Updates from December, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • G.Ra ஜிரா 8:07 pm on December 1, 2013 Permalink | Reply  

    விண்ணெங்கும் காத்தாடிகள் 

    புண்ணாகவராளி இராகத்தில் ஆறுதல் அருள்வாய் ஆறுமுகா என்ற பாடலை ரெக்கார்ட் பிளேட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு உள்ளமுருக முருகனைப் பாடிக் கொண்டிருந்தார் டி.எம்.சௌந்தரராஜன்.

    ஆறுதலைக் கூட ஆறுதலைச்சாமி தான் தர வேண்டுமோ? அதென்ன அவ்வளவு எளிதாகக் கிடைக்காத ஒன்றா?

    யோசித்துப் பார்த்தால் அது உண்மைதான். உழைப்போ அதிர்ஷ்டமோ பணத்தைக் கொடுத்து விடுகிறது. அந்தப் பணம் இருந்தால் உணவு உடை உறைவிடம் என்று பலவற்றை வாங்க முடிகிறது. பணத்தைப் பார்த்து காதலும் கூட வந்துவிடுகிறது. ஆனால் மனதுக்குத் தேவையான ஆறுதல்!!!!!!

    ஆறுதல் எல்லோரிடமும் கிடைப்பதில்லை. ஏனென்றால் ஆறுதலளிக்க எதையும் எதிர்பார்க்காத உண்மையான அன்பு வேண்டும்.

    அப்படி ஆறுதல் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தவர் தான் மலைச்சாமித் தேவர். ஊரிலேயே பெரிய தலைக்கட்டு. மச்சு வீடு. நிலம் நீச்சு. எட்டுப் பட்டிக்கும் பஞ்சாயத்து. பெரிய கவுரவம் தான். ஆனால் நிம்மதி மட்டும் தான் இல்லை.

    பதிவிரதை ஏறுமாறாக இருப்பாளேயாமாகில் கூறாமல் சன்னியாசம் கொள்” என்று ஔவையார் சொன்னது மலைச்சாமித் தேவருக்கு நன்றாகவே பொருந்தும். என்ன செய்வது? கவியரசர் சொன்னது போல இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று.

    சோகத்துக்கு ஒரு இயல்புண்டு. யாரிடமாவது சொல்லிவிட்டால் அது குறைந்துவிடும். ஆனால் ஊரெல்லாம் வந்து நியாயம் கேட்கும் தலைக்கட்டு யாரிடம் போய்ச் சொல்ல முடியும்?

    அதற்கு ஒரே வழி உள்ளத்து உணர்வுகளை பாட்டாக்கி காற்றோடு காற்றாய் கலந்து விடுவதான். அந்த வழியில்தான் மலைச்சாமித் தேவரும் போனார்.

    பூங்காத்து திரும்புமா
    ஏம் பாட்ட விரும்புமா
    தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட
    எனக்கொரு தாய்மடி கெடைக்குமா

    அவர் பாட்டுக்கும் ஒரு எதிர்ப்பாட்டு வருகிறது. அதுவும் தேடிக் கொண்டிருந்த ஆறுதலைத் தாங்கிக் கொண்டு.

    ராசாவே வருத்தமா
    ஆகாயம் சுருங்குமா
    ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
    அடுக்குமா சூரியன் கருக்குமா

    பாடியது ஆளோ அசரீரியோ… இப்படியான ஆறுதலைக் கேட்பதற்கு இரண்டு காதுகள் இருந்தால்… இல்லை இல்லை. ஒரு காது இருந்தாலே போதுமே. வேதனைப் பட்ட உள்ளம் உள்ளதையெல்லாம் கொட்டி அழுதிடுமே!

    என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
    மெத்த வாங்குனேன் தூக்கத்த வாங்கல

    வேதனை இல்லாத மனம் ஏது? வாதை இல்லாத உடல் ஏது? குறையே இல்லாத மனிதர் தான் யார்? அதைப் புரிய வைத்தால் அவர் மனம் தெளியும் என்று நம்பினாள் அவள்.

    இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
    உன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல

    தனக்காகப் பாடும் அந்தக் குரல் யார் குரல் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் உந்துகிறது. அது பாட்டிலேயே கேள்வியாகவும் வருகிறது.

    யாரது போறது?

    ஆனால் அவள் கெட்டிக்காரி. அவளா முகத்தைக் காட்டுவாள்?

    குயில் பாடலாம். தன் முகம் காட்டுமா?

    இப்படி வரிவரியாகச் சோகத்தை அவர் சொல்லவும் ஆறுதலை இவள் சொல்லவும் பாட்டு தொடர்கிறது.

    எப்போதும் இல்லாத ஒரு மகிழ்ச்சி. என்றைக்குமே தோன்றியிருக்காத ஒரு நிம்மதி. அனுபவித்தேயிருக்காத ஒரு இன்பம். மலைச்சாமித் தேவருக்கு மட்டுமல்ல… அவளுக்கும் தான். சுகராகம் சோகம் என்றால் ஆறுதல் ஆனந்தம் தான்.

    மறுபடியும் ஆசை உந்தக் கேட்டு விடுகிறார் தேவர். அந்தப் பெண்ணும் தன்னைக் காட்டிக் கொள்கிறாள். அவள் குரல் மட்டுமல்ல பெயரும் குயில்தான்.

    இந்தச் சின்னப் பெண்ணா பெரிய சோகத்துக்கு மருந்து தடவிய குயில் என்று அவர் உள்ளம் வியக்கிறது. குரலில் என்றுமில்லாத ஒரு மகிழ்ச்சியோடும் நெகிழ்ச்சியோடும் கேட்கிறார்.

    அடி நீதானா அந்தக் குயில்
    யார் வீட்டுச் சொந்தக் குயில்
    ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
    பறந்ததே ஒலகமே மறந்ததே

    எங்கேயோ இருக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத இரண்டு உள்ளங்களுக்குள் ஒரு இணைப்பு கொண்டு வருவதற்கு எத்தனையெத்தனையோ காட்சிகளும் நிகழ்ச்சிகளும் தேவை. அதிலும் சில தவறாகப் போய்விடுவதும் உண்டு.

    அப்படியெல்லாம் ஆகாமல் சோகத்துக்குத் தேவையான ஆறுதலைக் கொடுத்து மனக்காயங்களை ஆற்றி இரண்டு உள்ளங்களுக்கு இடையே பாலம் போட்ட இந்தப் பாடல் தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று.

    பாடல்கள் அழகிய அபத்தமாம். அப்படிச் சொல்வதுதான் அசிங்கமான அபத்தம். எத்தனையோ பக்கங்களில் பேசியிருக்க வேண்டிய வசனத்தை இருபது வரிகளில் கவிதையாக்கி சோக நெஞ்சங்களுக்கெல்லாம் ஆறுதல் தந்த பாடலுக்கு நன்றி பல. இந்தப் பாடல் இல்லாமல் முதல் மரியாதை என்ற படமே இல்லை.

    நன்றாக யோசித்துப் பார்த்தால் தமிழ் திரைப்படம் தொடங்கிய காலத்திலிருந்து எத்தனையெத்தனை பாடல்கள்! எத்தனையெத்தனை கவிஞர்கள் புலவர்கள் பாடலாசிரியர்கள்! எத்தனையெத்தனை இசையமைப்பாளர்கள்! அவர்கள் உருவாக்கித் தந்த பல பாடல்கள் படத்தோடு காணாமல் போகாமல் நம்மோடு இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்றால் மிகையாகாது.

    தெலுங்கில் “எந்தரோ மகானுபாவுலு.. அந்தரிக்கி வந்தனம்” என்று சொல்வார்கள். நமது தமிழில் சொன்னால், “எத்தனையோ பெரியவர்கள். அவர்கள் அனைவருக்கும் வணக்கம்.” நமக்காக ஆயிரமாயிரம் பாடல்களை உருவாக்கிய அந்தப் பெரியவர்கள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள்.

    பாடல் – பூங்காற்று திரும்புமா
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர்கள் – மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – முதல் மரியாதை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=-9kaLJZhJIE

    அன்புடன்,
    ஜிரா

    364/365

     
    • Uma Chelvan 9:35 pm on December 1, 2013 Permalink | Reply

      மிகவும் நல்ல பதிவு. படிப்பு, பணம், புகழ், வசதி, வாய்ப்புகள் என்று எல்லாம் வந்த பின்பும் மனித மனம் வேண்டுவது அன்பும் ஆறுதலும் தான். அது எந்த வடிவத்தில் இருந்தாலும்…….பக்தியாய் இறைவனிடம், அன்பாய் மனைவியிடம், பாசமாய் மகள், மகனிடம், நேசமாய் உறவுகளிடம், உரிமையாய் நட்பிடம்……… அனைவர்க்கும் அன்பையும் ஆறுதலையும் அந்த ஆறுமுகன் அருளட்டும்.

      அறுமுகனை வேண்டி ஆரதனை செய்தால் அருகினில் ஓடி வருவான் .அன்பு பெருகியே அருள் தருவான்.!!!

    • Uma Chelvan 9:50 pm on December 1, 2013 Permalink | Reply

      மிகவும் நன்றி ” 4 வரி நோட்” குழுவினர்க்கு. ஓர் ” சங்கீத மும்மூர்த்திகள்”. போல நிறைய பாடல்களை பற்றிய அருமையான கருத்துக்கள். நிறைய புது விஷயங்கள் கற்று / தெரிந்து கொண்டேன். “யாம் அறிந்த மொழிகளிலே..தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றார் பாரதி!!. கம்பனை போல், வள்ளுவனை போல், இளங்கோவை போல், பாரதியை போல்…….. ராஜாவை போல் என்னுமிடத்தில் நிறுத்த விழைகிறேன்/ விரும்புகிறேன்.

    • rajinirams 2:37 am on December 2, 2013 Permalink | Reply

      அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை-கவியரசரின் நெஞ்சை வருடும் வரிகள் போலவே கவிஞர் வைரமுத்துவின் முதல் மரியாதை வரிகள்- ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா,ஏங்காதே அத உலகம் தாங்காதே-அடுக்குமா சூரியன் கருக்குமா. அருமையான பாடலின் சிறப்பை விளக்கிய அருமையான பதிவு.

    • Uma Chelvan 8:08 am on December 2, 2013 Permalink | Reply

      காதில் பஞ்சாமிர்தமும், காற்றில் வரும் இசைவிழாவும் ( December Music Season)

      ராகத்தைச் சொல்லி விட்டுப் பாடுவது !!

      இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்தால், பாடி முடித்ததும், ஒரு வரி அதே ராகத்தில் பிரபலமாகி இருக்கு திரைப்பட இசைப் பாடலை பாடிக் கோடி காட்டி விட்டுத் தொடரலாம். கரகோஷம் அள்ளும்.

      வெகுஜன இசையையும், சம்பிரதாய் இசையையும் இணைத்துப் பாலம் போட்டுக் கொண்டே இருக்கும் இளையராஜா போன்ற இசை மேதைகளுக்கு சபா சங்கீதம் செலுத்தும் மரியாதையாக அது இருக்கும்.

      EraMurukan Ramasami

    • amas32 7:20 pm on December 2, 2013 Permalink | Reply

      பூங்காத்து திரும்புமா அற்புதமான ஒரு பாடல். கேட்டு முடித்த பிறகும் மனதில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கும்.

      //அடி நீதானா அந்தக் குயில்
      யார் வீட்டுச் சொந்தக் குயில்
      ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
      பறந்ததே ஒலகமே மறந்ததே//

      அருமையான வரிகள்.

      amas32

    • Sudharsan 2:15 pm on December 13, 2013 Permalink | Reply

      Nalla Pathivu. 4varinote arumayana muyarchi.

      Siru Thirutham:
      “பாராட்ட மடியில் வெச்சுத் தாலாட்ட” .

  • என். சொக்கன் 10:53 pm on November 16, 2013 Permalink | Reply  

    யாவும் நீ 

    • படம்: கரகாட்டக்காரன்
    • பாடல்: மாரியம்மா, மாரியம்மா
    • எழுதியவர்: கங்கை அமரன்
    • இசை: இளையராஜா
    • பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா
    • Link: http://www.youtube.com/watch?v=tOUyOklDqkY

    மண்ணுக்குள் நீ நல்ல நீரம்மா,

    காத்தும், கனலும் நீயம்மா,

    வானத்தப் போல் நின்னு பாரம்மா,

    வந்தேன் தேடி நானம்மா!

    நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் என்கிற ஐம்பூதங்களும் நீயாக இருக்கிறாய் என்று பாடுவது பக்தி இலக்கியத்தில் அடிக்கடி வெளிப்படும் அம்சங்களில் ஒன்று.

    உதாரணமாக, ‘நிலம், நீரொடு ஆகாசம், அனல், கால் ஆகி நின்று’ என்று சிவனைக் குறிப்பிடுவார் திருஞானசம்பந்தர். ’நிலம், கால், தீ, நீர், விண் பூதம் ஐந்தாய்’ என்று பெருமாளை அழைப்பார் திருமங்கையாழ்வார். இப்படி இன்னும் ஏராளமான உதாரணங்களைச் சொல்லமுடியும்.

    அதே மரபை மாரியம்மனுக்கும் எளிய சொற்களில் பொருத்தி சினிமாப் பாடலாகத் தருகிறார் கங்கை அமரன். ’மண் தொடங்கி விண்வரை அனைத்தும் நீயே’ என்று அந்தக் கிராமத்துக் காதலர்கள் அவளது கருணையைக் கோரி நிற்கின்றனர்.

    இன்னொரு கிராமத்துப் பாட்டில் வாலியும் இதே மரபைப் பின்பற்றி எழுதியிருப்பார், அங்கேயும் போற்றப்படுகிறவள் தேரில் உலா வரும் கருமாரி, மகமாயி, உமைதான்!

    நீர், வானம், நிலம், காற்று, நெருப்பான ஐம்பூதம்

    உனதாணைதனை ஏற்றுப் பணியாற்றுதே,

    பார்போற்றும் தேவாரம், ஆழ்வார்கள் தமிழாரம்,

    இவை யாவும் எழிலே உன் பதம் போற்றுதே!

    ***
    என். சொக்கன் …

    16 11 2013

    349/365

     
    • Uma Chelvan 4:03 am on November 17, 2013 Permalink | Reply

      எங்கும் அவள், எதிலும் அவள் உமையவள் !!!

      மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே!
      குழலும் யாழ் இசையும் கொஞ்சும் மொழி எல்லாம் உன் குரல் வண்ணமே !

    • amas32 9:31 pm on November 17, 2013 Permalink | Reply

      ஐம்பூதங்களிலும் நீயே உறைகிறாய் என்ற கங்கை அமரனின் பாடல் வரிகள் போற்றிப் பாடப்படும் அம்மனைப் போல் எளிமை நிறைந்தவை.

      நாலே வரியில் வாலி சொல்லும் கருத்தும் அற்புதம். அமரன் சொன்னதை தான் சொல்கிறார் ஆனால் இன்னும் கொஞ்சம் high funda வாக உள்ளது.

      இரு பாடல்களும் அருமை!

      amas32

  • G.Ra ஜிரா 1:36 pm on October 24, 2013 Permalink | Reply  

    செங்காத்தில் ஒரு தத்தை 

    நேற்று காரில் சென்று கொண்டிருந்த போது கருத்தம்மா படத்திலிருந்து “காடு பொட்டக் காடு செங்காத்து வீசும் காடு” என்ற பாட்டு ஓடியது.

    கவிஞர் வைரமுத்து எழுதி ஏ.ஆர்.ரகுமான் இசையில் இயக்குனர் பாரதிராஜாவும் பாடகர் மலேசியா வாசுதேவனும் டி.கே.கலாவும் இணைந்து பாடிய அற்புதமான பாடல் அது.

    மழை கண்டு அறியாத கரிசல் காட்டின் நிலையைச் சொல்லும் பாடல் அது. அதில் கீழ்க்கண்ட வரிகளைக் கேட்கும் போது சிந்தனை ஓடியது.

    மாடு தத்த மாடு
    அது ஓடும் ரொம்ப தூரம்
    வாழ்க்க தத்த வாழ்க்க
    இது போகும் ரொம்ப காலம்

    ஏழ்மையைச் சொல்லும் சோக வரிகளானாலும் வளமையும் அழகும் நிறைந்த கருத்துள்ள வரிகள்.

    மாடு என்றாலே விறுவிறுப்பும் ஓட்டமும் தான். ஆனால் இங்கு மாட்டையே தத்த மாடு என்கிறார் கவிஞர்.

    வேகம் குறைந்த மாட்டைத்தான் தத்த மாடு என்பார்கள். அந்த மாடுதான் தத்தித் தத்தி கரிசல் மக்களின் உழவுக்குப் பயன்படுகிறது. அப்படியான மாட்டைப் பயன்படுத்துகிறவர்கள் வாழ்க்கையும் தத்தித் தத்தித்தான் போகிறது. அதுதான் “வாழ்க்க தத்த வாழ்க்க”.

    தத்தை என்ற சொல் கிளியைக் குறிப்பது. தத்தித் தத்தி நடப்பதால் அதற்குத் தத்தை என்று பெயர்.

    செவ்வாய்க் கிளியைத் தத்தை என்றலும்
    நூல் – தொல்காப்பியம்
    அதிகாரம் – பொருளதிகாரம்
    இயல் – மரபியல்
    எழுதியவர் – தொல்காப்பியர்

    ஆகா கிளி என்ற சொல் தொல்காப்பியர் காலத்திலேயே இருந்திருக்கிறது. அதை இன்றும் சிதையாமல் பயன்படுத்தி வருகிறோம். என்ன… பலர் வாயில் கிளி என்பது கிலியாக வருகிறது.

    செக்கச் சிவந்த வாயினை உடைய கிளிக்கு தத்தை என்று மற்றொரு பெயரும் உண்டு.

    கிளியைச் சொன்னால் அடுத்து தொல்காப்பியர் எதைப் பற்றி சொல்லியிருக்க வேண்டும்? ஆம். பூனையைத்தான். அதனால்தானோ என்னவோ நாமும் கிளியை வளர்த்து பூனை கையில் கொடுப்பதாக பழமொழி சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

    செவ்வாய்க் கிளியைத் தத்தை என்றலும்
    வெவ்வாய் வெருகினைப் பூசை என்றலும்

    வெருகு என்பதும் பூனையையே குறிக்கும். பூசை என்றும் அதற்குப் பெயர் உண்டு. மலையாளத்தின் இன்றும் தத்தம்மே என்பது கிளியையும் பூச்சா என்பது பூனையையும் குறிக்கும்.

    தத்தம்மே பூச்சா பூச்சா” என்று மலையாளத் திரைப்படப் பாடலே உண்டு.

    ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியின் கதாநாயகன் சீவகன். அவனுக்கு பல மனைவியர். அவர்களில் ஒருத்திக்கு தத்தை என்றே பெயராம். அவளுக்குத் தத்தை என்று பெயர் இருப்பதால் தான் அவள் முதல் மனைவியாக பட்டத்தரசியாக இருந்தாள் என்று திருத்தக்கதேவர் சொல்கிறார்.

    இன்னொரு கிளி தகவல். எல்லாக் கடவுள்களுக்கும் வாகனம் உண்டல்லவா. அதுபோல கிளியும் ஒரு கடவுளுக்கு வாகனம். எந்தக் கடவுளுக்கு என்றா கேட்கின்றீர்கள்? அன்றாடம் மக்களையெல்லாம் பாடாப் படுத்தும் மன்மதக் கடவுளின் வாகனம் தான் கிளி.

    பாடல் – காடு பொட்டக் காடு
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர்கள் – மலேசியா வாசுதேவன், டி.கே.கலா, பாரதிராஜா
    இசை – ஏ.ஆர்.ரகுமான்
    படம் – கருத்தம்மா
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=4T0aPXIl3tM

    அன்புடன்,
    ஜிரா

    326/365

     
    • Uma Chelvan 6:23 pm on October 24, 2013 Permalink | Reply

      தத்தை என்பது இங்கே இந்த பெண்ணா அல்லது கிளியா ??

    • Madhav 7:36 pm on October 24, 2013 Permalink | Reply

      //வேகம் குறைந்த மாட்டைத்தான் தத்த மாடு என்பார்கள்//
      Any proof for this ? entha oorla ippadi solranga?

    • Madhav 3:43 pm on October 25, 2013 Permalink | Reply

      //வேகம் குறைந்த மாட்டைத்தான் தத்த மாடு என்பார்கள் //
      Please , I need answer for this , I haven’t heard such word like “thaththa” , so that i am asking in which part of tamilnadu people using that word. Please just clear my doubt , its ok if u don’t publish this comment.

  • என். சொக்கன் 8:53 pm on October 22, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு: சிரித்து வாழவேண்டும் 

    வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும் என்றார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.மனிதன் ஒருவன்தான் சிரிக்க தெரிந்தவன்,சிரித்து  கவலையை மறக்க தெரிந்தவன்,சிரியுங்கள் மனிதர்களே,இதை விட மருந்தில்லை வாழ்க்கையிலே என்று அமரகாவியம் படத்தில் பாடல் எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே என்ற கவியரசரின் வார்த்தைக்கு இசையோடு சிரிப்பை இணைத்து ரசிக்க வைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.வாய் விட்டு சிரிப்பது மன அழுத்ததை குறைக்கும் என்பதால் கோபபடும் போது கூட சிரிப்பது போல வசூல்ராஜா படத்தில் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தை நகைச்சுவையாக காட்டியிருப்பார்கள்.சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்,பொம்பளை சிரிச்சா போச்சு,சிரித்தாலும் போதுமே,ஆணவ சிரிப்பு ஆனந்த சிரிப்பு என்று பல சிரிப்பு பாடல்கள் இருந்தாலும் இந்த மூன்று பாடல்கள் மனம் கவரும் வகையில் அமைந்தவை. தமிழ் பாடல் உலகின் மூவேந்தர்கள் எழுதியவை.மூன்றுமே வித்தியாசமான சூழல் அமைந்தவை.

    இவரும் வசூல்ராஜா பிரகாஷ்ராஜ் போல “நல்ல மனிதர் போர்வையில் சிலர் செய்யும் அநியாயங்களை பட்டியலிட்டு மனம் நொந்து” சிரித்து பாடுவதாக அமைந்தது-

    “மேடையேறி பேசும்போது ஆறு போல பேசு-கீழ இறங்கி போகும்போது சொன்னதெல்லாம் போச்சு-உள்ள பணத்தை பூட்டி வெச்சு வள்ளல் வேஷம் போடு,ஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு நல்லகணக்கை மாத்தி கள்ளகணக்கை ஏத்தி நல்ல நேரம் பார்த்து நண்பனை ஏமாத்து”…சிரிப்பு வருது சிரிப்பு வருது”சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலை பார்த்து சிரிப்பு வருது…..என்று அருமையாக எழுதியிருப்பார் கவியரசர்.

    அடுத்து சில தீயவர்களால் மிரட்டப்பட்டு சிரிப்பையே தொலைத்திருந்த தன் தங்கை அச்சத்தை விட்டு சிரிக்கும்போது ஒரு அண்ணன் மனமகிழ்ந்து பாடும் பாடல் –

    “வசந்தம் சிரித்தாலே வண்ண தேன் பூ மலரும்,வைகை சிரித்தாலே மதுரை வாழ்வு பெறும்

    அம்பிகை சிரித்தாலேஆலயம்அழகொளிரும் -அம்மமா நீ சிரித்தால் அண்ணனின் மனம் குளிரும்”- என்று உவமையோடு கலக்கியிருப்பார் கவிஞர் வாலி-தங்கச்சி சிரித்தாளே செவ்விதழ் விரித்தாளே-மல்லிகை சிரிப்பாலே மௌனம் கலைத்தாளே….

    இன்னொரு வகையான பாடல் -“கலகலவென சிரி கண்ணில் நீர் வர சிரி -சிரிக்க தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்று பெயர்,சிரிக்க மறந்த மனிதனுக்கு மிருகம் என்று பெயர் ” என்று ஒரு சிறிய விழாவில் நகைச்சுவை பரிமாற்றமாக அமைந்த பாடல்-பாக்கு மாற்றி கொள்வது போல ஜோக்கு மாற்றி கொள்வோமே,சிரி சிரி சிரி சிரி… என்று வித்தியாசமாக அமைந்த கவிஞர் வைரமுத்துவின் சிரிப்பு பாடல்.

    என்ன…கவலைகளை கொஞ்சம் ஒதுக்கி நாமும் சிரித்து மகிழ்வோமே ….

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்:

    பாடல்-சிரிப்பு வருது சிரிப்பு வருது

    படம்-ஆண்டவன் கட்டளை

    எழுதியவர்-கவியரசர் கண்ணதாசன்

    பாடியவர்-சந்திரபாபு

    இசை-விஸ்வநாதன் ராமமூர்த்தி

    பாடலின் சுட்டி- http://youtu.be/54qGTIOkuww

    பாடல்-தங்கச்சி சிரித்தாளே

    படம்-சிவப்பு சூரியன்

    எழுதியவர்-கவிஞர் வாலி

    பாடியவர்-மலேஷியா வாசுதேவன்

    இசை-எம்.எஸ்.விஸ்வநாதன்

    பாடலின் சுட்டி- http://youtu.be/QML2Nn-fhy0

    பாடல்-சிரி சிரி சிரி சிரி

    படம்-ஆளவந்தான்

    எழுதியவர்-கவிஞர் வைரமுத்து

    பாடியவர்கள்-கமலஹாசன்,மகாலக்ஷ்மி ஐயர்

    இசை-ஷங்கர் இஷான் லாய்

    பாடலின் சுட்டி –  http://youtu.be/PySy84R-DDo

    நா. ராமச்சந்திரன்

    பிறந்தது கடலூர், என்றாலும் வளர்ந்ததெல்லாம் சிங்காரச் சென்னைதான். ஒரு தனியார் நிறுவனத்தில் பணி. தற்போது பெங்களுரில் வசிக்கிறேன். ட்விட்டர் முகவரி: http://twitter.com/rajinirams

     
    • amas32 10:41 pm on October 22, 2013 Permalink | Reply

      அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு, இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்த சிரிப்பு. இதுவும் ஒரு அருமையான் பாடல். ரிக்சாக்காரன் படத்தில் குழந்தையைப் பார்த்து MGR பாடும் பாடல். இந்தப் பாடலில் அனைத்து வரிகளும் அருமை.

      ஆளவந்தான் படப் பாடல், சிரி சிரி சிரி சிரி ஒரு வித்தியாசமானப் பாடல், எனக்கு ரொம்பவும் பிடிக்கும் 🙂

      நல்ல பதிவு, எப்பொழுதும் போல 😉

      amas32

      • rajinirams 9:37 am on October 23, 2013 Permalink | Reply

        மிக்க நன்றி amas32

    • Uma Chelvan 12:25 am on October 23, 2013 Permalink | Reply

      மார்கழி பனி போல் உடை அணிந்து
      செம்மாதுளம் கனி போல் இதழ் கனிந்து

      சிரித்தால் தங்க பதுமை..
      அட அட என்ன புதுமை …….very beautiful and a very very beautiful post!!!

      • rajinirams 9:37 am on October 23, 2013 Permalink | Reply

        Uma Chelvan மிக்க நன்றி

    • மின்னல்சுதா (@sweetsudha1) 1:12 pm on October 23, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு !! தகுந்த பாடல்களை மேற்கோளிட்டு காட்டியிருந்தது பதிவுக்கு அழகு சேர்த்தது !! இன்னும் நிறைய எழுதவும் !!

      • rajinirams 10:05 pm on October 23, 2013 Permalink | Reply

        மிக்க நன்றி

  • G.Ra ஜிரா 8:26 pm on October 11, 2013 Permalink | Reply  

    குடும்பம்: ஒரு கதம்பம் 

    70களிலும் 80களிலும் வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத அம்சமாக விளங்கியவை குடும்பப் பாடல்கள்.

    இந்தப் பாடல்களில் குடும்பப் பாசம் முன்னிறுத்தப் படும். நேர்மையும் நல்ல பண்புகளும் ஒழுக்கம் போற்றப் படும். பொதுவாகவே ஒரே பாடல் மகிழ்ச்சியோடு முதலில் சோகத்தோடு பிறகும் பாடப்படும்.

    மகிழ்ச்சியாகப் பாடிய பின்னர் குடும்பம் பிரியும். சோகமாகப் பாடிய பிறகு சேர்ந்துவிடும். இது படம் பார்க்கும் சராசரி ரசிகனுக்கும் தெரிந்த உலக உண்மை.

    சோகமான பாடலைப் பாடினால் இளகிய மனம் உடையவர்கள் அழுது விடவும் வாய்ப்புண்டு. ஆகையால்தான் இந்த மாதிரி பாடல்களைக் கேட்கும் போது கையில் கைக்குட்டை…. இல்லை இல்லை. கைத்துண்டு இருந்தால் நல்லது.

    குடும்பப் பாட்டு என்றதும் முதலில் எனக்குத் தோன்றியது நாளை நமதே படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் தான்.

    அன்பு மலர்களே
    நம்பி இருங்களேன்
    தாய் வழி வந்த சொந்தங்கள் எல்லாம்
    ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே

    இந்தப் பாடலைப் பாடி முடித்ததும் குடும்பம் முழுவதுமே பிரிந்து விடும். குழந்தைகள் பெரியவர்களாகித்தான் ஒன்று சேர்வார்கள்.

    இன்னொரு பாடல் உண்டு. இதுவும் குடும்பப் பாட்டுதான். ஆனால் வளர்ந்தவர்களின் குடும்பப்பாட்டு. அண்ணன் தம்பிகள் பாடும் பாட்டு. மகிழ்ச்சியாக பாட்டைப் பாடிய பின்னால் குடும்பத்தில் சண்டை வந்து அவர்களும் பிரிந்துதான் போனார்கள். படம் முடியும் முன்னர் மூத்த அண்ணன் இறக்கும் போது ஒன்று சேர்வார்கள்.

    முத்துக்கு முத்தாக
    சொத்துக்கு சொத்தாக
    அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
    கண்ணுக்குக் கண்ணாக
    அன்பாலே இணைந்து வந்தோம்
    ஒன்னுக்குள் ஒன்னாக

    இவர்கள் அண்ணன் தம்பிகள் என்றால், அண்ணனுக்கும் தங்கைக்கும் கூட குடும்பப் பாட்டு வைத்தது தமிழ் சினிமா.

    பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
    ஊர்வலம் வருகின்றது
    அன்பு பொங்கிடும் அன்புத் தங்கையின் நெற்றியில்
    குங்குமம் ஜொலிக்கின்றது

    சினிமா வழக்கப்படி அண்ணனும் தங்கையும் பிரிந்து விடுகிறார்கள். பின்னொரு காட்சியில் அண்ணன் அந்தப் பாடலை ஒரு திருமண வரவேற்பில் பாடும் போது காலில்லாத தங்கை நடக்க முடியாமல் நடந்து ஓடமுடியாமல் அழ முடியாத அளவுக்கு அழுது…. கடைசியில் அண்னனைக் காண முடியாமல் போன போது திரையரங்குகளில் சிந்திய கண்ணீர் ஆற்றிலேயே ஆடிப்பெருக்கு கொண்டாடியிருக்கலாம்.

    கிட்டத்தட்ட இதே போல இன்னொரு குடும்பம். தாய் தந்தை இழந்து அனாதைகளான அக்காவும் தம்பிகளும். அவர்களுக்கும் ஒரு பாடல் எழுதினார் கலைஞர் கருணாநிதி.

    காகித ஓடம் கடலலை மேலே
    போவது போலே மூவரும் போவோம்

    இந்தப் படத்தில் முதலில் மகிழ்ச்சியாகவும் பிறகு சோகமாகவும் பாட மாட்டார்கள். முதலில் சோகமாகவும் அடுத்து பெரும் சோகமாகவும் பாடி படம் பார்த்த மக்களை கதறக் கதறக் கூக்குரலிட்டு அழவைத்ததை மறக்க முடியுமா? எப்போதோ பிரிந்து போன தம்பி குடிபோதையில் எதிரில் இருப்பது அக்கா என்று தெரியாமலே தவறிழைக்க நெருங்குவான். சோகத்தின் உச்சியில் அந்நேரம் அக்கா அந்தப் பாடலைப் பாட திருந்துகிறான் தம்பி. அரிவாள்மனையில் கழுத்தை அறுத்துக் கொண்டு குடும்பத்தை இணைக்கிறாள் அக்கா.

    இன்னொரு குடும்பப் பாடல் உண்டு. இந்தப் பாடல் நடிகர் திலகத்துக்கு. மகிழ்ச்சியான குடும்பம். சந்தர்ப்பத்தால் மூலைக்கொன்றாய் பிரிகிறது. பிறகென்ன… படம் முடியும் போது எல்லாம் சுபம்.

    ஆனந்தம் விளையாடும் வீடு
    இது ஆனந்தம் விளையாடும் வீடு
    நான்கு அன்பில்கள் ஒன்றான கூடு
    இது ஆனந்தம் விளையாடும் வீடு

    பிரிந்தால் குடும்பமாகத்தான் பிரிய வேண்டுமா? கணவனும் மனைவியும் பிரிந்தால்? நிறைமாதமாக இருக்கும் மனைவிக்கு கணவன் ஒரு பாடல் பாடுகிறான். அவன் பாடலைப் பாடிய வேளை இருவரும் பிரிய வேண்டியதாயிற்று.

    மலர் கொடுத்தேன்
    கை குலுங்க வளையலிட்டேன்
    மங்கை எந்தன் ராஜாத்திக்கு நானே
    இதுவொரு சீராட்டம்மா
    என்னையும் தாலாட்டம்மா

    பிரிந்த கணவன் காஷ்மிரில் இருக்க… மனைவி டில்லியில் இருக்க.. ஒரு தற்செயலான தொலைபேசி அழைப்பு இருவரையும் பேச வைக்கிறது.

    எதிர்முனையில் பேசுவது கணவன் என்று தெரிந்ததும் கே.ஆர்.விஜயா அதிர்ச்சியில் போனை கீழே போட்டு விடுவார்… அப்போது “சுமதீஈஈஈஈஈஈஈஈஈஈ” என்று நடிகர் திலகம் சிம்ம கர்ஜனை செய்யும் போது அடுத்த காட்சிக்காக வெளியே காத்திருந்தவர்கள் காதிலும் விழும். இந்தக் காட்சியில் கீழே விழுந்துவிட்ட கே.ஆர்.விஜயா கை நழுவவிட்ட தொலைபேசியை எடுப்பாரா இல்லையா என்ற அதிர்ச்சி தாங்காமல் திரையரங்கில் ஒருவருக்கு மாரடைப்பு வந்ததாகச் சொல்வார்கள்.

    தமிழ்த் திரைப்படத்தின் தன்மை மாறிக் கொண்டிருந்த எழுபதுகளின் இறுதியில் மிகப் பழம் பெருமை வாய்ந்த இயக்குனர் டி.ஆர்.சுந்தரம் ஒரு திரைப்படம் எடுத்தார். அந்தப் படத்திலும் ஒரு குடும்பப் பாட்டு. அவர்கள் குடும்பத்தோடு இன்னொரு உறுப்பினராக நிலா.

    வெண்ணிலா வெள்ளித்தட்டு
    வானிலே முல்லை மொட்டு

    இந்தப் படத்திலும் பிரிந்த அண்ணன் தம்பி தங்கைகள் படம் முடிவதற்கு முன்னால் குய்யோ முய்யோ என்று கதறிக் கொண்டு ஒன்று சேர்ந்தார்கள் என்றும் அவர்களின் மூத்த அண்ணன் உயிரைக் கொடுத்து மற்றவர்களைக் காப்பாற்றினான் என்றும் சொல்லி கிண்டலடிக்க விரும்பவில்லை.

    இது போன்ற குடும்பப் பாட்டுகள் குறைந்து விட்ட காலத்தில் ஒரு குடும்பப் பாட்டு வந்தது. அதுவும் கலைப்பட இயக்குனர் ஒருவரால் கொண்டுவரப்பட்டது. பாலுமகேந்திரா இயக்கிய நீங்கள் கேட்டவை திரைப்படப் பாடலைத்தான் சொல்கிறேன்.

    சிறுவயதில் அம்மா பாடிய பாட்டை நினைவில் வைத்துக் கொண்டு பின்னாளில் அண்ணனும் தம்பியும் சேர்கிறார்கள். அம்மாவைக் கொன்றவனைப் பழி வாங்குகிறார்கள்.

    பிள்ளை நிலா
    இரண்டும் வெள்ளை நிலா
    அலை போலவே
    மனம் விளையாடுதே

    இதில் அம்மாவாக பாடும் எஸ்.ஜானகி குரலில் பிள்ளை நிலா என்றும் மகனுக்காக ஏசுதாஸ் அவர்கள் பாடும் போது பில்லை நிலா என்றும் உங்கள் காதில் விழுந்தால் என்னைக் குற்றம் சொல்லாதீர்கள்.

    இதுவரை நாம் பார்த்ததெல்லாம் குடும்பப் பாட்டுகளே அல்ல என்னும் அளவுக்கு 90களில் ஒரு குடும்பப் பாட்டு வந்தது. இதுவரை நாம் மனிதர் உணர்ந்து கொள்ள மனிதக் குடும்பப் பாட்டுகளைப் பார்த்தோம்.

    ஆனால் ”காக்கை குருவி எங்கள் சாதி” என்று பாரதி சொன்னதை ஒவ்வொரு படத்திலும் பாம்பை டைப் அடிக்க வைத்தும் குரங்கை பைக் ஓட்ட வைத்தும் யானையை சைக்கிள் ஓட்ட வைத்தும் நிரூபித்துக் கொண்டிருக்கும் இயக்குனர் இராம.நாராயணன் எடுத்த படமான துர்காவில் ஒரு குடும்பப் பாட்டு உண்டு.

    பாப்பா பாடும் பாட்டு
    கேட்டு தலைய ஆட்டு
    மூணு பேரும் ஒன்னுதானே
    அம்மாவுக்கு கண்ணுதானே
    ஒன்னா விளையாடலாம்

    அந்தப் பாடலைக் கேட்டதுமே பிரிந்து போன நாயும் குரங்கும் எங்கெங்கோ இருந்து ஓடி வந்து பேபி ஷாமிலியைச் சேரும் காட்சி படம் பார்க்கின்றவர்களின் நெஞ்சை உருக்கும். மனதை கிறுகிறுக்க வைக்கும். சித்தத்தை பைத்தியம் பிடிக்க வைக்கும்.

    எப்படியெல்லாம் நாம் சிக்கியிருக்கிறோம் பார்த்தீர்களா?!?

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – அன்பு மலர்களே நம்பி இருங்களேன்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர் – (மகிழ்ச்சி – பி.சுசீலா, அஞ்சலி, ஷோபா, சசிரேகா) (சோகம் – டி.எம்.சௌந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்ரமணியம்)
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – நாளை நமதே
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=ED6zDjOZXtw

    பாடல் – முத்துக்கு முத்தாக
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – கண்டசாலா
    இசை – கே.வி.மகாதேவன்
    படம் – அன்புச் சகோதரர்கள்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=-gyJT1nQDnM

    பாடல் – பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
    வரிகள் – புலவர் புலமைப்பித்தன்
    பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – நினைத்ததை முடிப்பவன்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Azrz41LaLeo

    பாடல் – ஆனந்தம் விளையாடும் வீடு
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – சந்திப்பு
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=bzRQIs5OIuA

    பாடல் – மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன்
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – திரிசூலம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=-oUNmu4edLA

    பாடல் – வெண்ணிலா வெள்ளித்தட்டு
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – மலேசியா வாசுதேவன், பி.எஸ்.சசிரேகா, எஸ்.பி.ஷைலஜா
    இசை – ராஜேஷ்
    படம் – காளி கோயில் கபாலி
    பாடலின் சுட்டி – http://youtu.be/GfWzFhWRuHs

    பாடல் – பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர் – எஸ்.ஜானகி (மகிழ்ச்சி), கே.ஜே.ஏசுதாஸ்(சோகம்)
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – நீங்கள் கேட்டவை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=XvrB5UA0Kl0

    பாடல் – பாப்பா பாடும் பாட்டு
    வரிகள் – தெரியவில்லை
    பாடியவர் – எம்.எஸ்.ராஜேஸ்வரி
    இசை – சங்கர் – கணேஷ்
    படம் – துர்கா
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Vg0kYE6CnWA

    அன்புடன்,
    ஜிரா

    314/365

     
    • Uma Chelvan 9:36 pm on October 11, 2013 Permalink | Reply

      It is really funny to read your post GiRa., .பொதுவாக காதலன் காதலி அன்பைத்தான் ” செம்புல பெயல் நீர் போல் ” னு சொல்லுவாங்க. ஆனால் இங்கே அண்ணன் தங்கை பாசத்தயும் “செம்மணிலே தண்ணீரை போல் உண்டான சொந்தம் இது ” என்று பாடுகிறார் ஒரு அண்ணன். என்ன ஒரு அருமையான பாடல்!!! இந்த ராஜா வேற எல்லாத்துக்கும் ஒரு பாட்ட போட்டு வைச்சு நம்மை படுத்தி எடுக்கிறார் !!!!!!:::::)))))))))

    • rajinirams 2:12 am on October 12, 2013 Permalink | Reply

      செம பதிவு.வித்தியாசமான சிந்தனை.நல்ல திறனாய்வு.இது போல பல பாடல்களிருந்தாலும் சட்டென நினைவு வரும் சில பாடல்கள்-என் பங்கிற்கு-1,நான் அடிமை இல்ளை-ஒரு ஜீவன் தான்-வாலி2,மவுன கீதங்கள்-மூக்குத்தி பூ மேலே-வாலி 3,சின்னதம்பி-நீ எங்கே-வாலி.4,ப
      ட்டிக்காடா பட்டணமா-அடி என்னடி ராக்கம்மா-கண்ணதாசன் 5,நீதிக்கு தலை வணங்கு-இந்த பச்சைக்கிளிக்கொரு(சோகமில்லை)-புலமைப்பித்தன் 6,கல்யாண ராமன்-ஆஹா வந்துருச்சு-காதல் தீபம் ஒன்று-பஞ்சு அருணாசலம்.7,கல்யாண பரிசு-உன்னைக்கண்டு-பட்டுக்கோட்டையார்.8,உழைப்பாளி-அம்மாஅம்மா-வாலி 9,புதுக்கவிதை-வெள்ளைப்புறா ஒன்று-வைரமுத்து 10,கொக்கரக்கோ-கீதம் சங்கீதம்-வைரமுத்து 11,வீட்ல விசேஷங்க-மலரே தென்றல் பாடும்-வாலி.நீங்கள் குறிப்பிட்ட பாப்பா பாடும் பாட்டு உள்ளிட்ட துர்கா படப்பாடல்கள் வாலி எழுதியவையே. நன்றி

    • amas32 9:01 pm on October 14, 2013 Permalink | Reply

      நீங்க எந்த ஒரு டாபிக் எடுத்தாலும் அலசி ஆராய்ந்து சூப்பராக எழுதுகிறீர்கள் ஜிரா! குடும்பப் பாடல்கள் அந்தக் காலப் படங்களில் கண்டிப்பாக இருந்தன, இந்தக் கால டாஸ்மாக்கில் குடித்துப் பாடும் பாடல்கள் போல.

      காற்றில் வரும் கீதமே http://www.youtube.com/watch?v=pnteqlhXlS4 இதுவும் அழகான ஒரு குடும்பப் பாடல் 🙂

      amas32

  • G.Ra ஜிரா 7:55 pm on September 8, 2013 Permalink | Reply  

    வேறிடம் 

    பிறந்த இடம் ஒன்றிருக்க அங்கிருந்து பிடுங்கியெடுத்து வேறொரு இடத்தில் வளரவிடுவது நியாயமா?

    எதையென்று கேட்கின்றீர்களா? செல்வத்தில் எல்லாம் பெரிய செல்வமாக நாம் கொண்டாடும் பிள்ளைச் செல்வத்தைதான் சொல்கிறேன்.

    பெற்ற குழந்தையை அப்படியே எடுத்துக் கொடுத்துவிட எந்த சராசரித் தாயும் சம்மதிக்க மாட்டாள். அது ஒரு பெரும் துன்பம். அப்படிக் குடுத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். குடுத்த பிறகு அவர்கள் கடைசி வரை முழுமையாக உரிமையைச் சொல்லிக்கொள்ள முடியாத நிலையே உண்டாகியிருக்கிறது.

    அன்பைத்தேடி என்றொரு படம். அந்தப் படத்தின் நாயகி ஒரு குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கிறாள். ஆனால் அந்தக் குழந்தை அவளுக்கல்ல. அவளது கணவன் தவறுதலாகத் தொலைத்து விட்ட அக்காவின் குழந்தைக்கு மாற்றாக கொடுப்பதற்காக இந்தக் குழந்தையை பெறப் போகிறாள்.

    கொடுக்கப் போகிறோம் என்ற நினைப்பே அவளைச் சுடுகிறது. அந்தச் சூட்டில் சொற்கள் பாடலாகி மாறி அழுகையோடு கலந்து வருகிறது.

    சிப்பியிலே முத்து – அது சிப்பிக்கென்ன சொந்தம்
    தென்னையிலே இளநீர் – அது தென்னைக்கென்ன சொந்தம்
    ஓங்கி வரும் முல்லை – அது ஒரு கொடியின் பிள்ளை
    எடுத்துக் கொண்டு போனால் – அது கொடிக்குச் சொந்தமில்லை

    அவள் சொல்கின்ற ஒவ்வொன்றும் அவளுடைய நிலையை உணர்த்துகின்றன. எந்தச் சிப்பியாலும் முத்தை எடுக்கின்றவர்களைத் தடுக்க முடியாது. அதே நிலைதான் தென்னைக்கும் முல்லைக் கொடிக்கும். அப்படியொரு கையறு நிலையில்தான் அவள் இருக்கிறாள்.

    அவளைப் போலவே பழங்கதைகளில் துன்பப்பட்டவர்கள் இருந்தார்கள் என்பது நினைவுக்கு வருகிறது. அவர்களையும் பாட்டில் சொல்கிறாள்.

    கர்ணன் எனும் வள்ளலுக்கும் அன்னை சொந்தமில்லை
    கண்ணன் எனும் தெய்வம் கூட இரண்டு வீட்டுப் பிள்ளை

    எவ்வளவு சத்தியமான வரிகள்! வாணி ஜெயராம் பாடிய இந்தப் பாடலை கவியரசர் கண்ணதாசனைத் தவிர யார் எழுதியிருக்க முடியும்!

    இதே போல பணம் படைத்தவன் படத்தில் இன்னொரு பாடல் உண்டு. பிரிந்து போன குடும்பத்தை ஒன்று சேர்ப்பதற்காக தன் குழந்தையை தம்பி குழந்தையாக நடிக்கக் கொடுக்கிறான் அண்ணன். அதற்கு அவன் மனைவியும் உடந்தை. கொடுத்ததுதான் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு நிம்மதியாக இருந்தார்களா?

    மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க
    மன்னவன் மட்டும் அங்கிருக்க
    காணிக்கையாக யார் கொடுத்தார்
    அவள் தாயென்று ஏன் தான் பேர் எடுத்தாள் (அவன்)
    அது கடமை என்றே நான் கொடுத்தேன் (அவள்)

    வாலி எழுதிய அருமையான பாடல் இது. ஒரு குடும்பம் ஒன்றாக வேண்டும் என்று நல்ல எண்ணத்தில் கொடுத்த காணிக்கைதான். ஆனால் பெற்ற குழந்தையின் பிரிவு வாட்டுகிறதே!

    கொடியில் பிறந்த மலரை
    கொடி புயலின் கைகளில் தருமோ!
    மடியில் தவழ்ந்த மகனை
    தாய் மறக்கும் காலம் வருமோ!

    யோசித்துக் கொடுத்தாலும் யோசிக்காமல் கொடுத்தாலும் இப்படிப் புலம்புவதை தவிர்க்க முடியாதுதான். ஆனாலும் அவளுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவளால் பிரிந்த குடும்பம் அவள் பெற்ற மகனால் சேரும் என்று நம்புகிறாள்.

    இன்று நாளை மாறும்
    நம் இதயம் ஒன்று சேரும்
    சென்ற மகனும் வருவான்
    முத்தம் சிந்தை குளிரத் தருவான்!

    அவள் எண்ணம் கதையில் பலித்து அனைவரும் ஒன்றாக இருந்து மகிழ்ந்தார்கள்.

    பெற்றவர்கள் நிலை இப்படியிருக்க… அப்படிக் கொடுக்கப்பட்ட பிள்ளையின் நிலை எப்படியிருக்கும்? அதை பணக்காரன் படப்பாடலில் மு.மேத்தா எழுதியிருக்கிறார்.

    பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
    பெத்த கடனுக்குத்தான் என்ன வித்து வட்டியக் கட்டிப்புட்டா
    பிள்ளையின் மனது பித்தாச்சு இங்க பெத்தவ மனசு கல்லாச்சு
    இன்னொரு மனசு என்னாச்சு அது முறிஞ்சு போன வில்லாச்சு

    தத்துக் கொடுக்கப்பட்ட பிள்ளைகள் உண்மையான பெற்றோர்கள் மீது ஒரு நெருடலான அன்பையே காட்டுவார்கள் என்பதை இந்தப் பாடலில் மு.மேத்தா சொல்லியிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன்.

    முருகனால் வேண்டுமானால் பார்வதி மீதும் கார்த்திகைப் பெண்கள் மீதும் சமமாக அன்பு காட்ட முடியலாம். ஆனால் மனிதர்களுக்கு அந்த அளவுக்கு வலிமையான உள்ளம் இல்லை என்றே தோன்றுகிறது.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – சிப்பியிலே முத்து
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – வாணி ஜெயராம்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – அன்பைத் தேடி
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=PuD5y0kY4RY

    பாடல் – மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன், எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.இராமமூர்த்தி
    படம் – பணம் படைத்தவன்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=8C-A5-Rja1o

    பாடல் – பெத்து எடுத்தவதான்
    வரிகள் – மு.மேத்தா
    பாடியவர் – மலேசியா வாசுதேவன்
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – வேலைக்காரன்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=xUeBwu4RDAQ

    அன்புடன்,
    ஜிரா

    281/365

     
    • Murugesan 11:59 pm on September 8, 2013 Permalink | Reply

      Nalla pathivu nandri jira

    • amas32 10:45 am on September 9, 2013 Permalink | Reply

      பிரிவின் துயரம் டிகிரி மட்டுமே வேறுபடும். அனைத்துப் பிரிவுகளும் சோகத்தைத் தருவது தான். பெண் புகுந்த வீடு செல்வதும் வளர்ந்த பயிரை பிடுங்கி வேறிடம் நடுவது போல் தான். அங்கே அன்பென்னும் நீரூற்றி, அறமென்னும் உரமிட்டு வளர்த்தால் திரும்ப நடப்பட்ட பெண்ணென்னும் பயிர் செழித்தோங்கி வளரும்.

      ஆனால் நீங்கள் இந்தப் பாடல்களில் குறிப்பிட்டு இருப்பது இளந்தளிர் பற்றியது. என் தோழியின் அக்கா தன் முதல் குழந்தையை குழந்தையில்லா தன நாத்தனாருக்குப் பெற்று ஈன்றாள். எவ்வளவு பெரிய தியாகம் இது! தத்துப் பற்றிய ஒரு உண்மை சம்பவத்தின் என் பதிவின் சுட்டி இங்கே http://amas32.wordpress.com/2013/07/26/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/

      amas32

    • uma chelvan 11:33 am on September 9, 2013 Permalink | Reply

      The Movie “Kulama Gunama” based on the same concept!!

    • rajinirams 9:31 am on September 10, 2013 Permalink | Reply

      அருமை-நல்ல நெகிழ்ச்சியான பதிவு. மூன்று பாடல்களுமே சூழ்நிலைக்கேற்ப அருமையாக எழுதப்பட்ட பாடல்கள்.”கோட்டை கட்டும் ராஜாவுக்கு பிள்ளை இல்லையாம்,குப்பை தொட்டி மட்டும் ஒரு பிள்ளை ஈன்றதாம்”-தாயும் இன்றி தந்தை இன்றி வாழும் பிள்ளை எங்கே செல்லும் சொல்லுங்களேன் என்ற பட்டாக்கத்தி பைரவனின் கவியரசர் வரிகளும்,சின்ன தாயவள் தந்த ராசாவே “முள்ளில்”தோன்றிய சின்ன ரோசாவே என்ற வாலியின் வரிகளும் இதே போன்று மனதை கணக்க வைக்கும் அற்புத வரிகளே. நன்றி.

  • mokrish 11:46 pm on August 14, 2013 Permalink | Reply  

    என்ன சத்தம் இந்த நேரம் 

    ஒரு நண்பருடன் கொஞ்ச நேரம்  பேசிக்கொண்டிருந்தேன்  அவர் பேச்சில் ஏதோ ஒன்று என் கவனத்தை ஈர்க்க, நிதானமாக யோசித்து  ரீவைண்ட் செய்து பார்த்தேன். அவர் டமால், டங்குன்னு, வெடுக்குனு, தொபுக், லொட லொட, சல்லுனு போன்ற வார்த்தைகள் போட்டே ஒவ்வொரு வாக்கியத்தையும் தொடுக்கிறார். பத்து நிமிடம் பேசினாலே அவரின் இந்த ஸ்டைல் தனியாகத் தெரியும்.

    தமிழ்நாட்டில் தினத்தந்தி பிரபலப்படுத்திய ‘சதக் சதக் என்று குத்தினான் குபுக்கென்று ரத்தம் வந்தது’ எல்லாரும் அறிந்தது. இது சித்திரக்கதைகளைப் படிப்பவர்களுக்கு பரிச்சயமான விஷயம். ஒரு பலூனில் Boom, whack, vroom போன்ற வார்த்தைகள் இருக்கும். இவை ஒலிக்குறிப்புச் சொற்கள். ஆங்கிலத்தில்  onomatopoeia. இது வார்த்தைகளோடு ஒலியையும் உணர்த்தும் ஒரு முறை. வார்த்தைகளே ஒலி போல் நடிக்கும்.

    திரைப்பாடல் எழுதும் கவிஞர்களுக்கு இந்த ஒலிக்குறிப்புச் சொற்கள் மேல் ஒரு அபார மோகம். கண்ணதாசன் பாசம் படத்தில் எழுதிய பாடல் ஒன்று (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் எஸ் ஜானகி)

    http://www.inbaminge.com/t/p/Paasam/Jal%20Jal%20Enum%20Salangai.eng.html

    ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
    சல சல சல வென சாலையிலே
    செல் செல் செல்லுங்கள் காளைகளே
    சேர்ந்திட வேண்டும் இரவுக்குள்ளே

    ஈரமான ரோஜாவே படத்தில் பிறைசூடன் எழுதிய ஒரு அருமையான பாடல் (இசை இளையராஜா பாடியவர்கள் மனோ எஸ் ஜானகி)

    http://www.youtube.com/watch?v=Eq9nsMZyyT8

    கலகலக்கும் மணியோசை

    சலசலக்கும் குயிலோசை

    மனதினில் பல கனவுகள் மலரும்

    இது போல் நிறைய பாடல்கள் உண்டு. ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களில் வரும் ஒமக சீயா இந்த வகையில் வராது.

    எனக்கொரு சந்தேகம். கண்ணதாசன் புதிய வார்ப்புகள் படத்தில் வான் மேகங்களே பாடலில் (இசை இளையராஜா பாடியவர்கள் மலேசியா வாசுதேவன் எஸ் ஜானகி)

    http://www.youtube.com/watch?v=Q8MPSbmZjy4

    பள்ளியில் பாடம் சொல்லி கேட்க நான் ஆசை கொண்டேன்

    பாவையின் கோவில் மணி ஓசை நீ கண்ணே

    டான் டான் டான் டான்

    சங்கின் ஓசை கேட்கும் நேரம் என்றோ ..

    சங்கின் ஒலிக்கு ஏன் டான் டான் டான்? இது ஏதோ பில்லா போல் டானா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

    மோகனகிருஷ்ணன்

    256/365

     
    • Rajaraman 1:24 am on August 15, 2013 Permalink | Reply

      டான் டான் டான் டான் –பாவையின் கோவில் மணி ஓசை ????

    • Arun Rajendran 2:33 am on August 15, 2013 Permalink | Reply

      சார்,

      எனக்கென்னமோ ஜானகி அம்மா பாடுற ”டான் டண்ட டான் “ ஒலி குறிப்பது கோவில் மணியையே…வாசு சார் பாடிய வரியின் ஒலியாக்கம் ..

      சங்கின் ஒலி -> பள்ளி(அறை)க்கு வந்தாச்சு இனி கல்/லவி எப்பொழுது துவங்குமோ என்று இலைமறைகாயாக தலைவி வினவுதல் ..

      இவண்,
      அருண்

  • G.Ra ஜிரா 11:58 am on August 9, 2013 Permalink | Reply  

    வெத்தல போட்ட ஷோக்குல! 

    ஒவ்வொரு நடிகர்களுக்கும் தான் எழுதியதில் பிடித்த பாடலைச் சொல்லும் போது வைரமுத்து அவர்கள் சரத்குமாருக்கு எழுதியதில் “கொட்டப்பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும்” பாட்டைக் குறிப்பிட்டாராம்.

    வெற்றிலை என்றதும் உடனே நினைவுக்கு வரும் அடுத்த பாடல் கண்ணதாசன் எழுதியது. “வெத்தலையப் போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி” என்று பில்லா படத்துக்காக எழுதினார்.

    கங்கை அமரனும் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்துக்காக “வெத்தலை வெத்தலை வெத்தலையோ கொழுந்து வெத்தலையோ” என்று எழுதினார்.

    வெத்தலை போடுவது” என்பது நாள் கிழமை திருவிழா திருமணம் என்று கூடினால் கட்டாயம் செய்ய வேண்டிய கடமை.

    முன்பெல்லாம் “வெத்தலை போடுவது” தினப்படி பழக்கமாகவே பலருக்கு இருந்தது. ஊர்ப்பக்கத்து பெரியவர்கள் பல்லெல்லாம் விழுந்த பிறகும் வெற்றிலையை பாக்கோடும் சுண்ணாம்போடும் உரலில் இடித்து மென்று தின்பதைக் காணலாம்.

    வெற்றிலை மடிப்பது என்பதே ஒரு கலை. அப்படி மடிப்பதற்குச் சரியான வெற்றிலையைத் தேர்ந்தெடுப்பது இன்னொரு கலை. தென்னாட்டில் கருவெத்தலை நிறைய கிடைக்கும். கொங்கு நாட்டிலும் சோழமண்டலத்திலும் வெள்ளவெத்தலை நிறைய விளையும்.

    கருவெத்தலையில் காரம் அதிகம். புதிதாக வெத்திலை போடுகின்றவர்களுக்கு வெள்ளவெத்திலைதான் சரி. சொகுசு வெத்திலை என்பார்கள்… செல்லப்பெட்டியில் (வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு வைத்துக் கொள்ளும் பெட்டி) வெள்ளவெத்திலையும் சீவலும் வாசனைச் சுண்ணாம்பும் வைத்துக் கொண்டு மென்று கொண்டேயிருக்கும் சொகுசாளிகளையும் உலகம் நிறையவே கண்டிருக்கிறது. தில்லானா மோகனாம்பாள் கதையில் வரும் சவடால் வைத்தியும் அந்த வகைதான்.

    ஆனால் சொகுசு வெத்திலை உழைக்கும் மக்களுக்கு போதாது. காரமாக இருக்க வேண்டும். அவர்கள் பெரும்பாலும் விரும்புவது காரவெத்திலையைத்தான்.

    பாக்கிலும் பலவகை உண்டு. கொட்டைப்பாக்கு, களிப்பாக்கு, வெட்டுப்பாக்கு, பாக்குத்தூள், வாசனைப் பாக்குத்தூள், சீவல் என்று அடுக்கலாம். கொட்டைப் பாக்கு உருண்டையாகவும் கடிப்பதற்கு கடுக்கென்றும் இருக்கும். களிப்பாக்கு மெல்வதற்கு எளிதானது. வெட்டுப்பாக்கு என்பது கொட்டைப் பாக்கை அரைவட்டமாக ஆரஞ்சுச் சுளை வடிவில் வெட்டி வைத்திருப்பது. பாக்குத்தூளைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. இப்போது அதுதான் கடைகளில் கிடைக்கிறது. பாக்கை மெல்லிசாக சீவியெடுத்தால் சீவல் கிடைக்கும்.

    வெற்றிலையின் காம்பைக் கிள்ளி.. நடுநரம்பை உரித்து… வெற்றிலையின் பின்பக்கத்தில் சுண்ணாம்பை ஆட்காட்டி விரலில் தொட்டு குழந்தைக்கு திருநீறு பூசுவது போல அளவாகப் பூச வேண்டும். பாக்குத்தூளை தேவைக்கு வைத்து மடித்துக் கொடுப்பது எல்லாருக்கும் எளிதில் கைவந்து விடாது.

    வெற்றிலை மடிக்கும் போது ஏதாவது ஒன்றின் அளவு கூடினாலோ குறைந்தாலோ வெற்றிலை போட்ட வாய் சிவக்காது. சுண்ணாம்பின் அளவு கூடினால் வாய் வெந்து போகும். பாசத்தோடு மடிக்கும் போதுதான் எல்லா அளவுகளும் சரியாக இருக்கும்.

    வெற்றிலை போடுவது பற்றி ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியில் இரண்டு பாடல்கள் உள்ளன.

    கைசெய்து கமழு நூறுங் காழ்க்கும்வெள் ளிலையுங்
    காம மெய்தநன் குணர்ந்த நீரா ரின்முக வாச மூட்டிப்
    பெய்தபொற் செப்பு மாலைப் பெருமணிச் செப்புஞ் சுண்ணந்
    தொய்யறப் பெய்த தூநீர்த் தொடுகடற் பவளச் செப்பும்

    மேலே சொன்ன பாடலின் முதல் வரியில் வெற்றிலையும் சுண்ணாம்பும் வருகிறது.

    கை செய்து கமுழும் நூறும் – இங்கே நூறு என்பது சுண்ணாம்பைக் குறிக்கும். நூறுதல் என்றால் அரைத்தல். சுண்ணாம்புக்கட்டிகளை அரைத்து மென்மையாக்கி வெற்றிலைக்கு ஏற்க செய்வதால் அதற்கு நூறு என்றே பெயர். (அந்தக்காலத்தில் கட்டிடங்களைக் கட்டுவதற்கும் சுண்ணாம்பு அரைப்பார்கள்)

    காழ்க்கும் வெள்ளிலையும் – வெள்ளிலை என்பது வெற்றிலையைக் குறிக்கும் பழைய பெயர். காழ்ப்புச் சுவையுடையது என்பதால் காழ்க்கும் வெள்ளிலை எனப்படுகிறது.

    இன்னொரு பாட்டைப் பார்க்கலாம்.

    கூந்த லேந்திய கமுகங் காய்க்குலை
    யாய்ந்த மெல்லிலை பளித மாதியா
    மாந்தர் கொள்ளைகொண் டுண்ண மாநில
    மேந்த லாம்படித் தன்றி யீட்டுவார்

    கூந்தலேந்திய கமுகங்காய்குலை” என்பது பாக்குமரத்தில் தொங்கும் பாக்குக்குலைகளைக் குறிக்கும். அந்த பாக்கோடு “ஆய்ந்த மெல்லிலை”… அதாவது வெற்றிலையையும் வாசனைப் பொருட்களையும் கலந்து மாந்தர்கள் உண்டார்களாம். அப்போதே சுண்ணாம்புக்கும் பாக்குக்கும் வாசனையேற்றும் வேலை நடந்திருக்கிறது.

    அந்த அளவுக்குப் பிரபலமாக இருந்த வெற்றிலைப் பழக்கம் இன்று கல்யாண வீடுகளிலும் ஓட்டல் வாசல் பான்பீடா கடைகளிலும் குறுகி விட்டது என்பது உண்மைதான். எது எப்படியோ.. கண்டதையும் வெற்றிலையில் கலந்து குதப்பி எல்லா இடங்களிலும் துப்பாமல் இருந்தாலே போதும்.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்தலையும் (நாட்டாமை, சிற்பி, எஸ்.ஜானகி, மனோ)
    வெத்தலைய போட்டேண்டி (பில்லா, எம்.எஸ்.விசுவநாதன், மலேசியா வாசுதேவன்)
    வெத்தல வெத்தல (ரோசாப்பூ ரவிக்கைக்காரி, இளையராஜா, மலேசியா வாசுதேவன்)

    அன்புடன்,
    ஜிரா

    251/365

     
    • kamala chandramani 2:20 pm on August 9, 2013 Permalink | Reply

      வெற்றிலை பாக்கை தாம்பூலம் என்பர். தாம்பூலம் மாத்தாம கல்யாணமா? எல்லா பூஜைகளிலும் முதலிடம் அதற்குத்தானே?”கர்ப்பூரவீடிகாமோத -ஸமாகர்ஷி – திகந்தராயை” என்கிறது லலிதா சஹஸ்ரநாமம். (ஏலம்,வவங்கம், பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, கேசரி, ஜாதிக்காய், ஜாதிபத்திரி முதலியவை கலந்த தாம்பூலம் கர்ப்பூர வீடிகா)
      ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை விசேஷம்! வாழ்க்கை பசுமையாக இருக்கவேண்டும் என்று வெற்றிலப் பழக்கம் ஏற்பட்டது போலும்! வெற்றிலை போடுவது ஒரு கலை! பிடித்தால் விடாது!

    • rajinirams 12:22 pm on August 14, 2013 Permalink | Reply

      சினிமா பாடல்களால் மட்டுமல்ல சீவக சீவகசிந்தாமணி பாடல்களை வைத்தும் வெத்தலை சீவல் பாக்கை வைத்து கலக்கியிருக்கிறீர்கள்-வழக்கம் போலவே.சூப்பர் பதிவு.

    • amas32 5:57 pm on August 14, 2013 Permalink | Reply

      எங்கள் வீட்டில் என் பாட்டியின் பாக்கு வெட்டி ஒன்று உண்டு. உங்கள் பதிவைப் படித்ததும் அதைத் தேடி கண்டுபிடிக்கும் ஆர்வம் வந்துள்ளது 🙂 திருமணம் ஆகாத இளைஞர்கள் வெற்றிலைப் பாக்குப் போடக் கூடாது என்று ஒரு ஐதீகம் உண்டு. திருமணத்தன்று தான் முதன் முதலில் மனைவி வெற்றிலை மடித்துக் கொடுப்பாள்!

      நல்ல விருந்துக்குப் பின் வெற்றிலைப் போட்டால் தான் நிறைந்த திருப்தி ஏற்படுவது என்னவோ உண்மை தான் 🙂

      amas32

  • என். சொக்கன் 11:48 pm on July 17, 2013 Permalink | Reply  

    ஒட்டாத உதடுகள் 

    • படம்: வில்லுப்பாட்டுக்காரன்
    • பாடல்: தந்தேன் தந்தேன்
    • எழுதியவர்: வாலி
    • இசை: இளையராஜா
    • பாடியவர்: மலேசியா வாசுதேவன்
    • Link: http://www.youtube.com/watch?v=0OFeSDoMf_8

    ஏழைகள் காதுகளில், செந்தேன் அள்ளிச் சேர்க்கிற கலைஞனடி,

    தென்னாட்டுல இருக்கிற இதயங்களைச் சங்கீதத்தில் ஈர்க்கிற இளைஞனடி!

    நாட்டுல கேட்டுக்கடி இசையில் இங்கு நான் செஞ்ச சாதனைதான்,

    நாக்குல இருக்குதடி, எடுத்துத் தர ஆயிரங்கீர்த்தனைதான்!

    இந்தப் பாடலைப்பற்றிச் சொல்வதற்கு ஓர் அபூர்வமான விஷயம் இருக்கிறது, இது ‘நிரோட்டகம்’ என்ற வகையைச் சேர்ந்த பாடல்.

    நிரோட்டகம் என்பது சமஸ்கிருதச் சொல், நிர் + ஓட்டகம், அதாவது, உதடுகள் ஒட்டாமல் பாடப்படுகிற பாடல்.

    தமிழில் எத்தனையோ பாவகைகள் இருப்பினும், இதை ஒரு விசேஷமான வகையாகக் குறிப்பிட்டு இலக்கணம் வரையறுத்திருப்பதாகத் தெரியவில்லை. சினிமாவிலும் இந்த ஒரு பாடலில் வாலியைத் தவிர வேறு யாரும் இந்த வகையில் முயற்சி செய்திருக்கிறார்களா என்று அறியேன்.

    ஆச்சர்யமான விஷயம், உதடு ஒட்டாமல் பாடுவது என்றாலும், இந்த வரிகளைப் படிக்கும்போது அந்த சிரமமே தெரியாது. மிகவும் லகுவாக எழுதியிருப்பார் வாலி.

    காரணம், தமிழில் உச்சரிக்கும்போது உதடு ஒட்டுகிற எழுத்துகள் குறைவுதான். ப், ம் மற்றும் வ் என்ற மெய்யெழுத்துகள், இவை இடம்பெறுகிற உயிர்மெய் எழுத்துகள், இவற்றைமட்டும் தவிர்த்துவிட்டு மீதமிருக்கும் தமிழ் எழுத்துகளை வைத்து எழுதவேண்டியதுதான்!

    கொஞ்சம் சிரமம். ஆனால் ஜாலியான சிரமம், சும்மா ஒரு நாலு வரி முயற்சி செய்து பாருங்களேன்!

    ***

    என். சொக்கன் …

    17 07 2013

    228/365

     
    • Raj 12:00 am on July 18, 2013 Permalink | Reply

      Varigal vaali

      • என். சொக்கன் 12:02 am on July 18, 2013 Permalink | Reply

        இல்லைங்க, கங்கை அமரன்தான், கேசட் உறையில் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டே எழுதினேன்

      • என். சொக்கன் 12:29 pm on July 18, 2013 Permalink | Reply

        It seems movie title says this song is written by Valee, Will correct, Thanks for pointing it out

    • GiRa ஜிரா 8:02 am on July 18, 2013 Permalink | Reply

      உதடுகள் ஒட்ட வேண்டும் என்பதற்குதான் தமிழில் உதடு ஒட்டாப் பாடால்களுக்கு இலக்கணம் இல்லையோ?! 🙂

      நிரொட்டகம் எனபதே பாதி வடமொழியும் பாதி தமிழும் கலந்த சொல் போலத் தோன்றுகிறது. மலையமாருதம் போல.

    • venkatramanan (@venkatramanan) 10:44 am on July 18, 2013 Permalink | Reply

      குறள் 489
      எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
      செய்தற்கு அரிய செயல்

      http://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_49.%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

      எய்தற்கு அரியது இயைந்தக்கால்= பகையை வெல்லக் கருதும் அரசர் தம்மால் எய்துதற்குஅரிய காலம் வந்து கூடியக்கால்; அந்நிலையே செய்தற்கு அரிய செயல்= அது கழிவதற்கு முன்பே, அது கூடாவழித் தம்மால் செய்தற்கு அரிய வினைகளைச் செய்க.

      Regards
      Venkatramanan

    • Meenaks 11:12 am on July 18, 2013 Permalink | Reply

      ப், ம், வ் ஆகியவற்றின் அனைத்து உயிர்மெய் எழுத்துக்களையும் தவிர்க்க வேண்டும் அல்லவா?

      • என். சொக்கன் 12:29 pm on July 18, 2013 Permalink | Reply

        Yes, I am wrong, Will change the text, Sorry, and thanks for pointing out

    • rajinirams 1:49 pm on July 18, 2013 Permalink | Reply

      நிரோட்டகம் பற்றி அறிய வைத்ததற்கு நன்றி.இதே போன்ற உதடு ஒட்டாத பாடல் இதற்கு முன்பே வாலி,யூகிசேதுவின் “மாதங்கள் ஏழு”படத்திற்கு எழுதியுள்ளார்-“காதல் என்ன கத்தரிக்காய்”. அது சரி-இந்த பாடல் வாலி எழுதியதாக டைட்டில் கார்டையும் படம் எடுத்து போட்டு விட்டு கேசட்டில் கங்கை அமரன் என்று போட்டிருப்பதாகவும் சொல்கிறீர்கள்-எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்:-))))))

    • amas32 10:03 pm on July 19, 2013 Permalink | Reply

      தந்தேன் என்னை நாட்டிற்கு என்றான் அரசியல் தலைவன்.
      தந்தேன் என்னை கலைக்கு என்றான் கலைஞன்.
      தந்தேன் என்னை என் குழந்தைகளுக்கு என்றால் தாய்!

      எதோ மூணு வரி எழுதிட்டேன் :-)))

      amas32

  • G.Ra ஜிரா 11:48 am on July 3, 2013 Permalink | Reply  

    ’பொடி’ப் பயலே! 

    மக்களின் பழக்க வழக்கங்கள் காலங்காலமாக மாறிக் கொண்டே வருகின்றன. பழைய புத்தகங்களைப் படிக்கும் போதும் பழைய பாடல்களைக் கேட்கும் போதும் பழைய திரைப்பட்டங்களைப் பார்க்கும் போதும் அதைத் தெரிந்து கொள்ளலாம்.

    மிகமிகப் பிரபலமாக இருந்த வழக்கம் பின்னாளில் முற்றிலும் இல்லாமலும் போகலாம். அப்படி வழக்கொழிந்த பழக்கம்தான் பொடி போடுவது.

    பொடி போடுவதென்றால் இட்டிலிக்கும் தோசைக்கும் தொட்டுக் கொள்ள மிளகாய்ப் பொடி போடுவதல்ல. நான் சொல்வது மூக்குப்பொடி பற்றி. கட்டை விரலாலும் ஆள்காட்டி விரலாலும் சிறிது கிள்ளியெடுத்து மூக்கில் பொடி போடும் பெருசுகள் இப்போது மிகமிகக் குறைந்து போய் விட்டார்கள்.

    ஒரு காலத்தில் இது மிகப்பிரபலமான பழக்கமாக இருந்திருக்கிறது. ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படத்தில் சந்தைக்குப் போகும் செம்பட்டையிடம் ஆப்பக்கடை பாட்டி பட்டியல் சொல்லும் போது அதில் மூக்குப்பொடி டப்பியும் இருக்கும். கங்கையமரன் அதைப் பாடல் வரிகளிலும் கொண்டு வந்திருப்பார்.

    வெத்தல வெத்தல வெத்தலையோ
    ……………………………..
    பாட்டியும் ஏலக்கா வேணும்னு கேட்டாங்க
    பத்தமட பாயி வேணும்னு கேட்டாங்க
    சின்ன கருப்பட்டி மூக்கு பொடி டப்பி வேணும்னு கேட்டாங்க
    பாடல் வரிகள் – கங்கை அமரன்
    பாடியவர் – மலேசியா வாசுதேவன்
    இசை – இளையராஜா
    படம் – ரோசாப்பூ ரவிக்கைக்காரி
    பாடலின் சுட்டி – http://youtu.be/0VQ_2UaAmqA

    இவ்வளவு பிரபலமாக இருந்த மூக்குப்பொடி எதிலிருந்து செய்யப்படுகிறது? புகையிலையைக் காய வைத்து அதைச் சுண்ணாம்போடு போட்டு இடிப்பார்கள். நன்கு மைய இடிக்க இடிக்க அதில் கார நெடி கிளம்பும். அதை அப்படியே பயன்படுத்தினால் மூக்கு அறுந்துவிடும் என்பதால் நெய்யும் சேர்த்து இடிப்பார்கள்.

    இப்படி மைய இடித்த பொடிதான் மூக்குப்பொடி. அடர்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இந்தப் புகையிலைப் பொடி மூக்கு வழியாகச் சென்று மூளைக்கு ஒரு மந்தமான பரவச நிலையைக் கொடுக்குமாம். சிலர் பல்வலிக்கு மூக்குப்பொடி நல்ல மருந்தென்று சொல்வார்கள். மூக்குப்பொடியை எடுத்து வலிக்கின்ற பல்லில் வைத்தால் சற்று மரத்துப் போகும். அதைத்தான் மூக்குப் பொடி பல்வலியை நீக்குகிறது என்று தவறாக நினைக்கிறார்கள்.

    பல்லில் வைக்கப்படும் மூக்குப் பொடி வாய் வழியாக உமிழ்நீரில் கலந்து வயிற்றுக்கும் செல்லும். இது கண்டிப்பாக கெடுதல்தான். மூக்குப்பொடியை எப்படிப் பயன்படுத்தினாலும் கெடுதல்தான். புற்றுநோயை உண்டாக்குவதில் மூக்குப்பொடியும் ஒரு முக்கிய காரணி என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    பொதுவாகவே மூக்குப்பொடி வாங்குகின்றவர்கள் நிறைய வாங்க மாட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவார்கள். நிறைய வாங்கினால் நாட்பட நாட்பட அதில் காரலும் நெடியும் குறைந்து போய்விடுவாம். அதனால்தான் வேண்டிய போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிக் கொள்வார்கள்.

    பொடி போட்டு வைப்பதற்கென்றே விதவிதமான சொப்புகள் செய்யப்பட்டன. வெள்ளிச் சொப்பில் பொடி போட்டு வைத்திருந்த பொடிப்பிரியர்களும் உண்டு. சொப்பு என்று நான் சொன்னாலும் பொடி டப்பா என்ற பெயர்தான் மிகப்பிரபலம்.

    விதவிதமாகப் பொடி டப்பா வாங்க வசதியில்லாதவர்கள் வாழை மட்டையிலும் பாக்கு மட்டையிலும் மூக்குப்பொடியை வைத்திருப்பார்கள். அந்தப் பொடி மட்டை தொலைந்து விடாமல் இருக்க வேட்டியில் மடித்து வைத்துக் கொள்வார்கள்.

    ஆண்கள் மட்டுமே மூக்குப்பொடி போடும் பழக்கத்தை பழகியிருக்கவில்லை. சில வயதான பெண்களும் மூக்குப்பொடி போட்டார்களாம். எங்கள் ஊரிலேயே மூக்குப்பொடி போட்ட ஒரு பாட்டியை நான் பார்த்திருக்கிறேன்.

    புதிதாகப் பொடி போடுகின்றவர்களுக்குத் தும்மல் வரும். பழகப் பழக மூக்கின் தசைகள் மரத்துப் போய் தும்மல் வராமல் போய்விடும். எத்தனையோ பழைய திரைப்படங்களில் மூக்குப் பொடியைத் தூவியதும் அங்கிருக்கும் எல்லாரும் தும்முவது போன்ற நகைச்சுவைக் காட்சிகளும் வந்திருக்கின்றன.

    இப்படியெல்லாம் பிரபலமான மூக்குப்பொடியைக் கண்டுபிடித்தது இந்தியர்கள் என்றா நினைக்கிறீர்கள்? இல்லவே இல்லை. ஐரோப்பாவில் அரசல்புரலசால இருந்த பழக்கம் பிரபலமாகி உலகம் முழுவதும் பரவியது. 17ம் நூற்றாண்டை மூக்குப்பொடி நூற்றாண்டு என்றே சொல்லலாம். அந்த அளவுக்குப் பிரபலமாக இருந்திருக்கிறது.. மூக்குப்பொடி போட்டவர்களை மதத்தை விட்டு விலக்குவேன் என்று போப் சொல்லியும் கேட்காமல் மக்கள் மூக்குப்பொடியில் மூழ்கியிருந்திருக்கிறார்கள்.

    18ம் நூற்றாண்டில் பொடிப்பழக்கம் பெரும்பழக்கமாக ஐரோப்பாவில் நிலை பெற்றிருந்திருக்கிறது. நெப்போலியனுக்கும் பொடி போடும் பழக்கம் இருந்ததாம். அப்போதிருந்த போப் பெனிடிக்ட் XIII க்கும் பொடி போடும் பழக்கம் இருந்திருக்கிறது. ஒரு நூற்றாண்டில்தான் எத்தனை மாற்றங்கள்! 17ம் நூற்றாண்டில் மூக்குப்பொடி போட்டால் மதவிலக்கம் செய்யப்படும் என்று வாட்டிகன் சொல்லியிருக்கிறது. அடுத்த நூற்றாண்டில் போப்பாண்டவரே பொடி போட்டிருக்கிறார். என்னே பொடியின் மகிமை!

    எது எப்படியோ… இன்று இந்தப் பழக்கம் குறைந்து போயிருப்பது நல்லதுதான். பலவிதமான உடல்நலக் கேடுகளை உண்டாக்கும் இது போன்ற புகையிலைப் பழக்கங்களை நாம் விலக்கவும் எதிர்க்கவும் வேண்டும்.

    அன்புடன்,
    ஜிரா

    214/365

     
    • kamala chandramani 12:17 pm on July 3, 2013 Permalink | Reply

      அடடா, என்னமா ஆராய்ச்சி செஞ்சிருக்கீங்க. இவ்விஷயங்கள் மக்களிடையே பரவ வேண்டும்! வெத்திலை(வெற்றிலை), பொகையிலை, மூக்குப்பொடி ஒழிக! நாடு நலம் பெருக! மனித வாழ்வில் வளம் நிறைக.

      • GiRa ஜிரா 10:23 pm on July 4, 2013 Permalink | Reply

        தேடுங்கள் கிடைக்குமென்றார் ஏசு தேடுங்கள் கிடைக்குமென்றார். அப்படித் தேடிக் கண்டுபிடிச்சதுதான் இந்தத் தகவல்கள் எல்லாம் 🙂

    • rajinirams 12:33 pm on July 3, 2013 Permalink | Reply

      அட புதிதுபுதிதாக யோசிக்கறீங்க.அருமை. பொடின்னவுடனே ஞாபகத்துக்கு வருபவர் அண்ணா தான். அவர் எப்பவும் பொடி வச்சு பேசுவார் என்று சிலேடையாக சொல்வார்கள். பொடி வர்ற வசனம் நெற்றிக்கண் விசுவின் “பொடி”பீடி குடி லேடி இதுதான் உன் டாடி. பொடி வர்ற பாடல் பொடி வைக்கிறேன்…ஆனால் அது சொக்குப்பொடி:-)) நன்றி.

      • GiRa ஜிரா 10:25 pm on July 4, 2013 Permalink | Reply

        அண்ணாவுக்கு பொடிப்பழக்கம் உண்டா? அவருக்கும் புற்றுநோய் இருந்துச்சுல்ல?

    • amas32 6:36 pm on July 4, 2013 Permalink | Reply

      உங்களுக்குத் தெரியாத விஷயமே கிடையாதா ஜிரா? 🙂 அருமையான பதிவு!
      மூக்குப் பொடி போடுபவர்களின் அருகில் சென்றால் ஒரு நெடி (நல்ல அல்ல) வரும். பொடி போட்டப் பிறகு ஹச் என்று ஒரு தும்மல் போடுவார்கள். அப்புறம் மகிழ்ச்சியாக வேலை பார்ப்பார்கள். நிகொடினின் மகிமை 😦

      amas32

      • GiRa ஜிரா 10:26 pm on July 4, 2013 Permalink | Reply

        தெரிஞ்சது தெரு அளவு. தெரியாதது தெய்வத்தளவு. 🙂

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel