பக்திப் பயணங்கள்
வெளிநாட்டுக்கு காதல் பாட்டுகள் பாட ஒரு கூட்டம் போனால் பக்திப் பாடல்கள் பாடவும் ஒரு கூட்டம் போயிருக்கிறது.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் இறையருட் கலைச்செல்வர் என்று அழைக்கப்பட்ட கே.சங்கர் இயக்கிய திரைப்படங்களில் வெளிநாட்டிலுள்ள கோயில்களும் வரும். படத்தின் பாத்திரங்கள் அந்தக் கோயில்களுக்குச் சென்று அழுது தொழுது உருகி மருகிப் பாடுவார்கள்.
அதைத் தொடக்கி வைத்தது செந்தமிழ்த் தெய்வமான முருகக் கடவுள்தான். ஆம். வருவான் வடிவேலன் படத்தில்தான் முதன்முதலில் இலங்கையிலும் மலேசியாவிலும் இருக்கும் முருகன் கோயில்கள் பிரபலமாயின.
இலங்கையின் கதிர்காமம் மிகவும் தொன்மையான முருகன் கோயில். இன்று தமிழ் அடையாளங்களை இழந்து சிங்கள அடையாளங்கள் கூடிவிட்டதாகச் சொல்கிறார்கள். நினைக்க வருத்தமாக இருக்கிறது.
கதிர்காம யாத்திரை என்பது மிகப்பிரபலம். கலைமணி கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் நாவலில் கதிர்காம யாத்திரை மிக அழகாக விவரிக்கப்பட்டிருக்கும். திரைப்படத்தில் இந்தக் காட்சி இடம் பெறவில்லை. அது குறையல்ல. படத்துக்கு எவ்வளவு தேவையோ அதை மட்டும் கொடுத்தார் இயக்குனர் ஏ.பி.நாகராஜன்.
கதிர்காமத்திலிருக்கும் மாணிக்க கங்கையில் மோகனா, சிக்கல் சண்முக சுந்தரம், மோகனாவின் தாயார் வடிவாம்பாள், முத்துராக்கு அண்ணன், நட்டுவனார் முத்துக்குமார சுவாமி, வரதன் என்று எல்லாரும் முழுகி எழும் போது வடிவாம்பாளின் கையில் மட்டும் ரேகை ஓடும் மரகதக் கல் கிடைக்கும். மற்றவர்களை விட அந்த அம்மையார் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
அந்தக் கோயிலில் படமாக்கப் பட்ட பாடல்தான் வருவான் வடிவேன் திரைப்படத்தில் இடம் பெற்ற “நீயின்றி யாருமில்லை விழிகாட்டு” என்ற கண்ணதாசன் பாடல்.
கண்ணிழந்த கணவனைக் கூட்டிக்கொண்டு யாத்திரை வரும் மனைவி பாடுவதாக அமைந்த பாட்டு.
நீயின்றி யாருமில்லை விழி காட்டு
நெஞ்சுருக வேண்டுகிறோம் ஒளி காட்டு
பாடலின் இறுதியில் “நாங்கள் கதிர்காமம் வந்ததற்கு பலனில்லையோ” என்று இறைஞ்சுவார்கள். முருகனருளால் கண் கிடைக்கும்.
இதே கதிர்காமத்தில் இன்னொரு பாடல் எடுக்கப்பட்டது. பைலட் பிரேம்நாத் திரைப்படத்துக்காக டி.எம்.சௌந்தரராஜன் பாடிய வாலியின் பாடல் அது.
குழப்பத்தில் இருக்கும் தந்தை அந்தக் குழப்பம் நீங்க முருகனை நோக்கி காவடி எடுத்துப் பாடுவதாக அமைந்த பாடல் அது.
முருகன் எனும் திருநாமம்
முழங்கும் இடம் கதிர்காமம்
குருபரணே சரணம் உந்தன் சேவடி
தோளில் குறுகுதய்யா நான் சுமக்கும் காவடி
அடுத்து நாம் போக இருப்பது மலேசியா. அங்குள்ள பத்துமலை முருகன் கோயில் படிகளில் ஏறப் போகிறோம். தயாரா?
பத்துமலைத் திரு முத்துக்குமரனை
பார்த்துக் களித்திருப்போம்
இந்துக் கடலில் மலேசிய நாட்டில்
செந்தமிழ் பாடி நிற்போம்
பத்துமலையில் நடக்கும் தைப்பூசத் திருவிழா மிகப் பெருமை வாய்ந்தது. உலகில் அதிக அளவில் மக்கள் கலந்து கொள்ளும் இந்துத் திருவிழா என்றும் கூறப்படுகிறது. தமிழர்கள் மட்டுமல்ல… இந்துக்கள் மட்டுமல்ல… சீனர்களும் அயல்நாட்டவர்களும் கூட காவடி எடுத்து வந்து முருகனை வணங்குவார்கள். அதையும் பாட்டில் வைத்தார் கண்ணதாசன்.
சேவல் கொடியுடை காவலன் பூமியின் சிந்தை கவர்ந்தவண்டி
உடன் சீனத்து நண்பர்கள் வேல் குத்தி ஆடிடும் மோகத்தை தந்தவண்டி
இந்தப் பாடலை கண்ணதாசன் ஒருவரே எழுதியிருந்தாலும் பாடியவர்கள் ஆறு பேர். சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன், பெங்களூர் ரமணியம்மாள், பி.சுசீலா, எம்.எஸ்.விசுவநாதன், எல்.ஆர்.ஈசுவரி என்று ஆறு பேரும் பாடக் கேட்பதும் பரவசம்.
இதே பத்துமலையில் இன்னொரு பாடலும் எடுக்கப்பட்டது. “யாமிருக்க பயமேன்” என்ற திரைப்படத்துக்காக. இதுவும் இயக்குனர் கே.சங்கர் இயக்கி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் இசையமைத்த திரைப்படம் தான்.
கணவனை இன்னொருத்தியிடம் திருட்டுக் கொடுத்த பெண் வேண்டிக் கொண்டு காவடி ஏந்தி மலையேறுவதாக அமைந்த பாடல்.
வந்தேன் முருகா பத்துமலை
நீ உணராயோ என் பக்தி நிலை
பாடலைப் பாடிய நாயகியின் கோரிக்கையை பத்துமலை முருகன் நிறைவேற்றி வைப்பதாக காட்சி அமையும்.
சமீபத்தில் பில்லா என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சி பத்துமலையில் படம் பிடிக்கப்பட்டாலும் அது பக்திப் பாடல் அல்ல.
தமிழன் எங்கு போனாலும் பக்தியையும் மூட்டை கட்டிக் கொண்டு போகிறான் என்பதற்கு இந்தப் பாடல்களே சாட்சி. அதே போல தமிழன் உலகெங்கும் எத்தனையோ தெய்வங்களுக்கு எத்தனையெத்தனை கோயில்களைக் கட்டினாலும் தமிழ்க் கோயில் என்ற அடையாளத்தைக் கொண்டிருப்பவை முருகன் கோயில்கள் மட்டுமே என்பது அசைக்க முடியாத உண்மை.
அதுவுமில்லாமல் இந்தப் பாடல்களுக்கு எல்லாம் இசையமைத்த பெருமை எம்.எஸ்.விசுவநாதன் என்னும் முருக பக்தருக்கே கிடைத்திருப்பதும் சிறப்பு.
பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
பாடல் – நீயின்றி யாருமில்லை விழி காட்டு
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள் – சீர்காழி கோவிந்தராஜன், வாணி ஜெயராம்
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – வருவான் வடிவேலன்
பாடலின் சுட்டி – http://www.inbaminge.com/t/v/Varuvaan%20Vadivelan/Neeyndri%20Yaarumullai.vid.htmlபாடல் – முருகனெனும் திருநாமம்
வரிகள் – கவிஞர் வாலி
பாடியவர்கள் – டி.எம்.சௌந்தரராஜன்
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – பைலட் பிரேம்நாத்
பாடலின் சுட்டி – http://www.inbaminge.com/t/p/Pilot%20Premnath/Murugenendra%20Thirunamam.vid.htmlபாடல் – பத்துமலைத் திரு முத்துக்குமரனை
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள் – சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன், பெங்களூர் ரமணியம்மாள், பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி, எம்.எஸ்.விசுவநாதன்
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – வருவான் வடிவேலன்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=ZipRNDiFkjkபாடல் – வந்தேன் முருகா பத்துமலை
வரிகள் – கவிஞர் வாலி
பாடியவர் – இசையரசி பி.சுசீலா
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – யாமிருக்க பயமேன்
பாடலின் சுட்டி – கிடைக்கவில்லை
அன்புடன்,
ஜிரா
323/365
rajinirams 3:39 pm on October 22, 2013 Permalink |
கதிர்காமம் முருகன்-பத்துமலை முத்துக்குமரன் பாடல்களை கொண்ட பக்தி பரவசமூட்டும் முத்தான பதிவு.
Uma Chelvan 4:38 pm on October 22, 2013 Permalink |
நாம் மட்டும்மல்ல, ஒரு இடம் விட்டு மறு இடம் செல்லும் எல்லா இனத்தவருமே தம்முடைய மொழி, கலாச்சரம், கலை மற்றும் உணவு பழக்க வழக்கம் களை உடன் எடுத்து செல்கிறார்கள். இது எப்போதுமே நன்மை என்று சொல்ல முடியாது . சில சமயம் தாம் தான் உயரந்தவர் எனற எண்ணமும் கூடவே வருகிறது. Sunday evening நானும் என் பெண் மீனாக்ஷியும் (அவள் இங்கே பிறந்து வளர்ந்தாலும் , நான் மதுரை என்பதால் அந்த பெயர்) திரு. லால்குடி ஜெயராமனின் நினவு நடன நிகழ்சிக்கு சென்று இருந்தோம். இந்த நிகழ்ச்சி அவரின் பிறந்த நாளுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் அவரின் எதிர் பாராத மறைவு இதை ஒரு Homage ஆக மாற்றி விட்டது. நான்கு பாடல்களும் , மங்களமும் அவர் compose செய்த பாடல்கள். மீதம் மூன்று பாடல்கள் பாரதியாரின் கண்ணன் பாடல்கள். அதிலும் அவர் compose செய்த ” செந்தில் வேலவன்” என்ற பத வர்ணம் பார்க்க பார்க்க திகட்டதவை..
திரு. லால்குடி ஜெயராம் மானின் தில்லானா https://community.worcester.edu/webapps/portal/frameset.jsp
Uma Chelvan 7:30 pm on October 22, 2013 Permalink |
Very sorry I gave a wrong u- tube link……..here we go………..Lalgudi Jayaraman’s Thillana