Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • என். சொக்கன் 10:50 pm on November 18, 2013 Permalink | Reply  

    உத்தரவின்றி உள்ளே வா 

    • படம்: ஜில்லுன்னு ஒரு காதல்
    • பாடல்: முன்பே வா
    • எழுதியவர்: வாலி
    • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
    • பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்
    • Link: http://www.youtube.com/watch?v=OHA_ATdgw_g

    நீ நீ மழையில் ஆட,

    நான் நான் நனைந்தே வாட,

    என் நாளத்தில் உன் ரத்தம்,

    நாடிக்குள் உன் சத்தம்!

    பள்ளியில் தமிழ் மீடியத்தில் அறிவியல் (அல்லது உயிரியல்) படித்தவர்களுக்கு இந்த வரிகளைப் படித்தவுடன் சட்டென்று அந்த ‘நாளம்’ என்ற சொல்லில் மனம் சென்று நிற்கும்.

    ’ரத்தக் குழாய்’ என்று நாம் பரவலாகச் சொல்லும் அதே வார்த்தைதான். ’ரத்த நாளம்’ என்று சொன்னால் இன்னும் அழகாக இருக்கிறது. நாளத்திற்கும் குழாய்க்கும் ஏதேனும் நுட்பமான வேறுபாடு உண்டா என்று தெரியவில்லை.

    அப்புறம் அந்த நாளமில்லாச் சுரப்பிகள்? தமனி? சிரை? தந்துகி? இந்த வார்த்தைகளையெல்லாம் கேட்கும்போது, மறுபடி ஒன்பதாங்கிளாஸுக்குத் திரும்பிவிடமாட்டோமா என்றிருக்கிறது!

    விஷயத்துக்கு வருவோம். நம் உடம்பு நிறைய இருக்கும் ரத்த நாளங்கள் பேச்சிலோ, சினிமாப் பாடல்களிலோ அதிகம் வருவதில்லை என்று நினைத்தேன். கொஞ்சம் தேடினால் ஒரு சில நல்ல உதாரணங்கள் சிக்கின:

    உயிர் உருகிய அந்த நாள் சுகம்,

    அதை நினைக்கையில்,

    ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் (வாலி)

    ***

    நாளங்கள் ஊடே

    உனதன்பின் பெருவெள்ளம் (மதன் கார்க்கி)

    ***

    ரத்த நாளங்களில் போடும் தாளங்களில்

    புதுத் தாலாட்டுதான் பாடுமா? (பொன்னியின் செல்வன்)

    ***

    மேளங்கள் முழங்குதுங்க, ரத்த

    நாளங்கள் துடிக்குதுங்க (டி. ராஜேந்தர்)

    ***

    ஒரே ஒரு ஆச்சர்யம், ”அறிவியல் கவிஞர்” வைரமுத்து இந்தச் சொல்லை இதுவரை பயன்படுத்தவில்லையோ?

    ***

    என். சொக்கன் …

    18 11 2013

    351/365

     

     
    • Uma Chelvan 6:52 am on November 19, 2013 Permalink | Reply

      நாளமில்லாச் சுரப்பிகள்……..endocrine glands ….that’s what I taught my students today. What a coincident….

      அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை!!
      அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும் -அது போல்
      இந்த நாள் வரும் உயிர் உருகிய அந்த நாள் சுகம். – அதை நினைக்கையில்
      ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் ………ஒரு நிமிஷம் கூட என்னை பிரியவில்லை

      மிக மிக அருமையான பாடல். இதை தான் முதல் பாடலாக நீங்க சொல்லி இருக்கீங்க!!! still I want to post this song again !!!

    • amas32 8:37 pm on November 19, 2013 Permalink | Reply

      எவ்வளவு ஆராய்ச்சிப் பண்ணியிருக்கீங்க ஒரு பதிவுக்கு! வைரமுத்து இந்த சொல்லை பயன்படுத்தவில்லை என்னும் அளவுக்கு research!

      //என் நாளத்தில் உன் ரத்தம்,// very romantic!

      ரொம்பப் பிடிச்சிருக்கு இந்த போஸ்ட் 🙂

      amas32

    • rajinirams 11:28 am on November 20, 2013 Permalink | Reply

      நல்ல பதிவு. என்ன அருமையான வாலியின் வரிகள் -உயிர் உருகிய அந்த நாள் சுகம்,அதை நினைக்கையில்,ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்,நீங்கள் சொன்னது போல வைரமுத்து அந்த வார்த்தையை உபயோகிக்காதது ஆச்சர்யமே.

    • நவநீதன் 9:34 pm on January 29, 2014 Permalink | Reply

      ”வந்து தூறல் போடு… இல்லை சாரல் போடு… எந்தன் நாளம் நனையட்டுமே…”

      வைரமுத்து

      படம்: க.கொ.க.கொ
      பாடல்: ஸ்மை யாயி..

  • என். சொக்கன் 9:23 pm on November 10, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு: இரட்டைப் பிறவிகள் 

    தாமரை இலை-நீர் நீதானா?
    தனியொரு அன்றில் நீதானா?|
    புயல் தரும் தென்றல் நீதானா?
    புதையல் நீதானா?
     
    பாடல்: கருகரு விழிகளால்
    படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
    இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
    பாடலாசிரியர்: தாமரை
    பாடியவர்: கார்த்திக்
     
    தலைவன் தலைவியை மையப்படுத்தி எண்ணற்ற சங்ககாலப் பாடல்கள் வந்திருக்கும். சில திரைப்பாடல்களிலும் உவமையாக அவ்வப்போது தலை காட்டுவது வழக்கம். தாமரை இலை-நீர் என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த உவமை. (ஒட்டியும்-ஒட்டாமலும்)

    தனியொரு அன்றில் என்றால்?

    இதற்கும் சங்கப் பாடல்களில் குறிப்புகள் உள்ளன. அன்றில் என்பது ஓருடல்-இருதலையாக வாழும் பறவை என்று பஞ்சதந்திரக்கதைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சங்ககாலப் பாடல்களில், இணைபிரியாதிருக்கக் கூடிய பறவைகள் என்கிற அர்த்தத்தில் (இரண்டில் ஒன்று இறந்தால், மற்றொன்று(ம்) இறக்கும். அல்லது சோகத்தோடு வாழும் ) பாடல்கள் உள்ளன.

    அன்றில் போல் ‘புன்கண் வாழ்க்கை’ வாழேன்  (நற்றிணை-124 | மோசிகண்ணத்தனார்)

    கவிஞர் வைரமுத்து கூட, ஒரு பாடலில் (கண்ணோடு காண்பதெல்லாம்/ஜீன்ஸ்/ ஏ.ஆர்.ரஹ்மான்)
    “அன்றில் பறவை ரெட்டைப்பிறவி
    ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
    பிரியாதே..விட்டுப்பிரியாதே”
    என்று எழுதியிருக்கிறார்.
    சாத்தியமோ, இல்லையோ ஆனால் (இணை) பிரியாத வரம் வேண்டும்தானே?
    தமிழ்

    நான் தமிழ். @iamthamizh என்கிற பெயரில் ட்விட்டரில் எழுதுகிறேன்.

    பயணப்படுதலும் அதன் சுவாரசியங்களும் மிகப் பிடிக்கும். பயணப்படுதலின் பொருட்டு பாடல்கள் கேட்கத் துவங்கிய இப்போது அவை குறித்து எழுதியும் வருகிறேன்.

    பார்க்க:

    thamizhg.wordpress.com

    isaipaa.wordpress.com

     
    • rajinirams 10:14 am on November 11, 2013 Permalink | Reply

      சங்கப்பாடல்,திரைப்பாடல் கொண்டு “அன்றில் பறவை”யின் சிறப்பை விளக்கிய அருமையான பதிவு-வாழ்த்துக்கள் “தமிழ்”.

    • amas32 7:18 pm on November 11, 2013 Permalink | Reply

      “அன்றில் பறவை” பாட்டில் கேட்டிருந்தும் கவனித்து அர்த்தம் யோசித்ததில்லை. நல்ல ர்டுத்துக்காட்டுக்களுடன் விளக்கி உள்ளீர்கள் 🙂

      சங்க இலக்கியங்களில் தான் எவ்வளவு இருக்கின்றன! படித்துப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.

      நன்றி

      amas32

  • G.Ra ஜிரா 9:47 pm on October 27, 2013 Permalink | Reply  

    உரசிவிட்டேன் சந்தனத்தை! 

    மேகத்த தூது விட்டா
    தெச மாறிப் போகுமோன்னு
    தண்ணிய நான் தூது விட்டேன்
    தண்ணிக்கு இந்தக் கன்னி
    சொல்லி விட்ட சேதியெல்லாம்
    எப்ப வந்து தரப்போற
    எப்ப வந்து தரப்போற

    இசையரசி பி.சுசீலாவின் குரல் தேனாறாய் ஓடிக் கொண்டிருந்தது. எல்லாருக்கும் தெரிந்த பாட்டுதான். அச்சமில்லை அச்சமில்லை திரைப்படத்தில் வி.எஸ்.நரசிம்மன் இசையில் வைரமுத்துவின் வைரவரிகள்.

    மேகம் வானத்தில் மிதந்து போகும். காற்றடித்து திசை மாறிப் போய் விட்டால் அத்தானுக்கு அனுப்பிய சேதியும் திசை மாறிப் போய்விடுமல்லவா! அதுதான் அவளது கவலை. அதனால்தான் மேகத்துக்கு பதிலாக பழகிய வழியில் ஓடிக் கொண்டிருக்கும் ஆற்று நீரை தூதாக அனுப்பினாள் அந்தப் பெண்.

    ஆனால் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகும் ஒரு யட்சனுக்கு அந்தக் கவலை எல்லாம் இல்லை. மோகங்களைத் தூதனுப்ப அவன் நம்பியது தாகங்கள் கொண்டு நீர் குடித்த மேகங்களைத்தான்.

    யார் இந்த யட்சன்?

    செல்வத்துக்கெல்லாம் அதிபதி குபேரன். அந்தக் குபேரன் இருப்பது இமயமலையில் உள்ள அளகாபுரி. அந்த அளகாபுரியில் ஒரு ஏரி. அதற்கு மானச ஏரி (மானசரோவர்) என்று பெயர். செல்வத் திருநாட்டின் ஏரி என்பதாலோ என்னவோ… அந்த ஏரியில் பூக்கும் தாமரை மலர்கள் கூட தங்கத் தாமரைகளா இருக்கின்றன. பறவைகளும் பொற்பறவைகளே!

    அந்த ஏரியைக் காவல் காக்க வேண்டிய பொறுப்பில் இருந்தவன் தான் நாம் பார்க்கும் யட்சன். அன்றொரு நாள் அவன் காவல் காத்துக்கொண்டுதான் இருந்தான். இரவு வந்தது. மனதில் உறவின் நினைவு வந்தது. முதலில் உடம்பை விட்டுவிட்டு மனம் மட்டும் மனைவியிடம் சென்றது. பின்னர் மனம் போன வழியிலேயே உடம்பும் போனது.

    அவன் போன நேரம் பார்த்து அந்தப் பக்கம் வந்தன சில யானைகள். ஏரிக்குள் இறங்கி விளையாடின. அந்த விளையாட்டில் தங்கத் தாமரைகள் சிதைந்து போயின. பொற்பறவைகள் பறந்து போயின. அத்தோடு ஏரி சிதைந்த சேதியும் குபேரனுக்குப் பறந்தது.

    அந்த யட்சனை அழைத்தான்.

    “கடமை தவறிய யட்சனே! உன்னால் அல்லவோ ஏரி கலங்கியது. தாமரைகள் அழிந்தன. எதை நினைத்து நீ கடமையை மறந்தாயோ அதைப் பிரிந்து ஓராண்டுகாலம் ராமகிரி காட்டுக்குள் வசிப்பாயாக. இதுவே உனக்குத் தண்டனை”

    அந்த சாபத்தினால் காட்டுக்கு வந்தவனே நாம் முன்னம் சொன்ன யட்சன். அது ஆடி மாதம் வேறு.

    காட்டுக்கு வந்தாலும் வீட்டு நினைப்புதான் அவனுக்கு. மெல்லியலாள் இன்சொல்லாள் தேனிதழாள் நினைப்பு அவனை வாட்டி வதைத்தது. அந்த வேதனையில் அவன் உள்ளத்தில் பிறந்த ஏக்கங்களையெல்லாம் மனைவிக்குச் சொல்ல விரும்பினான்.

    யாரிடம் சொல்லி அனுப்புவது. அந்தரங்கமான ஏக்கங்கள் அல்லவா? ஜிமெயிலோ மொபைல் போனோ இல்லாத காலம் அது. மனிதர்களிடம் சொல்லியனுப்ப முடியாது. அப்போது அவன் கண்ணில் பட்டவைதான் மேகங்கள்.

    அவன் இருந்த அதே மனநிலையில்தான் அவன் மனைவியும் இருந்தாள். அந்தப் பெண்ணின் மனநிலையை நினைக்கும் போது எனக்கு கவிஞர் தாமரை எழுதிய பாடல் நினைவுக்கு வருகிறது.

    தூது வருமா தூது வருமா
    காற்றில் வருமா கரைந்து விடுமா
    கனவில் வருமா கலைந்து விடுமா
    …………….
    கருப்பிலே உடைகள் அணிந்தேன்
    இருட்டிலே காத்துக்கிடந்தேன்
    யட்சன் போலே நீயும் வந்தாய்
    ………………
    மறுபடி வருவாய் என்று துடித்தேன்
    நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன்
    பிரிய மனமில்லை
    இன்னும் ஒரு முறை வா…..

    தன்னுடைய மனைவியின் ஏக்கங்களைப் புரிந்த கணவனால்தான் தன்னுடைய ஏக்கங்களை வெளிக்காட்ட முடியும். நாம் பார்த்துக் கொண்டிருக்கும் யட்சனும் அந்த வகைதான். காட்டில் இருந்த போது அந்த வழியாக வந்த மேகங்களை அழைத்து தன் ஏக்கங்களை தூது விடுகிறான். ஒருவேளை அந்த மேகங்கள் வழி மாறிப் போய்விட்டால்?

    அதற்காகத்தான் அவன் போகும் வழியையும்… போவது சரியான வழிதானா என்பதை உறுதி செய்யும் அடையாளங்களையும் சொல்லியே மேகங்களை தூதனுப்புகிறான்.

    இதுதான் காளிதாசர் எழுதிய மேகதூதத்தின் கதை.

    ஒவ்வொரு பாடலும் அதன் பொருளும் மிக அழகானவை. ஒரு சிறு பகுதியை உங்களுக்காக ஆங்கில மொழிபெயர்ப்பின் உதவியோடு தமிழாக்கம் செய்து தருகிறேன்.

    “மேகங்களே, கடம்ப மலர்கள் பூத்த நிச்ச மலையில் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு வடக்கே செல்க. அங்கே நாகநதி வரும். ஓட்டத்தில் அது வேகநதி. அங்கிருக்கும் வெயிலுக்கு அது தாகநதி.

    அந்த நதிக்கரையிலே, அல்லி மலர்களைக் கிள்ளி மெல்லிய செவித்துளையில் தள்ளி கம்மலாக அணிந்து கொண்டு துளித்துளியாய் வியர்வை வழிய துள்ளித் துள்ளி ஓடுகிறாள் பூ விற்கும் இளம்பெண். நீ போகும் வழியில் அவளுக்கும் சற்று நிழல் தந்து களைப்பை நீக்குவாயாக!”

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர்கள் – இசையரசி பி.சுசீலா, மலேசியா வாசுதேவன்
    இசை – வி.எஸ்.நரசிம்மன்
    படம் – அச்சமில்லை அச்சமில்லை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=w_obVXcywTo

    பாடல் – தூது வருமா தூது வருமா
    வரிகள் – கவிஞர் தாமரை
    பாடியவர் – சுனிதா சாரதி
    இசை – ஹாரிஸ் ஜெயராஜ்
    படம் – காக்க காக்க
    பாடலின் சுட்டி – http://youtu.be/BFv9wo4s4jw

    அன்புடன்,
    ஜிரா

    329/365

     
    • Uma Chelvan 10:28 pm on October 27, 2013 Permalink | Reply

      நீரும் மாறும் நிலமும் மாறும்
      அறிவோம் கண்ணா !!!!
      மாறும் உலகில் மாறா இளமை
      அடைவோம் கண்ணா !!!!

      மேகத்தையும் நீரையும் போல எண்ணங்களையும் தூது விடலாம். In fact, thoughts travel faster then clouds and water !!!!!

      ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே ……ஓடோடி சென்று காதல் பெண்ணின் உறவை சொல்லுங்களே !

    • rajinirams 4:41 pm on October 28, 2013 Permalink | Reply

      யட்சனின் கதையை விளக்கி காளிதாசனின் மேகதூதத்தோடு கூடிய அருமையான “தூது”பதிவு. கிழக்கே போகும் ரயிலின் தூது போ ரயிலே பாடலும் உயிருள்ள வரை உஷாவின் வைகை கரை காற்றே நில்லு வஞ்சிதனை பார்த்தால் சொல்லு மன்னன் மனம் வாடுதென்று மங்கை தனை தேடுதென்று காற்றே பூங்காற்றே அவள் காதோரம் போய் சொல்லு வரிகளும் தூது சொல்ல ஒரு தோழி பாடலும் நினைவிற்கு வருகின்றன.நன்றி.

    • Saba-Thambi 12:56 pm on October 29, 2013 Permalink | Reply

      உங்கள் பதிவு வைரமுத் து எழுதிய ஓர் பாடலையும் நினைவுக்கு தருகிறது.
      இங்கு முகவரியை தொலைத்து விட்ட மேகமாக……

      முகிலினங்கள் அலைகிறதே
      முகவரிகள் தொலைந்தனவோ
      முகவரிகள் தவறியதால்
      அழுதிடுமோ அது மழையோ

      @2.5 நிமிடம்

      சுட்டி:

  • G.Ra ஜிரா 4:50 pm on September 23, 2013 Permalink | Reply  

    இன்னொரு நேசம் 

    அவனுக்கும் முன்பு திருமணம் ஆகியிருந்தது. அவளுக்கும் திருமணம் ஆகியிருந்தது. மனைவியைப் பறிகொடுத்தவன் அவன். கணவனால் துன்புறுத்தப்பட்டவள் அவள். கையிலோ சிறு குழந்தை.

    ஏதோவொரு நெருக்கம். ஏதோவொரு ஏக்கம். சாப்பிட்டவர்களுக்கு திரும்பத் திரும்பப் பசிக்கும் என்பது உலகவிதியல்லவா! சாப்பிடாமல் இருப்பதும் தவறல்லவா!

    தலைவாழையிலையிருக்கிறது. இலையில் பலவகை உணவுகள் இருக்கின்றன. சாப்பிடும் ஆசையும் இருக்கிறது. நன்றாகச் சாப்பிடும் உடல்வாகும் இருக்கிறது. ஆனாலும் சாப்பாடு அப்படியே இருக்கிறது.

    கண்களில் பசி இருந்தாலும் கைகளில் ஏதோவொரு தயக்கம். ஆனால் இருவரும் பழகப் பழக அந்தத் தயக்கம் உடைகிறது. காதல் புரிகிறது.

    நான் சொல்லிக் கொண்டிருப்பது வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் உண்டாகும் பாடல் காட்சி.

    பொதுவாக தமிழ்ச் சமூகத்தில் ஆணுக்கு இரண்டாம் காதல் என்பது இரவு முடிந்து பகல் வருவது போல இயல்பானது. ஆனால் பெண்ணுக்கு? வந்துவிட்டதே. அதுவும் எப்படி?

    உயிரிலே எனது உயிரிலே
    ஒரு துளி தீயை உதறினாய்

    தீயை உதறினால் என்னாவகும்? பக்கென்று பற்றிக் கொள்ளும். அப்படித்தான் பற்றி எரிகிறது அவளது உயிர். தீயென்றால் அணைக்கத்தான் வேண்டும். அணைப்பதற்கு அவன் வரவேண்டுமே!

    அவன் வந்தான். ஆனால் அவள் உணர்வினில் வந்தான். ஒவ்வொரு அணுவிலும் கலந்தான். உணர்வில் மட்டும் கலந்தால் போதுமா?

    உணர்விலே எனது உணர்விலே
    அணுவென உடைந்து சிதறினாய்

    பக்கத்தில்தான் அவன் இருக்கிறான். ஆனால் தொடமுடியவில்லை. கடலுக்கும் வானத்துக்கும் இடையே எவ்வளவோ தூரம். ஆனாலும் ஒன்றையொன்று தொட்டுக்கொள்கின்றன. முட்டிக் கொள்கின்றன.

    அருகினில் உள்ள தூரமே
    அலைக்கடல் தீண்டும் வானமே

    சுவாசிப்பதற்கு கூட காற்று வேண்டும். ஆனால் நேசிக்கத்தான் இதயத்தைத் தவிர எதுவுமே தேவையில்லை. அந்த நேசம் கூட ஒருமுறை மட்டும் தான் வரவேண்டுமா? மறுமுறை வரக்கூடாதா? காதல் போயின் சாதல் மட்டும் தானா? ஒருமுறைதான் காதல் வரும் என்பதுதான் தமிழ்ப் பண்பாடா? இல்லையென்றால் கண்ணதாசன் சொன்னது போல் மறுபடியும் வருமா?

    நேசிக்க நெஞ்சம் ரெண்டு போதாதா!
    நேசமும் ரெண்டு முறை வாராதா!

    காதல் வந்தாலும் கூடவே பண்பாட்டுக் கவலைகளும் ஒட்டிக் கொண்டு வந்துவிடும். அதுவும் குறிப்பாக பெண்களுக்கு. அவளுக்கும் அந்தக் கவலை உண்டு.

    ஏதோ ஒன்று என்னைத் தடுக்குதே
    பெண்ணாடீ நீ என்று முறைக்குதே
    என்னுள்ளே காயங்கள் ஆறாமல் தீராமல் நின்றேனே!

    தாமரை எழுதிய இந்தப் பாடலை படிக்கும் போது எனக்கு இன்னொரு திரைப்பாடல் நினைவுக்கு வருகிறது. மழலைப்பட்டாளங்கள் படத்தில் வரும் “கௌரி மனோகரியைக் கண்டேன்” என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடல்.

    அதிலும் கிட்டத்தட்ட இதே காட்சிதான். ஆறுகுழந்தைகளுக்குத் தாயான விதவைக்கும் ஆறு குழந்தைகளுக்கு தந்தையான மனைவியை இழந்தவனுக்கும் இடையே காதல் வருகிறது. அந்த நாயகியும் வேட்டையாடு விளையாடு நாயகியைப் போலத்தான் புலம்புகிறாள்.

    பருவங்கள் சென்றாலும் ராதை
    அவள் கவிராஜ சங்கீத மேதை
    கண் முன்பு அழகான ஆண்மை
    நான் கல்லல்ல கனிவான பெண்மை
    பண்பாடு என்பார்கள் சிலரே
    இந்தப் பெண் பாடு அறிவார்கள் எவரே
    என் பாடு நான் தானே அறிவேன்
    உயர் அன்போடு மனம் போல இணைந்தேன்

    இப்படியாக ஏக்கப் பெருமூச்சு நாயகிகளைக் காதலிக்காத விடாத பண்பாட்டையும் சமூகத்தையும் என்ன சொல்வது! காதலிக்க வேண்டியவர்களை காதலிக்க விடாததாலோ என்னவோ குழந்தைக் காதலும் பொறுப்பற்ற விடலைக் காதலுமே காதல் என்று ஆகிவிட்டது.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – உயிரிலே என் உயிரிலே
    வரிகள் – தாமரை
    பாடியவர் – ஸ்ரீநிவாஸ், மகாலஷ்மி ஐயர்
    இசை – ஹாரிஸ் ஜெயராஜ்
    படம் – வேட்டையாடு விளையாடு
    பாடலின் சுட்டி – http://youtu.be/vNy2IQ7RD-M

    பாடல் – கௌரி மனோகரியைக் கண்டேன்
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – வாணி ஜெயராம், எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – மழலைப் பட்டாளம்
    பாடலின் சுட்டி – http://youtu.be/rn7wDu5IOe0

    அன்புடன்,
    ஜிரா

    296/365

     
    • amas32 9:26 pm on September 24, 2013 Permalink | Reply

      தாமரையின் பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு பெண்ணினால் பெண்ணின் உணர்வை அழகாகச் சொல்ல முடியும். மேலும் பெண் கவிஞர்களே அரிது.

      ஆனால் கண்ணதாசனும் ஒரு பெண் கவிஞருக்கு ஈடாகவோ அதற்கும் மேலோ நீங்கள் குறிப்பிட்டுள்ளப் பாடலில் உணர்வுகளை விவரித்து இருக்கிறார்!

      //பண்பாடு என்பார்கள் சிலரே
      இந்தப் பெண் பாடு அறிவார்கள் எவரே
      என் பாடு நான் தானே அறிவேன்
      உயர் அன்போடு மனம் போல இணைந்தேன்//

      அற்புதமான வரிகள். கவியரசர் கவியரசர் தான்!

      amas32

    • Uma Chelvan 3:32 am on September 25, 2013 Permalink | Reply

      Nice and decent write up on a complicated subject. Kudos.

    • rajinirams 10:37 am on September 25, 2013 Permalink | Reply

      நீங்கள் எடுத்துக்கொண்ட பதிவும் அதற்கேற்ற பாடல்களும் வித்தியாசம் மட்டுமல்ல,சென்சிடிவான விஷயமும் கூட.மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.கவியரசரின் வரிகள் அற்புதம்,வைதேகி காத்திருந்தாள் படத்தின் வாலியின் வரிகளும் அருமையாக இருக்கும்-“தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று சங்கீதம் காணாமல் தவிக்கின்றது” என்று நாட்டிய பெண் அவர் மொழியில் பாடுவது போலவே எழுதியிருப்பார்.

  • G.Ra ஜிரா 7:51 pm on September 14, 2013 Permalink | Reply  

    இல்லமும் உள்ளமும் 

    1990களின் மத்தியில் வந்த ஒரு இந்திப் பாடல் திடீரென நினைவுக்கு வந்தது. எனக்கு மிகவும் பிடித்த பாடலும் கூட.

    Ghar se nikalte hi
    kuch door chalte hi
    Raste main hai uska ghar

    இந்த வரிகளின் பொருள் என்ன?

    வீட்டில் இருந்து புறப்பட்டு
    சற்று தொலைவு போனால்
    வழியில் அவள் வீடு உள்ளது

    மெட்டுக்குள் அழகாக உட்கார்ந்து கொண்ட இந்தி வரிகளை என்ன நினைத்து கவிஞர் எழுதினார் என்று யோசித்துப் பார்க்கிறேன். அவர் என்ன நினைத்தாரோ தெரியாது. ஆனால் எனக்கு இப்படித் தோன்றுகிறது.

    All roads lead to Rome என்று ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. எந்தச் சாலையில் போனாலும் அது ரோம் நகரத்துக்குச் செல்லும் என்பது அதன் பொருள். அதாவது ரோம் நகரம் அந்த அளவுக்குப் புகழ் வாய்ந்ததாம்.

    உலகத்துக்கு ரோம் நகரம் என்றால் அவனுக்கு அவள் வீடு. அவன் எந்தத் தெருவில் போனாலும் கால்களும் மனமும் அவனைக் கொண்டு சேர்க்கும் இடம் அவளுடைய வீடு. All roads lead to lover’s house.

    வீடு வரை உறவு என்று கண்ணதாசன் சொன்னதை உறவு இருக்கும் இடம் தான் வீடு என்று மாற்றிக் கொள்ளலாம்.

    ஜெண்டில் மேன் திரைப்படத்தில் செஞ்சுருட்டி ராகத்தில் “நாதவிந்து கலாதீநமோ நம” என்ற திருப்புகழின் சாயலில் அமைந்த பாடல் “என் வீட்டுத் தோட்டத்தில்” என்ற பாடல்.

    காதலி அவளுடைய காதலை அவளுடைய வீட்டுக்குச் சொல்லியிருக்கிறாள். வீடு என்றால்? தோட்டத்துப் பூக்கள், ஜன்னல் கம்பிகள், தென்னை மரங்கள், அந்த மரங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகிறாள்.

    என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்
    என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப் பார்
    என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப் பார்
    உன் பேரைச் சொல்லுமே!

    வீட்டில் உள்ளவர்களால் காதலுக்கு உதவி இருக்கிறதோ இல்லையோ. வீட்டால் உதவி இருக்கிறது. அவன் பெயரை அவள் அத்தனை முறை வீட்டிடமும் வீட்டில் இருக்கின்ற பொருட்களிடமும் சொல்லியிருக்கிறாள்.

    இதை வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் “நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை” பாடலில் இன்னும் அழகாகச் சொன்னார் கவிஞர் தாமரை.

    காதலன் தன்னுடைய காதலை காதலியிடம் சொல்கிறது போல காட்சியமைப்பு.

    நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
    நீருக்குள் மூழ்கிடும் தாமரை
    சட்டென்று மாறுது வானிலை
    பெண்ணே உன் மேல் பிழை

    ரசனை மிகுந்த வரிகள். தாமரை நீருக்குள் மூழ்குவதே இல்லை. வெள்ளத்து அணையது அதன் மலர் நீட்டம். ஆனால் காதல் வெள்ளம் பெருக்கெடுக்கும் போது தாமரையாவது தாவும் மரையாவது?

    அப்படிப் பட்ட காதலைச் சொல்லும் போது தன்னுடைய வீட்டைப் பற்றி அழகாகச் சொல்கிறான் அவன்.

    என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்

    அட! அசத்தி விட்டானே! ஆம். ஒருவருடைய வீட்டுக்குப் போனாலே அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். வீட்டை வைத்திருக்கும் பாங்கு மட்டுமல்ல… வீட்டில் இருப்பவர்களின் பாங்கினாலும்.

    இந்த ஒருவரியையே ஒரு நாள் ஒரு கனவு திரைப்படத்துக்காக ஒரு முழுப் பாடலாக்கித் தந்தார் வாலி. காதலன் காதலியை அவனுடைய வீட்டுக்கு கூட்டிச் செல்கிறான். அது வீடே அல்லது என்பது போல இருக்கிறது அவளுடைய அனுபவம். வீட்டில் மனிதர்கள் வாழ்கிறார்களா அல்லது தெய்வங்கள் குடியிருக்கின்றனவா என்று அவள் ஆனந்தமாக ஆச்சரியப்படுகிறாள்.

    ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன்
    அதுக்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்
    ஸ்ருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
    உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்

    திறந்த கதவு என்றும் மூடாது
    இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
    இது போல் இல்லம் ஏது சொல் தோழி

    வீடு என்ற சொல்லுக்கு என்ன பொருள் தெரியுமா? மிகமிகப் பழக்கமான சொல்தான். ஆனால் பொருள் பலருக்கும் தெரியாது. விடுவதனால் அது வீடு எனப்பட்டது. எதை விடுவதனால்? நமது துன்பங்களை விடுவதால் வீடு. நாம் துன்பங்களைப் படுவதால் அதற்குப் பெயர் பாடு. அது போல நாம் துன்பங்களை விடுவதால் அதற்குப் பெயர் வீடு.

    வாலி எழுதிய பாடலைப் போல ஒரு வீடு இருந்தால் துணிந்து காதலிக்கலாம். காதற்துணையையும் வீட்டுக்கு கூட்டிச் செல்லலாம்.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – என் வீட்டுத் தோட்டத்தில்
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுஜாதா
    இசை – ஏ.ஆர்.ரகுமான்
    படம் – ஜெண்டில்மேன்
    பாடலின் சுட்டி – http://youtu.be/Qg3uqQgizyI

    பாடல் – நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
    வரிகள் – கவிஞர் தாமரை
    பாடியவர் – ஹரிஹரன், தேவன், பிரசன்னா
    இசை – ஹாரிஸ் ஜெயராஜ்
    படம் – வாரணம் ஆயிரம்
    பாடலின் சுட்டி – http://youtu.be/QqI2woQjWK4

    பாடல் – காற்றில் வரும் கீதமே
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம், பவதாரிணி
    இசை – இளையராஜா
    படம் – ஒரு நாள் ஒரு கனவு
    பாடலின் சுட்டி – http://youtu.be/pnteqlhXlS4

    பாடல் – Ghar se nikhalte hi
    பாடியவர் – உதித் நாராயணன்
    பாடலின் சுட்டி – http://youtu.be/arK4ybYfH4k

    அன்புடன்,
    ஜிரா

    287/365

     
    • rajinirams 11:52 pm on September 14, 2013 Permalink | Reply

      இல்லத்தின் பெருமையை விளக்கும் அழகான பதிவு.கவியரசர் கண்ணதாசனின் அற்புத வரிகள்-இல்லம் சங்கீதம் அதில் ராகம் சம்சாரம்.கவிஞர் வாலியும் வீட்டை கோவிலாகவும் தன் பிள்ளைகளை தீபங்களாகவும் எடுத்துரைத்த வரிகள்-வீடு என்னும் கோவிலில் வைத்த வெள்ளி தீபங்களே-நாளை நமதே.ஒருவர் ஒரு வீட்டிற்கு புதிதாக போவதை வைத்தும் பாடல் உள்ளது-புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்-எங்க பாப்பா. இன்னொரு செண்டிமெண்டான பாடல்-வீடு தேடி வந்தது நல்ல வாழ்வு என்பது-பெண்ணின் வாழ்க்கை-வாலி எழுதியது.

    • Uma Chelvan 12:31 am on September 15, 2013 Permalink | Reply

      very nice write up!!!

      “மணி விளக்காய் நான் இருக்க! மாளிகையாய் தான் இருக்க” !!! தன் காதலனை மாளிகையாகவும் அதில் ஒளிரும் மணி விளக்காய் தன்னையும் …என்ன ஒரு அழகான, அருமையான உவமானம்!. வெள்ளி மணியாக ஒலிக்கும் சுசிலாவின் குரலில்!!

    • Uma Chelvan 5:36 pm on September 15, 2013 Permalink | Reply

      I tried to give the video link, instead the video clip it self is popping up due to some reason. I am sorry about that!!

    • amas32 9:24 am on September 17, 2013 Permalink | Reply

      அசத்திட்டீங்க ஜிரா இன்னிக்கு. அனைத்துப் பாடல்களும் அருமையான தேர்வு! வீடு என்று தமிழில் சொல்வது house என்ற பொருளிலும் இல்லம் என்பது home என்றும் கொள்ளலாமா? அன்புள்ள உறுப்பினர்கள் இருக்கும் வீடு அன்பான இல்லம் ஆகிறது. வீடு வெறும் கட்டிடம் தான். ஆனால் வீடு என்பது home என்ற பொருளில் தான் பெரும்பாலும் பயன்படுத்தப் படுகிறது.

      வீடு பேறு பெறுவதற்கு முதலில் நல்ல வீடு அமைந்து இல்லற சுகத்தை அனுபவித்துப் பின் துறக்க ரெடியாகலாம். நிறைய துறவிகள் இளம் வயதிலேயே மனம் பக்குப்படுவதற்கு முன்பே துறவறத்தை நாடி பின் பல வீடுகளை அழிக்க முற்படுகின்றனர். அவர்களுக்கு நிச்சயம் கிடைக்காது வீடு பேறு!

      amas32

  • mokrish 11:46 pm on August 14, 2013 Permalink | Reply  

    என்ன சத்தம் இந்த நேரம் 

    ஒரு நண்பருடன் கொஞ்ச நேரம்  பேசிக்கொண்டிருந்தேன்  அவர் பேச்சில் ஏதோ ஒன்று என் கவனத்தை ஈர்க்க, நிதானமாக யோசித்து  ரீவைண்ட் செய்து பார்த்தேன். அவர் டமால், டங்குன்னு, வெடுக்குனு, தொபுக், லொட லொட, சல்லுனு போன்ற வார்த்தைகள் போட்டே ஒவ்வொரு வாக்கியத்தையும் தொடுக்கிறார். பத்து நிமிடம் பேசினாலே அவரின் இந்த ஸ்டைல் தனியாகத் தெரியும்.

    தமிழ்நாட்டில் தினத்தந்தி பிரபலப்படுத்திய ‘சதக் சதக் என்று குத்தினான் குபுக்கென்று ரத்தம் வந்தது’ எல்லாரும் அறிந்தது. இது சித்திரக்கதைகளைப் படிப்பவர்களுக்கு பரிச்சயமான விஷயம். ஒரு பலூனில் Boom, whack, vroom போன்ற வார்த்தைகள் இருக்கும். இவை ஒலிக்குறிப்புச் சொற்கள். ஆங்கிலத்தில்  onomatopoeia. இது வார்த்தைகளோடு ஒலியையும் உணர்த்தும் ஒரு முறை. வார்த்தைகளே ஒலி போல் நடிக்கும்.

    திரைப்பாடல் எழுதும் கவிஞர்களுக்கு இந்த ஒலிக்குறிப்புச் சொற்கள் மேல் ஒரு அபார மோகம். கண்ணதாசன் பாசம் படத்தில் எழுதிய பாடல் ஒன்று (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் எஸ் ஜானகி)

    http://www.inbaminge.com/t/p/Paasam/Jal%20Jal%20Enum%20Salangai.eng.html

    ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
    சல சல சல வென சாலையிலே
    செல் செல் செல்லுங்கள் காளைகளே
    சேர்ந்திட வேண்டும் இரவுக்குள்ளே

    ஈரமான ரோஜாவே படத்தில் பிறைசூடன் எழுதிய ஒரு அருமையான பாடல் (இசை இளையராஜா பாடியவர்கள் மனோ எஸ் ஜானகி)

    http://www.youtube.com/watch?v=Eq9nsMZyyT8

    கலகலக்கும் மணியோசை

    சலசலக்கும் குயிலோசை

    மனதினில் பல கனவுகள் மலரும்

    இது போல் நிறைய பாடல்கள் உண்டு. ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களில் வரும் ஒமக சீயா இந்த வகையில் வராது.

    எனக்கொரு சந்தேகம். கண்ணதாசன் புதிய வார்ப்புகள் படத்தில் வான் மேகங்களே பாடலில் (இசை இளையராஜா பாடியவர்கள் மலேசியா வாசுதேவன் எஸ் ஜானகி)

    http://www.youtube.com/watch?v=Q8MPSbmZjy4

    பள்ளியில் பாடம் சொல்லி கேட்க நான் ஆசை கொண்டேன்

    பாவையின் கோவில் மணி ஓசை நீ கண்ணே

    டான் டான் டான் டான்

    சங்கின் ஓசை கேட்கும் நேரம் என்றோ ..

    சங்கின் ஒலிக்கு ஏன் டான் டான் டான்? இது ஏதோ பில்லா போல் டானா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

    மோகனகிருஷ்ணன்

    256/365

     
    • Rajaraman 1:24 am on August 15, 2013 Permalink | Reply

      டான் டான் டான் டான் –பாவையின் கோவில் மணி ஓசை ????

    • Arun Rajendran 2:33 am on August 15, 2013 Permalink | Reply

      சார்,

      எனக்கென்னமோ ஜானகி அம்மா பாடுற ”டான் டண்ட டான் “ ஒலி குறிப்பது கோவில் மணியையே…வாசு சார் பாடிய வரியின் ஒலியாக்கம் ..

      சங்கின் ஒலி -> பள்ளி(அறை)க்கு வந்தாச்சு இனி கல்/லவி எப்பொழுது துவங்குமோ என்று இலைமறைகாயாக தலைவி வினவுதல் ..

      இவண்,
      அருண்

  • என். சொக்கன் 5:26 pm on May 2, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு : யம்மா 

    எண்பதுகளில், தொண்ணூறுகளில் வந்த படங்களில் எல்லாம் தடுக்கி விழுந்தால் ஒரு காதல் தோல்விப் பாடலைக் கேட்கலாம். ஆண் பாடும் காதல் சோகப் பாடல்களே அவற்றில் அதிகம். பெண்ணின் காதல் தோல்வி சொல்லும் பாடல்களின் வீதம் மிகக் குறைவு. அப்படியே பாடல் கேசட்டில் இருந்திருந்தாலும் ஏதோ காரணத்தால் ”உன் நெஞ்சத் தொட்டுச் சொல்லு என் ராசா”, போல கேசட்டோடு நின்று போகும் சில. (ராஜாதிராஜா பட கேசட்டில் இடம் பெற்ற இந்தப் பாடல் பின்னர் வேறு திரைப்படம் ஒன்றிற்கு உபயோகப்படுத்தப்பட்டதாக ஒரு தகவல் உண்டு).

    குத்து, ஃபேண்டஸி வகைப் பாடல்களின் ராஜ்ஜியமாக தமிழ்த் திரைப்பாடல் சூழல் உருமாறிய பின் சமீபத்தில் காதல் தோல்விப் பாடல்களுக்கான தேவை இங்கே குறைந்தே போனது. மின்னலே “வெண்மதி, வாரணம் ஆயிரம் “அஞ்சல” போல திடீரென்று சில பாடல்கள் குதித்து ஒரு ரவுண்டு வரும். 

    அன்று முதல் இன்று வரை இந்தப் பாடல்களில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று தோல்வியின் சோகத்தில் பாடப்படுவது; இரண்டு தோல்வியின் விரக்தியில் பாடுவது. முதலாவது தோல்வியின் சோகத்தில் புலம்புதல், இரண்டாவது புலம்பலோடு சேர்ந்து கொஞ்சம் திட்டுதலும்.

    முதலாவது வகைக்கு உதாரணம் ’மலையோரம் வீசும் காத்து”, “வெண்மதி, அஞ்சல” வகைப் பாடல்கள். இரண்டாவது வகையில் சேர்பவை, “கண்களே கண்களே காதல் செய்வதை விட்டுவிடுங்கள், கம்பன் ஏமாந்தான்”தனமான பாடல்கள்.

    முதல் வகையறாவில் சமீபத்தில் சேர்ந்து கொண்டது “ஏழாம் அறிவு” படத்தின் “யம்மா யம்மா காதல் பொன்னம்மா”. வெகு அரிதாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் எஸ்.பி.பி. பாடிய பாடல்.

    பாடல்வரிகளுக்குச் சொந்தக்காரர் கபிலன்.

    எஸ்.பி.பி. குரலைத் தவிர்த்துப் பாடலில் வேறேதும் சிறப்பு லேது என்று ரொம்ப நாளாய் நினைத்திருந்தேன். சமீபத்தில் வெளியூர்ப் பயணத்தின்போது காரில் இந்தப் பாடலை ஆற அமர கேட்கையில்தான் இந்தப் பாடலின் நாலுவரி(களுக்கு) நோட்(ஸ்) கிடைத்தது J

    இந்தப் பாடலின் முதல் சரணத்தின் கடைசி இருவரிகள் மற்றும் இரண்டாவது சரணத்தின் கடைசி இருவரிகளே அவை.

    காதல் ஒரு போதை மாத்திரை;

    அதை போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை

    ”காதலில் விழுந்தவனுக்கு இறந்தபின் மூங்கிலில் கட்டித் தூக்கிச் செல்லப்படும் நிலைமையே சாத்தியம்” எனும் சாதாரண அர்த்தம்தான் இதற்கு என்று இதுநாள் வரை நினைத்திருந்தேன். என் கோ-ப்ரதர் வேறோர் அர்த்தம் சொன்னார்.

    “அது அப்படி இல்லை ஃப்ரெண்டு. போதை மாத்திரை எடுத்தவனை அந்த போதை மாத்திரைதான் கண்ட்ரோல்’ல வெச்சிருக்கும். ஆத்துல மூங்கில் அடிச்சிட்டுப் போனா அதோட பிரயாணத்தை ஆறுதான் தீர்மானிக்கும்; மூங்கில் தீர்மானிக்காது. அதுபோல ஆகிடும் காதல்ல விழுந்தவன் நிலைமை. ன்னு சொல்றாரு கவிஞர்”, என்றார்.

    அட இந்த அர்த்தம்தான் சரியோ?

    காதல் இல்லா ஊரு எங்கடா;

    என்னை கண்ணைக் கட்டி கூட்டிப் போங்கடா

    இது ரொம்ப சிம்பிள்! காதலால் நான் உற்ற துயர் போதும். காதல் இல்லாத ஊருக்கு என்னைக் கொண்டு போங்கள். தட்ஸ் இட்?

    இல்லை! அத்தோடு முடியவில்லை அவனது கோரிக்கை. அவன் கோருவது தன் கண்ணைக் கட்டிக் கூட்டிப் போகச் சொல்கிறான். காதல் பித்தினில் தான் எந்த தருணத்திலும் அவளைத் தேடி இங்கேயே திரும்ப வந்துவிடும் நிலைமை ஏற்படலாம். அது கூடவே கூடாது. திரும்ப வரும் வழி நான் அறியாவண்ணம் என் கண்களைக் கட்டிக் கூட்டிப் போங்கள் என்கிறான்.

    வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

    ஆர். எஸ். கிரி

    என்னா சார் பெரிய அறிமுகம். கடந்த முப்பத்ந்தைந்து வருடங்களாக தமிழ் இலக்கியத்தில் உழல்பவர்; ழார் பத்தாய், ஜின்முன்கின் போன்றவர்களின் இந்திய வாரிசு’ன்னு எதுனா போடுங்க சாமி…

    ஹிஹி… ஜோக்கு.
    நம்மைப் பத்தி நாமே என்னத்த சொல்ல சாமி? இது பதிவு எழுதறதைவிட கொடுமையான விஷயமா இருக்கே?
    எனிவே இந்தாங்கோ…..

    ”என்னத்த சொல்ல” என்பதைத் தவிர தன்னைப் பற்றி சொல்ல ஏதுமில்லை எனக் குறிப்பிடும் கிரி கடந்த இருபது வருடங்களாக சென்னைவாசி, ஐந்து வருடங்களாக தமிழ்வலைவாசி. “பேசுகிறேன்” என்று மொக்கை போடச் செய்வார். “பாடுகிறேன்” என்று பிறரை ஓடச் செய்வார். 

    நல்லவர், வல்லவர் என்று மட்டும் தன்னைப் பற்றி குறிப்பிட்டால் போதும் என்று கேட்டுக் கொண்டார்.

     
    • anonymous 7:52 pm on May 2, 2013 Permalink | Reply

      “மூங்கில் யாத்திரை” கூர்மையான நோக்கு; வாழ்த்துக்கள் கிரி

      மூங்கில் -ன்னாலே உறுதி;
      ஆற்றங்கரையில் வளரும் போது, மூங்கில் வெறுமனே காற்றில் ஆடும்; “ஜா”லியா இசை பாடும்;

      அதுவே, காதல் எனும் ஆற்றில் விழுந்து விட்டால்?
      அத்தனை உறுதியான மூங்கிலை, மேலே காற்றும் அலைக்கழிக்கும்; கீழே நீரும் அலைக்கழிக்கும்; பாவம் அந்தப் பயணம்;

      காற்று = (வெளியில்) ஒலக வாழ்க்கை; நீர் = (மனசுக்குள்) காதல் வாழ்க்கை;
      மூங்கில்=?
      முருகனையே நம்பிச் சீரழிந்த உள்ளம்-ன்னு வச்சிக்கலாம்:)

      அழகான இலக்கியப் பாட்டே இருக்கு, “மூங்கில் யாத்திரைக்கு”;
      “மூங்கில் வந்தணைதரு முகலியின் ஆற்றினில்
      வீங்கு வெந்துயர் இழுத்து அவன் வீடு எளி தாகுமே”

    • amas32 5:04 am on May 3, 2013 Permalink | Reply

      இந்தப் பாடலில் எனக்கும் இந்த இரு வரிகள் அர்த்தமுள்ளதாகத் தோன்றும். புல்லாங்குழலும் மூங்கிலால் தான். இறைவன் இசைக்கும் புல்லாங்குழலை செய்யப் பயன்படும் அதே மூங்கில் நம் கடைசி யாத்திரைக்கும் பயன் படுகிறது.

      amas32

    • GiRa ஜிரா 8:46 am on May 3, 2013 Permalink | Reply

      நல்ல பதிவு கிரி. மூங்கிலின் பயணம் அருமையான விளக்கம். நதியோடு போனால் கரையுண்டு கண்ணே விதியோடு போனால் கரையேது என்ற வைரமுத்து வரிகள் நினைவுக்கு வருகின்றன.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel