Updates from July, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • G.Ra ஜிரா 11:43 am on July 14, 2013 Permalink | Reply  

    படைத்தவன் யாரோ? 

    நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஐயம். தமிழ்க் கவிஞர்கள் அதிகமாகப் பாடிய கடவுள் யார்?

    முருகன், அம்மன், சிவன், கிருஷ்ணன் என்று அடுக்கலாம். ஆனால் அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களால் பாடப்பட்டவர்கள்.

    கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் இல்லாதவர்களும் ஒத்த எண்ணத்தோடு எந்தக் கடவுளைப் பாடியிருக்கிறார்கள்?

    அப்படியொரு ஒரு கடவுள் இருக்கிறார். அவருக்கு கோயில் கிடையாது. வழிபாடு கிடையாது. திருவிழா கிடையாது. பலிகளோ படையல்களோ கிடையாது. ஆனால் கவிஞர்கள் மட்டும் அவரைப் போற்றிக் கொண்டாடுவார்கள்.

    யார் அந்தக் கடவுள்? ஏன் அவரைக் கொண்டாடுகிறார்கள்?

    கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலின் வரியைச் சொல்கிறேன். உங்களுக்குச் சட்டென்று புரிந்து போகும்.

    படைத்தானே பிரம்மதேவன் பதினாறு வயது கோலம்!

    புரிந்து விட்டதல்லவா? நான்முகன் பிரம்மன் என்றெல்லாம் அழைக்கப்படும் படைப்புக் கடவுள்தான் அந்தக் கடவுள்.

    ஏன்? ஏனென்றால் அந்தப் படைப்புக் கடவுள்தான் காதலர்களுக்குத் தக்க காதலிகளைக் கொடுக்கிறார். இல்லை இல்லை. படைக்கிறார்.

    மடப்பாவையார் நம் வசமாகத் தூது நடப்பாரே தெய்வம் நமக்கு” என்று ஆதிநாதன் வளமடலில் செயங்கொண்டார் சொன்னதும் அதே கருத்துதான்.

    கொன்றை அணிந்த சிவனோ உலகளந்த கோபலனோ எமக்குத் தெய்வமல்ல. அழகான காதல் பாவையருக்காக தூது நடப்பவரே நமக்குத் தெய்வம்.

    சரி. வாருங்கள். இனி ஒவ்வொரு கவிஞரும் பிரம்மனை எப்படியெல்லாம் புகழ்ந்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

    அப்படி பிரம்மனைப் புகழ்ந்தவர்களில் என்னை மிகவும் வியக்க வைத்தவர் டி.ராஜேந்தர். அவரே எழுதி இசையமைத்த இரண்டு பாடல்களில் மிகமிகக் கவிநயத்தோடு பிரம்மனைக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வரிகளை நீங்களே படித்துப் பாருங்கள். நான் சொல்வதை ஒப்புக் கொள்வீர்கள்.

    தேவலோக அமுதத்தை குழம்பாக எடுத்து
    தங்க நிற வர்ணத்தில் குழைக்கின்ற போது
    பிரம்மனுக்கு ஞானம் வந்து உன்னை படைக்க
    அட பிரமிப்புடன் நானும் வந்து உன்னை ரசிக்க

    மேலே குறிப்பிட்டுள்ள பாடல் உயிருள்ளவரை உஷா படத்தில் இடம் பெற்ற “மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க” பாடல். விளக்கமே தேவைப்படாத அழகிய வரிகள் அல்லவா!

    அதே போல மைதிலி என்னைக் காதலி படத்தில் இடம் பெற்ற “ஒரு பொன்மானை நான் காணத் தகதிமித்தோம்” பாடலிலும் பிரம்மனைப் பாராட்டுகிறார் விஜய டி.ராஜேந்தர்.

    தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி
    தாமரைப் பூ மீது விழுந்தனவோ
    இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
    படைத்திட்ட பாகந்தான் உன் கண்களோ

    அடடா! என்ன கற்பனை! அவள் கண்ணைப் படைப்பதற்கே பிரம்மனுக்கு இப்படியொரு காட்சி தேவைப்பட்டிருக்கிறது. அவள் முழுவுடலையும் பளிங்குச் சிலையாய் படைப்பதற்கு எதையெதையெல்லாம் பார்த்துக் கற்றானோ!

    வைரமுத்துவின் சிந்தனை சற்று வேறுவிதமாகச் செல்கிறது. ஒரு எலக்ட்ரானிக் கண் கொண்டு காதலியைப் பார்க்கிறார். அவள் சிரிப்பு கூட டெலிபோன் மணி போலக் கேட்கிறது. அப்படி ஒரு பெண்ணை பிரம்மன் எதை அடிப்படையாகக் கொண்டு படைத்திருப்பான்? வேதங்களா? குருவருளா? சிவனருளா?

    கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா

    பிரம்மனும் காலமாற்றத்துக்குத் தக்க ஓலைச் சுவடிகளை வீசி எறிந்து விட்டு கம்ப்யூட்டரில் அனிமேஷன் செய்யத் துவங்கி விட்டானோ என்று வைரமுத்துவின் கற்பனை ஓடுகிறது.

    இன்னொரு பாட்டில் சற்று கொச்சையாக பிரம்மனின் படைப்புக் கதையைச் சொல்கிறார் வைரமுத்து. அண்ணாமலை திரைப்படத்தில் இடம் பெற்ற “அண்ணாமல அண்ணாமல” பாடல் வரிகளைக் கொஞ்சம் பார்க்கலாம்.

    பிரம்மனுக்கு மூடு வந்து உன்னை படைச்சிட்டான்
    அடி காமனுக்கு மூடு வந்து என்னை அனுப்பிட்டான்

    பிரம்மனின் வள்ளல் திறமையையும் கஞ்சத்தனத்தையும் இன்னொரு பாட்டில் கொண்டுவருகிறார் வைரமுத்து. ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற “அன்பே அன்பே கொல்லாதே” பாடல் வரிகளைக் கொடுக்கிறேன். பிரம்மன் எங்கு கஞ்சத்தனத்தையும் எங்கு வள்ளல் தன்மையையும் காட்டினான் என்று நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

    பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
    அடடா பிரம்மன் கஞ்சனடி
    சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
    ஆஹா அவனே வள்ளலடி

    அத்தோடு விடவில்லை வைரமுத்து. பிரம்மனைப் பார்த்து “தகுமா? முறையா? நீதியா?” என்று ஜெமினி படத்து நாயகனுக்காக முறையிடுகிறார்.

    பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
    என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
    உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
    நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா

    இந்தப் பாட்டில் சொல்வது போன்ற அழகான பெண்ணை பிரம்மன் கொடுத்தால் அது வரமா? சாபமா? இரண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

    இன்னொரு வித்தியாசமான கவிஞர் இருக்கிறார். அவர் இசையில் அவர் எழுதி இசையமைத்த பாடல் தான் நாடோடித் தென்றல் படத்தில் வந்த “மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரழகே” பாடல். ஆம். இசைஞானி இளையராஜா தான் எழுதிய பாடலிலும் பிரம்மனை இழுக்கிறார்.

    மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரழகே
    கொடியே கொடிமலரே கொடியிடையில் மணியழகே
    ………………..
    பொன்னில் வடித்த சிலையே பிரம்மன் படைத்தான் உனையே

    இன்றைய கவிஞர்களும் பிரம்மனை விடுவதாக இல்லை. முதலில் பா.விஜய் எழுதிய பாடல்களைப் பார்க்கலாம்.

    அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
    நீ என் மனைவியாக வேண்டும் என்று
    ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
    ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்

    அரசாங்க அலுவலகத்தில் மனு கொடுத்தால் அது எங்கு போகும் என்று தெரியும். ஆனால் பிரம்மனிடத்தில் மனு கொடுத்தால் கண்டிப்பாக அது நடக்கும் என்றொரு நம்பிக்கையை தேவதையைக் கண்டேன் திரைப்படப் பாடல் வரிகளில் கொண்டு வந்திருக்கிறார்.

    பிரியமான தோழி படத்துக்காகவும் பிரம்மனைப் புகழ்ந்திருக்கிறார் பா.விஜய்.

    பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
    ………………..
    பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது

    இந்த உலகத்தையே படைத்து, அதில் அத்தனை உயிர்களையும் படைத்ததை விட ஓவியம் போன்ற அழகான காதலியைப் படைத்ததுதான் மிகப் பெரிய சாதனை என்று காதலன் பார்வையில் பா.விஜய் எழுதியதும் ரசிக்கத்தக்கதுதான்.

    நா.முத்துக்குமாரும் வழக்கு எண் 18/9 படத்துக்காக பிரம்மன் கையைப் பிடித்து இழுத்திருக்கிறார்.

    வானத்தையே எட்டி புடிப்பேன்
    பூமியையும் சுத்தி வருவேன்
    …………………
    அடி பெண்ணே நீயும் பெண்தானோ
    இல்ல பிரம்மன் செய்த சிலைதானோ

    வழக்கமாக பாட்டெழுதும் கவிஞர்கள் மட்டுமல்ல, புதிதாகப் பாட்டெழுதுகின்றவர்களுக்கும் பிரம்மனே துணை. தானே இயக்கிய கச்சேரி ஆரம்பம் திரைப்படத்தில் ஒரு பாடலை இயக்குனர் திரைவாணன் எழுதியிருக்கிறார். அங்கும் பிரம்மனுக்குப் போற்றி மேல் போற்றி.

    பிரம்மா உன் படைப்பினிலே…
    எத்தனையோ பெண்கள் உண்டு
    ஆனாலும் அசந்துவிட்டேன் அழகினிலே
    இவளைக் கண்டு
    அழகினிலே.. இவளைக்கண்டு
    வாடா வாடா பையா

    இப்படியெல்லாம் பாடல்களைப் பார்க்கும் போது எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா?

    இதுதான் பிரம்மனுக்கு வந்த வாழ்வு! வாழ்வோ வாழ்வு!

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

    பாடல் – மோகம் வந்து தாகம் வந்து
    படம் – உயிருள்ளவரை உஷா
    பாடியவர்கள் – எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    பாடல் & இசை – டி.ராஜேந்தர்
    பாடலின் சுட்டி – http://youtu.be/1S3XGSA4qTk

    பாடல் – அன்பே அன்பே கொல்லாதே
    படம் – ஜீன்ஸ்
    பாடல் – வைரமுத்து
    பாடியவர் – ஹரிஹரன்
    இசை – ஏ.ஆர்.ரகுமான்
    பாடலின் சுட்டி – http://youtu.be/_QzDFtWVf3c

    பாடல் – படைத்தானே பிரம்மதேவன்
    படம் – எல்லோரும் நல்லவரே
    பாடல் – கண்ணதாசன்
    பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    இசை – வி.குமார்
    பாடலின் சுட்டி – http://youtu.be/qamttiCClsc

    பாடல் – அழகே பிரம்மனிடம் மனு
    படம் – தேவதையைக் கண்டேன்
    பாடல் – பா.விஜய்
    பாடியவர்கள் – ஹரீஷ் ராகவேந்திரா, கங்கா
    இசை – தேவா
    பாடலின் சுட்டி – http://youtu.be/lrCW8fOcXVQ

    பாடல் – அண்ணாமல அண்ணாமல
    படம் – அண்ணாமலை
    பாடல் – வைரமுத்து
    பாடியவர்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா
    இசை – தேவா
    பாடலின் சுட்டி – http://youtu.be/OQ3RdFU5vsQ

    பாடல் – வானத்தையே எட்டி புடிப்பேன்
    படம் – வழக்கு எண் 18/9
    பாடல் – நா.முத்துக்குமார்
    பாடகர் – தண்டபாணி
    இசை – ஆர்.பிரசன்னா
    பாடலின் சுட்டி – http://youtu.be/a-ohRTF8CeI

    பாடல் – பெண்ணொருத்தி பெண்ணொருத்தி
    படம் – ஜெமினி
    பாடல் – வைரமுத்து
    இசை – பரத்வாஜ்
    பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    பாடலின் சுட்டி – http://youtu.be/XNiS5Zxj_RY

    பாடல் – பிரம்மா உன் படைப்பினிலே(வாடா வாடா பையா)
    படம் – கச்சேரி ஆரம்பம்
    பாடல் – திரைவாணன் (இயக்குனர்)
    பாடியவர் – கார்த்திகேயன் எம்.ஐ.ஆர், அந்திதா
    இசை – டி.இமான்
    பாடலின் சுட்டி – http://youtu.be/ho-4PCJnQ6k

    பாடல் – பெண்ணே நீயும் பெண்ணா
    படம் – பிரியமான தோழி
    பாடல் – பா.விஜய்
    பாடியவர்கள் – கல்பனா, உன்னி மேனன்
    இசை – எஸ்.ஏ.ராஜ்குமார்
    பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=KSM9aCJFVTo

    பாடல் – மணியே மணிக்குயிலே
    படம் – நாடோடித் தென்றல்
    பாடியவர்கள் – எஸ்.ஜானகி, மனோ
    பாடல் & இசை – இளையராஜா
    பாடலின் சுட்டி – http://youtu.be/UNIb8Pblu7w

    பாடல் – ஒரு பொன் மானை நான் காண
    படம் – மைதிலி என்னைக் காதலி
    பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    பாடல் & இசை – டி.ராஜேந்தர்
    பாடலின் சுட்டி – http://youtu.be/S-XvP9p9mOs

    பாடல் – டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா
    படம் – இந்தியன்
    பாடியவர் – ஹரிணி, ஹரிஹரன்
    பாடல் – வைரமுத்து
    இசை – ஏ.ஆர்.ரகுமான்
    பாடலின் சுட்டி – http://youtu.be/SfHbknfOOuA

    அன்புடன்,
    ஜிரா

    225/365

     
    • மணிகண்டன் துரை 2:19 pm on July 14, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு

    • rajinirams 2:49 pm on July 14, 2013 Permalink | Reply

      அடடா பிரமாதம். எல்லா பாடல்களுமே சூப்பர். புதியவன் படத்தில் வைரமுத்துவின் “நானோ கண் பார்த்தேன்” பாடலில் பருவம் அடடா பஞ்சம் இல்லை,அடடா பிரம்மன் அவன் கஞ்சன் இல்லை என்று வரும். எல்லோரும் நல்லவரே பாடல் படைத்தானே பிரம்மதேவன் பாடல் கவியரசர் கண்ணதாசன் எழுதியது. (பகை கொண்ட உள்ளம்,சிகப்புகல்லு போன்றவை புலமைப்பித்தன் எழுதியவை).திருவருள் படத்தில் வரும் கந்தன் காலடியை பாடலில் “அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்” என்ற வரி வரும். நன்றி.

    • amas32 5:49 pm on July 14, 2013 Permalink | Reply

      எத்தனை எத்தனைப் பாடல்களைத் தேடி எடுத்து அடுக்கியிருக்கிறீர்கள்! படைப்புக் கடவுளான பிரம்மா சும்மா இல்லை! 🙂 அவருக்குக் கோவிலோ வழிபாடோ இல்லை என்றாலும் திரைப் பாடல்கள் அவரை துதிப்பது அவருக்குப் பெருமை தான் 🙂

      amas32

  • G.Ra ஜிரா 10:39 am on March 22, 2013 Permalink | Reply  

    தேசிங்கு ராஜா! 

    வரலாற்றுப் பின்னணியில் இப்போதெல்லாம் படங்கள் வருவதேயில்லை. ஆனாலும் காதற் பாடல்களில் நாயகனை வீரமுள்ளவனாகக் காட்ட வரலாற்று நாயகர்களாகக் குறிப்பிடுவதும் உண்டு. அதிலும் அதிகமாக குறிப்பிடப்பட்டது கட்டபொம்மனாகத்தான் இருக்கும். பாரி வள்ளலும் ராஜராஜசோழனும் திருமலை மன்னனும் கூட பாட்டில் வந்திருக்கிறார்கள்.

    இப்படி இவர்கள் வந்த பிறகு புதிதாக யாரையாவது குறிப்பிட வேண்டும் என்று நா.முத்துக்குமாருக்கு தோன்றியிருக்கலாம். அதனால் தேசிங்குராஜாவை அழைத்து வந்து விட்டார்.

    தேசிங்குராஜா தேசிங்குராஜா
    திருதிருதிருன்னு முழிப்பது ஏன்
    தஞ்சாவூரு ராணி தஞ்சாவூரு ராணி
    குறுகுறுன்னு பார்ப்பதென்ன
    படம் – டும் டும் டும்
    பாடல் – நா.முத்துக்குமார்
    பாடியவர்கள் – ஹரிஷ் ராகவேந்திரா, சுஜாதா
    இசை – கார்த்திக் ராஜா
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=JHTZ43dRtLc

    சரி. யார் இந்த தேசிங்கு ராஜா? எந்த ஊர் ராஜா? அதை விளக்கமாகச் சொல்ல சிறிய வரலாற்றுப் பாடம் எடுக்க வேண்டும்.

    18ம் நூற்றாண்டிலே செஞ்சியை ஆண்ட சிற்றரசன் தேசிங்கு ராஜா. இன்றைய செஞ்சியில் நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டிய கோட்டைகளும் இடிபாடுகளும் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. ஆனால் நாயக்கர்கள் ஆட்சி மறைந்த பிறகும் செஞ்சியில் சுவாரசியமான வரலாற்று நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.

    தென்னாட்டையும் பிடிக்க வேண்டும் என்று ஔரங்கசீப்புக்குக் கனவு. அதனால் அடிக்கடி தாக்குதல்கள். மதுரை, தஞ்சை மற்றும் செஞ்சி நாயக்கர் ஆட்சிகள் வீழ்ந்தன. மராட்டிய சிவாஜியின் மகன் ராஜாராம் ஔரங்கசீப்பிடம் இருந்து தப்பித்து செஞ்சிக் கோட்டைக்கு வந்து பதுங்கியிருந்தார்.

    இராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த சொரூப்சிங் தலைமையில் ஔரங்கசீப்பின் படை செஞ்சிக்கோட்டையைத் தாக்குகிறது. கிட்டத்தட்ட பதினோறு மாத முற்றுகைக்குப் பின்னர் செஞ்சிக்கோட்டை வீழ்ந்தது. அந்த வெற்றியைப் பாராட்டி செஞ்சி ஆட்சியை சொரூப்சிங்குக்கே கொடுத்து விடுகிறார் ஔரங்கசீப்.

    அந்த சொரூப்சிங்குக்கும் ராதாபாய்க்கும் பிறந்த மகன் தான் தேஜ்சிங். அதாவது தமிழர்கள் உச்சரிப்பில் தேசிங்கு.

    வடக்கில் அதற்குள் ஔரங்கசீப் ஆட்சி முடிந்து ஷாஆலம் ஆட்சி தொடங்கியிருந்தது. அவரிடம் ஒரு குதிரை வந்தது. பரிகாரி என்று பெயரிடப்பட்ட குதிரை அழகும் கம்பீரமும் சேர்ந்த உயர்ந்த வகை. ஆனால் அதை யாரும் அடக்கி ஓட்ட முடியவில்லை.

    குதிரைப் பயிற்சியில் சிறந்திருந்த சொரூப்சிங் அழைக்கப்பட்டார். சொருப்சிங்காலும் அந்தக் குதிரையை பழக்க முடியவில்லை. ஆனால் அதை முடித்துக் காட்டினான் பதினெட்டு வயது தேஜ்சிங். அந்த வெற்றிக்குப் பரிசாக தேஜ்சிங்குக்கு பரிகாரியே கிடைத்தது. அதுமட்டுமல்ல, தேஜ்சிங்கின் ராஜபுத்ர இனத்திலிருந்தே பெண்ணெடுத்து திருமணமும் செய்து வைத்தார் ஷாஆலம்.

    அந்த பெண்ணின் பெயர் ராணிபாய். இவருடைய பெயரில் உருவானதுதான் இன்றைய ராணிப்பேட்டை என்று சொல்கிறார்கள். தலையைச் சுற்றுகிறதா? வரலாற்றுச் சம்பவங்களைச் சுருக்கமாகச் சொன்னால் கொஞ்சம் சுற்றத்தான் செய்யும். 🙂

    மிகச் சிறுவயதிலேயே ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை வந்தது தேஜ்சிங்குக்கு. அவனுடைய நண்பன் முகமதுகான் தேஜ்சிங்குக்கு எல்லா வகையிலும் துணையாக இருந்தான். அவனிடமும் ஒரு குதிரை இருந்தது. அதன் பெயர் நீலவேணி. அதன் மேல் முகமதுகானுக்கு உயிர்.

    எல்லாம் நன்றாகப் போவது போலத்தான் இருந்தது ஆர்க்காட்டு நவாப் பிரச்சனையைத் தொடங்கும் வரை. ஆர்க்காட்டு நவாய் யார் வரி கேட்பதற்கு என்று போர் தொடங்கியது.

    எத்தனையோ திரைப்படங்களிலும் கதைகளிலும் வருவது போன்ற காட்சிதான். முகமதுகானுக்குத் திருமணம் வைத்த நாளில் போர் முரசு கொட்டியதாம். ஆகையால் திருமணத்தை நிறுத்தி விட்டு போருக்குப் புறப்பட்டானாம் முகமதுகான்.

    கொடும் போர் நடந்தது. போரில் வீர மரணம் அடைந்தான் தேஜ்சிங். அவனது மனைவி ராணிபாய் தீப்பாய்ந்து உயிர் விட்டார். முகமதுகானும் போரில் உயிரிழந்தான். அவனுடைய குதிரை நீலவேணியும் கொல்லப்பட்டது.

    நீலாம்பூண்டி என்னும் சிற்றூரில் தேஜ்சிங்கின் சமாதி உள்ளது. அருகிலேயே முகமதுகானுக்கும் அவனுடைய குதிரை நீலவேணிக்கும்.

    அன்புடன்,
    ஜிரா

    111/365

     
    • Arun Rajendran 4:08 pm on March 22, 2013 Permalink | Reply

      தமிழ் வகுப்புல வரலாறு பாடத்த நடாத்திக் காட்டி இருக்கீங்க…ஒரு நல்லப் பாட்ட எடுத்து ஞாபகப்படுத்துனதுக்கு நன்றி…தேசிங்கு கதை அரசல் புரசலாத்தான் கேள்விப்பட்டு இருக்கேன்..சுருக்கமா நிகழ்வுகள கோர்த்து கொடுத்து இருக்கீங்க..நன்றிகள் ஜிரா..

      • GiRa ஜிரா 11:04 pm on March 23, 2013 Permalink | Reply

        தேசிங்குராஜனைப் பற்றிய விவரங்களைத் தேடுனா அதீத புனிதப்படுத்துதலோட பக்தி ஜாலம் கலந்துதான் விவரங்கள் கிடைச்சது. பிறகு வேறு இடங்களில் தேடித்தான் பெயர் முதற்கொண்டு சரியான தகவல்களைக் கொடுக்க முடிந்தது 🙂

    • Saba-Thambi 5:32 pm on March 22, 2013 Permalink | Reply

      சிறு வயதில் படித்த ராஜா தேசிங்குவையும் அவனது குதிரையயும் நினவு படுத்தியதற்கு நன்றி. ஆனால் அதன் பின்னால் இருந்த சோகம் இன்று தான் அறிந்தேன். வரலாறு வகுப்பிற்கு நன்றி.

      • GiRa ஜிரா 11:06 pm on March 23, 2013 Permalink | Reply

        ஒவ்வொரு வரலாற்று நாயகனுக்கும் பின்னாடி ஒவ்வொரு சோகம் இருக்கத்தான் செய்யுது. அதுதானே வரலாறு. படாதபாடு பட்டு ஆட்சியைக் காப்பாற்றி ஒப்படைத்த மங்கம்மாளையே சந்தேகப்பட்டு சோறு போடாமல் கொடுமைப் படுத்திய பேரனையும் கண்டதுதான் தமிழகம்

    • amas32 (@amas32) 7:14 pm on March 22, 2013 Permalink | Reply

      கார்த்திக் ராஜாவுக்குத் திறமை இருந்தும் வாய்ப்புகள் இல்லை என்பது என் எண்ணம். அவர் இசையமைப்பில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே அருமை. இந்தப் பாடலில் நடன அமைப்பும் நன்றாக இருக்கும். பூவா தலையா, காயா பழமா என்று வரிகள் வரும் பாடல்களை #4VariNoteல் எடுக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும்? சைலண்டா யாரும் கவனிக்காத போது எஸ்கேப் ஆகி தேசிங்கு ராஜா (Tej Singh Raja) பற்றி சரித்திரக் குறிப்பை அழகாகக் கொடுத்து சூப்பரா ஸ்கோர் செய்து விட வேண்டும்!:-)))) வாழ்க ஜிர!

      amas32

      • GiRa ஜிரா 11:08 pm on March 23, 2013 Permalink | Reply

        கார்த்திக் ராஜா திறமையுள்ள இசையமைப்பாளர். மாணிக்கம் என்ற முதற்படத்தில் பி.சுசீலாவைப் பயன்படுத்தி முற்றிலும் புதுமையாக ஒலிக்கச் செய்த இசையமைப்பாளர் அவர்.

        // பூவா தலையா, காயா பழமா என்று வரிகள் வரும் பாடல்களை #4VariNoteல் எடுக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும்? சைலண்டா யாரும் கவனிக்காத போது எஸ்கேப் ஆகி //

        என்னம்மா செய்யச் சொல்றிங்க? பாட்டுல எதாச்சும் நல்லது இருந்தா எடுத்துச் சொல்லாம போறதில்லையே. இல்லாதப்போ இந்த மாதிரி விவரங்களைச் சொல்ல பாடல்களைப் பயன்படுத்திக் கொள்கிறோம் 🙂

  • G.Ra ஜிரா 11:48 am on February 10, 2013 Permalink | Reply  

    மலையாளக் காற்று 

    தமிழ்மொழிக்கும் மலையாளத்துக்கும் நிறைய நெருக்கங்கள் உண்டு. அதனால்தானோ என்னவோ மலையாளப் படங்களில் தமிழ்ப்பாத்திரங்களும் தமிழ்ப்படங்களில் மலையாளப் பாத்திரங்களும் விரவிக்கிடக்கும். மணிச்சித்ரதாழு, ஒரு யாத்ராமொழி மற்றும் மேலேபரம்பில் ஆண்வீடு ஆகிய படங்கள் சிறந்த உதாரணம். தமிழிலும் நிறைய சொல்லலாம்.

    ஆனால் பாடல்கள்? மலையாளப் பாத்திரங்கள் கதையோடு ஒட்டி வருகையில்தான் மலையாளப் பாடல்கள் தமிழ்த்திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளன. ஆகையால் அந்தப் பாடல்களின் எண்ணிக்கை மிகக்குறைவு.

    அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் பி.பானுமதி பாடிய “லட்டு லட்டு மிட்டாய் வேணுமா” என்ற பாடலின் நடுவில் மலையாள வரிகளையும் பாடுவார். இதே கதை நீரும் நெருப்பும் படமாக வந்த போது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையில் எல்.ஆர்.ஈசுவரி “விருந்தோ நல்ல விருந்து” என்று பாடும் போது மலையாளத்து வரிகளையும் பாடுவார். இந்தப் பாடல்களைப் பற்றி Multi Cuisine Songs என்ற பதிவில் முன்பே பார்த்தோம்.

    பாரதவிலாஸ் என்றதொரு திரைப்படம் ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் வந்த போது அதில் மலையாள முஸ்லீமாக வி.கே.ராமசாமியும் அவரது மனைவியாக ராஜசுலோசனாவும் நடித்தார்கள். அந்தப் படத்தில் இடம்பெற்ற ”இந்திய நாடு என் வீடு” என்ற பலமொழிக் கதம்பப் பாட்டில் தமிழும் மலையாளமும் கலந்து எம்.எஸ்.விசுவநாதனும் எல்.ஆர்.ஈசுவரியும் பாடுவார்கள்.

    படச்சோன் படச்சோன் எங்கள படச்சோன்
    அல்லாஹு அல்லா எங்கள் அல்லா
    தேக்கு தென்னை பாக்குமரங்கள் இவிடே நோக்கனும் நீங்க
    தேயிலை மிளகு விளைவதைப் பார்த்து வெள்ளையன் வந்தான் வாங்க… படச்சோன் படச்சோன்

    அடுத்து வந்தது கே.பாலச்சந்தர் இயக்கத்தில் நான் அவன் இல்லை என்ற திரைப்படம். இது பல பெண்களை ஏமாற்றிய ஒருவனின் கதை. மலையாள தேசத்துக்கும் போகிறான் அவன். நீராடுகிறாள் ஒருத்தி. அவளோடு ஆட விரும்புகிறான். முள்ளை முள்ளால் எடுப்பது போல மலையாளத்து நாரியை மலையாளத்தால் எடுக்கிறான் அவன்.

    மந்தார மலரே மந்தார மலரே
    நீராட்டு களிஞ்ஞில்லே
    மன்மத்த ஷேத்ரத்தில் இன்னானு பூஜா நீ கூடவருனில்லே
    என்று அவள் பாடும் போது
    மன்மதன் இவிடத்தன்னே உண்டு
    என்று அவன் பாடத்தொடங்குவான்.

    ஜெயசந்திரனும் வாணிஜெயராமும் பாடிய இந்த இனிய பாடலுக்கு இசையமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன். இந்தப் பாடலில் “மன்மதன் இவிடத்தன்னே உண்டு” என்று ஜெயச்சந்திரன் பாடியதும் ஒரு அழகிய இசைக்கோர்ப்பு வரும். அதைத்தொடர்ந்து “ஓ எந்தோ” என்று எல்.ஆர்.ஈசுவரி சொல்வது மிக மிக அழகு.

    கடைசியில் சிலவரிகள் தமிழில் இருந்தாலும் இப்படி மலையாள மொழி தமிழ்ப் படத்தில் மிகச்சிறந்த இசையோடு வந்தது இதுவே முதன்முறை.

    இதே திரைப்படம் நான் அவனில்லை என்று பல ஆண்டுகளுக்குப் பின் எடுக்கப்பட்டது. அதில் இதே காட்சியமைப்பு உண்டு. ஆனால் மந்தாரமலரே பாடல் அளவுக்கு ஒரு கலைநயம் மிகுந்த பாடலாக இல்லை. கடலினக்கரே போனோரே என்ற மலையாளைப் பாடல்களைக் கேலி செய்வது போல பாடியிருப்பார்கள். சற்றும் கற்பனைத்திறம் இல்லாத இது போன்ற பாடல்கள் தமிழ்த்திரையிசையின் தேய்வுக்கு எடுத்துக்காட்டு.

    சரி. மறுபடியும் பின்னோக்கிச் செல்வோம். எழுபத்து ஒன்பதில் மீண்டுமொரு இனிய மலையாளப்பாடல் தமிழில் இளையராஜாவின் கைவண்ணத்தில் வந்தது. எம். ஜி. வல்லபன் எழுத, ஜென்சி ஆண்டனி என்ற கேரளநாட்டுப் பாடகியின் குரலில் “ஞான் ஞான் பாடனும் ஊஞ்ஞால் ஆடனும்” என்று தேவராஜ்-மோகன் இயக்கத்தில் பூந்தளிர் பூத்தது.

    கேரளத்துக்குச் செல்லும் சிவகுமாரின் பாத்திரம் அங்கிருக்கும் சுஜாதாவின் மீது காதல் கொள்கிறது. சுஜாதாவும் காதலை ஏற்றுக் கொள்ளும் போது அவரை ஓவியமாக வரையும் காட்சியில் இந்தப் பாடல் வரும். நல்ல பாடலாக இருந்தாலும் இதே படத்தில் வந்த “மனதில் என்ன நினைவுகளோ”, “வா பொன்மயிலே” மற்றும் “ராஜா சின்ன ராஜா” போன்ற பிரபல பாடல்களால் அமுக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.

    அதற்குப் பிறகு பெரிய இடைவெளி. ஏ.ஆர்.ரகுமான் வரவினால் தமிழில் இரண்டு பாடல்களில் மலையாளம் கலந்து வந்தது. முத்து திரைப்படத்தில் வரும் குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ என்ற பாடலில் “ஓமணத்திங்ஙள் கிடாவோ” என்ற சுவாதி திருநாளின் சாகித்யம் பயன்படுத்தப்பட்டது. இதுவொரு தாலாட்டுப் பாட்டு. அதே போல உயிரே திரைப்படத்தில் நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடலில் ”கொஞ்ஞிரி தஞ்ஞிக் கொஞ்ஞிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ” என்று மலையாள வரிகள் நடுநடுவாக வரும்.

    ஆனால் தனிப்பாடல் என்றால் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தில் வந்த ஆரோமோளே என்ற பாடலைத்தான் சொல்ல வேண்டும். கேரளத்துக்குக் காதலியைத் தேடிச் செல்லும் தமிழ்க் காதலனின் ஏக்கக் குரலாக ஒலித்தது அந்தப் பாடல்.

    பொதுவாகவே தமிழ்ப்பாடல்கள் கேரளத்தில் பிரபலம் ஆகும் அளவுக்கு மலையாளப்பாடல்கள் தமிழ்நாட்டில் பிரபலமாவதில்லை. அதற்குக் காரணம் சதுக்க காலத்து நடையும் எந்தப் பாட்டுக்குள்ளும் ஒளிந்திருக்கும் ஒருவித சோகமும் மென்மையாக ஒலிக்கும் ஆண்பாடகர்களின் குரலும் காரணம் என்பது என் கருத்து. ஆரோமோளே பாட்டில் ஏ.ஆர்.ரகுமான் அந்தச் சோகத்தை மெல்லியதாகப் புகுத்தியதும் கரகரப்பான பெண்குரல் போல ஆண்குரல் ஒலிக்கச் செய்திருப்பதும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

    இதற்கு நடுவில் ஒரு வித்யாசமான இனிய பாடல் ஆட்டோகிராப் வழியாக நமக்குக் கிடைத்தது. இந்த முறை இசையமைத்தவர் பரத்வாஜ். சிநேகன் எழுதி ஹரிஷ் ராகவேந்திராவும் ரேஷ்மியும் பாடிய ”மனசுக்குள்ளே காதல் வந்துச்சா வந்துச்சா” பாடல் அந்த பொழுதின் இனிய பாடலாக இருந்தது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பாடலில் கேரளக் காதலி மலையாளத்தில் பாடவும் தமிழ்க்காதலன் தமிழில் பாடவும் தொடங்கும். இருவருடைய உள்ளமும் இணைந்து விட்டது என்பதைக் காட்டுவது போல பாடல் முடியும் போது ஆண் மலையாளத்திலும் பெண் தமிழிலும் பாடுவதாக இருக்கும்.

    இத்தனை பாடல்கள் இருந்தாலும் அத்தனையிலும் உச்சப் பாடலாக நான் கருதுவது அந்த ஏழு நாட்கள் படத்தில் வரும் கவிதை அரங்கேறும் நேரம் பாடலைத்தான்.

    தமிழில் எடுக்கப்பட்ட படம் பின்னால் எல்லா மொழியிலும் எடுக்கப்பட்டது என்பது அந்தக் கதையமைப்பின் சிறப்பையும் கே.பாக்கியராஜின் இயக்கும் திறமையையும் சொல்லும்.

    மேலே இத்தனை பாடல்களைப் பட்டியல் இட்டிருக்கிறோம். ஆனால் எந்தப் பாத்திரமும் நமக்கு மனதில் தங்காதவை. ஆனால் பாலக்காட்டு மாதவன் நாயரை தமிழ் சினிமா விரும்பிகள் மறக்க முடியுமா? சரியோ முறையோ குறையோ பிழையோ, அந்தப் பாத்திரம் ஓட்டைத் தமிழில் சொல்லும் “எண்டே காதலி நிங்கள் மனைவியாகும். ஆனால் நிங்கள் மனைவி எனிக்கி காதலியாக மாட்டாள்” என்ற வசனம் அவ்வளவு பிரபலமானது.

    அப்படியொரு பாத்திரத்துக்கு “கவிதை அரங்கேறும் நேரம்” பாடல் மிகப் பொருத்தம். பாடலின் தொடக்கத்தில் ஜெயச்சந்திரனின் ஆலாபணை ஒன்று போதும். அது முடித்து ஷப்த ஸ்வரதேவி உணரு என்று பாடல் தொடரும் பொழுது மீளா இசைச்சுழலில் நாம் மூழ்கிவிடுகிறோம்.

    இந்தப் பாடலை எழுதியது யார் தெரியுமா? இந்தப் படத்தில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய “தென்றல் அது உன்னிடத்தில்” என்ற பாடலும் வைரமுத்து எழுதிய “எண்ணில் இருந்த ஈடேற” என்ற பாடலும் மிகமிகப் பிரபலம்தான். ஆனால் அந்தப் பாடல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்ட இந்தப் பாடல் அந்த அளவுக்குப் பிரபலமாகாத குருவிக்கரம்பை சண்முகம் அவர்களால் எழுதப்பட்டது. அவர் திறமைக்கு இந்த ஒரு பாட்டு எடுத்துக்காட்டாய் எப்போதும் நிற்கும்.

    இந்தப் படத்தில் இன்னொரு அழகான பாட்டு உண்டு. “மனசுக்குள்ளே காதல் வந்தல்லோ” பாடலைப் போல தமிழும் மலையாளமும் கலந்த பாடல். ஆனால் படத்தில் இடம் பெறவில்லை. ஏனென்று தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடலைக் கேட்ட யாரும் இந்தப் பாடலில் மயங்காமல் இருக்கவே முடியாது. ஜெயச்சந்திரனும் வாணி ஜெயராமும் பாடிய இந்தப் பாடலின் தமிழ் வரிகளைக் கண்ணதாசன் எழுதியிருக்கிறார். மலையாள வரிகளை எழுதியவர் தெரியவில்லை. மெல்லிசை மென்னரும் இந்தப் பாடலை வேறு எந்தப் படத்திலும் பயன்படுத்தாதது நமக்கெல்லாம் இழப்பே. இந்தப் பாடலின் தாளமாக ஒலிக்கும் செண்டை மேளங்களின் பயன்பாடு மிகமிக நேர்த்தியானது. நல்லவேளையாகப் பாடலின் ஒலிவடிவம் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

    இப்படிப் பட்ட பாடல்களை நாம் ரசித்துக் கேட்கிறோம் என்பதே நமக்கு மகிழ்ச்சியானது.

    இந்தப் பதிவில் உள்ள பாடல்களைப் பார்க்க கேட்க….

    மந்தார மலரே மந்தார மலரே (நான் அவன் இல்லை) – http://youtu.be/46KA5mwksMs
    கடலினக்கர போனோரே (நான் அவன் இல்லை-ரீமேக்) – http://youtu.be/V_tlLfligkw
    இந்திய நாடு என் வீடு (பாரதவிலாஸ்) – http://youtu.be/kG2Get7rZuU
    ஞான் ஞான் பாடனும் (பூந்தளிர்) – http://youtu.be/S0dXtaX0FX0
    குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ (முத்து) – http://youtu.be/C89P-eN9CCw
    நெஞ்சினிலே நெஞ்சினிலே (உயிரே) – http://youtu.be/YhmsG_2yudk
    ஆரோமோளே (வின்னைத் தாண்டி வருவாயா) – http://youtu.be/_9exfKUDt6Y
    மனசுக்குள்ளே காதல் வந்துச்சா (ஆட்டோகிராப்) – http://youtu.be/KLQk4jacuVk
    ஷப்த ஸ்வரதேவியுணரு (அந்த ஏழு நாட்கள்) – http://youtu.be/OvSdzh2S12w
    ஸ்வர ராக சுத தூகும் (அந்த ஏழு நாட்கள்) – http://youtu.be/MqcbOgkS4m0

    அன்புடன்,
    ஜிரா

    071/365

     
    • gbsivakumar 12:31 pm on February 10, 2013 Permalink | Reply

      manasukkule thaagam vanthucha song written by snehan. Not pa.vijay

      • என். சொக்கன் 5:33 pm on February 10, 2013 Permalink | Reply

        Corrected now, Thanks for pointing out the info error

    • Rajnirams 9:50 am on February 11, 2013 Permalink | Reply

      super.அபாரம்.

      • Kaarthik Arul 2:30 pm on July 16, 2013 Permalink | Reply

        How come sundari neeyum sundaran nyAnum from MMKR is missing in this post?

    • Kana Praba 4:55 pm on July 16, 2013 Permalink | Reply

      kalakkals

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel