Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • G.Ra ஜிரா 11:41 pm on November 28, 2013 Permalink | Reply  

    பெண்களின் பண்கள் 

    தமிழ் சினிமாவில் இரண்டு பெண்கள் சேர்ந்து பாடினால் அது ஒரே ஆணைப் பற்றியதாக மட்டுமே இருக்கும். இது ஆண்டாண்டு காலமாக மாறாத விதி. விதிவிலக்குப் பாட்டுகள் உண்டு என்றாலும் கதையில் இரண்டு பெண்கள் இருந்தால் ஒரு ஆண் என்று முக்கோணக் காதலை வைப்பது இன்றைக்கும் இயக்குனர்களுக்கு மிகவும் பிடித்த செயல்.

    வழக்கம் போல முதலில் நினைவுக்கு வருவது கவியரசர் தான். இதைச் சொல்வது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டது. பாதகாணிக்கை படத்தில் இரண்டு பெண்கள் ஒருவனையே நினைத்துப் பாடுவார்கள்.

    உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
    உனது நிலா விண்ணிலே எனது மலர் கண்ணிலே

    எப்படி அடித்துக் கொள்கிறார்கள் பார்த்தீர்களா? ஒருத்தி அத்தை மகளாகப் பிறந்தவள். இன்னொருத்தி அவனோடு உறவாக வளர்ந்தவள். அதையும் போட்டியில் இழுத்துவிடுகிறார்கள்.

    ஒருத்தி: பிறந்த போது பிறந்த சொந்தம் இருந்ததம்மா நினைவிலே
    இன்னொருத்தி: வளர்ந்த போது வளர்ந்த சொந்தம் வளர்ந்ததம்மா மனதிலே

    அடுத்ததாக கவிஞர் வாலி இரண்டு பெண்களை சண்டை போட வைக்கப் போகிறார். அந்த இரண்டு பெண்களையும் ஏமாற்றியது ஒருவன் தானோ என்று அவர்கள் பாடுகிறார்கள்.

    ஒருத்தி: மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
    நிலவுக்கு வானம் பகையானல் அது நடந்திட வேறே வழி ஏது
    இன்னொருத்தி: பறவைக்குச் சிறகு பகையானால் அது பதுங்கி வாழ்ந்திட கால்களுண்டு
    உறவுக்கு நெஞ்சே பகையானால் மண்ணில் பெருகிட வகையேது

    அவர்கள் இரண்டு பேர்களின் வாழ்க்கையையும் ஒருவன் ஏமாற்றி அழித்து விட்டது போல ஒப்பாரி. ஆனாலும் இனிய பாடல்.

    அடுத்து நாம் பார்க்கப் போவது ஒருவருக்குத் தெரியாமல் ஒரே ஆணை விரும்பிய இரண்டு தோழிகளை. ஆனால் ஒருத்தியின் காதல்தான் கைகூடுகிறது. சில நாட்கள் கழித்து ரகசியம் தோழிக்குத் தெரிந்து விடுகிறது. தோழியின் ஆசையைத் திருடிவிட்டோமோ என்று அவளுக்கு ஒரு வருத்தம். தோழியர் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டிருந்தாலும் புரியாதது போலவே பாடுகிறார்கள். நீங்களே பாட்டைப் பாருங்கள்.

    ஒருத்தி:
    அடி போடி பைத்தியக்காரி
    நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா

    இன்னொருத்தி
    அடி போடி பைத்தியக்காரி
    நான் புரிந்தவள் தான் உன்னைத் தெரிந்தவள் தான்

    இவர்கள் நல்ல தோழிகள். சண்டையிட்டுக் கொள்ளவில்லை. தன் காதல் வெற்றி பெற்றதே என்று எண்ணாமல் தோழியில் காதல் தோற்றுப் போனதே என்று வருந்திப் பாடுகிறாள் ஒருத்தி.

    இறைவன் ஒரு நாள் தூங்கிவிட்டான்
    எழுத்தைக் கொஞ்சம் மாற்றிவிட்டான்

    இப்படியெல்லாம் யார் எழுதியிருப்பார்கள்? வேறு யார்? கவியரசரேதான்.

    இன்னும் இரண்டு பேர்கள் இருக்கிறார்கள். இவர்களும் தோழிகள். இவர்கள் இருவரையும் திருமணம் செய்தவன் ஒருவனே. ஆனால் அது இருவருக்குமே தெரியாது. அந்த உண்மை தெரியாமல் இருவரும் சேர்ந்து சுமங்கலி பூஜை செய்கிறார்கள்.

    மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
    மங்கல மங்கை மீனாட்சி
    உள்ளம் ஒருவன் சொந்தம் என்றாள்
    தேவி எங்கள் மீனாட்சி

    பாவம். பின்னால் அவர்கள் உண்மை தெரிந்து கொதிக்கப் போவதை அப்போது அறியாமல் பாடியிருக்கிறார்கள். இதே கதை பின்னால் கற்பூரதீபம் என்ற பெயரில் வந்தது. அங்கும் உண்மை தெரியாமல் இரண்டு தோழிகளும் பூஜை செய்கிறார்கள்.

    காலகாலமாய்ப் பெண் தானே கற்பூர தீபம்
    காவல் கொண்ட மன்னன் தானே தெய்விக ரூபம்

    இரண்டு பெண்டாட்டிக்காரன் கதைகள் என்றால் மக்களுக்குப் பிடித்திருக்கிறது என்றே தோன்றுகிறது. நம்மூர் சாமிகளே அப்படித்தானே!

    இவர்களாவது திருமணம் ஆனவர்கள். திருமணம் ஆகும் முன்னமே அக்காவும் தங்கையும் ஒருவனையே நினைத்துப் பாடிய கதைகளும் உண்டு. நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தைத்தான் சொல்கிறேன். இந்த முறை பாட்டெழுதியது கவிஞர் வைரமுத்து.

    மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு
    தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு

    இந்த வரிசையில் இருகோடுகள் திரைப்படத்தை எப்படி மறக்க முடியும்? வாலியின் வார்த்தை விளையாட்டுகளில் ஒளிரும் “புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்” பாட்டை விட்டு விட்டு இந்தப் பதிவை எழுத முடியுமா? சாமிகளையே சண்டைக்கு இழுத்துப் பாடிய பாட்டாயிற்றே.

    அவள்: தேவன் முருகன் கோயில் கொண்டது வள்ளியின் நெஞ்சத்திலே
    இவள்: அவன் தெய்வானை என்றொரு பூவையை மணந்தது திருப்பரங்குன்றத்திலே

    வள்ளியும் தெய்வானையும் கூட இப்படிச் சண்டை போட்டிருக்க மாட்டார்கள்!

    இன்னொரு அக்கா தங்கையைப் பார்க்கப் போகிறோம். அக்காவுக்குப் பார்த்த மாப்பிள்ளை அவன். ஆனால் திருமணம் நின்றுவிடுகிறது. தங்கையோடு அவனுக்குக் காதல் உண்டாகிறது. அப்போது அவர்களுக்குள் போட்டிப் பாட்டு வைக்காமல் இருக்க முடியுமா?

    ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
    திருமாலைத்தானே மணமாலை தேடி
    எந்த மங்கை சொந்த மங்கையோ
    ஓ எந்த கங்கை தேவ கங்கையோ

    போன பாட்டில் முருகன் மாட்டிக் கொண்டால் இந்தப் பாட்டில் மகாவிஷ்ணு மாட்டிக் கொண்டார். அவருக்கும் இரண்டுதானே!

    இன்னும் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிச் சொல்லாமல் பதிவை முடிக்க விரும்பவில்லை. அவன் அவளைத்தான் விரும்பினான். விதி பிரித்தது. அத்தை மகளை மணந்தான். மகிழ்வாகத்தான் இருந்தான். போனவள் வந்தாள். பிரச்சனையும் வந்தது. அத்தை மகளோ அப்பாவி. தெரியாத்தனமாக “ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அவளைக் கேட்டு விடுகிறாள்.” உடனே ஒரு பாட்டு.

    கடவுள் தந்த இருமலர்கள்
    கண் மலர்ந்த பொன் மலர்கள்
    ஒன்று பாவை கூந்தலிலே
    ஒன்று பாதை ஓரத்திலே

    சோகத்தைக் கூட அழகாகச் சொல்லியிருக்கிறார்கள் கவிஞர்கள். அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.

    இந்தச் சக்களத்திச் சண்டை பழைய படங்களோடு முடிந்து போகவில்லை என்று நிருபிக்க வந்ததோ பஞ்சதந்திரம் திரைப்படம்! ஒருத்தி மனைவி. இன்னொருத்தி மனைவியாக நடிப்பவள். அவர்களுக்குள் ஒரு போட்டிப் பாட்டு.

    வந்தேன் வந்தேன் மீண்டும் மீண்டும் வந்தேன்
    வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
    எனது கனவை எடுத்துச் செல்ல வந்தேன்

    நல்லவளைப் போல அமைதியாகப் பாடுகிறாள் நடிக்க வந்தவள். கட்டிக் கொண்டவள் சும்மா இருப்பாளா? புலியாய்ப் பாய்கிறாள்.

    பந்தியில பங்கு கேட்டா விட்டு தருவேன்
    என் முந்தியில பங்கு கேட்டா வெட்டிப் புடுவேன்
    அடி கண்டவளும் வந்து கைய வைக்க
    அவர் கார்பரேஷன் பம்ப் அல்ல

    இவர்கள் கதை இப்படியிருக்க இன்னும் இரண்டு பெண்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அவர்களைப் பற்றிச் சொல்லவில்லை என்றால் இந்தப் பதிவு முழுமை பெறவே பெறாது. ஒருத்தி மேடையில் ஆடிக் கொண்டிருக்கிறாள். அந்த ஆட்டத்தை இன்னொருத்தி விரும்புகிறவன் ரசிக்கிறான். அதை இன்னொருத்தியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவளும் மேடையில் குதித்து சரிக்குச் சரி ஆடுகிறாள். சபாஷ் சரியான போட்டி என்று தமிழுலகம் ரசித்த பாடல் இது.

    முதலாமவள் அமைதியாகத்தான் ஆடுகிறாள். பாடுகிறாள்.

    கண்ணும் கண்ணும் கலந்து இன்பம் கொண்டாடுதே
    என்னும் போதே உள்ளம் பந்தாடுதே

    அடுத்தவள் ஆங்காரமாக வரும் போதே ஆர்ப்பாட்டமாகத்தான் பாடுகிறாள்.

    ஜிலுஜிலுஜிலுவென நானே ஜெகத்தை மயக்கிடுவேனே
    கலகலகலவென்று ஜோராய் கையில் வளை பேசும் பாராய்

    இன்னொருத்தி வந்ததும் முதலாமவள் தன்மானம் உரசப்படுகிறது. அவளும் போட்டியில் குதிக்கிறாள்.

    ஆடும் மயில் எந்தன் முன்னே என்ன ஆணவத்தில் வந்தோயோடி
    பாடுங்குயில் கீதத்திலே பொறாமை கொண்டு படமெடுத்து ஆடாதேடி

    பார்த்தீர்களா… தான் விரும்புகிறவன் இன்னொருத்தியின் நடனத்தை ரசித்தான் என்று தெரிந்ததும் ஆடல் அரங்கத்தைப் போட்டி போடல் அரங்கமாக மாற்ற பெண்களால்தான் முடியும்.

    எது எப்படியோ! காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறினாலும்… கவிஞர் முத்துலிங்கம் எழுதியதைப் போல “என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான்” என்று இரண்டு பெண்கள் சண்டையிட்டுக் கொண்டால் அதை மக்கள் ரசிக்கத்தான் செய்வார்கள் என்பது மட்டும் மாறவே மாறாது போல!

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

    பாடல் – உனது மலர் கொடியிலே
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.இராமமூர்த்தி
    படம் – பாதகாணிக்கை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=grVbM9WJZks

    பாடல் – மலருக்குத் தென்றல் பகையானால்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன், டி.கே.இராமமூர்த்தி
    படம் – எங்க வீட்டுப் பிள்ளை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=jlGlD41oxJg

    பாடல் – அடி போடி பைத்தியக்காரி
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – தாமரை நெஞ்சம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=gxU3uBgng-E

    பாடல் – மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – ஜிக்கி, எஸ்.ஜானகி
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – தேனும் பாலும்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=KzcZFwOZSuk

    பாடல் – காலம் காலமாய் பெண் தானே
    வரிகள் – கங்கையமரன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, எஸ்.ஜானகி
    இசை – கங்கையமரன்
    படம் – கற்பூரதீபம்
    பாடலின் சுட்டி – http://youtu.be/SeZ6Z5ysm20

    பாடல் – மல்லிகையே மல்லிகையே
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர்கள் – அனுராதா ஸ்ரீராம், சித்ரா
    இசை – தேனிசைத் தென்றல் தேவா
    படம் – நினைத்தேன் வந்தாய்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Nu3uPoeEuss

    பாடல் – ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, வாணி ஜெயராம்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – தேவியின் திருமணம்
    பாடலின் சுட்டி – http://www.inbaminge.com/t/d/Deiviyin%20Thirumanam/Sridevi%20Varam%20Ketkiral.vid.html

    பாடல் – கடவுள் தந்த இருமலர்கள்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – இருமலர்கள்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=X7RxuQ4tUwU

    பாடல் – புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – ஜமுனாராணி, பி.சுசீலா
    இசை – வி.குமார்
    படம் – இருகோடுகள்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=hCR7rD4-K7c

    பாடல் – வந்தேன் வந்தேன் மீண்டும்
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர்கள் – நித்யஸ்ரீ, சுஜாதா
    இசை – தேனிசைத் தென்றல் தேவா
    படம் – பஞ்சதந்திரம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=sErsh9Kg7bk

    பாடல் – கண்ணும் கண்ணும் கலந்து
    வரிகள் – கொத்தமங்கலம் சுப்பு
    பாடியவர்கள் – ஜிக்கி, பி.லீலா
    இசை – சி.இராமச்சந்திரா
    படம் – வஞ்சிக்கோட்டை வாலிபன்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=AMotc9NQ9B8

    பாடல் – என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான்
    வரிகள் – கவிஞர் முத்துலிங்கம்
    பாடியவர்கள் – பி.எஸ்.சசிரேகா, எஸ்.பி.ஷைலஜா
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – கோபுரங்கள் சாய்வதில்லை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=_XjWcWHbB7A

    அன்புடன்,
    ஜிரா

    361/365

     
    • prabakar 6:42 am on November 29, 2013 Permalink | Reply

      படம் பெயர் நினைவில் இல்லை.கே.ஆர். விஜயாவும் ஜெயசுதாவும் பாடியிருக்கும் பாட்டு. அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து தீபம். எப்படி வேண்டுமானாலும் பெண்கள் வாழலாம் என்பதற்கும் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை கவிஞர் கண்ணதாசன் அருமையாக கூறியிருப்பார். கோடி பெண்களை பூமி கண்டது தெய்வமானவள் சீதை. என்ற அற்புதமான வரிகள் உள்ள பாடல் இந்த பாடலில் ஆண் நாயகன் குறித்து பாடப் படவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

    • Uma Chelvan 7:33 am on November 29, 2013 Permalink | Reply

      இரண்டு பெண்கள் ஒரு ஆணுக்காக பாடியது போலவே, இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணுக்காக ஏங்கி பாடியதும் உண்டே.!!! நம்ம அல்லா ரெக்ஹா இசையில் அருமையான “சஹானா” ராகத்தில் .

      என்னை கேட்டு காதல் வரவில்லையே ,
      நான் சொல்லி காதல் விடவில்லையே !!
      மறந்தாலும் காதல் மறக்காதம்மா !!

      ஒ வெண் நிலா …..இரு வானிலா !!

    • kamala chandramani 8:31 am on November 29, 2013 Permalink | Reply

      பன்னிரண்டு பாடல்கள் ஒரே பதிவில் முதன்முறையாக? என்ன ஆராய்ச்சி? நிஜமாகவே என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. வாழ்த்துகள் ஜி.ரா.

    • umakrishh 9:56 am on November 29, 2013 Permalink | Reply

      நல்ல ஆராய்ச்சி..:) புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக பாமா விஜயம்..அப்புறம் மல்லுவேட்டி மைனர் ல கூட ஒரு பாடல் வருமே..

    • rajinirams 10:05 am on November 29, 2013 Permalink | Reply

      ஆஹா,சான்சே இல்லை சார்.செம பதிவு.பாராட்டுக்கள்.நீங்கள் தேர்ந்தெடுத்த பெண்களின் பண்கள் எல்லாமே அருமை. என்னை நெகிழ வைக்கும் இன்னொரு பாடல் சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் பாட முடியாமல் தவிக்கும் பெண்ணிற்காக “மீரா”என்று பாடலை தொடரும் “பல்லவி ஒன்று மன்னன்” பாடல்.கே.பாலசந்தரின் இயக்கத்திலேயே இன்னொரு பாடல் வெள்ளி விழாவில் “கை நிறைய சோழி”பாடல்.டபுள்ஸ் படத்திலும் வைரமுத்துவில் ஒரு பாடல் நன்றாக இருக்கும்-ராமா ராமா ராமா என்று ஒரு பெண்ணும்,கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா என்று ஒருவரும் பாடும் பாடல். நன்றி.

    • பாலராஜன்கீதா 11:55 am on November 29, 2013 Permalink | Reply

      கந்தன் கருணை – மனம் படைத்தேன் (கே.ஆர்.வி – ஜெ.ஜே) 🙂

    • amas32 7:13 pm on November 29, 2013 Permalink | Reply

      இந்தப் பதிவு முடிவுக்கு வரும் சமயத்தில் சான்சே இல்லாமல் ஒரு சூப்பர் போஸ்ட் 🙂 எந்தப் பாட்டையும் விடு வைக்கவில்லை. ரசிகர்களுக்கு ஒரு கல்யாண சமையல் விருந்தே பரிமாறி விட்டீர்கள். இன்னும் சொல்ல என்ன இருக்கு! அற்புதம் 🙂

      இத்தனைப் பாடல்களிலும் என் மனத்தில் நிற்கும் பாடல் என்னவோ புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் மட்டுமே. அதற்குப் பல காரணங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.

      இன்னும் திரும்ப வந்து உங்கள் பதிவை பொறுமையாக இரண்டு முறை படிக்க வேண்டும் 🙂

      amas32

    • ராஜேஷ் 1:29 am on December 4, 2013 Permalink | Reply

      பாடல் – மல்லிகையே மல்லிகையே
      வரிகள் – கவிஞர் வைரமுத்து
      பாடியவர்கள் – அனுராதா ஸ்ரீராம், சித்ரா
      இசை – தேனிசைத் தென்றல் தேவா
      படம் – நினைத்தேன் வந்தாய்

      வரிகள் பழநிபாரதி

    • santhosh 10:47 am on August 8, 2021 Permalink | Reply

      hi sir ,
      I would like to talk with u for some ideas, kindly if u wish pls contact me-9585504287

  • mokrish 11:16 pm on November 26, 2013 Permalink | Reply  

    உரிமை உன்னிடத்தில் இல்லை 

    போன வாரம் #BooksOnToast பற்றி ஒரு செய்தி படித்தவுடன் நாமும் சில புத்தகங்களை நன்கொடையாகத் தரலாம் என்று தோன்றியது. என்னிடம் இருந்த பழைய ஆங்கில fiction நாவல்களை எடுத்து அடுக்கும்போது ஜெஃப்ரி ஆர்ச்சர் எழுதிய To Cut a Long Story Short  சிறுகதைத்தொகுப்பு கண்ணில் பட்டது. அதில் Death Speaks என்று ஒரு சிறிய சிறுகதை. 12 -13 வரிகள்தான்.  இங்கே படியுங்கள் http://am-kicking.blogspot.in/2005/11/death-speaks.html?m=1.

    அட்டகாசமான ட்விஸ்ட் இது Somerset Maugham எழுதிய Sheppey நாடகத்தில் வரும் ஒரு The Appointment in Samarra என்பதன் தழுவல் என்று ஆர்ச்சர் குறிப்பிட்டிருந்தார். இந்த உரையாடலை கண்ணதாசன் பாடல் வரிகளை அடுக்கி reconstruct பண்ணலாம் என்று amateur முயற்சி.

    வேலையாள்  (பாடல் யாருக்காக இது படம் வசந்த மாளிகை இசை கே வி மகாதேவன் பாடியவர் டி எம் எஸ்)

    http://www.youtube.com/watch?v=m4sX_5LL8e8

    மரணம் என்னும் தூது வந்தது , அது

    மங்கை என்னும் வடிவில் வந்தது

    வணிகன் (பாடல் என்ன நினைத்து படம் நெஞ்சில் ஓர் ஆலயம் இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் பி சுசீலா)

    http://www.youtube.com/watch?v=NV9Gz3jYnlU

    மாயப்பறவை ஒன்று வானில் பறந்து வந்து

    வாவென்று அழைத்ததை கேட்டாயோ

    பறவை பறந்து செல்ல விடுவேனோ?

    அந்தப் பரம்பொருள் வந்தாலும் தருவேனோ?

    தேவதை (பாடல் போனால் போகட்டும் பாலும் பழமும் இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் டி எம் எஸ்)

    http://www.youtube.com/watch?v=DnxZnuXlWBo

    இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை

    இல்லை என்றால் அவன் விடுவானா?

    உறவைச் சொல்லி அழுவதனாலே

    உயிரை மீண்டும் தருவானா?

    மும்பையில் 1993ல் பல இடங்களில் குண்டு வெடித்தது. ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் மதியம் 1.30 மணிக்கு வெடித்தது. அதில் உயிர் தப்பிய ஒருவர், உடனே மும்பையை விட்டு கிளம்பலாம் என்று ஏர் இந்தியா அலுவலகம் சென்று அங்கு குண்டு வெடித்தபோது பலியானார் என்று ஒரு செய்தி படித்த ஞாபகம். சுஜாதாவின் ‘விபா’ என்ற சிறுகதையில் இதேபோல் ஒரு கடைசி வரி ட்விஸ்ட்.

    நிஜ வாழ்க்கையில் நடக்கும் சில நிகழ்வுகள் கதைகளை மிஞ்சும் திருப்பங்கள் நிறைந்தது என்று தோன்றுகிறது.

    மோகனகிருஷ்ணன்

    359/365

     
    • Uma Chelvan 11:20 am on November 27, 2013 Permalink | Reply

      ‪#‎மெய்யில்‬ வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்
      இவ் வையந் தன்னொடும் கூடுவ தில்லையான்
      ஐய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
      மையல் கொண்டொழிந் தேனென்றன் மாலுக்கே#

      விளக்கம் : “அனுகூலயஸ்ய சங்கல்ப: ப்ரதிகூல்யஸ்ய வர்ஜநம்” என்கிறபடியான இப்பாசுரத்தில் சாதிக்கிறார். நிலையற்ற இந்த உலகவாழ்கையை நிஜம் எனக்கொள்ளும், நம்பும் இந்த உலகத்தாரோடு நான் கூடுவதில்லை, ஐயனே-நிஷ்காரண- அரங்கனே உன்னையே அழைக்கின்றேன். என்மேல் அன்பு கொண்டுள்ள பெருமாளிடத்தில் பற்று கொண்டேன். வேண்டேன் இந்த நிலையற்ற வாழ்கையை விண்ணகர் மேயவனே என்று திருமங்கை ஆழ்வார் சாதித்தது போல.

    • amas32 6:59 pm on November 27, 2013 Permalink | Reply

      Jeffrey Archerன் அந்தக் கதை நானும் படித்திருக்கிறேன் 🙂 பாட்டினால் கதை கோத்துவிட்ட அழகு அபாரம் 🙂

      விதி வலியது என்று ஒரு கதா காலட்சேபப் பாடல் முடியும், அது தான் நினைவுக்கு வருகிறது 🙂

      amas32

    • kamala chandramani 8:56 am on November 28, 2013 Permalink | Reply

      ”நிஜ வாழ்க்கையில் நடக்கும் சில நிகழ்வுகள் கதைகளை மிஞ்சும் திருப்பங்கள் நிறைந்தது.” உண்மை.

  • என். சொக்கன் 11:19 pm on November 24, 2013 Permalink | Reply  

    கவலைப்படாதே சகோதரா! 

    • படம்: ஆனந்த ஜோதி
    • பாடல்: காலமகள் கண் திறப்பாள் சின்னையா
    • எழுதியவர்: கண்ணதாசன்
    • இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
    • பாடியவர்: பி. சுசீலா
    • Link: http://www.youtube.com/watch?v=lYKYBy6Qzfs

    சின்னச் சின்ன துன்பமெல்லாம்

    எண்ண எண்ணக் கூடுமடா!

    ஆவதெல்லாம் ஆகட்டுமே,

    அமைதி கொள்ளடா!

    கண்ணதாசனின் பல பாடல்களைப் படிக்கும்போது அல்லது கேட்கும்போது, இவர் ஒரு மனோதத்துவ நிபுணராக இருப்பாரோ என்று சந்தேகம் வரும். இந்தப் பாடல் அந்த வகைதான்.

    ஒரு சின்னக் கல்லைச் சிறிது நேரம் கையில் வைத்திருந்தால் வலி ஏற்படாது, அதையே அதே நிலையில் சில மணி நேரங்கள் வைத்திருந்தால் கஷ்டம்தான்.

    ’நாம் சந்திக்கிற துன்பங்களெல்லாம் அப்படிதான்’ என்று ஒரே போடாகப் போட்டுவிடுகிறார் கண்ணதாசன். ’சிறிய கல்லைக்கூடப் பெரிய பாறையாக்குவது நம் எண்ணங்கள்தான், என்ன நடந்தாலும் சமாளிக்கலாம் என்று அமைதியாக இருப்போம்!’ என்று எளிய சொற்களில் தெளிவாகச் சொல்லிவிடுகிறார்.

    ஒரு சிறுவனைப் பார்த்து நாயகி பாடுவதாக வரும் இந்தப் பாடலில் பாதி தன்னம்பிக்கை, மீதி கடவுள் நம்பிக்கை. ‘கல்லிருக்கும் தேரைக்கெல்லாம் கருணை தந்த தெய்வம், கனி இருக்கும் வண்டுக்கெல்லாம் துணை இருந்த தெய்வம், நெல்லுக்குள்ளே மணியை, நெருப்பினிலே ஒளியை உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம் உனக்கு இல்லையா? தம்பி, நமக்கு இல்லையா?’ என்கிற வரிகளைக் கேட்டு நம்பிக்கை பெறும் அந்தச் சிறுவர், பி(இ)ன்னாள் நா(த்தி)யகர் கமலஹாசன்!

    அதனால் என்ன? கண்ணதாசனும் முன்னாள் நாத்திகர்தானே!

    ***

    என். சொக்கன் …

    24 11 2013

    357/365

     
    • uma chelvan 2:22 am on November 25, 2013 Permalink | Reply

      அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும்
      அன்பு மொழி கேட்டு விட்டால் துன்ப நிலை மாறிவிடும்…………அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்……………

      இந்த அன்பு மொழிக்குதான் எவ்வளவு சக்தி. ஆறாத வருத்தத்துக்கு, மாறாத கோபத்துக்கு, தீராத நோயிக்கு ” நான் எப்பொழுதும் உன்னுடன் இருக்கிறேன்/ இருப்பேன் என்ற ஒரு சொல்லே உறவுகளின் மீதும் வாழ்கையின் மீதும் மீண்டும் நம்பிக்கை துளிர்க்க செய்கிறது.
      “எவ்வளவு கோபம் இருந்தாலும் ஒரு மீன் இன்னொரு மீனை தூக்கி தரையில் போடுவதில்லை” இதை இப்பொழுதுதான் வேறு ஒரு இடத்தில் படித்தேன். Humans are the only species go out of their way to hurt others.

    • rajinirams 6:16 pm on November 25, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு. கவியரசரின் “ஆறுதல் தரும்” வரிகள்.எம்ஜியாரை திரையுலகில் “சின்னவர்” என்று தான் சொல்லுவார்கள். அதனாலும் “சின்னையா”என்று கவியரசர் எழுதியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

    • amas32 7:40 pm on November 25, 2013 Permalink | Reply

      //சின்னச் சின்ன துன்பமெல்லாம்

      எண்ண எண்ணக் கூடுமடா!//

      முற்றிலும் உண்மை. பிறர் நம்மை தவறாகவோ கொபமகாகவோ பேசியதை அந்தக் கணத்தில் நாம் feel பண்ணியதை விட நினைத்து நினைத்து மருகும் போது தான் கனக்கிறது மனம். இதைத் தவிர நாம் இப்படி பதில் சொல்லியிருக்கணும் அப்படி பதில் சொல்லியிருக்கணும் என்று லேட்டாக ஞானோதயம் வேறு ஏற்பட்டு மனத்தை கலங்கவைக்கும்.

      எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் சிலர் இருப்பார். ஒன்றுமே அவர்கள் மேல் ஒட்டாது toughlan மாதிரி. கொடுத்து வைத்தவர்கள் 🙂

      கமல் நாத்திகர் என்று தன்னை பிரகடனப் படுத்திக் கொண்டாலும் என்னால் அவரை நாத்திகர் என்று சொல்ல முடியாது 🙂

      amas32

  • G.Ra ஜிரா 9:13 pm on November 22, 2013 Permalink | Reply  

    மாற்றங்கள் 

    சிறுவயதில் நான் சேட்டைக்காரன். பிடித்து ஒரு இடத்தில் உட்கார வைப்பதும் கடினம். வாயைத் திறந்தால் கேட்கவே வேண்டாம்… தூத்துக்குடியில் நான் கதறினால் விளாத்திகுளத்தில் எதிரொலிக்கும்.

    ஊருக்குப் போகும் போதெல்லாம் சொந்தக்காரர்களிடம் கெட்ட பெயரை பெட்டி பெட்டியாக சம்பாதித்துக் கொண்டு வருவேன்.

    வளர வளர நடத்தையில் மாற்றம் வந்தது. குறிப்பாக கல்லூரிக்குச் சென்றபின். பலவித அனுபவங்களிலும் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ன சிந்தனையிலும் மனம் கட்டுப்பட்டது. சிந்தனைகள் அமைதிப்படுத்தின. மாற்றம் தவிர்க்கவே முடியாததானது. ஒரு திருவிழாவுக்கு ஊருக்குச் சென்ற போது என்னுடைய அத்தை ஒருவர் “பையன் எப்பிடி மாறிப் போயிட்டான்! அவரஞ்சிக் கொடியா மாறிட்டான்!” என்றார்.

    மாற்றம் என்பதுதான் மாற்றமில்லாத தத்துவம். இந்த மாற்றத்தை திரைப்படக் கவிஞர்கள் எப்படி கையாண்டிருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தேன். மடமடவென்று காதல் பாடல்கள் கண் முன்னே வந்தன. அவற்றில் நான்கு பாடல்களை மட்டும் பார்க்கலாம்.

    வழக்கம் போலவே கவியரசர் முன்னால் வந்து நிற்கிறார். பணமா பாசமா திரைப்படத்துக்காக அவர் எழுதிய பாடலைத்தான் பார்க்கப் போகிறோம்.

    அவளொரு கல்லூரி மாணவி. செல்வந்தரின் செல்வமகள். திமிரும் அதிகம் தான். காரிலேயே கல்லூரி சென்று திரும்புகின்றவள் தவிர்க்க முடியாமல் ரயிலில் ஒருநாள் செல்ல வேண்டியிருக்கிறது. அந்த ரயிலில்தான் அவள் அவனைப் பார்க்கிறாள். அவனோ அவளைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. அவள் அவனைப் பார்த்ததாலேயே அவளுடைய திமிர் கரைந்து ஓடுகிறது. உள்ளத்தில் காதல் வந்த பிறகு அங்கு திமிருக்கு இடமில்லை. வீட்டுக்கு வந்து அவனை நினைத்துப் பாடுகிறாள்.

    மாறியது நெஞ்சம்! மாற்றியது யாரோ!
    காரிகையின் உள்ளம் காண வருவாரோ!

    மாறிய உள்ளம் மாறாமல் இருக்க வேண்டுமென்றால் மாற்றியவனே வரவேண்டும். கதைப்படி வந்தான். நல்வாழ்வு தந்தான்.

    மாற்றத்தின் தோற்றத்தை அடுத்ததாகச் சொல்ல வருகின்றவர் கவிஞர் வாலி. சந்திரோதயம் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலிலும் ஒரு பெண் வருகிறாள். ஆம். இளம்பெண்ணே தான். அவளும் நோக்கினாள். அவனும் நோக்கினாள். அதை மன்மதனும் நோக்கினான். காதல் அம்பு விட்டான்.

    மன்மதன் அம்பு விட்டான் என்று நமக்குத் தெரிகிறது. அவளுக்குத் தெரியவில்லையே. அவள் நெஞ்சுக்குள் உண்டான குழைவு எப்படி வந்தது என்றே அவளுக்குப் புரியவில்லை. அதையே பாட்டாகப் பாடுகிறாள்.

    எங்கிருந்தோ ஆசைகள்
    எண்ணத்திலே ஓசைகள்
    என்னென்று சொல்லத் தெரியாமலே
    நான் ஏன் இன்று மாறினேன்!

    பெண்மை தானாக மாறுவதும் உண்டு. வலுக்கட்டாயமாக மாற்றப்படுவதும் உண்டு. அன்பும் அடக்கமும் நிறைந்தவள் அவள். அவளை ருசிக்க விரும்பிய ஒருவன் அவளுக்குத் தெரியாமல் மதுவைக் குடிக்க வைத்தான். மது மதியை மயக்கியது. மயங்குவது புரிந்தது அவளுக்கு. ஆனால் அதைத் தடுக்க முடியவில்லை. தானா இப்படி மாறிக் கொண்டிருக்கிறோம் என்று வியந்து பாடுகிறாள் அவள்.

    நானே நானா யாரோதானா
    மெல்ல மெல்ல மாறினேனா
    தன்னைத் தானே மறந்தேனே
    என்னை நானே கேட்கிறேன்

    இதுவும் கவிஞர் வாலியின் கைவண்ணம் தான். அடுத்து கவிஞர் வைரமுத்து காட்டும் மாற்றத்தை அவரது வைரவரிகளில் பார்க்கலாம். இதுவரை பார்த்த அதே காட்சிதான். நேற்று வரைக்கும் இல்லாத காதல் இன்று அவளுக்கு வந்து விட்டது.

    நேற்று இல்லாத மாற்றம் என்னது
    காற்று என் காதில் ஏதோ சொன்னது
    இதுதான் காதல் என்பதா!
    இளமை பொங்கிவிட்டதா!
    இதயம் சிந்திவிட்டதா! சொல் மனமே!

    இப்படி பெண்களின் மனது குழந்தைத்தனத்திலிருந்து காதலுக்கு மாறுவதைச் சொல்ல எத்தனையெத்தனை பாடல்கள்.

    அதெல்லாம் சரி. வாலிபத்துக்கு வந்த பின் குழந்தைத்தனத்துக்கு நாம் ஏங்குவதேயில்லையா. வாழ்க்கையில் எவ்வளவுதான் வளர்ந்தாலும் உயர்ந்தாலும் குழந்தைப் பருவத்தின் குற்றமில்லா குதூகலங்கள் எப்போதும் நம்மோடு வருவதில்லை. ஏனென்றால் மனதோடு சேர்ந்து அறிவும் மாறிவிடுகிறதே. இந்த ஏக்கத்தை அழகாக ஒரு பாட்டில் வைத்தார் கவிஞர் சிநேகன்.

    அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்
    அந்த நினைவுகள் நெஞ்சில் திரும்பிடத் திரும்பிட ஏக்கங்கள்!

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்
    படம் – பணமா பாசமா
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=wlSTmduxnyA

    பாடல் – எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – சந்திரோதயம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=DM_m7xWYTHc

    பாடல் – நானே நானா யாரோதானா
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர் – வாணி ஜெயராம்
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – அழகே உன்னை ஆராதிக்கிறேன்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Hh6lAvR12cA

    பாடல் – நேற்று இல்லாத மாற்றம்
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர் – சுஜாதா
    இசை – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்
    படம் – புதியமுகம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=9_geeVUdWwc

    பாடல் – அவரவர் வாழ்க்கையில்
    வரிகள் – சினேகன்
    பாடியவர் – பரத்வாஜ்
    இசை – பரத்வாஜ்
    படம் – பாண்டவர் பூமி
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=yHW1mPvAM3Q

    அன்புடன்,
    ஜிரா

    355/365

     
    • amas32 9:29 pm on November 22, 2013 Permalink | Reply

      //மாறியது நெஞ்சம்! மாற்றியது யாரோ!
      காரிகையின் உள்ளம் காண வருவாரோ!//
      அருமையான ஒரு பாடலை நினைவு படுத்தியதற்கு எக்கச்சக்க நன்றி :-))

      பெண்ணின் மனம் மாறுகிறது. அவள் அறியாமலேயே அவளுள் மாற்றம் ஏற்பட்டுவிடும். இது இயற்கை நடத்தும் ஒரு அதிசயம். இதை வாழ்க்கையில் உணர்ந்தவர்கள் ரசிகர்கள், புத்திசாலிகள். அந்த மாற்றத்துக்கு ஏற்ப நாம் வாழும் கலையை மாற்றியமைத்தால் வெற்றி நமதே.

      எல்லா பாடல்களுமே அருமை ஜிரா 🙂

      amas32

    • rajinirams 1:02 am on November 23, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு-பொருத்தமான நல்ல “மாற்ற”பாடல்கள். சில காதலர்கள் “காலம் மாறலாம் நம் காதல் மாறுமா” என்றும் வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்,ஆனாலும் அன்பு “மாறாதம்மா” என அன்புடன் இருப்பர்.பின்னாளில் “தாலாட்டு மாறி”போனதே என்று பாடாமலிருந்தால் நல்லது. வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை ஆனால்”மாறி”விட்டான் எனக்கூறும் கவியரசர் “மாறாதய்யா மாறாது மணமும் குணமும் மாறாது” என்று எழுதியுள்ளார். நன்றி:-)

    • Uma Chelvan 3:26 am on November 23, 2013 Permalink | Reply

      மிக மிக நல்ல பதிவு. மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் பதிவு. அதிலும் மிகவும் அருமையான “எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்” என்ற பாடல் வேறு. கேட்கவும் வேண்டுமா? ……Mr. Rajinirams கமெண்ட்ஸ் எல்லாமே படிக்க மிகவும் நன்று. இவ்வளவு பாடல்களை தெரிந்து வைத்ருகிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

    • rajinirams 9:02 pm on November 23, 2013 Permalink | Reply

      uma chelvan நன்றி:-)

  • mokrish 9:17 pm on November 21, 2013 Permalink | Reply  

    நீ பார்த்த பார்வைக்கொரு 

    இந்த மாதம் கமல்ஹாசன் பிறந்த நாளன்று ஏதோ ஒரு டிவி சானலில் விஸ்வரூபம் படத்தில் வரும்  உன்னைக் காணாது நான் என்ற பாடலை (இசை சங்கர் – ஈசான்- லாய் பாடியவர்கள்  கமல்ஹாசன், சங்கர் மகாதேவன்)  ஒளிபரப்பினார்கள் பண்டிட் பிர்ஜு  மகராஜ் வடிவமைத்த அருமையான கதக் நடனம். கமல்ஹாசனே நாயகி பாவத்தில் எழுதிய பாடல். அதில் வரும் வரிகள்

    http://www.youtube.com/watch?v=XuOgG2QWAgQ

    அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாணுவேன்

    கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்

    ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்

    ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்

    இந்த 2013ல் ‘எவ்வாறு நாணுவேன்’ என்று ஒரு நாயகி யோசிப்பதும் கண்ணாடி முன் ரிகர்சல் செய்து பார்ப்பதும் என்ற interesting கவிதை.

    ஆணும் பெண்ணும் பரிமாறிக்கொள்ளும் காதல் பார்வை கவிஞர்களின் கற்பனைக்கு நிறைய தீனி போட்டிருக்கிறது. உடனே நம் நினைவுக்கு வருவது கம்பன் சொன்ன அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள். இது கண்டதும் காதல் இல்லை தற்செயலாக (Accidentally) ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்’ என்கிறார் புலவர் கீரன்.

    வள்ளுவர் ஒரு முழு அதிகாரமே எழுதியிருக்கிறார். பெண்ணின் ஒரு பார்வை காதல் நோயைத் தரும். அதுவே நோய்க்கு மருந்தளிக்கும்.  நான் பார்க்கும்போது மண்ணை பார்க்கின்றாயே என்று எல்லாமே  ஒரு ஆணின் Point of View. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் என்ற குறளில் பெண்ணின் பார்வை ஒரு படையுடன் வந்து தாக்குவதுபோல் இருக்கிறது என்பதும் ஆண் சொல்வதே.

    இதில் ஒரு பெண்ணின் நிலை என்ன? சில திரைப்பாடல்களில் கிடைத்த சுவாரஸ்ய முத்துகள். இவன் என்ற படத்தில் பழனிபாரதி எழுதிய பாடல்  (இசை இளையராஜா பாடியவர்கள் மாதங்கி, உன்னிகிருஷ்ணன் )

    http://www.youtube.com/watch?v=Tu7Hjb8NOmo

    அப்படி பாக்குறதுன்னா வேணாம்

    கண் மேலே தாக்குறது வேணாம்
    தத்தி தாவுறதுன்னா னா னா
    தள்ளாடும் ஆசைகள் தானா
    என்ன கேட்காமல் கண்கள் செல்ல
    உன் பக்கம் பார்த்தேன்
    மிச்சம் இல்லாமல் வெட்கம் தின்ன
    காணாமல் போனேன்

    கமலின் 2013 நாயகி எப்படி நாணுவது என்று practise செய்கிறாள். பழனிபாரதியின் 2002 நாயகி வெட்கம் தின்ன காணாமல்  போகிறாள். டைம் லைனில் கொஞ்சம் முன்னே போய் 60களில் வந்த சில பாடல்களைப் பார்த்தால் pleasant surprise. பணக்கார குடும்பம் என்ற படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்  (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர்கள் டி எம் எஸ், பி சுசீலா)

    http://www.youtube.com/watch?v=ABRw-iSaCJI

    இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்  தானா

    இப்படி என்று சொல்லி இருந்தால் தனியே வருவேனா …..

    இது ஏய் அப்படி பாக்காதே mode தான். ஆனால் வல்லவன் ஒருவன் படத்தில் கண்ணதாசன் எழுதிய இன்னொரு பாடல் bold & beautiful.  (இசை வேதா பாடியவர்கள் டி எம் எஸ், பி சுசீலா)

    http://www.youtube.com/watch?v=Lu8FNldHluA

    இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது

    இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது

    நான் கேட்டதை தருவாய் இன்றாவது

    கவியரசர் பெண்ணின் கோணத்தில் சொல்லும் அதிரடி வரிகள். 1966ல் வெளிவந்த பாடல் வரிகள் என்று நம்பவே முடியவில்லை. இதை மக்கள் எப்படி விமர்சனம் செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

    மோகனகிருஷ்ணன்

     
    • Uma Chelvan 12:47 am on November 22, 2013 Permalink | Reply

      நினைக்க மறந்தாய் , தனித்து பறந்தேன்
      மறைத்த முகத்திரை திறப்பாயோ
      திறந்து அகத்திரை இருப்பாயோ!!
      இருந்து விருந்து இரண்டு மனம் இணைய …….

      உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன்…

      ராஜா ஒரு மழை போல்!! மழைக்கு காடென்ன, கடெலென்ன, பாரபட்சம் இல்லாமல் எங்கும் பொழிவது போல் .ராஜாவும்…….மோகன், முரளி, ராமராஜன், சிவகுமார், விஜயகாந்த் முதற்கொண்டு அனைவரையும் கட்டி காத்த எல்லைச் சாமி. நல்ல குரல் வளம் கொண்ட வடிவேலும் ராஜவினால்தான் சினிமாவில் பாட ஆரம்பித்தார் என்று நினைகிறேன்.

      மாமழை போற்றுதும்!!!! ராஜாவையும் !!!!!

    • rajinirams 10:38 am on November 22, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு. நீங்கள் சொன்னது போல “ஆணும் பெண்ணும் பரிமாறிக்கொள்ளும் காதல் பார்வை கவிஞர்களின் கற்பனைக்கு நிறைய தீனி போட்டிருக்கிறது”.கவியரசரின் “பார்வையிலேயே”ஏராளம். பார்த்தேன் ரசிந்தேன் என்று ஆரம்பித்து ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்,என்ன பார்வை உந்தன் பார்வை,பார்வை யுவராணி கண்ணோவியம் இப்படி பல. எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன என்ற கேள்விக்கு உன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது என்பது கண்ணதாசனின் பார்வை தான்.ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்,கண் தேடுதே சொர்க்கம்-வாலியின் பார்வை.உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில்-இது கங்கை அமரனின் கற்பனை.பார்வையாலே நூறு பேச்சு,வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு-வைரமுத்துவின் பார்வை. விழிகள் மேடையாம்,இமைகள் திரைகளாம் “பார்வை”நாடகம் அரங்கில் ஏறுமாம்-இது டி.ராஜேந்தரின் பார்வை.பார்க்காதே பார்க்காதே-நீ பார்த்தா பறக்குறேன் பாதை மறக்குறேன்-இது யுகபாரதியின் வருத்தப்படாத வாலிபர் சங்க பார்வை. நன்றி.
      “மார்கழி பார்வை பார்க்கவா” என்ற வார்த்தைகளும் நல்ல கற்பனையே-ராஜாவின் இசையில் உள்ள இந்த பாடலை கேட்டிருக்கிறேன்,எந்த படம் என்று தெரியவில்லை.(உயிரே உனக்காக என்ற பெயரில் எடுக்கப்பட்டு நின்று போனது என்று நினைக்கிறேன்) http://youtu.be/XEvlj_vvgoM

    • amas32 11:57 am on November 22, 2013 Permalink | Reply

      //இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது

      இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது

      நான் கேட்டதை தருவாய் இன்றாவது//

      இந்த வரிகள் தான் நீங்கள் இன்று கொடுத்திருப்பதிலேயே பெஸ்ட். என்ன ஒரு கற்பனை, உண்மைக்கு மிக அருகில். கண்ணதாசனைப் பெற்ற இத் தமிழகம் புண்ணிய பூமி!

      amas32

    • srimathi 10:54 pm on November 22, 2013 Permalink | Reply

      I’m glad that there are so many songs where a woman’s perspective is portrayed. To be exactly in woman’s shoes is possible only when a woman writes it herself. Ondra renda aasaigal from kaakha kaakha is a popular example. Thamarai writes it this way “thoorathil nee vandhaale en manadhil mazhai adikkum, miga piditha paadal ondru udhadugalil munumunukkum”

  • mokrish 9:56 pm on November 17, 2013 Permalink | Reply  

    தலைப்பு செய்திகள் 

    தமிழ் சினிமாவில் இருக்கும் கதைப்பஞ்சம் நமக்கு தெரியும். இருக்கும் சில கதைகளுக்கும் தலைப்பு தேடுவதே பெரிய வேலையாகிவிட்டது. பெரிய ஹீரோ – ஸ்டார் இவர்கள் நடிக்கும் படங்களுக்கு நாயகனின் பெயரையே தலைப்பாக வைக்கலாம். பலர் ஏற்கனவே வெளிவந்த திரைப்படத்தின் பெயரையே திரும்பவும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரே தலைப்புக்கு நடக்கும்  வாய்க்கா தகராறு கொடுமை!

    1950களில் சில திரைப்படங்களுக்கு இரண்டு தலைப்புகள் வைத்திருந்தனர். இப்போது அந்த இரண்டாவது தலைப்பை tag லைன் என்று சொல்கிறார்கள். மிக நீளமான தலைப்பைக் கொண்ட திரைப்படம் என்ற (ஒரே) பெருமை மன்சூர் அலிகானின் ‘ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்’ என்ற படத்துக்கே. ஒரேழுத்து தலைப்பும் உண்டு – சமீபத்திய கோ,  தயாரிப்பில் இருக்கும்  ஷங்கரின் ஐ.

    அன்றும் இன்றும் என்றும் நாவல்களுக்கும் / திரைப்படங்களுக்ககும் பாடல் வரிகளையே தலைப்பாக வைப்பது ஒரு வழக்கம்.  ஆனந்த விகடனில் எழுத்தாளர் மணியன் ‘உன்னை ஒன்று கேட்பேன் என்ற பாடலின் வரிகளை தன் நாவல்களின் தலைப்பாக வைத்தார். தாமரை மணாளன் ஆயிரம் வாசல் இதயம் என்று ஒரு கதை எழுதினார். திரையுலகில் எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி நிறைய படங்களின்  தலைப்பு ஒரு பாடலின் முதல் வரியே

    ஒரு அதிசயமான டைட்டில் தொடர் சங்கிலி கண்ணில் பட்டது. ஒரு படத்தின் பாடலை இன்னொரு படத்தின் தலைப்பாக்கி  அந்த படத்தின் பாடல் இன்னொரு படத்தின் தலைப்பாகி என்று ஒரு சங்கிலியில் நான்கு அருமையான பாடல்கள்.

    லக்ஷ்மி கல்யாணம் என்றொரு படம்.அதில் ராமனின் பல பெயர்களை வர்ணிக்கும் பாடல்   http://www.youtube.com/watch?v=DR2GFE0B5M0

    ராமன் எத்தனை ராமனடி

    அவன் நல்லவர் வணங்கும் தெய்வமடி

    ராமன் எத்தனை ராமனடி என்ற படத்தில் ஒரு பிரபலமான பாடல் http://www.youtube.com/watch?v=cU9_w77CM1k

    அம்மாடி … பொண்ணுக்கு தங்க மனசு

    பொங்குது இந்த மனசு

    பொண்ணுக்கு தங்க மனசு என்ற படத்தில்  வரும் பாடல் http://www.youtube.com/watch?v=tCpQUgKU4YI

    தேன் சிந்துதே வானம்

    உனை எனை தாலாட்டுதே

    தேன் சிந்துதே வானம் என்ற படத்தில் வரும் பாடல் http://www.youtube.com/watch?v=lc1v6uBKtKs

    உன்னிடம் மயங்குகிறேன்

    உள்ளத்தால் நெருங்குகிறேன்

    உன்னிடம் மயங்குகிறேன் என்றும் ஒரு படம் வந்தது. ஆனால் இந்த டைட்டில் சங்கிலி தொடரவில்லை என்று நினைக்கிறேன்.

    தலைப்புக்கும் கதைக்கும் பெரிய தொடர்பே இருப்பதில்லை. அபூர்வமாக சில நல்ல தலைப்புகள் கண்ணில் படும். என் டாப் பட்டியலில் இருக்கும் தலைப்புகள் முள்ளும் மலரும், மூன்றாம் பிறை, வாலி, அழியாத கோலங்கள்

    மோகனகிருஷ்ணன்

    350/365

     
    • rajinirams 11:20 pm on November 17, 2013 Permalink | Reply

      நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ,சில மாதங்களுக்கு முன் இதை நினைத்தேன்-இதே போல இன்னொன்று- இருவர் உள்ளாம்=இதயவீணை தூங்கும்போது, இதயவீனை-இன்று போல என்றும் வாழக. இன்று போல் என்றும் வாழ்க-அன்புக்கு நான் அடிமை.அன்புக்கு அடிமையாகி நின்று விட்டது:-)) நன்றி.

    • rajinirams 3:06 am on November 18, 2013 Permalink | Reply

      இரு மலர்கள்-அன்னமிட்ட கைகளுக்கு,அன்னமிட்ட கை-16 வயதினிலே,16 வயதினிலே-செந்தூரப்பூவே,செந்தூரப்பூவேயுடன் நின்றது, தெய்வத்தாய்-வண்ணக்கிளி,வண்ணக்கிளி-மாட்டுக்கார வேலா,மாட்டுக்கார வேலன்-பட்டிக்காடா பட்டணமா.பட்டிக்காடா பட்டணமா-நல்வாழ்த்து நான் சொல்வேன்,நல் -வாழ்த்துக்களுடன் இனிதே முடிந்தது. அதே போல் நீ,தீ போன்ற ஓரெழுத்து படங்களும் வெளியாகின. மின்னலே பாடத்தில் வாலி எழுதிய அழகிய தீயே வரியை தன் படத்தில் தலைப்பாக வைத்ததற்கு அழகிய தீயே இசை வெளியீட்டு விழாவில் அவரை அழைத்து கெளரவப்படுத்தினார் அதன் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ்.பல படங்களுக்கு தலைப்பை பாடல் மூலம் தந்திருந்தாலும் தன்னை கெளரவப்படுத்திய பிரகாஷ்ராஜை மனமார பாராட்டினார் வாலி.நல்ல பதிவு.பாராட்டுக்கள்.

    • amas32 2:31 pm on November 18, 2013 Permalink | Reply

      Very quaint post 🙂 I have also wondered about this like Rjnirams 🙂 At least movies with song line titles is plenty common among Tamil film productions. அதுவே படத்தைப் பாதி மக்களிடம் கொண்டு சேர்த்துவிடும். நீ தானே என் பொன் வசந்தம் என்று பெயர் சூட்டியது கௌதம் வாசுதேவ் மேனனின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது 🙂

      amas32

  • G.Ra ஜிரா 9:18 pm on November 14, 2013 Permalink | Reply  

    தலைவர்களின் தலைவிகள் 

    சங்க இலக்கியம் காதல் கொண்ட ஆணையும் பெண்ணையும் தலைவன் தலைவி என்றே அழைக்கிறது. மிகப் பொருத்தமான பெயர்தான். அவனுக்கு அவள் தலைவி. அவளுக்கு அவன் தலைவன். அவர்கள் ஊடிக் கூடி முயங்குவதுதான் காமம்.

    அது சரி. ஊருக்கோ நாட்டுக்கோ தலைவன் ஒருவன் இருப்பானே. அவனுக்கும் ஒரு தலைவி இருப்பாளே! அவளுடைய நிலை எப்படி இருக்கும்?

    சாதரண மனிதனாலேயே வீட்டுக்கும் வேலைக்கும் சரியான அளவு நேரம் ஒதுக்க முடிவதில்லை. அப்படியிருக்க நாடாளும் தலைவன் நாட்டுக்கும் வீட்டுக்கும் சரியான அளவு நேரமும் கவனமும் ஒதுக்க முடியுமா?

    முடியாது என்று அடித்துச் சொல்கிறார் துரியோதனனின் மனைவி பானுமதி.

    அரண்மனை அறிவான்
    அரியணை அறிவான்
    அந்தப்புரம் ஒன்று இருப்பதை அறியான்
    வருகின்ற வழக்கை முடித்து வைப்பான்
    மனைவியின் வழக்கை கனவிலும் நினையான்
    என்னுயிர்த் தோழி கேளொரு சேதி
    இதுதானோ உங்கள் மன்னவர் நீதி!

    நாட்டுக்கே அரசியானலும் இதுதான் அவள் நிலை. “தன்னுயிர் போலே மண்ணுயிர் காப்பான் தலைவன் என்றாயே தோழி” என்றுதான் அவளால் புலம்ப முடிந்தது. ஆனாலும் அவளுக்கும் ஒரு நம்பிக்கை.

    இன்றேனும் அவன் எனை நினைவானோ
    இளமையைக் காக்க துணை வருவானோ
    நன்று! தோழி நீ தூது செல்வாயோ
    நங்கையின் துயரச் சேதி சொல்வாயோ!

    கவியரசர் கண்ணதாசன் வரிகளில் அத்தினாபுர அரசி பானுமதி அனுப்பிய தூது வெற்றி பெற்றிருக்கும் என்றே நம்புகிறேன். வெற்றி பெற்றிருக்கவே விரும்புகிறேன்.

    ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது பெண்கள் நிலை மாறியிருக்கிறதா? குறிப்பாக தலைவர்களின் தலைவிகளின் நிலை? இல்லை என்கிறார் கவிஞர் வைரமுத்து.

    இப்பொதெல்லாம் அந்தரங்க விஷயங்களை நம்பிப் பரிமாறுவதற்கான தோழிகளும் தோழர்களும் அரிதாகித்தான் போனார்கள். ஆகையால் முதல்வனின் முதல்வி அவளுக்காக அவளே பாடுகிறாள்.

    உலகம் வாழ நிதி ஒதுக்கு
    என் உயிரும் வாழ மதி ஒதுக்கு
    அரசன் வாழ விதி இருக்கு
    அதற்கு நீதான் விதிவிலக்கு
    மன்னனே… இதோ இவள் உனக்கு

    அப்போதும் அவன் அசைந்து கொடுத்தது போலத் தெரியவில்லை. ஆசைகளை அள்ளித் தெளிக்கிறாள்.

    பள்ளிவாசல் திறந்தாய் பள்ளி திறந்தாய்
    பள்ளியறை வர நேரமில்லையா
    ஊரடங்கு தளர்த்தி வரிகள் தளர்த்தி
    உடைகள் தளர்த்திட வேண்டுமில்லையா!

    காதல் பஞ்சம் வந்து நொந்தேனே முத்த நிவாரணம் எனக்கில்லையா?” என்று தலைவியே தலையெழுத்தை நொந்து கொள்கிறாள். காலங்கள் மாறினாலும் தலைவிகளுக்கு புலம்பல் தான் வழி போல!

    இந்த ஏக்கங்கள் தலைவிக்கு மட்டுந்தான் இருக்குமா? இல்லை. தலைவனுக்கும் இருக்கும் என்கிறார் கவிஞர் வாலி.

    தலைவன் போர்க்கடமையில் இருக்கிறான். போர்ப்பாசறையில் இருந்தாலும் அவன் மனம் அவளது பாச அறைக்கு ஏங்குகிறது.

    வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்!
    போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்
    தேன் நிலவு நான் வாழ ஏன் இந்த சோதனை?
    வான் நிலவை நீ கேளு! கூறும் என் வேதனை!

    அப்படியானால் மகிழ்ச்சியான தலைவனும் தலைவியும் கிடையவே கிடையாதா? அவர்கள் எப்படிப் பாடுவார்கள் என்பதை எப்படித்தான் தெரிந்து கொள்வது? கவலை வேண்டாம் என்கிறார் கவிஞர் வாலி. மன்னவன் வந்தானடி என்ற படத்துக்காக ஒரு பாடல் எழுதினார்.

    காதல் ராஜ்ஜியம் எனது!
    அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது!
    இது மன்னன் மாடத்து நிலவு!
    இதில் மாலை நாடகம் எழுது!

    அடடா! இப்படி தலைவனும் தலைவியும் ஒன்றாக மனமகிழ்ந்து பாடுவது நமக்கெல்லாம் கேட்பதற்கு எவ்வளவு இன்பமாக இருக்கிறது!

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – என்னுயிர்த் தோழி கேளொரு சேதி
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.இராமமூர்த்தி
    படம் – கர்ணன்
    பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=ON5Wh1WuAH0

    பாடல் – முதல்வனே வனே வனே வனே
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர் – எஸ்.ஜானகி
    இசை – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்
    படம் – முதல்வன்
    பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=k6X1d2zlqTw

    பாடல் – சுந்தரி கண்ணால் ஒரு சேதி
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர் – எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – தளபதி
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=aPp_i4qzoqI

    பாடல் – காதல் ராஜ்ஜியம் எனது
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – இசையரசி பி.சுசீலா, ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – மன்னவன் வந்தானடி
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=EMPVtUf42Dc

    அன்புடன்,
    ஜிரா

    347/365

     
    • Kannabiran Ravi Shankar (KRS) 4:07 am on November 15, 2013 Permalink | Reply

      தலை = “முதல்”
      உழந்தும் உழவே “தலை” -ன்னு சொல்றோம்-ல்ல

      அப்படி, வாழ்க்கையில்..
      அவனுக்கு முதல் = அவளே; “தலை”வி
      அவளுக்கு முதல் = அவனே; “தலை”வன்

      வாழ்வில் எத்தனையோ வரும் போகும்..
      ஒவ்வொன்னுத்துக்கும் ஒரு மதிப்பு | அந்த நேரத்துக்கு வரும், அப்பறம் போயீரும்;

      ஆனா அவளுக்கு = அவன் தான் முதல்! அவனுக்கு அப்பறம் தான் மத்த எல்லாம்;
      அதனால் தான் அவ = “தலைவி”
      ————

      சீதை = தலைவி; அவனே முதல், அப்பறம் தான் மத்த எல்லாம்
      இராமன் = ? | அவனுக்கு மற்ற விஷயங்களும் முதல் ஆகி விடுகிறது, வெவ்வேறு காலங்களில்..

      சங்கத் தமிழில் அகம் தான் அதிகம் | புறத்தை விட..
      நாடாளும் மன்னனை = நாடன், மன்னன், கோன், பெருமன் -ன்னு சொல்லுவாங்களே தவிர, “தலைவன்” -ன்னு சொல்ல மாட்டாங்க!

      காதலனைத் தான் = தலைவன் -ன்னு சொல்லுறது வழக்கம்! அப்படியொரு உயர்வு, மனசால் வாழும் அக வாழ்வுக்கு!

      சில பாடல்களில் குறிஞ்சி நாட்டுத் தலைவன்-ன்னு வந்தாலும், அது அகப் பாடலாய்த் தான் இருக்கும்! அவள், அவனைத் “தலைவன்” -ன்னு சொல்வது!
      ஆனால் பின்னாளில் புறம் மிகுந்து போய்….
      நாடாள்பவர்களை = “தலைவர்” -ன்னு இன்னிக்கும் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்:(

      • Kannabiran Ravi Shankar (KRS) 4:23 am on November 15, 2013 Permalink | Reply

        வருகின்ற வழக்கைத் தீர்த்து முடிப்பான்
        மனைவியின் வழக்கை மனதிலும் நினையான்
        என்னுயிர்த் தோழி கேளொரு சேதி…
        -ன்னு கண்ணதாசன், என்னவொரு ஏக்கத்தை வைக்குறாரு! யப்பா…

        நாடாளும் மன்னவனே ஆனாலும்,
        அலுவல் காரணமாய் நேரம் ஒதுக்க முடியாவிட்டாலும் கூடப் பரவாயில்லை…

        ஆனால், அவளே “முதல்” -ன்னு மனசால நினைக்கணும்!
        அப்ப தான் = “தலைவன்”
        நாட்டுக்கு/ ஆபீசுக்கு = பல ஆபீசர்கள் கிடைப்பார்கள்
        ஆனா அவளுக்கு = ?

        காசில்லாம குடும்பம் நடத்த முடியாது; அலுவல்/ கடமை எல்லாமே முக்கியம் தான்!
        ஆனா, இதெல்லாமே எதுக்குச் செய்யறது?
        தன்னையே நம்பி வந்த அவளோடு “வாழ”வே இத்தனையும்!
        —————-

        வீட்டு வேலைக்கு நேரம் ஒதுக்க முடியாட்டாலும் பரவாயில்லை…
        ஆனா, “இரவு” -ன்னு ஒன்னு வருது-ல்ல?

        அந்த இரவில், தூங்கும் முன்,
        அவ கிட்ட, முகத்தோடு முகம் வச்சி,
        “என்னடீ?” -ன்னு பேசும் ரெண்டே சொல்லு…

        அடுத்த நாள், அவளுக்கும் புத்துணர்வு, அவனுக்கும் புத்துணர்வு
        தலைவன்-தலைவி என்னுமோர் “அக” வாழ்க்கை!

    • Kannabiran Ravi Shankar (KRS) 4:27 am on November 15, 2013 Permalink | Reply

      //ஊரடங்கு தளர்த்தி, வரிகள் தளர்த்தி
      உடைகள் தளர்த்திட வேண்டுமில்லையா//

      என்னவொரு அழகு “தளர்த்தல்” வரிகளில்:)

      //”காதல் பஞ்சம் வந்து நொந்தேனே
      முத்த நிவாரணம் எனக்கில்லையா?”//

      வாய் விட்டுக் கேட்டே விட்டாள்…
      நோய் விட்டுப் போகுமோ?

    • Uma Chelvan 8:34 pm on November 15, 2013 Permalink | Reply

      தலை வாழை இல்லை போட்டு இந்த அம்மா விருந்து வைக்குமாம் !! அவர் நல்லா சாப்பிட்டு விட்டு தூங்குவாரம் !!! what a stupid song !!!

    • rajinirams 12:47 am on November 16, 2013 Permalink | Reply

      செம பதிவு.மூன்று ஏக்கங்களை வெளிப்படுத்தி இறுதியில் காதல் ராஜ்ஜியத்தில் ஆடிப்பாடுவதாக சுபமாக முடித்து அருமையான பதிவை தந்துள்ளீர்கள். நாளை இந்த வேளை பார்த்து ஓடி வாநிலா.இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா பாடலும் பொருத்தமானதே. நன்றி.

  • என். சொக்கன் 9:09 pm on November 13, 2013 Permalink | Reply  

    ஆடும் கிளி 

    • படம்: அமுதவல்லி
    • பாடல்: ஆடைகட்டி வந்த நிலவோ
    • எழுதியவர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    • இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
    • பாடியவர்கள்: டி. ஆர். மகாலிங்கம், பி. சுசீலா
    • Link: http://www.youtube.com/watch?v=G8QcPKPYc2Y

    கிளைதான் இருந்தும், கனியே சுமந்து

    தனியே கிடந்த கொடிதானே,

    கண்ணாளனுடன் கலந்து ஆனந்தம்தான் பெறக்

    காவினில் ஆடும் கிளிதானே!

    பட்டுக்கோட்டையார் கிளை, கனி, கொடி என்று எதையெல்லாம் வர்ணிக்கிறார் என்று யோசித்தபடி அடுத்த வரிக்கு வாருங்கள், அதென்ன ‘காவினில்’ ஆடும் கிளி?

    தமிழில் ‘கா’ என்ற சொல்லுக்குச் சோலை அல்லது தோட்டம் என்று பொருள், காக்கப்படும் (வேலி போட்ட) தோட்டம் என்று விவரிக்கிறவர்களும் உண்டு.

    இந்தச் சொல் நமக்கு அதிகப் பழக்கமில்லாததாக இருக்கலாம். ஆனால், ‘காவிரி’ என்ற நதியின் பெயருக்கே ‘கா + விரி’, அதாவது, சோலைகளை விரித்துச் செல்லும் நீர்வளம் நிறைந்த ஆறு, அல்லது சோலைகளுக்குள் விரிந்து பரவும் ஆறு என்றெல்லாம் பொருள் சொல்கிறார்கள்.

    அப்போ காவேரி?

    அதுவும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. கவேர முனிவரின் மகள் என்பதால் அவளுக்குக் ‘காவேரி’ என்று பெயர் வந்ததாம். ஜனகன் மகள் ஜானகி, கேகயன் மகள் கைகேயி என்பதுபோல!

    பெயர் / அதற்கான காரணம் எதுவானால் என்ன? ஆற்றில் தண்ணீர் வந்தால் சரி. நீரால் அமையும் உலகு!

    ***

    என். சொக்கன் …

    13 11 2013

    346/365

     
    • amas32 7:43 pm on November 15, 2013 Permalink | Reply

      பூங்கா என்பத்தும் பூஞ்சோலை தான். ஒரே எழுத்தில் எத்தனை அழகியப் பொருளைத் தரும் ஒரு சொல்லைத் தமிழ் தருகிறது! தமிழ் வாழ்க 🙂

      amas32

  • mokrish 9:05 am on November 13, 2013 Permalink | Reply  

    வண்ண வண்ண சேலைங்க 

    விசாகா ஹரியின் பக்த சூர்தாஸ் கதா கச்சேரியில் கதை மெதுவாக பாடலுடன் விரிந்தது. முன்னுரையில் திரௌபதி குரல் கேட்டு எம்பெருமான் வருகிறார் என்ற நிகழ்வை பலர் அவரவர் உணர்ந்த விதத்தில் பாடிய அருமை பற்றி சொன்னார்.

    திரௌபதி – துகிலுரியப்படும் காட்சி என்றாலே எனக்கு டிவியில் பார்த்த பி ஆர் சோப்ராவின்  மகாபாரதம் நினைவுக்கு வரும். கிருஷ்ணர் -கையிலிருந்து மீட்டர் கணக்கில் வரும் பின்னி மில்  மஞ்சள் புடவை கண்ணில் தெரியும். இதுதான் பொதுவான விஷுவல்.

    பாரதியார் என்ன சொல்கிறார்? துச்சாதனன் பாஞ்சாலியின் துகிலை உரியத் தொடங்கினான். அவள் கண்ணனின் அருள் செயல்களைச் சொல்லி அவனை அழைத்து அடைக்கலம் புகுந்தாள். கண்ணன் அருளால் அவள்துகில் வளர்ந்து கொண்டேயிருந்தது.  அது வளர்ந்த விதத்தை உவமைகளை அடுக்கிச் சொல்கிறார்.

    பொய்யர்தம் துயரினைப் போல் – நல்ல

             புண்ணியவாளர்தம் புகழினைப்போல்

    தையலர் கருணையைப் போல் – கடல்

             சலசலத் தெறிந்திடும் அலைகளைப்போல்

    பெண்ணொளி வாழ்த்திடுவார்-அந்தப்

             பெருமக்கள் செல்வத்தின் பெருகுதல்போல்

    வண்ணப் பொற் சேலைகளாம் – அவை

             வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே !

    வாலியும்  பாண்டவர் பூமியில் பாஞ்சாலி கண்ணா கமலபூங்கண்ணா! என்று சீதரனை விளித்தாள். உடனே

    இருளினால் செய்த

    எழில்மேனியன் -எங்கிருந்தோ

    அருளினான்

    ஆடைமேல் ஆடைமேல்

    ஆடைமேல் ஆடைமேல்

    ஆடையாய் இடைவிடாது

    சங்கம்; சக்கரம்

    தங்கும் தனது

    கைத்தறியில் – உடை நெய்து

    கையறு பெண்ணுக் கனுப்பிட

    என்ற வரிகளில் அவன் பல புடைவைகள்  அனுப்பினான் என்றே சொல்கிறார்.

    வைரமுத்து சலங்கை ஒலி படத்தில் வான் போலே வண்ணம் என்ற பாடலில் (இசை இளையராஜா பாடியவர்கள் எஸ் பி பி, எஸ் பி ஷைலஜா) ஒரு ட்விஸ்ட் சொல்கிறார். கன்னியருடன் விளையாடியவன், பெண்களோடு அலைந்தவன் கோபியரின் சேலைகளை எடுத்தது பாஞ்சாலி கேட்கும்போது கொடுப்பதற்காகவே  என்று ஒரு cinematic ஜோடனை.

    http://www.youtube.com/watch?v=LkPxCJ5ux-c

    பெண்கள் உடை  எடுத்தவனே

    தங்கைக்கு உடை கொடுத்தவனே

    சேலைகளைத் திருடி அன்று செய்த லீலை பலகோடி

    ஆனால் சூர்தாஸ் deenan dukh haran dev santan hitkari என்ற பாடலில் சொன்னது சுவாரஸ்யமாக இருந்தது. துச்சாதனன் ஆடையை பிடித்து இழுக்கும் போது அவள்  ‘கிருஷ்ணா கிருஷ்ணா என்று கதறி வேண்டுகிறாள். உடனே கிருஷ்ணர் அங்கே வந்து தன்னையே அவளுக்கு ஆடையாக அளிக்கிறார் என்று சொல்கிறார்.

    http://www.youtube.com/watch?v=ayX_wJ8otVM

    கண்ணதாசன் பூவும் பொட்டும் படத்தில் எழுதிய பாடலில் (இசை கோவர்தனம்  பாடியவர் பி சுசீலா)

    http://www.inbaminge.com/t/p/Poovum%20Pottum/Ennam%20Pola%20Kannan%20Vanthan.eng.html 

    எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா

    பெண்மை வாழ தன்னை தந்தான் அம்மம்மா

    என்ற வரிகளில் பெண் மானம் காக்க கண்ணன் தன்னையே தந்தான் என்கிறார். மீட்டர் கணக்கில், பல வண்ணங்களில் சேலைகள் என்பது வழக்கமான விளக்கம். சூர்தாசரும் கண்ணதாசரும் சொல்வது கண்ணனின் பெருமை.

    மோகனகிருஷ்ணன்

     
    • rajinirams 5:43 pm on November 13, 2013 Permalink | Reply

      பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்-பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான் என்ற கவியரசர் “பெண்மை வாழ தன்னை தந்தான்” என்ற ஒரு வரியிலேயே அசத்தி விட்டாரே…அருமையான பதிவு.

    • Uma Chelvan 8:10 pm on November 13, 2013 Permalink | Reply

      very nice reply rajinirams.

      • rajinirams 10:14 pm on November 13, 2013 Permalink | Reply

        Uma Chelvan நன்றி

    • Uma Chelvan 8:27 pm on November 13, 2013 Permalink | Reply

      பாரதியார் கண்ணன் மீது கொண்ட அன்பு அளப்பரியது. So does ” Kanna…..Dasan”. When I look around and look back எல்லோருக்குமே கண்ணன் மீது ஒரு காதல் உண்டு.” கண்ணனை நினைக்காத நாளில்லையே ” ….ஆயினும் பாரதியின் காதல் உன்னதமானது , உயர்வானது !

      கண்ணன் எனது அகத்தே கால்வைத்த நாள்முதலாய்
      எண்ணம் விசாரம் எதுவும் அவன் பொறுப்பாய்ச்
      செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,
      கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம்,
      தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்
      ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண்!….

      .மிக தெளிவான , அழகான பாரதியின் கவிதை கண்ணனை பற்றி .

      • mokrish 8:17 am on November 14, 2013 Permalink | Reply

        பாரதியார் கண்ணன் மீது கொண்ட அன்பு அளப்பரியது. தல் உண்டு.” கண்ணனை நினைக்காத நாளில்லையே ” ….

      • mokrish 8:23 am on November 14, 2013 Permalink | Reply

        பாரதியார் கண்ணன் மீது கொண்ட அன்பு அளப்பரியது – அதில் எனக்கு சந்தேகமே இல்லை.

    • amas32 7:47 pm on November 15, 2013 Permalink | Reply

      சூர்தாசரும் கண்ணதாசரும் உட்பொருள் ஆராய்ந்து விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அதுவே உண்மை நிலை. மீட்டர் மீட்டரா துணி நீண்டு வருவது ஒரு figure of speech தான்.

      amas32

  • G.Ra ஜிரா 7:30 pm on November 11, 2013 Permalink | Reply  

    தமிழ் லாலி, தெலுங்கு லாலி 

    ஒரு மொழிப் பாடலை இன்னொரு மொழியில் எழுதுவது அவ்வளவு எளிமையானதா? இல்லை என்பதே என் பதிலாக இருக்கும்.

    தெர தீயக ராதா… நாலோனி
    திருப்பதி வேங்கடரமணா.. மத்சரமுனு
    தெர தீயக ராதா

    மேலே குறிப்பிட்ட தியாகராஜ கீர்த்தனையை மொழிபெயர்க்கும் முயற்சியில் கீழே உள்ளவாறு எழுதினேன்.

    திரை விலகலா…காதா… எந்தன்
    திருப்பதி வெங்கடரமணா இட..ரென்னும்
    திரை விலகலா…காதா (விலகலா…காதா = விலகல் ஆகாதா)

    இந்த மொழிபெயர்ப்பு முழுவதும் சரியானதா என்றால் இல்லை என்பதே பொருள். மத்சரம் என்ற சொல்லுக்கு இடர் என்று எழுதியிருக்கிறேன். ஆனால் மத்சரமெனும் என்று எழுதினால் தமிழ்ப் பாட்டைப் போல இருக்காது. அதே நேரத்தில் மெட்டுக்குள்ளும் சொற்கள் உட்கார வேண்டும். நேரடியாக ஒரு மொழியில் பாட்டெழுதுவதை விட மொழிமாற்றுப் பாட்டெழுதுவதில் சிரமம் சற்று அதிகம்.

    பல நேரங்கள் பாடலில் தமிழ் மொழிக்கு ஏற்ற வகையில் வரிகளையோ சொற்களையோ தேவைப்பட்டால் பொருளையோ கவிஞர்கள் மாற்றிவிடுவார்கள். தப்பில்லை. கதையோட்டத்துக்கு பொருத்தமாக இருக்கும் வரையில் சரிதான்.

    ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். சிப்பிக்குள் முத்து திரைப்படத்தில் இடம் பெற்ற வரம் தந்த சாமிக்கு என்ற பாடல் தமிழகத்தில் மிகப்பிரபலம். ஆனால் அந்தப் பாட்டு நேரடித் தமிழ்ப் பாட்டல்ல. அது சுவாதி முக்தயம் என்ற தெலுங்குப் படத்தின் மொழிமாற்று வடிவம்.

    தெலுங்குக் கவிஞரான டாக்டர்.சி.வி.நாராயண ரெட்டி எழுதிய தெலுங்கு வரிகளும் மிக அற்புதமானவை. கிட்டத்தட்ட ஆழ்வார்த்தனமான வரிகள். கிருஷ்ணனுக்கு நீராட்டுவதாக எண்ணிக் கொண்டு பாடுவது போன்ற வரிகள்.

    வடபத்ரசாயிக்கு வரஹால லாலி
    ராஜீவ நேத்ருனுக்கி ரத்னால லாலி
    முரிப்பால கிருஷ்ணுனிக்கி முத்யால லாலி
    ஜகமேல தேவுனுக்கி பகடால லாலி

    இது மட்டுமல்ல பாடல் முழுக்க கல்யாணராமுனிக்கி, யதுவம்ச விபுனிக்கி, கரிராஜமுகனிக்கி, பரமான்ஷ பாவுனிக்கி, அலமேலு பதிக்கி, கோதண்ட ராமுனிக்கி, ஷ்யாமளாங்குனிக்கி, ஆகமருதுனிக்கி என்று அடுக்கிக் கொண்டே போவார் கவிஞர் நாராயண ரெட்டி.

    இதை அப்படியே தமிழ்ப்படுத்தினால் என்னாகும்? தமிழில் இல்லாத கிருஷ்ணபக்தியா? ஆனால் இங்கு அதுவல்ல பிரச்சனை. பாட்டு வரிகள் மெட்டுக்குள்ளும் உட்கார வேண்டும். அதே நேரத்தில் தாலாட்டவும் வேண்டும்.

    வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
    இராஜாதி இராஜனுக்கு இதமான லாலி
    குறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி
    ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி

    தெலுங்கு வரிகளுக்கும் தமிழ் வரிகளுக்கும் தொடர்பே இல்லை என்பதே உண்மை. ஆனால் மெட்டுக்கு ஒத்துப் போகும் சொற்கள். அத்தோடு சாதாரண ரசிகனுக்கும் புரிகின்ற வரிகள்.

    தெலுங்கில் முழுக்க முழுக்க கிருஷ்ணலாலியாக இருந்த பாடல் தமிழ்நாட்டுக்கு வரும் போது தமிழ் பூசிக் கொள்கிறது.

    கருயானை முகனுக்கு மலையன்னை நானே
    பார் போற்றும் முருகனுக்குப் பார்வதியும் நானே

    ”என்னதிது… இப்படியெல்லாம் செய்யலாமா? நியாயமா? முறையா? தகுமா? சரியா?” என்று என்னைக் கேட்டால் “தவறேயில்லை” என்றுதான் சொல்வேன்.

    ஏனென்றால் ஒரு பாடல் எழுதுகின்றவர்களாக இல்லை. பாடலைக் கேட்பவர்களுக்கானது. அந்த வகையில் இது போன்ற தமிழ்ப் படுத்துதல்கள் ஏற்புடையதே என்பதென் கருத்து.

    ஒருவேளை பொருளைச் சிறிதும் மாற்றாமல் மொழிமாற்றியிருந்தால் அந்த வரிகள் கேட்கும் தமிழ் மக்களுக்கு அன்னியமாகப் போகவும் வாய்ப்புள்ளது.

    பாட்டை விடுங்கள். தெலுங்கில் படத்தின் பெயர் சுவாதி முக்தயம். அதாவது சுவாதி நட்சத்திரத்தில் உருவான முத்து என்று பொருள். ஆனால் தமிழில் அதுவா படத்தின் பெயர்? இல்லை. சிப்பிக்குள் முத்து என்ற அழகானதொரு பெயரைப் பெற்றது.

    அதனால்தான் என்னுடைய மனது மொழிமாற்றுப் பாடல்களை எழுதும் போது கவிஞர்கள் எடுத்துக் கொள்ளும் இந்த மாதிரியான சுதந்திரங்களை அங்கீகரிக்கிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

    பாடல் – வரம் தந்த சாமிக்கு
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – சிப்பிக்குள் முத்து
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=eyKKmps9Z9Y

    அன்புடன்,
    ஜிரா

    344/365

     
    • bganesh55 8:13 pm on November 11, 2013 Permalink | Reply

      உங்கள் கருத்துடன் முழுவதும் ஒத்துப் போகிறது என் கருத்து! வரிக்கு வரி அப்படியே மொழிபெயர்ப்பதை விட, இப்படி அந்தந்த மொழிக்குரிய தனித்தன்மையுடன் எளிமையாக, கேட்பவரின் மனதில் பச்சக்கென ஒட்டிக் கொள்ளும் வகையிலான பாடல்களே மனதில் என்றும் நிற்கும் ஸார்!

    • rajinirams 10:03 am on November 12, 2013 Permalink | Reply

      வரம் தந்த சாமிக்கு பதமான லாலி-நீங்கள் கூறியது போல டப்பிங் படங்களுக்கு பாடலின் சூழலுக்கு மட்டுமல்ல-அவர்கள் ஏற்கனவே செய்த உதட்டசைவுக்கு ஏற்றார் போல் எழுதுவது மிக கடினமான ஒன்றே-என்றாலும் நம் கவிஞர்கள் அந்த திறமையையும் பல படங்களில் காட்டிவிட்டார்கள்.”உதயம்,இதயத்தை திருடாதே.சலங்கை ஒலி ,உயிரே -இப்படி. அருமையான பதிவு.

    • Uma Chelvan 10:32 am on November 12, 2013 Permalink | Reply

      நீங்கள் சொல்வது போல், பாடல் கேட்பவர்களுக்கு ஆனது. பாடல் வரிகளை மாறாமல் கொடுத்தால் என்னை போல தமிழ் தவிர வேறு மொழி தெரியாதவர்களுக்கு மிகவும் கஷ்டம். வார்த்தைகள் இல்லாத போது வேண்டுமானால் அதை அப்படியே கொடுக்கலாம். Instrumental music அல்லது உயிரை உருக்கும் Pakistani folk music alap லில் எதுவும் மாற்ற தேவை இல்லை. அனால் வார்த்தைகளுடன் வரும் பொழுது அந்தந்த மொழிகளில் இருப்பதுதான் சிறப்பு.

    • amas32 8:03 pm on November 15, 2013 Permalink | Reply

      சூப்பர் பாட்டு. பாமர வர்க்கத்தைச் சேர்ந்த நான் அனுபவித்துக் கேட்கும் பாடல் இது. எனக்கு அதன் தெலுங்கு nuances எல்லாம் தெரியாது 🙂 தமிழ் வரிகள் அவ்வளவுப் பிடிக்கும், ராகமும் பாடலும் தேவகானம் 🙂

      அது தானே ரசிகனுக்குத் தேவை 🙂

      amas32

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel