Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • என். சொக்கன் 10:50 pm on November 18, 2013 Permalink | Reply  

    உத்தரவின்றி உள்ளே வா 

    • படம்: ஜில்லுன்னு ஒரு காதல்
    • பாடல்: முன்பே வா
    • எழுதியவர்: வாலி
    • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
    • பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்
    • Link: http://www.youtube.com/watch?v=OHA_ATdgw_g

    நீ நீ மழையில் ஆட,

    நான் நான் நனைந்தே வாட,

    என் நாளத்தில் உன் ரத்தம்,

    நாடிக்குள் உன் சத்தம்!

    பள்ளியில் தமிழ் மீடியத்தில் அறிவியல் (அல்லது உயிரியல்) படித்தவர்களுக்கு இந்த வரிகளைப் படித்தவுடன் சட்டென்று அந்த ‘நாளம்’ என்ற சொல்லில் மனம் சென்று நிற்கும்.

    ’ரத்தக் குழாய்’ என்று நாம் பரவலாகச் சொல்லும் அதே வார்த்தைதான். ’ரத்த நாளம்’ என்று சொன்னால் இன்னும் அழகாக இருக்கிறது. நாளத்திற்கும் குழாய்க்கும் ஏதேனும் நுட்பமான வேறுபாடு உண்டா என்று தெரியவில்லை.

    அப்புறம் அந்த நாளமில்லாச் சுரப்பிகள்? தமனி? சிரை? தந்துகி? இந்த வார்த்தைகளையெல்லாம் கேட்கும்போது, மறுபடி ஒன்பதாங்கிளாஸுக்குத் திரும்பிவிடமாட்டோமா என்றிருக்கிறது!

    விஷயத்துக்கு வருவோம். நம் உடம்பு நிறைய இருக்கும் ரத்த நாளங்கள் பேச்சிலோ, சினிமாப் பாடல்களிலோ அதிகம் வருவதில்லை என்று நினைத்தேன். கொஞ்சம் தேடினால் ஒரு சில நல்ல உதாரணங்கள் சிக்கின:

    உயிர் உருகிய அந்த நாள் சுகம்,

    அதை நினைக்கையில்,

    ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் (வாலி)

    ***

    நாளங்கள் ஊடே

    உனதன்பின் பெருவெள்ளம் (மதன் கார்க்கி)

    ***

    ரத்த நாளங்களில் போடும் தாளங்களில்

    புதுத் தாலாட்டுதான் பாடுமா? (பொன்னியின் செல்வன்)

    ***

    மேளங்கள் முழங்குதுங்க, ரத்த

    நாளங்கள் துடிக்குதுங்க (டி. ராஜேந்தர்)

    ***

    ஒரே ஒரு ஆச்சர்யம், ”அறிவியல் கவிஞர்” வைரமுத்து இந்தச் சொல்லை இதுவரை பயன்படுத்தவில்லையோ?

    ***

    என். சொக்கன் …

    18 11 2013

    351/365

     

     
    • Uma Chelvan 6:52 am on November 19, 2013 Permalink | Reply

      நாளமில்லாச் சுரப்பிகள்……..endocrine glands ….that’s what I taught my students today. What a coincident….

      அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை!!
      அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும் -அது போல்
      இந்த நாள் வரும் உயிர் உருகிய அந்த நாள் சுகம். – அதை நினைக்கையில்
      ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் ………ஒரு நிமிஷம் கூட என்னை பிரியவில்லை

      மிக மிக அருமையான பாடல். இதை தான் முதல் பாடலாக நீங்க சொல்லி இருக்கீங்க!!! still I want to post this song again !!!

    • amas32 8:37 pm on November 19, 2013 Permalink | Reply

      எவ்வளவு ஆராய்ச்சிப் பண்ணியிருக்கீங்க ஒரு பதிவுக்கு! வைரமுத்து இந்த சொல்லை பயன்படுத்தவில்லை என்னும் அளவுக்கு research!

      //என் நாளத்தில் உன் ரத்தம்,// very romantic!

      ரொம்பப் பிடிச்சிருக்கு இந்த போஸ்ட் 🙂

      amas32

    • rajinirams 11:28 am on November 20, 2013 Permalink | Reply

      நல்ல பதிவு. என்ன அருமையான வாலியின் வரிகள் -உயிர் உருகிய அந்த நாள் சுகம்,அதை நினைக்கையில்,ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்,நீங்கள் சொன்னது போல வைரமுத்து அந்த வார்த்தையை உபயோகிக்காதது ஆச்சர்யமே.

    • நவநீதன் 9:34 pm on January 29, 2014 Permalink | Reply

      ”வந்து தூறல் போடு… இல்லை சாரல் போடு… எந்தன் நாளம் நனையட்டுமே…”

      வைரமுத்து

      படம்: க.கொ.க.கொ
      பாடல்: ஸ்மை யாயி..

  • G.Ra ஜிரா 4:22 pm on September 26, 2013 Permalink | Reply  

    காதலோடு ஒருத்தி 

    ஆண்டாளின் பாடல்களைப் புரிந்து கொள்ள என்ன தெரிய வேண்டும் என்று கேட்டால், “காதல் தெரிய வேண்டும்” என்பேன்.

    பொதுவாகவே காதலர் இருவர் கருத்தொருமித்து களித்து மகிழ்ந்திருப்பதே காதல் என்பது இலக்கணம். அதாவது முருகனையும் வள்ளியையும் போல.

    ஆனால் கடவுளைப் போல காதலும் எந்த இலக்கணத்துக்குள் கட்டுப்படுவதே இல்லை என்று உலகைப் பார்த்தால் புரிகிறது.

    பாடப்பட்ட காதல் ஆயிரம் வகை என்றால் பாடப்படாதவை கோடி வகைகள் இருக்கும்.

    ஆண்டாளின் காதல் வழக்கமான காதலில் இருந்து விலகியதுதான். ஏன் விலகியது?

    கண்ணோடு கண் பார்த்து… சொல்லோடு சொல் கேட்டு.. கையோடு கை சேர்த்து… மனம் சேர்ந்து உடல் சேர்ந்து இன்பம் சேர்ந்த காதலல்ல அவளது காதல்.

    அவன் தலைவன். பெரியவன். புகழ் வாய்ந்தவன். உலகம் பாராட்டும் ஒருவனை எட்டாத தூரத்தில் இருந்து எட்டும் எண்ணத்தால் காதலித்தாள் ஆண்டாள்.

    அதனால்தானோ என்னவோ… அவளுக்குத் திருமணம் கூட கனவில்தான் வந்தது.

    வாரணம் ஆயிரம் வந்ததும் அவைகளின் நடுவில் நாரணன் நம்பி வந்ததும் நடந்ததும்… அவனைப் பூரணப் பொற்குடம் வைத்து வரவேற்றதும்… அவன் கையால் திருமாங்கல்யம் கொண்டதும் கனவில்தான் நடந்தது. கனாக் கண்டேன் தோழி என்றுதானே சொல்லியிருக்கிறாள் ஆண்டாள்.

    இன்றைக்கு எத்தனையோ பெண்கள் திரைப்பட நடிகர்களை மனதுக்குள் விரும்புகிறார்களே… அதுவும் ஒருவகைக் காதல்தான். ஆண்டாள் காதல் என்றே அதை வகைப்படுத்தலாம். புத்திசாலிப் பெண்கள் அதிலிருந்து ஏதோ ஒரு நேரத்தில் வெளிவந்து விடுகிறார்கள்.

    ஆண்டாள் காதலில் இருந்து அப்படி வெளிவராதவள் தென்றல் திரைப்படத்துக் கதாநாயகி. எழுத்தை விரும்பியவள் எழுதியவனையும் விரும்பினால் அவள் தலையெழுத்தை எழுதியவனா சேர்த்து வைப்பான்?

    ஆண்டாளைப் போல அவளும் கனவில்தான் பாடினாள் ஆடினாள் கூடினாள். நினைவிலோ அவனை ஓயாமல் தேடினாள்.

    எங்கேயோ ஏதோ ஒரு தெய்வம் ஏதோவொரு மகிழ்ச்சியில் அவள் ஆசைக்கு வாழ்த்து சொல்லிவிட்டது. ஆம். எப்படியோ அவனை ஒரேயொரு இரவுக்கு கூட்டி வந்துவிட்டது.

    அவன் அத்தனை இரவுகளைக் கண்டவன். வகைவகையாய் பெண்களை உண்டவன். அவனுக்கு அது எத்தனையோ இரவுகளில் ஒரு இரவு. ஆனால் அவளுக்கு எத்தனையோ இரவுகளின் ஏக்கம் தீர்க்கும் ஓர் இரவு.

    இரவு முழுக்க அவன் மகிழ்ந்தான். வாழ்க்கையின் எல்லா இரவுகளுக்கும் சேர்த்து அவள் மகிழ்ந்தாள்.

    அந்த மகிழ்ச்சியைப் பாட்டில் எழுத வேண்டும் என்று சொன்னால்…..

    வித்யாசாகர் இசையில் இதை எழுதிய கவிஞர் பெயர் தெரியவில்லை. பாடியவர் ஷிரேயா கோஷல்.

    ஏ பெண்ணே ஏ பெண்ணே என்னாச்சு
    ஏனிந்த உற்சாகப் பெருமூச்சு

    ஏக்கத்தில்தானே பெருமூச்சு வரும்! உற்சாகத்தில் வருகிறது என்கிறார் கவிஞர். அவர் என்ன சொல்ல வருகிறார் என்று விளக்கிச் சொன்னால் எனக்கு இங்கிதம் இல்லை. விளக்கச் சொன்னால் கேட்டால் கேட்பவர்களுக்கு அனுபவங்கள் இல்லை.

    அவள் எத்தனை முறை அவள் உள்ளம் கவர்ந்த எழுத்தாளனுக்கு தூது விட்டிருப்பாள். அந்தத் தூதுகளை எல்லாம் எடுத்துச் செல்ல அன்னமும் மேகமும் தென்றலும் உதவவில்லை. உள்ளத்துக்கும் உள்ளத்துக்கும் தூது விட இவையெல்லாம் எதற்கு?

    உன் வீட்டை தேடி என்றும்
    என் அன்னம் வந்ததில்லை
    நான் சொல்லும் சேதி ஏந்தி
    என் தென்றல் சென்றதில்லை
    என் ஆசை நினைவை அள்ளி அள்ளி
    மேலே ஊற்றி கொள்வேன்

    ஓரிரவுதான் என்றாலும் ஆணும் பெண்ணும் கூடினால் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதுதானே. அவளுக்கும் ஒரு மகன் பிறந்தான். அவனைப் போலவே.

    நதியின் துளியொன்றை
    மகனாக வென்றேன்
    இது எங்கோ செல்லும் பாதை
    நான் தீயை தீன்ற சீதை
    என் கையில் கொஞ்சும் மழலை
    நான் வேண்டி பெற்ற சிலுவை
    என் நெஞ்சுக்குள்ளே ஆடும் ஆடும்
    நில்லா ஊஞ்சல் நீயே
    ஒரு போதும் என்னை நீங்கிச் செல்லா
    நீயும் எந்தன் தாயே

    யாரும் சுமக்க விரும்பி சிலுவையைக் கேட்பதில்லை. ஏசுநாதர் கூட “கடவுளே என்னை ஏன் கைவிட்டீர்” என்று சொன்னதாக பைபிள் சொல்கிறது. அப்படியெல்லாம் கேட்காமல் வேண்டிப் பெற்ற சிலுவையாய் மகனைச் சுமந்த தாய் அவள்.

    இவள் யார்? நல்ல பெண்ணா? நல்ல அன்னையா? நல்ல காதலியா? நல்ல சமூகப் பிரதிநிதியா? நல்ல ரசிகையா?

    இல்லை. எதுவுமே இல்லை. இவளும் கற்புக்கரசிதான் என்று கவிஞர் ஏற்றுக் கொள்கிறார். அதனால்தான் அவளை தீயைத் தின்ற சீதை என்கிறார். ஒருவகையில் பார்த்தால் ஆண்டாளையும் சீதையின் இடத்தில்தானே வைத்திருக்கிறோம்.

    சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது என்றும் ஒரு கவிஞர் எழுதினார். ஆனால் இந்த தென்றல் திரைப்படத்து ஆண்டாளின் காதல் சொர்க்கத்தில் சேர்ந்ததோ இல்லையோ… அவளுக்கென்றே உருவான சொர்க்கத்தில்தான் அவள் இருந்திருப்பாள்.

    அன்புடன்,
    ஜிரா

    299/365

     
    • Uma Chelvan 8:17 pm on September 26, 2013 Permalink | Reply

      பாபநாசம் சிவன், தன்னுடைய பாடலில், முருகனிடம் ..தனக்கு உள்ள காதலை …….தன் பிடிவாதத்தை …..இவள் பெரும் பிடிவ்வாத நோய் கொண்டாள்…….விரைந்து மருந்து தா!! என் தாய், தந்தை, பாடல், ஆடல் , வீட்டை, விளையாட்டை அனைத்துயும் மறந்து .கனவிலயும் உன்னை தான் நினைக்கிறன், இந்த பேதை தினமும் ஆறுமுகம் என்று உருகுகிறேன். யாருமிலாத தனி இடத்தில உன்னை நினைத்து கண்ணீர் வழிய இருக்கும் என்னிடம் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் பாரா முகத்துடன் இருக்கியே, இது நியாமா?? என்கிறார்.

      இன்னுமொரு பாடலில் கண்ணனிடம் தன் காதலை சொன்ன பின், நீ பெரிய கபட நாடகக்காரன் என்பது எனக்கு தெரியும். அந்த வேஷத்தை என்னிடம் காட்டதே என்கிறார்

      .பாடல்…சுவாமி நீ மனம் இறங்கி
      எழுதியவர் – பாபநாசம் சிவன்
      ராகம் .ஸ்ரீ ரஞ்சனி

    • Uma Chelvan 8:20 pm on September 26, 2013 Permalink | Reply

      புத்திசாலிப் பெண்கள் அதிலிருந்து ஏதோ ஒரு நேரத்தில் வெளிவந்து விடுகிறார்கள்…………YES and Thank you. These kind of words boost our moral value and push us forward no matter what !!!…………Don’t be a “good person” to “wrong people”.

    • Uma Chelvan 8:35 pm on September 26, 2013 Permalink | Reply

      I wish a very “HAPPY BIRTH DAY” to my beloved composer Mr. Papanasam Sivan. Today is his 123rd birth day. கண்ணனும் கந்தனும் உள்ள வரை இவர் பெயரும் நிலைத்து நிற்கும்.

  • G.Ra ஜிரா 7:51 pm on September 14, 2013 Permalink | Reply  

    இல்லமும் உள்ளமும் 

    1990களின் மத்தியில் வந்த ஒரு இந்திப் பாடல் திடீரென நினைவுக்கு வந்தது. எனக்கு மிகவும் பிடித்த பாடலும் கூட.

    Ghar se nikalte hi
    kuch door chalte hi
    Raste main hai uska ghar

    இந்த வரிகளின் பொருள் என்ன?

    வீட்டில் இருந்து புறப்பட்டு
    சற்று தொலைவு போனால்
    வழியில் அவள் வீடு உள்ளது

    மெட்டுக்குள் அழகாக உட்கார்ந்து கொண்ட இந்தி வரிகளை என்ன நினைத்து கவிஞர் எழுதினார் என்று யோசித்துப் பார்க்கிறேன். அவர் என்ன நினைத்தாரோ தெரியாது. ஆனால் எனக்கு இப்படித் தோன்றுகிறது.

    All roads lead to Rome என்று ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. எந்தச் சாலையில் போனாலும் அது ரோம் நகரத்துக்குச் செல்லும் என்பது அதன் பொருள். அதாவது ரோம் நகரம் அந்த அளவுக்குப் புகழ் வாய்ந்ததாம்.

    உலகத்துக்கு ரோம் நகரம் என்றால் அவனுக்கு அவள் வீடு. அவன் எந்தத் தெருவில் போனாலும் கால்களும் மனமும் அவனைக் கொண்டு சேர்க்கும் இடம் அவளுடைய வீடு. All roads lead to lover’s house.

    வீடு வரை உறவு என்று கண்ணதாசன் சொன்னதை உறவு இருக்கும் இடம் தான் வீடு என்று மாற்றிக் கொள்ளலாம்.

    ஜெண்டில் மேன் திரைப்படத்தில் செஞ்சுருட்டி ராகத்தில் “நாதவிந்து கலாதீநமோ நம” என்ற திருப்புகழின் சாயலில் அமைந்த பாடல் “என் வீட்டுத் தோட்டத்தில்” என்ற பாடல்.

    காதலி அவளுடைய காதலை அவளுடைய வீட்டுக்குச் சொல்லியிருக்கிறாள். வீடு என்றால்? தோட்டத்துப் பூக்கள், ஜன்னல் கம்பிகள், தென்னை மரங்கள், அந்த மரங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகிறாள்.

    என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்
    என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப் பார்
    என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப் பார்
    உன் பேரைச் சொல்லுமே!

    வீட்டில் உள்ளவர்களால் காதலுக்கு உதவி இருக்கிறதோ இல்லையோ. வீட்டால் உதவி இருக்கிறது. அவன் பெயரை அவள் அத்தனை முறை வீட்டிடமும் வீட்டில் இருக்கின்ற பொருட்களிடமும் சொல்லியிருக்கிறாள்.

    இதை வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் “நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை” பாடலில் இன்னும் அழகாகச் சொன்னார் கவிஞர் தாமரை.

    காதலன் தன்னுடைய காதலை காதலியிடம் சொல்கிறது போல காட்சியமைப்பு.

    நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
    நீருக்குள் மூழ்கிடும் தாமரை
    சட்டென்று மாறுது வானிலை
    பெண்ணே உன் மேல் பிழை

    ரசனை மிகுந்த வரிகள். தாமரை நீருக்குள் மூழ்குவதே இல்லை. வெள்ளத்து அணையது அதன் மலர் நீட்டம். ஆனால் காதல் வெள்ளம் பெருக்கெடுக்கும் போது தாமரையாவது தாவும் மரையாவது?

    அப்படிப் பட்ட காதலைச் சொல்லும் போது தன்னுடைய வீட்டைப் பற்றி அழகாகச் சொல்கிறான் அவன்.

    என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்

    அட! அசத்தி விட்டானே! ஆம். ஒருவருடைய வீட்டுக்குப் போனாலே அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். வீட்டை வைத்திருக்கும் பாங்கு மட்டுமல்ல… வீட்டில் இருப்பவர்களின் பாங்கினாலும்.

    இந்த ஒருவரியையே ஒரு நாள் ஒரு கனவு திரைப்படத்துக்காக ஒரு முழுப் பாடலாக்கித் தந்தார் வாலி. காதலன் காதலியை அவனுடைய வீட்டுக்கு கூட்டிச் செல்கிறான். அது வீடே அல்லது என்பது போல இருக்கிறது அவளுடைய அனுபவம். வீட்டில் மனிதர்கள் வாழ்கிறார்களா அல்லது தெய்வங்கள் குடியிருக்கின்றனவா என்று அவள் ஆனந்தமாக ஆச்சரியப்படுகிறாள்.

    ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன்
    அதுக்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்
    ஸ்ருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
    உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்

    திறந்த கதவு என்றும் மூடாது
    இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
    இது போல் இல்லம் ஏது சொல் தோழி

    வீடு என்ற சொல்லுக்கு என்ன பொருள் தெரியுமா? மிகமிகப் பழக்கமான சொல்தான். ஆனால் பொருள் பலருக்கும் தெரியாது. விடுவதனால் அது வீடு எனப்பட்டது. எதை விடுவதனால்? நமது துன்பங்களை விடுவதால் வீடு. நாம் துன்பங்களைப் படுவதால் அதற்குப் பெயர் பாடு. அது போல நாம் துன்பங்களை விடுவதால் அதற்குப் பெயர் வீடு.

    வாலி எழுதிய பாடலைப் போல ஒரு வீடு இருந்தால் துணிந்து காதலிக்கலாம். காதற்துணையையும் வீட்டுக்கு கூட்டிச் செல்லலாம்.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – என் வீட்டுத் தோட்டத்தில்
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுஜாதா
    இசை – ஏ.ஆர்.ரகுமான்
    படம் – ஜெண்டில்மேன்
    பாடலின் சுட்டி – http://youtu.be/Qg3uqQgizyI

    பாடல் – நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
    வரிகள் – கவிஞர் தாமரை
    பாடியவர் – ஹரிஹரன், தேவன், பிரசன்னா
    இசை – ஹாரிஸ் ஜெயராஜ்
    படம் – வாரணம் ஆயிரம்
    பாடலின் சுட்டி – http://youtu.be/QqI2woQjWK4

    பாடல் – காற்றில் வரும் கீதமே
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம், பவதாரிணி
    இசை – இளையராஜா
    படம் – ஒரு நாள் ஒரு கனவு
    பாடலின் சுட்டி – http://youtu.be/pnteqlhXlS4

    பாடல் – Ghar se nikhalte hi
    பாடியவர் – உதித் நாராயணன்
    பாடலின் சுட்டி – http://youtu.be/arK4ybYfH4k

    அன்புடன்,
    ஜிரா

    287/365

     
    • rajinirams 11:52 pm on September 14, 2013 Permalink | Reply

      இல்லத்தின் பெருமையை விளக்கும் அழகான பதிவு.கவியரசர் கண்ணதாசனின் அற்புத வரிகள்-இல்லம் சங்கீதம் அதில் ராகம் சம்சாரம்.கவிஞர் வாலியும் வீட்டை கோவிலாகவும் தன் பிள்ளைகளை தீபங்களாகவும் எடுத்துரைத்த வரிகள்-வீடு என்னும் கோவிலில் வைத்த வெள்ளி தீபங்களே-நாளை நமதே.ஒருவர் ஒரு வீட்டிற்கு புதிதாக போவதை வைத்தும் பாடல் உள்ளது-புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்-எங்க பாப்பா. இன்னொரு செண்டிமெண்டான பாடல்-வீடு தேடி வந்தது நல்ல வாழ்வு என்பது-பெண்ணின் வாழ்க்கை-வாலி எழுதியது.

    • Uma Chelvan 12:31 am on September 15, 2013 Permalink | Reply

      very nice write up!!!

      “மணி விளக்காய் நான் இருக்க! மாளிகையாய் தான் இருக்க” !!! தன் காதலனை மாளிகையாகவும் அதில் ஒளிரும் மணி விளக்காய் தன்னையும் …என்ன ஒரு அழகான, அருமையான உவமானம்!. வெள்ளி மணியாக ஒலிக்கும் சுசிலாவின் குரலில்!!

    • Uma Chelvan 5:36 pm on September 15, 2013 Permalink | Reply

      I tried to give the video link, instead the video clip it self is popping up due to some reason. I am sorry about that!!

    • amas32 9:24 am on September 17, 2013 Permalink | Reply

      அசத்திட்டீங்க ஜிரா இன்னிக்கு. அனைத்துப் பாடல்களும் அருமையான தேர்வு! வீடு என்று தமிழில் சொல்வது house என்ற பொருளிலும் இல்லம் என்பது home என்றும் கொள்ளலாமா? அன்புள்ள உறுப்பினர்கள் இருக்கும் வீடு அன்பான இல்லம் ஆகிறது. வீடு வெறும் கட்டிடம் தான். ஆனால் வீடு என்பது home என்ற பொருளில் தான் பெரும்பாலும் பயன்படுத்தப் படுகிறது.

      வீடு பேறு பெறுவதற்கு முதலில் நல்ல வீடு அமைந்து இல்லற சுகத்தை அனுபவித்துப் பின் துறக்க ரெடியாகலாம். நிறைய துறவிகள் இளம் வயதிலேயே மனம் பக்குப்படுவதற்கு முன்பே துறவறத்தை நாடி பின் பல வீடுகளை அழிக்க முற்படுகின்றனர். அவர்களுக்கு நிச்சயம் கிடைக்காது வீடு பேறு!

      amas32

  • G.Ra ஜிரா 12:34 pm on July 19, 2013 Permalink | Reply
    Tags: திருவிளையாடற் புராணம், பரஞ்சோதி முனிவர், விஜய் பிரகாஷ்   

    அணுவிலும் உளது 

    காதல் இருக்கிறதே காதல். அது உடம்பில் எங்கு இருக்கும்? காதல் ஆசை உடம்பின் எந்தப் புள்ளியில் உண்டாகிறது? காதல் எங்கே எங்கே என்ற இந்தக் கேள்விக்கு ஒரு விடை சொன்னார் கவிஞர் வைரமுத்து.

    காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை
    நியூட்ரான் எலக்ட்ரான் உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை
    உன்னை நினைத்தால் திசுக்கள் தோறும் ஆசைச் சிந்தனை
    படம் – எந்திரன்
    பாடல் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர்கள் – விஜய் பிரகாஷ், ஷ்ரேயா கோஷல்
    இசை – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்
    பாடலின் சுட்டி – http://youtu.be/J468i3eg87o

    காதல் எங்கு இருக்கும்? அங்கங்கள் எங்கெங்கும் காதல் இருக்குமென்று வைரமுத்து சொல்கிறார். அதனால்தால் காதலால் உண்டாகும் ஆசைச்சிந்தனைகள் உடம்பின் ஒவ்வொரு திசுவிலும் உண்டாகிறது என்கிறார்.

    எங்கே இருக்கும் என்ற கேள்விக்கு எங்கும் இருக்கும் என்பதே விடை.

    அதனால்தான் காதலால் கண்ணீர் கசிந்து புன்னகை பெருகி அறிவு மயங்கி இதயம் படபடத்து மேனி சிலிர்க்கிறது.

    உலகமெங்கும் கடவுள் இருப்பது போல உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் காதல் உணர்வு இருக்கிறது.

    காதலைப் பற்றி வைரமுத்து சொன்னார். கடவுளைப் பற்றி பரஞ்சோதி முனிவர் சொன்னார்.

    பரஞ்சோதி முனிவர் யார் தெரியுமா? அவர் தான் திருவிளையாடற் புராணம் எழுதியவர்.

    அந்த திருவிளையாடற் புராண நூலின் தொடக்கத்தில் விரிசடைக் கடவுளையும் பராசக்தியையும் முருகக் கடவுளையும் சமயக்குரவர்களையும் போற்றி வாழ்த்துகள் பாடியிருக்கிறார்.

    அப்படிப் பாடும் போது ஒரு பாட்டை இப்படிப் பாடியிருக்கிறார்.

    அண்டங்கள் எல்லாம் அணுவாக அணுக்களெல்லாம்
    அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும்
    அண்டங்கள் உள்ளும் புறம்பும் கரியாயினானும்
    அண்டங்கள் ஈன்றாள் துணையென்பர் அறிந்த நல்லோர்

    இங்கும் அணுக்களைப் பற்றிதான் பேச்சு. உடம்பில் இருக்கும் அணுக்கள் மட்டுமல்ல. உலகம் முழுவதும் இருக்கும் எல்லா அணுக்களையும் பற்றிய பேச்சு.

    அண்டம் என்பது மிகப் பெரியது. அந்த மிகப் பெரிய அண்டங்கள் எல்லாம் அணுவளவுக்கும் சிறியது என்று எண்ணும்படியாக பெரிய உருவெடுத்து நின்றார் சிவபெருமான்.

    அணுக்கள் மிகச்சிறியவை. வெற்றுக் கண்கொண்டு காண முடியாதவை. அந்த அணுக்களெல்லாம் அண்டங்கள் என்று பெரிதாகத் தோன்றும் படிக்குச் சிறியதாகவும் தோன்ற வல்லார் விழிநுதலார்.

    அதாவது இறைவன் பெரியவைகளுக்கெல்லாம் பெரியவன் சின்னவைகளுக்கெல்லாம் சின்னவன் என்று சொல்கின்றார்.

    ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்? அண்டங்களுக்குள் அடங்கியும் அண்டங்களுக்கு வெளியிலும் விரிந்தவன் இறைவன் என்கிறார் பரஞ்சோதி முனிவர்.

    அண்டங்கள் அணுக்களால் ஆனவை. ஆகையால் இறைவன் அணுக்களுக்குள் அடங்க வேண்டுமானால் அணுவை விடச் சிறியவனாக இருக்க வேண்டும். அம்மாதிரியே அண்டங்கள் எல்லாம் அவனுக்குள் அடக்கமென்றால் அவன் அண்டங்களையெல்லாம் பெரிதாக இருக்க வேண்டும்.

    இப்படி அனைத்தையும் கடந்தும் அனைத்திற்கும் உள்ளும் இருப்பதால்தான் இறைவனைக் கடவுள் என்று தமிழ் போற்றுகிறது.

    இத்தகைய பண்பு நலன்களைக் கொண்ட ஈசனுக்குத் துணை யார் தெரியுமா? அண்டங்களை எல்லாம் ஈன்ற பராசக்தி. ஆக உலகத்தின் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்திருக்கும் இறைவனின் ஒவ்வொரு அணுவிலும் இறைவி என்னும் காதல் நீக்கமற நிறைந்திருக்கிறது.

    இதே கருத்தைத்தானே வைரமுத்து “திசுக்கள் தோறும் ஆசைச் சிந்தனை” என்றார்.

    அன்புடன்,
    ஜிரா

    230/365

     
    • amas32 10:28 pm on July 19, 2013 Permalink | Reply

      முன் ஜென்ம வாசனையும் இப்படித் தான் உடலும் உள்ளமும் பரவியிருக்குமோ?

      உணர்வுகள் எந்த ஒரு தனிப்பட்ட இடம் என்றில்லாமல் உடல்/உள்ளம் எங்கும் வியாபிக்கும். அதில் தலையாயது பசி தான். பசி வயிற்றைக் கிள்ளினாலும் உடல் முழுவதும் அதன் தாக்கம் தெரியும். அன்பும் காதலும் கூட ஒரு வகை பசி தானே!

      amas32

  • G.Ra ஜிரா 11:04 am on March 19, 2013 Permalink | Reply
    Tags: நேதாஜி   

    மன்னிப்பு எனும் மாண்பு 

    காதலர்களுக்குள் காதல் இருக்கும். அந்தக் காதலுக்குள் என்னவெல்லாம் இருக்கும்?

    கூடல், பாடல், நாடல், ஊடல் எல்லாமிருக்கும்.

    இந்த ஊடல் வந்துவிட்டால் போதும்… எப்படியாவது மன்னிப்பு கேட்டுக்கொள்ள மனம் தவிக்கும். மன்னிப்பு கிடைக்கும் வரை ஊடல் தீர்வதில்லை. மன்னிப்பு கிடைத்த பின் கூடல் விடுவதில்லை. இந்த மன்னிப்பெல்லாம் உள்ளங்கள் ஒத்திணைந்த காதலர்களிடத்தில்தான் வேலைக்காகும்.

    ஆனால் எப்படியெல்லாம் மன்னிப்பு கேட்கலாம்? எதற்கெல்லாம் மன்னிப்பு கேட்கலாம்? காலங்காலமான விதம்விதமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள் திரைப்படக் காதலர்கள்.

    ஒரு நாள் சிரித்தேன்
    மறுநாள் வெறுத்தேன்
    உனைக் கொல்லாமல் கொன்று புதைத்தேன்
    மன்னிப்பாயா மன்னிப்பாயா
    படம் – விண்ணைத் தாண்டி வருவாயா
    பாடல் – தாமரை
    பாடியவர்கள் – ஏ.ஆர்.ரஹ்மான், ஷ்ரேயா கோஷல்
    இசை – ஏ.ஆர்.ரஹ்மான்

    காதலின் கூடலில் சிரிப்பும் ஊடலில் வெறுப்பும் வரும். அதுதான் கூடிய ஒருநாளில் சிரித்தேன் என்றும் ஊடலாடிய மறுநாளில் வெறுத்தேன் என்றும் பாடல் வரிகளாயிற்று.

    எப்போதும் கூட இருக்க முடியாத பிரிவு என்னும் சித்திரவதை மிகுந்து ஒருவரையொருவர் கொல்லும் காதலை இதயத்தில் புதைத்தால் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டியதுதானே.

    இந்த மன்னிப்பெல்லாம் எல்லாக் காதலிலும் உண்டு. எங்கும் இல்லாத புதுமையான மன்னிப்பை ஒரு காதலி கேட்கிறாள். ஆம். இருமலர்கள் படத்திற்காக பி.சுசீலாவின் குரலில் அந்தக் காதலி மன்னிப்பு கேட்கிறாள்.

    மன்னிக்க வேண்டுகிறேன்
    உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்
    என்னைச் சிந்திக்க வேண்டுகிறேன்
    கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
    மன்னிக்க வேண்டுகிறேன்
    படம் – இருமலர்கள்
    பாடல் – வாலி
    பாடியவர்கள் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

    இது ஒரு சீண்டல் மன்னிப்பு. அவளுக்கு அவன் மேல் காதல். அவன் அவளைப் பார்க்க வேண்டும். அவளைப் பற்றியே சிந்திக்க வேண்டும். அவள் கண்களைக் கண்களால் நோக்க வேண்டும். இப்படியெல்லாம் சீண்டிச் சீண்டி காதல் செய்வதால் அவளை அவன் மன்னிக்க வேண்டுமாம். நல்ல கூத்தாக இருக்கிறது அல்லவா.

    இப்படி மன்னிப்பு கேட்டால் காதலன் சும்மாயிருப்பானா? அவன் மன்னிப்பதற்குப் பேரம் பேசுகிறான்.

    தித்திக்கும் இதழ் உனக்கு
    என்னென்றும் அது எனக்கு
    நாம் பிரிவென்னும் ஒருசொல்லை மறந்தாலென்ன

    இப்படிப் பேரம் பேசி மன்னித்தாலும் அது இன்பத்தில்தான் முடியும் என்று அந்தக் காதலர்களுக்குத் தெரியும்.

    இன்னொரு காதலன். அவனுக்கொரு காதலி. அடிக்கடி சண்டை. முதலில் அவன் தவறு செய்தான். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டான். அவள் மன்னிக்கவில்லை. இருவரும் பிரிந்தனர். சில காலம் சென்று அவளுக்கு தவறு புரிந்தது. அவனைச் சேர நினைத்தாள். அவன் எப்படி மன்னிப்பு கேட்டாளோ அதே வரிகளால் இவளும் மன்னிப்பு கேட்டாள். பிறகென்ன. பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ!

    மன்னிக்க மாட்டாயா
    உன் மனமிரங்கி
    நீயொரு மேதை
    நானொரு பேதை
    நீ தரும் சோதனை
    நான் படும் வேதனை போதும்
    மன்னிக்க மாட்டாயா
    படம் – ஜனனி
    பாடல் – நேதாஜி
    பாடியவர்கள் – பி.சுசீலா, கே.ஜே.ஏசுதாஸ் (தனித்தனிப் பாடல்கள்)
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

    நல்ல வேளை. காதலர்களுக்கு மன்னிப்பு என்றொரு சொல் இருக்கிறது. வாழ்க மன்னிப்பு! வளர்க மன்னிப்பு!

    பதிவில் இடம் பெற்ற பாடல்களின் சுட்டிகள்.

    ஒரு நாள் சிரித்தேன் – http://youtu.be/4XXPy_VmCME
    மன்னிக்க வேண்டுகிறேன் – http://youtu.be/BkzwCuG3HP0
    மன்னிக்க மாட்டாயா – http://youtu.be/JYVMapK0ChU
    ஜனனி திரைப்படம் பற்றிய ஒரு பார்வை – http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=4723

    அன்புடன்,
    ஜிரா

    108/365

     
    • Sharmmi Jeganmogan 1:38 pm on March 19, 2013 Permalink | Reply

      சுவாரசியமான பாடல்களும் விலக்கங்களும்.. நன்றி..

    • Arun Rajendran 2:21 pm on March 19, 2013 Permalink | Reply

      ரகுமான் ஒரு பேட்டியின் போது கூட “பெண்கள் அவ்வளவு சுலபமா மன்னிப்பு கேட்க மாட்டாங்க …அதுக்காகவே இந்தப் பாட்ட வெச்சா கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்னு தோனுச்சு”னு சொன்னார்..அதுவும் ஒரு பெண் கவிஞர வெச்சுப் பாட்ட எழுதச் சொன்னது ரொம்ப சிறப்பு…இலக்கிய குறிப்புகள் இந்தத் தடவ தரல ஜிரா சார்? 😦

    • amas32 (@amas32) 6:23 pm on March 19, 2013 Permalink | Reply

      விண்ணைத் தாண்டி வருவாயாவில் தாமரை எழுதிய பாடல் இன்றைய இளைஞர்களின் ஊடலைப் பற்றியது. மன்னிப்பாயா என்று கேட்பதில் கெஞ்சலை விட ஒரு உரிமை அதிகம் உள்ளது. எனக்கு மிகவும் பிடித்தப் பாடல். ரஹ்மான் & ஷ்ரேயா கோஷல் பாடிய விதம், வரிகள் இரண்டுமே பிடிக்கும். இதில் நடுவில் அன்பின் பெருமையைச் சொல்லும் மூன்று குறள்கள் வருவது மனத்திற்கு இதம். It talks about unconditional love, so where is the need to forgive?

      “வரம் கிடைத்தும் நான் தவறவிட்டேன், மன்னிப்பாயா” அருமையான வரி!

      வாலி வரிகளில் “மன்னிக்க வேண்டுகிறேன்” என்று சுசீலா தேன் குரலில் பாடும் பாடலும் அதி அற்புதம்.
      “கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்” எவ்வளவு உண்மையான வரி! கோபத்தில் பாராமுகமே உச்சக் கட்ட வலி. இந்தப் பாடலும் காதலர்களிடம் இருக்கும் அன்னியோனியத்தைக் காட்டும் ஒரு பாடலே. மிகவும் இனிமை.

      எப்பவும் போல மூளைக்கு விருந்து கொடுத்திருக்கும் உங்களுக்கு நன்றி ஜிரா 🙂

      amas32

    • psankar 4:38 pm on March 20, 2013 Permalink | Reply

      மன்னிப்பது நல்ல செய்கை 🙂 #அவ்ளோதான்

  • என். சொக்கன் 7:49 am on February 4, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு : இசைவழி இலக்கணம் 

    நாம் பள்ளிப்பருவத்தில் தமிழ் படிக்கும் போது தமிழாசிரியர் இலக்கண இலக்கியங்களைக் கற்றுக் கொடுத்திருப்பார்.

    உரைநடைப்பகுதி, செய்யுள் பகுதி, இலக்கணப் பகுதி, துணைபாடப் பகுதி என்று நம் தமிழ் பாடத்தைப் பிரித்திருப்பார்கள்.

    இதில் பெயர்ச்சொல், வினைச்சொல், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம் என்றெல்லாம் தொடங்கி கடைசியில் புணர்ச்சி விதி, பகுபத உறுப்பிலக்கணம் வரை போகும்.

    என்ன இது, நான்கு வரி நோட்டில் இலக்கணத்தைப் பற்றிப் பேசுகிறேன் என்று பார்க்கிறீர்களா ?

    தொடர்பு இருக்கிறது.

    ஒவ்வொரு கவிஞருக்கும் ஒரு தனித்தன்மை இருப்பது போல வைரமுத்து அவர்களுக்கு ஒரு சிறப்பான தனித்தன்மை உண்டு. அவர் , நாம் சிறு வயதில் படித்த இலக்கணத்தையெல்லாம் எந்த ஒரு இலக்கணப் பா வகையிலும் சேராத திரையிசைப் பாடல்களில் புகுத்தியிருக்கிறார்.

    ராவணன் படத்தில் வருகின்ற , அய்ஷ்வர்யா ராய் பாடுகின்ற கள்வரே கள்வரே என்ற பாடலில் (http://www.youtube.com/watch?v=XQ46R4yRGZ8)

    வலி மிகும் இடங்கள் , வலி மிகா இடங்கள் தமிழுக்குத் தெரிகின்றதே

    வலி மிகும் இடங்கள், வலி மிகா இடங்கள் உங்களுக்குத் தெரிகின்றதா

    என்று எழுதுகிறார். என்ன ஒரு அழகான கற்பனை இது.

    தமிழில் வலி மிகும் இடங்கள் என்பது ஒற்று மிகும் இடங்கள். வலி மிகா இடங்கள் என்பது ஒற்று மிகா இடங்கள்.

    இதே போன்று, ஜீன்ஸ் படத்தில் வருகின்ற கண்ணோடு காண்பதெல்லாம் என்ற பாடலில், என்னையும் உன்னையும் யாராலும் பிரிக்க முடியாது என்று சொல்வதற்கு அய்ஷ்வர்யா ராய் என்ன பாடுகிறாள் பாருங்கள்(http://www.youtube.com/watch?v=fZXlCdySjcg)

    சல சல சல இரட்டைக் கிளவி
    தக தக தக இரட்டைக் கிளவி
    உண்டல்லோ தமிழில் உண்டல்லோ

    பிரித்து வைத்தல் நியாயம் இல்லை
    பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
    இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ

    என்னமாய் இலக்கணத்தோடு காதலைக் கலந்திருக்கிறார் கவிஞர். அத்தனையும் வைர வரிகள் 🙂 🙂

    அஜித் நடித்த வரலாறு படத்தில்

    இன்னிசை அளபெடையே, அமுதே, இளமையின் நன்கொடையே என்று எழுதுகிறார்.(http://www.youtube.com/watch?v=QNN1chrIfIs)

    அளபெடை என்றால் என்ன ?

    அண்மையில் நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியிலிருந்து நான் வாங்கிய “மாணவன் தமிழ் இலக்கணம்” என்ற நூலில்
    அளபெடைக்குக் கொடுத்திருக்கும் விளக்கம் இது தான் :

    செய்யுளில் ஓசை குறையும் போது அதை நிறைவு செய்ய 2 மாத்திரை அளவுடைய நெட்டெழுத்துகள் 3 மாத்திரையாக அளவு கூடி ஒலிக்கும். அவ்வாறு அளபெடுத்ததற்கு அடையாளமாக நெட்டெழுத்திற்கு இனமான குற்றெழுத்து அடுத்து எழுதப்படும். நெடில் , 2 + குறில், 1 = 3 மாத்திரை.இப்படி 3 மாத்திரைகளாக உயிர் அளபெடுப்பதே அளபெடை எனப்படும்(அளபு + எடை = அளவு எடை கூடுதல்).

    இதில் இன்னிசை அளபெடை என்றால் என்ன ?

    செய்யுளில் ஓசை குறையாத இடத்தில் இனிய இசைக்காக குற்றெழுத்துகள் நெட்டெழுத்துகளாக மாறி அளபெடுக்கும். ஈரசைச் சொற்கள் மூவசைச் சொற்களாக மாறி அளபெடுப்பது இன்னிசை அளபெடை

    எ.கா: கெடுப்பதும் என்பது கெடுப்பதூஉம் என்று அளபெடுத்தது.

    கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
    எடுப்பதூஉம் எல்லாம் மழை

    இதென்ன பிரமாதம். குரு என்ற படத்தில் மல்லிகா ஷெராவத் துருக்கி ஆடலழகிகளோடு ஆடும் மய்யா மய்யா என்கிற ஐட்டம் பாட்டில் கூட வைரமுத்து தமிழ்ப் பாடத்தை நுழைத்திருக்கிறார். எப்படி ? இப்படி.

    திரி குறையட்டும் தெரு விளக்கு, நீ இடம் சுட்டிப் பொருள் விளக்கு, அந்தக் கடவுளை அடையும் வழியில் என் பேர் எழுதிருக்கு

    (http://www.youtube.com/watch?v=ztFcz9YToNA)

    இடம் சுட்டிப் பொருள் விளக்குக என்ற தமிழ் ஒன்றாம் தாளில் வரும். நினைவுக்கு வருகிறதா ? அப்படியென்றால் என்ன ?

    விக்கிப்பீடியா கொடுக்கும் விடையைப் பாருங்கள் :-

    “இடஞ்சுட்டிப் பொருள் விளக்குதல் (Explaining with reference to Context) என்பது இலக்கியம் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் திறனைச் சோதிக்கும் தேர்வு வினா வகைகளுள் ஒன்றாகும். இது எழுத்துத் தேர்விலேயே பெரும்பாலும் வினவப்படும். ஒரு இலக்கிய படைப்பில் (கவிதை, உரைநடை அல்லது நாடகம்) இருந்து சில வரிகள் கொடுக்கப்படும். மாணவர்கள் அந்த வரிகளைக் கண்டு அது எந்த நூலில் இடம் பெற்ற வரிகள், யார் யாரிடம் கூறுவதாய் அமைந்தது மற்றும் அவ்வரிகளின் பொருள் ஆகியவற்றை விளக்க வேண்டும்.”

    ஆக. நம் தமிழின் பெருமையைத் துருக்கி அறியச் செய்த பெருமை வைரமுத்துவுக்கு உண்டு 🙂 🙂

    வைரமுத்து மட்டுமல்ல. பா விஜய் அவர்களும் ஒரு பாட்டில் இலக்கணத்தை நுழைத்திருக்கிறார்.

    மதுர படத்தில் இடம்பெறும் “இலந்தைப் பழம் இலந்தைப் பழம் உனக்குத் தான்” என்ற இரட்டை அய்ட்டம் பாடலில் ,(http://www.youtube.com/watch?v=Bd_j7419p14)

    தேமா உனக்குத் தான் புளிமா உனக்குத் தான், மாமா நான் உனக்கே தான் ……… என்று தேஜாஸ்ரீயும், ரக்ஷிதாவும் விஜய்யைப் படுத்தும் இடத்தில் சீர் பிரித்துப் பார்க்கிறார் கவிஞர் யார் சீரும் சிறப்பும் மிக்கவர்கள் என்று 🙂 🙂

    தமிழ்த் திரையிசையில் பல பாடலாசிரியர்கள் இலக்கணத்தை மாற்றியிருக்கிறார்கள். ஆனால், எனக்குத் தெரிந்து இவ்விருவர் தான் தமிழ்த் திரையிசையில் இலக்கணத்தை ஏற்றியிருக்கிறார்கள்.

    உங்களுக்குத் தெரிந்து வேறாரேனும் இலக்கணத்தை ஏற்றியிருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்….

    நிரஞ்சன் பாரதி

    மகாகவி பாரதியாரின் பரம்பரையில் வந்த நிரஞ்சன் பாரதி, கவிஞராகவும் திரைப்படப் பாடலாசிரியராகவும் இயங்கிவருகிறார். இவர் எழுதிய பிரபலமான பாடல்கள், ‘மங்காத்தா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணாடி நீ, கண் ஜாடை நான்’, மற்றும் ‘பாகன்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘சிம்பா சம்பா’.
    நிரஞ்சன் பாரதி ‘புதிய தலைமுறை’ செய்தி சானலில் பணியாற்றிவருகிறார். இவரது வலைப்பதிவு: http://puthiyathalaimurai.tv/author/niranjanbharathi
     
    • சிவா கிருஷ்ணமூர்த்தி 3:31 pm on February 7, 2013 Permalink | Reply

      இந்தப் பதிவை படித்தவுடன் சட்டென சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஒரு படத்தின் பாடல் நினைவிற்கு வந்தது.
      விஜய், ஜோதிகா நினைவிருக்கிறது. என்ன படம் என்று தெரியவில்லை (வேண்டுமானால் மாலையில் தேடுகிறேன்!). கண்டிப்பாய் வணிக படம்தான் (அப்படியே இலக்கியவாதி மாதிரியே சொல்ல வருகிறது!)

      ஆனால் கீழ்க்கண்ட வரிகள் நினைவில் இருக்கின்றன:

      குறிலாக நானிருக்க நெடிலாக நீ வளர்க்க
      சென்னைத் தமிழ் சங்கத் தமிழ் ஆனதடி!

    • amas32 5:12 pm on February 8, 2013 Permalink | Reply

      Super Post! வைரமுத்துவின் பாடல்களில் இடம்பெற்ற இராசனைமிக்க இலக்கண வரிகளைச் சுட்டிக் காட்டி விளக்கியதற்கு நன்றி 🙂 இன்னிசை அளபெடை பற்றுய குறிப்பு அருமை! வலி மிகும் இடங்களும் வலி மிகா இடங்களும் இன்னும் எனக்குத் தெரியாது 😦

      amas32

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel