Updates from mokrish Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • mokrish 10:58 am on December 2, 2013 Permalink | Reply  

    நதிபோல ஓடிக்கொண்டிரு 

    திரைப்படத்தில் பாடல்கள் அவசியமா? இசையும் கவிதையும் திரைக்கதையின் ஓட்டத்திற்கு தேவையற்ற இடையூறா? சுஜாதா ‘டிவியில் பாடல் ஓடிக் கொண்டிருக்கும் போது mute பட்டனை அழுத்தி விட்டுக் கவனியுங்கள். சிரிப்பு வரும் என்று எழுதியிருந்தார்.

    பாடல்கள் எப்படிப் பயன்படுத்தப்படவேண்டும் என்பதே சரியான கேள்வி. ஒரு திறமையான கலைஞன் பாடல்களை கதையில் அழகாக நெய்துவிட முடியும். மகாநதி என்று படத்தின் டைட்டில். கதையின் பாத்திரங்களுக்கு கிருஷ்ணா, காவிரி, யமுனா, பரணி என்று நதிகளின் பெயர். கதை திருநாகேஸ்வரத்தில் தொடங்கி சென்னை, கொல்கத்தா என்று அலைந்து சென்னையில் முடியும். இதில் பாடல்களை எங்கே எப்படி கொண்டு வரவேண்டும்?

    வாலி ஸ்ரீரங்கத்துக்காரர். காவிரி நதியை ஒரு கதாபாத்திரமாகவே உருவாக்குகிறார். படத்தின் பெரும்பான்மையான பாடல்களில் கதையின் ஒட்டத்தோடு காவிரி பற்றிய reference. ராஜா ஒரு அற்புதமான இசை இழை தருகிறார். திரைக்கதையுடன் கைகோத்து வலம் வரும் பாடல்கள்.

    முதலில் மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாடும் பாடல் கங்கையின் மேலான காவிரியின் பெருமை சொல்லும் பாடல் (பாடியவர்கள் சித்ரா & குழுவினர்)

    http://www.youtube.com/watch?v=wwzL-BhmVMw

    தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
    வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ
    இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
    இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி

    நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி

    நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி

    அடுத்து விதிவசத்தால் சொந்த மண்ணை விட்டு விலகி சென்னை வந்து புது வாழ்க்கை ஆரம்பிக்கும்போது, பிரிந்து போகும் குழந்தையை ஒரு தாய் வழி அனுப்புவது போல காவிரி நதி நாயகனை வாழ்த்தும் வரிகள் (பாடியவர் எஸ் பி பாலசுப்ரமணியம்)

    http://www.youtube.com/watch?v=D2PyGX_K6IQ

    அன்பான தாயை விட்டு எங்கே நீ போனாலும்

    நீங்காமல் உன்னைச் சுற்றும் எண்ணங்கள் எந்நாளும்

    ஐயா உன்கால்கள் பட்ட பூமித்தாயின் மடி

    எங்கேயும் ஏதும் இல்லை ஈடு சொல்லும் படி

    காவேரி அலைகள் வந்து கரையில் உன்னைத் தேடிடும்

    காணாமல் வருத்தப் பட்டுத் தலை குனிந்து ஓடிடும்

    ஒரு பந்தம் என்பதும் பாசம் என்பதும் வேரு விட்ட இடம்

    இதை விட்டால் உன்னை வாழ வைப்பது வேறு எந்த இடம்

    தன் மண்ணை விட்டொரு குருவிக் குடும்பம் பறந்து போகுதடி

    தான் இந்நாள் வரைக்கும் இருந்த கூட்டை மறந்து போகுதடி

    இந்த நெஞ்சில் இப்படி ஆசை வந்தொரு கோலமிட்டதடி

    இதில் நன்மை கூடட்டும் தீமை ஓடட்டும் காலம் விட்ட வழி

    சென்னையில் அவனுக்கு நிறைய சோதனைகள். செய்யாத குற்றத்துக்கு சிறைவாசம். ஆனால் அவன் தளரவில்லை என்ற வரிகளிலும் காவிரி ! (பாடியவர் கமல்ஹாசன்)

    http://www.youtube.com/watch?v=VAzrswll0oQ

    தன்மானம் உள்ள நெஞ்சம் என்னாளும் தாழாது

    செவ்வானம் மின்னல் வெட்டி மண்மீது வீழாது

    காவேரி தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி

    காற்றாடி போலருந்து வீழ்வதில்லையடி

    அன்பான உறவு கண்டு கூடு கட்டி ஆடுவேன்

    அன்னாளில் நானிருந்த வாழ்க்கையைத் தான் தேடுவேன்

    அன்று சொன்னான் பாரதி சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி

    எந்தன் எண்ணம் என்றைக்கும் தோல்வி என்பதை ஏற்றதில்லையடி

    நதியில் விழுந்த இலை போல திக்கு திசை தெரியாமல் ஓடி பல சோகம் கண்டு ஒருவழியாக வெளிவரும் நிலையில் ஒரு அற்புதமான பாடல் (பாடியவர் கமல்ஹாசன்)

    http://www.youtube.com/watch?v=2H6CaBpol80

    எங்கேயோ திக்கு திசை எங்கேயோ திக்கு திசை காணாத தூரம்தான்

    அம்மாடி வந்ததென்ன என் வாழ்கை ஓடம்தான்

    காவேரி தீரம் விட்டு கால்கள் வந்ததடி

    காணாத சோகம் எல்லாம் கண்கள் கண்டதடி

    இரு கண்ணே செந்தமிழ் தேனே தந்தையின் பாசம் வென்றதடி

    பசும் பொன்னே செவ்வந்தி பூவே இத்துடன் சோகம் சென்றதடி

    ஒவ்வொரு பாடலிலும் காவிரி பற்றி ஒரு குறிப்பு. முதல் பாடலில் வளம் தரும் மகாநதி. அடுத்த பாடலில் வாழ்த்தி வழியனுப்பும் தாய் போல என்கிறார். இன்னொரு பாடலில் காவிரி மடியில் வாழ்ந்தவர் வீழ்வதில்லை என்கிறார். காவிரி தீரம் விட்டு வந்து பட்ட சோகம் சொல்கிறார். ஆனால் எல்லா பாடல்களிலும் முடிவில் ஒரு நல்ல வாக்கு. ஒரு பாசிடிவ் கருத்து. கதை சொல்லலில் பாடலையும் இணைக்கும் நயம்.

    நதியிடம் நமக்கு நிறைய பாடங்கள் கிடைக்கும். நதி இலக்கை மறப்பதேயில்லை. கழிவுப் பொருட்களைக் கலந்தாலும், எல்லா தடைகளையும் மீறி ஓடிக்கொண்டேயிருக்கும். In the confrontation between the stream and the rock, the stream always wins, not through strength but by perseverance என்று சொல்வார்கள். வாழ்க்கையும் அப்படியேதான்.

    அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி சொல்லி நாலு வரி நோட்டிலிருந்து விடை பெறுகிறேன்

    மோகனகிருஷ்ணன்

    365/365

     
    • amas32 6:52 pm on December 2, 2013 Permalink | Reply

      வாழ்த்துகள் மோகனகிருஷ்ணன், ராகவன், சொக்கன். #365 வேள்வியை பிராமாதமாக முடித்ததற்கு பாராட்டுகள் 🙂

      மகாநதி படத்தில் இந்த நதி பற்றிய thread இருப்பது நீங்கள் சுட்டிக் காட்டும் வரை நான் கவனித்தது இல்லை. மிக்க நன்றி. படம் முழுதும் நதியையும் கதையோடு ஓடவிட்டதில் வாலியின் திறமை மிளிர்கிறது. தஞ்சை திருச்சி மாவட்ட மக்களுக்குக் காவேரியைப் பற்றி பேசும்போது பெருமை பிடிபடாது 🙂

      ரிதம் படத்தில் நதியே நதியே காதல் நதியே பாடலும் சிறந்த கருத்தைச் சொல்லும் பாடல்.

      உங்கள் மூவருக்கும் பல்லாண்டு பல்லாண்டு பாடி அமைகிறேன் :-))

      amas32

    • uma chelvan 6:56 pm on December 2, 2013 Permalink | Reply

      excellent post !!!

      தன்மானம் உள்ள நெஞ்சம் என்னாளும் தாழாது

      செவ்வானம் மின்னல் வெட்டி மண்மீது வீழாது

      In the confrontation between the stream and the rock, the stream always wins, not through strength but by perseverance………………………Beautiful Wordings both in Tamil and English.

      Godd Luck !!!!

    • krish 12:32 pm on August 12, 2014 Permalink | Reply

      excellant

  • mokrish 11:48 pm on November 29, 2013 Permalink | Reply  

    இல்லாததுபோல் இருக்குது 

    கண்ணதாசன் முன்னாள் நாத்திகர்தானே என்று நண்பர் @ncokkan ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார். பழ. கருப்பையா ஒரு திறனாய்வு நூலில்.

    “கண்ணதாசன் அறியாப் பருவத்தில் கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தார். இளமையின் தொடக்கத்தில் கடவுள் மறுப்பாளராக மாறிவிடுகிறார். அந்தக் கால கட்டம் முழுவதிலும் அவர் எழுதிய பாடல்களில் கடவுள் ஏற்பு காணப்படவில்லையே தவிர கடவுள் எதிர்ப்பும் காணப்படாதது ஒரு வியப்பே”

    என்று தொடங்கி ஒரு முழு அத்தியாயமே எழுதியிருக்கிறார். சந்தர்ப்பவசத்தால் ஒரு இயக்கத்தில் சேர்ந்து அதற்குத் தன்னுடைய உயிரினும் இனிய கொள்கையை முதற்பலியாகக் கொடுத்துவிட்டு வெகுகாலமாக இருட்டறையில் புழுங்கிக்  கொண்டிருந்தார் என்றும் சொல்கிறார்.

    இயக்கத்தை விட்டு வெளியேறியபின் மீண்டும் தீவிர கடவுள் நம்பிக்கை! திரைப்பாடல்களில் அதை அழகாக வெளிப்படுத்தினார். அவ்வப்போது உரிமையுடன் நிந்தாஸ்துதியும் பாடினார்

    கண்ணதாசன் சண்முகப்பிரியா என்ற படத்தில் எழுதிய ஒரு பாடல் (இசை சூலமங்கலம் ராஜலட்சுமி & ஜெயலட்சுமி, பாடியவர் டி எம் எஸ்)

    இறைவனுக்கும் பெயரை வைத்தான் ஒரு மனிதன் இங்கே

    இறைவன் இல்லை என்று சொன்னான் ஒரு மனிதன் இங்கே

    என்று தொடங்கி

    இல்லை இல்லை என்றவனும் எதனை இல்லை என்றான்

    இல்லை ஒரு சக்தி என்று சொல்லவில்லை என்றான்

    நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு மட்டும்தானா? நாத்திகம் என்பது நம்பிக்கையற்று இருப்பதா? யோசித்தால் ஆத்திகர்களைப்போலவே நாத்திகர்களும் ஒரு பெயர் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ‘ஒரே தேவன்’ என்றோ இயற்கை  என்றோ பெயரிட்டார்கள். ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் பிரபலமான வசனம் “May the Force be with you” குறிப்பது கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தி.

    இரு தரப்பிலும் இருந்ததால் ஆத்திக-நாத்திக வாதத்தை மனிதனும் தெய்வமாகலாம் படத்தில் வெற்றி வேல் வெல்லுமடா என்ற பாட்டில் வைக்கிறார்.

    http://www.youtube.com/watch?v=DvFZurTDX1A

    வெற்றி வேல் வெல்லுமடா வினை தீர்ப்பான் வேலனடா

    கற்றவர்க்கும் கல்லார்க்கும் கருணை தரும் தென்றலடா

    என்று இறைவன் பெருமை  சொல்லும் அண்ணன். ஆனால் தம்பி நாத்திகவாதி.

    இறைவன் ஆளும் உலகம் என்றால் ஏழைகளை ஏன் படைத்தான்

    ஒருவர் வாழ ஒருவர் வாடும் உயர்வு தாழ்வை ஏன் அமைத்தான்

    என்ற stock  கேள்வி கேட்கிறான்.பக்தியில் உருகும் அண்ணன் ‘குழந்தை போல அவனைப் பார்த்தால் கூட வந்து கொஞ்சுமடா ‘ என்று சொன்னால் ‘குழந்தை இங்கு கோடி உண்டு குமரன் என்ன தேவையடா என்று பாடும் தம்பி.  பசியால் குழந்தைகள் வாடும்போது பாலபிஷேகம் எதற்கு  என்ற வழக்கமான வாதம்தான்.

    ஆனால் இது ஏன் mutually exclusive ஆக இருக்கவேண்டும்? குமரனையும் கொண்டாடி கோடி குழந்தைகளையும் கொண்டாட முடியுமே? ஆண்டவனை கும்பிட்டால் அன்பு செலுத்த முடியாமல் போகுமா?

    மோகனகிருஷ்ணன்

    362/365

     
    • amas32 9:43 am on November 30, 2013 Permalink | Reply

      //ஆனால் இது ஏன் mutually exclusive ஆக இருக்கவேண்டும்? குமரனையும் கொண்டாடி கோடி குழந்தைகளையும் கொண்டாட முடியுமே? ஆண்டவனை கும்பிட்டால் அன்பு செலுத்த முடியாமல் போகுமா?//

      இது தான் என் சித்தாந்தமும். என் மகன், பாடலில் தம்பி கேட்கும் கேள்விகளை தான் என்னையும் கேட்பான். உண்டியலில் போடும் பணத்திற்கு வாசலில் பிச்சை எடுப்பவர்களுக்குப் பிடிவாதமாக சாப்பாட்டு பேக்கட் வாங்கிக் கொடுப்பான். சுவாமிக்கு அலங்காரம் இருக்கும் போது இன்னும் ஏன் மலர்கள் வாங்கிப் போகிறாய் என்று கேட்பான். இதே பதில் தான் சொல்லுவேன். அதையும் செய் இதையும் செய்.

      அன்பு இருக்கும் இடத்தில் தெய்வ பக்தி இல்லாமல் இருப்பது அரிது. வெளிப்படாமல் இருந்து ஒரு நாள் பிரவாகமாக வெடிக்கும்.

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙂

      amas32

    • rajinirams 10:54 am on November 30, 2013 Permalink | Reply

      கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்,அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்,இறைவன் உலகத்தை படைத்தானா அவன் தான் ஏழ்மையை படைத்தானா-ஏழ்மையை படைத்தவன் அவனென்றால் இறைவன் என்பவன் எதற்காக? பாடல் சூழ் நிலைக்கேற்ப இப்படியும்-கடவுள் ஏன் கல்லானார் மனம் கல்லாய் போன மனிதர்களாலே, இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்-மனிதன் இருக்கின்றானா இறைவன் கேட்கிறான்- இப்படியும் பாடல் எழுதிய கண்ணதாசன் இறைவனுக்கும் பெயரை வைத்தான் பாடலின் இறுதியில்”இல்லை இல்லை என்றவனும் எதனை இல்லை என்றான்
      இல்லை ஒரு சக்தி என்று சொல்லவில்லை என்றான்” என்று முத்தாய்ப்பாக முடித்த விதம் அருமை.முதலில் நாத்திகராக இருந்த கவியரசர் பின் இறைவன் திருவடி சரணடைந்து பக்தியில் திளைத்ததோடு பல பக்தி பாடல்களையும் இலக்கியங்களையும் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற காவியத்தையும் தந்து என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

  • mokrish 11:16 pm on November 26, 2013 Permalink | Reply  

    உரிமை உன்னிடத்தில் இல்லை 

    போன வாரம் #BooksOnToast பற்றி ஒரு செய்தி படித்தவுடன் நாமும் சில புத்தகங்களை நன்கொடையாகத் தரலாம் என்று தோன்றியது. என்னிடம் இருந்த பழைய ஆங்கில fiction நாவல்களை எடுத்து அடுக்கும்போது ஜெஃப்ரி ஆர்ச்சர் எழுதிய To Cut a Long Story Short  சிறுகதைத்தொகுப்பு கண்ணில் பட்டது. அதில் Death Speaks என்று ஒரு சிறிய சிறுகதை. 12 -13 வரிகள்தான்.  இங்கே படியுங்கள் http://am-kicking.blogspot.in/2005/11/death-speaks.html?m=1.

    அட்டகாசமான ட்விஸ்ட் இது Somerset Maugham எழுதிய Sheppey நாடகத்தில் வரும் ஒரு The Appointment in Samarra என்பதன் தழுவல் என்று ஆர்ச்சர் குறிப்பிட்டிருந்தார். இந்த உரையாடலை கண்ணதாசன் பாடல் வரிகளை அடுக்கி reconstruct பண்ணலாம் என்று amateur முயற்சி.

    வேலையாள்  (பாடல் யாருக்காக இது படம் வசந்த மாளிகை இசை கே வி மகாதேவன் பாடியவர் டி எம் எஸ்)

    http://www.youtube.com/watch?v=m4sX_5LL8e8

    மரணம் என்னும் தூது வந்தது , அது

    மங்கை என்னும் வடிவில் வந்தது

    வணிகன் (பாடல் என்ன நினைத்து படம் நெஞ்சில் ஓர் ஆலயம் இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் பி சுசீலா)

    http://www.youtube.com/watch?v=NV9Gz3jYnlU

    மாயப்பறவை ஒன்று வானில் பறந்து வந்து

    வாவென்று அழைத்ததை கேட்டாயோ

    பறவை பறந்து செல்ல விடுவேனோ?

    அந்தப் பரம்பொருள் வந்தாலும் தருவேனோ?

    தேவதை (பாடல் போனால் போகட்டும் பாலும் பழமும் இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் டி எம் எஸ்)

    http://www.youtube.com/watch?v=DnxZnuXlWBo

    இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை

    இல்லை என்றால் அவன் விடுவானா?

    உறவைச் சொல்லி அழுவதனாலே

    உயிரை மீண்டும் தருவானா?

    மும்பையில் 1993ல் பல இடங்களில் குண்டு வெடித்தது. ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் மதியம் 1.30 மணிக்கு வெடித்தது. அதில் உயிர் தப்பிய ஒருவர், உடனே மும்பையை விட்டு கிளம்பலாம் என்று ஏர் இந்தியா அலுவலகம் சென்று அங்கு குண்டு வெடித்தபோது பலியானார் என்று ஒரு செய்தி படித்த ஞாபகம். சுஜாதாவின் ‘விபா’ என்ற சிறுகதையில் இதேபோல் ஒரு கடைசி வரி ட்விஸ்ட்.

    நிஜ வாழ்க்கையில் நடக்கும் சில நிகழ்வுகள் கதைகளை மிஞ்சும் திருப்பங்கள் நிறைந்தது என்று தோன்றுகிறது.

    மோகனகிருஷ்ணன்

    359/365

     
    • Uma Chelvan 11:20 am on November 27, 2013 Permalink | Reply

      ‪#‎மெய்யில்‬ வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்
      இவ் வையந் தன்னொடும் கூடுவ தில்லையான்
      ஐய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
      மையல் கொண்டொழிந் தேனென்றன் மாலுக்கே#

      விளக்கம் : “அனுகூலயஸ்ய சங்கல்ப: ப்ரதிகூல்யஸ்ய வர்ஜநம்” என்கிறபடியான இப்பாசுரத்தில் சாதிக்கிறார். நிலையற்ற இந்த உலகவாழ்கையை நிஜம் எனக்கொள்ளும், நம்பும் இந்த உலகத்தாரோடு நான் கூடுவதில்லை, ஐயனே-நிஷ்காரண- அரங்கனே உன்னையே அழைக்கின்றேன். என்மேல் அன்பு கொண்டுள்ள பெருமாளிடத்தில் பற்று கொண்டேன். வேண்டேன் இந்த நிலையற்ற வாழ்கையை விண்ணகர் மேயவனே என்று திருமங்கை ஆழ்வார் சாதித்தது போல.

    • amas32 6:59 pm on November 27, 2013 Permalink | Reply

      Jeffrey Archerன் அந்தக் கதை நானும் படித்திருக்கிறேன் 🙂 பாட்டினால் கதை கோத்துவிட்ட அழகு அபாரம் 🙂

      விதி வலியது என்று ஒரு கதா காலட்சேபப் பாடல் முடியும், அது தான் நினைவுக்கு வருகிறது 🙂

      amas32

    • kamala chandramani 8:56 am on November 28, 2013 Permalink | Reply

      ”நிஜ வாழ்க்கையில் நடக்கும் சில நிகழ்வுகள் கதைகளை மிஞ்சும் திருப்பங்கள் நிறைந்தது.” உண்மை.

  • mokrish 6:36 pm on November 23, 2013 Permalink | Reply  

    எது நடந்ததோ 

    நண்பர் புது வருட டைரி கொடுத்தார். முதல் பக்கத்தில் கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசன மல்டி கலர் படம் போட்டு அதன் கீழே கீதாசாரம் என்று தலைப்பிட்டு ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்று தொடங்கும் சில வரிகள். இதுதான் கீதையின் சாரமா? இல்லை இதை கீதையின் சாரமாக ஏற்க முடியவில்லை என்கிறார் சோ. எனக்கு இது சிவகாசியில் flex banner எழுதும் ஒரு காலண்டர் கவிஞரின் கைவண்ணம் போல் இருக்கிறது.

    வேதத்தின் பொருளை விளக்கவே பகவத் கீதை சொல்லப்பட்டது என்று படித்திருக்கிறேன் களத்தில் தேரை நிறுத்திய பார்த்தன் போர் செய்ய திரண்டு நிற்கும் சுற்றத்தார்களைக் கண்டு சோர்ந்து நடுங்கினான். காண்டீபம் கையிலிருந்து நழுவுகிறது. கண்ணன் கீதை உரைத்தான்.

    கர்ணன் படத்தில் இதே காட்சி. அர்ஜுனன் தன் ஆயதங்களை கீழே போட்டு கலங்கும்போது திரையுலகின் நிரந்தர கிருஷ்ண பரமாத்மாவான என் டி ராமாராவ் சொல்லும் அறம் தழைக்கவே கர்ம வீரன் செயல்படுகிறான் என்ற உபதேசம். கண்ணதாசன் எழுதிய பாடல் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்) கேள்வி பதில் போல் அமைந்த காட்சி

    http://www.youtube.com/watch?v=3vN8DFxTMzE

    மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா மரணத்தின் தன்மை சொல்வேன்

    மானிடர் ஆன்மா மரணமெய்தாது மறுபடிப் பிறந்திருக்கும்

    மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய் வீரத்தில் அதுவும் ஒன்று நீ

    விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர்நாள் ..

    என்னை அறிந்தாய் எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய்

    கண்ணன் மனது கல்மனதென்றோ காண்டீபம் நழுவவிட்டாய்

    மன்னரும் நானே மக்களும் நானே மரம் செடி கொடியும் நானே

    சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன் துணிந்து நில் தர்மம் வாழ

    புண்ணியம் இதுவென்றிவ் வுலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே

    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே

    கண்ணனே காட்டினான் கண்ணனே தாக்கினான் கண்ணனே கொலை செய்கின்றான்

    காண்டீபம் எழுக நின் கைவன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க!

    மூன்று மணி நேர படத்தில் கீதைக்கு மூன்று நிமிட பாடல்தான். அதில் சொல்லவேண்டியதை சொல்லி கண்ணதாசன் காட்டும் வித்தை அருமை.

    பல வருடங்கள் கழித்து கண்ணதாசன் எழுதிய இன்னொரு கவிதை. வரிகள் நினைவில்லை. ஆனால் கதை இதுதான் அதில் அபிமன்யுவை இழந்த அர்ஜுனன் தரையில் அமர்ந்து அழுதுகொண்டிருக்கிறான். அப்போது அவன் மேல் கண்ணீர் துளி விழ நிமிர்ந்து பார்த்தால் தேரில் இருக்கும் கண்ணன் அழுவதைப் பார்க்கிறான். ‘நான் மகனை இழந்து அழுகிறேன் நீ எதற்காக அழுகிறாய் என்று அர்ஜுனன் கேட்கிறான். அதற்கு கண்ணன் ‘அடேய் அர்ஜுனா இவ்வளவு கஷ்டப்பட்டு உனக்கு உபதேசம் சொன்னேன் அத்தனையும் வீணானதே என்று அழுகிறேன்’ என்று சொல்வான்.

    மோகனகிருஷ்ணன்

     
    • amas32 1:18 pm on November 24, 2013 Permalink | Reply

      //அப்போது அவன் மேல் கண்ணீர் துளி விழ நிமிர்ந்து பார்த்தால் தேரில் இருக்கும் கண்ணன் அழுவதைப் பார்க்கிறான். ‘நான் மகனை இழந்து அழுகிறேன் நீ எதற்காக அழுகிறாய் என்று அர்ஜுனன் கேட்கிறான். அதற்கு கண்ணன் ‘அடேய் அர்ஜுனா இவ்வளவு கஷ்டப்பட்டு உனக்கு உபதேசம் சொன்னேன் அத்தனையும் வீணானதே என்று அழுகிறேன்’ என்று சொல்வான்.// :-))

      அதனால் தான் பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் என்று ஆதி சங்கரரும் பாடுகிறார். புனரபி ஜனனம் புனரபி மரணம் என்று cycle of birth and death லேயே உழன்று கொண்டிருக்கிறோம். உய்வதில்லை.

      இன்று நீங்கள் கொடுத்திருப்பது எத்தனை அற்புத வரிகள் மோகனகிரிஷ்ணன்! 18 அத்தியாயங்களில் பகவான் கண்ணன் சொன்னதை சில வரிகளுள் அடக்கிவிடுகிறாரே கண்ணனின் தாசன்! மறுமுறை சொல்கிறேன் என்ன தவம் செய்ததோ தமிழ் மண் அவரை பெற்றதற்கு!

      amas32

    • GiRa ஜிரா 11:16 am on November 25, 2013 Permalink | Reply

      உபதேசம் அர்ஜுனனுக்குத் தேவைப்பட்டது. ஆனால் கர்ணனுக்குத் தேவைப்படவில்லை.

      அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் என்ன சொன்னாரோ அதன் படி கர்ணன் கடமையைச் செய்தான். எந்தப் பக்கம் இருந்தானோ அந்தப் பக்கத்துக்காகவே போரிட்டான். பாசம் தடுத்தது. ஆனாலும் தொடர்ந்து நன்றி மறவாது போரிட்டான். உயிரையும் கொடுத்தான்.

      நீங்கள் சொல்வதிலிருந்தும் என்னுடைய எண்ணவோட்டத்திலிருந்தும் அர்ஜுனனுக்கு உபதேசித்தது விழலுக்கு இறைத்த நீர்தான் போல.

      • kamala chandramani 12:55 pm on November 25, 2013 Permalink | Reply

        எத்தனை உபதேசங்களைப் பெற்றாலும் மரணம் மனிதனை அழத்தான் வைக்கிறது! அன்பைப் பெறுவதற்கும், அன்பு செலுத்தவும் ஆதாரமாக உள்ள ஸ்தூல சரீரம் இல்லாமல் போனதற்குதான் அழுகை.
        கவிஞர் கண்ணதாசன் வாழ்க்கைத் தத்துவத்தை முற்றிலும் உணர்ந்த யோகி. அதனால்தான் மேலே கொடுத்துள்ள பாடல் பிறந்தது.
        அருமையான பதிவு.’ ‘எது நடந்ததோ” -இந்த வரிகள் உண்மையில் கீதாசாரம் அல்ல என்று நானும் கேள்விப்பட்டேன்.

      • uma chelvan 7:26 pm on November 25, 2013 Permalink | Reply

        Very Well Said !!!

    • Deva 8:18 am on November 29, 2013 Permalink | Reply

      Nice. Need to listen the songs again to know kannadasan.

  • mokrish 9:17 pm on November 21, 2013 Permalink | Reply  

    நீ பார்த்த பார்வைக்கொரு 

    இந்த மாதம் கமல்ஹாசன் பிறந்த நாளன்று ஏதோ ஒரு டிவி சானலில் விஸ்வரூபம் படத்தில் வரும்  உன்னைக் காணாது நான் என்ற பாடலை (இசை சங்கர் – ஈசான்- லாய் பாடியவர்கள்  கமல்ஹாசன், சங்கர் மகாதேவன்)  ஒளிபரப்பினார்கள் பண்டிட் பிர்ஜு  மகராஜ் வடிவமைத்த அருமையான கதக் நடனம். கமல்ஹாசனே நாயகி பாவத்தில் எழுதிய பாடல். அதில் வரும் வரிகள்

    http://www.youtube.com/watch?v=XuOgG2QWAgQ

    அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாணுவேன்

    கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்

    ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்

    ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்

    இந்த 2013ல் ‘எவ்வாறு நாணுவேன்’ என்று ஒரு நாயகி யோசிப்பதும் கண்ணாடி முன் ரிகர்சல் செய்து பார்ப்பதும் என்ற interesting கவிதை.

    ஆணும் பெண்ணும் பரிமாறிக்கொள்ளும் காதல் பார்வை கவிஞர்களின் கற்பனைக்கு நிறைய தீனி போட்டிருக்கிறது. உடனே நம் நினைவுக்கு வருவது கம்பன் சொன்ன அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள். இது கண்டதும் காதல் இல்லை தற்செயலாக (Accidentally) ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்’ என்கிறார் புலவர் கீரன்.

    வள்ளுவர் ஒரு முழு அதிகாரமே எழுதியிருக்கிறார். பெண்ணின் ஒரு பார்வை காதல் நோயைத் தரும். அதுவே நோய்க்கு மருந்தளிக்கும்.  நான் பார்க்கும்போது மண்ணை பார்க்கின்றாயே என்று எல்லாமே  ஒரு ஆணின் Point of View. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் என்ற குறளில் பெண்ணின் பார்வை ஒரு படையுடன் வந்து தாக்குவதுபோல் இருக்கிறது என்பதும் ஆண் சொல்வதே.

    இதில் ஒரு பெண்ணின் நிலை என்ன? சில திரைப்பாடல்களில் கிடைத்த சுவாரஸ்ய முத்துகள். இவன் என்ற படத்தில் பழனிபாரதி எழுதிய பாடல்  (இசை இளையராஜா பாடியவர்கள் மாதங்கி, உன்னிகிருஷ்ணன் )

    http://www.youtube.com/watch?v=Tu7Hjb8NOmo

    அப்படி பாக்குறதுன்னா வேணாம்

    கண் மேலே தாக்குறது வேணாம்
    தத்தி தாவுறதுன்னா னா னா
    தள்ளாடும் ஆசைகள் தானா
    என்ன கேட்காமல் கண்கள் செல்ல
    உன் பக்கம் பார்த்தேன்
    மிச்சம் இல்லாமல் வெட்கம் தின்ன
    காணாமல் போனேன்

    கமலின் 2013 நாயகி எப்படி நாணுவது என்று practise செய்கிறாள். பழனிபாரதியின் 2002 நாயகி வெட்கம் தின்ன காணாமல்  போகிறாள். டைம் லைனில் கொஞ்சம் முன்னே போய் 60களில் வந்த சில பாடல்களைப் பார்த்தால் pleasant surprise. பணக்கார குடும்பம் என்ற படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்  (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர்கள் டி எம் எஸ், பி சுசீலா)

    http://www.youtube.com/watch?v=ABRw-iSaCJI

    இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்  தானா

    இப்படி என்று சொல்லி இருந்தால் தனியே வருவேனா …..

    இது ஏய் அப்படி பாக்காதே mode தான். ஆனால் வல்லவன் ஒருவன் படத்தில் கண்ணதாசன் எழுதிய இன்னொரு பாடல் bold & beautiful.  (இசை வேதா பாடியவர்கள் டி எம் எஸ், பி சுசீலா)

    http://www.youtube.com/watch?v=Lu8FNldHluA

    இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது

    இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது

    நான் கேட்டதை தருவாய் இன்றாவது

    கவியரசர் பெண்ணின் கோணத்தில் சொல்லும் அதிரடி வரிகள். 1966ல் வெளிவந்த பாடல் வரிகள் என்று நம்பவே முடியவில்லை. இதை மக்கள் எப்படி விமர்சனம் செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

    மோகனகிருஷ்ணன்

     
    • Uma Chelvan 12:47 am on November 22, 2013 Permalink | Reply

      நினைக்க மறந்தாய் , தனித்து பறந்தேன்
      மறைத்த முகத்திரை திறப்பாயோ
      திறந்து அகத்திரை இருப்பாயோ!!
      இருந்து விருந்து இரண்டு மனம் இணைய …….

      உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன்…

      ராஜா ஒரு மழை போல்!! மழைக்கு காடென்ன, கடெலென்ன, பாரபட்சம் இல்லாமல் எங்கும் பொழிவது போல் .ராஜாவும்…….மோகன், முரளி, ராமராஜன், சிவகுமார், விஜயகாந்த் முதற்கொண்டு அனைவரையும் கட்டி காத்த எல்லைச் சாமி. நல்ல குரல் வளம் கொண்ட வடிவேலும் ராஜவினால்தான் சினிமாவில் பாட ஆரம்பித்தார் என்று நினைகிறேன்.

      மாமழை போற்றுதும்!!!! ராஜாவையும் !!!!!

    • rajinirams 10:38 am on November 22, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு. நீங்கள் சொன்னது போல “ஆணும் பெண்ணும் பரிமாறிக்கொள்ளும் காதல் பார்வை கவிஞர்களின் கற்பனைக்கு நிறைய தீனி போட்டிருக்கிறது”.கவியரசரின் “பார்வையிலேயே”ஏராளம். பார்த்தேன் ரசிந்தேன் என்று ஆரம்பித்து ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்,என்ன பார்வை உந்தன் பார்வை,பார்வை யுவராணி கண்ணோவியம் இப்படி பல. எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன என்ற கேள்விக்கு உன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது என்பது கண்ணதாசனின் பார்வை தான்.ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்,கண் தேடுதே சொர்க்கம்-வாலியின் பார்வை.உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில்-இது கங்கை அமரனின் கற்பனை.பார்வையாலே நூறு பேச்சு,வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு-வைரமுத்துவின் பார்வை. விழிகள் மேடையாம்,இமைகள் திரைகளாம் “பார்வை”நாடகம் அரங்கில் ஏறுமாம்-இது டி.ராஜேந்தரின் பார்வை.பார்க்காதே பார்க்காதே-நீ பார்த்தா பறக்குறேன் பாதை மறக்குறேன்-இது யுகபாரதியின் வருத்தப்படாத வாலிபர் சங்க பார்வை. நன்றி.
      “மார்கழி பார்வை பார்க்கவா” என்ற வார்த்தைகளும் நல்ல கற்பனையே-ராஜாவின் இசையில் உள்ள இந்த பாடலை கேட்டிருக்கிறேன்,எந்த படம் என்று தெரியவில்லை.(உயிரே உனக்காக என்ற பெயரில் எடுக்கப்பட்டு நின்று போனது என்று நினைக்கிறேன்) http://youtu.be/XEvlj_vvgoM

    • amas32 11:57 am on November 22, 2013 Permalink | Reply

      //இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது

      இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது

      நான் கேட்டதை தருவாய் இன்றாவது//

      இந்த வரிகள் தான் நீங்கள் இன்று கொடுத்திருப்பதிலேயே பெஸ்ட். என்ன ஒரு கற்பனை, உண்மைக்கு மிக அருகில். கண்ணதாசனைப் பெற்ற இத் தமிழகம் புண்ணிய பூமி!

      amas32

    • srimathi 10:54 pm on November 22, 2013 Permalink | Reply

      I’m glad that there are so many songs where a woman’s perspective is portrayed. To be exactly in woman’s shoes is possible only when a woman writes it herself. Ondra renda aasaigal from kaakha kaakha is a popular example. Thamarai writes it this way “thoorathil nee vandhaale en manadhil mazhai adikkum, miga piditha paadal ondru udhadugalil munumunukkum”

  • mokrish 7:41 am on November 20, 2013 Permalink | Reply  

    எங்கே அவன் என்றே மனம் 

    சுஜாதாவின் ‘401 காதல் கவிதைகள்’ குறுந்தொகை பாடல்களுக்கு ஒரு அட்டகாசமான அறிமுகம். முன்னுரையில் சில salient features சொல்கிறார். எல்லாப் பாடல்களிலும் ஒரு uniformity  இருக்கும், ஒரு நல்ல உவமை இருக்கும். தலைவன்-தலைவி, அன்னை-செவிலி, தோழன்-தோழி என்று அகத்துறை சார்ந்த கதாபாத்திரங்களிடையே நடைபெறும் சரளமான உரையாடல்கள் அல்லது dramatic monologues இருக்கும். எல்லாப் பாடல்களுக்கும் பொதுவான subject  காதல் உணர்ச்சிகள், ரகசியமாகச் சந்தித்தல், காதலை அறிவித்தல், கூடுதல், பிரிதல், காத்திருத்தல் பதற்றமடைதல் பிரிவாற்றாமை, இன்னொருத்தியால் வருத்தம் போன்ற அகத்துறை உணர்சிகளே என்ற பட்டியலில்  ஒரு framework சொல்கிறார். இன்று தமிழில் எழுதப்படும் அத்தனை காதல் கவிதைகளும் திரைப்பாடல்களும் குறுந்தொகையிலிருந்து  பிறந்தவை என்கிறார்.

    காலங்களில் அவள் வசந்தம் படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடலில் (இசை விஜயபாஸ்கர் பாடியவர் வாணி ஜெயராம்) குறுந்தொகை வாசம் கொஞ்சம் தூக்கலாக இருந்தது.  

    http://www.inbaminge.com/t/k/Kalangalil%20Aval%20Vasantham/Paadum%20Vande.eng.html

    பாடும் வண்டே பார்த்ததுண்டா
    மாலை அணிந்த என் மாப்பிள்ளை
    ஏண்டி தோழி என்ன செய்தாய்
    எங்கு மறைத்தாய்
    கண்ணன் எங்கே எங்கே எங்கே

    முதல் வரியில் தலைவன் எங்கே என்று தேடும் தலைவி. தொடர்ந்து ஒரு ‘அந்த நாள் ஞாபகம்’ flashback. அதன் பின் காத்திருத்தல் பற்றி சில வரிகள்

    வாரி முடிக்க மலர்கள் கொடுத்தார்
    வண்ணச்சேலை வாங்கி கொடுத்தார்
    கோலம் திருத்தி காத்துக் கிடந்தேன்
    கோவில் வழியைப் பார்த்துக்கிடந்தேன்
    ஊர்வலம் எங்கே உறவுகள் எங்கே
    உண்மை சொல்வாயடி எந்தன்

    எந்தன் கண்ணாளன்
    வந்தார் இங்கே எங்கே எங்கே

    அடுத்த வரிகளில் பிரிவினால் வந்த ஏக்கம் சொல்கிறாள். தூங்கவேயில்லை என்று சொல்கிறாள்  ‘அவரின்றி கூவுது ஆயிரம் கோழி’ என்று  பிரிவுக்காலம் சொல்கிறாள்.

    ஏங்கிய நாட்கள் நூறடி தோழி
    தூங்கிய இரவோ ஒன்றரை நாழி
    ஆலயம் பாடுது ஆனந்தம் வாழி
    அவரின்றி கூவுது ஆயிரம் கோழி
    கண்ணிலும் பார்த்தேன் கனவிலும் பார்த்தேன்
    இன்று வந்தானடி

    எந்தன் கண்ணாளன்
    வந்தார் இங்கே எங்கே எங்கே

    வண்டு, தோழி என்று கூப்பிடுவது போல இருந்தாலும், இது தலைவி தனிமையில் புலம்பியதுதான். பிரிவு பற்றிய பாடல்தான். கவிஞர் ஏன் உவமை எதுவும் வைக்கவில்லை என்று தெரியவில்லை.

    மோகனகிருஷ்ணன்

    352/365

     
    • Uma Chelvan 10:26 am on November 20, 2013 Permalink | Reply

      எங்கே அவன் என்றே மனம் ………என்ற தலைப்பு .காலங்கள் மாறி காட்சிகளும் மாறி விட்டது அல்லது வேகமாக மாறி கொண்டு இருக்கிறது என்பதற்கு நல்ல சாட்சி .சமீபத்திய New Tanishq Advertisement போல்——-

      அவனை கண்டால் வரச் சொல்லடி
      அன்றைக்கு தந்ததை தரச் சொல்லடி
      தந்ததை மீண்டும் பெறச் சொல்லடி
      தனியே நிற்பேன் எனச் சொல்லடி

      இருவல்லவர்கள் என்ற இந்தப்படம் 1966 வெளிவந்து உள்ளது. அப்பவே ” நான் தனியே நிற்பேன் வரச் சொல்லடி “னு ரொம்ப தைரியம்மாய் பாடி இருக்காங்க.!! Just look at Manoramma’s expression for that particular lines. She is in total shock. :))

    • amas32 9:30 pm on November 20, 2013 Permalink | Reply

      இது முழுக்க முழுக்க ஏக்கப் பாட்டு. காதலனைக் காண ஏங்கி நிற்கிறாள் காதலி. உவமைகள் இல்லாமலேயே அருமையாக உணர்வுகள் வரிகளில் வெளிப்படுகின்றன. தலைவி எங்கும் பொது தோழி இல்லாமல் முடிவதில்லை 🙂

      amas32

      • Uma Chelvan 12:15 am on November 21, 2013 Permalink | Reply

        நானும் தப்பான அர்த்தத்தில் சொல்லவில்லை. I really appreciate her courage. ஒரு smiley போட்டு இருந்து இருக்கணுமோ ?

  • mokrish 9:56 pm on November 17, 2013 Permalink | Reply  

    தலைப்பு செய்திகள் 

    தமிழ் சினிமாவில் இருக்கும் கதைப்பஞ்சம் நமக்கு தெரியும். இருக்கும் சில கதைகளுக்கும் தலைப்பு தேடுவதே பெரிய வேலையாகிவிட்டது. பெரிய ஹீரோ – ஸ்டார் இவர்கள் நடிக்கும் படங்களுக்கு நாயகனின் பெயரையே தலைப்பாக வைக்கலாம். பலர் ஏற்கனவே வெளிவந்த திரைப்படத்தின் பெயரையே திரும்பவும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரே தலைப்புக்கு நடக்கும்  வாய்க்கா தகராறு கொடுமை!

    1950களில் சில திரைப்படங்களுக்கு இரண்டு தலைப்புகள் வைத்திருந்தனர். இப்போது அந்த இரண்டாவது தலைப்பை tag லைன் என்று சொல்கிறார்கள். மிக நீளமான தலைப்பைக் கொண்ட திரைப்படம் என்ற (ஒரே) பெருமை மன்சூர் அலிகானின் ‘ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்’ என்ற படத்துக்கே. ஒரேழுத்து தலைப்பும் உண்டு – சமீபத்திய கோ,  தயாரிப்பில் இருக்கும்  ஷங்கரின் ஐ.

    அன்றும் இன்றும் என்றும் நாவல்களுக்கும் / திரைப்படங்களுக்ககும் பாடல் வரிகளையே தலைப்பாக வைப்பது ஒரு வழக்கம்.  ஆனந்த விகடனில் எழுத்தாளர் மணியன் ‘உன்னை ஒன்று கேட்பேன் என்ற பாடலின் வரிகளை தன் நாவல்களின் தலைப்பாக வைத்தார். தாமரை மணாளன் ஆயிரம் வாசல் இதயம் என்று ஒரு கதை எழுதினார். திரையுலகில் எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி நிறைய படங்களின்  தலைப்பு ஒரு பாடலின் முதல் வரியே

    ஒரு அதிசயமான டைட்டில் தொடர் சங்கிலி கண்ணில் பட்டது. ஒரு படத்தின் பாடலை இன்னொரு படத்தின் தலைப்பாக்கி  அந்த படத்தின் பாடல் இன்னொரு படத்தின் தலைப்பாகி என்று ஒரு சங்கிலியில் நான்கு அருமையான பாடல்கள்.

    லக்ஷ்மி கல்யாணம் என்றொரு படம்.அதில் ராமனின் பல பெயர்களை வர்ணிக்கும் பாடல்   http://www.youtube.com/watch?v=DR2GFE0B5M0

    ராமன் எத்தனை ராமனடி

    அவன் நல்லவர் வணங்கும் தெய்வமடி

    ராமன் எத்தனை ராமனடி என்ற படத்தில் ஒரு பிரபலமான பாடல் http://www.youtube.com/watch?v=cU9_w77CM1k

    அம்மாடி … பொண்ணுக்கு தங்க மனசு

    பொங்குது இந்த மனசு

    பொண்ணுக்கு தங்க மனசு என்ற படத்தில்  வரும் பாடல் http://www.youtube.com/watch?v=tCpQUgKU4YI

    தேன் சிந்துதே வானம்

    உனை எனை தாலாட்டுதே

    தேன் சிந்துதே வானம் என்ற படத்தில் வரும் பாடல் http://www.youtube.com/watch?v=lc1v6uBKtKs

    உன்னிடம் மயங்குகிறேன்

    உள்ளத்தால் நெருங்குகிறேன்

    உன்னிடம் மயங்குகிறேன் என்றும் ஒரு படம் வந்தது. ஆனால் இந்த டைட்டில் சங்கிலி தொடரவில்லை என்று நினைக்கிறேன்.

    தலைப்புக்கும் கதைக்கும் பெரிய தொடர்பே இருப்பதில்லை. அபூர்வமாக சில நல்ல தலைப்புகள் கண்ணில் படும். என் டாப் பட்டியலில் இருக்கும் தலைப்புகள் முள்ளும் மலரும், மூன்றாம் பிறை, வாலி, அழியாத கோலங்கள்

    மோகனகிருஷ்ணன்

    350/365

     
    • rajinirams 11:20 pm on November 17, 2013 Permalink | Reply

      நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ,சில மாதங்களுக்கு முன் இதை நினைத்தேன்-இதே போல இன்னொன்று- இருவர் உள்ளாம்=இதயவீணை தூங்கும்போது, இதயவீனை-இன்று போல என்றும் வாழக. இன்று போல் என்றும் வாழ்க-அன்புக்கு நான் அடிமை.அன்புக்கு அடிமையாகி நின்று விட்டது:-)) நன்றி.

    • rajinirams 3:06 am on November 18, 2013 Permalink | Reply

      இரு மலர்கள்-அன்னமிட்ட கைகளுக்கு,அன்னமிட்ட கை-16 வயதினிலே,16 வயதினிலே-செந்தூரப்பூவே,செந்தூரப்பூவேயுடன் நின்றது, தெய்வத்தாய்-வண்ணக்கிளி,வண்ணக்கிளி-மாட்டுக்கார வேலா,மாட்டுக்கார வேலன்-பட்டிக்காடா பட்டணமா.பட்டிக்காடா பட்டணமா-நல்வாழ்த்து நான் சொல்வேன்,நல் -வாழ்த்துக்களுடன் இனிதே முடிந்தது. அதே போல் நீ,தீ போன்ற ஓரெழுத்து படங்களும் வெளியாகின. மின்னலே பாடத்தில் வாலி எழுதிய அழகிய தீயே வரியை தன் படத்தில் தலைப்பாக வைத்ததற்கு அழகிய தீயே இசை வெளியீட்டு விழாவில் அவரை அழைத்து கெளரவப்படுத்தினார் அதன் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ்.பல படங்களுக்கு தலைப்பை பாடல் மூலம் தந்திருந்தாலும் தன்னை கெளரவப்படுத்திய பிரகாஷ்ராஜை மனமார பாராட்டினார் வாலி.நல்ல பதிவு.பாராட்டுக்கள்.

    • amas32 2:31 pm on November 18, 2013 Permalink | Reply

      Very quaint post 🙂 I have also wondered about this like Rjnirams 🙂 At least movies with song line titles is plenty common among Tamil film productions. அதுவே படத்தைப் பாதி மக்களிடம் கொண்டு சேர்த்துவிடும். நீ தானே என் பொன் வசந்தம் என்று பெயர் சூட்டியது கௌதம் வாசுதேவ் மேனனின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது 🙂

      amas32

  • mokrish 11:04 pm on November 15, 2013 Permalink | Reply  

    மணியே மணியின் ஒலியே 

    புறநகரில் இருக்கும் கோவிலில் தீபாராதனையின்போது பக்தர்களே கோவில் மணியடித்து வழிபடுகிறார்கள். விசாரித்தபோது கிடைத்த தகவல் – கோவில் நிர்வாகம் மின்சாரத்தில் இயங்கும் கருவியை வாங்கலாம் என்று திட்டம் போட்டபோது காலனியில் வாழும் மக்கள் ‘புதிதாக உலோகத்திலான கோவில் மணியே வாங்கலாம், மணியடிக்க வேலையாள் தேவையில்லை, பக்தர்களே அந்த வேலையை செய்வோம்’ என்று சொல்லி, நன்கொடைகள் மூலம் செய்து முடித்திருக்கிறார்கள். சபாஷ்.

    கணீர் என்று ஒலிக்கும் மணி, இனிமையான மங்கள வாத்திய இசை இவையே கோவிலுக்கு அழகு. ஐயப்பன் கோவிலில் கேட்கும் மேள வாத்திய (செண்டை ?) இசை அருமை.  இப்போது சென்னையில் பல ஆலயங்களில் பூஜையின் போது மின்சார இசைதான் கேட்கிறது. மத்தளம், மணி, சேகண்டி என்று பல வாத்திய ஒலிகளின் கலவையாக ஒலிக்கும் இசை. வாத்தியத்தின் வடிவமைப்பை ரசிக்கும் அளவிற்கு ஒலியை ரசிக்க முடிவதில்லை.

    என் பள்ளிப்பிராயம் முழுவதும் ஒரு சிறு நகரத்தில்தான். கோவிலிலும் நான் படித்த கிறிஸ்துவ பள்ளியிலும் பெரிய அழகான உலோக மணிதான். அந்த நாதம் அன்றாட வாழ்வின் பகுதியாக இணைந்தே இருந்தது. மகிழ்ச்சி துக்கம் என்று எல்லா உணர்வுகளிலும் ஒரு அருமையான தோழனாக வந்த Reverberating ஒலி.

    கண்ணதாசன் மணியோசை படத்தில் எழுதிய  ‘தேவன் கோவில் மணியோசை’ என்ற பாடல் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்) கேளுங்கள்

    http://www.youtube.com/watch?v=VGChKUDqAZI

    தேவன் கோவில் மணியோசை

    நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை

    பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்

    பாசத்தின் ஓசை மணியோசை

    ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்

    உதவும் கோவில் மணியோசை

    தாயார் வடிவில் தாவி அணைத்தே

    தழுவும் நெஞ்சின் மணியோசை

    இது உறவினை கூறும் மணியோசை

    இவன் உயிரினை காக்கும் மணியோசை

    என் விருப்பம் பாரம்பரியமான மணியோசைதான். ஆகம சாஸ்திரப்படி கோவிலில் மணியடிப்பது துர்தேவதைகளை விரட்டவே என்று படித்தேன். மின்சார மணியிலும் அதை விரட்ட முடியுமே என்றால் என்னிடம் பதில் இல்லை.

    மோகனகிருஷ்ணன்

    348/365

     
    • lotusmoonbell 11:40 pm on November 15, 2013 Permalink | Reply

      வெண்கல மணிக்கென்றே இருக்கின்ற தனி ஒலிஅதிர்வு அலைகள் மின்சார மணியோசையில் கேட்க முடியாதுதான். எனக்கு அந்தக் கால புகை விட்டுக்கொண்டு ஓலி எழுப்பும் ரயில் வண்டிச் சத்தமும் நினைவுக்கு வருகிறது. கண்ணதாசனின் பாடல் அருமை. மணியோசையைப் போல மறக்கமுடியாதது.

    • Uma Chelvan 11:57 pm on November 15, 2013 Permalink | Reply

      Lotusmoonbell,……….சொன்னது போல் வெண்கல மணிக்கு என்று ஒரு தனி ஒலி அதிர்வு உண்டு. அதுவும் கோவிலுக்குள் இருக்கும் பொழுது அதன் ஒலி மிகுந்த positive energy கொடுக்கும்.

      மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணிபுனைந்த
      அணியே, அணியும் அணிக்கழகே, அணுகாதவர்க்குப்
      பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே.
      பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்தபின்னே.

      -அபிராமி அந்தாதி

    • amas32 8:25 am on November 16, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு. வடபழனி கோவிலில் அபிஷேகம் முடிந்து தீபாராதனையின் போது இப்பொழுது மின்சார ஒலி தான் எழும்பப்படுகிறது. எனக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கும். நான் சிறுமியாக இருக்கும் பொழுதிலிருந்து வடபழனி முருகனை தரிசிக்கச் செல்பவள். அப்பொழுதெல்லாம் கணீரென்ற மணி வெண்கல ஒலி தான். கூடவே தாளம், அதுவும் வெங்கலத்தில். அந்தத் பெரிய தாளத்தை அடிப்பவர் சந்நிதிக்கு வெகு அருகில் நிற்பார். காண்டா மணி ஓசையோடும் தாளத்தின் ஓசையோடும் ஜகஜ்ஜோஜோதியாகத் தீபாராதனை நடக்கும் போது உடம்பு தானாகப் புல்லரிக்கும். இந்த மின்சார சத்தம் எப்போ முடியும், எப்போ நிம்மதியா தரிசிக்கலாம் என்றே தற்போது தோன்றுகிறது.

      நல்ல பாடல் தேர்வு 🙂

      amas32

  • mokrish 9:05 am on November 13, 2013 Permalink | Reply  

    வண்ண வண்ண சேலைங்க 

    விசாகா ஹரியின் பக்த சூர்தாஸ் கதா கச்சேரியில் கதை மெதுவாக பாடலுடன் விரிந்தது. முன்னுரையில் திரௌபதி குரல் கேட்டு எம்பெருமான் வருகிறார் என்ற நிகழ்வை பலர் அவரவர் உணர்ந்த விதத்தில் பாடிய அருமை பற்றி சொன்னார்.

    திரௌபதி – துகிலுரியப்படும் காட்சி என்றாலே எனக்கு டிவியில் பார்த்த பி ஆர் சோப்ராவின்  மகாபாரதம் நினைவுக்கு வரும். கிருஷ்ணர் -கையிலிருந்து மீட்டர் கணக்கில் வரும் பின்னி மில்  மஞ்சள் புடவை கண்ணில் தெரியும். இதுதான் பொதுவான விஷுவல்.

    பாரதியார் என்ன சொல்கிறார்? துச்சாதனன் பாஞ்சாலியின் துகிலை உரியத் தொடங்கினான். அவள் கண்ணனின் அருள் செயல்களைச் சொல்லி அவனை அழைத்து அடைக்கலம் புகுந்தாள். கண்ணன் அருளால் அவள்துகில் வளர்ந்து கொண்டேயிருந்தது.  அது வளர்ந்த விதத்தை உவமைகளை அடுக்கிச் சொல்கிறார்.

    பொய்யர்தம் துயரினைப் போல் – நல்ல

             புண்ணியவாளர்தம் புகழினைப்போல்

    தையலர் கருணையைப் போல் – கடல்

             சலசலத் தெறிந்திடும் அலைகளைப்போல்

    பெண்ணொளி வாழ்த்திடுவார்-அந்தப்

             பெருமக்கள் செல்வத்தின் பெருகுதல்போல்

    வண்ணப் பொற் சேலைகளாம் – அவை

             வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே !

    வாலியும்  பாண்டவர் பூமியில் பாஞ்சாலி கண்ணா கமலபூங்கண்ணா! என்று சீதரனை விளித்தாள். உடனே

    இருளினால் செய்த

    எழில்மேனியன் -எங்கிருந்தோ

    அருளினான்

    ஆடைமேல் ஆடைமேல்

    ஆடைமேல் ஆடைமேல்

    ஆடையாய் இடைவிடாது

    சங்கம்; சக்கரம்

    தங்கும் தனது

    கைத்தறியில் – உடை நெய்து

    கையறு பெண்ணுக் கனுப்பிட

    என்ற வரிகளில் அவன் பல புடைவைகள்  அனுப்பினான் என்றே சொல்கிறார்.

    வைரமுத்து சலங்கை ஒலி படத்தில் வான் போலே வண்ணம் என்ற பாடலில் (இசை இளையராஜா பாடியவர்கள் எஸ் பி பி, எஸ் பி ஷைலஜா) ஒரு ட்விஸ்ட் சொல்கிறார். கன்னியருடன் விளையாடியவன், பெண்களோடு அலைந்தவன் கோபியரின் சேலைகளை எடுத்தது பாஞ்சாலி கேட்கும்போது கொடுப்பதற்காகவே  என்று ஒரு cinematic ஜோடனை.

    http://www.youtube.com/watch?v=LkPxCJ5ux-c

    பெண்கள் உடை  எடுத்தவனே

    தங்கைக்கு உடை கொடுத்தவனே

    சேலைகளைத் திருடி அன்று செய்த லீலை பலகோடி

    ஆனால் சூர்தாஸ் deenan dukh haran dev santan hitkari என்ற பாடலில் சொன்னது சுவாரஸ்யமாக இருந்தது. துச்சாதனன் ஆடையை பிடித்து இழுக்கும் போது அவள்  ‘கிருஷ்ணா கிருஷ்ணா என்று கதறி வேண்டுகிறாள். உடனே கிருஷ்ணர் அங்கே வந்து தன்னையே அவளுக்கு ஆடையாக அளிக்கிறார் என்று சொல்கிறார்.

    http://www.youtube.com/watch?v=ayX_wJ8otVM

    கண்ணதாசன் பூவும் பொட்டும் படத்தில் எழுதிய பாடலில் (இசை கோவர்தனம்  பாடியவர் பி சுசீலா)

    http://www.inbaminge.com/t/p/Poovum%20Pottum/Ennam%20Pola%20Kannan%20Vanthan.eng.html 

    எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா

    பெண்மை வாழ தன்னை தந்தான் அம்மம்மா

    என்ற வரிகளில் பெண் மானம் காக்க கண்ணன் தன்னையே தந்தான் என்கிறார். மீட்டர் கணக்கில், பல வண்ணங்களில் சேலைகள் என்பது வழக்கமான விளக்கம். சூர்தாசரும் கண்ணதாசரும் சொல்வது கண்ணனின் பெருமை.

    மோகனகிருஷ்ணன்

     
    • rajinirams 5:43 pm on November 13, 2013 Permalink | Reply

      பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்-பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான் என்ற கவியரசர் “பெண்மை வாழ தன்னை தந்தான்” என்ற ஒரு வரியிலேயே அசத்தி விட்டாரே…அருமையான பதிவு.

    • Uma Chelvan 8:10 pm on November 13, 2013 Permalink | Reply

      very nice reply rajinirams.

      • rajinirams 10:14 pm on November 13, 2013 Permalink | Reply

        Uma Chelvan நன்றி

    • Uma Chelvan 8:27 pm on November 13, 2013 Permalink | Reply

      பாரதியார் கண்ணன் மீது கொண்ட அன்பு அளப்பரியது. So does ” Kanna…..Dasan”. When I look around and look back எல்லோருக்குமே கண்ணன் மீது ஒரு காதல் உண்டு.” கண்ணனை நினைக்காத நாளில்லையே ” ….ஆயினும் பாரதியின் காதல் உன்னதமானது , உயர்வானது !

      கண்ணன் எனது அகத்தே கால்வைத்த நாள்முதலாய்
      எண்ணம் விசாரம் எதுவும் அவன் பொறுப்பாய்ச்
      செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,
      கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம்,
      தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்
      ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண்!….

      .மிக தெளிவான , அழகான பாரதியின் கவிதை கண்ணனை பற்றி .

      • mokrish 8:17 am on November 14, 2013 Permalink | Reply

        பாரதியார் கண்ணன் மீது கொண்ட அன்பு அளப்பரியது. தல் உண்டு.” கண்ணனை நினைக்காத நாளில்லையே ” ….

      • mokrish 8:23 am on November 14, 2013 Permalink | Reply

        பாரதியார் கண்ணன் மீது கொண்ட அன்பு அளப்பரியது – அதில் எனக்கு சந்தேகமே இல்லை.

    • amas32 7:47 pm on November 15, 2013 Permalink | Reply

      சூர்தாசரும் கண்ணதாசரும் உட்பொருள் ஆராய்ந்து விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அதுவே உண்மை நிலை. மீட்டர் மீட்டரா துணி நீண்டு வருவது ஒரு figure of speech தான்.

      amas32

  • mokrish 10:06 pm on November 9, 2013 Permalink | Reply  

    உண்ணும் உணவும் நீரும் தந்த 

    பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் முடிந்தவுடன் திரை போட்டு அலங்காரம். பின் மஹா நைவேத்தியம். மடப்பள்ளியிலிருந்து ஒருவர் மூடிய பாத்திரத்தில் கொண்டு வந்ததை வைத்து நைவேத்தியம்

    இது வழக்கில் வந்த சொல். சரியான சொல் – நிவேதனம் இது இறைவனின் கருணையைப் போற்றுகிற விஷயம்.  அறிவிப்பது அல்லது காண்பிப்பது என்று பொருள். இறைவனுக்கு நாம் உணவு படைப்பதில்லை. அவன் கருணையினால் கிடைத்ததை, அவனுக்குக் காண்பித்து, அவன் உத்திரவுடன் அதை நாம் சாப்பிடுகிறோம் என்ற நம்பிக்கை. இது எல்லா மதங்களிலும் உள்ள நம்பிக்கை. அந்த கருணை நீடித்துக் கிட்ட இறைவனிடம் வேண்டிக் கொள்கிறோம். ஆங்கிலத்தில் Meal Time blessing என்று ஒரு பாடல்

    Thank you for the world so sweet,

    Thank you for the food we eat.

    Thank you for the birds that sing,

    Thank you God for everything.

    இறைவனுக்குரிய நிவேதனங்கள் எவை? ஒளவையார் அருளிய நல்வழியில்  

    பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

    நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலஞ்செய்

    துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்

    சங்கத் தமிழ்மூன்றும் தா.

    விநாயகரிடம் ஒரு Barter டீல். அருணகிரிநாதர் கைத்தல நிறைகனி அப்பமொடவல் பொரி என்று விநாயகர் விரும்பி உண்ணும் உணவுப் பொருள்கள் சொல்கிறார். திருப்பாணாழ்வார்

    கொண்டல்வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்

    உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை

    என்று கண்ணன் தின்ற வெண்ணெய் பற்றி சொல்கிறார். சிவனுக்கு அன்னம், அனுமனுக்கு வடை, முருகனுக்கு பஞ்சாமிர்தம், பெருமாளுக்கு லட்டு வெண்பொங்கல்,புளியோதரை என்று ஒரு பெரிய மெனு கார்ட் இருக்கிறது.

    நமக்கு கிடைத்த உணவை இறைவனிடம் காட்ட வேண்டும் என்றால் ஏன் இந்த லிஸ்ட்? மனப்பூர்வமாக எதையும் கொடுக்கலாம் என்பதே உண்மை. கண்ணப்பரும், குகனும், சபரியும் குசேலரும் தந்த எளிமையான நிவேதனங்களை இறைவன் ஏற்றுக்கொண்டானே?

    ஆதி பராசக்தி படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல் (இசை கே வி மகாதேவன் பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்) ஒரு மீனவன் தான் தரும் எளிய உணவை ஏற்றுக்கொள்ள சொல்லும் வேண்டுதல்

    http://www.youtube.com/watch?v=gRkiCrHRA-A

    ஆத்தாடி மாரியம்மா-சோறு

    ஆக்கி வெச்சேன் வாடியம்மா

    ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம்

    தின்னு புட்டுப் போடியம்மா

    பாட்டெடுத்தேன் தாளமிட்டேன் ஓடி வரலே-ஆடிப்

    பாத்துப்புட்டேன் பிள்ளை முகம் தேடி வரலே

    பேச்சுப்படி பொங்கல் உண்ண இங்கு வரலே-நான்

    மூச்சடிக்கி உன்னிடத்தில் அங்கு வருவேன்!

    நிவேதனம் செய்ய multi cuisine உணவோ அலங்காரமோ தேவையில்லை. தேவர் படம் ஒன்றில் பக்தர் முருகனுக்கு ஒரு லாரி லோடு வழைப்பழம் அனுப்புவார். லாரி ஓட்டுநர் போகும் வழியில் இரண்டு பழங்களை பசியில் வாடும் ஒரு குழந்தையிடம் தருவார். முருகன் பக்தரின் கனவில் தோன்றி ‘ நீ அனுப்பிய இரண்டு வாழைப்பழங்கள் வந்தாச்சு நல்லா இருப்பா’ என்பார். பசித்திருக்கும் ஒருவருக்கு அளிக்கும் உணவே சிறந்த நிவேதனம்.

    மோகனகிருஷ்ணன்

    342/365

     
    • Uma Chelvan 12:28 am on November 10, 2013 Permalink | Reply

      அன்பே தளிகையாய் ஆர்வம் நறுநெய்யாய்
      என்புதோல் போர்த்திய என்னுடலில் – அன்பொடுவக்
      கார அடிசில் உயிர்சமைத் தேன்கண்ணா
      நேராய் நுழைந்தே அருந்து…………

      இராமுருகன் ராமசாமியின் பழைய கவிதை. மிகவும் அருமையான ஒன்று !!!

    • rajinirams 1:10 pm on November 10, 2013 Permalink | Reply

      ரொம்பவே வித்தியாசமான ,விரிவான,அருமையான “நைவேத்திய”பதிவு. முருகன் பக்தரின் கனவில் தோன்றி ‘ நீ அனுப்பிய இரண்டு வாழைப்பழங்கள் வந்தாச்சு நல்லா இருப்பா’ என்ற “டச்” சூப்பர். நான் “இறை” தேடும் சாக்கில் “இரை”தேடுவது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் புளியோதரைக்கு தான்-சூப்பராக இருக்கும்:-))

    • amas32 3:53 pm on November 10, 2013 Permalink | Reply

      எந்தக் கோவிலில் எந்தப் பிரசாதம் நன்றாக இருக்கும் என்று பாய்ஸ் படத்தில் செந்தில் ஒரு நோட்டு புத்தகத்தில் லிஸ்ட் போட்டு வைத்திருப்பதாக வரும். மேலும் அவர் இந்தத் தகவல்களை சேகரித்து வைத்து அதை “இன்பர்மேசன் இச் வெல்த்” என்று சொல்லும் டயலாக் ட்விட்டர்களிடையே ரொம்பப் பிரபலம் 🙂

      இதில் முக்கியமாகத் தெரிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், எந்த உணவையும் இறைவனுக்குப் படைக்காமல் (காட்டாமல்) உண்ணுவது மலத்தை உண்ணுவதற்குச் சமம் என்று ஒரு உபன்யாசகர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். மனத்தால் இறைவா இது உனக்கு என்று சொல்லி அந்தப் பண்டத்தை அவன் பிரசாதமாகச் சாப்பிடுவதை நம் வழக்கமாகிக் கொள்ள வேண்டும். அவன் பிராசதமாக நம் உள்ளேப் போகும் எந்த உணவும் அமிர்தமாக மாறி நம்மை வாழ வைக்கும் என்பது நம்பிக்கை.

      amas32

    • pvramaswamy 6:55 pm on November 10, 2013 Permalink | Reply

      Beautiful

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel