Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • என். சொக்கன் 10:50 pm on November 18, 2013 Permalink | Reply  

    உத்தரவின்றி உள்ளே வா 

    • படம்: ஜில்லுன்னு ஒரு காதல்
    • பாடல்: முன்பே வா
    • எழுதியவர்: வாலி
    • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
    • பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்
    • Link: http://www.youtube.com/watch?v=OHA_ATdgw_g

    நீ நீ மழையில் ஆட,

    நான் நான் நனைந்தே வாட,

    என் நாளத்தில் உன் ரத்தம்,

    நாடிக்குள் உன் சத்தம்!

    பள்ளியில் தமிழ் மீடியத்தில் அறிவியல் (அல்லது உயிரியல்) படித்தவர்களுக்கு இந்த வரிகளைப் படித்தவுடன் சட்டென்று அந்த ‘நாளம்’ என்ற சொல்லில் மனம் சென்று நிற்கும்.

    ’ரத்தக் குழாய்’ என்று நாம் பரவலாகச் சொல்லும் அதே வார்த்தைதான். ’ரத்த நாளம்’ என்று சொன்னால் இன்னும் அழகாக இருக்கிறது. நாளத்திற்கும் குழாய்க்கும் ஏதேனும் நுட்பமான வேறுபாடு உண்டா என்று தெரியவில்லை.

    அப்புறம் அந்த நாளமில்லாச் சுரப்பிகள்? தமனி? சிரை? தந்துகி? இந்த வார்த்தைகளையெல்லாம் கேட்கும்போது, மறுபடி ஒன்பதாங்கிளாஸுக்குத் திரும்பிவிடமாட்டோமா என்றிருக்கிறது!

    விஷயத்துக்கு வருவோம். நம் உடம்பு நிறைய இருக்கும் ரத்த நாளங்கள் பேச்சிலோ, சினிமாப் பாடல்களிலோ அதிகம் வருவதில்லை என்று நினைத்தேன். கொஞ்சம் தேடினால் ஒரு சில நல்ல உதாரணங்கள் சிக்கின:

    உயிர் உருகிய அந்த நாள் சுகம்,

    அதை நினைக்கையில்,

    ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் (வாலி)

    ***

    நாளங்கள் ஊடே

    உனதன்பின் பெருவெள்ளம் (மதன் கார்க்கி)

    ***

    ரத்த நாளங்களில் போடும் தாளங்களில்

    புதுத் தாலாட்டுதான் பாடுமா? (பொன்னியின் செல்வன்)

    ***

    மேளங்கள் முழங்குதுங்க, ரத்த

    நாளங்கள் துடிக்குதுங்க (டி. ராஜேந்தர்)

    ***

    ஒரே ஒரு ஆச்சர்யம், ”அறிவியல் கவிஞர்” வைரமுத்து இந்தச் சொல்லை இதுவரை பயன்படுத்தவில்லையோ?

    ***

    என். சொக்கன் …

    18 11 2013

    351/365

     

     
    • Uma Chelvan 6:52 am on November 19, 2013 Permalink | Reply

      நாளமில்லாச் சுரப்பிகள்……..endocrine glands ….that’s what I taught my students today. What a coincident….

      அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை!!
      அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும் -அது போல்
      இந்த நாள் வரும் உயிர் உருகிய அந்த நாள் சுகம். – அதை நினைக்கையில்
      ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் ………ஒரு நிமிஷம் கூட என்னை பிரியவில்லை

      மிக மிக அருமையான பாடல். இதை தான் முதல் பாடலாக நீங்க சொல்லி இருக்கீங்க!!! still I want to post this song again !!!

    • amas32 8:37 pm on November 19, 2013 Permalink | Reply

      எவ்வளவு ஆராய்ச்சிப் பண்ணியிருக்கீங்க ஒரு பதிவுக்கு! வைரமுத்து இந்த சொல்லை பயன்படுத்தவில்லை என்னும் அளவுக்கு research!

      //என் நாளத்தில் உன் ரத்தம்,// very romantic!

      ரொம்பப் பிடிச்சிருக்கு இந்த போஸ்ட் 🙂

      amas32

    • rajinirams 11:28 am on November 20, 2013 Permalink | Reply

      நல்ல பதிவு. என்ன அருமையான வாலியின் வரிகள் -உயிர் உருகிய அந்த நாள் சுகம்,அதை நினைக்கையில்,ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்,நீங்கள் சொன்னது போல வைரமுத்து அந்த வார்த்தையை உபயோகிக்காதது ஆச்சர்யமே.

    • நவநீதன் 9:34 pm on January 29, 2014 Permalink | Reply

      ”வந்து தூறல் போடு… இல்லை சாரல் போடு… எந்தன் நாளம் நனையட்டுமே…”

      வைரமுத்து

      படம்: க.கொ.க.கொ
      பாடல்: ஸ்மை யாயி..

  • என். சொக்கன் 10:53 pm on November 16, 2013 Permalink | Reply  

    யாவும் நீ 

    • படம்: கரகாட்டக்காரன்
    • பாடல்: மாரியம்மா, மாரியம்மா
    • எழுதியவர்: கங்கை அமரன்
    • இசை: இளையராஜா
    • பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா
    • Link: http://www.youtube.com/watch?v=tOUyOklDqkY

    மண்ணுக்குள் நீ நல்ல நீரம்மா,

    காத்தும், கனலும் நீயம்மா,

    வானத்தப் போல் நின்னு பாரம்மா,

    வந்தேன் தேடி நானம்மா!

    நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் என்கிற ஐம்பூதங்களும் நீயாக இருக்கிறாய் என்று பாடுவது பக்தி இலக்கியத்தில் அடிக்கடி வெளிப்படும் அம்சங்களில் ஒன்று.

    உதாரணமாக, ‘நிலம், நீரொடு ஆகாசம், அனல், கால் ஆகி நின்று’ என்று சிவனைக் குறிப்பிடுவார் திருஞானசம்பந்தர். ’நிலம், கால், தீ, நீர், விண் பூதம் ஐந்தாய்’ என்று பெருமாளை அழைப்பார் திருமங்கையாழ்வார். இப்படி இன்னும் ஏராளமான உதாரணங்களைச் சொல்லமுடியும்.

    அதே மரபை மாரியம்மனுக்கும் எளிய சொற்களில் பொருத்தி சினிமாப் பாடலாகத் தருகிறார் கங்கை அமரன். ’மண் தொடங்கி விண்வரை அனைத்தும் நீயே’ என்று அந்தக் கிராமத்துக் காதலர்கள் அவளது கருணையைக் கோரி நிற்கின்றனர்.

    இன்னொரு கிராமத்துப் பாட்டில் வாலியும் இதே மரபைப் பின்பற்றி எழுதியிருப்பார், அங்கேயும் போற்றப்படுகிறவள் தேரில் உலா வரும் கருமாரி, மகமாயி, உமைதான்!

    நீர், வானம், நிலம், காற்று, நெருப்பான ஐம்பூதம்

    உனதாணைதனை ஏற்றுப் பணியாற்றுதே,

    பார்போற்றும் தேவாரம், ஆழ்வார்கள் தமிழாரம்,

    இவை யாவும் எழிலே உன் பதம் போற்றுதே!

    ***
    என். சொக்கன் …

    16 11 2013

    349/365

     
    • Uma Chelvan 4:03 am on November 17, 2013 Permalink | Reply

      எங்கும் அவள், எதிலும் அவள் உமையவள் !!!

      மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே!
      குழலும் யாழ் இசையும் கொஞ்சும் மொழி எல்லாம் உன் குரல் வண்ணமே !

    • amas32 9:31 pm on November 17, 2013 Permalink | Reply

      ஐம்பூதங்களிலும் நீயே உறைகிறாய் என்ற கங்கை அமரனின் பாடல் வரிகள் போற்றிப் பாடப்படும் அம்மனைப் போல் எளிமை நிறைந்தவை.

      நாலே வரியில் வாலி சொல்லும் கருத்தும் அற்புதம். அமரன் சொன்னதை தான் சொல்கிறார் ஆனால் இன்னும் கொஞ்சம் high funda வாக உள்ளது.

      இரு பாடல்களும் அருமை!

      amas32

  • G.Ra ஜிரா 11:36 am on June 19, 2013 Permalink | Reply  

    திருப்புகழ்! 

    திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
    எதிர்ப்புகளை முருகா, உன் வேல் தடுக்கும்
    முருகா…… உன் வேல் தடுக்கும்!

    பூவை செங்குட்டுவன் எழுதிய அற்புதமான பாடல் வரிகள் இவை. கௌரி கல்யாணம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது.

    திருப்புகழின் திருப்புகழை இதை விட எளிமையாகச் சொல்ல முடியுமா என்று நம்மையும் சிந்திக்க வைக்கும் வரிகள் இவை.

    திருப்புகழுக்கு அப்படி என்ன பெருமை? அதைப் புரிந்து கொள்ள சிலபல தகவல்களை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    தமிழுக்குக் கிடைத்த அற்புத மாமணி அருணகிரிநாதர். முருகன் திருவருளால் அருணகிரியின் வாக்கில் வந்த பாடல்கள்தான் திருப்புகழ் என்று தொகுக்கப்பட்டன. திருப்புகழ் என்ற பெயரைப் பின்னால் யாரும் வைக்கவில்லை. அருணகிரியே ஒரு பாடலில் திருப்புகழ் என்று குறிப்பிடுகிறார்.

    பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
    பட்சியெனும் உக்ர துரகமும் நீபப்
    பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
    பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
    திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
    சிற்றடியு முற்றிய பனிருதோளும்
    செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
    செப்பென எனக்கருள்கை மறவேனே

    குற்றமற்ற மணிகள் பொருந்திய பொன்னணிகளை அணிந்து கொண்டு அழகு நடை போடும் மாமயிலையும்,
    கடம்ப மலர் மாலையையும்,
    கிரவுஞ்ச மலையானது மறைந்து போகும் படி திருக்கையால் ஏவித் துளைத்த வேலையும்,
    எட்டுத் திசையும் கிடுகிடுக்க வரும் சேவலையும்,
    அருள் தருகின்ற சிற்றடிகளையும்,
    பன்னிரண்டு தோள்களையும்,
    இருந்து அருள் செய்யும் ஒவ்வொரு திருப்பதிகளையும் வைத்து உயர்ந்த வகையில் திருப்புகழை உள்ளம் விரும்பிப் பாடு என்று அருள் சொன்ன கருணையை நான் என்றும் மறவேனே!

    ஆக.. இந்தப் பாட்டில் இருந்து தெரிவது என்ன? திருப்புகழ் என்ற பெயரை அருணகிரிநாதர் வைக்கவில்லை. முத்தமிழ்த் தெய்வமான முருகப் பெருமானின் திருவாயால் பெயரிடப்பட்ட நூல் திருப்புகழ் என்ற சிறப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். இன்னும் பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.

    திருப்புகழைப் பாடிய அருணகிரி அந்தப் பாடல்களை ஓலையில் எழுதி வைக்கவில்லை. அவர் பாடிய கோயில்களில் இருக்கும் அன்பர்கள் அந்தப் பாடல்களை ரசித்து எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்த பாடல்கள்தான் இன்று தப்பிப் பிழைத்து நமக்குக் கிடைத்திருக்கின்றன.

    திருப்புகழை அருணகிரி அறிவால் பாடவில்லை. முருகன் அருளால் பாடினார். அதாவது முருகன் அருணகிரியைப் பாட வைத்தான். அந்தப் பாடல்களில் எத்தனையெத்தனை சந்தநயம்! எத்தனை தாள வகைகள் உண்டோ அத்தனையும் திருப்புகழ் பாடல்களில் உள்ளனவாம். அத்தோடு அளவிட முடியாத கவிச்சுவை வேறு.

    அப்படிப்பட்ட திருப்புகழ் பாடல்களை அருணகிரியே ரசித்திருக்கிறார். கேட்டவர்கள் ரசித்ததையும் கண்டிருக்கிறார்.

    பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
    பட்சிந டத்திய குகபூர்வ
    பச்சிம தட்சிண வுத்தர திக்குள
    பத்தர்க ளற்புத மெனவோதுஞ்
    சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
    ருப்புக ழைச்
    சிறி தடியேனுஞ்
    செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
    சித்தவ நுக்ரக மறவேனே

    அடியவர்களுக்கு அருளும் இறைவனே
    ஆடும் மயில் ஏறி விளையாடும் குகனே
    கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
    ஆகிய திசைகளில் உள்ள அன்பர்கள் எல்லாரும்
    அற்புதம் அற்புதம் என்று ரசித்து ஓதுகின்ற
    அழகு கவிநயமும் சந்தநயமும் மிகுந்து இருக்கும்
    திருப்புகழை கொஞ்சமாவது நானும்
    சொல்லும் படி செய்து உலகில் பரவுவதற்கு
    வகை செய்த உன்னருளை மறக்க மாட்டேன் முருகனே!

    இந்த வரிகளிலும் அருணகிரி முருகனுக்கு நன்றி கூறுகிறார். திருப்புகழ் என்ற பெயர் நிலைபெறும் வகையில் இந்தப் பாடலிலும் இடம் பெறுகிறது.

    சரி. திருப்புகழ் பாடல்களிலேயே முதலில் பாடப்பட்டது எந்தப் பாடல் என்று தெரியுமா? எங்கு பாடப்பட்டது என்று தெரியுமா?

    முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற பாடல்தான் முதலில் பாடப்பட்டது. பாடப்பட்ட இடம் திருவண்ணாமலை கோயில்.

    திருப்புகழ் பாடு என்று முருகன் பணித்த பின் “என்ன பாடுவது எப்படிப் பாடுவது” என்று புரியாமல் தவித்த அருணகிரிக்கு “முத்து முத்தாகப் பாடு” என்று முருகனே எடுத்துக் கொடுக்க பாடப்பட்டதுதான் “முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற திருப்புகழ்.

    இதில் முத்து என்பது அருணகிரியைப் பெற்ற அன்னை என்றொரு கருத்தும் உண்டு.

    திரைப்படங்களிலும் திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன. குறிப்பாக அருணகிரிநாதர் திரைப்படத்தில் மூன்று திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன.

    1. முத்தைத் தரு பத்தித் திருநகை
    2. பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
    3. தண்டையணி வெண்டயம் கிண்கிணி சதங்கையும்

    அதற்குப் பல ஆண்டுகள் கழித்து இறையருட் கலைச்செல்வர் இயக்கத்தில் வெளிவந்த “யாமிருக்க பயமேன்” என்ற திரைப்படத்தில் ”பாதிமதி நதி போது மணிசடை” என்ற திருவேரகத்(சுவாமிமலை) திருப்புகழ் மெல்லிசை மன்னர் இசையமைப்பில் வெளிவந்தது. அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜா இசையில் “ஏறுமயில் ஏறிவிளையாடும்” என்ற திருப்புகழ் ”தம்பி பொண்டாட்டி” என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது.

    நாமும் திருப்புகழை ஓதி முருகனருளால் நல்லறிவும் நல்லருளும் பெற்று வளமோடு வாழ்வோம்.

    பதிவில் இடம் பெற்ற திருப்புகழ் பாடல்கள்
    திருப்புகழை/பி.சுசீலா,சூலமங்கலம் ராஜலட்சுமி/கௌரிகல்யாணம்/எம்.எஸ்.வி – http://youtu.be/awxORiSnHig
    முத்தைத்தரு/டி.எம்.சௌந்தரராஜன்/அருணகிரிநாதர்/டி.ஆர்.பாப்பா – http://youtu.be/2vRkCV3symk
    பக்கரை/டி.எம்.சௌந்தரராஜன்/அருணகிரிநாதர்/டி.ஆர்.பாப்பா – http://youtu.be/AfZ3UoT4pFw
    தண்டையணி/டி.எம்.சௌந்தரராஜன்/அருணகிரிநாதர்/டி.ஆர்.பாப்பா – http://youtu.be/QyZi7oEUtGI
    பாதிமதிநதி/வாணி ஜெயராம், எல்.ஆர்.அஞ்சலி/யாமிருக்க பயமேன்/எம்.எஸ்.வி – http://youtu.be/FDMcv6CjglI
    ஏறுமயில்/சுவர்ணலதா,மின்மினி,கல்பனா,பிரசன்னா/தம்பிபொண்டாட்டி/இளையராஜா – http://youtu.be/ju0VhKQHQ3c

    பி.கு. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த “என் வீட்டுத் தோட்டத்தில்” பாடல் “நாதவிந்து கலாதீ நமோநம” என்ற திருப்புகழின் சாயலிலும் “வெற்றிக் கொடி கட்டு” என்ற பாடல் “முத்தைத் தரு பத்தி” என்ற திருப்புகழின் சாயலிலும் வந்துள்ளது.

    அன்புடன்,
    ஜிரா

    200/365

     
    • kamala chandramani 12:14 pm on June 19, 2013 Permalink | Reply

      திருப்புகழ் ஓதுவதன் சிறப்பை அருணகிரிநாதர் திருத்தணிகைத் திருப்புகழில் அருமையாகக் கூறுகிறார்.
      ”சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ் செகுத்தவ ருயிர்க்குஞ் சினமாக,
      சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம்;
      நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும் நிசிக்கருவறுக்கும் பிறவாமல்
      நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும் நிறைப்புக ழுரைக்குஞ் செயல்தாராய்.”

      வள்ளலாரோ”உய்யும் பொருட்டுன் திருப்புகழை உரையே னந்தோ வுரைக்கடங்காய்” எனத் தணிகைச் செஞ்சுடரிடம் வருந்துகிறார். மேலும்,”அருணகிரி பாடும் நின்னருள்தோய் புகழைப் படியேன் பதைத் துருகேன் பணியேன் மனப்பந்தம் எல்லாம் கடியேன் என் செய்வேன் என் காதலனே” என உருகுகிறார். திருப்புகழும் அருட்பாவும் இரு கண்கள்.

    • Arun Rajendran 12:24 pm on June 19, 2013 Permalink | Reply

      ஜிரா சார்,

      அருணகிரிநாதர் காரணப் பெயர் மாதிரி தெரியுதுங்க.. சுருக்கமா ஒரு குறிப்பும் முடிந்தால் கொடுங்க..படிக்கிற ஆர்வத்தத் தூண்டி இருக்கீங்க… திருப்புகழையும் என்னோட அட்டவனைல சேர்த்திக்கிறேன்

      இவண்,
      அருண்

    • amas32 (@amas32) 12:53 pm on June 19, 2013 Permalink | Reply

      //திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். இன்னும் பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.//

      நீங்கள் இங்கே நாலு வரி நோட்டில் இந்த இருநூறு நாட்களில் பதிந்த பாடல்கள் நாளை ஒரு ரெபரன்சுக்கு நிச்சயம் பலருக்கு உதவப் போகிறது.

      உங்கள் டாபிக் ஜிரா! சூப்பர் பதிவு 🙂 அனுபவித்துப் படித்தேன் 🙂 நன்றி.

      amas32

    • rajnirams 10:07 pm on June 19, 2013 Permalink | Reply

      முதலில் உங்களுக்கெல்லாம் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
      சூப்பரான பதிவு. இதுவரை நான் அறியாத அரிய தகவல்கள்.அருணகிரிநாதரின் பெருமைகளையும் திருப்புகழின் சிறப்புகளையும் அருமையாக “சுட்டி”காட்டியதற்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.

  • mokrish 10:25 am on June 15, 2013 Permalink | Reply  

    நல்ல சகுனம் நோக்கிச் செல்லடி! 

    இன்னிக்கு யார் முகத்திலே முழிச்சேனோ தெரியலை எதுவும் சரியா நடக்கலே என்ற புலம்பல்களை நாம் கேட்டிருப்போம். அதே போல் வெளியே கிளம்பும்போது எங்கே போறீங்க என்று யாராவது கேட்டுவிட்டால் அவ்வளவுதான். நாம் நினைத்த காரியம் தடைபடுமோ என்று மனம் சஞ்சலப்படும். பூனை குறுக்கே போவது , காகம் கத்தினால் உறவினர் வருவார்கள் , 13ம் நம்பர் ராசியில்லை, மணியோசை கேட்டால் நல்லது –  இப்படி ஏராளமான நம்பிக்கைகள்.

    வரப்போவதை ஏதோ ஒரு வகையில் அடையாளம் காட்டும் நிகழ்வுகளுக்கு  பொதுப் பெயர் நிமித்தங்கள். Omen என்று பொதுவாகச் சொல்வது நிமித்தம்தான். சகுனம் என்று நாம் உபயோகிக்கும் வார்த்தை இதன் subset தான்.  பறவைகளால் அறியப்படும் நிமித்தங்கள் சகுனம் ஆகும் .One for sorrow, Two for joy,என்ற ஆங்கில நர்சரி ரைம் சொல்வதும் இதுதானோ?

    தசரதன்  மிதிலையில் சில நாட்கள் தங்கி பின்னர் அயோத்திக்குப் புறப்பட்டுச் சென்றான். அப்போது சில தீய நிமித்தங்கள் தோன்றின

    ஏகும் அளவையின் வந்தன.

         வலமும் மயில். இடமும்

    காகம் முதலிய. முந்திய

          தடை செய்வன; கண்டான்;

    நாகம் அனன். ‘இடை இங்கு உளது

          இடையூறு’ என நடவான்;

    மாகம் மணி அணி தேரொடு

           நின்றான். நெறி வந்தான்.

    மயில்கள் இடமிருந்து வலமாகச் சென்றன. முதலில் இது நல்ல நிமித்தம். அடுத்து காகங்கள் வலமிருந்து இடமாகச் சென்றன. இது தீய சகுனமாக இருந்ததால் தசரதன் தயங்கி நின்றான் இதன் பலன் கேட்டு அதன்பின்தான் பயணம் தொடர்கிறான் என்று குறிப்பிடுகிறார் கம்பர்.

    கீதையின் ஆரம்பத்தில் யுத்தம் ஆரம்பிக்குமுன் அர்ஜுனன் பகவானிடம் சொல்கிறான். ‘கெட்ட சகுனங்களைப் பார்க்கிறேன்’ என்று நாம் சொல்வதைத்தான், ‘விபரீதமான நிமித்தங்களைப் பார்க்கிறேன்’என்கிறான்.

    குமரி கோட்டம் என்ற படத்தில் வாலி எழுதிய பாடல் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் டி எம் எஸ், எல் ஆர் ஈஸ்வரி) http://www.youtube.com/watch?v=cHRX3Lhruzg பெண்ணுக்கு இடது கண் துடித்தால் நல்ல சகுனம் என்பதை சொல்கிறார்.

    நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்

    என காதல் தேவதை சொன்னாள்

    என் இடது கண்ணும் துடித்தது

    உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்

    வைரமுத்து முதல்வன் படத்தில் உளுந்து வெதைக்கயிலே என்ற பாடலில் (இசை ஏ ஆர் ரஹ்மான் பாடியவர்கள் ஸ்வர்ணலதா ஸ்ரீநிவாஸ்) நல்ல சகுனங்களை பட்டியல் போடுகிறார்

    https://www.youtube.com/watch?v=5410bc0lD2w

    உளுந்து வெதைக்கயிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே

    நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்

    கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்

    என்னென்ன நல்ல சகுனங்கள் சொல்கிறார் பாருங்கள்

    வெக்கப்படப்பில் கவுளி கத்த வலது பக்கம் கருடன் சுத்த

    தெருவோரம் நெறகுடம் பார்க்கவும் மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே

    ஒரு பூக்காரி எதுக்க வர பசும் பால்மாடு கடக்கிறதே

    இப்படி எல்லா நல்ல சகுனங்களும் சேர்ந்து வந்தால் என்னாகும்? தெய்வம் நாம் வீடு தேடி வந்து வரம் தரும் என்கிறார்.

    இனி என்னாகுமோ ஏதாகுமோ

    இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ

    இந்த சகுனமோ நிமித்தமோ அதுவே பலனை உண்டாக்குவதில்லை. முன்பே நிர்ணயிக்கப்பட்ட நிகழ்வுகளுக்கு indicator  ஆக மட்டுமே இருக்கிறது .சத்ருக்களை வதம் செய்தால் பாவம் வருமே!”என்று அழுத அர்ஜுனனிடம், “இந்த யுத்தத்தில் இவர்களை வதைப்பதாக நான் ஏற்கெனவே தீர்மானம் செய்துவிட்டேன் அதனால் இவர்களைக் கொல்பவன் நான் தான். நீ வெறும் கருவியாக மட்டும்  இரு என்று கண்ணன் சொல்வதும் அதுவே,

    இதையெல்லாம் கிண்டல் செய்பவர்களும் உண்டு. ஆனால் அவர்களும் தங்கள் வாகனங்களின் கூட்டு எண் 8 ஆக இல்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள் – Resale பண்ணமுடியாது சார் அதுனாலதான் என்ற ஏதாவது ஒரு காரணம் சொல்லி.  Faith begins where logic ends!

    மோகனகிருஷ்ணன்

    196/365

     
    • PVR (@to_pvr) 10:52 am on June 15, 2013 Permalink | Reply

      Super

    • GiRa ஜிரா 3:02 pm on June 16, 2013 Permalink | Reply

      சில விஷயங்களை நம்பலாமா கூடாதாங்குறதை முடிவு பண்ணவே முடியிறதில்லை.

      மூட நம்பிக்கைக்குள்ள மூழ்கக் கூடாதுன்னுதான் பாக்குறோம். ஆனா சில நம்பிக்கைகள் தொடர்ந்து வந்துக்கிட்டுதான் இருக்கு.

      கெட்டதை எடுத்துக்குறத விட நல்லத எடுத்துக்கலாம்.

      கடவுளை நம்புறோமே… இதெல்லாம் நம்பலாமான்னும் ஒரு சந்தேகம் வரும். ரொம்பவும் யோசிச்சா கோயிலையும் பூஜையையும் விட கடவுள் பெருசா தெரிவாரு. அதையெல்லாம் விட்டு வெளிய வந்துட்டா உண்மையிலேயே மனம் இறைவனோட ஒன்றும். அந்தச் சூழ்நிலையில்தான் இது போன்ற நம்பிக்கைகளில் இருந்து நம்ம வெளிய வர முடியும்.

  • G.Ra ஜிரா 9:35 am on June 13, 2013 Permalink | Reply  

    அல்லும் மல்லும் 

    காதலில் விழுவது எளிது. ஆனால் காதலைக் கையாள்வது? அது மிகமிகக் கடினம். அப்படிக் காதல் கொண்ட இதயம் ஒன்று காதலனை ஒரு நாள் காணாவிட்டாலும் தவிக்கும். விழிக்கும். என்ன செய்வதென்று துடிக்கும். உயிரை உலுக்கும் அந்தத் துன்பத்தை அந்திமந்தாரை திரைப்படத்துக்காக வைர வரிகளில் கொண்டு வந்துள்ளார் வைரமுத்து.

    ஒரு நாள் ஒரு பொழுது உம் மூஞ்சி காங்காம உசுரே அல்லாடுதே
    மறுநாள் வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே

    உசுரு அல்லாடுதாம். அப்படியென்றால்?

    அல்லாடுகிறான் என்று தெற்கத்திப் பக்கம் சொல்லும் வழக்கம் உண்டு. அதாவது ஒரு நிலையில் இல்லாமல் அங்குமிங்கும் ஓடித் திண்டாடுவதைத்தான் அல்லாடுவது என்பார்கள்.

    இதை வேராக வைத்து வந்ததுதான் அலை. கடலின் மேற்பரப்பில் ஒரு நிலையாக இல்லாமல் நீர் முன்னும் பின்னும் திண்டாடுவதால்தான் அதற்கு அலை என்று பெயர்.

    அதே போல ஒரே இடத்தில் இல்லாமல் பல இடங்களைச் சுற்றினால் அதற்கும் அலைவது என்றுதான் பெயர். இப்படி ஓயாமல் அலைந்தால் என்னவாகும்? ”அலு”ப்பாகும்.

    அல்-அலை-அலு-அலைக்கழி…

    என்ன சொற்களுக்கு இடையே உள்ள தொடர்பை விளக்கினால் தலை சுற்றுகிறதா? வாழ்வியலோடு கலந்து வந்த சொற்கள் அல்லவா. இந்த அல்-லை வைத்தே இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

    சரி. அல்லாடுதலை விட்டு விடுவோம். அடுத்த வரியில் இருக்கும் மல்லாடு என்ற சொல்லையும் சற்று பார்க்கலாம்.

    மல் என்றால் சட்டென்று புரியாது. மல்லுக்கட்டு என்று சொன்னால் உடனே புரிந்து விடும்.

    மல்+கட்டுதல் = மற்கட்டுதல்
    மல்+போர் = மற்போர்

    இப்போது விளக்காமலேயே மல் என்றால் என்னவென்று புரிந்திருக்கும். மல்லாடுதல் என்றால் இன்றைய எளிய தமிழில் சண்டை போடுதல் என்று பொருள்.

    இந்த மல்லாடு என்ற சொல்லை பழைய இலக்கியத்திலும் பார்க்கலாம். அதுவும் திருநாவுக்கரசரே இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.

    ஆறாம் திருமுறையாகத் தொகுக்கப் பட்ட திருக்காளத்தி திருத்தாண்டகத்தில் ஒரு பாடலில் மல்லாடு என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார் அப்பரடிகள்.

    இல்லாடிச் சில்பலிசென் றேற்கின் றான்காண்
    இமையவர்கள் தொழுதிறைஞ்ச இருக்கின்றான்காண்
    வில்லாடி வேடனா யோடி னான்காண்
    வெண்ணூலுஞ் சேர்ந்த அகலத் தான்காண்
    மல்லாடு திரள்தோள்மேல் மழுவா ளன்காண்
    மலைமகள்தன் மணாளன்காண் மகிழ்ந்து முன்னாள்
    கல்லாலின் கீழிருந்த காபா லிகாண்
    காளத்தி யானவனென் கண்ணு ளானே

    காளத்தியப்பரை உள்ளத்தில் நினைக்கிறார் நாவுக்கரசர் பெருமான். மனதில் ஈசன் உயர்வான காட்சி தருகிறான். அப்போது திருநாவுக்கரசர் தான் கண்டதையெல்லாம் சொல்கிறார்.

    வீடு வீடாகச் சென்று மக்கள் கொடுக்கின்ற சிறு உணவை ஏற்கின்றவனைப் பார்
    இமைக்காத அமரர்கள் தொழுது இறைஞ்சி வணங்கும் இறைவனைப் பார்
    வில்லை ஏந்திச் சென்று காட்டில் பன்றியை வேட்டையாடினானைப் பார்
    வெண்ணூல் குறுக்காக ஓடும் அகலமான மார்பினை உடையானைப் பார்
    மல்லாடுவதற்கு ஏற்ற திரண்ட தோள்களின் மேல் மழுவைப் பார்
    மலைகளின் அன்பு மணாளனாக என்றும் மகிழ்ந்திருந்து – முன்பொருமுறை
    ஆலமரத்தின் கீழ் அமர்ந்து அறிவுருத்திய தெற்கத்திக் கடவுளைப் பார்
    காபாலம் ஏந்தி கூத்தாடுகின்றவனாய் திருக்காளத்தி(காளஹஸ்தி) எழுந்தருளியிருக்கும் ஈசனைப் பார்

    இப்போது அல்லாடு மல்லாடு என்ற சொற்களுக்குப் பொருள் விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். மறுபடியும் வைரமுத்து எழுதிய வரிகளைப் படியுங்கள். இப்போது அந்த வரியில் அந்தப் பெயர் தெரியாத காதலி புலம்பும் வலி தெளிவாகப் புரியும்.

    ஒரு நாள் ஒரு பொழுது உம் மூஞ்சி காங்காம உசுரே அல்லாடுதே
    மறுநாள் வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசே மல்லாடுதே

    படம் – அந்திமந்தாரை
    வரிகள் – வைரமுத்து
    பாடியவர் – சுவர்ணலதா
    இசை – ஏ.ஆர்.ரகுமான்
    பாடலின் சுட்டி – http://youtu.be/DlN92ODfcAM

    அன்புடன்,
    ஜிரா

    194/365

     
  • mokrish 12:19 pm on June 9, 2013 Permalink | Reply  

    காற்றில் வரும் கீதமே 

    அந்தி மஞ்சள் மாலை அல்லது இரவு நேரம். தனிமையில் ஒரு பெண். தூரத்திலிருந்து கேட்கும் புல்லாங்குழல் இசை. இதுதான் காட்சி. ஒரு பெண்ணின் மனதில் காற்றில் மிதந்து வரும் இந்த இசை என்னென்ன  பாதிப்புகளை ஏற்படுத்தும்?

    முதலில் பிரிவின் சோகத்தில் இருக்கும் ஒரு பெண். அவள் எதையும் ரசிக்கும் மன நிலையில் இல்லை. அவளுக்கு இந்த இசை இன்பத்தைக் கொடுக்கவில்லை. ஆனால் அவனைப் பிரிந்து வாழ்கின்ற அவளை  அந்தக் குழல் ஓசை மிகவும் துன்புறுத்துகிறது.

    சிறு குழல் ஓசை, செறிதோடி! வேல் கொண்டு

    எறிவது போலும் எனக்கு

    அந்த இசை இனிமையானதுதான். ஆனால் அவனைப் பிரிந்து வாழ்கின்ற என்னை அந்தக் குழல் ஓசை மிகவும் துன்புறுத்துகிறது. யாரோ வேலால் என்னைத் தாக்குவதுபோல் துயரம் தருகிறது என்று அவள் வருந்துகிறாள். (நூல்: ஐந்திணை ஐம்பது பாடியவர்: மாறன் பொறையனார் http://365paa.wordpress.com/2012/02/08/217/)

    இன்னொரு பெண் காதலனை நினைத்து அந்த குழலிசையில் மயங்கிய நிலையில் இருக்கிறாள். ஸ்ரீ கிருஷ்ணகானம் ஊத்துக்காடு ஸ்ரீ வெங்கடசுப்பையர் எழுதிய அலைபாயுதே கண்ணா என்ற பாடலில்  http://www.youtube.com/watch?v=2OTM3yXVvk8 அவள் அலைபாயும்  நிலை சொல்லுகிறார்

    அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே

    உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில் அலைபாயுதே

    இவளும் மாலை என்னை வாட்டுது என்பதை தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே என்று பாடுகிறாள். அவன் இல்லாவிட்டாலும் இந்த இசை அவளுக்கு ஒருவித மயக்கம் கொடுக்கிறது. இது நியாயமா என்று உரிமையுடன் கேட்கிறாள்

    கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே

    கண்கள் சொருகி ஒரு விதமாய் மருகுதே

    அடுத்து பெண். மிகுந்த சோகத்தில் இருக்கிறாள். பிரிவின் கொடுமை தாளாமல் அவள் இருக்கும்போது கேட்கும் குழலிசைப்பற்றி அவள் என்ன சொல்கிறாள்? இந்த இசைதான் என் சோகத்துக்கு மருந்து என்கிறாள். அலைபாயுதே படத்தில் வைரமுத்து எழுதிய எவனோ ஒருவன் வாசிக்கிறான் என்ற பாடலில் (இசை ஏ ஆர் ரஹ்மான் பாடியவர் ஸ்வர்ணலதா). https://www.youtube.com/watch?v=yzIenDQdtVc

    எவனோ ஒருவன் வாசிக்கிறான்…

    இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

    தவம் போல் இருந்து யோசிக்கிறேன்

    அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

    ஸ்ரீ வெங்கடக கவி  கண்கள் சொருகி ஒரு விதமாய் மருகுதே என்றால் வைரமுத்து கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன் என்கிறார். அவர் நிலவு சுடுகிறது என்றால் இவர் இரக்கம் இல்லாத இரவு  உறக்கம் இல்லாத இரவைப்பற்றி சொல்கிறார்.

    உறக்கம் இல்லா முன்னிரவில்

    என் உள் மனதில் ஒரு மாறுதலா

    இரக்கம் இல்லா இரவுகளில்

    இது எவனோ அனுப்பும் ஆறுதலா

    குழல் என்றாலே கண்ணன்தான். கண்ணதாசன் கற்பனை என்ன? அவர்கள் படத்தில் இப்படியோர் தாலாட்டு பாடவா (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் எஸ் ஜானகி ) என்ற பாடலில்https://www.youtube.com/watch?v=-5vHqIKMCpg  அவர் சொல்வதைப்பாருங்கள். அவள் கண்ணனை நினைத்தாள் ஏதோ தலையெழுத்து மன்னனை மணந்தாள். ஆனால் கண்ணன் நினைவு அந்த குழலோசையாக அவளை தொடர்கிறது. கடைசி வரியில் சட்டென்று அவளின் யதார்த்த நிலை – அந்த குழலோசையை தன குழந்தைக்கு தாலாட்டாக்குகிறாள்

    கண்ணனவன் கையினிலே குழலிருந்தது அந்தக்

    கானம்தானே மீராவை கவர்ந்து வந்தது

    இன்றுவரை அந்த குழல் பாடுகின்றது அந்த

    இன்னிசையில் என் குழந்தை தூங்குகின்றது

     ஸ்ரீ வெங்கடக கவி இன்னொரு பாடலில் குழலூதி மனமெல்லாம் கொள்ளைகொண்ட பின்னும் குறை ஏதும் எனக்கேதடி சகியே என்றும் சொல்கிறார் http://mp3take.com/download/24266acbf25b7e07/06-kuzhaloothi-manamellam-www-punchapaadam-com-mp3/

    அதே குழல் இசை. பெண்ணின் context ஐ பொருத்து என்னென்ன பாதிப்புகள் ? ஒரு பெண் வேலால் தாக்குவது போல் இருக்கிறது என்கிறாள். இன்னொரு பெண் கண்கள் சொருகி மயங்குகிறாள். வேறொரு பெண் இதுவே எனக்கு / என் சோகத்துக்கு மருந்து என்கிறாள். ஒரு பெண் தன்  குழந்தையை தாலாட்டுகிறாள். இன்னொரு பெண் இந்த இசை இருந்தால் போதும் எனக்கு குறை ஒன்றும் இல்லை என்கிறாள். வெவ்வேறு பார்வைகள்.

    மோகனகிருஷ்ணன்

    190/365

     
    • Jeyakumar 12:40 pm on June 9, 2013 Permalink | Reply

      நல்ல தொகுப்பு.. காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயோ.. பாடல் எப்பொதைக்குமான எனது ஃபேவரிட்..

    • Kannabiran Ravi Shankar (KRS) 2:19 pm on June 9, 2013 Permalink | Reply

      //குழல் என்றாலே கண்ணன்தான். கண்ணதாசன் கற்பனை என்ன?//

      கண்ணன் என்றாலே ஆண்டாள் தான்? ஆண்டாள் கற்பனை என்ன?:))
      ——–

      குழலை எத்தனையோ பேரு பாடி இருக்காங்க!
      -புல்லாங்குழல் குடுத்த மூங்கில்களே
      -அலை பாயுதே…. வேணு கானமதில்… அலை பாயுதே
      -குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும்…

      -குழல் இனிது யாழ் இனிது என்ப (திருக்குறள்)
      -அவன் வாயில், தீங்குழல் கேளோமோ தோழி? (சிலம்பு)
      ——–

      கண்ணனுக்கு மட்டும் தான் குழலா?
      அட, முருகனே குழல் வாசிச்சானாம்…

      நக்கீரர் பாடுவாரு; குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
      ஆனா குழல் மட்டுமே வாசிக்கலை; முழவு, பல்லியம், Drums, Trumpet – இதெல்லாம் கூட முருகன் வாசிச்சானாம்:)

      முல்லை நிலத்து ஆயர்களின் இசைக்கருவி! அதனால் கண்ணனுக்கு மட்டும் சிறப்பாய் ஆகி வந்தது;
      *குழல் = இயற்கை
      *யாழ் = செயற்கை

      காட்டு மூங்கிலில், வண்டு துளையிட, காற்று அடிச்சி, இயற்கையாய் எழுந்த இசை;
      அதான் குழல் இனிது -ன்னு குழலை முதலில் சொன்னாரு வள்ளுவர்!
      ——–

      //வெவ்வேறு பார்வைகள்//

      Yes! குழல் இசையால் = ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு பார்வை:)
      ஆண்டாளின் பார்வை என்னவோ???

      Too shocking, இம்புட்டு பாடின ஆண்டாள், குழல்-“இசையை” மட்டும் ஏனோ பாடவே இல்ல:)

      • Kannabiran Ravi Shankar (KRS) 2:27 pm on June 9, 2013 Permalink | Reply

        “குழல்” -ன்னா, கூந்தல் -ன்னும் இன்னோரு பொருள் இருக்கு!

        *வாச நறுங் “குழல்” ஆய்ச்சியர் மத்தினால்
        *கொத்தலர் பூங் “குழல்” நப்பின்னை கொங்கை மேல்

        -ன்னு, குழல்-கூந்தலைப் பாடுற ஆண்டாள், குழல்-இசையைப் பற்றி மட்டும் வாயைத் தொறக்கவே மாட்டேங்குறா; ஏனாம்?:)

        போடீ, நீ பாடலீன்னா என்ன?
        ஒனக்குப் பின்னால் வந்த மீரா பாடிட்டுப் போறா; என்ன, அது இந்திக் கவிதை!
        அப்போ தமிழில்??

      • anonymous 2:56 pm on June 9, 2013 Permalink | Reply

        குழல் “இசையை”த் தான் பாடலையே தவிர…
        குழல் “Romance” ஐ பாடுறா, இந்தப் பொண்ணு – That too openly – Dirty Girl:)))

        இவளுக்கு, அவனையே நினைச்சி நினைச்சி, dehydration வந்துருச்சாம்!
        என்ன சொல்லுறா தெரியுமா?

        அவன் ஊதின “குழலில் உள்ள எச்சிலை”, இவ முகம்/ உடம்பில் எல்லாம் பூசச் சொல்லுறா;
        வறண்ட போன தேகம், வளர்ச்சி அடைஞ்சீருமாம்… ச்ச்சீய்ய்ய்:)

        ***நெடு மால் ஊதி வருகின்ற
        குழலின் தொளை வாய் நீர் கொண்டு
        குளிர முகத்துத் தடவீரே***

        அமுத வாயில் ஊறிய,
        குழல் நீர் கொணர்ந்து புலராமே
        பருக்கி இளைப்பை நீக்கீரே
        —–

        அது மட்டுமா?
        அவன் உள்ளாடை கொண்டாந்து, இவளுக்கு வீசினா, அவன் மணமே இவளுக்குத் துளசீ மணமாம்:)

        காரேறு உழக்க உழக்குண்டு (Search for yourself, the meaning of this; me too vekkam:))
        —–

        இந்தக் குழல் பாசுரமே = அவளோட last romance song
        அதுக்கு அப்பறம், அவனைப் பிரியாம வாழுறது எப்படி? -ன்னு, அடுத்த பத்தியில் சொல்லிட்டு…. She stops abruptly!

        ****மருந்தாம் என்று தம் மனத்தே
        வைத்துக் கொண்டு வாழ்வார்கள்,
        அவனைப் – பிரியாது என்றும் இருப்பார்களே!
        அவனைப் – பிரியாது என்றும் இருப்பார்களே!****

        After this…
        செத்துப் போனாளா? “அரங்கனோடு” கலந்தாளா?
        “அவனே” -ன்னு கற்பனையா வாழ்ந்தே வீழ்ந்தாளா??? dunno! end of kothai – kuzhal;

        • Maharajan 8:46 pm on January 6, 2020 Permalink

          செத்துப் போனாளா? “அரங்கனோடு” கலந்தாளா?
          “அவனே” -ன்னு கற்பனையா வாழ்ந்தே வீழ்ந்தாளா??? dunno! end of kothai – kuzhal;
          Both are the same
          wow what an Excellent explanation
          Unbelievable tamil taste and knowledge.
          Long live with Tamil

  • G.Ra ஜிரா 9:55 am on May 22, 2013 Permalink | Reply  

    தையல் 

    அக்கடான்னு நாங்க உடை போட்டா
    துக்கடான்னு நீங்க எடை போட்டா
    தடா… உமக்குத் தடா…
    பாடலின் சுட்டி – http://youtu.be/u6zywS5ptm4

    இந்தியன் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வாலி எழுதிய பாடல் இது. பாடல் முழுக்கவே பெண் விடுதலை வரிகளாக வரும். சுவர்ணலதாவின் குரலில் கேட்க அட்டகாசமான கைமுறுக்குப் பாடல்.

    மேடை ஏறிடும் பெண் தானே.. நாட்டின் சென்சேஷன்
    ஜாடை பேசிடும் கண் தானே… யார்க்கும் டெம்ப்ட்டேஷன்
    ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம்… ஹோய் ஹோய் ஓல்டையெல்லாம் ஓரங்கட்டும்
    தய்யதக்க தய்யதக்க தோம்… ஹோய் ஹோய் தையலுக்கு கையத்தட்டுவோம்

    ஆங்கிலமும் தமிழும் கலந்து எழுதப்பட்ட இந்தப் பாடலில் “தையலுக்கு கையத் தட்டுவோம்” என்றும் ஒரு வரி எழுதியிருக்கிறார் வாலி.

    தையல் என்ற சொல் பெண்ணையும் குறிக்கும் என்று நம்மில் பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்.

    தையல் தளிர்க்கரங்கள்” என்று தமயந்தியின் கைகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறாரே புகழேந்திப் புலவர்.

    தையலைப் பற்றி தையல் ஒருத்தி சொன்ன கருத்து இன்றும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மையல் கொண்ட பையல் எவனாயினும் இப்படிச் சொல்லியிருந்தால் அவனைப் பிய்த்து எடுத்திருப்பார்கள். அப்படிப் பட்ட ஒரு கருத்தைச் சொன்னார் ஔவையார்.

    தையல் சொல் கேளேல்
    நூல் – ஆத்திச்சூடி
    எழுதியவர் – ஔவையார்

    இப்படி ஔவை சொன்னதை ஆண் கவி ஒருவர் ஒத்துக் கொள்ளவில்லை. இவர் சற்றுப் பின்னால் வந்த கவியானாலும் தவறு என்று தனக்குப் பட்டதைத் தவறு என்றே சொன்னவர். பெண்களின் உயர்வுதான் உண்மையிலேயே நாட்டை உயர்த்தும் என்று நம்பியவர். அதனால் அவர் ”தையல் சொல் கேளேல்” என்பதை ஏற்காமல் மாற்றிச் சொல்கிறார்.

    தையலை உயர்வு செய்
    நூல் – புதிய ஆத்திச்சூடி
    எழுதியவர் – பாரதியார்

    பெண்களைப் பற்றிய கருத்து மாறிக் கொண்டே வருவதை இது போன்ற பலதரப்பட்ட காலகட்டங்களில் வந்த நூல்களிலிருந்து நாம் தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

    ஒரு குடும்பத்தில் புதிதாக ஒரு பிரச்சனை வந்து அதற்கு தீர்வே புரியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? அந்தக் குடும்பத்திலேயே மிகமிக மூத்த பெண்ணாகப் பார்த்து வழி கேட்க வேண்டும். அந்தப் பெண் அனுபவத்தில் சொல்லும் வழி சரியாகவே இருக்கும் என்பதும் ஒரு கருத்து.

    அந்தக் காலத்தில் போர்களின் காரணமாக ஆண்களை விட பெண்களின் வாழ்நாள் நீடித்திருந்ததால் பெண்கள் உலக நடப்புகளை அதிகமாக புரிந்து வைத்திருந்தார்கள். தெரிந்து வைத்திருந்தார்கள். நல்லதையும் கெட்டதையும் அனுபவித்துப் பக்குவமாகியிருந்தார்கள். ஆகையால் அவர்கள் சொல்லும் வழி சரியாகவே இருந்திருக்கும்.

    ஆனால் இன்று தொலைக்காட்சித் தொடர்களில் சிக்கிக் கொண்டிருக்கும் பெண்களிடம் கருத்து கேட்டால் என்னாகுமோ என்று பயமாகத்தான் இருக்கிறது. ஒரு பெண்ணாகிய ஔவையாருக்கே பயம் வரும் அளவுக்கு அந்தக் காலத்துப் பெண்கள் என்ன பார்த்திருப்பார்கள்?!

    சரி. முடிப்பதற்கு முன் ஒரு சிறிய நகைச்சுவைத் துணுக்கு.

    ஒரு புலவருக்கு ஒருவர் வேட்டி தானம் கொடுத்தாராம். அந்த வேட்டியை வாங்கிப் பார்த்திருக்கிறார் புலவர்.

    தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்க்கக் கூடாதுதான். ஆனாலும் அது கிழிந்த வேட்டி. எக்கச்சக்கமாக தையல்கள் வேறு. அதைப் பார்த்ததும் அந்தப் புலவர் வருத்தத்தை மறைத்துக் கொண்டு சிலேடையாக ஒரு வரி சொன்னாராம்.

    சோமனுக்கு இருபத்தேழு தையல்

    வேட்டிக்கு சோமன் என்றொரு பெயர் உண்டு. சோமனுக்கு இருபத்தேழு தையல் என்றால் வேட்டியில் அத்தனை தையல்கள் இருக்கின்றன என்று பொருள்.

    சந்திரனுக்கும் சோமன் என்றொரு பெயர் உண்டு. சோமனுக்கு இருபத்தேழு தையல் என்றால் சந்திரனுக்கு இருபத்தேழு மனைவிகள் என்று பொருள். அதுவும் புராணப்படி உண்மைதான்.

    ரோகிணி முதலான இருபத்தேழு நட்சத்திரங்களையும் சந்திரன் மணந்து கொண்டான். ஆகையால் சோமனுக்கு இருபத்தேழு தையல்.

    இப்போது புரிந்திருக்குமே புலவரின் சிலேடை.

    அன்புடன்,
    ஜிரா

    172/365

     
    • Saba 11:23 am on May 22, 2013 Permalink | Reply

      பெண்களின் உயர்வுதான் உண்மையிலேயே நாட்டை உயர்த்தும் -இதே தத்துவத்தை இந்திரா காந்தியும் பல கிராம விஜயங்களில் பாவித்துள்ளார்.

      ஆமா உண்டி சுருங்குதல் தையலுக்கு அழகு என்று சொன்னதும் அதே தையல் தானே 🙂

      எல்லாம் moderate ஆக இருந்தால் எல்லோர்க்கும் நலம்.

    • Arun Rajendran 1:00 pm on May 22, 2013 Permalink | Reply

      தமிழ் “கலாச்சாரம்”-னு என்னென்னவோ சொல்றாங்க..ஆனா தமிழ்நாட்டுல தான் தமிழன் பண்பாட தேடி கண்டுபிடிக்க வேண்டி இருக்கு…முந்நாள் தமிழ் இந்நாள் கேரள நாட்டில் கூட இன்னும் நம் பண்பாடு போற்றிப் பாதுகாக்கப்படுது…அதுல மிகவும் போற்றுதற்குரியது பெண்வழிச் சமுகம்…பெண் தான் குடும்பத்தலைவியாக இருப்பார்..சொத்தில் பங்கும் பெண்களுக்குத்தான்..வயதான மூதாட்டி தான் குடும்ப முடிவுகளை எடுப்பார்..இத்தகைய கட்டமைப்பில் மிகவும் இனறியமையாததும் சிறப்பானதும் கூட்டுக்குடும்ப முறை…ஆண் வழிச்சமுகம் விரவி இருந்த காலத்திலும் இத்தகைய பெண்வழிச்சமுகங்களும் தழைத்திருந்தன..எவ்வளவு தான் இழந்துட்டோம்..:-(

    • amas32 10:46 pm on May 22, 2013 Permalink | Reply

      புலவர்களுக்குத் தான் எவ்வளவு சாதுர்யம் வேண்டியிருக்கிறது, தங்கள் இன்னல்களை மறைக்க!
      ஒரு புலவர் அரசினடம் தங்கத் தட்டு எனக்கா உங்களுக்கா என்று தனக்குப் பரிசுக் கொடுத்தத் தட்டும் தனக்கா அல்லது தங்கத்தட்டுப்பாடு அரசனுக்கா என்ற பொருளில் கேட்டதாகவும் படித்திருக்கிறேன். அரசன் என்ன செய்வான், தங்கத் தட்டு உமக்கே என்று சொல்லிவிட்டான் :-))

      பெண்களுக்குப் பொதுவில் எதிர்கால விளைவுகளை ஆராய்ந்து செயல்படும் திறன் அதிகம்.

      Nice post Gira 🙂

      amas32

    • Sudhakar 12:43 pm on May 24, 2013 Permalink | Reply

      Ki-Va-Ja type “siladai”

  • mokrish 10:08 am on May 9, 2013 Permalink | Reply  

    சென்னையில் ஒரு நாள் 

    கடந்த வாரம் ஆபீஸ் வேலையாய் தென் சென்னை, புற நகர், வட சென்னை , தேசிய நெடுஞ்சாலை என்று பல இடங்கள் செல்லவேண்டியிருந்தது. தினந்தோறும் விரிவடையும் நகரம் பிரமிப்பாக இருந்தது.

    பழைய மகாபலிபுரம் சாலையில் ஒரு வெயில் வேளையில் பயணம். -வழியெங்கும்  சாப்ட்வேர் நிறுவனங்கள் ,கல்லூரிகள். அதனால் நிறைய மிதவை (??) பேருந்துகள்  சாலையின் இரு புறமும் வீடு வாங்கலையோ வீடு வாங்கலையோ என்று கூவும் ப்ளெக்ஸ் விளம்பரங்கள். கண்ணுக்கு தெரியும் தூரம் வரை கட்டடங்கள் – புதிய, பழைய, முடிக்கப்படாமல் என்று பல நிலைகளில் உயர்ந்து நிற்கும் கட்டடங்கள், தரையும் கூரையும் சொந்தமில்லை ஆனால் இடையில்  உள்ள காற்று வெளி  (Air Pocket ) மட்டும் விற்பனைக்கு!

    சட்டென்று மனதில் ஓடியது  ‘ சீட்டுக்கட்டுக் கணக்காக இங்கே வீட்டக் கட்டி’ என்ற வரிகள்.  உடனே மனம்  நாலு வரி நோட் அலைவரிசையில் sync ஆனது.அனுபவி ராஜா அனுபவி என்ற படத்தில் கண்ணதாசன் அன்றைய (1967) மெட்ராஸ் பற்றி எழுதிய பாடல் http://www.youtube.com/watch?v=ujMYkmG6cqA

    மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

    மெதுவாப் போறவுக யாருமில்லே இங்கே

    சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே

    கிராமத்திலிருந்து வரும் ஒருவன் நகரத்தின் அவலங்கள் சொல்லும் பாடல். அவசர வாழ்க்கையும் காது கூசும் மெட்ராஸ் பாஷையும் பற்றிய வருத்தம்.

    சீட்டுக்கட்டுக் கணக்காக இங்கே வீட்டக் கட்டி இருக்காக

    வீட்டக் கட்டி இருந்தாலும் சிலர் ரோட்டு மேலே படுக்காக

    சீட்டுக்கட்டா? 1967ல் சென்னையில் அடுக்கு மாடி இருந்திருக்க வாய்ப்பில்லை. ஹவுசிங் போர்ட் வீடுகள் பார்த்து / LIC பார்த்து பாடுவது போல் காட்சி. அதுவே சீட்டுக்கட்டு என்றால் இன்றைய கட்டடங்களைப்பார்த்தால்  தீப்பெட்டிக் கணக்காக என்று பாடியிருப்பாரோ?  நகரத்தின்  தெருக்களிலே நிக்க ஒரு நிழலில்லையே  என்றும் அங்கலாய்க்கிறார் .

    பட்டணத்துத் தெருக்களிலே ஆளு நிக்க ஒரு நிழலில்லையே

    வெட்டவெளி நிலமில்லையே நெல்லுக் கொட்ட ஒரு இடமில்லையே

    காத்து வாங்க பீச்சுப் பக்கம் காத்து நிக்கும் கூட்டமே

    நேத்து வாங்கிப் போன காத்து என்ன ஆச்சு வூட்டிலே

    இன்று நகரங்களில் ஷாப்பிங் மால்கள் தான் பப்ளிக் ஸ்பேஸ் என்னும்போது இன்றும் நிற்க நிழலில்லைதான். அதனால்தான் வங்கக்கடலோரம் காற்று வாங்க பெரும் கூட்டம்.என்கிறார்

    வைரமுத்துவும் ஒரு நகர்வல பாடல் எழுதியிருக்கிறார். மே மாதம் படத்தில் மெட்ராச சுத்திப்பாக்கப்போறேன் என்ற பாடல் http://www.youtube.com/watch?v=VETmkuuI8Fs

    மெரினாவில் வீடு கட்டப்போறேன்

    லைட் ஹவுசில் ஏறி நிக்கப்போறேன்

    இதுதானே ரிப்பன் பில்டிங் பாரு

    இதுக்கு உங்கப்பன் பேர் வக்க சொல்லப்போறேன்

    என்று ஜாலியான Fantasy கற்பனையில் ஆரம்ப வரிகள். சினிமா பிடிக்கும் கோடம்பாக்கம், ஏரோப்ளேன் இறங்கும் மீனம்பாக்கம்,, பாரின் சரக்கு பர்மா பஜார் என்று சென்னையின் ‘பெருமைகளை’ பட்டியல் போடுகிறார்.

    மெட்ராஸின் ஹீரோ அது மெட்ரோ வாட்டர்

    ஆனா ஸ்டைலுன்ன இப்ப மினரல் வாட்டர்

    மெட்ராஸின் கீதம் அது ஆட்டோ சத்தம்

    என்றும் நக்கல் செய்கிறார். http://www.youtube.com/watch?v=VETmkuuI8Fs

    இரண்டு பாடல் காட்சிகளையும் பாருங்கள். சென்னை அழகுதான் முதல் பாடலில் வரும் அசல் ஸ்பென்சர் பிளாசாவும் சென்ட்ரல் ஸ்டேஷன் மேல் இருக்கும் murphy radio எழுத்துக்களும் அழகு.

    பல வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட பாடல்கள் இன்றும் பொருத்தமாய்… மாற்றங்களே இல்லையா?  சீட்டுக்கட்டு தீப்பெட்டியாகி, ஆட்டோ ஷேர் ஆட்டோவாகி.. இது வளர்ச்சியா?

    வெயில்தான். மின்வெட்டும் உண்டு. கொசுக்கள் ராஜ்ஜியம். கூவம் பார்த்தால் கோவம் வரும்.ஆனாலும் எனக்கு சென்னை பிடிக்கும். சொர்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா?

    மோகனகிருஷ்ணன்

    159/365

     
    • rajnirams 6:03 pm on May 9, 2013 Permalink | Reply

      சூப்பர் போஸ்ட்.நீங்கள் சொன்னது மாதிரி சென்னையிலேயே வளர்ந்த என்னை போன்றவர்களுக்கு சென்னை பெஸ்ட் தான்:-)) இரண்டு பாடல்களும் அருமை. அள்ளி தந்த வானத்திலும் கபிலன் எழுதிய ஒரு பாடல் “சென்னை பட்டணம்,எல்லாம் கட்டணம்” நல்ல பாடல்.

    • amas32 8:54 pm on May 9, 2013 Permalink | Reply

      ஆஹா, நீங்க நம்ம கட்சி மோக்ரிஷ்! மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் பாடல் ஒரு காலத்தில் அவ்வளவு பிரபலம். கவிஞர் கண்ணதாசனின் தீர்க்கதரிசனத்தை எண்ணி வியக்கிறேன். 67ல் பாடியது இன்றும் சரியாக இருக்கிறதே!

      எத்தனையோ ஊர்களில் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் சென்னை போல வருமா? வருடம் முழுவதும் கோடை தான். அதனாலேயே மார்கழி மாதம் #ChennaiSnow என்று ட்விட்டரில் புகழப்படும் அளவு நமக்கு இங்கே குளிரே கிடையாது. மழை வந்தால் தெருவில் கால் வைக்க முடியாது. ஆனால் சென்னையின் சிறப்புத் தான் என்ன? வந்தாரை வாழ வைக்கும் ஊர் இது. இங்கே இருக்கும் பிற மாநிலத்தவர் நிம்மதியாக வாழ முடியும். பேச்சில் மரியாதை கிடையாது தான் சென்னைவாசிகளுக்கு, ஆனால் மனத்தில் அன்பு உண்டு! எல்லாவற்றிற்கும் மேலாக மெரினா கடற்கரை! ஆ! என் இனிய சென்னையே! ரொம்பப் புகுழுகிறேனோ? :-))

      amas32

    • GiRa ஜிரா 10:23 pm on May 9, 2013 Permalink | Reply

      சென்னை என்று சொல்லடா
      தலை நிமிர்ந்து நில்லடா

      தப்பு தப்பு…

      சென்னை என்று சொல்லுங்க
      தலை நிமிர்ந்து நில்லுங்க

      நான் பெங்களூரில் ரொம்ப வருடங்களா இருந்துட்டேன். ஆனாலும் எனக்குச் சென்னை மேல ஒரு தனிப்பாசம் உண்டு.

      சின்ன வயசுல லீவுக்கு சென்னைக்குதான் வருவோம். டி.நகரில் அத்தை வீட்டில் தங்குவோம். டி.நகர், பாண்டி பஜார், ரங்கநாதன் தெரு, அண்ணாசாலை, நுங்கம்பாங்கம், சத்யம்/தேவி/சன்/சாந்தி, மெரினா, பெசண்ட் நகர் பீச்னு எல்லாமே பிரமிப்பா இருக்கும்.

      இப்போ வாழ்க்கையே சென்னைன்னு ஆயிருச்சு. குறை சொல்லனும்னா எதுலையும் குறை சொல்லலாம். ஆனா சென்னை செல்லச் சென்னைதான். பெங்களூர்ல இருந்து வந்தும்… பெங்களூரையே மறக்க வெச்சது சென்னை. அதுதான் அதோட சிறப்பு.

      மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்னு கவியரசர் எழுதுனது திருக்குறள் மாதிரி. இன்னைக்கும் பொருந்துது. முருகன் அருளால் இந்த ஊரும் மக்களும் உலகமும் நல்லாயிருக்கனும்.

      எல்லாரையும் நல்லபடியா காப்பாத்தி நல்லவங்களாவும் நல்லறிவுள்ளவங்களாவும் வெச்சிரு முருகா!

  • என். சொக்கன் 10:06 pm on May 4, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு : நுதல் 

    • பாடல் : மாசறு பொன்னே வருக
    • படம் : தேவர் மகன்
    • எழுதியவர் : வாலி

    கோல முகமும்,

    குறுநகையும், குளிர் நிலவென

    நீலவிழியும் பிறை நுதலும்

    விளங்கிடும் எழில்!

    நுதல் : இந்த வார்த்தை இப்பொழுது அதிக புழக்கத்தில் இல்லை.

    பொதுவாக இந்த வார்த்தை நெற்றியைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாட்டிலும் கூட. நிலவைப் போன்ற நெற்றி என்ற பொருளில்

    Frontal Bone(derived from Forehead) – இதற்குத் தமிழில் நுதலெலும்பு என்றப் பெயரும் இருக்கிறது. ஆனால் புழக்கத்தில் “நெத்தியில்/மண்டையில் அடிப்பட்டிருச்சு” என தான் பேசிக்கொள்வோம். மருத்துவர்கள் கண்டிப்பாக ஆங்கிலத்தில் தான் குறிப்பிடுவர். ஆக,ஒரு நல்ல வார்த்தை காணாமல் போய்விட்டது.

    சங்க இலக்கியங்களில் பல இடங்களில் ”நுதல்” உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

    நற்றிணை

    சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி,
    பெருங் கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே

    சுடர் விடும் நெற்றி என்ற பொருளில்

    அகநானூறு

    விரி மலர் மராஅம் பொருந்தி, கோல் தெரிந்து,
    வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி,

    வரிகளையுடைய நெற்றியைக் கொண்ட யானை.

    இவ்வளவு நல்ல வார்த்தை தமிழ்சினிமாவில் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. இருந்தால் சொல்லுங்கள். ”முதல்” “இதழ்” “நுதல்” என ரைமிங் அழகா வருதே :))

    இதழ் முத்தம் ,கணவன்-மனைவி,காதலன்-காதலி இடையே தான் பகிரமுடியும்.

    நுதல் முத்தம் , யாரும் யாரிடமும் பகிரலாம். :))

    பின்குறிப்பு : இது சம்பந்தமாக இணையத்தில் தேடியப்போது , இந்த லிங்க் கிடைத்தது. இதை எழுதியவர் ”நுதல்” என்ற வார்த்தைக்கு “கண்விழி”தான் பொருத்தமாக இருக்கும் என சில உதாரணங்களுடன் விளக்குகிறார். கொஞ்சம் பெரிய பதிவு. கமெண்ட்ஸையும் படிக்கவும்.

    http://thiruththam.blogspot.sg/2010/07/blog-post.html

    காளீஸ்

    பிறந்து வளர்ந்தது நெல்லை மாவட்டம் புளியங்குடி.திருவண்ணாமலையில் எஞ்சனியரிங். Contact Center industry(Voip / IVR)யில் வேலை.சென்னையில் 7 வருடங்கள். இப்பொழுது சிங்கப்பூரில்.

    பக்கத்துவீட்டில் தினத்தந்தி,விகடன்,குமுதம் பஸ் பயணங்களில் ராஜேஷ்குமார் என ஆரம்பித்த வாசிப்பு, வலைத்தள அறிமுகத்திற்குப்பிறகு கொஞ்சம் பரந்து விரிந்திருக்கிறது. ட்விட்டரில் 140க்குள் எழுத ஆரம்பித்து இப்பொழுது இங்கே வலைப்பதிவுவரை வந்திருக்கிறது : http://eeswrites.blogspot.sg/

     
    • penathal suresh (@penathal) 11:07 pm on May 4, 2013 Permalink | Reply

      தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே..

      தமிழ்த்தாய் வாழ்த்தை மறந்துட்டீங்களே சார்!

    • anonymous 3:21 am on May 5, 2013 Permalink | Reply

      கவிஞர் வாலியின் “நுதல்” கொண்டு “நுதலியது” (துவங்கியது) அழகு, காளீஸ்

      குளிர் நிலவென – நீலவிழியும், பிறை நுதலும் -ன்னு தானே ஒரு சந்தம் அமையும் இந்த வாலி பாட்டில்!
      வாலி எத்தனையோ முருகன் பாட்டு எழுதி இருக்காரு; ஆனா அன்னையின் பாட்டு?

      வாலியின் ஆரம்பமே முருகன் பாட்டு தான் – “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும், கந்தனே உன்னை மறவேன்”
      -ன்னு Railway Station -இல் எழுதி TMS கிட்ட குடுத்தது, அதுவே அவர் சினிமா வருகைக்கும் கட்டியம் கூறியது;

      வாலி எழுதிய அன்னையின் பாட்டில் மிகச் சிறந்தவை இந்த ரெண்டு தான்
      = மாசறு பொன்னே வருக & ஜனனி ஜனனி
      —–

      தமிழில், “நுதலுதல்” -ன்னா = சொல்லத் துவங்குதல்;
      அதாச்சும் முன்னுரை;

      முகத்துக்கு முன்னுரை = நெற்றி ; அதனால் “நுதல்” -ன்னு தீந்தமிழில் வழங்கினார்கள்;

      நெற்றியில் என்ன இட்டுக்கிட்டு வந்தாலும், அதான் பளிச் -ன்னு முதலில் தெரியும்; அதுவே முன்னுரை; அப்பறம் தான் வைரக் கம்மல் எல்லாம்:)
      —-

      “சொல்லு” என்ற சொல்லுக்குப் பல பெயர்கள், தமிழில்

      =அறை, இயம்பு, உரை, கிள,
      =கூறு, சாற்று, செப்பு, சொல்,
      =பகர், பறை, பன்னு, புகல்,
      =பேசு, மிழற்று, மொழி, விளம்பு
      =அந்த வரிசையில், நவில், நுவல், “நுதல்”

      ஒவ்வொன்னுத்துக்கு நுண்ணிய வேறுபாடு இருக்கு…
      “உரை” -ன்னா விளக்கமாச் சொல்லுதல்
      “நுதல்” -ன்னா சுருங்கச் சொல்லுதல்; முன்னுரையாச் சொல்லுதல்

      அப்படி வந்தது தான் “நுதல்” (நெற்றி)

      • anonymous 4:13 am on May 5, 2013 Permalink | Reply

        அந்தச் சுட்டியில் பொன். சரவணன் சொல்வது அத்துணை ஏற்புடைத்து இல்லீங்க:)

        இதுக்கு முன்னாடி “அல்குல் = புருவம்” -ன்னும் தப்பாச் சொல்லி இருப்பாரு;
        *அல்குல் = பெண் உறுப்பு/ இடுப்பு
        *அல்குவதால் = அல்குல் (குறுகுதல்)
        http://goo.gl/sC67V

        நல்ல தமிழ்ச் சொல்லையெல்லாம்… “decency” என்கிற பேரில், மாற்றிப் பொருள் கொள்வதும்,
        தரவுகளே இல்லாமல், மொழி வழக்கத்தில் இருந்து விரட்டி விடுவதும்… தமிழுக்குப் பெருங் கேடாய்த் தான் முடியும்:(
        ஆக்கல் = அரிது; அழித்தல் = எளிது; All it takes is a post & few friends to propagate

        இதுல கூட பாருங்க;
        பசலை நுதல் (பசலை பாய்ந்த நுதல்);
        ஆனா, பசப்பும் = அழுவும் -ன்னு எடுத்துக்கிட்டு, நெத்தி அழுவாது, கண்ணு தான் அழுவும்-ன்னு எடுத்துக்கிட்டாரு:)

        முருகா, எங்கெங்கே, யாரு எப்படிச் சிதைக்கிறாங்க? -ன்னு பாத்துக்கிட்டா இருக்க முடியும்? உன் தமிழை, நீ தான் காப்பாத்திக்கிடணும்;

        காளீஸ், நீங்க சொன்ன நுதல் = நெற்றியே சரி; “நுதல் முத்தமே” அழகு:)

    • anonymous 3:51 am on May 5, 2013 Permalink | Reply

      நாமெல்லாம் முருகனைத் துதிக்கிறோம்;
      ஆனா முருகன், இன்னொருத்தரைத் துதிக்கிறானாம் = யாரை?

      மதிவாள் **”நுதல்”** வள்ளியைப் பின்
      துதியா விரதா… சுர பூபதியே
      -ன்னு அருணகிரியின் கந்தர் அநுபூதி; “நுதல் வள்ளி”-ம்பாரு;

      முருகன் = சரியான பொண்டாட்டி தாசன்:) மாமா, மாலவனைப் போலவே:)

      என்னைக்காச்சும் பூலோகம் போ -ன்னு சாபம் குடுப்பாரா திருமகளுக்கு? அந்தம்மா தான் கோச்சிக்கிட்டு போவாக; இவரு பின்னாலேயே கெஞ்சிக்கிட்டு ஓடீயாருவாரு:)

      வள்ளியின் காலையே பிடிப்பான் முருகன் = “குறமகள் பாதம் வருடிய மணவாளா”
      ஏன்-ன்னா, அவ “காத்திருப்பு” அப்படி;

      முருகன், தன்னை ஏத்துக்கிடுவானா? -ன்னு கூடத் தெரியாது; எது-ன்னாலும், “அவனே அவனே” -ன்னு கற்பனையா வாழ்ந்து சீரழிஞ்சவ;
      நடையா நடந்தவ… =அதான் “பாதம் வருடிய மணவாளா”

      முருகனுக்கு முன்னுரை = வள்ளி;
      முருகனுக்கே நெற்றி போன்றவள் = “நுதல் வள்ளி”
      ——-

      முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
      பைந்தொடிப் பேதை **”நுதல்”** -ன்னு குறள்

      அவன் அவளை இறுக்க அணைக்கிறான்;
      அவன் பாகங்கள் எல்லாம் அவள் பாகங்கள் மேல் = “அவிர்ப் பாகம்”
      அப்படியொரு ஆசை அந்த அணைப்பில்;

      திடீர்-ன்னு என்ன நினைச்சானோ தெரியல, அவளுக்கு வலிக்குமோ?-ன்னு இறுக்கத்தை லேசாத் தளர்த்துறான்;
      ஒடனே, அவ நெற்றி (நுதல்) பசலை பாய்ஞ்சிருச்சாம்:) அந்தச் சிறு பிரிவு/ விலகல் தாங்காம;

      அகத்தை = முகம் காட்டிக் குடுக்கும்
      முகத்தை = நெற்றி காட்டிக் குடுக்கும்;

      முகத்தை “நுதலும்” நுதல் வாழ்க!!

    • Kalees 7:46 am on May 5, 2013 Permalink | Reply

      விரிவான கமெண்ட்க்கு நன்றிங்க…

      “நுதுலுதல்-தொடங்குதல்-முன்னுரை-நெற்றி” இந்த தொடர்பு நல்லா இருக்கு 🙂

      அப்புறம் அந்த லிங்க் , ஒரு மாற்று யோசனை/கற்பனைங்கிற வகையில குடுத்திருந்தேன்.அவ்வ்ளவுதான். உங்களை மாதிரி விசயம் தெரிஞ்சவங்க முன்னெடுத்துப் போவீங்கன்னுதான் 🙂

    • Mohanakrishnan 5:40 pm on May 5, 2013 Permalink | Reply

      பாரதியின் வெள்ளை கமலத்திலே பாடலில் நுதல் சிந்தனை என்று வரும்.

      வேதத் திருவிழி யாள்,-அதில்
      மிக்கபல் லுரையெனுங் கருமையிட் டாள்,
      சீதக் கதிர்மதி யே-நுதல்
      சிந்தனையே குழ லென்றுடை யாள்,

    • என். சொக்கன் 9:09 am on May 6, 2013 Permalink | Reply

      Comment From Sushima (Sent Via Email):

      மிகப் பெரிய பதிவின் லிங்க் கொடுத்துவிட்டீர்கள் 🙂 நல்ல வார்த்தையைத் தேர்வு செய்து அழகாக விளக்கம் அளித்துள்ளீர்கள். சிவபுராணத்தில் வரும். பேச்சு வழக்கில் இல்லை தான். நெற்றி என்ற பொருள் மட்டும் தான் எனக்குத் தெரியும். லிங்க் பதிவில் நிறைய பொருள்கள் கொடுத்திருக்கிறார் அந்தப் பதிவின் ஆசிரியர்.
      நன்றி

      amas32

  • mokrish 11:27 am on March 24, 2013 Permalink | Reply
    Tags: நாணம்   

    ஜாடை நாடகம் 

    ஒரு பக்கம் பார்த்து, ஒரு கண்ணை சாய்த்து, உதட்டையும்  நகத்தையும்  கடித்து, மெதுவாக சிரித்து கால் பெருவிரலால் கோலமிட்டு என்று இலக்கியத்திலும் கதையிலும் கவிதையிலும் திரைப்படங்களிலும் பதிவாக்கப்பட்ட ஒரு பிம்பம் – பெண்களின் Exclusive உணர்வு-நாணம்! பெண்களுக்கு வகுக்கப்பட்ட நால் வகை பண்புகளில் ஒன்று . பெண்மை என்பதால் நாணம் வந்ததா நாணம் வந்ததால் பெண்மை ஆனதா என்று கவிஞர்கள் வியந்த ஒன்று.

    திரைப்பாடல்களில் நிறைய காதல் பாடல்கள் உண்டென்பதால் நாணம் / வெட்கம் பற்றியும் அவள் கன்னம் சிவந்தது பற்றியும் சொல்லும் வரிகள் ஏராளம். ஆண் எப்போதும் பெண்ணை இந்த வட்டத்தை விட்டு வரச்சொல்வதும் பெண் இந்த ‘சங்கிலியை’ உடைக்கமுடியாமல் மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல என்று  தவிப்பதும் ஐயோ நாணம் அத்துப்போக புலம்புவதும் என்றும் பல பாடல்கள்.

    முதலில் ஒரு definition. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் நாணமோ இன்னும் நாணமோ என்ற கண்ணதாசன் பாடல்.

    நாணமோ இன்னும் நாணமோ
    இந்த ஜாடை நாடகம் என்ன
    அந்தப் பார்வை கூறுவதென்ன
    நாணமோ நாணமோ

    இந்த ஜாடை நாடகமும் பார்வை சொல்லுவதும் என்ன என்று ஆண் கேட்கும் கேள்வி. பெண் என்ன பதில் சொல்லுவாள்? அதை உன்னால் புரிந்து கொள்ள முடியாது என்கிறாள்

    ஆடவர் கண்களில் காணாதது
    அதுகாலங்கள் மாறியும் மாறாதது
    காதலன் பெண்ணிடம் தேடுவது
    காதலி கண்களை மூடுவது அது இது

    தொடர்ந்து எதெல்லாம் நாணம் என்று ஒரு லிஸ்ட் கொடுக்கிறார். கண்ணதாசன் விளைந்து நிற்கும் வயலை பார்த்து பச்சை வண்ண சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா ‘பருவம் வந்த பெண்ணைப்போல நாணம் என்ன சொல்லம்மா என்று சொன்னவர். நாணம் பற்றி இவர் சொல்வதென்ன?

    ராஜா ராஜஸ்ரீ ராணி வந்தாள் என்ற ஊட்டி வரி உறவு படத்தின் பாடலில்

    மேகம் வந்த வேகத்தில் மோகம் வந்தது

    மெல்ல மெல்ல நாணத்தின் தேரும் வந்தது

    இடையொரு வேதனை நடையொரு வேதனை கொள்ள

    இதழொரு பாவமும் முகமொரு பாவமும் சொல்ல

    என்று பெண்ணின் eternal conflict பற்றி அழகாக சொல்கிறார். வாலியும் ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ என்ற பாடலில் இதே conflict பற்றி சொல்லும் வரிகள்

    மெல்லத் திறந்தது கதவு என்னை வாவென சொன்னது உறவு
    நில்லடி என்றது நாணம் விட்டுச் செல்லடி என்றது ஆசை

    சிவந்த மண் படத்தில் ஒரு கன்னம் சிவந்த பெண்ணைப்பற்றி கண்ணதாசன் சொல்வதைப் பாருங்கள் http://www.youtube.com/watch?v=_rXdHS5a5iY

    ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டான்

    அவன் வேண்டும் வேண்டும் என்றான் அவள் நாளை நாளை என்றாள் ஆசையுள்ள மேனியிலும் ஒரு பக்கம் அச்சமுள்ள மானினமோ

    நாடுவிட்டு நாடு வந்தால் பெண்மை நாணமின்றிப் போய் விடுமோ

    வள்ளுவன் நாணென ஒன்றோ அறியலம் என்று சொன்ன கருத்தை பாலும் பழமும் படத்தின் காதல் சிறகை காற்றினில் விரித்து என்ற பாடலில் (வழக்கம் போல) எளிமையாக சொல்கிறார்

    முதல் நாள் காணும் புதுமணப் பெண் போல்
    முகத்தை மறைத்தல் வேண்டுமா
    முறையுடன் நடந்த கணவர் முன்னாலே
    பரம்பரை நாணம் தோன்றுமா

    இதையே ஆயிரத்தில் ஒருவன் பாடலில் சொல்கிறார்

    தன்னை நாடும் காதலன் முன்னே
    திரு நாளைத் தேடிடும் பெண்மை
    நாணுமோ நாணுமோ

    சமீபத்தில் வந்த சிவப்பதிகாரம் படத்தில் சித்திரையில் என்ன வரும் என்ற பாடலில் http://www.youtube.com/watch?v=UrvBQz-hPRc

    கேணி கயிறாக ஒங்க பார்வ என்ன மெலிழுக்க

    கூனி  முதுகாக  செல்ல வார்த்தை வந்து கீழிழுக்க

    என்று பெண் பாட ஆண் சொல்வதாக யுகபாரதியின்  ஒரு அருமையான கற்பனை.

    மாவிளக்கு போல நீ மனசையும் கொளுத்துற

    நாவிடுக்கு ஓரமா நாணத்தப் பதுக்குற…

    அட இது Sustained Release மருந்து போல் நாவிடுக்கில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி …படுத்தி – ஆஹா

    இது பெண்களின் Intrinsic குணம் என்றே தோன்றுகிறது. வைரமுத்து  ஏன் அச்சம் நாணம் என்பது ஹைதர் கால பழசு என்று சொன்னார் ?

    மோகனகிருஷ்ணன்

    113/365

     
    • rajnirams 11:30 am on March 24, 2013 Permalink | Reply

      நாணமோ பாடல் கண்ணதாசன் எழுதியது.

      • rajnirams 11:38 am on March 24, 2013 Permalink | Reply

        அருமை.வித்தியாசமான பார்வை.பாராட்டுக்கள்.சி.ஐ.டி.சங்கரில்,கண்ணதாசனின் “நாண த்தாலே கன்னம் மின்ன”பாடலும் அருமையாக இருக்கும்.பார்த்தால் பசி தீரும் -கண்ணதாசனின் கொடி அசைந்ததும் பாட்டிலும் பெண்மை என்பதால் நாணம் வந்ததாவும் ஒரு உதாரணம். நன்றி:-))

    • amas32 1:10 pm on March 24, 2013 Permalink | Reply

      நாணம் இன்றைய யுவதிகளிடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் நேற்று ஒரு Stand up comedy நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன் வந்திருந்தவர்களில் 99விழுக்காடுகள் இளைஞர்கள். ஆண் பெண் ஜோடியாக தான் வந்திருந்தனர். சிலர் தனித் தனியாக வந்திருந்தனர். “நேர் கொண்ட பார்வை நிமிர்ந்த நன்னடை” இதைத் தான் அங்கிருந்த பெண்களிடம் கண்டேன். காதல் சூழல் இல்லை, நீங்கள் சொல்ல வரும் கருத்தை பரிசோதிக்க. ஆனால் தயக்கமில்லாமல் பெண்கள் ஆண்களுடன் பேசுகிறார்கள், பழகுகிறார்கள். அதற்குப் பதிலாக ஆண்கள் பெண்களிடம் பேசத் தயங்குவதை கவனிக்கிறேன் 🙂 வாழ்க்கை ஒரு வட்டம் தான் :-)) வைரமுத்து அதைத் தான் சொல்லியிருக்கிறார் 🙂

      நீங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பாடல்கள் அனைத்தும் சூப்பர்.

      amas32

    • அழகேசன் 5:57 pm on March 24, 2013 Permalink | Reply

      சார்.. வர வர ரொம்ப அறுக்கறீங்க

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel