Updates from July, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • G.Ra ஜிரா 12:11 pm on July 16, 2013 Permalink | Reply  

    சிங்Gun 

    விழிகளை வேலோடும் வாளோடும் எத்தனையெத்தனையோ கவிஞர்கள் எத்தனையெத்தனையோ பாடல்களில் எழுதிவிட்டார்கள்.

    அம்புவிழி என்று ஏன் சொன்னான்.. அது பாய்வதனால்தானோ” என்று கண்ணதாசன் கண்களை ஆயுதங்களாகச் சொன்னதுக்கான காரணத்தை விளக்குகிறார்.

    காதல் கொண்ட விழியின் பார்வையைத் தாங்கும் வல்லமை யாருக்கும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

    கண்களால் உண்டான காயங்கள் எக்கச்சக்கம். அந்தக் காயங்களுக்கு மருந்தே கிடையாது என்பதுதான் மிகமிக விசித்திரம்.

    காலங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஆயுதங்களும் மாறிக்கொண்டேயிருக்கின்றன. வேலும் வாளும் அம்பும் கோயிலில் கடவுள் கையில்தான் இன்று காணக்கிடைக்கும்.

    கையடக்கமாக ஒரு துப்பாக்கி இருந்தால் குறிதவறாமல் சுட்டு விடலாம். அதனால் உண்டாகும் இழப்பும் வில்லையும் வாளையும் விட நிறையவே இருக்கும்.

    அப்படிப் பட்ட கண்ணை Gunனோடு ஒப்பிடாமல் இருப்பார்களா கவிஞர்கள்?!?

    உன் கண்ணுக்குள்ள Gunன வெச்சு என்னச் சுடாத
    உன் காக்கிச் சட்ட காலரத்தான் தூக்கி விடாத

    இது சிங்கம்-2 படத்துக்காக விவேகா எழுதிய வரிகள்.

    நாயகன் ஒரு காவல்துறை அதிகாரி. அவனது காதலி பாடும் போது அவன் காவல் தொழிலோடு தொடர்புடைய கருப்பொருட்களைப் பாட்டில் வைத்துப் பாடுவது பொருத்தம் தானே? அதனால்தான் பாட்டில் துப்பாக்கியும் காக்கிச் சட்டையும் வருகின்றன.

    கண் Gunனானால் பார்வை தோட்டாவாகும். பார்வை தோட்டாவானால் பாவை இதயம் பாட்டாகும் என்பது எவ்வளவு உண்மை.

    சரி. கண்ணை Gunனோடு ஒப்பிட்டு வந்த முதல் பாட்டு இதுதானா?

    இல்லை. இல்லை. இல்லை.

    கோடைமழை படத்தில் நா.காமராசன் ஏற்கனவே எழுதிவிட்டார்.

    ஆனாலும் ஒரு வித்யாசம். கவிஞர் விவேகா ஒரு காவல்துறை அதிகாரியின் கண்ணை Gun என்றால் நா.காமராசன் ஒரு பெண்ணின் கண்ணை Gun என்கிறார். அதுவும் கொக்கு சுடப் போன ஒரு குறவன் வாயால்.

    துப்பாக்கி கையிலெடுத்து
    ரெண்டு தோட்டாவும் பையிலெடுத்து
    கொக்கு சுடப் போகும் வழியில்
    என்ன சுட்டதென்ன Gunன்னு
    இந்த கன்னிப் பொண்ணு கண்ணு கண்ணு

    அடுத்து என்னென்ன ஆயுதங்கள் புதிது புதிதாக வரப் போகின்றனவோ.. கவிஞர்கள் அவைகளையெல்லாம் பாட்டில் வைக்கப் போகிறார்களோ!

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – உன் கண்ணுக்குள்ள
    வரிகள் – விவேகா
    பாடியவர்கள் – ப்ரியா ஹிமேஷ், ஜாவித் அலி
    இசை – தேவிஸ்ரீ பிரசாத்
    படம் – சிங்கம்-2
    பாடலில் சுட்டி – http://youtu.be/lRPjWUndJ6w

    பாடல் – துப்பாக்கி கையிலெடுத்து
    வரிகள் – நா.காமராசன்
    பாடியவர் – இசைஞானி இளையராஜா
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – கோடைமழை
    பாடலின் சுட்டி – http://youtu.be/5duNvDDXJxc

    அன்புடன்,
    ஜிரா

    227/365

     
    • amas32 9:56 pm on July 16, 2013 Permalink | Reply

      why do we always fall in love? Is it because of the hurt that follows… என்று நான் கல்லூரி பருவத்தில் கட்டுரை ஒன்றில் எழுதினேன், அது தான் நினைவிற்கு வருகிறது. அம்பு விழி என்று ஏன் சொன்னான்…. அது பாய்வதினால் தானோ ….

      அதே பொருளில் தான் இந்தக் காலத்துக்கும், சூழலுக்கும் ஏற்றாற்போல் உள்ளது விவேகா எழுதிய சிங்கம் 2 படப் பாடலும்.

      காதல் வலியை வரவழைத்தாலும், காதலி நெஞ்சை துளைத்தாலும் இன்றும் காதலில் விழுவதில் பேரானந்தம் உள்ளதால் தானே காதல் வாழ்க என்று காதலர்கள் தொடர்ந்து பாடுகிறார்கள்!

      amas32

      • GiRa ஜிரா 8:04 am on July 18, 2013 Permalink | Reply

        well said அம்மா. அப்போ கல்லூரி காலத்திலிருந்தே நீங்க எழுத்துப்பழக்கம் கொண்டவரா இருந்திருக்கிங்க 🙂

  • G.Ra ஜிரா 11:08 am on March 27, 2013 Permalink | Reply  

    உதடுகளில் உன் பெயர் 

    தூது செல்வதாரடி
    உடன் வரத் தூது செல்வதாரடி
    வான் மதி மதி மதி மதி அவரென் பதி
    என் தேன் மதி மதி மதி கேள் என் சகி
    உடன் வரத் தூது செல்வதாரடி
    படம் – சிங்காரவேலன்
    பாடல் – பொன்னடியான்
    பாடியவர் – எஸ்.ஜானகி
    இசை – இசைஞானி இளையராஜா
    பாடலின் சுட்டி – http://youtu.be/NX9B1s71ILs

    காதற் குளத்தில் விழுந்து முழுகி காப்பாற்ற யாருமின்றித் தவிக்கும் ஒரு காதலி அவளுடைய காதலுக்குத் தூதாக யாரை அனுப்புவது என்று புரியாமல் தத்தளிக்கிறாள். அதுதான் மேலே சொல்லியிருக்கும் பாடல்.

    காதலுக்குத் தூதாக யாரை அனுப்புவது என்பதே ஒரு பெரிய பிரச்சனை. ”தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாளோ தலைவி” என்று கண்ணதாசன் கூட முன்பு எழுதினார். ஆனால் அது காதல் தூதைச் சரியாகச் சொல்லுமா?

    அதற்கு முன்பு அன்னத்தை தூது விட்டாள் தமயந்தி என்று புகழேந்திப் புலவன் நளவெண்பாவில் எழுதினான்.
    மேகத்தைத் தூது விட்டதைப் பற்றி காளிதாசன் வடமொழியில் எழுதினான்.
    கண்ணையும் கண்ணையும் தூது விட்டு அண்ணலும் நோக்கி அவளும் நோக்கி காதலில் விழுந்ததை கம்பனும் எழுதினான். சுந்தரமூர்த்தி நாயனாரோ காதலுக்கு ஈசனாரையே தூது விட்டார்.

    இப்படி தூதாக ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை அனுப்பியிருக்க காளமேகம் அத்தனையும் ஒன்றுக்கும் உதவாதது என்று ஒதுக்கி விடுகிறான். சும்மா ஒதுக்கவில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணத்தோடுதான் ஒதுக்குகிறான். அந்தக் காரணங்களைப் பட்டியலிட்டு நமக்காக ஒரு பாட்டையும் ஒதுக்குகிறான்.

    தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
    தூதிதூ தொத்தித்த தூததே தாதொத்த
    துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
    தித்தித்த தோதித் திதி

    என்ன? ஒன்றும் புரியவில்லையா? கொஞ்சம் பிரித்துப் பிரித்துச் சொல்கிறேன். புரிகின்றதா என்று பாருங்கள்.

    தாதிதூ தோதீது – தாதி தூதோ தீது – தாதி(பணிப்பெண்) செல்லும் தூது தீயது
    தத்தைதூ தோதாது – தத்தை தூதோதாது – தத்தை தூது ஓதாது – கிளியானது தூதைச் சிறப்பாகச் சென்று ஓதாது
    தூதிதூ தொத்தித்த தூததே – தூதி தூது ஒத்தித்த தூததே(தூது அதே) – தோழி செல்லும் தூது தள்ளிப்போடப்பட்டுக் கொண்டேயிருக்கும் தூதாகி விடும்
    தாதொத்த துத்தி தத்தாதே – தாது ஒத்த துத்தி தத்தாதே – பூந்தாதை ஒத்த பசலை நிறம் கொண்ட தேமல் என் மேல் படராது
    தேதுதித்த தொத்து தீது – தே துதித்த தொத்து தீது – தே(இறைவனை) துதித்துத் தொற்றிக் கொள்வதும் தீதே

    என்னடா கொடுமை இது?
    தாதியையும் தூது அனுப்பக் கூடாது.
    கிளியை அனுப்பினால் சொன்னதையே சொல்லி உளறிவிடும்.
    தோழியை அனுப்பினால் எதுவும் காலத்தில் ஆகாது.
    தெய்வத்தையே துதித்துக் கொண்டிருந்தால் ஒரு பயனும் இராது.

    அப்படியானால் என்னதான் செய்வது? எதுதான் நல்லது? அதுதான் பாடலின் கடைசி வரி.

    தித்தித்த தோதித் திதி – தித்தித்தது ஓதித் திதி – தித்திப்பான காதலன் பெயரையே ஓதிக் கொண்டிருப்பேனாக!

    இதைத்தான் பின்னாளில் “உதடுகளில் உனது பெயர் ஒட்டிக் கொண்டது. அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது” என்று நா.காமராசன் தங்கரங்கன் படத்துக்காக எழுதினார். அந்தப் பாட்டின் ஒளிச்சுட்டி கிடைக்கவில்லை. பி.சுசீலாவும் ஜெயச்சந்திரனும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் இசையமைப்பில் பாடிய அந்தப் பாடலின் ஒலிச்சுட்டி இதோ – http://www.thiraipaadal.com/album.php?ALBID=ALBOLD000838

    அன்புடன்,
    ஜிரா

    116/365

     
    • amas32 (@amas32) 9:01 pm on March 27, 2013 Permalink | Reply

      என்ன ஒரு பிரமாதமானப் பாடலைத் தேர்வு செய்து இருக்கிறீர்கள்! காளமேகப் புலவரின் பாடலைப் புரிய வைத்ததற்கு நன்றி 🙂

      காதல் இனிப்பானது. காதலனனின் பெயருக்கோ அதைவிட சுவை அதிகம். அதனால் அதையே ஓதிக கொண்டிருக்கச் சொல்கிறார் புலவர். காதல் பித்து என்பது இதுதானோ? இப்படி அவனையே நினைத்து ஸ்மரணிக்கும் பொழுது டெலிபதியில் தகவல் காதலனுக்குப் போய்விடும் என்று நினைக்கிறேன்.

      amas32

      • GiRa ஜிரா 9:05 am on April 1, 2013 Permalink | Reply

        சரியாகச் சொன்னீர்கள். அதிலும் ஒரு catch. காதல் ஒருமித்த இரு மனங்களுக்கிடையேதான் இந்த டெலிபதி வேலை செய்யும். வேண்டாத இடத்துக்கு அனுப்பினா பிரச்சனையாத்தான் திரும்ப வரும்.

    • rajnirams 10:14 pm on March 27, 2013 Permalink | Reply

      அருமையான பாடல். நா.காமராசன் அவர்களின் சொக்க வைக்கும் வரிகள். நன்றி.

      • GiRa ஜிரா 9:06 am on April 1, 2013 Permalink | Reply

        பதிவு போட்டப்புறம் இன்னொரு பாட்டு தோணுச்சு.

        உன் பேரைச் சொன்னாலே
        உள்நாக்கு தித்திக்குமே

        சரி. இந்தப் பாட்டை வெச்சு வேறொரு பதிவு தேத்திக்க வேண்டியதுதான். 🙂

  • mokrish 10:15 am on February 28, 2013 Permalink | Reply  

    இரு வரிக் கவிதை 

    பெண்ணை வர்ணிக்கும் பாடல்கள்  காதல் ரச பாடல்கள் முத்தம் தரும் / கேட்கும் பாடல்கள் … எவ்வளவு பாடல்கள் இதழ் பற்றி! விதிவிலக்கின்றி அத்தனை கவிஞர்களும் இது பற்றி பாடல் எழுதியிருக்க, எதைப்பற்றி நான் பதிவெழுத?

    கண்ணதாசன் முதல் இன்று காலை ட்விட்டரில் உதித்த புது கவிஞன் வரை அனைவரும் இதழின் சிவப்புக்கு / சிறப்புக்கு ஒரு கவிதையாவது டெடிகேட்  செய்கிறார்கள்.

    • சிப்பி போல இதழ்கள், மாதுளை செம்பவளம் மருதாணி போல என்று ஓராயிரம் பாடல்கள்.

    • தித்திக்கும் இதழ் உனக்கு , இதழே இதழே தேன் வேண்ட குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும் உதடு -தேன் பழரசம் மது என்று போதையில் இன்னொரு ஆயிரம்.

    • தவிர ஆரிய உதடுகள் திராவிட உதடுகள் , இதழில் கவிதை எழுதும் நேரம், , எந்த பெண்ணிலும் இல்லாத உதட்டின் மேல் மச்சம், , bubble gum ஐ இதழ் மாற்றி – டூ மச்!

    சரி வித்தியாசமாய் ஏதாவது? பார்க்கலாம். முதலில் பழைய பாடல். தங்க ரங்கன் என்ற படத்தில் ஒரு பாடல். MSV இசையில் நா. காமராசன் எழுதியது.

    உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
    அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது

    கவனியுங்கள். அவள் பெயர்தான் ஒட்டிக்கொண்டது. உச்சரிப்பதுதான் தித்திக்கிறது. கண்ணியமான வரிகள்.

    அந்நியன் படத்தில் ஐயங்காரு வீட்டு அழகே என்ற பாடலில்

    உன் உதடு சேர்ந்தால் பூப்படையும் வார்த்தை

    நம் உதடு சேர்ந்தால் பூப்படையும் வாழ்க்கை

    தம்பி படத்தில் சுடும் நிலவு சுடாத சூரியன் என்ற பாடலில் ‘நான்கு உதடு பேசும் வார்த்தை முத்தமாகும்’ என்ற வரி

    ஐஸ்வர்யா ராய் என்றாலே வைரமுத்துவின் கற்பனை உற்சாகமாய் இருக்கும்

    ராவணன் படத்தில் ஒரு பாடல்.

    உசுரே போகுதே உசுரே போகுதே

    உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையிலே

    மேஜர் சந்திரகாந்த் படத்தில் ஒரு நாள் யாரோ என்ற பாடலில் இதழின் நிறம் பற்றி வாலியின் கற்பனை ஒரு அழகிய கவிதை.

    செக்கச் சிவந்தன விழிகள் கொஞ்சம்

    வெளுத்தன செந்நிற இதழ்கள்

    வெள்ளை விழிகளும் செந்நிற இதழ்களும் நிறம் மாறி நிற்கும் பெண்ணின் நிலை. இலக்கியத்தில் இதன் equivalent பற்றி சொக்கனும் ராகவனும் தான் சொல்லவேண்டும்.

    அடுத்து இவன் படத்தில் அப்படி பாக்குறதுன்னா வேணாம் என்ற பாடலில் பழனிபாரதி சொல்லும் கற்பனை இனிமை

    சுற்றி சுழன்றிடும் கண்ணில் இசை தட்டு ரெண்டு பார்த்தேனே
    பற்றி இழுத்தென்னை அள்ளும் பட்டு குழிகளில் வீழ்ந்தேனே
    ரெண்டு இதழ் மட்டும் கொண்டிருக்கும்

    உந்தன் புத்தகத்தில் அச்சானேன்

    கண்களால் கைது செய் என்ற படத்தில் பா விஜய் எழுதிய என்னுயிர் தோழியே என்று ஒரு பாடல்

    மூச்சு முட்ட கவிதைகள் குடித்துவிட்டு

    எந்தன் செவியில் சிணுங்குகிறாய்

    ரெண்டு இதழ் மட்டும் கொண்ட அதிசய பூ

    நீ அல்லவோ சிலுப்புகிறாய்

    அவளை இரண்டு இதழ் கொண்ட அதிசய பூவாய் பார்க்கும் கற்பனை.

    ஆயிரம் தான் இருந்தாலும் காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள்தான் என்பது என் எண்ணம். பழனிபாரதியும் அதைத்தான் சொல்கிறார்.

    இன்னும் நிறைய இருக்கும். நீங்களும் சொல்லுங்களேன்

    மோகனகிருஷ்ணன்

    089/365

     
    • என். சொக்கன் 10:23 am on February 28, 2013 Permalink | Reply

      //சிவந்தன விழிகள், வெளுத்தன இதழ்கள்//

      இதே வரி ‘1000 நிலவே வா’ பாட்டிலும் வரும் (புலமைப்பித்தன்?), அக்னி நட்சத்திரம் ‘நின்னுக்கோரி வர்ணம்’ பாடலில் வாலியே இதே வரிகளை மீண்டும் எழுதியிருப்பார்,

      அனைத்துக்கும் Source ஒன்றே : கந்த புராணம் : ’வெளுத்தன சேயிதழ், விழி சிவந்தன’ 🙂

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel