Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • G.Ra ஜிரா 11:41 pm on November 28, 2013 Permalink | Reply  

    பெண்களின் பண்கள் 

    தமிழ் சினிமாவில் இரண்டு பெண்கள் சேர்ந்து பாடினால் அது ஒரே ஆணைப் பற்றியதாக மட்டுமே இருக்கும். இது ஆண்டாண்டு காலமாக மாறாத விதி. விதிவிலக்குப் பாட்டுகள் உண்டு என்றாலும் கதையில் இரண்டு பெண்கள் இருந்தால் ஒரு ஆண் என்று முக்கோணக் காதலை வைப்பது இன்றைக்கும் இயக்குனர்களுக்கு மிகவும் பிடித்த செயல்.

    வழக்கம் போல முதலில் நினைவுக்கு வருவது கவியரசர் தான். இதைச் சொல்வது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டது. பாதகாணிக்கை படத்தில் இரண்டு பெண்கள் ஒருவனையே நினைத்துப் பாடுவார்கள்.

    உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
    உனது நிலா விண்ணிலே எனது மலர் கண்ணிலே

    எப்படி அடித்துக் கொள்கிறார்கள் பார்த்தீர்களா? ஒருத்தி அத்தை மகளாகப் பிறந்தவள். இன்னொருத்தி அவனோடு உறவாக வளர்ந்தவள். அதையும் போட்டியில் இழுத்துவிடுகிறார்கள்.

    ஒருத்தி: பிறந்த போது பிறந்த சொந்தம் இருந்ததம்மா நினைவிலே
    இன்னொருத்தி: வளர்ந்த போது வளர்ந்த சொந்தம் வளர்ந்ததம்மா மனதிலே

    அடுத்ததாக கவிஞர் வாலி இரண்டு பெண்களை சண்டை போட வைக்கப் போகிறார். அந்த இரண்டு பெண்களையும் ஏமாற்றியது ஒருவன் தானோ என்று அவர்கள் பாடுகிறார்கள்.

    ஒருத்தி: மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
    நிலவுக்கு வானம் பகையானல் அது நடந்திட வேறே வழி ஏது
    இன்னொருத்தி: பறவைக்குச் சிறகு பகையானால் அது பதுங்கி வாழ்ந்திட கால்களுண்டு
    உறவுக்கு நெஞ்சே பகையானால் மண்ணில் பெருகிட வகையேது

    அவர்கள் இரண்டு பேர்களின் வாழ்க்கையையும் ஒருவன் ஏமாற்றி அழித்து விட்டது போல ஒப்பாரி. ஆனாலும் இனிய பாடல்.

    அடுத்து நாம் பார்க்கப் போவது ஒருவருக்குத் தெரியாமல் ஒரே ஆணை விரும்பிய இரண்டு தோழிகளை. ஆனால் ஒருத்தியின் காதல்தான் கைகூடுகிறது. சில நாட்கள் கழித்து ரகசியம் தோழிக்குத் தெரிந்து விடுகிறது. தோழியின் ஆசையைத் திருடிவிட்டோமோ என்று அவளுக்கு ஒரு வருத்தம். தோழியர் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டிருந்தாலும் புரியாதது போலவே பாடுகிறார்கள். நீங்களே பாட்டைப் பாருங்கள்.

    ஒருத்தி:
    அடி போடி பைத்தியக்காரி
    நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா

    இன்னொருத்தி
    அடி போடி பைத்தியக்காரி
    நான் புரிந்தவள் தான் உன்னைத் தெரிந்தவள் தான்

    இவர்கள் நல்ல தோழிகள். சண்டையிட்டுக் கொள்ளவில்லை. தன் காதல் வெற்றி பெற்றதே என்று எண்ணாமல் தோழியில் காதல் தோற்றுப் போனதே என்று வருந்திப் பாடுகிறாள் ஒருத்தி.

    இறைவன் ஒரு நாள் தூங்கிவிட்டான்
    எழுத்தைக் கொஞ்சம் மாற்றிவிட்டான்

    இப்படியெல்லாம் யார் எழுதியிருப்பார்கள்? வேறு யார்? கவியரசரேதான்.

    இன்னும் இரண்டு பேர்கள் இருக்கிறார்கள். இவர்களும் தோழிகள். இவர்கள் இருவரையும் திருமணம் செய்தவன் ஒருவனே. ஆனால் அது இருவருக்குமே தெரியாது. அந்த உண்மை தெரியாமல் இருவரும் சேர்ந்து சுமங்கலி பூஜை செய்கிறார்கள்.

    மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
    மங்கல மங்கை மீனாட்சி
    உள்ளம் ஒருவன் சொந்தம் என்றாள்
    தேவி எங்கள் மீனாட்சி

    பாவம். பின்னால் அவர்கள் உண்மை தெரிந்து கொதிக்கப் போவதை அப்போது அறியாமல் பாடியிருக்கிறார்கள். இதே கதை பின்னால் கற்பூரதீபம் என்ற பெயரில் வந்தது. அங்கும் உண்மை தெரியாமல் இரண்டு தோழிகளும் பூஜை செய்கிறார்கள்.

    காலகாலமாய்ப் பெண் தானே கற்பூர தீபம்
    காவல் கொண்ட மன்னன் தானே தெய்விக ரூபம்

    இரண்டு பெண்டாட்டிக்காரன் கதைகள் என்றால் மக்களுக்குப் பிடித்திருக்கிறது என்றே தோன்றுகிறது. நம்மூர் சாமிகளே அப்படித்தானே!

    இவர்களாவது திருமணம் ஆனவர்கள். திருமணம் ஆகும் முன்னமே அக்காவும் தங்கையும் ஒருவனையே நினைத்துப் பாடிய கதைகளும் உண்டு. நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தைத்தான் சொல்கிறேன். இந்த முறை பாட்டெழுதியது கவிஞர் வைரமுத்து.

    மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு
    தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு

    இந்த வரிசையில் இருகோடுகள் திரைப்படத்தை எப்படி மறக்க முடியும்? வாலியின் வார்த்தை விளையாட்டுகளில் ஒளிரும் “புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்” பாட்டை விட்டு விட்டு இந்தப் பதிவை எழுத முடியுமா? சாமிகளையே சண்டைக்கு இழுத்துப் பாடிய பாட்டாயிற்றே.

    அவள்: தேவன் முருகன் கோயில் கொண்டது வள்ளியின் நெஞ்சத்திலே
    இவள்: அவன் தெய்வானை என்றொரு பூவையை மணந்தது திருப்பரங்குன்றத்திலே

    வள்ளியும் தெய்வானையும் கூட இப்படிச் சண்டை போட்டிருக்க மாட்டார்கள்!

    இன்னொரு அக்கா தங்கையைப் பார்க்கப் போகிறோம். அக்காவுக்குப் பார்த்த மாப்பிள்ளை அவன். ஆனால் திருமணம் நின்றுவிடுகிறது. தங்கையோடு அவனுக்குக் காதல் உண்டாகிறது. அப்போது அவர்களுக்குள் போட்டிப் பாட்டு வைக்காமல் இருக்க முடியுமா?

    ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
    திருமாலைத்தானே மணமாலை தேடி
    எந்த மங்கை சொந்த மங்கையோ
    ஓ எந்த கங்கை தேவ கங்கையோ

    போன பாட்டில் முருகன் மாட்டிக் கொண்டால் இந்தப் பாட்டில் மகாவிஷ்ணு மாட்டிக் கொண்டார். அவருக்கும் இரண்டுதானே!

    இன்னும் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிச் சொல்லாமல் பதிவை முடிக்க விரும்பவில்லை. அவன் அவளைத்தான் விரும்பினான். விதி பிரித்தது. அத்தை மகளை மணந்தான். மகிழ்வாகத்தான் இருந்தான். போனவள் வந்தாள். பிரச்சனையும் வந்தது. அத்தை மகளோ அப்பாவி. தெரியாத்தனமாக “ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அவளைக் கேட்டு விடுகிறாள்.” உடனே ஒரு பாட்டு.

    கடவுள் தந்த இருமலர்கள்
    கண் மலர்ந்த பொன் மலர்கள்
    ஒன்று பாவை கூந்தலிலே
    ஒன்று பாதை ஓரத்திலே

    சோகத்தைக் கூட அழகாகச் சொல்லியிருக்கிறார்கள் கவிஞர்கள். அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.

    இந்தச் சக்களத்திச் சண்டை பழைய படங்களோடு முடிந்து போகவில்லை என்று நிருபிக்க வந்ததோ பஞ்சதந்திரம் திரைப்படம்! ஒருத்தி மனைவி. இன்னொருத்தி மனைவியாக நடிப்பவள். அவர்களுக்குள் ஒரு போட்டிப் பாட்டு.

    வந்தேன் வந்தேன் மீண்டும் மீண்டும் வந்தேன்
    வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
    எனது கனவை எடுத்துச் செல்ல வந்தேன்

    நல்லவளைப் போல அமைதியாகப் பாடுகிறாள் நடிக்க வந்தவள். கட்டிக் கொண்டவள் சும்மா இருப்பாளா? புலியாய்ப் பாய்கிறாள்.

    பந்தியில பங்கு கேட்டா விட்டு தருவேன்
    என் முந்தியில பங்கு கேட்டா வெட்டிப் புடுவேன்
    அடி கண்டவளும் வந்து கைய வைக்க
    அவர் கார்பரேஷன் பம்ப் அல்ல

    இவர்கள் கதை இப்படியிருக்க இன்னும் இரண்டு பெண்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அவர்களைப் பற்றிச் சொல்லவில்லை என்றால் இந்தப் பதிவு முழுமை பெறவே பெறாது. ஒருத்தி மேடையில் ஆடிக் கொண்டிருக்கிறாள். அந்த ஆட்டத்தை இன்னொருத்தி விரும்புகிறவன் ரசிக்கிறான். அதை இன்னொருத்தியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவளும் மேடையில் குதித்து சரிக்குச் சரி ஆடுகிறாள். சபாஷ் சரியான போட்டி என்று தமிழுலகம் ரசித்த பாடல் இது.

    முதலாமவள் அமைதியாகத்தான் ஆடுகிறாள். பாடுகிறாள்.

    கண்ணும் கண்ணும் கலந்து இன்பம் கொண்டாடுதே
    என்னும் போதே உள்ளம் பந்தாடுதே

    அடுத்தவள் ஆங்காரமாக வரும் போதே ஆர்ப்பாட்டமாகத்தான் பாடுகிறாள்.

    ஜிலுஜிலுஜிலுவென நானே ஜெகத்தை மயக்கிடுவேனே
    கலகலகலவென்று ஜோராய் கையில் வளை பேசும் பாராய்

    இன்னொருத்தி வந்ததும் முதலாமவள் தன்மானம் உரசப்படுகிறது. அவளும் போட்டியில் குதிக்கிறாள்.

    ஆடும் மயில் எந்தன் முன்னே என்ன ஆணவத்தில் வந்தோயோடி
    பாடுங்குயில் கீதத்திலே பொறாமை கொண்டு படமெடுத்து ஆடாதேடி

    பார்த்தீர்களா… தான் விரும்புகிறவன் இன்னொருத்தியின் நடனத்தை ரசித்தான் என்று தெரிந்ததும் ஆடல் அரங்கத்தைப் போட்டி போடல் அரங்கமாக மாற்ற பெண்களால்தான் முடியும்.

    எது எப்படியோ! காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறினாலும்… கவிஞர் முத்துலிங்கம் எழுதியதைப் போல “என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான்” என்று இரண்டு பெண்கள் சண்டையிட்டுக் கொண்டால் அதை மக்கள் ரசிக்கத்தான் செய்வார்கள் என்பது மட்டும் மாறவே மாறாது போல!

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

    பாடல் – உனது மலர் கொடியிலே
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.இராமமூர்த்தி
    படம் – பாதகாணிக்கை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=grVbM9WJZks

    பாடல் – மலருக்குத் தென்றல் பகையானால்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன், டி.கே.இராமமூர்த்தி
    படம் – எங்க வீட்டுப் பிள்ளை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=jlGlD41oxJg

    பாடல் – அடி போடி பைத்தியக்காரி
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – தாமரை நெஞ்சம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=gxU3uBgng-E

    பாடல் – மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – ஜிக்கி, எஸ்.ஜானகி
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – தேனும் பாலும்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=KzcZFwOZSuk

    பாடல் – காலம் காலமாய் பெண் தானே
    வரிகள் – கங்கையமரன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, எஸ்.ஜானகி
    இசை – கங்கையமரன்
    படம் – கற்பூரதீபம்
    பாடலின் சுட்டி – http://youtu.be/SeZ6Z5ysm20

    பாடல் – மல்லிகையே மல்லிகையே
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர்கள் – அனுராதா ஸ்ரீராம், சித்ரா
    இசை – தேனிசைத் தென்றல் தேவா
    படம் – நினைத்தேன் வந்தாய்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Nu3uPoeEuss

    பாடல் – ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, வாணி ஜெயராம்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – தேவியின் திருமணம்
    பாடலின் சுட்டி – http://www.inbaminge.com/t/d/Deiviyin%20Thirumanam/Sridevi%20Varam%20Ketkiral.vid.html

    பாடல் – கடவுள் தந்த இருமலர்கள்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – இருமலர்கள்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=X7RxuQ4tUwU

    பாடல் – புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – ஜமுனாராணி, பி.சுசீலா
    இசை – வி.குமார்
    படம் – இருகோடுகள்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=hCR7rD4-K7c

    பாடல் – வந்தேன் வந்தேன் மீண்டும்
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர்கள் – நித்யஸ்ரீ, சுஜாதா
    இசை – தேனிசைத் தென்றல் தேவா
    படம் – பஞ்சதந்திரம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=sErsh9Kg7bk

    பாடல் – கண்ணும் கண்ணும் கலந்து
    வரிகள் – கொத்தமங்கலம் சுப்பு
    பாடியவர்கள் – ஜிக்கி, பி.லீலா
    இசை – சி.இராமச்சந்திரா
    படம் – வஞ்சிக்கோட்டை வாலிபன்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=AMotc9NQ9B8

    பாடல் – என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான்
    வரிகள் – கவிஞர் முத்துலிங்கம்
    பாடியவர்கள் – பி.எஸ்.சசிரேகா, எஸ்.பி.ஷைலஜா
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – கோபுரங்கள் சாய்வதில்லை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=_XjWcWHbB7A

    அன்புடன்,
    ஜிரா

    361/365

     
    • prabakar 6:42 am on November 29, 2013 Permalink | Reply

      படம் பெயர் நினைவில் இல்லை.கே.ஆர். விஜயாவும் ஜெயசுதாவும் பாடியிருக்கும் பாட்டு. அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து தீபம். எப்படி வேண்டுமானாலும் பெண்கள் வாழலாம் என்பதற்கும் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை கவிஞர் கண்ணதாசன் அருமையாக கூறியிருப்பார். கோடி பெண்களை பூமி கண்டது தெய்வமானவள் சீதை. என்ற அற்புதமான வரிகள் உள்ள பாடல் இந்த பாடலில் ஆண் நாயகன் குறித்து பாடப் படவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

    • Uma Chelvan 7:33 am on November 29, 2013 Permalink | Reply

      இரண்டு பெண்கள் ஒரு ஆணுக்காக பாடியது போலவே, இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணுக்காக ஏங்கி பாடியதும் உண்டே.!!! நம்ம அல்லா ரெக்ஹா இசையில் அருமையான “சஹானா” ராகத்தில் .

      என்னை கேட்டு காதல் வரவில்லையே ,
      நான் சொல்லி காதல் விடவில்லையே !!
      மறந்தாலும் காதல் மறக்காதம்மா !!

      ஒ வெண் நிலா …..இரு வானிலா !!

    • kamala chandramani 8:31 am on November 29, 2013 Permalink | Reply

      பன்னிரண்டு பாடல்கள் ஒரே பதிவில் முதன்முறையாக? என்ன ஆராய்ச்சி? நிஜமாகவே என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. வாழ்த்துகள் ஜி.ரா.

    • umakrishh 9:56 am on November 29, 2013 Permalink | Reply

      நல்ல ஆராய்ச்சி..:) புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக பாமா விஜயம்..அப்புறம் மல்லுவேட்டி மைனர் ல கூட ஒரு பாடல் வருமே..

    • rajinirams 10:05 am on November 29, 2013 Permalink | Reply

      ஆஹா,சான்சே இல்லை சார்.செம பதிவு.பாராட்டுக்கள்.நீங்கள் தேர்ந்தெடுத்த பெண்களின் பண்கள் எல்லாமே அருமை. என்னை நெகிழ வைக்கும் இன்னொரு பாடல் சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் பாட முடியாமல் தவிக்கும் பெண்ணிற்காக “மீரா”என்று பாடலை தொடரும் “பல்லவி ஒன்று மன்னன்” பாடல்.கே.பாலசந்தரின் இயக்கத்திலேயே இன்னொரு பாடல் வெள்ளி விழாவில் “கை நிறைய சோழி”பாடல்.டபுள்ஸ் படத்திலும் வைரமுத்துவில் ஒரு பாடல் நன்றாக இருக்கும்-ராமா ராமா ராமா என்று ஒரு பெண்ணும்,கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா என்று ஒருவரும் பாடும் பாடல். நன்றி.

    • பாலராஜன்கீதா 11:55 am on November 29, 2013 Permalink | Reply

      கந்தன் கருணை – மனம் படைத்தேன் (கே.ஆர்.வி – ஜெ.ஜே) 🙂

    • amas32 7:13 pm on November 29, 2013 Permalink | Reply

      இந்தப் பதிவு முடிவுக்கு வரும் சமயத்தில் சான்சே இல்லாமல் ஒரு சூப்பர் போஸ்ட் 🙂 எந்தப் பாட்டையும் விடு வைக்கவில்லை. ரசிகர்களுக்கு ஒரு கல்யாண சமையல் விருந்தே பரிமாறி விட்டீர்கள். இன்னும் சொல்ல என்ன இருக்கு! அற்புதம் 🙂

      இத்தனைப் பாடல்களிலும் என் மனத்தில் நிற்கும் பாடல் என்னவோ புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் மட்டுமே. அதற்குப் பல காரணங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.

      இன்னும் திரும்ப வந்து உங்கள் பதிவை பொறுமையாக இரண்டு முறை படிக்க வேண்டும் 🙂

      amas32

    • ராஜேஷ் 1:29 am on December 4, 2013 Permalink | Reply

      பாடல் – மல்லிகையே மல்லிகையே
      வரிகள் – கவிஞர் வைரமுத்து
      பாடியவர்கள் – அனுராதா ஸ்ரீராம், சித்ரா
      இசை – தேனிசைத் தென்றல் தேவா
      படம் – நினைத்தேன் வந்தாய்

      வரிகள் பழநிபாரதி

    • santhosh 10:47 am on August 8, 2021 Permalink | Reply

      hi sir ,
      I would like to talk with u for some ideas, kindly if u wish pls contact me-9585504287

  • G.Ra ஜிரா 9:27 pm on October 21, 2013 Permalink | Reply  

    பக்திப் பயணங்கள் 

    வெளிநாட்டுக்கு காதல் பாட்டுகள் பாட ஒரு கூட்டம் போனால் பக்திப் பாடல்கள் பாடவும் ஒரு கூட்டம் போயிருக்கிறது.

    குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் இறையருட் கலைச்செல்வர் என்று அழைக்கப்பட்ட கே.சங்கர் இயக்கிய திரைப்படங்களில் வெளிநாட்டிலுள்ள கோயில்களும் வரும். படத்தின் பாத்திரங்கள் அந்தக் கோயில்களுக்குச் சென்று அழுது தொழுது உருகி மருகிப் பாடுவார்கள்.

    அதைத் தொடக்கி வைத்தது செந்தமிழ்த் தெய்வமான முருகக் கடவுள்தான். ஆம். வருவான் வடிவேலன் படத்தில்தான் முதன்முதலில் இலங்கையிலும் மலேசியாவிலும் இருக்கும் முருகன் கோயில்கள் பிரபலமாயின.

    இலங்கையின் கதிர்காமம் மிகவும் தொன்மையான முருகன் கோயில். இன்று தமிழ் அடையாளங்களை இழந்து சிங்கள அடையாளங்கள் கூடிவிட்டதாகச் சொல்கிறார்கள். நினைக்க வருத்தமாக இருக்கிறது.

    கதிர்காம யாத்திரை என்பது மிகப்பிரபலம். கலைமணி கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் நாவலில் கதிர்காம யாத்திரை மிக அழகாக விவரிக்கப்பட்டிருக்கும். திரைப்படத்தில் இந்தக் காட்சி இடம் பெறவில்லை. அது குறையல்ல. படத்துக்கு எவ்வளவு தேவையோ அதை மட்டும் கொடுத்தார் இயக்குனர் ஏ.பி.நாகராஜன்.

    கதிர்காமத்திலிருக்கும் மாணிக்க கங்கையில் மோகனா, சிக்கல் சண்முக சுந்தரம், மோகனாவின் தாயார் வடிவாம்பாள், முத்துராக்கு அண்ணன், நட்டுவனார் முத்துக்குமார சுவாமி, வரதன் என்று எல்லாரும் முழுகி எழும் போது வடிவாம்பாளின் கையில் மட்டும் ரேகை ஓடும் மரகதக் கல் கிடைக்கும். மற்றவர்களை விட அந்த அம்மையார் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

    அந்தக் கோயிலில் படமாக்கப் பட்ட பாடல்தான் வருவான் வடிவேன் திரைப்படத்தில் இடம் பெற்ற “நீயின்றி யாருமில்லை விழிகாட்டு” என்ற கண்ணதாசன் பாடல்.

    கண்ணிழந்த கணவனைக் கூட்டிக்கொண்டு யாத்திரை வரும் மனைவி பாடுவதாக அமைந்த பாட்டு.

    நீயின்றி யாருமில்லை விழி காட்டு
    நெஞ்சுருக வேண்டுகிறோம் ஒளி காட்டு

    பாடலின் இறுதியில் “நாங்கள் கதிர்காமம் வந்ததற்கு பலனில்லையோ” என்று இறைஞ்சுவார்கள். முருகனருளால் கண் கிடைக்கும்.

    இதே கதிர்காமத்தில் இன்னொரு பாடல் எடுக்கப்பட்டது. பைலட் பிரேம்நாத் திரைப்படத்துக்காக டி.எம்.சௌந்தரராஜன் பாடிய வாலியின் பாடல் அது.

    குழப்பத்தில் இருக்கும் தந்தை அந்தக் குழப்பம் நீங்க முருகனை நோக்கி காவடி எடுத்துப் பாடுவதாக அமைந்த பாடல் அது.

    முருகன் எனும் திருநாமம்
    முழங்கும் இடம் கதிர்காமம்
    குருபரணே சரணம் உந்தன் சேவடி
    தோளில் குறுகுதய்யா நான் சுமக்கும் காவடி

    அடுத்து நாம் போக இருப்பது மலேசியா. அங்குள்ள பத்துமலை முருகன் கோயில் படிகளில் ஏறப் போகிறோம். தயாரா?

    பத்துமலைத் திரு முத்துக்குமரனை
    பார்த்துக் களித்திருப்போம்
    இந்துக் கடலில் மலேசிய நாட்டில்
    செந்தமிழ் பாடி நிற்போம்

    பத்துமலையில் நடக்கும் தைப்பூசத் திருவிழா மிகப் பெருமை வாய்ந்தது. உலகில் அதிக அளவில் மக்கள் கலந்து கொள்ளும் இந்துத் திருவிழா என்றும் கூறப்படுகிறது. தமிழர்கள் மட்டுமல்ல… இந்துக்கள் மட்டுமல்ல… சீனர்களும் அயல்நாட்டவர்களும் கூட காவடி எடுத்து வந்து முருகனை வணங்குவார்கள். அதையும் பாட்டில் வைத்தார் கண்ணதாசன்.

    சேவல் கொடியுடை காவலன் பூமியின் சிந்தை கவர்ந்தவண்டி
    உடன் சீனத்து நண்பர்கள் வேல் குத்தி ஆடிடும் மோகத்தை தந்தவண்டி

    இந்தப் பாடலை கண்ணதாசன் ஒருவரே எழுதியிருந்தாலும் பாடியவர்கள் ஆறு பேர். சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன், பெங்களூர் ரமணியம்மாள், பி.சுசீலா, எம்.எஸ்.விசுவநாதன், எல்.ஆர்.ஈசுவரி என்று ஆறு பேரும் பாடக் கேட்பதும் பரவசம்.

    இதே பத்துமலையில் இன்னொரு பாடலும் எடுக்கப்பட்டது. “யாமிருக்க பயமேன்” என்ற திரைப்படத்துக்காக. இதுவும் இயக்குனர் கே.சங்கர் இயக்கி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் இசையமைத்த திரைப்படம் தான்.

    கணவனை இன்னொருத்தியிடம் திருட்டுக் கொடுத்த பெண் வேண்டிக் கொண்டு காவடி ஏந்தி மலையேறுவதாக அமைந்த பாடல்.

    வந்தேன் முருகா பத்துமலை
    நீ உணராயோ என் பக்தி நிலை

    பாடலைப் பாடிய நாயகியின் கோரிக்கையை பத்துமலை முருகன் நிறைவேற்றி வைப்பதாக காட்சி அமையும்.

    சமீபத்தில் பில்லா என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சி பத்துமலையில் படம் பிடிக்கப்பட்டாலும் அது பக்திப் பாடல் அல்ல.

    தமிழன் எங்கு போனாலும் பக்தியையும் மூட்டை கட்டிக் கொண்டு போகிறான் என்பதற்கு இந்தப் பாடல்களே சாட்சி. அதே போல தமிழன் உலகெங்கும் எத்தனையோ தெய்வங்களுக்கு எத்தனையெத்தனை கோயில்களைக் கட்டினாலும் தமிழ்க் கோயில் என்ற அடையாளத்தைக் கொண்டிருப்பவை முருகன் கோயில்கள் மட்டுமே என்பது அசைக்க முடியாத உண்மை.

    அதுவுமில்லாமல் இந்தப் பாடல்களுக்கு எல்லாம் இசையமைத்த பெருமை எம்.எஸ்.விசுவநாதன் என்னும் முருக பக்தருக்கே கிடைத்திருப்பதும் சிறப்பு.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

    பாடல் – நீயின்றி யாருமில்லை விழி காட்டு
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – சீர்காழி கோவிந்தராஜன், வாணி ஜெயராம்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – வருவான் வடிவேலன்
    பாடலின் சுட்டி – http://www.inbaminge.com/t/v/Varuvaan%20Vadivelan/Neeyndri%20Yaarumullai.vid.html

    பாடல் – முருகனெனும் திருநாமம்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – பைலட் பிரேம்நாத்
    பாடலின் சுட்டி – http://www.inbaminge.com/t/p/Pilot%20Premnath/Murugenendra%20Thirunamam.vid.html

    பாடல் – பத்துமலைத் திரு முத்துக்குமரனை
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன், பெங்களூர் ரமணியம்மாள், பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி, எம்.எஸ்.விசுவநாதன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – வருவான் வடிவேலன்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=ZipRNDiFkjk

    பாடல் – வந்தேன் முருகா பத்துமலை
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – யாமிருக்க பயமேன்
    பாடலின் சுட்டி – கிடைக்கவில்லை

    அன்புடன்,
    ஜிரா

    323/365

     
    • rajinirams 3:39 pm on October 22, 2013 Permalink | Reply

      கதிர்காமம் முருகன்-பத்துமலை முத்துக்குமரன் பாடல்களை கொண்ட பக்தி பரவசமூட்டும் முத்தான பதிவு.

    • Uma Chelvan 4:38 pm on October 22, 2013 Permalink | Reply

      நாம் மட்டும்மல்ல, ஒரு இடம் விட்டு மறு இடம் செல்லும் எல்லா இனத்தவருமே தம்முடைய மொழி, கலாச்சரம், கலை மற்றும் உணவு பழக்க வழக்கம் களை உடன் எடுத்து செல்கிறார்கள். இது எப்போதுமே நன்மை என்று சொல்ல முடியாது . சில சமயம் தாம் தான் உயரந்தவர் எனற எண்ணமும் கூடவே வருகிறது. Sunday evening நானும் என் பெண் மீனாக்ஷியும் (அவள் இங்கே பிறந்து வளர்ந்தாலும் , நான் மதுரை என்பதால் அந்த பெயர்) திரு. லால்குடி ஜெயராமனின் நினவு நடன நிகழ்சிக்கு சென்று இருந்தோம். இந்த நிகழ்ச்சி அவரின் பிறந்த நாளுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் அவரின் எதிர் பாராத மறைவு இதை ஒரு Homage ஆக மாற்றி விட்டது. நான்கு பாடல்களும் , மங்களமும் அவர் compose செய்த பாடல்கள். மீதம் மூன்று பாடல்கள் பாரதியாரின் கண்ணன் பாடல்கள். அதிலும் அவர் compose செய்த ” செந்தில் வேலவன்” என்ற பத வர்ணம் பார்க்க பார்க்க திகட்டதவை..

      திரு. லால்குடி ஜெயராம் மானின் தில்லானா https://community.worcester.edu/webapps/portal/frameset.jsp

    • Uma Chelvan 7:30 pm on October 22, 2013 Permalink | Reply

      Very sorry I gave a wrong u- tube link……..here we go………..Lalgudi Jayaraman’s Thillana

  • mokrish 10:05 pm on September 28, 2013 Permalink | Reply  

    நோய் விட்டுப்போகும் 

    சில தினங்களுக்கு முன் ட்விட்டரில் @amas32 ‘நோயற்றே வாழ்வே செலவற்ற செல்வம்’ என்று புது மொழி சொன்னார். தொடர்ந்து இன்றைய மருத்துவம், செலவுகள் என்று ஒரு பெரிய விவாதம்.

    நோயற்ற வாழ்வு பற்றி மாற்று கருத்து இருக்க முடியாது. Health is wealth. நோயற்ற உடல் என்பது பதினாறு செல்வங்களில் ஒன்று என்று அபிராமி பட்டர் ‘திருக்கடவூர் அபிராமியம்மை பதிகம்’ என்ற நூலில் சொல்கிறார்

    கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும்,

    கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,

    சலியாத மனமும்

    என்ற வரிகளில் குறையாத வயதும் குன்றாத இளமையும் கழுபிணி இல்லாத உடலும் என்று நோயற்ற ஆரோக்கியமான வாழ்வு பற்றி மூன்று செல்வங்கள். வாலி பேசும் தெய்வம் படத்தில் ஒரு பாடலில் (இசை கே வி மகாதேவன் பாடியவர்கள் எல் ஆர் ஈஸ்வரி சூலமங்கலம் ராஜலக்ஷ்மி) இந்த செல்வங்களை rearrange செய்கிறார்

    http://www.youtube.com/watch?v=ZqtdSAA-5Es

    நூறாண்டு காலம் வாழ்க

    நோய் நொடி இல்லாமல் வளர்க

    ஊராண்ட மன்னர் புகழ் போலே

    உலகாண்ட புலவர் தமிழ் போலே

    குறையாது வளரும் பிறையாக

    குவியாத குமுத மலராக

    குன்றாத நவநிதியாக

    துள்ளி குதித்தோடும் ஜீவ நதியாக

    நீ வாழ்க.. நீ வாழ்க..

    நீண்ட ஆயுள் என்பது அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும் என்றால் முதலில் நோய் இல்லாத உடல் வேண்டும். கலையாத கல்வியும், குன்றாத நவநிதியும் என்ற மற்ற செல்வங்கள் எல்லாம் அடுத்த priority தான்

    அனைவரும் அரை நிஜார் அடிடாஸ் சகிதம் நடந்து, ஓடி நல்ல ஆரோக்கியம் தேடிக்கொண்டே இருக்கிறோம். வள்ளுவர் மருந்து என்று ஒரு அதிகாரம் வைத்து முக்கியமாக உணவைப் பற்றியே பேசுகிறார். நல்ல உணவு, ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி என்று நினைக்கும் போது சுலபம்தான் ஆனால் நடைமுறையில்?

    நோய் வராமல் தடுப்பதுதான் நலம். வந்து விட்டால் அலோபதி, ஹோமியோபதி நேச்சுரோபதி என்று அலைந்து  இவை எதுவும் கை கொடுக்கவில்லையென்றால் வெங்கடாஜலபதி தான் துணை !

    மோகனகிருஷ்ணன்

    301/365

     
    • Suri 3:51 am on September 29, 2013 Permalink | Reply

      Normandu Kalamazoo Valhalla was written by vali not by kannadasan

      • என். சொக்கன் 1:21 pm on September 29, 2013 Permalink | Reply

        Regret the error. It is corrected now

      • rajinirams 2:35 pm on September 29, 2013 Permalink | Reply

        Uma Chelvan-மிகவும் நெகிழ வைத்த பின்னுட்டம்.

        வாழ்க்கையில் முதலிலேயே “நடையாய் நடந்து விட்டால்”பிறகு மருத்துவமனைக்கு நடையாய் நடக்க வேண்டியிருக்காது.”செரிக்காத உணவும் எரிக்காத சக்தியும் தான் மனித ஆரோக்கியத்தின் எதிரிகள்.வெறும் வயிற்றில் 750 மி.லி.தண்ணீர் அருந்திவிட்டு அரை மணி நேரம் அதிவேக நடைப்பயிற்சி நம்மை பாதுகாக்கும் என்று புத்தகத்தில் படித்திருக்கிறேன். மேலும் வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும் என்பது கலைவாணர் வாக்கு. இந்த பாடல் மட்டுமல்ல பல வாழ்த்து பாடல்கள் வாலி எழுதியவையே-பிறந்த நாள் இன்று பிறந்த நாள்,பாவலன் பாடிய புதுமைப்பெண்,என்னோடு பாடுங்கள் நல்வாழ்த்து,நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள். நன்றி.

    • Uma Chelvan 1:16 pm on September 29, 2013 Permalink | Reply

      நோயற்ற வாழ்வே குறைவில்லாத செல்வம். பலவகையான நோய் உள்ளவர்களை தினமும் பார்பவர்களுக்கு அதன் முழு அர்த்தமும் நன்றாக விளங்கும். அப்பொழுது நான் மதுரை பெரிய hospitalலில் house surgency ட்ரைனிங்லில் இருந்த நேரம். Cancer ward ல் போஸ்டிங். ஒரு 18 வயது இளைஞன் blood cancer என்று அட்மிட் ஆகி இருந்தான். திருநெல்வேலி பக்கம் ஒரு சிறு கிராமத்தை சேர்ந்தவன். ஒரே பையன், அப்பா கிடையாது.மிகவும் வறிய குடும்பம். அவனுக்கு ஒரு நாள் blood குடுத்தே ஆக வேண்டிய கட்டாயம். நானும் பகல் முழுவதும் முயற்சி செய்தும் ஒரு பயனும் இல்லை. இரவு 10 மணி போல் வீட்டிற்கு கிளம்பி கொண்ட்ருந்த என் chief முன் போய் நின்று எவ்வளவு முயன்றும் என்னால் blood collect பண்ண முடியவில்லை. காலையில் மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு கிடக்க வில்லையெனில், நானே blood கொடுக்கிறேன் sir, என்றேன். சிறிது நேரம் ஏதும் பேசாமல் என் முகத்தயே பார்த்து கொண்டு இருந்தவர் பின் மௌனமாக தலையை மட்டும் ஆட்டி, வேண்டாம்மா, இப்படி எத்தனை பேருக்கு கொடுப்பீங்க என்றார்.அவர் சொன்னதன் அர்த்தம் நன்றாக புரிந்தாலும், காலைக்குள் blood கிடக்கவில்லை என்றால் நான் blood கொடுப்பது என்று மனதுக்குள் முடிவு செய்து அவன்ரூம்க்கு போனேன். infection ஆக கூடாது என தனி ரூம்ளில் இருந்தான். அவனிடம் மிகவும் கஷ்டபட்டும் blood கிடைக்கவில்லை , காலையில் நான் வந்து உனக்கு blood தருகிறேன் என்றேன். அதை கேட்டதும் ” அக்கா”, என்ற ஒரு வார்த்தையுடன் கண்ணீர் விட்டு கதறி அழுதான். என்னாலும் அதருக்கு மேல் நிற்க முடியாமல் பேசாமல் ரூமை விட்டு வெளியே வந்தேன். 10 மணிக்கு மேல் ஆகி விட்டதால் mess லில் சாப்பாடு இல்லை. பசி, அலைச்சல் , வருத்தம் ……அடுத்தநாள் காலை, அவன் ரூமில் அவன் இல்லை. night duty நர்சிடம் , சிஸ்டர் எங்கே அந்த பையன் என்று கேட்டேன். அவன் இன்று காலை 3 மணிக்கு இறந்து விட்டான். நீங்க வர கொஞ்ச நேரம் முன்புதான் அவனை அவன் ஊருக்கு எடுத்து சென்றார்கள். என்றார். I was totally, totally devastated இது நடந்து 20 வருடங்களுக்கு மேல ஆகிறது. இன்றும் அவன் முகமும் அவனின் அக்கா என்ற கதறலும் பசுமையாக என் மனதில் . இவ்வளவு டிராமடிக் சீன் எல்லாம் US லில் கிடையாது. Patient comfort is very important here.. சாகும் பொழுது வலி இல்லாமல் சாக வேண்டும் என்று Heavy dose “Morphine” கொடுப்பார்கள் . அமைதியான முறையில்.எல்லாம் நடக்கும். நம் ஊரில் எப்படி என்று உங்களுக்கே தெரியும். My professional ethic’s prevents me to discuss further about our place.

    • amas32 4:10 pm on September 29, 2013 Permalink | Reply

      உமா செல்வன், உங்கள் பகிர்வு என் மனத்தை அதிர வைக்கிறது. என் இளம் வயதிலிருந்தே பலவித நோய்களுக்கும் ஆட்ப்பட்டிருக்கேன், அவதிப் படுபவர்களையும் பார்த்திருக்கிறேன். என்னை பொறுத்த வரை நோயில்லா வாழ்வே சொர்க்கம். நரகமும் சொர்க்கமும் வேறு எங்கோ இல்லை . நம் தினப்படி வாழ்வில் தான் உள்ளது.

      சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். வாழ்வில் மற்ற எந்த மகிழ்ச்சியையும் அனுபவிக்க முதலில் ஆரோக்கிய வாழ்வு அமைய வேண்டும்.

      amas32

  • mokrish 9:22 pm on September 22, 2013 Permalink | Reply  

    கூட்டம் கூட்டமாக 

    சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றித் திரிந்த காட்டு யானைகளை  பிடித்து முதுமலை வனச் சரணாலயம், ஆனைமலை வனச் சரணாலயத்தில் விட தமிழக அரசு ‘ஆபரேஷன் மலை’ என்ற நடவடிக்கை எடுத்தது. இது பற்றிய செய்திகளை ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் படித்த எனக்கு ஒரு விஷயம் கண்ணில் பட்டது. ஆங்கில ஊடகங்கள் ‘herd of elephants’ என்று எழுத தமிழில்  யானைக் கூட்டம் என்றே இருந்தது.

    ஆங்கிலத்தில் இந்த Collective Nouns மிகவும் சுவாரசியமானது. ஒவ்வொரு பறவை, விலங்கு குழுவுக்கும் ஒரு ஸ்பெஷல் பெயர். பல சொற்கள் கவிதை போல் இருக்கும். Colony of Ants, Troop of Apes, Swarm of bees, Flock of Birds, Pack of Hounds, Pride of Lions , School of fish என்று கேட்கும் போதே ஒரு graphic பிம்பம் தோன்றும். காக்கை கூட்டத்திற்கு என்ன பெயர் தெரியுமா ? A murder of Crows! யாரோ ஒரு ரசிகன் யோசித்து வைத்த பெயர்கள்.

    http://users.tinyonline.co.uk/gswithenbank/collnoun.htm#Birds

    தமிழில் எல்லாவற்றையும் கூட்டம் என்றே சொல்கிறார்களா? இலக்கியத்தில் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் திரைப்பாடல்களில்  அப்படித்தான் என்று தோன்றுகிறது.

    எங்க வீட்டு பிள்ளை படத்தில் வாலி எழுதிய நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்ற பிரபலமான பாடலில் காக்கைகள் கூட்டம் என்று எழுதி பின்னர் மாற்றப்பட்ட வரி ஒன்று வரும்

    அரச கட்டளை படத்தில் முத்துக்கூத்தன் எழுதிய ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் என்ற பாடலில் (இசை கே வி மகாதேவன் பாடியவர் டி எம் எஸ்)  முயல் கூட்டம் என்கிறார்

    http://www.inbaminge.com/t/a/Arasa%20Kattalai/Aadi%20Vaa%20Aadi%20Vaa.eng.html

    மயிலாட வான்கோழி தடை செய்வதோ
    மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ
    முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
    அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ

    வைரமுத்து சிவப்பு மல்லி படத்தில் எரிமலை எப்படி பொறுக்கும் என்ற பாடலில் (இசை சங்கர் கணேஷ் பாடியவர் டி எம் எஸ் டி எல் மகராஜன்) சிங்க கூட்டம் என்கிறார்

    http://www.inbaminge.com/t/s/Sivappu%20Malli/Erimalai%20Eppadi.eng.html

    சிங்க கூட்டம் நிமிர்ந்தால்
    துன்ப சிறையின் கதவு தெறிக்கும்
    நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
    இனி அழுதால் வராது நீதி

    கண்ணதாசன் அக்கரை பச்சை படத்தில் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் SPB, எல் ஆர் ஈஸ்வரி) கிளிக் கூட்டம் என்கிறார்

    http://www.inbaminge.com/t/a/Akkarai%20Pachai/Oorgolam%20Poginra.eng.html

    ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்

    ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று

    நா முத்துக்குமார் உனக்கும் எனக்கும் படத்தில் பூப்பறிக்க நீயும் போகாதே என்ற பாடலில் (இசை தேவி ஸ்ரீபிரசாத் பாடியவர் சங்கர் மகாதேவன்)

    http://www.youtube.com/watch?v=xAWGS5tB9Lw

    காட்டுக்குள்ள நீயும் போகாதே

    கொட்டுகிற தேனீ கூட்டம்

    தேனெடுக்க உதட்ட சுத்துமடி

    இப்படி இன்னும் பல பாடல்கள். பறவைக்  கூட்டம், நரிகள் கூட்டம்  குயில் கூட்டம் குட்டி போட்ட ஆட்டுக் கூட்டம், மான் கூட்டம், கடல்மீன் கூட்டம், வண்டுகள் கூட்டம், பட்டாம்பூச்சி கூட்டம் – என்று எல்லா கவிஞர்களும் முன் தீர்மானிக்கப்பட்ட மெட்டின் நெளிவில் எழில் கோலச்சரிவில் கர்வம் தொலைத்து கூட்டம் என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்கள். இது சரியா?

    ஆடுகளும் மாடுகளும் மந்தை. கொஞ்சம் தேடினால் flock என்ற வார்த்தைக்கு இணைந்து உண்ணும் பறவைத்திரள், உருங்குசெல்லும் புட்குழாம் என்ற அர்த்தம் கண்ணில் படுகிறது.  Swarm என்றால் வண்டின் மொய்திரள் என்ற அழகான விளக்கம்  கண்ணில் படுகிறது.

    தமிழில் Collective nouns உண்டா? தெரிந்தவர்கள் சொல்லவும்

    மோகனகிருஷ்ணன்

    295/365

     
    • rajinirams 11:41 pm on September 22, 2013 Permalink | Reply

      யானைக்கூட்டத்தை பார்த்து ஒரு நல்ல பதிவை இட்டதற்கு பாராட்டுக்கள்.இளம்பெண்கள் கூட்டமாக இருப்பதை பார்த்து காதல் மலர் கூட்டம் ஒன்று என்றதெய்வமகன் வரிகள் நினைவு வருகிறது. போருக்கு செல்லும் கூட்டத்தை மட்டும் படை என்றே கூறுவர்..வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்”படை” வெல்லும். நன்றி.

    • rajinirams 11:45 pm on September 22, 2013 Permalink | Reply

      இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற வித்துவான் வெ.லட்சுமணன் வரிகள் கட்சி தொண்டர் படையையும் குறித்து எழுதினார்.

    • Niranjan 11:47 pm on September 22, 2013 Permalink | Reply

      தொல்காப்பியத்தில் இருக்கிறது. நான் கூட புதிய தலைமுறை நிகழ்ச்சியில் செய்திருக்கிறேன்.

      • amas32 9:52 am on September 23, 2013 Permalink | Reply

        லிங்க் ப்ளிஸ் 🙂

        amas32

    • amas32 9:52 am on September 23, 2013 Permalink | Reply

      சிங்கம் சிங்கிளா தான் வரும் பன்னிங்க தான் கூட்டமா வரும் என்று தலைவர் அன்றே சொல்லிவிட்டார்! 🙂 அதனால் விலங்குகள்/பறவைகள் கூட்டம் என்பது தான் நானும் கேள்விப்பட்ட ஒன்று. ஆனால் ஆட்டு மந்தை, மாட்டு மந்தை இன்றும் வழக்கில் உண்டு.

      amas32

      • rajinirams 5:56 pm on September 23, 2013 Permalink | Reply

        ஹா ஹா,சூப்பர்:-))

      • Mohanakrishnan 6:57 pm on September 23, 2013 Permalink | Reply

        சிங்கம் சிங்கிளா தான் வரும் என்பது factually wrong. சுஜாதா என்ற யானைக்கும் அடி சறுக்கும் !

        • amas32 9:11 pm on September 24, 2013 Permalink

          அதெல்லாம் poetic liberty மாதிரி சூப்பர் ஸ்டாருக்கு டயலாக் எழுதும் போது இதெல்லாம் கண்டுக்கக் கூடாது ;-))

          amas32

        • mokrish 10:17 pm on September 24, 2013 Permalink

          அது சரி! மத்த படமெல்லாம் உலக சினிமா மாதிரி வேணும். இங்க வேற ரூலா?

    • Uma Chelvan 3:30 am on September 25, 2013 Permalink | Reply

      சிங்கிளா வந்த சிங்கத்தின் நிலையை பாரீர்!!!

      Sorry about the words at the bottom, since I copied this image from another site!!!):

  • G.Ra ஜிரா 7:55 pm on September 8, 2013 Permalink | Reply  

    வேறிடம் 

    பிறந்த இடம் ஒன்றிருக்க அங்கிருந்து பிடுங்கியெடுத்து வேறொரு இடத்தில் வளரவிடுவது நியாயமா?

    எதையென்று கேட்கின்றீர்களா? செல்வத்தில் எல்லாம் பெரிய செல்வமாக நாம் கொண்டாடும் பிள்ளைச் செல்வத்தைதான் சொல்கிறேன்.

    பெற்ற குழந்தையை அப்படியே எடுத்துக் கொடுத்துவிட எந்த சராசரித் தாயும் சம்மதிக்க மாட்டாள். அது ஒரு பெரும் துன்பம். அப்படிக் குடுத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். குடுத்த பிறகு அவர்கள் கடைசி வரை முழுமையாக உரிமையைச் சொல்லிக்கொள்ள முடியாத நிலையே உண்டாகியிருக்கிறது.

    அன்பைத்தேடி என்றொரு படம். அந்தப் படத்தின் நாயகி ஒரு குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கிறாள். ஆனால் அந்தக் குழந்தை அவளுக்கல்ல. அவளது கணவன் தவறுதலாகத் தொலைத்து விட்ட அக்காவின் குழந்தைக்கு மாற்றாக கொடுப்பதற்காக இந்தக் குழந்தையை பெறப் போகிறாள்.

    கொடுக்கப் போகிறோம் என்ற நினைப்பே அவளைச் சுடுகிறது. அந்தச் சூட்டில் சொற்கள் பாடலாகி மாறி அழுகையோடு கலந்து வருகிறது.

    சிப்பியிலே முத்து – அது சிப்பிக்கென்ன சொந்தம்
    தென்னையிலே இளநீர் – அது தென்னைக்கென்ன சொந்தம்
    ஓங்கி வரும் முல்லை – அது ஒரு கொடியின் பிள்ளை
    எடுத்துக் கொண்டு போனால் – அது கொடிக்குச் சொந்தமில்லை

    அவள் சொல்கின்ற ஒவ்வொன்றும் அவளுடைய நிலையை உணர்த்துகின்றன. எந்தச் சிப்பியாலும் முத்தை எடுக்கின்றவர்களைத் தடுக்க முடியாது. அதே நிலைதான் தென்னைக்கும் முல்லைக் கொடிக்கும். அப்படியொரு கையறு நிலையில்தான் அவள் இருக்கிறாள்.

    அவளைப் போலவே பழங்கதைகளில் துன்பப்பட்டவர்கள் இருந்தார்கள் என்பது நினைவுக்கு வருகிறது. அவர்களையும் பாட்டில் சொல்கிறாள்.

    கர்ணன் எனும் வள்ளலுக்கும் அன்னை சொந்தமில்லை
    கண்ணன் எனும் தெய்வம் கூட இரண்டு வீட்டுப் பிள்ளை

    எவ்வளவு சத்தியமான வரிகள்! வாணி ஜெயராம் பாடிய இந்தப் பாடலை கவியரசர் கண்ணதாசனைத் தவிர யார் எழுதியிருக்க முடியும்!

    இதே போல பணம் படைத்தவன் படத்தில் இன்னொரு பாடல் உண்டு. பிரிந்து போன குடும்பத்தை ஒன்று சேர்ப்பதற்காக தன் குழந்தையை தம்பி குழந்தையாக நடிக்கக் கொடுக்கிறான் அண்ணன். அதற்கு அவன் மனைவியும் உடந்தை. கொடுத்ததுதான் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு நிம்மதியாக இருந்தார்களா?

    மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க
    மன்னவன் மட்டும் அங்கிருக்க
    காணிக்கையாக யார் கொடுத்தார்
    அவள் தாயென்று ஏன் தான் பேர் எடுத்தாள் (அவன்)
    அது கடமை என்றே நான் கொடுத்தேன் (அவள்)

    வாலி எழுதிய அருமையான பாடல் இது. ஒரு குடும்பம் ஒன்றாக வேண்டும் என்று நல்ல எண்ணத்தில் கொடுத்த காணிக்கைதான். ஆனால் பெற்ற குழந்தையின் பிரிவு வாட்டுகிறதே!

    கொடியில் பிறந்த மலரை
    கொடி புயலின் கைகளில் தருமோ!
    மடியில் தவழ்ந்த மகனை
    தாய் மறக்கும் காலம் வருமோ!

    யோசித்துக் கொடுத்தாலும் யோசிக்காமல் கொடுத்தாலும் இப்படிப் புலம்புவதை தவிர்க்க முடியாதுதான். ஆனாலும் அவளுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவளால் பிரிந்த குடும்பம் அவள் பெற்ற மகனால் சேரும் என்று நம்புகிறாள்.

    இன்று நாளை மாறும்
    நம் இதயம் ஒன்று சேரும்
    சென்ற மகனும் வருவான்
    முத்தம் சிந்தை குளிரத் தருவான்!

    அவள் எண்ணம் கதையில் பலித்து அனைவரும் ஒன்றாக இருந்து மகிழ்ந்தார்கள்.

    பெற்றவர்கள் நிலை இப்படியிருக்க… அப்படிக் கொடுக்கப்பட்ட பிள்ளையின் நிலை எப்படியிருக்கும்? அதை பணக்காரன் படப்பாடலில் மு.மேத்தா எழுதியிருக்கிறார்.

    பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
    பெத்த கடனுக்குத்தான் என்ன வித்து வட்டியக் கட்டிப்புட்டா
    பிள்ளையின் மனது பித்தாச்சு இங்க பெத்தவ மனசு கல்லாச்சு
    இன்னொரு மனசு என்னாச்சு அது முறிஞ்சு போன வில்லாச்சு

    தத்துக் கொடுக்கப்பட்ட பிள்ளைகள் உண்மையான பெற்றோர்கள் மீது ஒரு நெருடலான அன்பையே காட்டுவார்கள் என்பதை இந்தப் பாடலில் மு.மேத்தா சொல்லியிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன்.

    முருகனால் வேண்டுமானால் பார்வதி மீதும் கார்த்திகைப் பெண்கள் மீதும் சமமாக அன்பு காட்ட முடியலாம். ஆனால் மனிதர்களுக்கு அந்த அளவுக்கு வலிமையான உள்ளம் இல்லை என்றே தோன்றுகிறது.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – சிப்பியிலே முத்து
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – வாணி ஜெயராம்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – அன்பைத் தேடி
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=PuD5y0kY4RY

    பாடல் – மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன், எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.இராமமூர்த்தி
    படம் – பணம் படைத்தவன்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=8C-A5-Rja1o

    பாடல் – பெத்து எடுத்தவதான்
    வரிகள் – மு.மேத்தா
    பாடியவர் – மலேசியா வாசுதேவன்
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – வேலைக்காரன்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=xUeBwu4RDAQ

    அன்புடன்,
    ஜிரா

    281/365

     
    • Murugesan 11:59 pm on September 8, 2013 Permalink | Reply

      Nalla pathivu nandri jira

    • amas32 10:45 am on September 9, 2013 Permalink | Reply

      பிரிவின் துயரம் டிகிரி மட்டுமே வேறுபடும். அனைத்துப் பிரிவுகளும் சோகத்தைத் தருவது தான். பெண் புகுந்த வீடு செல்வதும் வளர்ந்த பயிரை பிடுங்கி வேறிடம் நடுவது போல் தான். அங்கே அன்பென்னும் நீரூற்றி, அறமென்னும் உரமிட்டு வளர்த்தால் திரும்ப நடப்பட்ட பெண்ணென்னும் பயிர் செழித்தோங்கி வளரும்.

      ஆனால் நீங்கள் இந்தப் பாடல்களில் குறிப்பிட்டு இருப்பது இளந்தளிர் பற்றியது. என் தோழியின் அக்கா தன் முதல் குழந்தையை குழந்தையில்லா தன நாத்தனாருக்குப் பெற்று ஈன்றாள். எவ்வளவு பெரிய தியாகம் இது! தத்துப் பற்றிய ஒரு உண்மை சம்பவத்தின் என் பதிவின் சுட்டி இங்கே http://amas32.wordpress.com/2013/07/26/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/

      amas32

    • uma chelvan 11:33 am on September 9, 2013 Permalink | Reply

      The Movie “Kulama Gunama” based on the same concept!!

    • rajinirams 9:31 am on September 10, 2013 Permalink | Reply

      அருமை-நல்ல நெகிழ்ச்சியான பதிவு. மூன்று பாடல்களுமே சூழ்நிலைக்கேற்ப அருமையாக எழுதப்பட்ட பாடல்கள்.”கோட்டை கட்டும் ராஜாவுக்கு பிள்ளை இல்லையாம்,குப்பை தொட்டி மட்டும் ஒரு பிள்ளை ஈன்றதாம்”-தாயும் இன்றி தந்தை இன்றி வாழும் பிள்ளை எங்கே செல்லும் சொல்லுங்களேன் என்ற பட்டாக்கத்தி பைரவனின் கவியரசர் வரிகளும்,சின்ன தாயவள் தந்த ராசாவே “முள்ளில்”தோன்றிய சின்ன ரோசாவே என்ற வாலியின் வரிகளும் இதே போன்று மனதை கணக்க வைக்கும் அற்புத வரிகளே. நன்றி.

  • என். சொக்கன் 11:47 pm on August 19, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு : கொக்கும் மீனும் 

    முற்காலத்து பாவலர்கள் அவதான அரசர்(சி) போலும். அக்காலத்தில் அவர்களைத் திசைதிருப்ப தொலைக்காட்சி பெட்டி, செல்ஃபோன் அல்லது மோட்டார் வாகனமோ இல்லை. எங்கும் பயணம் செய்ய வேண்டுமாயின் கட்டைவண்டி கட்ட வேண்டும் அல்லாவிடின் “நடைராசா” தான். நடந்து திரிவதால் இயற்கையை அவதானிக்க அவர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் உண்டு. ஆற்றங்கரை, நீர் நிலைகள், மலைச்சாரல்கள்  போன்ற இயற்கையான இடங்களில் நன்றாக நேரம் செலவிட்டு முதலை, கொக்கு, கூகை, காக்கை, போன்ற உயிரினங்களை நன்றாக நோட்டம் விட்டு அவைகளின் நடத்தைகளை பாடல்களில் பதித்தனர்.

    அவதானிப்பில் திருவள்ளுவர் சார்ல்ஸ் டார்வினுக்கு முன்னோடி. முன்னவர் இலக்கியமுறையில் வர்ணனை இளையவர் விஞ்ஞானத்திற்கு ஆய்வு. இவர்களுக்கு முன் கிரேக்க ஈசாப்பின் கதைகளில் கூட (Aesoph’s fables) மிருகங்களும் பறவைகளும் தான் கதாநயகர்கள்.

    இந்த வரிசையில் நீதி நூல்களில் வரும் கொக்கு- மீன் உறவு பற்றி பார்ப்போம்:

    கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

    குத்தொக்க சீர்த்த இடத்து.  (அதிகாரம்: காலம் அறிதல் – திருக்குறள் 490)

     

    காலம் கை கூடும் வரையில் நீர்க்கரையில் உள்ள கொக்கு போல் ஒதுங்கி இருந்து சந்தர்ப்பம் வாய்க்கும்போது குறி தவறாமல் தாக்கி வெல்ல வேண்டும் என்பது திருவள்ளுவரின் அறிவுரை.

    அடக்க முடையார் அறிவிலரென் றெண்ணிக்

    கடக்கக் கருதவும் வேண்ட- மடைத்தலையில்

    ஓடுமீன் ஓட உருமீன் வருமளவும்

    வாடியிருக்குமாம் கொக்கு  (மூதுரை 16)

     

    அமைதியாக, பணிவடக்கமாக இருப்பவர்களை அறிவில்லாதவர்கள் என்று மட்டும் நினக்காதீர்கள். அவர்கள் நீரோடையில் பெரிய மீன் வரும் வரையும் வாடியிருக்கும் கொக்குபோல் இருப்பவர்கள் என எச்சரிக்கிறார் ஔவைப் பிராட்டியார்.

    திரைப்பட பாடலாசிரியர்கள் காட்சிக்கு தகுந்தது மாதிரி பாடல் எழுதும்போது தமிழ் இலக்கியத்தோடு தமது கற்பனை கைச்சரக்குகளையும் கலப்பது சகஜம். அந்த வகையில் – இந்த கொக்கையும் மீனையும் வைத்து எப்படி பந்தாடியுள்ளார்கள் என்று பார்ப்போம்.

     

    1.     கவிஞர் கண்ணதாசன்:

    1.1    விரக்தியை பிரதிபலிக்க எழுதிய பாடல்

    “குளத்திலே தண்ணியில்லே, கொக்குமில்லே மீனுமில்லே

                  பெட்டியிலே பணமில்லே, பெத்தபிள்ளை சொந்தமில்லே”

     

    பாடல் : யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க..

    திரைப்படம்: எங்க ஊரு ராஜா (1968)

    இசை: M.S. விஸ்வநாதன்

    பாடியவர்:T.M. சவுந்தரராஜன்

    பாடல் சுட்டி: http://www.youtube.com/watch?v=vdU9LdY4wGY

     

     

    1.2          வந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் பயன்படுத்த: 

                 

                  “கொக்கை பார்த்து கற்றுக் கொள்ளு வாழ்வு என்ன என்பதை,

                  கொத்தும்போது கொத்திக் கொண்டு போக வேண்டும் நல்லதை”

     

                  பாடல்: அடி என்னடி உலகம் இது எத்தனை…

    திரைப்படம்: அவள் ஒரு தொடர் கதை (1972)

    இசை: மெல்லிசை மன்னர் MS .விஸ்வநாதன்

    பாடியவர்: L.R. ஈஸ்வரி

    பாடல் சுட்டி: http://www.youtube.com/watch?v=JMoH_zRU0r0

                

    1.3    மகனுக்கு அறிவுரை கூறும்காட்சியில் :

    “ கொள்ளும் கொள்கையில் குரங்காக

    கொடுமையைக் கண்டால் புலியாக

                  குறி வைத்துப் பார்ப்பதில் கொக்காக”

                  குணத்தில் யானையின் வடிவாக…”

     

    பாடல்: கேளாய் மகனே கேளொரு வார்த்தை

    திரைப்படம்: உத்தமன் (1976)

    இசை: திரை இசை திலகம் K.V. மகாதேவன் (உதவி: புகழேந்தி)

    பாடியவர்:T.M. சவுந்தரராஜன்

    பாடல் சுட்டி:  http://www.youtube.com/watch?v=hF98K5ToYUU

     

    2.     கவிப் பேரரசு வைரமுத்துவின் பாணி:

    எதிர்மாறாக கேள்வி கேட்பது போல் வம்புக்கு இழுக்கும் பாடல்:

    “அறுகம் புல்லுக்கு அறுக்கத் தெரியுமா?

    வளர்ந்த குமரி நான் ஆமா

    அயிரை மீனுதான் கொக்கை முழுங்குமா? அடுக்குமா?…“

     

    பாடல்: அழகான ராட்சசியே

    திரைப்படம்: முதல்வன் (1998)

    பாடலாசிரியர்: வைரமுத்து

    இசை: A.R.ரகுமான்

    பாடியவர்:SP பாலசுப்ரமணியம், ஹரிணி, GV பிரகாஷ்

    பாடல் சுட்டி:  http://www.youtube.com/watch?v=5sp3EgcJXbo

     

    பிற்பதிவு: வேறு கொக்கு-மீன் வரிகள் பாடல்களில் தெரிந்தால் தயவு செய்து நீங்களும் பினோட்டத்தில் குறிப்பிடுங்கள்.

    நன்றியுடன்

    சபா- தம்பி

    சபா-தம்பி பிறந்து வளர்ந்தது இலங்கையில். கால் நூற்றாண்டு காலத்துக்குமுன்னால் ஆஸ்திரேலியாவில் குடியேறியவர், தற்போது பெர்த் நகரத்தில் வசிக்கிறார். தமிழார்வம் ஏராளம், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆங்கிலத்தில்மட்டுமே எழுதிவந்திருக்கிறார், கண்ணதாசனும் #4VariNoteம் தந்த ஊக்கத்தில் தமிழிலும் எழுதத் தொடங்கியுள்ளார்.

    Twitter: @SabaThambi
     
    • app_engine 11:59 pm on August 19, 2013 Permalink | Reply

      “கொத்தி விட வேண்டுமென்று கொக்கு என்ன துடிக்குது?
      தப்பிவிட வேண்டுமென்று கெண்டை மீனு தவிக்குது”

      வனிதாமணி, வனமோகினி வந்தாடு – விக்ரம் படப்பாடலின் தொடக்கத்தில் கமலுடன் “பேசும்” டப்பிங் ஹேமமாலினி…

      எழுதியது வைரமுத்துவா அல்லது வசனகர்த்தா சுஜாதாவா தெரியாது 🙂

    • rajinirams 12:47 am on August 20, 2013 Permalink | Reply

      செம பதிவு.விருந்துக்கு மீனை எதிர்பார்க்கும் கொக்கு-விருந்தினர் “கொக்கை”வைத்தே நல்ல பதிவு போட்டுட்டாரே. கோவில் படத்தில் கொக்கு மீனை திங்குமா இல்லையினா மீனு கொக்கை விழுங்குமா என்ற பாடல்-வண்ணக்கிளியில் மருதகாசியின் “ஆத்துல தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க காத்திருந்த கொக்கு அதை கவ்விக்கொண்டு போனதென்ன என்ற பாடலும் “உண்டு”, வாழ்த்துக்கள்.

    • amas32 8:08 am on August 20, 2013 Permalink | Reply

      கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனைக் கண்டு விரதம் முடிச்சிடிச்சாம் – முத்துப் படப் பாடலை விட்டுட்டீங்களே! :-)) ரொம்ப கருத்துள்ள பாடல்! 😉

      வித்தியாசமான, நல்லப் பதிவு 🙂

      கொக்குக்கு ஒன்றே மதி என்ற வசனம் நிறைய பேர் பயன்படுத்திக் கேட்டிருக்கிறேன். அதன் பொருள் என்ன? ஒன்றையே நினைத்துக் கொண்டு மற்றதை மறந்து விடுவதா?

      amas32

    • rajnirams 10:21 am on August 20, 2013 Permalink | Reply

      ஹா ஹா,அதான் ஆச்சர்யம்:-)) காலைல நெனச்சேன்-நீங்க போட்டுட்டீங்க:-)) மகிழ்ச்சி:-))

  • mokrish 11:49 pm on August 17, 2013 Permalink | Reply  

    கல்லிலே கலைவண்ணம் கண்டோர் 

    சென்னையில் எங்கள் அலுவலகம் வரும் அமெரிக்கர்களும்  ஐரோப்பியர்களும் மற்ற நாட்டினரும் பார்த்தே தீர வேண்டும் என்று அடம் பிடிப்பது இரண்டு இடங்கள் – ஒன்று பனகல் பார்க் புடவை கடைகள் இன்னொன்று மாமல்லபுரம். ஒருமுறை ஜப்பானிலிருந்து வந்தவர்களுடன் மாமல்லபுரம் செல்ல வேண்டியிருந்தது. பார்த்த இடம்தான். ஆனால் உடன் வந்தவர்களின் உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொள்ள, எல்லா இடங்களையும் ஆர்வத்துடன் பார்த்தோம்.

    அதில் ஒருவர் கையில் இருந்த Lonely Planetல் இந்த இடம் பற்றி நிறைய விவரங்கள் படித்திருந்தார். அங்கே அவர் பார்த்த சிற்பங்களை Poetry in Stone என்று குறிப்பிட்டார். அட இது கல்லிலே கலை வண்ணம் தானே? குமுதம் படத்தில் கவி கா மு ஷெரிப் எழுதிய கல்லிலே கலை வண்ணம் என்ற பாடல் வரிகள்  (இசை கே வி மகாதேவன் பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன் )

    http://www.youtube.com/watch?v=g-HUpdB_OeI

    கல்லிலே கலைவண்ணம் கண்டான் – இரு

    கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்

    பல்லவர் கோன் கண்ட மல்லை போலப்

    பாரெங்கும் தேடினும் ஊரொன்றும் இல்லை

    சொல்வதும் இதைத்தானே?

    வா ராஜா வா படத்தில் மாமல்லபுரத்தின் சிறப்பு பற்றி அழ வள்ளியப்பா எழுதிய பாடல் (இசை குன்னக்குடி வைத்யநாதன் பாடியவர் எல் ஆர் ஈஸ்வரி).  http://www.youtube.com/watch?v=TlR7UH3D-J8

    கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா

    அந்த கதை சொல்ல வந்தேனே சின்ன ராஜா

    ஓட்டுக்கல்ல சேர்க்காம ஒரே கல்ல குடைஞ்செடுத்து

    கட்டிவெச்சான் மண்டபத்தை பல்லவ ராஜா அதை

    கச்சிதமா சொல்ல வந்தேனே சின்ன ராஜா

    கடலோரம் கோபுரம் மலைமேலே மண்டபம்

    எப்படித்தான் செஞ்சானோ பல்லவ ராஜா

    அதை அப்படியே சொல்ல வந்தேன் சின்ன ராஜா

    சர்வர் சுந்தரம் படத்திலும் மகாபலிபுரம் பற்றி கண்ணதாசன் எழுதிய ஒரு அருமையான பாடல் உண்டு.(இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் பி சுசீலா & குழுவினர்)

    http://www.youtube.com/watch?v=Uz_OGjZoPro

    சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு

    கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

    ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே

    ஆட விட்டான் இந்த கடலினிலே

    படை கொண்ட பல்லவன் ஆக்கிவைத்தான்

    பருவத்தின் சாரத்தை தேக்கி வைத்தான்

    கன்னி பெண்ணை தேரினில் தூக்கி வைத்தான்

    காதலை ஏன் அவன் பாக்கி வைத்தான்…

    அன்னமிவள் வயதோ பதினாரு

    ஆண்டுகள் போயின ஆறுநூறு

    இன்னும் இவள் முதுமை எய்தவில்லை

    என்னதான் ரகசியம் தெரியவில்லை

    கல்கி சிவகாமியின் சபதத்தின் முன்னுரையில் “கையிலே பிடித்த கல்லுளிகளையே மந்திரக் கோல்களாகக் கொண்டு எந்த மகா சிற்பிகள் இந்த மகேந்திர ஜாலங்களைச் செய்தார்களோ என்று நினைக்கும்போது அந்தச் சிற்பிகளைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது” என்று எழுதியிருந்தார். எனக்கும்தான்.

    மோகனகிருஷ்ணன்

    259/365

     
    • rajinirams 8:51 pm on August 19, 2013 Permalink | Reply

      நினைவாலே சிலை செய்து அருமையான பதிவை செதுக்கி “சிற்பி”த்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். சிற்பி செதுக்காத பொற்சிலையோ.கண் கவரும் சிலையே இப்படி சி(ல)லை பாடல்களும் இருக்கின்றன. நன்றி.

  • mokrish 8:28 pm on August 11, 2013 Permalink | Reply  

    ராஜா என்பார் மந்திரி என்பார் 

    பிரபல செஸ் வீரர் காரி காஸ்பரொவ் எழுதிய How Life Imitates Chess படித்துக் கொண்டிருக்கிறேன். சீராக யோசித்தல், முடிவெடுக்கும் திறமை, வியூகம் அமைத்தல், என்று சதுரங்கம் தரும் பாடங்கள் பலவற்றை வணிக நிறுவன நிர்வாகத்தில் செயல்படுத்த முடியும் என்கிறார். செஸ் விளையாட்டு ஞாபக சக்தியையும் உள்ளுணர்வையும் மேம்படுத்தும் என்கிறார்.

    இந்த சதுரங்க விளையாட்டு பற்றி படித்தவுடன் கெளரவம் படத்தில் இரண்டு சிவாஜிகளும் ஆடிய life size செஸ் நினைவுக்கு வந்தது. கண்ணதாசன் எழுதிய ‘கண்ணா நீயும் நானுமா’ என்ற பிரபல பாடலில் (இசை எம் எஸ் விஸ்வநாதன், பாடியவர் டி எம் எஸ்) இருவருக்கும் இடையில் நடக்கும் வழக்கை சதுரங்க விளையாட்டுடன் ஒப்பிடுவார்

     https://www.youtube.com/watch?v=EjEa_j9kRbE

    மன்னனின் கெளரவம் சதுரங்க நடுவிலே

    மறிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே

    ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே

    இந்த Board Games எனப்படும் சிறுபாடு விளையாட்டுகள் நமக்கு பல முக்கியமான வாழ்வியல் பாடங்கள் கற்றுத்தருகின்றன. சதுரங்க விளையாட்டில் ராஜா காப்பாற்றப்படவேண்டும். ஆனால் இதில் ராஜாவுக்கு பெரிய அதிகாரமோ சக்தியோ கிடையாது. கிட்டத்தட்ட ஒரு பார்வையாளன்தான். ராஜாவின் பக்கம் இருக்கும் ராணியும், மந்திரிகளும் ரத கஜ துரக பதாதிகளும் தான் காக்கவேண்டும்.

    வாழ்க்கையை ஆடு புலி ஆட்டம் என்று விவரித்து சபதம் என்ற படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள்

    ஆட்டத்தை ஆடு புலியுடன் ஆடு

    போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு

    இங்கு ஆடுகள் மோதட்டும் புலியோடு

    வாலி இதில் வேறு கருத்து  சொல்கிறார் வெள்ளி விழா  படத்தில் கை நிறைய சோழி என்ற பாடலில் (இசை வி குமார் பாடியவர்கள் பி சுசீலா எல் ஆர் ஈஸ்வரி) ஒரு பக்கம் சதுரங்கம் இன்னொரு பக்கம் தாயக்கட்டம் என்று காட்சி.  இரண்டு விளையாட்டையும் குறிக்கும் வார்த்தைகளை வைத்து வாலி ஆடும் ஆட்டம்!  https://www.youtube.com/watch?v=AGM0KqoK3lY

     விதி என்று விளையாட்டை நினைப்பதும் ஏனோ

    பந்தயத்தை வாழ்க்கை என்று எண்ணி விடலாமோ!

    எனக்கென்னவோ இந்த விளையாட்டுகளை வடிவமைத்தவர்கள் இதன் மூலம் பாடம் சொல்ல நினைத்தார்கள் என்றே தோன்றுகிறது. நாம் செய்யும் நல்ல காரியங்களை ஏணியாகவும் தீய செயல்களை பாம்பாகவும் கற்பனை செய்த பரம பதம், புலிகளை எதிர்கொள்ளும் ஆடுகளை கொண்ட ஆடு புலி ஆட்டம், சரியான முறையில் காய் நகர்த்தினால் ஊர் போய்ச்சேரலாம் என்று சொல்லித்தரும் தாயக்கட்டம், என்று எல்லா விளையாட்டுகளும் நமக்கு ஏதோ பாடம் சொல்லுவதுபோல் இருக்கிறது.

    மோகனகிருஷ்ணன்

    253/365

     
    • rajinirams 2:45 pm on August 12, 2013 Permalink | Reply

      வித்தியாசமான விளையாட்டு பதிவு-அதற்கேற்ற அருமையான பாடல்கள். இரு கோடுகள் படத்தில் மியூசிகல் சேர் விளையாட்டில் இரு நாயகிகளை வைத்து வாலியின் வார்த்தை விளையாட்டு-அன்று போல இன்று கூட போட்டி போட இருவருண்டு,கண்ணகியா மாதவியா வெல்வது-என்ற கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வது.இதய மலரில் கண்ணதாசன்-என்றும் இந்த இதயம் ஒருவருக்கென்று கூறட்டும் விரைவினில் சென்று-என செண்டு மல்லி பூ போல் அழகிய பந்தை சொல்வதும் அருமையாக இருக்கும்.நன்றி.

    • amas32 5:41 pm on August 14, 2013 Permalink | Reply

      வாழ்க்கையை ஒரு விளையாட்டோடு ஒப்பிடுவது இந்த பாடல் வரிகளில் இருந்து தெரிகிறது. வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் நாமும் சதுரங்க ஆட்டத்தில் விளையாடுவது போல சரியான மூவ்களை செய்ய வேண்டியுள்ளது. வாழ்க்கையின் வெற்றியே அதில் தான் அடங்கியுள்ளது. பேக்கு மாதிரி இருந்தால் இளிச்சவாயன் என்ற பட்டத்தைக் கொடுத்து ஒருவரும் நம்மை மதிக்க மாட்டார்கள். அதனால் புலியிடம் இருந்துக் காத்துக் கொள்ளவும், ஏணியில் ஏறவும் கற்கவேண்டும்!

      amas32

  • mokrish 10:25 am on June 15, 2013 Permalink | Reply  

    நல்ல சகுனம் நோக்கிச் செல்லடி! 

    இன்னிக்கு யார் முகத்திலே முழிச்சேனோ தெரியலை எதுவும் சரியா நடக்கலே என்ற புலம்பல்களை நாம் கேட்டிருப்போம். அதே போல் வெளியே கிளம்பும்போது எங்கே போறீங்க என்று யாராவது கேட்டுவிட்டால் அவ்வளவுதான். நாம் நினைத்த காரியம் தடைபடுமோ என்று மனம் சஞ்சலப்படும். பூனை குறுக்கே போவது , காகம் கத்தினால் உறவினர் வருவார்கள் , 13ம் நம்பர் ராசியில்லை, மணியோசை கேட்டால் நல்லது –  இப்படி ஏராளமான நம்பிக்கைகள்.

    வரப்போவதை ஏதோ ஒரு வகையில் அடையாளம் காட்டும் நிகழ்வுகளுக்கு  பொதுப் பெயர் நிமித்தங்கள். Omen என்று பொதுவாகச் சொல்வது நிமித்தம்தான். சகுனம் என்று நாம் உபயோகிக்கும் வார்த்தை இதன் subset தான்.  பறவைகளால் அறியப்படும் நிமித்தங்கள் சகுனம் ஆகும் .One for sorrow, Two for joy,என்ற ஆங்கில நர்சரி ரைம் சொல்வதும் இதுதானோ?

    தசரதன்  மிதிலையில் சில நாட்கள் தங்கி பின்னர் அயோத்திக்குப் புறப்பட்டுச் சென்றான். அப்போது சில தீய நிமித்தங்கள் தோன்றின

    ஏகும் அளவையின் வந்தன.

         வலமும் மயில். இடமும்

    காகம் முதலிய. முந்திய

          தடை செய்வன; கண்டான்;

    நாகம் அனன். ‘இடை இங்கு உளது

          இடையூறு’ என நடவான்;

    மாகம் மணி அணி தேரொடு

           நின்றான். நெறி வந்தான்.

    மயில்கள் இடமிருந்து வலமாகச் சென்றன. முதலில் இது நல்ல நிமித்தம். அடுத்து காகங்கள் வலமிருந்து இடமாகச் சென்றன. இது தீய சகுனமாக இருந்ததால் தசரதன் தயங்கி நின்றான் இதன் பலன் கேட்டு அதன்பின்தான் பயணம் தொடர்கிறான் என்று குறிப்பிடுகிறார் கம்பர்.

    கீதையின் ஆரம்பத்தில் யுத்தம் ஆரம்பிக்குமுன் அர்ஜுனன் பகவானிடம் சொல்கிறான். ‘கெட்ட சகுனங்களைப் பார்க்கிறேன்’ என்று நாம் சொல்வதைத்தான், ‘விபரீதமான நிமித்தங்களைப் பார்க்கிறேன்’என்கிறான்.

    குமரி கோட்டம் என்ற படத்தில் வாலி எழுதிய பாடல் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் டி எம் எஸ், எல் ஆர் ஈஸ்வரி) http://www.youtube.com/watch?v=cHRX3Lhruzg பெண்ணுக்கு இடது கண் துடித்தால் நல்ல சகுனம் என்பதை சொல்கிறார்.

    நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்

    என காதல் தேவதை சொன்னாள்

    என் இடது கண்ணும் துடித்தது

    உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்

    வைரமுத்து முதல்வன் படத்தில் உளுந்து வெதைக்கயிலே என்ற பாடலில் (இசை ஏ ஆர் ரஹ்மான் பாடியவர்கள் ஸ்வர்ணலதா ஸ்ரீநிவாஸ்) நல்ல சகுனங்களை பட்டியல் போடுகிறார்

    https://www.youtube.com/watch?v=5410bc0lD2w

    உளுந்து வெதைக்கயிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே

    நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்

    கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்

    என்னென்ன நல்ல சகுனங்கள் சொல்கிறார் பாருங்கள்

    வெக்கப்படப்பில் கவுளி கத்த வலது பக்கம் கருடன் சுத்த

    தெருவோரம் நெறகுடம் பார்க்கவும் மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே

    ஒரு பூக்காரி எதுக்க வர பசும் பால்மாடு கடக்கிறதே

    இப்படி எல்லா நல்ல சகுனங்களும் சேர்ந்து வந்தால் என்னாகும்? தெய்வம் நாம் வீடு தேடி வந்து வரம் தரும் என்கிறார்.

    இனி என்னாகுமோ ஏதாகுமோ

    இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ

    இந்த சகுனமோ நிமித்தமோ அதுவே பலனை உண்டாக்குவதில்லை. முன்பே நிர்ணயிக்கப்பட்ட நிகழ்வுகளுக்கு indicator  ஆக மட்டுமே இருக்கிறது .சத்ருக்களை வதம் செய்தால் பாவம் வருமே!”என்று அழுத அர்ஜுனனிடம், “இந்த யுத்தத்தில் இவர்களை வதைப்பதாக நான் ஏற்கெனவே தீர்மானம் செய்துவிட்டேன் அதனால் இவர்களைக் கொல்பவன் நான் தான். நீ வெறும் கருவியாக மட்டும்  இரு என்று கண்ணன் சொல்வதும் அதுவே,

    இதையெல்லாம் கிண்டல் செய்பவர்களும் உண்டு. ஆனால் அவர்களும் தங்கள் வாகனங்களின் கூட்டு எண் 8 ஆக இல்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள் – Resale பண்ணமுடியாது சார் அதுனாலதான் என்ற ஏதாவது ஒரு காரணம் சொல்லி.  Faith begins where logic ends!

    மோகனகிருஷ்ணன்

    196/365

     
    • PVR (@to_pvr) 10:52 am on June 15, 2013 Permalink | Reply

      Super

    • GiRa ஜிரா 3:02 pm on June 16, 2013 Permalink | Reply

      சில விஷயங்களை நம்பலாமா கூடாதாங்குறதை முடிவு பண்ணவே முடியிறதில்லை.

      மூட நம்பிக்கைக்குள்ள மூழ்கக் கூடாதுன்னுதான் பாக்குறோம். ஆனா சில நம்பிக்கைகள் தொடர்ந்து வந்துக்கிட்டுதான் இருக்கு.

      கெட்டதை எடுத்துக்குறத விட நல்லத எடுத்துக்கலாம்.

      கடவுளை நம்புறோமே… இதெல்லாம் நம்பலாமான்னும் ஒரு சந்தேகம் வரும். ரொம்பவும் யோசிச்சா கோயிலையும் பூஜையையும் விட கடவுள் பெருசா தெரிவாரு. அதையெல்லாம் விட்டு வெளிய வந்துட்டா உண்மையிலேயே மனம் இறைவனோட ஒன்றும். அந்தச் சூழ்நிலையில்தான் இது போன்ற நம்பிக்கைகளில் இருந்து நம்ம வெளிய வர முடியும்.

  • mokrish 9:49 am on May 19, 2013 Permalink | Reply  

    வட்டங்களும் கோடுகளும் 

    விளையாட்டோ வாழ்க்கையோ இரண்டிலும் விதிகளும் மரபுகளும் உண்டு. நாகரிக வளர்ச்சியில் இது சரி இது தவறு என்று உருவாக்கப்பட்ட பல விதிமுறைகள் இன்றும் வாழ்க்கைக்கு வசதியாக இருப்பதால் நாம் கடைப்பிடித்துவருகிறோம் -அவ்வப்போது சிறு சிறு விதி மீறல்கள் செய்துகொண்டே. சிவப்பு சிக்னலை தாண்டி, சுவரேறி குதித்து, மாமரத்தில் கல் எரிந்து, பதின்ம வயதில் களவாடிய பொழுதுகள் என்று நாம் தாண்டிய கோடுகள் மறக்காத நினைவுகளாய்.

    கோடு என்றதும் ராமாயணத்தில் லக்ஷ்மணன் கோடு போட்டு சீதை அதை தாண்டினாள் என்று ஒரு காட்சி நினைவுக்கு வரும். கண்ணதாசன்  இதை அவள் ஒரு தொடர்கதை படத்தில் வரும் அடி என்னடி உலகம் என்ற பாடலில் (இசை எம் எஸ்  விஸ்வநாதன், பாடியவர் எல் ஆர் ஈஸ்வரி ) https://www.youtube.com/watch?v=MRoZCJPn3oA 

    கோடு போட்டு நிற்கச் சொன்னால் சீதை  நிற்கவில்லையே

    சீதை அன்று நின்றிருந்தால் இராமன் கதை இல்லையே

    என்று எழுதியிருந்தார். இப்படி ஒரு நிகழ்வை வால்மீகியும் சொல்லவில்லை கம்பனும் சொல்லவில்லை என்று படித்திருக்கிறேன் . இதை முதலில் சொன்னது யாரென்று தெரியவில்லை. ஆனால் இன்றும் மீறக்கூடாத விதிகள் / மரபுகள் என்பதை லக்ஷ்மண ரேகா என்றே  குறிப்பிடுகிறார்கள்.

    திரைப்பாடல்களில் ‘இந்த விதிகளை மாற்றுங்கள் ‘ என்ற கோஷம் காதலின் தடைகள் என்ன என்று சொல்லும்போதும் கம்யூனிசம் பேசும்போதும் வரும்.

    வைரமுத்து கண்ணுக்குள் நூறு நிலவா என்ற பாடலில் (படம் : வேதம் புதிது, பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா, இசை : தேவேந்திரன்) இதை ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் விவாதம் போல் எழுதுகிறார். https://www.youtube.com/watch?v=NHUF4F6UatI

    ஆண் : தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்

    கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா

    பெண் : கொல்லை துளசி எல்லை கடந்தால்

    வேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமா

    சாஸ்திரம் போட்ட வட்டங்களை தாண்டி வரத்தயங்கும் ஒரு பெண்ணின் குழப்பம் சொல்லும் வரிகள். ஆனால் காதல் பற்றிய இந்த வட்டங்களை போட்டது சாஸ்திரமில்லை, மனிதர்கள்தான். கண்ணதாசன் பாலிருக்கும் பழமிருக்கும் என்ற பாடலில் (படம் பாவ மன்னிப்பு இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் பி சுசீலா) https://www.youtube.com/watch?v=xqofnfgytws

    வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே,

    அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே..

    என்று தெளிவாக சொல்கிறார்.

    வைரமுத்து மனிதர்கள் போடும் இந்த விதிகள் மாறும் என்று வெள்ளைப்புறா ஒன்று ஏங்குது (படம் புதுக்கவிதை இசை இளையராஜா பாடியவர்கள் கே ஜே ஜேசுதாஸ் எஸ் ஜானகி ) என்ற பாடலில் சொல்கிறார் https://www.youtube.com/watch?v=4zRmprbzkJg

    வரையறைகளை மாற்றும்போது

    தலைமுறைகளும் மாறுமே

    இதை cause – effect மாற்றி தலைமுறைகள் மாறும்போது வரையறைகளும் மாறுமே என்று படித்தாலும் அர்த்தம் வருவது போல் இருக்கிறது. நாம் கண்கூடாக பார்க்கும் உண்மை. காலம் மாறும்போது சில விதிகளும் மரபுகளும் மாறிக்கொண்டே தான் இருக்கின்றன. நல்லது, கெட்டது, தீங்கற்றது, தீங்கானது, ஏற்புடையது , ஏற்புடையதல்லாதது, எது taboo , எது விலக்கப்பட்ட கனி  என்பதெல்லாம் வெவ்வேறு காலக்கட்டங்களில் மாறிவிடுகிறது.. ஏன்? கண்ணதாசன் அடி என்னடி உலகம் பாடலில் சொல்லும் காரணம்

    கோடு, வட்டம் என்பதெல்லாம், கடவுள் போட்டதல்லடி;

    கொள்ளும் போது கொள்ளு, தாண்டிச் செல்லும் போது செல்லடி

    வைரமுத்துவும் இதையே சொல்கிறார் கண்ணுக்குள் நூறு நிலவா பாடலில்

    ஆண் : வானுக்கு எல்லை யார் போட்டது

    வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது

    நமக்கு நாமே போட்டுக்கொண்ட வேலி. மெல்லிய நூலால் ஆனது. அதை அவ்வப்போது மாற்றிக்கட்டலாம். ஆனால் அறுந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்

    மோகனகிருஷ்ணன்

    169/365

     
    • kamala chandramani 10:18 am on May 19, 2013 Permalink | Reply

      நாம் இருக்கும் வட்டத்திலிருந்து வெளிவரவும், கோடுகளைத் தாண்டாமல் இருக்கவும் கற்றுக் கொள்வது எத்தனை கஷ்டமானது!? ‘அறுந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’—ஆறுதல் தருவது இசை என்பது நிஜம்தான்.

    • amas32 11:26 am on May 19, 2013 Permalink | Reply

      கால ஓட்டத்தில் கண்ணுக்கேத் தெரியாமல் போய்விடுகின்றன பல கோடுகள். இருக்கோ இல்லையோ என்ற நிலையில் சில கோடுகள் உள்ளன! வலுவாகக் கிழித்தால் முழு பலத்துடன் அழித்துவிட்டுப் போய்விடுகின்றனர் இன்றைய இளைஞர்கள். அதனால் மெல்லிய கோடே சிறந்தது. சற்றே நகத்தலாம், சிறிது வடிவத்தை மாற்றலாம் அனால் ஒரு கோட்டிற்குள் வாழும் நெறியான வாழ்வை இன்னும் சில் தலைமுறைகளுக்கு இந்த முறையில் வாழவைக்கலாம்.

      amas32

    • Saba-Thambi 6:35 pm on May 20, 2013 Permalink | Reply

      சிலதருணங்களில் கோடு என்பதற்கு பதிலாக ‘படி’ என்றசொல் உபயோகிகப்படுகிறது
      உதாரணம்: ” படி தாண்டாப் பத்தினி”

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel