Updates from May, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • mokrish 11:07 am on May 15, 2013 Permalink | Reply  

    குமரிப் பெண்ணும் குழந்தைப் பெண்ணும் 

    காற்றின் வகைகள் பற்றி நண்பர் @ragavanG எழுதிய பதிவில்  ‘குழந்தைகள் கூட குமரியும் ஆட’ என்ற வரியைப் படித்தவுடன்  இந்த குழந்தை / குமரி வார்த்தைகள் ஜோடியாக  மற்ற பாடல்களிலும் வந்திருக்கிறதே என்று தோன்றியது. அப்புறம் நண்பர் @narraju எழுதிய அம்மானை பதிவில் கதாநாயகியை ஒரு குழந்தையாக பாவித்துக் காதலன் ‘பிள்ளைத் தமிழ்’  பாடுவது பற்றி படித்தவுடன் ஒரு சின்ன ஆராய்ச்சி.

    குழந்தை , குமரி ஒன்றாக வருவது முதல் எழுத்து ஒன்றி வரும் மோனை நயத்துக்காக மட்டும்தானா? அல்லது பெண்ணின் வெவ்வேறு நிலைகள் சொல்ல எழுதியதா? அல்லது வேறு பொருள் சொன்னதுண்டா?

    வைரமுத்து இதை வர்ணனை / காதல் / சிறுமி குமரியாகும் மாற்றம்  என்ற வட்டத்தில் பல பாடல்களில் உபயோகிக்கிறார். சிவாஜி படத்தில் வரும் வாஜி வாஜி என் ஜீவன் என்ற பாடலில் (இசை ஏ ஆர் ரஹ்மான் பாடியவர்கள் ஹரிஹரன், மதுஸ்ரீ ) http://www.youtube.com/watch?v=M7Et_8BgKFU

    அடடடா குமரியின் வளங்கள், குழந்தையின் சிணுங்கல்

    முரண்பாட்டு மூட்டை நீ

    என்று ஒரு வரி. அலைபாயுதே படத்தில் காதல் சடுகுடு பாடலில் (இசை ஏ ஆர் ரஹ்மான் பாடியவர்கள் SPB சரண், நவீன் ) http://www.youtube.com/watch?v=rmxs7b9Y5HE

    ஓஹோ.. பழகும் போது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே படுக்கையறையில் குழந்தையாகி என்னை கொல்வாய் கண்ணே

    என்று வரிகள். தாஜ்மஹால் படத்தில் சொட்ட சொட்ட நனையுது (இசை ஏ ஆர் ரஹ்மான் பாடியவர் சுஜாதா  ) https://www.youtube.com/watch?v=VsWo2pVYSnQ

    உனக்காக உயிர் பூத்து நின்றேன் உனக்காக கன்னிகாத்து நின்றேன்

    இன்னும் நானும் சிறுமிதான் எப்போதென்னைப் பெண் செய்குவாய்

    என்ற வரிகள் – இப்படி சிறு வட்டத்தில் சுழல்கிறார்.

    கண்ணதாசன் பார்வை வேறு. கை கொடுத்த தெய்வம் படத்தில் வரும் ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ என்ற பாடலில் (இசை கே வி மகாதேவன், பாடியவர் டி எம் சௌந்தரராஜன் ) http://www.youtube.com/watch?v=NG7YOfSz8-A

    உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ

    பார்வையிலே குமரியம்மா

    பழக்கத்திலே குழந்தையம்மா

    என்று ஒரு வெகுளிப்பெண் பற்றி சொல்வது போல அழகான  வரிகள்.  அரங்கேற்றம் படத்தில் வரும் ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது என்ற பாடலில் (இசை வி குமார் பாடியவர் பி சுசீலா) வரும் கண்ணதாசனின் வரிகள் ஒரு பெண்ணுக்கு இந்த சமுகத்தில் வெவ்வேறு நிலைகளில் உள்ள constraints என்ன என்று சொல்கிறது.

    குழந்தையிலே சிரிச்சதுதான் இந்த சிரிப்பு

    அதை குமரிப் பொண்ணு சிரிக்கும்போது என்ன வெறுப்பு

    அக்னி சாட்சி என்ற படத்தில் வாலியின் வரிகளை MSV இசையில் SPB பாடும் கனாக் காணும் கண்கள் மெல்ல என்ற பாடலில் http://www.youtube.com/watch?v=rPuFA8wSEwU

    குமரி உருவம் குழந்தை உள்ளம்

    ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ

    தலைவன் மடியில் மகளின் வடிவில்
    தூங்கும் சேயோ!

    நாயகி பெரும் மனக்குழப்பத்தில் இருக்கும்போது நாயகன் அவளை அமைதிப்படுத்த பாடும் ஒரு தாலாட்டு. வாலிக்கு ஜே!

    அதே இரண்டு வார்த்தைகள். ஆனால் வேறு வேறு கோணங்கள். பார்வைகள். Interesting!

    மோகனகிருஷ்ணன்

    165/365

     
    • amas32 11:19 am on May 15, 2013 Permalink | Reply

      What a beautiful collage you create by picking lines from various songs! குழந்தை வளர்ந்து குமரியாகிறாள். அதனால் குமரிக்குள் சிறு குழந்தை இன்னும் ஒளிந்துகொண்டு இருப்பது ஆச்சர்யம் இல்லை. அதுவே குமரிக்குள் அதிகக் குழந்தைத்தனம் இருந்தால் மன வளர்சிக் குன்றியவராகக் கருதிவிடுவோம். சரியான விகிதாச்சாரத்தில் இருந்தாலே ரசிக்க முடியும். குழந்தையாக இருக்கும்போதே குமரியாக நடந்துகொண்டாலும் பிஞ்சில பழுத்துவிட்டது என்ற அவப் பெயர் தான் மிஞ்சும்.

      ஆனாலும் கவிஞர்களுக்கு எப்பவுமே poetic liberty உண்டு, இந்த மாதிரி எழுத 🙂
      அருமையான பதிவு!

      amas32

    • vaduvurkumar 11:28 am on May 15, 2013 Permalink | Reply

      நல்ல ஆராய்ச்சி.

    • ராஜூ 7:44 pm on May 15, 2013 Permalink | Reply

      உங்களுக்கு சும்மா டக்கு டக்குன்னு வந்து விழுகுதுங்க வரிகள்! கலக்கல்.

    • rajnirams 10:56 am on May 16, 2013 Permalink | Reply

      அருமை.ரிதம் படத்தில் நதியே நதியே பாடலின் வரிகளும் அருமையாக இருக்கும்.”சமைந்தால் குமரி,மணந்தால் மனைவி ,பெற்றால் தாயல்லோ”.நன்றி.

    • GiRa ஜிரா 11:02 pm on May 16, 2013 Permalink | Reply

      குமரியோ குமரனோ… ஒருவர் மடியில் ஒருவர் விழும் போது குழந்தைதான்.

      நானொரு குழந்தை நீயொரு குழந்தை
      ஒருவர் மடியிலே ஒருவரடி – கவிஞர் வாலி

  • G.Ra ஜிரா 11:02 am on May 13, 2013 Permalink | Reply  

    மருதாணிச் சாறெடுத்து… 

    சென்னை தியாகராயநகரில் பனகல் பூங்காவின் ஓரமாக வரிசையாக வடக்கத்தி இளைஞர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் இளம் பெண்கள் கைகளில் விதம்விதமாக மெஹந்தி இட்டுக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் திருமண அலங்காரத்திலும் மெஹந்தி முக்கியமாக இருக்கிறது.

    மெஹந்தி என்ற சொல் வேண்டுமானால் தமிழர்களுக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் மெஹந்தி புதியதல்ல. மிகமிகப் பழையது.

    என்னுடைய சிறுவயதில் வீடுகளில் மருதாணி அரைத்து பெண்களும் சிறுமிகளும் இட்டுக் கொள்வார்கள். சிறுவர்களும் கூடத்தான்.

    மருதாணி இலையை நன்கு கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை அப்படியே அம்மியில் அரைப்பவர்களும் உண்டு. அத்தோடு கொட்டைப்பாக்கு, புளி, தயிர் ஆகியவைகளையும் சேர்த்து அரைப்பவர்களும் உண்டு.

    வீட்டில் ஒருவர்தான் எல்லாருக்கும் மருதாணி இடுவார். இட்டு முடித்திருக்கும் போது அவர் விரல்கள் தாமாகவே சிவந்திருக்கும். அதெல்லாம் அந்தக்காலம். பிறகு மருதாணிச் செடிகள் வைக்க வீடுகளில் இடமில்லாமல் போன போது மருதாணிப் பொடி பாக்கெட்டுகளில் வந்தது. ஆனால் அது அவ்வளவு பிரபலமாகவில்லை. அதற்குப் பின்னால் வந்த மெஹந்தி கூம்பு மிகவும் பிரபலமாகி விட்டது.

    கை படாமல் இட்டுக் கொள்ள முடியும். மெல்லிதாகவும் இட முடியும். இப்படி வசதிகள் வந்த பிறகு மருதாணி அரைப்பது என்பதே இல்லாமல் போனது. அரைக்க விரும்பினாலும் எத்தனை வீடுகளில் அம்மி இருக்கிறது?

    இந்த மருதாணி திரைப்படங்களில் நிறைய வந்திருக்கிறது.

    மருதாணி விழியில் ஏன்” என்று கண்கள் சிவந்திருப்பதை வாலி அழகாக சக்கரக்கட்டி படத்தில் உவமித்திருக்கிறார்.
    மருதாணி பூவைப் போல குறுகுறு வெட்கப்பார்வை” என்று காதலியின் பார்வையை வம்சம் படத்தில் நா.முத்துக்குமார் வர்ணித்திருக்கிறார்.
    மருதாணி வெச்ச பொண்ணு இவதான்” என்று கிராமத்துப் பெண்ணை அன்னை வயல் படத்தில் இனங்காட்டுகிறார் பழனிபாரதி.
    மருதாணி அரைச்சேனே உனக்காக பதமா” என்று கூட பாட்டு உண்டு.
    இன்னும் எத்தனையெத்தனையோ பாடல்கள் உண்டு. பட்டியல் பெரிது.

    மருதாணிக்கு மருதாணி என்று பெயர் வந்தது எப்படி என்று தெரியுமா? அதன் பழைய பெயர் மருதோன்றி.

    இலையின் சாறினால் சிவந்த மரு தோன்றுவதால் மருதோன்றி என்று அதற்குப் பெயர். பழைய இலக்கியங்களில் சுருக்கமாக தோன்றி என்றே அழைத்திருக்கிறார்கள். ஒரேயொரு எடுத்துக்காட்டு மட்டும் பார்க்கலாம். பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக மதுரை கண்ணங்கூத்தனால் எழுதிய கார் நாற்பதில் இப்படியொரு பாட்டு.

    கருவிளை கண்மலர் போற் பூத்தன கார்க்கேற்
    றெரிவனப் புற்றன தோன்றி – வரிவளை
    முன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறும்
    இன்சொற் பலவு முரைத்து

    இந்தப் பாடலுக்கு இரண்டு விதப் பொருள்கள் தோன்றுகின்றன. இரண்டையும் தருகிறேன். பொருத்தமானதைக் கொள்க.

    கார்காலம் வந்து விட்டது. கருவிளை மலர்கள் மாதரார் மாவடுக் கண்கள் போல விழித்துப் பூத்திருக்கின்றன. எரிகின்ற காட்டைப் போல செக்கச் சிவந்திருக்கிறது மருதாணிப்பூக்கள். ஆனாலும் வளையலை நழுவ விட்டன காதலியின் கைகள். பிரிந்து சென்ற தலைவன் வரவைச் சொல்ல முடியாத நிலையால் எதையும் சொல்லாமல் தவிர்த்தாள் தலைவி.

    அடுத்த பொருள். கார்காலம் வந்து விட்டது. தலைவியின் கண்கள் கருவிளை மலர்களைப் போன்று பூத்து தலைவன் வருகைக்காக விழித்திருக்கின்றன. எரிகின்ற காட்டைப் போன்று செக்கச் சிவந்த மருதாணி அணிந்த கைகளில் வளையல்கள் நழுவி விழுந்தன. பிரிந்து சென்ற தலைவன் வரவைச் சொல்ல முடியாத நிலையால் எதையும் சொல்லாமல் தவிர்த்தாள் தலைவி.

    இந்தச் செய்யுளில் தோன்று என்று அழைக்கப்படுவது மருதோன்றி.

    அது சரி. யாரெல்லாம் தங்கள் கைகளில் மருதாணி இட்டு மகிழ்ந்திருக்கின்றீர்கள்? 🙂

    அன்புடன்,
    ஜிரா

    163/365

     
    • amas32 11:17 am on May 13, 2013 Permalink | Reply

      மருதாணியை மிக்சியில் போட்டு அரைப்பது கடினம். சரியாகவே அரைபடாது. திப்பி திப்பியாக இருக்கும். அதற்கு அம்மி அல்லது கல்லுரல் தான் சரி. மருதாணி இட்டுக் கொள்ள பிடிக்காத பெண்களே இருக்க முடியாது என்று சொல்லல்லாம். சில வீடுகளில் சிறுவர்களும் முன் காலத்தில் இட்டுக் கொள்வர் 🙂 மணமகனுக்கு நலுங்கு வைப்பது போல கையில் மருதாணி இடுவதும் வழக்கம்.

      மருதாணி பூக்களுக்கு நல்ல நறுமணம் உண்டு. இரவு நேரத்தில் கும்மென்று மணம் வீசும். கதம்ப மாலையில் சேர்த்துக் கட்டுவது வழக்கம்.

      மருதாணி இட்ட கைகளால் உண்ணும்போது அந்த உணவுக்கும் தனி மணம் வரும். கையில் இட்ட மெஹந்தி கோலங்கள முதல் சில நாட்கள் நன்றாக இருந்தாலும் அதன் பின் கை மோர்குழம்பு மாதிரி ஆகிவிடும். ஆனால் அரைத்து இட்டுக் கொள்ளும் மருதாணி ரொம்ப நாட்கள் அழியாமல் அழகாகக் காட்சியளிக்கும் 🙂

      amas32

      • GiRa ஜிரா 9:47 am on May 15, 2013 Permalink | Reply

        உண்மை. உரல் அல்லது அம்மியில்தான் அரைக்க வேண்டும். ஒரேயொரு கொட்டைப்பாக்கையும் வைத்து அரைத்துவிட்டால் அட்டகாசம்.

    • vaduvurkumar 1:48 pm on May 13, 2013 Permalink | Reply

      பல முறை இட்டுக்கொண்டுள்ளேன்.

      • GiRa ஜிரா 9:47 am on May 15, 2013 Permalink | Reply

        சிறுவயதில் எல்லாரும் வெச்சிருப்போம்னு நெனைக்கிறேன். 🙂

    • kamala chandramani 2:29 pm on May 13, 2013 Permalink | Reply

      மருதாணிப்பூக்கள் இளம் மஞ்சள் நிறத்தில் சிறியதாக இருக்கும். நல்ல மணம் வீசும். 15 நாட்களுக்கு ஒருமுறை இட்டுக்கொள்ள நகங்கள் நகப்பூச்சு(nailpolish) பூசியதுபோல் அழகாக இருக்கும். கால் நகங்களுக்கு பாதுகாப்பு. கால் ஆணிக்கு மருந்து. உடலுக்கு குளிர்ச்சி. மெஹந்தி சீக்கிரம் போய்விடும். கைமணக்க நிறைய நாள் இருக்கும் மருதாணி.

      • GiRa ஜிரா 9:48 am on May 15, 2013 Permalink | Reply

        மெஹந்தியில் ஏதோ கெமிக்கல் சேக்கிறாங்களாம். அதான் பக்குன்னு ஒடனே பிடிச்சுக்குதுன்னு சொல்றாங்க. என்னைக் கேட்டா மருதாணிதான் சிறப்புன்னு சொல்வேன் 🙂

    • saba 7:54 pm on May 14, 2013 Permalink | Reply

      இயற்கையாக இருக்கும் மருதாணிச் சாறு சந்ததி சந்ததியாக பாவிக்கப்பட்டது. ஒரு பக்க விளைவயும் தோற்றுவிக்கவில்லை.
      தற்போது கூம்புகளில் விற்கப்படும் ஒரு வகை black “ஹென்னா” தோல்களில் கெடுதலை விளைவிக்கிற்து.
      A chemical PPD is added to make the stain darker for the temporary tattoo and it creates rashes on the skin. these are mainly use in Bali , an Indonesian Island.
      check the link below:
      (http://www.expat.or.id/medical/blackhennareactions.html)

      • GiRa ஜிரா 9:48 am on May 15, 2013 Permalink | Reply

        சரியான தகவலை எடுத்துக் கொடுத்தீர்கள். இயற்கையான முறைகளை விட்டுவிடக்கூடாது என்பது எவ்வளவு உண்மை.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel