Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • G.Ra ஜிரா 11:41 pm on November 28, 2013 Permalink | Reply  

    பெண்களின் பண்கள் 

    தமிழ் சினிமாவில் இரண்டு பெண்கள் சேர்ந்து பாடினால் அது ஒரே ஆணைப் பற்றியதாக மட்டுமே இருக்கும். இது ஆண்டாண்டு காலமாக மாறாத விதி. விதிவிலக்குப் பாட்டுகள் உண்டு என்றாலும் கதையில் இரண்டு பெண்கள் இருந்தால் ஒரு ஆண் என்று முக்கோணக் காதலை வைப்பது இன்றைக்கும் இயக்குனர்களுக்கு மிகவும் பிடித்த செயல்.

    வழக்கம் போல முதலில் நினைவுக்கு வருவது கவியரசர் தான். இதைச் சொல்வது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டது. பாதகாணிக்கை படத்தில் இரண்டு பெண்கள் ஒருவனையே நினைத்துப் பாடுவார்கள்.

    உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
    உனது நிலா விண்ணிலே எனது மலர் கண்ணிலே

    எப்படி அடித்துக் கொள்கிறார்கள் பார்த்தீர்களா? ஒருத்தி அத்தை மகளாகப் பிறந்தவள். இன்னொருத்தி அவனோடு உறவாக வளர்ந்தவள். அதையும் போட்டியில் இழுத்துவிடுகிறார்கள்.

    ஒருத்தி: பிறந்த போது பிறந்த சொந்தம் இருந்ததம்மா நினைவிலே
    இன்னொருத்தி: வளர்ந்த போது வளர்ந்த சொந்தம் வளர்ந்ததம்மா மனதிலே

    அடுத்ததாக கவிஞர் வாலி இரண்டு பெண்களை சண்டை போட வைக்கப் போகிறார். அந்த இரண்டு பெண்களையும் ஏமாற்றியது ஒருவன் தானோ என்று அவர்கள் பாடுகிறார்கள்.

    ஒருத்தி: மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
    நிலவுக்கு வானம் பகையானல் அது நடந்திட வேறே வழி ஏது
    இன்னொருத்தி: பறவைக்குச் சிறகு பகையானால் அது பதுங்கி வாழ்ந்திட கால்களுண்டு
    உறவுக்கு நெஞ்சே பகையானால் மண்ணில் பெருகிட வகையேது

    அவர்கள் இரண்டு பேர்களின் வாழ்க்கையையும் ஒருவன் ஏமாற்றி அழித்து விட்டது போல ஒப்பாரி. ஆனாலும் இனிய பாடல்.

    அடுத்து நாம் பார்க்கப் போவது ஒருவருக்குத் தெரியாமல் ஒரே ஆணை விரும்பிய இரண்டு தோழிகளை. ஆனால் ஒருத்தியின் காதல்தான் கைகூடுகிறது. சில நாட்கள் கழித்து ரகசியம் தோழிக்குத் தெரிந்து விடுகிறது. தோழியின் ஆசையைத் திருடிவிட்டோமோ என்று அவளுக்கு ஒரு வருத்தம். தோழியர் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டிருந்தாலும் புரியாதது போலவே பாடுகிறார்கள். நீங்களே பாட்டைப் பாருங்கள்.

    ஒருத்தி:
    அடி போடி பைத்தியக்காரி
    நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா

    இன்னொருத்தி
    அடி போடி பைத்தியக்காரி
    நான் புரிந்தவள் தான் உன்னைத் தெரிந்தவள் தான்

    இவர்கள் நல்ல தோழிகள். சண்டையிட்டுக் கொள்ளவில்லை. தன் காதல் வெற்றி பெற்றதே என்று எண்ணாமல் தோழியில் காதல் தோற்றுப் போனதே என்று வருந்திப் பாடுகிறாள் ஒருத்தி.

    இறைவன் ஒரு நாள் தூங்கிவிட்டான்
    எழுத்தைக் கொஞ்சம் மாற்றிவிட்டான்

    இப்படியெல்லாம் யார் எழுதியிருப்பார்கள்? வேறு யார்? கவியரசரேதான்.

    இன்னும் இரண்டு பேர்கள் இருக்கிறார்கள். இவர்களும் தோழிகள். இவர்கள் இருவரையும் திருமணம் செய்தவன் ஒருவனே. ஆனால் அது இருவருக்குமே தெரியாது. அந்த உண்மை தெரியாமல் இருவரும் சேர்ந்து சுமங்கலி பூஜை செய்கிறார்கள்.

    மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
    மங்கல மங்கை மீனாட்சி
    உள்ளம் ஒருவன் சொந்தம் என்றாள்
    தேவி எங்கள் மீனாட்சி

    பாவம். பின்னால் அவர்கள் உண்மை தெரிந்து கொதிக்கப் போவதை அப்போது அறியாமல் பாடியிருக்கிறார்கள். இதே கதை பின்னால் கற்பூரதீபம் என்ற பெயரில் வந்தது. அங்கும் உண்மை தெரியாமல் இரண்டு தோழிகளும் பூஜை செய்கிறார்கள்.

    காலகாலமாய்ப் பெண் தானே கற்பூர தீபம்
    காவல் கொண்ட மன்னன் தானே தெய்விக ரூபம்

    இரண்டு பெண்டாட்டிக்காரன் கதைகள் என்றால் மக்களுக்குப் பிடித்திருக்கிறது என்றே தோன்றுகிறது. நம்மூர் சாமிகளே அப்படித்தானே!

    இவர்களாவது திருமணம் ஆனவர்கள். திருமணம் ஆகும் முன்னமே அக்காவும் தங்கையும் ஒருவனையே நினைத்துப் பாடிய கதைகளும் உண்டு. நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தைத்தான் சொல்கிறேன். இந்த முறை பாட்டெழுதியது கவிஞர் வைரமுத்து.

    மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு
    தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு

    இந்த வரிசையில் இருகோடுகள் திரைப்படத்தை எப்படி மறக்க முடியும்? வாலியின் வார்த்தை விளையாட்டுகளில் ஒளிரும் “புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்” பாட்டை விட்டு விட்டு இந்தப் பதிவை எழுத முடியுமா? சாமிகளையே சண்டைக்கு இழுத்துப் பாடிய பாட்டாயிற்றே.

    அவள்: தேவன் முருகன் கோயில் கொண்டது வள்ளியின் நெஞ்சத்திலே
    இவள்: அவன் தெய்வானை என்றொரு பூவையை மணந்தது திருப்பரங்குன்றத்திலே

    வள்ளியும் தெய்வானையும் கூட இப்படிச் சண்டை போட்டிருக்க மாட்டார்கள்!

    இன்னொரு அக்கா தங்கையைப் பார்க்கப் போகிறோம். அக்காவுக்குப் பார்த்த மாப்பிள்ளை அவன். ஆனால் திருமணம் நின்றுவிடுகிறது. தங்கையோடு அவனுக்குக் காதல் உண்டாகிறது. அப்போது அவர்களுக்குள் போட்டிப் பாட்டு வைக்காமல் இருக்க முடியுமா?

    ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
    திருமாலைத்தானே மணமாலை தேடி
    எந்த மங்கை சொந்த மங்கையோ
    ஓ எந்த கங்கை தேவ கங்கையோ

    போன பாட்டில் முருகன் மாட்டிக் கொண்டால் இந்தப் பாட்டில் மகாவிஷ்ணு மாட்டிக் கொண்டார். அவருக்கும் இரண்டுதானே!

    இன்னும் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிச் சொல்லாமல் பதிவை முடிக்க விரும்பவில்லை. அவன் அவளைத்தான் விரும்பினான். விதி பிரித்தது. அத்தை மகளை மணந்தான். மகிழ்வாகத்தான் இருந்தான். போனவள் வந்தாள். பிரச்சனையும் வந்தது. அத்தை மகளோ அப்பாவி. தெரியாத்தனமாக “ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அவளைக் கேட்டு விடுகிறாள்.” உடனே ஒரு பாட்டு.

    கடவுள் தந்த இருமலர்கள்
    கண் மலர்ந்த பொன் மலர்கள்
    ஒன்று பாவை கூந்தலிலே
    ஒன்று பாதை ஓரத்திலே

    சோகத்தைக் கூட அழகாகச் சொல்லியிருக்கிறார்கள் கவிஞர்கள். அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.

    இந்தச் சக்களத்திச் சண்டை பழைய படங்களோடு முடிந்து போகவில்லை என்று நிருபிக்க வந்ததோ பஞ்சதந்திரம் திரைப்படம்! ஒருத்தி மனைவி. இன்னொருத்தி மனைவியாக நடிப்பவள். அவர்களுக்குள் ஒரு போட்டிப் பாட்டு.

    வந்தேன் வந்தேன் மீண்டும் மீண்டும் வந்தேன்
    வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
    எனது கனவை எடுத்துச் செல்ல வந்தேன்

    நல்லவளைப் போல அமைதியாகப் பாடுகிறாள் நடிக்க வந்தவள். கட்டிக் கொண்டவள் சும்மா இருப்பாளா? புலியாய்ப் பாய்கிறாள்.

    பந்தியில பங்கு கேட்டா விட்டு தருவேன்
    என் முந்தியில பங்கு கேட்டா வெட்டிப் புடுவேன்
    அடி கண்டவளும் வந்து கைய வைக்க
    அவர் கார்பரேஷன் பம்ப் அல்ல

    இவர்கள் கதை இப்படியிருக்க இன்னும் இரண்டு பெண்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அவர்களைப் பற்றிச் சொல்லவில்லை என்றால் இந்தப் பதிவு முழுமை பெறவே பெறாது. ஒருத்தி மேடையில் ஆடிக் கொண்டிருக்கிறாள். அந்த ஆட்டத்தை இன்னொருத்தி விரும்புகிறவன் ரசிக்கிறான். அதை இன்னொருத்தியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவளும் மேடையில் குதித்து சரிக்குச் சரி ஆடுகிறாள். சபாஷ் சரியான போட்டி என்று தமிழுலகம் ரசித்த பாடல் இது.

    முதலாமவள் அமைதியாகத்தான் ஆடுகிறாள். பாடுகிறாள்.

    கண்ணும் கண்ணும் கலந்து இன்பம் கொண்டாடுதே
    என்னும் போதே உள்ளம் பந்தாடுதே

    அடுத்தவள் ஆங்காரமாக வரும் போதே ஆர்ப்பாட்டமாகத்தான் பாடுகிறாள்.

    ஜிலுஜிலுஜிலுவென நானே ஜெகத்தை மயக்கிடுவேனே
    கலகலகலவென்று ஜோராய் கையில் வளை பேசும் பாராய்

    இன்னொருத்தி வந்ததும் முதலாமவள் தன்மானம் உரசப்படுகிறது. அவளும் போட்டியில் குதிக்கிறாள்.

    ஆடும் மயில் எந்தன் முன்னே என்ன ஆணவத்தில் வந்தோயோடி
    பாடுங்குயில் கீதத்திலே பொறாமை கொண்டு படமெடுத்து ஆடாதேடி

    பார்த்தீர்களா… தான் விரும்புகிறவன் இன்னொருத்தியின் நடனத்தை ரசித்தான் என்று தெரிந்ததும் ஆடல் அரங்கத்தைப் போட்டி போடல் அரங்கமாக மாற்ற பெண்களால்தான் முடியும்.

    எது எப்படியோ! காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறினாலும்… கவிஞர் முத்துலிங்கம் எழுதியதைப் போல “என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான்” என்று இரண்டு பெண்கள் சண்டையிட்டுக் கொண்டால் அதை மக்கள் ரசிக்கத்தான் செய்வார்கள் என்பது மட்டும் மாறவே மாறாது போல!

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

    பாடல் – உனது மலர் கொடியிலே
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.இராமமூர்த்தி
    படம் – பாதகாணிக்கை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=grVbM9WJZks

    பாடல் – மலருக்குத் தென்றல் பகையானால்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன், டி.கே.இராமமூர்த்தி
    படம் – எங்க வீட்டுப் பிள்ளை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=jlGlD41oxJg

    பாடல் – அடி போடி பைத்தியக்காரி
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – தாமரை நெஞ்சம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=gxU3uBgng-E

    பாடல் – மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – ஜிக்கி, எஸ்.ஜானகி
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – தேனும் பாலும்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=KzcZFwOZSuk

    பாடல் – காலம் காலமாய் பெண் தானே
    வரிகள் – கங்கையமரன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, எஸ்.ஜானகி
    இசை – கங்கையமரன்
    படம் – கற்பூரதீபம்
    பாடலின் சுட்டி – http://youtu.be/SeZ6Z5ysm20

    பாடல் – மல்லிகையே மல்லிகையே
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர்கள் – அனுராதா ஸ்ரீராம், சித்ரா
    இசை – தேனிசைத் தென்றல் தேவா
    படம் – நினைத்தேன் வந்தாய்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Nu3uPoeEuss

    பாடல் – ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, வாணி ஜெயராம்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – தேவியின் திருமணம்
    பாடலின் சுட்டி – http://www.inbaminge.com/t/d/Deiviyin%20Thirumanam/Sridevi%20Varam%20Ketkiral.vid.html

    பாடல் – கடவுள் தந்த இருமலர்கள்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – இருமலர்கள்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=X7RxuQ4tUwU

    பாடல் – புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – ஜமுனாராணி, பி.சுசீலா
    இசை – வி.குமார்
    படம் – இருகோடுகள்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=hCR7rD4-K7c

    பாடல் – வந்தேன் வந்தேன் மீண்டும்
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர்கள் – நித்யஸ்ரீ, சுஜாதா
    இசை – தேனிசைத் தென்றல் தேவா
    படம் – பஞ்சதந்திரம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=sErsh9Kg7bk

    பாடல் – கண்ணும் கண்ணும் கலந்து
    வரிகள் – கொத்தமங்கலம் சுப்பு
    பாடியவர்கள் – ஜிக்கி, பி.லீலா
    இசை – சி.இராமச்சந்திரா
    படம் – வஞ்சிக்கோட்டை வாலிபன்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=AMotc9NQ9B8

    பாடல் – என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான்
    வரிகள் – கவிஞர் முத்துலிங்கம்
    பாடியவர்கள் – பி.எஸ்.சசிரேகா, எஸ்.பி.ஷைலஜா
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – கோபுரங்கள் சாய்வதில்லை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=_XjWcWHbB7A

    அன்புடன்,
    ஜிரா

    361/365

     
    • prabakar 6:42 am on November 29, 2013 Permalink | Reply

      படம் பெயர் நினைவில் இல்லை.கே.ஆர். விஜயாவும் ஜெயசுதாவும் பாடியிருக்கும் பாட்டு. அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து தீபம். எப்படி வேண்டுமானாலும் பெண்கள் வாழலாம் என்பதற்கும் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை கவிஞர் கண்ணதாசன் அருமையாக கூறியிருப்பார். கோடி பெண்களை பூமி கண்டது தெய்வமானவள் சீதை. என்ற அற்புதமான வரிகள் உள்ள பாடல் இந்த பாடலில் ஆண் நாயகன் குறித்து பாடப் படவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

    • Uma Chelvan 7:33 am on November 29, 2013 Permalink | Reply

      இரண்டு பெண்கள் ஒரு ஆணுக்காக பாடியது போலவே, இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணுக்காக ஏங்கி பாடியதும் உண்டே.!!! நம்ம அல்லா ரெக்ஹா இசையில் அருமையான “சஹானா” ராகத்தில் .

      என்னை கேட்டு காதல் வரவில்லையே ,
      நான் சொல்லி காதல் விடவில்லையே !!
      மறந்தாலும் காதல் மறக்காதம்மா !!

      ஒ வெண் நிலா …..இரு வானிலா !!

    • kamala chandramani 8:31 am on November 29, 2013 Permalink | Reply

      பன்னிரண்டு பாடல்கள் ஒரே பதிவில் முதன்முறையாக? என்ன ஆராய்ச்சி? நிஜமாகவே என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. வாழ்த்துகள் ஜி.ரா.

    • umakrishh 9:56 am on November 29, 2013 Permalink | Reply

      நல்ல ஆராய்ச்சி..:) புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக பாமா விஜயம்..அப்புறம் மல்லுவேட்டி மைனர் ல கூட ஒரு பாடல் வருமே..

    • rajinirams 10:05 am on November 29, 2013 Permalink | Reply

      ஆஹா,சான்சே இல்லை சார்.செம பதிவு.பாராட்டுக்கள்.நீங்கள் தேர்ந்தெடுத்த பெண்களின் பண்கள் எல்லாமே அருமை. என்னை நெகிழ வைக்கும் இன்னொரு பாடல் சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் பாட முடியாமல் தவிக்கும் பெண்ணிற்காக “மீரா”என்று பாடலை தொடரும் “பல்லவி ஒன்று மன்னன்” பாடல்.கே.பாலசந்தரின் இயக்கத்திலேயே இன்னொரு பாடல் வெள்ளி விழாவில் “கை நிறைய சோழி”பாடல்.டபுள்ஸ் படத்திலும் வைரமுத்துவில் ஒரு பாடல் நன்றாக இருக்கும்-ராமா ராமா ராமா என்று ஒரு பெண்ணும்,கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா என்று ஒருவரும் பாடும் பாடல். நன்றி.

    • பாலராஜன்கீதா 11:55 am on November 29, 2013 Permalink | Reply

      கந்தன் கருணை – மனம் படைத்தேன் (கே.ஆர்.வி – ஜெ.ஜே) 🙂

    • amas32 7:13 pm on November 29, 2013 Permalink | Reply

      இந்தப் பதிவு முடிவுக்கு வரும் சமயத்தில் சான்சே இல்லாமல் ஒரு சூப்பர் போஸ்ட் 🙂 எந்தப் பாட்டையும் விடு வைக்கவில்லை. ரசிகர்களுக்கு ஒரு கல்யாண சமையல் விருந்தே பரிமாறி விட்டீர்கள். இன்னும் சொல்ல என்ன இருக்கு! அற்புதம் 🙂

      இத்தனைப் பாடல்களிலும் என் மனத்தில் நிற்கும் பாடல் என்னவோ புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் மட்டுமே. அதற்குப் பல காரணங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.

      இன்னும் திரும்ப வந்து உங்கள் பதிவை பொறுமையாக இரண்டு முறை படிக்க வேண்டும் 🙂

      amas32

    • ராஜேஷ் 1:29 am on December 4, 2013 Permalink | Reply

      பாடல் – மல்லிகையே மல்லிகையே
      வரிகள் – கவிஞர் வைரமுத்து
      பாடியவர்கள் – அனுராதா ஸ்ரீராம், சித்ரா
      இசை – தேனிசைத் தென்றல் தேவா
      படம் – நினைத்தேன் வந்தாய்

      வரிகள் பழநிபாரதி

    • santhosh 10:47 am on August 8, 2021 Permalink | Reply

      hi sir ,
      I would like to talk with u for some ideas, kindly if u wish pls contact me-9585504287

  • G.Ra ஜிரா 10:54 am on June 28, 2013 Permalink | Reply  

    மோடிபற்றிக் கொஞ்சம் 

    சில சொற்களை நாம் அடிக்கடி பயன்படுத்தியிருப்போம். ஆனால் அதற்கு என்ன பொருள் என்று அவ்வளவாக சிந்தித்திருக்க மாட்டோம். அப்படியொரு சொல்லைத்தான் நாம் இன்று பார்க்கப் போகிறோம்.

    தொலைக்காட்சியில் “வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எந்தன் கதையே” என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் பாடலில் வந்த ஒரு வரிதான் என்னுடைய சிந்தனையைத் தூண்டி விட்டது.

    அனுதினம் செய்வார் மோடி
    அகமகிழ்வார் போராடி

    இந்த வரியில் வந்த மோடி என்ற சொல்லைத்தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

    பொதுவாகவே மோடி என்றால் அதுவொரு வித்தை என்ற அளவுக்கு நமக்குத் தெரியும். இந்தப் பாட்டிலும் அப்படித்தான் வருகிறது. அனுதினமும்(ஒவ்வொரு நாளும்) கணவன் மோடி வித்தை செய்து ஏமாற்றுகிறார் என்று பெண் குற்றம் சாட்டுவது போல பாட்டில் வருகிறது.

    சிலர் மோடி வித்தையை கண்கட்டு வித்தை என்றும் சொல்வார்கள். எப்படியோ, மோடி என்றால் ஒரு வித்தை. அதை வைத்து மக்களை ஏமாற்றலாம் (அல்லது) மகிழ்விக்கலாம் என்று தெரிகிறது.

    சரி ஐயா! மோடி என்ற சொல் எங்கிருந்து வந்தது?

    அதைப் புரிந்து கொள்ள கொஞ்சம் காலத்தால் பின்னோக்கிப் போக வேண்டும்.

    அந்தக் காலத்தில் மந்திர தந்திர வித்தைகளைக் கற்றுக் கொண்டவர்கள் மாகாளிக்கு நச்சு பொருட்களை இட்டு வேள்வி செய்து தீய மந்திரங்களை உச்சாடணம் செய்து பலி கொடுப்பார்களாம். அந்த பலியை ஏற்றுக் கொண்ட காளி குறிப்பிட்ட காலம் வரைக்கும் அவர்கள் இட்ட ஏவல்களை செய்வாளாம்.

    இந்த சக்திகளை வைத்துக் கொண்டு ஏதேதோ வித்தைகளைக் காளியின் அருளால் செய்து மக்களையும் மன்னர்களையும் மருட்டி வெருட்டி சொகுசாக வாழ்வார்களாம் அந்த மந்திரவாதிகள்.

    இப்படி காளியின் துணை கொண்டு செய்யப்படும் வித்தைக்கு காளியின் பெயரே அமைந்தது. ஆம். காளிக்கு மோடி என்றும் ஒரு பெயருண்டு.

    இப்போது புரிந்திருக்குமே மோடி வித்தை என்ற பெயர் வரக் காரணம்.

    காளியை மோடி என்று இலக்கியங்களிலேயே அழைத்திருக்கிறார்கள். அப்பரும் அருணகிரிநாதரும் கலிங்கத்துப்பரணி எழுதிய செயங்கொண்டாரும் மோடி என்ற பெயரில் காளியை அழைத்திருக்கிறார்கள்.

    உவையுவை உளஎன் றெண்ணி
    உரைப்ப தென்உரைக் கவந்த
    அவை அவை மகிழ்ந்த மோடி
    அவயவம் விளம்பல் செய்வாம்
    நூல் – கலிங்கத்துப்பரணி
    பாடியவர் – செயங்கொண்டார்

    காளிக்குப் படையல் வைக்கப்பட்டிருக்கிறது. படையல்களைப் பார்க்கிறாள் அன்னை. இருக்கின்ற எல்லாவற்றையும் கண்டு மகிழ்ந்து ஏற்றுக் கொள்கின்றாளாம் காளி. ஆனால் இந்தப் பாடலில் காளி என்ற பெயருக்குப் பதிலாக மோடி என்ற பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார் செயங்கொண்டார்.

    போகமார் மோடி கொங்கை
    புணர்தரு புனிதர்போலும்
    வேகமார் விடையர் போலும்
    வெண்பொடியாடு மேனிப்
    பாகமா லுடையர் போலும்
    நூல் – தேவாரம்
    பாடியவர் – அப்பர் (திருநாவுக்கரசர்)

    மோடி(காளி)யின் கொங்கை தனைப் புணர்ந்து போகத்தையும் ரசிக்கும் சிவனார் என்று திருநாவுக்கரசர் பாடுகிறார்.

    அருணகிரிநாதரை எதிர்த்த சம்பந்தாண்டானும் ஒரு மோடி வித்தைக்காரர்தான். காளி உபாசகராக இருந்து அருணகிரி மேல் காளியை ஏவி விட்டார். ஆனால் முருகன் அருளால் அருணகிரிநாதரும் பிழைத்தார். தமிழும் பிழைத்தது. அத்தோடு சம்பந்தாண்டானின் ஏவல் காலம் முடிவடைந்ததால் அதற்குப் பின்னர் காளி உதவவில்லை.

    இதுதான் மோடி வித்தையின் கதை.

    பதிவில் இடம் பெற்ற பாடல்
    பாடல் – வாராயோ வெண்ணிலாவே
    பாடியவர்கள் – ஏ.எம்.ராஜா, பி.லீலா
    பாடல் வரிகள் – தஞ்சை ராமையாதாஸ்
    இசை – எஸ்.ராஜேஸ்வரராவ்
    படம் – மிஸ்ஸியம்மா
    பாடலின் சுட்டி – http://youtu.be/1AbSd-UYoyo

    அன்புடன்,
    ஜிரா

    209/365

     
    • rajnirams 2:40 pm on June 29, 2013 Permalink | Reply

      ஓ,புதிய தகவல்-மோடி என்பதற்கு “காளி”என்றும் பொருள் என்று.நன்றி.-அதான் மோடின்னா எதிர்கட்சிகளுக்கு நாக்கு தள்ளுதோ:-))

    • NK 9:13 pm on February 17, 2024 Permalink | Reply

      மிக அருமை 👏👏👏

  • G.Ra ஜிரா 11:22 am on January 14, 2013 Permalink | Reply
    Tags: பொங்கல், Pongal   

    பொங்கலோ பொங்கல் 

    நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் மற்றும் தைப்புத்தாண்டு வாழ்த்துகள். இந்தத் திருநாள் அனைவருக்கும் நல்ல வாழ்க்கையையும் அறிவையும் அன்பையும் அருளையும் கொடுக்கட்டும்.

    ”ஏன் உழவு செய்கின்றீர்கள்? விட்டுவிட்டு வாருங்கள்” என்று ஒரு பிரதமரே சொல்லும் அவல நிலையில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதும் அதன் பெருமையை புரிந்து கொள்வதும் மிகமிகத் தேவையாகிறது.

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார். அந்த உழுதுண்டு வாழ்வோரே தொழுதுண்டு கொண்டாடும் பண்டிகைதான் தைத்திருநாள். தை பிறப்பு என்று சிறப்பாகப் போற்றப்படும் பண்டிகை இது. இந்த நன்னாளில் வேளாண்மை மீண்டும் சிறப்புற ஆண்டவனை வணங்குகிறேன்.

    இந்தப் பொங்கல் பண்டிகையின் பெருமையைச் சொல்லும் பாடல்கள் திரைப்படங்களில் நிறைய உள்ளன. ஆனால் அவைகளில் எல்லாம் ஆகச் சிறந்த பாடலாக நான் கருதுவது மருதகாசி அவர்கள் எழுதிய தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பாடல்தான்.

    தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்
    தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
    தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
    ஆடியிலே வெதை வெதைச்சோம் தங்கமே தங்கம்
    ஐப்பசியில் களையெடுத்தோம் தங்கமே தங்கம்
    கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
    கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
    கழனியெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம்
    படம் – தை பிறந்தால் வழி பிறக்கும்
    பாடியவர்கள் – டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் பி.லீலா
    பாடல் – ஏ.மருதகாசி
    இசை – கே.வி.மகாதேவன்

    அன்றன்று வேட்டையாடி அன்றன்று உண்ட மனிதன் நாகரிகம் கொண்டதற்கு அடையாளம் வேளாண்மைதான். ஆறு மாத உழைப்பும் ஆறு மாத ஓய்வுமாய் மனிதனை மாற்றியது வேளாண்மைதான். ஆகையால்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பழமொழியே உண்டானது.

    பொங்கல் என்றாலே கரும்பை மறக்க முடியுமா? நீரை மொடாக் குடியாக குடித்து வளர்ந்து அந்த நீரிலே இனிப்பு கலந்து கொடுக்கும் புல்லே கரும்பு. அந்தக் கரும்புப்புல் காற்றில் லேசாக ஆடுவதைப் பார்க்கிறார் கவியரசர் கண்ணதாசன். கரும்பா பெண் என்னும் அரும்பா என்னும் ஐயத்தில் இப்படியொரு பாட்டை எழுதுகிறார். காதலும் கரும்பும் இனிப்பதால் ஒன்று. இரண்டும் பழசாக ஆக போதை கூட்டும் என்று தெரிந்து எழுதுகிறார்.

    தை மாதப் பொங்கலுக்கு
    தாய் தந்த செங்கரும்பே
    தள்ளாடி வாடி தங்கம் போலே
    மையாடும் பூவிழியில்
    மானாடும் நாடகத்தை
    மயங்கி மயங்கி ரசிக்க வேண்டும் வாடி
    நீ என்னை தேடுவதும்
    காணாமல் வாடுவதும்
    கடவுள் தந்த காதலடி வாடி
    படம் – நிலவே நீ சாட்சி
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    பாடல் – கவியரசர் கண்ணதாசன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

    தை பிறந்த வேளையில் எல்லோர் வீட்டிலும் புதுப்பானை இருக்கிறதா? எல்லோர் வீட்டிலும் புதுநெல் இருக்கிறதா? புத்தம் புதிதாய் கறந்த பாலும் அந்தப் பாலிலிருந்து எடுத்த நெய்யும் இருக்கிறதா? புதுக்கரும்பை ஆலையில் ஆட்டிச் சாறுபிழிந்து காய்ச்சி எடுத்த வெல்லம் இருக்கிறதா? இவையெல்லாம் இல்லாத ஏழைகளும் நாட்டில் உண்டு. அவர்களுக்குப் பொங்கல் இல்லையா?

    இருக்கிறது என்கிறார் கவியரசர் கண்ணதாசன். குடிசை வீட்டுக் கோமதகமான குழந்தையின் கன்னத்து முத்தத்து இனிப்பை விடவா சர்க்கரைப் பொங்கலும் செங்கரும்பும் இனித்து விடும்?

    பூஞ்சிட்டுக் கன்னங்கள்
    பொன்மணி தீபத்தில்
    பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
    பொங்கல் பிறந்தாலும்
    தீபம் எரிந்தாலும்
    ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
    படம் – துலாபாரம்
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா மற்றும் ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜன்
    பாடல் – கவியரசர் கண்ணதாசன்
    இசை – டி.தேவராஜன்

    ஏழைகள் கண்ணீரையெல்லாம் துடைக்கும் பொங்கல் பண்டிகைகள் இனிமே ஒவ்வொரு ஆண்டும் வர வேண்டும் என்று வேண்டும்.

    வளமையின் பண்டிகையான பொங்கலின் மற்றொரு வழமை மஞ்சளாகும். கொத்து மஞ்சளை புத்தம் புதிதாய் பறித்து மங்கலப் பொருளாய் வைப்பார்கள். அந்த மஞ்சளையே காய வைத்துப் பொடியாக்கிப் பயன்படுத்துவதும் உண்டு. மஞ்சள் மங்கலமாவது மங்கையில் மனதுக்கினிய வாழ்வில்தானே. அதை நினைத்துதான் காதலில் பொங்கல் வைக்கிறார் வாலி.

    பொங்கலு பொங்கலு வெக்க
    மஞ்சள மஞ்சள எடு
    தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
    புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி
    நம் கட்சி நம் கட்சி நம் கட்சி
    பூ பூக்கும் மாசம் தை மாசம்
    ஊரெங்கும் வீசும் பூவாசம்
    படம் – வருஷம் 16
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    பாடல் – வாலிபக் கவிஞர் வாலி
    இசை – இசைஞானி இளையராஜா

    எப்படியான சூழ்நிலையிலும் பொங்கல் கொண்டாட்டம் மகிழ்ச்சியைப் பெருக்கும். அந்த மகிழ்ச்சியை அப்படியே வாலி அவர்கள் வரிகளில் வார்த்துக் கொடுக்க, அத்தோடு இசையைக் கோர்த்துக் கொடுத்திருக்கிறார் இளையராஜா.

    தைப் பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
    வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியைப் போற்றிச் சொல்லடியோ
    இந்தப் பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் தெய்வமடி
    இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
    படம் – மகாநதி
    பாடியவர் – கே.எஸ்.சித்ரா
    பாடல் – வாலிபக் கவிஞர் வாலி
    இசை – இசைஞானி இளையராஜா

    இப்படி உழவும் தொழிலும் சிறந்த வேளாண் பெருமக்களின் பொங்கல் திருநாள் இன்றும் இருக்கிறது. எப்படி இருக்கிறது தெரியுமா?

    ஆடுங்கடா என்னச் சுத்தி
    நான் ஐயனாரு வெட்டுகத்தி
    பாடப் போறேன் என்னப் பத்தி
    கேளுங்கடா வாயப் பொத்தி
    கெடா வெட்டிப் பொங்கல் வெச்சா காளியாத்தா பொங்கலடா
    துள்ளிக்கிட்டு பொங்கல் வெச்சா ஜல்லிக்கட்டு பொங்கலடா
    போக்கிரிப் பொங்கல் போக்கிரிப் பொங்கல்
    படம் – போக்கிரி
    பாடியவர் – நவீன்
    பாடல் – கபிலன்
    இசை – மணி சர்மா

    இப்பிடிப் போக்கிரியான பொங்கல் மீண்டும் மறுவாழ்வு பெற்று வேளாண்மை சிறந்து மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தமிழகம் உருவாக இறைவனை வேண்டுகிறேன்.

    பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!

    அன்புடன்,
    ஜிரா

    044/365

     
    • kamala chandramani 12:16 pm on January 14, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு ராகவன். உழவர்கள் வாழ்வு மலர அரசாங்கம் நிறைய செய்யவேண்டும் என்று இறைவனை வணங்குகிறேன். சினிமாப் பாடல்களுடன் இலக்கியத்தைக் கலந்து மிக நல்ல பதிவுகளைத் தரும் உங்களுக்கும், திரு. சொக்கன், மோக்ரீஷ் அனைவருக்கும் நன்றி. பொங்கல் நல் வாழ்த்துகள்.

      • Niranjan 8:07 pm on January 14, 2013 Permalink | Reply

        அருமையான பதிவு 🙂 🙂 பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!

        • GiRa ஜிரா 8:52 pm on January 14, 2013 Permalink

          நன்றி நிரஞ்சன். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 🙂

      • amas32 8:38 pm on January 14, 2013 Permalink | Reply

        //பூஞ்சிட்டுக் கன்னங்கள்
        பொன்மணி தீபத்தில்
        பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
        பொங்கல் பிறந்தாலும்
        தீபம் எரிந்தாலும்
        ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே/

        சாரதா அவர்களின் நடிப்பு அப்படியே கண் முன்னே நிற்கிறது. இதுவே வார்த்தைகள் சிறிது மாறி சோக கீதமாகவும் வரும்.

        வாழ்க்கை ஒரு வட்டம் என்பது உண்மையானால் வேளாண்மை மீண்டும் அதற்குண்டான மேன்மை நிலையை நிச்சயம் அடையும்!

        amas32

        • GiRa ஜிரா 8:53 pm on January 14, 2013 Permalink

          அருமையான பாடல் அது. சாரதாவுக்கு ஊர்வசி பட்டம் வாங்கிக் கொடுத்த படமல்லவா. மலையாளம் தொடங்கி தமிழ், தெலுங்கு என்று இந்தி வரைக்கும் சென்ற படமாயிற்றே.

      • GiRa ஜிரா 8:52 pm on January 14, 2013 Permalink | Reply

        இனிய பொங்கல் வாழ்த்துகள் அம்மா.

        உண்மைதான். உழவருக்கு அரசாங்கம் ஆதரவு தெரிவிக்காமல் போகுமானால் இறைவனே இறங்கி வந்து ஆதரவு தெரிவிக்க வேண்டி வரும். அன்று அரசாங்கமும் அதற்கு ஆதரவாக இருந்தவர்களும் தொழுதுண்டு வாழ வேண்டியவர்கள் ஆவார்கள்.

    • Rajan D. R 11:50 am on January 18, 2013 Permalink | Reply

      மசக்கைக்கு முன்னும் பின்னும் கூட புளிப்பு காரம் இவற்றின் மீது பெண்களுக்கு ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கின்றது. பானிபூரி மீது அவர்கள் கொண்டிருக்கும் மோகத்தை உளவியல் மற்றும் பரினாம வளர்ச்சி பார்வையில் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கின்றது

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel