Updates from October, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • என். சொக்கன் 11:42 pm on October 31, 2013 Permalink | Reply  

    ஒரு ’கமா’க் கட்டுரை 

    • படம்: உலகம் சுற்றும் வாலிபன்
    • பாடல்: அவள் ஒரு நவரச நாடகம்
    • எழுதியவர்: கண்ணதாசன்
    • இசை: எம். எஸ். விஸ்வநாதன்
    • பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
    • Link: http://www.youtube.com/watch?v=_JDAiNMowaE

    அவள் ஒரு நவரச நாடகம்,

    ஆனந்தக் கவிதையின் ஆலயம்,

    தழுவிடும் இனங்களில் மானினம்,

    தமிழும் அவளும் ஓரினம்!

    ஆங்கிலத்தில் எந்த இரண்டு சொற்களை இணைத்துப் பட்டியல் போட்டாலும், நடுவில் ஒரு கமா (காற்புள்ளி) அல்லது ‘and’ என்ற சொல்லைச் சேர்க்கிறோம். உதாரணமாக: Ram and Laxman அல்லது Ram, Laxman.

    இதை அப்படியே தமிழுக்கும் நீட்டி, இப்படி எழுதுகிறோம்: ராம் மற்றும் லட்சுமணன் அல்லது ராம், லட்சுமணன்.

    ஆனால் இந்த இரண்டு தவிர, தமிழில் மூன்றாவதாக இன்னொரு வகையும் உண்டு. பட்டியலில் உள்ள சொற்களுடன் ‘உம்’ சேர்த்து எழுதுவது. இப்படி: ராமனும் லட்சுமணனும்.

    இலக்கணத்தில் இதனை ‘எண்ணும்மை’ என்கிறார்கள். அதாவது, ராமன், லட்சுமணன் என்று எண்ணுகிற ‘உம்’மை. உதாரணமாக: நானும் அவனும், சந்திரனும் சூரியனும், பூவும் காயும்…

    இப்படி எங்கெல்லாம் ‘எண்ணும்மை’ வருகிறதோ, அங்கெல்லாம் நடுவில் காற்புள்ளி சேர்க்க வேண்டியதில்லை, ‘மற்றும்’ என்ற சொல்லும் வேண்டியதில்லை. இதையெல்லாம் அந்த ‘உம்மை’ பார்த்துக்கொள்கிறது. ‘தமிழும் அவளும் ஓரினம்’ என்று எழுதினால் போதும், ‘தமிழும், அவளும் ஓரினம்’ என்று கமா போட்டு எழுதவேண்டியதில்லை.

    ***

    என். சொக்கன் …

    31 10 2013

    333/365

     
    • amas32 9:45 pm on November 1, 2013 Permalink | Reply

      நீங்களும் நாலு வரி நோட்டும் மாதிரி :-))

      amas32

  • G.Ra ஜிரா 11:17 pm on October 30, 2013 Permalink | Reply  

    ஆசை நரைப்பதில்லை 

    காதலிக்க நேரமில்லை
    காதலிப்பார் யாருமில்லை
    வாலிபத்தில் காதலிக்க
    ஜாதகத்தில் வழியுமில்லை

    டிவியில் காதலிக்க நேரமில்லை படத்துக்காக கண்ணதாசன் வரிகளை சீர்காழி கோவிந்தரன் பாடிக்கொண்டிருந்தார்.

    வாலிபத்தில் காதலிக்க முடியாமல் போய் விட்டதே என்று வேதனைப்படும் முதியவரின் பாத்திரம் பாடும் பாடல் அது.

    காதல் என்றால் வாலிபத்தில் மட்டும் வருமா? வந்தாலும் வாலிபத்தோடு போய்விடுமா?

    இல்லை இல்லை என்று அடித்துச் சொல்கிறது கவியரசரின் இன்னொரு பாடல்.

    ஐம்பதிலும் ஆசை வரும்
    ஆசையுடன் பாசம் வரும்
    இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா

    இது உண்மைதான் போலும். வயது ஆனாலும் கணவனும் மனைவியுமாக வாழும் வாழ்க்கையின் அனுபவங்கள் அந்தக் காதலை கூட்டத்தான் செய்யும். அதையும் அந்தப் பாடலில் அழகாக சொல்லியிருக்கிறார் கவியரசர்.

    வீடு வரும்போது ஓடி வரும் மாது
    நினைவில் இன்னும் நிற்கின்றாள்
    ஆறு சுவை செய்தாள் அருகிருந்து தந்தாள்
    அன்புமிக்க தாயாகின்றாள்

    என்ன அழகாகவும் எளிமையாகவும் கண்ணதாசன் கூறியிருக்கிறார். அவர் சொன்னதும் உண்மைதான். வயது கூடக் கூடத்தான் கணவனுக்கும் மனைவிக்கும் அன்னியோன்யம் கூடுமாம். அதற்கும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார் கவியரசர். எதற்குதான் இவர் எழுதவில்லையோ!

    எங்க வீட்டு ராணிக்கிப்போ இளமை திரும்புது
    வயது ஏற ஏற பருவம் ஏறி காதல் அரும்புது

    இப்படி ஒரு கணவன் பாடினால் அதற்கு மனைவி என்ன எதிர்ப்பாட்டு பாட வேண்டும்?

    இந்த வயசில் தானே எனக்கு விவரம் புரியுது
    நீங்க ஏற இறங்கப் பார்க்கும் போது விளக்கம் தெரியுது

    அவர்கள் பேசிக் கொண்டிருப்பது அவர்களது அன்னியோன்யத்தை. ஆனால் கொஞ்சமும் ஆபாசம் இல்லை. எவ்வளவு இயல்பாக தமிழ் விளையாடுகிறது. அப்படித்தான் இல்லறமும் இனிமையானது. ஒருவரையொருவர் எப்போதும் நினைத்துக் கொண்டு… நேரங்களில் அணைத்துக் கொண்டு… உயிரோடு உயிரை இணைத்துக் கொண்டு… அதுதான் வயதுகளையும் கடந்து நிற்கும் காதல்.

    காலம் தாண்டி கிடைக்கும்போது
    காதல் இனிக்கும் இனிப்பு
    கட்டி வெல்லம் கசந்து போகும்
    கட்டிப் பிடிக்கும் பிடிப்பு

    என்ன… கவிஞர்கள் சொல்வது சரிதானே?!?

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – காதலிக்க நேரமில்லை
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – சீர்காழி கோவிந்தராஜன்
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன், டி.கே.இராமமூர்த்தி
    படம் – காதலிக்க நேரமில்லை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=wx6ID51LVyc

    பாடல் – ஐம்பதிலும் ஆசை வரும்
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – ரிஷிமூலம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=zkTZUSTmGsw

    பாடல் – எங்க வீட்டு இராணிக்கிப்போ
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – கிரகப் பிரவேசம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=-MH6-OkHvTk

    அன்புடன்,
    ஜிரா

    332/365

     
    • Saba-Thambi 4:13 am on October 31, 2013 Permalink | Reply

      வயதுகளையும் கடந்து நிற்பது துன்ப நேரங்ககளிலும் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுப்பது – marriage vows goes as —- for better for worse, for richer for poorer….

      துன்ப நேர பாடல் :

    • amas32 7:34 pm on October 31, 2013 Permalink | Reply

      காதலிக்க நேரமில்லை பாடல் அருமை ஆனால் சீர்காழியின் குரல் முத்துராமனுக்கு செட்டாகாது.

      அவ்வை ஷண்முகி படத்தில் ருக்கு ருக்கு ருக்கு பாட்டில் அவ்வை ஷன்முகியான கமல் மீனாவுக்குச் சொல்லும் “அன்பு 50,60 ஆனாலும் மலரும்” அறிவுரையைத் தவறாகப் புரிந்து கொண்டு கமலைப் பார்த்துக் காதல் மன்னர் ஜெமினி லுக் விடுவது களேபரக் காமெடி 🙂

      ஆனால் உண்மை அது தான். வயது ஏற ஏற தாம்பத்திய வாழ்க்கையில் புரிந்து கொள்ளும் தன்மை மிகும். அன்பு கூடும்.

      amas32

    • rajinirams 10:25 am on November 1, 2013 Permalink | Reply

      கணவன் மனைவி அன்பை எடுத்துக்காட்டும் அருமையான பதிவு.வாலி வரிகள் -வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும் ஆனாலும் அன்பு மாறாதம்மா-மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதம்மா,நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி,நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி-கல்யாண மாலை வரிகளும் நாற்பது வந்தா வெள்ளெழுத்து அது யாருக்கும் உள்ள தலைஎழுத்து-நாற்பது வயதில் பாடல் வரிகளும் நினைவிற்கு வந்தன.

  • mokrish 7:04 pm on October 29, 2013 Permalink | Reply  

    பூமாலையும் பாமாலையும் 

    சென்னை பாண்டி பஜாரில் சாலையோரத்தில் உள்ள பூக்கடைகள் அகற்றப்படலாம் என்று ஒரு செய்தி படித்தேன். நடைபாதை வியாபாரிகள் , வழக்கு, தீர்ப்பு – இவை தவிர சுவாரசியமான ஒரு தகவல் கண்ணில் பட்டது. ‘Petal Rose’ மாலைக்கு ஜோதிகா மாலை என்று பெயர்., பெரிய ரோஜா மாலைக்கு ‘படையப்பா’ மாலை என்று பெயர். சம்பங்கி, விரிச்சி, வாடாமல்லி கொண்டு காட்டப்படும் மாலைக்கு ஆண்டாள் மாலை என்று பெயர்.

    ஆண்டாள் என்றாலே முதலில் அவள் சூடிய பூமாலைதான் நினைவுக்கு வரும். எம்பெருமான் மேல் ஆழ்ந்த பக்தியும் காதலும் கொண்டவள். ஆழ்வார் எம்பெருமானுக்கு கட்டிய மாலையைச் சூடி மகிழ்ந்தவள். மணப்பருவம் வந்தவுடன் தட்டுச் சேலையணிந்து, பருத்த செங்கழுநீர் மாலை சூடி, அன்ன நடையிட்டு அரங்கனோடு சேர்கிறாள். அதனால் ஆண்டாள் மாலை ஸ்பெஷல் தான். இன்றும் மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது வைகை ஆற்றில் இறங்க வரும் கள்ளழகர் சூடுவது ஆண்டாளின் அழகு மாலைதான். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி பிரம்மோற்சவத்தின் போது திருவேங்கடமுடையவனுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாளின் மாலை செல்கிறது.

    கண்ணதாசன் பாடல்களில் ஆண்டாள் பற்றிய reference நிறைய உண்டு. மணக்கோலத்தில் இருக்கும் நாயகியைப் பாடும் பல வரிகளில் கோதை வர்ணனை இருக்கும். ஆனால் டீச்சரம்மா என்ற படத்தில் இந்த ஆண்டாள், மாலை என்பதை ஒரு காதல் முக்கோணத்தில் பயன்படுத்திய விதம் அருமை. தோழிகள் இருவரும் நாயகன் மேல் காதல் கொள்ள, ஒரு பெண் விட்டுக்கொடுக்கும் காட்சியமைப்பு (இசை டி ஆர் பாப்பா பாடியவர் பி சுசீலா)

    http://www.palanikumar.com/filmsongdetails_tamil.phtml?filmid=1367&songid=4737

    சூடிக் கொடுத்தவள் நான் தோழி

    சூட்டிக் கொண்டவளே நீ வாழி

    பாடிக் கொடுத்தவள் நான் தோழி

    பாட்டை முடித்தவள் நீ வாழி

    ஆண்டாள் தந்த பூமாலை பாமாலை இரண்டையும் வைத்து ஒரு ஆரம்பம். இதில் தோழி வாழி எல்லாம் சற்று மாற்றினால் ஆண்டாள் அரங்கன் மேல் பாடுவது போல் பொருள் வரும்

    மாலை தொடுத்து மலர் கொண்டு

    மஞ்சள் குங்குமச் சிமிழ் கொண்டு

    ஏழை எழுந்தேன் எனக்கென்று – அந்த

    இறைவன் முடித்தான் உனக்கென்று

    கதையை, காட்சியை உள்வாங்கி கண்ணதாசன் ஒரு பாடல் எழுதி கதையை நகர்த்துவார். பல வருடங்கள் கழித்து பாடல் வரிகளை மட்டும் கேட்டாலும் காட்சி மனதில் விரியும். அது ஒரு அபார வித்தை

    மோகனகிருஷ்ணன்

    331/365

     
    • rajinirams 8:00 pm on October 29, 2013 Permalink | Reply

      அருமை.எனக்கு உடனே நினைவு வந்த வரிகள்- சூடி கொடுத்தாள் பாவை படித்தாள்,சுடராக எந்நாளும் தமிழ்வானில் ஜொலித்தாள்-கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்.கன்னித்தமிழ் ஆவி தன் காதல் மலர் தூவி மாலையிட்டாள்-மல்லிகை முல்லை..கண்ணதாசன்.

    • Uma Chelvan 8:13 am on October 30, 2013 Permalink | Reply

      ஆம், கோதையின் பாடல்கள் அனைத்தும் தேன்தான். அதிலும் ” ஆழி மழை கண்ணா , ஒன்று நீ கைகரவேல் , ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி” …. எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

      சூடி தந்த சுடர் கொடியே
      சோகத்தை நிறுத்திவிடு
      நாளை வரும் மாலை என்று ……………….

      மார்கழி திங்கள் அல்லவா.
      மதி கொஞ்சும் நாள் அல்லவா -இது
      கண்ணன் வரும் பொழுது அல்லவா
      ஒரு முறை உனது திருமுகம்
      பார்த்தால் விடை பெரும் உயிர் அல்லவா !!!

    • amas32 7:40 pm on October 31, 2013 Permalink | Reply

      பிராமணத் திருமணங்களில் மணப்பெண் மாலை மாற்றும் வேளையில் ஆண்டாள் மாலை தான் அணிந்துக் கொண்டு வருவாள். சாதா மாலை போல கீழே முடிந்து செண்டு இருக்காது. ஓபனாக இருக்கும். மாலை மாற்ற வசதி.

      ஆண்டாள் ராதை போல் ஒரு ஒப்பற்ற அன்பு தேவதை. அவர்கள் இருவரும் சொல்லிக் கொடுத்ததெல்லாம் இறைவன் பால் எப்படி தூய அன்பு செலுத்த வேண்டும் என்பது தான். Also unconditional love.

      ரொம்ப அருமையானப் பதிவு 🙂

      amas32

  • என். சொக்கன் 11:17 pm on October 28, 2013 Permalink | Reply  

    அழகின் கதகதப்பு! 

    • படம்: உயிரே
    • பாடல்: தைய தையா
    • எழுதியவர்: வைரமுத்து
    • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
    • பாடியவர்கள்: சுக்விந்தர் சிங், மால்குடி சுபா
    • Link: http://www.youtube.com/watch?v=pE3ykXZS4zA

    அவள் கண்களோடு இருநூறாண்டு,

    மூக்கின் அழகோடு முந்நூறாண்டு,

    அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும்!

    ஐநூறா, ஐந்நூறா, எது சரி?

    வழக்கம்போல், இரண்டுமே சரிதான், எந்தச் சூழ்நிலையில் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து விடை மாறும்!

    சாலையில் நடந்து செல்கிறீர்கள். கீழே ஏதோ கிடக்கிறது, குனிந்து பார்த்தால், அது ஒரு நூறு ரூபாய் நோட்டு. மகிழ்ச்சியில் துள்ளுகிறீர்கள். ‘ஐ! நூறு ரூபாய் கிடைத்தது எனக்கு’ என்கிறீர்கள்.

    ஆனால், அதே இடத்தில் ஐந்து நூறு ரூபாய்த் தாள்கள் கிடைத்தால், ‘ஐநூறு ரூபாய்’ என்று சொல்லக்கூடாது, ‘ஐந்நூறு ரூபாய்’ என்றுதான் சொல்லவேண்டும்!

    ஐந்து + நூறு ஆகியவை இணையும்போது, ’ஐந்து’ என்ற சொல்லின் நிறைவில் உள்ள ‘து’ என்ற எழுத்து நீக்கப்படும், ஆனால் ‘ந்’ என்ற எழுத்து நீக்கப்படாது, இதனைத் தொல்காப்பியம் ‘நான்கும் ஐந்து ஒற்றுமெய் திரியா’ என்று குறிப்பிடுகிறது.

    ஆக, ஐந்(து) + நூறு = ஐந்நூறு.

    ***

    என். சொக்கன் …

    28 10 2013

    330/365

     
    • rajinirams 12:33 pm on October 29, 2013 Permalink | Reply

      ஐ! “ந்”த தகவல் புதுசு.நல்ல பதிவு.

    • amas32 11:22 am on November 2, 2013 Permalink | Reply

      //அவள் கண்களோடு இருநூறாண்டு,

      மூக்கின் அழகோடு முந்நூறாண்டு,

      அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும்!//

      200 +300 =500?
      கண்களின் அழகோடு 200 ஆண்டுகள்,
      மூக்கின் அழகோடு 300 ஆண்டுகள்,
      ஆக மொத்தம் 500 ஆண்டுகள்?

      அழகோ அழகு 🙂

      amas32

  • G.Ra ஜிரா 9:47 pm on October 27, 2013 Permalink | Reply  

    உரசிவிட்டேன் சந்தனத்தை! 

    மேகத்த தூது விட்டா
    தெச மாறிப் போகுமோன்னு
    தண்ணிய நான் தூது விட்டேன்
    தண்ணிக்கு இந்தக் கன்னி
    சொல்லி விட்ட சேதியெல்லாம்
    எப்ப வந்து தரப்போற
    எப்ப வந்து தரப்போற

    இசையரசி பி.சுசீலாவின் குரல் தேனாறாய் ஓடிக் கொண்டிருந்தது. எல்லாருக்கும் தெரிந்த பாட்டுதான். அச்சமில்லை அச்சமில்லை திரைப்படத்தில் வி.எஸ்.நரசிம்மன் இசையில் வைரமுத்துவின் வைரவரிகள்.

    மேகம் வானத்தில் மிதந்து போகும். காற்றடித்து திசை மாறிப் போய் விட்டால் அத்தானுக்கு அனுப்பிய சேதியும் திசை மாறிப் போய்விடுமல்லவா! அதுதான் அவளது கவலை. அதனால்தான் மேகத்துக்கு பதிலாக பழகிய வழியில் ஓடிக் கொண்டிருக்கும் ஆற்று நீரை தூதாக அனுப்பினாள் அந்தப் பெண்.

    ஆனால் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகும் ஒரு யட்சனுக்கு அந்தக் கவலை எல்லாம் இல்லை. மோகங்களைத் தூதனுப்ப அவன் நம்பியது தாகங்கள் கொண்டு நீர் குடித்த மேகங்களைத்தான்.

    யார் இந்த யட்சன்?

    செல்வத்துக்கெல்லாம் அதிபதி குபேரன். அந்தக் குபேரன் இருப்பது இமயமலையில் உள்ள அளகாபுரி. அந்த அளகாபுரியில் ஒரு ஏரி. அதற்கு மானச ஏரி (மானசரோவர்) என்று பெயர். செல்வத் திருநாட்டின் ஏரி என்பதாலோ என்னவோ… அந்த ஏரியில் பூக்கும் தாமரை மலர்கள் கூட தங்கத் தாமரைகளா இருக்கின்றன. பறவைகளும் பொற்பறவைகளே!

    அந்த ஏரியைக் காவல் காக்க வேண்டிய பொறுப்பில் இருந்தவன் தான் நாம் பார்க்கும் யட்சன். அன்றொரு நாள் அவன் காவல் காத்துக்கொண்டுதான் இருந்தான். இரவு வந்தது. மனதில் உறவின் நினைவு வந்தது. முதலில் உடம்பை விட்டுவிட்டு மனம் மட்டும் மனைவியிடம் சென்றது. பின்னர் மனம் போன வழியிலேயே உடம்பும் போனது.

    அவன் போன நேரம் பார்த்து அந்தப் பக்கம் வந்தன சில யானைகள். ஏரிக்குள் இறங்கி விளையாடின. அந்த விளையாட்டில் தங்கத் தாமரைகள் சிதைந்து போயின. பொற்பறவைகள் பறந்து போயின. அத்தோடு ஏரி சிதைந்த சேதியும் குபேரனுக்குப் பறந்தது.

    அந்த யட்சனை அழைத்தான்.

    “கடமை தவறிய யட்சனே! உன்னால் அல்லவோ ஏரி கலங்கியது. தாமரைகள் அழிந்தன. எதை நினைத்து நீ கடமையை மறந்தாயோ அதைப் பிரிந்து ஓராண்டுகாலம் ராமகிரி காட்டுக்குள் வசிப்பாயாக. இதுவே உனக்குத் தண்டனை”

    அந்த சாபத்தினால் காட்டுக்கு வந்தவனே நாம் முன்னம் சொன்ன யட்சன். அது ஆடி மாதம் வேறு.

    காட்டுக்கு வந்தாலும் வீட்டு நினைப்புதான் அவனுக்கு. மெல்லியலாள் இன்சொல்லாள் தேனிதழாள் நினைப்பு அவனை வாட்டி வதைத்தது. அந்த வேதனையில் அவன் உள்ளத்தில் பிறந்த ஏக்கங்களையெல்லாம் மனைவிக்குச் சொல்ல விரும்பினான்.

    யாரிடம் சொல்லி அனுப்புவது. அந்தரங்கமான ஏக்கங்கள் அல்லவா? ஜிமெயிலோ மொபைல் போனோ இல்லாத காலம் அது. மனிதர்களிடம் சொல்லியனுப்ப முடியாது. அப்போது அவன் கண்ணில் பட்டவைதான் மேகங்கள்.

    அவன் இருந்த அதே மனநிலையில்தான் அவன் மனைவியும் இருந்தாள். அந்தப் பெண்ணின் மனநிலையை நினைக்கும் போது எனக்கு கவிஞர் தாமரை எழுதிய பாடல் நினைவுக்கு வருகிறது.

    தூது வருமா தூது வருமா
    காற்றில் வருமா கரைந்து விடுமா
    கனவில் வருமா கலைந்து விடுமா
    …………….
    கருப்பிலே உடைகள் அணிந்தேன்
    இருட்டிலே காத்துக்கிடந்தேன்
    யட்சன் போலே நீயும் வந்தாய்
    ………………
    மறுபடி வருவாய் என்று துடித்தேன்
    நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன்
    பிரிய மனமில்லை
    இன்னும் ஒரு முறை வா…..

    தன்னுடைய மனைவியின் ஏக்கங்களைப் புரிந்த கணவனால்தான் தன்னுடைய ஏக்கங்களை வெளிக்காட்ட முடியும். நாம் பார்த்துக் கொண்டிருக்கும் யட்சனும் அந்த வகைதான். காட்டில் இருந்த போது அந்த வழியாக வந்த மேகங்களை அழைத்து தன் ஏக்கங்களை தூது விடுகிறான். ஒருவேளை அந்த மேகங்கள் வழி மாறிப் போய்விட்டால்?

    அதற்காகத்தான் அவன் போகும் வழியையும்… போவது சரியான வழிதானா என்பதை உறுதி செய்யும் அடையாளங்களையும் சொல்லியே மேகங்களை தூதனுப்புகிறான்.

    இதுதான் காளிதாசர் எழுதிய மேகதூதத்தின் கதை.

    ஒவ்வொரு பாடலும் அதன் பொருளும் மிக அழகானவை. ஒரு சிறு பகுதியை உங்களுக்காக ஆங்கில மொழிபெயர்ப்பின் உதவியோடு தமிழாக்கம் செய்து தருகிறேன்.

    “மேகங்களே, கடம்ப மலர்கள் பூத்த நிச்ச மலையில் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு வடக்கே செல்க. அங்கே நாகநதி வரும். ஓட்டத்தில் அது வேகநதி. அங்கிருக்கும் வெயிலுக்கு அது தாகநதி.

    அந்த நதிக்கரையிலே, அல்லி மலர்களைக் கிள்ளி மெல்லிய செவித்துளையில் தள்ளி கம்மலாக அணிந்து கொண்டு துளித்துளியாய் வியர்வை வழிய துள்ளித் துள்ளி ஓடுகிறாள் பூ விற்கும் இளம்பெண். நீ போகும் வழியில் அவளுக்கும் சற்று நிழல் தந்து களைப்பை நீக்குவாயாக!”

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர்கள் – இசையரசி பி.சுசீலா, மலேசியா வாசுதேவன்
    இசை – வி.எஸ்.நரசிம்மன்
    படம் – அச்சமில்லை அச்சமில்லை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=w_obVXcywTo

    பாடல் – தூது வருமா தூது வருமா
    வரிகள் – கவிஞர் தாமரை
    பாடியவர் – சுனிதா சாரதி
    இசை – ஹாரிஸ் ஜெயராஜ்
    படம் – காக்க காக்க
    பாடலின் சுட்டி – http://youtu.be/BFv9wo4s4jw

    அன்புடன்,
    ஜிரா

    329/365

     
    • Uma Chelvan 10:28 pm on October 27, 2013 Permalink | Reply

      நீரும் மாறும் நிலமும் மாறும்
      அறிவோம் கண்ணா !!!!
      மாறும் உலகில் மாறா இளமை
      அடைவோம் கண்ணா !!!!

      மேகத்தையும் நீரையும் போல எண்ணங்களையும் தூது விடலாம். In fact, thoughts travel faster then clouds and water !!!!!

      ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே ……ஓடோடி சென்று காதல் பெண்ணின் உறவை சொல்லுங்களே !

    • rajinirams 4:41 pm on October 28, 2013 Permalink | Reply

      யட்சனின் கதையை விளக்கி காளிதாசனின் மேகதூதத்தோடு கூடிய அருமையான “தூது”பதிவு. கிழக்கே போகும் ரயிலின் தூது போ ரயிலே பாடலும் உயிருள்ள வரை உஷாவின் வைகை கரை காற்றே நில்லு வஞ்சிதனை பார்த்தால் சொல்லு மன்னன் மனம் வாடுதென்று மங்கை தனை தேடுதென்று காற்றே பூங்காற்றே அவள் காதோரம் போய் சொல்லு வரிகளும் தூது சொல்ல ஒரு தோழி பாடலும் நினைவிற்கு வருகின்றன.நன்றி.

    • Saba-Thambi 12:56 pm on October 29, 2013 Permalink | Reply

      உங்கள் பதிவு வைரமுத் து எழுதிய ஓர் பாடலையும் நினைவுக்கு தருகிறது.
      இங்கு முகவரியை தொலைத்து விட்ட மேகமாக……

      முகிலினங்கள் அலைகிறதே
      முகவரிகள் தொலைந்தனவோ
      முகவரிகள் தவறியதால்
      அழுதிடுமோ அது மழையோ

      @2.5 நிமிடம்

      சுட்டி:

  • mokrish 7:41 pm on October 26, 2013 Permalink | Reply  

    முகவரிகள் தொலைந்தனவோ 

    இந்திய தபால் துறையின் ஸ்பீட் போஸ்ட் சேவை மூலம் சில விண்ணப்ப படிவங்களை வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருக்கு அனுப்பினேன். குறைந்த கட்டணம். விளம்பர வெளிச்சம் இல்லாமல், வியாபார ரீதியில் சரியான விலை நிர்ணயம் இல்லாமல் நடக்கும் சேவை. ஆனால் தனியார் அஞ்சலுக்கு நிகரான சேவை.

    பள்ளிக்கு நடந்து போகும்போது மரத்தில், மின் கம்பத்தில் தொங்கும் சிவப்பு நிற தபால் பெட்டியில் ‘Next clearance’ என்ற நேரம் மாறுவதை வியப்புடன் பார்த்திருக்கிறேன். அந்த நேரத்துக்கு முன் போடப்படும் கடிதங்கள் விரைவாக சேரும் என்று புரிந்தபோது ஆச்சரியமாக இருந்தது.

    நிறைய கடிதங்கள் வரும். நானும் நிறைய கடிதங்கள் எழுதியிருக்கிறேன். பின்னர் நவீன தொழில்நுட்பங்கள் வளர்ச்சியால் மாற்றங்கள் ஏற்பட்டு இ-மெயில், SMS, சமூக வலைத்தளங்கள் என்றும் நானும் மாறியிருக்கிறேன். இப்போது இரண்டு பக்க கடிதம் எழுத முடியுமா என்று மலைப்பாக இருக்கிறது. உணர்வுபூர்வமான இழப்பு என்றெல்லாம் இல்லை. கையால் எழுதிய கடிதம் இன்னும் கொஞ்சம் intimate ஆக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

    கௌரி கல்யாணம் என்ற படத்தில் கண்ணதாசன் தபால் சேவையைப் பற்றி எழுதிய ஒரு பாடல் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் டி எம் எஸ்)

    https://www.youtube.com/watch?v=yirJLzTqonk

    ஒருவர் மனதை ஒருவர் அறிய

    உதவும் சேவை இது,- வாழ்வை

    இணைக்கும் பாலம் இது !

    கடிதங்கள் நம் இடையில் இருக்கும் தூரங்களை உடைத்து – வாழ்வை இணைக்கும் பாலம் என்கிறார். உறவும் நட்பும் நம் வாழ்வில் அக்கறை கொண்டு ‘நலமா என்று கேட்கும் அந்த கடிதம் ஸ்பெஷல்தான்

    தாயைப் பிரிந்த பிள்ளை என்றாலும்,

    தாரம் பிரிந்த கணவன் என்றாலும்,

    உடன் பிறந்தோரின் பிரிவென்ற போதும்

    பிரிவுத் துயரை பேசிடும் கடிதம்

    கன்னியரே காலம் வரும் ,

    காதலரின் தூது வரும் !

    பிள்ளை அனுப்பும் வெள்ளிப் பணம் நூறு,

    அன்னை முகத்தில் ஆனந்தம் பாரு !

    மகனை நினைத்து மயங்கும் மனமே,

    விரைவில் வருவான் முருகன் அருள்வான் !

    இந்த பாடலில் கடிதத்தில் வரும் செய்தி இன்பமும் தரலாம் துன்பமும் தரலாம் என்ற பொருளில் வரும்

    காலம் என்னும் தெய்வமகள்

    கலங்க வைப்பாள் – சிரிக்க வைப்பாள் !

    எந்தெந்த முறையில் என்ன என்ன கதையோ,

    எந்தெந்த முகத்தில் என்ன என்ன வருமோ ,

    சுகமும் வரலாம் , துன்பமும் வரலாம்,

    இறைவன் அருளால் நலமே வருக

    வரிகள் தபால் துறைக்கும் பொருந்தும். குறுஞ்செய்தியிடம் தோற்ற தந்தி, மின்னஞ்சலிடம் தோற்கும் கடிதங்கள். ATM வளர்ச்சியில் அடி வாங்கும் மணி ஆர்டர் என்று தொழில்நுட்பம் தந்ததெல்லாம் துன்பமே. இப்போது கொஞ்சம் modernize செய்ய முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. இறைவன் அருளால் நலமே வருக.

    மோகனகிருஷ்ணன்
    328/365

     
    • rajinirams 10:30 am on October 27, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு.அவசர அவசரமாக கடிதத்தை கிளியரன்ஸ் டைம்ல கொண்டு போய் அவங்க சாக்கு பைல போட்டது,QMSனு எழுதினால் சீக்கிரம் போகும்னு நம்பியது:-)) சில முக்கிய கடிதங்களுக்காக தபால்காரரை எதிர்பார்த்து காத்திருந்தது-இப்படி பழைய விஷயங்களை நினைவு படுத்தி விட்டீர்கள்.ஒருவர் மனதை ஒருவர் அறிய பாடலும் அற்புதமான பாடல்.அது போல தபால்காரரின் பெருமை சொல்லும் பாடல் வேறு எதுவுமில்லை. நன்றி.

    • amas32 8:26 pm on October 27, 2013 Permalink | Reply

      சேரனின் சமீபத்தியத் திரைப்படம் பொக்கிஷம். இந்தப் படம் முழுவதும் அஞ்சல் மூலம் வளரும் அந்தக் காலக் காதல் பற்றியது.

      தந்தி சேவை முடிந்த அன்று நிறைய பெற்றோர்கள் பிள்ளைகளை அஞ்சல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தந்தி சேவையைக் காட்டியது போல இனி வருங்காலங்களில் தபால் சேவையும் வழக்கொழிந்து போக வாய்ப்பு உள்ளது.

      ரொம்ப வித்தியாசமான பாடல் தேர்வு 🙂

      amas32

  • என். சொக்கன் 9:38 pm on October 25, 2013 Permalink | Reply  

    கங்கையும் காவிரியும் 

    • படம்: ஞானப்பழம்
    • பாடல்: யாரும் இல்லாத தீவொன்று வேண்டும்
    • எழுதியவர்: பா. விஜய்
    • இசை: கே. பாக்யராஜ்
    • பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சுஜாதா
    • Link: http://www.youtube.com/watch?v=QRWeVVy-rMk

    காவிரியில் வந்து கங்கை

    கை சேர்க்க வேண்டும்,

    நாமும் அதில் சென்று காதல்

    நீராடவேண்டும்!

    இன்று மாயவரம் மயூரநாதர் ஆலயம் சென்றிருந்தேன். அத்தலத்தின் வரலாற்றுப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தபோது, சட்டென்று இந்தப் பாடல், இந்த வரியை நோக்கிச் சென்றேன்.

    காவிரியில் கங்கை வந்து சேரவேண்டும் என்பது ஒரு சுவையான கற்பனை. புவியியல் ரீதியில் சிரமம், ஆனால் கவி மனத்துக்குச் சாத்தியம், காதல் நோக்கமோ, பக்தி நோக்கமோ!

    மனிதர்கள் செய்த குற்றங்களைக் கழுவ கங்கைக்குச் சென்று நீராடுவார்கள். ஆனால், இப்படி எண்ணற்றோரின் அழுக்குகளைச் சேர்த்துக்கொண்ட கங்கை என்ன ஆகும்?

    தவறு செய்த மனிதர்கள் கங்கையில் குளித்துக் குளித்து அந்த நதியே அழுக்காகிவிட்டதாம். அதனைப் புனிதமாக்க, மாயவரம் நகரில் உள்ள காவிரிக்கு வந்து மூழ்கி எழுந்ததாம். இப்படிச் செல்கிறது இந்நகரின் தல புராணம்.

    கிட்டத்தட்ட இதையே பிரதிபலிப்பதுபோல, ‘மகாநதி’ படத்தில் வாலி எழுதிய இரு வெவ்வேறு பாடல்கள், ஒன்றில் ‘கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம்’ என்பார், இன்னொரு பாடலில், ‘இங்கே குளிக்கும் மனிதர் அழுக்கில் கங்கை கலங்குது’ என்பார்.

    இதற்கெல்லாம் அர்த்தம், கங்கையை இழிவுபடுத்துவது அல்ல. நம் அழுக்குகளை ஒரு நதி கழுவிவிடும் என்ற சிந்தனை ஒரு வசதியாக அமைந்துவிடக்கூடாது. ‘தப்புச் செஞ்சுட்டு, அப்புறமா மன்னிப்புக் கேட்டுக்கலாம்’ என்று நினைக்காமல், உண்மையிலேயே திருந்துகிறவர்களாக நாம் இருக்கவேண்டும் என்றுதான் வாலியும், மாயவரத் தல புராணமும் சொல்வதாக நான் நினைக்கிறேன்!

    ***

    என். சொக்கன் …

    25 10 2013

    327/365

     
    • Uma Chelvan 2:12 am on October 26, 2013 Permalink | Reply

      கண்ணதாசன் இதையே கொஞ்சம் மாற்றி எழுதியுள்ளார்

      கங்கையின் வெள்ளம் தண்ணீரோ -இல்லை
      கன்னியர்கள் விடும் கண்ணீரோ ……………………………….

      பிருந்தா வனத்திற்கு வருகிறேன்

    • amas32 8:30 pm on October 27, 2013 Permalink | Reply

      கங்கையை விட காவிரி உயர்ந்தது என்ற எண்ணம் நமக்குப் பெருமையே. ஏனென்றால் கங்கையைப் புகழாத இதிகாசமோ புராணமோ கிடையாது. கங்கை தன் பாவத்தைப் போக்கக் காவிரி நதியிடம் வருகிறாள் என்றால் காவிரியின் மகத்துவம் தான் என்னே!

      amas32

    • kannan 10:40 pm on November 5, 2013 Permalink | Reply

      Pulamai Pithan has thought about it much before Vijay.

      //கங்கையும் தெற்கே பாயாதா? காவிரியோடு சேராதா?//

      Film – Unnal Mudiyum Thambi.

  • G.Ra ஜிரா 1:36 pm on October 24, 2013 Permalink | Reply  

    செங்காத்தில் ஒரு தத்தை 

    நேற்று காரில் சென்று கொண்டிருந்த போது கருத்தம்மா படத்திலிருந்து “காடு பொட்டக் காடு செங்காத்து வீசும் காடு” என்ற பாட்டு ஓடியது.

    கவிஞர் வைரமுத்து எழுதி ஏ.ஆர்.ரகுமான் இசையில் இயக்குனர் பாரதிராஜாவும் பாடகர் மலேசியா வாசுதேவனும் டி.கே.கலாவும் இணைந்து பாடிய அற்புதமான பாடல் அது.

    மழை கண்டு அறியாத கரிசல் காட்டின் நிலையைச் சொல்லும் பாடல் அது. அதில் கீழ்க்கண்ட வரிகளைக் கேட்கும் போது சிந்தனை ஓடியது.

    மாடு தத்த மாடு
    அது ஓடும் ரொம்ப தூரம்
    வாழ்க்க தத்த வாழ்க்க
    இது போகும் ரொம்ப காலம்

    ஏழ்மையைச் சொல்லும் சோக வரிகளானாலும் வளமையும் அழகும் நிறைந்த கருத்துள்ள வரிகள்.

    மாடு என்றாலே விறுவிறுப்பும் ஓட்டமும் தான். ஆனால் இங்கு மாட்டையே தத்த மாடு என்கிறார் கவிஞர்.

    வேகம் குறைந்த மாட்டைத்தான் தத்த மாடு என்பார்கள். அந்த மாடுதான் தத்தித் தத்தி கரிசல் மக்களின் உழவுக்குப் பயன்படுகிறது. அப்படியான மாட்டைப் பயன்படுத்துகிறவர்கள் வாழ்க்கையும் தத்தித் தத்தித்தான் போகிறது. அதுதான் “வாழ்க்க தத்த வாழ்க்க”.

    தத்தை என்ற சொல் கிளியைக் குறிப்பது. தத்தித் தத்தி நடப்பதால் அதற்குத் தத்தை என்று பெயர்.

    செவ்வாய்க் கிளியைத் தத்தை என்றலும்
    நூல் – தொல்காப்பியம்
    அதிகாரம் – பொருளதிகாரம்
    இயல் – மரபியல்
    எழுதியவர் – தொல்காப்பியர்

    ஆகா கிளி என்ற சொல் தொல்காப்பியர் காலத்திலேயே இருந்திருக்கிறது. அதை இன்றும் சிதையாமல் பயன்படுத்தி வருகிறோம். என்ன… பலர் வாயில் கிளி என்பது கிலியாக வருகிறது.

    செக்கச் சிவந்த வாயினை உடைய கிளிக்கு தத்தை என்று மற்றொரு பெயரும் உண்டு.

    கிளியைச் சொன்னால் அடுத்து தொல்காப்பியர் எதைப் பற்றி சொல்லியிருக்க வேண்டும்? ஆம். பூனையைத்தான். அதனால்தானோ என்னவோ நாமும் கிளியை வளர்த்து பூனை கையில் கொடுப்பதாக பழமொழி சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

    செவ்வாய்க் கிளியைத் தத்தை என்றலும்
    வெவ்வாய் வெருகினைப் பூசை என்றலும்

    வெருகு என்பதும் பூனையையே குறிக்கும். பூசை என்றும் அதற்குப் பெயர் உண்டு. மலையாளத்தின் இன்றும் தத்தம்மே என்பது கிளியையும் பூச்சா என்பது பூனையையும் குறிக்கும்.

    தத்தம்மே பூச்சா பூச்சா” என்று மலையாளத் திரைப்படப் பாடலே உண்டு.

    ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியின் கதாநாயகன் சீவகன். அவனுக்கு பல மனைவியர். அவர்களில் ஒருத்திக்கு தத்தை என்றே பெயராம். அவளுக்குத் தத்தை என்று பெயர் இருப்பதால் தான் அவள் முதல் மனைவியாக பட்டத்தரசியாக இருந்தாள் என்று திருத்தக்கதேவர் சொல்கிறார்.

    இன்னொரு கிளி தகவல். எல்லாக் கடவுள்களுக்கும் வாகனம் உண்டல்லவா. அதுபோல கிளியும் ஒரு கடவுளுக்கு வாகனம். எந்தக் கடவுளுக்கு என்றா கேட்கின்றீர்கள்? அன்றாடம் மக்களையெல்லாம் பாடாப் படுத்தும் மன்மதக் கடவுளின் வாகனம் தான் கிளி.

    பாடல் – காடு பொட்டக் காடு
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர்கள் – மலேசியா வாசுதேவன், டி.கே.கலா, பாரதிராஜா
    இசை – ஏ.ஆர்.ரகுமான்
    படம் – கருத்தம்மா
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=4T0aPXIl3tM

    அன்புடன்,
    ஜிரா

    326/365

     
    • Uma Chelvan 6:23 pm on October 24, 2013 Permalink | Reply

      தத்தை என்பது இங்கே இந்த பெண்ணா அல்லது கிளியா ??

    • Madhav 7:36 pm on October 24, 2013 Permalink | Reply

      //வேகம் குறைந்த மாட்டைத்தான் தத்த மாடு என்பார்கள்//
      Any proof for this ? entha oorla ippadi solranga?

    • Madhav 3:43 pm on October 25, 2013 Permalink | Reply

      //வேகம் குறைந்த மாட்டைத்தான் தத்த மாடு என்பார்கள் //
      Please , I need answer for this , I haven’t heard such word like “thaththa” , so that i am asking in which part of tamilnadu people using that word. Please just clear my doubt , its ok if u don’t publish this comment.

  • mokrish 7:54 pm on October 23, 2013 Permalink | Reply  

    இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால் 

    அன்றொரு நாள் ட்விட்டரில் ஒரு அட்டகாசமான வெண்பா விளையாட்டு. நண்பர் @nchokkan கண்ணன் பற்றி வெண்பா எழுத நண்பர் @elavasam அதில் ஒரு கேள்வி கேட்க — இவர் பதில் சொல்ல என்று பரபரப்பான one day மாட்ச்  போல சுவாரசியமாக இருந்தது.

    எனக்கு வெண்பாவும் தெரியாது விருத்தமும் தெரியாது. ஆனால் விவாதிக்கப்பட்ட விஷயம் கண்ணனும் ராமனும். கண்ணன் பற்றிய பாட்டில் ஏன் ராமர் பற்றிய Reference என்று முதல் கேள்வி.. இருவரும் ஒன்றுதானே என்று ஒரு பதில். தப்பு செய்தவன் ஒருவன் மாட்டிக்கொண்டவன் வேறொருவன் என்று ஒரு மறுமொழி.  ஒரே பாட்டில் பல அவதாரங்கள் என்று ஒரு தனி track. அட அட

    அதே கேள்விகளுக்கு நாமும் பதில் தேடலாம் என்று ஒரு (விபரீத) ஆசை. ஆண்டாள் திருப்பாவையில் கொக்கு உருவத்தில் வந்த பகாசுரனை வதம் செய்த கண்ணனைக் குறித்தும், பொல்லா அரக்கனாகிய ராவணனைக் கொன்ற ராமனைக் குறித்தும்

    புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக்

    கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்

    என்று ஒரே பாசுரத்தில் பாடியுள்ளதாகப் படித்தேன். மணாளன் எப்படி இருக்க வேண்டும் ஆண்டாள் கலங்குகிறாள். கண்ணனா ராமனா ? கண்ணுக்கு இனிய கண்ணனுக்கு ஒரு வரி மனத்துக்கு இனிய ராமனுக்கு ஒரு வரி என்று மாறி மாறி உருகுகிறாள்.  கண்ணதாசன் சுமைதாங்கி என்ற படத்தில் ஒரு matrimonial விளம்பரம் போல எழுதுகிறார் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் எஸ் ஜானகி)

    http://www.youtube.com/watch?v=lsY6sJPpAF0

    ராதைக்கேற்ற கண்ணனோ

    சீதைக்கேற்ற ராமனோ

    கோதைக்கேற்ற கோவலன் யாரோ அழகு

    கோதைக்கேற்ற காவலன் யாரோ

    அன்னை இல்லம் படத்தில் நடையா இது நடையா என்ற பாடலிலும் (இசை கே வி மகாதேவன் பாடியவர் டி எம் எஸ்) பொருத்தம் பார்க்கிறார்.

    தேரோட்டும் கண்ணனுக்கு ராதா

    சிங்கார ராமனுக்கு சீதா

    காரோட்டும் எனக்கொரு கீதா

    கல்யாணம் பண்ணிக்கொள்ளத் தோதா

    நம்மாழ்வார்  ராமன் கூனி மேல் மண் உருண்டை எறிந்த பழியை

    மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் மாதவா

    கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!

    என்ற பாடலில் கண்ணன் மேல் போடுகிறார். .

    ராமன் ஒரு வகை கண்ணன் ஒரு வகை என்பது ஆண்டாள் கட்சியா? நம்மாழ்வார் அதெல்லாம் இல்லை இருவரும் ஒன்றே என்கிறாரா? இன்னும் நிறைய படிக்க வேண்டும்.

    கண்ணதாசன் அந்த Bride / Bridegroom தேவை என்பதையெல்லாம் தள்ளிவைத்து இருவேடம் போட்டாலும் திருமால் ஒன்றே என்று உயர்ந்தவர்கள் படத்தில் (இசை சங்கர் கணேஷ் பாடியவர் எம் பாலமுரளிகிருஷ்ணா)

    http://www.palanikumar.com/filmsongdetails.phtml?filmid=2697&songid=13160

    ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே

    ராதையின் வடிவம் சீதையும் தாயே

    நால் வேதம் அவனாக உருவானதோ

    நாலாகும் குணம் பெண்மை வடிவானதோ

    என்று சொல்கிறார்.

    தசாவதார வரிசை ஒரு evolution செய்தி சொல்லும் என்று படித்தேன் . முதலில் நீர் வாழ் உயிரினம் அடுத்து ஒரு amphibian அப்புறம் ஒரு நிலத்தில் வாழும் வராகம் அடுத்து கொஞ்சம் மிருகம் கொஞ்சம் மனிதன் என்று அது ஒரு அழகான வரிசை. இதில் ராமனுக்கு அடுத்து கண்ணன். இதில் இருக்கும் evolution செய்தி என்ன?

    மோகனகிருஷ்ணன்

    325/365

     
    • amas32 8:12 pm on October 23, 2013 Permalink | Reply

      மோகனக்ரிஷ்ணனனான உங்களுக்கு அது விளங்காதா? 😉 இராமன் ரூல்ஸ் ராமனுஜன். கிருஷ்ணன் சகலகலா வல்லவன். அடுத்த பரிணாம வளர்ச்சி அதுவாகத் தானே இருக்க வேண்டும். ஆறு அறிவுள்ள மனிதன் இன்னும் இன்னும் சாமர்த்தியத்தையும் செயல் திறனையும் அதிகப் படுத்திக் கொள்ள வேண்டிய நிலையை இன்று நாம் கண் கூடாகப் பார்க்கவில்லையா? அதைத் தான் கிருஷ்ணனின் அவதாரம் நமக்குக் கட்டியுள்ளது. இன்றைய காலக் கட்டத்திற்குத் தேவையான நெளிவு சுளுவோடு வாழ கிருஷ்ணன் கற்றுத் தருகிறார் என்பது என் தாழ்மையானக் கருத்து.

      இராமனின் வாழ்க்கை ஒரு பாடம். கிருஷ்ணன் உபதேசம் செய்யவே அவதாரம் எடுத்தார். சிலது கேட்டுத் தான் கற்றறிய முடியும். அதை நமக்கு அருளியவர் கண்ணன்.

      அருமையானப் பாடல்கள் :-)) நன்றி!

      amas32

    • rajinirams 7:35 pm on October 24, 2013 Permalink | Reply

      ராமன்,கிருஷ்ணன் என்ற அவதாரங்களை வைத்து அருமையான பதிவை தந்திருக்கிறீர்கள்.
      “டபுள்ஸ்”படத்தில் நாயகனை-ராமனாக சித்தரித்து மனைவியும் கிருஷ்ணனாக காதலியும் நினைத்து பாடும் வைரமுத்துவின் பாடல் நன்றாக இருக்கும். “ராமா ராமா ராமா சீதைக்கேத்த ராமா உன் வில்லாய் நானும் வந்தேன் அம்பு பூட்டடா… கிருஷ்ணா கிருஷ்ணா உன் புல்லாங்குழலாய் வந்தேன் நீ வாசிடா என்று வரும். தசாவதாரம் படத்தில் வாலியின் வரிகள் “ராவணன் தன் தலையை கொய்ய ராமனாக வந்தாய்,கண்ணனாக நீயே வந்து காதலையும் தந்தாய்”.இன்னொரு பாடல் வரிகள்: ஒருத்திக்கு ஒருவன் என்ற தத்துவமே ஸ்ரீ ராமன்,காதல் உணர்வுக்கு பேதமில்லை என்றவனே பரந்தாமன், ஸ்ரீ ராமனாக நாயகியோடு வாழ்வது ஓரின்பம்,ஸ்ரீ கிருஷ்ணனாக கோபியரோடு வாழ்வது பேரின்பம்-வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன். http://youtu.be/XkM4zfgSBDg

  • என். சொக்கன் 8:53 pm on October 22, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு: சிரித்து வாழவேண்டும் 

    வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும் என்றார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.மனிதன் ஒருவன்தான் சிரிக்க தெரிந்தவன்,சிரித்து  கவலையை மறக்க தெரிந்தவன்,சிரியுங்கள் மனிதர்களே,இதை விட மருந்தில்லை வாழ்க்கையிலே என்று அமரகாவியம் படத்தில் பாடல் எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே என்ற கவியரசரின் வார்த்தைக்கு இசையோடு சிரிப்பை இணைத்து ரசிக்க வைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.வாய் விட்டு சிரிப்பது மன அழுத்ததை குறைக்கும் என்பதால் கோபபடும் போது கூட சிரிப்பது போல வசூல்ராஜா படத்தில் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தை நகைச்சுவையாக காட்டியிருப்பார்கள்.சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்,பொம்பளை சிரிச்சா போச்சு,சிரித்தாலும் போதுமே,ஆணவ சிரிப்பு ஆனந்த சிரிப்பு என்று பல சிரிப்பு பாடல்கள் இருந்தாலும் இந்த மூன்று பாடல்கள் மனம் கவரும் வகையில் அமைந்தவை. தமிழ் பாடல் உலகின் மூவேந்தர்கள் எழுதியவை.மூன்றுமே வித்தியாசமான சூழல் அமைந்தவை.

    இவரும் வசூல்ராஜா பிரகாஷ்ராஜ் போல “நல்ல மனிதர் போர்வையில் சிலர் செய்யும் அநியாயங்களை பட்டியலிட்டு மனம் நொந்து” சிரித்து பாடுவதாக அமைந்தது-

    “மேடையேறி பேசும்போது ஆறு போல பேசு-கீழ இறங்கி போகும்போது சொன்னதெல்லாம் போச்சு-உள்ள பணத்தை பூட்டி வெச்சு வள்ளல் வேஷம் போடு,ஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு நல்லகணக்கை மாத்தி கள்ளகணக்கை ஏத்தி நல்ல நேரம் பார்த்து நண்பனை ஏமாத்து”…சிரிப்பு வருது சிரிப்பு வருது”சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலை பார்த்து சிரிப்பு வருது…..என்று அருமையாக எழுதியிருப்பார் கவியரசர்.

    அடுத்து சில தீயவர்களால் மிரட்டப்பட்டு சிரிப்பையே தொலைத்திருந்த தன் தங்கை அச்சத்தை விட்டு சிரிக்கும்போது ஒரு அண்ணன் மனமகிழ்ந்து பாடும் பாடல் –

    “வசந்தம் சிரித்தாலே வண்ண தேன் பூ மலரும்,வைகை சிரித்தாலே மதுரை வாழ்வு பெறும்

    அம்பிகை சிரித்தாலேஆலயம்அழகொளிரும் -அம்மமா நீ சிரித்தால் அண்ணனின் மனம் குளிரும்”- என்று உவமையோடு கலக்கியிருப்பார் கவிஞர் வாலி-தங்கச்சி சிரித்தாளே செவ்விதழ் விரித்தாளே-மல்லிகை சிரிப்பாலே மௌனம் கலைத்தாளே….

    இன்னொரு வகையான பாடல் -“கலகலவென சிரி கண்ணில் நீர் வர சிரி -சிரிக்க தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்று பெயர்,சிரிக்க மறந்த மனிதனுக்கு மிருகம் என்று பெயர் ” என்று ஒரு சிறிய விழாவில் நகைச்சுவை பரிமாற்றமாக அமைந்த பாடல்-பாக்கு மாற்றி கொள்வது போல ஜோக்கு மாற்றி கொள்வோமே,சிரி சிரி சிரி சிரி… என்று வித்தியாசமாக அமைந்த கவிஞர் வைரமுத்துவின் சிரிப்பு பாடல்.

    என்ன…கவலைகளை கொஞ்சம் ஒதுக்கி நாமும் சிரித்து மகிழ்வோமே ….

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்:

    பாடல்-சிரிப்பு வருது சிரிப்பு வருது

    படம்-ஆண்டவன் கட்டளை

    எழுதியவர்-கவியரசர் கண்ணதாசன்

    பாடியவர்-சந்திரபாபு

    இசை-விஸ்வநாதன் ராமமூர்த்தி

    பாடலின் சுட்டி- http://youtu.be/54qGTIOkuww

    பாடல்-தங்கச்சி சிரித்தாளே

    படம்-சிவப்பு சூரியன்

    எழுதியவர்-கவிஞர் வாலி

    பாடியவர்-மலேஷியா வாசுதேவன்

    இசை-எம்.எஸ்.விஸ்வநாதன்

    பாடலின் சுட்டி- http://youtu.be/QML2Nn-fhy0

    பாடல்-சிரி சிரி சிரி சிரி

    படம்-ஆளவந்தான்

    எழுதியவர்-கவிஞர் வைரமுத்து

    பாடியவர்கள்-கமலஹாசன்,மகாலக்ஷ்மி ஐயர்

    இசை-ஷங்கர் இஷான் லாய்

    பாடலின் சுட்டி –  http://youtu.be/PySy84R-DDo

    நா. ராமச்சந்திரன்

    பிறந்தது கடலூர், என்றாலும் வளர்ந்ததெல்லாம் சிங்காரச் சென்னைதான். ஒரு தனியார் நிறுவனத்தில் பணி. தற்போது பெங்களுரில் வசிக்கிறேன். ட்விட்டர் முகவரி: http://twitter.com/rajinirams

     
    • amas32 10:41 pm on October 22, 2013 Permalink | Reply

      அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு, இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்த சிரிப்பு. இதுவும் ஒரு அருமையான் பாடல். ரிக்சாக்காரன் படத்தில் குழந்தையைப் பார்த்து MGR பாடும் பாடல். இந்தப் பாடலில் அனைத்து வரிகளும் அருமை.

      ஆளவந்தான் படப் பாடல், சிரி சிரி சிரி சிரி ஒரு வித்தியாசமானப் பாடல், எனக்கு ரொம்பவும் பிடிக்கும் 🙂

      நல்ல பதிவு, எப்பொழுதும் போல 😉

      amas32

      • rajinirams 9:37 am on October 23, 2013 Permalink | Reply

        மிக்க நன்றி amas32

    • Uma Chelvan 12:25 am on October 23, 2013 Permalink | Reply

      மார்கழி பனி போல் உடை அணிந்து
      செம்மாதுளம் கனி போல் இதழ் கனிந்து

      சிரித்தால் தங்க பதுமை..
      அட அட என்ன புதுமை …….very beautiful and a very very beautiful post!!!

      • rajinirams 9:37 am on October 23, 2013 Permalink | Reply

        Uma Chelvan மிக்க நன்றி

    • மின்னல்சுதா (@sweetsudha1) 1:12 pm on October 23, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு !! தகுந்த பாடல்களை மேற்கோளிட்டு காட்டியிருந்தது பதிவுக்கு அழகு சேர்த்தது !! இன்னும் நிறைய எழுதவும் !!

      • rajinirams 10:05 pm on October 23, 2013 Permalink | Reply

        மிக்க நன்றி

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel