Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • என். சொக்கன் 11:13 pm on November 30, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள் 

    முன்பெல்லாம் நம் தமிழ் திரைப்படங்களில்  குழந்தைகளுக்கு நாயகர்கள் அறிவுரைக் கருத்துகளைக் கூறும் பாடல்கள் நிறைய இடம் பெறும். அந்தப் பாடல்களில் உள்ள நற்கருத்துகள் பல பிஞ்சு மனங்களில் பசுமரத்தாணிபோல பதிந்து நல்வாழ்விற்கு வழிவகுக்கும் ஆற்றல் கொண்டவை. அது போன்று பல பாடல்கள் வந்திருந்தாலும் என்றும் மனதில் நிற்கும் சில பாடல் வரிகள்:
    “பாலுட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்-அறிவூட்டும் தந்தை நல்வழி காட்டும் தலைவன்
    துணையாக கொண்டு நீ நடைபோடு இன்று-உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று”
    கிளி போல பேசு இளங்குயில் போல பாடு-மலர் போல சிரித்து நீ குறள் போல வாழு
     மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்-மெய்யான அன்பே தெய்வீகமாகும்”
    : இது காவியக்கவிஞர் வாலியின் எளிமையான சக்தி மிகுந்த வரிகள் கொண்ட “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே”பாடல்.
    அடுத்து கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகளை பாருங்கள்:
    “அறம் செய்ய விரும்பு என்றாள் ஔவை-தருமம் செய்யுங்கள்
       அன்பே தெய்வம் என்றார் பெரியோர் -அன்புடன் வாழுங்கள்
      யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள்
       யாரும் பொய்யை சொன்னாலும் நீங்கள் மெய்யை சொல்லுங்கள்
      நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே”!

    எப்படிப்பட்ட வரிகள் பாருங்கள், “தங்கங்களே நாளை தலைவர்களே நம் தாயும் மொழியும் கண்கள்”பாடல்.

    அடுத்து  கவிஞர் வைரமுத்து அவர்களின் வரிகள்-
    குழந்தைகளுக்கு யானை,குரங்கு”கதையை கூறி “வினை விதைத்தவன் வினை அறுப்பான்-திணை விதைத்தவன் திணை அறுப்பான்,நன்மை ஒன்று  செய்தீர்கள் நன்மை விளைந்தது-அட தீமை ஒன்று செய்தீர்கள் தீமை விளைந்தது-தீமை செய்வதை விட்டு விட்டு நன்மை செய்வதை தொடருங்கள்”என்று எளிமையாக அறிவுறுத்தும் “ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப்பக்கம் வந்தானாம்”..
    புதிய இயக்குனர்களும் தங்கள் படங்களில் இது போன்ற நல்ல கருத்துக்களை தங்கள் படங்களில் புகுத்துவது ஆரோக்கியமான வளர்ச்சியாக அமையும். நன்றி
    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்:
                                                                                பாடல்:             நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
                                                                                படம் ”              நம் நாடு
                                                                                எழுதியவர்:   கவிஞர் வாலி
                                                                                இசை :             கே.வி. மகாதேவன்
                                                                                 பாடியவர்:      டி.எம்.சௌந்தர்ராஜன்
                                                                                 சுட்டி :                http://youtu.be/Th9bUtTIRGY
                                                                                 பாடல்:             தங்கங்களே நாளை தலைவர்களே
                                                                                 படம் :                என்னைப்போல் ஒருவன்
                                                                                 எழுதியவர்:     கவியரசர் கண்ணதாசன்
                                                                                  இசை:                எம்.எஸ்.விஸ்வநாதன்
                                                                                  பாடியவர் :        டி.எம்.சௌந்தரராஜன்
                                                                                  சுட்டி:                  http://youtu.be/6FQEFdXE3Io
                                                                                  பாடல்:                ராஜா சின்ன ரோஜாவோடு
                                                                                   படம்:                   ராஜா சின்ன ரோஜா
                                                                                   எழுதியவர்:       கவிஞர் வைரமுத்து
                                                                                    இசை:                  சந்திரபோஸ்
                                                                                    பாடியவர்கள்:   எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர்
                                                                                     சுட்டி:                    http://youtu.be/w9O4sdhxwos

    நா. ரஜினி ராமச்சந்திரன்

    பிறந்தது கடலூர், என்றாலும் வளர்ந்ததெல்லாம் சிங்காரச் சென்னைதான். ஒரு தனியார் நிறுவனத்தில் பணி. தற்போது பெங்களுரில் வசிக்கிறேன். ட்விட்டரில் என்னைப் பின்தொடர: @rajinirams

     
  • என். சொக்கன் 11:03 pm on November 30, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள் 

    சமீபத்தில் ஓர் பழைய பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தபோது கவிஞர் கண்ணதாசனின் வசனம் என் கவனத்தை ஈர்த்தது.  

    “ஊசிமுனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும் காசாசை போகாதடி” 

    கவியரசு கண்ணதாசனின் ஓர் மிகச் சிறப்பான அம்சம் எல்லா மதங்களையும் மதிக்கும் மனப்பாங்கு – இந்த முதிர்ச்சி எல்லோருக்கும் வருவதில்லை. மதத்தின் பரந்த அறிவுமுதிர்ச்சி மற்றைய மத நூல்களையும் படிப்பதனால் ஏற்படுகிற தெளிவு. அவருடைய கொள்கையில் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு சிற்றாறு.. சிற்றாறுகள் சேர்ந்து உருகவாக்குவது ஒரு மகா நதி.

    நாஸ்திகனாக இருந்து கண்ணனின் தாசனாக மாறிய முத்தையா தனது பாடல்களில் காட்சிக்கு தகுந்தவாறு மற்றைய மத கோட்பாடுகளையும் தாரளமாக அள்ளித் தெளிப்பது வழக்கம்.  இந்த வகையில் மேலே குறிப்பிட்ட வசனம் கிறிஸ்தவ விவிலிய நூலில் (Holy Bible) இருந்து எடுக்கப்பட்டது.

    இயேசு நாதருக்கும் ஓர் பெரிய பணக்காரனுக்கும் இடையே நடக்கும் சம்பவம், மேற்கோளின் சுருக்கமான பின்னணி: (லூக்கா 18:18-25)

    பணக்காரன்: இயேசு நாதரே! நான் நித்திய வாழ்வை (Eternal life) பெறுவதற்கு என்ன செய்யவேண்டும்”

    இயேசு நாதர்: நீ பத்துக் கட்டளைகளையும் கடைப் பிடிக்கிறாயா?

    பணக்காரன்:  ஓ! நான் சிறுவயது முதல் இந்த கட்டளைகளை கடைப்பிடிக்கிறேன்

    இயேசு நாதர்: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறை உண்டு. உனக்கு உள்ள எல்லா ஆஸ்திகளையும் விற்று ஏழைகளுக்கு கொடு அப்போது உனக்கு பரலோகத்தில் பொக்கிஷம் உண்டாகும். அதற்கு பின் என்னைப் பின் பற்றி வா!

    இதைக்கேட்ட அந்த செல்வந்தன் மிகவும் துக்கமடைந்ததைப் பார்த்த இயேசு “ ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்” என்றார்.

    இந்த சிறு சம்பாஷனை புதிய ஏற்பாட்டில் உள்ள முதல் 3  சுவிசேடகங்களும் குறிக்கின்றன. ஆங்கிலத்தில் இதை camel and the eye of the needle என்று பொதுவாக குறிப்பிடுவார்கள். நடக்கமுடியாத சம்பவத்தை விவரிப்பதற்கு இந்த வசனம் ஓர் எடுத்துக்காட்டு. கவியரசு கண்ணதாசன் இதை பண ஆசையுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார்.

    இப்போது இந்த திரைப் பாடலை கேட்டுப் பாருங்கள். அர்த்தம் புரியும்.

    திரைப்படம்: பணத்தோட்டம்(1963)

    பாடல்: குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம்( மனத்தோடம் போதுமென்று)

    இசை: விஸ்வநாதன் -ராமமூர்த்தி

    பாடலாசிரியர் : கவியரசு கண்ணதாசன்

    பாடலின் சுட்டி:  http://www.youtube.com/watch?v=M1YnOtuff1c

    பிற்குறிப்பு: விவிலிய நூலின் ஒரு பகுதியான புதிய ஏற்பாடு (New Testament) கிரேக்க மூல மொழியில் இருந்து தமிழுக்கு முதன்முதலாக மொழி பெயர்க்கப்பட்டது. கவியரசு கண்ணதாசன் அவர்கள் இதன் மூன்றாவது புத்தகத்தை (லூக்கா சுவிசேடகம் – Gospel of Luke) தன்னுடைய பாணியில் யேசு காவியம் எனும் தலைப்பில் படைத்தது குறிபிடத்தக்கது.

    சபா- தம்பி

    சபா-தம்பி பிறந்து வளர்ந்தது இலங்கையில். கால் நூற்றாண்டு காலத்துக்குமுன்னால் ஆஸ்திரேலியாவில் குடியேறியவர், தற்போது பெர்த் நகரத்தில் வசிக்கிறார். தமிழார்வம் ஏராளம், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆங்கிலத்தில்மட்டுமே எழுதிவந்திருக்கிறார், கண்ணதாசனும் #4VariNoteம் தந்த ஊக்கத்தில் தமிழிலும் எழுதத் தொடங்கி, தொடர்ந்து எழுதிவருகிறார்.

    Twitter: @SabaThambi
     
    • kamala chandramani 11:44 am on December 1, 2013 Permalink | Reply

      மனிதனுக்கு காசு மீதுள்ள ஆசையைக் கண்ணதாசன் எத்தனை அழகாகச் சொல்லியுள்ளார்! விவிலிய நூலில் சொல்லியுள்ளவற்றை விளக்கியிருப்பது பொருத்தமாக இருக்கிறது. அனைவருக்கும் தெரியாத, இயேசுவுக்கும், பணக்காரனுக்கும் இடையே நடக்கும் சம்பவத்தை எழுதியதற்கு நன்றி.

    • amas32 3:18 pm on December 1, 2013 Permalink | Reply

      ஒரே நாலு வரி நோட்டில் ஒவ்வொரு பதிவாளரும் திரைப்பாடல்களின் நாலு வரிகளைக் கையாளும் விதம் அத்தனை வித்தியாசமாக உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை. ஆனால் சொல்ல வரும் கருத்துக்கள் அத்தனையும் அருமை.

      நீங்கள் பாடல் வரிகளுக்கும் விவிலயக் கருத்துக்கும் உள்ள கனெக்ஷன் பற்றி சொல்லியிருப்பது அருமை 🙂

      amas32

    • Saba-Thambi 8:44 pm on December 1, 2013 Permalink | Reply

      நன்றி kamala chandramani, amas32
      உங்கள் பின்னோட்டங்கள் எப்போதுமே உற்சாகமுள்ளவை.

  • என். சொக்கன் 9:22 pm on November 30, 2013 Permalink | Reply  

    இசைத் தமிழ் நீர் செய்த அருஞ்சாதனை 

    • படம்: காதல் மன்னன்
    • பாடல்: மெட்டுத் தேடி
    • எழுதியவர்: வைரமுத்து
    • இசை: எம். எஸ். விஸ்வநாதன்
    • பாடியவர்: எம். எஸ். விஸ்வநாதன்
    • Link: http://www.youtube.com/watch?v=N0XuO3alLV8
    மெட்டுத் தேடித் தவிக்குது ஒரு பாட்டு
    அந்தப் பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டு
    அதைக் கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா?
    இல்லை விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா?

    மெட்டுக்குப் பாட்டா அல்லது பாட்டுக்கு மெட்டா?

    இசைக்கு வரிகள் மேன்மை தருகின்றனவா? அல்லது வரிகளுக்கு இசையால் பெருமையா?

    தமிழின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் : கவிஞர் இணையை முன்வைத்துக் கேட்டால், கண்ணதாசனுக்கு விஸ்வநாதன் ஆதாரமா? அல்லது விஸ்வநாதனுக்குக் கண்ணதாசனா?

    இக்கேள்விக்கு ஒரு பதில்தான் இருக்கவேண்டுமா? பட்டிமன்றம் பாணியில் “இரண்டும்” என்று சொல்லமுடியாதா?

    தமிழில் இசை கொண்டாடப்பட்ட அளவு கவிதை கொண்டாடப்படவில்லை என்பது என் ஆதங்கம். குறிப்பாக திரைப்பாடல் வரிகள்!

    மானே, தேனே மீட்டர் வரிகளைத் தாண்டியும், சொல்லப்போனால் அந்தக் கட்டாயங்களுக்குள்ளாகவே படச் சூழலுக்கு இசைந்தபடி நம் திரைக் கவிஞர்கள் பெருஞ்சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். அவற்றைக் கம்பனோடும் இளங்கோவோடும் ஒப்பிட்டுத் தரக்குறைவாகப் பேசுவதைவிட, இதுவும் ஒரு கலை வடிவம் என ஏற்பதில் என்ன தயக்கம்?

    மற்ற கலைகளைப்போலவே இங்கும் பொழுதுபோக்கு உண்டு, உன்னதம் உண்டு, மொக்கைகளும் உண்டு. எல்லாவற்றையும் ரசிக்கும் மனம் இருக்கவேண்டுவதில்லை, வடிகட்டி வேண்டியதை எடுத்துக்கொள்ளலாம், எடுத்துக்கொள்ளவேண்டும்.

    ஏனெனில், மெட்டில்லாத பாட்டு, பாட்டில்லாத மெட்டு இரண்டையும்விட, மெட்டுடன் பாட்டு தனி சுகம். புரிந்தவர்கள் பாக்கியவான்கள்!

    தமிழின் அத்துணை திரைப் பாடலாசிரியர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி சொல்லி நாலு வரி நோட்டிலிருந்து விடை பெறுகிறேன் 🙂

    ***

    என். சொக்கன் …

    30 11 2013

    363/365

     
    • rajinirams 11:00 am on December 1, 2013 Permalink | Reply

      அருமை.”மானே,தேனே மீட்டர் வரிகளைத் தாண்டியும், சொல்லப்போனால் அந்தக் கட்டாயங்களுக்குள்ளாகவே படச் சூழலுக்கு இசைந்தபடி நம் திரைக் கவிஞர்கள் பெருஞ்சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். அவற்றைக் கம்பனோடும் இளங்கோவோடும் ஒப்பிட்டுத் தரக்குறைவாகப் பேசுவதைவிட, இதுவும் ஒரு கலை வடிவம் என ஏற்பதில் என்ன தயக்கம்?” -உண்மையான வரிகள்.
      தமிழ் திரையுலகில் மெட்டுக்கு பாட்டும் சரி,பாட்டுக்கு மெட்டும் சரி பாடல் வரிகளை விழுங்காத இசைக்கு எப்போதும் வெற்றி தான்.இதை தான் வாலி ஓரிரு முறை மேடையில் “தங்க தட்டில் வைத்த சிங்க பால்”என்று சொல்லியிருக்கிறார்.மெட்டுக்கு பாட்டு இல்ல துட்டுக்கு தான் பாட்டு என்று நகைச்சுவையாகவும் கூறியுள்ளார்.ஆனால் இது வரை என்னை ஆச்சர்யப்படுத்தியது கப்பலோட்டிய தமிழன் படத்திற்காக பாரதியாரின் பாடல்களுக்கு (“மெட்டுக்கு எழுதியது போலவே தோன்ற வைக்கும் “) இசையமைத்த திரு ஜி.ராமநாதன் அவர்கள் தான்.உண்மையிலேயே இசை மேதை. மேலும் பல இசையமைப்பாளர்களும் பாடல் வரிகள் வரும்போது அடக்கி வாசித்து பாடலுக்கும் கவிஞருக்கும் பெருமை தேடி தந்திருக்கிறார்கள்.
      பல நல்ல நல்ல பாடல்களை “நாலு வரி நோட்டில்” கொண்டு வந்து பரவசப்படுத்திய தங்களுக்கும் திரு ஜி.ராகவன்,திரு மோகனகிருஷ்ணன் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் தங்கள் அருமையான கருத்துக்களை பகிர்ந்து கொண்ட amas32, Uma Chelvan இருவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.

    • amas32 7:06 pm on December 2, 2013 Permalink | Reply

      //ஏனெனில், மெட்டில்லாத பாட்டு, பாட்டில்லாத மெட்டு இரண்டையும்விட, மெட்டுடன் பாட்டு தனி சுகம். புரிந்தவர்கள் பாக்கியவான்கள்!//

      This is the crux of 4varinote!

      தினம் ஒரு பா #365 முடிந்தபோது ஒரு வெற்றிடம் தோன்றியது. நீங்கள் #4varinote ஆரம்பித்தப் பொழுதும் முதலில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு வரவில்லை. ஆனால் நீங்கள் செய்த இந்தப் பணி மகத்தானது. இப்பொழுது இருக்கும் கவிஞர்களை ரசிக்க சொல்லி கொடுத்தீர்கள். சங்ககாலப் பாடல்கள் ஒரு வகை என்றால் இன்றைய திரைப்பாடல்கள் இன்னொரு வகை.

      மேலும் மேலும் புகழ் பெற வாழ்த்துகள் 🙂

      amas32

  • என். சொக்கன் 12:08 am on November 30, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு: நான் கண்ணாடிப் பொருளல்லவா! 

    பாடல் : கண்ணாமூச்சி ஏனடா

    படம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

    பாடலாசிரியர் :  வைரமுத்து

    இசை: எ.ஆர்.ரஹ்மான்

    பாடகர் : சித்ரா

    என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா ?

    எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா ?

    நெஞ்சின் அலை உறங்காதோ ?

    உன் இதழ் கொண்டு வாய்
    மூட வா என் கண்ணா…

    உன் இமைக் கொண்டு விழி
    மூட வா என் கண்ணா…

    உன் உடல் தான்
    என் உடையல்லவா….!

    காதலைப் பற்றியப் பாடல். எப்பொழுதுமே காதலை சொல்வதில் இரு பாலாருக்கும் தயக்கம் இருக்கும், ஏனென்றால் ஒருவரால் சொல்லப்பட்டக் காதல் மற்றவரால் நிராகரிக்கப்பட்டால் அது சொன்னவருக்கு வேதனை மட்டும் தராது, அவமானத்தையும் சேர்த்துத் தரும். சொல்லாமல் இருந்தாலும் மனம் கொந்தளித்துக் கொண்டே இருக்கும். ஆனால் பெரும்பாலான சமயம் காதல் வயப்பட்ட இருவருக்குமே ஒருவர் மற்றவரைக் காதலிப்பதுத் தெள்ளத் தெளிவாகவே தெரியும். 

    இது ஒரு பெண் பாடும் பாடல். அவள் இன்னும் காதலில் விழவில்லை ஆனாலும் தன் அக்காவின் காதல் நிலை கண்டு பாடும் பாடல். பெண் மனம் ஒரு உணர்ச்சிக் குவியல். ஆணுக்கு எல்லாமே ஒரு விளையாட்டு. பெண்ணுக்குக் காதல் ஒரு சீரியஸ் மேட்டர். மீனைக் ஆற்றில் பிடித்துத் திரும்பி நீரிலேயே விட்டு விளையாடுவதைப் போல பெண்ணிடம் சீண்டி விளையாடுவது ஆணுக்குக் கை வந்த கலை. ஆனால் அவளுக்கோ மனதை பறிகொடுத்துவிட்டால் எல்லாமே அவன் தான்.

    “எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா?” மிக முக்கியமான வரி. அவளே காதலன் பால் மயங்கி தனக்கென தனியாக எண்ணாமல் அவனைச் சார்ந்தே எண்ணத் தொடங்கிப் பிறகும் எனக்குத் தனியாக எண்ணங்கள் இல்லையா என்று கேட்பதில் நியாயமே இல்லை. ஆயினும் காதலனின் எண்ணங்களும் செயல்களும் அவள் உணர்சிகளுக்கு மதிப்புக் கொடுத்து நடக்கும்படி இருக்கவேண்டும் என்று அவள் நினைப்பதிலும் தவறேதும் இல்லை.

    நெஞ்சில் அடிக்கும் எண்ண அலைகள் கடலை விஞ்சும். அவன் எப்பொழுதும் என்னிடம் காதலுடன் இருப்பானா? வேறு பெண்ணைப் பார்த்து மயங்கி விடுவானோ? கடைசி வரை காதல் நிலைக்குமா? திருமணம் கைகூடுமா? நடுவில் கைவிட்டு விட்டுப் போய்விடுவானோ என்று ஆயிரத்தெட்டுக் கவலைகள்.

    இதில் தொடர்ந்து வரும் வரிகள் காதலன் எப்படி தன்னை சேர்ந்தவுடன் தான் தன் காதலுக்கே உத்தரவாதமே என்ற காதலி நினைக்கிறாள் என்ற பொருளில் வருகிறது. 

    //உன் உடல் தான்
    என் உடையல்லவா….!//
    நானே உன் உடையாக வேண்டும் -என்று சங்கத் தமிழ் வரிகள் நேரடியாக இல்லை! 
    ஆனால், நள வெண்பாவில் ஒன்று உள்ளது!

    —ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி
    இருவர் எனும் தோற்றம் இன்றிப் – பொருவெங்
    கனற்கேயும் வேலானும் காரிகையும் சேர்ந்தார்
    புனற்கே புனல்கலந்தாற் போன்று—-

    அதாவது நளன்-தமயந்தி, ஒருவர் உடம்பில் ஒருவர் ஒதுங்குகிறார்கள். அதாவது ஒருத்தர், இன்னொருத்தரோட உடம்பாகவே ஆகிவிடுகிறார்கள். அதைத் தான் இந்தப் பாடல் வரிகளும் சொல்கின்றன.

    மிக அருமையான இசை. சித்ரா தன் தேன் குரலில் உணர்ச்சிப் பொங்கப் பாடியிருகிறார். அதற்கேற்பத் திரைப்படத்தில் ஐச்வர்யா ராயின் நடனமும், முக்கியமாக அஜித்தும் தபுவும் மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன பாணியில் காதல் பார்வை பார்த்துக் கொள்வதும் பாட்டுக்குப் பெருமை சேர்க்கிறது.
     
    youtube link for the song : http://www.youtube.com/watch?v=5ftMtHBgKTc
    நள வெண்பா உதவி KRS  

    சுஷிமா சேகர்

    பிறந்தது பாண்டிச்சேரியில், வளர்ந்தது சென்னையில். கலிபோர்னியாவில் பத்து வருடங்களும் சிங்கப்பூரில் மூன்று வருடங்களும் இருந்துவிட்டுத் தற்போது வசிப்பது சென்னையில். குழந்தைகள் பிறந்த பிறகு MBA படித்தேன். நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் உண்டு. இணையத்துக்கு (டவிட்டருக்கு) வந்து இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. அதன் மூலம் எனக்குக் கிடைத்த நண்பர்களை எண்ணி மகிழ்கிறேன். இணையத்துக்கு வந்த பிறகுதான் தமிழ் பயில்கிறேன். நேசிப்பது என் தொழில், பொழுதுபோக்கு 🙂

    சுஷிமா சேகர் வலைப்பதிவு: http://amas32.wordpress.com/

     
    • rajinirams 10:32 am on November 30, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு.”வைர”வரிகளுக்கு பட்டை தீட்டியது போன்ற அருமையான விளக்கம்,உடல் தான் உடையல்லவா என்ற அற்புதமான வரிகளை நளவெண்பா வரிகளுடன் எடுத்துக்காட்டி நல்ல பதிவை தந்திருக்கிறீர்கள்.பாராட்டுக்கள். “உன் இமை கொண்டு விழி மூடவா” வரிகள் வாலியின் வரிகளை நினைவு படுத்தும்- இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ-இருக்கின்ற சுகம் வாங்க தடை போடவோ,மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ….

      • amas32 9:35 pm on November 30, 2013 Permalink | Reply

        மிக்க நன்றி. You are a connoisseur of 4varinote. So any appreciation from you is a big honour, thank you 🙂

        amas32

    • B.MURUGAN 11:21 am on November 30, 2013 Permalink | Reply

      அருமை, யாராவது சிலாகித்து சொல்லும்போதுதான் அந்த பாடலின, பாடல் வரிகளின் மகத்துவம் புரிகிறது

    • umakrishh 11:24 am on November 30, 2013 Permalink | Reply

      ஹா..பெண்ணின் மனதை உணர்ந்து எழுதிய,பாடியவங்களுக்கு கௌரவம் சேர்க்கும் விதமாக உணர்ந்து எழுதி இருக்கீங்க 🙂
      //காதலைப் பற்றியப் பாடல். எப்பொழுதுமே காதலை சொல்வதில் இரு பாலாருக்கும் தயக்கம் இருக்கும், ஏனென்றால் ஒருவரால் சொல்லப்பட்டக் காதல் மற்றவரால் நிராகரிக்கப்பட்டால் அது சொன்னவருக்கு வேதனை மட்டும் தராது, அவமானத்தையும் சேர்த்துத் தரும். சொல்லாமல் இருந்தாலும் மனம் கொந்தளித்துக் கொண்டே இருக்கும். ஆனால் பெரும்பாலான சமயம் காதல் வயப்பட்ட இருவருக்குமே ஒருவர் மற்றவரைக் காதலிப்பதுத் தெள்ளத் தெளிவாகவே தெரியும்.//
      முற்றிலும் உண்மை :))
      இப்படத்தில் எங்கே எனது கவிதையும் நல்லதொரு உருக்கமான பாடல்

      • amas32 9:33 pm on November 30, 2013 Permalink | Reply

        உண்மை தான் உமா, நன்றி 🙂

        amas32

    • kamala chandramani 11:42 am on November 30, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு. வாழ்த்துகள்.

    • pvramaswamy 11:42 am on November 30, 2013 Permalink | Reply

      Excellent choice of song. The lyrics, tune, singing style, and, all very well picturised. Aishwaya Rai, apart from her being the “Miss World”, was a model too. That is very visible in graceful movements in this song (and the songs in ‘iruvar’). You have a superb taste. I wanted to write about this song, but avoided, as I could be accused of being carried away… Yeah, I went to you tube once again! 🙂

      Now about your writing. Good style, good flow. Direct. As usual. You seem to have a thin layer of suspicion about the ‘ரொம்பவே பாவம்’ men. Luckily you have not been elected as the Chairma… sorry Chairperson of Indian Women’s Fedration! 😉

      • amas32 9:31 pm on November 30, 2013 Permalink | Reply

        Thank you PVR 🙂 So happy to see your comment 🙂 This song is got a wholesomeness like the Thillaana Mohanambal’s மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன, ஆனால் இக்காலத்திற்குடையது. நன்றி!

        amas32

        • to_pvr 9:54 pm on November 30, 2013 Permalink

          Yes.

    • Uma Chelvan 6:04 pm on November 30, 2013 Permalink | Reply

      Excellent write up !!!

      உங்க postம் commentsம் எப்பொழுதுமே மிகவும் நன்றாக இருக்கும். படிக்கும் காலத்தில், கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லும் நல்ல மாணவியாக இருந்து இருபீங்கனு நினைக்கிறேன். Though I don’t have an account, I regularly follow you in Twitter, மிகவும் மென்மையான போக்கு, அனைவரயும் மனம் திறந்து வாழ்த்தும் உயர்ந்த உள்ளம் ……..God Bless you and My best wishes for your Kids especially for your Daughter for a bright and Beautiful Future…

      “A Happy person is not a person in a certain set of circumstances, but rather a person with a certain set of Attitudes “……….Hugh Downs

      • amas32 9:26 pm on November 30, 2013 Permalink | Reply

        Thank You Uma Chelvan. I always wondered who you were as you are not on twitter. Happy to know you through this blog site. Your comments are always very distinctive and your song links a welcome and picturesque interlude 🙂 Thank you so much for your kind words. I wish you the very best in everything. I have a great admiration for doctors and their yeomen service.

        amas32

        • Uma Chelvan 10:36 pm on November 30, 2013 Permalink

          Thank you very much amas 32. With my busy schedule (if you look at the time, I post my comments are mostly around 2:00 AM) I cannot cope with the speed of twitter, might be easier after a while ??:). I am on Facebook, not active now a days though. Finally I found a “Niche” here. Thank you very much for your appreciation on my comments. Couple of times, I was baffled by twitter people ‘s comments. I know how to easily ignore/avoid people, some times unwanted/ unnecessary comments will make you to look inside. It is Very nice know you too.!!!!!!:) . .

    • Saba-Thambi 8:46 pm on December 1, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு!

  • என். சொக்கன் 12:00 am on November 30, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு: யானைக் குட்டிகள் 

    பாரதிக்குப் பின் வந்தவர்களில், (இதுவரை) கண்ணதாசனே நான் விரும்பும் மகா கவிஞன். அப்படியிருக்கையில், நான் இந்தக் குறிப்பைப் படிக்க நேர்ந்தது.

    பாரதியைப்பற்றிக் கண்ணதாசன்:

    ‘ஆறு தொகுதிகள் கவிதைகள் எழுதி இருக்கிறேன், ஏராளமா சினிமா பாட்டெழுதி இருக்கிறேன், உரை நடை எழுதி இருக்கிறேன்… பன்றி குட்டி போட்டமாதிரி இவ்வளவு எழுதி என்ன பிரயோசனம்? பாரதி இந்தக் கவிதைத் தொகுதி ஒன்றினால்மட்டும் உலகத்தை ஜெயிச்சுட்டானே!  அவன்தான் மகாகவி, என்னைப்பத்தியெல்லாம் பேசப்படாது!’

    (from அர்த்தமுள்ள அநுபவங்கள் : இராம. கண்ணப்பன் : நர்மதா பதிப்பகம் வெளியீடு)

    இதைப் படித்ததும், பாரதி பற்றி என் ஒரு மனம் கர்வப்பட்டாலும், இன்னொரு மனம் கண்ணதாசனுக்காக மிக நெகிழ்ந்தது.

    காலத்தில் அழியாத

    காவியம் தரவந்த

    மாபெரும் கவி மன்னனே – உனக்கு

    தாயொரு மொழி சொல்லுவேன்…                        *a

    என்று, அவன் எழுதிய வரிகளாலேயே வருடிகொடுத்தும், தட்டிக்கொடுத்தும் தேற்ற விழைந்தது.

    சினிமா நல்லதாகவோ அல்லாததாகவோ, எப்படியோ இருந்து போகட்டும். ஆனால் ஒரு சிறந்த கவிஞன்,

    நிரந்தரமானவன், அழிவதில்லை – எந்த

    நிலையிலும் அவனுக்கு மரணமில்லை                   *b

    என்ற மிக உன்னதமான இடத்திலேயே கண்ணதாசன் இருந்துவருவதைச் சுட்டிக்காட்டத் தோன்றியது.

    கொடிதிலும் கொடிது, இளமையில் வறுமை என்று ஔவையார் சொல்லுவதை எல்லாரும் புரிந்துகொள்ளும் வகையில் சரியாகவும் அழகாகவும் காட்டும் கண்ணதாசனின் பாடல் இது:

    செல்வர்கள் இல்லத்தில்

    சீராட்டும் பிள்ளைக்கு

    பொன்வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி

    இதில், ‘பொன்வண்ணம்’ என்பதற்கு, தங்கநிறத்தில் என்று பொருள் கொள்ளக்கூடாது. அது செல்வந்தர் இருப்பிடம். மாளிகை. எனவே, அவர்கள் வீட்டுக் குழந்தை, ‘பொன்னாலான அழகிய’ கிண்ணத்தில் பால் குடிக்கிறது. சரி, அங்கே ஏழை வீட்டில் என்ன நடக்கிறது?

    கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு

    கலயங்கள் ஆடுது சோறின்றி

    இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி

    தரித்திரம் தாண்டவமாடுகிறது. காசே கிடையாது. வீட்டில் ஒரு பிடி அரிசிகூட இல்லை. உப்பு வாங்கவும் துட்டு கிடையாது. துயரத்தில் பொங்கிய அழுகையால், கலயத்தில் விழுந்த கண்ணீரில் இருந்த உப்பு மட்டுமே, இனாமாகக் கிடைத்த தண்ணீரில் கலந்ததாம். ஒரு சின்ன வரியில் – கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு கலயங்கள் ஆடுது சோறின்றி – மாபெரும் அற்புதத்தை நிகழ்த்திக்காட்டிய சாகசம் கண்ணதாசனுக்கு மட்டுமே சொந்தம்!

    கண்ணதாசன் பாடல் இன்னும் தொடர்கிறது..

    மாணிக்க தேர் போல

    மையிட்டுப் பொட்டிட்டு

    மகராஜன் செல்வங்கள் விளையாடும்

    கண்ணாடி வளையலும் காகித பூக்களும்

    கண்ணே உன் மேனியில் நிழலாடும்

    இல்லாத உள்ளங்கள் உறவாடும்

    கண்ணாடி வளையல்களும் காகித பூக்களும் கண்ணே உன் மேனியில் நிழலாடும் என்று எடுத்துக்கொண்ட காட்சியை நிலை நிறுத்துகிறது!!

    இந்த இரண்டு வரிகளுக்கும் முத்தாய்ப்பாக, இன்னும் இரண்டு வரிகள்.

    கண்ணுறங்கு, கண்ணுறங்கு – பொன்னுலகம்

    கண்ணில் காணும்வரை கண்ணுறங்கு, கண்ணுறங்கு

    இதுவா பன்றி குட்டிபோல இருக்கு… மனசு ஆறமாட்டேங்குது!

    மிகப்பரவலான தலைப்புகள் என்றாலும் அழகாகவும் ஆழமாகவும் –நுனிப்புல் மேயாமல் என்று பொருள் கொள்க- எழுத, வெகுச்சிலரால் மட்டுமே முடியும். அதிலும் கவிதை என்று வந்தால் அத்தகையவர்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைந்துவிடும். அதனால் தான், என்னளவில், பாரதிக்குப்பின் (இன்றுவரை) கண்ணதாசன் மட்டுமே என்று சொல்கிறேன்.

    பாரதியார் 39 வயது மட்டுமே வாழ்ந்தார் – அதுவும், தான் கனவுகண்ட சுதந்திர இந்தியாவைக் காணாமல் 1921-இலேயே மறைந்தார். ஆனால், தன் ஐம்பத்திநாலு வயதில், 1981-இல் மறைந்த கண்ணதாசன், சுதந்திர இந்தியாவின் மாற்றங்களை மட்டுமல்லாது, உலகளாவிய விஞ்ஞா ன வளர்ச்சியையும், ஏனைய தாக்கங்களையும் கண்டவர்.

    ஆகவே, “பன்றி குட்டி போட்டமாதிரி இவ்வளவு எழுதி என்ன பிரயோசனம்? பாரதி இந்தக் கவிதைத் தொகுதி ஒன்றினால்மட்டும் உலகத்தை ஜெயிச்சுட்டானே!  அவன்தான் மகாகவி, என்னைப்பத்தியெல்லாம் பேசப்படாது” என்று கண்ணதாசன் சொல்லுவதன் உள்ளர்த்தம் வேறாயிருக்க வேண்டும். முகத்துக்கு நேரேவரும் மிகைப்புகழ்ச்சியால் நெளிபவர்கள், அதைக் கடப்பதற்காக, தனக்கிணையான அல்லது தன்னிலும் மேலான ஒரு மேதையின் பெயரை உபயோகிப்பது என்பது, இது முதல் தடவையல்ல. எனவே இதை நாம் இப்படியே விட்டுவிடலாம். 🙂

    சினிமாப் பாடல்களில் தமிழின் சிறப்பைப்பற்றி சொல்லுவதும், அதைப் பற்றிச்செல்லுவதும் அடிக்கடி நடப்பது தான். அதில் எல்லார் மனதையும் சொக்கவைப்பவர் கண்ணதாசன்.

    சந்தம் நிறைந்த தமிழ் -சங்கீதம் பாடும் தமிழ்

    சிந்து பல கொண்ட தமிழ் -வெல்லும், வெல்லும்…

    இந்த தேசம் முற்றும் ஆண்ட கதை -சொல்லும், சொல்லும்…

    இந்த வரிகளைக் கேட்கும் ஒவ்வொரு தடவையும், எனக்கு திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சியில், ‘பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி பொற்பந்து கொண்டாடினளே நினைவுக்கு வந்துவிடும். யார் அந்த ஒய்யாரி, அவள் பந்தாடினதில் என்ன விசேஷம் என்று பார்க்க, இங்கேசெல்லவும்.

    கண்ணதாசன் பாடலில்,

    செவ்வரியோடிய கண்களிரண்டினில் சேலோடு வேலாட – இரு

    கொவ்வை இதழ்களும் கொத்து மலர்களும் கொஞ்சி மகிழ்ந்தாட…

    என்ற வரிகள் ரசிக்கப் பட்டாலும், அதிகம் பேசப்பட்டது கீழேயுள்ள வரிகள் தாம்.

    தோட்டத்திலே தென்னையிரண்டு முற்றித்திரண்டு பக்கம் உருண்டு,

    கண்ணில் தூக்கி நிறுத்திய விருந்து – அதைத்

    தொடவோடிய விழியோடொரு விழி மோதிய கணமே – எனைத்

    ஆனால், இவனுக்கும் முன்னால் எழுதிய பாரதி ஏற்கனவே இதையெல்லாம் எழுதிவிட்டான். இதோ, எந்தநேரமும் நின் மையலேறுதடீ – குறவள்ளி சிறுகள்ளி.. என்ற பாடலைக் கேளுங்கள். இந்த பாரதியார் பாடலுக்கு எல்.வைத்யநாதன் இசையமைத்துள்ளார். முழுப்பாடலும் கேட்டால் பிரமிப்பாயிருக்கும்.

    தமிழ் என்றும் புதியது, எப்பொழுதும் திகட்டாதது. எனவே, கொஞ்சம் ஜாலியாக காய் வகைகளையும் கண்ணதாசனின் எழுத்தில் காணலாம்:

    உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைத்தாயோ
    வெள்ளரிக்காய் பிளந்ததுபோல் வெண்ணிலவே நீ சிரித்தாயோ

    கோதை எனைக் காயாதே கொற்றவரங்காய் வெண்ணிலா
    இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா

    தமிழில் நன்றாக எழுதிப் படைப்பதனால், அவன் பேர் இறைவன். இணப்பிலிருக்கும் பாடல்கள் ஒவ்வொன்றையும் முழுமையாகக் கேட்டு ரசியுங்கள்.  🙂

    =========

    நாலு வரிக்காக எடுத்தாண்ட பாடல்கள்:

    1. காலத்தில் அழியாத காவியம் தரவந்த: http://www.youtube.com/watch?v=l1kYJFo-uBU
    2. ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு: http://www.youtube.com/watch?v=eCC6tV8sgSM
    3. பூஞ்சிட்டுக் கன்னங்கள்: http://www.youtube.com/watch?v=zsBG59Y0k04
    4. சங்கம் வளர்த்த தமிழ்  http://www.youtube.com/watch?v=9fPHG8IE-vU
    5. இந்திரையோ, இவள் சுந்தரியோ  http://www.youtube.com/watch?v=u515oyKoO7I
    6. எந்த நேரமும் http://www.raaga.com/player4/?id=231999&mode=100&rand=0.6847409228794277
    7. அத்திக்காய் காய் காய்  http://www.youtube.com/watch?v=muWBARd3oAk பாட்டில்வரும்  வார்த்தைகளுக்கு ஒன்றுக்கும் அதிகமான அர்த்தமிருப்பதால், இதில் இருக்கும் சப்-டைட்டில், பாடலை முழுமையாக ரசிக்க, உதவும்.

    பி. வி. ராமஸ்வாமி

    ரீடெய்ல் துறையில் பல வருடங்கள் பணியாற்றிய அனுபவஸ்தர் பி. வி. ராமஸ்வாமி, ’ஜார்ஜ் ஆர்வெல்’லின் புகழ் பெற்ற நாவலான ‘விலங்குப் பண்ணை’யை அருமையான நடையில் தமிழாக்கம் செய்திருக்கிறார், தமிழ் இணையத்தில் நல்ல படைப்புகள் எங்கு தென்பட்டாலும் தேடிச் சென்று பாராட்டுகிற நல்மனத்துக்காரர்.

    https://twitter.com/to_pvr

     
    • amas32 1:39 am on November 30, 2013 Permalink | Reply

      ஏழ்மை என்னை மிகவும் நெகிழ்த்தும். துலாபாரம் படத்தில் பூஞ்சிட்டு கன்னங்கள் பாடலை எங்கு கேட்டாலும் தானாகக் கண்ணில் நீர் வழியும். கண்ணதாசனின் வரிகளின் வலிமை அவ்வளவு. கண்ணதாசனின் திரைப்பாடல்கள் சொல்லாத கருத்துக்களே இல்லை. அதுவும் அவர் இருந்த காலத்தில் சினிமாவின் இரு ஜாம்பவான்கள் கோலோச்சிய நேரம். சிவாஜியும் எம்ஜியாரும் இவரின் பாடல் வரிகளுக்கு வாயசைத்தேப் பெருமை அடைந்தனர்.

      பல நல்ல பாடல்களை தேர்வு செய்து அசை போட்டிருக்கிறீர்கள். என் போன்றோருக்கு நல்லதொரு பாடம். மிக்க நன்றி 🙂

      amas32

      • pvramaswamy 11:17 am on November 30, 2013 Permalink | Reply

        Thank you my friend. An acceptable level of appreciating words are always welcome. Thank you. But your generosity extends too much in your last line /என் போன்றோருக்கு …/

    • Niranjan Bharathi 10:24 am on November 30, 2013 Permalink | Reply

      நல்ல பதிவு.

      பாரதியார் 1927 ஆம் ஆண்டில் இறக்கவில்லை. அவர் இறந்த ஆண்டு 1921.

      சுதந்திர இந்தியாவைக் காணாவிடினும் “ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று” என்று பின்னர் வரவிருக்கும் சுதந்திரத்தை முன்னரே கண்டுணர்ந்து பாடிய தீர்க்கதரிசி.

    • pvramaswamy 11:14 am on November 30, 2013 Permalink | Reply

      நன்றி நிரஞ்சன் பாரதி. அவர் மறைந்தது 1921-ல் தான். நான் தப்பாக எழுதிவிட்டேன். என் பிழை, மன்னிக்க. அவர் தீர்க்கதரசியே தான். #பாரதிரப் பாடிய பாரதி!

    • Badri 8:22 am on December 1, 2013 Permalink | Reply

      ’பூஞ்சிட்டு கன்னங்கள்’ பாடலை பல முறை கேட்டிருக்கிறேன். அந்த மெட்டையும், சுசீலாவின் குரலையும் அனுபவித்திருக்கிறேன். ஆனால் அந்த வார்த்தைகளின் அர்த்தத்தையும், அழகையும் இன்றுதான் உணர்ந்தேன். நன்றி PVR.

      • pvramaswamy 6:07 am on December 3, 2013 Permalink | Reply

        Thanks a lot Badri. I am happy you enjoyed it again. I hope you liked the other songs tagged also. 🙂

    • Saba-Thambi 8:40 pm on December 1, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு! இறந்தும் இறவா கண்ணதாசன் என்றும் வாழ்க!!

      • pvramaswamy 6:21 am on December 3, 2013 Permalink | Reply

        கண்ணதாசன், தமிழின் செல்லப்பிள்ளை. அவர் பேசுவதும் அற்புதமாயிருக்கும். இலக்கியத்தில் காதல் என்று ஒரு யூட்யூபில் தேடினால் கிடைக்கும். இதோ, அவற்றிலிருந்து ஒன்று: http://www.youtube.com/watch?v=s0REHod0O90

        வசந்த ஒய்யாரி மேலும் அழகு பெறுகிறாள்.

        • Saba-Thambi 10:55 am on December 4, 2013 Permalink

          அபாரம்!!! இணையத்திற்கு மிக்க நன்றி.

          ரிதமெடிக் சென்ஸை மிகவும் இலகுவாக விளக்குகிறார். A musician and a Physicist would struggle to put the concept across but KD has used simple day to day example and that is an art itself.

  • mokrish 11:48 pm on November 29, 2013 Permalink | Reply  

    இல்லாததுபோல் இருக்குது 

    கண்ணதாசன் முன்னாள் நாத்திகர்தானே என்று நண்பர் @ncokkan ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார். பழ. கருப்பையா ஒரு திறனாய்வு நூலில்.

    “கண்ணதாசன் அறியாப் பருவத்தில் கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தார். இளமையின் தொடக்கத்தில் கடவுள் மறுப்பாளராக மாறிவிடுகிறார். அந்தக் கால கட்டம் முழுவதிலும் அவர் எழுதிய பாடல்களில் கடவுள் ஏற்பு காணப்படவில்லையே தவிர கடவுள் எதிர்ப்பும் காணப்படாதது ஒரு வியப்பே”

    என்று தொடங்கி ஒரு முழு அத்தியாயமே எழுதியிருக்கிறார். சந்தர்ப்பவசத்தால் ஒரு இயக்கத்தில் சேர்ந்து அதற்குத் தன்னுடைய உயிரினும் இனிய கொள்கையை முதற்பலியாகக் கொடுத்துவிட்டு வெகுகாலமாக இருட்டறையில் புழுங்கிக்  கொண்டிருந்தார் என்றும் சொல்கிறார்.

    இயக்கத்தை விட்டு வெளியேறியபின் மீண்டும் தீவிர கடவுள் நம்பிக்கை! திரைப்பாடல்களில் அதை அழகாக வெளிப்படுத்தினார். அவ்வப்போது உரிமையுடன் நிந்தாஸ்துதியும் பாடினார்

    கண்ணதாசன் சண்முகப்பிரியா என்ற படத்தில் எழுதிய ஒரு பாடல் (இசை சூலமங்கலம் ராஜலட்சுமி & ஜெயலட்சுமி, பாடியவர் டி எம் எஸ்)

    இறைவனுக்கும் பெயரை வைத்தான் ஒரு மனிதன் இங்கே

    இறைவன் இல்லை என்று சொன்னான் ஒரு மனிதன் இங்கே

    என்று தொடங்கி

    இல்லை இல்லை என்றவனும் எதனை இல்லை என்றான்

    இல்லை ஒரு சக்தி என்று சொல்லவில்லை என்றான்

    நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு மட்டும்தானா? நாத்திகம் என்பது நம்பிக்கையற்று இருப்பதா? யோசித்தால் ஆத்திகர்களைப்போலவே நாத்திகர்களும் ஒரு பெயர் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ‘ஒரே தேவன்’ என்றோ இயற்கை  என்றோ பெயரிட்டார்கள். ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் பிரபலமான வசனம் “May the Force be with you” குறிப்பது கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தி.

    இரு தரப்பிலும் இருந்ததால் ஆத்திக-நாத்திக வாதத்தை மனிதனும் தெய்வமாகலாம் படத்தில் வெற்றி வேல் வெல்லுமடா என்ற பாட்டில் வைக்கிறார்.

    http://www.youtube.com/watch?v=DvFZurTDX1A

    வெற்றி வேல் வெல்லுமடா வினை தீர்ப்பான் வேலனடா

    கற்றவர்க்கும் கல்லார்க்கும் கருணை தரும் தென்றலடா

    என்று இறைவன் பெருமை  சொல்லும் அண்ணன். ஆனால் தம்பி நாத்திகவாதி.

    இறைவன் ஆளும் உலகம் என்றால் ஏழைகளை ஏன் படைத்தான்

    ஒருவர் வாழ ஒருவர் வாடும் உயர்வு தாழ்வை ஏன் அமைத்தான்

    என்ற stock  கேள்வி கேட்கிறான்.பக்தியில் உருகும் அண்ணன் ‘குழந்தை போல அவனைப் பார்த்தால் கூட வந்து கொஞ்சுமடா ‘ என்று சொன்னால் ‘குழந்தை இங்கு கோடி உண்டு குமரன் என்ன தேவையடா என்று பாடும் தம்பி.  பசியால் குழந்தைகள் வாடும்போது பாலபிஷேகம் எதற்கு  என்ற வழக்கமான வாதம்தான்.

    ஆனால் இது ஏன் mutually exclusive ஆக இருக்கவேண்டும்? குமரனையும் கொண்டாடி கோடி குழந்தைகளையும் கொண்டாட முடியுமே? ஆண்டவனை கும்பிட்டால் அன்பு செலுத்த முடியாமல் போகுமா?

    மோகனகிருஷ்ணன்

    362/365

     
    • amas32 9:43 am on November 30, 2013 Permalink | Reply

      //ஆனால் இது ஏன் mutually exclusive ஆக இருக்கவேண்டும்? குமரனையும் கொண்டாடி கோடி குழந்தைகளையும் கொண்டாட முடியுமே? ஆண்டவனை கும்பிட்டால் அன்பு செலுத்த முடியாமல் போகுமா?//

      இது தான் என் சித்தாந்தமும். என் மகன், பாடலில் தம்பி கேட்கும் கேள்விகளை தான் என்னையும் கேட்பான். உண்டியலில் போடும் பணத்திற்கு வாசலில் பிச்சை எடுப்பவர்களுக்குப் பிடிவாதமாக சாப்பாட்டு பேக்கட் வாங்கிக் கொடுப்பான். சுவாமிக்கு அலங்காரம் இருக்கும் போது இன்னும் ஏன் மலர்கள் வாங்கிப் போகிறாய் என்று கேட்பான். இதே பதில் தான் சொல்லுவேன். அதையும் செய் இதையும் செய்.

      அன்பு இருக்கும் இடத்தில் தெய்வ பக்தி இல்லாமல் இருப்பது அரிது. வெளிப்படாமல் இருந்து ஒரு நாள் பிரவாகமாக வெடிக்கும்.

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙂

      amas32

    • rajinirams 10:54 am on November 30, 2013 Permalink | Reply

      கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்,அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்,இறைவன் உலகத்தை படைத்தானா அவன் தான் ஏழ்மையை படைத்தானா-ஏழ்மையை படைத்தவன் அவனென்றால் இறைவன் என்பவன் எதற்காக? பாடல் சூழ் நிலைக்கேற்ப இப்படியும்-கடவுள் ஏன் கல்லானார் மனம் கல்லாய் போன மனிதர்களாலே, இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்-மனிதன் இருக்கின்றானா இறைவன் கேட்கிறான்- இப்படியும் பாடல் எழுதிய கண்ணதாசன் இறைவனுக்கும் பெயரை வைத்தான் பாடலின் இறுதியில்”இல்லை இல்லை என்றவனும் எதனை இல்லை என்றான்
      இல்லை ஒரு சக்தி என்று சொல்லவில்லை என்றான்” என்று முத்தாய்ப்பாக முடித்த விதம் அருமை.முதலில் நாத்திகராக இருந்த கவியரசர் பின் இறைவன் திருவடி சரணடைந்து பக்தியில் திளைத்ததோடு பல பக்தி பாடல்களையும் இலக்கியங்களையும் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற காவியத்தையும் தந்து என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

  • G.Ra ஜிரா 11:41 pm on November 28, 2013 Permalink | Reply  

    பெண்களின் பண்கள் 

    தமிழ் சினிமாவில் இரண்டு பெண்கள் சேர்ந்து பாடினால் அது ஒரே ஆணைப் பற்றியதாக மட்டுமே இருக்கும். இது ஆண்டாண்டு காலமாக மாறாத விதி. விதிவிலக்குப் பாட்டுகள் உண்டு என்றாலும் கதையில் இரண்டு பெண்கள் இருந்தால் ஒரு ஆண் என்று முக்கோணக் காதலை வைப்பது இன்றைக்கும் இயக்குனர்களுக்கு மிகவும் பிடித்த செயல்.

    வழக்கம் போல முதலில் நினைவுக்கு வருவது கவியரசர் தான். இதைச் சொல்வது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டது. பாதகாணிக்கை படத்தில் இரண்டு பெண்கள் ஒருவனையே நினைத்துப் பாடுவார்கள்.

    உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
    உனது நிலா விண்ணிலே எனது மலர் கண்ணிலே

    எப்படி அடித்துக் கொள்கிறார்கள் பார்த்தீர்களா? ஒருத்தி அத்தை மகளாகப் பிறந்தவள். இன்னொருத்தி அவனோடு உறவாக வளர்ந்தவள். அதையும் போட்டியில் இழுத்துவிடுகிறார்கள்.

    ஒருத்தி: பிறந்த போது பிறந்த சொந்தம் இருந்ததம்மா நினைவிலே
    இன்னொருத்தி: வளர்ந்த போது வளர்ந்த சொந்தம் வளர்ந்ததம்மா மனதிலே

    அடுத்ததாக கவிஞர் வாலி இரண்டு பெண்களை சண்டை போட வைக்கப் போகிறார். அந்த இரண்டு பெண்களையும் ஏமாற்றியது ஒருவன் தானோ என்று அவர்கள் பாடுகிறார்கள்.

    ஒருத்தி: மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
    நிலவுக்கு வானம் பகையானல் அது நடந்திட வேறே வழி ஏது
    இன்னொருத்தி: பறவைக்குச் சிறகு பகையானால் அது பதுங்கி வாழ்ந்திட கால்களுண்டு
    உறவுக்கு நெஞ்சே பகையானால் மண்ணில் பெருகிட வகையேது

    அவர்கள் இரண்டு பேர்களின் வாழ்க்கையையும் ஒருவன் ஏமாற்றி அழித்து விட்டது போல ஒப்பாரி. ஆனாலும் இனிய பாடல்.

    அடுத்து நாம் பார்க்கப் போவது ஒருவருக்குத் தெரியாமல் ஒரே ஆணை விரும்பிய இரண்டு தோழிகளை. ஆனால் ஒருத்தியின் காதல்தான் கைகூடுகிறது. சில நாட்கள் கழித்து ரகசியம் தோழிக்குத் தெரிந்து விடுகிறது. தோழியின் ஆசையைத் திருடிவிட்டோமோ என்று அவளுக்கு ஒரு வருத்தம். தோழியர் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டிருந்தாலும் புரியாதது போலவே பாடுகிறார்கள். நீங்களே பாட்டைப் பாருங்கள்.

    ஒருத்தி:
    அடி போடி பைத்தியக்காரி
    நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா

    இன்னொருத்தி
    அடி போடி பைத்தியக்காரி
    நான் புரிந்தவள் தான் உன்னைத் தெரிந்தவள் தான்

    இவர்கள் நல்ல தோழிகள். சண்டையிட்டுக் கொள்ளவில்லை. தன் காதல் வெற்றி பெற்றதே என்று எண்ணாமல் தோழியில் காதல் தோற்றுப் போனதே என்று வருந்திப் பாடுகிறாள் ஒருத்தி.

    இறைவன் ஒரு நாள் தூங்கிவிட்டான்
    எழுத்தைக் கொஞ்சம் மாற்றிவிட்டான்

    இப்படியெல்லாம் யார் எழுதியிருப்பார்கள்? வேறு யார்? கவியரசரேதான்.

    இன்னும் இரண்டு பேர்கள் இருக்கிறார்கள். இவர்களும் தோழிகள். இவர்கள் இருவரையும் திருமணம் செய்தவன் ஒருவனே. ஆனால் அது இருவருக்குமே தெரியாது. அந்த உண்மை தெரியாமல் இருவரும் சேர்ந்து சுமங்கலி பூஜை செய்கிறார்கள்.

    மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
    மங்கல மங்கை மீனாட்சி
    உள்ளம் ஒருவன் சொந்தம் என்றாள்
    தேவி எங்கள் மீனாட்சி

    பாவம். பின்னால் அவர்கள் உண்மை தெரிந்து கொதிக்கப் போவதை அப்போது அறியாமல் பாடியிருக்கிறார்கள். இதே கதை பின்னால் கற்பூரதீபம் என்ற பெயரில் வந்தது. அங்கும் உண்மை தெரியாமல் இரண்டு தோழிகளும் பூஜை செய்கிறார்கள்.

    காலகாலமாய்ப் பெண் தானே கற்பூர தீபம்
    காவல் கொண்ட மன்னன் தானே தெய்விக ரூபம்

    இரண்டு பெண்டாட்டிக்காரன் கதைகள் என்றால் மக்களுக்குப் பிடித்திருக்கிறது என்றே தோன்றுகிறது. நம்மூர் சாமிகளே அப்படித்தானே!

    இவர்களாவது திருமணம் ஆனவர்கள். திருமணம் ஆகும் முன்னமே அக்காவும் தங்கையும் ஒருவனையே நினைத்துப் பாடிய கதைகளும் உண்டு. நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தைத்தான் சொல்கிறேன். இந்த முறை பாட்டெழுதியது கவிஞர் வைரமுத்து.

    மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு
    தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு

    இந்த வரிசையில் இருகோடுகள் திரைப்படத்தை எப்படி மறக்க முடியும்? வாலியின் வார்த்தை விளையாட்டுகளில் ஒளிரும் “புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்” பாட்டை விட்டு விட்டு இந்தப் பதிவை எழுத முடியுமா? சாமிகளையே சண்டைக்கு இழுத்துப் பாடிய பாட்டாயிற்றே.

    அவள்: தேவன் முருகன் கோயில் கொண்டது வள்ளியின் நெஞ்சத்திலே
    இவள்: அவன் தெய்வானை என்றொரு பூவையை மணந்தது திருப்பரங்குன்றத்திலே

    வள்ளியும் தெய்வானையும் கூட இப்படிச் சண்டை போட்டிருக்க மாட்டார்கள்!

    இன்னொரு அக்கா தங்கையைப் பார்க்கப் போகிறோம். அக்காவுக்குப் பார்த்த மாப்பிள்ளை அவன். ஆனால் திருமணம் நின்றுவிடுகிறது. தங்கையோடு அவனுக்குக் காதல் உண்டாகிறது. அப்போது அவர்களுக்குள் போட்டிப் பாட்டு வைக்காமல் இருக்க முடியுமா?

    ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
    திருமாலைத்தானே மணமாலை தேடி
    எந்த மங்கை சொந்த மங்கையோ
    ஓ எந்த கங்கை தேவ கங்கையோ

    போன பாட்டில் முருகன் மாட்டிக் கொண்டால் இந்தப் பாட்டில் மகாவிஷ்ணு மாட்டிக் கொண்டார். அவருக்கும் இரண்டுதானே!

    இன்னும் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிச் சொல்லாமல் பதிவை முடிக்க விரும்பவில்லை. அவன் அவளைத்தான் விரும்பினான். விதி பிரித்தது. அத்தை மகளை மணந்தான். மகிழ்வாகத்தான் இருந்தான். போனவள் வந்தாள். பிரச்சனையும் வந்தது. அத்தை மகளோ அப்பாவி. தெரியாத்தனமாக “ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அவளைக் கேட்டு விடுகிறாள்.” உடனே ஒரு பாட்டு.

    கடவுள் தந்த இருமலர்கள்
    கண் மலர்ந்த பொன் மலர்கள்
    ஒன்று பாவை கூந்தலிலே
    ஒன்று பாதை ஓரத்திலே

    சோகத்தைக் கூட அழகாகச் சொல்லியிருக்கிறார்கள் கவிஞர்கள். அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.

    இந்தச் சக்களத்திச் சண்டை பழைய படங்களோடு முடிந்து போகவில்லை என்று நிருபிக்க வந்ததோ பஞ்சதந்திரம் திரைப்படம்! ஒருத்தி மனைவி. இன்னொருத்தி மனைவியாக நடிப்பவள். அவர்களுக்குள் ஒரு போட்டிப் பாட்டு.

    வந்தேன் வந்தேன் மீண்டும் மீண்டும் வந்தேன்
    வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
    எனது கனவை எடுத்துச் செல்ல வந்தேன்

    நல்லவளைப் போல அமைதியாகப் பாடுகிறாள் நடிக்க வந்தவள். கட்டிக் கொண்டவள் சும்மா இருப்பாளா? புலியாய்ப் பாய்கிறாள்.

    பந்தியில பங்கு கேட்டா விட்டு தருவேன்
    என் முந்தியில பங்கு கேட்டா வெட்டிப் புடுவேன்
    அடி கண்டவளும் வந்து கைய வைக்க
    அவர் கார்பரேஷன் பம்ப் அல்ல

    இவர்கள் கதை இப்படியிருக்க இன்னும் இரண்டு பெண்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அவர்களைப் பற்றிச் சொல்லவில்லை என்றால் இந்தப் பதிவு முழுமை பெறவே பெறாது. ஒருத்தி மேடையில் ஆடிக் கொண்டிருக்கிறாள். அந்த ஆட்டத்தை இன்னொருத்தி விரும்புகிறவன் ரசிக்கிறான். அதை இன்னொருத்தியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவளும் மேடையில் குதித்து சரிக்குச் சரி ஆடுகிறாள். சபாஷ் சரியான போட்டி என்று தமிழுலகம் ரசித்த பாடல் இது.

    முதலாமவள் அமைதியாகத்தான் ஆடுகிறாள். பாடுகிறாள்.

    கண்ணும் கண்ணும் கலந்து இன்பம் கொண்டாடுதே
    என்னும் போதே உள்ளம் பந்தாடுதே

    அடுத்தவள் ஆங்காரமாக வரும் போதே ஆர்ப்பாட்டமாகத்தான் பாடுகிறாள்.

    ஜிலுஜிலுஜிலுவென நானே ஜெகத்தை மயக்கிடுவேனே
    கலகலகலவென்று ஜோராய் கையில் வளை பேசும் பாராய்

    இன்னொருத்தி வந்ததும் முதலாமவள் தன்மானம் உரசப்படுகிறது. அவளும் போட்டியில் குதிக்கிறாள்.

    ஆடும் மயில் எந்தன் முன்னே என்ன ஆணவத்தில் வந்தோயோடி
    பாடுங்குயில் கீதத்திலே பொறாமை கொண்டு படமெடுத்து ஆடாதேடி

    பார்த்தீர்களா… தான் விரும்புகிறவன் இன்னொருத்தியின் நடனத்தை ரசித்தான் என்று தெரிந்ததும் ஆடல் அரங்கத்தைப் போட்டி போடல் அரங்கமாக மாற்ற பெண்களால்தான் முடியும்.

    எது எப்படியோ! காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறினாலும்… கவிஞர் முத்துலிங்கம் எழுதியதைப் போல “என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான்” என்று இரண்டு பெண்கள் சண்டையிட்டுக் கொண்டால் அதை மக்கள் ரசிக்கத்தான் செய்வார்கள் என்பது மட்டும் மாறவே மாறாது போல!

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

    பாடல் – உனது மலர் கொடியிலே
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.இராமமூர்த்தி
    படம் – பாதகாணிக்கை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=grVbM9WJZks

    பாடல் – மலருக்குத் தென்றல் பகையானால்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன், டி.கே.இராமமூர்த்தி
    படம் – எங்க வீட்டுப் பிள்ளை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=jlGlD41oxJg

    பாடல் – அடி போடி பைத்தியக்காரி
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – தாமரை நெஞ்சம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=gxU3uBgng-E

    பாடல் – மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – ஜிக்கி, எஸ்.ஜானகி
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – தேனும் பாலும்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=KzcZFwOZSuk

    பாடல் – காலம் காலமாய் பெண் தானே
    வரிகள் – கங்கையமரன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, எஸ்.ஜானகி
    இசை – கங்கையமரன்
    படம் – கற்பூரதீபம்
    பாடலின் சுட்டி – http://youtu.be/SeZ6Z5ysm20

    பாடல் – மல்லிகையே மல்லிகையே
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர்கள் – அனுராதா ஸ்ரீராம், சித்ரா
    இசை – தேனிசைத் தென்றல் தேவா
    படம் – நினைத்தேன் வந்தாய்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Nu3uPoeEuss

    பாடல் – ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, வாணி ஜெயராம்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – தேவியின் திருமணம்
    பாடலின் சுட்டி – http://www.inbaminge.com/t/d/Deiviyin%20Thirumanam/Sridevi%20Varam%20Ketkiral.vid.html

    பாடல் – கடவுள் தந்த இருமலர்கள்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – இருமலர்கள்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=X7RxuQ4tUwU

    பாடல் – புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – ஜமுனாராணி, பி.சுசீலா
    இசை – வி.குமார்
    படம் – இருகோடுகள்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=hCR7rD4-K7c

    பாடல் – வந்தேன் வந்தேன் மீண்டும்
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர்கள் – நித்யஸ்ரீ, சுஜாதா
    இசை – தேனிசைத் தென்றல் தேவா
    படம் – பஞ்சதந்திரம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=sErsh9Kg7bk

    பாடல் – கண்ணும் கண்ணும் கலந்து
    வரிகள் – கொத்தமங்கலம் சுப்பு
    பாடியவர்கள் – ஜிக்கி, பி.லீலா
    இசை – சி.இராமச்சந்திரா
    படம் – வஞ்சிக்கோட்டை வாலிபன்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=AMotc9NQ9B8

    பாடல் – என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான்
    வரிகள் – கவிஞர் முத்துலிங்கம்
    பாடியவர்கள் – பி.எஸ்.சசிரேகா, எஸ்.பி.ஷைலஜா
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – கோபுரங்கள் சாய்வதில்லை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=_XjWcWHbB7A

    அன்புடன்,
    ஜிரா

    361/365

     
    • prabakar 6:42 am on November 29, 2013 Permalink | Reply

      படம் பெயர் நினைவில் இல்லை.கே.ஆர். விஜயாவும் ஜெயசுதாவும் பாடியிருக்கும் பாட்டு. அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து தீபம். எப்படி வேண்டுமானாலும் பெண்கள் வாழலாம் என்பதற்கும் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை கவிஞர் கண்ணதாசன் அருமையாக கூறியிருப்பார். கோடி பெண்களை பூமி கண்டது தெய்வமானவள் சீதை. என்ற அற்புதமான வரிகள் உள்ள பாடல் இந்த பாடலில் ஆண் நாயகன் குறித்து பாடப் படவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

    • Uma Chelvan 7:33 am on November 29, 2013 Permalink | Reply

      இரண்டு பெண்கள் ஒரு ஆணுக்காக பாடியது போலவே, இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணுக்காக ஏங்கி பாடியதும் உண்டே.!!! நம்ம அல்லா ரெக்ஹா இசையில் அருமையான “சஹானா” ராகத்தில் .

      என்னை கேட்டு காதல் வரவில்லையே ,
      நான் சொல்லி காதல் விடவில்லையே !!
      மறந்தாலும் காதல் மறக்காதம்மா !!

      ஒ வெண் நிலா …..இரு வானிலா !!

    • kamala chandramani 8:31 am on November 29, 2013 Permalink | Reply

      பன்னிரண்டு பாடல்கள் ஒரே பதிவில் முதன்முறையாக? என்ன ஆராய்ச்சி? நிஜமாகவே என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. வாழ்த்துகள் ஜி.ரா.

    • umakrishh 9:56 am on November 29, 2013 Permalink | Reply

      நல்ல ஆராய்ச்சி..:) புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக பாமா விஜயம்..அப்புறம் மல்லுவேட்டி மைனர் ல கூட ஒரு பாடல் வருமே..

    • rajinirams 10:05 am on November 29, 2013 Permalink | Reply

      ஆஹா,சான்சே இல்லை சார்.செம பதிவு.பாராட்டுக்கள்.நீங்கள் தேர்ந்தெடுத்த பெண்களின் பண்கள் எல்லாமே அருமை. என்னை நெகிழ வைக்கும் இன்னொரு பாடல் சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் பாட முடியாமல் தவிக்கும் பெண்ணிற்காக “மீரா”என்று பாடலை தொடரும் “பல்லவி ஒன்று மன்னன்” பாடல்.கே.பாலசந்தரின் இயக்கத்திலேயே இன்னொரு பாடல் வெள்ளி விழாவில் “கை நிறைய சோழி”பாடல்.டபுள்ஸ் படத்திலும் வைரமுத்துவில் ஒரு பாடல் நன்றாக இருக்கும்-ராமா ராமா ராமா என்று ஒரு பெண்ணும்,கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா என்று ஒருவரும் பாடும் பாடல். நன்றி.

    • பாலராஜன்கீதா 11:55 am on November 29, 2013 Permalink | Reply

      கந்தன் கருணை – மனம் படைத்தேன் (கே.ஆர்.வி – ஜெ.ஜே) 🙂

    • amas32 7:13 pm on November 29, 2013 Permalink | Reply

      இந்தப் பதிவு முடிவுக்கு வரும் சமயத்தில் சான்சே இல்லாமல் ஒரு சூப்பர் போஸ்ட் 🙂 எந்தப் பாட்டையும் விடு வைக்கவில்லை. ரசிகர்களுக்கு ஒரு கல்யாண சமையல் விருந்தே பரிமாறி விட்டீர்கள். இன்னும் சொல்ல என்ன இருக்கு! அற்புதம் 🙂

      இத்தனைப் பாடல்களிலும் என் மனத்தில் நிற்கும் பாடல் என்னவோ புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் மட்டுமே. அதற்குப் பல காரணங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.

      இன்னும் திரும்ப வந்து உங்கள் பதிவை பொறுமையாக இரண்டு முறை படிக்க வேண்டும் 🙂

      amas32

    • ராஜேஷ் 1:29 am on December 4, 2013 Permalink | Reply

      பாடல் – மல்லிகையே மல்லிகையே
      வரிகள் – கவிஞர் வைரமுத்து
      பாடியவர்கள் – அனுராதா ஸ்ரீராம், சித்ரா
      இசை – தேனிசைத் தென்றல் தேவா
      படம் – நினைத்தேன் வந்தாய்

      வரிகள் பழநிபாரதி

    • santhosh 10:47 am on August 8, 2021 Permalink | Reply

      hi sir ,
      I would like to talk with u for some ideas, kindly if u wish pls contact me-9585504287

  • என். சொக்கன் 11:59 pm on November 27, 2013 Permalink | Reply  

    வானவில் ஆடை 

    • படம்: ரோஜா
    • பாடல்: சின்னச் சின்ன ஆசை
    • எழுதியவர்: வைரமுத்து
    • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
    • பாடியவர்கள்: மின்மினி, ஏ. ஆர். ரஹ்மான்
    • Link: http://www.youtube.com/watch?v=YpMK2UYmgw8

    சேற்று வயல் ஆடி, நாற்று நட ஆசை,

    மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை,

    வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை,

    பனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை!

    ’உடை’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது ‘உடுத்தல்’ என்ற செயல். இதே வரிசையில் வரும் ‘உடுப்பு’ என்பதும் மிக அழகான சொல். ஆனால் ஆடை சார்ந்த மற்ற சொற்களோடு ஒப்பிடும்போது இவற்றை நாம் பேச்சில் குறைவாகவே பயன்படுத்துகிறோம்.

    உண்மையில் ‘உடுப்பு’ என்பது ‘உடுபு’ என்ற கன்னடச் சொல்லில் இருந்து வந்தது என்கிறார் பாவாணர். அப்படியானால் ‘உடுத்தல்’ என்ற பெயர்ச்சொல்லும் அதன்பிறகுதான் வந்திருக்கவேண்டும்.

    பழந்தமிழ்ப் பாடல்களில் ‘உடுத்தல்’க்கு நிறைய மரியாதை இருக்கிறது. உதாரணமாக: நீர் ஆரும் கடல் உடுத்த நில மடந்தை, உண்பது நாழி, உடுப்பது இரண்டே!

    சினிமாப் பாடல்களைப் பொறுத்தவரை, ’பட்டுடுத்தி’ என்ற சொல் மிகப் பிரபலம் (பட்டு உடுத்தி), மற்றபடி இடுப்புக்கு எதுகையாக இருந்தும் உடுப்பைக் கவிஞர்கள் அதிகம் விரும்பாதது பெருவிநோதம்.

    முந்தின வரியில் இரட்டை அர்த்தம் ஏதுமில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன் 😉

    ***

    என். சொக்கன் …

    27 11 2013

    360/365

     
    • Uma Chelvan 12:51 am on November 28, 2013 Permalink | Reply

      “காஞ்சி பட்டுடுத்தி கஸ்துரி பொட்டும் வைத்து ”

    • amas32 3:33 pm on November 28, 2013 Permalink | Reply

      உடுப்பு என்ற சொல் எனக்கு ஏனோ uniformஐ நினைவுப் படுத்தும். உடுத்தி என்பது அழகிய பிரயோகம். ஆனால் புடைவை கட்டிக் கொண்டு வருகிறேன் என்றும் வேட்டி சட்டைப் போட்டுக் கொண்டு வருகிறேன் என்றே பேச்சு வழக்கில் வந்து விட்டது. உடுத்தி என்ற சொல்ல ஆரம்பிக்க வேண்டும் 🙂

      உப்புமா கன ஜோர்!

      amas32

    • Saba-Thambi 10:17 pm on November 28, 2013 Permalink | Reply

      உடுப்பு, உடுத்தல் என்பன யாழ்ப்பாணைத்தில் தாராளமாக பாவிக்கப்படும் சொற்கள்.

      அப்போ திருக்குறளில் வரும் உடுக்கை என்ற சொல் ?

    • rajinirams 3:11 am on November 29, 2013 Permalink | Reply

      ஆம்.நீங்கள் சொன்னது போல் உடுத்தி என்ற வார்த்தையை பயன்படுத்தியது இல்லை.சேலை”கட்டும்”பெண்ணுக்கொரு,நீ பட்டுப்புடவை”கட்டிக்கொண்டால்”ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்.சேலை”மூடும்”இளஞ்சோலை,நீலச்சேலை கட்டிக்கொண்ட சமுத்திரப்பொண்ணு, இப்படி பல.

  • mokrish 11:16 pm on November 26, 2013 Permalink | Reply  

    உரிமை உன்னிடத்தில் இல்லை 

    போன வாரம் #BooksOnToast பற்றி ஒரு செய்தி படித்தவுடன் நாமும் சில புத்தகங்களை நன்கொடையாகத் தரலாம் என்று தோன்றியது. என்னிடம் இருந்த பழைய ஆங்கில fiction நாவல்களை எடுத்து அடுக்கும்போது ஜெஃப்ரி ஆர்ச்சர் எழுதிய To Cut a Long Story Short  சிறுகதைத்தொகுப்பு கண்ணில் பட்டது. அதில் Death Speaks என்று ஒரு சிறிய சிறுகதை. 12 -13 வரிகள்தான்.  இங்கே படியுங்கள் http://am-kicking.blogspot.in/2005/11/death-speaks.html?m=1.

    அட்டகாசமான ட்விஸ்ட் இது Somerset Maugham எழுதிய Sheppey நாடகத்தில் வரும் ஒரு The Appointment in Samarra என்பதன் தழுவல் என்று ஆர்ச்சர் குறிப்பிட்டிருந்தார். இந்த உரையாடலை கண்ணதாசன் பாடல் வரிகளை அடுக்கி reconstruct பண்ணலாம் என்று amateur முயற்சி.

    வேலையாள்  (பாடல் யாருக்காக இது படம் வசந்த மாளிகை இசை கே வி மகாதேவன் பாடியவர் டி எம் எஸ்)

    http://www.youtube.com/watch?v=m4sX_5LL8e8

    மரணம் என்னும் தூது வந்தது , அது

    மங்கை என்னும் வடிவில் வந்தது

    வணிகன் (பாடல் என்ன நினைத்து படம் நெஞ்சில் ஓர் ஆலயம் இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் பி சுசீலா)

    http://www.youtube.com/watch?v=NV9Gz3jYnlU

    மாயப்பறவை ஒன்று வானில் பறந்து வந்து

    வாவென்று அழைத்ததை கேட்டாயோ

    பறவை பறந்து செல்ல விடுவேனோ?

    அந்தப் பரம்பொருள் வந்தாலும் தருவேனோ?

    தேவதை (பாடல் போனால் போகட்டும் பாலும் பழமும் இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் டி எம் எஸ்)

    http://www.youtube.com/watch?v=DnxZnuXlWBo

    இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை

    இல்லை என்றால் அவன் விடுவானா?

    உறவைச் சொல்லி அழுவதனாலே

    உயிரை மீண்டும் தருவானா?

    மும்பையில் 1993ல் பல இடங்களில் குண்டு வெடித்தது. ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் மதியம் 1.30 மணிக்கு வெடித்தது. அதில் உயிர் தப்பிய ஒருவர், உடனே மும்பையை விட்டு கிளம்பலாம் என்று ஏர் இந்தியா அலுவலகம் சென்று அங்கு குண்டு வெடித்தபோது பலியானார் என்று ஒரு செய்தி படித்த ஞாபகம். சுஜாதாவின் ‘விபா’ என்ற சிறுகதையில் இதேபோல் ஒரு கடைசி வரி ட்விஸ்ட்.

    நிஜ வாழ்க்கையில் நடக்கும் சில நிகழ்வுகள் கதைகளை மிஞ்சும் திருப்பங்கள் நிறைந்தது என்று தோன்றுகிறது.

    மோகனகிருஷ்ணன்

    359/365

     
    • Uma Chelvan 11:20 am on November 27, 2013 Permalink | Reply

      ‪#‎மெய்யில்‬ வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்
      இவ் வையந் தன்னொடும் கூடுவ தில்லையான்
      ஐய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
      மையல் கொண்டொழிந் தேனென்றன் மாலுக்கே#

      விளக்கம் : “அனுகூலயஸ்ய சங்கல்ப: ப்ரதிகூல்யஸ்ய வர்ஜநம்” என்கிறபடியான இப்பாசுரத்தில் சாதிக்கிறார். நிலையற்ற இந்த உலகவாழ்கையை நிஜம் எனக்கொள்ளும், நம்பும் இந்த உலகத்தாரோடு நான் கூடுவதில்லை, ஐயனே-நிஷ்காரண- அரங்கனே உன்னையே அழைக்கின்றேன். என்மேல் அன்பு கொண்டுள்ள பெருமாளிடத்தில் பற்று கொண்டேன். வேண்டேன் இந்த நிலையற்ற வாழ்கையை விண்ணகர் மேயவனே என்று திருமங்கை ஆழ்வார் சாதித்தது போல.

    • amas32 6:59 pm on November 27, 2013 Permalink | Reply

      Jeffrey Archerன் அந்தக் கதை நானும் படித்திருக்கிறேன் 🙂 பாட்டினால் கதை கோத்துவிட்ட அழகு அபாரம் 🙂

      விதி வலியது என்று ஒரு கதா காலட்சேபப் பாடல் முடியும், அது தான் நினைவுக்கு வருகிறது 🙂

      amas32

    • kamala chandramani 8:56 am on November 28, 2013 Permalink | Reply

      ”நிஜ வாழ்க்கையில் நடக்கும் சில நிகழ்வுகள் கதைகளை மிஞ்சும் திருப்பங்கள் நிறைந்தது.” உண்மை.

  • G.Ra ஜிரா 11:20 pm on November 25, 2013 Permalink | Reply  

    கதைதாங்கிகள் 

    திரைப்படங்களில் பாடல்கள் தேவையா இல்லையா என்பதே இன்றைக்கு பெரிய விவாதமாகி விட்டது. பாடல்களே இல்லாமல் படம் எடுப்பதாக பெரிதாக விளம்பரமெல்லாம் செய்கிறார்கள்.

    பாடல்கள் இருந்தால் அந்தத் திரைப்படம் இயல்பான திரைப்படமே இல்லை என்ற அளவுக்கு இயக்குனர்கள் சிலரும் இசையமைப்பாளர்கள்(?!?) சிலரும் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.

    பிறந்தால் தாலாட்டு. இறந்தால் ஒப்பாரி. வளர்ந்தால் கும்மி. ஏற்றிறைக்க பாட்டு. நெல் குற்ற பாட்டு. நாற்று நட பாட்டு. தெருவில் ஆடினாலும் பாட்டு. கோயிலில் ஆடினாலும் பாட்டு. இப்படியெல்லாம் இருந்த ஒரு பண்பாட்டு வழி வந்த சமூகத்தில் பாடல்கள் உயிரோடு கலந்தவை. பண்பாடு என்னும் சொல்லில் இருக்கும் பண் என்ற சொல்லும் பாடு என்ற சொல்லும் இசையோடு தொடர்புள்ளவைதானே!

    அப்படியிருக்கும் போது பாடல்கள் திரைப்படத்தில் இடம் பெறுவது எப்படி தவறானதாக இருக்கும்?! எத்தனை காதலர்களுக்கு திரைப்படப் பாடல்கள் ஏணியாக இருந்திருக்கிறது தெரியுமா? எத்தனையோ பேரை சுசீலாம்மா தாலாட்டுப் பாடி தூங்க வைத்திருக்கிறார் தெரியுமா? டி.எம்.எஸ்சும் சீர்காழியும் பக்தியை வளர்த்து இன்னும் நம்பிக்கையை ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

    சரியான இடங்களில் பாடல்கள் பயன்படுத்தப் படுவதில்லை என்று சொல்வது ஏற்புடைய விமர்சனம். பாடல்களைப் பயன்படுத்துவதே தவறு என்று சொல்வது மிகத் தவறான கருத்து.

    ரா ரா சரசுக்கு ரா ரா
    ரா ரா செந்தக்கு சேரா

    சந்திரமுகி திரைப்படப் பாடல் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்தது. ஒட்டு மொத்தப் படத்தையும் தாங்கும் பாட்டு அது என்றால் மிகையாகாது.

    இத்தனைக்கும் அது தெலுங்குப் பாட்டு. தெலுங்குப் பாடலாசிரியர் புவன சந்திரா எழுதிய பாடல் வரிகள் சராசரி தமிழ் ரசிகனுக்குப் புரிந்திருக்கவும் புரிந்திருக்காது. ஆனாலும் மக்கள் கூட்டம் அந்த பாடலையும் படத்தையும் ரசித்து வெற்றி பெறச் செய்தது.

    சந்திரமுகி படத்தில் மற்ற எல்லாப் பாடல்களையும் யோசிக்காமல் வெட்டி நீக்கி விடலாம். படத்தின் ஓட்டமோ கதையம்சமோ சிறிதும் பாதிக்காது. ஆனால் இந்தப் பாடல்?

    ரா ரா சரசுக்கு ரா ரா” என்று எளிமையாகவும் அதே நேரத்தில் மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொள்ளும் படியும் தொடங்கும் இந்தப் பாடலை வெட்ட வேண்டும் என்றால் சந்திரமுகி என்ற மொத்தப் படத்தையுமே வெட்டி விடலாம்.

    இத்தனைக்கும் இந்தப் பாடல் காட்சி சிக்கலானது. இரண்டு வேறுவிதமான காலகட்டங்களை இணைக்க வேண்டும். அந்த இரண்டு காலகட்டங்களையும் இணைக்கும் ஒரு பெண்ணின் காதலை வெளிப்படுத்த வேண்டும். இன்றைய கங்கா தன்னை அன்றைய சந்திரமுகி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாளே.

    ஆக முக்கிய பாத்திரங்கள் எல்லாம் அவளுடைய மன மேடையில் இரட்டை வேடம் போட வேண்டிய சூழ்நிலை.

    இன்றைய டான்ஸ் புரபசர் விஸ்வநாதன் சந்திரமுகியாக மாறிக் கொண்ட கங்காவின் கண்களுக்கு அந்தக் காலத்து காதலனாகத் தெரிகிறான்.

    மனோதத்துவ மருத்துவம் படித்த டாக்டர் சரவணன் அவளுக்கு வேட்டையன் என்னும் கொடியவனாகத் தெரிகிறான். சந்திரமுகியின் காதலனையும் அவளையும் கொன்ற கொடியவன் அவன். அந்த வேட்டையனை பழி வாங்க வந்திருப்பதாக கங்கா என்னும் சந்திரமுகி நினைக்கிறாள்.

    இத்தனையையும் அந்த ஒரு பாட்டில் காட்ட வேண்டும். இந்தக் காட்சிக்கு தெலுங்குப் பாடலாசிரியர் பாட்டும் எழுத வேண்டும்.

    முதலில் அவள் தான் காதலைப் பாடுகிறாள். காதலனை ரா ரா என்று அழைக்கிறாள். உயிரே உன்னுடையதுதான் எடுத்துக் கொள் என்று தாம்பாளத்தில் வைத்து காதலைக் கொடுக்கிறாள்.

    பிராணமே நீதிரா
    யேலுகோ நா தொரா
    ஸ்வாசலோ ஸ்வாசவாய் ராரா

    அவன் மீது உண்டாக காதல் எந்த ஜென்மத்தில் உண்டான பந்தம் என்று புரியாத ஒரு ஈர்ப்பு.

    ஏ பந்தமோ இதி ஏ பந்தமோ
    ஏ ஜென்ம பந்தால சுமகந்தமோ

    பெண்ணான அவளே பாடிவிட்டாள். அவன் பாடாமல் இருப்பானோ. கனவோ நினைவோ என்று ஒரு குழப்பம். ஆனாலும் அது இனிமையாகத்தான் இருக்கிறது.

    ஏ ஸ்வப்னமோ இதி ஏ ஸ்வப்னமோ
    நயனால நடயாடு தொலி ஸ்வப்னமோ

    இப்படியாக இவர்கள் பாடும் போது வந்துவிடுகிறான் வேட்டையன். தான் கொண்டு வந்த பெண்ணொருத்தி இன்னொருவனை விரும்புவதா? அவனும் பாடுகிறான்.

    லக்க லக்க லக்க லக்க

    அந்தக் காதலன் தலை உருள்கிறது. அவள் உடல் எரிகின்றது.

    சரி. இப்படி வைத்துக் கொள்வோம். இந்தப் பாடல் இல்லை. ஆனால் இந்தப் பாடலில் வந்ததையெல்லாம் வேறுவிதமாக சொல்லிக் கொள்ளலாம் என்றால் என்ன செய்யலாம்?

    இன்னொரு திரைப்படம் தான் எடுக்க வேண்டும். முதலில் சந்திரமுகி ஆந்திர விஜயநகரத்தில் இருப்பதைக் காட்ட வேண்டும். பிறகு வேட்டையன் அங்கு செல்ல வேண்டும். சந்திரமுகியைப் பார்க்க வேண்டும். காதலில் விழ வேண்டும். அவளைக் கொண்டு வரவேண்டும். அவள் இன்னொருவனைப் பார்க்க வேண்டும். இருவரும் காதலை யாருக்கும் தெரியாமல் பரிமாறிக் கொள்ள வேண்டும். அதை வேட்டையன் பார்க்க வேண்டும். அவன் காதலனைக் கொல்ல வேண்டும். சந்திரமுகியை எரிக்க வேண்டும்.

    அப்பப்பா… எத்தனை வேண்டும்!!! இத்தனையையும் காண்பித்தால் படம் பார்க்கின்றவன் கொட்டாவி விட்டுக் கொண்டு கொக்கோ கோலா குடிக்கப் போயிருப்பான். படத்தை தயாரிக்க பணம் போட்டவர் வேட்டையன் போல லக்க லக்க லக்க லக்க என்று கதறிக் கொண்டு ஓடியிருப்பார். படத்தை எடுத்த இயக்குனர் அடுத்து எந்த வாய்ப்பும் கிடைக்காமல் தாம் த தீம்த தோம் ததோம் என்று தாளம் போட்டுக் கொண்டிருந்திருப்பார்.

    அதையெல்லாம் விடப் பெரிய கொடுமை… எதாவது ஒரு விடுமுறை நாளில்… எதாவது ஒரு தொலைக்காட்சியில் பொதுமக்களாகிய நாம் படத்தைப் பார்த்து கதறி அழ வேண்டும்.

    இத்தனை கொடுமைகளையும் நடக்க விடாமல் ஒரேயொரு பாடல் காட்சியைப் புகுத்தி படத்தின் விறுவிறுப்பைக் கூட்டி மக்களை ரசிக்க வைத்ததை பாராட்டத்தான் வேண்டும்.

    தமிழ்ப் படத்தில் தெலுங்குப் பாட்டெழுதிய கவிஞர் புவன சந்திராவுக்கு ஒரு லக்க லக்க லக்க லக்க…….

    அன்புடன்,
    ஜிரா

    358/365

     
    • rajinirams 11:44 am on November 26, 2013 Permalink | Reply

      நல்ல பதிவு,நீங்கள் சொன்னது போல பல காட்சிகளை ஐந்து நிமிட பாடலிலேயே விளக்க வைக்கலாம்.,அதுவும் வேற்று மொழியிலேயே என்பதற்கு நல்ல உதாரணம் கவிஞர் புவனசந்திராவின் “ரா ரா” பாடல்.
      முன்பு ஒரு முறை வண்ணக்கனவுகள்,கடமை கண்ணியம் கட்டுப்பாடு போன்ற படங்கள் வந்து கொண்டிருந்த
      போது ஒரு விழாவில் வைரமுத்து வாலியிடம் இது பற்றி பேச, ஆமாம்,முதல்ல பத்து பாட்டு,எட்டு பாட்டு,நாலு பாட்டுன்னு போய் “நிப்பாட்டு”ன்னு சொல்லிடுவாங்க போலருக்கே என்று நகைச்சுவையாக கூறினாராம்.
      ஒரு முறை வாலியை சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது என்ன சார் கதையை சொல்வது போன்ற situation பாடல் அவ்வளவா வர்றதில்லையே என்றேன்,ஒரு நொடி கூட யோசிக்காமல் என்ன பண்றது situation அப்படியிருக்கு என்றாரே பார்க்கலாம்!. அவர் கூறியது போல “சொன்னது நீ தானா”எங்கிருந்தாலும் வாழ்க”போன்ற சூழலுக்கேற்ற பாடல்களெல்லாம் இனி வர வாய்ப்பேயில்லை. இதே போன்று வறுமையின் நிறம் சிவப்பு,நண்டு போன்ற படங்களிலும் ஹிந்தி பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளும் சேர்ந்து ஒலிக்கும் ஒரே இந்திய திரைப் பாடல்-வாலியின் இந்திய நாடு என் வீடு மட்டுமே.நன்றி.

    • Uma Chelvan 3:52 pm on November 26, 2013 Permalink | Reply

      பெற்றெடுத்த உள்ளமென்றும்தெய்வம் தெய்வம் …………..இதில் முழுக்கதையும் அடங்கி உள்ளது.

    • amas32 7:08 pm on November 26, 2013 Permalink | Reply

      // படத்தை தயாரிக்க பணம் போட்டவர் வேட்டையன் போல லக்க லக்க லக்க லக்க என்று கதறிக் கொண்டு ஓடியிருப்பார்.// LOL

      ஒரு பாடலிலேயே ஏழை ஹீரோ பேப்பர் போட்டு, சாப்பாட்டுக் கடை வைத்து மல்டி மில்லியனர ஆகிவிடுவார். ஒரே பாடலில் குழந்தை வளர்ந்து பெரியவளாகிவிடும். இதெல்லாம் இல்லையென்றால் தமிழ் ரசிகனால் படத்தை ரசிக்கவே முடியாது.

      விறுவிறுவென்று கதையைச் சொல்லி முடிக்க பாடல்களில் கொலாஜ் மாதிரி காட்சிகளை அமைத்து ஐந்து நிமிடத்தில் பத்து வருடக் கதையைக் கூட எளிதாக முடித்துவிடலாம்.

      நீங்கள் குறிப்பாக இந்தப் பாடலை எடுத்துக் கொண்டதற்கு ஸ்பெஷல் பாராட்டு. க்ளைமாக்சில் சீட்டின் நுணியில் உட்காரவைக்கும் இந்தப் பாடல். எனக்கும் தெலுங்கு தெரியாததால் இன்று தான் முழுப் பொருளும் தெரிந்தது. அனால் நீங்கள் கூறியபடி சுமாராக நாமே அது தான் பாடலாசிரியர் சொல்லியிருப்பார் என்று அனுமானித்து ரசிக்கலாம் 🙂

      amas32

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel