Updates from September, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • என். சொக்கன் 9:30 pm on September 18, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு: பூச்சரமே 

    சாதி மல்லிப் பூச்சரமே ..சங்கத் தமிழ்ப் பாச்சரமே ஆசையின்னா ஆசையடி அவ்வளவு ஆசையடி ”

    சிறு வயதில் பாரதிதாசன் பற்றி பாட நூலில் படித்த பொழுது ஒரு பெண் எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்று “இருண்ட வீடு” கதையிலும் எப்படி இருக்க வேண்டும் என்று “குடும்ப விளக்கு ” கதையிலும் ொல்லி இருப்பார் என்று தேர்வு நிமித்தம் படித்ததோடு சரி . அதன் பிறகு அதனை மறந்தே போனேன்.

    கணவருக்கு ஊட்டி விடுவது பற்றி @amas32 ஒரு ட்வீட் போட நான் பதிலுக்கு அப்படி ஒரு கற்பனை செய்து பார்த்தேன் என்று கிண்டலடிக்கவும் @nchokkan நீங்கள் பாரதிதாசனின் குடும்ப விளக்கு படியுங்கள் என்று காரணம் சொல்லாமல் ிங்க் கொடுத்துவிட்டுப் போய்விட்டார் .சரி என்று படித்துக் கொண்டிருக்கும் பொழுதே “குடும்ப விளக்கு” க்குத் தக்கவாறு இந்தப் பாடல் வெகுவாகப் பொருந்திப் போவதை உணர்ந்தேன். ஒருவேளை அவர் இப்பொழுது எழுதி இருந்தால் பெண்ணீய வாதிகள் எவரேனும் சண்டைக்கு வந்தாலும் வரலாம் 🙂 ஆனால் இப்பொழுது படித்தாலும் இனிக்கவே செய்கிறது 🙂

    ஆணோ , பெண்ணோ இருவரும் அன்புக்குக் கட்டுப்பட்டு அடிமைத் தனத்தை விரும்பி ஏற்கும் பொழுது ஆணாதிக்கம் பெண்ணீயம் அனைத்தும் ஒரு புள்ளியில் மறைந்தே போகின்றது .

    “குடும்ப விளக்கில்”பகல் முழுக்க அவள் செய்யும் வேலைகள் அவள் குடும்பம் நடத்தும் பாங்கு என்று விவரித்து விட்டு சின்னச் சின்ன அன்புப் பரிமாற்றங்களையும் சொல்லி விட்டு இரவு நேரத்தில் ஓர் அறைக்குள் நாயகனும் நாயகியும் இணைந்து நிற்கும் தருணம் , சற்றே ஆர்வக்கோளாறில் நாற்காலியை இழுத்துப் போட்டு சீட்டின் நுனியில் அமர்கிறேன் அடுத்து என்ன சொல்லப் போகிறாரோ என்று 🙂

    ஆனால் நாயகி கவலையுடன் நாட்டுக்கு என்ன செய்தோம் என்ற பேச்சை ஆரம்பிக்கிறாள் இந்தக் காட்சியின் அடிப்படையில் சற்றே உல்டாவாக , தலைவன் தலைவிக்கு சொல்லும் விதமாக கவிஞர் புலமைப் பித்தன் வெகு அழகாகஎழுதியுள்ள பாடலே இது .

    ​எனக்கு இது மறக்க முடியாத பாடலாகிப் போனதற்கு காரணம் ஒன்று உண்டு ​.கல்லூரியில் பாட்டுப் போட்டியில் தோழிக்கு இந்தப் பாடலைப் பரிந்துரை செய்திருந்தேன். அவளும் சரி என்று சொல்லி விட்டு அங்கே பாடறியேன் படிப்பறியேன் பாடி விட்டாள் .மைக் முன்பு அவள் நிற்கும் வரை பாடலை மாற்றுவதைப் பற்றி அவள் சொல்லவே இல்லை. அதிலே ஒரு வருத்தம் அவள் மீது. அதனால் பாடலைக் கேட்கும் பொழுது அந்த நினைவுகளும் கோர்வையாக வந்து விழும் .

    “சாதி மல்லிப் பூச்சரமே ” முத்ல் வரியே தகராறாக ஒரு முறை விவாதித்தோம் ட்விட்டரில் 🙂 சாதி மல்லி என்பது பிச்சி என்று @anu_twits சொல்ல இல்லை இல்ல மல்லிகையில் உயர் தரம் வாய்ந்த மல்லிகை என்று நான் சொல்ல ஒரே பூ வாசனை டைம் லைனில் ஒரு மணி நேரத்திற்கும் மேல். இன்றுவரை பிச்சியை சாதி மல்லியாக நான் ஒத்துக் கொள்ளவே இல்லை போலவே அவரும் 🙂

    புதுப் புது அர்த்தங்களில் விளைந்த கருத்து வேறுபாடுக்குப் பிறகு ராஜாவும் பாலசந்தரும் கை கோர்க்கவே இல்லை .ராஜா ஜாம்பாவானாக வலம் வந்து கொண்டிருந்ததருணத்தில் துணிந்து வேறு ஒருவரை இசையமைப்பாளராகப் போட்டு பால சந்தர் எடுத்த ரிஸ்க்குக்கு தான் தகுதியானவன் என்று நிரூபித்து இருக்கிறார் மரகத மணி . பாடல்களெல்லாம் முத்துகள் . MSV யோ இளையராஜாவோ ,மரகதமணியோ ,AR ரகுமானோ தனக்குத் தேவையான பாடல்களைக் கறந்து விடுவதில் இயக்குநர் KB வல்லவர் என்றே அவரின் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பறை சாற்றுகின்றன .

    இந்தப் பாடலுக்கான பின்னணி வெகு சுவ்ராசியம்.அதிலே பாரதிதாசனின் பாடலைப் புகுத்த வேண்டும் என்ற யோசனைக்காக இயக்குனருக்கு ஒரு ஷொட்டு. ஒருவர் ட்வீட் கூட RT ஆகி வந்தது இது போன்று சினிமாவில் புகுத்தப் பட்ட பாரதியார் பாரதிதாசன் பாடல்களை மட்டுமே பெரும்பாலோனோர் இதுவரை அறிந்திருக்கிறோம் என்று . .நிதர்சனமான உண்மை. ஆக சினிமா என்ற மாபெரும் ஊடகம் மூலமாக எடுத்துச் செ(சொ)ல்லப் படும் சேதிகள் தக்க வீரியத்தோடு மக்களைச் சென்றடையும்.அதனால் படத்திற்குத் தகுந்தாற்போல் மிகப் பொருத்தமாக உறுத்தாமல் KB உட்புகுத்தியதைப் போல வரும் தலைமுறை இயக்குனர்களும் செய்தால் நலம் .

    வெள்ளை &வெள்ளை கருப்புக் கண்ணாடியில் மம்முட்டி இன்னும் அழகுடன் மிளிர பாடலின் வீணை இடையிசைக்கெல்லாம் துள்ளலுடன் பானுவின் இடையும் அசைகிறது.தான் விரும்பிய் காதலன் தன் பெயரை உச்சரிக்க வேண்டும் என்று கண்மணி என்று மாற்றி எழுதுவதும் அதை வேறு ஒருவருக்குச் சமர்ப்பிப்பதில் அதிர்ந்தும் போவதுமாக கீதாவின் நடிப்பு கனகச்சிதம் .

    “எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
    இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா ”
    “யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
    பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது கண்மணி”

    யாதும் ஒரே யாவரும் கேளிர் எனச் சொன்னது கணியன் பூங்குன்றனார் ..பாரதிதாசனோடு அவரையும் உள்ளிழுத்து விட்டார் புலமைப் பித்தன்

    பாடல் ஆரம்பிப்பதுக்கு முன்பு அழகான உச்சரிப்போடு ஏற்ற இறக்கத்துடன் மம்முட்டி சொல்வதும் அழகு.உதாரணம் கன்னித் தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று “பின்பு ” என்பதை நிறுத்திச் சொல்லி கட்டிலில் தாலாட்டு என்பார்.

    தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் கொதிப்பினை நினைவூட்டும் விதமாக “உலகம் யாவும் உண்ணும் போது நாமும் சாப்பிட எண்ணுவோம் ” என்ற வரிகள் இருக்கின்றது .காதல் மொழி பேச வேண்டிய தருணத்தில் நாட்டைப் பற்றிக் கவலைப் பற்றி அக்கறைப் படுவது நமக்கு இந்த காலத்தில் மிகை தான் . குறைந்த பட்சம் இப்படி கற்பனையிலாவது நடக்க்கிறதே என்று எண்ணிக் கொள்ள வேண்டியதுதான் 🙂

    ஒரு இசைக்கு பானு சரிவான பகுதியில் சடசடவென ஆடிக்கொண்டே இறங்குவார் ..அந்த இசைக்கு அக்காட்சியமைப்பு அவ்வளவு பொருத்தம் . பொதுவாக ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால் என் செல்லம் இல்ல கண்மணி,ராசாத்திஎன்ற அழைப்புகள் சொல்லிக் காரியம் சாதிப்பதுண்டு தலைவனும் தலைவியை அவ்வாறே கொஞ்சி காரியம் சாதிக்கப் பார்க்கிறார் 🙂 “கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு ”

    வெறும் பாடலோடு நிறுத்தாம பாரதிதாசனின் அந்தக் கவிதையோடும் ,பின்னணிக் காட்சியோடு சேர்த்தே ரசிக்க ​
    http://www.youtube.com/watch?v=9G8e0uaWzLw

    உமா கிருஷ்ணமூர்த்தி

    தென் மதுரைச் சீமையைச் சேர்ந்தவர். ட்விட்டரில் பெரியாள். தன்னுடைய வலைப்பதிவுக்கு (http://umakrishhonline.blogspot.in/) ”நிச்சயம் புரட்சிப்பெண் அல்ல, மனித கூட்டங்களின் நடுவே எனக்கென்று ஒரு அடையாளத்தை மட்டுமே விரும்புகின்றேன்” என்று Tagline வைத்திருக்கிறார்.

    ”வேற எதாவது சொல்லுங்க” என்றால் இப்படிப் பதில் வருகிறது: “மண் சட்டியில் சோறு ஆக்கி விளையாடுவது பிடிக்கும். பல்லாங்குழி வீட்டில் வைத்து இருக்கிறேன். மழை நின்றபிறகு மரத்தில் உள்ள நீரை உதிர்த்து விளையாடுவது பிடிக்கும். ஆற்று மணலில் வீடு கட்டி விளையாடுவது பிடிக்கும்”

     
    • GiRa ஜிரா 9:41 pm on September 18, 2013 Permalink | Reply

      அட்டகாசம். உங்களை நாலு வரி நோட்டு எழுத வைத்த பாரதிதாசனுக்கும் புலமைப் பித்தனுக்கும் கனியன் பூங்குன்றனுக்கும் நன்றி. எழுதத் தூண்டிய நாகாவுக்கும் தான். 🙂

    • amas32 9:45 pm on September 18, 2013 Permalink | Reply

      உங்கள் குரலிலேயே முழுவதும் கேட்டு முடித்தேன். அப்படியே பேசுவதுபோல் உள்ளது உங்கள் எழுத்து 🙂

      அருமையாக எழுதியிருக்கிறீர்கள் என்று சொல்லவும் வேண்டுமோ?

      ஒரு பாடல் வெற்றிபெற வேண்டும் என்றால் பாடல் வரிகள், இசை, பாடகர்களின் தெளிவான உச்சரிப்பு, காட்சியமைப்பு, நடிகர்களின் பங்களிப்பு அனைத்தும் A 1 ஆக இருக்க வேண்டும். இந்தப் பாடல் அதற்கு ஒரு சான்று! எவ்வளவு தடவை பார்த்தாலும் அலுக்காது.

      சூப்பர் பதிவு உமா 🙂

      amas32

    • Uma Chelvan 3:00 am on September 19, 2013 Permalink | Reply

      Very Beautifully written Uma!

      ஏட்டிக்கு போட்டியாக பேசுவதும், ஆண்களை பொது வெளியில் அவமான படுத்துவதும் தான் “பெண்ணியம்” என்று இன்று பல பேர் நினைக்கிறாங்க! அதிகம் படித்தவர்களே இந்த தப்பை ரொம்ப பண்ணறாங்க !”தேவதாசி முறை இருக்கட்டும் ” என்று சொன்ன திரு.சத்திய மூர்த்தியிடம் ” அப்படி என்றால் உன் வீட்டு பெண்களை அனுப்பு இவர்களை விட்டு விடு” என்று சொன்ன Dr. .முத்து லக்ஷ்மி ரெட்டி அவங்க பேசுனது பெண்ணியம். து .இன்று மத்தவங்க பேசுறது எல்லாம் என்ன வென்று பேசுறவங்கதான் சொல்லணும் !!!!

      “ஆணோ , பெண்ணோ இருவரும் அன்புக்குக் கட்டுப்பட்டு அடிமைத் தனத்தை விரும்பி ஏற்கும் பொழுது ஆணாதிக்கம் பெண்ணீயம் அனைத்தும் ஒரு புள்ளியில் மறைந்தே போகின்றது …………………………அதுதான் அமைதிக்கும் நிம்மதிக்கும் வழி!!!

      காலடியில் விழுந்தது மட்டும் அல்லாமல் எழவும் முடியாமல் இருப்பதுவும் சிறப்புதான்!!

    • Uma Chelvan 3:19 am on September 19, 2013 Permalink | Reply

      Just 3 minutes video, watch and enjoy!!!!

    • umakrishh 7:59 am on September 19, 2013 Permalink | Reply

      மிக்க நன்றி ஜிரா 🙂 மிக்க நன்றி அம்மா 🙂 மிக்க நன்றி உமா 🙂
      உமா நீங்க சொன்ன மாதிரி சொன்னா அப்போ என் வீட்டுப் பெண்ணும் தேவதாசியும் ஒன்றா எப்படி ஒப்பிடப் போச்சு என்று டைம் லைனில் கட்டி உருளுவார்கள் ..அப்படி பல சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன 🙂
      ட்விட்டரில் என்னை உயிர்ப்புடன் வைத்திருப்பது இது போன்றவைகள் தாம்..பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் விசயம் நாம் நிறைய அறியலாம் இங்கே..ஊக்கம் கொடுக்கும் உங்களைப் போன்ற நண்பர்களே என்னை இந்த அளவுக்கு எழுத வைப்பது ..இச்சிறு விளக்கை கோபுரத்தில் வைத்து அழகு பார்க்கும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி ..:)

    • Chari Iqbal Emendis (@Rasanai) 9:15 am on September 19, 2013 Permalink | Reply

      அட்டகாசம் உமா..இந்த பாட்டுன்னோன நேராவே அர்த்தம் புரிஞ்சுடுதே, என்ன புதுசா இருக்கப்போகுதுன்னு தோனிச்சு..எல்லாம் கலந்து செம ரைட்டப்.

      குறிப்பா இந்த வரிகள் கிளாஸ். எனக்கு அவ்வளவு ஒத்துப்போகுது 😉

      ”ஆணோ , பெண்ணோ இருவரும் அன்புக்குக் கட்டுப்பட்டு அடிமைத் தனத்தை விரும்பி ஏற்கும் பொழுது ஆணாதிக்கம் பெண்ணீயம் அனைத்தும் ஒரு புள்ளியில் மறைந்தே போகின்றது .”

      வெல்டன் உமா..

    • rajinirams 10:54 am on September 19, 2013 Permalink | Reply

      amas32 அவர்கள் கூறியது போல பேசுவது போலவே இருந்த யதார்த்தமான பதிவு.பாரதிதாசனையும் கணியன் பூங்குன்றனாரையும் தன் எழுத்துக்களில் கொண்டுவந்த புலவர் புலமைப்பித்தனின் திறமைக்கு இந்த பாடல் நல்ல சான்று. பூச்சரம்,பாச்சரம் என தூய தமிழில் பாடல்கள் இப்போது வராததும் கவலையளிக்கிறது. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

      • kamala chandramani 11:57 am on September 19, 2013 Permalink | Reply

        அருமையான பதிவு உமா அவர்களே. மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.பாரதிதாசனையும், கணியன் பூங்குன்றனாரையும் தன் எழுத்துக்களில் இணைத்த புலமைப் பித்தன், அருமையான நடிப்பு. எடுத்துச் சொல்லியிருக்கும் பாணி அருமை.

    • Prabhu 9:27 pm on September 19, 2013 Permalink | Reply

      Somebody just confused ‘Pulamai pithan’ with ‘Pudhumai pithan’. I imagine chokkan’s reaction. Ha.. Ha…

      • என். சொக்கன் 9:40 pm on September 19, 2013 Permalink | Reply

        Corrected 😉

    • jroldmonk 11:31 pm on September 19, 2013 Permalink | Reply

      ஆனாலும் பாத்துட்டு தான் இருக்கோம் முன்பு “மாலையில் யாரோ மனதோடு பேச ..” பதிவு இப்போ இந்த பதிவு, பானுப்ரியாவை கொஞ்சம் ஓவரா தான் ரசிக்கிறீங்க 😛

      • umakrishh 4:02 pm on September 23, 2013 Permalink | Reply

        நன்றி மாங்கு…பானு ஒரு வித அழகு ..அவங்க நடனம் பிடிக்கும் :))

    • Deva 7:18 am on September 20, 2013 Permalink | Reply

      I was under impression that’s this song was written by vairamuthu. My respect towards pulamaipithan increasing day by day.

    • Thiyagarajan 7:38 am on September 20, 2013 Permalink | Reply

      எல்லோராலும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் உங்கள் பார்வையை பதிவு செய்திருக்கிரிர் . குறிப்பாக நீங்கள் பயன்படுத்திய இரண்டு வரி மிகவும் அருமை ” ஆணோ , பெண்ணோ இருவரும் அன்புக்குக் கட்டுப்பட்டு அடிமைத் தனத்தை விரும்பி ஏற்கும் பொழுது ஆணாதிக்கம் பெண்ணீயம் அனைத்தும் ஒரு புள்ளியில் மறைந்தே போகின்றது”. இந்த வரிக்காவே அவரை நிச்சயம் பாராட்ட வேண்டும் ” வாழ்த்துகள் உமாகிருஷ்”.

      • umakrishh 4:02 pm on September 23, 2013 Permalink | Reply

        நன்றி தியாகராஜன் :))

    • umakrishh 4:01 pm on September 23, 2013 Permalink | Reply

      நன்றி 🙂 ரசனைக்காரரே :))நன்றி ரஜினிராம்ஸ் நன்றி கமலா மேடம் 🙂

  • mokrish 9:04 pm on September 16, 2013 Permalink | Reply  

    இல்லற ஜோதி 

    சில தினங்களுக்கு முன்பு ட்விட்டரில் ஒரு சுவாரசியமான உரையாடல். நான் வழக்கம் போல் பெவிலியன் சீட்டில் உட்கார்ந்து ரசித்துக்கொண்டிருந்தேன். விவாதத்தின் இடையில் நண்பர் @nchokkan பாரதிதாசனின் குடும்ப விளக்கு படிக்க link கொடுத்தார். வாழ்வியல் பற்றிய அருமையான வரிகள். படிக்கும்போதே மனதில் காட்சிகள் விரியும் ஒரு விஷுவல் எழுத்து.

    ஒருநாள் நிகழ்ச்சி என்ற முதற் பகுதியின் தலைப்பை படித்தவுடன் எனக்கு ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. கண்ணதாசன் பாலும் பழமும் என்ற படத்தில் எழுதிய ஆலய மணியின் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் பி சுசீலா) மனைவி காலை மாலை இரவு என்ற மூன்று காலம் பற்றி பாடுகிறாள்.

    https://www.youtube.com/watch?v=GN2a7WO3wkI

    ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

    அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

    என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்

    உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்

    இளகும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே

    ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்

    காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே

    யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே

    காலை நேரத்து ஒலிகள், கணவனே கண் கண்ட தெய்வம், மாலையில் அவன் வருகை, யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் என்ற வரிகளில் ஒரு சிறுகதை.

    தொடர்ந்து படித்தால் காலை மலர்ந்தது, அவள் எழுந்தாள், கோலமிட்டாள் என்ற தலைப்புகள். அடடா இது போல கண்ணதாசன் பாடல் உண்டே என்றே தோன்றியது. நீ படத்தில் ஒரு பாடல் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் பி சுசீலா)

    https://www.youtube.com/watch?v=2tDB6NWrXdg

    வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்

    வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்

    மஞ்சள் கொஞ்சிடும் மங்கள முகத்தில்

    குங்குமம் விளங்கட்டுமே –

    கைவளையாடலும் காலடி ஓசையும்

    வருகையை முழங்கட்டுமே -பாவை

    வருகையை முழங்கட்டுமே

    இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை, விடியும் வேளைதான். ’தெருக்கதவு சார்ந்ததாழ் திறந்து, அரிசிமாக் கோலம் அமைத்தனள்’ என்ற வரிதான்  ‘வாசலில் கோலமிட்டேன்’ என்று வருகிறதோ?அடுத்த சரணத்தில் மனைவி கணவனை எழுப்பும் ஒரு காட்சி சொல்கிறார்

    மார்கழி திங்களை மூடிய பனித்திரை

    காற்றினில் விலகட்டுமே -காலை

    காற்றினில் விலகட்டுமே

    வாடையில் வாடிய மேனியை மூடிய

    மன்னவன் விழிக்கட்டுமே – காதல்

    மன்னவன் விழிக்கட்டுமே

    வாடையில் வாடிய  மேனியை மூடிய மன்னவன் … அருமை!  கண்ணதாசன் பாடல்களை அடுக்கினால்  ஒரு புது குடும்ப விளக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

    மோகனகிருஷ்ணன்

    289/365

     
    • amas32 10:00 pm on September 16, 2013 Permalink | Reply

      பாரதி தாசனின் குடும்ப விளக்கில் பொதுவாக ஒரு சராசரி குடும்பத்தில் நடப்பவைகளை அப்படியே பிட்டு பிட்டு வைத்துள்ளார் அவர். ரொம்ப modern household ல் நடப்பவை அல்ல. ஒரு நடுத்தர வர்க்க வீட்டில் இருக்கும் இல்லத்தரசி பாங்காக குடும்பம் நடத்தும் அழகை கண் முன்னே எழுத்தொவியமாக்கிக் காட்சிப் படுத்துகிறார். பெண்ணியம் பேசுபவர்கள் அவர் சொல்வதை criticise செய்வார்கள். ஆனால் உண்மையான இன்ப வாழ்வு மனைவி வீட்டில் இருந்து குழந்தைகளைப் பேணிக் காப்பதில் தான் தொடங்குகிறது. அவரின் குடும்ப விளக்கைப் படித்த பின் இன்றைய பாடலாசிரியர்கள் பலருக்கும் குடும்ப விளக்கின் தாக்கம் உள்ளதைப் பார்க்க முடிகிறது 🙂

      //யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே//
      தாம்பத்தியம் என்பது கணவன் மனைவிக்குள்ளே ஏற்படும் ஒரு அன்னியோன்னிய தொடர்பு. எப்படி வீட்டை நிர்வகிப்பதில் அவள் திறமை தேவைப்படுகிறதோ அதே திறமை அவள் கணவனை ஆட்சி செய்வதிலும் தேவைப்படுகிறது. அந்த ஆட்சி தழைந்து போவதில் ஆரம்பிக்கிறது. This is one place a woman rules by giving in to a man!

      தாய்/ மனைவி என்பதற்கான இலக்கணம் மாறிக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் பத்து மாதம் சுமந்து குழந்தையை இன்றும் சுமந்து பெறுவது பெண் தான். அதனால் அவளுக்குத் தான் குழந்தைகளை வளர்ப்பதில் பெரும் பங்கு உள்ளது. வேலைக்குச் செல்லும் பொழுது மற்றவர் தயவும் தேவையாகிறது, குழந்தை வளர்ப்பில் அவர்கள் பங்கும் சேர்ந்துக் கொள்கிறது. அப்போ வளர்ப்பில் கலப்படம் வருகிறது.

      நீங்கள் தேர்ந்தெடுத்த பாடல்கள் அனைத்தும் அருமை 🙂

      amas32

    • rajinirams 10:50 am on September 17, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு,பாரதி தாசன் அவர்களின் குடும்பவிளக்கு கவிதைக்கேற்ற அருமையான பாடல்கள்.இளகும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே

      ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்

      காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே

      யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே-கவியரசரின் அற்புத வரிகள்.

    • Uma Chelvan 2:33 pm on September 17, 2013 Permalink | Reply

      அமாஸ் 32 அவர்களின் கருத்து மிக மிக அருமை . பெண் என்பவள் வீட்டில் இருந்து கணவனையும் குழந்தை , குடும்பம் ,பார்த்து கொள்வதுதுதான் நல்லது . நன்றாக படித்து வேலைக்கு சென்று இங்கும் நிம்மதி இல்லாமல் அங்கும் நிம்மதி இல்லாமல் உழல் பவர்கள் பல பேர். அப்படி மனைவி வீட்டில் இருந்து எல்லாம் பார்த்து கொள்ள வேண்டும் என்றால் கணவனின் அனுசரணை மிகவும் முக்கியம்., அன்பு, அழகு படிப்பு பண்பு பணம் வசதி அனைத்தும் இருந்தும் நல்ல கணவன் அமையாமல் கஷ்டப்படும் பல பேரை நான் அறிவேன்

      பந்தமும் பாசமும் நேசமும் அன்னை இல்லத்திலே,
      சொந்தமும் காதலும் இன்பமும் (????) கொண்ட உள்ளத்திலே ……..

      பேசு மனமே பேசு
      பேதை மனமே பேசு
      நாலு வகை குணமும்
      நிறைந்தே நடை போடு

  • என். சொக்கன் 11:57 pm on September 15, 2013 Permalink | Reply  

    உதவ வரும் ஆட்டோக்காரன் 

    • படம்: பாட்ஷா
    • பாடல்: நான் ஆட்டோக்காரன்
    • எழுதியவர்: வைரமுத்து
    • இசை: தேவா
    • பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
    • Link: http://www.youtube.com/watch?v=zCY6NeOsRvU

    இரக்கமுள்ள மனசுக்காரன்டா, நான்

    ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்டா,

    அஜக்குன்னா அஜக்குதான்,

    குமுக்குன்னா குமுக்குதான்!

    அஜக்கு என்றால் என்ன? குமுக்கு என்றால் என்ன?

    பொதுவாக சினிமாப் பாடல்களில் எழுதப்படும் இதுமாதிரி filler சொற்களுக்கு அர்த்தம் தேடக்கூடாது. சும்மா பாடுவதற்கு ஜாலியாக இருந்தால் போதும், அவ்வளவே.

    சமீபத்தில் பாரதிதாசன் பாடல்களைப் படித்துக்கொண்டிருந்தேன். அங்கே ‘தமிழர்க்கே சலுகை வேண்டும்’ என்ற பாடலின் நடுவே ஒரு வரி, ‘குமுக்கு சொல்லித் தமுக்கடிப்பீர்’ என்று இருந்தது.

    தமுக்கு என்றால் அர்த்தம் தெரியும், அது ஓர் இசைக்கருவி. ஆனால் குமுக்கு? அதற்கு என்ன அர்த்தம்? பாரதிதாசனுமா ஃபில்லர் வார்த்தைகளைப் பயன்படுத்துவார்?

    அந்த வரிக்குக் கீழேயே, அதையும் குறிப்பிட்டிருந்தார்கள். ”குமுக்கு = ஆதரவு” என்று.

    ஆச்சர்யத்துடன் அகராதியைப் புரட்டினேன். அங்கேயும் ‘குமுக்கு’ என்றால் ‘assistance’ என்று உள்ளது.

    ஆக, குமுக்கு என்றால் குமுக்குதான், குமுக்கு என்றால் உதவிதான் என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம். ஆட்டோக்காரர்கள் நமக்குப் பல உதவிகளைச் செய்கிறார்கள் அல்லவா?

    அப்போ அஜக்கு? அதற்கும் அர்த்தம் இருக்குமோ? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்!

    ***

    என். சொக்கன் …

    15 09 2013

    288/365

     
    • rajinirams 10:36 am on September 16, 2013 Permalink | Reply

      இது போன்ற பாடல்கள் தஞ்சை ராமையா தாஸ் காலத்திலிருந்தே வர ஆரம்பித்து மக்களை “மகிழ்ச்சி”அடைய வைத்திருக்கின்றன#ஜாலிலோ ஜிம்கானா-அமரதீபம். அஜக்குன்னா குஜால்:-)))))

    • amas32 9:15 am on September 17, 2013 Permalink | Reply

      அஹா, இன்னிக்கு அற்புதமான ஒரு சொல்லை தேர்வு செய்திருக்கிறீர்கள் 🙂 நீங்கள் ஒ மஹசீயா ஒ மஹசீயா என்ற அருமையான பாடலை (தமிழ் படம்) நாலு வரி நோட்டில் பிரிச்சு ஆராயணும் என்பது என் அவா :-))

      amas32

  • G.Ra ஜிரா 12:32 pm on September 3, 2013 Permalink | Reply  

    காலை எழுந்தவுடன் பாட்டு 

    பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய குடும்ப விளக்கு என்ற நூலைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு காட்சி. பொழுது புலர்கிறது. இல்லறத் தலைவி எழுகிறாள். அப்போது அவள் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்து விட்டு யாழை மீட்டிப் பாடுகிறாள். அந்த இனிய பாடலைக் கேட்டு கணவனும் குழந்தைகளும் கண்விழிக்கிறார்கள்.

    யாழின் உறையினை எடுத்தாள்; இசையில்
    ‘வாழிய வையம் வாழிய’ என்று
    பாவலர் தமிழிற் பழச்சுவை சேர்த்தாள்.
    தீங்கிலாத் தமிழில் தேனிசைக் கலவைபோல்
    தூங்கிய பிள்ளைகள், தூங்கிய கணவனின்
    காதின் வழியே கருத்தில் கலக்கவே,
    மாதின் எதிர்அவர் வந்துட் கார்ந்தனர்
    அமைதி தழுவிய இளம்பகல்,
    கமழக் கமழத் தமிழிசை பாடினான்

    காட்சி முற்போக்குத்தனமா பிற்போக்குத்தனமா என்பதை ஆராய்வதை விட காட்சியின் அழகில் நான் மயங்கிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

    இன்றைக்கும் பல வீடுகளில் பெண்கள் எழுந்ததும் கந்த சஷ்டிக் கவசத்தையோ சுப்ரபாதத்தையோ ஒலிக்க விடுவதைக் கேட்கத்தானே செய்கிறோம்.

    இப்படியான காட்சிகள் திரைப்படங்களில் வந்திருக்கிறதா என்று யோசித்தேன். சட்டென்று எனக்குத் தோன்றியவை மூன்று பாடல்கள்.

    மலர்கள் நனைந்தன பனியாலே
    என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
    பொழுதும் விடிந்தது கதிராலே
    சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே

    காலை நேரத்துக் காட்டியையும் முந்தைய இரவில் அவள் கண்ட இன்பங்களின் மீட்சியையும் இப்படி நான்கு வரிகளில் சொல்ல கண்ணதாசன் இருந்தார் அப்போது.

    அந்தப் பெண் கணவனோடு கொண்ட காதல் விளையாட்டைக் கூட நாகரிகமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் கவியரசர்.

    சேர்ந்து மகிழ்ந்து போராடி
    தலை சீவி முடித்தேன் நீராடி
    கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
    கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
    பட்ட காயத்தைச் சொன்னது கண்ணாடி

    கூடல் இன்பத்தை மட்டும் பாட்டில் வைக்கவில்லை அவர். அந்தக் குடும்பத்தலைவியின் அகவொழுக்கத்தையும் இறைநம்பிக்கையையும் பாட்டில் வைக்கிறார்.

    இறைவன் முருகன் திருவீட்டில்
    என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
    உயிரெனும் காதல் நெய்யூற்றி
    உன்னோடிருப்பேன் மலரடி போற்றி

    மேலே நான் சொன்ன பாடல் இதயக்கமலம் திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் பி.சுசீலா அவர்கள் பாடியது. அடுத்து இளையராஜா இசையில் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. ஆம். காயத்ரி படப் பாடல் அது. பஞ்சு அருணாச்சலம் எழுதிய பாடல்.

    காலைப்பனியில் ஆடும் மலர்கள்
    காதல் நினைவில் வாடும் இதழ்கள்
    காயம் பட்ட மாயம் கன்னி எந்தன் யோகம்

    இந்தப் பாடலில் புதிதாகத் திருமணமான பெண் விடியலில் முந்தைய இரவின் நினைவுகளை வைத்துக் கொண்டு பாடுவாள்.

    எல்லாம் சரி. திருமணமான பெண்கள் இதையெல்லாம் நினைத்துக் கொண்டு விடியலில் பாடலாம். திருமணம் ஆகாத பெண்? திருவெம்பாவையும் திருப்பாவையும் மட்டுமே பாட வேண்டுமா?

    இல்லை என்கிறது உயர்ந்த உள்ளம் திரைப்படத்துக்காக கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்.

    காலைத் தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம்
    பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்

    இளம் பெண்ணின் ஆசை என்னும் வானில் இன்பம் என்னும் சிறகுகளை விரித்துப் பறக்கத் துடிப்பதை இந்த வரிகள் அழகாகச் சொல்கின்றன.

    அவளுடைய மனது அழகை ரசிக்கிறது. படிந்திருக்கும் பனி. குளிர்ந்திருக்கும் நிலம், கூவியிருக்கும் குயில், கூடியிருக்கும் குருவி, ஓங்கியிருக்கும் மரங்கள், பறவைகளைத் தாங்கியிருக்கும் கிளைகள் என்று அழகை ரசிக்கிறாள்.

    அந்த இரசனையில் இரவை நினைத்துப் பார்க்கிறாள். ஒரு அழகான பாடல் வரி உடனே தோன்றுகிறது.

    இரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே
    பனிதுளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே

    இப்படியாக அவள் பெற்ற இன்பங்களை உலகமும் பெற வேண்டும் என்று நினைக்கிறாள். உறங்குகின்றவர்களை எழுப்புகிறாள்.

    உறங்கும் மானிடனே உடனே வா வா
    போர்வை சிறையை விட்டு வெளியே வா வா
    அதிகாலை உன்னை பார்த்து வணக்கம் சொல்லும்

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – மலர்கள் நனைந்தன பனியாலே
    வரிகள் – கவி்ரசர் கண்ணதாசன்
    பாடியவர் – பி.சுசீலா
    இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்
    படம் – இதயக்கமலம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=4HVJhS-KTzM

    பாடல் – காலைப்பனியின் ஆடும் மலர்கள்
    வரிகள் – பஞ்சு அருணாச்சலம்
    பாடியவர் – சுஜாதா
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – காயத்ரி
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=pTgZcMOGveI

    பாடல் – காலைத் தென்றல் பாடிவரும்
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – உயர்ந்த உள்ளம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=HMdOYRD3Shs

    அன்புடன்,
    ஜிரா

    275/365

     
    • amas32 4:46 pm on September 3, 2013 Permalink | Reply

      பெண்ணில்லா வீட்டில் குப்பையும் கூளமும் தான் இருக்கும். பெண்ணொருத்தி இருந்தால் விடியற்காலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து கோலமிட்டு விளக்கேற்றி வீட்டை லக்ஷ்மிகரமாக்குவாள்.
      காலை நேரத்தில் பாடுவது, யாழிசைப்பதற்கெல்லாம் இந்த துரித யுகத்தில் நேரம் இருப்பதில்லை 😦 அந்த வேலையை குறுந்தகடுகள் செய்கின்றன 🙂

      //கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
      பட்ட காயத்தைச் சொன்னது கண்ணாடி//
      இதை ஆங்கிலத்தில் hickey என்பார்கள். எல்லா சமூகத்திலும் அடுத்த நாள் எழுந்து முன்னிரவு நடந்தவைகளை பெண் அசை போடுவது இயல்பான விஷயமாகக் கொண்டாடப் படுகிறது 🙂

      amas32

    • rajinirams 10:49 am on September 4, 2013 Permalink | Reply

      அதிகாலைப்பொழுதின் இனிமைக்கு மெருகூட்டும் மூன்று முத்தான பாடல்களை கொண்ட நல்ல பதிவு. “இரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே
      பனிதுளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே” என்ற வைரமுத்துவின் வரிகளாகட்டும்-“பொழுதும் விடிந்தது கதிராலே
      சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே”என்ற கவியரசரின் வரிகளாகட்டும் சூப்பர்.”அலைகள் ஓய்வதில்லை”படத்தின் வெளிவராத “புத்தம் புது காலை பொன்னிற வேளை பாடலும் பொண்ணு ஊருக்கு புதுசு படத்தின் “சோலைக்குயிலே காலைக்கதிரே” பாடலும் இனிமையானவை.

  • என். சொக்கன் 11:51 pm on August 28, 2013 Permalink | Reply  

    கொடிமேல் காதல் 

    • படம்: கிழக்கே போகும் ரயில்
    • பாடல்: மாஞ்சோலைக் கிளிதானோ
    • எழுதியவர்: முத்துலிங்கம்
    • இசை: இளையராஜா
    • பாடியவர்: ஜெயச்சந்திரன்
    • Link: http://www.youtube.com/watch?v=6CPH_pnHqB8

    மஞ்சம் அதில், வஞ்சிக்கொடி வருவாள்,

    சுகமே தருவாள், மகிழ்வேன்,

    கண் காவியம் பண் பாடிடும் பெண்ணோவியம்,

    செந்தாமரையே!

    வஞ்சிக்கொடி என்பது பல பாடல்களில் பெண்களுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் உவமை.

    மற்ற பல கொடிகளைப்போலவே, வஞ்சியும் மெலிதானது, எளிதாகத் துவள்வது. ஆகவே, இடை சிறுத்த கதாநாயகிகளை வர்ணிக்கும் தேவை ஏற்படும்போதெல்லாம் கவிஞர்கள் வஞ்சிக்கொடியை அழைத்துவிடுவார்கள்.

    உதாரணமாக, பாரதிதாசனின் அருமையான காதல் பாடல் ஒன்று, ‘வஞ்சிக் கொடி போல இடை அஞ்சத்தகுமாறு உளது!’ என்று தொடங்கும்.

    பொதுவாக எல்லாருக்கும் காதலி இடையைப் பார்த்தால் ஆசை வரும். ஆனால், பாரதிதாசனுக்கு அச்சம் வருகிறது, ‘உன் இடுப்பைப் பார்த்து நான் பயந்தேபோய்ட்டேன் தெரியுமா?’ என்கிறார்.

    ஏன் அப்படி? பொண்ணு செம குண்டோ? காதல் பரிசாக ஒட்டியாணம் செய்து தரச் சொல்லிவிடுவாளோ என்று நினைத்துக் கவிஞர் பயந்துவிட்டாரோ?

    அந்தச் சந்தேகமே வரக்கூடாது என்பதற்காகதான், ‘வஞ்சிக்கொடி போல இடை’ என்கிறார் பாரதிதாசன். ‘இத்தனை மெல்லிய இடையா’ என்றுதான் அவருக்கு அச்சம்!

    அதோடு நிறுத்தவில்லை, தொடர்ந்து கண்களுக்கு உவமையாக என்னவெல்லாம் வருமோ அத்தனையையும் அடுக்குகிறார், பின்னர், ‘ம்ஹூம், உனக்கு இணையாக எதையும் சொல்லமுடியாது’ என்று கை தூக்கிவிடுகிறார். சந்தம் கொஞ்சும் அந்த அழகான பத்தி முழுமையாக இங்கே:

    வஞ்சிக்கொடி போல இடை

    அஞ்சத் தகுமாறு உளது!

    நஞ்சுக்கு இணையோ, அலது

    அம்புக்கு இணையோ, உலவு

    கெண்டைக்கு இணையோ, கரிய

    வண்டுக்கு இணையோ விழிகள்!

    மங்கைக்கு இணை ஏது உலகில்,

    அம் கைக்கு இணையோ மலரும்?

    ஆனால், கிட்டத்தட்ட இதேமாதிரிதானே கொடி இடை, நூலிடை, துடி இடை என்றெல்லாம் இடுப்பை வர்ணிப்பார்கள்?

    உண்மைதான். ஆனால் அவற்றுக்கு இல்லாத ஒரு சிறப்பு ‘வஞ்சி’க்கு உண்டு. இடுப்பைமட்டுமல்ல, ஒரு பெண்ணையே ‘வஞ்சி’ என்று அழைப்பதும் உண்டு.

    இதற்கு உதாரணமாக, ‘குற்றாலக் குறவஞ்சி’ என்ற நூலே இருக்கிறது. அதன் பொருள், குற்றாலம் என்கிற பகுதியில் வாழ்கிற, குறவர் இனத்தைச் சேர்ந்த, வஞ்சி போன்ற ஒருத்தி.

    சினிமாப் பாட்டு உதாரணம்தான் வேண்டுமா? அதுவும் நிறைய உண்டு. ‘வண்ணக்கிளி சொன்ன மொழி, என்ன மொழியோ? வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ!’

    ஆக, ஒரு பெண், அவளுடைய மெலிதான இடுப்பு, அதற்கு உவமை வஞ்சி, அதுவே அந்தப் பெண்ணையே அழைக்கும் பெயராகிவிடுகிறது. ஆகவே, இலக்கண அறிஞர்காள், இது சினையாகுபெயரா, உவமையாகுபெயரா, அல்லது சினையுவமையாகுபெயர் என்று ஒன்றை உருவாக்கவேண்டுமா? 🙂

    ***

    என். சொக்கன் …

    28 08 2013

    270/365

     
    • Murugesan 7:05 am on August 29, 2013 Permalink | Reply

      நல்ல பதிவு நன்றி திரு.சொக்கன். வஞ்சி கொடிக்கு அருமையான விளக்கம் இப்பாடலை வைத்து.

    • rajinirams 12:12 pm on August 30, 2013 Permalink | Reply

      வஞ்சி கொடி யை விளக்கிய நல்ல பதிவு.இந்த வஞ்சி மகள் ஒரு ஊதாப்பூ என்ற வாலியின் பாடலும் வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்னும் என்ற டி.ஆரின் வரிகளும் நினைவிற்கு வருகிறது. “வஞ்சி”என்ற வார்த்தைக்கு ஏமாற்றுவது என்ற பொருளும் உண்டு.அப்படி ஏமாற்றும் கட்சி கொடியை “வஞ்சி கொடி”என்று சொல்லலாமோ:-)))

    • amas32 6:14 pm on September 2, 2013 Permalink | Reply

      அப்போ நான் “வஞ்சி” இல்லை :-)) துடி இடையாளும் இல்லை வஞ்சிப்பவலும் அல்லள் 🙂

      ஆனால் என் பழைய புகைப்படங்கள் வஞ்சியாக் இருந்திருக்கிறேன் என்று பறைசாற்றும் 🙂

      amas32

  • என். சொக்கன் 10:44 pm on July 20, 2013 Permalink | Reply  

    நரை இல! 

    • படம்: பூவெல்லாம் கேட்டுப்பார்
    • பாடல்: சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே
    • எழுதியவர்: பழநிபாரதி
    • இசை: யுவன் ஷங்கர் ராஜா
    • பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்
    • Link: http://www.youtube.com/watch?v=ccmN5YvrrDI

    நரை கூடும் நாட்களிலே,

    என்னைக் கொஞ்சத் தோன்றுமா?

    அடி போடி!

    காதலிலே நரைகூட தோன்றுமா?

    இந்த வரிகளைக் கேட்கும்போதெல்லாம், வாலி பாணியில் ‘தோன்றுமா’ என்ற வார்த்தையை வைத்துப் பழநிபாரதி அமைத்திருக்கும் நயமான வார்த்தை விளையாட்டை நினைத்துப் புன்முறுவல் தோன்றும். அடுத்து, ‘காதலிலே நரைகூட தோன்றுமா?’ என்கிற வரியை வியப்பேன். நேராக பாரதிதாசனின் ‘குடும்ப விளக்கு’ காவியத்தில் சென்று நிற்பேன்.

    குடும்ப விளக்கின் ஐந்தாவது பாகத்தை, முதியவர் காதலை வடித்துத் தந்திருக்கிறார் பாரதிதாசன். நரையில்லாத அந்தக் காதலைக் கொஞ்சம் ருசிக்கலாம்.

    முதிய கணவர் சொல்வது:

    விதைத்திட்டேன் அவளின் நெஞ்சில்

    ….என்றனை! நேற்றோ? அல்ல!

    இதற்குமுன் இளமை என்பது

    ….என்றைக்கோ அன்றைக் கேநான்!

    கதையாகிக் கனவாய்ப் போகும்

    ….நிகழ்ந்தவை; எனினும் அந்த

    முதியாளே வாழு கின்றாள்

    ….என்நெஞ்சில் மூன்று போதும்!

    இன்னொரு சந்தர்ப்பத்தில், யாரோ அந்தக் கணவரிடம் கேட்கிறார்கள், ‘வயதாகிவிட்டது, உடல் தளர்ந்துவிட்டது, இன்னும் உங்களுக்குள் காதல் இருக்கிறதா?’

    ’ஏன் இல்லாமல்?’ என்று கேட்கும் கணவர் பதில் சொல்கிறார், இப்படி:

    வாய், மூக்கு, கண், காது, மெய் வாடினாலும்

    ….மனைவிக்கும் என்றனுக்கும் மனம் உண்டு கண்டீர்!

    தூய்மை உறும் அவ்விரண்டு மனம் கொள்ளும் இன்பம்

    ….துடுக்கு உடைய இளையோரும் படைத்திடுதல் இல்லை!

    ஓய்வதில்லை மணிச் சிறகு! விண் ஏறி நிலாவாம்

    ….ஒழுகு அமிழ்து முழுது உண்டு, பழகு தமிழ் பாடிச்

    சாய்வு இன்றி, சறுக்கு இன்றி ஒன்றை ஒன்று பற்றிச்

    ….சலிக்காது இன்பம் கொள்ளும் இரண்டு மனப் பறவை!

     

    அருவி எலாம் தென் பாங்கு பாடுகின்ற பொதிகை

    ….அசை தென்றல், குளிர் வீசும் சந்தனச் சோலைக்குள்

    திரிகின்ற சோடி மயில் யாம் இரண்டு பேரும்,

    ….தெவிட்டாது காதல் நுகர் செந்தேன் சிட்டுக்கள்!

    பெரும் தென்னங் கீற்றினிலே இருந்து ஆடும் கிளிகள்!

    ….பெண் இவளோ, ஆண் நானோ என இரு வேறாய்ப்

    பிரித்து உணர மாட்டாது பிசைந்த கூட்டு அமிழ்து!

    ….பேசினார் இவ்வாறு, கூசினாள் மூதாட்டி!

    அவர் இப்படி வெளிப்படையாகச் சொல்கிறாரே என்பதற்காக அந்த மூதாட்டி வெட்கப்பட்டாலும், உள்ளுக்குள் அவருடைய காதலும் நரைத்திருக்காது என்பதுமட்டும் உறுதி!

    அந்த வரியை மறுபடி மறுபடி வாசித்து ரசிக்கிறேன், ‘பெண் இவளோ, ஆண் நானோ என இரு வேறாய்ப் பிரித்து உணரமாட்டாது பிசைந்த கூட்டு அமிழ்து’, நூற்று ஐந்து வயது முதியவர் சொல்வது இது!

    ***

    என். சொக்கன் …

    20 07 2013

    231/365

     
    • rajinirams 11:53 pm on July 20, 2013 Permalink | Reply

      அடடா.அருமை.வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்.ஆனாலும் அன்பு மாறாதம்மா என்ற வாலியின் புதுப்புது அர்த்தங்களை நினைவுபடுத்தும்.பதிவு. பாரதிதாசனின் குடும்ப விளக்கின் மூலம் அழகாக “விளக்கி”விட்டீர்கள்.

    • amas32 7:12 pm on July 24, 2013 Permalink | Reply

      இன்றும் சதாபிஷேகம் செய்து கொள்ளும் தம்பதிகள் ஒருவருக்கொருவர் வாஞ்சையுடன் உதவிக் கொள்வதைப் பார்க்க வயதாக ஆக அன்புப் பெருகும் என்று உணரமுடிகிறது. ஆனால் அந்த அன்பு வளர எத்தனையோ தகுதிகள் தேவையாக உள்ளன. இல்லாவிடின் தாம்பத்திய வாழ்வு இணையாத இரு கோடுகள்/ஒரே திசையில் செல்லும் தண்டவாளம் போலத்தான். அன்பு நிறைந்த வாழ்வு அமைய வரம் பெற்று வந்திருக்கவேண்டும்.

      amas32

  • G.Ra ஜிரா 10:54 am on July 10, 2013 Permalink | Reply  

    ஊறல் சுவை 

    தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்
    ………………………
    புட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன்
    ஊறுகாய கொண்டா உன்னையும் தொட்டுக்குறேன்

    இந்தப் பாடல் சிந்துபைரவி படத்தில் ஒரு பிரபலப் பாடகன் குடித்து விட்டுப் பாடுவதாக அமைந்த பாட்டு. இந்தப் பாட்டில் குடிப்பதுக்கு நல்ல துணை ஊறுகாய் என்று வருகிறது. இந்தப் பாட்டில் மட்டுமல்ல அஞ்சாதே படத்தில் இடம் பெற்ற “கண்ணதாசன் காரைக்குடி” பாட்டிலும் ஊறுகாயும் வருகிறது.

    கண்ணாடி கோப்பையிலே கண்ணை மூடி நீச்சலடி
    ஊறுகாயை தொட்டுகினா ஓடிப்போகும் காச்சலடி

    இப்படியாக பாட்டில் வரும் பாட்டில் எல்லாம் ஊறுகாயை இழுப்பது ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது என்பதைத்தான் முதல் பாட்டில் வைரமுத்துவும் இரண்டாம் பாட்டில் கபிலனும் காட்டியிருக்கிறார்கள்.

    தண்ணி அடிக்கும் போது மட்டுந்தானா ஊறுகாய்க்கு வேலை?

    இல்லை என்று அழுத்தமாகச் சொல்கிறார் பாவேந்தர் பாரதிதாசன். குடும்பவிளக்கு என்னும் நூலில் வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினரை உபசரிக்கும் முறையில் ஊறுகாய்களைப் பற்றி அடுக்குகிறார் பாருங்கள்.. ஆகா. பாட்டைப் படிக்கும் போதே வாயூறும். அந்த வரிகளைத் தருகிறேன். படித்துப் பாருங்களேன்.

    இற்றுத்தேன் சொட்டும் எலுமிச்சை! வற்றியவாய்
    பேருரைத்தால் நீர்சுரக்கும் பேர்பெற்ற நாரத்தை
    மாரிபோல் நல்லெண்ணெய் மாறாமல் – நேருறவே
    வெந்தயம் மணக்கஅதன் மேற்காயம் போய்மணக்கும்
    உந்துசுவை மாங்காயின் ஊறுகாய் – நைத்திருக்கும்
    காடி மிளகாய் கறியோடும் ஊறக்கண் ணாடியிலே
    இட்டுமேல் மூடிவைத்தேன் தேடிப்பார்!

    படித்தாலே எளிமையாகப் புரிந்து விடும் பாடல்தான். ஆனாலும் பாரதிதாசன் சொல்லும் ஒவ்வொரு ஊறுகாயையும் சற்று அலசலாம்.

    இற்றுத்தேன் சொட்டும் எலுமிச்சை

    எலுமிச்சை ஊறுகாய் உடனடியாகச் செய்து விடக் கூடியதல்ல. இன்று செய்து நாளை திங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வேறு ஊறுகாய்களுக்கு ஓடிவிடுங்கள். உப்பில் எலுமிச்சை நன்றாக ஊற வேண்டும். சில அவசரக்குடுக்கைகள் எலுமிச்சையை வேகவைத்து ஊறுகாய் போடுவார்கள். ஆனால் அதில் கசப்பேறி விடும்.

    ஆகையால் எலுமிச்சை ஊறுகாய் போடுகின்றவர்களை ”தயவுசெய்து வேகவைக்க வேண்டாம்” என்று கேட்டுக் கொள்கிறேன். ஊற ஊறத்தான் ஊறுகாய்.

    உப்போடு எலுமிச்சை நன்றாக ஊறிய பிறகு எலுமிச்சையின் தோலும் உள்ளிருக்கும் சதைப்பகுதியும் இற்றுப் போய் கலந்து விடும். துண்டு துண்டாக எடுத்து இலையில் போட முடியாது. அல்வா பதத்தில் இருக்கும். அதனால்தான் இற்றுத் தேன் சொட்டும் எலுமிச்சை என்றிருக்கிறார் பாவேந்தர். ரசிகரய்யா நீர்!

    வற்றியவாய் பேர் உரைத்தால் நீர் சுரக்கும் நாரத்தை

    நாரத்தம் பழத்துக்கு இயல்பான சுவை புளிப்பு கலந்த கசப்பு. நாட்டு நாரத்தை மலைநாரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. நாட்டு நாரத்தை உருண்டையாகவும் மலைநாரத்தை சற்று நீளமாகவும் இருக்கும்.

    ஏணி தோணி அன்னாவி நாரத்தை” என்றே ஒரு சொலவடை உண்டு. ஏணி எல்லாரையும் ஏற்றி விடும். ஆனால் அங்கேயே இருக்கும். தோணியும் பலரைக் கரையேற்றும் ஆனால் அங்கேயே இருக்கும். அன்னாவி(ஆசான்) பலரைக் கரையேற்றி மேல்படிப்புக்கு அனுப்புவார். ஆனால் அவர் அந்தப் பள்ளியிலேயே இருப்பார். அது போல வயிற்றுக்குப் போனது எதுவானாலும் அதைச் செமிக்க வைத்துவிடும் நாரத்தை முழுதாகச் செமிக்காது என்று சொல்வார்கள்.

    நாரத்தையை எலுமிச்சை ஊறுகாய் போடுவது போலவே ஊறுகாய் போடலாம். இன்னொரு வகை உப்பில் ஊறவைத்து காய வைக்கும் வகை. இதில் மிளகாய்ப் பொடியே இருக்காது. வெறும் உப்பும் நாரத்தையும்தான். இன்னும் எளிமையாகச் சொன்னால் மோர்மிளகாய் செய்யும் அதே செய்முறைதான்.

    அப்படி உப்பில் ஊறிக் காய்ந்த துண்டுகள் நாட்பட இருக்கும். ஒரு இணுக்கு கிள்ளி வாயில் போட்டலே… ஆகா…ஆகா. அதைச் சாப்பிட்டவர்கள் மறுமுறை நினைத்தாலே வாயில் நாவூறும். அதைத்தான் “வற்றியவாய் பேருரைத்தால் நீர் சுரக்கும் பேர் பெற்ற நாரத்தை” என்கிறார் பாவேந்தர். காய்ச்சல் காலத்தில் வாய்க்கு எதுவும் பிடிக்காமல் போகும் போது நாரத்தை ருசிக்கும் துணை.

    மாரிபோல் நல்லெண்ணெய் மாறாமல் – நேருறவே
    வெந்தயம் மணக்கஅதன் மேற்காயம் போய்மணக்கும்
    உந்துசுவை மாங்காயின் ஊறுகாய்

    ஊறுகாய்களின் ராணி எலுமிச்சை என்றால் ராஜா மாங்காய். மாங்காய் ஊறுகாய் பிடிக்காது என்று யாரும் சொல்லக் கேட்டதேயில்லை.

    மாங்காயில் மட்டுந்தான் விதவிதமான ஊறுகாய்களை உருவாக்க முடியும். மாங்காய்த் தொக்கு, ஆவக்காய் ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், மாவடு, இனிப்பு மாங்காய், உலர்த்திய மாங்காய் என்று பலப்பல வகைகள்.

    பொதுவில் மாங்காய் ஊறுகாய்க்கு தாளிக்கும் போது நல்லெண்ணெய்தான் மிகப் பொருத்தம். அதில் சிறிது வெந்தயமும் பெருங்காயமும் கலந்துவிட்டால்… அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கக் கூட மக்கள் ஆயத்தமாக இருப்பார்கள்.

    நாலு நாட்கள் வரக்கூட இன்ஸ்டண்ட் ஊறுகாய் முதல் நாலாறு மாதங்கள் தாண்டியும் சுவைக்கும் ஊறுகாய் செய்ய மாங்காயே உற்ற துணை.

    நைத்திருக்கும் காடி மிளகாய் கறியோடும் ஊறக்கண் ணாடியிலே இட்டுமேல் மூடிவைத்தேன்

    எங்கள் ஊரில் பாட்டிகள் எல்லாம் இருந்த வரை சோறு வடித்துதான் பழக்கம். அந்த வடிநீரைக் கீழே ஊற்ற மாட்டார்கள். ஒரு பெரிய மண்பானையில் ஊற்றி வைத்துவிடுவார்கள். அது புளித்த நீராக மாறும். அதைத்தான் காடி என்பார்கள். காடி என்பது இன்று கடைகளில் கிடைக்கும் செயற்கை வினிகர் அல்ல. இயற்கையாகவே வீடுகளில் கிடைத்த புளித்தநீர்.

    இந்த நீரில் மிளகாயையும் மிளகையும் ஊறப்போட்டு விடுவார்கள். அதிலேயே ஊறிக் கொண்டிருக்கும் மிளகாயை மோர்ச்சோற்றுக்கு சேர்த்துக் கொண்டால்.. அடடா! மேலே சொன்ன அத்தனை ஊறுகாய்களும் தோற்றுவிடும்.

    அரிசிச் சோற்றுக்கு மட்டுமல்ல, கம்பஞ்சோற்றுக்கும், கேப்பைக் களிக்கும், சோளக் கூழுக்கும், குதிரைவாலி சோற்றுக்கும் பொருந்தும் ஒரே ஊறுகாய் ஜாடியில் நிறைந்திருக்கும் காடி மிளகாய்தான்.

    கவிஞர்களுக்கு ரசனை மிகமிக அவசியம். அந்த ரசனை இருந்ததால்தான் ஊறுகாயைப் பற்றியும் இப்படியெல்லாம் பாரதிதாசனாரால் கவிதை எழுந்த முடிந்தது. அது சரி. அதனால்தானே அவருக்குப் பெயர் பாவேந்தர்.

    பாவேந்தர் நான்கு ஊறுகாய்களோடு நிறுத்திக் கொண்டாலும் ஊறுகாய் வகைகள் எக்கச்சக்கம். உங்களுக்குப் பிடித்த ஊறுகாய் வகைகளைப் பற்றிச் சொல்லுங்களேன்.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

    பாடல் – தண்ணித் தொட்டி தேடி வந்த
    வரிகள் – வைரமுத்து
    பாடியவர் – கே.ஜே.ஏசுதாஸ்
    இசை – இசைஞானி இளையராஜா
    பாடலின் சுட்டி – http://youtu.be/AHB9TIC04Gc

    பாடல் – கண்ணதாசன் காரைக்குடி
    வரிகள் – கபிலன்
    பாடியவர் – மிஷ்கின்
    இசை – சுந்தர் சி பாபு
    பாடலின் சுட்டி – http://youtu.be/6F1Nfw_Buvc

    அன்புடன்,
    ஜிரா

    221/365

     
    • Arun Rajendran 12:02 pm on July 10, 2013 Permalink | Reply

      இந்தப் பதிவ படிக்கும்போதே எச்சில் ஊற ஆரம்பிச்சுடுச்சு.. 😉

      அழகான பாவேந்தர் பாட்ட வேற கொடுத்திருக்கீங்க… நன்றிங்க ஜிரா சார்..

      நெல்லி, பூண்டு, இஞ்சி, மிளகாய், மீன், மாட்டுக்கறி போன்றவற்றில் ஊறு(காய்/கறி) செய்வர்..

    • rajinirams 12:57 pm on July 10, 2013 Permalink | Reply

      வாயில் நீர் ஊற வைக்கும் “ஊறுகாய்”பதிவு. ஆயுர்வேத மருத்துவர் ஒரு முறை டிவியில் பேசும்போது ஊறுகாய் அவ்வளவு நல்லதல்ல,உடலுக்கு ஊறு விளைவிக்கும் என்பதாலேயே ஊறுகாய் என்று அந்த காலத்தில் சொல்லியிருக்கிறார்கள் என்றெல்லாம் பேசினார்-ஊற வைத்த காய் என்பதால் ஊறுகாய் என்றும் சொல்கிறார்கள்.எது எப்படியோ தயிர்சாதம்-எலுமிச்சை ஊறுகாய் கூட்டணி என்பது ஆண்டாண்டு காலமாக சக்கை போடுகிறது.எனக்கு மிகவும் பிடித்தது நன்கு ஊறவைத்த “மாகாளி கிழங்கு”ஊறுகாய் தான்.சூப்பரோ சூப்பர்.(ஆனால் பலர் இந்த சுவையை அறிந்திருக்க மாட்டார்கள்). நன்றி.

    • amas32 5:20 pm on July 10, 2013 Permalink | Reply

      ஊறுகாய் சுவை நம் மனத்தின் ஆழத்தில் புதைத்து உள்ளது, பல பிறவிகளாகக் கூட இச்சுவையை நம் அறிந்து இருக்கலாம். ஏனென்றால் உங்கள் பதிவைப் படிக்கும் போதே அவ்வளவு நீர் வரத்து வாயினில்!

      குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு நாக்கு செத்துவிடுமோ, அல்லது மூளை தான் மழுங்கி விடுமோ தெரியாது. அதனால் தான் உப்புக் காரத்தோடுத் தொட்டுக் கொள்ள ஊறுகாய் தேவையாய் உள்ளது. ஊறுகாய் தயாரிப்பில் உப்பு அதிகம் சேர்ப்பதால் இப்போ இரத்த அழுத்த நோய் உள்ளவர்களை உணவில் ஊறுகாய் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

      amas32

    • Saba-Thambi 8:13 pm on July 10, 2013 Permalink | Reply

      நன்றாக நறுக்கிய நளபாகம்! எச்சில் ஊறுகிறது.

      பாவற்காய் பொதுவாக பழப்புளியுடன் சமைக்கப்படுவது – மாறுதலுக்கு எலுமிச்சை ஊறுகாயுடன் சமைத்து பாருங்களேன் – புதுச்சுவை தெரியும்.

    • Uma Chelvan 8:18 pm on July 10, 2013 Permalink | Reply

      WOW, what a wonderful post…ஊறுகாய் சாப்பிடகூடாது என்று சொல்வதுக்கு காரணம்…நிறைய உப்பு இருப்பதால் ……leads to high blood pressure.

    • Uma Chelvan 8:47 pm on July 10, 2013 Permalink | Reply

      உப்பை தின்னவன் தண்ணி குடிப்பான், ஊறுகாய் தின்னவனும்தான். It retains water leads to over work on the blood vessels and the Kidney. உப்பும் சர்க்கரையும் எங்கே சென்றாலும் உடன் தண்ணீரையும் எடுத்து செல்லும்( Osmosis). Diabetes people ஓயாமல் பாத்ரூம் போக….. same Mechanism thaan.

  • G.Ra ஜிரா 10:02 pm on April 22, 2013 Permalink | Reply
    Tags: எம்.எஸ்.ராஜேஸ்வரி, வி.ஜே.சர்மா   

    யாழிசை உந்தன் மொழி 

    துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
    இன்பம் சேர்க்க மாட்டாயா
    எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா
    அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
    அல்லல் நீக்க மாட்டாயா
    பாடல் – பாவேந்தர் பாரதிதாசன்
    இசை – ஆர்.சுதர்சனம்
    பாடியவர்கள் – எம்.எஸ்.ராஜேஸ்வரி, வி.ஜே.சர்மா
    படம் – ஓர் இரவு
    நடிகர்கள் – லலிதா, அக்கினேனி நாகேஸ்வரராவ்
    பாடலின் சுட்டி – http://youtu.be/MW4Rm1YkVuo

    திரைப்படப் பாடல்கள் இலக்கியம் ஆகுமா என்று விவாதிக்கும் நேரத்தில் இலக்கியங்களும் திரைப்படப் பாடல்கள் ஆனதுக்கு இந்தப் பாடல் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

    பாவேந்தரின் கவிதையில் நிறைந்து ததும்பும் தீந்தமிழானது யாழிசையாய் நெஞ்சில் கலந்து அல்லல் நீக்கி இன்பம் சேர்ப்பது உண்மைதான்.

    ஆனால் யாழ் பாரம்பரிய இசை மேடைகளில் இன்று இல்லை. ஆனாலும் சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களின் வழியாகவும் யாழ் பற்றி நாம் நிறைய தெரிந்து கொள்ளலாம்.

    அதையும் விட இன்னொரு எளிய வழி இருக்கிறது. அதுதான் விபுலானந்த அடிகளார் எழுதிய யாழ்நூல் என்ற நூலைப் படிப்பது. இலங்கை யாழ்பாணத்து மட்டக்களப்பில் பிறந்த மயில்வாகனன் என்னும் விபுலானந்த அடிகள் சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களை பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து உருவாக்கிய செறிவான நூல்தான் “யாழ்நூல்

    யாழ்நூல் 1947ம் ஆண்டு ஜூலை ஐந்தாம் தேதி இலங்கையின் திருக்கொள்ளம் புதூர் கோயிலில் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் சுவாமி விபுலானந்தரின் குறிப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட யாழ்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தனவாம். அந்த யாழ்களை இசைப் பேரறிஞர் க.பொ.சிவானந்தம் அடிகளார் மீட்டி இன்னிசை பொழிந்தாராம். அந்த யாழ்களுக்கும் பின்னாளில் என்ன ஆயிற்றோ தெரியவில்லை.

    சரி. யாழின் வகைகளைப் பார்க்கலாம். பொதுவாக யாழ் மூன்று விதங்களில் வகைப்படுத்தபடும்.
    1. யாழின் வடிவம்
    2. யாழ் பயன்படுத்தப்பட நிலம்
    3. வாசிக்கப்படும் பண்கள் மற்றும் இசைமுறைகள்

    வடிவத்தை வைத்து வகைப்படுத்தப்பட்ட சில யாழ்களைப் பார்க்கலாம்
    வில்யாழ் – வில்லின் வடிவில் இருப்பது
    சீறியாழ் – சிறிய யாழ்
    பேரியாழ் – பெரிய யாழ். இதில் 21 நரம்புகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

    ஐவகை நிலங்கள் நாம் அறிந்ததே. அந்த நிலங்களின் அடிப்படையில் கீழ்க்கண்ட யாழ்களும் பழக்கத்தில் இருந்திருக்கின்றன. அந்தந்த நிலப்பகுதிகள் இந்த யாழ்கள் வாசிக்கப்பட்டிருக்கின்றன.
    குறிஞ்சியாழ்
    முல்லையாழ்
    மருதயாழ்
    நெய்தல்யாழ்
    பாலையாழ்

    இசை வளர்ச்சியின் அடிப்படையிலும் வாசிக்கப்படும் பண்களின் அடிப்படையிலும் வகைப்படுத்தப்பட்ட சில யாழ்களைப் பார்க்கலாம்.
    மகர யாழ்
    செங்கோட்டு யாழ்
    பேரியாழ்
    சகோடயாழ்
    மருத்துவயாழ்

    யாழ் வாசிக்கின்றவருக்குப் பண்ணறிவும் பாட்டறிவும் யாழிலக்கண அறிவும் நிறைந்திருக்க வேண்டும். யாழ் வாசிக்கின்றவரை யாழாசிரியர் என்றே அழைத்தார்கள்.

    யாழ் வாசிப்பதில் மிகச்சிறந்த திறம் பெற்றவர்களில் திரூநிலகண்ட யாழ்ப்பாணரும் ஒருவர். இவர் பக்தி இலக்கிய காலத்தவர். பாணர் குலத்தில் பிறந்திருந்ததால் திறமை இருந்தும் கோயிலின் வாயிலில் நின்றே யாழ் வாசிக்க வேண்டிய நிலைக்கும் ஆளானவர். இவரால் வாசிக்க முடியாதவாறு ஒரு பண்ணை திருஞானசம்பந்தர் பாடியதாகவும் சொல்வார்கள். அந்தப் பண் யாழ்முறிப்பண் என்றே அழைக்கப்பட்டது.

    தாம் பெற்ற மக்களின் மழகைக் குரலுக்கு அடுத்த படியாக குழலும் யாழும் இனிமை என்று திருவள்ளுவரும் தெள்ளத்தெளிவாகக் கூறியிருக்கின்றார்.

    குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
    மழலை சொல் கேளாதவர்

    அன்புடன்,
    ஜிரா
    142/365

     
    • amas32 2:52 am on April 23, 2013 Permalink | Reply

      I think Yaazh is very close to what we call Lute in English.
      துன்பம் நேர்கையில் மனத்துக்கு இதம் அளிப்பது நமக்கு நெருக்கமானவர்களின் ஆறுதல் வார்த்தைகளும் இனிமையான இசையும் தான். நமக்கு நெருக்கமானவர்களே இசைத்தார்கள் என்றால் துன்பம் நொடியில் விலகிவிடும் இல்லையா?

      /அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
      அல்லல் நீக்க மாட்டாயா/
      இந்த வரிகளும் அருமையாக உள்ளன!

      யாழைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன் ஜிரா, நன்றி.

      amas32

    • GiRa ஜிரா 9:20 am on April 25, 2013 Permalink | Reply

      Lute, Harp and guitars are different types of யாழ்கள்.

      உண்மைதான். நெருக்கமானவர்களின் பேச்சு கூட பாடலாகுமென்று சொல்வார்களே.

  • என். சொக்கன் 1:27 pm on April 17, 2013 Permalink | Reply  

    சந்தோஷக் குப்பை 

    • படம்: யூத்
    • பாடல்: சந்தோஷம், சந்தோஷம்
    • எழுதியவர்: வைரமுத்து
    • இசை: மணி ஷர்மா
    • பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
    • Link: http://www.youtube.com/watch?v=PljReF6wMps

    உள்ளம் என்பது, கவலைகள் நிரப்பும்

    குப்பைத்தொட்டி இல்லை!

    உள்ளம் என்பது பூந்தொட்டி ஆனால்

    நாளை துன்பம் இல்லை!

    நண்பர் மோகன கிருஷ்ணனுடன் நேற்று ஒரு சின்ன விவாதம். எழுத்தாளர் ஒருவருடைய படைப்புகளைக் ‘குப்பை’ என்று நான் விமர்சிக்க, அவர் செல்லமாகக் கோபித்துக்கொண்டார், ‘எனக்கும் அவருடைய எழுத்துகள் பிடிக்காது, ஆனால் அதற்காக அவற்றைக் குப்பை என்று சொல்வது நியாயமில்லை!’

    நானும் ஏட்டிக்குப் போட்டியாக அவருக்குப் பதில் சொன்னேன், ‘எனக்குப் பிடிக்காததைக் குப்பை என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?’

    அதன்பிறகுதான் யோசித்தேன், தமிழில் ‘குப்பை’ என்பது உண்மையில் கேவலமான பொருளைக் கொண்ட வார்த்தை இல்லையே, அதன் அர்த்தம் ‘குவியல்’தானே?

    உதாரணமாக, ‘அழகின் சிரிப்பு’ நூலில் பாரதிதாசனின் வர்ணனை ஒன்று இப்படிச் செல்கிறது:

    அருவிகள், வைரத் தொங்கல்!

    ….அடர்கொடி, பச்சைப் பட்டே!

    குருவிகள், தங்கக் கட்டி!

    ….குளிர்மலர், மணியின் குப்பை!

    எருதின்மேல் பாயும் வேங்கை

    ….நிலவுமேல் எழுந்த மின்னல்,

    சருகெலாம் ஒளிசேர் தங்கத்

    ….தகடுகள் பாரடா நீ!

    இங்கே ‘மணியின் குப்பை’ என்றால், விலைமதிக்கமுடியாத மணிகள் நிறைந்த குவியல் என்று அர்த்தம், மலர்க் குவியலை மணிக் குவியலுக்கு ஒப்பிடுகிறார் பாரதிதாசன்.

    கம்ப ராமாயணத்தில் தொடங்கி இப்படி நிறைய உதாரணங்கள் காட்டமுடியும், ’குப்பை’ என்ற சொல்லுக்குப் பொருள், குவியல், செல்வக் குப்பை, ரத்தினக் குப்பை, காய்கறிக் குப்பை, நெல் குப்பை, மலர்க் குப்பை…

    ஆனால் இன்று நாம் ‘குப்பை’ என்றாலே வீசி எறியப்படவேண்டிய, பயனற்ற ஒன்று என்ற அர்த்தத்தில்தான் பயன்படுத்துகிறோம், ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்று பழமொழிகூட இருக்கிறது.

    அது சரி, ‘இவர் முப்பது வருஷமா இந்தக் கம்பெனியில குப்பை கொட்டியிருக்கார்’ என்பதுபோன்ற வாசகங்களின் அர்த்தம் என்னவாக இருக்கும்? குப்பைக்கு இழிவான பொருள் இருந்தால், இந்த இடத்தில் பொருந்தாதே, முப்பது வருஷமாக இவர் செய்ததெல்லாம் வீண் என்ற அர்த்தம் வந்துவிடுமே!

    வயலில் வேலை செய்கிறவர்கள் பயிரை (அதாவது, விளைச்சலின் பலனை) அறுவடை செய்து ஓரமாகக் குவிப்பார்கள், அதாவது, கொட்டிக் குப்பையாக்குவார்கள். அதுபோல, இந்த அலுவலகத்தில் அவர் முப்பது வருடங்களாகப் பல நல்ல பணிகளைச் செய்து குவித்திருக்கிறார், குப்பை கொட்டியிருக்கிறார்!

    முக்கியமான குறிப்பு, இது அகராதிப் பொருள் அல்ல, என்னுடைய சுவாரஸ்யமான ஊகம்மட்டுமே, உங்களுடைய கருத்துகளை எதிர்பார்க்கிறேன்!

    ***

    என். சொக்கன் …

    17 04 2013

    137/365

     
    • n_shekar 1:36 pm on April 17, 2013 Permalink | Reply

      இதே மாதிரி நாற்றம் என்ற சொல்லும் தப்ப உபயோகத்தில் உள்ளதாக படுகிறது – அதை பற்றியும் எழுதலாமே – இது வரை எழுதாவிட்டால்!!

    • Saba-Thambi 3:09 pm on April 17, 2013 Permalink | Reply

      “பணம் பந்தியிலே குணம் குப்பையிலே” விளக்கம்
      (http://dinamani.com/specials/karuthuk_kalam/article1337300.ece)

    • amas32 6:26 pm on April 18, 2013 Permalink | Reply

      முன்பு அப்படி அந்தப் பொருளில் இருந்திருக்க்அலாம். ஆனால் இப்பொழுது குப்பை என்றால் வெண்டாத அல்லது கெட்டுப் போன என்ற அர்த்ததில் தானே வருகிறது.

      On a different note, I too was following the conversational thread you had with MohanaKrishnan regarding Chetan Bhagat. I am not a fan of his writing too. I get really annoyed when I read certain portions of his novel. But still I have read all of his books. Why is that, I wonder!

      amas32

  • G.Ra ஜிரா 11:43 am on January 26, 2013 Permalink | Reply  

    கம்யூனிசம் கொடுத்த பக்தி 

    நான்கு வருடங்கள் மட்டும் காய்த்து விட்டு மாயமாய்ப் போன ஒரு கவிமரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அன்று அந்த மரம் காய்த்த காய்கள் இன்றைக்கும் சுவைக்கும் நித்யகனிகள்.

    பட்டுக்கோட்டை கம்யூசினச் சிந்தனையுள்ளவர். வயலில் இறங்கி உழுத பாட்டாளி. இவர் பள்ளியில் படித்தது குறைவு. ஆனால் இவர் தமிழ் படித்த இடம் மிகப் பெரிய இடம். ஆம். பாண்டிச்சேரி கனகசுப்புரத்தினம் என்னும் பாவேந்தரிடம் தமிழ் படித்திருக்கிறார்.

    தமிழ்த் திரையிசையில் பெரும்பாலான பக்திப் பாடல்கள் கவியரசரால் எழுதப்பட்டவை. அடுத்து வாலி நிறைய எழுதியிருக்கிறார். இருவருமே பக்திமான்கள். பக்தி என்ற உணர்வில் ஊறியவர்கள். அந்த உணர்வில் நூற்றுக்கணக்கான பாடல்களையும் நூல்களையும் எழுதியுள்ளார்கள்.

    ஆனால் பட்டுக்கோட்டையார்? கடவுளே இல்லை என்று நம்புகின்றவர். அவரிடம் போய் சாமிப்பாட்டு யாராவது கேட்பார்களா?

    கேட்டும் இருக்கிறார்கள். அவர்கள் கேட்டதுக்கு ஏற்ற சிறப்பையும் செய்திருக்கிறார் கவிஞர்.

    காளமேகத்தை உறியில் கட்டி அடியில் நெருப்பு வைத்து பாடச் சொன்னார்களாம். அந்த அளவுக்குச் சிரமம் வைக்காமல் பட்டுக்கோட்டை தனது பாட்டுக் கோட்டையைக் கட்டியிருக்கிறார்.

    உலகமே மேடையாய் நின்றிருக்க அதிலேறி உடுக்கை தட்டி ஆடுகின்ற ஈசனைப் பாட ஒரு பாட்டு!

    உமையை ஒரு பாகமாய்க் கொண்டு மதுரையில் ஆட்சி செய்த சொக்கனைப் பாட ஒரு பாட்டு!

    பட்டுக்கோட்டையாரிடமிருந்து வரும் வரிகளைப் பாருங்கள்!

    கங்கை அணிந்தவா
    கண்டோர் தொழும் விலாசா
    சதங்கை ஆடும் பாத விநோதா லிங்கேஸ்வரா
    நின் தாள் துணை நீ தா

    தில்லை அம்பல நடராஜா
    செழுமை நாதனே பரமேசா
    அல்லல் தீர்த்தாண்டவா வா வா
    அமிழ்தானவா வா

    எங்கும் இன்பம் விளங்கவே
    அருள் உமாபதே
    எளிமை அகல வரம் தா வா வா
    வளம் பொங்க வா

    பலவித நாடும் கலையேடும்
    பணிவுடன் உனையே துதிபாடும்
    கலையலங்கார பாண்டிய ராணி நேசா
    மலை வாசா! மங்கா மதியானவா!

    இந்தப் பாடலை எழுதியவன் கடவுளை நம்பாதவன் என்று யாரும் சொல்ல முடியுமா?

    ஒரு நல்ல கவிஞன் எந்தச் சூழல் கொடுத்து எழுதச் சொன்னாலும் எழுதுவான். பாவேந்தரும் முருகன் மேல் நூல் எழுதியிருக்கிறாரே. அவருடைய சீடர் எழுதமாட்டாரா!

    இந்தப் பாட்டு மட்டுமல்ல. பதிபக்தி என்ற படத்தில் பாட்டாளிக் கடவுளின் மேல் ஒரு பாட்டும் எழுதியிருக்கிறார்.

    அம்பிகையே முத்து மாரியம்மா-உன்னை
    நம்பி வந்தோம் ஒரு காரியமா! (அம்)

    ஆளை விழுங்கி ஏப்பமிடும் காலமம்மா காளியம்மா
    ஏழை எங்கள் நிலைமையைத்தான்
    எடுத்துச் சொல்றோம் கேளுமம்மா!(அம்)

    சமயபுரத்து மகமாயி சகல உலக மாகாளி
    கன்னபுரத்து மகமாயி காஞ்சிபுரத்து காமாட்சி
    குறைகள் தீரக் கொடுமைகள் மாற
    கருணைக்கண்ணால் பாருமம்மா!
    கும்பிடுபோடும் ஏழை எங்கள்
    குடும்பம் வாழ வேணுமம்மா! (அம்)

    இன்பம் என்று சொல்லக் கேட்டதுண்டு-அது
    எங்க வீட்டுப் பக்கம் வந்ததுண்டா?
    பண்பும் அன்பும் நிறைஞ்சிருக்குது
    பணம் அதைக் கண்டு ஒதுங்கி நிக்குது
    துன்பம் வந்தெங்களைச் சொந்தம் கொண்டாடுது
    சூழ்நிலையும் அதுக்கு ரொம்பத் துணையாகுது
    சூதுக்காரர் தொட்டிலிலே
    காதும் கண்ணும் கெட்டு-நல்ல
    நீதியது குழந்தை போல உறங்குதம்மா-அதை
    நினைக்கையிலே மக்கள்மனது கலங்குதம்மா-காசி விசலாட்சி

    கன்யா குறிச்சி,வடிவழகி,பேச்சி,
    சடச்சி,பெரியாட்சி
    காட்சி கொடுக்கும் மீனாட்சி!
    தெரிஞ்சு நடக்கும் சூழ்ச்சிகளைக் கண்டு உண்மை
    ஒளிஞ்சு மறைஞ்சு வாழுதம்மா-இன்று
    பணிஞ்சு நடக்கும் எளியவரிடம்
    பசியும் பிணியும் பந்தயம் போடுது!
    கொஞ்சம் ஏமாந்தால் வஞ்சம் தீர்க்கப்பாக்குது
    தஞ்சமம்மா உலக நிலை இதுதானம்மா
    தேவைக்கேற்ற வகையில் உன்னை
    போற்றுகிறோம் தூற்றுகிறோம்!
    தீர்ப்பளித்துக் காப்பதுந்தன் திறமையம்மா-உன்
    திருவடியைப் பணிவதெங்கள் கடமையம்மா!

    அக்கினிக்காளி பத்திரக்காளி அந்தரக்காளி
    உதிரக்காளி
    நடனக்காளி சுடலைக்காளீ!
    குறைகள் தீரக் கொடுமைகள் மாற
    கருணைக் கண்ணால் பாருமம்மா!
    கும்பிடுபோடும் ஏழை மக்கள்
    குடும்பம் வாழ வேணுமம்மா!
    நெடியசூலி பெரும்பிடாரீ (அம்பிகையே)

    ஏழைகளின் தெய்வத்தைப் பாடும் போது ஒரு ஏழையாகவே இருந்து அவர்களின் துன்பங்களையெல்லாம் அடுக்கியே பாடுகிறார்.

    இந்த இரண்டு பாடல்கள் மட்டுமல்ல இன்னும் சில பாடல்களும் எழுதியிருக்கிறார்.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – தில்லையம்பல நடராஜா
    எழுதியவர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    பாடியவர் – டி.எம். சௌந்தரராஜன்
    படம் – சௌபாக்கியவதி
    இசை – பெண்ட்யால நாகேஸ்வரராவ்
    பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=qUORRGYe1y4

    பாடல் – அம்பிகையே முத்து மாரியம்மா
    எழுதியவர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    பாடியவர் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.ராமமூர்த்தி
    படம் – பதிபக்தி
    பாடலின் சுட்டி – http://www.raaga.com/channels/tamil/album/T0001760.html

    அன்புடன்,
    ஜிரா

     
    • amas32 8:09 pm on January 27, 2013 Permalink | Reply

      //சதங்கை ஆடும் பாத விநோதா லிங்கேஸ்வரா// இதை எழுதியது நாத்திகரான பட்டுக்கோட்டையார்! கமல்ஹாசன் என்ற நாத்திகர் எழுதியது //உலகுண்ட பெரு வாயன் எந்தன் வாயோடு வாய் பதித்தான்// இரு கலைஞர்களுமே இறைவனை அனுபவித்து தான் எழுதியிருபார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. அல்லது அதற்கு ஈடாக வேறு எதுவோ நான் அறியேன் பராபரமே! 🙂

      amas32

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel