Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • என். சொக்கன் 10:02 pm on November 4, 2013 Permalink | Reply  

    ”ஓ” போடு 

    • படம்: பார்த்தேன் ரசித்தேன்
    • பாடல்: எனக்கென ஏற்கெனவே
    • எழுதியவர்: வைரமுத்து
    • இசை: பரத்வாஜ்
    • பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், ஹரிணி
    • Link: http://www.youtube.com/watch?v=Y2_9E4M4zWo

    எனக்கென ஏற்கெனவே பிறந்தவள் இவளோ!

    இதயத்தைக் கயிறு கட்டி இழுத்தவள் இவளோ!

    தமிழில் ’ஓ’ என்ற எழுத்து ஒரு பெயர்ச் சொல்லோடு ஒட்டி வந்தால், அது சந்தேகத்தைக் குறிப்பிடும்.

    ‘நான்’ என்றால் உறுதிப்பொருள், ‘நானோ’ என்றால் சந்தேகம்! (”டாடா நானோ” அல்ல!)

    ‘அவன்’ என்றால் உறுதிப்பொருள், ‘அவனோ’ என்றால் சந்தேகம்!

    ஆகவே, இந்தப் பாடலில் ‘எனக்கென ஏற்கெனவே பிறந்தவள் இவளோ’ என்றால், காதலனுக்கு இன்னும் அவள்தான் தன்னுடைய காதலி, பின்னர் தன் மனைவியாகப்போகிறவள் எனும் நம்பிக்கை வரவில்லையோ? அதனால்தான் கொஞ்சம் சந்தேகமாகவே பாடுகிறானோ?

    காதலனுக்குச் சந்தேகம் வரலாம், கவிஞருக்கு வரலாமா? அவள்தான் என்று உறுதியாக அடித்துச் சொல்லவேண்டாமோ?

    வைரமுத்து அதைதான் செய்திருக்கிறார், தண்டியலங்காரத்தில் ‘அதிசய அணி’ என்று குறிப்பிடப்படும் அணியின்கீழ் வருகிற ‘ஐய அதிசயம்’ என்ற வகையில் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார்.

    ’ஐய அதிசயம்’ என்றால் ஐயப்படுவதன்மூலம் (சந்தேகப்படுவதன்மூலம்) ஒரு பொருளை உயர்த்திச் சொல்வது. ‘இவளோ’ என்றால், இங்கே ‘இவள்தான்’ என்று அர்த்தம்!

    உதாரணமாக, காதலியைப் பார்த்து ஒருவன், ‘அடியே நீ வெண்ணிலவோ, பூங்கொத்தோ, தேவதையோ, அப்ஸரஸோ, ஹன்ஸிகாவோ, நஸ்ரியாவோ’ என்றெல்லாம் வரிசையாக “ஓ” போட்டால், அதெல்லாம் சந்தேகம் அல்ல, நீதான் வெண்ணிலவு, நீதான் பூங்கொத்து, நீதான் தேவதை என்று உறுதியாகச் சொல்லி அவளை உயர்த்திப் பேசுவதாக அர்த்தம்!

    ஆஹா, இதுவல்லவோ கவிதை!

    ***

    என். சொக்கன் …

    04 11 2013

    337/365

     
    • Kannan 10:45 pm on November 4, 2013 Permalink | Reply

      Super. O Podu

    • rajinirams 11:45 pm on November 4, 2013 Permalink | Reply

      “ஐய அதிசயம்’ பற்றி எடுத்துரைத்த அருமையான பதிவு.-நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற “அழகோ”…குடந்தையில் பாயும் காவிரி அலை தான் காதலியே உன் “பூங்குழலோ”-மதுரையில் பிறந்த -பாடல் இப்படி ….. நன்றி.

    • amas32 9:18 pm on November 5, 2013 Permalink | Reply

      நீ தான் என் நஸ்ரியாவோ, நயந்தாராவோ என்றால் காதலியிடம் இருந்து அடி தான் கிடைக்கும். காதலி has to be exclusive/special 🙂 நிலவோடு, காப்பியத் தலைவிகளோடு தைரியமாக ஒப்பிடலாம் ஏனென்றால் நிலவு ஒரு அற்புத அழகின் சின்னம், காவியத் தலைவிகளோ இன்று உயிருடன் இல்லை 🙂

      amas32

    • lotusmoonbell 9:20 pm on November 6, 2013 Permalink | Reply

      ஓ ஓ போட்டுவிட்டேன். நாலு வரிக்கு ஜே போடு!

  • என். சொக்கன் 12:30 pm on October 6, 2013 Permalink | Reply  

    இயந்திரப் படைப்பா அவள்? 

    • படம்: இந்தியன்
    • பாடல்: டெலிஃபோன் மணிபோல்
    • எழுதியவர்: வைரமுத்து
    • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
    • பாடியவர்கள்: ஹரிஹரன், ஹரிணி
    • Link: http://www.youtube.com/watch?v=SfHbknfOOuA

    சோனா, சோனா, இவள் அங்கம் தங்கம்தானா,

    சோனா, சோனா, இவள் லேட்டஸ்ட் செல்லுலார் ஃபோனா

    கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா?

    கடைக்குச் செல்கிறோம். அழகிய சிலை ஒன்றை வாங்குகிறோம். விலை ஐயாயிரம் ரூபாய்.

    பக்கத்திலேயே, கிட்டத்தட்ட அதேமாதிரி இன்னொரு சிலை இருக்கிறது. அதன் விலை ஐம்பதாயிரம் என்கிறார்கள்.

    ஏன் இந்த விலை வித்தியாசம்? இரண்டும் ஒரே சிலைதானே?

    கடைக்காரர் சிரிக்கிறார். ‘சார், இது மெஷின்ல தயாரிச்சது, ஸ்விட்சைத் தட்டினா இந்தமாதிரி நூறு சிலை வந்து விழும், ஆனா அது கையால செஞ்சது, handmadeங்கறதால இந்தமாதிரி இன்னொண்ணை நீங்க பார்க்கவே முடியாது, அதுக்குதான் மதிப்பு அதிகம், காசும் அதிகம்!’

    அப்படியானால் இந்தப் பாடலில் கதாநாயகியை ‘கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா?’ என்று வைரமுத்து எழுதுவது புகழ்ச்சியா? அல்லது, நீயும் template அழகிதான் என்று மட்டம் தட்டுகிறாரா? 🙂

    சுவையான குழப்பம், அந்தக் காதலிக்குச் சொல்லிவிடாதீர்கள், பாடிய காதலன் பாடு பேஜாராகிவிடும்!

    கிட்டத்தட்ட இதேமாதிரி ஒரு புகழ்ச்சியை சீதைக்குக் கம்பரும் செய்கிறார். ஆனால் அவர் காலத்தில் கம்ப்யூட்டர் இல்லை. ஆகவே, ’ஆதரித்து, அமுதத்தில் கோல் தோய்த்து, அவயவம் அமைக்கும் தன்மை யாது என்று திகைக்கும்’ என்கிறார்.

    அதாவது, சீதையைப் படமாக வரைய விரும்பிய மன்மதன் அமுதத்தில் தூரிகையைத் தோய்த்து வரையத் தொடங்கினானாம். ‘இந்த அழகை எப்படி வரையமுடியும்?’ என்று திகைத்து நின்றானாம். அப்படி ஓர் அழகு சீதை!

    ஒருவேளை இந்தப் பாட்டு சீதைக்கும் ராமனுக்கும் டூயட் என்றால், ரஹ்மான் தந்த இதே மெட்டில் கம்பரின் சிந்தனையை  ’அமுதத்தில் கோல்தோய்த்து அந்த மாரன் திகைத்தானா?’ என்று பொருத்திவிடலாம்!

    ***

    என். சொக்கன் …

    06 10 2013

    309/365

     
    • lotusmoonbell 12:45 pm on October 6, 2013 Permalink | Reply

      பிரம்மாவுக்குக் கூட கம்ப்யூட்டர் படைப்புத் தொழில் செய்யத் தேவைப்படுகிறது. கம்பனோ கற்பனைத் தேனில் ஊறித் திளைத்து, திகைக்க வைக்கும் கவிதை படைத்துள்ளார். உண்மையான படைப்பாளி கம்பர்தான்!

    • mokrish 8:01 am on October 8, 2013 Permalink | Reply

      // கம்ப்யூட்டர் கொண்டிவளை // – இது Computer Aided Design தானே? இதில் கம்ப்யூட்டர் வெறும் எழுது கருவிதானே? கவிஞர் அதை Assembly line production என்ற தொனியில் சொல்லவில்லையே. அதனால் No problem

    • amas32 10:10 pm on October 8, 2013 Permalink | Reply

      பிரம்மன் படைப்புக்களும் விஸ்வகர்மாவின் கட்டிடங்களும் மனத்தில் தோன்றி நொடிப் பொழுதில் வெளியில் வியாபிக்கும் தன்மையுடையவை என்று நினைக்கிறேன்.

      //கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா?// என்பதை புதிய டெக்னிக் பயன்படுத்தி இதுவரை பூலோகத்தில் இல்லாதப் படைப்பை பிரம்மன் செய்துள்ளான் என்றே பொருள் என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால் காதலி must be happy only :-))

      amas32

  • என். சொக்கன் 10:30 pm on September 30, 2013 Permalink | Reply  

    காதல் கரம் 

    • படம்: இருவர்
    • பாடல்: ஹல்லோ மிஸ்டர் எதிர்க்கட்சி
    • எழுதியவர்: வைரமுத்து
    • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
    • பாடியவர்: ஹரிணி
    • Link: http://www.youtube.com/watch?v=JqgwTxDeOa8

    காதலா, காதலா, உனை நான் விடமாட்டேன்,

    கைத்தலம் பற்றுவேன், பிரிய விடமாட்டேன்,

    கண்கள் மீதாணை, அழகு மீதாணை, விடவே விடமாட்டேன்!

    ’கைத்தலம்’ என்ற சொல்லை நம்மிடையே மிகவும் பிரபலப்படுத்தியவர்கள், இரண்டு கவிஞர்கள். ஒன்று ஆண்டாள், இன்னொன்று அருணகிரிநாதர்.

    ’வாரணமாயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான்’ என்று கல்யாணக் கனவைச் சொல்லத் தொடங்கிய ஆண்டாள், ‘கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்’ என்கிறாள்.

    ஆண்டாள் இப்படிக் காதலோடு பாட, அருணகிரிநாதர் பக்தி நெறி நிற்கிறார். ‘கைத்தல நிறை கனி, அப்பமோடு அவல் பொரி’ என்று பட்டியல் போட்டுப் பிள்ளையாரை அழைத்து வழிபடுகிறார்.

    உண்மையில் ‘கைத்தலம்’ என்றால் என்ன?

    இந்த இரண்டு பாடல்களிலும், வைரமுத்துவின் இந்தத் திரைப்படப் பாடலிலும் கைத்தலம் என்றால் உள்ளங்கை என்றுதான் அர்த்தம் தோன்றுகிறது. உள்ளங்கையைப் பற்றுவேன், உள்ளங்கையைப் பற்றக் கனாக்கண்டேன், உள்ளங்கையில் கனிகளை நிறைத்துவைத்தேன்’…

    ஆனால் ‘கைத்தலம்’ என்பது கையாகிய தலம், அதாவது முழுக் கையையும் குறிக்கும். உள்ளங்கையும் அதன் பகுதி என்பதால், அதையும் குறிக்கும்.

    கம்ப ராமாயணத்தில் ஒரு பாடல்.

    ஓர் இளம் பெண். இவளுக்கு இடை இருக்கிறதா, அல்லது பொய்யான தோற்றமா என்று மயக்கமே ஏற்படும் அளவுக்குச் ‘சிக்’கென்ற பேரழகி.

    அவளுடைய காதலன், அவளை நெருங்குகிறான், கட்டித் தழுவுகிறான்.

    ஆனால் அவளோ, ஏதோ ஞாபகத்தில் மூழ்கியிருக்கிறாள். இப்போது அவளுக்குக் காதல் விளையாட்டுகளில் ஆர்வம் இல்லை. அவனுடைய கைகளை விலக்கிவிடுகிறாள்.

    உடனே, அந்தக் காதலன் அதிர்ந்துபோகிறான், அவள் அவனுடைய கையை ஒதுக்கிவிட்ட செயல், அவன் நெஞ்சில் கூர்வாள் பாய்ந்ததைப்போல் இருந்தது என்கிறார் கம்பர்.

    ஓர் ஆணின் நெஞ்சம் இப்படிப் புண்ணாவதை அவர் விரும்புவாரா? ‘கைத்தலம் நீக்கினள், கருத்தின் நீக்கலள்’ என்று சமாதானப்படுத்துகிறார். அதாவது, கையைதான் விலக்கினாள், கருத்திலிருந்து அவனை நீக்கவில்லை.

    புரியலையா? அவ ஏதோ வேலை விஷயத்தை யோசிச்சுகிட்டிருக்காய்யா, டிஸ்டர்ப் பண்ணாதே, கொஞ்ச நேரம் டிவி பார்த்துட்டு வா, அப்புறமா ரொமான்ஸ் பண்ணலாம்!

    ***

    என். சொக்கன் …

    30 09 2013

    303/365

     
    • rajinirams 12:26 pm on October 1, 2013 Permalink | Reply

      கைத்தலம் என்றவுடனே நினைவுக்கு வருவது கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ்க என்ற கவியரசரின் பூ முடித்தாள் இந்த பூங்குழலி என்ற நெஞ்சிருக்கும் வரை படப்பாடல் தான்.கைத்தலம் பற்றி உள்ளங்கை நெல்லிக்கனியாய் விளக்கிய நல்ல பதிவு.நன்றி.

    • amas32 3:55 pm on October 1, 2013 Permalink | Reply

      கைத்தலம் என்பது அழகிய ஒரு சொல். வெறும் கைபிடித்துச் செல்லுதலைக் குறிக்காது தன்னையே ஒப்படைப்பதை/ஊன்றுகோலாகப் பற்றுவதைக் குறிப்பது போல தொனிக்கும். ஆண்டாள் பாசுரத்தின் பாதிப்போ என்னவோ? இந்தக் காதல் பாட்டில் கூட அப்படித் தான் வருகிறது. ஆனால் கைத்தல நிறை கனி என்று விநாயகரை நோக்கி அவ்வையார் சொல்லும்போது கை நிறைய என்று தான் தோன்றுகிறது.

      amas32

      • lotusmoonbell 4:17 pm on October 1, 2013 Permalink | Reply

        ‘கைத்தலநிறைகனி’ அருணகிரிநாதரின் திருப்புகழில் வருவது. அவ்வையின் பாட்டல்ல.

        • amas32 9:31 pm on October 1, 2013 Permalink

          ஆமாம் தவறு தான், அனைவரும் மன்னிக்க.

          amas32

        • என். சொக்கன் 8:50 pm on October 2, 2013 Permalink

          நான் செஞ்ச தப்புக்கு நீங்க ஏனுங்க மன்னிப்புக் கேட்கறீங்க? 🙂

    • Uma Chelvan 5:52 pm on October 1, 2013 Permalink | Reply

      புரியலையா? அவ ஏதோ வேலை விஷயத்தை யோசிச்சுகிட்டிருக்காய்யா, டிஸ்டர்ப் பண்ணாதே, கொஞ்ச நேரம் டிவி பார்த்துட்டு வா, அப்புறமா ரொமான்ஸ் பண்ணலாம்!…..::::))))டிவி பார்த்து டைம் ஏன் waste பண்ணனும்??? சமையலறைக்கு போய் எதாவது சமைக்கலாம் இல்ல?. வீட்லில் கூடமாட ஒத்தாசை பண்ணனும்னு எண்ணமே வராதே!!!!!!:::::))))

      • என். சொக்கன் 8:50 pm on October 2, 2013 Permalink | Reply

        அது வந்துட்டா நாங்க ஏன் இப்படி இருக்கோம்? :)))

  • என். சொக்கன் 11:47 pm on August 19, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு : கொக்கும் மீனும் 

    முற்காலத்து பாவலர்கள் அவதான அரசர்(சி) போலும். அக்காலத்தில் அவர்களைத் திசைதிருப்ப தொலைக்காட்சி பெட்டி, செல்ஃபோன் அல்லது மோட்டார் வாகனமோ இல்லை. எங்கும் பயணம் செய்ய வேண்டுமாயின் கட்டைவண்டி கட்ட வேண்டும் அல்லாவிடின் “நடைராசா” தான். நடந்து திரிவதால் இயற்கையை அவதானிக்க அவர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் உண்டு. ஆற்றங்கரை, நீர் நிலைகள், மலைச்சாரல்கள்  போன்ற இயற்கையான இடங்களில் நன்றாக நேரம் செலவிட்டு முதலை, கொக்கு, கூகை, காக்கை, போன்ற உயிரினங்களை நன்றாக நோட்டம் விட்டு அவைகளின் நடத்தைகளை பாடல்களில் பதித்தனர்.

    அவதானிப்பில் திருவள்ளுவர் சார்ல்ஸ் டார்வினுக்கு முன்னோடி. முன்னவர் இலக்கியமுறையில் வர்ணனை இளையவர் விஞ்ஞானத்திற்கு ஆய்வு. இவர்களுக்கு முன் கிரேக்க ஈசாப்பின் கதைகளில் கூட (Aesoph’s fables) மிருகங்களும் பறவைகளும் தான் கதாநயகர்கள்.

    இந்த வரிசையில் நீதி நூல்களில் வரும் கொக்கு- மீன் உறவு பற்றி பார்ப்போம்:

    கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

    குத்தொக்க சீர்த்த இடத்து.  (அதிகாரம்: காலம் அறிதல் – திருக்குறள் 490)

     

    காலம் கை கூடும் வரையில் நீர்க்கரையில் உள்ள கொக்கு போல் ஒதுங்கி இருந்து சந்தர்ப்பம் வாய்க்கும்போது குறி தவறாமல் தாக்கி வெல்ல வேண்டும் என்பது திருவள்ளுவரின் அறிவுரை.

    அடக்க முடையார் அறிவிலரென் றெண்ணிக்

    கடக்கக் கருதவும் வேண்ட- மடைத்தலையில்

    ஓடுமீன் ஓட உருமீன் வருமளவும்

    வாடியிருக்குமாம் கொக்கு  (மூதுரை 16)

     

    அமைதியாக, பணிவடக்கமாக இருப்பவர்களை அறிவில்லாதவர்கள் என்று மட்டும் நினக்காதீர்கள். அவர்கள் நீரோடையில் பெரிய மீன் வரும் வரையும் வாடியிருக்கும் கொக்குபோல் இருப்பவர்கள் என எச்சரிக்கிறார் ஔவைப் பிராட்டியார்.

    திரைப்பட பாடலாசிரியர்கள் காட்சிக்கு தகுந்தது மாதிரி பாடல் எழுதும்போது தமிழ் இலக்கியத்தோடு தமது கற்பனை கைச்சரக்குகளையும் கலப்பது சகஜம். அந்த வகையில் – இந்த கொக்கையும் மீனையும் வைத்து எப்படி பந்தாடியுள்ளார்கள் என்று பார்ப்போம்.

     

    1.     கவிஞர் கண்ணதாசன்:

    1.1    விரக்தியை பிரதிபலிக்க எழுதிய பாடல்

    “குளத்திலே தண்ணியில்லே, கொக்குமில்லே மீனுமில்லே

                  பெட்டியிலே பணமில்லே, பெத்தபிள்ளை சொந்தமில்லே”

     

    பாடல் : யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க..

    திரைப்படம்: எங்க ஊரு ராஜா (1968)

    இசை: M.S. விஸ்வநாதன்

    பாடியவர்:T.M. சவுந்தரராஜன்

    பாடல் சுட்டி: http://www.youtube.com/watch?v=vdU9LdY4wGY

     

     

    1.2          வந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் பயன்படுத்த: 

                 

                  “கொக்கை பார்த்து கற்றுக் கொள்ளு வாழ்வு என்ன என்பதை,

                  கொத்தும்போது கொத்திக் கொண்டு போக வேண்டும் நல்லதை”

     

                  பாடல்: அடி என்னடி உலகம் இது எத்தனை…

    திரைப்படம்: அவள் ஒரு தொடர் கதை (1972)

    இசை: மெல்லிசை மன்னர் MS .விஸ்வநாதன்

    பாடியவர்: L.R. ஈஸ்வரி

    பாடல் சுட்டி: http://www.youtube.com/watch?v=JMoH_zRU0r0

                

    1.3    மகனுக்கு அறிவுரை கூறும்காட்சியில் :

    “ கொள்ளும் கொள்கையில் குரங்காக

    கொடுமையைக் கண்டால் புலியாக

                  குறி வைத்துப் பார்ப்பதில் கொக்காக”

                  குணத்தில் யானையின் வடிவாக…”

     

    பாடல்: கேளாய் மகனே கேளொரு வார்த்தை

    திரைப்படம்: உத்தமன் (1976)

    இசை: திரை இசை திலகம் K.V. மகாதேவன் (உதவி: புகழேந்தி)

    பாடியவர்:T.M. சவுந்தரராஜன்

    பாடல் சுட்டி:  http://www.youtube.com/watch?v=hF98K5ToYUU

     

    2.     கவிப் பேரரசு வைரமுத்துவின் பாணி:

    எதிர்மாறாக கேள்வி கேட்பது போல் வம்புக்கு இழுக்கும் பாடல்:

    “அறுகம் புல்லுக்கு அறுக்கத் தெரியுமா?

    வளர்ந்த குமரி நான் ஆமா

    அயிரை மீனுதான் கொக்கை முழுங்குமா? அடுக்குமா?…“

     

    பாடல்: அழகான ராட்சசியே

    திரைப்படம்: முதல்வன் (1998)

    பாடலாசிரியர்: வைரமுத்து

    இசை: A.R.ரகுமான்

    பாடியவர்:SP பாலசுப்ரமணியம், ஹரிணி, GV பிரகாஷ்

    பாடல் சுட்டி:  http://www.youtube.com/watch?v=5sp3EgcJXbo

     

    பிற்பதிவு: வேறு கொக்கு-மீன் வரிகள் பாடல்களில் தெரிந்தால் தயவு செய்து நீங்களும் பினோட்டத்தில் குறிப்பிடுங்கள்.

    நன்றியுடன்

    சபா- தம்பி

    சபா-தம்பி பிறந்து வளர்ந்தது இலங்கையில். கால் நூற்றாண்டு காலத்துக்குமுன்னால் ஆஸ்திரேலியாவில் குடியேறியவர், தற்போது பெர்த் நகரத்தில் வசிக்கிறார். தமிழார்வம் ஏராளம், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆங்கிலத்தில்மட்டுமே எழுதிவந்திருக்கிறார், கண்ணதாசனும் #4VariNoteம் தந்த ஊக்கத்தில் தமிழிலும் எழுதத் தொடங்கியுள்ளார்.

    Twitter: @SabaThambi
     
    • app_engine 11:59 pm on August 19, 2013 Permalink | Reply

      “கொத்தி விட வேண்டுமென்று கொக்கு என்ன துடிக்குது?
      தப்பிவிட வேண்டுமென்று கெண்டை மீனு தவிக்குது”

      வனிதாமணி, வனமோகினி வந்தாடு – விக்ரம் படப்பாடலின் தொடக்கத்தில் கமலுடன் “பேசும்” டப்பிங் ஹேமமாலினி…

      எழுதியது வைரமுத்துவா அல்லது வசனகர்த்தா சுஜாதாவா தெரியாது 🙂

    • rajinirams 12:47 am on August 20, 2013 Permalink | Reply

      செம பதிவு.விருந்துக்கு மீனை எதிர்பார்க்கும் கொக்கு-விருந்தினர் “கொக்கை”வைத்தே நல்ல பதிவு போட்டுட்டாரே. கோவில் படத்தில் கொக்கு மீனை திங்குமா இல்லையினா மீனு கொக்கை விழுங்குமா என்ற பாடல்-வண்ணக்கிளியில் மருதகாசியின் “ஆத்துல தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க காத்திருந்த கொக்கு அதை கவ்விக்கொண்டு போனதென்ன என்ற பாடலும் “உண்டு”, வாழ்த்துக்கள்.

    • amas32 8:08 am on August 20, 2013 Permalink | Reply

      கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனைக் கண்டு விரதம் முடிச்சிடிச்சாம் – முத்துப் படப் பாடலை விட்டுட்டீங்களே! :-)) ரொம்ப கருத்துள்ள பாடல்! 😉

      வித்தியாசமான, நல்லப் பதிவு 🙂

      கொக்குக்கு ஒன்றே மதி என்ற வசனம் நிறைய பேர் பயன்படுத்திக் கேட்டிருக்கிறேன். அதன் பொருள் என்ன? ஒன்றையே நினைத்துக் கொண்டு மற்றதை மறந்து விடுவதா?

      amas32

    • rajnirams 10:21 am on August 20, 2013 Permalink | Reply

      ஹா ஹா,அதான் ஆச்சர்யம்:-)) காலைல நெனச்சேன்-நீங்க போட்டுட்டீங்க:-)) மகிழ்ச்சி:-))

  • G.Ra ஜிரா 11:43 am on July 14, 2013 Permalink | Reply  

    படைத்தவன் யாரோ? 

    நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஐயம். தமிழ்க் கவிஞர்கள் அதிகமாகப் பாடிய கடவுள் யார்?

    முருகன், அம்மன், சிவன், கிருஷ்ணன் என்று அடுக்கலாம். ஆனால் அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களால் பாடப்பட்டவர்கள்.

    கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் இல்லாதவர்களும் ஒத்த எண்ணத்தோடு எந்தக் கடவுளைப் பாடியிருக்கிறார்கள்?

    அப்படியொரு ஒரு கடவுள் இருக்கிறார். அவருக்கு கோயில் கிடையாது. வழிபாடு கிடையாது. திருவிழா கிடையாது. பலிகளோ படையல்களோ கிடையாது. ஆனால் கவிஞர்கள் மட்டும் அவரைப் போற்றிக் கொண்டாடுவார்கள்.

    யார் அந்தக் கடவுள்? ஏன் அவரைக் கொண்டாடுகிறார்கள்?

    கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலின் வரியைச் சொல்கிறேன். உங்களுக்குச் சட்டென்று புரிந்து போகும்.

    படைத்தானே பிரம்மதேவன் பதினாறு வயது கோலம்!

    புரிந்து விட்டதல்லவா? நான்முகன் பிரம்மன் என்றெல்லாம் அழைக்கப்படும் படைப்புக் கடவுள்தான் அந்தக் கடவுள்.

    ஏன்? ஏனென்றால் அந்தப் படைப்புக் கடவுள்தான் காதலர்களுக்குத் தக்க காதலிகளைக் கொடுக்கிறார். இல்லை இல்லை. படைக்கிறார்.

    மடப்பாவையார் நம் வசமாகத் தூது நடப்பாரே தெய்வம் நமக்கு” என்று ஆதிநாதன் வளமடலில் செயங்கொண்டார் சொன்னதும் அதே கருத்துதான்.

    கொன்றை அணிந்த சிவனோ உலகளந்த கோபலனோ எமக்குத் தெய்வமல்ல. அழகான காதல் பாவையருக்காக தூது நடப்பவரே நமக்குத் தெய்வம்.

    சரி. வாருங்கள். இனி ஒவ்வொரு கவிஞரும் பிரம்மனை எப்படியெல்லாம் புகழ்ந்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

    அப்படி பிரம்மனைப் புகழ்ந்தவர்களில் என்னை மிகவும் வியக்க வைத்தவர் டி.ராஜேந்தர். அவரே எழுதி இசையமைத்த இரண்டு பாடல்களில் மிகமிகக் கவிநயத்தோடு பிரம்மனைக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வரிகளை நீங்களே படித்துப் பாருங்கள். நான் சொல்வதை ஒப்புக் கொள்வீர்கள்.

    தேவலோக அமுதத்தை குழம்பாக எடுத்து
    தங்க நிற வர்ணத்தில் குழைக்கின்ற போது
    பிரம்மனுக்கு ஞானம் வந்து உன்னை படைக்க
    அட பிரமிப்புடன் நானும் வந்து உன்னை ரசிக்க

    மேலே குறிப்பிட்டுள்ள பாடல் உயிருள்ளவரை உஷா படத்தில் இடம் பெற்ற “மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க” பாடல். விளக்கமே தேவைப்படாத அழகிய வரிகள் அல்லவா!

    அதே போல மைதிலி என்னைக் காதலி படத்தில் இடம் பெற்ற “ஒரு பொன்மானை நான் காணத் தகதிமித்தோம்” பாடலிலும் பிரம்மனைப் பாராட்டுகிறார் விஜய டி.ராஜேந்தர்.

    தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி
    தாமரைப் பூ மீது விழுந்தனவோ
    இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
    படைத்திட்ட பாகந்தான் உன் கண்களோ

    அடடா! என்ன கற்பனை! அவள் கண்ணைப் படைப்பதற்கே பிரம்மனுக்கு இப்படியொரு காட்சி தேவைப்பட்டிருக்கிறது. அவள் முழுவுடலையும் பளிங்குச் சிலையாய் படைப்பதற்கு எதையெதையெல்லாம் பார்த்துக் கற்றானோ!

    வைரமுத்துவின் சிந்தனை சற்று வேறுவிதமாகச் செல்கிறது. ஒரு எலக்ட்ரானிக் கண் கொண்டு காதலியைப் பார்க்கிறார். அவள் சிரிப்பு கூட டெலிபோன் மணி போலக் கேட்கிறது. அப்படி ஒரு பெண்ணை பிரம்மன் எதை அடிப்படையாகக் கொண்டு படைத்திருப்பான்? வேதங்களா? குருவருளா? சிவனருளா?

    கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா

    பிரம்மனும் காலமாற்றத்துக்குத் தக்க ஓலைச் சுவடிகளை வீசி எறிந்து விட்டு கம்ப்யூட்டரில் அனிமேஷன் செய்யத் துவங்கி விட்டானோ என்று வைரமுத்துவின் கற்பனை ஓடுகிறது.

    இன்னொரு பாட்டில் சற்று கொச்சையாக பிரம்மனின் படைப்புக் கதையைச் சொல்கிறார் வைரமுத்து. அண்ணாமலை திரைப்படத்தில் இடம் பெற்ற “அண்ணாமல அண்ணாமல” பாடல் வரிகளைக் கொஞ்சம் பார்க்கலாம்.

    பிரம்மனுக்கு மூடு வந்து உன்னை படைச்சிட்டான்
    அடி காமனுக்கு மூடு வந்து என்னை அனுப்பிட்டான்

    பிரம்மனின் வள்ளல் திறமையையும் கஞ்சத்தனத்தையும் இன்னொரு பாட்டில் கொண்டுவருகிறார் வைரமுத்து. ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற “அன்பே அன்பே கொல்லாதே” பாடல் வரிகளைக் கொடுக்கிறேன். பிரம்மன் எங்கு கஞ்சத்தனத்தையும் எங்கு வள்ளல் தன்மையையும் காட்டினான் என்று நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

    பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
    அடடா பிரம்மன் கஞ்சனடி
    சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
    ஆஹா அவனே வள்ளலடி

    அத்தோடு விடவில்லை வைரமுத்து. பிரம்மனைப் பார்த்து “தகுமா? முறையா? நீதியா?” என்று ஜெமினி படத்து நாயகனுக்காக முறையிடுகிறார்.

    பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
    என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
    உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
    நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா

    இந்தப் பாட்டில் சொல்வது போன்ற அழகான பெண்ணை பிரம்மன் கொடுத்தால் அது வரமா? சாபமா? இரண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

    இன்னொரு வித்தியாசமான கவிஞர் இருக்கிறார். அவர் இசையில் அவர் எழுதி இசையமைத்த பாடல் தான் நாடோடித் தென்றல் படத்தில் வந்த “மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரழகே” பாடல். ஆம். இசைஞானி இளையராஜா தான் எழுதிய பாடலிலும் பிரம்மனை இழுக்கிறார்.

    மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரழகே
    கொடியே கொடிமலரே கொடியிடையில் மணியழகே
    ………………..
    பொன்னில் வடித்த சிலையே பிரம்மன் படைத்தான் உனையே

    இன்றைய கவிஞர்களும் பிரம்மனை விடுவதாக இல்லை. முதலில் பா.விஜய் எழுதிய பாடல்களைப் பார்க்கலாம்.

    அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
    நீ என் மனைவியாக வேண்டும் என்று
    ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
    ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்

    அரசாங்க அலுவலகத்தில் மனு கொடுத்தால் அது எங்கு போகும் என்று தெரியும். ஆனால் பிரம்மனிடத்தில் மனு கொடுத்தால் கண்டிப்பாக அது நடக்கும் என்றொரு நம்பிக்கையை தேவதையைக் கண்டேன் திரைப்படப் பாடல் வரிகளில் கொண்டு வந்திருக்கிறார்.

    பிரியமான தோழி படத்துக்காகவும் பிரம்மனைப் புகழ்ந்திருக்கிறார் பா.விஜய்.

    பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
    ………………..
    பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது

    இந்த உலகத்தையே படைத்து, அதில் அத்தனை உயிர்களையும் படைத்ததை விட ஓவியம் போன்ற அழகான காதலியைப் படைத்ததுதான் மிகப் பெரிய சாதனை என்று காதலன் பார்வையில் பா.விஜய் எழுதியதும் ரசிக்கத்தக்கதுதான்.

    நா.முத்துக்குமாரும் வழக்கு எண் 18/9 படத்துக்காக பிரம்மன் கையைப் பிடித்து இழுத்திருக்கிறார்.

    வானத்தையே எட்டி புடிப்பேன்
    பூமியையும் சுத்தி வருவேன்
    …………………
    அடி பெண்ணே நீயும் பெண்தானோ
    இல்ல பிரம்மன் செய்த சிலைதானோ

    வழக்கமாக பாட்டெழுதும் கவிஞர்கள் மட்டுமல்ல, புதிதாகப் பாட்டெழுதுகின்றவர்களுக்கும் பிரம்மனே துணை. தானே இயக்கிய கச்சேரி ஆரம்பம் திரைப்படத்தில் ஒரு பாடலை இயக்குனர் திரைவாணன் எழுதியிருக்கிறார். அங்கும் பிரம்மனுக்குப் போற்றி மேல் போற்றி.

    பிரம்மா உன் படைப்பினிலே…
    எத்தனையோ பெண்கள் உண்டு
    ஆனாலும் அசந்துவிட்டேன் அழகினிலே
    இவளைக் கண்டு
    அழகினிலே.. இவளைக்கண்டு
    வாடா வாடா பையா

    இப்படியெல்லாம் பாடல்களைப் பார்க்கும் போது எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா?

    இதுதான் பிரம்மனுக்கு வந்த வாழ்வு! வாழ்வோ வாழ்வு!

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

    பாடல் – மோகம் வந்து தாகம் வந்து
    படம் – உயிருள்ளவரை உஷா
    பாடியவர்கள் – எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    பாடல் & இசை – டி.ராஜேந்தர்
    பாடலின் சுட்டி – http://youtu.be/1S3XGSA4qTk

    பாடல் – அன்பே அன்பே கொல்லாதே
    படம் – ஜீன்ஸ்
    பாடல் – வைரமுத்து
    பாடியவர் – ஹரிஹரன்
    இசை – ஏ.ஆர்.ரகுமான்
    பாடலின் சுட்டி – http://youtu.be/_QzDFtWVf3c

    பாடல் – படைத்தானே பிரம்மதேவன்
    படம் – எல்லோரும் நல்லவரே
    பாடல் – கண்ணதாசன்
    பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    இசை – வி.குமார்
    பாடலின் சுட்டி – http://youtu.be/qamttiCClsc

    பாடல் – அழகே பிரம்மனிடம் மனு
    படம் – தேவதையைக் கண்டேன்
    பாடல் – பா.விஜய்
    பாடியவர்கள் – ஹரீஷ் ராகவேந்திரா, கங்கா
    இசை – தேவா
    பாடலின் சுட்டி – http://youtu.be/lrCW8fOcXVQ

    பாடல் – அண்ணாமல அண்ணாமல
    படம் – அண்ணாமலை
    பாடல் – வைரமுத்து
    பாடியவர்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா
    இசை – தேவா
    பாடலின் சுட்டி – http://youtu.be/OQ3RdFU5vsQ

    பாடல் – வானத்தையே எட்டி புடிப்பேன்
    படம் – வழக்கு எண் 18/9
    பாடல் – நா.முத்துக்குமார்
    பாடகர் – தண்டபாணி
    இசை – ஆர்.பிரசன்னா
    பாடலின் சுட்டி – http://youtu.be/a-ohRTF8CeI

    பாடல் – பெண்ணொருத்தி பெண்ணொருத்தி
    படம் – ஜெமினி
    பாடல் – வைரமுத்து
    இசை – பரத்வாஜ்
    பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    பாடலின் சுட்டி – http://youtu.be/XNiS5Zxj_RY

    பாடல் – பிரம்மா உன் படைப்பினிலே(வாடா வாடா பையா)
    படம் – கச்சேரி ஆரம்பம்
    பாடல் – திரைவாணன் (இயக்குனர்)
    பாடியவர் – கார்த்திகேயன் எம்.ஐ.ஆர், அந்திதா
    இசை – டி.இமான்
    பாடலின் சுட்டி – http://youtu.be/ho-4PCJnQ6k

    பாடல் – பெண்ணே நீயும் பெண்ணா
    படம் – பிரியமான தோழி
    பாடல் – பா.விஜய்
    பாடியவர்கள் – கல்பனா, உன்னி மேனன்
    இசை – எஸ்.ஏ.ராஜ்குமார்
    பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=KSM9aCJFVTo

    பாடல் – மணியே மணிக்குயிலே
    படம் – நாடோடித் தென்றல்
    பாடியவர்கள் – எஸ்.ஜானகி, மனோ
    பாடல் & இசை – இளையராஜா
    பாடலின் சுட்டி – http://youtu.be/UNIb8Pblu7w

    பாடல் – ஒரு பொன் மானை நான் காண
    படம் – மைதிலி என்னைக் காதலி
    பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    பாடல் & இசை – டி.ராஜேந்தர்
    பாடலின் சுட்டி – http://youtu.be/S-XvP9p9mOs

    பாடல் – டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா
    படம் – இந்தியன்
    பாடியவர் – ஹரிணி, ஹரிஹரன்
    பாடல் – வைரமுத்து
    இசை – ஏ.ஆர்.ரகுமான்
    பாடலின் சுட்டி – http://youtu.be/SfHbknfOOuA

    அன்புடன்,
    ஜிரா

    225/365

     
    • மணிகண்டன் துரை 2:19 pm on July 14, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு

    • rajinirams 2:49 pm on July 14, 2013 Permalink | Reply

      அடடா பிரமாதம். எல்லா பாடல்களுமே சூப்பர். புதியவன் படத்தில் வைரமுத்துவின் “நானோ கண் பார்த்தேன்” பாடலில் பருவம் அடடா பஞ்சம் இல்லை,அடடா பிரம்மன் அவன் கஞ்சன் இல்லை என்று வரும். எல்லோரும் நல்லவரே பாடல் படைத்தானே பிரம்மதேவன் பாடல் கவியரசர் கண்ணதாசன் எழுதியது. (பகை கொண்ட உள்ளம்,சிகப்புகல்லு போன்றவை புலமைப்பித்தன் எழுதியவை).திருவருள் படத்தில் வரும் கந்தன் காலடியை பாடலில் “அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்” என்ற வரி வரும். நன்றி.

    • amas32 5:49 pm on July 14, 2013 Permalink | Reply

      எத்தனை எத்தனைப் பாடல்களைத் தேடி எடுத்து அடுக்கியிருக்கிறீர்கள்! படைப்புக் கடவுளான பிரம்மா சும்மா இல்லை! 🙂 அவருக்குக் கோவிலோ வழிபாடோ இல்லை என்றாலும் திரைப் பாடல்கள் அவரை துதிப்பது அவருக்குப் பெருமை தான் 🙂

      amas32

  • G.Ra ஜிரா 11:06 am on May 10, 2013 Permalink | Reply  

    பேராசை தரும் பேரழகு! 

    பொதுவாகவே பெண்களின் அழகைப் பார்த்து ஆண்களுக்கு ஆசை வரும். அந்த அழகு ஒரு பெண்ணுக்கு அளவுக்கு மீறி கூடிக்கொண்டே போனால்?

    நீ போகும் தெருவில் ஆண்களை விட மாட்டேன். சில பெண்களை விட மாட்டேன்” என்று வைரமுத்து அவர்கள் எழுதிய நிலைதான் உண்டாகும்.

    அந்தப் பேரழகி நடக்கும் தெருவில் ஆண்கள் நுழைந்தால் அவர்களும் ஆசைப்படுவார்கள் என்பதால் ஆண்களை விடமாட்டேன் என்கிறான் காதலன். ஆனால் சில பெண்களையும் விட மாட்டானாம். ஏன்? அவளைப் பார்த்தால் பெண்களுக்கே பேராசை வந்து விடுமாம்.

    அதைக் கவியரசர் கண்ணதாசன் ஒரு பாடலில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஆம். செந்தமிழ்த் தேன்மொழியாள் பாடலில் “பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விடுகிறார்.

    இப்படி பெண்ணுக்குப் பெண் பேராசை கொள்ளும் பெண்கள் அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் குற்றாலத்தில் அப்படியொரு பெண் இருந்திருக்கிறாள். அவளைப் பற்றி திருக்குற்றாலக் குறவஞ்சியில் திரிகூட ராசப்பக் கவிராயர் பாடியிருக்கிறார்.

    கண்ணுக்குக் கண்ணிணை சொல்லத் திரிகூடக்
    கண்ணுதலைப் பார்வையால் வெல்லப்
    பெண்ணுக்குப் பெண்ம யங்கவே வசந்தவல்லி
    பேடையன்னம் போலவே வந்தாள்
    நூல் – திருக்குற்றாலக் குறவஞ்சி
    எழுதியவர் – திரிகூட ராசப்பக் கவிராயர்

    அவள் பெயர் வசந்தவல்லி. காலையில் எழுந்து குளித்து முடித்து அழகு செய்து கொண்டு கிளம்பி வந்தாள். குற்றாலத்துப் பெண்கள் அவளைப் பார்க்கின்றார்கள். அவர்கள் கண்களே அவர்களுக்கு வசந்தவல்லியின் அழகை விளக்கிவிடுகின்றன. அவளைப் பார்த்து பெண்கள் மயங்கும்படியாக பேடையன்னம் போல வசந்தவல்லி நடந்துவந்தாள்.

    அன்றைக்கே பெண்ணுக்குப் பெண் மயங்கும் அழகு இருந்திருக்கிறது. அதைப் பின்னாளில் கவியரசர் “உன்னழகைக் கண்டு கொண்டால் பெண்களுக்கே ஆசை வரும். பெண்களுக்கே ஆசை என்றால் என் நிலையை என்ன சொல்வேன்” என்று பூவும் பொட்டும் திரைப்படத்தில் எழுதினார்.

    பழமை மாறாத புதுமை” என்று மெல்லிசை மன்னர் அடிக்கடி சொல்வார். கண்ணதாசன் எழுதியதும் அப்படித்தான். புதுமையான முறையில் சொன்னார். ஆனால் பழையதையே சொன்னார். ஆம். கம்பராமாயணத்தில் சொல்லப்பட்ட பழைய கருத்தையே புதுமையாகச் சொன்னார். கவியரசர் படிக்காத கம்பராமாயணமா?!

    கண் பிற பொருளில் செல்லா; கருத்து எனின் அஃதே; கண்ட
    பெண் பிறந்தேனுக்கு என்றால் என்படும் பிறருக்கு? என்றாள்
    நூல் – கம்பராமாயணம்
    காண்டம் – ஆரண்ய காண்டம்
    காட்சிக் குறிப்பு – சீதையைக் கண்ட சூர்ப்பனகை வியத்தல்
    எழுதியவர் – கம்பர்

    சூர்ப்பனகை இராமனைக் கண்டு மயங்கி அவனோடு பேசிக்கொண்டிருக்கிறாள். அப்போது அந்தப் பக்கமாக சீதை வருகிறாள். அவளைப் பார்த்ததுமே அவள் திருமகளோ என்று ஒரு ஐயம் சூர்ப்பனகைக்கு வருகிறது.

    சீதையினுடைய அழகு அவளையே மயக்கக் கண்டாள். அவளைப் பார்த்த கண்ணால் வேறெதையும் பார்க்க முடியவில்லை. அவள் அழகைக் கண்டு எண்ணிய கருத்தை வேறெதிலும் செலுத்த முடியவில்லை. ஒரு பெண்ணான தன்னுடைய நிலையே இப்படியிருக்கிறதே ஒரு ஆண் கண்டால் என்னாகும் என்று வியக்கிறாள்.

    அன்று சூர்ப்பனகை நினைத்ததையே ஆணின் கூற்றாக மாற்றி கவியரசர் எழுதியிருக்கிறார்.

    காலங்கள் மாறினாலும் காதலியின் அழகை ஆண்கள் இப்படிப் பெருமையோடு வருணித்துக் கொண்டேதான் இருக்கப் போகிறார்கள்.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

    செந்தமிழ்த் தேன்மொழியாள்
    ………………………
    பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
    பேரழகெல்லாம் படைத்தவளோ
    படம் – மாலையிட்ட மங்கை
    பாடல் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – டி.ஆர்.மகாலிங்கம்
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் டி.கே.இராமமூர்த்தி
    பாடலின் சுட்டி – http://youtu.be/WPDRRh1Ve6M

    உன்னழகைக் கண்டுகொண்டால்
    பெண்களுக்கே ஆசை வரும்
    பெண்களுக்கே ஆசை வந்தால்
    என் நிலமை என்ன சொல்வேன்
    படம் – பூவும் பொட்டும்
    பாடல் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – பி.பி.ஸ்ரீனிவாஸ்
    இசை – ஆர்.கோவர்தனம்
    பாடலின் சுட்டி – http://youtu.be/o2Iu8lXOlcs

    டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா
    …………………………….
    நீ போகும் தெருவில் ஆண்களை விடமாட்டேன்
    சில பெண்களை விடமாட்டேன்
    படம் – இந்தியன்
    பாடல் – வைரமுத்து
    பாடியவர் – ஹரிஹரன், ஹரிணி
    இசை – ஏ.ஆர்.ரஹ்மான்
    பாடலின் சுட்டி – http://youtu.be/SfHbknfOOuA

    அன்புடன்,
    ஜிரா

    160/365

     
    • dagalti (@dagalti) 11:23 am on May 10, 2013 Permalink | Reply

      ஒரு ஆண் equivalenடும் கம்பன்ல வரும்.

      விஸ்வாமித்ரர் ராமனைப் பார்த்து

      ஆடவர் பெண்மையை அவாவு தோளினாய்

      -னு விளிப்பார்

      ஆண்கள் தாங்கள் பெண்களாக இருந்திருக்கக் கூடாதா என்று நினைக்கவைக்கும் தோளழகு உடையவனே

    • rajnirams 11:27 am on May 10, 2013 Permalink | Reply

      ஹா ஹா,நல்ல தேர்வு.அருமையான பதிவு.காத்திருந்த கண்களில் கூட கண் படுமே பாடலில் மங்கை உன் அழகை மாதர் கண்டாலும் மயங்கிடுவார் கொஞ்ச நேரம் என்ற கவியரசரின் வரிகளும் பிரசித்தம்.
      கொடி பறக்குது பாடலில் வைரமுத்துவின் வரிகளில் “நாயகியின் தற்பெருமை”வரிகள்-“புடவை மாற்றும் போது கர்வம் வந்தது” என்ற காதல் என்னை காதலிக்கவில்லை பாடல் வரிகள்.நன்றி.

    • Arun Rajendran 12:21 pm on May 10, 2013 Permalink | Reply

      “வெங் களி விழிக்கு ஒரு
      விழவும் ஆய். அவர்
      கண்களின் காணவே
      களிப்பு நல்கலால்.
      மங்கையர்க்கு இனியது ஓர்
      மருந்தும் ஆயவள்.
      எங்கள் நாயகற்கு. இனி.
      யாவது ஆம்கொலோ?”
      (மிதிலைக் காட்சிப் படலம் – கன்னிமாடத்துள்ள சீதாதேவியின் சிறப்பு – பாடல் எண்: 596)

      பார்க்கும் ஆண்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய அழகைக் கொண்டப் பெண்கள் கூட சீதையின் அழகால் கவரப்படுகின்றனர்-னு கம்பன் சீதையின் அழகை கட்டியம் கூறுகிறார்..
      நன்றிகள் ஜிரா

    • amas32 9:08 am on May 11, 2013 Permalink | Reply

      அழகு என்றுமே கண்ணுக்கு விருந்து. அது மலரோ, மலையோ, மகவோ, ஆணோ அல்லது பெண்ணோ 🙂

      பெண்ணே பெண்ணைப் பார்த்துப் பொறாமை கொள்ளும் அழகு பல பேரிடம் உள்ளது. அந்த கால வைஜயந்தி மாலா, லலிதா பத்மினி ராகினி முதல் இன்றைய ஐஸ்வர்யா ராய், கத்ரினா கைப் வரை அசந்து போகும் அழகை சிலருக்கு வாரி வழங்கியிருக்கிறான் பிரம்மன்.

      இந்த அழகை ரசிக்கும் தன்மையில் சற்றே வித்தியாசமாக பெண்ணே பெண்ணின் மேல் ஆசைக் கொள்ளும் அழகு என்கிறார்கள் கவிஞர்கள். அதுவும் நடக்கக் கூடியது தானே.

      ஆனால் அசாத்திய அழகு பல சமயங்களில் பெண்ணுக்கே எதிரியாகிவிடுகிறது. எத்தனை சான்றுகள் அதற்கு! அகலிகை, சீதை, தெரிந்த கதைகள். தெரியாமல் மறைக்கப்பட்டன எத்தனையோ?

      amas32

  • G.Ra ஜிரா 11:37 am on March 7, 2013 Permalink | Reply  

    ஒரு சொல், பல பொருள் 

    பேசுறதையே பேசுற நீ” என்று தமிழ்த்திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சி உண்டு. ”பாடுறதையே பாடுற நீ” என்று பாட்டு உண்டா?

    ஒன்றல்ல பல பாடல்கள் உண்டு. கண்ணதாசன் – மெல்லிசை மன்னர் கூட்டணி உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இப்படிப் பாட்டுகள் நிறைய வந்தன. காய் பாட்டு. லா பாட்டு. மே பாட்டு என்று பல பாட்டுகள். பிறகு இந்த வகைப் பாடல்கள் திரைப்படங்களில் வழக்கொழிந்து போனாலும் ஒரு மிகமிக அருமையான பாடல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்தது.

    கண்களால் கைது செய்” என்று தலைப்பே கவித்துவமாக இருக்கும் ஒரு திரைப்படத்தில் வந்த பாடல் அது. பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படம். மெட்டமைத்து விட்டார் ஏ.ஆர்.ரகுமான். மெட்டு பாரதிராஜாவுக்கும் உடனே பிடித்துப் போய்விட்டது. அடுத்தது என்ன? பாட்டெழுத வேண்டியதுதானே.

    முதலில் ஒரு கவிஞர் வந்தார். முயன்று முடங்கினார். இன்னொருவரிடம் மெட்டு போனது. அவர் எழுதிய பாடல் மெட்டுக்குப் பொருந்தாமல் பட்டுப் போனது.

    இவ்வளவு அருமையான பாடலை விட்டுவிடவும் மனமில்லை. அப்போது வந்தார் ஒரு திடீர் கவிஞர். அவர் இயக்குனர் பாரதிராஜாவின் உதவியாளர். ஈரநிலம் படத்திற்கு வசனமும் எழுதியவர். புதுக்கவிதை எழுதுகின்றவர்.

    ஆனால் திரைப்படத்துக்கு பாடல் எழுதியதேயில்லை. சொற்களை மெட்டு என்னும் நாற்காலிக்குள் அடிக்கடி உட்கார வைத்துப் பழகியதும் இல்லை. தமிழ் ஆர்வமும் கவிதை ஆர்வமும் கொண்ட அவர் மெட்டைச் செவி கொடுத்துக் கேட்டார். சற்று யோசனைக்குப் பிறகு மடமடவென்று வரிகளை எழுதிக் கொடுத்துவிட்டாராம்.

    தீக்குருவியாய்
    தீங்கனியினை
    தீக்கைகளில்
    தீஞ்சுவையென
    தீப்பொழுதினில்
    தீண்டுகிறாய் தந்திரா…..

    அப்பப்பா எத்தனை தீ! பாட்டு வரிகள் மெட்டுக்குள் கச்சிதமாகப் பொருந்திவிட்டன. ஹரிணியும் முகேஷும் அந்தப் பாடலை மிக அழகாகப் பாடி மெருகேற்றினர்.

    முன்பு சொன்ன காய் பாடல், மே பாடல், லா பாடல் போல இது ஒரு தீப்பாடல். எத்தனை தீ பாருங்கள். ஆனால் ஒவ்வொரு தீக்கும் ஒவ்வொரு பொருள்.

    தீக்குருவியாய் – சுறுசுறுப்பான குருவியாய்
    தீங்கனியினை – அழகான கனியினை
    தீக்கைகளில் – துடிப்பான கைகளில்
    தீஞ்சுவையென – இனிப்பான சுவையென
    தீப்பொழுதினில் – மிகப் பொருத்தமான பொழுதினில்
    தீண்டுகிறாய் தந்திரா………………

    அதெல்லாம் சரி. பாடலை எழுதியவர் யார்? சொல்லவே இல்லையே! அவருடைய இயற்பெயர் ரோஸ்லின் ஜெயசுதா. ஆனால் இனிமையாகப் பாடும் குரலால் தேன்மொழி என்ற பட்டப் பெயரே அவர் பெயராயிற்று.

    இவரைப் போன்ற கவிஞர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டியவர்கள். இன்னும் நிறைய வாய்ப்பு கிட்டும் என்று எதிர்பார்ப்போம்.

    கவிஞர் தேன்மொழியின் பழைய பேட்டியொன்று – http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=169
    பாடலின் ஒளிச்சுட்டி : http://www.youtube.com/watch?v=7-gKENfRMxc

    அன்புடன்,
    ஜிரா

    096/365

     
    • Arun Rajendran 11:35 pm on March 8, 2013 Permalink | Reply

      வணக்கம் ஜிரா…

      வைரமுத்துவின் வரிகள்-னு நெனைச்சிட்டு இருந்தேன்…நல்ல பதிவு…பேட்டியின் தரவு தந்ததற்கு நன்றி…

  • mokrish 10:15 am on February 28, 2013 Permalink | Reply  

    இரு வரிக் கவிதை 

    பெண்ணை வர்ணிக்கும் பாடல்கள்  காதல் ரச பாடல்கள் முத்தம் தரும் / கேட்கும் பாடல்கள் … எவ்வளவு பாடல்கள் இதழ் பற்றி! விதிவிலக்கின்றி அத்தனை கவிஞர்களும் இது பற்றி பாடல் எழுதியிருக்க, எதைப்பற்றி நான் பதிவெழுத?

    கண்ணதாசன் முதல் இன்று காலை ட்விட்டரில் உதித்த புது கவிஞன் வரை அனைவரும் இதழின் சிவப்புக்கு / சிறப்புக்கு ஒரு கவிதையாவது டெடிகேட்  செய்கிறார்கள்.

    • சிப்பி போல இதழ்கள், மாதுளை செம்பவளம் மருதாணி போல என்று ஓராயிரம் பாடல்கள்.

    • தித்திக்கும் இதழ் உனக்கு , இதழே இதழே தேன் வேண்ட குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும் உதடு -தேன் பழரசம் மது என்று போதையில் இன்னொரு ஆயிரம்.

    • தவிர ஆரிய உதடுகள் திராவிட உதடுகள் , இதழில் கவிதை எழுதும் நேரம், , எந்த பெண்ணிலும் இல்லாத உதட்டின் மேல் மச்சம், , bubble gum ஐ இதழ் மாற்றி – டூ மச்!

    சரி வித்தியாசமாய் ஏதாவது? பார்க்கலாம். முதலில் பழைய பாடல். தங்க ரங்கன் என்ற படத்தில் ஒரு பாடல். MSV இசையில் நா. காமராசன் எழுதியது.

    உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
    அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது

    கவனியுங்கள். அவள் பெயர்தான் ஒட்டிக்கொண்டது. உச்சரிப்பதுதான் தித்திக்கிறது. கண்ணியமான வரிகள்.

    அந்நியன் படத்தில் ஐயங்காரு வீட்டு அழகே என்ற பாடலில்

    உன் உதடு சேர்ந்தால் பூப்படையும் வார்த்தை

    நம் உதடு சேர்ந்தால் பூப்படையும் வாழ்க்கை

    தம்பி படத்தில் சுடும் நிலவு சுடாத சூரியன் என்ற பாடலில் ‘நான்கு உதடு பேசும் வார்த்தை முத்தமாகும்’ என்ற வரி

    ஐஸ்வர்யா ராய் என்றாலே வைரமுத்துவின் கற்பனை உற்சாகமாய் இருக்கும்

    ராவணன் படத்தில் ஒரு பாடல்.

    உசுரே போகுதே உசுரே போகுதே

    உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையிலே

    மேஜர் சந்திரகாந்த் படத்தில் ஒரு நாள் யாரோ என்ற பாடலில் இதழின் நிறம் பற்றி வாலியின் கற்பனை ஒரு அழகிய கவிதை.

    செக்கச் சிவந்தன விழிகள் கொஞ்சம்

    வெளுத்தன செந்நிற இதழ்கள்

    வெள்ளை விழிகளும் செந்நிற இதழ்களும் நிறம் மாறி நிற்கும் பெண்ணின் நிலை. இலக்கியத்தில் இதன் equivalent பற்றி சொக்கனும் ராகவனும் தான் சொல்லவேண்டும்.

    அடுத்து இவன் படத்தில் அப்படி பாக்குறதுன்னா வேணாம் என்ற பாடலில் பழனிபாரதி சொல்லும் கற்பனை இனிமை

    சுற்றி சுழன்றிடும் கண்ணில் இசை தட்டு ரெண்டு பார்த்தேனே
    பற்றி இழுத்தென்னை அள்ளும் பட்டு குழிகளில் வீழ்ந்தேனே
    ரெண்டு இதழ் மட்டும் கொண்டிருக்கும்

    உந்தன் புத்தகத்தில் அச்சானேன்

    கண்களால் கைது செய் என்ற படத்தில் பா விஜய் எழுதிய என்னுயிர் தோழியே என்று ஒரு பாடல்

    மூச்சு முட்ட கவிதைகள் குடித்துவிட்டு

    எந்தன் செவியில் சிணுங்குகிறாய்

    ரெண்டு இதழ் மட்டும் கொண்ட அதிசய பூ

    நீ அல்லவோ சிலுப்புகிறாய்

    அவளை இரண்டு இதழ் கொண்ட அதிசய பூவாய் பார்க்கும் கற்பனை.

    ஆயிரம் தான் இருந்தாலும் காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள்தான் என்பது என் எண்ணம். பழனிபாரதியும் அதைத்தான் சொல்கிறார்.

    இன்னும் நிறைய இருக்கும். நீங்களும் சொல்லுங்களேன்

    மோகனகிருஷ்ணன்

    089/365

     
    • என். சொக்கன் 10:23 am on February 28, 2013 Permalink | Reply

      //சிவந்தன விழிகள், வெளுத்தன இதழ்கள்//

      இதே வரி ‘1000 நிலவே வா’ பாட்டிலும் வரும் (புலமைப்பித்தன்?), அக்னி நட்சத்திரம் ‘நின்னுக்கோரி வர்ணம்’ பாடலில் வாலியே இதே வரிகளை மீண்டும் எழுதியிருப்பார்,

      அனைத்துக்கும் Source ஒன்றே : கந்த புராணம் : ’வெளுத்தன சேயிதழ், விழி சிவந்தன’ 🙂

  • என். சொக்கன் 11:28 am on January 22, 2013 Permalink | Reply  

    ஏன் நின்றாய்? 

    • படம்: ஜீன்ஸ்
    • பாடல்: எனக்கே எனக்கா
    • எழுதியவர்: வைரமுத்து
    • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
    • பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், ஹரிணி
    • Link: http://www.youtube.com/watch?v=QIyBk0HH7zo

    ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பது

    உன் கூந்தலில் நின்றாடத்தான்,

    பூமாலையே, பூச்சூட வா!

    பூவின் காம்பை ஒற்றைக் காலாக வர்ணித்து, அதனை ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் முனிவர்களோடு ஒப்பிட்டு, ‘பூக்களின் இந்தத் தவம் எதற்காக? அவளுடைய கூந்தலில் சென்று சேர்வதற்காகதானா?’ என்று கேள்வி எழுப்புகிறது இந்தப் பாடல். ‘பூக்களின் தவத்தை முடித்து வை, அவற்றைப் பறித்து உன் கூந்தலில் சூடிக்கொள்’ எனக் காதலியிடம் ஒரு கோரிக்கையையும் வைக்கிறது.

    அருமையான இந்தக் கற்பனை, முத்தொள்ளாயிர வெண்பா ஒன்றில் இருக்கிறது. அதன் சாரத்தை இன்றைய காதல் பாட்டுக்கு ஏற்ப அழகாக ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியிருக்கிறார் வைரமுத்து.

    கார் நறு நீலம் கடிக் கயத்து வைகலும்

    நீர்நிலை நின்ற தவம்கொலோ, கூர்நுனைவேல்

    வண்டு இருக்கும் நக்க தார் வாமான் வழுதியால்

    கொண்டு இருக்கப் பெற்ற குணம்

    நல்ல மணம் கொண்ட, நீல நிறக் குவளைப் பூவே, தினந்தோறும் நீர்நிலைக்கு மத்தியில் நின்றுகொண்டு தவம் செய்கிறாயே, எதற்காக?

    எனக்கு விஷயம் புரிந்துவிட்டது, கூரான வேலை ஏந்தியவன், வண்டுகள் மொய்க்கும் மலர் மாலைகளை அணிந்தவன், விரைவாகச் செல்லும் குதிரையைக் கொண்டவன், அந்தப் பாண்டியன் வழுதியின் மார்பைச் சென்று சேர நீ விரும்புகிறாய், அதற்காக இப்படி நாள்முழுவதும் தவம் இருக்கிறாய், சரிதானே?

    ***

    என். சொக்கன் …

    22 01 2013

    052/365

     
    • amas32 11:48 am on January 22, 2013 Permalink | Reply

      இந்தப் பாடலில் எல்லா வரிகளுமே அழகும் பொருட்செறிவும் நிறைந்தவை 🙂 நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த வரிகளும் ரொம்ப அழகு 🙂 பூமாலையே பூச்சூடவா என்ற வரியும் ஐஸ்வர்யாவின் அழக்குக்கு ஒரு feather in her cap 🙂

      amas32

    • kamala chandramani 2:52 pm on January 22, 2013 Permalink | Reply

      அருமையான விளக்கம், பூக்களைப் பார்க்கையில் தவம்தான் நினைவுவரும்.

    • GiRa ஜிரா 11:07 am on January 23, 2013 Permalink | Reply

      Wonderful.

      இதே கருத்தை வைமு வெள்ளி மலரே வெள்ளி மலரே பாட்டில் ஒற்றைக் காலில் நெடுவனம் கண்டாய் என்று மீள்பயன்படுத்தியிருக்கிறார்

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel