Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • mokrish 9:17 pm on November 21, 2013 Permalink | Reply  

    நீ பார்த்த பார்வைக்கொரு 

    இந்த மாதம் கமல்ஹாசன் பிறந்த நாளன்று ஏதோ ஒரு டிவி சானலில் விஸ்வரூபம் படத்தில் வரும்  உன்னைக் காணாது நான் என்ற பாடலை (இசை சங்கர் – ஈசான்- லாய் பாடியவர்கள்  கமல்ஹாசன், சங்கர் மகாதேவன்)  ஒளிபரப்பினார்கள் பண்டிட் பிர்ஜு  மகராஜ் வடிவமைத்த அருமையான கதக் நடனம். கமல்ஹாசனே நாயகி பாவத்தில் எழுதிய பாடல். அதில் வரும் வரிகள்

    http://www.youtube.com/watch?v=XuOgG2QWAgQ

    அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாணுவேன்

    கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்

    ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்

    ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்

    இந்த 2013ல் ‘எவ்வாறு நாணுவேன்’ என்று ஒரு நாயகி யோசிப்பதும் கண்ணாடி முன் ரிகர்சல் செய்து பார்ப்பதும் என்ற interesting கவிதை.

    ஆணும் பெண்ணும் பரிமாறிக்கொள்ளும் காதல் பார்வை கவிஞர்களின் கற்பனைக்கு நிறைய தீனி போட்டிருக்கிறது. உடனே நம் நினைவுக்கு வருவது கம்பன் சொன்ன அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள். இது கண்டதும் காதல் இல்லை தற்செயலாக (Accidentally) ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்’ என்கிறார் புலவர் கீரன்.

    வள்ளுவர் ஒரு முழு அதிகாரமே எழுதியிருக்கிறார். பெண்ணின் ஒரு பார்வை காதல் நோயைத் தரும். அதுவே நோய்க்கு மருந்தளிக்கும்.  நான் பார்க்கும்போது மண்ணை பார்க்கின்றாயே என்று எல்லாமே  ஒரு ஆணின் Point of View. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் என்ற குறளில் பெண்ணின் பார்வை ஒரு படையுடன் வந்து தாக்குவதுபோல் இருக்கிறது என்பதும் ஆண் சொல்வதே.

    இதில் ஒரு பெண்ணின் நிலை என்ன? சில திரைப்பாடல்களில் கிடைத்த சுவாரஸ்ய முத்துகள். இவன் என்ற படத்தில் பழனிபாரதி எழுதிய பாடல்  (இசை இளையராஜா பாடியவர்கள் மாதங்கி, உன்னிகிருஷ்ணன் )

    http://www.youtube.com/watch?v=Tu7Hjb8NOmo

    அப்படி பாக்குறதுன்னா வேணாம்

    கண் மேலே தாக்குறது வேணாம்
    தத்தி தாவுறதுன்னா னா னா
    தள்ளாடும் ஆசைகள் தானா
    என்ன கேட்காமல் கண்கள் செல்ல
    உன் பக்கம் பார்த்தேன்
    மிச்சம் இல்லாமல் வெட்கம் தின்ன
    காணாமல் போனேன்

    கமலின் 2013 நாயகி எப்படி நாணுவது என்று practise செய்கிறாள். பழனிபாரதியின் 2002 நாயகி வெட்கம் தின்ன காணாமல்  போகிறாள். டைம் லைனில் கொஞ்சம் முன்னே போய் 60களில் வந்த சில பாடல்களைப் பார்த்தால் pleasant surprise. பணக்கார குடும்பம் என்ற படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்  (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர்கள் டி எம் எஸ், பி சுசீலா)

    http://www.youtube.com/watch?v=ABRw-iSaCJI

    இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்  தானா

    இப்படி என்று சொல்லி இருந்தால் தனியே வருவேனா …..

    இது ஏய் அப்படி பாக்காதே mode தான். ஆனால் வல்லவன் ஒருவன் படத்தில் கண்ணதாசன் எழுதிய இன்னொரு பாடல் bold & beautiful.  (இசை வேதா பாடியவர்கள் டி எம் எஸ், பி சுசீலா)

    http://www.youtube.com/watch?v=Lu8FNldHluA

    இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது

    இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது

    நான் கேட்டதை தருவாய் இன்றாவது

    கவியரசர் பெண்ணின் கோணத்தில் சொல்லும் அதிரடி வரிகள். 1966ல் வெளிவந்த பாடல் வரிகள் என்று நம்பவே முடியவில்லை. இதை மக்கள் எப்படி விமர்சனம் செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

    மோகனகிருஷ்ணன்

     
    • Uma Chelvan 12:47 am on November 22, 2013 Permalink | Reply

      நினைக்க மறந்தாய் , தனித்து பறந்தேன்
      மறைத்த முகத்திரை திறப்பாயோ
      திறந்து அகத்திரை இருப்பாயோ!!
      இருந்து விருந்து இரண்டு மனம் இணைய …….

      உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன்…

      ராஜா ஒரு மழை போல்!! மழைக்கு காடென்ன, கடெலென்ன, பாரபட்சம் இல்லாமல் எங்கும் பொழிவது போல் .ராஜாவும்…….மோகன், முரளி, ராமராஜன், சிவகுமார், விஜயகாந்த் முதற்கொண்டு அனைவரையும் கட்டி காத்த எல்லைச் சாமி. நல்ல குரல் வளம் கொண்ட வடிவேலும் ராஜவினால்தான் சினிமாவில் பாட ஆரம்பித்தார் என்று நினைகிறேன்.

      மாமழை போற்றுதும்!!!! ராஜாவையும் !!!!!

    • rajinirams 10:38 am on November 22, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு. நீங்கள் சொன்னது போல “ஆணும் பெண்ணும் பரிமாறிக்கொள்ளும் காதல் பார்வை கவிஞர்களின் கற்பனைக்கு நிறைய தீனி போட்டிருக்கிறது”.கவியரசரின் “பார்வையிலேயே”ஏராளம். பார்த்தேன் ரசிந்தேன் என்று ஆரம்பித்து ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்,என்ன பார்வை உந்தன் பார்வை,பார்வை யுவராணி கண்ணோவியம் இப்படி பல. எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன என்ற கேள்விக்கு உன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது என்பது கண்ணதாசனின் பார்வை தான்.ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்,கண் தேடுதே சொர்க்கம்-வாலியின் பார்வை.உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில்-இது கங்கை அமரனின் கற்பனை.பார்வையாலே நூறு பேச்சு,வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு-வைரமுத்துவின் பார்வை. விழிகள் மேடையாம்,இமைகள் திரைகளாம் “பார்வை”நாடகம் அரங்கில் ஏறுமாம்-இது டி.ராஜேந்தரின் பார்வை.பார்க்காதே பார்க்காதே-நீ பார்த்தா பறக்குறேன் பாதை மறக்குறேன்-இது யுகபாரதியின் வருத்தப்படாத வாலிபர் சங்க பார்வை. நன்றி.
      “மார்கழி பார்வை பார்க்கவா” என்ற வார்த்தைகளும் நல்ல கற்பனையே-ராஜாவின் இசையில் உள்ள இந்த பாடலை கேட்டிருக்கிறேன்,எந்த படம் என்று தெரியவில்லை.(உயிரே உனக்காக என்ற பெயரில் எடுக்கப்பட்டு நின்று போனது என்று நினைக்கிறேன்) http://youtu.be/XEvlj_vvgoM

    • amas32 11:57 am on November 22, 2013 Permalink | Reply

      //இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது

      இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது

      நான் கேட்டதை தருவாய் இன்றாவது//

      இந்த வரிகள் தான் நீங்கள் இன்று கொடுத்திருப்பதிலேயே பெஸ்ட். என்ன ஒரு கற்பனை, உண்மைக்கு மிக அருகில். கண்ணதாசனைப் பெற்ற இத் தமிழகம் புண்ணிய பூமி!

      amas32

    • srimathi 10:54 pm on November 22, 2013 Permalink | Reply

      I’m glad that there are so many songs where a woman’s perspective is portrayed. To be exactly in woman’s shoes is possible only when a woman writes it herself. Ondra renda aasaigal from kaakha kaakha is a popular example. Thamarai writes it this way “thoorathil nee vandhaale en manadhil mazhai adikkum, miga piditha paadal ondru udhadugalil munumunukkum”

  • என். சொக்கன் 6:57 pm on October 12, 2013 Permalink | Reply  

    எல்லாம் சிவமயம் 

    • படம்: திருவருட்செல்வர்
    • பாடல்: சித்தமெல்லாம் எனக்குச் சிவமயமே
    • எழுதியவர்: கண்ணதாசன்
    • இசை: கே. வி. மகாதேவன்
    • பாடியவர்: டி. எம். சௌந்தர்ராஜன்
    • Link: http://www.youtube.com/watch?v=trsW6cL9a9o

    சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே, இறைவா, உன்னைச்

    சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே!

    அத்தன் இல்லாமல் ஒரு அம்மை இல்லை, அந்த

    அம்மை இல்லாமல் இந்தப் பிள்ளை இல்லை!

    ’அத்தான்’ தெரியும், அது என்ன ‘அத்தன்’?

    அடுத்து வரும் ‘அம்மை’யோடு சேர்த்துப் பார்த்தால் பொருள் தெரிந்துவிடும். அத்தன் என்றால் தந்தை என்று பொருள்.

    சுந்தரர் தன்னுடைய ஒரு பாடலில் சிவனை ‘பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா! அத்தா!’ என்பார். இந்தத் திரைப்படப் பாடலின் தொடக்கத்திலேயே நாம் அதைக் கேட்கலாம்.

    இன்றைக்கும் இஸ்லாமியர்களின் வீடுகளில் தந்தையை ‘அத்தா’ என்று அழைக்கும் பழக்கம் இருக்கிறது. அதேபோல் மலையாளிகள் ‘அச்சா’ (அதாவது, ‘அச்சன்’, ‘அச்சனே’) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.

    கம்ப ராமாயணத்தின் ஒரு பாடலில் ராமன் தன் தம்பி லட்சுமணனிடம், ‘அத்தா! இது கேள்!’ என்று தொடங்கிப் பேசுவான். இன்னொரு பாடலில் விபீஷணன் தன் அண்ணன் ராவணனிடம் ‘அத்த! என் பிழை பொருத்தருள்’ என்பான்.

    என்ன குழப்பம் இது? ராமனுக்கு எப்படி லட்சுமணன் தந்தை ஆவான்? விபீஷணனுக்கு எப்படி ராவணன் தந்தை ஆவான்?

    அது ஒன்றும் பெரிய மர்மம் இல்லை. தம்பியிடமோ அண்ணனிடமோ உரையாடும்போது, ‘அப்படி இல்லைப்பா’ என்று பேச்சுவாக்கில் சொல்கிறோம் அல்லவா? அதுபோலதான் ராமனும் விபீஷணனும் ‘அத்தன்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். இந்த இரண்டு பாடல்களிலும் அதன் பொருள், ‘எனக்கு தந்தையைப்போன்றவனே!’

    ***

    என். சொக்கன் …

    12 10 2013

    315/365

     
    • Uma Chelvan 8:53 pm on October 12, 2013 Permalink | Reply

      எப்படி ஆண்கள் தன்னை விட சிறு வயது பெண்களை பாசத்துடன் “அம்மா” என்று சேர்த்து அழைப்பது போல!!!!!

      பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
      பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும்
      உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
      உயிரை மேவிய உடல் மறந்தாலும்
      கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
      கண்கள் இன்று இமைப்பது மறந்தாலும்
      நல்ல தவத்தவர் உள்ளிருந்து ஒங்கும்
      நமஷிவாயத்தை நான் மறேவேனே

      இரக்கம் வாராமல் போனதென்ன காரணம் —என் சுவாமிக்கு

      பாடியவர்..பாம்பே ஜெயஸ்ரீ
      எழுதியவர் -கோபாலக்ருஷ்ண பாரதி
      ராகம்—பெஹாக்

    • s.anand 3:33 pm on October 14, 2013 Permalink | Reply

      pardon my transliteration eventualities
      அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்
      அருள்நோக்கில் தீர்த்த நீராட்டி கொண்டாய்
      எத்தனைஅரியை நீ எளியனானாய்
      எனையாண்டு கொண்டிறங்கி ஏன்றுகொண்டாய்
      பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
      பிழைத்தனைகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றோ
      இத்தனையும் எம்பரமோ வையவையோ
      எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே

    • amas32 8:47 pm on October 14, 2013 Permalink | Reply

      அத்தன், புதிய சொல்லை இன்று கற்றுக் கொண்டேன் 🙂 நாம் தினம் சொல்லும் இறை துதிகளைக் கவனித்துச் சொன்னாலே நிறைய வார்த்தைகளின் பொருள் தெரிந்து கொள்ள முடியும் என்றும் அறிந்து கொண்டேன், நன்றி 🙂

      amas32

  • G.Ra ஜிரா 9:28 pm on October 8, 2013 Permalink | Reply  

    கம்பனுக்கும் தாசன் 

    தொலைக்காட்சியில் கொடிமலர் படம் ஓடிக்கொண்டிருந்தது. கணவன் குடும்பத்தால் கைவிடப்பட்ட கதாநாயகி வீட்டை விட்டு துரத்தப்படுகிறாள்.

    அந்த சோகக் காட்சியில் பின்னணியில் கவியரசர் எழுதி மெல்லிசை மன்னர் இசையமைத்த பாடலை சீர்காழி கோவிந்தாரஜன் பாடினார்.

    கானகத்தை தேடி இன்று போகிறாள்
    கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் ஜானகி

    தெரிந்த பாடலாக இருந்தாலும் பாடலைக் கேட்டதுமே மனக்குரங்கு கம்பமரத்தில் தாவி விட்டது.

    ஆம். கம்பராமாயணத்தின் ஒரு உணர்ச்சி மிகுந்த பாடலில் இருந்து ஒரு வரி இந்தப் பாட்டில் கண்ணதாசனால் எடுத்தாளப்பட்டுள்ளது.

    அதுவும் ஒரு சோகக் காட்சிதான். ஆமாம். ஆமாம். ஒரு பெண் துயரப்படும் சோகக் காட்சிதான்.

    யாருக்குமே கிடைக்காத புகழ் அவனுக்குக் கிடைத்தது. அந்தப் பெருமையால் யாருக்கும் கிடைக்காத அவன் அவளுக்குக் கிடைத்தான்.

    அவனும் அவளும் நன்றாகத்தான் வாழ்ந்தார்கள். பிள்ளைகளும் பெற்றார்கள். ஆனாலும் அவன் கண் அவளை விட்டு இன்னொருத்தியை நாடியது.

    பிறன்மனை நோக்கியது பேராண்மையாகவே இருந்தாலும் குற்றம் குற்றமே என்று போர் தீர்ப்பு கூறியது.

    பெற்ற பெருமைகளை எல்லாம் தொலைத்தவன் உயிரையும் தொலைத்தான். அவனா தொலைத்தான்? அவள் அல்லவா அவனைத் தொலைத்தாள்.

    தொலைத்த சோகம் துரத்த போர்க்களத்துக்கு ஓடி வருகிறாள். விழுந்து கிடந்தவனை.. இல்லை இல்லை. விழுந்து கிடந்த அவன் உடலைப் பார்க்கிறாள்.

    துளைத்த அம்புகள் ஒன்றா இரண்டா? சல்லடையாய் அவன் உடல்.

    சலம்பல் இல்லாமல் கிடந்த உடலைக் கண்டவள் வாயில் புலம்பல்தான் வருகிறது.

    கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்
    உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி

    கள் ததும்பும் மலர் சூடிய சானகி மீது உன் மனதில் காதல் வந்ததே… அந்தக் காதல் உன்னுடைய உடம்பில் எங்கே இருக்கின்றது என்று இராமனுடைய அம்பு உன்னுடம்பைத் துளைத்துத் துளைத்துத் தேடியதோ!

    *[அந்த இராமன் உன்னைக் கொல்ல அம்பு விட்டனா? உன்னுடைய காதலைக் கொல்ல அம்பு விட்டானா?

    இராமனுடைய அம்பு காதலைக் கொல்லாமல் உன்னைக் கொன்று விட்டதோ?

    இல்லை. இராமனுடைய அம்பு அந்தப் பொருந்தாக் காதலைத்தான் கொன்றிருக்க வேண்டும். அந்தக் காதல் இறந்த பின்னே உன்னுடைய தவறை உணர்ந்து நீயே உயிரை விட்டிருக்க வேண்டும்.]

    வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
    எள் இருக்கும் இடன் இன்றி உயிர் இருக்கும் இடன் நாடிழைத்தவாறே

    தெய்வத்தில் எல்லாம் பெரிய தெய்வம் உட்கார்ந்திருப்பது எங்கு தெரியுமா? உலகத்தில் பெரிய மலைகளுக்கெல்லாம் பெரிய மலை. அந்த மலையை எளிதாகத் தோளில் தூக்கிய உன்னுடைய உடம்பில் எள்ளளவும் இடமின்றி அம்பால் துளைத்தானே இராமன்!

    *[அவன் உன்னைக் கொல்ல நினைத்தானா! உன் உள்ளத்தில் இருக்கும் பொருந்தாக் காதலைக் கொல்ல நினைத்தானா! இல்லை. மனைவியைப் பிரிந்த சோகத்தைப் புரிய வைக்க என்னைக் கொல்ல நினைத்தான். அதனால் உன்னைக் கொன்றான்.]

    இவ்வளவு நேரம் இங்கு புலம்பியது மண்டோதரிதான். ஆம். கம்பராமாயணத்தில் இராவணன் மறைவுக்குப் பிறகு மண்டோதரி புலம்பிய பாடலில் வரும் வரியை எவ்வளவு அழகாகவும் பொருத்தமாகவும் கவியரசர் கையாண்டிருக்கிறார்!

    என்னது? கண்ணதாசன் திருடிவிட்டாரா? இல்லை. இல்லவே இல்லை.

    கணவனாலும் குடும்பத்தாலும் கைவிடப்பட்ட அந்தக் கதாநாயகியை நினைக்கும் போது உத்தர காண்டத்தில் சந்தேகத்தால் காட்டுக்கு அனுப்பப்பட்ட சீதைதான் நினைவுக்கு வந்திருக்கிறாள்.

    ஆகவே அந்தப் பெண்ணையும் சீதையின் உருவமாகவே கண்டு பாடியிருக்கிறார் கண்ணதாசன். அதனால்தான் அவர் கவியரசர்.

    கானகத்தைத் தேடி இன்று போகிறாள்
    கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகி!

    சீர்காழி கோவிந்தராஜன் தொலைக்காட்சியில் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார்.

    *அடைப்புக்குறிக்குள் இருப்பது கம்பன் சொன்னதல்ல. என்னுடைய கற்பனை.

    அன்புடன்,
    ஜிரா

    311/365

     
    • amas32 10:01 pm on October 8, 2013 Permalink | Reply

      ஆஹா! ஜிரா you have out done yourself today! whattey! கம்பனையும் கண்ணதாசனையும் என்ன ஒரு அருமையான் பாடல்களுடன் ஒப்பீடு செய்துள்ளீர்கள்!

      //கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்
      உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி//
      கம்பனுக்குத் தான் மண்டோதரி என்ன சொல்லியிருப்பாள் என்று எப்படியொரு அற்புதக் கற்பனை!
      அதை மனத்தில் கொண்டு, சீதையாக அந்த கதாநாயகியின் நிலையை நினைத்து கவியரசர் புனைந்த வரிகள் அருமையிலும் அருமை.

      //கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகி// அழகு!

      நன்றி ஜிரா 🙂

      amas32 .

  • என். சொக்கன் 12:30 pm on October 6, 2013 Permalink | Reply  

    இயந்திரப் படைப்பா அவள்? 

    • படம்: இந்தியன்
    • பாடல்: டெலிஃபோன் மணிபோல்
    • எழுதியவர்: வைரமுத்து
    • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
    • பாடியவர்கள்: ஹரிஹரன், ஹரிணி
    • Link: http://www.youtube.com/watch?v=SfHbknfOOuA

    சோனா, சோனா, இவள் அங்கம் தங்கம்தானா,

    சோனா, சோனா, இவள் லேட்டஸ்ட் செல்லுலார் ஃபோனா

    கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா?

    கடைக்குச் செல்கிறோம். அழகிய சிலை ஒன்றை வாங்குகிறோம். விலை ஐயாயிரம் ரூபாய்.

    பக்கத்திலேயே, கிட்டத்தட்ட அதேமாதிரி இன்னொரு சிலை இருக்கிறது. அதன் விலை ஐம்பதாயிரம் என்கிறார்கள்.

    ஏன் இந்த விலை வித்தியாசம்? இரண்டும் ஒரே சிலைதானே?

    கடைக்காரர் சிரிக்கிறார். ‘சார், இது மெஷின்ல தயாரிச்சது, ஸ்விட்சைத் தட்டினா இந்தமாதிரி நூறு சிலை வந்து விழும், ஆனா அது கையால செஞ்சது, handmadeங்கறதால இந்தமாதிரி இன்னொண்ணை நீங்க பார்க்கவே முடியாது, அதுக்குதான் மதிப்பு அதிகம், காசும் அதிகம்!’

    அப்படியானால் இந்தப் பாடலில் கதாநாயகியை ‘கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா?’ என்று வைரமுத்து எழுதுவது புகழ்ச்சியா? அல்லது, நீயும் template அழகிதான் என்று மட்டம் தட்டுகிறாரா? 🙂

    சுவையான குழப்பம், அந்தக் காதலிக்குச் சொல்லிவிடாதீர்கள், பாடிய காதலன் பாடு பேஜாராகிவிடும்!

    கிட்டத்தட்ட இதேமாதிரி ஒரு புகழ்ச்சியை சீதைக்குக் கம்பரும் செய்கிறார். ஆனால் அவர் காலத்தில் கம்ப்யூட்டர் இல்லை. ஆகவே, ’ஆதரித்து, அமுதத்தில் கோல் தோய்த்து, அவயவம் அமைக்கும் தன்மை யாது என்று திகைக்கும்’ என்கிறார்.

    அதாவது, சீதையைப் படமாக வரைய விரும்பிய மன்மதன் அமுதத்தில் தூரிகையைத் தோய்த்து வரையத் தொடங்கினானாம். ‘இந்த அழகை எப்படி வரையமுடியும்?’ என்று திகைத்து நின்றானாம். அப்படி ஓர் அழகு சீதை!

    ஒருவேளை இந்தப் பாட்டு சீதைக்கும் ராமனுக்கும் டூயட் என்றால், ரஹ்மான் தந்த இதே மெட்டில் கம்பரின் சிந்தனையை  ’அமுதத்தில் கோல்தோய்த்து அந்த மாரன் திகைத்தானா?’ என்று பொருத்திவிடலாம்!

    ***

    என். சொக்கன் …

    06 10 2013

    309/365

     
    • lotusmoonbell 12:45 pm on October 6, 2013 Permalink | Reply

      பிரம்மாவுக்குக் கூட கம்ப்யூட்டர் படைப்புத் தொழில் செய்யத் தேவைப்படுகிறது. கம்பனோ கற்பனைத் தேனில் ஊறித் திளைத்து, திகைக்க வைக்கும் கவிதை படைத்துள்ளார். உண்மையான படைப்பாளி கம்பர்தான்!

    • mokrish 8:01 am on October 8, 2013 Permalink | Reply

      // கம்ப்யூட்டர் கொண்டிவளை // – இது Computer Aided Design தானே? இதில் கம்ப்யூட்டர் வெறும் எழுது கருவிதானே? கவிஞர் அதை Assembly line production என்ற தொனியில் சொல்லவில்லையே. அதனால் No problem

    • amas32 10:10 pm on October 8, 2013 Permalink | Reply

      பிரம்மன் படைப்புக்களும் விஸ்வகர்மாவின் கட்டிடங்களும் மனத்தில் தோன்றி நொடிப் பொழுதில் வெளியில் வியாபிக்கும் தன்மையுடையவை என்று நினைக்கிறேன்.

      //கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா?// என்பதை புதிய டெக்னிக் பயன்படுத்தி இதுவரை பூலோகத்தில் இல்லாதப் படைப்பை பிரம்மன் செய்துள்ளான் என்றே பொருள் என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால் காதலி must be happy only :-))

      amas32

  • என். சொக்கன் 10:30 pm on September 30, 2013 Permalink | Reply  

    காதல் கரம் 

    • படம்: இருவர்
    • பாடல்: ஹல்லோ மிஸ்டர் எதிர்க்கட்சி
    • எழுதியவர்: வைரமுத்து
    • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
    • பாடியவர்: ஹரிணி
    • Link: http://www.youtube.com/watch?v=JqgwTxDeOa8

    காதலா, காதலா, உனை நான் விடமாட்டேன்,

    கைத்தலம் பற்றுவேன், பிரிய விடமாட்டேன்,

    கண்கள் மீதாணை, அழகு மீதாணை, விடவே விடமாட்டேன்!

    ’கைத்தலம்’ என்ற சொல்லை நம்மிடையே மிகவும் பிரபலப்படுத்தியவர்கள், இரண்டு கவிஞர்கள். ஒன்று ஆண்டாள், இன்னொன்று அருணகிரிநாதர்.

    ’வாரணமாயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான்’ என்று கல்யாணக் கனவைச் சொல்லத் தொடங்கிய ஆண்டாள், ‘கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்’ என்கிறாள்.

    ஆண்டாள் இப்படிக் காதலோடு பாட, அருணகிரிநாதர் பக்தி நெறி நிற்கிறார். ‘கைத்தல நிறை கனி, அப்பமோடு அவல் பொரி’ என்று பட்டியல் போட்டுப் பிள்ளையாரை அழைத்து வழிபடுகிறார்.

    உண்மையில் ‘கைத்தலம்’ என்றால் என்ன?

    இந்த இரண்டு பாடல்களிலும், வைரமுத்துவின் இந்தத் திரைப்படப் பாடலிலும் கைத்தலம் என்றால் உள்ளங்கை என்றுதான் அர்த்தம் தோன்றுகிறது. உள்ளங்கையைப் பற்றுவேன், உள்ளங்கையைப் பற்றக் கனாக்கண்டேன், உள்ளங்கையில் கனிகளை நிறைத்துவைத்தேன்’…

    ஆனால் ‘கைத்தலம்’ என்பது கையாகிய தலம், அதாவது முழுக் கையையும் குறிக்கும். உள்ளங்கையும் அதன் பகுதி என்பதால், அதையும் குறிக்கும்.

    கம்ப ராமாயணத்தில் ஒரு பாடல்.

    ஓர் இளம் பெண். இவளுக்கு இடை இருக்கிறதா, அல்லது பொய்யான தோற்றமா என்று மயக்கமே ஏற்படும் அளவுக்குச் ‘சிக்’கென்ற பேரழகி.

    அவளுடைய காதலன், அவளை நெருங்குகிறான், கட்டித் தழுவுகிறான்.

    ஆனால் அவளோ, ஏதோ ஞாபகத்தில் மூழ்கியிருக்கிறாள். இப்போது அவளுக்குக் காதல் விளையாட்டுகளில் ஆர்வம் இல்லை. அவனுடைய கைகளை விலக்கிவிடுகிறாள்.

    உடனே, அந்தக் காதலன் அதிர்ந்துபோகிறான், அவள் அவனுடைய கையை ஒதுக்கிவிட்ட செயல், அவன் நெஞ்சில் கூர்வாள் பாய்ந்ததைப்போல் இருந்தது என்கிறார் கம்பர்.

    ஓர் ஆணின் நெஞ்சம் இப்படிப் புண்ணாவதை அவர் விரும்புவாரா? ‘கைத்தலம் நீக்கினள், கருத்தின் நீக்கலள்’ என்று சமாதானப்படுத்துகிறார். அதாவது, கையைதான் விலக்கினாள், கருத்திலிருந்து அவனை நீக்கவில்லை.

    புரியலையா? அவ ஏதோ வேலை விஷயத்தை யோசிச்சுகிட்டிருக்காய்யா, டிஸ்டர்ப் பண்ணாதே, கொஞ்ச நேரம் டிவி பார்த்துட்டு வா, அப்புறமா ரொமான்ஸ் பண்ணலாம்!

    ***

    என். சொக்கன் …

    30 09 2013

    303/365

     
    • rajinirams 12:26 pm on October 1, 2013 Permalink | Reply

      கைத்தலம் என்றவுடனே நினைவுக்கு வருவது கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ்க என்ற கவியரசரின் பூ முடித்தாள் இந்த பூங்குழலி என்ற நெஞ்சிருக்கும் வரை படப்பாடல் தான்.கைத்தலம் பற்றி உள்ளங்கை நெல்லிக்கனியாய் விளக்கிய நல்ல பதிவு.நன்றி.

    • amas32 3:55 pm on October 1, 2013 Permalink | Reply

      கைத்தலம் என்பது அழகிய ஒரு சொல். வெறும் கைபிடித்துச் செல்லுதலைக் குறிக்காது தன்னையே ஒப்படைப்பதை/ஊன்றுகோலாகப் பற்றுவதைக் குறிப்பது போல தொனிக்கும். ஆண்டாள் பாசுரத்தின் பாதிப்போ என்னவோ? இந்தக் காதல் பாட்டில் கூட அப்படித் தான் வருகிறது. ஆனால் கைத்தல நிறை கனி என்று விநாயகரை நோக்கி அவ்வையார் சொல்லும்போது கை நிறைய என்று தான் தோன்றுகிறது.

      amas32

      • lotusmoonbell 4:17 pm on October 1, 2013 Permalink | Reply

        ‘கைத்தலநிறைகனி’ அருணகிரிநாதரின் திருப்புகழில் வருவது. அவ்வையின் பாட்டல்ல.

        • amas32 9:31 pm on October 1, 2013 Permalink

          ஆமாம் தவறு தான், அனைவரும் மன்னிக்க.

          amas32

        • என். சொக்கன் 8:50 pm on October 2, 2013 Permalink

          நான் செஞ்ச தப்புக்கு நீங்க ஏனுங்க மன்னிப்புக் கேட்கறீங்க? 🙂

    • Uma Chelvan 5:52 pm on October 1, 2013 Permalink | Reply

      புரியலையா? அவ ஏதோ வேலை விஷயத்தை யோசிச்சுகிட்டிருக்காய்யா, டிஸ்டர்ப் பண்ணாதே, கொஞ்ச நேரம் டிவி பார்த்துட்டு வா, அப்புறமா ரொமான்ஸ் பண்ணலாம்!…..::::))))டிவி பார்த்து டைம் ஏன் waste பண்ணனும்??? சமையலறைக்கு போய் எதாவது சமைக்கலாம் இல்ல?. வீட்லில் கூடமாட ஒத்தாசை பண்ணனும்னு எண்ணமே வராதே!!!!!!:::::))))

      • என். சொக்கன் 8:50 pm on October 2, 2013 Permalink | Reply

        அது வந்துட்டா நாங்க ஏன் இப்படி இருக்கோம்? :)))

  • G.Ra ஜிரா 12:19 am on September 12, 2013 Permalink | Reply  

    விழியில் விழுந்து இதயம் நுழைந்து… 

    அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
    அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
    பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
    பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
    கண் காண அழகுக்கு கவிதாஞ்சலி

    எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் இனிமையாக காதுக்குள் வழுக்கி ஓடியது. கூடவே கதரி கோபால்நாத்தின் சாக்சபோனும். ஆண்குரல் முடிந்து சித்ராவின் பெண் குரல் தொடங்கியது.

    சீதையின் காதல் அன்று விழிவழி நுழைந்தது
    கோதையின் காதல் இன்று செவிவழி புகுந்தது
    என்னவோ என் நெஞ்சினை….

    நிறுத்துங்க நிறுத்துங்க… முதல் வரி என்னது?

    சீதையின் காதல் அன்று விழிவழி நுழைந்தது

    ஆகா. என்ன அருமையான வரி. வரியை விடவும் அதிலுள்ள பொருள். சீதையின் காதல் அவள் நெஞ்சுக்குள் எப்படி நுழைந்ததாம்? கண்களின் வழியாக.

    அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” என்று நாமெல்லாம் எத்தனை முறை படித்திருப்போம். அல்லது கேள்விப்பட்டிருப்போம். இந்த வரிகளைக் கேட்டதும் எனக்கு மறுபடியும் அந்த கம்பன் பாடலை ரசிக்க வேண்டும் என்று ஆவல். உங்களையும் என்னோடு அந்த ரசனைக்கு கூட்டிக்கொண்டு போகிறேன்.

    இதற்கு மேல் படிக்கின்ற வரிகளைப் படிக்கும் போதே கற்பனை செய்து கொண்டு படியுங்கள்.

    இடம் – மிதிலை நகர வீதி

    யானைப்போர் விளையாட்டுகள் நடக்கின்றன. நீர் நிலைகளில் பெண்கள் நீர்விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஊரெங்கும் வளமை பெருமை மகிழ்ச்சி.

    அந்த ஊரின் வீதிகளில் மும்மூர்த்திகளைப் போல மூன்று பேர் வருகின்றார்கள். பெண்களின் கண்களில் அவர்கள் விழுகிறார்கள்.

    மூவரில் ஒருவரைப் பார்த்தால் தவத்தில் அமர்ந்த சிவம் போல் இருக்கிறது. ஆம். சிவம் அருளிய கோசிக முனிதான் அவர். முன்பு அவரைப் பார்த்திருக்கிறேன். அவரை மனதுக்குள் வணங்கிக் கொள்வோம்.

    அருகில் வருவது நாராயணனா? அவனைப் போலத்தான் இருக்கிறது. ஆனால் தெரியவில்லை. அவன் தோளைப் பார்த்தேன். இன்னும் அவன் தோளையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். கண்களை நகட்ட முடியவில்லை. கையைப் பார்த்த ஒருத்தி இன்னும் கையையே பார்த்துக் கொண்டிருக்கிறாளாம். எவளாவது முகத்தைப் பார்த்திருக்கக் கூடாது. ச்சே!

    அவர்கள் பார்த்தது இராமனை. இரகுகுலச் சோமனை. கருமுகில் மெய்யனை. அவனைப் பார்த்தவர்களால் வேறு எதையும் பார்க்க முடியவில்லை. அருகில் இலக்குவன் என்று ஒருவன் வருவதும் தெரியவில்லை.

    அந்த நேரம் பார்த்து மாளிகையின் கன்னி மாடத்தில் ஒரு மலர் மலர்ந்தது. ஆம். கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகி தோழியரோடு வந்தாள்.

    அவன் பார்த்தான். ஏதோ ஒரு உந்துதல். அவளும் பார்த்தாள். இருவருமே தற்செயலாகத்தான் பார்த்தார்கள். விதி வந்து உந்தியிருக்க வேண்டும். கண்டவர்கள் எல்லாம் கண்டதையும் கண்டார்கள். ஆனால் இவர்கள் கண்டது கண்களை மட்டுமே.

    அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான்

    சரி. அப்படி நோக்கியதால் என்ன ஆயிற்று?

    கண்ணொடு கண் கண்ட பொழுதிலேயே ஒன்றையொன்று பசி கொண்டு கவ்வி உண்டு… அந்த இன்ப உணர்வு உள்ளத்தையும் உணர்வையும் நிறைத்திட நின்றார்கள்.

    கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றை ஒன்று
    உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட.
    அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்

    பார்வை மட்டுமா ஒட்டிக் கொண்டது? இருவரின் உள்ளங்களும்தான் ஒட்டிக்கொண்டன. சேச்சே! உள்ளங்கள் மட்டுந்தானா? அப்படியானால் இது வெறும் வனப்பின் ஈர்ப்புதானா?

    இல்லையில்லை. உணர்வுகளும் ஒட்டிக் கொண்டன. வெறும் உணர்வுகள் மட்டுந்தானா? அப்படியானால் அவர்கள் காதல் வயது கொடுக்கும் உணர்ச்சிகளின் வழி வந்ததுதானா?

    இல்லையில்லை. அதையும் தாண்டியது.

    அதெப்படி அதையும் தாண்டியது? இன்னும் விளக்கம் வேண்டும்.

    பாற்கடல் இருக்கிறதே… அந்தப் பாற்கடலில் முன்பு கணவன் மனைவியாக இருந்தவர்கள்தான் இவர்கள் இருவரும். ஏதோ காரணம்… மனிதர்களாகப் பிறந்து விட்டார்கள். கிட்டத்தட்ட ஒருவரையொருவர் மறந்து விட்டார்கள்.

    இன்று ஒருவருக்கொருவர் பார்வையைப் போர்வையாய் போர்த்தியதும் பழைய நினைவுகள் வந்து விட்டன. பாற்கடலிலே பாம்பணையிலே அன்று நாடியதும் பாடியதும் கூடியதும் கைகளால் ஒருவரையொருவர் கண்மூடித் தேடியதும் நினைவுக்கு வந்து விட்டன. அந்த பழைய பாசம் தான் மீண்டும் துளிர்க்கிறது. அன்று பிரிந்தவர்கள் இன்று கூடினால் பேசவும் முடியுமா?

    கருங் கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்
    பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ

    இப்போது புரிந்திருக்குமே “சீதையின் காதல் அன்று விழிவழி நுழைந்தது” எப்படியென்று?

    பாடல் – அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
    வரிகள் – வைரமுத்து
    பாடியவர்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா
    இசை – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்
    படம் – டூயட்
    பாடலின் சுட்டி – http://youtu.be/uK7Z8m1rp4U

    அன்புடன்,
    ஜிரா

    284/365

     
    • uma chelvan 12:22 pm on September 12, 2013 Permalink | Reply

      ” மை வைத்த கிண்ணம் தான் விழி அல்லவா, நானும் மனவாசல் நுழைகின்ற வழி அல்லவா ” மனதிற்குள் நுழைய விழிதான் வழி. மிகவும் அழகான பாடல் “காதல் ஜோதி” படத்தில். Very beautiful kanjana and young Jaisankar. I like black and white pictures and movies more then with colored ones.. I strongly believe that black and white brings out the best. பாயசத்தில் கலந்த முந்தரி போல இனிமையான சுசிலாவின் குரலுடன் கலந்த young SPB voice.

    • rajinirams 12:50 am on September 13, 2013 Permalink | Reply

      பிரமாதம்.கம்பனையும் வைரமுத்துவையும் கலந்து விழி வழியே மனதை தொட்ட பதிவு. விழியின் வழியே நீயா வந்து போனது என்ற புலமைப்பித்தனின் வரிகளும் கண் வழி புகுந்து கருத்தினை கவர்ந்த பாடலும் நினைவிற்கு வந்தன.என்றாலும் டி.ஆரின் கற்பனை சூப்பராக இருக்கும்-விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுமாம்.

    • mokrish 6:21 pm on September 14, 2013 Permalink | Reply

      மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன? – அவன்
      வருகையினால் இந்த இதழ்களின் மேலே புன்னகை விளைந்ததென்ன? #வாலி

  • mokrish 9:49 pm on August 20, 2013 Permalink | Reply  

    நடந்தாய் வாழி 

    போன வாரம் சென்னை கம்பன் கவிமன்றம் சந்திப்பில் நண்பர் @RagavanG காப்பிய இலக்கணம் என்ன என்பதை விளக்கினார்.   தொடர்ந்து பல விஷயங்களை பேசும்போது, கம்பன் சரயூ நதியை விவரிக்கும் அழகை குறிப்பிட்டார்.  காப்பிய இலக்கணம் பற்றி மேலே படிக்கலாம் என்று தேடியபோது தண்டியலங்காரம் கண்ணில் பட்டது.

    பெருங்காப் பியநிலை பேசுங் காலை

    வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றினொன்று

    ஏற்புடைத் தாகி முன்வர வியன்று

    நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித்

    தன்னிகர் இல்லாத் தலைவனை யுடைத்தாய்

    மலைகடல் நாடு, வளநகர் பருவம்

    இருசுடர்த் தோற்றமென்று இனையன புனைந்து

    என்று தொடங்கி தெளிவான இலக்கணம் வகுக்கிறது. அப்புறம் லேசாக மனமிறங்கி ‘கூறிய உறுப்பிற் சிலகுறைந் தியலினும்’ என்று ஒரு விதிவிலக்கு அளிக்கிறது. இந்த விதியில்

    தன்னிகர் இல்லாத தன்மை உடையவனைக் காப்பியத் தலைவனாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

    மலை, கடல், நாடு, நகர், ஆறு பருவங்கள், கதிரவன் தோற்றம், சந்திரனின் தோற்றம் ஆகியவற்றைப் பற்றிய வருணனைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

    என்ற விளக்கம் படித்தவுடன் ஏனோ எனக்கு சம்பந்தமேயில்லாமல் இதயக்கனி படத்தில் புலமைப்பித்தன் எழுதிய நீங்க நல்லாயிருக்கோணும் என்ற பாடல் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் சீர்காழி கோவிந்தராஜன் எஸ் ஜானகி டி எம் எஸ்’) நினைவுக்கு வந்தது. http://www.youtube.com/watch?v=Fi_I4UgfOAA  இதுவும் ராமச்சந்திரன் என்ற நாயகன் பற்றிய பாடல்தான்.  இதிலும் மலை, ஆறு , நாடு, நகர் என்று ஒரு Reference இருக்கிறது.  பாடலின் துவக்கத்தில் வரும் வரிகள்

    தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்

    கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி

    தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி

    ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர

    நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்

    வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட

    கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று

    அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து

    கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்

    தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்

    தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல்

    காவிரியை வர்ணிக்கும் விதம் அருமை. இந்த நதியைப்போல்  எங்கள் வாழ்வை வளமாக்கும் தலைவா நீங்க நல்லாயிருக்கோணும் என்று பாடும் பாடல்

    செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி

    கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்

    பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே

    வள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி

    எங்கள் இதயக் கனி இதயக் கனி

    நீங்க நல்லாயிருக்கோணும்

    ஒருவேளை புலமைப்பித்தன் எம்ஜிஆர் என்ற ஜானகி மணாளனைப் பற்றி காப்பியம் எழுதலாம் என்று ஆரம்பித்தாரோ? தெரியவில்லை

    மோகனகிருஷ்ணன்

    262/365

     
    • uchelvan 5:51 pm on August 21, 2013 Permalink | Reply

      கரை புரண்டு ஓடும் காவிரியை காண கண் கோடி வேண்டும். I had a surgery 3 weeks at Trichy, Surgeon ஸ்ரீ ரெங்கத்துகாரர். அவரை follow -up க்கு பார்க்க சென்ற போது..வாங்கம்மா!!!! என்றவர் உடனே, காலைலருந்து மனசு ரொம்ப சந்தோசமா இருக்குதம்மா, ஆறில் தண்ணீ போகுது என்றார்.. என்னாது ……..காலைலருந்து சந்தோசமா இருக்கீங்களா !!!! சொல்லவே இல்லை என்று வடிவேலு காமெடி போல் அதிர்ச்சியும் கொஞ்சம் நிம்மதியும் சுற்றி இருந்த junior டாக்டர்ஸ், நர்சுகளின் முகத்தில் !!! அடுத்த 45 நிமிடங்கள் தனது வாழ்கை வரலாறை சொல்லி முடித்து விட்டார்.. கிளம்புபோது. US வந்தா, கட்டாயம் வீட்டுக்கு வாங்க சார்,என்றேன். என்னை தவிர என் குடும்பத்தினர் அனைவரும் அங்கேதான் என்றார். நான் அவரை பார்த்து., உங்களுக்கு ( வைஷ்ணவர்களுக்கு ) அமெரிக்க தானே 109 திவ்ய தேசம் அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை சார் என்றேன் . !!!!!. :)))))

  • என். சொக்கன் 10:24 am on July 8, 2013 Permalink | Reply  

    புல்லினுள் சுழலும் இசை 

    • படம்: காதலர் தினம்
    • பாடல்: ரோஜா ரோஜா
    • எழுதியவர்: வாலி
    • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
    • பாடியவர்: உன்னி கிருஷ்ணன்
    • Link: http://www.youtube.com/watch?v=QwCEXv1TXqo

    இளையவளின் இடை ஒரு நூலகம், படித்திடவா பனி விழும் இரவுகள் ஆயிரம்!

    இடைவெளி எதற்கு, சொல் நமக்கு, உன் நாணம் ஒருமுறை விடுமுறை எடுத்தால் என்ன?

    ’என்னைத் தீண்டக் கூடாது’ என வானோடு சொல்லாது வங்கக்கடல்,

    ’என்னை ஏந்தக் கூடாது’ என கையோடு சொல்லாது புல்லாங்குழல்!

    தமிழில் ‘குழல்’ என்ற பெயர்ச்சொல், ‘குழலுதல்’ என்கிற வினைச்சொல்லில் இருந்து வந்தது. இதன் அர்த்தங்கள், சுருள்தல், வளைதல் போன்றவை.

    கம்ப ராமாயணத்தில் சீதையைச் சந்திக்கும் அனுமன், அவளுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக ராமனைப்பற்றி நிறைய பேசுகிறான், அவரது தோற்றத்தை வர்ணிக்கிறான். அதில் ஒரு பாடல், ராமனின் தலைமுடியைப்பற்றியது, ‘நீண்டு, குழன்று, நெய்த்து, இருண்டு…’ என்று தொடங்கும்.

    அதாவது, ராமனின் தலைமுடி நீண்டது, சுருண்டது, நெய் பூசியதுபோல் பளபளப்பானது, இருண்டது (கருமையானது)… இப்படித் தொடங்கி இன்னும் நிறைய வர்ணிக்கிறான் அனுமன்.

    இங்கே நமக்கு முக்கியம், ‘குழன்று’ என்ற வார்த்தை, ‘சுழன்று’ அல்ல, ‘குழன்று’, அதாவது, சுருண்டு, அல்லது வளைந்து!

    இப்படிக் குழன்று வருவதால்தான், தலைமுடிக்கே ‘குழல்’ என்று பெயர் வந்தது. ‘கட்டோடு குழலாட ஆட’ போன்ற பல பாடல்களில் இதைப் பார்த்திருக்கிறோம்.

    அது சரி, ஆனால் அதே பெயரை இசைக்கருவியாகிய குழலுக்கும் வைத்தது ஏன்?

    ஒன்றல்ல, இரண்டு காரணங்கள் சொல்லலாம்:

    முதல் காரணம், வடிவ அமைப்பில் பார்த்தால், குழல் / குழாய் என்பது, ஒரு நீண்ட பட்டை சுருண்டு சுருண்டு அமைந்ததுபோல்தான் தெரியும், சின்ன வயதில் பென்சிலின்மீது நீளப் பட்டைக் காகிதத்தைச் சுற்றி விளையாடியவர்களுக்கும், ஒரு குழலின்மீது உட்கார்ந்திருக்கும் இருவண்ண ஜவ்வு மிட்டாயை இழுத்து வாங்கித் தின்றவர்களுக்கும் இது நன்றாகத் தெரியும்!

    இன்னொரு காரணம், குழலின் ஒரு முனையில் ஊதப்படும் காற்று, உள்ளே வளைந்து ஓடி (அதாவது, குழன்று) வெவ்வேறு துளைகளின் வழியே வெளிவந்து இனிமையான இசையாகக் கேட்கிறது, ‘வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே’ என்று பழநிபாரதி எழுதினாற்போல!

    ‘குழல்’ சரி, அதென்ன ’புல்லாங்குழல்’?

    இந்தச் சொல்லை நாம் புல் ஆம் குழல் என்று பிரியும். அதாவது, புல்லால் ஆன குழல் என்று பொருள்.

    என்னது? புல்லா? அது மூங்கிலால் ஆனதல்லவா?

    உண்மைதான். ஆனால், தாவரவியல்ரீதியில் பார்த்தால், மூங்கில் என்பதே மரம் அல்ல, ஒருவகைப் புல்தான், என்ன, கொஞ்சம் தடிமனான புல்!

    அப்படியானால், குழல்போல இனிமையாகக் கூவும் குயிலைப் ‘புள்ளாங்குழல்’ என்றுகூட நாம் அழைக்கலாமோ?

    ***

    என். சொக்கன் …

    08 08 2013

    219/365

     
    • சிவா கிருஷ்ணமூர்த்தி 3:04 pm on July 8, 2013 Permalink | Reply

      //குழல்போல இனிமையாகக் கூவும் குயிலைப் ‘புள்ளாங்குழல்’//
      கண்டிப்பாய்!

    • rajinirams 10:36 am on July 9, 2013 Permalink | Reply

      புல் ஆம் குழல் -அருமையான விளக்கம். வாலியின் அருமையான வரிகளை எடுத்து காட்டியதோடு “வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே”என்ற பழனிபாரதியின் வரிகளையும் இணைத்தது சூப்பர்.

    • amas32 5:41 pm on July 10, 2013 Permalink | Reply

      இப்பொழுதெல்லாம் கூந்தலைக் குழல வைக்க (hair curling) ஓர் ஐயாயிரமோ பத்தாயிரமோ (Rs) தேவைப் படுகிறது 🙂 பிறகு அதை நீட்டிவிட (hair straightening) அதே amount! நேசுரலாகவே அப்படி இருந்தால் பெற்றோர்களுக்கு பணம் மிச்சம் 🙂

      amas32

  • என். சொக்கன் 8:28 pm on July 2, 2013 Permalink | Reply  

    பார்வை ஒன்றே போதுமே! 

    • படம்: கற்பகம்
    • பாடல்: பக்கத்து வீட்டுப் பருவ மச்சான்
    • எழுதியவர்: வாலி
    • இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    • பாடியவர்: பி. சுசீலா
    • Link: http://www.youtube.com/watch?v=0tjaE1I7h7A

    மனசுக்குள்ளே தேரோட்ட,

    மை விழியில் வடம் புடிச்சான்!

    தரையில் நடந்து சென்ற ராமனும், கன்னிமாடத்தில் நின்ற சீதையும் ஒருவரை ஒருவர் முதன்முறை பார்க்கிறார்கள். அந்தக் காட்சியில் கம்பனின் அட்டகாசமான பாடல் இது:

    பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து

    ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால்,

    வரி சிலை அண்ணலும், வாள் கண் நங்கையும்

    இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினர்!

    சுருக்கமாகச் சொன்னால், ராமன், சீதை இருவரும் ஒருவர் இதயத்தில் மற்றவர் மாறிப் புகுந்தார்கள்!

    அதெப்படி சாத்தியம்? இவன் கீழே இருக்கிறான், அவள் உயரத்தில் இருக்கிறாளே!

    அதனால் என்ன? கண் சிமிட்டாமல் ஒருவரை ஒருவர் விழுங்குவதுபோல் பார்த்துக்கொண்டிருக்கிறார்களல்லவா? அந்த ஆசைப் பார்வையையே கயிறாக வர்ணித்துவிடுகிறார் கம்பர்.

    மேலேயிருந்து சீதையின் பார்வை எனும் கயிறு கீழே வருகிறது, அதில் ஏறி ராமனின் இதயம் அங்கே செல்கிறது, அதேபோல், ராமனின் பார்வை எனும் கயிறில் இறங்கிச் சீதையின் இதயம் இங்கே வருகிறது. கையில் வில் ஏந்திய ராமனும், கண்ணில் வாள் ஏந்திய சீதையும் ஈருடல், ஓருயிர் என்றாகிவிடுகிறார்கள்.

    காதல் பார்வையைக் கயிறாக வர்ணிக்கும் இந்த அருமையான உவமைக்குத் தலை வாரிப் பூச்சூட்டி மிக அழகாக இந்தத் திரைப்பாடலில் பயன்படுத்துகிறார் வாலி, அவளுடைய மை விழிப் பார்வையையே வடமாகக் கொண்டு, அவள் மனத்துக்குள் இவன் தேரோட்டுகிறானாம்!

    அருமையான இந்த வரியைக் கேட்டு மகிழ்ந்துபோனார் கண்ணதாசன், ஒரு மேடையில் ‘வாலியை என் வாரிசு என்பேன்’ என்று பகிரங்கமாக அறிவித்தார்.

    திரைப்பாடல்கள் எழுதுவதில் தனக்குப் போட்டியாக வளர்ந்துவரும் ஒரு கவிஞரை, இப்படி வெளிப்படையாகப் பாராட்டுவதற்கு ஒரு மனம் வேண்டுமல்லவா!

    On a different context, பாரதியார் சொன்னதுதான் நினைவு வருகிறது, ‘திறமான புலமை எனில், வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்!’

    ***

    என். சொக்கன் …

    02 07 2013

    213/365

     
    • rajnirams 9:36 am on July 3, 2013 Permalink | Reply

      ஆஹா,வாலியின் அற்புதமான இரண்டு வரிகளையும்,கம்பனின் கற்பனையை மட்டுமல்ல,கவியரசரின் நல்ல மனதையும் எடுத்துக்காட்டி இருக்கிறீர்கள்.

    • amas32 7:58 pm on July 4, 2013 Permalink | Reply

      இந்த காலத்தில் காதலியிடம் இருந்து காற்றில் பறந்து வரும் flying kiss ஐக் காதலன் தாவிப் பிடித்துக் கொள்வது போல அந்தக் காலத்தில் மை விழி பார்வையே வடமாகிப் போனது 🙂

      காதலில் எதுவும் சாத்தியம் போல சாதி குறிக்கிடாத வரையில்!

      amas32

  • mokrish 10:25 am on June 15, 2013 Permalink | Reply  

    நல்ல சகுனம் நோக்கிச் செல்லடி! 

    இன்னிக்கு யார் முகத்திலே முழிச்சேனோ தெரியலை எதுவும் சரியா நடக்கலே என்ற புலம்பல்களை நாம் கேட்டிருப்போம். அதே போல் வெளியே கிளம்பும்போது எங்கே போறீங்க என்று யாராவது கேட்டுவிட்டால் அவ்வளவுதான். நாம் நினைத்த காரியம் தடைபடுமோ என்று மனம் சஞ்சலப்படும். பூனை குறுக்கே போவது , காகம் கத்தினால் உறவினர் வருவார்கள் , 13ம் நம்பர் ராசியில்லை, மணியோசை கேட்டால் நல்லது –  இப்படி ஏராளமான நம்பிக்கைகள்.

    வரப்போவதை ஏதோ ஒரு வகையில் அடையாளம் காட்டும் நிகழ்வுகளுக்கு  பொதுப் பெயர் நிமித்தங்கள். Omen என்று பொதுவாகச் சொல்வது நிமித்தம்தான். சகுனம் என்று நாம் உபயோகிக்கும் வார்த்தை இதன் subset தான்.  பறவைகளால் அறியப்படும் நிமித்தங்கள் சகுனம் ஆகும் .One for sorrow, Two for joy,என்ற ஆங்கில நர்சரி ரைம் சொல்வதும் இதுதானோ?

    தசரதன்  மிதிலையில் சில நாட்கள் தங்கி பின்னர் அயோத்திக்குப் புறப்பட்டுச் சென்றான். அப்போது சில தீய நிமித்தங்கள் தோன்றின

    ஏகும் அளவையின் வந்தன.

         வலமும் மயில். இடமும்

    காகம் முதலிய. முந்திய

          தடை செய்வன; கண்டான்;

    நாகம் அனன். ‘இடை இங்கு உளது

          இடையூறு’ என நடவான்;

    மாகம் மணி அணி தேரொடு

           நின்றான். நெறி வந்தான்.

    மயில்கள் இடமிருந்து வலமாகச் சென்றன. முதலில் இது நல்ல நிமித்தம். அடுத்து காகங்கள் வலமிருந்து இடமாகச் சென்றன. இது தீய சகுனமாக இருந்ததால் தசரதன் தயங்கி நின்றான் இதன் பலன் கேட்டு அதன்பின்தான் பயணம் தொடர்கிறான் என்று குறிப்பிடுகிறார் கம்பர்.

    கீதையின் ஆரம்பத்தில் யுத்தம் ஆரம்பிக்குமுன் அர்ஜுனன் பகவானிடம் சொல்கிறான். ‘கெட்ட சகுனங்களைப் பார்க்கிறேன்’ என்று நாம் சொல்வதைத்தான், ‘விபரீதமான நிமித்தங்களைப் பார்க்கிறேன்’என்கிறான்.

    குமரி கோட்டம் என்ற படத்தில் வாலி எழுதிய பாடல் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் டி எம் எஸ், எல் ஆர் ஈஸ்வரி) http://www.youtube.com/watch?v=cHRX3Lhruzg பெண்ணுக்கு இடது கண் துடித்தால் நல்ல சகுனம் என்பதை சொல்கிறார்.

    நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்

    என காதல் தேவதை சொன்னாள்

    என் இடது கண்ணும் துடித்தது

    உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்

    வைரமுத்து முதல்வன் படத்தில் உளுந்து வெதைக்கயிலே என்ற பாடலில் (இசை ஏ ஆர் ரஹ்மான் பாடியவர்கள் ஸ்வர்ணலதா ஸ்ரீநிவாஸ்) நல்ல சகுனங்களை பட்டியல் போடுகிறார்

    https://www.youtube.com/watch?v=5410bc0lD2w

    உளுந்து வெதைக்கயிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே

    நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்

    கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்

    என்னென்ன நல்ல சகுனங்கள் சொல்கிறார் பாருங்கள்

    வெக்கப்படப்பில் கவுளி கத்த வலது பக்கம் கருடன் சுத்த

    தெருவோரம் நெறகுடம் பார்க்கவும் மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே

    ஒரு பூக்காரி எதுக்க வர பசும் பால்மாடு கடக்கிறதே

    இப்படி எல்லா நல்ல சகுனங்களும் சேர்ந்து வந்தால் என்னாகும்? தெய்வம் நாம் வீடு தேடி வந்து வரம் தரும் என்கிறார்.

    இனி என்னாகுமோ ஏதாகுமோ

    இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ

    இந்த சகுனமோ நிமித்தமோ அதுவே பலனை உண்டாக்குவதில்லை. முன்பே நிர்ணயிக்கப்பட்ட நிகழ்வுகளுக்கு indicator  ஆக மட்டுமே இருக்கிறது .சத்ருக்களை வதம் செய்தால் பாவம் வருமே!”என்று அழுத அர்ஜுனனிடம், “இந்த யுத்தத்தில் இவர்களை வதைப்பதாக நான் ஏற்கெனவே தீர்மானம் செய்துவிட்டேன் அதனால் இவர்களைக் கொல்பவன் நான் தான். நீ வெறும் கருவியாக மட்டும்  இரு என்று கண்ணன் சொல்வதும் அதுவே,

    இதையெல்லாம் கிண்டல் செய்பவர்களும் உண்டு. ஆனால் அவர்களும் தங்கள் வாகனங்களின் கூட்டு எண் 8 ஆக இல்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள் – Resale பண்ணமுடியாது சார் அதுனாலதான் என்ற ஏதாவது ஒரு காரணம் சொல்லி.  Faith begins where logic ends!

    மோகனகிருஷ்ணன்

    196/365

     
    • PVR (@to_pvr) 10:52 am on June 15, 2013 Permalink | Reply

      Super

    • GiRa ஜிரா 3:02 pm on June 16, 2013 Permalink | Reply

      சில விஷயங்களை நம்பலாமா கூடாதாங்குறதை முடிவு பண்ணவே முடியிறதில்லை.

      மூட நம்பிக்கைக்குள்ள மூழ்கக் கூடாதுன்னுதான் பாக்குறோம். ஆனா சில நம்பிக்கைகள் தொடர்ந்து வந்துக்கிட்டுதான் இருக்கு.

      கெட்டதை எடுத்துக்குறத விட நல்லத எடுத்துக்கலாம்.

      கடவுளை நம்புறோமே… இதெல்லாம் நம்பலாமான்னும் ஒரு சந்தேகம் வரும். ரொம்பவும் யோசிச்சா கோயிலையும் பூஜையையும் விட கடவுள் பெருசா தெரிவாரு. அதையெல்லாம் விட்டு வெளிய வந்துட்டா உண்மையிலேயே மனம் இறைவனோட ஒன்றும். அந்தச் சூழ்நிலையில்தான் இது போன்ற நம்பிக்கைகளில் இருந்து நம்ம வெளிய வர முடியும்.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel