Updates from June, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • என். சொக்கன் 11:43 am on June 11, 2013 Permalink | Reply  

    ஜில்லுன்னு ஒரு காதல் 

    • படம்: நளனும் நந்தினியும்
    • பாடல்: தூங்காம உன்னை சுத்திச் சுத்தித் திரியுறேன்
    • எழுதியவர்: நிரஞ்சன் பாரதி
    • இசை: அஷ்வத்
    • பாடியவர்கள்: பலராம், சின்மயி

    வெயிலும்தான் சுடுமா? அருகில் நீ உள்ளபோது!

    பிரிவுதான் சுடுதே! சொல்ல வார்த்தைகள் ஏது!

    கம்ப ராமாயணத்தில் ஒரு காட்சி. ராமன் காட்டுக்குச் செல்லத் தயாராகிறான். சீதையிடம், ‘நான் ஜஸ்ட் பதினாலு வருஷத்துல திரும்பி வந்துடுவேன், நீ சமர்த்தா வீட்டைப் பார்த்துகிட்டுச் சௌக்கியமா இரு’ என்கிறான்.

    சீதை மறுக்கிறாள், ‘நானும் உம்மோட வருவேன்!’ என்கிறாள்.

    ராமன் சிரிக்கிறான், ‘கண்ணும்மா, காடுன்னா என்ன பிளாஸ்டிக் கூடை, ஜமுக்காளத்தோட பிக்னிக் போற எடம்ன்னு நினைச்சியா? ரொம்ப ஆபத்தான ஏரியா, எப்பப்பார் வெய்யில் கொளுத்தும், சிங்கம், புலி, மிருகங்கள்லாம் வரும், பூச்சிங்க கடிக்கும், திருடங்க, அரக்கர்ங்க தொல்லைவேற, நீ மென்மையா வளர்ந்தவ, அதெல்லாம் உனக்குச் சரிப்படாதும்மா!’

    அதற்கு சீதை சொல்லும் பதிலாகக் கம்பன் எழுதியுள்ள பாடலில் ஒரு பகுதி:

    ’அருக்கனும்

    எரியும் என்பது யாண்டையது? ஈண்டு, நின்

    பிரிவினும் சுடுமோ பெரும் காடு?’

    ’மிஸ்டர் ராமன், என்னவோ அந்தக் காட்டுல சூரியன் சுடும்ன்னு பெருசாப் பயமுறுத்தறீங்களே, உம்மைப் பிரிஞ்சு தனியா வாழற வேதனையைவிடவா அது என்னைச் சுட்டுடும்?’

    கம்பனின் அற்புதமான இந்தக் கேள்வியை, இந்தக் காதல் பாடலில் அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார் நிரஞ்சன் பாரதி. இதைக் கேட்டதுமுதல், ‘நின் பிரிவினும் சுடுமோ பெரும் காடு’ என்ற வரியைமட்டும் திரும்பத் திரும்பச் சொல்லி ரசித்துக்கொண்டிருக்கிறேன். எத்துணை அழகு!!

    ***

    என். சொக்கன் …

    11 06 2013

    192/365

    பின்குறிப்பு:

    சில தினங்களுக்குமுன்பாக வைத்த ‘திரைப்பாடல்களில் இல்பொருள் அணி’ போட்டிக்குப் பிரமாதமான வரவேற்பு. பங்கேற்ற அனைவருக்கும் நன்றி!

    ஒரே குறை, வந்தவற்றில் பெரும்பாலானவை இல்பொருள் அணியே அல்ல, அநேகமாக 70%க்குமேல் உயர்வு நவிற்சியும் தற்குறிப்பேற்றமும்தான் இருந்தது. அவற்றை நீக்கி, மீதமுள்ளவற்றில், என் கணிப்பில் அழகானதாக இந்த வரியைத் தேர்வு செய்கிறேன்: ’இருட்டில்கூட இருக்கும் நிழல் நான்’ (எழுதியவர் வாலி, தேர்வு செய்தவர் இன்பா)

    வாழ்த்துகள் இன்பா, nchokkan@gmail.comல் உங்கள் இந்திய முகவரியைத் தந்தால், பரிசை அனுப்பிவைக்கிறேன்!

    By the way, இந்த வரி இல்பொருள் உவமை அல்ல, உருவகம் 🙂

     
    • rajinirams 12:02 pm on June 11, 2013 Permalink | Reply

      கம்பராமாயண அழகான உவமையுடன் அருமையான பதிவு. புதுக்கவிதையின் வைரமுத்து வரிகள்-நீயும் நானும் சேர்ந்தபோது கோடை கூட மார்கழி.பிரிந்த பின்பு பூவும் என்னை சுடுவதென்ன காதலி,..நன்றி.

    • Kannabiran Ravi Shankar (KRS) 1:23 pm on June 11, 2013 Permalink | Reply

      //ராமன் சிரிக்கிறான்; கண்ணும்மா, காடுன்னா என்ன, பிளாஸ்டிக் கூடை, ஜமுக்காளத்தோட பிக்னிக் போற எடம்ன்னு நினைச்சியா?//

      🙂
      இது கம்பராமாயணத்துக்கு, “Curry-மேல்-அழகர்” எழுதிய உரை தானே?
      = Curry சுவையா ஒறைப்பா இருக்கு:))
      ———

      //ஈண்டு நின் பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?//

      கம்பன் சில சொற்களைச் சும்மாவே போடுவதில்லை! “நறுக்” -ன்னு வச்சி அழுத்துவான்!

      உன் பிரிவினும் சுடுமோ பெருங் காடு? -ன்னு கூட எழுதி இருக்கலாம்!
      ஆனா எதுக்கு “ஈண்டு” -ன்னு அழுத்தறான்? (ஈண்டு = இங்கே)
      ———

      கம்பன் (சீதையின் வாயால்) சொன்ன முகூர்த்தமோ என்னவோ, “சூடு” காட்டுல வரலை; “ஈண்டில்” (அயோத்தியில்) தான் வந்துச்சு;

      *தசரதன் செத்துப் போனான்
      *மங்கலம் எல்லாம் அமங்கலம் ஆயின
      *நாட்டின் தலை நகரமே மாறிப் போச்சி (அயோத்திக்குப் பதிலா, நந்திக்கிராமம் -ன்னு எல்லையில்)
      *கோலாகலமா இருக்க வேண்டிய அரண்மனை, ஆண்டி மடம் போல், துறவுக் கோலப் பரதனைச் சுமந்தது;

      ஆனா, காடு? = புதுத் தம்பியர் கிடைக்க, முனிவர்கள் ஞானம் புகட்ட, வீரம் விளைக்க, முதல் 13 வருசமும் இன்பம் தான்:)

      “ஈண்டு”
      நின் பிரிவினும் சுடுமோ?
      பெருங் காடு = அதுவே பெருமை மிக்க காடு!

    • anonymous 1:30 pm on June 11, 2013 Permalink | Reply

      அடுத்து ஒன்னும் சொல்லுறேன்; கம்ப இரசிகர்கள் கோச்சிக்காதீக:) கம்பன் இதைக் “காப்பி” அடிக்கிறான்:))
      எங்கிருந்து? = குறுந்தொகையில் இருந்து!

      //”ஈண்டு” நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு?//

      பெருங்காடு
      இன்னா என்றீர் ஆயின்
      இனியவோ பெரும தமியேற்கு மனையே?

      பாலை பாடிய பெருங்கடுங்கோ; தலைவியின் சொல்லை, அப்படியே சீதையும் எதிரொலிக்கிறாள்!

      • என். சொக்கன் 2:14 pm on June 11, 2013 Permalink | Reply

        Wonderful!!

    • anonymous 1:34 pm on June 11, 2013 Permalink | Reply

      வாழ்த்துக்கள் இன்பா!

      அழகான வரிகள்; என்ன ஆளுமை = //இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்//
      ———

      //By the way, இந்த வரி, இல்பொருள் உவமை அல்ல, உருவகம் 🙂 //

      ஒரு திருத்தம் சொல்ல அனுமதி உண்டா?:))

      • anonymous 1:40 pm on June 11, 2013 Permalink | Reply

        *மதி முகம் = உவமை; (மதி போல முகம்; போல தொக்கி இருக்கு; உவமைத் தொகை)
        *முக மதி = உருவகம் (முகம் ஆகிய மதி)

        இதை அப்படியே பொருத்துங்க, இன்பா சொன்ன வரிக்கு!

        *நிழல் நான் = உவமை (நிழல் போல நான்)
        *நான் நிழல் = உருவகம் (நான் ஆகிய நிழல்)
        ————

        //இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்//

        “நான்-நிழல்” -ன்னு இல்லாம, “நிழல்-நான்” -ன்னு இருப்பதனால்,
        இது 100% இல்பொருள் உவமையே! “இல்பொருள் உருவகம்” அல்ல!:)))

    • Niranjan Bharathi 1:42 pm on June 11, 2013 Permalink | Reply

      வாலி ஐயா எழுதிய “பவளக்கொடியில் முத்துக்கள் கோ(ர்)த்தால் புன்னகை என்றே பெயராகும்” என்பது இல்பொருள் உவமை அணிக்கொரு சிறந்த உதாரணம் என்று பொதிகையில் ஒளிபரப்பான வாலிப வாலி நிகழ்ச்சியில் கவிஞர் நந்தலாலா குறிப்பிட்டார்.

    • anonymous 2:20 pm on June 11, 2013 Permalink | Reply

      இல்பொருள் உவமை -ன்னு, இலக்கணத்தில் இருக்கு!
      ஆனா, இல்பொருள் உருவகம் -ன்னு இல்லையே; ஏன்? -ன்னு யோசிச்சிப் பாத்து இருக்கீகளா?

      உருவகம் -ன்னா, பொருள் முன்னாடி வரணும்; உவமை பின்னாடி போயீறணும்
      eg: வாய்ப் பவளம், முக மதி

      இல்லாத பொருளை, பின்னாடி வச்சா, நமக்கு ஒன்னுமே கிடைக்காது; At the end of any effort, we have to get something;
      அதான் “இல்”-பொருளாச்சே; ஒன்னுங் கிடைக்காது; அதனால் தான் “இல்-பொருளை” உருவகமா வைக்கலை; உவமையா மட்டும் வச்சாங்க!

      அதே போல, ஒரு புடை உருவகம் (ஏகதேசம் -ன்னு sanskrit ஆக்கீட்டோம் so sad:(((
      ஏகதேச உவமை -ன்னு ஒன்னுமில்ல;
      ஆனா ஏகதேச உருவகம் உண்டு! same logic applies!
      —————

      தமிழின் அழகே இதான்!
      = நுணக்கம்; அதுவே தமிழின் அழகு!

      உருவகமா அடுக்கி இருக்கு பாருங்க, வெண்பாவில்!
      (கண்-வண்டு, கொங்கை-முகிழ், கை-மலர்)

      அங்கை மலரும், அடித்தளிரும், கண்வண்டும்,
      கொங்கை முகிழும், குழற்காரும் – தங்கியதுஓர்
      மாதர்க் கொடிஉளதால்; நண்பா! அதற்குஎழுந்த
      காதற்கு உளதோ கரை?

      (தமிழ்க் – காதலுக்கு உளதோ கரை?:)))

    • Saba-Thambi 6:37 pm on June 11, 2013 Permalink | Reply

      தற்போதய நடைமுறைக்கேற்ற விளக்கம். பிரமாதம்!

      பாடலின் சுட்டி பிளீஸ்?

    • Niranjan 8:02 pm on June 11, 2013 Permalink | Reply

      • Saba-Thambi 11:40 am on June 12, 2013 Permalink | Reply

        சுட்டிக்கு நன்றி!
        கம்பன் வீட்டு கட்டு தறியும் கவி பாடினால், எள்ளுப் பேரன் சும்மாவா?
        வாழ்த்துக்கள் இனிவரும் காலங்களுக்கு.

    • amas32 10:38 pm on June 11, 2013 Permalink | Reply

      அருமையான பாடல், நிரஞ்சன். வாழ்த்துக்கள் 🙂

      உண்மை தான், காதலனை, கணவனைப் பிரிந்து வாழும் துன்ப நிலைக்கு முன் கணவனுடன் சேர்ந்து வாழும் சஹாரா பாலைவன வாழ்க்கையும் சுடாது, ஐஸ்லாந்து வாழ்க்கையும் குளிராது.

      amas32

      • Niranjan 11:22 pm on June 11, 2013 Permalink | Reply

        Mikka Nandri amma 🙂 🙂

      • anonymous 4:53 am on June 12, 2013 Permalink | Reply

        //சஹாரா பாலைவனம் சுடாது, ஐஸ்லாந்து வாழ்க்கையும் குளிராது//

        நீங்க எப்போம்மா, சினிமாவுக்கு பாட்டெழுத ஆரம்பிச்சீங்க?:)

    • anonymous 5:01 am on June 12, 2013 Permalink | Reply

      முன்னமே சொல்ல நினைச்சேன்; மறந்து போச்சுது;
      இந்தப் பாடலை எழுதிய நிரஞ்சன் பாரதி போலவே, பாரதியாரும் ஒரு பாட்டு எழுதியுள்ளார் – “பிரிவுச் சுடுதலை” பத்தி;

      //தூங்காம உன்னை சுத்திச் சுத்தித் திரியுறேன்…
      வெயிலும்தான் சுடுமா? அருகில் நீ உள்ளபோது//

      மேனி கொதிக்கு தடீ –
      இந்த வையம் மூழ்கித் துயிலினிலே,
      நானொருவன் மட்டும்
      “பிரிவு” என்பதோர் நரகத் துழலுவதோ?
      “மேனி கொதிக்கு” தடீ –

      • Niranjan 7:16 am on June 12, 2013 Permalink | Reply

        சாக்ஷாத் மகாகவி பாரதியின் எள்ளுப்பேரன் தான் அடியேன்.

        • anonymous 8:37 am on June 12, 2013 Permalink

          ஆ…! வணக்கம்!

          கண்ணாடி நீ, கண் ஜாடை நான் – முதலான திரைப் பாடல் கவிஞர் -ன்னு தான், இது நாள் வரை தெரியும்;
          இன்றே இதுவும் அறிந்தேன்! மகா கவிக்கு வந்தனங்கள்;

          இப்பல்லாம் பல தளங்களுக்குச் செல்வதில்லை;
          தமிழ்/ இசை = இத் தளங்களில் மட்டுமே வாழ்வு சுருக்கிய வண்டு; அதான்! pardon my ignorance:)

          பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா!
          ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ?
          -ன்னு குயில் பாட்டில் சொல்லுவாரு;
          அப்படியான இசையும்-தமிழும் சிறக்க வாழ்த்துக்கள்!

        • Kannabiran Ravi Shankar (KRS) 8:52 am on June 12, 2013 Permalink

          Actually
          //கண்ணாடி நீ, கண் ஜாடை நான்//
          இதைக் கேட்கும் போதே… “பாயுமொளி நீ எனக்கு; பார்க்கும் விழி நான் உனக்கு” ஞாபகம் வந்துச்சி;
          அது, இன்று, இப்படி வந்து…. முகத்தில் வியப்பறையும் -ன்னு நினைச்சிப் பாக்கலை:) முருகா!

        • Niranjan 9:55 am on June 12, 2013 Permalink

          பாரதியின் பரம்பரை என்று தெரியாமல், என் பாடலை மகாகவியின் பாடலோடு உங்கள் மனம் தொடர்பு படுத்தியதல்லவா. அந்த சந்தோஷம் போதும் எனக்கு.

          மகாகவிக்கு ஒரு கடலென்றால் நான் ஒரு குட்டை. அவர் வம்சத்தில் வந்தது பெரும் புண்ணியம்.

          ஆன போதும், அடியேனுக்கென்று ஒரு தனி அடையாளம் வேண்டுமல்லவா?

          கண்ணாடி நீ பாடல் எப்படியிருந்தது ? , தூங்காம பாடல் எப்படியிருந்தது ?

          உங்கள் கருத்துகள்…. விமர்சனங்கள்….

          பாகன் படத்தில் சிம்பா சம்பா என்ற குத்துப் பாடலையும் எழுதியுள்ளேன். அதையும் கேட்டு விட்டுச் சொல்லுங்கள்.

          –> http://www.youtube.com/watch?v=d-rvJDOvfFs

    • Uma Chelvan 5:16 am on June 16, 2013 Permalink | Reply

      பிரிவு என்னும் மூன்று எழுத்து எவ்வளவு பெரிய சோகத்தை துயரைத்தை கொடுக்கிறது! amas 32 சொன்னதை அப்படியே வழி மொழிகிறேன்… அத்தனையும்.உண்மை !!!

  • mokrish 10:48 am on May 28, 2013 Permalink | Reply  

    என்ன விலை அழகே 

    திரைப்பாடல்களில் இலக்கணம் இலக்கியம் மட்டும்தான் உண்டா வணிகவியல் இல்லையா என்று எனக்குள் இருந்த பட்டயக்  கணக்காளன் (பயப்படாதீர்கள் எளிய தமிழில் Chartered Accountant தான்) கேள்வி கேட்க சரி தேடலாம் என்று ஆரம்பித்தால் நிறைய ஆச்சரியங்கள். வாழ்வின் பல நிலைகளில் வரவு செலவு கணக்கும் விலை பேரங்களும் என்று பல பாடல்கள்

    முதலில் பிறப்பு. கண்ணதாசன் இது சத்தியம் படத்தில் எழுதிய ஒரு பாடல் (இசை எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியவர் பி சுசீலா) http://www.youtube.com/watch?v=52ZJTp3M7_I

    காதலிலே பற்று வைத்தாள் அன்னையடா அன்னை

    கண்மணியே வரவு வைத்தாள் உன்னையடா உன்னை

    ஒரு தாயின் பார்வையில் பற்று வரவு என்று  Debit /Credit சொல்லும் வரிகள். வாலி இதை  பஞ்சவர்ணக் கிளி படத்தில் கண்ணன் வருவான் என்ற பாடலில் (இசை எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியவர் பி சுசீலா) அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறார்.http://www.youtube.com/watch?v=YPM1tb4J33k

    உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்

    இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்

    இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான் என்ற win-win சொல்லும் creative accounting அழகு. இந்த இரண்டு பாடலிலும் கொஞ்சப்படுவது ஆண்குழந்தை. பெண் குழந்தையின் வரவில் இவ்வளவு பெருமிதம் உண்டா ? இந்த அற்புதமான தாலாட்டைப் பாருங்கள் கண்ணதாசன் எழுதிய மலர்ந்தும் மலராத பாதி மலர் போல என்ற பாடலில் (படம் பாசமலர்  (இசை எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியவர்கள் பி சுசீலா டி எம் எஸ் ) http://www.youtube.com/watch?v=R9zT_GGGL7M

    தங்கக் கடியாரம் வைர மணியாரம்

    தந்து மணம் பேசுவார் – மாமன்

    தங்கை மகளான மங்கை உனக்காக

    உலகை விலை பேசுவார்

    அடுத்த நிலை மாணவர்கள். கண்ணதாசன் எழுதிய  பசுமை நிறைந்த நினைவுகளே (படம்: ரத்தத் திலகம் இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்கள் : டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா) கவலையின்றி இருக்கும் காலம் பற்றி ஒரு பாடல். http://www.youtube.com/watch?v=gbjt59-KZDo

    வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே

    வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே

    அப்புறம் காதல். இந்த நிலையில் ‘ஆனந்தம் வரவாக ஆசை மனம் செலவாக’ எல்லா கணக்கு வழக்கையும் அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள் தெய்வத்தாய் படத்தில் வாலி எழுதிய பாடல் (இசை: விஸ்வநாதன் – ராமமுர்த்தி பாடியவர்கள்  டி.எம்.சௌந்தராஜன் – பி.சுசிலா) http://www.youtube.com/watch?v=NrGG18vwMzw

    ஆண்:  இந்த புன்னகை என்ன விலை

    பெண்:  என் இதயம் சொன்ன விலை

    ஆண்:  இவள் கன்னங்கள் என்ன விலை

    பெண்:  இந்த கைகள் தந்த விலை

    என்ன அழகான டீலிங்! காதலில் சில விஷயங்கள் மாறுவதில்லை என்று நிரூபிக்க இதே வரிகளை  மீண்டும் இன்னொரு பாடலில் எழுதுகிறார் வாலி (படம் காதலர் தினம் இசை ஏ ஆர் ரஹ்மான் பாடியவர் உன்னி மேனன்)http://www.youtube.com/watch?v=c4PDAPTcwC0

    என்ன விலை அழகே

    சொன்ன விலைக்கு வாங்க வருவேன்

    புன்னகைக்கும் கன்னங்களுக்கும் அடுத்தது உள்ளம் என்ற இல்லம் தானே ? எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் வாலி எழுதிய பாடல் (இசை எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியவர்கள் பி சுசீலா டி எம் எஸ் ). ஒரு  வரிவிளம்பரம் போட்டு பதிலும் வாங்கும் சாமர்த்தியம்.

    http://www.youtube.com/watch?v=kbRLl0a24Zc

    குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்

    குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்

    குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்

    காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்

    ‘நீ நின்ற இடமென்றால் விலையேறிப்  போகாதோ’ என்ற மிகை வார்த்தைகளில் மயங்கும் பெண் என்ன செய்வாள்? காதல் முற்றி நெஞ்சில் சாரைப்பாம்பு சத்தம் கேட்கிறதாம் வைரமுத்து வாகை சூட வா படத்தில் எழுதிய சர சர சாரக்காத்து (இசை எம் ஜிப்ரான்  பாடியவர் சின்மயி) http://www.youtube.com/watch?v=xxjvz-WGhaE பாடலில்

    இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
    ஒத்த பார்வை பாத்து செல்ல
    மொத்த சொத்த எழுதி தாரேன் மூச்சு உட்பட…

    என்று மயங்கிய பெண் காதலிலே பற்று வைத்து … மறுபடியும் ஒரு புதிய ஆரம்பம்.

    தொடரும் இந்த சுழல் தான் வாழ்வின் Bottomline !

    மோகனகிருஷ்ணன்

    178/365

     
    • amas32 11:03 am on May 28, 2013 Permalink | Reply

      காதலன் படத்தில் காதலிக்கும் பெண்ணின் கைகள்… பாடலில்,
      குண்டு மல்லி ரெண்டு ரூபாய், உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய்.
      பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய், நீ பாதி தின்று தந்ததால் லட்ச ருபாய்
      என்ற வரிகள் வரும் :-)) அதுவும் ஒரு புதுவித அக்கௌண்டிங் தான் 🙂 காதலி கை பட்டு விலை goodwill ஏறுகிறது!

      நல்ல பதிவு 🙂

      amas32

    • Saba-Thambi 11:57 am on May 28, 2013 Permalink | Reply

      நல்ல concept
      இன்னுமொரு பாடல் : http://www.youtube.com/watch?v=vAoUr0p094g

      • mokrish 6:20 pm on May 28, 2013 Permalink | Reply

        நினைவில் இருந்தது. ஆனால் விலைமதிப்பே சொல்ல முடியாத தருணங்களை மட்டும் சொல்லலாம் என்று இந்த பாடலை விட்டு விட்டேன்

    • kamala chandramani 1:14 pm on May 28, 2013 Permalink | Reply

      ”வரவு எட்டணா, செலவு பத்தணா” – பாமாவிஜயம் பாட்டை விட்டுட்டீங்களே?

      • mokrish 6:28 pm on May 28, 2013 Permalink | Reply

        அந்த பாடலும் ‘கணக்கு பார்த்து காதல் வந்தது’ என்ற பாடலும் சேர்க்கலாம் என்று யோசித்தேன். வெறும் கணக்கு மட்டும் சொல்லாமல் விலை மதிக்க முடியாத தருணங்களை மட்டும் சொல்ல ஆசை. அதனால் விட்டுவிட்டேன்

    • elavasam 6:25 pm on May 28, 2013 Permalink | Reply

      வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா தலையில் துண்டணா….

      இந்த முக்கியமான பாடல் இல்லாத இந்தப் பதிவை நான் புறக்கணிக்கிறேன்!

      • mokrish 6:44 pm on May 28, 2013 Permalink | Reply

        நினைவில் இருந்தது. அந்த பாடலும் ‘கணக்கு பார்த்து காதல் வந்தது’ என்ற பாடலும் சேர்க்கலாம் என்று யோசித்தேன். வெறும் கணக்கு மட்டும் சொல்லாமல் விலை மதிக்க முடியாத தருணங்களை மட்டும் சொல்ல ஆசை.

      • mokrish 7:40 pm on May 28, 2013 Permalink | Reply

        ‘கடைசியில் துந்தனா’ தானே?

    • rajnirams 10:30 pm on May 28, 2013 Permalink | Reply

      அருமை,ஆளுக்கொரு ஆசையின் கணக்கு பார்த்து காதல் வந்தது பாடலை நினைத்தேன்,அதை நீங்களே பின்னால் சேர்த்து விட்டீர்கள்:-)) வாலியின் “விலை மீது விலை வைத்து கேட்டாலும் கொடுத்தாலும் கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா”என்ற அற்புத வரிகள் நினைவு வருகிறது.நெஞ்சிருக்கும் வரையில் வாலியின் வரிகள்-இருந்தால் தானே செலவு செய்ய…

  • mokrish 10:15 am on February 28, 2013 Permalink | Reply  

    இரு வரிக் கவிதை 

    பெண்ணை வர்ணிக்கும் பாடல்கள்  காதல் ரச பாடல்கள் முத்தம் தரும் / கேட்கும் பாடல்கள் … எவ்வளவு பாடல்கள் இதழ் பற்றி! விதிவிலக்கின்றி அத்தனை கவிஞர்களும் இது பற்றி பாடல் எழுதியிருக்க, எதைப்பற்றி நான் பதிவெழுத?

    கண்ணதாசன் முதல் இன்று காலை ட்விட்டரில் உதித்த புது கவிஞன் வரை அனைவரும் இதழின் சிவப்புக்கு / சிறப்புக்கு ஒரு கவிதையாவது டெடிகேட்  செய்கிறார்கள்.

    • சிப்பி போல இதழ்கள், மாதுளை செம்பவளம் மருதாணி போல என்று ஓராயிரம் பாடல்கள்.

    • தித்திக்கும் இதழ் உனக்கு , இதழே இதழே தேன் வேண்ட குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும் உதடு -தேன் பழரசம் மது என்று போதையில் இன்னொரு ஆயிரம்.

    • தவிர ஆரிய உதடுகள் திராவிட உதடுகள் , இதழில் கவிதை எழுதும் நேரம், , எந்த பெண்ணிலும் இல்லாத உதட்டின் மேல் மச்சம், , bubble gum ஐ இதழ் மாற்றி – டூ மச்!

    சரி வித்தியாசமாய் ஏதாவது? பார்க்கலாம். முதலில் பழைய பாடல். தங்க ரங்கன் என்ற படத்தில் ஒரு பாடல். MSV இசையில் நா. காமராசன் எழுதியது.

    உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
    அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது

    கவனியுங்கள். அவள் பெயர்தான் ஒட்டிக்கொண்டது. உச்சரிப்பதுதான் தித்திக்கிறது. கண்ணியமான வரிகள்.

    அந்நியன் படத்தில் ஐயங்காரு வீட்டு அழகே என்ற பாடலில்

    உன் உதடு சேர்ந்தால் பூப்படையும் வார்த்தை

    நம் உதடு சேர்ந்தால் பூப்படையும் வாழ்க்கை

    தம்பி படத்தில் சுடும் நிலவு சுடாத சூரியன் என்ற பாடலில் ‘நான்கு உதடு பேசும் வார்த்தை முத்தமாகும்’ என்ற வரி

    ஐஸ்வர்யா ராய் என்றாலே வைரமுத்துவின் கற்பனை உற்சாகமாய் இருக்கும்

    ராவணன் படத்தில் ஒரு பாடல்.

    உசுரே போகுதே உசுரே போகுதே

    உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையிலே

    மேஜர் சந்திரகாந்த் படத்தில் ஒரு நாள் யாரோ என்ற பாடலில் இதழின் நிறம் பற்றி வாலியின் கற்பனை ஒரு அழகிய கவிதை.

    செக்கச் சிவந்தன விழிகள் கொஞ்சம்

    வெளுத்தன செந்நிற இதழ்கள்

    வெள்ளை விழிகளும் செந்நிற இதழ்களும் நிறம் மாறி நிற்கும் பெண்ணின் நிலை. இலக்கியத்தில் இதன் equivalent பற்றி சொக்கனும் ராகவனும் தான் சொல்லவேண்டும்.

    அடுத்து இவன் படத்தில் அப்படி பாக்குறதுன்னா வேணாம் என்ற பாடலில் பழனிபாரதி சொல்லும் கற்பனை இனிமை

    சுற்றி சுழன்றிடும் கண்ணில் இசை தட்டு ரெண்டு பார்த்தேனே
    பற்றி இழுத்தென்னை அள்ளும் பட்டு குழிகளில் வீழ்ந்தேனே
    ரெண்டு இதழ் மட்டும் கொண்டிருக்கும்

    உந்தன் புத்தகத்தில் அச்சானேன்

    கண்களால் கைது செய் என்ற படத்தில் பா விஜய் எழுதிய என்னுயிர் தோழியே என்று ஒரு பாடல்

    மூச்சு முட்ட கவிதைகள் குடித்துவிட்டு

    எந்தன் செவியில் சிணுங்குகிறாய்

    ரெண்டு இதழ் மட்டும் கொண்ட அதிசய பூ

    நீ அல்லவோ சிலுப்புகிறாய்

    அவளை இரண்டு இதழ் கொண்ட அதிசய பூவாய் பார்க்கும் கற்பனை.

    ஆயிரம் தான் இருந்தாலும் காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள்தான் என்பது என் எண்ணம். பழனிபாரதியும் அதைத்தான் சொல்கிறார்.

    இன்னும் நிறைய இருக்கும். நீங்களும் சொல்லுங்களேன்

    மோகனகிருஷ்ணன்

    089/365

     
    • என். சொக்கன் 10:23 am on February 28, 2013 Permalink | Reply

      //சிவந்தன விழிகள், வெளுத்தன இதழ்கள்//

      இதே வரி ‘1000 நிலவே வா’ பாட்டிலும் வரும் (புலமைப்பித்தன்?), அக்னி நட்சத்திரம் ‘நின்னுக்கோரி வர்ணம்’ பாடலில் வாலியே இதே வரிகளை மீண்டும் எழுதியிருப்பார்,

      அனைத்துக்கும் Source ஒன்றே : கந்த புராணம் : ’வெளுத்தன சேயிதழ், விழி சிவந்தன’ 🙂

  • என். சொக்கன் 7:49 am on February 4, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு : இசைவழி இலக்கணம் 

    நாம் பள்ளிப்பருவத்தில் தமிழ் படிக்கும் போது தமிழாசிரியர் இலக்கண இலக்கியங்களைக் கற்றுக் கொடுத்திருப்பார்.

    உரைநடைப்பகுதி, செய்யுள் பகுதி, இலக்கணப் பகுதி, துணைபாடப் பகுதி என்று நம் தமிழ் பாடத்தைப் பிரித்திருப்பார்கள்.

    இதில் பெயர்ச்சொல், வினைச்சொல், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம் என்றெல்லாம் தொடங்கி கடைசியில் புணர்ச்சி விதி, பகுபத உறுப்பிலக்கணம் வரை போகும்.

    என்ன இது, நான்கு வரி நோட்டில் இலக்கணத்தைப் பற்றிப் பேசுகிறேன் என்று பார்க்கிறீர்களா ?

    தொடர்பு இருக்கிறது.

    ஒவ்வொரு கவிஞருக்கும் ஒரு தனித்தன்மை இருப்பது போல வைரமுத்து அவர்களுக்கு ஒரு சிறப்பான தனித்தன்மை உண்டு. அவர் , நாம் சிறு வயதில் படித்த இலக்கணத்தையெல்லாம் எந்த ஒரு இலக்கணப் பா வகையிலும் சேராத திரையிசைப் பாடல்களில் புகுத்தியிருக்கிறார்.

    ராவணன் படத்தில் வருகின்ற , அய்ஷ்வர்யா ராய் பாடுகின்ற கள்வரே கள்வரே என்ற பாடலில் (http://www.youtube.com/watch?v=XQ46R4yRGZ8)

    வலி மிகும் இடங்கள் , வலி மிகா இடங்கள் தமிழுக்குத் தெரிகின்றதே

    வலி மிகும் இடங்கள், வலி மிகா இடங்கள் உங்களுக்குத் தெரிகின்றதா

    என்று எழுதுகிறார். என்ன ஒரு அழகான கற்பனை இது.

    தமிழில் வலி மிகும் இடங்கள் என்பது ஒற்று மிகும் இடங்கள். வலி மிகா இடங்கள் என்பது ஒற்று மிகா இடங்கள்.

    இதே போன்று, ஜீன்ஸ் படத்தில் வருகின்ற கண்ணோடு காண்பதெல்லாம் என்ற பாடலில், என்னையும் உன்னையும் யாராலும் பிரிக்க முடியாது என்று சொல்வதற்கு அய்ஷ்வர்யா ராய் என்ன பாடுகிறாள் பாருங்கள்(http://www.youtube.com/watch?v=fZXlCdySjcg)

    சல சல சல இரட்டைக் கிளவி
    தக தக தக இரட்டைக் கிளவி
    உண்டல்லோ தமிழில் உண்டல்லோ

    பிரித்து வைத்தல் நியாயம் இல்லை
    பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
    இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ

    என்னமாய் இலக்கணத்தோடு காதலைக் கலந்திருக்கிறார் கவிஞர். அத்தனையும் வைர வரிகள் 🙂 🙂

    அஜித் நடித்த வரலாறு படத்தில்

    இன்னிசை அளபெடையே, அமுதே, இளமையின் நன்கொடையே என்று எழுதுகிறார்.(http://www.youtube.com/watch?v=QNN1chrIfIs)

    அளபெடை என்றால் என்ன ?

    அண்மையில் நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியிலிருந்து நான் வாங்கிய “மாணவன் தமிழ் இலக்கணம்” என்ற நூலில்
    அளபெடைக்குக் கொடுத்திருக்கும் விளக்கம் இது தான் :

    செய்யுளில் ஓசை குறையும் போது அதை நிறைவு செய்ய 2 மாத்திரை அளவுடைய நெட்டெழுத்துகள் 3 மாத்திரையாக அளவு கூடி ஒலிக்கும். அவ்வாறு அளபெடுத்ததற்கு அடையாளமாக நெட்டெழுத்திற்கு இனமான குற்றெழுத்து அடுத்து எழுதப்படும். நெடில் , 2 + குறில், 1 = 3 மாத்திரை.இப்படி 3 மாத்திரைகளாக உயிர் அளபெடுப்பதே அளபெடை எனப்படும்(அளபு + எடை = அளவு எடை கூடுதல்).

    இதில் இன்னிசை அளபெடை என்றால் என்ன ?

    செய்யுளில் ஓசை குறையாத இடத்தில் இனிய இசைக்காக குற்றெழுத்துகள் நெட்டெழுத்துகளாக மாறி அளபெடுக்கும். ஈரசைச் சொற்கள் மூவசைச் சொற்களாக மாறி அளபெடுப்பது இன்னிசை அளபெடை

    எ.கா: கெடுப்பதும் என்பது கெடுப்பதூஉம் என்று அளபெடுத்தது.

    கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
    எடுப்பதூஉம் எல்லாம் மழை

    இதென்ன பிரமாதம். குரு என்ற படத்தில் மல்லிகா ஷெராவத் துருக்கி ஆடலழகிகளோடு ஆடும் மய்யா மய்யா என்கிற ஐட்டம் பாட்டில் கூட வைரமுத்து தமிழ்ப் பாடத்தை நுழைத்திருக்கிறார். எப்படி ? இப்படி.

    திரி குறையட்டும் தெரு விளக்கு, நீ இடம் சுட்டிப் பொருள் விளக்கு, அந்தக் கடவுளை அடையும் வழியில் என் பேர் எழுதிருக்கு

    (http://www.youtube.com/watch?v=ztFcz9YToNA)

    இடம் சுட்டிப் பொருள் விளக்குக என்ற தமிழ் ஒன்றாம் தாளில் வரும். நினைவுக்கு வருகிறதா ? அப்படியென்றால் என்ன ?

    விக்கிப்பீடியா கொடுக்கும் விடையைப் பாருங்கள் :-

    “இடஞ்சுட்டிப் பொருள் விளக்குதல் (Explaining with reference to Context) என்பது இலக்கியம் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் திறனைச் சோதிக்கும் தேர்வு வினா வகைகளுள் ஒன்றாகும். இது எழுத்துத் தேர்விலேயே பெரும்பாலும் வினவப்படும். ஒரு இலக்கிய படைப்பில் (கவிதை, உரைநடை அல்லது நாடகம்) இருந்து சில வரிகள் கொடுக்கப்படும். மாணவர்கள் அந்த வரிகளைக் கண்டு அது எந்த நூலில் இடம் பெற்ற வரிகள், யார் யாரிடம் கூறுவதாய் அமைந்தது மற்றும் அவ்வரிகளின் பொருள் ஆகியவற்றை விளக்க வேண்டும்.”

    ஆக. நம் தமிழின் பெருமையைத் துருக்கி அறியச் செய்த பெருமை வைரமுத்துவுக்கு உண்டு 🙂 🙂

    வைரமுத்து மட்டுமல்ல. பா விஜய் அவர்களும் ஒரு பாட்டில் இலக்கணத்தை நுழைத்திருக்கிறார்.

    மதுர படத்தில் இடம்பெறும் “இலந்தைப் பழம் இலந்தைப் பழம் உனக்குத் தான்” என்ற இரட்டை அய்ட்டம் பாடலில் ,(http://www.youtube.com/watch?v=Bd_j7419p14)

    தேமா உனக்குத் தான் புளிமா உனக்குத் தான், மாமா நான் உனக்கே தான் ……… என்று தேஜாஸ்ரீயும், ரக்ஷிதாவும் விஜய்யைப் படுத்தும் இடத்தில் சீர் பிரித்துப் பார்க்கிறார் கவிஞர் யார் சீரும் சிறப்பும் மிக்கவர்கள் என்று 🙂 🙂

    தமிழ்த் திரையிசையில் பல பாடலாசிரியர்கள் இலக்கணத்தை மாற்றியிருக்கிறார்கள். ஆனால், எனக்குத் தெரிந்து இவ்விருவர் தான் தமிழ்த் திரையிசையில் இலக்கணத்தை ஏற்றியிருக்கிறார்கள்.

    உங்களுக்குத் தெரிந்து வேறாரேனும் இலக்கணத்தை ஏற்றியிருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்….

    நிரஞ்சன் பாரதி

    மகாகவி பாரதியாரின் பரம்பரையில் வந்த நிரஞ்சன் பாரதி, கவிஞராகவும் திரைப்படப் பாடலாசிரியராகவும் இயங்கிவருகிறார். இவர் எழுதிய பிரபலமான பாடல்கள், ‘மங்காத்தா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணாடி நீ, கண் ஜாடை நான்’, மற்றும் ‘பாகன்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘சிம்பா சம்பா’.
    நிரஞ்சன் பாரதி ‘புதிய தலைமுறை’ செய்தி சானலில் பணியாற்றிவருகிறார். இவரது வலைப்பதிவு: http://puthiyathalaimurai.tv/author/niranjanbharathi
     
    • சிவா கிருஷ்ணமூர்த்தி 3:31 pm on February 7, 2013 Permalink | Reply

      இந்தப் பதிவை படித்தவுடன் சட்டென சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஒரு படத்தின் பாடல் நினைவிற்கு வந்தது.
      விஜய், ஜோதிகா நினைவிருக்கிறது. என்ன படம் என்று தெரியவில்லை (வேண்டுமானால் மாலையில் தேடுகிறேன்!). கண்டிப்பாய் வணிக படம்தான் (அப்படியே இலக்கியவாதி மாதிரியே சொல்ல வருகிறது!)

      ஆனால் கீழ்க்கண்ட வரிகள் நினைவில் இருக்கின்றன:

      குறிலாக நானிருக்க நெடிலாக நீ வளர்க்க
      சென்னைத் தமிழ் சங்கத் தமிழ் ஆனதடி!

    • amas32 5:12 pm on February 8, 2013 Permalink | Reply

      Super Post! வைரமுத்துவின் பாடல்களில் இடம்பெற்ற இராசனைமிக்க இலக்கண வரிகளைச் சுட்டிக் காட்டி விளக்கியதற்கு நன்றி 🙂 இன்னிசை அளபெடை பற்றுய குறிப்பு அருமை! வலி மிகும் இடங்களும் வலி மிகா இடங்களும் இன்னும் எனக்குத் தெரியாது 😦

      amas32

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel