Updates from August, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • G.Ra ஜிரா 6:04 pm on August 30, 2013 Permalink | Reply  

    பொருத்தம் 

    எல்லாம் நன்றாகப் பொருந்தி வந்தால் மட்டுமே எதுவும் பெரும் வெற்றி பெறும்.

    எது பொருந்த வேண்டும்? அப்படிப் பொருந்தினால் எது வெற்றி பெறும்?

    காதலைத்தான் சொல்கிறேன். காதல் வெற்றி பெற மனப் பொருத்தம் வேண்டும். இல்லையென்றால் தோல்விதான். அதனால்தான் இலக்கியம் கூட பொருந்தாக் காமம் என்று ஒரு வகையையே வைத்திருக்கிறது. பெயரிலேயே தெள்ளத்தெளிவாக அது பொருந்தாது என்பதையும் முடிவு செய்திருக்கிறது இலக்கியம்.

    அப்படி உள்ளம் சிறப்பாகப் பொருந்திய காதலர்கள் பாடினால் எப்படி பாடுவார்கள்? கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் உடனடியாக என் நினைவுக்கு வருகிறது.

    என்ன பொருத்தம் நமக்குள் என்ன பொருத்தம்
    காதல் என்னும் நாடகத்தில் கல்யாணம் சுகமே
    படம் – ரகசிய போலீஸ் 115
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

    காதலர் இருவருக்கும் மனப் பொருத்தம் மிகப் பொருத்தமாக இருந்தால் திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டியதுதான்.

    அதெல்லாம் சரி. கல்யாணத்தில் பத்து பொருத்தங்கள் பார்ப்பார்களாமே. அவை எவையெவை?

    வைதிக முறைப்படி நடக்கும் திருமணங்களில் பார்க்கப்படும் பொருத்தங்கள் பத்து மட்டுமல்ல. மொத்தம் பதினாறு. அந்தப் பதினாறில் பத்து பொருந்தினாலே திருமணம் செய்யலாம் என்பது கருத்து. அந்த பதினாறு பொருத்தங்கள் எவையெவை எனப் பார்க்கலாமா?

    1. கிரக பொருத்தம்
    2. நட்சத்திர பொருத்தம்
    3. கண பொருத்தம் (மணமக்களின் குணப் பொருத்தத்தை இது குறிக்கும்)
    4. மகேந்திர பொருத்தம் (குழந்தைப் பேறு)
    5. ஸ்திரி தீர்க்க பொருத்தம் (தீர்க்க சுமங்கலியாக இருக்கும் பெருமை)
    6. யோனி பொருத்தம் (இன்பமான இல்லறவாழ்க்கைக்காக)
    7. இராசி பொருத்தம்
    8. இராசியதிபதி (மணமக்களின் மனவொற்றுமைக்கு)
    9. வசிய பொருத்தம் (ஒருவர் மீது ஒருவருக்கு உண்டாகும் ஈர்ப்பு)
    10. இரஜ்ஜு பொருத்தம் (மாங்கல்ய பலம்)
    11. வேதை பொருத்தம் (வாழ்வில் வரும் இன்பதுன்பங்களைக் காட்டும்)
    12. விருஷ பொருத்தம் (வம்சா விருத்தி)
    13. ஆயுள் பொருத்தம்
    14. புத்திர பொருத்தம்
    15. நாடி பொருத்தம்
    16. கிரக பாவ பொருத்தம் (செய்த செய்யப் போகும் பாவங்கள் பற்றியது)

    மனப்பொருத்தம் மட்டும் இருந்தால் போதாது. ஒவ்வொருவருக்குமான உடற் பொருத்தமும் தேவை. அது இருந்தால்தான் இன்பம் பெருகி இல்லறம் நிலைக்கும். அதையும் கவியரசர் கண்ணதாசன் ஒரு பாட்டில் சொல்லியிருக்கிறார்.

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
    மனது மயங்கியென்ன உனக்கும் வாழ்வு வரும்
    பொருத்தம் உடலிலும் வேண்டும்
    புரிந்தவன் துணையாக வேண்டும்
    படம் – மன்மதலீலை
    இசை – திரையிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.விசுவநாதன்

    இப்படியெல்லாம் பொருந்தி வாழும் கணவன் மனைவியரைக் கண்டால் எல்லாருக்கும் மகிழ்ச்சி வரும். சிலருக்கு மட்டும் பொறாமை வரும். அதற்கும் உண்டு ஒரு கண்ணதாசன் பாட்டு.

    எனக்கும் உனக்குந்தான் பொருத்தம்
    அதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்
    படம் – முகராசி
    இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்

    காதலரோடுதான் பொருத்தம் பார்க்க வேண்டுமா? கடவுளோடும் பொருத்தம் பார்க்கிறார் வள்ளலார்.

    எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ
    இந்தப் பொருத்தம் உலகில் பிறருக்கு எய்தும் பொருத்தமோ

    முருகப் பெருமானின் திருவருள் முழுமையாகப் பெற்றவர் வள்ளலார். வெற்றுக் கண்ணாடியில் மயிலேறி கந்தன் வரக்கண்ட மாமணி அவர்.

    ஆனால் பாடலில் முருகனை மெய்ப்பொருள் வடிவமாகவே எழுதியிருக்கிறார். அந்த மெய்ப்பொருளோடு தனக்கு உண்டான பொருத்தத்தை வியந்து பாராட்டுகிறார்.

    ஆண்டவனோடு பொருந்திய உள்ளத்தில் துன்பமில்லை. துயரமில்லை. வலிகள் இல்லை. வேதனை இல்லை. எல்லாம் இன்ப மயம். பேரின்பமயம்.

    வள்ளலார் அருளிய திருவருட்பாவின் இந்த அற்புத வரிகள் நம்ம வீட்டு தெய்வம் திரைப்படத்தில் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் இந்தப் பாடல் இடம் பெற்றது. என்ன… ஒரு திருமண மேடையில் விலைமகளொருத்தி ஆடிப்பாடுவதாக அமைந்த காட்சியில் பாடல் இடம் பெற்றது.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    1. என்ன பொருத்தம் (டி.எம்.எஸ், பி.சுசீலா) – http://youtu.be/KJobbwySqRI
    2. எனக்கும் உனக்குந்தான் (டி.எம்.எஸ், பி.சுசீலா) – http://youtu.be/b_6C2Z3-8XQ
    3. மனைவி அமைவதெல்லாம் (கே.ஜே.ஏசுதாஸ்) – http://youtu.be/f4VxmTuaztQ
    4. எனக்கும் உனக்கும் இசைந்த (பி.சுசீலா) – http://youtu.be/m0urUMBv_ZA

    பின்குறிப்பு – என்ன பொருத்தம் பாடலிலும் எனக்கும் உனக்குந்தான் பொருத்தம் பாடலிலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் நடித்தது என்ன அதிசயப் பொருத்தமோ!

    அன்புடன்,
    ஜிரா

    272/365

     
    • uma chelvan 9:57 pm on August 30, 2013 Permalink | Reply

      Very interesting post! ஆனால், கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா இல்ல ஓடி போய் கல்யாணம் தான் கட்டிக்கலமா என்ற கால கட்டத்லில் பொருத்தம் எங்கே பார்கிறது???? எது எப்படி இருப்பினும், காதலின் போது நாம் ஒருவர் மீது வைக்கும் “பேரன்பு என்றும் பெரும் துன்பம் தான்”!!!

    • uma chelvan 11:42 pm on August 30, 2013 Permalink | Reply

      நாம் ஒன்றா வேறா? ஒன்றெனில் சரியானதைச்செய்யும் சக்தி வரட்டும், வேறெனில் வீணாய் கனவுகளில் காலம் கரையாதிருக்கட்டும்…. அன்பு சத்தியம் என்பதால் என் அவசரத்துக்கு உடனே வராது, ஆனாலும் காத்திருக்க திடம் கிடைக்கும் சன்னதியில்.
      நானென்றால் அது அவளும் நானும், ஆதலால் காத்திருத்தலும் அவளால், காத்திருத்தலும் அவளே !! A wonderful post by Dr. Rudhran….I think it is most appropriate for this post !!!

    • rajinirams 4:32 am on August 31, 2013 Permalink | Reply

      பதினாறு பொருத்தங்களையும் பட்டியலிட்டு.அதற்கு”பொருத்தமான”பாடல்களையும் கொன்டு அருமையான பதிவை தந்திருக்கிறீர்கள்.புருஷன் பொஞ்சாதி பொருத்தம் தான் வேணும்-பொருத்தம் இல்லாட்டி வருந்த தான் வேணும் என்ற வாலியின் வரிகளும்.பொருத்தமென்றால் புதுப்பொருத்தம் பொருந்தி விட்ட ஜோடி-நான் புலவனென்றால் பாடிடுவேன் கவிதை ஒரு கோடி என்ற கவியரசரின் வரிகளும் நினைவிற்கு வருகிறது.நன்றி.

    • amas32 6:10 pm on September 2, 2013 Permalink | Reply

      சூப்பர் போஸ்ட் ஜிரா 🙂 ரொம்ப ரசித்துப் படித்தேன் 🙂 சமையல் குறிப்பில் தான் நீங்கள் வல்லவர் என்று நினைத்தேன், ஜோசியப் பொருத்தங்கள் பார்ப்பதிலும் நீங்கள் காழியூர் நாராயணன் என்று இன்று தான் தெரிந்து கொண்டேன் 🙂

      //பொருத்தம் உடலிலும் வேண்டும்
      புரிந்தவன் துணையாக வேண்டும்// அடுத்த வரிகள் “கணவனின் துணையோடு தானே, காமனை வென்றாக வேண்டும்” என்று வரும் இல்லையா? கண்ணதாசன் கண்ணதாசன் தான்!

      amas32

    • Rajarajeswari jaghamani 5:50 pm on February 25, 2014 Permalink | Reply

      அருமையாக ரசிக்கவைத்த பாடல்களும் , பகிர்வுகளும் ..பாராட்டுக்கள்..!

  • என். சொக்கன் 8:36 pm on August 10, 2013 Permalink | Reply  

    மலரோன் 

    • படம்: ஜீன்ஸ்
    • பாடல்: அன்பே அன்பே
    • எழுதியவர்: வைரமுத்து
    • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
    • பாடியவர்: ஹரிஹரன்
    • Link: http://www.youtube.com/watch?v=2dr35kcmDe4

    பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்,

    அடடா, பிரம்மன் கஞ்சனடி!

    சற்றே நிமிர்ந்தேன், தலைசுற்றிப்போனேன்,

    ஆஹா, அவனே வள்ளலடி!

    சங்க காலம் தொடங்கி தமிழ்ப் பெண்களுக்கு Hourglass figureதான் லட்சிய உருவம். அதைக் குறிப்பிடும்வகையில் நூலிடை, கொடியிடை, துடி(உடுக்கு)யிடை என்றெல்லாம் வர்ணனைகள் அமையும். இதிலிருந்து கொஞ்சம் விலகி ‘இஞ்சி இடுப்பழகி’ என்றுகூட வாலி எழுதினார், அதற்கு இன்னும் விதவிதமாக அர்த்தம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

    இந்தப் பாடலில் வரும் ஆண் தன் காதலியின் மெல்லிடையைப் பார்த்துவிட்டு, அவளைப் படைத்தவன்மீதே சந்தேகப்படுகிறான், ‘அந்த பிரம்மன் பெரிய கஞ்சனா இருப்பானோ?’

    வைரமுத்துமட்டுமல்ல, வள்ளலாரும் பிரம்மனைக் கஞ்சன் என்கிறார்.

    என்னது? வள்ளலாரா? அருட்பா எழுதியவர் எப்போது அய்ஷ்வர்யா ராயைப் பார்த்தார்?

    இது ரொமான்ஸ் மேட்டர் அல்ல. ஆன்மிகம். திருவொற்றியூரைப்பற்றிப் பாடும்போது வள்ளலார், ‘கஞ்சன், மால் புகழும் ஒற்றி’ என்பார்.

    ‘மால்’ என்றால் திருமால், தெரிகிறது. அது யார் ‘கஞ்சன்’?

    ’கஞ்சம்’ என்றால் தாமரைப் பூ என்று அர்த்தம். அதன்மீது வாசம் செய்கிறவன் என்பதால், பிரம்மனுக்குக் கஞ்சன் என்று ஒரு பெயரும் உண்டு.

    ஆக, இடையில் சிக்கனம் காட்டி வேறிடத்தில் வள்ளலாக வாரி வழங்கினாலும், பிரம்மன் கஞ்சன்தான்!

    ***

    என். சொக்கன் …

    10 08 2013

    252/365

     
    • rajinirams 10:49 pm on August 10, 2013 Permalink | Reply

      கஞ்சம் என்றால் தாமரை என்று அறிய வைத்த நல்ல பதிவு. இதே போல புதியவன் படத்திலும் வரும் வைரமுத்துவின் வரிகள்-நானோ கண் பார்த்தேன்-இது என்ன கூத்து அதிசயமோ இளநீர் காய்க்கும் கொடி இதுவோ-பருவம் படைத்தான் அது பஞ்சம் இல்லை.அடடா பிரம்மன் அவன் கஞ்சன் இல்லை.நீயே அழகின் எல்லை. நன்றி.

    • GiRa ஜிரா 11:36 pm on August 10, 2013 Permalink | Reply

      கஞ்ச மலர்ச் செங்கயையும்-னு முருகனைப் பத்தி அருணகிரி எழுதியிருக்காரு. முருகனுடைய கை நமக்கெல்லாம் தஞ்சக் கையா இல்ல கஞ்சக் கையான்னு சர்ச்சை வந்திரும் போல.

    • amas32 5:49 pm on August 14, 2013 Permalink | Reply

      கஞ்சதளாய தாக்ஷி காமாக்ஷி கமலா மனோஹரி என்ற பாடலிலும் கஞ்ச என்பது தாமரைப் பூ என்ற பொருளில் தானே வருகிறது? http://www.youtube.com/watch?v=1t8Q4lkjwN8

      ஆனால் ஜீன்ஸ் பாடலில் வரும் கஞ்சன் என்ற சொல் கஞ்சத்தனத்தைத் தான் குறிப்பிடுகிறது இல்லையா?

      கஞ்சம் என்றால் தாமரை என்று சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி 🙂

      amas32

  • என். சொக்கன் 11:42 am on May 2, 2013 Permalink | Reply  

    கரடுமுரடு 

    • படம்: மகுடி
    • பாடல்: கரட்டோரம் மூங்கில் காடு
    • எழுதியவர்: வாலி
    • இசை: இளையராஜா
    • பாடியவர்: இளையராஜா
    • Link: http://www.youtube.com/watch?v=-54mBn8FrtE

    கரட்டோரம் மூங்கில் காடு, காட்டச் சுத்தி வண்டு பறக்குது,

    ரீங்காரம் போட்டுக்கிட்டு, மூங்கிலையும் வண்டு தொளைக்குது,

    வண்டு தொளச்ச ஓட்டை வழியே காத்து அடிச்சா,

    ஒரு சத்தமும் கேட்குது, என்ன சத்தம்? அது என்னை இழுக்குது ஆக மொத்தம்!

    ’ரோட்டோரம்’ தெரியும், அதென்ன ‘கரட்டோரம்’?

    அதே ஃபார்முலாதான். ரோடு + ஓரம் = ரோட்டோரம். கரடு + ஓரம் = கரட்டோரம்.

    கரடு? இதென்ன புது வார்த்தை?

    புதிதெல்லாம் இல்லை, ‘கரடுமுரடு’ என்று சொல்கிறோமே, அதில் வரும் ‘கரடு’தான் இது. பாறை, பெரிய கல், குன்று, சிறிய மலை என்பதுபோல் பொருள் சொல்லலாம்.

    ‘பொய்மான் கரடு’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். சேலத்திலிருந்து நாமக்கல் செல்லும் வழியில் உள்ள இந்தக் கரட்டை ஒரு குறிப்பிட்ட கோணத்திலிருந்து பார்க்கிறவர்களுக்குக் கொம்புகளுடன் ஒரு மான் உருவம் தெரியும். அதனால்தான் அப்படிப் பெயர் சூட்டப்பட்டது.

    வித்தியாசமான இந்தக் கரட்டை வைத்துக் கல்கி அவர்கள் ஒரு சுவாரஸ்யமான கதைகூட எழுதியிருக்கிறார். கொஞ்சம் தேடினால் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கும்.

    பழந்தமிழ் இலக்கியத்திலும் நிறைய கரடுகள் உண்டு. திருவருட்பாவில் வள்ளலார், ’பாறைகூட உருகிவிடும், என் மனம் உருகாதுபோலிருக்கிறதே’ என்று குறிப்பிடும்போது, ‘ஈண்டு உருகாக் கரடும் இதற்கு உருகல் அரிது அலவே’ என்கிறார்.

    ‘கரடு’ சரி, அதென்ன ’முரடு’?

    அதுவும் நமக்குப் பரிச்சயமான வார்த்தைதான் ‘முரட்டுக் காளை’ என்று சொல்கிறோமே, அதன் வேர்ச்சொல்தான் இந்த ‘முரடு’, Roughness என்று பொருள்.

    ஆக, ‘கரடு முரடு’ என்பதன் அர்த்தம், ‘முரடான கரடு’, அதாவது, Rough Rock!

    ***

    என். சொக்கன் …

    02 05 2013

    152/365

     
    • Arun Rajendran 12:34 pm on May 2, 2013 Permalink | Reply

      கோயம்புத்தூர்-ல (சத்தியமங்கலம் போற வழி, சரவணம்பட்டியைக் கடந்து) ஒரு சிறு குன்று இருக்கு..இந்தக் குன்ற சுற்றியுள்ள பரப்புக்கு ”கரட்டுமேடு”-னு சொல்வாங்க.. இதன் அருகாமையில் தான் எங்க பள்ளிக்கூடமும்..தமிழ் வாத்தியார் ஆகுபெயர விவரிக்கும் போது ”கரட்டுமேடு” என்று வழங்குவதன் காரணத்த விளக்கினார். (பழய நினப்புடா பேராண்டி பழய நினப்புடா 🙂 ) திரைப்பாடல்ல இடம்பெற்றிருப்பதை இன்றைக்குதான் தெரிந்துக் கொண்டேன்..நன்றிகள் சொக்கன் சார்

    • rajinirams 8:14 pm on May 2, 2013 Permalink | Reply

      முதலில் காட்டோரம் மூங்கில் காடு என்று நினைத்திருந்தேன்.பின் கரடு என்று தெரிந்தது.அதன் சரியான விளக்கம் அறிந்து கொண்டேன்.எளிமை-அருமை.இந்த படத்திற்கு கதை வசனமும் வாலியே.நன்றி

    • amas32 5:12 am on May 3, 2013 Permalink | Reply

      புதிய வார்த்தை. பேச்சு வழக்கில் கரடு முரடு என்று பயன் படுத்தியுள்ளேன். இன்று புரிந்தது 🙂
      பொய்மான் கரடும் கேள்விப்பட்டுள்ளேன்.நல்ல பாடல்களாக தேர்வு செய்து இங்கே பதிவிடுகிறீர்கள்!.

      amas32

    • GiRa ஜிரா 9:14 am on May 3, 2013 Permalink | Reply

      கரடுமுரடுன்னு படிச்சதும் மனசுல வந்தது பொய்மான் கரடும் கரட்டோரம் மூங்கிற் காடு பாட்டும் தான். 🙂

      சரியாக அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிங்க.

      எங்க அம்மா ஊர்ப்பக்கம் கரட்டாண்டின்னு சொல்வாங்க. ஓணானுக்குதான் அந்தப் பேரு. கரட்டுல ஒத்தையாத் திரியும். அதுனால கரட்டு ஆண்டு = கரட்டாண்டின்னு பேரு. 🙂

  • mokrish 12:23 pm on April 15, 2013 Permalink | Reply
    Tags: , கே ஜே ஜேசுதாஸ், , வள்ளலார்   

    பசி தீரப் பாடினோர் 

    • படம்: உனக்காக  நான்

    • பாடல்: இறைவன் உலகத்தை படைத்தானாம்

    • எழுதியவர்: கண்ணதாசன்

    • இசை: எம் எஸ் விஸ்வநாதன்

    • பாடியவர்: கே ஜே ஜேசுதாஸ்

    • Link: http://www.inbaminge.com/t/u/Unakkaga%20Naan/Iraivan%20Ulagathai.eng.html

    இறைவன் உலகத்தை படைத்தானாம்

    ஏழ்மையை அவன்தான் படைத்தானாம்

    ஏழையை படைத்தவன் அவனென்றால்

    இறைவன் என்பவன் எதற்காக

    இறைவன் இங்கே வரவில்லை

    எனவே நான் அங்கு போகின்றேன்

    வறுமை முழுவதும் தீர்ந்த பின்னே

    மறுபடி ஒரு நாள் நான் வருவேன்

    இந்த வரிகளைக் கேட்டவுடன் நமக்கு பாரதியின் இனியொரு விதி செய்வோம் பாடல் நினைவுக்கு வரும். வறுமை பார்த்து பொங்கி ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று கோபமாக பாடிய வரிகள்.  பாரதி இதை ஏன் எப்போது பாடினான்?

    நீலகண்ட பிரம்மச்சாரி ஏழரை ஆண்டுகள் சிறைவாசம் விடுதலை பெற்றவுடன் சென்னைக்கு வந்தார். தங்க இடம் இல்லை. உணவு கொடுக்க யாருமில்லை. பிச்சை எடுக்க ஆரம்பித்தார். அவருடைய மனதில் “இது என்ன கேவலமான பிழைப்பு?” என்ற எண்ணம் தோன்றி பிச்சைக்குச் செல்வதையும் நிறுத்தி விட்டார். ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா என்று நினைத்து பாரதியைத் தேடிவந்தார். இவரின் கோலம் கண்டு அதிர்ச்சியில் உறைந்த பாரதி முதலில் சாப்பிட வைக்கிறார்.

    அப்போது பாரதியின் உள்ளத்தில் இருந்து வந்த உணர்ச்சி மிக்க பாடல் இது. எனக்காக பாரதி ஒரு பாடலை பாடிவிட்டானே” என்று மனம் நெகிழ்ந்தார் நீலகண்டன். பாரதியின் மரணத்தில் கலந்துகொண்ட வெகு சிலரில் நீலகண்டனும் ஒருவர்.

    கண்ணதாசன் பாடல் ஒரு தொழிற்சங்கவாதி பாடுவதாக அமைந்தது. பாரதி சொன்ன இரு வேறுலகம் பற்றி இவரும் சொல்கிறார். ஆனால் கோபம் மிகுந்து அடங்கி ஒரு விரக்தி நிலையில் இந்த பாடல் வருவதால் ஜகத்தினை அழிப்பது சாத்தியமில்லை என்று உணர்ந்து ‘ என்னை விடுங்கள் நான் போகிறேன் இந்த கொடுமை இல்லாத நிலை இருந்தால் மீண்டும் வருகிறேன் என்று சொல்கிறார்.

    பாரதியின் கோபம் மனிதர்களின் மேல்தான் மனிதர் நோக மனிதர் பார்க்கும்  வாழ்க்கை மேல் கோபம். ஆனால் கண்ணதாசனின் விரக்தி கலந்த கோபம் இறைவன் மேல் ‘ஏழையை படைத்தவன் அவனென்றால் இறைவன் என்பவன் எதற்காக’ என்கிறார்.

    ஏதேன் தோட்டத்தில் ஏவாள் இல்லாமல் கூட ஆதாம் வாழ்ந்திருக்க முடியும் ஆனால் ஆப்பிள் இல்லாமல் ஒரு நாள்கூட உயிரோடிருந்திருக்க முடியாது.என்று இணையத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது. ஆயிரம் வார்த்தைகளை விடவும் ஒரு பிடி சோறு அதிக நெருக்கம் உண்டாக்கிவிடக்கூடியது.

    இதில் கோபம் தாண்டி ஒரு பார்வை வள்ளலார் சொல்வது – வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிறார் இராமலிங்க அடிகளார். தண்ணீர் இன்றி வாடியிருக்கும் பயிர்களைப் பார்க்கும்போதெல்லாம் என்னுடைய மனம் வாடுகிறது. பசியினால் இளைத்தவர்கள், ஒவ்வொரு வீடாகக் கெஞ்சிக்கேட்டும் பசி தீராமல் களைத்துப்போன ஏழைகளைப் பார்த்து என் உள்ளம் பதைபதைக்கிறது. நீங்காத நோயினால் அவதிப்படுகிறவர்களை நேருக்கு நேர் பார்க்கும்போது என் நெஞ்சம் துடிக்கிறது.இவர்களெல்லாம்கூடப் பரவாயில்லை. பசியால் வயிறு காய்ந்தாலும் இணையில்லாத மானம்தான் பெரியது என்று நினைக்கிறவர்கள், அதனால் யாரிடமும் பிச்சை கேட்காமல் சுயமரியாதையோடு பட்டினி கிடக்கிறவர்கள், அவர்களைப் பார்க்கும்போது, நானும் இளைத்துப்போகிறேன் என்கிறார்.

    (http://365paa.wordpress.com/2011/09/30/087/)

    மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியை போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியாற்றப்படுகிறது.   வள்ளுவன் அற்றார் அழிபசி தீர்த்தல் என்று சொன்னதும் இதுவே பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைபிடிப்பதைவிட பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்தது இல்லையா?

    மோகனகிருஷ்ணன்

    135/365

     
    • amas32 (@amas32) 6:36 pm on April 15, 2013 Permalink | Reply

      “கொடிது கொடிது வறுமை கொடிது;
      அதனினும் கொடிது இளமையில் வறுமை”

      பசியின் கொடுமை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். மற்றவர்கள் புரிந்து கொள்வது போல நடிக்கலாம். ஏழ்மை என்பது பசியின் வாட்டுதல் மட்டும் இன்றி படிப்பு, சுகாதாரமான வாழ்விடம் போன்ற அனைத்து அத்தியாவசியங்களுக்கும் ஏங்க வைக்கும் ஒரு அவல நிலை.

      அனால் இந்த நிலையில் இருந்து முன்னுக்கு வந்தவர்கள் பல்லாயிரம் பேர்கள். அவர்களை உந்தி முன்னேற தூண்டியதும் இந்த ஏழ்மை தான். ஏழ்மையை அழிக்க உழைப்பும் மனத்தில் உறுதியும் வேண்டும்.

      amas32

    • GiRa ஜிரா 8:35 am on April 16, 2013 Permalink | Reply

      உண்பது நாழி உடுப்பது முழம். ஆனா அதுவும் கிடைக்காதவர்கள் நிலை பெருங்கொடுமை.

      செவ்வியான் கேடும் அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் நினைக்கப்படும்-னு வள்ளுவரும் விட்டுட்டாரு. நமக்கும் ஒன்னும் புரியலையே.

      ஆனா இந்த உலகம் அனைவரும் சுகமாகவும் விட்டுக்கொடுத்தும் வாழும் சொர்க்கபூமியாக வேண்டும். அதனால்தான் பெரியவர்கள் உலகத்தை வைத்து எந்த நூலையும் தொடங்குவார்கள். உலகம் உவப்ப-திருமுருகாற்றுப்படை. வாழிய வையகம்-தேவாரம். உலகெலாம் உணர்ந்து – பெரிய புராணம். உலகம் யாவையும் – கம்பராமாயணம்.

  • என். சொக்கன் 11:03 am on February 18, 2013 Permalink | Reply  

    நொடியில் பாயும் செந்நாரைகள் 

    • படம்: பிரம்மா
    • பாடல்: இவள் ஒரு இளங்குருவி
    • எழுதியவர்: வாலி
    • இசை: இளையராஜா
    • பாடியவர்: எஸ். ஜானகி
    • Link: http://www.youtube.com/watch?v=CztV3oi4aGc

    நான் பாடும் பாட்டு, தலையாட்டிக் கேட்டு,

    தினந்தோறும் பூப் பூக்கும் தோட்டங்களே!

    நீரோடைமீது நொடிப்போதில் பாய்ந்து

    இரை தேடும் செந்நாரைக் கூட்டங்களே!

    ’நொடிப் போது’ என்ற வார்த்தையை நாம் அதிகம் பயன்படுத்துவதில்லை. ‘நொடிப் பொழுது’ (அதாவது ஒரு விநாடி நேரம்) என்பதன் சுருங்கிய / மருவிய வடிவம் இது.

    அதேசமயம், ‘போது’ என்பது ஒதுக்கவேண்டிய வார்த்தை அல்ல, இதே வடிவில், இதே பொருளில் அது பல இலக்கியங்களிலும் வருகிறது. உதாரணமாக, திருவருட்பாவில் வள்ளலார் ’போதுபோக்கினையே மனனே’ என்று எழுதுகிறார். இன்றைக்கு நாம் சர்வசாதாரணமாகச் சொல்லும் ‘பொழுதுபோக்கு’ என்ற வார்த்தையேதான்.

    ‘போது’ என்ற தனிச்சொல் இப்போது பரவலாகப் பேசப்படாவிட்டாலும், அது ஒரு கூட்டுச்சொல்லாகப் புழக்கத்தில் இருக்கிறது. நம்மையும் அறியாமல் நாம் அதைத் தினந்தோறும் பயன்படுத்துகிறோம்.

    இப்போது, அப்போது, எப்போது என்ற சொற்களின் முழு வடிவம், இந்தப் பொழுது, அந்தப் பொழுது, எந்தப் பொழுது. இதில் ‘பொழுது’ என்பது சுருங்கிப் ‘போது’ என மாறி, சுட்டும் ‘இந்த’, ‘அந்த’, ‘எந்த’ என்ற சொற்களும் இ, அ, எ எனச் சுருங்கி, இப்படி வேறுவிதமாக மாறிவிட்டது.

    அதேபோல், ‘பாடியபோது’, ‘சந்தித்தபோது’, ‘பிறந்தபோது’ போன்ற சொற்களும்கூட, ‘பாடிய பொழுது’, ‘சந்தித்த பொழுது’, ‘பிறந்த பொழுது’ என்றுதான் நீளும். இப்படி நாமே உணராத அளவு ‘பொழுது’க்குப் பதில் ‘போது’ என்ற வார்த்தை நம்மை முழுமையாக ஆக்கிரமித்துவிட்டது.

    பொழுது, போதுதவிர, போழ்து என்றும் ஒரு வார்த்தை உண்டு. பெரும்பாலும் கவிதைகளில்மட்டும் பயன்படுத்துவார்கள். ’செவிக்கு உணவு இல்லாதபோழ்து, சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’ என்பதுபோல.

    அது நிற்க. தமிழில் ‘போது’க்கு வேறு அர்த்தம் உண்டு: முதிர்ந்த மொட்டு. ‘காலை அரும்பி, பகல் எல்லாம் போது ஆகி, மாலை மலரும் இந்நோய்’ என்று காதல்பற்றி ஓர் அருமையான திருக்குறள் இருக்கிறது.

    ***

    என். சொக்கன் …

    18 02 2013

    079/365

     
    • amas32 10:37 pm on February 18, 2013 Permalink | Reply

      வினாடியையும் பொழுதையும் சுருக்கி நொடிப்போதில் என்று சொல்லும் பொழுதே எவ்வளவு குறைவு அந்த நேரம் என்பது நம் மனத்தில் படுகிறது. என்ன ஒரு அழகான மொழி நம் தமிழ் மொழி!

      amas32

  • என். சொக்கன் 11:58 am on January 28, 2013 Permalink | Reply  

    இனிப்பு! 

    • படம்: ப்ரியா
    • பாடல்: ஹேய், பாடல் ஒன்று
    • எழுதியவர்: பஞ்சு அருணாச்சலம்
    • இசை: இளையராஜா
    • பாடியவர்கள்: கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி
    • Link: http://www.youtube.com/watch?v=7CORvsjQT60

    என் ஜோடிக் கிளியே,

    கன்னல் தமிழே,

    தேனில் ஆடும் திராட்சை நீயே!

    பழைய பாடல்களில் கன்னல் மொழி, கன்னல் தமிழ், கன்னல் சுவை போன்ற பயன்பாடுகளை நிறைய பார்க்கலாம். குறிப்பாகக் கன்னத்துக்கும் வண்ணத்துக்கும் இயைபாக இதனைப் பயன்படுத்துவார்கள்.

    ‘கன்னல்’ என்றால் கரும்பு. இதையே கரும்புச் சாறைக் குறிப்பிடுவதற்கும் பயன்படுத்துவார்கள்.

    நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தின் மிகச் சிறந்த பகுதிகளில் ஒன்று, கண்ணனைக் குழந்தையாகக் கற்பனை செய்து பெரியாழ்வார் பாடிய பாசுரங்கள். அவர் பயன்படுத்துகிற உவமைகளும் பாவனைகளும் அற்புதமானவை.

    அந்த வரிசையில், கண்ணனையும் கன்னலையும் ஒரே வரியில் சேர்த்துப் பெரியாழ்வார் பாடியது: ‘கன்னல் குடம் திறந்தால் ஒத்து ஊறி…’

    அதாவது, ஒரு குடம் நிறைய கரும்புச் சாறை நிரப்பிவைத்திருக்கிறார்கள், அதிலிருந்து சாறு வழிந்து வெளியே வருகிறது. அதுபோன்றதாம், குழந்தைக் கண்ணன் வாயிலிருந்து வடியும் ஜொள்ளு 🙂

    திருவருட்பாவில் வள்ளலாரும் இந்தப் பதத்தைப் பயன்படுத்தியிருக்கிறார், ‘என்னுயிரில் கலந்து இனிக்கின்ற பெருமான்’ என சிவபெருமானைப் போற்றித் தொடங்கும் அவர், ‘கன்னல் என்றால் கைக்கின்ற கணக்கும் உண்டா?’ என்கிறார். அதாவது, ‘நீ கரும்புய்யா, உன்கிட்ட கசப்பு ஏது?’

    அபிராமி அந்தாதியில் ஒரு வரி: கைக்கே அணிவது கன்னலும் பூவும். அதாவது, அபிராமித் தாயாரின் ஒரு கையில் கரும்பும், இன்னொரு கையில் பூவும் அணிகலன்களாகத் திகழ்கின்றன.

    இந்தச் சொல் எப்படி வந்திருக்கும்? முனைவர் நா. கணேசன் தரும் விளக்கம் இது:

    வயலில் இருந்து கரும்பை அறுவடை செய்தபின், ஆலைக்கு அனுப்புவார்கள். அங்கே அதனைப் பிழிந்து, காய்ச்சிச் சுண்டவைப்பார்கள், இதற்குக் ‘கருகக் காய்ச்சுதல்’ என்று பெயர்.

    ஆக, கருகக் காய்ச்சப்படும் தாவரம் ==> கரும்பு / கரிம்பு / கரிநல் / கன்னல்!

    ***

    என். சொக்கன் …

    28 01 2013

    058/365

    (பின்குறிப்பு: ட்விட்டரில் இந்த வார்த்தையைக் குறிப்பிட்டு, இதனை #4VariNote வரிசையில் இடம் பெறச் செய்யுமாறு கேட்டவர் @umakrish. அவருக்கு நன்றி 🙂 )

     
    • GiRa ஜிரா 12:52 pm on January 28, 2013 Permalink | Reply

      அட்டகாசம்.

      கம்பரும் கன்னல் பத்திப் பேசுறாரு.

      கன்னல் வார் சிலை கால் வளைத்தே மதன் என்று மன்மதன் கரும்பு வில் வெச்சிருக்கறதப் பத்திப் பேசுறாரு. இலக்கியத்துல கன்னல் தேடுனா எக்கச்சக்கமா அம்புடும்.

      இனிப்பைக் கொடுக்கும் தாவரங்குறதால அதுக்கு அவ்வளவு புகழ் போல.

    • amas32 (@amas32) 7:51 pm on January 28, 2013 Permalink | Reply

      The recent post by @elavasam http://elavasam.posterous.com/174635736 also refers to the same topic. Nice coincidence 🙂

      //கன்னல் தமிழே,// என்பது பி.சுசீலா அவர்கள் பாடிய தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

      amas32

    • elavasam 8:12 pm on January 28, 2013 Permalink | Reply

      இதெல்லாம் ஓவர். ரெண்டு நாள் முன்னாடி உம்மாலதான் நானும் கன்னல் பத்தி எழுதினேன். அதைப் படிக்காம இங்க வந்து போட்டி போஸ்ட் போடும் உம்மை என்ன செய்யலாம்?

      http://elavasam.posterous.com/174635736

    • elavasam 8:21 pm on January 28, 2013 Permalink | Reply

      @amas32 – உண்மையின் பக்கத்தில் நின்று போராடுவதற்கு நன்றி!! :))

  • என். சொக்கன் 10:20 am on December 18, 2012 Permalink | Reply  

    தலைவா, நீ வா! 

    • படம்: பம்பாய்
    • பாடல்: கண்ணாளனே, எனது கண்ணை
    • எழுதியவர்: வைரமுத்து
    • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
    • பாடியவர்: கே. எஸ். சித்ரா
    • Link: http://www.youtube.com/watch?v=tUd712cl0SM

    கண்ணாளனே,

    எனது கண்ணை நேற்றோடு காணவில்லை!

    என் கண்களைப் பறித்துக்கொண்டும்

    ஏன் இன்னும் பேசவில்லை?

    சில வார்த்தைகளைக் கேட்கும்போது அவை மிகவும் நவீனமானவை, சில வருடங்களுக்குமுன்னர், மிஞ்சிப்போனால் சில பத்தாண்டுகளுக்குமுன்னர் கண்டுபிடிக்கப்பட்டவை என்று நினைக்கிறோம். இந்தப் பாடலின் முதல் சொல், அப்படிப்பட்டது.

    ‘கண்ணாளனே’ என்பது, ஒரு காதலி தன்னுடைய காதலனை ’என்னுடைய கண் போன்றவனே’ என்று அழைப்பதாகப் பொருள் கொண்டு மகிழ்கிறோம். உண்மையில் அது நீண்ட பின்னணி கொண்ட ஒரு புராதனச் சொல்.

    சாட்சி வேண்டுமா? இன்னொரு சினிமாப் பாட்டிலேயே தொடங்குவோம், ’கண்ணாளனுடன் கலந்து ஆனந்தம் பெற’ என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியிருக்கிறார்.

    கொஞ்சம் பின்னால் சென்றால், பாரதிதாசன், ‘அன்று எனக்குக் காட்சி தந்த கண்ணாளன்’ என்று எழுதினார்.

    இன்னும் சற்று பின்னால் சென்றால், வள்ளலார், ‘கண்ணாளா, சுடர் கமலக் கண்ணா’ என்று கடவுளைப் போற்றினார்.

    மேலும் பின்னோக்கிச் செல்வோம், கம்பனும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியதுண்டு. ‘அறம் வளர்க்கும் கண்ணாளன்’ என்று ராமனைப் புகழ்ந்தவர் அவர்.

    கம்பனுக்கு முன்னால், ஆழ்வார்களும் இதே சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்கள், ‘கண்ணாளன், கண்ண மங்கை நகராளன்’ என்று பாடினார் திருமங்கை ஆழ்வார்.

    இன்னும் தொடர்ந்து தேடினால், ஏராளமான ‘கண்ணாளன்’கள் கிடைப்பார்கள். அன்றுமுதல் இன்றுவரை நல் அர்த்தம் தருகிற இளமையான தமிழ்ச் சொல் அது. ’சீர் இளமைத் திறம்’ என்று மனோன்மணீயம் போற்றுவதுபோல்!

    அது சரி, கண்ணாளன் என்ற சொல்லுக்கு உண்மையில் என்ன அர்த்தம்?

    இந்த உலகில் எத்தனை இன்பங்கள் இருந்தாலும், அவற்றைக் கண்ணால்மட்டும்தான் காணமுடியும், மற்ற உடல் பாகங்கள் அதனை வெறுமனே அனுபவிக்குமேதவிர, கண்தான் முதலில் பார்க்கும், அதனைப் பெற்றுத்தரும். அதுபோல, ’கண்ணாளன்’ என்றால், சுகங்களைப் பெற்றுத் தருகிறவன் என்று பொருள். கம்பனும் ஆழ்வார்களும் இதைக் கடவுளுக்குச் சொன்னார்கள், பட்டுக்கோட்டையாரும் வைரமுத்துவும் காதலன் / கணவனுக்குச் சொன்னார்கள்.

    அதென்ன கணவன்மட்டும்? மனைவி கண்போல் இருக்கமாட்டாளா?

    ஓ, கண்ணாளனுக்குப் பெண்பால் உண்டு, கண்ணாட்டி!

    ***

    என். சொக்கன் …

    18 12 2012

    017/365

     
    • arvenky 10:39 am on December 18, 2012 Permalink | Reply

      குடியிருந்த கோவில் படத்தில் ஒரு பாட்டு. நீயே தான் எனக்கு மணவாட்டி. அப்போ மணாளனுக்கு மணவாட்டி இருந்து இருக்கு

    • amas32 (@amas32) 10:40 pm on December 18, 2012 Permalink | Reply

      நானே கண்ணாட்டி என்று நினைத்துக் கொண்டு இருந்தேன், எழுதிவிட்டீர்கள் 🙂 பெண் குழந்தைகளைக் கொஞ்சும் பொழுது கண்ணாட்டி என்று குறிப்பிட்டு கொஞ்சுவதுண்டு 🙂

      amas32

    • Niranjan 9:36 am on December 19, 2012 Permalink | Reply

      கண்ணாட்டி என்ற புதிய சொல்லை இன்று தெரிந்து கொண்டேன். நன்றி 🙂 🙂

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel