனை வாழ்த்திப் பாடுகையில் அந்த அரசன் காட்டும் பண்பு நலன்களையும் ஆட்சி செய்யும் முறையையும் வாழ்த்திப் பாட வேண்டும். அதைத்தான் இந்தப் பாட்டு சொல்கிறது.

    நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு. அது உண்மை என்று இன்றைய நிலை நமக்குப் பாடமாக இருக்கிறது. அதனால்தான் அன்று பெரியவர்கள் “பொய்யாக் குலக்கொடி” என்று வையை ஆற்றைப் பாடினார்கள். இது போன்ற ஆறுகளைப் பாராட்டும் போது எப்படி வாழ்த்த வேண்டும்? காவிரியாற்றையே எடுத்துக் கொள்வோம். அகத்தியர் திரைப்படத்தில் கவிஞர் கே.டி.சந்தானம் காவியாற்றை எப்படியெல்லாம் வாழ்த்துகிறார் பாருங்கள்.

    நடந்தாய் வாழி காவேரி நடந்தாய் வாழி காவேரி
    நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
    உணவளிக்கும் உழவர்க்கெல்லாம் கண்ணாக பண்பு
    உயர்ந்த தமிழ் நாட்டின் செல்லப் பெண்ணாக
    புலவரெல்லாம் பாராட்டும் பொன்னாக
    அன்பு பொங்கிவரும் காவிரியே வாழியாவே

    ஆற்றினால் உண்டாகும் செழிப்பையும் அது நீக்கும் பசிப்பிணியையும் சொல்லி வாழ்த்த வேண்டும். இப்படியெல்லாம் வாழ்த்திக் கொண்டாடினால்தான் ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்.

    தெய்வத்தை எத்தனையோ முறை எத்தனையோ விதங்களில் வாழ்த்தியாகி விட்டது. ஆனால் தெய்வம் குடியிருக்கும் திருக்கோயிலை?

    தஞ்சைப் பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே
    தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே

    நிலைத்து நிற்க வேண்டிய கோயில் என்பதால் மொழியோடு தொடர்பு படுத்தி தமிழைப் போல நிலைநின்று வாழ்க என்று எழுதியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.

    எல்லாம் இருப்பது போல இருந்தாலும் சிலருக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியே இருப்பதில்லை. ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வந்து கொண்டேயிருக்கும். அவர்களுக்கு எப்படி வாழ்த்துவது? மறுபடியும் படத்தில் வாலி கற்றுத் தருகிறார்.

    நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துகள்

    ஆர்ப்பாட்டமே இல்லாத அமைதியான வாழ்த்து. வாழ்த்தப்படுகின்றவருக்கு அந்த வாழ்த்து அமைதியைக் கொண்டு வரட்டும் என்று வாலி அப்படி வாழ்த்துகிறார்.

    வாழ்த்துகள் எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லை. வாழ்த்துவதற்கு சுற்றிலும் நல்ல உள்ளங்கள் இல்லாத பாவப்பட்ட உயிர்களும் உண்டு. அப்படியொரு உயிர் மற்றவர்களை வாழ்த்தும் போது மனதுக்குள் என்ன நினைக்கும்?

    எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
    நான் வாழ யார் பாடுவார்

    இப்படிப்பட்ட உள்ளங்களுக்கு ஆண்டவனே துணையிருந்து காப்பாற்ற வேண்டும்.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (பட்டிக்காடா பட்டனமா/எம்.எஸ்.வி) – http://youtu.be/HkXXY_m6EIY
    என்னோடு பாடுங்கள் (நான் வாழ வைப்பேன்/இளையராஜா) – http://youtu.be/pzO8BBL_Zu8
    பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி (நெஞ்சிருக்கும் வரை/எம்.எஸ்.வி) – http://youtu.be/ZMUfKlNYulM
    மஞ்சள் முகம் நிறம் மாறி (கர்ணன்/ எம்.எஸ்.வி+டி.கே.ஆர்) – http://youtu.be/h-KP-0ifwQA
    தீர்க்கசுமங்கலி வாழ்கவே (தீர்க்கசுமங்கலி/ எம்.எஸ்.வி) – http://youtu.be/yLX9jP7O8Uo
    அழகிய கலை நிலவே (ராஜரிஷி / இளையராஜ) – http://youtu.be/_qEdcAxfPgs
    நடந்தாய் வாழி காவேரி (அகத்தியர்/குன்னக்குடி வைத்தியநாதன்) – http://youtu.be/1RGZSokw_nI
    தஞ்சைப் பெரிய கோயில் (ராஜராஜசோழன்/குன்னக்குடி வைத்தியநாதன்) – http://youtu.be/5DhrsSQ-2aY
    நலம் வாழ என்னாளும் (மறுபடியும்/ இளையராஜா) – http://youtu.be/JjRs0KjYzbo
    எல்லோரும் நலம் வாழ (எங்க மாமா/ எம்.எஸ்.வி) – http://youtu.be/KPM20P7HDLs

    அன்புடன்,
    ஜிரா

    218/365

     
    • amas32 7:47 am on July 7, 2013 Permalink | Reply

      அழகாக வாழ்த்துவதும் ஒரு கலை தான். வாழ்த்துகள் என்று வெறுமே சொல்வது எப்படி, பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழுங்கள் என்று வாழ்த்துவது எப்படி. கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது அல்லவா? வாழ்த்தவும் ஒரு நல்ல மனம் வேண்டும். சிலர் வாயிலிருந்து வாழ்த்தே வராது. நல்ல வாழ்த்துக்களைக் கேட்க வேண்டும் என்றால் கவிஞகர்களிடம் தான் செல்ல வேண்டும். நீங்கள் இங்கே அருமையான பல உதாரணங்கள் கொடுத்துள்ளீர்கள்!

      நாம் நிறைய நேசிக்கும் ஒருவரை வாழ்த்துவது எளிது. அதே பண்பு அனைவரையும் வாழ்த்தும் பொது நமக்கு வரவேண்டும். அதற்கு எளிமையான வழி எல்லோரையும் நேசிக்க வேண்டும் 🙂 பெரியாழ்வார் பெருமாளையே பல்லாண்டு பாடி வாழ்த்தியவர். அவருக்குள் தான் எத்தனை வாஞ்சை இருந்திருக்க வேண்டும்!

      வாழ்த்தும் போது வாழ்த்தைப் பெறுபவர் தேவை அறிந்து வாழ்த்துவதே சிறப்பு. அதுவே அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். அதுதானே வாழ்த்துபவருக்கும் பெருமை! 🙂

      amas32

    • Uma Chelvan 7:49 am on July 7, 2013 Permalink | Reply

      “Ennodu padungal” TMS version is far better then SPB vesion !!

    • Uma Chelvan 7:58 am on July 7, 2013 Permalink | Reply

      அடுத்தவரை வாழ்த்த நல்ல மனமும் உயர்ந்த குணமும் வேண்டும். amas சொன்னது போல் பெரியாழ்வார் “பெருமாளை” பல்லாண்டு வாழ வாழ்த்தியவர். எல்லோரயும் வாழ்த்துங்கள் , நமக்கு எந்த குறையும் வராது!!!

    • rajinirams 10:29 am on July 7, 2013 Permalink | Reply

      சூப்பர்.வாழ்த்துப்பாடல்கள் என்பது செண்டிமெண்டாக எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று.தமிழில் வாழ்த்து பாடல்களுக்கு பஞ்சமே இல்லை.
      1)பேசும் தெய்வம்- வாலியின் நூறாண்டு காலம் வாழ்க.
      2)இதய வீணை- இன்றுபோல என்றும் வாழ்க-வாலி.
      3)சட்டம் என்கையில்-எங்க ரத்னம் தங்க ரத்னம் இன்று போல என்றும் வாழ்க-கண்ணதாசன்.
      4)ஊருக்கு உழைப்பவன்-பிள்ளை தமிழ் பாடுகிறேன்-காஞ்சி மன்னன் புகழ் போல காவியமாய் நீ வாழ்க,கடவுளுக்கும் கடவுளென கண்மணியே நீ வாழ்க-முத்துலிங்கம்
      5)காளி -வாழுமட்டும் நன்மைக்காக வாழ்ந்துபார்ப்போம்-கண்ணதாசன்.
      6)மனமார வாழ்த்துங்கள்-மனமார வாழ்த்துங்கள்.
      7)நெஞ்சில் ஓர் ஆலயம்-எங்கிருந்தாலும் வாழ்க-கண்ணதாசன்.
      8)நூற்றுக்கு நூறு-நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்-வாலி.
      9)அடுத்த வாரிசு- வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம்-பஞ்சு அருணாசலம்.
      10)அன்னை ஓர் ஆலயம்-அம்மா-மீண்டும் இந்த மண்ணில் வந்து தோன்ற வேண்டுமே
      வாழ்க வாழ்க மகனே என்று வாழ்த்தவேண்டுமே -வாலி.
      11) இதயக்கனி-நீங்க நல்லா இருக்கணும்-புலமைப்பித்தன்.
      12)நல்லவனுக்கு நல்லவன்-எங்க முதலாளி-வாலி.
      13)முகமது பின் துக்ளக்-பாவலன் பாடிய புதுமை பெண்ணை,happy birthday to you -வாலி.
      14)நாம் மூவர்-பிறந்த நாள் இன்று- வாலி.
      15) வசந்த ராகம்-நான் உள்ளத சொல்லட்டுமா,”வாழ்க நீங்கள் வாழ்க”.
      வாழ்க நீங்கள் வாழ்க”.

    • suri 1:07 pm on July 9, 2013 Permalink | Reply

      theerka sumangali vazhkave was written by vali!

    • SRINIVASAN 8:23 am on July 14, 2013 Permalink | Reply

      Reblogged this on srinivasan s.

  • G.Ra ஜிரா 11:20 am on May 16, 2013 Permalink | Reply  

    நெஞ்சில் ஓர் ஆலயம் 

    மீனவ நண்பன் : இந்தப் படம் வெளியாகும் நேரத்தில் எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதல்வராகவே ஆகியிருந்தார்.

    மீனவ நண்பன் திரைப்படத்தில் எல்லாப் பாடல்களுமே இனிமையானவை. அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது “தங்கத்தில் முகமெடுத்து” என்று தொடங்கும் காதற்பாடல்.

    தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    மங்கையென்று வந்திருக்கும் மலரோ
    நீ மாலை நேரப் பொன்மஞ்சள் நிலவோ
    பாடல் – கவிஞர் முத்துலிங்கம்
    பாடியவர்கள் – வாணி ஜெயராம், கே.ஜே.ஏசுதாஸ்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – மீனவ நண்பன்
    பாடலின் சுட்டி – http://youtu.be/LUF4NzXhMbk

    இந்தப் பாடலில் காதலி பாடுவதாக வரும் ஒரு வரி என்னுடைய கவனத்தை ஈர்த்தது.

    எந்தன் மனக்கோயிலில் தெய்வம் உனைக் காண்கிறேன்
    உந்தன் நிழல் போலவே வரும் வரம் கேட்கிறேன்

    அதாவது காதலியின் உள்ளமே கோயிலாம். அந்தக் கோயிலிலே குடியிருக்கும் கடவுள் காதலனாம். அந்தக் காதலின் நிழலாய்த் தொடர்ந்து வருவதற்கு அந்தக் காதலன் என்னும் கடவுள் அருள் செய்ய வேண்டும்.

    அடிமைத்தனமான காதல் போலத் தெரிகின்றதா? என்ன செய்வது? ஒவ்வொரு காதலும் ஒவ்வொரு வகை.

    கவிஞர் முத்துலிங்கம் இப்படி எழுவதற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கும் முன்னார் ஒருவர் எழுதினார். அவரும் காதலினால்தான் எழுதினார். ஆனால் அது மனிதர் உணர்ந்துகொள்ள மனிதக் காதல் அல்ல. ஆம். கடவுள் மேல் கொண்ட அன்பு.

    ஆம். அவர் தான் தாயுமானவ சுவாமிகள். ”எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” என்று பாடிய அன்புள்ளமே தாயுமானவ சுவாமிகள்.

    இவர் இறைவன் மீது கண்ணிகள் அமைத்துப் பாடினார். அதாவது இரண்டிரண்டு அடிகளாக அமையும் பாடல்கள். ஈசனாரைப் பராபரமே என்று அழைத்துப் பாடிய கண்ணிகளுக்குப் பராபரக் கண்ணிகள் என்றே பெயர் அமைந்தது.

    இவர் காலத்தில் மதங்களுக்கிடையே நிறைய பிணக்குகள் இருந்தன. குறிப்பாக வைணவ-சைவப் பிணக்குகள். அவைகளை மிகவும் வெறுத்திருக்கிறார். அதனால்தான் இறைவன் பெயரைக் கூடப் பொதுவாகக் குறிப்பிடாமல் பராபரமே என்று குறிப்பிட்டு பாடியுள்ளார். இவர் பாடல்களில் சித்தர் பாடல்களின் தாக்கம் தெரியும்.

    அப்படிப் பட்ட தாயுமானவ சுவாமிகளிடம் பொன்னும் பொருளும் இல்லை. மண்ணும் கல்லும் சுண்ணாம்பும் இல்லை. அதற்காக இறைவனுக்குக் கோயில் கட்டாமல் இருக்க முடியுமா?

    கட்டினார் ஒரு கோயில். அதில் நடத்திக் காட்டினார் ஒரு பூசை.

    நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே
    மஞ்சன நீர் பூசைகொள்ள வாராய் பராபரமே

    நெஞ்சமே கோயில். அந்த நெஞ்சில் எழும் இறைவனைப் பற்றிய நினைவுகளே சுகந்தம். ஆண்டவன் மீதுள்ள அன்பே மஞ்சன நீர். இவைகளை வைத்துச் செய்யப்படும் வழிபாட்டை ஏற்க வருவாய் இறைவா!

    அங்கு காதலியும் நெஞ்சமாகிய கோயிலில் ஒரு கடவுளைக் கண்டாள். ஒரு துறவியும் நெஞ்சத்தில் கடவுளைக் கண்டார். காதலிக்குக் அன்பனே கடவுள். துறவிக்கு கடவுளே அன்பன்.

    அன்புடன்,
    ஜிரா

    166/365

     
    • kamala chandramani 11:34 am on May 16, 2013 Permalink | Reply

      காதலனோ துறவியோ, அன்பு செலுத்தத் தெரிந்தவனே கடவுள். அது தெரியாமல்தான் மனிதன் திண்டாடுகிறான். அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

      • GiRa ஜிரா 11:00 pm on May 16, 2013 Permalink | Reply

        உண்மையம்மா. அன்பு செய்யாமல் இருப்பது ஒரு வகை என்றால் அன்பை அளவுக்கு அதிகமாகச் செய்து வெறுப்பூட்டுவது இன்னொரு வகை. அன்பையும் பாத்திரம் அறிந்துதான் மனிதர்கள் காட்ட வேண்டும். துறவிகளே அனைத்தனையும் அன்பால் அணைப்பவர்கள்.

    • Arun Rajendran 12:30 pm on May 16, 2013 Permalink | Reply

      பைபிளில் உடலைக் கோயிலாக உருவகப் படுத்தி இருப்பாங்க..

      one contrast simile…
      ”நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்..திருக்கோயிலே ஓடி வா”

      • GiRa ஜிரா 11:00 pm on May 16, 2013 Permalink | Reply

        அட்டகாசம். அட்டகாசம். நினைவாலே சிலை செய்து என்று contrast simile… ரசித்தேன் 🙂

    • rajinirams 6:07 pm on May 16, 2013 Permalink | Reply

      வித்தியாசமான நல்ல பதிவு.இதே போல கழுகு படத்தில் கோவை முரளி பாடிய காதலெனும் கோவில் கட்டி வைத்தேன் நெஞ்சில்னு ஒரு நல்ல பாட்டு இருக்கு.நம் காதல் நெஞ்சம் கலைக்கோவில்.இதயம் ஒரு கோயில்.இப்படி சில. நன்றி

      • GiRa ஜிரா 11:01 pm on May 16, 2013 Permalink | Reply

        கோவை முரளி என்பவர் சூலமங்கலம் ராஜலட்சுமி அவர்களின் மகனா?

    • amas32 2:51 am on May 17, 2013 Permalink | Reply

      அன்பாலே இறைவனையும் கட்டிப் போட்டு விடலாமே. அப்போ நம் மனத்தில் வாழும் இறைவன் சிறைப்பட்டு இருக்கிறான் என்று வருந்த முடியுமா? நினைவே அவன் வடிவமாகிறது. அந்த நினைவுகளுக்குத் தான் சிறை, அது கடவுளோ காதலனோ. அப்படிப் பார்க்கும் பொழுது அருண் சொல்வது போல இந்த வரிகள் மகாப் பொருத்தமாக உள்ளன ”நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்..திருக்கோயிலே ஓடி வா” 🙂

      amas32

  • என். சொக்கன் 10:00 pm on May 4, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு : காண்டா 

    பாடல்: அந்தக் காண்டாமணி ஓசை
    படம் : விருமாண்டி
    எழுதியவர் : முத்துலிங்கம்

    அந்தக் காண்டாமணி ஓசை கேட்டிருச்சு
    எங்க கலியுகத்துச் சாமி, வெளிய வா

    படத்தில் “காண்டாமணி” ஒலித்தவுடன் தான் இந்தப் பாடலும் ஆரம்பிக்கும்.

    மணி தெரியும். அதென்ன காண்டா?!

    படத்தில் பார்த்திருப்பீர்கள். ஒரு பெரிய மணியைக் காட்டுவார்கள் காண்டாமணி என..
    அதுதான். காண்டா என்றால் “மிகப்பெரிய” எனப் பொருள்…

    இதே பொருளில் நமக்குத் தெரிந்த சில. காண்டாமிருகம்,காண்டாவிளக்குஇவையிரண்டும் எல்லாரும் கேள்விப்பட்டிருப்போம்.

    காண்டாக் கம்பு, காண்டா வாளி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

    இங்கே க்ளிக் செய்யுங்கள்: http://3.bp.blogspot.com/_6KDxNeBPslQ/S-PyuhnbCdI/AAAAAAAABZI/4fb49Dhvr-o/s200/malaysia+tamilar.JPG

    மேலே உள்ள படத்தில், அந்தம்மா சுமந்துக் கொண்டிருப்பதுதான் காண்டா வாளி. இரண்டு வாளிகளையும் ஒரு கம்பில் கட்டியிருக்கிறார்கள். அந்தக் கம்பு வளையும் தன்மை கொண்டதாக இருக்கும், சுமப்பதற்கு வசதியாக. இந்தக் கம்பின் பெயர் காண்டாக் கம்பு. இவை ரப்பர் தோட்டங்களில் அதிகமாகப் பயன்பாட்டில் இருக்கிறது என்கிறார்கள்.

    மெட்ராஸ் பாஷையில் “காண்டாயிடுவேன் மச்சான்” ( கடுப்பு) & “உனக்கேண்டா காண்டு” (பொறாமை) சொல்றதுக்கும் ”காண்டா”வுக்கும் எந்த ஸ்னானப்ராப்தியும் இல்லை. இதுக்கு இன்னும் விவாகாரமான அர்த்தம் இருக்கும்ன்னும் சொல்றாங்க. தேடிப் பார்த்துக்குங்க… 🙂

    சரி சரி, இந்தப் பதிவைப் படிச்சு காண்டாகாம பாட்டைக் கேட்டு எஞ்சாய் பண்ணுங்க 🙂 🙂

    காளீஸ்

    பிறந்து வளர்ந்தது நெல்லை மாவட்டம் புளியங்குடி.திருவண்ணாமலையில் எஞ்சனியரிங். Contact Center industry(Voip / IVR)யில் வேலை.சென்னையில் 7 வருடங்கள். இப்பொழுது சிங்கப்பூரில்.

    பக்கத்துவீட்டில் தினத்தந்தி,விகடன்,குமுதம் பஸ் பயணங்களில் ராஜேஷ்குமார் என ஆரம்பித்த வாசிப்பு, வலைத்தள அறிமுகத்திற்குப்பிறகு கொஞ்சம் பரந்து விரிந்திருக்கிறது. ட்விட்டரில் 140க்குள் எழுத ஆரம்பித்து இப்பொழுது இங்கே வலைப்பதிவுவரை வந்திருக்கிறது : http://eeswrites.blogspot.sg/

     
    • anonymous 4:27 am on May 5, 2013 Permalink | Reply

      “காண்டா” என்பது வடமொழிச் சொல்:)
      http://spokensanskrit.de/index.php?tinput=rhinoceros&direction=ES&script=HK&link=yes&beginning=0

      காண்டா-மிருஹம் = பெரு-விலங்கு!
      காண்டா-மணி = திரு-மா-மணி
      (திருமலை வேங்கடவன் கருவறைக்கு முன்னுள்ள மண்டபம் = “திருமாமணி” மண்டபம்;
      வாயிற் காப்போன் சிலைக்கு இந்தப் புறம்…
      ரெண்டு பெரிய (காண்டா) மணி தொங்கும், “தரிசனம்” முடித்து வரும் வழியில் நாமளே பார்க்கலாம்)

      காண்டா-மிருஹத்துக்கு, நல்ல தமிழ்ச் சொல் = கொந்தளம்
      மூக்குக் கொம்பன்/ உச்சிக் கொம்பன் -ன்னும் சொல்லுறது வழக்கம்

      ஆனா, “காண்டா-மிருஹமே”, இன்னிக்கி தமிழில் பரவல் ஆயிருச்சி
      “காண்டா” மேல் நமக்கொன்றும் “காண்டு” இல்லை:)

    • Kalees 7:50 am on May 5, 2013 Permalink | Reply

      அட!! வடமொழிச் சொல்தானா.. என்க்கு சந்தேகம் இருந்தது. தேடிப் பார்த்தேன். கொஞ்சம் விவாகரமான அர்த்தம் போட்டிருந்தது. அதை தேடிப் படிச்சுக்கோங்கன்னு பதிவுலயே போட்டிருப்பனே 🙂

  • G.Ra ஜிரா 10:33 pm on April 22, 2013 Permalink | Reply  

    மனக்கோயில் 

    மீனவ நண்பன் படம் வெளியாகும் நேரத்தில் எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதல்வராகவே ஆகியிருந்தார். இத் திரைப்படத்தில் எல்லாப் பாடல்களுமே இனிமையானவை. அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது “தங்கத்தில் முகமெடுத்து” என்று தொடங்கும் காதற்பாடல்.

    தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    மங்கையென்று வந்திருக்கும் மலரோ
    நீ மாலை நேரப் பொன்மஞ்சள் நிலவோ
    பாடல் – கவிஞர் முத்துலிங்கம்
    பாடியவர்கள் – வாணி ஜெயராம், கே.ஜே.ஏசுதாஸ்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – மீனவ நண்பன்
    பாடலின் சுட்டி – http://youtu.be/LUF4NzXhMbk

    இந்தப் பாடலில் காதலி பாடுவதாக வரும் ஒரு வரி என்னுடைய கவனத்தை ஈர்த்தது.

    எந்தன் மனக்கோயிலில் தெய்வம் உனைக் காண்கிறேன்
    உந்தன் நிழல் போலவே வரும் வரம் கேட்கிறேன்

    அதாவது காதலியின் உள்ளமே கோயிலாம். அந்தக் கோயிலிலே குடியிருக்கும் கடவுள் காதலனாம். அந்தக் காதலின் நிழலாய்த் தொடர்ந்து வருவதற்கு அந்தக் காதலன் என்னும் கடவுள் அருள் செய்ய வேண்டும்.

    அடிமைத்தனமான காதல் போலத் தெரிகின்றதா? என்ன செய்வது? ஒவ்வொரு காதலும் ஒவ்வொரு வகை.

    கவிஞர் முத்துலிங்கம் இப்படி எழுவதற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கும் முன்னார் ஒருவர் எழுதினார். அவரும் காதலினால்தான் எழுதினார். ஆனால் அது மனிதர் உணர்ந்துகொள்ள மனிதக் காதல் அல்ல. ஆம். கடவுள் மேல் கொண்ட அன்பு.

    ஆம். அவர் தான் தாயுமானவ சுவாமிகள். ”எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” என்று பாடிய அன்புள்ளமே தாயுமானவ சுவாமிகள்.

    இவர் இறைவன் மீது கண்ணிகள் அமைத்துப் பாடினார். அதாவது இரண்டிரண்டு அடிகளாக அமையும் பாடல்கள். ஈசனாரைப் பராபரமே என்று அழைத்துப் பாடிய கண்ணிகளுக்குப் பராபரக் கண்ணிகள் என்றே பெயர் அமைந்தது.

    இவர் காலத்தில் மதங்களுக்கிடையே நிறைய பிணக்குகள் இருந்தன. குறிப்பாக வைணவ-சைவப் பிணக்குகள். அவைகளை மிகவும் வெறுத்திருக்கிறார். அதனால்தான் இறைவன் பெயரைக் கூடப் பொதுவாகக் குறிப்பிடாமல் பராபரமே என்று குறிப்பிட்டு பாடியுள்ளார். இவர் பாடல்களில் சித்தர் பாடல்களின் தாக்கம் தெரியும்.

    அப்படிப் பட்ட தாயுமானவ சுவாமிகளிடம் பொன்னும் பொருளும் இல்லை. மண்ணும் கல்லும் சுண்ணாம்பும் இல்லை. அதற்காக இறைவனுக்குக் கோயில் கட்டாமல் இருக்க முடியுமா?

    கட்டினார் ஒரு கோயில். அதில் நடத்திக் காட்டினார் ஒரு பூசை.

    நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே
    மஞ்சன நீர் பூசைகொள்ள வாராய் பராபரமே

    நெஞ்சமே கோயில். அந்த நெஞ்சில் எழும் இறைவனைப் பற்றிய நினைவுகளே சுகந்தம். ஆண்டவன் மீதுள்ள அன்பே மஞ்சன நீர். இவைகளை வைத்துச் செய்யப்படும் வழிபாட்டை ஏற்க வருவாய் இறைவா!

    அங்கு காதலியும் நெஞ்சமாகிய கோயிலில் ஒரு கடவுளைக் கண்டாள். ஒரு துறவியும் நெஞ்சத்தில் கடவுளைக் கண்டார். காதலிக்குக் அன்பனே கடவுள். துறவிக்கு கடவுளே அன்பன்.

    அன்புடன்,
    ஜிரா

    278/365

     
    • uma chelvan 8:35 pm on September 5, 2013 Permalink | Reply

      விழி வாசல் தனை கடந்து வழி முழுதும் தெரிந்தவர் போல் குழைவாக மன கோயில் குடி புகுந்தாரே!!………….. . எங்கோ பிறந்த வராம் எங்கோ வளந்த வராம், எப்படியோ என் மனதை கவர்ந்தவராம் . very very beautiful song in the movie Bommai. Please listen and enjoy the honey suckle voice of P.Susheela in Ragam “Sahana”

    • Rajan 6:40 am on September 6, 2013 Permalink | Reply

      எந்தன் மனக்கோயில் சிலையாக அமர்ந்தாளம்மா
      மலரோடு மலராக மலர்ந்தாளம்மா
      கனவென்னும் தேர் ஏறி பறந்தாளம்மா
      காற்றோடு காற்றாக கலந்தாளம்மா

      பாலும்பழமும் கண்ணதாசன்

  • என். சொக்கன் 11:02 am on April 5, 2013 Permalink | Reply  

    வாய்யா, மின்னல்! 

    • படம்: வெள்ளை ரோஜா
    • பாடல்: சோலைப் பூவில் மாலைத் தென்றல்
    • எழுதியவர்: முத்துலிங்கம்
    • இசை: இளையராஜா
    • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
    • Link: http://www.youtube.com/watch?v=khUohdHlgAM

    மேகத்துக்குள் மின்னல்போலே நின்றாயே,

    மின்னல் தேடும் தாழம்பூவாய் நானும் வந்தேனே!

    தாகம் தீர்க்கும் தண்ணீர்போலே நீயும் வந்தாயே,

    தாவிப் பாயும் மீனைப்போலே நானும் ஆனேனே!

    இங்கே தரப்பட்டிருக்கும் நான்கு வரிகளில், முதல் இரண்டு பெண் பாடுவது, அடுத்த இரண்டு ஆண் பாடுவது.

    வழக்கம்போல், ஆண் பேசுவதைப் புரிந்துகொள்வது சுலபம்: தண்ணீராக அவள் வந்தாள், மீனாக இவன் நின்றான், தண்ணீர் இன்றி மீன் வாழாது, அதுபோல அவள் இன்றி இவன் வாழமுடியாது!

    ஆனால், அந்தப் பெண்ணின் குரலில் ஒரு சின்னக் குழப்பம், மின்னலாக அவன் வந்தான் என்கிறாள் இவள், கூடவே, ‘தாழம்பூவாக நான் ஆனேன்’ என்கிறாள். இரண்டுக்கும் என்ன சம்பந்தம்?

    இந்தப் புதிருக்கு விடை, கச்சியப்ப முனிவர் எழுதிய ‘தணிகைப் புராணம்’ என்ற நூலில் இருக்கிறது. ’தடித்து எழுந்தொறும் தாழை பூப்பன.’

    ’தடித்து’ என்றால் மின்னல், வானில் மின்னல் தோன்றும்போது, மொட்டாக இருக்கும் தாழை பூக்கும்!

    அதாவது, சூரியனைப் பார்த்தவுடன் தாமரை மலரும், சந்திரனைப் பார்த்தவுடன் அல்லி மலரும் என்பதுபோல, மின்னலைப் பார்த்தவுடன் தாழம்பூ மலரும். அந்தச் செய்தியை இந்தப் பாடலில் முத்துலிங்கம் பயன்படுத்தியிருக்கிறார். ‘காதலா, மலர்வதற்காக மின்னலைத் தேடுகிற தாழம்பூவைப்போல நான் காத்திருந்தேன், ஆனால் நீயோ, மேகத்துக்குள் ஒளிந்து நின்றாய், இப்போது இங்கே என்முன்னே தோன்றினாய், உன்னைப் பார்த்ததும் நான் மலர்ந்துவிட்டேன், நீதான் என் மின்னல்!’ என்கிறாள் அவள்!

    ***

    என். சொக்கன் …

    05 04 2013

    125/365

     
    • amas32 (@amas32) 11:14 pm on April 5, 2013 Permalink | Reply

      எவ்வளவு அழகாக கவிஞர் இந்தக் கருத்தை இந்தப் பாடலில் பயன்படுத்தியுள்ளார்!. மின்னலைப் பார்த்துத் தாழை பூக்கும் என்ற விவரம் அறிந்தவர்களே பாடலை நன்கு இரசித்திருக்க முடியும்.

      நல்ல பாடல்களாக எடுத்து விளக்கம் சொல்கிறீர்கள் 🙂

      amas32

    • Niranjan 12:37 am on April 6, 2013 Permalink | Reply

      இந்தப் பாட்டை எழுதியது வாலி அல்லவோ ?

      • என். சொக்கன் 12:39 am on April 6, 2013 Permalink | Reply

        இல்லை நிரஞ்சன், ‘வெள்ளை ரோஜா’வில் வாலி எழுதியது ஒரே ஒரு பாடல், ‘தேவனின் கோயிலிலே யாவரும் தீபங்களே’

        இதைப் பாருங்கள்: http://musicalaya.net/imgviewer.php?mod=lpcovers/1218/3/1/1

    • GiRa ஜிரா 1:06 pm on April 6, 2013 Permalink | Reply

      தாழம்பூவைப் பொருத்த வரையில் இரண்டு கருத்துகள் உண்டு. ஒன்று பாம்புக்கு தாழம்பூ வாசனை பிடிக்கும். மற்றொன்று மின்னொளியில் மலரும் தாழம்பூக்கள்.

      முன்னதை விட பின்னதில் அறிவியல் விளக்கம் இருப்பது போலத் தோன்றுகின்றது.

      பாம்புகள் பெரும்பாலும் புதர்களில் இருக்கும். தாழம்பூவும் புதர்களாக இருக்கும். அதனால் அங்கு பாம்புகள் அடைவதில் வியப்பில்லை. பொடிப்பாம்புகள் விரித்த தாழம்பூக்களில் சமயத்தில் ஏறிக்கொள்ளும். அதைத்தான் பூநாகம் என்று சொல்வார்கள்.

      மின்னொளியில் தாழம்பூ மலருமா என்று தெரியவில்லை. ஒருவேளை தாழம்பூவுக்கு மின் கடத்தும் திறன் நிறைய இருக்கலாம். அதனால் மின்னல் தாழம்புதர்களின் விழலாம். அதைப் பார்த்தவர்கள் மின்னலினால் தாழம்பூ மலரும் என்று சொல்லியிருக்கலாம்.

    • Vanitha 4:26 pm on May 11, 2019 Permalink | Reply

      சுரதா அவர்கள் நாடோடி மன்னனில் எழுதிய ‘கண்ணில் வந்து மின்னல் போல்’ பாடலிலும் இந்த உவமை வந்துள்ளது……. !

  • mokrish 12:07 pm on February 11, 2013 Permalink | Reply  

    கொஞ்சும் கொலுசு 

    பெண் அணியும் ஆபரணங்களில் அவளுக்கு எது பிடிக்குமோ தெரியவில்லை. ஆனால் ஆணுக்கு பிடித்தது கொலுசும் சலங்கையும்தானோ என்று தோன்றுகிறது. ‘ஆஹா மெல்ல நட மெல்ல நட’ என்றும் ‘ஆடி வா ஆடி வா ஆடப்பிறந்தவளே ஆடி வா’ என்றும் சொல்லி பெண்ணின் நடையிலும் நடனத்திலும் ஆட்டத்திலும் ஓட்டத்திலும் கொலுசின் சத்தமும் சலங்கையின் ஓசையும் கேட்டு மயங்கிய ஆண், இதை விரும்பியதில் வியப்பில்லை.
    ‘உன் கால் கொலுசொலி போதுமடி பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி’ என்று பாடும் அளவுக்கு இந்த சத்தம் அவனை மயக்கியிருக்கிறது .கொலுசு தமிழ்பண்பாட்டின் தனித்த ஆபரணமாம். கொலுசின் ஒலியில் பெண்ணின் மனநிலை உணர முடியுமாம். நிஜமாகவா? கொலுசு பெண் மன indicator ஆ? அவ்வளவு சிம்பிள் விஷயமா பெண்மனம் அறிதல்?
               கற்பனைக்கு மேனி தந்து கால் சதங்கை போட்டு விட்டேன்
               கால்சதங்கை போன இடம் கடவுளுக்கும் தோன்றவில்லை
    என்று கண்ணதாசன் தெய்வத்தின் தேரெடுத்து தேவியை தேட சொல்கிறார். வைரமுத்துவும் இதயத்தை தொலைத்துவிட்டு அவள் கால் கொலுசில் அது தொலைந்திருக்குமோ என்று காலடியில் தேடுகிறார்…(நிற்க இது ஆதி சங்கரனின் காலடி இல்லை டைரக்டர் ஷங்கர் நாயகியின் கால் அடி)
    வெள்ளி கொலுசு மணியும் பாத கொலுசு சத்தமும் கொஞ்சம் கொஞ்சமாக பாடலில் வர, கொலுசு சத்தம் கேட்கும்போது மனம் தந்தியடிக்குது என்கிறார் முத்துலிங்கம். நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்ற காதலி தன்னைத் தாலாட்ட வருவாளா என்று சந்தேகத்துடன் நடக்கும் காதலன் சட்டென்று ‘கொஞ்சம் பொறு   கொலுசொலி கேட்கிறதே’ என்று நின்று பாடும் கவிஞர் பழனி பாரதியின் வரிகள்.
    வைரமுத்து வந்தபின் தமிழ்பாடலில் கொலுசு சத்தம் சற்றே அதிகம். வெள்ளி சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடிய காலம். ஒரு பாடலில்
             கொலுசே கொலுசே எசை பாடு கொலுசே
             நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன்
             நீ கேளாதிருந்தால் நான் வாழாதிருப்பேன்
    என்னவோ கொலுசின் ஒலி தான் வழிகாட்டி போல் சொல்கிறார். மொத்தத்தில் அவள் தந்த சத்தத்தில் தேன் வந்து ரத்தத்தில் தித்தித்ததே என்று Fasting / PP blood sugar ரிசல்ட் சொல்லி  … கொஞ்சம் ஓவரா போய்ட்டாரோ? இன்னும் இல்லை. மற்ற பாடல்களையும் பார்ப்போம்
    முதல்வன் பாடலில்
              குறுக்கு சிறுத்தவளே என்ன குங்குமத்தில் கரைச்சவளே
    நெஞ்சில் மஞ்ச தேச்சு குளிக்கையில் என்ன கொஞ்சம் பூசு தாயே
    உன் கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம் மாத்து தாயே
    குறுக்கு சிறுத்தவளின் கொலுசுக்கு மணியாக தன்னை கொஞ்சம் மாற்றிக்கொள்ள ஆசைப்படுகிறார். அன்பே அன்பே கொல்லாதே பாடலில்
             கொடுத்து வைத்த பூவே பூவே அவள் கூந்தல் மணம் சொல்வாயா
             கொடுத்து வைத்த கொலுசே கொலுசே அவள் காலளவை சொல்வாயோ
    என்று உலக அழகியை பற்றி பாடும்போதும் விடாமல் கொலுசை கெஞ்சுகிறார்.மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலுக்கு தாய் மாமன் சீராக தங்க கொலுசு தான் தருகிறார். (தங்கத்தை இடுப்புக்கு கீழே அணியக்கூடதாமே, தங்கத்தில் கொலுசு பரவாயில்லையா ?)
    கொலுசும் சலங்கையும் வெறும் சத்தமா ? அதை தாண்டி ஒரு கற்பனை உண்டா? இருக்கிறது. அதுவும் வைரமுத்துவின் வரிகள் தான். சங்கமம் படத்தின் முதல் முறை கிள்ளிப்பார்த்தேன் பாடலில் http://www.youtube.com/watch?v=e6IVUGuENd8 பெண் மனதின் ஓசைகளையும் அவள் இதழின் மௌனங்களையும் சொல்லும் வரிகள்
    ‘கால்களில் கிடந்த சலங்கையை திருடி
    அன்பே என் மனசுக்குள் கட்டியதென்ன’
    என்று காதல் வயப்பட்ட ஒரு பெண் தன் மனதின் ஓசையை சொல்ல, பதிலுக்கு  ஆண்
    சலங்கையை அணிந்தும் சத்தங்களை மறைத்தாய்
    பெண்ணே உன் உள்ளம் தன்னை ஒளித்ததென்ன
    என்று சலங்கை அணிந்தும் மௌனமாய் நிற்கும் பெண்ணை , பெண்ணின் மனதை கேள்வி கேட்டு
    சலங்கையே கொஞ்சம் பேசு
    மௌனமே பாடல் பாடு
    மொழியெல்லாம் ஊமை யானால்
    கண்ணீர் உரையாடும்

    வசீகரிக்கும் வார்த்தைகள். கவிஞருக்கு தேசிய விருது வாங்கி கொடுத்த வரிகள். இன்னும் இன்னும் எழுதுங்கள் கவிஞரே கொலுசின் கொஞ்சலும் சலங்கையின் கெஞ்சலும் சலிக்கப்போவதேயில்லை எங்களுக்கும்.

    மோகனகிருஷ்ணன்

    072/365

     
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel