Updates from October, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • G.Ra ஜிரா 9:27 pm on October 21, 2013 Permalink | Reply  

    பக்திப் பயணங்கள் 

    வெளிநாட்டுக்கு காதல் பாட்டுகள் பாட ஒரு கூட்டம் போனால் பக்திப் பாடல்கள் பாடவும் ஒரு கூட்டம் போயிருக்கிறது.

    குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் இறையருட் கலைச்செல்வர் என்று அழைக்கப்பட்ட கே.சங்கர் இயக்கிய திரைப்படங்களில் வெளிநாட்டிலுள்ள கோயில்களும் வரும். படத்தின் பாத்திரங்கள் அந்தக் கோயில்களுக்குச் சென்று அழுது தொழுது உருகி மருகிப் பாடுவார்கள்.

    அதைத் தொடக்கி வைத்தது செந்தமிழ்த் தெய்வமான முருகக் கடவுள்தான். ஆம். வருவான் வடிவேலன் படத்தில்தான் முதன்முதலில் இலங்கையிலும் மலேசியாவிலும் இருக்கும் முருகன் கோயில்கள் பிரபலமாயின.

    இலங்கையின் கதிர்காமம் மிகவும் தொன்மையான முருகன் கோயில். இன்று தமிழ் அடையாளங்களை இழந்து சிங்கள அடையாளங்கள் கூடிவிட்டதாகச் சொல்கிறார்கள். நினைக்க வருத்தமாக இருக்கிறது.

    கதிர்காம யாத்திரை என்பது மிகப்பிரபலம். கலைமணி கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் நாவலில் கதிர்காம யாத்திரை மிக அழகாக விவரிக்கப்பட்டிருக்கும். திரைப்படத்தில் இந்தக் காட்சி இடம் பெறவில்லை. அது குறையல்ல. படத்துக்கு எவ்வளவு தேவையோ அதை மட்டும் கொடுத்தார் இயக்குனர் ஏ.பி.நாகராஜன்.

    கதிர்காமத்திலிருக்கும் மாணிக்க கங்கையில் மோகனா, சிக்கல் சண்முக சுந்தரம், மோகனாவின் தாயார் வடிவாம்பாள், முத்துராக்கு அண்ணன், நட்டுவனார் முத்துக்குமார சுவாமி, வரதன் என்று எல்லாரும் முழுகி எழும் போது வடிவாம்பாளின் கையில் மட்டும் ரேகை ஓடும் மரகதக் கல் கிடைக்கும். மற்றவர்களை விட அந்த அம்மையார் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

    அந்தக் கோயிலில் படமாக்கப் பட்ட பாடல்தான் வருவான் வடிவேன் திரைப்படத்தில் இடம் பெற்ற “நீயின்றி யாருமில்லை விழிகாட்டு” என்ற கண்ணதாசன் பாடல்.

    கண்ணிழந்த கணவனைக் கூட்டிக்கொண்டு யாத்திரை வரும் மனைவி பாடுவதாக அமைந்த பாட்டு.

    நீயின்றி யாருமில்லை விழி காட்டு
    நெஞ்சுருக வேண்டுகிறோம் ஒளி காட்டு

    பாடலின் இறுதியில் “நாங்கள் கதிர்காமம் வந்ததற்கு பலனில்லையோ” என்று இறைஞ்சுவார்கள். முருகனருளால் கண் கிடைக்கும்.

    இதே கதிர்காமத்தில் இன்னொரு பாடல் எடுக்கப்பட்டது. பைலட் பிரேம்நாத் திரைப்படத்துக்காக டி.எம்.சௌந்தரராஜன் பாடிய வாலியின் பாடல் அது.

    குழப்பத்தில் இருக்கும் தந்தை அந்தக் குழப்பம் நீங்க முருகனை நோக்கி காவடி எடுத்துப் பாடுவதாக அமைந்த பாடல் அது.

    முருகன் எனும் திருநாமம்
    முழங்கும் இடம் கதிர்காமம்
    குருபரணே சரணம் உந்தன் சேவடி
    தோளில் குறுகுதய்யா நான் சுமக்கும் காவடி

    அடுத்து நாம் போக இருப்பது மலேசியா. அங்குள்ள பத்துமலை முருகன் கோயில் படிகளில் ஏறப் போகிறோம். தயாரா?

    பத்துமலைத் திரு முத்துக்குமரனை
    பார்த்துக் களித்திருப்போம்
    இந்துக் கடலில் மலேசிய நாட்டில்
    செந்தமிழ் பாடி நிற்போம்

    பத்துமலையில் நடக்கும் தைப்பூசத் திருவிழா மிகப் பெருமை வாய்ந்தது. உலகில் அதிக அளவில் மக்கள் கலந்து கொள்ளும் இந்துத் திருவிழா என்றும் கூறப்படுகிறது. தமிழர்கள் மட்டுமல்ல… இந்துக்கள் மட்டுமல்ல… சீனர்களும் அயல்நாட்டவர்களும் கூட காவடி எடுத்து வந்து முருகனை வணங்குவார்கள். அதையும் பாட்டில் வைத்தார் கண்ணதாசன்.

    சேவல் கொடியுடை காவலன் பூமியின் சிந்தை கவர்ந்தவண்டி
    உடன் சீனத்து நண்பர்கள் வேல் குத்தி ஆடிடும் மோகத்தை தந்தவண்டி

    இந்தப் பாடலை கண்ணதாசன் ஒருவரே எழுதியிருந்தாலும் பாடியவர்கள் ஆறு பேர். சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன், பெங்களூர் ரமணியம்மாள், பி.சுசீலா, எம்.எஸ்.விசுவநாதன், எல்.ஆர்.ஈசுவரி என்று ஆறு பேரும் பாடக் கேட்பதும் பரவசம்.

    இதே பத்துமலையில் இன்னொரு பாடலும் எடுக்கப்பட்டது. “யாமிருக்க பயமேன்” என்ற திரைப்படத்துக்காக. இதுவும் இயக்குனர் கே.சங்கர் இயக்கி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் இசையமைத்த திரைப்படம் தான்.

    கணவனை இன்னொருத்தியிடம் திருட்டுக் கொடுத்த பெண் வேண்டிக் கொண்டு காவடி ஏந்தி மலையேறுவதாக அமைந்த பாடல்.

    வந்தேன் முருகா பத்துமலை
    நீ உணராயோ என் பக்தி நிலை

    பாடலைப் பாடிய நாயகியின் கோரிக்கையை பத்துமலை முருகன் நிறைவேற்றி வைப்பதாக காட்சி அமையும்.

    சமீபத்தில் பில்லா என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சி பத்துமலையில் படம் பிடிக்கப்பட்டாலும் அது பக்திப் பாடல் அல்ல.

    தமிழன் எங்கு போனாலும் பக்தியையும் மூட்டை கட்டிக் கொண்டு போகிறான் என்பதற்கு இந்தப் பாடல்களே சாட்சி. அதே போல தமிழன் உலகெங்கும் எத்தனையோ தெய்வங்களுக்கு எத்தனையெத்தனை கோயில்களைக் கட்டினாலும் தமிழ்க் கோயில் என்ற அடையாளத்தைக் கொண்டிருப்பவை முருகன் கோயில்கள் மட்டுமே என்பது அசைக்க முடியாத உண்மை.

    அதுவுமில்லாமல் இந்தப் பாடல்களுக்கு எல்லாம் இசையமைத்த பெருமை எம்.எஸ்.விசுவநாதன் என்னும் முருக பக்தருக்கே கிடைத்திருப்பதும் சிறப்பு.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

    பாடல் – நீயின்றி யாருமில்லை விழி காட்டு
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – சீர்காழி கோவிந்தராஜன், வாணி ஜெயராம்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – வருவான் வடிவேலன்
    பாடலின் சுட்டி – http://www.inbaminge.com/t/v/Varuvaan%20Vadivelan/Neeyndri%20Yaarumullai.vid.html

    பாடல் – முருகனெனும் திருநாமம்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – பைலட் பிரேம்நாத்
    பாடலின் சுட்டி – http://www.inbaminge.com/t/p/Pilot%20Premnath/Murugenendra%20Thirunamam.vid.html

    பாடல் – பத்துமலைத் திரு முத்துக்குமரனை
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன், பெங்களூர் ரமணியம்மாள், பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி, எம்.எஸ்.விசுவநாதன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – வருவான் வடிவேலன்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=ZipRNDiFkjk

    பாடல் – வந்தேன் முருகா பத்துமலை
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – யாமிருக்க பயமேன்
    பாடலின் சுட்டி – கிடைக்கவில்லை

    அன்புடன்,
    ஜிரா

    323/365

     
    • rajinirams 3:39 pm on October 22, 2013 Permalink | Reply

      கதிர்காமம் முருகன்-பத்துமலை முத்துக்குமரன் பாடல்களை கொண்ட பக்தி பரவசமூட்டும் முத்தான பதிவு.

    • Uma Chelvan 4:38 pm on October 22, 2013 Permalink | Reply

      நாம் மட்டும்மல்ல, ஒரு இடம் விட்டு மறு இடம் செல்லும் எல்லா இனத்தவருமே தம்முடைய மொழி, கலாச்சரம், கலை மற்றும் உணவு பழக்க வழக்கம் களை உடன் எடுத்து செல்கிறார்கள். இது எப்போதுமே நன்மை என்று சொல்ல முடியாது . சில சமயம் தாம் தான் உயரந்தவர் எனற எண்ணமும் கூடவே வருகிறது. Sunday evening நானும் என் பெண் மீனாக்ஷியும் (அவள் இங்கே பிறந்து வளர்ந்தாலும் , நான் மதுரை என்பதால் அந்த பெயர்) திரு. லால்குடி ஜெயராமனின் நினவு நடன நிகழ்சிக்கு சென்று இருந்தோம். இந்த நிகழ்ச்சி அவரின் பிறந்த நாளுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் அவரின் எதிர் பாராத மறைவு இதை ஒரு Homage ஆக மாற்றி விட்டது. நான்கு பாடல்களும் , மங்களமும் அவர் compose செய்த பாடல்கள். மீதம் மூன்று பாடல்கள் பாரதியாரின் கண்ணன் பாடல்கள். அதிலும் அவர் compose செய்த ” செந்தில் வேலவன்” என்ற பத வர்ணம் பார்க்க பார்க்க திகட்டதவை..

      திரு. லால்குடி ஜெயராம் மானின் தில்லானா https://community.worcester.edu/webapps/portal/frameset.jsp

    • Uma Chelvan 7:30 pm on October 22, 2013 Permalink | Reply

      Very sorry I gave a wrong u- tube link……..here we go………..Lalgudi Jayaraman’s Thillana

  • G.Ra ஜிரா 1:24 pm on September 29, 2013 Permalink | Reply  

    ஒரு துளி தேன்! 

    ஒரு மிகப்பிரபலாமான கதை. கண்டிப்பாக எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.

    ஒருவன் காட்டு வழியே சென்றான். திடீரென்று பெண் சிங்கமொன்று துரத்தியது. தப்பிக்க ஓடினான். ஆலமரம் ஒன்று வழியில் வந்தது. அதன் விழுதைப் பிடித்து ஏறினான். பாதி விழுது ஏறும் போதுதான் மரத்திலிருந்த மலைப்பாம்பைக் கவனித்தான். மேலே போனால் பாம்பு. கீழே இறங்கிலாம் பெண் சிங்கம்.

    தப்பிக்க வழியில்லாமல் அந்த விழுதில் தொங்கினான். அப்போது ஆலமரத்திலிருந்த தேன்கூட்டிலிருந்து தேன் சொட்டியது. அந்தத் துளி நாக்கில் விழுந்ததும் அவன் அதை ரசித்து ருசித்தான்.

    அந்த மனிதனின் நிலமைக்குப் பெயர்தான் வாழ்க்கை. பிறப்பும் எளிதில்லை. வாழ்வும் எளிதில்லை.

    ஆனால் அந்த ஒரு துளி தேனைச் சுவைக்கும் போது மலைப்பாம்பையும் பெண்சிங்கத்தையும் அவன் மறந்தது போல சிற்சில இன்பங்களில் வாழ்வியல் துன்பங்களை நாம் மறந்திருக்கிறோம்.

    இந்த உண்மை நமக்குப் புரிந்தால் நாம் அமைதியாவோம். முடிந்தவரை நல்லவராவோம்.

    புரியாதவர்கள் ஆடித் தீர்த்து விடுவார்கள். எதெற்கெடுத்தாலும் பிரச்சனை. எல்லாவற்றிலும் தவறு. அடுத்தவருக்கு முடிந்த வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் தொல்லை கொடுத்தல். கொள்ளையடித்தல். கொலை செய்தல். அரசியல் பிழைத்தல். வஞ்சகம் செய்தல். இன்னா செய்தல். நாவினால் சுடுதல். அமைதியைக் குலைத்தல். நீர்நிலைகளைக் கெடுத்தல். இயற்கையை அழித்தல். குழந்தைகளைத் துன்புறுத்துதல். இன்னும் எத்தனையெத்தனையோ தவறுகள்.

    ஆடித் தீர்த்துவிடுகிறது மக்கள் கூட்டம். ஆனால் எதுவும் தொடர்வதில்லை. ஒரு நாளில்.. ஒரு நிமிடத்தில்… அல்ல அல்ல. ஒரு நொடியில் அந்த ஆட்டம் அமைதியாகி விடுகிறது.

    ஆடி அடங்கும் வாழ்க்கையடா” என்று எழுதினார் உவமைக் கவிஞர் சுரதா. அத்தனை ஆட்டங்களும் அடங்குவதற்குத் தேவை ஒரேயொரு நொடிதான் என்பது மனிதனின் மிகப்பெரிய பலவீனம்.

    அந்த பலவீனத்தினால் உண்டாவது அச்சம். இறப்பின் மீதான அச்சம். அந்த அச்சம் ஏழைகளுக்கு மட்டும் வருவதல்ல. வேறுபாடே இல்லாமல் அரசன் முதல் ஆண்டி வரைக்கும் வியாபாரி முதல் விவசாயி வரைக்கும் வருவதுதான்.

    யோகிக்கும் உண்டு அந்த அச்சம். அச்சத்தைப் போக்கவும் மறைக்கவும் அவன் செய்வதுதான் யோகம். அதையே போகி வேறுவிதமாகச் செய்கிறான். போகத்தில் தன்னை மறைத்து இறப்பின் அச்சத்தைத் தள்ளிப் போடுகிறான்.

    அந்த அச்சம் இறப்பின் மீது மட்டுமல்ல… அது தொடர்பான அனைத்தின் மீதும் உண்டாகிறது.

    உலகத்திலேயே மிக மிக அமைதியான இடம் ஒன்று உண்டு. அங்கு சண்டை இல்லை. சச்சரவு இல்லை. மேலோர் இல்லை. கீழோர் இல்லை. செல்வந்தன் இல்லை. ஏழை இல்லை. எந்தப் பிரச்சனையுமே இல்லாத அமைதியான இடம் அது.

    ஆம். இடு/சுடுகாடுதான் அது. அங்கு யாரையாவது தனியாகப் போகச் சொல்லுங்கள். போகவே மாட்டார்கள். அந்த இடத்தைப் பற்றி கவிஞர் மருதகாசி அழகாக எழுதினார் ரம்பையின் காதலுக்காக படத்தில். பாடலுக்கு இசையமைத்தவர் டி.ஆர்.பாப்பா.

    சமரசம் உலாவும் இடமே
    நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

    அமைதியே இல்லாமல் ஓயாமல் சிந்தித்துச் சிந்தித்துக் குழப்பிக் கொண்ட எத்தனையோ உள்ளங்கள் அமைதியானது அங்குதான்.

    ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது
    எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
    தொல்லையின்றினே தூங்கிடும் வீடு
    ஆண்டி எங்கே அரசனும் எங்கே ஆண்டி எங்கே அரசனும் எங்கே
    அறிஞன் எங்கே அசடனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே
    ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே
    சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி
    ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
    எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
    நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

    மனித வாழ்வில் இல்லாத அமைதியும் ஒற்றுமையும் பாகுபாடின்மையும் நிலவுவது அந்த ஒரு இடத்தில்தான்.

    சரி. இந்தப் பதிவைப் படிக்கும் போதே மனம் இவ்வளவு அமைதியாகிறதே… ஒரு மெல்லிய சோகம் மனதில் படிகிறதே. அப்படியிருக்க இந்த அச்சத்தை எப்படி வெல்வது? வெற்றி கொள்வது?

    புத்தபிக்குகள் எப்போதும் சோகமாக இருப்பார்களாம். ஏன்? பின்னால் நிகழப் போவதுக்கு முன்னாலேயே சோகம் அனுபவிப்பார்கள். துறவிகள் அனைத்தையும் துறந்து தவம் செய்யப் போய்விடுவார்கள்.

    நாமும் அப்படிச் சோகமாக இருக்கத்தான் வேண்டுமா? துறவு கொள்ளத்தான் வேண்டுமா? வேறுவழியே கிடையாதா? ஆண்டவனுடைய திருவடியைப் பற்ற வேண்டும் என்று எல்லா மதங்களும் சொல்கின்றன.

    காலக்கணக்கை முடிப்பதற்கு காலன் வந்தால் தானே அச்சம் வரும். ஆண்டவனே வந்தால்?

    எத்தனையோ யோகிகளும் சித்தர்களும் முனிவர்களும் காணக்கிடைக்காத அந்த அருட்பெருஞ்சோதியே வந்தால்?

    அப்படி ஒரு வழியைத்தான் அருணகிரியும் சொல்லிக் கொடுக்கிறார்.

    பாதி மதிநதி போது மணிசடை
    நாத ரருளிய குமரேசா
    பாகு கனிமொழி மாது குறமகள்
    பாதம் வருடிய மணவாளா
    காலன் எனை அணுகாமல் உனதிரு
    காலில் வழிபட அருள்வாயே

    அன்புடன்,
    ஜிரா

    302/365

     
    • rajinirams 2:55 pm on September 29, 2013 Permalink | Reply

      வாழ்வியல் தத்துவத்தை எளிமையாகவும் அழகாகவும் எடுத்து “காட்டு”ம் அருமையான பதிவு. “சமரசம் உலாவும் இடமே”-மருதகாசியின் என்ன அறுபுதமான வரிகள்.முகராசி படத்தில் இடம்பெறும் கவியரசரின் வரிகளும் அருமையாக இருக்கும்-பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்,அந்த பட்டயத்தில் கண்டது போல் வேலி எடுத்தான்,அதில் எட்டடுக்கு மாடி வைத்து கட்டிடத்தை எட்டடி நின்று படுத்தான்,மண்ணை கொட்டியவன் வேலி எடுத்தான்-உண்டாக்கி வெச்சவங்க ரெண்டு பேரு-இங்கே கொண்டு வந்து போட்டவங்க நாலு பேரு. கவிஞர் வைரமுத்துவின் “கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே-இந்த வாழ்க்கை வாழ தான்,கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல”வரிகளும் சிந்தனையை தூண்டுபவை.”இறைவனின் திருவடியை பற்றுவதே சரி”என்ற அருணகிரியாரின் பாடலை சொன்னது முத்தாய்ப்பு.

    • Uma Chelvan 5:06 pm on September 29, 2013 Permalink | Reply

      ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் கீழோர் என்றும் பேதமில்லாது
      எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு…………..எனக்கு மிகவும் பிடித்த பாடல் “பட்தீப்” ராகத்தில் !! மரணம் என்பது எல்லோருக்கும் பொது!! ஆனால் “எங்கே” ” எப்படி” என்பதுதான் பெரிய கேள்விகுறி? அதில் தான் இறைவனும் இருக்கிறான்!!!!! .

    • amas32 4:00 pm on October 1, 2013 Permalink | Reply

      ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா என்ற பாட்டும் வாழ்வு முடிந்ததும் எல்லோருக்கும் ஒரே நிலை தான் என்று சொல்ல வருகிறது. அதற்காக முதலில் இருந்தே வாழ்க்கையை அனுபவிக்காமல் இருக்க முடியாது. தலை கால் புரியாமல் ஆடாமல், நல்ல எண்ணங்களையும் செயல்களையும் செய்து வந்தால் முடிவும் அமைதியானதாக இருக்கும்.

      amas32

  • G.Ra ஜிரா 3:55 pm on July 12, 2013 Permalink | Reply  

    வசையும் இசையாகும்! 

    எத்தனையோ பாடல்கள் திரைப்படங்களில் வந்துள்ளன? அவற்றில் செருப்பு வந்திருக்கிறதா என்று யோசித்துக் கொண்டிருந்த போது வானொலியில் காதலில் சொதப்புவது எப்படி திரைப்படப் பாடல் ஓடியது.

    லவ் லவ் லவ் லவ் லவ்
    ஹார்ட் பீட் கூட டம்ப் பீட் ஆகும் லவ்
    தெர்மாமீட்டர் தாங்காது இந்த லவ்
    ………………….
    செருப்பைக் கழட்டி வந்தாலும்
    தொரத்தித் தொரத்திப் போவோமே
    பாடல் – பாலாஜி மோகன்
    பாடியவர்கள் – சித்தார்த்
    இசை – எஸ்.தமன்
    படம் – காதலில் சொதப்புவது எப்படி
    பாடலின் சுட்டி – http://youtu.be/M-MtoaKL8eI

    செருப்பைக் கழட்டி வந்தாலும் தொரத்திப் போவோம்” பாட்டு. அதாவது அவமானப் பட்டாலும் விடமாட்டோம் என்ற அளவுக்கு காதல் உறுதியாம். செருப்பால் அடித்தால் அவமானம் என்ற அளவுக்காவது புரிதல் இருப்பது மகிழ்ச்சி.

    இப்படிப் பட்ட பாட்டில் செருப்பு கிடந்தால் ஒரு குற்றமும் இல்லை. ஆனால் முருகனைப் புகழ்ந்து பாடும் பாட்டில் செருப்பு கிடந்தால்?

    புலவர்களைச் சோதிப்பதே சில புலவர்களுக்குப் பிடித்தமான வேலை. இப்படிப் பாடுக அப்படிப் பாடுக என்று துளைத்தெடுத்து விடுவார்கள்.

    அப்படி ஒரு புலவர் காளமேகத்திடம் கேட்டார்.

    “ஐயா, நீர் பெரிய புலவர் என்று பேசிக் கொள்கிறார்களே. உம்மால் முருகனைப் புகழ்ந்து பாட முடியுமா?”

    “முருகன் அருளால் முடியும். வேலில் தொடங்கவா? மயிலில் தொடங்கவா?” என்றார் காளமேகம்.

    ”வேலிலும் தொடங்க வேண்டாம். மயிலிலும் தொடங்க வேண்டாம். செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடித்தால் போதும்” என்று குசும்பாகக் கூறிவிட்டார் போட்டிப் புலவர்.

    என்ன கொடுமை? இறைவனை, முத்தமிழ் முதல்வனை, செந்தமிழ் தெய்வத்தை, வெல்வேல் அழகனை, கருணைக் கடவுளை, கண்கவர் காளையை, முருகனைப் பாடும் போது செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிப்பதா? தகுமா? முறையா?

    அதைத் தகும் என்றும் முறை என்றும் மிகமிக அழகாக நிரூபித்தார் காளமேகம்.

    செருப்புக்கு வீரர்களை சென்றுழக்கும் வேலன்
    பொருப்புக்கு நாயகனை புல்ல- மருப்புக்கு
    தண்தேன் பொழிந்த திரு தாமரைமேல் வீற்றிருக்கும்
    வண்டே விளக்குமாறே

    செரு என்றால் போர்க்களம். செருப்புக்கு என்றால் போர்க்களம் புகும் என்று பொருள்படும்.

    அப்படி போர்க்களத்தின் புகுந்த வீரர்களை வெற்றி கொள்ளும் முருகனை அணைத்துக் கொள்ளத் துடிக்கிறது உள்ளம். குளிர்ந்த தேன் நிறைந்த தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் வண்டே, அந்த முருகன் இருக்கும் இடத்தை விளக்குமாறே உன்னைக் கேட்கிறேன்.

    விளக்குமாறு என்பதற்கு விளக்கம் சொல்லுமாறு என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா.

    இப்படி செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடிகின்றது இந்த முருகன் பாட்டு.

    சரி. மையக் கருத்துக்குத் தொடர்பில்லாமலும் பொதுக்கருத்துக்குத் தொடர்பாகவும் மற்றொரு செய்தி.

    இதே போல வடமொழிக் கவி காளதாசரிடம் ஒரு போட்டி. செய்யுள் எழுத வேண்டும். அதன் ஈற்றடி ka kha ga gha என்று முடிக்க வேண்டும். அதாவது வடமொழிக் ககர எழுத்துகள் ஈற்றடியில் வந்து முடிய வேண்டும்.

    காளிதாசரும் விரைவாகத்தான் எழுதியிருப்பார் என்று நம்புகிறேன். காளியின் அருள் பெற்றவர் அல்லவா.

    கா த்வம் பாலே
    காஞ்சனமாலா
    கஸ்யா புத்ரி
    கனகலதயா:
    ஹஸ்தே கிம் தே
    தாளீபத்ரம்
    காவா ரேக்கா
    ka kha ga gha

    காளிதாசருக்கும் ஒரு சிறுமிக்கும் நடந்த உரையாடல் போல அமைந்த இந்த வடமொழிப் பாடலை இன்றைய தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்.

    பேர் என்ன பாப்பா?
    காஞ்சனமாலா
    யாரோட பொண்ணு?
    கனகலதயா: (தந்தை பெயர்)
    கைல என்னம்மா?
    பனையோலை
    என்ன எழுதியிருக்கு?
    ka kha ga gha

    கற்றறிந்த நல்ல புலவர்கள் வாயில் எப்படிப் பட்ட சொல்லும் நற்சொல்லாகி விடும் என்பதற்கு இதெல்லாம் எடுத்துக்காட்டு.

    செருப்பு விளக்குமாறு என்று சொல்லியே தமிழ்க் கடவுளைப் பாடுவதற்கு தமிழ் மொழியில் இடமுண்டு என்று நிரூபித்த காளமேகம் போன்றவர்களை வணங்கத்தான் வேண்டும்.

    அன்புடன்,
    ஜிரா

    223/365

     
    • amas32 10:51 pm on July 12, 2013 Permalink | Reply

      23ஆம் புலிகேசியில் கூட புலவர்/ அரசர் இருபொருள் உரையாடல் வரும்! புலவர்களை சோதிப்பது அந்த காலத்தில் அரசர்களுக்கு ஒரு விளையாட்டு, இன்று பாடலாசிரியர்களை சோதிப்பது இயக்குனர்களுக்குக் கட்டாயம். சிச்சுவேஷனுக்கு ஏற்ற பாடல் தர வேண்டியது பாடாசிரியர்கள் பாடு. அதை கேட்பது நம் பாடு. நல்ல பாட்டாக இருப்பின் அது பாடு அல்ல, இன்பமே 🙂

      amas32

  • G.Ra ஜிரா 11:42 am on July 1, 2013 Permalink | Reply  

    குழலன் 

    அன்றொருநாள் நண்பர்களுக்கு இடையே ஒரு பேச்சு வந்தது. அதாவது மெல்லத் திறந்தது கதவு திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் இசையமைத்த பாடல்கள் எவை? இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்கள் எவை?

    பொதுவாகவே மெல்லிசை மன்னர் மெட்டுகளை அமைத்தார் என்பதும் இசைஞானி இசைக்கோர்ப்பு செய்தார் என்பதும் கருத்து. ஆனால் ”குழலூதும் கண்ணனுக்கு” என்ற பாடலுக்கு மெட்டமைத்தது இளையராஜா என்று மெல்லிசை மன்னர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

    மிக அருமையான பாடல் அது. வாலி எழுதிய சித்ரா பாடிய அட்டகாசமான பாடல்.

    குழலூதும் கண்ணனுக்கு
    குயில் பாடும் பாட்டு கேக்குதா குக்கூ குக்கூ

    கண்ணனைச் சொல்லும் போதெல்லாம் குழலைச் சொல்வது வழக்கமாக திரைப்பாடல்களில் இருக்கிறது. வாலி எழுதிய இன்னொரு பாடலும் நினைவுக்கு வருகிறது.

    காற்றினிலே வரும் கீதம்
    கண்ணனவன் குழல் நாதம்
    நேற்றிரவு கேட்டேனே
    பால் நிலவாய் ஆனேனே

    ரசிகன் ஒரு ரசிகை படத்தில் ரவீந்திரன் இசையில் வாணி ஜெயராம் பாடிய கர்நாடக பாணி மேடைப் பாடல்.

    குழல் என்றால் கண்ணன். கண்ணன் என்றால் குழல் என்று இன்று அமைந்து விட்டது. இரண்டையும் எளிதில் பிரித்துப் பார்க்க முடிவதில்லை.

    ஆனால் தமிழ் இலக்கியங்களின் படிப் பார்த்தால் நம் கருத்தை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கும்.

    கண்ணன் ஒரு குறிப்பிட்ட யுகத்தில் தோன்றிய அவதாரம் என்றும் முருகன் யுகங்களுக்கு முன்னால் இருந்த கடவுள் என்றும் சொல்லும் புராணங்களை நம்பினாலும் தமிழ் இலக்கியம் படித்தால் குழல் எந்தக் கடவுளுக்குரியது என்ற எண்ணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.

    சரி. எது எப்படியும் இருக்கட்டும். தமிழ் இலக்கியம் சொல்லும் கருத்து என்ன என்பதைப் பார்க்கலாம். ஏனென்றால் குழலையும் தாண்டி சில வியப்பான தகவல்களைப் பார்க்கப் போகிறோம்.

    சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் முதலாவதாக வைக்கப்பட்ட நூல் திருமுருகாற்றுப்படை. தமிழில் இன்றிருக்கும் சமய இலக்கியங்களுக்கு எல்லாம் முந்தியது. மூத்தது. முத்தமிழ் முதல்வனான முருகனைப் பாடுவது.

    முருகக் கடவுள் குன்றுதோறும் ஆடும் இயல்பைப் பாடும் பொழுது முருகனுக்கும் குழலுக்கும் உள்ள தொடர்பை நக்கீரர் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

    குழலன், கோட்டன், குறும் பல்லியத்தன்,
    தகரன், மஞ்ஞையன், புகர் இல் சேவல்அம்
    கொடியன், நெடியன், தொடி அணி தோளன்
    நரம்பு ஆர்த்தன்ன இன் குரல் தொகுதியொடு,
    குறும் பொறிக் கொண்ட நறுந் தண் சாயல்
    மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன்,
    முழவு உறழ் தடக் கையின் இயல ஏந்தி,
    மென் தோள் பல் பிணை தழீஇ, தலைத்தந்து,
    குன்றுதோறு ஆடலும் நின்ற தன் பண்பே. அதாஅன்று

    மேலே குறிப்பிட்ட வரிகளை பக்தி நெறியோடும் புரிந்து கொள்ளலாம். தகவல் அறியும் ஆர்வத்தோடும் அணுகலாம். நாம் பக்தியை சற்று ஒதுக்கி வைத்து விட்டு வியத்தகு தகவல்களில் ஆழலாம்.

    அறுபடை வீடுகளில் ஐந்தாம்படை வீடாக நக்கீரர் குறிப்பிட்டிருப்பது குன்றுதோறாடல். இன்றைக்கு திருத்தணி ஐந்தாம்படை வீடாகக் குறிப்பிடப் பட்டாலும் உலகில் இருக்கும் குன்றுகளையெல்லாம் ஐந்தாம்படை வீடாகக் குறிப்பிடுகிறார் நக்கீரர்.

    அப்படி குன்று தோறும் இருக்கும் முருகனின் இயல்புகளை விளக்கும் வரிகளில் ஒளிந்திருக்கிறது தமிழர்களின் இசையறிவு.

    குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய வரி “குழலன் கோட்டன் குறும் பல்லியத்தன்”.

    குழலன் – குழல் வைத்துக் கொண்டிருப்பவன் என்று பொருள் அல்ல. குழல் ஊதுவதில் மிகச் சிறந்தவன் என்று பொருள். அழகு நிறைந்தவனை அழகன் என்பது போல குழல் ஊதுகின்றதில் சிறந்தவனைக் குழலன் என்பது வழக்கம்.

    கோட்டன் – இதற்கு இரண்டு பொருள் விளக்கங்களைக் கண்டேன். கோடு என்பது கொம்பினைக் குறிக்கும். ஊதுகொம்பினை எக்காளம் என்றும் அழைப்பார்கள். அந்த இசைக்கருவியில் சிறந்தவன் முருகன். இன்னொரு பொருளாக கோட்டு வாத்தியம் என்னும் நரம்பிசைக் கருவியையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்தப் பெயர் சங்ககாலத்தில் இருந்ததா என்று தெரியவில்லை.

    குறும் பல்லியத்தன் – இதுதான் மிகமிகக் கவனமாக புரிந்து கொள்ள வேண்டிய சொல்.

    பல்லியம் = பல் + இயம். பலவிதமான இசைக்கருவிகளைக் கொண்டு இசை அமைப்பவன்.
    அதாவது Orchestration என்று சொல்லப்படும் இசைக்கோர்ப்பு.

    அதாவது முருகன் ஒரு இசையமைப்பாளன். மெல்லிசை மன்னர், இசைஞானி, இசைப்புயல் என்பதையெல்லாம் தாண்டி எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு நிற்கும் இசைக்கடவுள். இசை தொடங்குவதும் வளர்வதும் அடங்குவதும் முருகனிடத்தில். அதனால்தான் முருகனை இசைத்தெய்வமாகக் கொண்டாடியிருக்கிறது தமிழ்.

    Orchestra என்ற சொல்லோ கருத்தோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேற்குலக நாடுகளில் இருந்திருக்குமா என்பதே ஐயம். அந்த நிலையில் பல்லியம் என்ற சொல் சங்கத்தமிழில் இடம் பெற்றிருப்பது தமிழிசை அந்தக் காலத்தில் செழித்திருந்ததையே காட்டுகிறது.

    பல்லியத்திலும் இரண்டு வகை உண்டு. குறும் பல்லியம். நெடும் பல்லியம். இவை பல்லியத்தில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளின் எண்ணிக்கையை வைத்துச் சொல்லப்படுகின்றவை.

    சரி. இசைக்கருவிகளை வைத்து இசையமைத்து விட்டார் முருகன். அவரே பாடியும் விடுவார். ஆனால் Chorus வேண்டாமா? பின்னணியில் பலகுரல்கள் கூடியெழுந்து முன்னணியில் பாடுவதைச் செறிவாக்க வேண்டாமா?

    அதற்குதான் இருக்கிறார்கள் ”நரம்பு ஆர்த்தன்ன இன் குரல் தொகுதியொடு”. யாழ் முதலான இனிய நரம்பிசைக் கருவிகளைப் போன்ற இன்னொலி கொண்ட பாடகர்கள் முருகனோடு இருக்கிறார்கள். முருகன் இசையமைக்கும் போது அவர்களும் கூடிப் பாடுகின்றவர்கள்.

    ஆக உலகின் முதல் குழலன் மட்டுமல்ல… முதல் இசையமைப்பாளரும் முருகனே!

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – காற்றினிலே வரும் கீதம்
    பாடியவர் – வாணி ஜெயராம்
    வரிகள் – வாலி
    இசை – ரவீந்திரன்
    படம் – ஒரு ரசிகன் ஒரு ரசிகை
    பாடலின் சுட்டி – http://youtu.be/_RQY4hgiYd0

    பாடல் – குழலூதும் கண்ணனுக்கு
    பாடியவர் – கே.எஸ்.சித்ரா
    வரிகள் – வாலி
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் – இசைஞானி இளையராஜா
    படம் – மெல்லத் திறந்தது கதவு
    பாடலின் சுட்டி – http://youtu.be/dfOuTx66bJU

    அன்புடன்,
    ஜிரா

    212/365

     
    • Sudharsan (@vSudhar) 12:53 pm on July 1, 2013 Permalink | Reply

      //ஆனால் ”குழலூதும் கண்ணனுக்கு” என்ற பாடலுக்கு மெட்டமைத்தது இளையராஜா // Otherway to know this is, Cheeni Cum, this song is used by IR, obviously his tune.

      எங்க ஆரம்பிச்சாலும் முருகன்ட்ட வந்து முடிசிடுறீங்க 🙂

    • rajnirams 10:22 pm on July 1, 2013 Permalink | Reply

      அருமை.குழல் என்றாலே கண்ணன் என்று தான் எல்லோருமே நினைப்பார்கள்.நக்கீரரின் பாடல் மூலம் குழலன்-முருகனின் பெருமையை உணர்த்தியிருக்கிறீர்கள்.

    • amas32 8:06 pm on July 4, 2013 Permalink | Reply

      //அழகு நிறைந்தவனை அழகன் என்பது போல குழல் ஊதுகின்றதில் சிறந்தவனைக் குழலன் என்பது வழக்கம்.// சூப்பர்!

      //அதனால்தான் முருகனை இசைத்தெய்வமாகக் கொண்டாடியிருக்கிறது தமிழ்// தமிழ் தெய்வமான முருகன் இசை தெய்வமாகவும் இருப்பது நாம் பெற்ற பேரு! முருகன் இசைக்கும் பல்லியத்துக்கு மயில்கள் ஆடும். அவர் இசைக்கும் இசைக்கு ஆடாத மனமும் உண்டோ?

      amas32

  • G.Ra ஜிரா 11:36 am on June 19, 2013 Permalink | Reply  

    திருப்புகழ்! 

    திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
    எதிர்ப்புகளை முருகா, உன் வேல் தடுக்கும்
    முருகா…… உன் வேல் தடுக்கும்!

    பூவை செங்குட்டுவன் எழுதிய அற்புதமான பாடல் வரிகள் இவை. கௌரி கல்யாணம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது.

    திருப்புகழின் திருப்புகழை இதை விட எளிமையாகச் சொல்ல முடியுமா என்று நம்மையும் சிந்திக்க வைக்கும் வரிகள் இவை.

    திருப்புகழுக்கு அப்படி என்ன பெருமை? அதைப் புரிந்து கொள்ள சிலபல தகவல்களை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    தமிழுக்குக் கிடைத்த அற்புத மாமணி அருணகிரிநாதர். முருகன் திருவருளால் அருணகிரியின் வாக்கில் வந்த பாடல்கள்தான் திருப்புகழ் என்று தொகுக்கப்பட்டன. திருப்புகழ் என்ற பெயரைப் பின்னால் யாரும் வைக்கவில்லை. அருணகிரியே ஒரு பாடலில் திருப்புகழ் என்று குறிப்பிடுகிறார்.

    பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
    பட்சியெனும் உக்ர துரகமும் நீபப்
    பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
    பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
    திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
    சிற்றடியு முற்றிய பனிருதோளும்
    செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
    செப்பென எனக்கருள்கை மறவேனே

    குற்றமற்ற மணிகள் பொருந்திய பொன்னணிகளை அணிந்து கொண்டு அழகு நடை போடும் மாமயிலையும்,
    கடம்ப மலர் மாலையையும்,
    கிரவுஞ்ச மலையானது மறைந்து போகும் படி திருக்கையால் ஏவித் துளைத்த வேலையும்,
    எட்டுத் திசையும் கிடுகிடுக்க வரும் சேவலையும்,
    அருள் தருகின்ற சிற்றடிகளையும்,
    பன்னிரண்டு தோள்களையும்,
    இருந்து அருள் செய்யும் ஒவ்வொரு திருப்பதிகளையும் வைத்து உயர்ந்த வகையில் திருப்புகழை உள்ளம் விரும்பிப் பாடு என்று அருள் சொன்ன கருணையை நான் என்றும் மறவேனே!

    ஆக.. இந்தப் பாட்டில் இருந்து தெரிவது என்ன? திருப்புகழ் என்ற பெயரை அருணகிரிநாதர் வைக்கவில்லை. முத்தமிழ்த் தெய்வமான முருகப் பெருமானின் திருவாயால் பெயரிடப்பட்ட நூல் திருப்புகழ் என்ற சிறப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். இன்னும் பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.

    திருப்புகழைப் பாடிய அருணகிரி அந்தப் பாடல்களை ஓலையில் எழுதி வைக்கவில்லை. அவர் பாடிய கோயில்களில் இருக்கும் அன்பர்கள் அந்தப் பாடல்களை ரசித்து எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்த பாடல்கள்தான் இன்று தப்பிப் பிழைத்து நமக்குக் கிடைத்திருக்கின்றன.

    திருப்புகழை அருணகிரி அறிவால் பாடவில்லை. முருகன் அருளால் பாடினார். அதாவது முருகன் அருணகிரியைப் பாட வைத்தான். அந்தப் பாடல்களில் எத்தனையெத்தனை சந்தநயம்! எத்தனை தாள வகைகள் உண்டோ அத்தனையும் திருப்புகழ் பாடல்களில் உள்ளனவாம். அத்தோடு அளவிட முடியாத கவிச்சுவை வேறு.

    அப்படிப்பட்ட திருப்புகழ் பாடல்களை அருணகிரியே ரசித்திருக்கிறார். கேட்டவர்கள் ரசித்ததையும் கண்டிருக்கிறார்.

    பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
    பட்சிந டத்திய குகபூர்வ
    பச்சிம தட்சிண வுத்தர திக்குள
    பத்தர்க ளற்புத மெனவோதுஞ்
    சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
    ருப்புக ழைச்
    சிறி தடியேனுஞ்
    செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
    சித்தவ நுக்ரக மறவேனே

    அடியவர்களுக்கு அருளும் இறைவனே
    ஆடும் மயில் ஏறி விளையாடும் குகனே
    கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
    ஆகிய திசைகளில் உள்ள அன்பர்கள் எல்லாரும்
    அற்புதம் அற்புதம் என்று ரசித்து ஓதுகின்ற
    அழகு கவிநயமும் சந்தநயமும் மிகுந்து இருக்கும்
    திருப்புகழை கொஞ்சமாவது நானும்
    சொல்லும் படி செய்து உலகில் பரவுவதற்கு
    வகை செய்த உன்னருளை மறக்க மாட்டேன் முருகனே!

    இந்த வரிகளிலும் அருணகிரி முருகனுக்கு நன்றி கூறுகிறார். திருப்புகழ் என்ற பெயர் நிலைபெறும் வகையில் இந்தப் பாடலிலும் இடம் பெறுகிறது.

    சரி. திருப்புகழ் பாடல்களிலேயே முதலில் பாடப்பட்டது எந்தப் பாடல் என்று தெரியுமா? எங்கு பாடப்பட்டது என்று தெரியுமா?

    முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற பாடல்தான் முதலில் பாடப்பட்டது. பாடப்பட்ட இடம் திருவண்ணாமலை கோயில்.

    திருப்புகழ் பாடு என்று முருகன் பணித்த பின் “என்ன பாடுவது எப்படிப் பாடுவது” என்று புரியாமல் தவித்த அருணகிரிக்கு “முத்து முத்தாகப் பாடு” என்று முருகனே எடுத்துக் கொடுக்க பாடப்பட்டதுதான் “முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற திருப்புகழ்.

    இதில் முத்து என்பது அருணகிரியைப் பெற்ற அன்னை என்றொரு கருத்தும் உண்டு.

    திரைப்படங்களிலும் திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன. குறிப்பாக அருணகிரிநாதர் திரைப்படத்தில் மூன்று திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன.

    1. முத்தைத் தரு பத்தித் திருநகை
    2. பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
    3. தண்டையணி வெண்டயம் கிண்கிணி சதங்கையும்

    அதற்குப் பல ஆண்டுகள் கழித்து இறையருட் கலைச்செல்வர் இயக்கத்தில் வெளிவந்த “யாமிருக்க பயமேன்” என்ற திரைப்படத்தில் ”பாதிமதி நதி போது மணிசடை” என்ற திருவேரகத்(சுவாமிமலை) திருப்புகழ் மெல்லிசை மன்னர் இசையமைப்பில் வெளிவந்தது. அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜா இசையில் “ஏறுமயில் ஏறிவிளையாடும்” என்ற திருப்புகழ் ”தம்பி பொண்டாட்டி” என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது.

    நாமும் திருப்புகழை ஓதி முருகனருளால் நல்லறிவும் நல்லருளும் பெற்று வளமோடு வாழ்வோம்.

    பதிவில் இடம் பெற்ற திருப்புகழ் பாடல்கள்
    திருப்புகழை/பி.சுசீலா,சூலமங்கலம் ராஜலட்சுமி/கௌரிகல்யாணம்/எம்.எஸ்.வி – http://youtu.be/awxORiSnHig
    முத்தைத்தரு/டி.எம்.சௌந்தரராஜன்/அருணகிரிநாதர்/டி.ஆர்.பாப்பா – http://youtu.be/2vRkCV3symk
    பக்கரை/டி.எம்.சௌந்தரராஜன்/அருணகிரிநாதர்/டி.ஆர்.பாப்பா – http://youtu.be/AfZ3UoT4pFw
    தண்டையணி/டி.எம்.சௌந்தரராஜன்/அருணகிரிநாதர்/டி.ஆர்.பாப்பா – http://youtu.be/QyZi7oEUtGI
    பாதிமதிநதி/வாணி ஜெயராம், எல்.ஆர்.அஞ்சலி/யாமிருக்க பயமேன்/எம்.எஸ்.வி – http://youtu.be/FDMcv6CjglI
    ஏறுமயில்/சுவர்ணலதா,மின்மினி,கல்பனா,பிரசன்னா/தம்பிபொண்டாட்டி/இளையராஜா – http://youtu.be/ju0VhKQHQ3c

    பி.கு. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த “என் வீட்டுத் தோட்டத்தில்” பாடல் “நாதவிந்து கலாதீ நமோநம” என்ற திருப்புகழின் சாயலிலும் “வெற்றிக் கொடி கட்டு” என்ற பாடல் “முத்தைத் தரு பத்தி” என்ற திருப்புகழின் சாயலிலும் வந்துள்ளது.

    அன்புடன்,
    ஜிரா

    200/365

     
    • kamala chandramani 12:14 pm on June 19, 2013 Permalink | Reply

      திருப்புகழ் ஓதுவதன் சிறப்பை அருணகிரிநாதர் திருத்தணிகைத் திருப்புகழில் அருமையாகக் கூறுகிறார்.
      ”சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ் செகுத்தவ ருயிர்க்குஞ் சினமாக,
      சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம்;
      நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும் நிசிக்கருவறுக்கும் பிறவாமல்
      நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும் நிறைப்புக ழுரைக்குஞ் செயல்தாராய்.”

      வள்ளலாரோ”உய்யும் பொருட்டுன் திருப்புகழை உரையே னந்தோ வுரைக்கடங்காய்” எனத் தணிகைச் செஞ்சுடரிடம் வருந்துகிறார். மேலும்,”அருணகிரி பாடும் நின்னருள்தோய் புகழைப் படியேன் பதைத் துருகேன் பணியேன் மனப்பந்தம் எல்லாம் கடியேன் என் செய்வேன் என் காதலனே” என உருகுகிறார். திருப்புகழும் அருட்பாவும் இரு கண்கள்.

    • Arun Rajendran 12:24 pm on June 19, 2013 Permalink | Reply

      ஜிரா சார்,

      அருணகிரிநாதர் காரணப் பெயர் மாதிரி தெரியுதுங்க.. சுருக்கமா ஒரு குறிப்பும் முடிந்தால் கொடுங்க..படிக்கிற ஆர்வத்தத் தூண்டி இருக்கீங்க… திருப்புகழையும் என்னோட அட்டவனைல சேர்த்திக்கிறேன்

      இவண்,
      அருண்

    • amas32 (@amas32) 12:53 pm on June 19, 2013 Permalink | Reply

      //திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். இன்னும் பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.//

      நீங்கள் இங்கே நாலு வரி நோட்டில் இந்த இருநூறு நாட்களில் பதிந்த பாடல்கள் நாளை ஒரு ரெபரன்சுக்கு நிச்சயம் பலருக்கு உதவப் போகிறது.

      உங்கள் டாபிக் ஜிரா! சூப்பர் பதிவு 🙂 அனுபவித்துப் படித்தேன் 🙂 நன்றி.

      amas32

    • rajnirams 10:07 pm on June 19, 2013 Permalink | Reply

      முதலில் உங்களுக்கெல்லாம் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
      சூப்பரான பதிவு. இதுவரை நான் அறியாத அரிய தகவல்கள்.அருணகிரிநாதரின் பெருமைகளையும் திருப்புகழின் சிறப்புகளையும் அருமையாக “சுட்டி”காட்டியதற்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.

  • G.Ra ஜிரா 11:11 am on June 4, 2013 Permalink | Reply  

    ஆயிரத்தில் ஓர் இரவு 

    முதலிரவு. அந்த ஒரு இரவை வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது என்பதால்தான் அதற்கு முதலிரவு என்று பெயர். அந்த முதலிரவிலே வருவது முதல் உறவு. இதைக் கற்பகம் படத்தில் வாலி இப்படிச் சொன்னார்.

    ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
    ஆனால் இதுதான் முதலிரவு
    ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
    ஆனால் இதுதான் முதல் உறவு

    பாடல் – வாலிபக் கவிஞர் வாலி

    எத்தனையோ கற்பனைகளோடும் ஆசைகளோடும் வாழ்க்கைப் பயணத்தில் அடியெடுத்து வைக்கும் அந்த ஒரு இரவில் மணமக்கள் ஒவ்வொருவரின் உள்ளமும் உணர்ச்சியும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு துள்ளும். அந்தத் துள்ளலில் பேச்சு வருமா? வாழ்க்கைத்துணையிடம் முதலிரவில் முதன்முதலில் என்ன பேசுவது? என்ன பேசுவார்கள்? யார் முதலில் பேசியிருப்பார்கள்? என்ன சொல்லியிருப்பார்கள்? அப்படி எதையும் சொல்லும் போது எவ்வளவு தயக்கம் இருந்திருக்கும்? சிந்தித்துப் பார்க்கவும் இனிதான விஷயம் அது. சரி. இவற்றையெல்லாம் திரைப்படங்களில் பாடலாசிரியர்கள் எப்படிக் கையாண்டார்கள் என்று ஆராய்ச்சி செய்வோம்.

    அவர்களுக்குச் சிறுவயது முதலே பழக்கம். அவன் கால்சட்டை போட்ட காலத்தில் பார்த்த சிறுமி இன்று பெருகிப் பொங்கி மனைவியாக வந்திருக்கிறாள். அவளைப் பார்த்ததும் அவனுக்கு வியப்பு. அதனால் பழைய நட்பினால் உரிமை எடுத்துக் கொண்டு குறும்பாகக் கேட்கிறான்.

    பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
    இன்று பூவாடை வீசிவர பூத்த பருவமா

    பாடல் – கவியரசர் கண்ணதாசன்

    அவன் உழைத்து முன்னுக்கு வந்தவன். ஒவ்வொரு காசும் வேர்வை சொட்டச் சொட்ட உழைத்துச் சேர்த்தது. செல்வத்தின் அருமை பெருமை தெரிந்தவன். இத்தனை பொருட்செல்வங்களைத் தேடினாலும் அதற்கிடையில் வாழ்க்கைத் துணைவியையும் தேட அவன் மறக்கவில்லை. அப்படித் தேடிய மனைவியை முதலிரவில் எப்படி அழைப்பான் அவன்?

    அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
    ஏகாந்தவேளை வெட்கம் ஏனோ வா இந்தப் பக்கம்

    பாடல் – தஞ்சை இராமையாதாஸ்

    கையும் காலும் நன்றாக இருப்பவர்களுக்கே நல்ல வாழ்க்கை அமைவது கடினம். ஊனமுற்று அதனால் வாழ்க்கையில் பிறரால் ஏளனமுற்று இருப்பவர்களின் நிலை? அவர்கள் மனத்துன்பத்தையெல்லாம் கேட்கக் கூட ஆளிருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒருவனுக்குத் திருமணம் நடந்தது. தெய்வம் போன்றொரு பெண் வந்தாள். அவளிடம் மனதைத் திறந்து கொட்டி அழுதான். அப்போது அவள் என்ன சொல்லியிருப்பாள்?

    தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ
    உங்கள் அங்கத்திலே ஒரு குறைவிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ
    கால்கள் இல்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லை
    இரு கைகள் இல்லாமல் மலர்களை அணைத்து காதல் தரவில்லையா

    பாடல் – கவியரசர் கண்ணதாசன்

    இன்னொரு முதலிரவு. ஒரு சாதாரண ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்ட முதலிரவு. திருமணத்துக்கு முன்னால் அவர்களுக்குள் பழக்கமோ நெருக்கமோ இருந்ததில்லை. இருவருக்கும் அது முதல் மயக்கம். அதனால் ஒரு தயக்கம். தயக்கம் போக வேண்டுமென்றால் விளக்கம் வேண்டும். அதையும் ஆண் பேசினால்தான் சரியாக இருக்கும் என்று பாடலாசிரியர் நினைத்திருக்கிறார் போலும்.

    இதுதான் முதல் ராத்திரி
    அன்புக் காதலி என்னை ஆதரி

    இன்னொருவன் குறும்பன். விளையாட்டுப்பிள்ளை. துரத்தித் துரத்திக் காதலித்தவளையே திருமணமும் செய்து கொள்கிறான். அவனுக்கு ஆர்வங்கள் நிறைய. சாதிக்கும் வெறியும் நிறைய. புதுமைகளைப் புரிந்து கொள்ள விரும்பும் படிப்பாளி. அவன் மட்டுமா? அவளும் அப்படித்தான். அப்படிப்பட்ட முதலிரவு எப்படியிருக்கும்?

    பள்ளிக்கூடம் போகலாமா
    அதுக்கு புத்தகத்த வாங்கலாமா

    பாடல் – கங்கையமரன்

    அவனொரு குழந்தை. வளர்ந்த குழந்தை. உடல் வளர்ந்து விட்ட அளவு உணர்வுகள் வளரவில்லை. வளராத செடிக்குத்தானே உரமும் கவனிப்பும் தேவை. அந்தச் செடிக்கு உரமாக வருகிறாள் ஒருத்தி. அவள் சுரங்களைச் சொல்லச் சொல்ல அவன் கற்றுக் கொள்கிறாள். கற்ற வித்தையை பாட்டாய்ப் பாடுகிறான். அவள் சொல்லிக் கொடுத்ததை அவன் படித்து மேதையாவதை பாட்டில் எப்படிச் சொல்வது?

    மனசு மயங்கும்…மனசு மயங்கும்
    மௌனகீதம்….மௌனகீதம்…பாடு
    மன்மதக்கடலில்…மன்மதக்கடலில்
    சிப்பிக்குள்முத்து…சிப்பிக்குள்முத்து…தேடு

    பாடல் – கவிஞர் வைரமுத்து

    அவள் காத்திருந்தாள். எதிர்பார்த்திருந்தாள். அடைந்தால் அவனைத்தான் அடைவது என்று தவமிருந்தாள். உள்ளத்தில் இருந்தது உண்மையான அன்பாக இருந்ததால் அது நடந்தது. திருப்பரங்குன்றத்திலே பரமசிவன் பார்வதி தலைமையில் அவர்கள் மகனான முருகனையே திருமணம் செய்தாள். அப்படிப்பட்டவளுக்கும் ஒரு முதலிரவு. அந்த இரவிலே அவள் என்னவெல்லாம் சொல்லியிருப்பாள்?

    மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
    நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு

    பாடல் – பூவை செங்குட்டுவன்

    இப்படி ஒவ்வொரு முதலிரவும் ஒவ்வொரு வகை. ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு கலை. ஒவ்வொரு கலையிலும் ஒவ்வொரு சுவை.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

    ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
    படம் – கற்பகம்
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    பாடல் – வாலிபக் கவிஞர் வாலி
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – இராமமூர்த்தி
    பாடலின் சுட்டி – http://youtu.be/IAJbRzdCaDc

    பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
    பாடல் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – இராமமூர்த்தி
    படம் – நிச்சய தாம்பூலம்
    படத்தின் சுட்டி – http://youtu.be/wi-G7fvgZ7g

    அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
    பாடல் – தஞ்சை இராமையாதாஸ்
    பாடியவர் – சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன், எஸ்.ஜானகி
    இசை – கே.வி.மகாதேவன்
    படம் – தெய்வப்பிறவி
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=rO0uDgO2gz0

    தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ
    பாடல் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – இராமமூர்த்தி
    படம் – பாகப்பிரிவினை
    பாடலின் சுட்டி – http://youtu.be/ZCwKgD9E7Qo

    இதுதான் முதல் ராத்திரி
    பாடல் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – கே.ஜே.ஏசுதாஸ், வாணி ஜெயராம்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – ஊருக்கு உழைப்பவன்
    பாடலின் சுட்டி – http://youtu.be/WgCneO_FIss

    பள்ளிக்கூடம் போகலாமா
    பாடல் – கங்கையமரன்
    பாடியவர்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – கோயில்காளை
    பாடலின் சுட்டி – http://youtu.be/kU9WyvDttkc

    மனசு மயங்கும்…மனசு மயங்கும்
    பாடல் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர்கள் – எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – சிப்பிக்குள் முத்து
    பாடலின் சுட்டி – http://youtu.be/yn2XVHqiUPg

    மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
    பாடல் – பூவை செங்குட்டுவன்
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    இசை – கே.வி.மகாதேவன்
    படம் – கந்தன் கருணை
    பாடலின் சுட்டி – http://youtu.be/aGJhE1CwjWY

    அன்புடன்,
    ஜிரா

    185/365

     
    • Arun Rajendran 11:33 am on June 4, 2013 Permalink | Reply

      இரசித்தேன் ஜிரா சார்..

      தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ — பொருட் பிழைங்களோ?

      மாற்றுத் தானே தரத்தைத் தீர்மானிக்குது? மாற்றுக் குறைந்தால் (குறை அதிகரித்தால் ->பிற உலோகக் கலவை அதிகரித்தால்) தரம் குறையத் தானே செய்யும்? கவிஞர் வேறு எதானும் சொல்ல வருகிறாரா?

      இவண்,
      அருண்

      • GiRa ஜிரா 1:24 pm on June 6, 2013 Permalink | Reply

        கவிஞர் எழுதியது தங்கத்திலே ஒரு குறைவிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ என்றுதான். எப்படி மாறியதோ தெரியாது… ரெக்கார்டிங்கின் போது தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் என்று எழுதிய தாள் சுசீலாம்மா கையில். பாடல் பதிவாகி படமும் ஆனபின் தான் நடந்தது தெரிந்திருக்கிறது கவியரசருக்கு. பிறகு அப்படியே அமைந்தும் விட்டது.

        ஆனாலும் இந்த வரிக்கும் பலவிதங்களில் சுவையான விளங்களை அடுக்கியடுக்கிச் சொல்லலாம்.

    • anonymous 5:03 pm on June 4, 2013 Permalink | Reply

      நலம்?

      பல முறை வாசித்து வாசித்துப் பார்த்தேன், இப்பதிவை;
      சில சொற்கள், மிகவும் பிடிச்சி இருந்தது;

      *முதன்முதலில் என்ன பேசுவது? என்ன பேசுவார்கள்? யார் முதலில் பேசியிருப்பார்கள்? என்ன சொல்லியிருப்பார்கள்?
      *வாழ்க்கையில் பிறரால் ஏளனமுற்று இருப்பவர்களின் நிலை?

      *அவனொரு குழந்தை. உணர்வுகள் வளரவில்லை. வளராத செடிக்குத்தானே உரமும் கவனிப்பும் தேவை
      *அவனுக்கு ஆர்வங்கள் நிறைய. புதுமைகளைப் புரிந்து கொள்ள விரும்பும் படிப்பாளி. அவன் மட்டுமா?

      *உள்ளத்தில் இருந்தது உண்மையான அன்பாக இருந்ததால் அது நடந்தது.
      ——–

      எல்லாப் பாட்டுமே இனியவை தான் என்றாலும், அந்தக் கடைசிப் பாட்டு…
      மனம் படைத்தேன்…

      • anonymous 5:23 pm on June 4, 2013 Permalink | Reply

        //மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு – நான்
        வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு!//

        -ரொம்ப அழகாப் படமாக்கப் பட்டிருக்கும்;
        சிவகுமார், மற்ற வழக்கமான படங்களில் வரும் காதல் காட்சியைப் போல, கே.ஆர்.விஜயா கையைப் பிடிச்சிச், “சரக்” -ன்னு இழுத்தாராம்;

        Director, AP Nagarajan, “யோவ், இப்ப நீ முருகன்-யா; இப்பிடியெல்லாம் இழுக்கக் கூடாது; எழுந்து பின்னாடியே ஓடக் கூடாது;
        மென்மையாக் கையைப் புடிக்கணும்; அந்தப் பிடிப்பிலும் ஒரு புன்சிரிப்பு தெரியணும்”

        -ன்னு சொல்ல, மொத்த யூனிட்டே, கொல் -ன்னு சிரிச்சிருச்சாம்:)
        Such a great director & sculptor;
        He sculpts even Sivaji…. in that “Making of Thillana Mohanambal” video
        ———

        //ஆண் பேசினால்தான் சரியாக இருக்கும் என்று பாடலாசிரியர் நினைத்திருக்கிறார் போலும்//

        சில முதலிரவுகளில் பெண் பேச்சும் உண்டு:)

        “கண்ணைத் தொறக்கணும் சாமீ” -ன்னு தற்காலப் படங்களை விட, ஒரு “மென்மை” இருக்கும் அக்காலப் படங்களில்:)

        பச்சை விளக்கு-ன்னு ஒரு படம்;
        குத்து விளக்கெரிய, கூடமெங்கும் பூ மணக்க
        மெத்தை விரித்திருக்க, மெல்லியலாள் காத்திருக்க….

        வாராதிருப்பானோ? வண்ண மலர்க் கண்ணன் அவன்?
        (shenoy music of MSV)

    • anonymous 5:38 pm on June 4, 2013 Permalink | Reply

      some more 1st night songs…

      *அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்

      உடல் நான் – அதில் உரம் நீ என
      உறவு கொண்டோம் “நேர்மையாய்” -ன்னு எனக்கு ரொம்ப பிடிச்ச வரிகள்; நேர்மையான உறவாம்:)

      *கண்ணுக்குக் குலமேது?

      முதலிரவு -ன்னாலே, “அது” மட்டுமே -ன்னு காட்டாது, உள்ளம் தான் முதலில் இன்புறணும்; அப்பறம் தான் உடல் இன்புறணும்..
      அவமானத்திலேயே சதா துடிக்கும் கணவன் கர்ணன்; அவனை அணுகும் பெண்ணுள்ளம்

      அவன் உள்ளத் தீயை அணைத்து,
      பின்பு உடல் தீயில் குளிர் போக்கும் இன்பமே இன்பம்!
      ———

      some more…

      *மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
      *டிஷ்யும் படத்தில் நெஞ்சாங் கூட்டில்… இதில் படகு வீட்டில் முதலிரவு (my fave fantasy::))

      how u forgot
      பாலக்காட்டுப் பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா?
      different type of 1st night – யாரம்மா அது யாரம்மா?:))

    • anonymous 5:54 pm on June 4, 2013 Permalink | Reply

      “சாந்தி முகூர்த்தம்” -ன்னு வேற ஒரு பேரில் சொல்லுவாங்க;

      ஆனா, இனிய தமிழில், “முதலிரவு” -ன்னு சொல்லுறாப் போல வராது…
      என்ன “சாந்தி”யோ?
      சாந்தி அடைந்து விடக் கூடிய விஷயமா அது?:) முருகா முருகா!
      ———

      சினிமாவில் முதலிரவு உண்டு; ஆனா சங்க இலக்கியத்தில்??
      அய்யோ, சினிமாவை விடக் கிளுகிளுப்பா இருக்கும்:)

      தமர், நமக்கு ஈத்த, “தலைநாள் இரவின்”
      -அகநானூறு

      தலைநாள் இரவு = என்ன பேரு பாருங்க!
      ஏம்மா ஒனக்கு இப்படி வேர்க்குது? சன்னலைத் திறந்தாச் சரி ஆயீரும், திறக்கட்டுமா?:)

      ஒரு முதலிரவு அறைக்குள் “என்ன நடக்குது?” -ன்னு காட்டும் பாட்டு

      சங்கத் தமிழில் தாலி உண்டா? முதலிரவு??


      ———

      • anonymous 6:10 pm on June 4, 2013 Permalink | Reply

        சங்க இலக்கியம் = இயற்கை வாழ்வு!
        பூர்வ குடிகள், புராணக் கலப்பு இல்லாம வாழ்ந்த “அக” வாழ்வு!

        *எட்டுத் தொகை = நிறையவே அகம்
        *பத்துப் பாட்டு = மிகவும் புறம்
        *அப்பறமா, ஒரே நீதி இலக்கியமாப் போச்சு:)
        அகம் போனாலே, நீதி போயிருச்சி -ன்னு தானே அர்த்தம்?
        ———

        எனக்கு மிகவும் பிடிச்ச “இலக்கிய முதலிரவு”
        1) சிலப்பதிகாரம் 2) நள வெண்பா

        Dunno, If Kamban sang 1st night:) Gotto figure out;
        ———

    • anonymous 6:21 pm on June 4, 2013 Permalink | Reply

      சிலப்பதிகாரம் – மனையறம் படுத்த காதை
      அதென்ன “படுத்த”?
      மனை அறம் படுத்த – நீங்களே யோசிச்சிப் பாருங்க!

      –தாரும் மாலையும் மயங்கி, கையற்று,
      தீராக் காதலின் திரு முகம் நோக்கி,
      கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை–

      தார் = ஆண் சூடும் மாலை;
      கோதை = பெண் சூடும் மாலை;

      ரெண்டுமே மயங்கி ஒன்னோட ஒன்னு கலக்குதாம்; சினிமாவில் ரெண்டு பூ ஒன்னாச் சேருவது போல் காட்டுவாங்களே?:) director eLango adigaL
      ——

      kovalan does too much talking; may be kaNNagi a shy girl?:)
      but, very romantic speeches = foreplay??:)
      –மலையிடைப் பிறவா மணியே என்கோ?
      அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?–

      ஒரு மாலை ரொம்ப அடர்த்தியா இருக்கு; ஆனா தயங்குது
      Whoz that maalai? = kaNNagi

      –தயங்கு இணர்க் கோதை – தன்னொடு தருக்கி,
      வயங்கு இணர்த் தாரோன் மகிழ்ந்து–

      அவ மனசுல அம்புட்டு “அடர்த்தியான” ஆசைகள்…
      //தயங்கு இணர்க் கோதை// – என்னமாச் சொல்லு போடுறான்-யா இந்த இளங்கோ!

      தயங்கு இணர்க் கோதை = வயங்கு இணர்த் தாரோன்!

      • anonymous 6:38 pm on June 4, 2013 Permalink | Reply

        நள வெண்பா “முதலிரவு”:

        அதிக ஆழம்/ அலை இல்லாத் திருச்செந்தூர்க் கடலில், அலையும் தண்ணியும் ஒன்னாக் கலக்கும் பாத்து இருக்கீங்களா?

        ரெண்டுமே தண்ணி தான்!
        ஆனா, ஒன்னு எழும்பும்; ஒன்னு நுடங்கும்!
        எழும்பி எழும்பிக் கலக்கும்;
        அது போல – நீரும் நீரும் போல – கலந்தாங்களாம்… நளன்-தமயந்தி

        —ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி
        இருவர் எனும் தோற்றம் இன்றிப் – பொருவெங்
        கனற்கேயும் வேலானும் காரிகையும் சேர்ந்தார்
        புனற்கே புனல்கலந்தாற் போன்று—-

        புனல் = தண்ணி; புனலே புனலில் கலந்தாப் போல…

        ஈருடல்-ஓருயிர் ல்லாம் இல்ல
        ஓர் உடல்! (இருவர் எனும் தோற்றம் இன்றி)
        ஓர் உடல்!
        ——–

        ஆனா ஆரம்ப வரி தான் அசத்தல்! = “ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி”

        சூடு, வெயிலு…
        நிழலில் ஒதுங்குவோம்-ல்ல?

        காமச் சூட்டுக்கு எங்கே “ஒதுங்கறது”?
        = ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி

        புகழேந்தீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
        ——-

        செவ்வேள் என நீ பெயர் கொண்டாய் – முருகா
        சொல்வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய்

        கைவேல் கொண்டு நீ பகை வென்றாய் – இரு
        கண்வேல் கொண்டு நீ எனை வென்றாய்!

        “மனம் படைத்தேன்
        உன்னை நினைப்பதற்கு” !!!

    • amas32 12:09 pm on June 6, 2013 Permalink | Reply

      எப்பவும் போல அருமையான பாடல் தேர்வுகள். ஒரு thesis ஏ எழுதிவிடுகிரீர்கள் 🙂
      //மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
      நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு//
      என்ன அருமையான பாடல் வரிகள்! Ultimate! இதைவிட எளிமையா காதலை, பக்தியை சொல்லிவிட முடியாது.

      amas32

  • G.Ra ஜிரா 10:23 am on May 25, 2013 Permalink | Reply
    Tags: நற்றிணை   

    ’வேலன்’டைன்ஸ்’ ஸ்பெஷல் 

    வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
    புள்ளி வைத்து புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
    சொல்லித் தரச் சொல்லிக் கேட்டு – தினமும்
    சொல்லித் தந்த சிந்து பாடினான்
    வள்ளி இன்ப வல்லி என்று முல்லைச்சரம் கொண்டு சூடினான்
    பாடியவர்கள் – இசைஞானி இளையராஜா, எஸ்.ஜானகி
    பாடல் – கவிஞர் வாலி
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – தெய்வவாக்கு
    பாடலின் சுட்டி – http://youtu.be/10PSPLEH1D0

    முதலில் நான் கவிஞர் வாலிக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஏன் தெரியுமா? இலக்கியத்திலும் வாழ்வியலிலும் மறைந்து போன ஒரு பழந்தமிழ் வழக்கத்தை மீண்டும் வெளிக் கொண்டு வந்தமைக்கு.

    திரைப்படப் பாடல்களில் காதல் பாடல்களில் கண்ணனை உயர்வு செய்து எழுதி பலபாடல்கள் நிறைய உள்ளன. அவை கால மாற்றத்தையும் மக்களின் நம்பிக்கையில் உண்டான மாற்றங்களையும் காட்டுகின்றன. மாற்றங்கள் என்றால் அவை குறைகள் என்று பொருள் அல்ல. ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாறின என்று செய்தியாகச் சொல்வது போலத்தான்.

    சரி. எதிலிருந்து மாறியது? சங்க நூல்களை எடுத்துப் பார்த்தால் காதல் என்று வந்தாலே முருகனும் வள்ளியும் தான். அகத்திணை நூல்கள் அத்தனையையும் எடுத்துப் புரட்டிப் பார்த்தால் அந்த உண்மை விளங்கும்.

    குறுந்தொகை, நற்றிணை என்று பெரிதாகப் பட்டியல் போடலாம். அதனால்தான் சங்க இலக்கியங்கள் என்று பொதுவாகவே குறிப்பிட்டேன். சங்க இலக்கியங்கள் என்ன…. சங்கம் மருவிய காலத்து சிலப்பதிகாரத்திலும் அப்படித்தான்.

    கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் நடக்கிறது. அதற்காக கோவலனை ஊர்வலமாக அழைத்து வருகிறார்கள். அப்போது புகார் நகரத்துக் கன்னிப் பெண்களெல்லாம் கோவலனைப் பார்க்கிறார்கள். அவன் அழகை ரசிக்கிறார்கள். “அட… பாத்தியா.. என்ன அழகா இருக்கான். அப்படியே முருகன் போல முறுக்கிக்கிட்டு இருக்கானே… காதலிச்சா இப்பிடி ஒருத்தனைக் காதலிக்கணும்.” என்று புகழ்கிறார்கள்.

    கண்டு ஏத்தும் செவ்வேள்” என்று இசை போக்கி காதலால்
    கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் என்பான் மன்னோ
    நூல் – சிலப்பதிகாரம்
    காண்டம் – புகார்க்காண்டம் (மங்கல வாழ்த்துப் பாடல்)
    இயற்றியவர் – இளங்கோவடிகள்

    பொண்ணு பாத்தா மகாலட்சுமி மாதிரி இருக்கா” என்று சொல்வது போல பையனைச் சொல்லும் போது முருகனை ஒப்பிட்டுச் சொல்லும் வழக்கம் தமிழரின் பழைய வழக்கம். அதுதான் சங்கத்தமிழ் முழுக்க விரவிக்கிடக்கிறது. எல்லா எடுத்துக் காட்டுகளையும் நான் குறித்து வைத்திருந்தாலும் ஒன்றேயொன்றை மட்டும் இங்கு பார்க்கலாம். கிட்டத்தட்ட இன்றைய திரைப்படங்களில் வருகின்ற காட்சியைப் போலத்தான் அந்த நற்றிணைக்காட்சி.

    காதலில் தவிக்கிறாள் காதலி. காதலனோ சிறுகுடியன். அவனும் காதலில் குதித்துவிட்டு தப்பிக்க முடியாமல் தவிப்பவன். நேரம் பார்த்து இடம் பார்த்து கூடிக் கழிக்கும் இன்பம் அவர்களுக்கு வாய்த்தது. அப்போது அவன் அவளிடம் கேட்கிறான். “பெண்ணே.. மூங்கில் போன்ற தோள் அழகே… கொடியழகி வள்ளியம்மை முருகப் பெருமானோடு கிளம்பிச் சென்றது போல என்னோடு வந்து என்னுடைய சிறுகுடியில் வாழ்வாயா?

    என்ன திரைப்பட வசனம் போலத்தானே இருக்கிறது? சரி.. அந்தப் பாடல் வரிகளைப் பார்ப்போம்.

    வேய்வனப்பு உற்ற தோளை நீயே
    என்னுள் வருதியோ நல்நடைக் கொடிச்சி
    முருகுபுணர்ந்து இயன்ற வள்ளி போல
    செய்யுள் – நோயும் நெகிழ்ச்சியும் என்று தொடங்கும் பாடல்
    பாடல் எண் – 82
    பாடியவர் – அம்மூவனார்
    திணை – குறிஞ்சி

    இப்போது புரிந்திருக்கும் நான் ஏன் கவிஞர் வாலிக்கு நன்றி சொன்னேன் என்று. இந்த ஒரு பாட்டில் மட்டுமல்ல இன்னும் சில பாடல்களிலும் வாலி முருகன் – வள்ளி காதலை எழுதியிருக்கிறார்.

    செல்லப்பிள்ளை சரவணன் திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
    வள்ளியை இன்ப வல்லியை குன்றம் ஏறிக் கொண்டவன்
    படம் – பெண் ஜென்மம்
    இசை – இளையராஜா
    பாடியவர்கள் – பி.சுசீலா, ஏசுதாஸ்
    பாடலின் சுட்டி – http://youtu.be/BGevMUI6t0A

    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
    அவன் ஆலயத்தில் அன்புமலர் பூசை வைத்தேன்
    ………….
    பன்னிரண்டு கண்ணழகை பார்த்து நின்ற பெண்ணழகை
    ஐயன் தான் ஆள வந்தான் பெண்மையை வாழ வைத்தான்
    படம் – பஞ்சவர்ணக்கிளி
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.இராமமூர்த்தி
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    பாடலின் சுட்டி – http://youtu.be/9a0rNJBS594

    சரி. இது போல முருகனை முன்னிறுத்திய காதல் பாடல்கள் உங்களுக்கு ஏதேனும் தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்களேன்.

    அன்புடன்,
    ஜிரா

    175/365

     
    • ajayb17 10:44 am on May 25, 2013 Permalink | Reply

      ’வேலன்’டைன்ஸ்’ … தலைப்பு செம 🙂

      • GiRa ஜிரா 12:40 pm on May 26, 2013 Permalink | Reply

        தலைப்புகள் எல்லாம் நாகாவின் கைவண்ணம். 🙂

    • Uma Chelvan 6:59 pm on May 25, 2013 Permalink | Reply

      மானோடும் பாதை இலே ( கவி குயில் ) GIRA இந்த பாட்டு உங்ககிட்ட இருந்தால் u-tube li upload பண்ணுங்களேன் . Please !!

      • GiRa ஜிரா 12:44 pm on May 26, 2013 Permalink | Reply

        மானோடும் பாதையிலே பாட்டு யூடியூபில் இருக்கே. இதோ கேளுங்க http://youtu.be/Xp20Hs1c2HQ

    • Uma Chelvan 7:37 pm on May 26, 2013 Permalink | Reply

      Thanks, I didn’t know that.

    • amas32 9:53 pm on May 26, 2013 Permalink | Reply

      என் முருகனைப் பற்றிய பதிவு அனைத்துக்கும் உங்களுக்கு நூற்றுக்கு இருநூறு மதிப்பெண்கள் உண்டு 🙂 அருமையான பதிவு, நன்றி 🙂

      amas32

  • G.Ra ஜிரா 8:46 am on May 18, 2013 Permalink | Reply  

    பனிப் பானு 

    நிலவைப் பார்த்தால் கவிஞனுக்குக் கவிதை வரும். குழந்தைக்கு தூக்கம் வரும். காதலர்களுக்கு ஏக்கம் வரும். ஏழைகளுக்குப் பசி வரும். கோழைகளுக்கு பயம் வரும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று வரும்.

    அந்த நிலவைப் பாடாத கவிஞன் இல்லை. பாடாவிட்டால் கவிஞன் இல்லை. இலக்கியச் சுவைகள் எத்தனை உண்டோ, அத்தனை விதமான சுவைகளையும் வெளிப்படுத்தும் கவிதைகளிலும் நிலவு இருக்கும். இது மறுக்க முடியாத உண்மை.

    அப்படியிருக்க திரைப்படக் கவிஞர்கள் மட்டுமென்ன நிலவோடு கோவித்துக்கொண்டவர்களா?

    அவன் மனைவியை இழந்தவன். நெஞ்சமெல்லாம் சோகம். அவனை விரும்புகிறாள் ஒருத்தி. அவள் காதலை மறுக்க வேண்டும். அதே நேரத்தில் சோகத்தையும் சொல்ல வேண்டும். இரண்டையும் ஒரே வரியில் சொல்ல கவியரசர் கண்ணதாசனுக்கு கைகொடுக்கிறது நிலவு. “நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை”.

    அதே கவியரசர். வேறொரு கதாநாயகன். திருமணமானவன். பிடிக்காத கல்யாணம். தொடாதே என்று சொல்லிவிட்டாள் மனைவி. அவனுடைய ஆத்திரத்தையும் ஆற்றாமையையும் ஒரே வரியில் சொல்ல வேண்டும். மறுபடியும் நிலா உதவுகிறது. “நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே”.

    நல்லவர்கள் இருவர். தவறு செய்கிறார்கள். அவர்கள் செய்வது கடத்தல். கடலில் தோணி கட்டி தோணியில் பாட்டு கட்டி ஆடிப்பாடி வருகிறார்கள். அவர்கள் களிப்புக்கும் கும்மாளத்துக்கும் நிலவு உதவுகிறது. “நிலா அது வானத்து மேலே. பலானது ஓடத்து மேலே” என்று எழுதினார் இளையராஜா.

    குழந்தைகளுக்கும் கோவம் வரும். அந்தக் கோவத்தை மாற்றுவது எளிதான செயலா? கோவித்தது சேயாக இருந்தாலும் ஆடியும் பாடியும் சமாதானப்படுத்துவது தாயாகத்தான் இருக்கும். அப்படிச் சமாதான வரிகளைச் செதுக்க கவிஞர் வாலிக்குத் துணை வந்ததும் நிலாதான். “மண்ணில் வந்த நிலவே, என் மடியில் பூத்த மலரே” என்று எழுதினார்.

    தூக்கத்துக்குக் காரணமாகும் நிலவுதான் ஏக்கத்தும் காரணமாகிறது. காதலர்கள் பிரிந்தாலும் துன்பம். கூடினாலும் பிரியப் போவதை எண்ணித் துன்பம். அந்தத் துன்பம் அவனைத் தூங்கவிடவில்லை. அப்படியொரு பாட்டெழுத வேண்டும். ”நிலவு தூங்கும் நேரம். நினைவு தூங்கிடாது” என்று எழுதினார் வாலிபக் கவிஞர் வாலி.

    காதலர்கள் உள்ளத்தில் எப்போதும் ஒரு பெருமிதம் இருக்கும். இந்தக் காதலனுக்கும் அப்படிதான். அவன் காதலி பேரழகி. அப்படியொரு பிரபஞ்ச அழகி அவனுக்குக் காதலி என்ற பெருமிதத்தைப் பாட்டில் சொல்ல வேண்டும். இந்த முறை நிலவோடு கை கோர்த்தவர் வைரமுத்து. “சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்டிராங்கா? அடி ஆம்ஸ்டிராங்கா? சத்தியமாய் தொட்டது யார்? நான்தானே” என்று எழுதினார்.

    அவனுக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. வாழ்க்கை எப்படியெல்லாம் ஏமாற்றியது என்ற வெறுப்பைப் பாட்டில் சொல்ல வேண்டும். இந்த முறை நிலவை துணைக்கழைத்தவர் புலவர் புலமைப்பித்தன். “சந்திரனப் பாத்தா சூரியனாத் தெரிகிறது. செங்கரும்பு கூட வேம்பாகக் கசக்கிறது” என்று எழுதினார்.

    கும்மாளக் காதலர்களுக்குத் திருமணமும் ஆகிவிட்டது. குதித்துக் கொண்டிருந்தவர்களுக்குக் கால்கட்டு போட்டாயிற்று. இன்று முதல் இரவு. அந்த அளவுக்கு மீறிய உற்சாகத்தை மகிழ்ச்சியின் உச்சத்தை வரிகளில் கொண்டு வர முடியுமா? நிலவிருக்க பயமேன். “நிலவைக் கொண்டு வா கட்டிலில் கட்டி வை” என்று வைரவரிகளை வைரமுத்து கொடுத்தார்.

    இப்படியாக சோகம், ஏக்கம், ஆதங்கம், மகிழ்ச்சி, கொண்டாட்டம், உல்லாசம், ஆத்திரம், தாலாட்டு என்று எந்த வகை உணர்ச்சியையும் கவிதையில் வடிக்க உதவுவது நிலவு.

    என்ன? பக்திச் சுவை விட்டுப் போயிற்றா? யார் சொன்னார்கள்? இறையருளைப் பெற்றதும் சுந்தரரே “பித்தா பிறைசூடி” என்றுதான் பாடத் தொடங்கினார். சின்னஞ்சிறு குழந்தையாய் திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்டு பாடிய பொழுது “தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடி” என்றுதான் பாடினார்.”

    ஓ! திரைப்படப் பாடலாக இருந்தால்தான் ஒத்துக் கொள்வீர்களா? சரி. அதற்கும் பாடல்கள் பல உண்டு. ஆனாலும் ஒன்று சொல்கிறேன். ஆதிபராசக்தி திரைப்படத்தில் அபிராமி பட்டர் எப்படிப் பாடுகிறார்? ”சொல்லடி அபிராமி நில்லடி முன்னாலே முழு நிலவினைக் காட்டு உன் கண்ணாலே” என்று கண்ணதாசன் எழுதிக் கொடுத்தபடிதானே பாடினார்?

    இந்தப் பாடல்கள் மட்டுந்தானா? இல்லை. இன்னும் எத்தனையெத்தனையோ பாடல்கள். “வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா” என்று பாட்டு முழுக்க எழுதினார் கவியரசர் கண்ணதாசன்.

    இந்த நிலவுக்கு எத்தனையெத்தனை பெயர்கள். மதியென்பார். சந்திரனென்பார். பிறையென்பார். வெண்ணிலா என்பார். முழுமதி, நிறைமதி, வளர்மதி, வெண்மதி என்று எத்தனையெத்தனையோ பெயர்கள்.

    ஈசனார் சூடிய பிறைச் சந்திரனை ஞானக்கண்ணால் பார்க்கிறார் அருணகிரிநாதர். அந்தப் பிறைச் சந்திரனை என்ன சொல்லிப் பாடுவது? உடனே ஒரு திருப்புகழ் பிறக்கிறது.

    பாதிமதி நதி போது மணிச்சடை நாதர் அருளிய குமரேசா
    பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா

    பிறைச்சந்திரன் பாதியாகத்தானே இருக்கிறது. அதனால் பாதிமதி என்றே பெயர் சூட்டிவிட்டார் அருணகிரிநாதர்.

    அதே அருணகிரி கந்தரந்தாதியில் நிலவுக்கு இன்னொரு பெயரைச் சொன்னார். அந்தப் பெயரை அவருக்கு முன்னாலும் பின்னாலும் யாரும் சொன்னதில்லை.

    சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்தசெந்திற்
    சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்தவென்னிற்
    சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்
    சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே

    இந்தப் பாடலில் நிலவுக்கு அவர் சொல்லியிருக்கும் பெயர் பனிப்பானு. பானு என்றால் சூரியனைக் குறிக்கும். பனி குளுமையைக் குறிக்கும். நிலவு என்பது குளுமையான சூரியனாம். அதனால்தான் பனிப்பானு என்று புதுப்பெயர் சூட்டியிருக்கிறார் அருணகிரி. அழகான பெயரல்லவா?

    நிலா நிலா ஓடி வா! நில்லாமல் ஓடி வா! மலை மேலே ஏறி வா! மல்லிகைப்பூ கொண்டு வா!

    பதிவில் இடம் பெற்ற பாடலின் சுட்டிகள்.

    பாதிமதிநதி (யாமிருக்க பயமேன்) – http://youtu.be/FDMcv6CjglI
    நிலவே என்னிடம் நெருங்காதே (ராமு) – http://youtu.be/Z8MYbZVETDU
    நிலவைப் பார்த்து வானம் (சவாலே சமாளி) – http://youtu.be/FSdL74sUCNE
    நிலா அது வானத்து மேலே (நாயகன்) – http://youtu.be/ldPFymzsVd8
    நிலவு தூங்கும் நேரம் (குங்குமச் சிமிழ்) – http://youtu.be/0k6lUIhIqPo
    சந்திரனைத் தொட்டது யார் (ரட்சகன்) – http://youtu.be/ZIQXtyJQMIE
    சந்திரனப் பாத்தா (பிரம்மச்சாரிகள்) – http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=3278
    மண்ணில் வந்த நிலவே (நிலவே மலரே) – http://youtu.be/UmCcv-4uv7k
    நிலவைக் கொண்டு வா (வாலி) – http://youtu.be/QOcrng-CkmE
    தோடுடைய செவியன் (ஞானக்குழந்தை) – http://youtu.be/-OT2RCgAvVA
    சொல்லடி அபிராமி (ஆதிபராசக்தி) – http://youtu.be/fCltNDw_oFA
    வான் நிலா நிலா அல்ல (பட்டினப்பிரவேசம்) – http://youtu.be/bV8V2oowwwI

    அன்புடன்,
    ஜிரா

    168/365

     
    • rajnirams 11:45 am on May 18, 2013 Permalink | Reply

      பனிப்பானு-புதுமையான தலைப்பில் அருமையான பதிவு.தமிழ் கவிஞர்கள் நிலவை வைத்துக்கொண்டு ஏராளமான பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.அதுவும் புலமைப்பித்தன் “ஆயிரம் நிலவிற்கு” ஒப்பாக பெண்ணை பாடியது தான் உச்சம்.வாலியின் நிலவு ஒரு பெண்ணாகி,நிலாவே வா,கண்ணதாசனின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்,இரவும் நிலவும் வளரட்டுமே இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.நன்றி.

      • GiRa ஜிரா 8:29 am on May 21, 2013 Permalink | Reply

        ஆயிரம் நிலவே வான்னு அவர் எழுதிட்டாரேன்னு இன்னும் லட்சம் நிலவுகள்னு யாரும் எழுதலையா? 🙂

    • Arun Rajendran 12:38 pm on May 18, 2013 Permalink | Reply

      ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது -> love at first sight
      கல்யாணத் தேனிலா காய்ச்சாதப் பால் நிலா -> தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் எண்ணித் திளைத்தல்
      வானிலே தேனிலா ஆடுதே பாடுதே -> தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு மகிழ்தல்
      அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன் -> பரிசில்கள் பரிமாறுதல்
      அமுதைப் பொழியும் நிலவே -> பிரிவு; வருத்தம் காதல் கலந்து வெளிப்பட பாடல்
      நாளை இந்த வேளைப் பார்த்து ஓடி வா நிலா -> தலைவி ஆற்றியிருத்தல்; காதலாகி கசிந்துருகி..
      நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் -> மீண்ட தலைவன் தலைவியின் கோபம் தனித்தல்
      மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் -> காதல் கனிந்து மணமுடித்தல்
      நிலா காயுது நேரம் நல்ல நேரம் -> விரகம்; கூடி களித்தல்
      வாராயோ வெண்ணிலாவே நீ கேளாயோ -> தலைவன் தலைவி ஊடல்;வாழ்வியல்
      நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் -> and their love story continues

      இவண்,
      அருண்

      • GiRa ஜிரா 8:30 am on May 21, 2013 Permalink | Reply

        அடா அடா அடா… என்னவொரு பட்டியல்…. நிலாவுல கட்டில் போட்டேன்னு என்னச் சொன்னீங்களே… நீங்க வீடே கட்டியிருக்கீங்களே 🙂

    • amas32 7:04 pm on May 19, 2013 Permalink | Reply

      திரை இசைப் பாடல்களில் வரும் நிலவுப் பாடல்கள் மட்டுமே, கணக்கிட்டால் ஓராயிரம் தேறும் போல இருக்கிறதே! ஜோதிட சாஸ்திரப் படி கூட சந்திரன் மனத்தையாளும் ஒரு கிரகம். சந்திரனின் கிரக நிலை ஒருவனுக்குச் சரியாக இல்லாவிட்டால் அவன் பித்துப் பிடித்து அலைவான். காதல் வசப்படுவதும் அதனின் mild form தானே? 🙂

      Lovely post Gira 🙂

      amas32

      • GiRa ஜிரா 8:31 am on May 21, 2013 Permalink | Reply

        அப்போ இந்தக் காதல் கீதல் எல்லாத்துக்கும் சந்திரந்தான் காரணமா? இத மொதல்லயே சொல்லிருந்தா நாட்டுல சந்திரனுக்கு பெரிய பெரிய கோயில்கள் கெட்டியிருப்பாங்களே காதலர்கள். 🙂

    • Saba-Thambi 6:21 pm on May 20, 2013 Permalink | Reply

      பனிப்பானு , இன்று புதிதாக படித்த சொல்!
      நன்றி.

      • GiRa ஜிரா 8:32 am on May 21, 2013 Permalink | Reply

        பனிப்பானு – அருணகிரி வைத்த பெயர். ஓசையை மொழியாக்கி அதிலும் பொருளாக்கி அந்தப் பொருளும் அருளாக வைத்த பெருமான். அருணகிரிப் பெருமான்.

  • G.Ra ஜிரா 10:22 am on March 1, 2013 Permalink | Reply
    Tags: கே.பி.சுந்தராம்பாள், டி.ஆர்.மகாலிங்கம்   

    மாத்தி வாசி 

    பொருள்கோள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதாவது ஒரு பாடலை எப்படியெல்லாம் பொருள் கொள்ள வேண்டும் என்று சொல்லும் இலக்கணம் அது.

    சொற்கள் உள்ளது உள்ளபடியே வரிசையாகப் படித்து அப்படியே பொருள் கொண்டால் அது ஆற்றுநீர்ப் பொருள்கோள்.

    அதே போல விற்பூட்டு பொருள்கோள் என்று உள்ளது. பூட்டுவிற் பொருள்கோள் என்றும் இதற்குப் பெயருண்டு.

    அதாவது செய்யுளின் கடைசிச் சொல்லை அங்கிருந்து எடுத்து செய்யுளின் முதலில் வைத்துப் பொருள் கொள்ள வேண்டும்.

    என்னுடைய நண்பன் ஒருவன் பேசுவதெல்லாம் கூட இந்தப் பூட்டுவிற் பொருள்கோள் வகையில்தான் வரும். சற்றே நகைச்சுவையும் கிண்டலும் கலந்துதான் எப்போதும் பேசுவான் அவன். ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன் பாருங்கள்.

    அவனுக்கெல்லாம் உக்கார வெச்சு வெட்டனும்… தலைமுடிய. காடு மாதிரி வளந்திருக்கு.”

    இதில் தலைமுடி என்பதை வரியின் முன்னால் சொன்னால் அதுவொரு சாதாரண கருத்து போல ஆகிவிடும். ஆனால் அதை வேண்டுமென்றே பின்னால் சொன்னதால் எதையோ ஆபாசமாகச் சொல்ல வருகிறான் என்று நினைத்து கடைசியில் சாதாரணமாக முடியும்.

    இது போல முயற்சிகள் திரைப்படங்களிலும் நடந்தன. முதன்முதலில் கண்ணதாசன் இந்த முறையை கந்தன் கருணை திரைப்படத்தில் மிகச்சிறப்பாகச் செய்தார். அடுத்து கே.டி.சந்தானம் அகத்தியர் திரைப்படத்தில் பயன்படுத்தினார். அதற்குப் பிறகு 80களில் முழுக்க முழுக்க ஆபாசமாகவே ஒரு பாடல் வந்தது. “குத்துறேன் குத்துறேன்னு சொல்லிப்புட்டு குத்தாமதான் போறீங்களே.. பச்சைய” என்றெல்லாம் வரிகள் வரும். சரி. அதை விட்டு விட்டு முதல் இரண்டு முயற்சிகளைப் பார்ப்போம்.

    கந்தண் கருணை படத்தில் அரியது பெரியது கொடியது இனியது என்று ஔவையாரின் பாடல்களை முருகன் பாடச் சொல்லிக் கேட்பது போல ஒரு காட்சி. இவையெல்லாம் ஆனதும் முருகன் “ஔவையே புதியது என்ன?” என்று முருகன் கேட்டதும் கவியரசரின் வரிகளைக் கே.பி.சுந்தராம்பாள் பாடுவார்.

    என்றும் புதியது
    பாடல் என்றும் புதியது
    பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
    உனைப்பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
    முருகா, உனைப்பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

    இப்படி அடுக்கி அடுக்கி எழுதியிருப்பார் கண்ணதாசன். இதற்குப் பிறகுதான் பாடலே தொடங்கும். இப்படி வேண்டுமென்று ஏ.பி.நாகராஜன் கேட்டு வாங்கினாரா என்று தெரியவில்லை. ஆனால் அகத்தியர் படத்தில் லேசாக இதே முயற்சியை கே.டி.சந்தானம் செய்திருப்பதிலிருந்து ஏ.பி.நாகராஜனுக்கு இந்த முயற்சி பிடித்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

    இசையாய் தமிழாய் இருப்பவனே
    இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே

    இந்தப் பாடலை குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் சீர்காழி கோவிந்தராஜனும் டி.ஆர்.மகாலிங்கமும் மிக அருமையாகப் பாடியிருப்பார்கள்.

    பொதுவாக ஆற்றுநீர்ப் பொருள்கோளாக ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய பாடல்களுக்கு நடுவில் இப்படியான விளையாட்டுகள் நிறைந்த இந்தப் பாடல்களையும் கேட்பது சுகமே.

    இதுபோல நீங்கள் எங்கும் பயன்படுத்தியிருக்கின்றீர்களா? கேட்டிருக்கின்றீர்களா? படித்திருக்கின்றீர்களா? அவைகளை இங்கே எடுத்துச் சொல்லுங்களேன்.

    பாடலின் சுட்டி
    அரியது கேட்கின் (கந்தன் கருணை) –http://youtu.be/HYmH8wOZ4Yg
    இசையாய் தமிழாய் (அகத்தியர்) – http://youtu.be/467Y_UeokDo

    அன்புடன்,
    ஜிரா

    090/365

     
    • Arun Rajendran 2:37 pm on March 1, 2013 Permalink | Reply

      சூரல் பம்பிய சிறுகான் யாறே-னு ஒரு செய்யுள்..

      வரிகள எப்படி மாத்திப் போட்டாலும் பொருள் தரும் ..அடிமறிமாற்றுப் பொருள்கோள்-னு ஞாபகம்..

      கல்யாண தேன் நிலா
      காய்ச்சாத பால் நிலா
      நீதானே வான் நிலா
      என்னோடு வா நிலா
      தேயாத வெண்ணிலா
      உன் காதல் கண்ணிலா
      ஆகாயம் மண்ணிலா
      ——இந்தப் பாட்டு முழுதும் “அடிமறிமாற்று” மாதிரியே வருவதா என் எண்ணம்..

      தவறாயிருப்பின் திருத்துங்கள்…

    • Prabhu 10:15 pm on March 3, 2013 Permalink | Reply

      Does it include songs where the end of charanam and start of pallavi are merged and song is continued? THat would mean a lot of songs could be inclueded

    • Prabhu 10:19 pm on March 3, 2013 Permalink | Reply

      Like in that Ninnu kori varanam, when it ends like ‘உன்னோடு நான் ஓயாமல் தேனாற்றிலே நீராட நினைக்கயில், நின்னுக்கோரி வரணம்’ or ‘அழகி எனது வரனே, அனுதினமும் நின்னுக்கோரி வரணம்’ இப்படியெல்லாம் முடிவையும் ஆரம்பத்தையும் மொபியஸ் வளையம் போல இணைத்து எழுதப் பட்டவை?

  • G.Ra ஜிரா 10:36 am on February 22, 2013 Permalink | Reply  

    வென்றார் உண்டோ? 

    பெண் ஜென்மம் படம் எத்தனை பேருக்குத் தெரியும்? 1977ம் ஆண்டு ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் வந்த படம். பத்ரகாளி எடுத்து வெற்றி பெற்ற கையோடு எடுத்த படம் பெண் ஜென்மம். இந்தப் படத்துக்கும் இசை அப்போதைய புதியமுகமான இளையராஜாதான். ஆனால் படம் தோல்வியடைந்தது.

    பத்ரகாளி படத்தில் வாலி எழுதிய “கண்ணன் ஒரு கைக்குழந்தை” பாடல் இன்றும் மிகப் பிரபலம். ஒரு கணவன் மனைவிக்குள் இருக்கும் உரிமை நெருக்கம் அணைப்பு அனைத்தையும் அழகாகக் காட்டிய பாடல்.

    அதே போலவொரு பாடலை பெண் ஜென்மம் படத்திலும் வைக்க விரும்பினார் அதே ஏ.சி.திருலோகச்சந்தர். அதே இளையராஜா. அதே வாலி. அதே பி.சுசீலா. அதே கே.ஜே.ஏசுதாஸ். பாடலிலும் அதே இனிமை. ஆனால் அதே கண்ணன் அல்ல. இந்த முறை முருகன்.

    ஆனால் படத்தின் தோல்வி பாடலைப் பின்னடைய வைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

    சரி. பதிவின் கருத்துக்கு வருவோம். அந்தப் பாடலின் தகவல்களைக் கீழே கொடுத்துள்ளேன்

    செல்லப்பிள்ளை சரவணன்
    திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
    கோபத்தில் மனத்தாபத்தில்
    குன்றம் ஏறி நின்றவன் (செல்லப்பிள்ளை
    படம் – பெண் ஜென்மம்
    பாடல் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – பி.சுசீலா, கே.ஜே.ஏசுதாஸ்
    இசை – இசைஞானி இளையராஜா
    ஆண்டு – 1977

    இந்தப் பாடலை இப்போது ஏன் எடுத்துப் பார்க்கிறோம்? இந்தப் பாடலின் நடுவில் வரும் ஒர் வரி என்னைச் சிந்திக்க வைத்தது. மனைவியின் புன்னகையை வியந்து கணவன் பாடுகிறான் இப்படி.

    மன்மதன் கணை ஐவகை
    அதில் ஓர் வகை உந்தன் புன்னகை

    இந்த வரிகளில் இருந்து மன்மதனின் கணைகள் ஐந்து வகையானவை என்று தெரிகிறது. பொதுவாக மன்மதனுக்குக் கரும்பு வில் என்றும் மலர்க்கணைகள் என்றும் நாம் அறிவோம். இதென்ன ஐந்து வகைக் கணைகள்?

    இந்த ஐந்து கணைகளையும் விளக்க நான் இன்னொரு கவிஞரை துணைக்கு அழைக்கிறேன். அவர்தான் கே.டி.சந்தானம். கண்காட்சி திரைப்படத்தில் அவர் எழுதிய வரிகளை ஏ.பி.நாகராஜன் வசனநடையில் மெதுவாகச் சொல்ல அதன்பின் எல்.ஆர்.ஈசுவரி மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் பாடல் தொடரும்.

    வெண்ணிலவை குடை பிடித்து வீசு தென்றல் தேரேறி
    மென் குயில்தான் இசை முழங்க மீன் வரைந்த கொடியசைய
    கண்கவரும் பேரழகி கனகமணிப் பொற்பாவை
    அன்ன நடை ரதியுடனே அழகுமதன் வில்லேந்தி
    தண்முல்லை, தாமரை, மா, தனி நீலம், அசோகமெனும்
    வண்ண மலர்க் கணை தொடுத்தான்
    வையமெல்லாம் வாழ்கவென்றே!

    அடடா! என்ன அழகான வரிகள். வாசிக்கவே சுவையாக இருக்கிறது. ஒரு நடையில் வாய்விட்டு சொல்லிப்பாருங்கள். கவிஞரின் எழுத்து நடையின் சிறப்பு புரியும். கே.டி.சந்தானம் ஒரு நடிகரும் கூட. ஏ.பி.நாகராஜன் படங்களில் எல்லாம் தவறாமல் இருப்பார். “என்ன பொருத்தம் நமக்குள் என்ன பொருத்தம்” பாடலில் ஜெயலலைதாவின் தந்தையாக வருவார்.

    மன்மதன் வைத்திருப்பது மலர்க்கணை என்றாலும் அதில் ஐவகை மலர்கள் உண்டு. அந்த ஐந்து மலர்களாவன முல்லை, தாமரை, மாம்பூ, நீலம் மற்றும் அசோகம். இந்த ஐந்து மலர்களில் ஒரு மலரைப் போல முந்தைய பாடலின் கதாநாயகியின் புன்னகை இருந்ததாம். அது எந்த மலரைப் போல என்று இப்போது ஊகிக்க எளிமையாக இருக்குமே!

    காமதேவாய வித்மஹே புஷ்பபாணாய தீமஹி
    தன்னோ அனங்க ப்ரசோதயா

    பாடலின் சுட்டிகள்.
    செல்லப்பிள்ளை சரவணன் (பெண் ஜென்மம்) – http://isaiaruvi.net/downloads/download.php?d=/Ilayaraja/Ilayaraja%20A-Z%20Songs/Part-11&filename=UGVuX0plbm1hbSBfLV9DaGVsbGFfUGlsbGFpX1NhcmF2YW5hbi0oSXNhaWFydXZpLk5ldCkubXAz&sort=0&p=0
    அனங்கன் அங்கதன் (கண்காட்சி) – http://youtu.be/Z_UG7cmU6Do

    அன்புடன்,
    ஜிரா

    083/365

     
    • amas32 2:21 pm on February 22, 2013 Permalink | Reply

      Super Post! அற்புதமாக எழுதறீங்க 🙂 அது என்னமோ கண்ணனைத் தான் நமக்குக் குழந்தையாகக் கொஞ்சத் தோன்றுகிறது. எனக்கு முருகன் என்றுமே குமரன், பாலகன், கோபித்துக் கொண்டு போய் பேசாமல் தனித்து நிற்கும் சிறுவன். அம்மா போய் தாஜா பண்ணி அழைத்து வர எதிர்பார்க்கும் அழகன். ஆனால் கண்ணனோ அன்னைக் கோபித்துக் கொண்டாலும் அவள் பின் முதுகில் சாய்ந்து கைகளை வளையமாக்கி அம்மா கழுத்தில் மாலையாக்கி அவள் கோபத்தைத் தீர்ப்பவன்.

      நம் இந்து மதத்தில் தான் அனைத்தும் போற்றத்தக்க வழிபடத்தக்கவை. காமமும் inclusive.
      “காமதேவாய வித்மஹே புஷ்பபாணாய தீமஹி
      தன்னோ அனங்க ப்ரசோதயா”

      amas32

    • Mohanakrishnan 9:39 pm on February 22, 2013 Permalink | Reply

      மன்மதன் கணை ல மல்லிப்பூ இல்லையா? நம்பவே முடியலே. அதனால்தான் முன் வரியில் ‘மாலையில் ஒரு மல்லிகை என மலர்ந்தவள் இந்த கன்னிகை’ வாலி வாலிதான்

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel