Updates from March, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • G.Ra ஜிரா 11:17 am on March 29, 2013 Permalink | Reply
    Tags: இந்திரா, பூரணி, மலேசியா வாசுதேவன்   

    கருணை உள்ளமே! 

    இரண்டாயிரத்துச் சொச்ச ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தை பிறந்தது. உலகத்துப் பிள்ளைகளெல்லாம் பாலுக்கழுத போது இந்தப் பிள்ளை மனிதரைப் பிடித்த ஊழுக்கழுதது.

    அந்தப் பிள்ளை வளர்ந்தாலும் குழந்தை உள்ளத்தோடுதான் இருந்தது. நல்லதைச் சொன்னது. அல்லதைத் தவறென்று கைவிடச் சொன்னது. நோய் பிடித்து நொந்தவர்களைக் குணப்படுத்தி வாழ்வித்தது. இறைவன் பெயர் சொல்லி பணம் செய்தல் தவறென்று போதித்தது.

    நல்லதைச் சொன்னவரும் நல்லதைச் செய்தவரும் அல்லோரின் வெறுப்புக்கு ஆளாவது அன்றும் நடந்தது. கட்டி இழுத்து வரப்பட்டு முள் பதித்த சாட்டையால் முதுகில் குருதிக் கோடுகள் வரையப்பட்டன. முள்ளால் முடிசெய்து தலையில் அழுத்தி மூளை வரை குத்தப்பட்டது. பெருமரத்துக் கட்டைகளில் சுமக்க முடியாத சிலுவை செய்து தோளில் ஏற்றப்பட்டது.

    தசை கிழிய குருதி வழிய உலகம் கதறக் கதற ஊர்வலம் கொண்டு போகப்பட்டான் அந்த ராஜகுமாரன். ஆம். பரிசுத்த ஆவி தந்த பிதா சுதன் அவன். ஏசு என்று இன்று நம்மால் அழைக்கப்படுகின்ற பரலோக சாம்ராஜ்யத்து அரசன் தான் அன்று கொடுமைக்கு ஆளான அந்த தேவகுமாரன்.

    இத்தனை கொடுமைகளைப் பட்டாலும் அதைச் செய்தவர்களைச் சபியாது “ஆண்டவரே இவர்கள் செய்கின்ற பாவம் அறியாதவர்கள். இவர்களை மன்னியுங்கள்” என்று வேண்டியதாம் அந்தக் கருணையுள்ளம்.

    கல்வாரி மலையிலே குற்றமிழைத்த இரு திருடர்கள் நடுவினிலே சிலுவையில் ஏற்றப்பட்டு உயிர் போகும் தருணத்திலும் “ஏலி ஏலி லாமா சபாச்தானி, ஆண்டவரே ஆண்டவரே என்னை ஏன் கைவிட்டீர்” என்று மட்டும் கேட்டது அந்த எளிய நெஞ்சம். உயிர் போய் விட்டதா என்று சோதிக்க அந்த நெஞ்சிலே ஒருவன் ஈட்டியை இறக்கினானாம்! ஐயோ! பாவிகளே! ஏன் செய்தீர் அந்தக் கொடுமை! நினைத்தால் இன்று கூடக் கலங்குகிறதய்யா நெஞ்சம்!

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்வானை வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று வள்ளுவன் எழுதியதை உலகில் முதலில் நிரூபித்தான் அந்த ராஜகுமாரன். தேவகுமாரனாய் மண்ணுக்கு வந்து மாண்டவன் பரலோகத்துக்கே அரசனாய் மீண்டு வந்தான். அப்படி ஆண்டவராகிய ஏசு கிருஸ்து உயிர்த்தெழுந்த நன்னாளுக்கு ஈஸ்டர் என்று பெயரிட்டு உலகம் கொண்டாடுகிறது.

    உலகமெங்கிலும் பலமொழிகள் புகழ்பாடும் ஆண்டவர் ஏசுகிருஸ்துவின் மேல் தமிழிலும் பாடல்கள் உண்டு. தமிழ்த் திரைப்படங்களிலும் பாடல் உண்டு.

    தேவன் கோயிலிலே யாவரும் தீபங்களே
    பாவிகள் யாருமில்லை பேதங்கள் ஏதுமில்லை
    மேரியின் பூமணி மேவிய கோயிலிலே
    முத்தினமே ரத்தினமே சித்திரமே சிறுமலரே
    படம் – வெள்ளை ரோஜா
    பாடல் – வாலி
    பாடியவர் – மலேசியா வாசுதேவன்
    இசை – இசைஞானி இளையராஜா
    பாடலின் சுட்டி – http://youtu.be/9hgnW6jbwTU

    இந்தப் பாடல் ஆண்டவருடைய அன்பும் அருளும் உலகத்து உயிர்கள் அனைத்துக்கும் உரியது என்று சொல்கிறது. செய்த தவறுகளை உணர்ந்து திருந்தி ஆண்டவரிடத்தில் மன்னிப்பு கேட்டால் பாவிகள் யாருமில்லை என்பதும் உண்மைதானே. அதற்கும் ஒரு பாடல் தமிழ்த்திரைப்படத்தில் உண்டு.

    தேவனே எம்மைப் பாருங்கள்
    என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்
    ஆயிரம் நன்மை தீமைகள்
    நாங்கள் செய்கின்றோம் நீங்கள் அறிவீர் மன்னித்தருள்வீர்
    ஓ! மை லார்ட் பிளீஸ் பர்டன் மீ!
    படம் -ஞான ஒளி
    பாடல் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    பாடலின் சுட்டி – http://youtu.be/kucQ0fIi7-k

    நாம் செய்த குற்றங்களை உணர்ந்து ஆண்டவரிடத்தில் மண்டியிட்டு வணங்கினால் உள்ளத்து வருத்தத்தை நீக்கி நம்மைத் திருத்தி நல்வழிப் படுத்துவார். அப்படி உள்ளம் உயிரும் அன்பில் ஊறி வாழும் போது நாமெல்லாம் ஆண்டவரின் திருச்சபையில் மணம் பரப்பிப் பூத்துக் குலுங்கும் மலர்களாகிறோம். வேத நாதத்தை உலகெல்லாம் எடுத்துச் சொல்லி ஒலிக்கும் மணிகளாகி புன்னகைக் கோலமிட்டு ராகங்கள் பாடி வாழ்வெல்லாம் தோத்திரம் பாடி ஆனந்தம் கொள்வோம்.

    தேவன் திருச்சபை மலர்களே
    வேதம் ஒலிக்கின்ற மணிகளே
    போடுங்கள் ஓர் புன்னகைக் கோலம்
    பாடுங்கள் ஓர் மெல்லிசை ராகம்
    படம் – அவர் எனக்கே சொந்தம்
    பாடல் – பஞ்சு அருணாச்சலம்
    பாடியவர் – இந்திரா & பூரணி
    இசை – இசைஞானி இளையராஜா
    பாடலின் சுட்டி – http://youtu.be/J-GYxlC_iZw

    ஆண்டவரே, மந்தையில் போகும் ஆடுகள் பாதை அறியாதவை. போகுமிடம் தெரியாதவை. ஒருவாய் புல்லுக்காக கல்லும் முள்ளும் நிறைந்த நிலத்தின் போகின்றவை. ஆனால் மேய்ப்பவன் அவைகளை வழிநடத்துவது போல நீரே மேய்ப்பராய் இருந்து எங்களை வழிநடத்துவீராக!

    மேய்ப்பவன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
    மன்னன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
    மேரிமாதா தேவமகனைக் காப்பது எப்படியோ
    தேவதூதன் நம்மை எல்லாம் காப்பது அப்படியே!
    படம் – கண்ணே பாப்பா
    பாடல் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    பாடலின் சுட்டி – http://youtu.be/4XiCi3Fa-Aw

    அன்புடன்,
    ஜிரா

    118/365

     
    • Priya Kathiravan 11:44 am on March 29, 2013 Permalink | Reply

      ப்படி ஆண்டவராகிய ஏசு கிருஸ்து உயிர்த்தெழுந்த நன்னாளுக்கு ஈஸ்டர் என்று பெயரிட்டு உலகம் கொண்டாடுகிறது. ஆம். இன்று அந்தப் புனித நாள்.

      உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் – வரும் ஞாயிறு; சிலுவையில் ஏற்றப்பட்ட புனித வெள்ளி தான் இன்று.

      • GiRa ஜிரா 9:01 am on April 1, 2013 Permalink | Reply

        ஆமாம். நீங்கள் சொல்வது சரிதான். தவறு திருத்தப்பட்டு விட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி 🙂

    • amas32 (@amas32) 8:35 pm on March 29, 2013 Permalink | Reply

      தேவன் கோவில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை என்ற பாடலும் you can include 🙂

      amas32

      • GiRa ஜிரா 9:01 am on April 1, 2013 Permalink | Reply

        அருமையான பாட்டு. சீர்காழி தேசிய விருது வாங்கிய பாட்டு.

    • Saba-Thambi 8:55 pm on March 30, 2013 Permalink | Reply

      தேவ மைந்தன் போகின்றான்

      • GiRa ஜிரா 9:03 am on April 1, 2013 Permalink | Reply

        அன்னை வேளாங்கண்ணி படத்திலுள்ள அருமையான பாடலைக் கொடுத்துள்ளீர்கள். நன்றி. தேவமைந்தன் போய்விடவில்லை. நம்மோடுதான் இருக்கிறான்.

        • Saba-Thambi 11:07 am on April 1, 2013 Permalink

          After posting the above link, I have learnt that Dr. Kamal Hasan has acted as Jesus on that clip.

  • G.Ra ஜிரா 10:45 am on February 19, 2013 Permalink | Reply  

    ஓணம்! 

    திருவோணத் திருநாளும் வந்தல்லோ” இளையராஜாவின் குரல் துள்ளலோடு அறை முழுதும் நிரம்பியது. தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது பாண்டியராஜன் நடித்த கவலைப் படாதே சகோதரா என்ற படம்.

    அதே போல ”சுந்தரி நீயும் சுந்தரி ஞானும் சேருண்ண நாள் திருவோணம்” என்று மைக்கேல் மதன காமராஜனிலும் ஒரு பாடல் உண்டு. இரண்டுமே மலையாளச் சாயலில் அமைந்த பாடல்கள்.

    திருவோணத் திருநாள் இப்போ கேரளத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு திருநாள். மாவலி என்னும் அசுரன் இந்திரபதவி வேண்டி யாகம் செய்தான். அந்த யாகம் வெற்றி பெறாமல் தடுக்க மகாவிஷ்ணு குள்ளமான வாமன அவதாரம் எடுத்து தானம் கேட்க வந்தார்.

    மூன்று அடிகள் தானம் கேட்டுப் பெற்ற பின் விசுவரூபம் எடுத்து மூன்று உலகங்களையும் இரண்டு அடிகளால் அளந்து கொண்டார். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மூன்றாவது அடிக்குத் தலை கொடுத்தான் மாவலி. அவனை அப்படியே அழுத்தி பாதாளத்துக்குத் தள்ளினார். அங்கு அவன் அரசு புரிவதாக நம்பிக்கை. அந்த மாவலி ஆண்டில் ஒருநாள் மண்ணுலகம் வருவதாக நம்பிக்கை. அந்த நாளே திருவோண நாள்.

    அந்த நாளில் வீடுகளை அலங்கரித்து மலர்க்கோலமிட்டு மாவலியை வரவேற்பார்கள். ஓணம் சதயா என்று சிறப்பான உணவு வகைகளைப் பரிமாறி சுவைப்பார்கள். ஆனைச் சண்டைகளும் பந்தயங்களும் கேரளத்தில் அமளிப்படும். கேரளத்தில் எந்தப் பண்டிகையை விடவும் ஓணம் பண்டிகை சிறப்பானது.

    மேலே சொன்னதெல்லாம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் சங்க இலக்கியம் படித்தவர்களுக்கு மட்டும் தெரிந்த சில தகவல்களை இங்கு எடுத்துச் சொல்கிறேன்.

    தலையாணங்கானத்து நெடுஞ்செழியன் பெயர் நாம் கேள்விப்பட்டதே. அவன் கூடிச் சண்டைக்கு வந்த மன்னர்களை வென்றான் என்பதும் தெரிந்ததே. அந்த நெடுஞ்செழியனைப் பாராட்டி மாங்குடி மருதனார் எழுதிய நூல்கதான் மதுரைக் காஞ்சி.

    போர் வெற்றியைப் பாராட்டியும் அந்த வெற்றி தலைக்கனமாக மாறிவிடாமல் இருக்க அறிவுரை சொல்லியும் எழுதப்பட்ட நூல் மதுரைக்காஞ்சி. சில பெரிய எழுத்தாளர்கள் சொல்வது போல வெறும் புகழ்ச்சி நூலல்ல.

    அந்த மதுரைக் காஞ்சி நூலில் மதுரையில் ஓணம் கொண்டாடப்பட்டது பற்றி வருகின்றது. தமிழ் மொழி வளர்ச்சியின் தலையூராக இருந்த மதுரையில் ஓணம் கொண்டாடப்பட்டிருக்கிறது. அதைச் சொல்லும் வரிகளை எடுத்துத் தருகிறேன் படியுங்கள்.

    கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
    மாயோன் மேய ஓண நல் நாள்

    இந்த வரிகளுக்கு என்ன பொருள்?

    திரண்டு நிமிர்ந்த அவுணரை(அசுரரை) வென்ற பொன்னாற் செய்த மாலையினையுடைய மாமையை உடையோன் பிறந்த ஓணமாகிய நன்னாள் என்று பொருள்.

    அதாவது மாயோன் என்னும் கடவுள் பிறந்த நாளாம் ஓணம் நன்னாள்.

    அந்த ஓண நாளில் மக்கள் மகிழ்ந்து கொண்டாடி யானைகளைப் பந்தயங்களுக்கு உட்படுத்தி மனைவி மக்களோடும் சுற்றத்தோடும் குடித்திருந்து மகிழ்ந்திருந்திருக்கிறார்.

    மேலே சொன்னவற்றை நான் சொல்லவில்லை. மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனார் சொல்லியிருக்கிறார்.

    கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
    மாயோன் மேய ஓண நல் நாள்,
    கோணம் தின்ற வடு ஆழ் முகத்த,
    சாணம் தின்ற சமம் தாங்கு தடக் கை,
    மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,
    மாறாது உற்ற வடுப் படு நெற்றி,
    சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
    கடுங் களிறு ஓட்டலின், காணுநர் இட்ட
    நெடுங் கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப,
    கடுங் கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர
    நூல் – பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக்காஞ்சி
    எழுதியவர் – மாங்குடி மருதனார்

    வாமனனாக வந்த கதையும் ஓங்கி உலகங்களந்த முறையும் இந்தப் பாடல் வரிகளில் இல்லை. அத்தோடு இன்றைய ஓணவிழா முறைகளில் இந்த விழாக் கொண்டாட்ட முறைகள் மாறுபட்டாலும், ஓணம் என்னும் பண்டிகை பாண்டிய நாட்டின் மதுரையிலும் கொண்டாடப்பட்டிருக்கிறது என்பது சான்றாகிறது.

    அன்புடன்,
    ஜிரா

    080/365

     
    • revathi narasimhan 7:18 pm on April 27, 2015 Permalink | Reply

      ஜிரா , பாடல் கொடுத்துவிட்டுக் கருத்துரை சொல்லவில்லையே சில சொற்கள் புரிகின்றன. சாணம் தின்ற என்றால் ,அதே போல சில வரிகளும் புரியவில்லை. இப்படித் தமிழ் கற்றவர்கள் எல்லாம் சும்மா இருந்தால் நாங்கள் என்ன செய்வோம். லின்கிற் கு நன்றி. துளசிதள த்திலி ருந்து வருகிறேன் மா. நலமாப்பா.

  • G.Ra ஜிரா 10:50 am on January 20, 2013 Permalink | Reply  

    கஸ்தூரி 

    நேற்றுதான் நண்பர் நாக இந்த 365பதிவுகள் பற்றிப் பேசியது போல இருக்கிறது. ஆனால் தொடங்கி ஐம்பது பதிவுகளாகி விட்டன. உடனிருந்து பதிவுகள் இடும் நண்பர் நாகாவுக்கும் நண்பர் மோகனுக்கும் ஐம்பதாம் பதிவு வாழ்த்துகள்.

    கஸ்தூரி திலகம் லலாட பலகே வக்ஷஸ்தலே கௌஸ்துபம்
    நாசாக்ரே நவ மூர்த்திகம் கரதலே வேணும்கரே கங்கணம்

    என்ன? வழக்கமாக தமிழ் திரைப்படப் பாடல்களோ தமிழ் இலக்கியப் பாடல்களோ இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? காரணமாகத்தான் இந்த வரிகளை இங்கே கொடுத்துள்ளேன்.

    இந்த வரிகள் கிருஷ்ண கர்ணாம்ருதம் என்ற வடமொழி நூலில் வரும் வரிகள். இந்த நூலை பதிமூன்றாம் நூற்றாண்டில் பில்வமங்களர் எழுதியுள்ளார்.

    இந்த வரிகளில் வரும் கஸ்தூரியைப் பற்றிதான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

    கஸ்தூரி திலகம் என்று கிருஷ்ணனைப் பற்றிச் சொல்கிறது. அதாவது கஸ்தூரியை நெற்றியில் திலகமாக இட்டுக் கொண்டவன் என்று பொருள்.

    கஸ்தூரி எப்படி முன்பெல்லாம் தயாரிக்கப்பட்டது தெரியுமா? கஸ்தூரி மானைக்(Musk Deer) கொன்று அதன் உடலிலிருந்து எடுக்கப்பட்டது. மணம் மிகுந்த கஸ்தூரிக்காகவே கொல்லப்பட்ட மான்கள் ஏராளம் ஏராளம். அப்படியான கஸ்தூரியை நெற்றியில் சூட்டிக் கொண்டவனே என்று புகழ்கிறது இந்த வரி. இன்றைக்கு கஸ்தூரி மான்களை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டு விட்டாலும் இயற்கையான கஸ்தூரி கிடைத்துக் கொண்டுதானிருக்கிறது. அதுவும் தங்கத்தை விட மிகமிக அதிகமான விலையில்.

    இந்த வரிகளை அவன் அவள் அது என்ற திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் மிகச்சரியான இடத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.

    பிள்ளையில்லாத மனைவி கோயிலில் கண்ணனை வேண்டிக்கொண்டிருக்கிறாள். மற்றொரு நாயகியோடு நாயகன் கிருஷ்ணலீலை நடத்திக் கொண்டிருக்கிறான்.

    ஆத்தோரம் கொடி வீடு
    அதன் மீது கோபாலன்
    அவனோடு நானாடுவேன்
    என்ற கண்ணதாசனின் வரிகளோடு இடையிடையே கஸ்தூரி திலகம் லலாட பலகே என்ற கிருஷ்ண கர்ணாம்ருத மந்திரங்களும் கலந்து வரும். இப்படி பாடல்களுக்கு நடுவில் மந்திர வரிகளைக் கொண்டு வந்ததை மெல்லிசை மன்னர் எப்போதோ பல பாடல்களில் செய்து விட்டார். இந்தப் பாடலின் வீடியோவும் ஆடியோவும் கிடைக்கவில்லை.

    சரி. பதிவின் மையக்கருத்தான கஸ்தூரிக்கு வருவோம். வேறு எந்தத் தமிழ்ப் பாடல்களில் எல்லாம் கஸ்தூரி வருகிறது என்று யோசித்துப் பார்த்தேன். கஸ்தூரியை விட கஸ்தூரி மானே தமிழ்க் கவிஞர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது.

    காலையில் திருமணம். மாலை முடிந்ததும் முதலிரவு. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்காமல் மனைவியின் மீது பாய்கிறான். புதுப் பெண். புது மணம். சட்டென்று அவன் பாட்டில் வருவது கஸ்தூரிமான் தான்.

    கஸ்தூரி மானே கல்யாணத் தேனே
    கச்சேரி பாடு வந்து கைத்தாளம் போடு
    பாடல் – வைரமுத்து
    பாடியவர்கள் – கே.ஜே.ஏசுதாஸ் மற்றும் உமா ரமணன்
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – புதுமைப் பெண்
    பாடலைப் பார்க்க – http://www.youtube.com/watch?v=STm1SzZNY4Y

    பஞ்சு அருணாச்சலமும் கஸ்தூரிமான்களை விடவில்லை. அவள் ஒரு கண்டாங்கிக் கன்னி. அவள் மனதிலும் ஒரு காதலன். வந்தவன் அல்ல. இனிமேல் வரப் போகின்றவன். அவனைப் பார்த்தீர்களா என்று மலைவாழைத் தோப்பு முழுவதும் தேடுகிறாள். காட்டையும் மேட்டையும் கேட்டவள் கஸ்தூரிமான்களிடமும் கேட்கிறாள் அந்த அன்னக்கிளி.

    மச்சானைப் பாத்தீங்களா மலைவாழத் தோப்புக்குள்ளே
    ……………………..
    கஸ்தூரிக் கலைமான்களே அவரைக் கண்டாக்கச் சொல்லுங்களேன்
    பாடல் – பஞ்சு அருணாச்சலம்
    பாடியவர் – எஸ்.ஜானகி
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – அன்னக்கிளி
    பாடலைப் பார்க்க – http://www.youtube.com/watch?v=pqzzI855yns

    இன்னொரு பாடல். காதல் நெஞ்சங்கள் பாடுகின்றன. மாலை மயங்கும் நேரம். சோலைக் குயிலும் கூவும். அது மனிதக் குயிலாக இருந்தால் பாடும். அப்படிப் பாடுகிறது ஆண் குயில். பாடுவது ஏன் என்று கேட்டுப் பாடுகிறது பெண்குயில். பாடல் என்பது வெறும் வரிகளா? இல்லை. அந்தக் குயிலை வரவழைக்க இந்தக் குயில் அழைக்கும் குரல் அல்லவா. கஸ்தூரிமான் போன்ற தன் காதலியை அணைப்பதற்கு ஆசை கொண்ட குயிலின் பாட்டு அது.

    மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுது
    சோடிக் கருங்குயில் பாடிப் பறந்ததைத் தான் தேடுதோ
    ……………………………
    காவேரி ஆத்துக்குக் கல்லில் அணை
    கஸ்தூரிமானுக்கு நெஞ்சில் அணை… நான் போடவா (மாலைக் கருக்கலில்
    பாடல் – தெரியவில்லை
    பாடியவர் – எஸ்.ஜானகி மற்றும் கே.ஜே.ஏசுதாஸ்
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – நீதியின் மறுபக்கம்
    பாடலைப் பார்க்க – http://www.youtube.com/watch?v=V5XmIsjTGc8

    பெரிய மான்களைப் பற்றிப் பாடியது போதுமென்று வாலி நினைத்து விட்டாரோ என்னவோ மான்குட்டியைப் பற்றிப் பாட வந்துவிட்டார். குழந்தைகளின் அழுகையைத்தான் நம்மால் தாங்க முடிவதில்லையே. அப்படி அழும் தன் மகளைப் பார்த்து கஸ்தூரிமான் குட்டியே என்று அழைத்து தகப்பன் பாடுகிறான். ஒருவேளை தன்னுடைய மனைவியை கஸ்தூரிமான் என்று பாராட்டுகிறானோ?

    கஸ்தூரி மான்குட்டியாம்
    அது கண்ணீரை ஏன் சிந்துதாம்
    உனை ஆவாரம் பூ தொட்டாதோ
    அதில் அம்மாடி புண் பட்டதோ
    பாடல் – வாலி
    பாடியவர்கள் – ஜெயச்சந்திரன் மற்றும் கே.எஸ்.சித்ரா
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – ராஜநடை
    பாடலைப் பார்க்க – http://www.youtube.com/watch?v=_-WYic5_jb4

    இன்னும் எத்தனையெத்தனை கஸ்தூரி பாடல்கள் உங்களுக்குத் தெரியும்?

    அன்புடன்,
    ஜிரா

    050/365

     
    • N.Ramachandran 11:23 am on January 20, 2013 Permalink | Reply

      “கஸ்துரி”என்பதற்கான தங்கள் விளக்கம் அருமை.ஆச்சர்யமாகவும் இருந்தது.நன்றி.
      கஸ்துரி மான் ஒன்று பலர் கண்பார்வையில் இன்று என்ற சங்கர்லால் படப்பாடல் ஜானகியின் குரலில் இனிமையான ஒன்று.மேலும் வயசுப்பொண்ணு என்ற படத்தில் முத்துலிங்கம் எழுதிய காஞ்சி பட்டுடுத்தி பாடலில் கஸ்துரி போட்டு வெச்சு தேவதை போல் நீ நடந்து வரவேண்டும் என்ற இனிய பாடலும் உண்டு.”மாலை கருக்கலில் பாடல்
      வாலி அல்லது கங்கை அமரன் என்று நினைக்கிறேன்,உறுதியாக தெரியவில்லை. நன்றி.

    • psankar 11:41 pm on January 20, 2013 Permalink | Reply

      I thought something about actress Kasthuri 😉 emaandhutten 🙂

    • Saba-Thambi 8:08 pm on January 21, 2013 Permalink | Reply

      How is kasthuri obtained nowadays? (ie; without killing deer)

    • amas32 10:23 pm on January 21, 2013 Permalink | Reply

      கஸ்தூரி திலகம் லலாட பலகே….. எனக்கு மிகவும் பிடித்த கண்ணனைத் துதிக்கும் சமஸ்க்ரித வரிகள். அதைப் பாடலின் இடையில் புகுத்தி இசையமைத்திருப்பதது இசையமைப்பாளரின் திறனைக் காட்டுகிறது 🙂

      amas32

    • suri 12:29 am on February 26, 2013 Permalink | Reply

      malai karukkallil by pulamai pitthan

  • mokrish 10:46 am on January 5, 2013 Permalink | Reply  

    ஆடை கட்டி வந்த… 

    பெண்ணை வர்ணிக்கும் பாடல்கள் பொதுவாக அவள் உடை பற்றி பேசும். வெவ்வேறு காலகட்டங்களில் வந்த பாடல்கள் அன்றைய ரசனைகளையும் விருப்பங்களையும் சார்ந்து இருக்கும். உடை பற்றிய பாடல் என்றால் முதலில் நினைவுக்கு வருவது

    பாவாடை தாவணியில் பார்த்த உருவமா

    இது பூவாடை வீசி வர பூத்த பருவமா

    https://www.youtube.com/watch?v=XMEJZbkQCBE

    இந்த உடை ஒரு பெண்ணின் வயதையும் தோரயமாக விவரிப்பதால், கவிஞர் பழைய நினைவுகளை அசைபோட ஒரு Pivot ஆக எடுத்துக்கொள்கிறார். அந்த நாளில் ஒரு பெண் வேறு ஆடை அணிந்தால்

    பட்டுப் பாவாடை எங்கே

    கட்டி வைத்த கூந்தல் எங்கே

    பொட்டெங்கே பூவும் எங்கே சொல்லம்மா… சொல்லம்மா…

    என்று கேள்வி வருகிறது. வைரமுத்து அந்தி மழை பொழியும்போது தாவணி விசிறிகள்தான் வீசுகிறார். சமீபத்தில் ஒரு கவிஞர் வீட்டுக்கு வந்ததும் தாவணி போட்ட தீபாவளி தான்

    பெண்ணின் சின்ன சின்ன ஆசையில் சேலை கட்ட வேண்டும் என்பதும் உண்டு.வாழ்வின் அடுத்த நிலையில் பெண் சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரும் சித்திர கைத்தறி சேலை கட்டும்பொழுது கவிஞன் தன கற்பனைக்கு றெக்கை கட்டி விடுகிறான். புடவையின் தேர்ந்த மடிப்பு விசிறி வாழைகள் என்று ஒரு பெண் கவி சொல்ல ஆண் கவியோ நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டி என்று கிறங்குகிறான். புலமைப்பித்தன் சேலை சோலையே என்றும் வைரமுத்து சின்னப்பொண்ணு சேலை செண்பகப்பூ போல என்றும் பஞ்சு அருணாசலம் பட்டு வண்ண சேலைக்காரி என்றும் – பல வரிகள் சேலை மகிமை சொல்லும்.

    பழனி பாரதி ‘சேலையிலே வீடு கட்டவா சேர்ந்து வசிக்க’ என்று ஒரு வசீகரமான கேள்வி கேட்கிறார். வைரமுத்து தன் பங்கிற்கு

    சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு

    கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா

    என்று கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் ரேஞ்சுக்கு ஆதங்கப்பட்டு

    சொல்லிவிட்டு இன்னொரு பாடலில் உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்ததே என்பதை கம்பன் பாடாத சிந்தனை என்று அழகாக பொய் சொல்லுகிறார். பரவாயில்லை கவிதைக்கு பொய் அழகுதானே.

    செந்தமிழ் நாட்டு தமிழச்சி சேலை உடுத்த தயங்கி சட்டென்று சுரிதாருக்கு மாறியவுடன் கவிஞர்கள் அதை வர்ணிக்க – சுரிதார் அணிந்து வந்த சொர்கமே என்று பாட்டெழுத வைரமுத்து

    குல்முஹர் மலரே குல்முஹர் மலரே கொல்லப் பார்க்காதே உன் துப்பட்டா வில் என்னை கட்டிதூக்கில் போடாதே தூக்கில் போடாதே தூக்கி எரியாதே

    என்று துப்பட்டாவிடம் பயப்படுகிறார்

    பாவாடையும் தாவணியும், பட்டு, சுங்கிடி கைத்தறி கண்டாங்கி சேலை, சுரிதார் துப்பட்டா -என்னடா இது பழைய பஞ்சாங்கம் என்று வெகுண்டெழும் வாலி

    அக்கடான்னு நாங்க உடைபோட்டா

    துக்கடான்னு நீங்க எடை போட்டா

    தடா உனக்குத்தடா

    என்று அதிரடியாக Section 144 பரிந்துரை செய்கிறார். https://www.youtube.com/watch?v=u6zywS5ptm4

    தொடர்ந்து பிரபுவின் நகைக்கடை புரட்சி போல்

    திரும்பிய திசையிலே எங்கேயும் கிளாமர்தான்

    நான் போட்ட டிரஸ்சுகளை பிலிம் ஸ்டாரும் போட்டதில்லை

    மடிசாரும் சுடிதாரும் போயாச்சு

    ஓரங்கட்டு ஓரங்கட்டு

    உடையெல்லாம் ஓரங்கட்டு

    என்று கேட்பவர்களை மிரள வைக்கிறார்.

    இப்போதெல்லாம் ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹலோ சொல்லி கைகுலுக்க என்று வரிகள். இன்றைய டா போட்டு பேசும் da Vinci ஓவியங்கள் எல்லாம் விவேக் சொல்வது போல மாடர்ன் டிரஸ் மகாலக்ஷ்மிகள் தான்

    திரைப்பாடல்கள் முடிந்த வரை நம் வாழும் சமுதாயத்தை பிரதிபலிக்க தவறவே இல்லை!

    நா.மோகனகிருஷ்ணன்

    035/365

     
    • niranjanbharathi 11:54 am on January 5, 2013 Permalink | Reply

      பாலாடை கட்டி நிற்கும் மேலாடை பற்றிக்கூறும் பாவாடை ரொம்பவே அழகு….

    • @npodiyan 8:49 pm on January 6, 2013 Permalink | Reply

      கலக்கல்!

    • amas32 (@amas32) 3:32 pm on January 13, 2013 Permalink | Reply

      இப்பொழுது பரவாயில்லை திரும்ப திரும்ப தாவணி பேஷன் ஆகி வருகிறது 🙂 நல்ல அலசல்! 🙂

      amas32

    • DEVARAJAN 4:54 pm on January 16, 2013 Permalink | Reply

      nice writing style

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel