Updates from June, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • G.Ra ஜிரா 11:36 am on June 19, 2013 Permalink | Reply  

    திருப்புகழ்! 

    திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
    எதிர்ப்புகளை முருகா, உன் வேல் தடுக்கும்
    முருகா…… உன் வேல் தடுக்கும்!

    பூவை செங்குட்டுவன் எழுதிய அற்புதமான பாடல் வரிகள் இவை. கௌரி கல்யாணம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது.

    திருப்புகழின் திருப்புகழை இதை விட எளிமையாகச் சொல்ல முடியுமா என்று நம்மையும் சிந்திக்க வைக்கும் வரிகள் இவை.

    திருப்புகழுக்கு அப்படி என்ன பெருமை? அதைப் புரிந்து கொள்ள சிலபல தகவல்களை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    தமிழுக்குக் கிடைத்த அற்புத மாமணி அருணகிரிநாதர். முருகன் திருவருளால் அருணகிரியின் வாக்கில் வந்த பாடல்கள்தான் திருப்புகழ் என்று தொகுக்கப்பட்டன. திருப்புகழ் என்ற பெயரைப் பின்னால் யாரும் வைக்கவில்லை. அருணகிரியே ஒரு பாடலில் திருப்புகழ் என்று குறிப்பிடுகிறார்.

    பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
    பட்சியெனும் உக்ர துரகமும் நீபப்
    பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
    பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
    திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
    சிற்றடியு முற்றிய பனிருதோளும்
    செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
    செப்பென எனக்கருள்கை மறவேனே

    குற்றமற்ற மணிகள் பொருந்திய பொன்னணிகளை அணிந்து கொண்டு அழகு நடை போடும் மாமயிலையும்,
    கடம்ப மலர் மாலையையும்,
    கிரவுஞ்ச மலையானது மறைந்து போகும் படி திருக்கையால் ஏவித் துளைத்த வேலையும்,
    எட்டுத் திசையும் கிடுகிடுக்க வரும் சேவலையும்,
    அருள் தருகின்ற சிற்றடிகளையும்,
    பன்னிரண்டு தோள்களையும்,
    இருந்து அருள் செய்யும் ஒவ்வொரு திருப்பதிகளையும் வைத்து உயர்ந்த வகையில் திருப்புகழை உள்ளம் விரும்பிப் பாடு என்று அருள் சொன்ன கருணையை நான் என்றும் மறவேனே!

    ஆக.. இந்தப் பாட்டில் இருந்து தெரிவது என்ன? திருப்புகழ் என்ற பெயரை அருணகிரிநாதர் வைக்கவில்லை. முத்தமிழ்த் தெய்வமான முருகப் பெருமானின் திருவாயால் பெயரிடப்பட்ட நூல் திருப்புகழ் என்ற சிறப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். இன்னும் பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.

    திருப்புகழைப் பாடிய அருணகிரி அந்தப் பாடல்களை ஓலையில் எழுதி வைக்கவில்லை. அவர் பாடிய கோயில்களில் இருக்கும் அன்பர்கள் அந்தப் பாடல்களை ரசித்து எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்த பாடல்கள்தான் இன்று தப்பிப் பிழைத்து நமக்குக் கிடைத்திருக்கின்றன.

    திருப்புகழை அருணகிரி அறிவால் பாடவில்லை. முருகன் அருளால் பாடினார். அதாவது முருகன் அருணகிரியைப் பாட வைத்தான். அந்தப் பாடல்களில் எத்தனையெத்தனை சந்தநயம்! எத்தனை தாள வகைகள் உண்டோ அத்தனையும் திருப்புகழ் பாடல்களில் உள்ளனவாம். அத்தோடு அளவிட முடியாத கவிச்சுவை வேறு.

    அப்படிப்பட்ட திருப்புகழ் பாடல்களை அருணகிரியே ரசித்திருக்கிறார். கேட்டவர்கள் ரசித்ததையும் கண்டிருக்கிறார்.

    பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
    பட்சிந டத்திய குகபூர்வ
    பச்சிம தட்சிண வுத்தர திக்குள
    பத்தர்க ளற்புத மெனவோதுஞ்
    சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
    ருப்புக ழைச்
    சிறி தடியேனுஞ்
    செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
    சித்தவ நுக்ரக மறவேனே

    அடியவர்களுக்கு அருளும் இறைவனே
    ஆடும் மயில் ஏறி விளையாடும் குகனே
    கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
    ஆகிய திசைகளில் உள்ள அன்பர்கள் எல்லாரும்
    அற்புதம் அற்புதம் என்று ரசித்து ஓதுகின்ற
    அழகு கவிநயமும் சந்தநயமும் மிகுந்து இருக்கும்
    திருப்புகழை கொஞ்சமாவது நானும்
    சொல்லும் படி செய்து உலகில் பரவுவதற்கு
    வகை செய்த உன்னருளை மறக்க மாட்டேன் முருகனே!

    இந்த வரிகளிலும் அருணகிரி முருகனுக்கு நன்றி கூறுகிறார். திருப்புகழ் என்ற பெயர் நிலைபெறும் வகையில் இந்தப் பாடலிலும் இடம் பெறுகிறது.

    சரி. திருப்புகழ் பாடல்களிலேயே முதலில் பாடப்பட்டது எந்தப் பாடல் என்று தெரியுமா? எங்கு பாடப்பட்டது என்று தெரியுமா?

    முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற பாடல்தான் முதலில் பாடப்பட்டது. பாடப்பட்ட இடம் திருவண்ணாமலை கோயில்.

    திருப்புகழ் பாடு என்று முருகன் பணித்த பின் “என்ன பாடுவது எப்படிப் பாடுவது” என்று புரியாமல் தவித்த அருணகிரிக்கு “முத்து முத்தாகப் பாடு” என்று முருகனே எடுத்துக் கொடுக்க பாடப்பட்டதுதான் “முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற திருப்புகழ்.

    இதில் முத்து என்பது அருணகிரியைப் பெற்ற அன்னை என்றொரு கருத்தும் உண்டு.

    திரைப்படங்களிலும் திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன. குறிப்பாக அருணகிரிநாதர் திரைப்படத்தில் மூன்று திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன.

    1. முத்தைத் தரு பத்தித் திருநகை
    2. பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
    3. தண்டையணி வெண்டயம் கிண்கிணி சதங்கையும்

    அதற்குப் பல ஆண்டுகள் கழித்து இறையருட் கலைச்செல்வர் இயக்கத்தில் வெளிவந்த “யாமிருக்க பயமேன்” என்ற திரைப்படத்தில் ”பாதிமதி நதி போது மணிசடை” என்ற திருவேரகத்(சுவாமிமலை) திருப்புகழ் மெல்லிசை மன்னர் இசையமைப்பில் வெளிவந்தது. அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜா இசையில் “ஏறுமயில் ஏறிவிளையாடும்” என்ற திருப்புகழ் ”தம்பி பொண்டாட்டி” என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது.

    நாமும் திருப்புகழை ஓதி முருகனருளால் நல்லறிவும் நல்லருளும் பெற்று வளமோடு வாழ்வோம்.

    பதிவில் இடம் பெற்ற திருப்புகழ் பாடல்கள்
    திருப்புகழை/பி.சுசீலா,சூலமங்கலம் ராஜலட்சுமி/கௌரிகல்யாணம்/எம்.எஸ்.வி – http://youtu.be/awxORiSnHig
    முத்தைத்தரு/டி.எம்.சௌந்தரராஜன்/அருணகிரிநாதர்/டி.ஆர்.பாப்பா – http://youtu.be/2vRkCV3symk
    பக்கரை/டி.எம்.சௌந்தரராஜன்/அருணகிரிநாதர்/டி.ஆர்.பாப்பா – http://youtu.be/AfZ3UoT4pFw
    தண்டையணி/டி.எம்.சௌந்தரராஜன்/அருணகிரிநாதர்/டி.ஆர்.பாப்பா – http://youtu.be/QyZi7oEUtGI
    பாதிமதிநதி/வாணி ஜெயராம், எல்.ஆர்.அஞ்சலி/யாமிருக்க பயமேன்/எம்.எஸ்.வி – http://youtu.be/FDMcv6CjglI
    ஏறுமயில்/சுவர்ணலதா,மின்மினி,கல்பனா,பிரசன்னா/தம்பிபொண்டாட்டி/இளையராஜா – http://youtu.be/ju0VhKQHQ3c

    பி.கு. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த “என் வீட்டுத் தோட்டத்தில்” பாடல் “நாதவிந்து கலாதீ நமோநம” என்ற திருப்புகழின் சாயலிலும் “வெற்றிக் கொடி கட்டு” என்ற பாடல் “முத்தைத் தரு பத்தி” என்ற திருப்புகழின் சாயலிலும் வந்துள்ளது.

    அன்புடன்,
    ஜிரா

    200/365

     
    • kamala chandramani 12:14 pm on June 19, 2013 Permalink | Reply

      திருப்புகழ் ஓதுவதன் சிறப்பை அருணகிரிநாதர் திருத்தணிகைத் திருப்புகழில் அருமையாகக் கூறுகிறார்.
      ”சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ் செகுத்தவ ருயிர்க்குஞ் சினமாக,
      சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம்;
      நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும் நிசிக்கருவறுக்கும் பிறவாமல்
      நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும் நிறைப்புக ழுரைக்குஞ் செயல்தாராய்.”

      வள்ளலாரோ”உய்யும் பொருட்டுன் திருப்புகழை உரையே னந்தோ வுரைக்கடங்காய்” எனத் தணிகைச் செஞ்சுடரிடம் வருந்துகிறார். மேலும்,”அருணகிரி பாடும் நின்னருள்தோய் புகழைப் படியேன் பதைத் துருகேன் பணியேன் மனப்பந்தம் எல்லாம் கடியேன் என் செய்வேன் என் காதலனே” என உருகுகிறார். திருப்புகழும் அருட்பாவும் இரு கண்கள்.

    • Arun Rajendran 12:24 pm on June 19, 2013 Permalink | Reply

      ஜிரா சார்,

      அருணகிரிநாதர் காரணப் பெயர் மாதிரி தெரியுதுங்க.. சுருக்கமா ஒரு குறிப்பும் முடிந்தால் கொடுங்க..படிக்கிற ஆர்வத்தத் தூண்டி இருக்கீங்க… திருப்புகழையும் என்னோட அட்டவனைல சேர்த்திக்கிறேன்

      இவண்,
      அருண்

    • amas32 (@amas32) 12:53 pm on June 19, 2013 Permalink | Reply

      //திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். இன்னும் பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.//

      நீங்கள் இங்கே நாலு வரி நோட்டில் இந்த இருநூறு நாட்களில் பதிந்த பாடல்கள் நாளை ஒரு ரெபரன்சுக்கு நிச்சயம் பலருக்கு உதவப் போகிறது.

      உங்கள் டாபிக் ஜிரா! சூப்பர் பதிவு 🙂 அனுபவித்துப் படித்தேன் 🙂 நன்றி.

      amas32

    • rajnirams 10:07 pm on June 19, 2013 Permalink | Reply

      முதலில் உங்களுக்கெல்லாம் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
      சூப்பரான பதிவு. இதுவரை நான் அறியாத அரிய தகவல்கள்.அருணகிரிநாதரின் பெருமைகளையும் திருப்புகழின் சிறப்புகளையும் அருமையாக “சுட்டி”காட்டியதற்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.

  • G.Ra ஜிரா 11:11 am on June 4, 2013 Permalink | Reply  

    ஆயிரத்தில் ஓர் இரவு 

    முதலிரவு. அந்த ஒரு இரவை வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது என்பதால்தான் அதற்கு முதலிரவு என்று பெயர். அந்த முதலிரவிலே வருவது முதல் உறவு. இதைக் கற்பகம் படத்தில் வாலி இப்படிச் சொன்னார்.

    ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
    ஆனால் இதுதான் முதலிரவு
    ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
    ஆனால் இதுதான் முதல் உறவு

    பாடல் – வாலிபக் கவிஞர் வாலி

    எத்தனையோ கற்பனைகளோடும் ஆசைகளோடும் வாழ்க்கைப் பயணத்தில் அடியெடுத்து வைக்கும் அந்த ஒரு இரவில் மணமக்கள் ஒவ்வொருவரின் உள்ளமும் உணர்ச்சியும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு துள்ளும். அந்தத் துள்ளலில் பேச்சு வருமா? வாழ்க்கைத்துணையிடம் முதலிரவில் முதன்முதலில் என்ன பேசுவது? என்ன பேசுவார்கள்? யார் முதலில் பேசியிருப்பார்கள்? என்ன சொல்லியிருப்பார்கள்? அப்படி எதையும் சொல்லும் போது எவ்வளவு தயக்கம் இருந்திருக்கும்? சிந்தித்துப் பார்க்கவும் இனிதான விஷயம் அது. சரி. இவற்றையெல்லாம் திரைப்படங்களில் பாடலாசிரியர்கள் எப்படிக் கையாண்டார்கள் என்று ஆராய்ச்சி செய்வோம்.

    அவர்களுக்குச் சிறுவயது முதலே பழக்கம். அவன் கால்சட்டை போட்ட காலத்தில் பார்த்த சிறுமி இன்று பெருகிப் பொங்கி மனைவியாக வந்திருக்கிறாள். அவளைப் பார்த்ததும் அவனுக்கு வியப்பு. அதனால் பழைய நட்பினால் உரிமை எடுத்துக் கொண்டு குறும்பாகக் கேட்கிறான்.

    பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
    இன்று பூவாடை வீசிவர பூத்த பருவமா

    பாடல் – கவியரசர் கண்ணதாசன்

    அவன் உழைத்து முன்னுக்கு வந்தவன். ஒவ்வொரு காசும் வேர்வை சொட்டச் சொட்ட உழைத்துச் சேர்த்தது. செல்வத்தின் அருமை பெருமை தெரிந்தவன். இத்தனை பொருட்செல்வங்களைத் தேடினாலும் அதற்கிடையில் வாழ்க்கைத் துணைவியையும் தேட அவன் மறக்கவில்லை. அப்படித் தேடிய மனைவியை முதலிரவில் எப்படி அழைப்பான் அவன்?

    அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
    ஏகாந்தவேளை வெட்கம் ஏனோ வா இந்தப் பக்கம்

    பாடல் – தஞ்சை இராமையாதாஸ்

    கையும் காலும் நன்றாக இருப்பவர்களுக்கே நல்ல வாழ்க்கை அமைவது கடினம். ஊனமுற்று அதனால் வாழ்க்கையில் பிறரால் ஏளனமுற்று இருப்பவர்களின் நிலை? அவர்கள் மனத்துன்பத்தையெல்லாம் கேட்கக் கூட ஆளிருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒருவனுக்குத் திருமணம் நடந்தது. தெய்வம் போன்றொரு பெண் வந்தாள். அவளிடம் மனதைத் திறந்து கொட்டி அழுதான். அப்போது அவள் என்ன சொல்லியிருப்பாள்?

    தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ
    உங்கள் அங்கத்திலே ஒரு குறைவிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ
    கால்கள் இல்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லை
    இரு கைகள் இல்லாமல் மலர்களை அணைத்து காதல் தரவில்லையா

    பாடல் – கவியரசர் கண்ணதாசன்

    இன்னொரு முதலிரவு. ஒரு சாதாரண ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்ட முதலிரவு. திருமணத்துக்கு முன்னால் அவர்களுக்குள் பழக்கமோ நெருக்கமோ இருந்ததில்லை. இருவருக்கும் அது முதல் மயக்கம். அதனால் ஒரு தயக்கம். தயக்கம் போக வேண்டுமென்றால் விளக்கம் வேண்டும். அதையும் ஆண் பேசினால்தான் சரியாக இருக்கும் என்று பாடலாசிரியர் நினைத்திருக்கிறார் போலும்.

    இதுதான் முதல் ராத்திரி
    அன்புக் காதலி என்னை ஆதரி

    இன்னொருவன் குறும்பன். விளையாட்டுப்பிள்ளை. துரத்தித் துரத்திக் காதலித்தவளையே திருமணமும் செய்து கொள்கிறான். அவனுக்கு ஆர்வங்கள் நிறைய. சாதிக்கும் வெறியும் நிறைய. புதுமைகளைப் புரிந்து கொள்ள விரும்பும் படிப்பாளி. அவன் மட்டுமா? அவளும் அப்படித்தான். அப்படிப்பட்ட முதலிரவு எப்படியிருக்கும்?

    பள்ளிக்கூடம் போகலாமா
    அதுக்கு புத்தகத்த வாங்கலாமா

    பாடல் – கங்கையமரன்

    அவனொரு குழந்தை. வளர்ந்த குழந்தை. உடல் வளர்ந்து விட்ட அளவு உணர்வுகள் வளரவில்லை. வளராத செடிக்குத்தானே உரமும் கவனிப்பும் தேவை. அந்தச் செடிக்கு உரமாக வருகிறாள் ஒருத்தி. அவள் சுரங்களைச் சொல்லச் சொல்ல அவன் கற்றுக் கொள்கிறாள். கற்ற வித்தையை பாட்டாய்ப் பாடுகிறான். அவள் சொல்லிக் கொடுத்ததை அவன் படித்து மேதையாவதை பாட்டில் எப்படிச் சொல்வது?

    மனசு மயங்கும்…மனசு மயங்கும்
    மௌனகீதம்….மௌனகீதம்…பாடு
    மன்மதக்கடலில்…மன்மதக்கடலில்
    சிப்பிக்குள்முத்து…சிப்பிக்குள்முத்து…தேடு

    பாடல் – கவிஞர் வைரமுத்து

    அவள் காத்திருந்தாள். எதிர்பார்த்திருந்தாள். அடைந்தால் அவனைத்தான் அடைவது என்று தவமிருந்தாள். உள்ளத்தில் இருந்தது உண்மையான அன்பாக இருந்ததால் அது நடந்தது. திருப்பரங்குன்றத்திலே பரமசிவன் பார்வதி தலைமையில் அவர்கள் மகனான முருகனையே திருமணம் செய்தாள். அப்படிப்பட்டவளுக்கும் ஒரு முதலிரவு. அந்த இரவிலே அவள் என்னவெல்லாம் சொல்லியிருப்பாள்?

    மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
    நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு

    பாடல் – பூவை செங்குட்டுவன்

    இப்படி ஒவ்வொரு முதலிரவும் ஒவ்வொரு வகை. ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு கலை. ஒவ்வொரு கலையிலும் ஒவ்வொரு சுவை.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

    ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
    படம் – கற்பகம்
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    பாடல் – வாலிபக் கவிஞர் வாலி
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – இராமமூர்த்தி
    பாடலின் சுட்டி – http://youtu.be/IAJbRzdCaDc

    பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
    பாடல் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – இராமமூர்த்தி
    படம் – நிச்சய தாம்பூலம்
    படத்தின் சுட்டி – http://youtu.be/wi-G7fvgZ7g

    அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
    பாடல் – தஞ்சை இராமையாதாஸ்
    பாடியவர் – சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன், எஸ்.ஜானகி
    இசை – கே.வி.மகாதேவன்
    படம் – தெய்வப்பிறவி
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=rO0uDgO2gz0

    தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ
    பாடல் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – இராமமூர்த்தி
    படம் – பாகப்பிரிவினை
    பாடலின் சுட்டி – http://youtu.be/ZCwKgD9E7Qo

    இதுதான் முதல் ராத்திரி
    பாடல் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – கே.ஜே.ஏசுதாஸ், வாணி ஜெயராம்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – ஊருக்கு உழைப்பவன்
    பாடலின் சுட்டி – http://youtu.be/WgCneO_FIss

    பள்ளிக்கூடம் போகலாமா
    பாடல் – கங்கையமரன்
    பாடியவர்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – கோயில்காளை
    பாடலின் சுட்டி – http://youtu.be/kU9WyvDttkc

    மனசு மயங்கும்…மனசு மயங்கும்
    பாடல் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர்கள் – எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – சிப்பிக்குள் முத்து
    பாடலின் சுட்டி – http://youtu.be/yn2XVHqiUPg

    மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
    பாடல் – பூவை செங்குட்டுவன்
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    இசை – கே.வி.மகாதேவன்
    படம் – கந்தன் கருணை
    பாடலின் சுட்டி – http://youtu.be/aGJhE1CwjWY

    அன்புடன்,
    ஜிரா

    185/365

     
    • Arun Rajendran 11:33 am on June 4, 2013 Permalink | Reply

      இரசித்தேன் ஜிரா சார்..

      தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ — பொருட் பிழைங்களோ?

      மாற்றுத் தானே தரத்தைத் தீர்மானிக்குது? மாற்றுக் குறைந்தால் (குறை அதிகரித்தால் ->பிற உலோகக் கலவை அதிகரித்தால்) தரம் குறையத் தானே செய்யும்? கவிஞர் வேறு எதானும் சொல்ல வருகிறாரா?

      இவண்,
      அருண்

      • GiRa ஜிரா 1:24 pm on June 6, 2013 Permalink | Reply

        கவிஞர் எழுதியது தங்கத்திலே ஒரு குறைவிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ என்றுதான். எப்படி மாறியதோ தெரியாது… ரெக்கார்டிங்கின் போது தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் என்று எழுதிய தாள் சுசீலாம்மா கையில். பாடல் பதிவாகி படமும் ஆனபின் தான் நடந்தது தெரிந்திருக்கிறது கவியரசருக்கு. பிறகு அப்படியே அமைந்தும் விட்டது.

        ஆனாலும் இந்த வரிக்கும் பலவிதங்களில் சுவையான விளங்களை அடுக்கியடுக்கிச் சொல்லலாம்.

    • anonymous 5:03 pm on June 4, 2013 Permalink | Reply

      நலம்?

      பல முறை வாசித்து வாசித்துப் பார்த்தேன், இப்பதிவை;
      சில சொற்கள், மிகவும் பிடிச்சி இருந்தது;

      *முதன்முதலில் என்ன பேசுவது? என்ன பேசுவார்கள்? யார் முதலில் பேசியிருப்பார்கள்? என்ன சொல்லியிருப்பார்கள்?
      *வாழ்க்கையில் பிறரால் ஏளனமுற்று இருப்பவர்களின் நிலை?

      *அவனொரு குழந்தை. உணர்வுகள் வளரவில்லை. வளராத செடிக்குத்தானே உரமும் கவனிப்பும் தேவை
      *அவனுக்கு ஆர்வங்கள் நிறைய. புதுமைகளைப் புரிந்து கொள்ள விரும்பும் படிப்பாளி. அவன் மட்டுமா?

      *உள்ளத்தில் இருந்தது உண்மையான அன்பாக இருந்ததால் அது நடந்தது.
      ——–

      எல்லாப் பாட்டுமே இனியவை தான் என்றாலும், அந்தக் கடைசிப் பாட்டு…
      மனம் படைத்தேன்…

      • anonymous 5:23 pm on June 4, 2013 Permalink | Reply

        //மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு – நான்
        வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு!//

        -ரொம்ப அழகாப் படமாக்கப் பட்டிருக்கும்;
        சிவகுமார், மற்ற வழக்கமான படங்களில் வரும் காதல் காட்சியைப் போல, கே.ஆர்.விஜயா கையைப் பிடிச்சிச், “சரக்” -ன்னு இழுத்தாராம்;

        Director, AP Nagarajan, “யோவ், இப்ப நீ முருகன்-யா; இப்பிடியெல்லாம் இழுக்கக் கூடாது; எழுந்து பின்னாடியே ஓடக் கூடாது;
        மென்மையாக் கையைப் புடிக்கணும்; அந்தப் பிடிப்பிலும் ஒரு புன்சிரிப்பு தெரியணும்”

        -ன்னு சொல்ல, மொத்த யூனிட்டே, கொல் -ன்னு சிரிச்சிருச்சாம்:)
        Such a great director & sculptor;
        He sculpts even Sivaji…. in that “Making of Thillana Mohanambal” video
        ———

        //ஆண் பேசினால்தான் சரியாக இருக்கும் என்று பாடலாசிரியர் நினைத்திருக்கிறார் போலும்//

        சில முதலிரவுகளில் பெண் பேச்சும் உண்டு:)

        “கண்ணைத் தொறக்கணும் சாமீ” -ன்னு தற்காலப் படங்களை விட, ஒரு “மென்மை” இருக்கும் அக்காலப் படங்களில்:)

        பச்சை விளக்கு-ன்னு ஒரு படம்;
        குத்து விளக்கெரிய, கூடமெங்கும் பூ மணக்க
        மெத்தை விரித்திருக்க, மெல்லியலாள் காத்திருக்க….

        வாராதிருப்பானோ? வண்ண மலர்க் கண்ணன் அவன்?
        (shenoy music of MSV)

    • anonymous 5:38 pm on June 4, 2013 Permalink | Reply

      some more 1st night songs…

      *அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்

      உடல் நான் – அதில் உரம் நீ என
      உறவு கொண்டோம் “நேர்மையாய்” -ன்னு எனக்கு ரொம்ப பிடிச்ச வரிகள்; நேர்மையான உறவாம்:)

      *கண்ணுக்குக் குலமேது?

      முதலிரவு -ன்னாலே, “அது” மட்டுமே -ன்னு காட்டாது, உள்ளம் தான் முதலில் இன்புறணும்; அப்பறம் தான் உடல் இன்புறணும்..
      அவமானத்திலேயே சதா துடிக்கும் கணவன் கர்ணன்; அவனை அணுகும் பெண்ணுள்ளம்

      அவன் உள்ளத் தீயை அணைத்து,
      பின்பு உடல் தீயில் குளிர் போக்கும் இன்பமே இன்பம்!
      ———

      some more…

      *மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
      *டிஷ்யும் படத்தில் நெஞ்சாங் கூட்டில்… இதில் படகு வீட்டில் முதலிரவு (my fave fantasy::))

      how u forgot
      பாலக்காட்டுப் பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா?
      different type of 1st night – யாரம்மா அது யாரம்மா?:))

    • anonymous 5:54 pm on June 4, 2013 Permalink | Reply

      “சாந்தி முகூர்த்தம்” -ன்னு வேற ஒரு பேரில் சொல்லுவாங்க;

      ஆனா, இனிய தமிழில், “முதலிரவு” -ன்னு சொல்லுறாப் போல வராது…
      என்ன “சாந்தி”யோ?
      சாந்தி அடைந்து விடக் கூடிய விஷயமா அது?:) முருகா முருகா!
      ———

      சினிமாவில் முதலிரவு உண்டு; ஆனா சங்க இலக்கியத்தில்??
      அய்யோ, சினிமாவை விடக் கிளுகிளுப்பா இருக்கும்:)

      தமர், நமக்கு ஈத்த, “தலைநாள் இரவின்”
      -அகநானூறு

      தலைநாள் இரவு = என்ன பேரு பாருங்க!
      ஏம்மா ஒனக்கு இப்படி வேர்க்குது? சன்னலைத் திறந்தாச் சரி ஆயீரும், திறக்கட்டுமா?:)

      ஒரு முதலிரவு அறைக்குள் “என்ன நடக்குது?” -ன்னு காட்டும் பாட்டு

      சங்கத் தமிழில் தாலி உண்டா? முதலிரவு??


      ———

      • anonymous 6:10 pm on June 4, 2013 Permalink | Reply

        சங்க இலக்கியம் = இயற்கை வாழ்வு!
        பூர்வ குடிகள், புராணக் கலப்பு இல்லாம வாழ்ந்த “அக” வாழ்வு!

        *எட்டுத் தொகை = நிறையவே அகம்
        *பத்துப் பாட்டு = மிகவும் புறம்
        *அப்பறமா, ஒரே நீதி இலக்கியமாப் போச்சு:)
        அகம் போனாலே, நீதி போயிருச்சி -ன்னு தானே அர்த்தம்?
        ———

        எனக்கு மிகவும் பிடிச்ச “இலக்கிய முதலிரவு”
        1) சிலப்பதிகாரம் 2) நள வெண்பா

        Dunno, If Kamban sang 1st night:) Gotto figure out;
        ———

    • anonymous 6:21 pm on June 4, 2013 Permalink | Reply

      சிலப்பதிகாரம் – மனையறம் படுத்த காதை
      அதென்ன “படுத்த”?
      மனை அறம் படுத்த – நீங்களே யோசிச்சிப் பாருங்க!

      –தாரும் மாலையும் மயங்கி, கையற்று,
      தீராக் காதலின் திரு முகம் நோக்கி,
      கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை–

      தார் = ஆண் சூடும் மாலை;
      கோதை = பெண் சூடும் மாலை;

      ரெண்டுமே மயங்கி ஒன்னோட ஒன்னு கலக்குதாம்; சினிமாவில் ரெண்டு பூ ஒன்னாச் சேருவது போல் காட்டுவாங்களே?:) director eLango adigaL
      ——

      kovalan does too much talking; may be kaNNagi a shy girl?:)
      but, very romantic speeches = foreplay??:)
      –மலையிடைப் பிறவா மணியே என்கோ?
      அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?–

      ஒரு மாலை ரொம்ப அடர்த்தியா இருக்கு; ஆனா தயங்குது
      Whoz that maalai? = kaNNagi

      –தயங்கு இணர்க் கோதை – தன்னொடு தருக்கி,
      வயங்கு இணர்த் தாரோன் மகிழ்ந்து–

      அவ மனசுல அம்புட்டு “அடர்த்தியான” ஆசைகள்…
      //தயங்கு இணர்க் கோதை// – என்னமாச் சொல்லு போடுறான்-யா இந்த இளங்கோ!

      தயங்கு இணர்க் கோதை = வயங்கு இணர்த் தாரோன்!

      • anonymous 6:38 pm on June 4, 2013 Permalink | Reply

        நள வெண்பா “முதலிரவு”:

        அதிக ஆழம்/ அலை இல்லாத் திருச்செந்தூர்க் கடலில், அலையும் தண்ணியும் ஒன்னாக் கலக்கும் பாத்து இருக்கீங்களா?

        ரெண்டுமே தண்ணி தான்!
        ஆனா, ஒன்னு எழும்பும்; ஒன்னு நுடங்கும்!
        எழும்பி எழும்பிக் கலக்கும்;
        அது போல – நீரும் நீரும் போல – கலந்தாங்களாம்… நளன்-தமயந்தி

        —ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி
        இருவர் எனும் தோற்றம் இன்றிப் – பொருவெங்
        கனற்கேயும் வேலானும் காரிகையும் சேர்ந்தார்
        புனற்கே புனல்கலந்தாற் போன்று—-

        புனல் = தண்ணி; புனலே புனலில் கலந்தாப் போல…

        ஈருடல்-ஓருயிர் ல்லாம் இல்ல
        ஓர் உடல்! (இருவர் எனும் தோற்றம் இன்றி)
        ஓர் உடல்!
        ——–

        ஆனா ஆரம்ப வரி தான் அசத்தல்! = “ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி”

        சூடு, வெயிலு…
        நிழலில் ஒதுங்குவோம்-ல்ல?

        காமச் சூட்டுக்கு எங்கே “ஒதுங்கறது”?
        = ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி

        புகழேந்தீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
        ——-

        செவ்வேள் என நீ பெயர் கொண்டாய் – முருகா
        சொல்வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய்

        கைவேல் கொண்டு நீ பகை வென்றாய் – இரு
        கண்வேல் கொண்டு நீ எனை வென்றாய்!

        “மனம் படைத்தேன்
        உன்னை நினைப்பதற்கு” !!!

    • amas32 12:09 pm on June 6, 2013 Permalink | Reply

      எப்பவும் போல அருமையான பாடல் தேர்வுகள். ஒரு thesis ஏ எழுதிவிடுகிரீர்கள் 🙂
      //மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
      நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு//
      என்ன அருமையான பாடல் வரிகள்! Ultimate! இதைவிட எளிமையா காதலை, பக்தியை சொல்லிவிட முடியாது.

      amas32

  • mokrish 3:32 pm on January 12, 2013 Permalink | Reply  

    நான் சிரித்தால் தீபாவளி 

    திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
    திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

    பூவை செங்குட்டுவன் எழுதிய இந்த பாடலை எப்போது கேட்டாலும் சட்டென்று ஒரு சிரிப்பு வரும். இதென்ன கலாட்டா ? பக்கத்தில் இருக்கும் பழமுதிர்ச்சோலையை (இச் உண்டாமே!) விடுங்கள். சுவாமிமலை, பழனி மற்றும் திருசெந்தூரில் கேட்காத சத்தம் திருத்தணியில் மட்டும் எதிரொலிப்பது ஏன்? தொடர்ந்து பாடலை பார்த்தால் http://www.youtube.com/watch?v=kgcTDdmew_o பதிலில்லை. வேறு பாடலில் விடை கிடைக்குமா பார்ப்போம்.

    புன்னகை மன்னன் பூவிழி கண்ணனைப்போல் நம் தமிழ்கடவுள் முருகனும் சங்கமமானது வள்ளி தெய்வானை இருவரின் நெஞ்சினிலே. இந்திரன் மகள் தெய்வானை

    அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி
    வேறு எவரோடும் நான் பேச வார்த்தையேதடி
    வேலன் இல்லாமல் தோகையேதடி

    என்று கிறங்கிய உடனே முருகன் ‘வா வந்து பக்கம் நில். இன்னும் நாளும் கோளும் பார்ப்பதேனடி’ என்று ஆட்கொள்கிறான்.

    இன்னொரு பெண். காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகை. அவளை நினைத்து கந்தன் உருகுகிறான்.

    வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
    புள்ளி வைத்து புள்ளி போட்டான் புதுகோலம்தான்

    வேடனாய் உரு மாறி, மரமாய் நின்று கிழவனாகி தேனும் தினை மாவும் தின்று டெம்போ எல்லாம் வைத்து – மன்னிக்கவும்- யானை உதவியுடன் வள்ளியின் மனம் கவர முயல்கிறான். அந்த வள்ளி குறத்தியும் தோழியிடம்

    பழமுதிர்சோலையிலே பார்த்தவன் வந்தானடி
    அவன் அழகு திருமுகத்தில் இழையும் நகை எடுத்து
    ஆரமும் சொன்னானடி தோழி

    என்று அழகன் முருகனிடம் ஆசைவைக்கிறாள். வள்ளி என்றால் தமிழில் படர்கொடியாம். பக்கத்தில் வேல் வந்து நின்றவுடன் படராமல் இருக்குமோ கொடி? வள்ளிமலையில் அவளை ஏற்றுக்கொண்டு திருமணத்திற்கு பிறகு திருத்தணியில் வாசம்.

    தேவன் முருகன் கோவில் கொண்டது வள்ளியின் நெஞ்சத்திலே
    அவன் தெய்வானை என்றொரு பூவையை மணந்தது திருப்பரங்குன்றத்திலே

    இரண்டு பெண்கள். ஒரு மாலையை இரு தோளுக்கு சூடுதல் இறைவன் தன்மையன்றோ? அதை விடுங்கள். அப்புறம் என்னாச்சு? முருகனுக்கும் இரண்டு மனம் வேண்டும் நிலைமையா? இந்திரன் மகளும் மலைகுற மகளும் முருகனை பாடாய் படுத்தி விட்டாரோ? இதைத்தான் கவிஞர் முருகன் அங்கே சிரித்தால் இங்கே வெடிக்கும் என்று அழகு தமிழில் சொல்கிறாரோ?

    இது செந்தூர் முருகன் கோவிலில் மட்டுமில்லை வேறெங்கும் கேட்காத ஒரு சேதி

    மோகனகிருஷ்ணன்

    042/365

     
    • Saba 6:38 pm on January 12, 2013 Permalink | Reply

      அனுபவம் எழுத்து வடிவில் பிறக்கின்றதோ? 😉

    • amas32 (@amas32) 2:39 pm on January 13, 2013 Permalink | Reply

      நீங்கள் மேலே பதிவில் குறிப்பிட்ட பாடல் வரிகளைப் படிக்கும் பொழுது அனைத்துப் பாடல்களும் காதில் ரீங்காரமிடுகின்றன. அனைத்தும் எனக்கு மிக மிகப் பிடித்தப் பாடல்கள். எப்படி சுத்தி வளைத்துப் பாயின்ட்டுக்கு வருகிறீர்கள்!

      Well played 🙂

      amas32

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel