Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • G.Ra ஜிரா 11:41 pm on November 28, 2013 Permalink | Reply  

    பெண்களின் பண்கள் 

    தமிழ் சினிமாவில் இரண்டு பெண்கள் சேர்ந்து பாடினால் அது ஒரே ஆணைப் பற்றியதாக மட்டுமே இருக்கும். இது ஆண்டாண்டு காலமாக மாறாத விதி. விதிவிலக்குப் பாட்டுகள் உண்டு என்றாலும் கதையில் இரண்டு பெண்கள் இருந்தால் ஒரு ஆண் என்று முக்கோணக் காதலை வைப்பது இன்றைக்கும் இயக்குனர்களுக்கு மிகவும் பிடித்த செயல்.

    வழக்கம் போல முதலில் நினைவுக்கு வருவது கவியரசர் தான். இதைச் சொல்வது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டது. பாதகாணிக்கை படத்தில் இரண்டு பெண்கள் ஒருவனையே நினைத்துப் பாடுவார்கள்.

    உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
    உனது நிலா விண்ணிலே எனது மலர் கண்ணிலே

    எப்படி அடித்துக் கொள்கிறார்கள் பார்த்தீர்களா? ஒருத்தி அத்தை மகளாகப் பிறந்தவள். இன்னொருத்தி அவனோடு உறவாக வளர்ந்தவள். அதையும் போட்டியில் இழுத்துவிடுகிறார்கள்.

    ஒருத்தி: பிறந்த போது பிறந்த சொந்தம் இருந்ததம்மா நினைவிலே
    இன்னொருத்தி: வளர்ந்த போது வளர்ந்த சொந்தம் வளர்ந்ததம்மா மனதிலே

    அடுத்ததாக கவிஞர் வாலி இரண்டு பெண்களை சண்டை போட வைக்கப் போகிறார். அந்த இரண்டு பெண்களையும் ஏமாற்றியது ஒருவன் தானோ என்று அவர்கள் பாடுகிறார்கள்.

    ஒருத்தி: மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
    நிலவுக்கு வானம் பகையானல் அது நடந்திட வேறே வழி ஏது
    இன்னொருத்தி: பறவைக்குச் சிறகு பகையானால் அது பதுங்கி வாழ்ந்திட கால்களுண்டு
    உறவுக்கு நெஞ்சே பகையானால் மண்ணில் பெருகிட வகையேது

    அவர்கள் இரண்டு பேர்களின் வாழ்க்கையையும் ஒருவன் ஏமாற்றி அழித்து விட்டது போல ஒப்பாரி. ஆனாலும் இனிய பாடல்.

    அடுத்து நாம் பார்க்கப் போவது ஒருவருக்குத் தெரியாமல் ஒரே ஆணை விரும்பிய இரண்டு தோழிகளை. ஆனால் ஒருத்தியின் காதல்தான் கைகூடுகிறது. சில நாட்கள் கழித்து ரகசியம் தோழிக்குத் தெரிந்து விடுகிறது. தோழியின் ஆசையைத் திருடிவிட்டோமோ என்று அவளுக்கு ஒரு வருத்தம். தோழியர் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டிருந்தாலும் புரியாதது போலவே பாடுகிறார்கள். நீங்களே பாட்டைப் பாருங்கள்.

    ஒருத்தி:
    அடி போடி பைத்தியக்காரி
    நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா

    இன்னொருத்தி
    அடி போடி பைத்தியக்காரி
    நான் புரிந்தவள் தான் உன்னைத் தெரிந்தவள் தான்

    இவர்கள் நல்ல தோழிகள். சண்டையிட்டுக் கொள்ளவில்லை. தன் காதல் வெற்றி பெற்றதே என்று எண்ணாமல் தோழியில் காதல் தோற்றுப் போனதே என்று வருந்திப் பாடுகிறாள் ஒருத்தி.

    இறைவன் ஒரு நாள் தூங்கிவிட்டான்
    எழுத்தைக் கொஞ்சம் மாற்றிவிட்டான்

    இப்படியெல்லாம் யார் எழுதியிருப்பார்கள்? வேறு யார்? கவியரசரேதான்.

    இன்னும் இரண்டு பேர்கள் இருக்கிறார்கள். இவர்களும் தோழிகள். இவர்கள் இருவரையும் திருமணம் செய்தவன் ஒருவனே. ஆனால் அது இருவருக்குமே தெரியாது. அந்த உண்மை தெரியாமல் இருவரும் சேர்ந்து சுமங்கலி பூஜை செய்கிறார்கள்.

    மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
    மங்கல மங்கை மீனாட்சி
    உள்ளம் ஒருவன் சொந்தம் என்றாள்
    தேவி எங்கள் மீனாட்சி

    பாவம். பின்னால் அவர்கள் உண்மை தெரிந்து கொதிக்கப் போவதை அப்போது அறியாமல் பாடியிருக்கிறார்கள். இதே கதை பின்னால் கற்பூரதீபம் என்ற பெயரில் வந்தது. அங்கும் உண்மை தெரியாமல் இரண்டு தோழிகளும் பூஜை செய்கிறார்கள்.

    காலகாலமாய்ப் பெண் தானே கற்பூர தீபம்
    காவல் கொண்ட மன்னன் தானே தெய்விக ரூபம்

    இரண்டு பெண்டாட்டிக்காரன் கதைகள் என்றால் மக்களுக்குப் பிடித்திருக்கிறது என்றே தோன்றுகிறது. நம்மூர் சாமிகளே அப்படித்தானே!

    இவர்களாவது திருமணம் ஆனவர்கள். திருமணம் ஆகும் முன்னமே அக்காவும் தங்கையும் ஒருவனையே நினைத்துப் பாடிய கதைகளும் உண்டு. நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தைத்தான் சொல்கிறேன். இந்த முறை பாட்டெழுதியது கவிஞர் வைரமுத்து.

    மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு
    தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு

    இந்த வரிசையில் இருகோடுகள் திரைப்படத்தை எப்படி மறக்க முடியும்? வாலியின் வார்த்தை விளையாட்டுகளில் ஒளிரும் “புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்” பாட்டை விட்டு விட்டு இந்தப் பதிவை எழுத முடியுமா? சாமிகளையே சண்டைக்கு இழுத்துப் பாடிய பாட்டாயிற்றே.

    அவள்: தேவன் முருகன் கோயில் கொண்டது வள்ளியின் நெஞ்சத்திலே
    இவள்: அவன் தெய்வானை என்றொரு பூவையை மணந்தது திருப்பரங்குன்றத்திலே

    வள்ளியும் தெய்வானையும் கூட இப்படிச் சண்டை போட்டிருக்க மாட்டார்கள்!

    இன்னொரு அக்கா தங்கையைப் பார்க்கப் போகிறோம். அக்காவுக்குப் பார்த்த மாப்பிள்ளை அவன். ஆனால் திருமணம் நின்றுவிடுகிறது. தங்கையோடு அவனுக்குக் காதல் உண்டாகிறது. அப்போது அவர்களுக்குள் போட்டிப் பாட்டு வைக்காமல் இருக்க முடியுமா?

    ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
    திருமாலைத்தானே மணமாலை தேடி
    எந்த மங்கை சொந்த மங்கையோ
    ஓ எந்த கங்கை தேவ கங்கையோ

    போன பாட்டில் முருகன் மாட்டிக் கொண்டால் இந்தப் பாட்டில் மகாவிஷ்ணு மாட்டிக் கொண்டார். அவருக்கும் இரண்டுதானே!

    இன்னும் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிச் சொல்லாமல் பதிவை முடிக்க விரும்பவில்லை. அவன் அவளைத்தான் விரும்பினான். விதி பிரித்தது. அத்தை மகளை மணந்தான். மகிழ்வாகத்தான் இருந்தான். போனவள் வந்தாள். பிரச்சனையும் வந்தது. அத்தை மகளோ அப்பாவி. தெரியாத்தனமாக “ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அவளைக் கேட்டு விடுகிறாள்.” உடனே ஒரு பாட்டு.

    கடவுள் தந்த இருமலர்கள்
    கண் மலர்ந்த பொன் மலர்கள்
    ஒன்று பாவை கூந்தலிலே
    ஒன்று பாதை ஓரத்திலே

    சோகத்தைக் கூட அழகாகச் சொல்லியிருக்கிறார்கள் கவிஞர்கள். அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.

    இந்தச் சக்களத்திச் சண்டை பழைய படங்களோடு முடிந்து போகவில்லை என்று நிருபிக்க வந்ததோ பஞ்சதந்திரம் திரைப்படம்! ஒருத்தி மனைவி. இன்னொருத்தி மனைவியாக நடிப்பவள். அவர்களுக்குள் ஒரு போட்டிப் பாட்டு.

    வந்தேன் வந்தேன் மீண்டும் மீண்டும் வந்தேன்
    வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
    எனது கனவை எடுத்துச் செல்ல வந்தேன்

    நல்லவளைப் போல அமைதியாகப் பாடுகிறாள் நடிக்க வந்தவள். கட்டிக் கொண்டவள் சும்மா இருப்பாளா? புலியாய்ப் பாய்கிறாள்.

    பந்தியில பங்கு கேட்டா விட்டு தருவேன்
    என் முந்தியில பங்கு கேட்டா வெட்டிப் புடுவேன்
    அடி கண்டவளும் வந்து கைய வைக்க
    அவர் கார்பரேஷன் பம்ப் அல்ல

    இவர்கள் கதை இப்படியிருக்க இன்னும் இரண்டு பெண்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அவர்களைப் பற்றிச் சொல்லவில்லை என்றால் இந்தப் பதிவு முழுமை பெறவே பெறாது. ஒருத்தி மேடையில் ஆடிக் கொண்டிருக்கிறாள். அந்த ஆட்டத்தை இன்னொருத்தி விரும்புகிறவன் ரசிக்கிறான். அதை இன்னொருத்தியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவளும் மேடையில் குதித்து சரிக்குச் சரி ஆடுகிறாள். சபாஷ் சரியான போட்டி என்று தமிழுலகம் ரசித்த பாடல் இது.

    முதலாமவள் அமைதியாகத்தான் ஆடுகிறாள். பாடுகிறாள்.

    கண்ணும் கண்ணும் கலந்து இன்பம் கொண்டாடுதே
    என்னும் போதே உள்ளம் பந்தாடுதே

    அடுத்தவள் ஆங்காரமாக வரும் போதே ஆர்ப்பாட்டமாகத்தான் பாடுகிறாள்.

    ஜிலுஜிலுஜிலுவென நானே ஜெகத்தை மயக்கிடுவேனே
    கலகலகலவென்று ஜோராய் கையில் வளை பேசும் பாராய்

    இன்னொருத்தி வந்ததும் முதலாமவள் தன்மானம் உரசப்படுகிறது. அவளும் போட்டியில் குதிக்கிறாள்.

    ஆடும் மயில் எந்தன் முன்னே என்ன ஆணவத்தில் வந்தோயோடி
    பாடுங்குயில் கீதத்திலே பொறாமை கொண்டு படமெடுத்து ஆடாதேடி

    பார்த்தீர்களா… தான் விரும்புகிறவன் இன்னொருத்தியின் நடனத்தை ரசித்தான் என்று தெரிந்ததும் ஆடல் அரங்கத்தைப் போட்டி போடல் அரங்கமாக மாற்ற பெண்களால்தான் முடியும்.

    எது எப்படியோ! காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறினாலும்… கவிஞர் முத்துலிங்கம் எழுதியதைப் போல “என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான்” என்று இரண்டு பெண்கள் சண்டையிட்டுக் கொண்டால் அதை மக்கள் ரசிக்கத்தான் செய்வார்கள் என்பது மட்டும் மாறவே மாறாது போல!

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

    பாடல் – உனது மலர் கொடியிலே
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.இராமமூர்த்தி
    படம் – பாதகாணிக்கை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=grVbM9WJZks

    பாடல் – மலருக்குத் தென்றல் பகையானால்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன், டி.கே.இராமமூர்த்தி
    படம் – எங்க வீட்டுப் பிள்ளை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=jlGlD41oxJg

    பாடல் – அடி போடி பைத்தியக்காரி
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – தாமரை நெஞ்சம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=gxU3uBgng-E

    பாடல் – மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – ஜிக்கி, எஸ்.ஜானகி
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – தேனும் பாலும்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=KzcZFwOZSuk

    பாடல் – காலம் காலமாய் பெண் தானே
    வரிகள் – கங்கையமரன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, எஸ்.ஜானகி
    இசை – கங்கையமரன்
    படம் – கற்பூரதீபம்
    பாடலின் சுட்டி – http://youtu.be/SeZ6Z5ysm20

    பாடல் – மல்லிகையே மல்லிகையே
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர்கள் – அனுராதா ஸ்ரீராம், சித்ரா
    இசை – தேனிசைத் தென்றல் தேவா
    படம் – நினைத்தேன் வந்தாய்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Nu3uPoeEuss

    பாடல் – ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, வாணி ஜெயராம்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – தேவியின் திருமணம்
    பாடலின் சுட்டி – http://www.inbaminge.com/t/d/Deiviyin%20Thirumanam/Sridevi%20Varam%20Ketkiral.vid.html

    பாடல் – கடவுள் தந்த இருமலர்கள்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – இருமலர்கள்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=X7RxuQ4tUwU

    பாடல் – புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – ஜமுனாராணி, பி.சுசீலா
    இசை – வி.குமார்
    படம் – இருகோடுகள்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=hCR7rD4-K7c

    பாடல் – வந்தேன் வந்தேன் மீண்டும்
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர்கள் – நித்யஸ்ரீ, சுஜாதா
    இசை – தேனிசைத் தென்றல் தேவா
    படம் – பஞ்சதந்திரம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=sErsh9Kg7bk

    பாடல் – கண்ணும் கண்ணும் கலந்து
    வரிகள் – கொத்தமங்கலம் சுப்பு
    பாடியவர்கள் – ஜிக்கி, பி.லீலா
    இசை – சி.இராமச்சந்திரா
    படம் – வஞ்சிக்கோட்டை வாலிபன்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=AMotc9NQ9B8

    பாடல் – என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான்
    வரிகள் – கவிஞர் முத்துலிங்கம்
    பாடியவர்கள் – பி.எஸ்.சசிரேகா, எஸ்.பி.ஷைலஜா
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – கோபுரங்கள் சாய்வதில்லை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=_XjWcWHbB7A

    அன்புடன்,
    ஜிரா

    361/365

     
    • prabakar 6:42 am on November 29, 2013 Permalink | Reply

      படம் பெயர் நினைவில் இல்லை.கே.ஆர். விஜயாவும் ஜெயசுதாவும் பாடியிருக்கும் பாட்டு. அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து தீபம். எப்படி வேண்டுமானாலும் பெண்கள் வாழலாம் என்பதற்கும் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை கவிஞர் கண்ணதாசன் அருமையாக கூறியிருப்பார். கோடி பெண்களை பூமி கண்டது தெய்வமானவள் சீதை. என்ற அற்புதமான வரிகள் உள்ள பாடல் இந்த பாடலில் ஆண் நாயகன் குறித்து பாடப் படவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

    • Uma Chelvan 7:33 am on November 29, 2013 Permalink | Reply

      இரண்டு பெண்கள் ஒரு ஆணுக்காக பாடியது போலவே, இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணுக்காக ஏங்கி பாடியதும் உண்டே.!!! நம்ம அல்லா ரெக்ஹா இசையில் அருமையான “சஹானா” ராகத்தில் .

      என்னை கேட்டு காதல் வரவில்லையே ,
      நான் சொல்லி காதல் விடவில்லையே !!
      மறந்தாலும் காதல் மறக்காதம்மா !!

      ஒ வெண் நிலா …..இரு வானிலா !!

    • kamala chandramani 8:31 am on November 29, 2013 Permalink | Reply

      பன்னிரண்டு பாடல்கள் ஒரே பதிவில் முதன்முறையாக? என்ன ஆராய்ச்சி? நிஜமாகவே என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. வாழ்த்துகள் ஜி.ரா.

    • umakrishh 9:56 am on November 29, 2013 Permalink | Reply

      நல்ல ஆராய்ச்சி..:) புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக பாமா விஜயம்..அப்புறம் மல்லுவேட்டி மைனர் ல கூட ஒரு பாடல் வருமே..

    • rajinirams 10:05 am on November 29, 2013 Permalink | Reply

      ஆஹா,சான்சே இல்லை சார்.செம பதிவு.பாராட்டுக்கள்.நீங்கள் தேர்ந்தெடுத்த பெண்களின் பண்கள் எல்லாமே அருமை. என்னை நெகிழ வைக்கும் இன்னொரு பாடல் சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் பாட முடியாமல் தவிக்கும் பெண்ணிற்காக “மீரா”என்று பாடலை தொடரும் “பல்லவி ஒன்று மன்னன்” பாடல்.கே.பாலசந்தரின் இயக்கத்திலேயே இன்னொரு பாடல் வெள்ளி விழாவில் “கை நிறைய சோழி”பாடல்.டபுள்ஸ் படத்திலும் வைரமுத்துவில் ஒரு பாடல் நன்றாக இருக்கும்-ராமா ராமா ராமா என்று ஒரு பெண்ணும்,கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா என்று ஒருவரும் பாடும் பாடல். நன்றி.

    • பாலராஜன்கீதா 11:55 am on November 29, 2013 Permalink | Reply

      கந்தன் கருணை – மனம் படைத்தேன் (கே.ஆர்.வி – ஜெ.ஜே) 🙂

    • amas32 7:13 pm on November 29, 2013 Permalink | Reply

      இந்தப் பதிவு முடிவுக்கு வரும் சமயத்தில் சான்சே இல்லாமல் ஒரு சூப்பர் போஸ்ட் 🙂 எந்தப் பாட்டையும் விடு வைக்கவில்லை. ரசிகர்களுக்கு ஒரு கல்யாண சமையல் விருந்தே பரிமாறி விட்டீர்கள். இன்னும் சொல்ல என்ன இருக்கு! அற்புதம் 🙂

      இத்தனைப் பாடல்களிலும் என் மனத்தில் நிற்கும் பாடல் என்னவோ புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் மட்டுமே. அதற்குப் பல காரணங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.

      இன்னும் திரும்ப வந்து உங்கள் பதிவை பொறுமையாக இரண்டு முறை படிக்க வேண்டும் 🙂

      amas32

    • ராஜேஷ் 1:29 am on December 4, 2013 Permalink | Reply

      பாடல் – மல்லிகையே மல்லிகையே
      வரிகள் – கவிஞர் வைரமுத்து
      பாடியவர்கள் – அனுராதா ஸ்ரீராம், சித்ரா
      இசை – தேனிசைத் தென்றல் தேவா
      படம் – நினைத்தேன் வந்தாய்

      வரிகள் பழநிபாரதி

    • santhosh 10:47 am on August 8, 2021 Permalink | Reply

      hi sir ,
      I would like to talk with u for some ideas, kindly if u wish pls contact me-9585504287

  • G.Ra ஜிரா 9:13 pm on November 22, 2013 Permalink | Reply  

    மாற்றங்கள் 

    சிறுவயதில் நான் சேட்டைக்காரன். பிடித்து ஒரு இடத்தில் உட்கார வைப்பதும் கடினம். வாயைத் திறந்தால் கேட்கவே வேண்டாம்… தூத்துக்குடியில் நான் கதறினால் விளாத்திகுளத்தில் எதிரொலிக்கும்.

    ஊருக்குப் போகும் போதெல்லாம் சொந்தக்காரர்களிடம் கெட்ட பெயரை பெட்டி பெட்டியாக சம்பாதித்துக் கொண்டு வருவேன்.

    வளர வளர நடத்தையில் மாற்றம் வந்தது. குறிப்பாக கல்லூரிக்குச் சென்றபின். பலவித அனுபவங்களிலும் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ன சிந்தனையிலும் மனம் கட்டுப்பட்டது. சிந்தனைகள் அமைதிப்படுத்தின. மாற்றம் தவிர்க்கவே முடியாததானது. ஒரு திருவிழாவுக்கு ஊருக்குச் சென்ற போது என்னுடைய அத்தை ஒருவர் “பையன் எப்பிடி மாறிப் போயிட்டான்! அவரஞ்சிக் கொடியா மாறிட்டான்!” என்றார்.

    மாற்றம் என்பதுதான் மாற்றமில்லாத தத்துவம். இந்த மாற்றத்தை திரைப்படக் கவிஞர்கள் எப்படி கையாண்டிருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தேன். மடமடவென்று காதல் பாடல்கள் கண் முன்னே வந்தன. அவற்றில் நான்கு பாடல்களை மட்டும் பார்க்கலாம்.

    வழக்கம் போலவே கவியரசர் முன்னால் வந்து நிற்கிறார். பணமா பாசமா திரைப்படத்துக்காக அவர் எழுதிய பாடலைத்தான் பார்க்கப் போகிறோம்.

    அவளொரு கல்லூரி மாணவி. செல்வந்தரின் செல்வமகள். திமிரும் அதிகம் தான். காரிலேயே கல்லூரி சென்று திரும்புகின்றவள் தவிர்க்க முடியாமல் ரயிலில் ஒருநாள் செல்ல வேண்டியிருக்கிறது. அந்த ரயிலில்தான் அவள் அவனைப் பார்க்கிறாள். அவனோ அவளைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. அவள் அவனைப் பார்த்ததாலேயே அவளுடைய திமிர் கரைந்து ஓடுகிறது. உள்ளத்தில் காதல் வந்த பிறகு அங்கு திமிருக்கு இடமில்லை. வீட்டுக்கு வந்து அவனை நினைத்துப் பாடுகிறாள்.

    மாறியது நெஞ்சம்! மாற்றியது யாரோ!
    காரிகையின் உள்ளம் காண வருவாரோ!

    மாறிய உள்ளம் மாறாமல் இருக்க வேண்டுமென்றால் மாற்றியவனே வரவேண்டும். கதைப்படி வந்தான். நல்வாழ்வு தந்தான்.

    மாற்றத்தின் தோற்றத்தை அடுத்ததாகச் சொல்ல வருகின்றவர் கவிஞர் வாலி. சந்திரோதயம் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலிலும் ஒரு பெண் வருகிறாள். ஆம். இளம்பெண்ணே தான். அவளும் நோக்கினாள். அவனும் நோக்கினாள். அதை மன்மதனும் நோக்கினான். காதல் அம்பு விட்டான்.

    மன்மதன் அம்பு விட்டான் என்று நமக்குத் தெரிகிறது. அவளுக்குத் தெரியவில்லையே. அவள் நெஞ்சுக்குள் உண்டான குழைவு எப்படி வந்தது என்றே அவளுக்குப் புரியவில்லை. அதையே பாட்டாகப் பாடுகிறாள்.

    எங்கிருந்தோ ஆசைகள்
    எண்ணத்திலே ஓசைகள்
    என்னென்று சொல்லத் தெரியாமலே
    நான் ஏன் இன்று மாறினேன்!

    பெண்மை தானாக மாறுவதும் உண்டு. வலுக்கட்டாயமாக மாற்றப்படுவதும் உண்டு. அன்பும் அடக்கமும் நிறைந்தவள் அவள். அவளை ருசிக்க விரும்பிய ஒருவன் அவளுக்குத் தெரியாமல் மதுவைக் குடிக்க வைத்தான். மது மதியை மயக்கியது. மயங்குவது புரிந்தது அவளுக்கு. ஆனால் அதைத் தடுக்க முடியவில்லை. தானா இப்படி மாறிக் கொண்டிருக்கிறோம் என்று வியந்து பாடுகிறாள் அவள்.

    நானே நானா யாரோதானா
    மெல்ல மெல்ல மாறினேனா
    தன்னைத் தானே மறந்தேனே
    என்னை நானே கேட்கிறேன்

    இதுவும் கவிஞர் வாலியின் கைவண்ணம் தான். அடுத்து கவிஞர் வைரமுத்து காட்டும் மாற்றத்தை அவரது வைரவரிகளில் பார்க்கலாம். இதுவரை பார்த்த அதே காட்சிதான். நேற்று வரைக்கும் இல்லாத காதல் இன்று அவளுக்கு வந்து விட்டது.

    நேற்று இல்லாத மாற்றம் என்னது
    காற்று என் காதில் ஏதோ சொன்னது
    இதுதான் காதல் என்பதா!
    இளமை பொங்கிவிட்டதா!
    இதயம் சிந்திவிட்டதா! சொல் மனமே!

    இப்படி பெண்களின் மனது குழந்தைத்தனத்திலிருந்து காதலுக்கு மாறுவதைச் சொல்ல எத்தனையெத்தனை பாடல்கள்.

    அதெல்லாம் சரி. வாலிபத்துக்கு வந்த பின் குழந்தைத்தனத்துக்கு நாம் ஏங்குவதேயில்லையா. வாழ்க்கையில் எவ்வளவுதான் வளர்ந்தாலும் உயர்ந்தாலும் குழந்தைப் பருவத்தின் குற்றமில்லா குதூகலங்கள் எப்போதும் நம்மோடு வருவதில்லை. ஏனென்றால் மனதோடு சேர்ந்து அறிவும் மாறிவிடுகிறதே. இந்த ஏக்கத்தை அழகாக ஒரு பாட்டில் வைத்தார் கவிஞர் சிநேகன்.

    அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்
    அந்த நினைவுகள் நெஞ்சில் திரும்பிடத் திரும்பிட ஏக்கங்கள்!

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்
    படம் – பணமா பாசமா
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=wlSTmduxnyA

    பாடல் – எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – சந்திரோதயம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=DM_m7xWYTHc

    பாடல் – நானே நானா யாரோதானா
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர் – வாணி ஜெயராம்
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – அழகே உன்னை ஆராதிக்கிறேன்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Hh6lAvR12cA

    பாடல் – நேற்று இல்லாத மாற்றம்
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர் – சுஜாதா
    இசை – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்
    படம் – புதியமுகம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=9_geeVUdWwc

    பாடல் – அவரவர் வாழ்க்கையில்
    வரிகள் – சினேகன்
    பாடியவர் – பரத்வாஜ்
    இசை – பரத்வாஜ்
    படம் – பாண்டவர் பூமி
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=yHW1mPvAM3Q

    அன்புடன்,
    ஜிரா

    355/365

     
    • amas32 9:29 pm on November 22, 2013 Permalink | Reply

      //மாறியது நெஞ்சம்! மாற்றியது யாரோ!
      காரிகையின் உள்ளம் காண வருவாரோ!//
      அருமையான ஒரு பாடலை நினைவு படுத்தியதற்கு எக்கச்சக்க நன்றி :-))

      பெண்ணின் மனம் மாறுகிறது. அவள் அறியாமலேயே அவளுள் மாற்றம் ஏற்பட்டுவிடும். இது இயற்கை நடத்தும் ஒரு அதிசயம். இதை வாழ்க்கையில் உணர்ந்தவர்கள் ரசிகர்கள், புத்திசாலிகள். அந்த மாற்றத்துக்கு ஏற்ப நாம் வாழும் கலையை மாற்றியமைத்தால் வெற்றி நமதே.

      எல்லா பாடல்களுமே அருமை ஜிரா 🙂

      amas32

    • rajinirams 1:02 am on November 23, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு-பொருத்தமான நல்ல “மாற்ற”பாடல்கள். சில காதலர்கள் “காலம் மாறலாம் நம் காதல் மாறுமா” என்றும் வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்,ஆனாலும் அன்பு “மாறாதம்மா” என அன்புடன் இருப்பர்.பின்னாளில் “தாலாட்டு மாறி”போனதே என்று பாடாமலிருந்தால் நல்லது. வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை ஆனால்”மாறி”விட்டான் எனக்கூறும் கவியரசர் “மாறாதய்யா மாறாது மணமும் குணமும் மாறாது” என்று எழுதியுள்ளார். நன்றி:-)

    • Uma Chelvan 3:26 am on November 23, 2013 Permalink | Reply

      மிக மிக நல்ல பதிவு. மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் பதிவு. அதிலும் மிகவும் அருமையான “எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்” என்ற பாடல் வேறு. கேட்கவும் வேண்டுமா? ……Mr. Rajinirams கமெண்ட்ஸ் எல்லாமே படிக்க மிகவும் நன்று. இவ்வளவு பாடல்களை தெரிந்து வைத்ருகிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

    • rajinirams 9:02 pm on November 23, 2013 Permalink | Reply

      uma chelvan நன்றி:-)

  • என். சொக்கன் 9:38 pm on October 25, 2013 Permalink | Reply  

    கங்கையும் காவிரியும் 

    • படம்: ஞானப்பழம்
    • பாடல்: யாரும் இல்லாத தீவொன்று வேண்டும்
    • எழுதியவர்: பா. விஜய்
    • இசை: கே. பாக்யராஜ்
    • பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சுஜாதா
    • Link: http://www.youtube.com/watch?v=QRWeVVy-rMk

    காவிரியில் வந்து கங்கை

    கை சேர்க்க வேண்டும்,

    நாமும் அதில் சென்று காதல்

    நீராடவேண்டும்!

    இன்று மாயவரம் மயூரநாதர் ஆலயம் சென்றிருந்தேன். அத்தலத்தின் வரலாற்றுப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தபோது, சட்டென்று இந்தப் பாடல், இந்த வரியை நோக்கிச் சென்றேன்.

    காவிரியில் கங்கை வந்து சேரவேண்டும் என்பது ஒரு சுவையான கற்பனை. புவியியல் ரீதியில் சிரமம், ஆனால் கவி மனத்துக்குச் சாத்தியம், காதல் நோக்கமோ, பக்தி நோக்கமோ!

    மனிதர்கள் செய்த குற்றங்களைக் கழுவ கங்கைக்குச் சென்று நீராடுவார்கள். ஆனால், இப்படி எண்ணற்றோரின் அழுக்குகளைச் சேர்த்துக்கொண்ட கங்கை என்ன ஆகும்?

    தவறு செய்த மனிதர்கள் கங்கையில் குளித்துக் குளித்து அந்த நதியே அழுக்காகிவிட்டதாம். அதனைப் புனிதமாக்க, மாயவரம் நகரில் உள்ள காவிரிக்கு வந்து மூழ்கி எழுந்ததாம். இப்படிச் செல்கிறது இந்நகரின் தல புராணம்.

    கிட்டத்தட்ட இதையே பிரதிபலிப்பதுபோல, ‘மகாநதி’ படத்தில் வாலி எழுதிய இரு வெவ்வேறு பாடல்கள், ஒன்றில் ‘கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம்’ என்பார், இன்னொரு பாடலில், ‘இங்கே குளிக்கும் மனிதர் அழுக்கில் கங்கை கலங்குது’ என்பார்.

    இதற்கெல்லாம் அர்த்தம், கங்கையை இழிவுபடுத்துவது அல்ல. நம் அழுக்குகளை ஒரு நதி கழுவிவிடும் என்ற சிந்தனை ஒரு வசதியாக அமைந்துவிடக்கூடாது. ‘தப்புச் செஞ்சுட்டு, அப்புறமா மன்னிப்புக் கேட்டுக்கலாம்’ என்று நினைக்காமல், உண்மையிலேயே திருந்துகிறவர்களாக நாம் இருக்கவேண்டும் என்றுதான் வாலியும், மாயவரத் தல புராணமும் சொல்வதாக நான் நினைக்கிறேன்!

    ***

    என். சொக்கன் …

    25 10 2013

    327/365

     
    • Uma Chelvan 2:12 am on October 26, 2013 Permalink | Reply

      கண்ணதாசன் இதையே கொஞ்சம் மாற்றி எழுதியுள்ளார்

      கங்கையின் வெள்ளம் தண்ணீரோ -இல்லை
      கன்னியர்கள் விடும் கண்ணீரோ ……………………………….

      பிருந்தா வனத்திற்கு வருகிறேன்

    • amas32 8:30 pm on October 27, 2013 Permalink | Reply

      கங்கையை விட காவிரி உயர்ந்தது என்ற எண்ணம் நமக்குப் பெருமையே. ஏனென்றால் கங்கையைப் புகழாத இதிகாசமோ புராணமோ கிடையாது. கங்கை தன் பாவத்தைப் போக்கக் காவிரி நதியிடம் வருகிறாள் என்றால் காவிரியின் மகத்துவம் தான் என்னே!

      amas32

    • kannan 10:40 pm on November 5, 2013 Permalink | Reply

      Pulamai Pithan has thought about it much before Vijay.

      //கங்கையும் தெற்கே பாயாதா? காவிரியோடு சேராதா?//

      Film – Unnal Mudiyum Thambi.

  • என். சொக்கன் 8:28 pm on October 22, 2013 Permalink | Reply  

    மெல்ல ஊர்ந்து ஊர்ந்து… 

    இன்றைக்கு எதைப்பற்றி நாலு வரி நோட் எழுதலாம் என்று நெடுநேரம் யோசித்துக்கொண்டிருந்தேன். கம்ப்யூட்டர்மீது ஓர் எறும்பு ஊர்ந்தது. இதைப்பற்றி எழுதினால் என்ன?

    சட்டென்று ‘ருக்குமணி ருக்குமணி’ பாடல்தான் மனத்தில் ஓடியது. ‘சின்னஞ்சிறு பொண்ணுக்கு ஆசை ரொம்ப இருக்கு, சீனிக்குள்ள எறும்பு மாட்டிகிட்ட கணக்கு’ என்று அழகாக முதலிரவுக் காட்சியைப் பதிவு செய்திருப்பார் வைரமுத்து.

    வாலிக்கும் எறும்பு பிடிக்கும், அதைவிட, வார்த்தை விளையாட்டு பிடிக்கும், வைரமுத்துவைப்போலவே அவரும் சர்க்கரையாகக் காதலையும், எறும்பாகக் காதலர்களையும் வர்ணித்து ‘சக்கர இனிக்குற சக்கர, அதில் எறும்புக்கு என்ன அக்கறை?’ என்று கேட்பார் குறும்புடன்.

    வைரமுத்துவுக்குமட்டும் குறும்புத்தனம் இல்லையா என்ன? ‘கண்ணா என் சேலைக்குள்ளே கட்டெறும்பு புகுந்துடுச்சு, எதுக்கு?’ என்று காதலியைக் கேட்கவைத்து, ‘கண்ணே, நீ வெல்லமுன்னு கட்டெறும்பு தெரிஞ்சுகிச்சு’ என்று காதலனைப் பதில் சொல்லச்செய்வார்.

    வாலி இன்னொரு படி மேலே போய், கட்டெறும்பு காதலியைமட்டுமா? அவள் பெயரைக்கூட மொய்க்கும் என்பார், ‘நாட்குறிப்பில் நூறுமுறை உந்தன் பெயரை எழுதும் எந்தன் பேனா, எழுதியதும் எறும்பு மொய்க்கப் பெயரும் ஆனதென்ன தேனா!’

    காதலி சம்மதம் சொல்லிவிட்டால்தான் வெல்லம், இல்லாவிட்டால், கண்ணாடி ஜாடிக்குள் இருந்து கைக்கு எட்டாத குலாப் ஜாமூன். ‘இமய மலை என்று தெரிந்தபின்னும் எறும்பின் ஆசையோ அடங்கவில்லை’ என்று வைரமுத்துவின் வரி.

    எறும்பு காதலுக்குமட்டுமல்ல, மற்ற விஷயங்களுக்கும் உவமையாகும், ‘ஈ, எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே’ என்று கடவுளிடம் வேண்டும் சின்னப் பிள்ளைக்கு வாலி எழுத, ‘நம்பிக்கையே நல்லது, எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது’ என்பார் வைரமுத்து.

    என்ன திரும்பத் திரும்ப வாலி, வைரமுத்து? மற்ற கவிஞர்கள் யாரும் எறும்பை எழுதவில்லையா?

    ஏன் இல்லாமல்? ‘எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா’ என்று அதிரவைத்து, ‘என் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா’ என்று தத்துவம் சொன்னாரே கண்ணதாசன்!

    இழிவாக நினைக்காதீர்கள், சிறு எறும்பும் கவி எழுத உதவும்!

    ***

    என். சொக்கன் …

    22 10 2013

    324/365

     
    • amas32 9:49 pm on October 22, 2013 Permalink | Reply

      a very different 4varinote from you! எறும்பூர கல்லும் தேயும், அது போல கொஞ்சம் கொஞ்சமாக காதலனும் காதலியின் மனதை விடா முயற்சியால் மாற்றிவிடலாம். அதற்கும் அந்த எறும்பு பழமொழி உதவுகிறது 🙂

      சின்ன ராசாவே சித்தெறும்பு என்னைக் கடிக்குது, உன்னை சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது பாடலையும் இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளவும் 🙂 http://www.youtube.com/watch?v=0V7ezrT_d94

      amas32

    • rajinirams 4:51 pm on October 23, 2013 Permalink | Reply

      அடடா.கலக்கிட்டீங்க. எறும்பு பற்றிய பாடல்களை-நினைவு வைத்து தொகுத்தது-சான்ஸே இல்லை.நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது-அகரம் இப்போ சிகரம் ஆச்சு-என்னைக்கவர்ந்த வைர வரிகள்.கஜேந்திரா படத்தில் பா.விஜய்யின் பாடல் ஒன்று-எறும்பு ஒண்ணு என்னை வந்து என்னென்னமோ பண்ணுது…நன்றி.

  • G.Ra ஜிரா 7:51 pm on September 14, 2013 Permalink | Reply  

    இல்லமும் உள்ளமும் 

    1990களின் மத்தியில் வந்த ஒரு இந்திப் பாடல் திடீரென நினைவுக்கு வந்தது. எனக்கு மிகவும் பிடித்த பாடலும் கூட.

    Ghar se nikalte hi
    kuch door chalte hi
    Raste main hai uska ghar

    இந்த வரிகளின் பொருள் என்ன?

    வீட்டில் இருந்து புறப்பட்டு
    சற்று தொலைவு போனால்
    வழியில் அவள் வீடு உள்ளது

    மெட்டுக்குள் அழகாக உட்கார்ந்து கொண்ட இந்தி வரிகளை என்ன நினைத்து கவிஞர் எழுதினார் என்று யோசித்துப் பார்க்கிறேன். அவர் என்ன நினைத்தாரோ தெரியாது. ஆனால் எனக்கு இப்படித் தோன்றுகிறது.

    All roads lead to Rome என்று ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. எந்தச் சாலையில் போனாலும் அது ரோம் நகரத்துக்குச் செல்லும் என்பது அதன் பொருள். அதாவது ரோம் நகரம் அந்த அளவுக்குப் புகழ் வாய்ந்ததாம்.

    உலகத்துக்கு ரோம் நகரம் என்றால் அவனுக்கு அவள் வீடு. அவன் எந்தத் தெருவில் போனாலும் கால்களும் மனமும் அவனைக் கொண்டு சேர்க்கும் இடம் அவளுடைய வீடு. All roads lead to lover’s house.

    வீடு வரை உறவு என்று கண்ணதாசன் சொன்னதை உறவு இருக்கும் இடம் தான் வீடு என்று மாற்றிக் கொள்ளலாம்.

    ஜெண்டில் மேன் திரைப்படத்தில் செஞ்சுருட்டி ராகத்தில் “நாதவிந்து கலாதீநமோ நம” என்ற திருப்புகழின் சாயலில் அமைந்த பாடல் “என் வீட்டுத் தோட்டத்தில்” என்ற பாடல்.

    காதலி அவளுடைய காதலை அவளுடைய வீட்டுக்குச் சொல்லியிருக்கிறாள். வீடு என்றால்? தோட்டத்துப் பூக்கள், ஜன்னல் கம்பிகள், தென்னை மரங்கள், அந்த மரங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகிறாள்.

    என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்
    என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப் பார்
    என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப் பார்
    உன் பேரைச் சொல்லுமே!

    வீட்டில் உள்ளவர்களால் காதலுக்கு உதவி இருக்கிறதோ இல்லையோ. வீட்டால் உதவி இருக்கிறது. அவன் பெயரை அவள் அத்தனை முறை வீட்டிடமும் வீட்டில் இருக்கின்ற பொருட்களிடமும் சொல்லியிருக்கிறாள்.

    இதை வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் “நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை” பாடலில் இன்னும் அழகாகச் சொன்னார் கவிஞர் தாமரை.

    காதலன் தன்னுடைய காதலை காதலியிடம் சொல்கிறது போல காட்சியமைப்பு.

    நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
    நீருக்குள் மூழ்கிடும் தாமரை
    சட்டென்று மாறுது வானிலை
    பெண்ணே உன் மேல் பிழை

    ரசனை மிகுந்த வரிகள். தாமரை நீருக்குள் மூழ்குவதே இல்லை. வெள்ளத்து அணையது அதன் மலர் நீட்டம். ஆனால் காதல் வெள்ளம் பெருக்கெடுக்கும் போது தாமரையாவது தாவும் மரையாவது?

    அப்படிப் பட்ட காதலைச் சொல்லும் போது தன்னுடைய வீட்டைப் பற்றி அழகாகச் சொல்கிறான் அவன்.

    என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்

    அட! அசத்தி விட்டானே! ஆம். ஒருவருடைய வீட்டுக்குப் போனாலே அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். வீட்டை வைத்திருக்கும் பாங்கு மட்டுமல்ல… வீட்டில் இருப்பவர்களின் பாங்கினாலும்.

    இந்த ஒருவரியையே ஒரு நாள் ஒரு கனவு திரைப்படத்துக்காக ஒரு முழுப் பாடலாக்கித் தந்தார் வாலி. காதலன் காதலியை அவனுடைய வீட்டுக்கு கூட்டிச் செல்கிறான். அது வீடே அல்லது என்பது போல இருக்கிறது அவளுடைய அனுபவம். வீட்டில் மனிதர்கள் வாழ்கிறார்களா அல்லது தெய்வங்கள் குடியிருக்கின்றனவா என்று அவள் ஆனந்தமாக ஆச்சரியப்படுகிறாள்.

    ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன்
    அதுக்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்
    ஸ்ருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
    உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்

    திறந்த கதவு என்றும் மூடாது
    இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
    இது போல் இல்லம் ஏது சொல் தோழி

    வீடு என்ற சொல்லுக்கு என்ன பொருள் தெரியுமா? மிகமிகப் பழக்கமான சொல்தான். ஆனால் பொருள் பலருக்கும் தெரியாது. விடுவதனால் அது வீடு எனப்பட்டது. எதை விடுவதனால்? நமது துன்பங்களை விடுவதால் வீடு. நாம் துன்பங்களைப் படுவதால் அதற்குப் பெயர் பாடு. அது போல நாம் துன்பங்களை விடுவதால் அதற்குப் பெயர் வீடு.

    வாலி எழுதிய பாடலைப் போல ஒரு வீடு இருந்தால் துணிந்து காதலிக்கலாம். காதற்துணையையும் வீட்டுக்கு கூட்டிச் செல்லலாம்.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – என் வீட்டுத் தோட்டத்தில்
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுஜாதா
    இசை – ஏ.ஆர்.ரகுமான்
    படம் – ஜெண்டில்மேன்
    பாடலின் சுட்டி – http://youtu.be/Qg3uqQgizyI

    பாடல் – நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
    வரிகள் – கவிஞர் தாமரை
    பாடியவர் – ஹரிஹரன், தேவன், பிரசன்னா
    இசை – ஹாரிஸ் ஜெயராஜ்
    படம் – வாரணம் ஆயிரம்
    பாடலின் சுட்டி – http://youtu.be/QqI2woQjWK4

    பாடல் – காற்றில் வரும் கீதமே
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம், பவதாரிணி
    இசை – இளையராஜா
    படம் – ஒரு நாள் ஒரு கனவு
    பாடலின் சுட்டி – http://youtu.be/pnteqlhXlS4

    பாடல் – Ghar se nikhalte hi
    பாடியவர் – உதித் நாராயணன்
    பாடலின் சுட்டி – http://youtu.be/arK4ybYfH4k

    அன்புடன்,
    ஜிரா

    287/365

     
    • rajinirams 11:52 pm on September 14, 2013 Permalink | Reply

      இல்லத்தின் பெருமையை விளக்கும் அழகான பதிவு.கவியரசர் கண்ணதாசனின் அற்புத வரிகள்-இல்லம் சங்கீதம் அதில் ராகம் சம்சாரம்.கவிஞர் வாலியும் வீட்டை கோவிலாகவும் தன் பிள்ளைகளை தீபங்களாகவும் எடுத்துரைத்த வரிகள்-வீடு என்னும் கோவிலில் வைத்த வெள்ளி தீபங்களே-நாளை நமதே.ஒருவர் ஒரு வீட்டிற்கு புதிதாக போவதை வைத்தும் பாடல் உள்ளது-புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்-எங்க பாப்பா. இன்னொரு செண்டிமெண்டான பாடல்-வீடு தேடி வந்தது நல்ல வாழ்வு என்பது-பெண்ணின் வாழ்க்கை-வாலி எழுதியது.

    • Uma Chelvan 12:31 am on September 15, 2013 Permalink | Reply

      very nice write up!!!

      “மணி விளக்காய் நான் இருக்க! மாளிகையாய் தான் இருக்க” !!! தன் காதலனை மாளிகையாகவும் அதில் ஒளிரும் மணி விளக்காய் தன்னையும் …என்ன ஒரு அழகான, அருமையான உவமானம்!. வெள்ளி மணியாக ஒலிக்கும் சுசிலாவின் குரலில்!!

    • Uma Chelvan 5:36 pm on September 15, 2013 Permalink | Reply

      I tried to give the video link, instead the video clip it self is popping up due to some reason. I am sorry about that!!

    • amas32 9:24 am on September 17, 2013 Permalink | Reply

      அசத்திட்டீங்க ஜிரா இன்னிக்கு. அனைத்துப் பாடல்களும் அருமையான தேர்வு! வீடு என்று தமிழில் சொல்வது house என்ற பொருளிலும் இல்லம் என்பது home என்றும் கொள்ளலாமா? அன்புள்ள உறுப்பினர்கள் இருக்கும் வீடு அன்பான இல்லம் ஆகிறது. வீடு வெறும் கட்டிடம் தான். ஆனால் வீடு என்பது home என்ற பொருளில் தான் பெரும்பாலும் பயன்படுத்தப் படுகிறது.

      வீடு பேறு பெறுவதற்கு முதலில் நல்ல வீடு அமைந்து இல்லற சுகத்தை அனுபவித்துப் பின் துறக்க ரெடியாகலாம். நிறைய துறவிகள் இளம் வயதிலேயே மனம் பக்குப்படுவதற்கு முன்பே துறவறத்தை நாடி பின் பல வீடுகளை அழிக்க முற்படுகின்றனர். அவர்களுக்கு நிச்சயம் கிடைக்காது வீடு பேறு!

      amas32

  • G.Ra ஜிரா 12:32 pm on September 3, 2013 Permalink | Reply  

    காலை எழுந்தவுடன் பாட்டு 

    பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய குடும்ப விளக்கு என்ற நூலைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு காட்சி. பொழுது புலர்கிறது. இல்லறத் தலைவி எழுகிறாள். அப்போது அவள் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்து விட்டு யாழை மீட்டிப் பாடுகிறாள். அந்த இனிய பாடலைக் கேட்டு கணவனும் குழந்தைகளும் கண்விழிக்கிறார்கள்.

    யாழின் உறையினை எடுத்தாள்; இசையில்
    ‘வாழிய வையம் வாழிய’ என்று
    பாவலர் தமிழிற் பழச்சுவை சேர்த்தாள்.
    தீங்கிலாத் தமிழில் தேனிசைக் கலவைபோல்
    தூங்கிய பிள்ளைகள், தூங்கிய கணவனின்
    காதின் வழியே கருத்தில் கலக்கவே,
    மாதின் எதிர்அவர் வந்துட் கார்ந்தனர்
    அமைதி தழுவிய இளம்பகல்,
    கமழக் கமழத் தமிழிசை பாடினான்

    காட்சி முற்போக்குத்தனமா பிற்போக்குத்தனமா என்பதை ஆராய்வதை விட காட்சியின் அழகில் நான் மயங்கிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

    இன்றைக்கும் பல வீடுகளில் பெண்கள் எழுந்ததும் கந்த சஷ்டிக் கவசத்தையோ சுப்ரபாதத்தையோ ஒலிக்க விடுவதைக் கேட்கத்தானே செய்கிறோம்.

    இப்படியான காட்சிகள் திரைப்படங்களில் வந்திருக்கிறதா என்று யோசித்தேன். சட்டென்று எனக்குத் தோன்றியவை மூன்று பாடல்கள்.

    மலர்கள் நனைந்தன பனியாலே
    என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
    பொழுதும் விடிந்தது கதிராலே
    சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே

    காலை நேரத்துக் காட்டியையும் முந்தைய இரவில் அவள் கண்ட இன்பங்களின் மீட்சியையும் இப்படி நான்கு வரிகளில் சொல்ல கண்ணதாசன் இருந்தார் அப்போது.

    அந்தப் பெண் கணவனோடு கொண்ட காதல் விளையாட்டைக் கூட நாகரிகமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் கவியரசர்.

    சேர்ந்து மகிழ்ந்து போராடி
    தலை சீவி முடித்தேன் நீராடி
    கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
    கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
    பட்ட காயத்தைச் சொன்னது கண்ணாடி

    கூடல் இன்பத்தை மட்டும் பாட்டில் வைக்கவில்லை அவர். அந்தக் குடும்பத்தலைவியின் அகவொழுக்கத்தையும் இறைநம்பிக்கையையும் பாட்டில் வைக்கிறார்.

    இறைவன் முருகன் திருவீட்டில்
    என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
    உயிரெனும் காதல் நெய்யூற்றி
    உன்னோடிருப்பேன் மலரடி போற்றி

    மேலே நான் சொன்ன பாடல் இதயக்கமலம் திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் பி.சுசீலா அவர்கள் பாடியது. அடுத்து இளையராஜா இசையில் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. ஆம். காயத்ரி படப் பாடல் அது. பஞ்சு அருணாச்சலம் எழுதிய பாடல்.

    காலைப்பனியில் ஆடும் மலர்கள்
    காதல் நினைவில் வாடும் இதழ்கள்
    காயம் பட்ட மாயம் கன்னி எந்தன் யோகம்

    இந்தப் பாடலில் புதிதாகத் திருமணமான பெண் விடியலில் முந்தைய இரவின் நினைவுகளை வைத்துக் கொண்டு பாடுவாள்.

    எல்லாம் சரி. திருமணமான பெண்கள் இதையெல்லாம் நினைத்துக் கொண்டு விடியலில் பாடலாம். திருமணம் ஆகாத பெண்? திருவெம்பாவையும் திருப்பாவையும் மட்டுமே பாட வேண்டுமா?

    இல்லை என்கிறது உயர்ந்த உள்ளம் திரைப்படத்துக்காக கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்.

    காலைத் தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம்
    பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்

    இளம் பெண்ணின் ஆசை என்னும் வானில் இன்பம் என்னும் சிறகுகளை விரித்துப் பறக்கத் துடிப்பதை இந்த வரிகள் அழகாகச் சொல்கின்றன.

    அவளுடைய மனது அழகை ரசிக்கிறது. படிந்திருக்கும் பனி. குளிர்ந்திருக்கும் நிலம், கூவியிருக்கும் குயில், கூடியிருக்கும் குருவி, ஓங்கியிருக்கும் மரங்கள், பறவைகளைத் தாங்கியிருக்கும் கிளைகள் என்று அழகை ரசிக்கிறாள்.

    அந்த இரசனையில் இரவை நினைத்துப் பார்க்கிறாள். ஒரு அழகான பாடல் வரி உடனே தோன்றுகிறது.

    இரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே
    பனிதுளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே

    இப்படியாக அவள் பெற்ற இன்பங்களை உலகமும் பெற வேண்டும் என்று நினைக்கிறாள். உறங்குகின்றவர்களை எழுப்புகிறாள்.

    உறங்கும் மானிடனே உடனே வா வா
    போர்வை சிறையை விட்டு வெளியே வா வா
    அதிகாலை உன்னை பார்த்து வணக்கம் சொல்லும்

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – மலர்கள் நனைந்தன பனியாலே
    வரிகள் – கவி்ரசர் கண்ணதாசன்
    பாடியவர் – பி.சுசீலா
    இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்
    படம் – இதயக்கமலம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=4HVJhS-KTzM

    பாடல் – காலைப்பனியின் ஆடும் மலர்கள்
    வரிகள் – பஞ்சு அருணாச்சலம்
    பாடியவர் – சுஜாதா
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – காயத்ரி
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=pTgZcMOGveI

    பாடல் – காலைத் தென்றல் பாடிவரும்
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – உயர்ந்த உள்ளம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=HMdOYRD3Shs

    அன்புடன்,
    ஜிரா

    275/365

     
    • amas32 4:46 pm on September 3, 2013 Permalink | Reply

      பெண்ணில்லா வீட்டில் குப்பையும் கூளமும் தான் இருக்கும். பெண்ணொருத்தி இருந்தால் விடியற்காலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து கோலமிட்டு விளக்கேற்றி வீட்டை லக்ஷ்மிகரமாக்குவாள்.
      காலை நேரத்தில் பாடுவது, யாழிசைப்பதற்கெல்லாம் இந்த துரித யுகத்தில் நேரம் இருப்பதில்லை 😦 அந்த வேலையை குறுந்தகடுகள் செய்கின்றன 🙂

      //கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
      பட்ட காயத்தைச் சொன்னது கண்ணாடி//
      இதை ஆங்கிலத்தில் hickey என்பார்கள். எல்லா சமூகத்திலும் அடுத்த நாள் எழுந்து முன்னிரவு நடந்தவைகளை பெண் அசை போடுவது இயல்பான விஷயமாகக் கொண்டாடப் படுகிறது 🙂

      amas32

    • rajinirams 10:49 am on September 4, 2013 Permalink | Reply

      அதிகாலைப்பொழுதின் இனிமைக்கு மெருகூட்டும் மூன்று முத்தான பாடல்களை கொண்ட நல்ல பதிவு. “இரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே
      பனிதுளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே” என்ற வைரமுத்துவின் வரிகளாகட்டும்-“பொழுதும் விடிந்தது கதிராலே
      சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே”என்ற கவியரசரின் வரிகளாகட்டும் சூப்பர்.”அலைகள் ஓய்வதில்லை”படத்தின் வெளிவராத “புத்தம் புது காலை பொன்னிற வேளை பாடலும் பொண்ணு ஊருக்கு புதுசு படத்தின் “சோலைக்குயிலே காலைக்கதிரே” பாடலும் இனிமையானவை.

  • என். சொக்கன் 8:48 pm on July 2, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு : சீனத்துக் காதல் 

    ’பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக் கூட்டம் அதிசயம்’ என்ற பாடலை எல்லாரும் கேட்டிருப்பீர்கள். வைரமுத்து எழுதி, ஏ. ஆர். ரஹ்மான் இசையில் உன்னி கிருஷ்ணன், சுஜாதா பாடிய சூப்பர் ஹிட் பாட்டு.

    அந்தப் பாடலின் தொடக்கத்தில், சீனப் பெருஞ்சுவரில் நாயகனும் நாயகியும் ஆடுவதுபோன்ற காட்சி அமைப்பு இருக்கும். அப்போது பின்னணியில் ஒரு கோரஸ் கேட்கும், ‘Wo Ai Ni… Wo Ai Ni…’ என்று திரும்பத் திரும்ப வரும், கவனித்துப்பாருங்கள்.

    இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

    ’அடப் போங்க சார், விட்டா ஒமாகஸீயாவுக்கெல்லாம் அர்த்தம் கேட்பீங்கபோல!’ என்று கோபிக்கவேண்டாம். நிஜமாகவே இந்தக் கோரஸ் வரிகள் சும்மா உல்லுலாக்காட்டிக்குப் போட்டவை அல்ல, அதற்கு அர்த்தம் உண்டு.

    தமிழில் அல்ல, சீன மொழியில்.

    ஆமாம், சீனர்கள் பேசும் மாண்ட்ரின் பாஷையில் ‘Wo Ai Ni’ என்றால், ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று அர்த்தமாம்.

    சீனப் பெருஞ்சுவர்ப் பின்னணியில் இந்தக் காட்சி படமாக்கப்படப்போகிறது என்று தெரிந்து இந்தக் கோரஸை இங்கே பொருத்தமாகப் பயன்படுத்தியது யார்? இசையமைப்பாளரா? கவிஞரா? அல்லது, இயக்குநரா?

    யாராக இருந்தாலும், அவர்களுக்கு ஒரு வந்தனம்!

    சுதர்ஷன்

    https://twitter.com/SSudha_

     
    • amas32 7:50 pm on July 4, 2013 Permalink | Reply

      இந்த சீன வரிகளை படிக்கும் பொழுது பாடலை எழுதியது அவர் மகன் மதன் கார்க்கியோ என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா? 🙂 தந்தையிடம் இருந்து தான் அந்த டேலன்ட் மகனுக்கு வந்துள்ளது போலும்!

      நீங்கள் தமிழ் பதங்களுக்கு உரை எழுதுவதோடு சீன மொழி வரை போய் உள்ளது பெருமைக்குரியதே 🙂

      amas32

    • Mano red 9:34 pm on July 2, 2017 Permalink | Reply

      இத்தனை நாள் அது என்ன வார்த்தை என்றே தெரியாமல் இருந்தது. ஓமகசீயா கூட புரிந்திருந்தது. Wo ai ni செம..😍

  • G.Ra ஜிரா 11:36 am on June 19, 2013 Permalink | Reply  

    திருப்புகழ்! 

    திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
    எதிர்ப்புகளை முருகா, உன் வேல் தடுக்கும்
    முருகா…… உன் வேல் தடுக்கும்!

    பூவை செங்குட்டுவன் எழுதிய அற்புதமான பாடல் வரிகள் இவை. கௌரி கல்யாணம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது.

    திருப்புகழின் திருப்புகழை இதை விட எளிமையாகச் சொல்ல முடியுமா என்று நம்மையும் சிந்திக்க வைக்கும் வரிகள் இவை.

    திருப்புகழுக்கு அப்படி என்ன பெருமை? அதைப் புரிந்து கொள்ள சிலபல தகவல்களை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    தமிழுக்குக் கிடைத்த அற்புத மாமணி அருணகிரிநாதர். முருகன் திருவருளால் அருணகிரியின் வாக்கில் வந்த பாடல்கள்தான் திருப்புகழ் என்று தொகுக்கப்பட்டன. திருப்புகழ் என்ற பெயரைப் பின்னால் யாரும் வைக்கவில்லை. அருணகிரியே ஒரு பாடலில் திருப்புகழ் என்று குறிப்பிடுகிறார்.

    பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
    பட்சியெனும் உக்ர துரகமும் நீபப்
    பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
    பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
    திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
    சிற்றடியு முற்றிய பனிருதோளும்
    செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
    செப்பென எனக்கருள்கை மறவேனே

    குற்றமற்ற மணிகள் பொருந்திய பொன்னணிகளை அணிந்து கொண்டு அழகு நடை போடும் மாமயிலையும்,
    கடம்ப மலர் மாலையையும்,
    கிரவுஞ்ச மலையானது மறைந்து போகும் படி திருக்கையால் ஏவித் துளைத்த வேலையும்,
    எட்டுத் திசையும் கிடுகிடுக்க வரும் சேவலையும்,
    அருள் தருகின்ற சிற்றடிகளையும்,
    பன்னிரண்டு தோள்களையும்,
    இருந்து அருள் செய்யும் ஒவ்வொரு திருப்பதிகளையும் வைத்து உயர்ந்த வகையில் திருப்புகழை உள்ளம் விரும்பிப் பாடு என்று அருள் சொன்ன கருணையை நான் என்றும் மறவேனே!

    ஆக.. இந்தப் பாட்டில் இருந்து தெரிவது என்ன? திருப்புகழ் என்ற பெயரை அருணகிரிநாதர் வைக்கவில்லை. முத்தமிழ்த் தெய்வமான முருகப் பெருமானின் திருவாயால் பெயரிடப்பட்ட நூல் திருப்புகழ் என்ற சிறப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். இன்னும் பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.

    திருப்புகழைப் பாடிய அருணகிரி அந்தப் பாடல்களை ஓலையில் எழுதி வைக்கவில்லை. அவர் பாடிய கோயில்களில் இருக்கும் அன்பர்கள் அந்தப் பாடல்களை ரசித்து எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்த பாடல்கள்தான் இன்று தப்பிப் பிழைத்து நமக்குக் கிடைத்திருக்கின்றன.

    திருப்புகழை அருணகிரி அறிவால் பாடவில்லை. முருகன் அருளால் பாடினார். அதாவது முருகன் அருணகிரியைப் பாட வைத்தான். அந்தப் பாடல்களில் எத்தனையெத்தனை சந்தநயம்! எத்தனை தாள வகைகள் உண்டோ அத்தனையும் திருப்புகழ் பாடல்களில் உள்ளனவாம். அத்தோடு அளவிட முடியாத கவிச்சுவை வேறு.

    அப்படிப்பட்ட திருப்புகழ் பாடல்களை அருணகிரியே ரசித்திருக்கிறார். கேட்டவர்கள் ரசித்ததையும் கண்டிருக்கிறார்.

    பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
    பட்சிந டத்திய குகபூர்வ
    பச்சிம தட்சிண வுத்தர திக்குள
    பத்தர்க ளற்புத மெனவோதுஞ்
    சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
    ருப்புக ழைச்
    சிறி தடியேனுஞ்
    செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
    சித்தவ நுக்ரக மறவேனே

    அடியவர்களுக்கு அருளும் இறைவனே
    ஆடும் மயில் ஏறி விளையாடும் குகனே
    கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
    ஆகிய திசைகளில் உள்ள அன்பர்கள் எல்லாரும்
    அற்புதம் அற்புதம் என்று ரசித்து ஓதுகின்ற
    அழகு கவிநயமும் சந்தநயமும் மிகுந்து இருக்கும்
    திருப்புகழை கொஞ்சமாவது நானும்
    சொல்லும் படி செய்து உலகில் பரவுவதற்கு
    வகை செய்த உன்னருளை மறக்க மாட்டேன் முருகனே!

    இந்த வரிகளிலும் அருணகிரி முருகனுக்கு நன்றி கூறுகிறார். திருப்புகழ் என்ற பெயர் நிலைபெறும் வகையில் இந்தப் பாடலிலும் இடம் பெறுகிறது.

    சரி. திருப்புகழ் பாடல்களிலேயே முதலில் பாடப்பட்டது எந்தப் பாடல் என்று தெரியுமா? எங்கு பாடப்பட்டது என்று தெரியுமா?

    முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற பாடல்தான் முதலில் பாடப்பட்டது. பாடப்பட்ட இடம் திருவண்ணாமலை கோயில்.

    திருப்புகழ் பாடு என்று முருகன் பணித்த பின் “என்ன பாடுவது எப்படிப் பாடுவது” என்று புரியாமல் தவித்த அருணகிரிக்கு “முத்து முத்தாகப் பாடு” என்று முருகனே எடுத்துக் கொடுக்க பாடப்பட்டதுதான் “முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற திருப்புகழ்.

    இதில் முத்து என்பது அருணகிரியைப் பெற்ற அன்னை என்றொரு கருத்தும் உண்டு.

    திரைப்படங்களிலும் திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன. குறிப்பாக அருணகிரிநாதர் திரைப்படத்தில் மூன்று திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன.

    1. முத்தைத் தரு பத்தித் திருநகை
    2. பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
    3. தண்டையணி வெண்டயம் கிண்கிணி சதங்கையும்

    அதற்குப் பல ஆண்டுகள் கழித்து இறையருட் கலைச்செல்வர் இயக்கத்தில் வெளிவந்த “யாமிருக்க பயமேன்” என்ற திரைப்படத்தில் ”பாதிமதி நதி போது மணிசடை” என்ற திருவேரகத்(சுவாமிமலை) திருப்புகழ் மெல்லிசை மன்னர் இசையமைப்பில் வெளிவந்தது. அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜா இசையில் “ஏறுமயில் ஏறிவிளையாடும்” என்ற திருப்புகழ் ”தம்பி பொண்டாட்டி” என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது.

    நாமும் திருப்புகழை ஓதி முருகனருளால் நல்லறிவும் நல்லருளும் பெற்று வளமோடு வாழ்வோம்.

    பதிவில் இடம் பெற்ற திருப்புகழ் பாடல்கள்
    திருப்புகழை/பி.சுசீலா,சூலமங்கலம் ராஜலட்சுமி/கௌரிகல்யாணம்/எம்.எஸ்.வி – http://youtu.be/awxORiSnHig
    முத்தைத்தரு/டி.எம்.சௌந்தரராஜன்/அருணகிரிநாதர்/டி.ஆர்.பாப்பா – http://youtu.be/2vRkCV3symk
    பக்கரை/டி.எம்.சௌந்தரராஜன்/அருணகிரிநாதர்/டி.ஆர்.பாப்பா – http://youtu.be/AfZ3UoT4pFw
    தண்டையணி/டி.எம்.சௌந்தரராஜன்/அருணகிரிநாதர்/டி.ஆர்.பாப்பா – http://youtu.be/QyZi7oEUtGI
    பாதிமதிநதி/வாணி ஜெயராம், எல்.ஆர்.அஞ்சலி/யாமிருக்க பயமேன்/எம்.எஸ்.வி – http://youtu.be/FDMcv6CjglI
    ஏறுமயில்/சுவர்ணலதா,மின்மினி,கல்பனா,பிரசன்னா/தம்பிபொண்டாட்டி/இளையராஜா – http://youtu.be/ju0VhKQHQ3c

    பி.கு. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த “என் வீட்டுத் தோட்டத்தில்” பாடல் “நாதவிந்து கலாதீ நமோநம” என்ற திருப்புகழின் சாயலிலும் “வெற்றிக் கொடி கட்டு” என்ற பாடல் “முத்தைத் தரு பத்தி” என்ற திருப்புகழின் சாயலிலும் வந்துள்ளது.

    அன்புடன்,
    ஜிரா

    200/365

     
    • kamala chandramani 12:14 pm on June 19, 2013 Permalink | Reply

      திருப்புகழ் ஓதுவதன் சிறப்பை அருணகிரிநாதர் திருத்தணிகைத் திருப்புகழில் அருமையாகக் கூறுகிறார்.
      ”சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ் செகுத்தவ ருயிர்க்குஞ் சினமாக,
      சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம்;
      நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும் நிசிக்கருவறுக்கும் பிறவாமல்
      நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும் நிறைப்புக ழுரைக்குஞ் செயல்தாராய்.”

      வள்ளலாரோ”உய்யும் பொருட்டுன் திருப்புகழை உரையே னந்தோ வுரைக்கடங்காய்” எனத் தணிகைச் செஞ்சுடரிடம் வருந்துகிறார். மேலும்,”அருணகிரி பாடும் நின்னருள்தோய் புகழைப் படியேன் பதைத் துருகேன் பணியேன் மனப்பந்தம் எல்லாம் கடியேன் என் செய்வேன் என் காதலனே” என உருகுகிறார். திருப்புகழும் அருட்பாவும் இரு கண்கள்.

    • Arun Rajendran 12:24 pm on June 19, 2013 Permalink | Reply

      ஜிரா சார்,

      அருணகிரிநாதர் காரணப் பெயர் மாதிரி தெரியுதுங்க.. சுருக்கமா ஒரு குறிப்பும் முடிந்தால் கொடுங்க..படிக்கிற ஆர்வத்தத் தூண்டி இருக்கீங்க… திருப்புகழையும் என்னோட அட்டவனைல சேர்த்திக்கிறேன்

      இவண்,
      அருண்

    • amas32 (@amas32) 12:53 pm on June 19, 2013 Permalink | Reply

      //திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். இன்னும் பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.//

      நீங்கள் இங்கே நாலு வரி நோட்டில் இந்த இருநூறு நாட்களில் பதிந்த பாடல்கள் நாளை ஒரு ரெபரன்சுக்கு நிச்சயம் பலருக்கு உதவப் போகிறது.

      உங்கள் டாபிக் ஜிரா! சூப்பர் பதிவு 🙂 அனுபவித்துப் படித்தேன் 🙂 நன்றி.

      amas32

    • rajnirams 10:07 pm on June 19, 2013 Permalink | Reply

      முதலில் உங்களுக்கெல்லாம் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
      சூப்பரான பதிவு. இதுவரை நான் அறியாத அரிய தகவல்கள்.அருணகிரிநாதரின் பெருமைகளையும் திருப்புகழின் சிறப்புகளையும் அருமையாக “சுட்டி”காட்டியதற்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.

  • mokrish 11:07 am on May 15, 2013 Permalink | Reply  

    குமரிப் பெண்ணும் குழந்தைப் பெண்ணும் 

    காற்றின் வகைகள் பற்றி நண்பர் @ragavanG எழுதிய பதிவில்  ‘குழந்தைகள் கூட குமரியும் ஆட’ என்ற வரியைப் படித்தவுடன்  இந்த குழந்தை / குமரி வார்த்தைகள் ஜோடியாக  மற்ற பாடல்களிலும் வந்திருக்கிறதே என்று தோன்றியது. அப்புறம் நண்பர் @narraju எழுதிய அம்மானை பதிவில் கதாநாயகியை ஒரு குழந்தையாக பாவித்துக் காதலன் ‘பிள்ளைத் தமிழ்’  பாடுவது பற்றி படித்தவுடன் ஒரு சின்ன ஆராய்ச்சி.

    குழந்தை , குமரி ஒன்றாக வருவது முதல் எழுத்து ஒன்றி வரும் மோனை நயத்துக்காக மட்டும்தானா? அல்லது பெண்ணின் வெவ்வேறு நிலைகள் சொல்ல எழுதியதா? அல்லது வேறு பொருள் சொன்னதுண்டா?

    வைரமுத்து இதை வர்ணனை / காதல் / சிறுமி குமரியாகும் மாற்றம்  என்ற வட்டத்தில் பல பாடல்களில் உபயோகிக்கிறார். சிவாஜி படத்தில் வரும் வாஜி வாஜி என் ஜீவன் என்ற பாடலில் (இசை ஏ ஆர் ரஹ்மான் பாடியவர்கள் ஹரிஹரன், மதுஸ்ரீ ) http://www.youtube.com/watch?v=M7Et_8BgKFU

    அடடடா குமரியின் வளங்கள், குழந்தையின் சிணுங்கல்

    முரண்பாட்டு மூட்டை நீ

    என்று ஒரு வரி. அலைபாயுதே படத்தில் காதல் சடுகுடு பாடலில் (இசை ஏ ஆர் ரஹ்மான் பாடியவர்கள் SPB சரண், நவீன் ) http://www.youtube.com/watch?v=rmxs7b9Y5HE

    ஓஹோ.. பழகும் போது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே படுக்கையறையில் குழந்தையாகி என்னை கொல்வாய் கண்ணே

    என்று வரிகள். தாஜ்மஹால் படத்தில் சொட்ட சொட்ட நனையுது (இசை ஏ ஆர் ரஹ்மான் பாடியவர் சுஜாதா  ) https://www.youtube.com/watch?v=VsWo2pVYSnQ

    உனக்காக உயிர் பூத்து நின்றேன் உனக்காக கன்னிகாத்து நின்றேன்

    இன்னும் நானும் சிறுமிதான் எப்போதென்னைப் பெண் செய்குவாய்

    என்ற வரிகள் – இப்படி சிறு வட்டத்தில் சுழல்கிறார்.

    கண்ணதாசன் பார்வை வேறு. கை கொடுத்த தெய்வம் படத்தில் வரும் ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ என்ற பாடலில் (இசை கே வி மகாதேவன், பாடியவர் டி எம் சௌந்தரராஜன் ) http://www.youtube.com/watch?v=NG7YOfSz8-A

    உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ

    பார்வையிலே குமரியம்மா

    பழக்கத்திலே குழந்தையம்மா

    என்று ஒரு வெகுளிப்பெண் பற்றி சொல்வது போல அழகான  வரிகள்.  அரங்கேற்றம் படத்தில் வரும் ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது என்ற பாடலில் (இசை வி குமார் பாடியவர் பி சுசீலா) வரும் கண்ணதாசனின் வரிகள் ஒரு பெண்ணுக்கு இந்த சமுகத்தில் வெவ்வேறு நிலைகளில் உள்ள constraints என்ன என்று சொல்கிறது.

    குழந்தையிலே சிரிச்சதுதான் இந்த சிரிப்பு

    அதை குமரிப் பொண்ணு சிரிக்கும்போது என்ன வெறுப்பு

    அக்னி சாட்சி என்ற படத்தில் வாலியின் வரிகளை MSV இசையில் SPB பாடும் கனாக் காணும் கண்கள் மெல்ல என்ற பாடலில் http://www.youtube.com/watch?v=rPuFA8wSEwU

    குமரி உருவம் குழந்தை உள்ளம்

    ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ

    தலைவன் மடியில் மகளின் வடிவில்
    தூங்கும் சேயோ!

    நாயகி பெரும் மனக்குழப்பத்தில் இருக்கும்போது நாயகன் அவளை அமைதிப்படுத்த பாடும் ஒரு தாலாட்டு. வாலிக்கு ஜே!

    அதே இரண்டு வார்த்தைகள். ஆனால் வேறு வேறு கோணங்கள். பார்வைகள். Interesting!

    மோகனகிருஷ்ணன்

    165/365

     
    • amas32 11:19 am on May 15, 2013 Permalink | Reply

      What a beautiful collage you create by picking lines from various songs! குழந்தை வளர்ந்து குமரியாகிறாள். அதனால் குமரிக்குள் சிறு குழந்தை இன்னும் ஒளிந்துகொண்டு இருப்பது ஆச்சர்யம் இல்லை. அதுவே குமரிக்குள் அதிகக் குழந்தைத்தனம் இருந்தால் மன வளர்சிக் குன்றியவராகக் கருதிவிடுவோம். சரியான விகிதாச்சாரத்தில் இருந்தாலே ரசிக்க முடியும். குழந்தையாக இருக்கும்போதே குமரியாக நடந்துகொண்டாலும் பிஞ்சில பழுத்துவிட்டது என்ற அவப் பெயர் தான் மிஞ்சும்.

      ஆனாலும் கவிஞர்களுக்கு எப்பவுமே poetic liberty உண்டு, இந்த மாதிரி எழுத 🙂
      அருமையான பதிவு!

      amas32

    • vaduvurkumar 11:28 am on May 15, 2013 Permalink | Reply

      நல்ல ஆராய்ச்சி.

    • ராஜூ 7:44 pm on May 15, 2013 Permalink | Reply

      உங்களுக்கு சும்மா டக்கு டக்குன்னு வந்து விழுகுதுங்க வரிகள்! கலக்கல்.

    • rajnirams 10:56 am on May 16, 2013 Permalink | Reply

      அருமை.ரிதம் படத்தில் நதியே நதியே பாடலின் வரிகளும் அருமையாக இருக்கும்.”சமைந்தால் குமரி,மணந்தால் மனைவி ,பெற்றால் தாயல்லோ”.நன்றி.

    • GiRa ஜிரா 11:02 pm on May 16, 2013 Permalink | Reply

      குமரியோ குமரனோ… ஒருவர் மடியில் ஒருவர் விழும் போது குழந்தைதான்.

      நானொரு குழந்தை நீயொரு குழந்தை
      ஒருவர் மடியிலே ஒருவரடி – கவிஞர் வாலி

  • mokrish 11:24 am on April 18, 2013 Permalink | Reply
    Tags: அறிவுமதி, , ரா பி சேதுப்பிள்ளை, , , PB ஸ்ரீநிவாஸ்   

    எந்த ஊர் என்றவனே 

    ஒருவர் நமக்கு அறிமுகமான சில நிமிடங்களில் கேட்கப்படும் கேள்விகளில்  ஒன்று – ‘நீங்க எந்த ஊர்? என்பது. ஒரே ஊர் என்றோ ஒரே மாவட்டம் என்றோ தெரிந்தால் ‘ அட நீங்களும் வேலூர் தானா என்று உடனே ஒரு புன்முறுவல். நட்பு சுலபமாகும். நாம் பிறந்து வளர்ந்த ஊரை நினைத்தாலே சந்தோஷம் பொங்கும். வெளிநாட்டில் வாழும்போது சொந்த ஊரில் / மாவட்டத்தில் இருந்து வருபவர்களுடன் பேசும்போது ஒரு extra connect இருப்பதை உணர்ந்திருக்கிறேன்

    ஊர்ப்பெயர்களை அதன் வேர்ச்சொல் அறிந்து ஆராய்வது ஒரு பெரிய சவால்.இடப்பெயராய்வு. கல்வெட்டு, புத்தகங்கள், அரசுப் பதிவேடுகள், செப்பேடுகள், கர்ணபரம்பரைக் கதைகள், நாட்டுப்புற பாடல்கள், பழமொழிகள், சொலவடைகள், விடுகதைகள் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட ஊர்கள் இடம்பெற்ற விதத்தையும், அந்த ஊர்களின் மக்களுடைய வாழ்க்கைத் தரம், பொருளாதாரம், தற்போதய நிலை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் பல ஆய்வுகள் உண்டு. ரா பி சேதுப்பிள்ளை அவர்களின் ‘தமிழகம் ஊரும் பேரும்’ என்ற ஆய்வை இணையத்தில் படித்தேன். சுவாரஸ்யமான ஆய்வு.

    http://www.tamilvu.org/library/lA475/html/lA475con.htm

    ஒரு கவிஞனை எந்த ஊர் என்றால் என்ன சொல்வான்? திரைப்பாடல்களில் ஒரு தேடல் கண்ணதாசன் காதல் தோல்வி சொல்ல ஒரு பாடலில் பிறப்பில் தொடங்கி ஆணின் அன்றைய காதல் தோல்வி status வரை ஊர்ப்பெயர்களை எழுதிய வரிகள் அருமையான கற்பனை. எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா? என்று தொடங்கும் பாடலில் வரும் கற்பனை ஊர்ப்பெயர்கள் – பேச்சு வழக்கில் இருக்கும் வார்த்தைகளை ஊர் போல சொல்வார். http://www.youtube.com/watch?v=eyIWD8FOh4g

    உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்

    கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்!

    என்று பிறப்பையும் பின் வரும் வரிகளில்

    வேலூரைப் பார்த்து விட்டேன் விழியூரில் கலந்து விட்டேன்

    காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்

    கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்!

    பள்ளத்தூர் தன்னில் என்னை பரிதவிக்க விட்டு விட்டு

    மேட்டூரில் அந்த மங்கை மேலேறி நின்று கொண்டாள்!

    காதலில் விழுந்ததையும் பின் பள்ளத்தில் விழுந்ததையும் சொல்கிறார்

    வாலி தமிழகத்தின் ஊர்ப்பெயர்களை வைத்து ஒரு பெண்ணை வர்ணிக்கிறார். மதுரையில் பறந்த  மீன் கொடியை அவள் கண்ணில் பார்த்து  சேரன் வில்லை புருவத்தில் பார்த்து புலிக்கொடியை அவள்  பெண்மையில் பார்த்து என்று அலங்காரமான பாடல் ஒன்று

    http://www.youtube.com/watch?v=GN5JGwKojgk அதில் தொடர்ந்து

    காஞ்சித் தலைவன் கோவில் சிலை தான் கண்மணியே உன் பொன்னுடலோ

    குடந்தையில் பாயும் காவிரி அலை தான் காதலியே உன் பூங்குழலோ

    சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான் சேயிழையே உன் செவ்விதழோ?

    தூத்துக் குடியின் முத்துக் குவியல் திருமகளே உன் புன்னகையோ?

    பாடல் முழுவதும் வரிகளின் முதலில் ஒரு ஊர்ப்பெயரை வைத்து அழகான கவிதை.

    வைரமுத்துவும் பெண்ணை வர்ணிக்கவே ஊர்பெயரை வரிகளில் வைக்கிறார். ஒவ்வொரு ஊரிலிருந்தும் விசெஷமான பொருள் எடுத்து அந்த பெண்ண சிலை செய்ததாக கற்பனை தஞ்சாவூரு மண்ணெடுத்து என்ற பாடலில் வரும் வரிகள் http://www.youtube.com/watch?v=NzRHBQRpqkI

    கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு

    ஒதடு செஞ்ச மண்ணு  மட்டும் தேனூரு

    நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க

    நெலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க

    வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு – அட

    கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு

    கண்ணதாசனின் காதல் தோல்வி வரிகள் ஒரு extreme என்றால் வாலியும் வைரமுத்துவும் சொல்லும் வர்ணனைகளும் மிகையானவை. எனக்கு அறிவுமதி எழுதிய அழகூரில் பூத்தவளே பாடல வரிகள் இயல்பாக இருப்பதாய் தோன்றுகிறது http://www.youtube.com/watch?v=83Zq_Bh3mCg

    அழகூரில் பூத்தவளே

    எனை அடியோடு சாய்த்தவளே

    மழையூரின் சாரலிலே

    எனை மார்போடு சேர்த்தவளே

    உன்னை அள்ளி தானே உயிர் நூலில் கோர்ப்பேன்

    உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்

    அவள் பிறந்த ஊர் எதுவாக இருந்தாலும் அதுவே அழகான ஊர் என்பதில் ஒரு உணர்வுபூர்வமான நியாயம். அவள் சுருட்டி போட்ட முடியை மோதிரமாகியது அவள் சோம்பலில் இவன் முறிந்து போனது – மிகை தான் என்றாலும் சுவாரஸ்யம்தான். ,’என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நான் இருப்பேன்’ என்று சொன்னவுடன் நெகிழ்ந்து ‘அன்பூரில் பூத்தவனே என்கிறாள்.  அழகு.

     மோகனகிருஷ்ணன்

    138/365

     
    • amas32 11:51 am on April 18, 2013 Permalink | Reply

      எனக்கு ரொம்பப் பிடித்தப் பாடல் “தஞ்சாவுரு மண்ணெடுத்து” பாடல் 🙂 http://www.youtube.com/watch?v=Ebw2V22-mZI

      அதெ மாதிரி இந்த வரிகலும் அருமை!
      /காஞ்சித் தலைவன் கோவில் சிலை தான் கண்மணியே உன் பொன்னுடலோ

      குடந்தையில் பாயும் காவிரி அலை தான் காதலியே உன் பூங்குழலோ/

      நமக்கு எப்படி தாய் மொழி முக்கியமோ அதே மாதிரி பிறந்த மண்ணும் மனத்துக்கு மிகவும் நெருக்கமானதொரு விஷயம். அந்த ஊரை விட்டு வந்து வெகு காலம் ஆகியிருந்தும் மண்ணின் மணம் மனத்தை விட்டு அகலுவதில்லை. அதனால் காதலிக்கும் பெண்ணின் வடிவிலும் அதைக் காண்கிறோம்!

      amas32

    • n_shekar 4:26 pm on April 18, 2013 Permalink | Reply

      எனக்கும் “அழகூரில் பூத்தவளே” பாட்டுதான் மிகவும் பிடிக்கும் – பாடிய விதமும் மிக இனிமை 🙂

    • GiRa ஜிரா 2:17 pm on April 19, 2013 Permalink | Reply

      நீங்க சொல்லியிருக்கும் அத்தனை பாட்டுகளும் நல்ல பாட்டுகள்.

      பெண்ணை நிலமென்றும் நீரென்றும் கவிஞர்கள் பாடிப் பாடி பாட்டுகள் நூறு வந்தாலும் இன்னும் அலுக்கவில்லை போலும்.

      ஊரு விட்டு ஊரு வந்து வம்பு செய்யக்கூடாதுங்குறது மறை பொருள் இதுதானா? 🙂

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel