Updates from December, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • mokrish 10:58 am on December 2, 2013 Permalink | Reply  

    நதிபோல ஓடிக்கொண்டிரு 

    திரைப்படத்தில் பாடல்கள் அவசியமா? இசையும் கவிதையும் திரைக்கதையின் ஓட்டத்திற்கு தேவையற்ற இடையூறா? சுஜாதா ‘டிவியில் பாடல் ஓடிக் கொண்டிருக்கும் போது mute பட்டனை அழுத்தி விட்டுக் கவனியுங்கள். சிரிப்பு வரும் என்று எழுதியிருந்தார்.

    பாடல்கள் எப்படிப் பயன்படுத்தப்படவேண்டும் என்பதே சரியான கேள்வி. ஒரு திறமையான கலைஞன் பாடல்களை கதையில் அழகாக நெய்துவிட முடியும். மகாநதி என்று படத்தின் டைட்டில். கதையின் பாத்திரங்களுக்கு கிருஷ்ணா, காவிரி, யமுனா, பரணி என்று நதிகளின் பெயர். கதை திருநாகேஸ்வரத்தில் தொடங்கி சென்னை, கொல்கத்தா என்று அலைந்து சென்னையில் முடியும். இதில் பாடல்களை எங்கே எப்படி கொண்டு வரவேண்டும்?

    வாலி ஸ்ரீரங்கத்துக்காரர். காவிரி நதியை ஒரு கதாபாத்திரமாகவே உருவாக்குகிறார். படத்தின் பெரும்பான்மையான பாடல்களில் கதையின் ஒட்டத்தோடு காவிரி பற்றிய reference. ராஜா ஒரு அற்புதமான இசை இழை தருகிறார். திரைக்கதையுடன் கைகோத்து வலம் வரும் பாடல்கள்.

    முதலில் மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாடும் பாடல் கங்கையின் மேலான காவிரியின் பெருமை சொல்லும் பாடல் (பாடியவர்கள் சித்ரா & குழுவினர்)

    http://www.youtube.com/watch?v=wwzL-BhmVMw

    தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
    வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ
    இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
    இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி

    நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி

    நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி

    அடுத்து விதிவசத்தால் சொந்த மண்ணை விட்டு விலகி சென்னை வந்து புது வாழ்க்கை ஆரம்பிக்கும்போது, பிரிந்து போகும் குழந்தையை ஒரு தாய் வழி அனுப்புவது போல காவிரி நதி நாயகனை வாழ்த்தும் வரிகள் (பாடியவர் எஸ் பி பாலசுப்ரமணியம்)

    http://www.youtube.com/watch?v=D2PyGX_K6IQ

    அன்பான தாயை விட்டு எங்கே நீ போனாலும்

    நீங்காமல் உன்னைச் சுற்றும் எண்ணங்கள் எந்நாளும்

    ஐயா உன்கால்கள் பட்ட பூமித்தாயின் மடி

    எங்கேயும் ஏதும் இல்லை ஈடு சொல்லும் படி

    காவேரி அலைகள் வந்து கரையில் உன்னைத் தேடிடும்

    காணாமல் வருத்தப் பட்டுத் தலை குனிந்து ஓடிடும்

    ஒரு பந்தம் என்பதும் பாசம் என்பதும் வேரு விட்ட இடம்

    இதை விட்டால் உன்னை வாழ வைப்பது வேறு எந்த இடம்

    தன் மண்ணை விட்டொரு குருவிக் குடும்பம் பறந்து போகுதடி

    தான் இந்நாள் வரைக்கும் இருந்த கூட்டை மறந்து போகுதடி

    இந்த நெஞ்சில் இப்படி ஆசை வந்தொரு கோலமிட்டதடி

    இதில் நன்மை கூடட்டும் தீமை ஓடட்டும் காலம் விட்ட வழி

    சென்னையில் அவனுக்கு நிறைய சோதனைகள். செய்யாத குற்றத்துக்கு சிறைவாசம். ஆனால் அவன் தளரவில்லை என்ற வரிகளிலும் காவிரி ! (பாடியவர் கமல்ஹாசன்)

    http://www.youtube.com/watch?v=VAzrswll0oQ

    தன்மானம் உள்ள நெஞ்சம் என்னாளும் தாழாது

    செவ்வானம் மின்னல் வெட்டி மண்மீது வீழாது

    காவேரி தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி

    காற்றாடி போலருந்து வீழ்வதில்லையடி

    அன்பான உறவு கண்டு கூடு கட்டி ஆடுவேன்

    அன்னாளில் நானிருந்த வாழ்க்கையைத் தான் தேடுவேன்

    அன்று சொன்னான் பாரதி சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி

    எந்தன் எண்ணம் என்றைக்கும் தோல்வி என்பதை ஏற்றதில்லையடி

    நதியில் விழுந்த இலை போல திக்கு திசை தெரியாமல் ஓடி பல சோகம் கண்டு ஒருவழியாக வெளிவரும் நிலையில் ஒரு அற்புதமான பாடல் (பாடியவர் கமல்ஹாசன்)

    http://www.youtube.com/watch?v=2H6CaBpol80

    எங்கேயோ திக்கு திசை எங்கேயோ திக்கு திசை காணாத தூரம்தான்

    அம்மாடி வந்ததென்ன என் வாழ்கை ஓடம்தான்

    காவேரி தீரம் விட்டு கால்கள் வந்ததடி

    காணாத சோகம் எல்லாம் கண்கள் கண்டதடி

    இரு கண்ணே செந்தமிழ் தேனே தந்தையின் பாசம் வென்றதடி

    பசும் பொன்னே செவ்வந்தி பூவே இத்துடன் சோகம் சென்றதடி

    ஒவ்வொரு பாடலிலும் காவிரி பற்றி ஒரு குறிப்பு. முதல் பாடலில் வளம் தரும் மகாநதி. அடுத்த பாடலில் வாழ்த்தி வழியனுப்பும் தாய் போல என்கிறார். இன்னொரு பாடலில் காவிரி மடியில் வாழ்ந்தவர் வீழ்வதில்லை என்கிறார். காவிரி தீரம் விட்டு வந்து பட்ட சோகம் சொல்கிறார். ஆனால் எல்லா பாடல்களிலும் முடிவில் ஒரு நல்ல வாக்கு. ஒரு பாசிடிவ் கருத்து. கதை சொல்லலில் பாடலையும் இணைக்கும் நயம்.

    நதியிடம் நமக்கு நிறைய பாடங்கள் கிடைக்கும். நதி இலக்கை மறப்பதேயில்லை. கழிவுப் பொருட்களைக் கலந்தாலும், எல்லா தடைகளையும் மீறி ஓடிக்கொண்டேயிருக்கும். In the confrontation between the stream and the rock, the stream always wins, not through strength but by perseverance என்று சொல்வார்கள். வாழ்க்கையும் அப்படியேதான்.

    அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி சொல்லி நாலு வரி நோட்டிலிருந்து விடை பெறுகிறேன்

    மோகனகிருஷ்ணன்

    365/365

     
    • amas32 6:52 pm on December 2, 2013 Permalink | Reply

      வாழ்த்துகள் மோகனகிருஷ்ணன், ராகவன், சொக்கன். #365 வேள்வியை பிராமாதமாக முடித்ததற்கு பாராட்டுகள் 🙂

      மகாநதி படத்தில் இந்த நதி பற்றிய thread இருப்பது நீங்கள் சுட்டிக் காட்டும் வரை நான் கவனித்தது இல்லை. மிக்க நன்றி. படம் முழுதும் நதியையும் கதையோடு ஓடவிட்டதில் வாலியின் திறமை மிளிர்கிறது. தஞ்சை திருச்சி மாவட்ட மக்களுக்குக் காவேரியைப் பற்றி பேசும்போது பெருமை பிடிபடாது 🙂

      ரிதம் படத்தில் நதியே நதியே காதல் நதியே பாடலும் சிறந்த கருத்தைச் சொல்லும் பாடல்.

      உங்கள் மூவருக்கும் பல்லாண்டு பல்லாண்டு பாடி அமைகிறேன் :-))

      amas32

    • uma chelvan 6:56 pm on December 2, 2013 Permalink | Reply

      excellent post !!!

      தன்மானம் உள்ள நெஞ்சம் என்னாளும் தாழாது

      செவ்வானம் மின்னல் வெட்டி மண்மீது வீழாது

      In the confrontation between the stream and the rock, the stream always wins, not through strength but by perseverance………………………Beautiful Wordings both in Tamil and English.

      Godd Luck !!!!

    • krish 12:32 pm on August 12, 2014 Permalink | Reply

      excellant

  • என். சொக்கன் 11:13 pm on November 30, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள் 

    முன்பெல்லாம் நம் தமிழ் திரைப்படங்களில்  குழந்தைகளுக்கு நாயகர்கள் அறிவுரைக் கருத்துகளைக் கூறும் பாடல்கள் நிறைய இடம் பெறும். அந்தப் பாடல்களில் உள்ள நற்கருத்துகள் பல பிஞ்சு மனங்களில் பசுமரத்தாணிபோல பதிந்து நல்வாழ்விற்கு வழிவகுக்கும் ஆற்றல் கொண்டவை. அது போன்று பல பாடல்கள் வந்திருந்தாலும் என்றும் மனதில் நிற்கும் சில பாடல் வரிகள்:
    “பாலுட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்-அறிவூட்டும் தந்தை நல்வழி காட்டும் தலைவன்
    துணையாக கொண்டு நீ நடைபோடு இன்று-உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று”
    கிளி போல பேசு இளங்குயில் போல பாடு-மலர் போல சிரித்து நீ குறள் போல வாழு
     மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்-மெய்யான அன்பே தெய்வீகமாகும்”
    : இது காவியக்கவிஞர் வாலியின் எளிமையான சக்தி மிகுந்த வரிகள் கொண்ட “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே”பாடல்.
    அடுத்து கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகளை பாருங்கள்:
    “அறம் செய்ய விரும்பு என்றாள் ஔவை-தருமம் செய்யுங்கள்
       அன்பே தெய்வம் என்றார் பெரியோர் -அன்புடன் வாழுங்கள்
      யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள்
       யாரும் பொய்யை சொன்னாலும் நீங்கள் மெய்யை சொல்லுங்கள்
      நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே”!

    எப்படிப்பட்ட வரிகள் பாருங்கள், “தங்கங்களே நாளை தலைவர்களே நம் தாயும் மொழியும் கண்கள்”பாடல்.

    அடுத்து  கவிஞர் வைரமுத்து அவர்களின் வரிகள்-
    குழந்தைகளுக்கு யானை,குரங்கு”கதையை கூறி “வினை விதைத்தவன் வினை அறுப்பான்-திணை விதைத்தவன் திணை அறுப்பான்,நன்மை ஒன்று  செய்தீர்கள் நன்மை விளைந்தது-அட தீமை ஒன்று செய்தீர்கள் தீமை விளைந்தது-தீமை செய்வதை விட்டு விட்டு நன்மை செய்வதை தொடருங்கள்”என்று எளிமையாக அறிவுறுத்தும் “ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப்பக்கம் வந்தானாம்”..
    புதிய இயக்குனர்களும் தங்கள் படங்களில் இது போன்ற நல்ல கருத்துக்களை தங்கள் படங்களில் புகுத்துவது ஆரோக்கியமான வளர்ச்சியாக அமையும். நன்றி
    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்:
                                                                                பாடல்:             நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
                                                                                படம் ”              நம் நாடு
                                                                                எழுதியவர்:   கவிஞர் வாலி
                                                                                இசை :             கே.வி. மகாதேவன்
                                                                                 பாடியவர்:      டி.எம்.சௌந்தர்ராஜன்
                                                                                 சுட்டி :                http://youtu.be/Th9bUtTIRGY
                                                                                 பாடல்:             தங்கங்களே நாளை தலைவர்களே
                                                                                 படம் :                என்னைப்போல் ஒருவன்
                                                                                 எழுதியவர்:     கவியரசர் கண்ணதாசன்
                                                                                  இசை:                எம்.எஸ்.விஸ்வநாதன்
                                                                                  பாடியவர் :        டி.எம்.சௌந்தரராஜன்
                                                                                  சுட்டி:                  http://youtu.be/6FQEFdXE3Io
                                                                                  பாடல்:                ராஜா சின்ன ரோஜாவோடு
                                                                                   படம்:                   ராஜா சின்ன ரோஜா
                                                                                   எழுதியவர்:       கவிஞர் வைரமுத்து
                                                                                    இசை:                  சந்திரபோஸ்
                                                                                    பாடியவர்கள்:   எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர்
                                                                                     சுட்டி:                    http://youtu.be/w9O4sdhxwos

    நா. ரஜினி ராமச்சந்திரன்

    பிறந்தது கடலூர், என்றாலும் வளர்ந்ததெல்லாம் சிங்காரச் சென்னைதான். ஒரு தனியார் நிறுவனத்தில் பணி. தற்போது பெங்களுரில் வசிக்கிறேன். ட்விட்டரில் என்னைப் பின்தொடர: @rajinirams

     
  • என். சொக்கன் 10:50 pm on November 18, 2013 Permalink | Reply  

    உத்தரவின்றி உள்ளே வா 

    • படம்: ஜில்லுன்னு ஒரு காதல்
    • பாடல்: முன்பே வா
    • எழுதியவர்: வாலி
    • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
    • பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்
    • Link: http://www.youtube.com/watch?v=OHA_ATdgw_g

    நீ நீ மழையில் ஆட,

    நான் நான் நனைந்தே வாட,

    என் நாளத்தில் உன் ரத்தம்,

    நாடிக்குள் உன் சத்தம்!

    பள்ளியில் தமிழ் மீடியத்தில் அறிவியல் (அல்லது உயிரியல்) படித்தவர்களுக்கு இந்த வரிகளைப் படித்தவுடன் சட்டென்று அந்த ‘நாளம்’ என்ற சொல்லில் மனம் சென்று நிற்கும்.

    ’ரத்தக் குழாய்’ என்று நாம் பரவலாகச் சொல்லும் அதே வார்த்தைதான். ’ரத்த நாளம்’ என்று சொன்னால் இன்னும் அழகாக இருக்கிறது. நாளத்திற்கும் குழாய்க்கும் ஏதேனும் நுட்பமான வேறுபாடு உண்டா என்று தெரியவில்லை.

    அப்புறம் அந்த நாளமில்லாச் சுரப்பிகள்? தமனி? சிரை? தந்துகி? இந்த வார்த்தைகளையெல்லாம் கேட்கும்போது, மறுபடி ஒன்பதாங்கிளாஸுக்குத் திரும்பிவிடமாட்டோமா என்றிருக்கிறது!

    விஷயத்துக்கு வருவோம். நம் உடம்பு நிறைய இருக்கும் ரத்த நாளங்கள் பேச்சிலோ, சினிமாப் பாடல்களிலோ அதிகம் வருவதில்லை என்று நினைத்தேன். கொஞ்சம் தேடினால் ஒரு சில நல்ல உதாரணங்கள் சிக்கின:

    உயிர் உருகிய அந்த நாள் சுகம்,

    அதை நினைக்கையில்,

    ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் (வாலி)

    ***

    நாளங்கள் ஊடே

    உனதன்பின் பெருவெள்ளம் (மதன் கார்க்கி)

    ***

    ரத்த நாளங்களில் போடும் தாளங்களில்

    புதுத் தாலாட்டுதான் பாடுமா? (பொன்னியின் செல்வன்)

    ***

    மேளங்கள் முழங்குதுங்க, ரத்த

    நாளங்கள் துடிக்குதுங்க (டி. ராஜேந்தர்)

    ***

    ஒரே ஒரு ஆச்சர்யம், ”அறிவியல் கவிஞர்” வைரமுத்து இந்தச் சொல்லை இதுவரை பயன்படுத்தவில்லையோ?

    ***

    என். சொக்கன் …

    18 11 2013

    351/365

     

     
    • Uma Chelvan 6:52 am on November 19, 2013 Permalink | Reply

      நாளமில்லாச் சுரப்பிகள்……..endocrine glands ….that’s what I taught my students today. What a coincident….

      அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை!!
      அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும் -அது போல்
      இந்த நாள் வரும் உயிர் உருகிய அந்த நாள் சுகம். – அதை நினைக்கையில்
      ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் ………ஒரு நிமிஷம் கூட என்னை பிரியவில்லை

      மிக மிக அருமையான பாடல். இதை தான் முதல் பாடலாக நீங்க சொல்லி இருக்கீங்க!!! still I want to post this song again !!!

    • amas32 8:37 pm on November 19, 2013 Permalink | Reply

      எவ்வளவு ஆராய்ச்சிப் பண்ணியிருக்கீங்க ஒரு பதிவுக்கு! வைரமுத்து இந்த சொல்லை பயன்படுத்தவில்லை என்னும் அளவுக்கு research!

      //என் நாளத்தில் உன் ரத்தம்,// very romantic!

      ரொம்பப் பிடிச்சிருக்கு இந்த போஸ்ட் 🙂

      amas32

    • rajinirams 11:28 am on November 20, 2013 Permalink | Reply

      நல்ல பதிவு. என்ன அருமையான வாலியின் வரிகள் -உயிர் உருகிய அந்த நாள் சுகம்,அதை நினைக்கையில்,ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்,நீங்கள் சொன்னது போல வைரமுத்து அந்த வார்த்தையை உபயோகிக்காதது ஆச்சர்யமே.

    • நவநீதன் 9:34 pm on January 29, 2014 Permalink | Reply

      ”வந்து தூறல் போடு… இல்லை சாரல் போடு… எந்தன் நாளம் நனையட்டுமே…”

      வைரமுத்து

      படம்: க.கொ.க.கொ
      பாடல்: ஸ்மை யாயி..

  • mokrish 9:56 pm on November 17, 2013 Permalink | Reply  

    தலைப்பு செய்திகள் 

    தமிழ் சினிமாவில் இருக்கும் கதைப்பஞ்சம் நமக்கு தெரியும். இருக்கும் சில கதைகளுக்கும் தலைப்பு தேடுவதே பெரிய வேலையாகிவிட்டது. பெரிய ஹீரோ – ஸ்டார் இவர்கள் நடிக்கும் படங்களுக்கு நாயகனின் பெயரையே தலைப்பாக வைக்கலாம். பலர் ஏற்கனவே வெளிவந்த திரைப்படத்தின் பெயரையே திரும்பவும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரே தலைப்புக்கு நடக்கும்  வாய்க்கா தகராறு கொடுமை!

    1950களில் சில திரைப்படங்களுக்கு இரண்டு தலைப்புகள் வைத்திருந்தனர். இப்போது அந்த இரண்டாவது தலைப்பை tag லைன் என்று சொல்கிறார்கள். மிக நீளமான தலைப்பைக் கொண்ட திரைப்படம் என்ற (ஒரே) பெருமை மன்சூர் அலிகானின் ‘ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்’ என்ற படத்துக்கே. ஒரேழுத்து தலைப்பும் உண்டு – சமீபத்திய கோ,  தயாரிப்பில் இருக்கும்  ஷங்கரின் ஐ.

    அன்றும் இன்றும் என்றும் நாவல்களுக்கும் / திரைப்படங்களுக்ககும் பாடல் வரிகளையே தலைப்பாக வைப்பது ஒரு வழக்கம்.  ஆனந்த விகடனில் எழுத்தாளர் மணியன் ‘உன்னை ஒன்று கேட்பேன் என்ற பாடலின் வரிகளை தன் நாவல்களின் தலைப்பாக வைத்தார். தாமரை மணாளன் ஆயிரம் வாசல் இதயம் என்று ஒரு கதை எழுதினார். திரையுலகில் எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி நிறைய படங்களின்  தலைப்பு ஒரு பாடலின் முதல் வரியே

    ஒரு அதிசயமான டைட்டில் தொடர் சங்கிலி கண்ணில் பட்டது. ஒரு படத்தின் பாடலை இன்னொரு படத்தின் தலைப்பாக்கி  அந்த படத்தின் பாடல் இன்னொரு படத்தின் தலைப்பாகி என்று ஒரு சங்கிலியில் நான்கு அருமையான பாடல்கள்.

    லக்ஷ்மி கல்யாணம் என்றொரு படம்.அதில் ராமனின் பல பெயர்களை வர்ணிக்கும் பாடல்   http://www.youtube.com/watch?v=DR2GFE0B5M0

    ராமன் எத்தனை ராமனடி

    அவன் நல்லவர் வணங்கும் தெய்வமடி

    ராமன் எத்தனை ராமனடி என்ற படத்தில் ஒரு பிரபலமான பாடல் http://www.youtube.com/watch?v=cU9_w77CM1k

    அம்மாடி … பொண்ணுக்கு தங்க மனசு

    பொங்குது இந்த மனசு

    பொண்ணுக்கு தங்க மனசு என்ற படத்தில்  வரும் பாடல் http://www.youtube.com/watch?v=tCpQUgKU4YI

    தேன் சிந்துதே வானம்

    உனை எனை தாலாட்டுதே

    தேன் சிந்துதே வானம் என்ற படத்தில் வரும் பாடல் http://www.youtube.com/watch?v=lc1v6uBKtKs

    உன்னிடம் மயங்குகிறேன்

    உள்ளத்தால் நெருங்குகிறேன்

    உன்னிடம் மயங்குகிறேன் என்றும் ஒரு படம் வந்தது. ஆனால் இந்த டைட்டில் சங்கிலி தொடரவில்லை என்று நினைக்கிறேன்.

    தலைப்புக்கும் கதைக்கும் பெரிய தொடர்பே இருப்பதில்லை. அபூர்வமாக சில நல்ல தலைப்புகள் கண்ணில் படும். என் டாப் பட்டியலில் இருக்கும் தலைப்புகள் முள்ளும் மலரும், மூன்றாம் பிறை, வாலி, அழியாத கோலங்கள்

    மோகனகிருஷ்ணன்

    350/365

     
    • rajinirams 11:20 pm on November 17, 2013 Permalink | Reply

      நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ,சில மாதங்களுக்கு முன் இதை நினைத்தேன்-இதே போல இன்னொன்று- இருவர் உள்ளாம்=இதயவீணை தூங்கும்போது, இதயவீனை-இன்று போல என்றும் வாழக. இன்று போல் என்றும் வாழ்க-அன்புக்கு நான் அடிமை.அன்புக்கு அடிமையாகி நின்று விட்டது:-)) நன்றி.

    • rajinirams 3:06 am on November 18, 2013 Permalink | Reply

      இரு மலர்கள்-அன்னமிட்ட கைகளுக்கு,அன்னமிட்ட கை-16 வயதினிலே,16 வயதினிலே-செந்தூரப்பூவே,செந்தூரப்பூவேயுடன் நின்றது, தெய்வத்தாய்-வண்ணக்கிளி,வண்ணக்கிளி-மாட்டுக்கார வேலா,மாட்டுக்கார வேலன்-பட்டிக்காடா பட்டணமா.பட்டிக்காடா பட்டணமா-நல்வாழ்த்து நான் சொல்வேன்,நல் -வாழ்த்துக்களுடன் இனிதே முடிந்தது. அதே போல் நீ,தீ போன்ற ஓரெழுத்து படங்களும் வெளியாகின. மின்னலே பாடத்தில் வாலி எழுதிய அழகிய தீயே வரியை தன் படத்தில் தலைப்பாக வைத்ததற்கு அழகிய தீயே இசை வெளியீட்டு விழாவில் அவரை அழைத்து கெளரவப்படுத்தினார் அதன் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ்.பல படங்களுக்கு தலைப்பை பாடல் மூலம் தந்திருந்தாலும் தன்னை கெளரவப்படுத்திய பிரகாஷ்ராஜை மனமார பாராட்டினார் வாலி.நல்ல பதிவு.பாராட்டுக்கள்.

    • amas32 2:31 pm on November 18, 2013 Permalink | Reply

      Very quaint post 🙂 I have also wondered about this like Rjnirams 🙂 At least movies with song line titles is plenty common among Tamil film productions. அதுவே படத்தைப் பாதி மக்களிடம் கொண்டு சேர்த்துவிடும். நீ தானே என் பொன் வசந்தம் என்று பெயர் சூட்டியது கௌதம் வாசுதேவ் மேனனின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது 🙂

      amas32

  • G.Ra ஜிரா 9:18 pm on November 14, 2013 Permalink | Reply  

    தலைவர்களின் தலைவிகள் 

    சங்க இலக்கியம் காதல் கொண்ட ஆணையும் பெண்ணையும் தலைவன் தலைவி என்றே அழைக்கிறது. மிகப் பொருத்தமான பெயர்தான். அவனுக்கு அவள் தலைவி. அவளுக்கு அவன் தலைவன். அவர்கள் ஊடிக் கூடி முயங்குவதுதான் காமம்.

    அது சரி. ஊருக்கோ நாட்டுக்கோ தலைவன் ஒருவன் இருப்பானே. அவனுக்கும் ஒரு தலைவி இருப்பாளே! அவளுடைய நிலை எப்படி இருக்கும்?

    சாதரண மனிதனாலேயே வீட்டுக்கும் வேலைக்கும் சரியான அளவு நேரம் ஒதுக்க முடிவதில்லை. அப்படியிருக்க நாடாளும் தலைவன் நாட்டுக்கும் வீட்டுக்கும் சரியான அளவு நேரமும் கவனமும் ஒதுக்க முடியுமா?

    முடியாது என்று அடித்துச் சொல்கிறார் துரியோதனனின் மனைவி பானுமதி.

    அரண்மனை அறிவான்
    அரியணை அறிவான்
    அந்தப்புரம் ஒன்று இருப்பதை அறியான்
    வருகின்ற வழக்கை முடித்து வைப்பான்
    மனைவியின் வழக்கை கனவிலும் நினையான்
    என்னுயிர்த் தோழி கேளொரு சேதி
    இதுதானோ உங்கள் மன்னவர் நீதி!

    நாட்டுக்கே அரசியானலும் இதுதான் அவள் நிலை. “தன்னுயிர் போலே மண்ணுயிர் காப்பான் தலைவன் என்றாயே தோழி” என்றுதான் அவளால் புலம்ப முடிந்தது. ஆனாலும் அவளுக்கும் ஒரு நம்பிக்கை.

    இன்றேனும் அவன் எனை நினைவானோ
    இளமையைக் காக்க துணை வருவானோ
    நன்று! தோழி நீ தூது செல்வாயோ
    நங்கையின் துயரச் சேதி சொல்வாயோ!

    கவியரசர் கண்ணதாசன் வரிகளில் அத்தினாபுர அரசி பானுமதி அனுப்பிய தூது வெற்றி பெற்றிருக்கும் என்றே நம்புகிறேன். வெற்றி பெற்றிருக்கவே விரும்புகிறேன்.

    ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது பெண்கள் நிலை மாறியிருக்கிறதா? குறிப்பாக தலைவர்களின் தலைவிகளின் நிலை? இல்லை என்கிறார் கவிஞர் வைரமுத்து.

    இப்பொதெல்லாம் அந்தரங்க விஷயங்களை நம்பிப் பரிமாறுவதற்கான தோழிகளும் தோழர்களும் அரிதாகித்தான் போனார்கள். ஆகையால் முதல்வனின் முதல்வி அவளுக்காக அவளே பாடுகிறாள்.

    உலகம் வாழ நிதி ஒதுக்கு
    என் உயிரும் வாழ மதி ஒதுக்கு
    அரசன் வாழ விதி இருக்கு
    அதற்கு நீதான் விதிவிலக்கு
    மன்னனே… இதோ இவள் உனக்கு

    அப்போதும் அவன் அசைந்து கொடுத்தது போலத் தெரியவில்லை. ஆசைகளை அள்ளித் தெளிக்கிறாள்.

    பள்ளிவாசல் திறந்தாய் பள்ளி திறந்தாய்
    பள்ளியறை வர நேரமில்லையா
    ஊரடங்கு தளர்த்தி வரிகள் தளர்த்தி
    உடைகள் தளர்த்திட வேண்டுமில்லையா!

    காதல் பஞ்சம் வந்து நொந்தேனே முத்த நிவாரணம் எனக்கில்லையா?” என்று தலைவியே தலையெழுத்தை நொந்து கொள்கிறாள். காலங்கள் மாறினாலும் தலைவிகளுக்கு புலம்பல் தான் வழி போல!

    இந்த ஏக்கங்கள் தலைவிக்கு மட்டுந்தான் இருக்குமா? இல்லை. தலைவனுக்கும் இருக்கும் என்கிறார் கவிஞர் வாலி.

    தலைவன் போர்க்கடமையில் இருக்கிறான். போர்ப்பாசறையில் இருந்தாலும் அவன் மனம் அவளது பாச அறைக்கு ஏங்குகிறது.

    வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்!
    போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்
    தேன் நிலவு நான் வாழ ஏன் இந்த சோதனை?
    வான் நிலவை நீ கேளு! கூறும் என் வேதனை!

    அப்படியானால் மகிழ்ச்சியான தலைவனும் தலைவியும் கிடையவே கிடையாதா? அவர்கள் எப்படிப் பாடுவார்கள் என்பதை எப்படித்தான் தெரிந்து கொள்வது? கவலை வேண்டாம் என்கிறார் கவிஞர் வாலி. மன்னவன் வந்தானடி என்ற படத்துக்காக ஒரு பாடல் எழுதினார்.

    காதல் ராஜ்ஜியம் எனது!
    அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது!
    இது மன்னன் மாடத்து நிலவு!
    இதில் மாலை நாடகம் எழுது!

    அடடா! இப்படி தலைவனும் தலைவியும் ஒன்றாக மனமகிழ்ந்து பாடுவது நமக்கெல்லாம் கேட்பதற்கு எவ்வளவு இன்பமாக இருக்கிறது!

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – என்னுயிர்த் தோழி கேளொரு சேதி
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.இராமமூர்த்தி
    படம் – கர்ணன்
    பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=ON5Wh1WuAH0

    பாடல் – முதல்வனே வனே வனே வனே
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர் – எஸ்.ஜானகி
    இசை – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்
    படம் – முதல்வன்
    பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=k6X1d2zlqTw

    பாடல் – சுந்தரி கண்ணால் ஒரு சேதி
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர் – எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – தளபதி
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=aPp_i4qzoqI

    பாடல் – காதல் ராஜ்ஜியம் எனது
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – இசையரசி பி.சுசீலா, ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – மன்னவன் வந்தானடி
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=EMPVtUf42Dc

    அன்புடன்,
    ஜிரா

    347/365

     
    • Kannabiran Ravi Shankar (KRS) 4:07 am on November 15, 2013 Permalink | Reply

      தலை = “முதல்”
      உழந்தும் உழவே “தலை” -ன்னு சொல்றோம்-ல்ல

      அப்படி, வாழ்க்கையில்..
      அவனுக்கு முதல் = அவளே; “தலை”வி
      அவளுக்கு முதல் = அவனே; “தலை”வன்

      வாழ்வில் எத்தனையோ வரும் போகும்..
      ஒவ்வொன்னுத்துக்கும் ஒரு மதிப்பு | அந்த நேரத்துக்கு வரும், அப்பறம் போயீரும்;

      ஆனா அவளுக்கு = அவன் தான் முதல்! அவனுக்கு அப்பறம் தான் மத்த எல்லாம்;
      அதனால் தான் அவ = “தலைவி”
      ————

      சீதை = தலைவி; அவனே முதல், அப்பறம் தான் மத்த எல்லாம்
      இராமன் = ? | அவனுக்கு மற்ற விஷயங்களும் முதல் ஆகி விடுகிறது, வெவ்வேறு காலங்களில்..

      சங்கத் தமிழில் அகம் தான் அதிகம் | புறத்தை விட..
      நாடாளும் மன்னனை = நாடன், மன்னன், கோன், பெருமன் -ன்னு சொல்லுவாங்களே தவிர, “தலைவன்” -ன்னு சொல்ல மாட்டாங்க!

      காதலனைத் தான் = தலைவன் -ன்னு சொல்லுறது வழக்கம்! அப்படியொரு உயர்வு, மனசால் வாழும் அக வாழ்வுக்கு!

      சில பாடல்களில் குறிஞ்சி நாட்டுத் தலைவன்-ன்னு வந்தாலும், அது அகப் பாடலாய்த் தான் இருக்கும்! அவள், அவனைத் “தலைவன்” -ன்னு சொல்வது!
      ஆனால் பின்னாளில் புறம் மிகுந்து போய்….
      நாடாள்பவர்களை = “தலைவர்” -ன்னு இன்னிக்கும் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்:(

      • Kannabiran Ravi Shankar (KRS) 4:23 am on November 15, 2013 Permalink | Reply

        வருகின்ற வழக்கைத் தீர்த்து முடிப்பான்
        மனைவியின் வழக்கை மனதிலும் நினையான்
        என்னுயிர்த் தோழி கேளொரு சேதி…
        -ன்னு கண்ணதாசன், என்னவொரு ஏக்கத்தை வைக்குறாரு! யப்பா…

        நாடாளும் மன்னவனே ஆனாலும்,
        அலுவல் காரணமாய் நேரம் ஒதுக்க முடியாவிட்டாலும் கூடப் பரவாயில்லை…

        ஆனால், அவளே “முதல்” -ன்னு மனசால நினைக்கணும்!
        அப்ப தான் = “தலைவன்”
        நாட்டுக்கு/ ஆபீசுக்கு = பல ஆபீசர்கள் கிடைப்பார்கள்
        ஆனா அவளுக்கு = ?

        காசில்லாம குடும்பம் நடத்த முடியாது; அலுவல்/ கடமை எல்லாமே முக்கியம் தான்!
        ஆனா, இதெல்லாமே எதுக்குச் செய்யறது?
        தன்னையே நம்பி வந்த அவளோடு “வாழ”வே இத்தனையும்!
        —————-

        வீட்டு வேலைக்கு நேரம் ஒதுக்க முடியாட்டாலும் பரவாயில்லை…
        ஆனா, “இரவு” -ன்னு ஒன்னு வருது-ல்ல?

        அந்த இரவில், தூங்கும் முன்,
        அவ கிட்ட, முகத்தோடு முகம் வச்சி,
        “என்னடீ?” -ன்னு பேசும் ரெண்டே சொல்லு…

        அடுத்த நாள், அவளுக்கும் புத்துணர்வு, அவனுக்கும் புத்துணர்வு
        தலைவன்-தலைவி என்னுமோர் “அக” வாழ்க்கை!

    • Kannabiran Ravi Shankar (KRS) 4:27 am on November 15, 2013 Permalink | Reply

      //ஊரடங்கு தளர்த்தி, வரிகள் தளர்த்தி
      உடைகள் தளர்த்திட வேண்டுமில்லையா//

      என்னவொரு அழகு “தளர்த்தல்” வரிகளில்:)

      //”காதல் பஞ்சம் வந்து நொந்தேனே
      முத்த நிவாரணம் எனக்கில்லையா?”//

      வாய் விட்டுக் கேட்டே விட்டாள்…
      நோய் விட்டுப் போகுமோ?

    • Uma Chelvan 8:34 pm on November 15, 2013 Permalink | Reply

      தலை வாழை இல்லை போட்டு இந்த அம்மா விருந்து வைக்குமாம் !! அவர் நல்லா சாப்பிட்டு விட்டு தூங்குவாரம் !!! what a stupid song !!!

    • rajinirams 12:47 am on November 16, 2013 Permalink | Reply

      செம பதிவு.மூன்று ஏக்கங்களை வெளிப்படுத்தி இறுதியில் காதல் ராஜ்ஜியத்தில் ஆடிப்பாடுவதாக சுபமாக முடித்து அருமையான பதிவை தந்துள்ளீர்கள். நாளை இந்த வேளை பார்த்து ஓடி வாநிலா.இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா பாடலும் பொருத்தமானதே. நன்றி.

  • mokrish 9:05 am on November 13, 2013 Permalink | Reply  

    வண்ண வண்ண சேலைங்க 

    விசாகா ஹரியின் பக்த சூர்தாஸ் கதா கச்சேரியில் கதை மெதுவாக பாடலுடன் விரிந்தது. முன்னுரையில் திரௌபதி குரல் கேட்டு எம்பெருமான் வருகிறார் என்ற நிகழ்வை பலர் அவரவர் உணர்ந்த விதத்தில் பாடிய அருமை பற்றி சொன்னார்.

    திரௌபதி – துகிலுரியப்படும் காட்சி என்றாலே எனக்கு டிவியில் பார்த்த பி ஆர் சோப்ராவின்  மகாபாரதம் நினைவுக்கு வரும். கிருஷ்ணர் -கையிலிருந்து மீட்டர் கணக்கில் வரும் பின்னி மில்  மஞ்சள் புடவை கண்ணில் தெரியும். இதுதான் பொதுவான விஷுவல்.

    பாரதியார் என்ன சொல்கிறார்? துச்சாதனன் பாஞ்சாலியின் துகிலை உரியத் தொடங்கினான். அவள் கண்ணனின் அருள் செயல்களைச் சொல்லி அவனை அழைத்து அடைக்கலம் புகுந்தாள். கண்ணன் அருளால் அவள்துகில் வளர்ந்து கொண்டேயிருந்தது.  அது வளர்ந்த விதத்தை உவமைகளை அடுக்கிச் சொல்கிறார்.

    பொய்யர்தம் துயரினைப் போல் – நல்ல

             புண்ணியவாளர்தம் புகழினைப்போல்

    தையலர் கருணையைப் போல் – கடல்

             சலசலத் தெறிந்திடும் அலைகளைப்போல்

    பெண்ணொளி வாழ்த்திடுவார்-அந்தப்

             பெருமக்கள் செல்வத்தின் பெருகுதல்போல்

    வண்ணப் பொற் சேலைகளாம் – அவை

             வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே !

    வாலியும்  பாண்டவர் பூமியில் பாஞ்சாலி கண்ணா கமலபூங்கண்ணா! என்று சீதரனை விளித்தாள். உடனே

    இருளினால் செய்த

    எழில்மேனியன் -எங்கிருந்தோ

    அருளினான்

    ஆடைமேல் ஆடைமேல்

    ஆடைமேல் ஆடைமேல்

    ஆடையாய் இடைவிடாது

    சங்கம்; சக்கரம்

    தங்கும் தனது

    கைத்தறியில் – உடை நெய்து

    கையறு பெண்ணுக் கனுப்பிட

    என்ற வரிகளில் அவன் பல புடைவைகள்  அனுப்பினான் என்றே சொல்கிறார்.

    வைரமுத்து சலங்கை ஒலி படத்தில் வான் போலே வண்ணம் என்ற பாடலில் (இசை இளையராஜா பாடியவர்கள் எஸ் பி பி, எஸ் பி ஷைலஜா) ஒரு ட்விஸ்ட் சொல்கிறார். கன்னியருடன் விளையாடியவன், பெண்களோடு அலைந்தவன் கோபியரின் சேலைகளை எடுத்தது பாஞ்சாலி கேட்கும்போது கொடுப்பதற்காகவே  என்று ஒரு cinematic ஜோடனை.

    http://www.youtube.com/watch?v=LkPxCJ5ux-c

    பெண்கள் உடை  எடுத்தவனே

    தங்கைக்கு உடை கொடுத்தவனே

    சேலைகளைத் திருடி அன்று செய்த லீலை பலகோடி

    ஆனால் சூர்தாஸ் deenan dukh haran dev santan hitkari என்ற பாடலில் சொன்னது சுவாரஸ்யமாக இருந்தது. துச்சாதனன் ஆடையை பிடித்து இழுக்கும் போது அவள்  ‘கிருஷ்ணா கிருஷ்ணா என்று கதறி வேண்டுகிறாள். உடனே கிருஷ்ணர் அங்கே வந்து தன்னையே அவளுக்கு ஆடையாக அளிக்கிறார் என்று சொல்கிறார்.

    http://www.youtube.com/watch?v=ayX_wJ8otVM

    கண்ணதாசன் பூவும் பொட்டும் படத்தில் எழுதிய பாடலில் (இசை கோவர்தனம்  பாடியவர் பி சுசீலா)

    http://www.inbaminge.com/t/p/Poovum%20Pottum/Ennam%20Pola%20Kannan%20Vanthan.eng.html 

    எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா

    பெண்மை வாழ தன்னை தந்தான் அம்மம்மா

    என்ற வரிகளில் பெண் மானம் காக்க கண்ணன் தன்னையே தந்தான் என்கிறார். மீட்டர் கணக்கில், பல வண்ணங்களில் சேலைகள் என்பது வழக்கமான விளக்கம். சூர்தாசரும் கண்ணதாசரும் சொல்வது கண்ணனின் பெருமை.

    மோகனகிருஷ்ணன்

     
    • rajinirams 5:43 pm on November 13, 2013 Permalink | Reply

      பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்-பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான் என்ற கவியரசர் “பெண்மை வாழ தன்னை தந்தான்” என்ற ஒரு வரியிலேயே அசத்தி விட்டாரே…அருமையான பதிவு.

    • Uma Chelvan 8:10 pm on November 13, 2013 Permalink | Reply

      very nice reply rajinirams.

      • rajinirams 10:14 pm on November 13, 2013 Permalink | Reply

        Uma Chelvan நன்றி

    • Uma Chelvan 8:27 pm on November 13, 2013 Permalink | Reply

      பாரதியார் கண்ணன் மீது கொண்ட அன்பு அளப்பரியது. So does ” Kanna…..Dasan”. When I look around and look back எல்லோருக்குமே கண்ணன் மீது ஒரு காதல் உண்டு.” கண்ணனை நினைக்காத நாளில்லையே ” ….ஆயினும் பாரதியின் காதல் உன்னதமானது , உயர்வானது !

      கண்ணன் எனது அகத்தே கால்வைத்த நாள்முதலாய்
      எண்ணம் விசாரம் எதுவும் அவன் பொறுப்பாய்ச்
      செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,
      கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம்,
      தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்
      ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண்!….

      .மிக தெளிவான , அழகான பாரதியின் கவிதை கண்ணனை பற்றி .

      • mokrish 8:17 am on November 14, 2013 Permalink | Reply

        பாரதியார் கண்ணன் மீது கொண்ட அன்பு அளப்பரியது. தல் உண்டு.” கண்ணனை நினைக்காத நாளில்லையே ” ….

      • mokrish 8:23 am on November 14, 2013 Permalink | Reply

        பாரதியார் கண்ணன் மீது கொண்ட அன்பு அளப்பரியது – அதில் எனக்கு சந்தேகமே இல்லை.

    • amas32 7:47 pm on November 15, 2013 Permalink | Reply

      சூர்தாசரும் கண்ணதாசரும் உட்பொருள் ஆராய்ந்து விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அதுவே உண்மை நிலை. மீட்டர் மீட்டரா துணி நீண்டு வருவது ஒரு figure of speech தான்.

      amas32

  • என். சொக்கன் 9:17 pm on November 10, 2013 Permalink | Reply  

    யானோ கவிஞன்? 

    • படம்: நினைத்தாலே இனிக்கும்
    • பாடல்: பாரதி கண்ணம்மா
    • எழுதியவர்: கண்ணதாசன்
    • இசை: எம். எஸ். விஸ்வநாதன்
    • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
    • Link: http://www.youtube.com/watch?v=Q9XrLMK8nbM

    பாரதி கண்ணம்மா, நீயடி சின்னம்மா, கேளடி பொன்னம்மா,

    அதிசய மலர் முகம், தினசரி பல ரகம்,

    ஆயினும் என்னம்மா? தேன்மொழி சொல்லம்மா!

    கண்ணதாசன் அவர்களின் உதவியாளராக இருந்த இராம. கண்ணப்பன் எழுதிய ‘அர்த்தமுள்ள அநுபவங்கள்’ (’அநுபவம்’ என்றுதான் எழுதியிருக்கிறார்கள், ’அனுபவம்’ என்றல்ல) என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தேன்.  அதில் கண்ணதாசன் பாரதியைப்பற்றிச் சொல்லும் பகுதி மிகவும் உணர்ச்சிகரமானது:

    ‘ஆறு தொகுதிகள் கவிதைகள் எழுதி இருக்கிறேன், ஏராளமா சினிமா பாட்டெழுதி இருக்கிறேன், உரை நடை எழுதி இருக்கிறேன்… பன்றி குட்டி போட்டமாதிரி இவ்வளவு எழுதி என்ன பிரயோசனம்? பாரதி இந்தக் கவிதைத் தொகுதி ஒன்றினால்மட்டும் உலகத்தை ஜெயிச்சுட்டானே!’

    ‘அவன்தான் மகாகவி, என்னைப்பத்தியெல்லாம் பேசப்படாது!’

    கண்ணதாசன் சொன்னால் ஆச்சா? நாம் இப்போதும் அவரைப்பற்றிப் பேசிக்கொண்டுதானே இருக்கிறோம்!

    ***

    என். சொக்கன் …

    10 11 2013

    343/365

     

     
    • bganesh55 6:59 am on November 11, 2013 Permalink | Reply

      அதானே… கண்ணதாசனின் வரிகளின் எளிமை திரைத் துறைக்கும், கருப்பொருளின் அடரத்தி அவர் கவிதைகளிலும் வெளிப்பட்டதை மற(று)க்க முடியுமா என்ன? பாரதி ஒரு சிகரம் எனில் கண்ணதாசனும்…!

    • amas32 8:47 am on November 11, 2013 Permalink | Reply

      சூப்பர்! எனக்குக் கண்ணதாசனை மிஞ்சி எவரும் இல்லை என்று தோன்றும். தனிப்பட்ட டேஸ்ட், ஈர்ப்பு என்று நினைக்கிறேன் 🙂

      amas32

    • Uma Chelvan 9:45 am on November 11, 2013 Permalink | Reply

      என்ன ஒரு அருமையான பாடல். அதிசய மலர் முகம் என்றது போல், பாரதி ஒரு ரோஜா என்றால் ( மலர்களின் ராஜா அழகிய ரோஜா ) கண்ணதாசனும் ஒரு மல்லிகைதான். இரு வேறு நிறம், இரு வேறு மணம். இரண்டுமே சிறந்தது அதனதன் குணத்தில் !!!இங்கே MSV யையும் மறந்து விடக்கூடாது . நிஜமாகவே நினைத்தாலே இனிக்கும் பாடல்கள். இந்த பாடலை தந்தற்கு MSV குதான் உண்மையில் கோவில் கட்டி இருக்க வேண்டும் !!!

    • rajinirams 10:09 am on November 11, 2013 Permalink | Reply

      தன்னடக்கம் காரணமாக கண்ணதாசன் அவ்வாறு கூறியிருந்தாலும் அவர் பல காவிய பாடல்கள் படைத்த கவியரசர் ஆயிற்றே-அதனால் தான் “நீ தாடியில்லாத தாகூர் -மீசையில்லாத “பாரதி”என்று கவிஞர் வாலி அவருக்கு இரங்கற்பா பாடினார்.

  • என். சொக்கன் 11:42 pm on October 31, 2013 Permalink | Reply  

    ஒரு ’கமா’க் கட்டுரை 

    • படம்: உலகம் சுற்றும் வாலிபன்
    • பாடல்: அவள் ஒரு நவரச நாடகம்
    • எழுதியவர்: கண்ணதாசன்
    • இசை: எம். எஸ். விஸ்வநாதன்
    • பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
    • Link: http://www.youtube.com/watch?v=_JDAiNMowaE

    அவள் ஒரு நவரச நாடகம்,

    ஆனந்தக் கவிதையின் ஆலயம்,

    தழுவிடும் இனங்களில் மானினம்,

    தமிழும் அவளும் ஓரினம்!

    ஆங்கிலத்தில் எந்த இரண்டு சொற்களை இணைத்துப் பட்டியல் போட்டாலும், நடுவில் ஒரு கமா (காற்புள்ளி) அல்லது ‘and’ என்ற சொல்லைச் சேர்க்கிறோம். உதாரணமாக: Ram and Laxman அல்லது Ram, Laxman.

    இதை அப்படியே தமிழுக்கும் நீட்டி, இப்படி எழுதுகிறோம்: ராம் மற்றும் லட்சுமணன் அல்லது ராம், லட்சுமணன்.

    ஆனால் இந்த இரண்டு தவிர, தமிழில் மூன்றாவதாக இன்னொரு வகையும் உண்டு. பட்டியலில் உள்ள சொற்களுடன் ‘உம்’ சேர்த்து எழுதுவது. இப்படி: ராமனும் லட்சுமணனும்.

    இலக்கணத்தில் இதனை ‘எண்ணும்மை’ என்கிறார்கள். அதாவது, ராமன், லட்சுமணன் என்று எண்ணுகிற ‘உம்’மை. உதாரணமாக: நானும் அவனும், சந்திரனும் சூரியனும், பூவும் காயும்…

    இப்படி எங்கெல்லாம் ‘எண்ணும்மை’ வருகிறதோ, அங்கெல்லாம் நடுவில் காற்புள்ளி சேர்க்க வேண்டியதில்லை, ‘மற்றும்’ என்ற சொல்லும் வேண்டியதில்லை. இதையெல்லாம் அந்த ‘உம்மை’ பார்த்துக்கொள்கிறது. ‘தமிழும் அவளும் ஓரினம்’ என்று எழுதினால் போதும், ‘தமிழும், அவளும் ஓரினம்’ என்று கமா போட்டு எழுதவேண்டியதில்லை.

    ***

    என். சொக்கன் …

    31 10 2013

    333/365

     
    • amas32 9:45 pm on November 1, 2013 Permalink | Reply

      நீங்களும் நாலு வரி நோட்டும் மாதிரி :-))

      amas32

  • என். சொக்கன் 8:28 pm on October 22, 2013 Permalink | Reply  

    மெல்ல ஊர்ந்து ஊர்ந்து… 

    இன்றைக்கு எதைப்பற்றி நாலு வரி நோட் எழுதலாம் என்று நெடுநேரம் யோசித்துக்கொண்டிருந்தேன். கம்ப்யூட்டர்மீது ஓர் எறும்பு ஊர்ந்தது. இதைப்பற்றி எழுதினால் என்ன?

    சட்டென்று ‘ருக்குமணி ருக்குமணி’ பாடல்தான் மனத்தில் ஓடியது. ‘சின்னஞ்சிறு பொண்ணுக்கு ஆசை ரொம்ப இருக்கு, சீனிக்குள்ள எறும்பு மாட்டிகிட்ட கணக்கு’ என்று அழகாக முதலிரவுக் காட்சியைப் பதிவு செய்திருப்பார் வைரமுத்து.

    வாலிக்கும் எறும்பு பிடிக்கும், அதைவிட, வார்த்தை விளையாட்டு பிடிக்கும், வைரமுத்துவைப்போலவே அவரும் சர்க்கரையாகக் காதலையும், எறும்பாகக் காதலர்களையும் வர்ணித்து ‘சக்கர இனிக்குற சக்கர, அதில் எறும்புக்கு என்ன அக்கறை?’ என்று கேட்பார் குறும்புடன்.

    வைரமுத்துவுக்குமட்டும் குறும்புத்தனம் இல்லையா என்ன? ‘கண்ணா என் சேலைக்குள்ளே கட்டெறும்பு புகுந்துடுச்சு, எதுக்கு?’ என்று காதலியைக் கேட்கவைத்து, ‘கண்ணே, நீ வெல்லமுன்னு கட்டெறும்பு தெரிஞ்சுகிச்சு’ என்று காதலனைப் பதில் சொல்லச்செய்வார்.

    வாலி இன்னொரு படி மேலே போய், கட்டெறும்பு காதலியைமட்டுமா? அவள் பெயரைக்கூட மொய்க்கும் என்பார், ‘நாட்குறிப்பில் நூறுமுறை உந்தன் பெயரை எழுதும் எந்தன் பேனா, எழுதியதும் எறும்பு மொய்க்கப் பெயரும் ஆனதென்ன தேனா!’

    காதலி சம்மதம் சொல்லிவிட்டால்தான் வெல்லம், இல்லாவிட்டால், கண்ணாடி ஜாடிக்குள் இருந்து கைக்கு எட்டாத குலாப் ஜாமூன். ‘இமய மலை என்று தெரிந்தபின்னும் எறும்பின் ஆசையோ அடங்கவில்லை’ என்று வைரமுத்துவின் வரி.

    எறும்பு காதலுக்குமட்டுமல்ல, மற்ற விஷயங்களுக்கும் உவமையாகும், ‘ஈ, எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே’ என்று கடவுளிடம் வேண்டும் சின்னப் பிள்ளைக்கு வாலி எழுத, ‘நம்பிக்கையே நல்லது, எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது’ என்பார் வைரமுத்து.

    என்ன திரும்பத் திரும்ப வாலி, வைரமுத்து? மற்ற கவிஞர்கள் யாரும் எறும்பை எழுதவில்லையா?

    ஏன் இல்லாமல்? ‘எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா’ என்று அதிரவைத்து, ‘என் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா’ என்று தத்துவம் சொன்னாரே கண்ணதாசன்!

    இழிவாக நினைக்காதீர்கள், சிறு எறும்பும் கவி எழுத உதவும்!

    ***

    என். சொக்கன் …

    22 10 2013

    324/365

     
    • amas32 9:49 pm on October 22, 2013 Permalink | Reply

      a very different 4varinote from you! எறும்பூர கல்லும் தேயும், அது போல கொஞ்சம் கொஞ்சமாக காதலனும் காதலியின் மனதை விடா முயற்சியால் மாற்றிவிடலாம். அதற்கும் அந்த எறும்பு பழமொழி உதவுகிறது 🙂

      சின்ன ராசாவே சித்தெறும்பு என்னைக் கடிக்குது, உன்னை சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது பாடலையும் இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளவும் 🙂 http://www.youtube.com/watch?v=0V7ezrT_d94

      amas32

    • rajinirams 4:51 pm on October 23, 2013 Permalink | Reply

      அடடா.கலக்கிட்டீங்க. எறும்பு பற்றிய பாடல்களை-நினைவு வைத்து தொகுத்தது-சான்ஸே இல்லை.நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது-அகரம் இப்போ சிகரம் ஆச்சு-என்னைக்கவர்ந்த வைர வரிகள்.கஜேந்திரா படத்தில் பா.விஜய்யின் பாடல் ஒன்று-எறும்பு ஒண்ணு என்னை வந்து என்னென்னமோ பண்ணுது…நன்றி.

  • G.Ra ஜிரா 8:26 pm on October 11, 2013 Permalink | Reply  

    குடும்பம்: ஒரு கதம்பம் 

    70களிலும் 80களிலும் வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத அம்சமாக விளங்கியவை குடும்பப் பாடல்கள்.

    இந்தப் பாடல்களில் குடும்பப் பாசம் முன்னிறுத்தப் படும். நேர்மையும் நல்ல பண்புகளும் ஒழுக்கம் போற்றப் படும். பொதுவாகவே ஒரே பாடல் மகிழ்ச்சியோடு முதலில் சோகத்தோடு பிறகும் பாடப்படும்.

    மகிழ்ச்சியாகப் பாடிய பின்னர் குடும்பம் பிரியும். சோகமாகப் பாடிய பிறகு சேர்ந்துவிடும். இது படம் பார்க்கும் சராசரி ரசிகனுக்கும் தெரிந்த உலக உண்மை.

    சோகமான பாடலைப் பாடினால் இளகிய மனம் உடையவர்கள் அழுது விடவும் வாய்ப்புண்டு. ஆகையால்தான் இந்த மாதிரி பாடல்களைக் கேட்கும் போது கையில் கைக்குட்டை…. இல்லை இல்லை. கைத்துண்டு இருந்தால் நல்லது.

    குடும்பப் பாட்டு என்றதும் முதலில் எனக்குத் தோன்றியது நாளை நமதே படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் தான்.

    அன்பு மலர்களே
    நம்பி இருங்களேன்
    தாய் வழி வந்த சொந்தங்கள் எல்லாம்
    ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே

    இந்தப் பாடலைப் பாடி முடித்ததும் குடும்பம் முழுவதுமே பிரிந்து விடும். குழந்தைகள் பெரியவர்களாகித்தான் ஒன்று சேர்வார்கள்.

    இன்னொரு பாடல் உண்டு. இதுவும் குடும்பப் பாட்டுதான். ஆனால் வளர்ந்தவர்களின் குடும்பப்பாட்டு. அண்ணன் தம்பிகள் பாடும் பாட்டு. மகிழ்ச்சியாக பாட்டைப் பாடிய பின்னால் குடும்பத்தில் சண்டை வந்து அவர்களும் பிரிந்துதான் போனார்கள். படம் முடியும் முன்னர் மூத்த அண்ணன் இறக்கும் போது ஒன்று சேர்வார்கள்.

    முத்துக்கு முத்தாக
    சொத்துக்கு சொத்தாக
    அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
    கண்ணுக்குக் கண்ணாக
    அன்பாலே இணைந்து வந்தோம்
    ஒன்னுக்குள் ஒன்னாக

    இவர்கள் அண்ணன் தம்பிகள் என்றால், அண்ணனுக்கும் தங்கைக்கும் கூட குடும்பப் பாட்டு வைத்தது தமிழ் சினிமா.

    பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
    ஊர்வலம் வருகின்றது
    அன்பு பொங்கிடும் அன்புத் தங்கையின் நெற்றியில்
    குங்குமம் ஜொலிக்கின்றது

    சினிமா வழக்கப்படி அண்ணனும் தங்கையும் பிரிந்து விடுகிறார்கள். பின்னொரு காட்சியில் அண்ணன் அந்தப் பாடலை ஒரு திருமண வரவேற்பில் பாடும் போது காலில்லாத தங்கை நடக்க முடியாமல் நடந்து ஓடமுடியாமல் அழ முடியாத அளவுக்கு அழுது…. கடைசியில் அண்னனைக் காண முடியாமல் போன போது திரையரங்குகளில் சிந்திய கண்ணீர் ஆற்றிலேயே ஆடிப்பெருக்கு கொண்டாடியிருக்கலாம்.

    கிட்டத்தட்ட இதே போல இன்னொரு குடும்பம். தாய் தந்தை இழந்து அனாதைகளான அக்காவும் தம்பிகளும். அவர்களுக்கும் ஒரு பாடல் எழுதினார் கலைஞர் கருணாநிதி.

    காகித ஓடம் கடலலை மேலே
    போவது போலே மூவரும் போவோம்

    இந்தப் படத்தில் முதலில் மகிழ்ச்சியாகவும் பிறகு சோகமாகவும் பாட மாட்டார்கள். முதலில் சோகமாகவும் அடுத்து பெரும் சோகமாகவும் பாடி படம் பார்த்த மக்களை கதறக் கதறக் கூக்குரலிட்டு அழவைத்ததை மறக்க முடியுமா? எப்போதோ பிரிந்து போன தம்பி குடிபோதையில் எதிரில் இருப்பது அக்கா என்று தெரியாமலே தவறிழைக்க நெருங்குவான். சோகத்தின் உச்சியில் அந்நேரம் அக்கா அந்தப் பாடலைப் பாட திருந்துகிறான் தம்பி. அரிவாள்மனையில் கழுத்தை அறுத்துக் கொண்டு குடும்பத்தை இணைக்கிறாள் அக்கா.

    இன்னொரு குடும்பப் பாடல் உண்டு. இந்தப் பாடல் நடிகர் திலகத்துக்கு. மகிழ்ச்சியான குடும்பம். சந்தர்ப்பத்தால் மூலைக்கொன்றாய் பிரிகிறது. பிறகென்ன… படம் முடியும் போது எல்லாம் சுபம்.

    ஆனந்தம் விளையாடும் வீடு
    இது ஆனந்தம் விளையாடும் வீடு
    நான்கு அன்பில்கள் ஒன்றான கூடு
    இது ஆனந்தம் விளையாடும் வீடு

    பிரிந்தால் குடும்பமாகத்தான் பிரிய வேண்டுமா? கணவனும் மனைவியும் பிரிந்தால்? நிறைமாதமாக இருக்கும் மனைவிக்கு கணவன் ஒரு பாடல் பாடுகிறான். அவன் பாடலைப் பாடிய வேளை இருவரும் பிரிய வேண்டியதாயிற்று.

    மலர் கொடுத்தேன்
    கை குலுங்க வளையலிட்டேன்
    மங்கை எந்தன் ராஜாத்திக்கு நானே
    இதுவொரு சீராட்டம்மா
    என்னையும் தாலாட்டம்மா

    பிரிந்த கணவன் காஷ்மிரில் இருக்க… மனைவி டில்லியில் இருக்க.. ஒரு தற்செயலான தொலைபேசி அழைப்பு இருவரையும் பேச வைக்கிறது.

    எதிர்முனையில் பேசுவது கணவன் என்று தெரிந்ததும் கே.ஆர்.விஜயா அதிர்ச்சியில் போனை கீழே போட்டு விடுவார்… அப்போது “சுமதீஈஈஈஈஈஈஈஈஈஈ” என்று நடிகர் திலகம் சிம்ம கர்ஜனை செய்யும் போது அடுத்த காட்சிக்காக வெளியே காத்திருந்தவர்கள் காதிலும் விழும். இந்தக் காட்சியில் கீழே விழுந்துவிட்ட கே.ஆர்.விஜயா கை நழுவவிட்ட தொலைபேசியை எடுப்பாரா இல்லையா என்ற அதிர்ச்சி தாங்காமல் திரையரங்கில் ஒருவருக்கு மாரடைப்பு வந்ததாகச் சொல்வார்கள்.

    தமிழ்த் திரைப்படத்தின் தன்மை மாறிக் கொண்டிருந்த எழுபதுகளின் இறுதியில் மிகப் பழம் பெருமை வாய்ந்த இயக்குனர் டி.ஆர்.சுந்தரம் ஒரு திரைப்படம் எடுத்தார். அந்தப் படத்திலும் ஒரு குடும்பப் பாட்டு. அவர்கள் குடும்பத்தோடு இன்னொரு உறுப்பினராக நிலா.

    வெண்ணிலா வெள்ளித்தட்டு
    வானிலே முல்லை மொட்டு

    இந்தப் படத்திலும் பிரிந்த அண்ணன் தம்பி தங்கைகள் படம் முடிவதற்கு முன்னால் குய்யோ முய்யோ என்று கதறிக் கொண்டு ஒன்று சேர்ந்தார்கள் என்றும் அவர்களின் மூத்த அண்ணன் உயிரைக் கொடுத்து மற்றவர்களைக் காப்பாற்றினான் என்றும் சொல்லி கிண்டலடிக்க விரும்பவில்லை.

    இது போன்ற குடும்பப் பாட்டுகள் குறைந்து விட்ட காலத்தில் ஒரு குடும்பப் பாட்டு வந்தது. அதுவும் கலைப்பட இயக்குனர் ஒருவரால் கொண்டுவரப்பட்டது. பாலுமகேந்திரா இயக்கிய நீங்கள் கேட்டவை திரைப்படப் பாடலைத்தான் சொல்கிறேன்.

    சிறுவயதில் அம்மா பாடிய பாட்டை நினைவில் வைத்துக் கொண்டு பின்னாளில் அண்ணனும் தம்பியும் சேர்கிறார்கள். அம்மாவைக் கொன்றவனைப் பழி வாங்குகிறார்கள்.

    பிள்ளை நிலா
    இரண்டும் வெள்ளை நிலா
    அலை போலவே
    மனம் விளையாடுதே

    இதில் அம்மாவாக பாடும் எஸ்.ஜானகி குரலில் பிள்ளை நிலா என்றும் மகனுக்காக ஏசுதாஸ் அவர்கள் பாடும் போது பில்லை நிலா என்றும் உங்கள் காதில் விழுந்தால் என்னைக் குற்றம் சொல்லாதீர்கள்.

    இதுவரை நாம் பார்த்ததெல்லாம் குடும்பப் பாட்டுகளே அல்ல என்னும் அளவுக்கு 90களில் ஒரு குடும்பப் பாட்டு வந்தது. இதுவரை நாம் மனிதர் உணர்ந்து கொள்ள மனிதக் குடும்பப் பாட்டுகளைப் பார்த்தோம்.

    ஆனால் ”காக்கை குருவி எங்கள் சாதி” என்று பாரதி சொன்னதை ஒவ்வொரு படத்திலும் பாம்பை டைப் அடிக்க வைத்தும் குரங்கை பைக் ஓட்ட வைத்தும் யானையை சைக்கிள் ஓட்ட வைத்தும் நிரூபித்துக் கொண்டிருக்கும் இயக்குனர் இராம.நாராயணன் எடுத்த படமான துர்காவில் ஒரு குடும்பப் பாட்டு உண்டு.

    பாப்பா பாடும் பாட்டு
    கேட்டு தலைய ஆட்டு
    மூணு பேரும் ஒன்னுதானே
    அம்மாவுக்கு கண்ணுதானே
    ஒன்னா விளையாடலாம்

    அந்தப் பாடலைக் கேட்டதுமே பிரிந்து போன நாயும் குரங்கும் எங்கெங்கோ இருந்து ஓடி வந்து பேபி ஷாமிலியைச் சேரும் காட்சி படம் பார்க்கின்றவர்களின் நெஞ்சை உருக்கும். மனதை கிறுகிறுக்க வைக்கும். சித்தத்தை பைத்தியம் பிடிக்க வைக்கும்.

    எப்படியெல்லாம் நாம் சிக்கியிருக்கிறோம் பார்த்தீர்களா?!?

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – அன்பு மலர்களே நம்பி இருங்களேன்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர் – (மகிழ்ச்சி – பி.சுசீலா, அஞ்சலி, ஷோபா, சசிரேகா) (சோகம் – டி.எம்.சௌந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்ரமணியம்)
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – நாளை நமதே
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=ED6zDjOZXtw

    பாடல் – முத்துக்கு முத்தாக
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – கண்டசாலா
    இசை – கே.வி.மகாதேவன்
    படம் – அன்புச் சகோதரர்கள்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=-gyJT1nQDnM

    பாடல் – பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
    வரிகள் – புலவர் புலமைப்பித்தன்
    பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – நினைத்ததை முடிப்பவன்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Azrz41LaLeo

    பாடல் – ஆனந்தம் விளையாடும் வீடு
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – சந்திப்பு
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=bzRQIs5OIuA

    பாடல் – மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன்
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – திரிசூலம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=-oUNmu4edLA

    பாடல் – வெண்ணிலா வெள்ளித்தட்டு
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – மலேசியா வாசுதேவன், பி.எஸ்.சசிரேகா, எஸ்.பி.ஷைலஜா
    இசை – ராஜேஷ்
    படம் – காளி கோயில் கபாலி
    பாடலின் சுட்டி – http://youtu.be/GfWzFhWRuHs

    பாடல் – பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர் – எஸ்.ஜானகி (மகிழ்ச்சி), கே.ஜே.ஏசுதாஸ்(சோகம்)
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – நீங்கள் கேட்டவை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=XvrB5UA0Kl0

    பாடல் – பாப்பா பாடும் பாட்டு
    வரிகள் – தெரியவில்லை
    பாடியவர் – எம்.எஸ்.ராஜேஸ்வரி
    இசை – சங்கர் – கணேஷ்
    படம் – துர்கா
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Vg0kYE6CnWA

    அன்புடன்,
    ஜிரா

    314/365

     
    • Uma Chelvan 9:36 pm on October 11, 2013 Permalink | Reply

      It is really funny to read your post GiRa., .பொதுவாக காதலன் காதலி அன்பைத்தான் ” செம்புல பெயல் நீர் போல் ” னு சொல்லுவாங்க. ஆனால் இங்கே அண்ணன் தங்கை பாசத்தயும் “செம்மணிலே தண்ணீரை போல் உண்டான சொந்தம் இது ” என்று பாடுகிறார் ஒரு அண்ணன். என்ன ஒரு அருமையான பாடல்!!! இந்த ராஜா வேற எல்லாத்துக்கும் ஒரு பாட்ட போட்டு வைச்சு நம்மை படுத்தி எடுக்கிறார் !!!!!!:::::)))))))))

    • rajinirams 2:12 am on October 12, 2013 Permalink | Reply

      செம பதிவு.வித்தியாசமான சிந்தனை.நல்ல திறனாய்வு.இது போல பல பாடல்களிருந்தாலும் சட்டென நினைவு வரும் சில பாடல்கள்-என் பங்கிற்கு-1,நான் அடிமை இல்ளை-ஒரு ஜீவன் தான்-வாலி2,மவுன கீதங்கள்-மூக்குத்தி பூ மேலே-வாலி 3,சின்னதம்பி-நீ எங்கே-வாலி.4,ப
      ட்டிக்காடா பட்டணமா-அடி என்னடி ராக்கம்மா-கண்ணதாசன் 5,நீதிக்கு தலை வணங்கு-இந்த பச்சைக்கிளிக்கொரு(சோகமில்லை)-புலமைப்பித்தன் 6,கல்யாண ராமன்-ஆஹா வந்துருச்சு-காதல் தீபம் ஒன்று-பஞ்சு அருணாசலம்.7,கல்யாண பரிசு-உன்னைக்கண்டு-பட்டுக்கோட்டையார்.8,உழைப்பாளி-அம்மாஅம்மா-வாலி 9,புதுக்கவிதை-வெள்ளைப்புறா ஒன்று-வைரமுத்து 10,கொக்கரக்கோ-கீதம் சங்கீதம்-வைரமுத்து 11,வீட்ல விசேஷங்க-மலரே தென்றல் பாடும்-வாலி.நீங்கள் குறிப்பிட்ட பாப்பா பாடும் பாட்டு உள்ளிட்ட துர்கா படப்பாடல்கள் வாலி எழுதியவையே. நன்றி

    • amas32 9:01 pm on October 14, 2013 Permalink | Reply

      நீங்க எந்த ஒரு டாபிக் எடுத்தாலும் அலசி ஆராய்ந்து சூப்பராக எழுதுகிறீர்கள் ஜிரா! குடும்பப் பாடல்கள் அந்தக் காலப் படங்களில் கண்டிப்பாக இருந்தன, இந்தக் கால டாஸ்மாக்கில் குடித்துப் பாடும் பாடல்கள் போல.

      காற்றில் வரும் கீதமே http://www.youtube.com/watch?v=pnteqlhXlS4 இதுவும் அழகான ஒரு குடும்பப் பாடல் 🙂

      amas32

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel