Updates from February, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • mokrish 12:24 pm on February 2, 2013 Permalink | Reply  

    கொஞ்சம் கனவு கொஞ்சம் நிஜம் 

    நண்பர் ராகவன் கன்னத்திலே கன்னமிட்ட ஒரு பதிவில் பூஞ்சிட்டு கன்னங்கள் என்ற பாடலை குறிப்பிட்டிருந்தார். அற்புதமான பாடல். இளவயதில் கேட்டபோது என்னை குழப்பிய பாடல் வரிகள் அமைப்பு. பின்னர் கண்ணதாசனை கூர்ந்து ரசிக்க ஆரம்பித்தவுடன் சட்டென்று புரிந்த மயக்கும் வரிகள். (பரவாயில்லை. பள்ளியில் மனப்பாடம் செய்த Wordsworth ன் Daffodils ல் வந்த pensive mood அப்போது புரியவில்லை. பின்னர் புரிந்து வியந்த வரிகள்.)

    எனக்கு இந்த பாடலை கேட்கும்போது ஏனோ Corporate பட்ஜெட் மீட்டிங் நினைவுக்கு வருகிறது. Reality Check (தமிழில் எப்படி சொல்ல வேண்டும்?) என்ற வார்த்தையை அடிக்கடி சொல்லுவார்கள். உயரே கனவுடன் பறக்கும் ஒருவரை தரைக்கு கொண்டு வரும் செயல். கனவுகளை முடிந்தவரை நிஜத்துக்கு பக்கத்தில் வைக்கும் முயற்சி. கண்ணதாசன் அதை துலாபாரம் பாடலில் கொண்டுவந்திருக்கிறார். http://www.youtube.com/watch?v=zsBG59Y0k04

    பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
    பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே

    என்று தாய் சொன்னவுடன் தந்தை ‘செல்லக்குழந்தையே இது கனவு நிஜம் வேறு’ என்று சொல்லும்

    பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
    ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
    இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே

    வரிகள். தாய் மனம் தளராமல் குழந்தைக்கு சோறுடன் கனவை ஊட்டுகிறாள். அவள் திருமணத்திற்கு முன் செல்வங்களுடன் வாழ்ந்தவள்

    செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்கு
    பொன்வண்ண கிண்ணத்தில் பால் கஞ்சி

    என்று இல்லாத பொன் கிண்ணத்து உணவை பாட தகப்பன் விடாமல் உண்மை விளம்பியாய் தன் ஏழ்மை நிலையை

    கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு
    கலயங்கள் ஆடுது சோறின்றி
    இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி

    என்று வலியுடன் சொல்வான். தாயும் உண்மை நிலை அறியாதவள் இல்லை

    கண்ணுறங்கு கண்ணுறங்கு
    பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
    கண்ணுறங்கு கண்ணுறங்கு

    என்று நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் சொல்கிறாள். தொடர்ந்து மாணிக்க தேர் போல மயிட்டு பொட்டிட்டு விளையாடும் செல்வங்களை பாடும் தாயும் கண்ணாடி வளையலும் காகித பூக்களும் தான் நிரந்தரம் என்று வாதிடும் தகப்பனும் என்று விளையாடும் வரிகள் திரைக்கதையும் காட்சியமைப்பும் சொல்ல முடியாத உணர்வுகளை பதிவு செய்யும் வித்தை.

    இன்னொரு பாடலிலும் இந்த ரியாலிட்டி செக் மாயம் செய்கிறார். தரிசனம் படத்தில் ஒரு பாடலில் காதலுடன் பாடும் பெண்ணை தடுத்து ஆண் பாடும் பாடல் http://www.youtube.com/watch?v=8d_xbq3xFtE

    இது மாலை நேரத்து மயக்கம் பூமாலை போல் உடல் மணக்கும்

    இதழ் மேலே இதழ் மோதும் அந்த இன்பம் தோன்றுது எனக்கும்

    என்று காதல் பற்றி அவள் சொன்னவுடன் அவளை யதார்த்த உலகுக்கு கொண்டு வர ஆண்

    இது காலதேவனின் கலக்கம் இதைக் காதல் என்பது பழக்கம்

    ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பெறப் போகும் துன்பத்தின் துவக்கம்

    என்கிறான். காதலி ரொமான்டிக்காக ‘பனியும் நிலவும் பொழியும் நேரம் மடியில் சாய்ந்தாலென்ன’ என்று கேட்டால் இவன் இதையெல்லாம் உலகம் மறந்து உண்மை உணர வேண்டும் என்று பாடுகிறான். இது ஓட்டை வீடு இதற்குள்ளே ஆசையென்ன என்று கேட்கிறான். பெண் சலிப்புடன்

    முனிவன் மனமும் மயங்கும் பூமி மோக வாசல் தானே

    தினம் மூடி மூடிஒடினாலும் தேடும் வாசல்தானே

    என்றால் இவன் பாயில் படுத்து நோயில் விழுந்தால் காதல் கானல் நீரே என்று துறவறம் பேசுகிறான். மாறி மாறி வெவ்வேறு உணர்வுகளை பதிவு செய்யும் இந்த இரு பாடல்களும் சரியான ரியாலிட்டி check.

    மோகன கிருஷ்ணன்

    063/365

     
    • Rajnirams 9:52 am on February 4, 2013 Permalink | Reply

      இரண்டு பாடல்களில் உள்ள சோகத்தையும் கசக்கி பிழிந்து விட்டீர்கள்.அருமை.
      தரிசனம் பாடலில் இது ஓட்டை வீடு என்று சொல்லிவிட்டு ஒன்பது வாசலை மறந்து
      விட்டீர்களா,அருமையான வரி. இதை வாலியும் கலியுக கண்ணனில் “எட்டடுக்கு கட்டிடத்தில் ஒன்பது ஓட்டை இதில் நல்ல ரத்தம் உள்ள வரை எத்தனை சேட்டை”என்று
      கலக்கி இருப்பார்..இதே போன்ற ஒரு சோக பாடல் மன்னவன் வந்தானடி படத்தில்
      வரும் “சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில் -ஏழ்மை துன்பத்தில் ஆடுதம்மா இங்கே”.
      இன்னொரு பாடல்-காலம் நமக்கு தோழன்,காற்றும் மழையும் நண்பன் என்ற பெத்தமனம் பித்து படப் பாடல் என்று நினைக்கிறேன்.நன்றி.

    • amas32 11:59 am on February 5, 2013 Permalink | Reply

      Glass is half empty/half full கதை தான். பூஞ்சிட்டு கன்னங்கள் என்னை ரொம்ப உருக்கும் பாடல். ஏழ்மை ஏன் மனதை எப்பொழுதும் வருத்தும்.”கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை” அந்தப் பாடல் இந்த தத்துவத்தைத் தான் பிரதிபலிக்கும். இதேப் பாடல் சோக கீதமாகவும் பின்னாடி வரும். நடிகை சாரதா ஏற்கனவே ஒல்லி தேகம். இந்தப் படத்திற்காக இன்னும் இளைத்ததாகச் சொல்வார்கள்.

      அடுத்தப் பாடல் நான் அவ்வளவாகக் கேட்டதில்லை. அனால் சிறந்த தத்துவப் பாடல்!

      amas32

  • G.Ra ஜிரா 11:22 am on January 14, 2013 Permalink | Reply
    Tags: பொங்கல், Pongal   

    பொங்கலோ பொங்கல் 

    நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் மற்றும் தைப்புத்தாண்டு வாழ்த்துகள். இந்தத் திருநாள் அனைவருக்கும் நல்ல வாழ்க்கையையும் அறிவையும் அன்பையும் அருளையும் கொடுக்கட்டும்.

    ”ஏன் உழவு செய்கின்றீர்கள்? விட்டுவிட்டு வாருங்கள்” என்று ஒரு பிரதமரே சொல்லும் அவல நிலையில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதும் அதன் பெருமையை புரிந்து கொள்வதும் மிகமிகத் தேவையாகிறது.

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார். அந்த உழுதுண்டு வாழ்வோரே தொழுதுண்டு கொண்டாடும் பண்டிகைதான் தைத்திருநாள். தை பிறப்பு என்று சிறப்பாகப் போற்றப்படும் பண்டிகை இது. இந்த நன்னாளில் வேளாண்மை மீண்டும் சிறப்புற ஆண்டவனை வணங்குகிறேன்.

    இந்தப் பொங்கல் பண்டிகையின் பெருமையைச் சொல்லும் பாடல்கள் திரைப்படங்களில் நிறைய உள்ளன. ஆனால் அவைகளில் எல்லாம் ஆகச் சிறந்த பாடலாக நான் கருதுவது மருதகாசி அவர்கள் எழுதிய தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பாடல்தான்.

    தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்
    தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
    தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
    ஆடியிலே வெதை வெதைச்சோம் தங்கமே தங்கம்
    ஐப்பசியில் களையெடுத்தோம் தங்கமே தங்கம்
    கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
    கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
    கழனியெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம்
    படம் – தை பிறந்தால் வழி பிறக்கும்
    பாடியவர்கள் – டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் பி.லீலா
    பாடல் – ஏ.மருதகாசி
    இசை – கே.வி.மகாதேவன்

    அன்றன்று வேட்டையாடி அன்றன்று உண்ட மனிதன் நாகரிகம் கொண்டதற்கு அடையாளம் வேளாண்மைதான். ஆறு மாத உழைப்பும் ஆறு மாத ஓய்வுமாய் மனிதனை மாற்றியது வேளாண்மைதான். ஆகையால்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பழமொழியே உண்டானது.

    பொங்கல் என்றாலே கரும்பை மறக்க முடியுமா? நீரை மொடாக் குடியாக குடித்து வளர்ந்து அந்த நீரிலே இனிப்பு கலந்து கொடுக்கும் புல்லே கரும்பு. அந்தக் கரும்புப்புல் காற்றில் லேசாக ஆடுவதைப் பார்க்கிறார் கவியரசர் கண்ணதாசன். கரும்பா பெண் என்னும் அரும்பா என்னும் ஐயத்தில் இப்படியொரு பாட்டை எழுதுகிறார். காதலும் கரும்பும் இனிப்பதால் ஒன்று. இரண்டும் பழசாக ஆக போதை கூட்டும் என்று தெரிந்து எழுதுகிறார்.

    தை மாதப் பொங்கலுக்கு
    தாய் தந்த செங்கரும்பே
    தள்ளாடி வாடி தங்கம் போலே
    மையாடும் பூவிழியில்
    மானாடும் நாடகத்தை
    மயங்கி மயங்கி ரசிக்க வேண்டும் வாடி
    நீ என்னை தேடுவதும்
    காணாமல் வாடுவதும்
    கடவுள் தந்த காதலடி வாடி
    படம் – நிலவே நீ சாட்சி
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    பாடல் – கவியரசர் கண்ணதாசன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

    தை பிறந்த வேளையில் எல்லோர் வீட்டிலும் புதுப்பானை இருக்கிறதா? எல்லோர் வீட்டிலும் புதுநெல் இருக்கிறதா? புத்தம் புதிதாய் கறந்த பாலும் அந்தப் பாலிலிருந்து எடுத்த நெய்யும் இருக்கிறதா? புதுக்கரும்பை ஆலையில் ஆட்டிச் சாறுபிழிந்து காய்ச்சி எடுத்த வெல்லம் இருக்கிறதா? இவையெல்லாம் இல்லாத ஏழைகளும் நாட்டில் உண்டு. அவர்களுக்குப் பொங்கல் இல்லையா?

    இருக்கிறது என்கிறார் கவியரசர் கண்ணதாசன். குடிசை வீட்டுக் கோமதகமான குழந்தையின் கன்னத்து முத்தத்து இனிப்பை விடவா சர்க்கரைப் பொங்கலும் செங்கரும்பும் இனித்து விடும்?

    பூஞ்சிட்டுக் கன்னங்கள்
    பொன்மணி தீபத்தில்
    பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
    பொங்கல் பிறந்தாலும்
    தீபம் எரிந்தாலும்
    ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
    படம் – துலாபாரம்
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா மற்றும் ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜன்
    பாடல் – கவியரசர் கண்ணதாசன்
    இசை – டி.தேவராஜன்

    ஏழைகள் கண்ணீரையெல்லாம் துடைக்கும் பொங்கல் பண்டிகைகள் இனிமே ஒவ்வொரு ஆண்டும் வர வேண்டும் என்று வேண்டும்.

    வளமையின் பண்டிகையான பொங்கலின் மற்றொரு வழமை மஞ்சளாகும். கொத்து மஞ்சளை புத்தம் புதிதாய் பறித்து மங்கலப் பொருளாய் வைப்பார்கள். அந்த மஞ்சளையே காய வைத்துப் பொடியாக்கிப் பயன்படுத்துவதும் உண்டு. மஞ்சள் மங்கலமாவது மங்கையில் மனதுக்கினிய வாழ்வில்தானே. அதை நினைத்துதான் காதலில் பொங்கல் வைக்கிறார் வாலி.

    பொங்கலு பொங்கலு வெக்க
    மஞ்சள மஞ்சள எடு
    தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
    புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி
    நம் கட்சி நம் கட்சி நம் கட்சி
    பூ பூக்கும் மாசம் தை மாசம்
    ஊரெங்கும் வீசும் பூவாசம்
    படம் – வருஷம் 16
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    பாடல் – வாலிபக் கவிஞர் வாலி
    இசை – இசைஞானி இளையராஜா

    எப்படியான சூழ்நிலையிலும் பொங்கல் கொண்டாட்டம் மகிழ்ச்சியைப் பெருக்கும். அந்த மகிழ்ச்சியை அப்படியே வாலி அவர்கள் வரிகளில் வார்த்துக் கொடுக்க, அத்தோடு இசையைக் கோர்த்துக் கொடுத்திருக்கிறார் இளையராஜா.

    தைப் பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
    வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியைப் போற்றிச் சொல்லடியோ
    இந்தப் பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் தெய்வமடி
    இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
    படம் – மகாநதி
    பாடியவர் – கே.எஸ்.சித்ரா
    பாடல் – வாலிபக் கவிஞர் வாலி
    இசை – இசைஞானி இளையராஜா

    இப்படி உழவும் தொழிலும் சிறந்த வேளாண் பெருமக்களின் பொங்கல் திருநாள் இன்றும் இருக்கிறது. எப்படி இருக்கிறது தெரியுமா?

    ஆடுங்கடா என்னச் சுத்தி
    நான் ஐயனாரு வெட்டுகத்தி
    பாடப் போறேன் என்னப் பத்தி
    கேளுங்கடா வாயப் பொத்தி
    கெடா வெட்டிப் பொங்கல் வெச்சா காளியாத்தா பொங்கலடா
    துள்ளிக்கிட்டு பொங்கல் வெச்சா ஜல்லிக்கட்டு பொங்கலடா
    போக்கிரிப் பொங்கல் போக்கிரிப் பொங்கல்
    படம் – போக்கிரி
    பாடியவர் – நவீன்
    பாடல் – கபிலன்
    இசை – மணி சர்மா

    இப்பிடிப் போக்கிரியான பொங்கல் மீண்டும் மறுவாழ்வு பெற்று வேளாண்மை சிறந்து மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தமிழகம் உருவாக இறைவனை வேண்டுகிறேன்.

    பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!

    அன்புடன்,
    ஜிரா

    044/365

     
    • kamala chandramani 12:16 pm on January 14, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு ராகவன். உழவர்கள் வாழ்வு மலர அரசாங்கம் நிறைய செய்யவேண்டும் என்று இறைவனை வணங்குகிறேன். சினிமாப் பாடல்களுடன் இலக்கியத்தைக் கலந்து மிக நல்ல பதிவுகளைத் தரும் உங்களுக்கும், திரு. சொக்கன், மோக்ரீஷ் அனைவருக்கும் நன்றி. பொங்கல் நல் வாழ்த்துகள்.

      • Niranjan 8:07 pm on January 14, 2013 Permalink | Reply

        அருமையான பதிவு 🙂 🙂 பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!

        • GiRa ஜிரா 8:52 pm on January 14, 2013 Permalink

          நன்றி நிரஞ்சன். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 🙂

      • amas32 8:38 pm on January 14, 2013 Permalink | Reply

        //பூஞ்சிட்டுக் கன்னங்கள்
        பொன்மணி தீபத்தில்
        பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
        பொங்கல் பிறந்தாலும்
        தீபம் எரிந்தாலும்
        ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே/

        சாரதா அவர்களின் நடிப்பு அப்படியே கண் முன்னே நிற்கிறது. இதுவே வார்த்தைகள் சிறிது மாறி சோக கீதமாகவும் வரும்.

        வாழ்க்கை ஒரு வட்டம் என்பது உண்மையானால் வேளாண்மை மீண்டும் அதற்குண்டான மேன்மை நிலையை நிச்சயம் அடையும்!

        amas32

        • GiRa ஜிரா 8:53 pm on January 14, 2013 Permalink

          அருமையான பாடல் அது. சாரதாவுக்கு ஊர்வசி பட்டம் வாங்கிக் கொடுத்த படமல்லவா. மலையாளம் தொடங்கி தமிழ், தெலுங்கு என்று இந்தி வரைக்கும் சென்ற படமாயிற்றே.

      • GiRa ஜிரா 8:52 pm on January 14, 2013 Permalink | Reply

        இனிய பொங்கல் வாழ்த்துகள் அம்மா.

        உண்மைதான். உழவருக்கு அரசாங்கம் ஆதரவு தெரிவிக்காமல் போகுமானால் இறைவனே இறங்கி வந்து ஆதரவு தெரிவிக்க வேண்டி வரும். அன்று அரசாங்கமும் அதற்கு ஆதரவாக இருந்தவர்களும் தொழுதுண்டு வாழ வேண்டியவர்கள் ஆவார்கள்.

    • Rajan D. R 11:50 am on January 18, 2013 Permalink | Reply

      மசக்கைக்கு முன்னும் பின்னும் கூட புளிப்பு காரம் இவற்றின் மீது பெண்களுக்கு ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கின்றது. பானிபூரி மீது அவர்கள் கொண்டிருக்கும் மோகத்தை உளவியல் மற்றும் பரினாம வளர்ச்சி பார்வையில் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கின்றது

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel