விண்ணெங்கும் காத்தாடிகள்
புண்ணாகவராளி இராகத்தில் ஆறுதல் அருள்வாய் ஆறுமுகா என்ற பாடலை ரெக்கார்ட் பிளேட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு உள்ளமுருக முருகனைப் பாடிக் கொண்டிருந்தார் டி.எம்.சௌந்தரராஜன்.
ஆறுதலைக் கூட ஆறுதலைச்சாமி தான் தர வேண்டுமோ? அதென்ன அவ்வளவு எளிதாகக் கிடைக்காத ஒன்றா?
யோசித்துப் பார்த்தால் அது உண்மைதான். உழைப்போ அதிர்ஷ்டமோ பணத்தைக் கொடுத்து விடுகிறது. அந்தப் பணம் இருந்தால் உணவு உடை உறைவிடம் என்று பலவற்றை வாங்க முடிகிறது. பணத்தைப் பார்த்து காதலும் கூட வந்துவிடுகிறது. ஆனால் மனதுக்குத் தேவையான ஆறுதல்!!!!!!
ஆறுதல் எல்லோரிடமும் கிடைப்பதில்லை. ஏனென்றால் ஆறுதலளிக்க எதையும் எதிர்பார்க்காத உண்மையான அன்பு வேண்டும்.
அப்படி ஆறுதல் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தவர் தான் மலைச்சாமித் தேவர். ஊரிலேயே பெரிய தலைக்கட்டு. மச்சு வீடு. நிலம் நீச்சு. எட்டுப் பட்டிக்கும் பஞ்சாயத்து. பெரிய கவுரவம் தான். ஆனால் நிம்மதி மட்டும் தான் இல்லை.
”பதிவிரதை ஏறுமாறாக இருப்பாளேயாமாகில் கூறாமல் சன்னியாசம் கொள்” என்று ஔவையார் சொன்னது மலைச்சாமித் தேவருக்கு நன்றாகவே பொருந்தும். என்ன செய்வது? கவியரசர் சொன்னது போல இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று.
சோகத்துக்கு ஒரு இயல்புண்டு. யாரிடமாவது சொல்லிவிட்டால் அது குறைந்துவிடும். ஆனால் ஊரெல்லாம் வந்து நியாயம் கேட்கும் தலைக்கட்டு யாரிடம் போய்ச் சொல்ல முடியும்?
அதற்கு ஒரே வழி உள்ளத்து உணர்வுகளை பாட்டாக்கி காற்றோடு காற்றாய் கலந்து விடுவதான். அந்த வழியில்தான் மலைச்சாமித் தேவரும் போனார்.
பூங்காத்து திரும்புமா
ஏம் பாட்ட விரும்புமா
தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட
எனக்கொரு தாய்மடி கெடைக்குமா
அவர் பாட்டுக்கும் ஒரு எதிர்ப்பாட்டு வருகிறது. அதுவும் தேடிக் கொண்டிருந்த ஆறுதலைத் தாங்கிக் கொண்டு.
ராசாவே வருத்தமா
ஆகாயம் சுருங்குமா
ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா
பாடியது ஆளோ அசரீரியோ… இப்படியான ஆறுதலைக் கேட்பதற்கு இரண்டு காதுகள் இருந்தால்… இல்லை இல்லை. ஒரு காது இருந்தாலே போதுமே. வேதனைப் பட்ட உள்ளம் உள்ளதையெல்லாம் கொட்டி அழுதிடுமே!
என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்குனேன் தூக்கத்த வாங்கல
வேதனை இல்லாத மனம் ஏது? வாதை இல்லாத உடல் ஏது? குறையே இல்லாத மனிதர் தான் யார்? அதைப் புரிய வைத்தால் அவர் மனம் தெளியும் என்று நம்பினாள் அவள்.
இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
உன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல
தனக்காகப் பாடும் அந்தக் குரல் யார் குரல் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் உந்துகிறது. அது பாட்டிலேயே கேள்வியாகவும் வருகிறது.
யாரது போறது?
ஆனால் அவள் கெட்டிக்காரி. அவளா முகத்தைக் காட்டுவாள்?
குயில் பாடலாம். தன் முகம் காட்டுமா?
இப்படி வரிவரியாகச் சோகத்தை அவர் சொல்லவும் ஆறுதலை இவள் சொல்லவும் பாட்டு தொடர்கிறது.
எப்போதும் இல்லாத ஒரு மகிழ்ச்சி. என்றைக்குமே தோன்றியிருக்காத ஒரு நிம்மதி. அனுபவித்தேயிருக்காத ஒரு இன்பம். மலைச்சாமித் தேவருக்கு மட்டுமல்ல… அவளுக்கும் தான். சுகராகம் சோகம் என்றால் ஆறுதல் ஆனந்தம் தான்.
மறுபடியும் ஆசை உந்தக் கேட்டு விடுகிறார் தேவர். அந்தப் பெண்ணும் தன்னைக் காட்டிக் கொள்கிறாள். அவள் குரல் மட்டுமல்ல பெயரும் குயில்தான்.
இந்தச் சின்னப் பெண்ணா பெரிய சோகத்துக்கு மருந்து தடவிய குயில் என்று அவர் உள்ளம் வியக்கிறது. குரலில் என்றுமில்லாத ஒரு மகிழ்ச்சியோடும் நெகிழ்ச்சியோடும் கேட்கிறார்.
அடி நீதானா அந்தக் குயில்
யார் வீட்டுச் சொந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே ஒலகமே மறந்ததே
எங்கேயோ இருக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத இரண்டு உள்ளங்களுக்குள் ஒரு இணைப்பு கொண்டு வருவதற்கு எத்தனையெத்தனையோ காட்சிகளும் நிகழ்ச்சிகளும் தேவை. அதிலும் சில தவறாகப் போய்விடுவதும் உண்டு.
அப்படியெல்லாம் ஆகாமல் சோகத்துக்குத் தேவையான ஆறுதலைக் கொடுத்து மனக்காயங்களை ஆற்றி இரண்டு உள்ளங்களுக்கு இடையே பாலம் போட்ட இந்தப் பாடல் தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று.
பாடல்கள் அழகிய அபத்தமாம். அப்படிச் சொல்வதுதான் அசிங்கமான அபத்தம். எத்தனையோ பக்கங்களில் பேசியிருக்க வேண்டிய வசனத்தை இருபது வரிகளில் கவிதையாக்கி சோக நெஞ்சங்களுக்கெல்லாம் ஆறுதல் தந்த பாடலுக்கு நன்றி பல. இந்தப் பாடல் இல்லாமல் முதல் மரியாதை என்ற படமே இல்லை.
நன்றாக யோசித்துப் பார்த்தால் தமிழ் திரைப்படம் தொடங்கிய காலத்திலிருந்து எத்தனையெத்தனை பாடல்கள்! எத்தனையெத்தனை கவிஞர்கள் புலவர்கள் பாடலாசிரியர்கள்! எத்தனையெத்தனை இசையமைப்பாளர்கள்! அவர்கள் உருவாக்கித் தந்த பல பாடல்கள் படத்தோடு காணாமல் போகாமல் நம்மோடு இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்றால் மிகையாகாது.
தெலுங்கில் “எந்தரோ மகானுபாவுலு.. அந்தரிக்கி வந்தனம்” என்று சொல்வார்கள். நமது தமிழில் சொன்னால், “எத்தனையோ பெரியவர்கள். அவர்கள் அனைவருக்கும் வணக்கம்.” நமக்காக ஆயிரமாயிரம் பாடல்களை உருவாக்கிய அந்தப் பெரியவர்கள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள்.
பாடல் – பூங்காற்று திரும்புமா
வரிகள் – கவிஞர் வைரமுத்து
பாடியவர்கள் – மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி
இசை – இசைஞானி இளையராஜா
படம் – முதல் மரியாதை
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=-9kaLJZhJIE
அன்புடன்,
ஜிரா
364/365
Uma Chelvan 9:35 pm on December 1, 2013 Permalink |
மிகவும் நல்ல பதிவு. படிப்பு, பணம், புகழ், வசதி, வாய்ப்புகள் என்று எல்லாம் வந்த பின்பும் மனித மனம் வேண்டுவது அன்பும் ஆறுதலும் தான். அது எந்த வடிவத்தில் இருந்தாலும்…….பக்தியாய் இறைவனிடம், அன்பாய் மனைவியிடம், பாசமாய் மகள், மகனிடம், நேசமாய் உறவுகளிடம், உரிமையாய் நட்பிடம்……… அனைவர்க்கும் அன்பையும் ஆறுதலையும் அந்த ஆறுமுகன் அருளட்டும்.
அறுமுகனை வேண்டி ஆரதனை செய்தால் அருகினில் ஓடி வருவான் .அன்பு பெருகியே அருள் தருவான்.!!!
Uma Chelvan 9:50 pm on December 1, 2013 Permalink |
மிகவும் நன்றி ” 4 வரி நோட்” குழுவினர்க்கு. ஓர் ” சங்கீத மும்மூர்த்திகள்”. போல நிறைய பாடல்களை பற்றிய அருமையான கருத்துக்கள். நிறைய புது விஷயங்கள் கற்று / தெரிந்து கொண்டேன். “யாம் அறிந்த மொழிகளிலே..தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றார் பாரதி!!. கம்பனை போல், வள்ளுவனை போல், இளங்கோவை போல், பாரதியை போல்…….. ராஜாவை போல் என்னுமிடத்தில் நிறுத்த விழைகிறேன்/ விரும்புகிறேன்.
rajinirams 2:37 am on December 2, 2013 Permalink |
அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை-கவியரசரின் நெஞ்சை வருடும் வரிகள் போலவே கவிஞர் வைரமுத்துவின் முதல் மரியாதை வரிகள்- ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா,ஏங்காதே அத உலகம் தாங்காதே-அடுக்குமா சூரியன் கருக்குமா. அருமையான பாடலின் சிறப்பை விளக்கிய அருமையான பதிவு.
Uma Chelvan 8:08 am on December 2, 2013 Permalink |
காதில் பஞ்சாமிர்தமும், காற்றில் வரும் இசைவிழாவும் ( December Music Season)
ராகத்தைச் சொல்லி விட்டுப் பாடுவது !!
இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்தால், பாடி முடித்ததும், ஒரு வரி அதே ராகத்தில் பிரபலமாகி இருக்கு திரைப்பட இசைப் பாடலை பாடிக் கோடி காட்டி விட்டுத் தொடரலாம். கரகோஷம் அள்ளும்.
வெகுஜன இசையையும், சம்பிரதாய் இசையையும் இணைத்துப் பாலம் போட்டுக் கொண்டே இருக்கும் இளையராஜா போன்ற இசை மேதைகளுக்கு சபா சங்கீதம் செலுத்தும் மரியாதையாக அது இருக்கும்.
EraMurukan Ramasami
amas32 7:20 pm on December 2, 2013 Permalink |
பூங்காத்து திரும்புமா அற்புதமான ஒரு பாடல். கேட்டு முடித்த பிறகும் மனதில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கும்.
//அடி நீதானா அந்தக் குயில்
யார் வீட்டுச் சொந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே ஒலகமே மறந்ததே//
அருமையான வரிகள்.
amas32
Sudharsan 2:15 pm on December 13, 2013 Permalink |
Nalla Pathivu. 4varinote arumayana muyarchi.
Siru Thirutham:
“பாராட்ட மடியில் வெச்சுத் தாலாட்ட” .