Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • mokrish 9:17 pm on November 21, 2013 Permalink | Reply  

    நீ பார்த்த பார்வைக்கொரு 

    இந்த மாதம் கமல்ஹாசன் பிறந்த நாளன்று ஏதோ ஒரு டிவி சானலில் விஸ்வரூபம் படத்தில் வரும்  உன்னைக் காணாது நான் என்ற பாடலை (இசை சங்கர் – ஈசான்- லாய் பாடியவர்கள்  கமல்ஹாசன், சங்கர் மகாதேவன்)  ஒளிபரப்பினார்கள் பண்டிட் பிர்ஜு  மகராஜ் வடிவமைத்த அருமையான கதக் நடனம். கமல்ஹாசனே நாயகி பாவத்தில் எழுதிய பாடல். அதில் வரும் வரிகள்

    http://www.youtube.com/watch?v=XuOgG2QWAgQ

    அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாணுவேன்

    கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்

    ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்

    ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்

    இந்த 2013ல் ‘எவ்வாறு நாணுவேன்’ என்று ஒரு நாயகி யோசிப்பதும் கண்ணாடி முன் ரிகர்சல் செய்து பார்ப்பதும் என்ற interesting கவிதை.

    ஆணும் பெண்ணும் பரிமாறிக்கொள்ளும் காதல் பார்வை கவிஞர்களின் கற்பனைக்கு நிறைய தீனி போட்டிருக்கிறது. உடனே நம் நினைவுக்கு வருவது கம்பன் சொன்ன அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள். இது கண்டதும் காதல் இல்லை தற்செயலாக (Accidentally) ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்’ என்கிறார் புலவர் கீரன்.

    வள்ளுவர் ஒரு முழு அதிகாரமே எழுதியிருக்கிறார். பெண்ணின் ஒரு பார்வை காதல் நோயைத் தரும். அதுவே நோய்க்கு மருந்தளிக்கும்.  நான் பார்க்கும்போது மண்ணை பார்க்கின்றாயே என்று எல்லாமே  ஒரு ஆணின் Point of View. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் என்ற குறளில் பெண்ணின் பார்வை ஒரு படையுடன் வந்து தாக்குவதுபோல் இருக்கிறது என்பதும் ஆண் சொல்வதே.

    இதில் ஒரு பெண்ணின் நிலை என்ன? சில திரைப்பாடல்களில் கிடைத்த சுவாரஸ்ய முத்துகள். இவன் என்ற படத்தில் பழனிபாரதி எழுதிய பாடல்  (இசை இளையராஜா பாடியவர்கள் மாதங்கி, உன்னிகிருஷ்ணன் )

    http://www.youtube.com/watch?v=Tu7Hjb8NOmo

    அப்படி பாக்குறதுன்னா வேணாம்

    கண் மேலே தாக்குறது வேணாம்
    தத்தி தாவுறதுன்னா னா னா
    தள்ளாடும் ஆசைகள் தானா
    என்ன கேட்காமல் கண்கள் செல்ல
    உன் பக்கம் பார்த்தேன்
    மிச்சம் இல்லாமல் வெட்கம் தின்ன
    காணாமல் போனேன்

    கமலின் 2013 நாயகி எப்படி நாணுவது என்று practise செய்கிறாள். பழனிபாரதியின் 2002 நாயகி வெட்கம் தின்ன காணாமல்  போகிறாள். டைம் லைனில் கொஞ்சம் முன்னே போய் 60களில் வந்த சில பாடல்களைப் பார்த்தால் pleasant surprise. பணக்கார குடும்பம் என்ற படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்  (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர்கள் டி எம் எஸ், பி சுசீலா)

    http://www.youtube.com/watch?v=ABRw-iSaCJI

    இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்  தானா

    இப்படி என்று சொல்லி இருந்தால் தனியே வருவேனா …..

    இது ஏய் அப்படி பாக்காதே mode தான். ஆனால் வல்லவன் ஒருவன் படத்தில் கண்ணதாசன் எழுதிய இன்னொரு பாடல் bold & beautiful.  (இசை வேதா பாடியவர்கள் டி எம் எஸ், பி சுசீலா)

    http://www.youtube.com/watch?v=Lu8FNldHluA

    இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது

    இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது

    நான் கேட்டதை தருவாய் இன்றாவது

    கவியரசர் பெண்ணின் கோணத்தில் சொல்லும் அதிரடி வரிகள். 1966ல் வெளிவந்த பாடல் வரிகள் என்று நம்பவே முடியவில்லை. இதை மக்கள் எப்படி விமர்சனம் செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

    மோகனகிருஷ்ணன்

     
    • Uma Chelvan 12:47 am on November 22, 2013 Permalink | Reply

      நினைக்க மறந்தாய் , தனித்து பறந்தேன்
      மறைத்த முகத்திரை திறப்பாயோ
      திறந்து அகத்திரை இருப்பாயோ!!
      இருந்து விருந்து இரண்டு மனம் இணைய …….

      உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன்…

      ராஜா ஒரு மழை போல்!! மழைக்கு காடென்ன, கடெலென்ன, பாரபட்சம் இல்லாமல் எங்கும் பொழிவது போல் .ராஜாவும்…….மோகன், முரளி, ராமராஜன், சிவகுமார், விஜயகாந்த் முதற்கொண்டு அனைவரையும் கட்டி காத்த எல்லைச் சாமி. நல்ல குரல் வளம் கொண்ட வடிவேலும் ராஜவினால்தான் சினிமாவில் பாட ஆரம்பித்தார் என்று நினைகிறேன்.

      மாமழை போற்றுதும்!!!! ராஜாவையும் !!!!!

    • rajinirams 10:38 am on November 22, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு. நீங்கள் சொன்னது போல “ஆணும் பெண்ணும் பரிமாறிக்கொள்ளும் காதல் பார்வை கவிஞர்களின் கற்பனைக்கு நிறைய தீனி போட்டிருக்கிறது”.கவியரசரின் “பார்வையிலேயே”ஏராளம். பார்த்தேன் ரசிந்தேன் என்று ஆரம்பித்து ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்,என்ன பார்வை உந்தன் பார்வை,பார்வை யுவராணி கண்ணோவியம் இப்படி பல. எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன என்ற கேள்விக்கு உன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது என்பது கண்ணதாசனின் பார்வை தான்.ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்,கண் தேடுதே சொர்க்கம்-வாலியின் பார்வை.உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில்-இது கங்கை அமரனின் கற்பனை.பார்வையாலே நூறு பேச்சு,வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு-வைரமுத்துவின் பார்வை. விழிகள் மேடையாம்,இமைகள் திரைகளாம் “பார்வை”நாடகம் அரங்கில் ஏறுமாம்-இது டி.ராஜேந்தரின் பார்வை.பார்க்காதே பார்க்காதே-நீ பார்த்தா பறக்குறேன் பாதை மறக்குறேன்-இது யுகபாரதியின் வருத்தப்படாத வாலிபர் சங்க பார்வை. நன்றி.
      “மார்கழி பார்வை பார்க்கவா” என்ற வார்த்தைகளும் நல்ல கற்பனையே-ராஜாவின் இசையில் உள்ள இந்த பாடலை கேட்டிருக்கிறேன்,எந்த படம் என்று தெரியவில்லை.(உயிரே உனக்காக என்ற பெயரில் எடுக்கப்பட்டு நின்று போனது என்று நினைக்கிறேன்) http://youtu.be/XEvlj_vvgoM

    • amas32 11:57 am on November 22, 2013 Permalink | Reply

      //இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது

      இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது

      நான் கேட்டதை தருவாய் இன்றாவது//

      இந்த வரிகள் தான் நீங்கள் இன்று கொடுத்திருப்பதிலேயே பெஸ்ட். என்ன ஒரு கற்பனை, உண்மைக்கு மிக அருகில். கண்ணதாசனைப் பெற்ற இத் தமிழகம் புண்ணிய பூமி!

      amas32

    • srimathi 10:54 pm on November 22, 2013 Permalink | Reply

      I’m glad that there are so many songs where a woman’s perspective is portrayed. To be exactly in woman’s shoes is possible only when a woman writes it herself. Ondra renda aasaigal from kaakha kaakha is a popular example. Thamarai writes it this way “thoorathil nee vandhaale en manadhil mazhai adikkum, miga piditha paadal ondru udhadugalil munumunukkum”

  • என். சொக்கன் 9:36 pm on November 20, 2013 Permalink | Reply  

    மலரும் அன்பு 

    • படம்: பாண்டிய நாடு
    • பாடல்: ஒத்தைக்கடை
    • எழுதியவர்: வைரமுத்து
    • இசை: டி. இமான்
    • பாடியவர்கள்: சுராஜ் சந்தோஷ், ஹரிஹரசுதன்
    • Link: http://www.youtube.com/watch?v=BaG0wq-23lQ

    ஜெயிச்சா இன்பம் வரும், தோத்தா ஞானம் வரும்,

    இதான் மச்சி லவ்வு! இது இல்லா வாழ்க்கை ஜவ்வு!

    நாரும் பூ ஆகும்டா, மச்சி

    மோரும் பீர் ஆகும்டா!

    ’பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்’ என்பது நம் எல்லாருக்கும் தெரிந்த பழமொழி. வாசனை எதுவும் இல்லாத நாரில்கூட, அதனால் கட்டப்பட்டுள்ள பூக்களின் வாசனை சேர்ந்துவிடும் என்பதுதான் இதன் அர்த்தம்.

    அங்கிருந்து அப்படியே ஒரு டைவ் அடித்துத் திருக்குறளுக்குச் செல்வோம். இந்தப் பாடலைப் பாருங்கள்:

    நாணாமை, நாடாமை, நார் இன்மை யாது ஒன்றும்

    பேணாமை பேதை தொழில்

    அதாகப்பட்டது, பேதைங்களோட வேலைகள் என்னென்ன தெரியுமா?

    1. கெட்டதைச் செய்யறமேன்னு வெட்கப்படமாட்டாங்க : நாணாமை

    2. நல்லதைத் தேடமாட்டாங்க : நாடாமை

    3. அவங்ககிட்ட நார் இருக்காது : நார் இன்மை

    4. நல்லபடியாப் பார்த்துக்கவேண்டிய நல்ல குணங்களைப் பராமரிக்கமாட்டாங்க : பேணாமை

    மற்றதெல்லாம் புரிகிறது. அதென்ன ‘நார் இன்மை’? நார் இல்லாமல் எப்படி பூவைக் கட்டுவார்கள்? அது என்ன வயர்லெஸ் பூமாலையா?

    தமிழில் ‘நார்’ என்ற சொல்லுக்கு அன்பு என்றும் அர்த்தம் உண்டு. அதைதான் திருவள்ளுவர் இங்கே பயன்படுத்துகிறார். ‘நார் இன்மை’ என்றால், அன்பு இல்லாத மனம் என்று அர்த்தம்.

    இன்னொரு ரிவர்ஸ் ஜம்ப் அடித்து பழமொழிக்குத் திரும்பி வாருங்கள். இப்போது ‘பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும்’ என்றால் என்ன அர்த்தம்?

    காதலிக்குப் பூ வாங்கிக் கொடுத்தால், அவளுக்கு உன்மேல் அன்பு பிறக்கும், அதுவும் அந்த பூவைபோலவே, அந்தப் பூவைப்போலவே மணம் வீசும்!

    அப்புறமென்ன? உடனே ஓடுங்க பூக்கடைக்கு!

    ***

    என். சொக்கன் …

    20 11 2013

    353/365

     
    • kekkepikkuni 9:47 pm on November 20, 2013 Permalink | Reply

      நாரும் பூ ஆகுமடா. அருஞ்சொற்பொருள் [எனக்குப் புரிந்த அளவில்:-] அன்பும் ஃப்ப்ப்பூன்னு போயிடும். அல்லது, அன்பூ ஆகிடும். 🙂

    • amas32 10:00 pm on November 20, 2013 Permalink | Reply

      இன்று தான் பாண்டிய நாடு பார்த்தேன் 🙂

      நார்=அன்பு இன்று புதிதாகக் கற்றுக் கொண்டேன், நன்றி 🙂

      மோர் எப்படி பீர் ஆகும், ரொம்ப நாள் சந்தேகம்.

      amas32

    • rajinirams 10:38 am on November 21, 2013 Permalink | Reply

      ஆஹா,பிரமாதம் சார். “நார்”கலந்த நன்றி:-))

    • Chandsethu 7:59 pm on November 21, 2013 Permalink | Reply

      “அப்புறமென்ன? உடனே ஓடுங்க பூக்கடைக்கு!” சொக்கன் ஸ்டைல் :))))

  • என். சொக்கன் 10:55 pm on October 3, 2013 Permalink | Reply  

    சரியோ? தவறோ? 

    • படம்: தெய்வத்தாய்
    • பாடல்: ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
    • எழுதியவர்: வாலி
    • இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    • பாடியவர்: டி. எம். சௌந்தர்ராஜன்
    • Link: http://www.youtube.com/watch?v=uegEKABaaSo

    கொடி மின்னல் போல் ஒரு பார்வை,

    மானோ மீனோ என்றிருந்தேன்!

    குயில் ஓசை போல் ஒரு வார்த்தை,

    குழலோ யாழோ என்றிருந்தேன்!

    இந்தப் பாட்டைத் திருவள்ளுவர் எழுதியிருந்தால், ‘மான் இனிது, மீன் இனிது என்பர் தம் காதலியர் கூர்மைக் கண் பாராதவர்’ என்று தொடங்கியிருப்பார்.

    அது நிற்க. இணையத்தில் ஒரு செய்தியைப் படித்துக்கொண்டிருந்தேன். ‘இந்தத் திட்டம் வருகிற நவம்பரிலோ அல்லது டிசம்பரிலோ அமலுக்கு வரும்’ என்று எழுதியிருந்தார்கள்.

    தமிழில் ஓகாரம், ‘ஆவது’ என்ற சொல்லில் முடியும் இரு சொற்களை அடுத்தடுத்து எழுதும்போது, இடையில் ‘அல்லது’ என்று சேர்க்கவேண்டியதில்லை. காரணம், அந்த ஓகாரம் / ‘ஆவது’ என்பதிலேயே ‘அல்லது’ என்பதும் இருக்கிறது.

    அதாவது, ‘மானோ மீனோ’ என்று சொன்னாலே, மானோ அல்லது மீனோ என்றுதான் அர்த்தம். ஒருவேளை அந்த ஓகாரம் இல்லாவிட்டால் ‘மான் அல்லது மீன்’ என்று எழுதலாம்.

    அதேபோல், ‘இன்றைக்காவது அல்லது நாளைக்காவது’ என்று எழுதவேண்டியதில்லை. ‘இன்றைக்கு அல்லது நாளைக்கு’ என்று எழுதலாம், ‘இன்றைக்காவது நாளைக்காவது’ என்று எழுதலாம், ‘இன்றைக்கோ நாளைக்கோ’ என்று எழுதலாம்.

    எதற்கு அநாவசியமாக அல்லதைச் சேர்க்கவேண்டும்? நல்லதைச் சேர்த்தால் போதுமே!

    ***

    என். சொக்கன் …

    03 10 2013

    306/365

     
    • Uma Chelvan 7:27 am on October 4, 2013 Permalink | Reply

      எதற்கு அநாவசியமாக அல்லதைச் சேர்க்கவேண்டும்? நல்லதைச் சேர்த்தால் போதுமே!

      மிக மிக அழகாக சொல்லி இருக்கீங்க Mr. சொக்கன்.

      எத்தனை ஜென்மம் எனக்கு அளித்தாலும்
      இசை ஞானமும் நல்ஒழுக்கமும் வேண்டும் -அத்தனயும் நீ
      எனக்கு அளித்தாலும் என் அருகினில் இருந்து ஆண்டிட வேண்டும் !!!!

      வாணி வாகதீஸ்வரி, வரமருள்வாய் !!!!

      நாளைக்கு முதல் நாள் நவராத்திரி…..கலைமகளின் கருணையும் கண்ணனின் வருகையும் என்றும் நல்லதே கொண்டுவரும் !!!

      பாடியவர் – கே ஜே. யேசுதாஸ்

      ராகம்- வாகதீஸ்வரி

    • Uma Chelvan 8:05 am on October 4, 2013 Permalink | Reply

      சொல்ல மறந்த கதை படத்தில் ராஜா ஒரு பாடலில் ( title song , எல்லா பாடலும் அவரே எழுதி இருக்கார்) படிச்ச படிப்பினால் நல்ல பண்பு வளரனும் என்று சொல்லி இருப்பார்.

      இதே படத்லில் வேறு ஒரு பாடலும் நன்றாக இருக்கும்…………குண்டு மல்லி குண்டு மல்லி தென்றல் காத்து அடிச்சதும்,கண்ண திறக்குது , கண்ணன் கண்ணு பட தேனை சுரக்குது ……….எவ்வளவு வித்தியாசம் முதல் பாடலுக்கும் இந்த பாடலுக்கும் ??

    • Saba-Thambi 3:13 pm on October 4, 2013 Permalink | Reply

      நவீன திருவள்ளுவர் வாழ்க!

  • என். சொக்கன் 9:45 pm on September 27, 2013 Permalink | Reply  

    மென்மஞ்சம் 

    • படம்: ராஜபார்ட் ரங்கதுரை
    • பாடல்: மதன மாளிகையில்
    • எழுதியவர்: கண்ணதாசன்
    • இசை: எம். எஸ். விஸ்வநாதன்
    • பாடியவர்கள்: டி. எம். சௌந்தர்ராஜன், பி. சுசீலா
    • Link: http://www.youtube.com/watch?v=ds_8nIPwc2I

    அழகு மாணிக்கமா, கட்டில்

    அனிச்ச மலரணையா!

    வாசலில் தோரணம் உன்னை

    வரச்சொல்லும் தோழிகளா!

    முதலிரவில் கட்டில்மீது மலர் தூவுவார்கள் என்று தெரியும். அதில் என்ன குறிப்பாக அனிச்ச மலரணை?

    அதற்குமுன்னால், கட்டில்மீது எதற்குப் பூவைத் தூவுகிறார்கள்?

    என்னதான் மென்மையான மெத்தையாக இருப்பினும், அதில் சில நுட்பமான தூசுகள் இருந்தே தீரும், அவை நாயகன், நாயகியின் உடலை உறுத்திவிட்டால் காதல் நாடகத்துக்கு இடைஞ்சல் இல்லையா?

    அதைத் தவிர்ப்பதற்காகதான் மெத்தையின்மீது மலர்களைத் தூவுகிறார்களாம். அவை உடம்பை உறுத்தாது, மென்மையாக ஒத்தடம்தான் கொடுக்கும்.

    பொதுவாக எல்லா மலர்களுமே (காலிஃப்ளவர்தவிர) மென்மையானவைதான். அவை செடியில் இருக்கும்வரை அழகு, பறிக்க முயன்றாலே கொஞ்சம் சிதையும், பறித்துவிட்டால் வாடத் தொடங்கிவிடும்.

    அதிலும் குறிப்பாக, அனிச்ச மலர் மிகவும் மென்மையானது. அதைப் பறிக்கக்கூட வேண்டாம், சும்மா முகர்ந்து பார்த்தாலே குழைந்து துவண்டுவிடும்.

    இதைதான் திருவள்ளுவர் தாடியைத் தடவியபடி சொன்னார், ‘மோப்பக் குழையும் அனிச்சம்!’

    ’மோத்தல்’ என்றால் முகர்ந்து பார்த்தல், ‘நாய் மோப்பம் பிடிக்கிறது’ என்கிறோமே, அதே மோப்பம்தான் இதுவும்.

    இதே சொல் குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு பிரபலமான சொல், ‘முகர்தல்’. ‘அவன் நறுமணத்தை நன்கு முகர்ந்தான்’ என்று படித்திருப்போம்.

    சிலர் இதனை ‘நறுமணத்தை நுகர்ந்தான்’ என்றும் எழுதுவார்கள். அது சரியா?

    ‘நுகர்தல்’ என்றால் பயன்படுத்துதல் என்று அர்த்தம். ’நுகர்வோர் உரிமைச் சட்டம்’ என்று செய்திகளிலும் ‘நுகர்வோரே! விழித்திடுங்கள்’ என்று தூர்தர்ஷன் விளம்பரங்களிலும் இதைக் கேட்டிருப்போம்.

    ஆக, ‘நறுமணத்தை நுகர்ந்தான்’ என்றால், நறுமணத்தைப் பயன்படுத்தினான் என்றுதான் அர்த்தம். ‘நறுமணத்தை முகர்ந்தான்’ என்றால் மூக்கால் வாசனை பிடித்தான் என்று அர்த்தம்!

    சுற்றிவளைத்துப் பார்த்தால், இரண்டும் ஒன்றுதானோ?!

    ***

    என். சொக்கன் …

    27 09 2013

    300/365

     
    • rajinirams 10:44 pm on September 27, 2013 Permalink | Reply

      முதலில் மூவருக்கும் முன்னூறு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.மோப்பக்குழையும் அனிச்சம் என்ற வள்ளுவரின் குறளோடு அனிச்சமலரின் சிறப்பையும்.நுகர்தலுக்கும் முகர்தலுக்கும் உள்ள வித்தியாசத்தை எளிமையாக விளக்கிய நல்ல பதிவு.முதல்வனில் வைரமுத்துவும் அனிச்ச மலரழகே என்று அழகாக வர்ணித்திருப்பார்.நன்றி.

    • amas32 5:02 pm on September 28, 2013 Permalink | Reply

      #300 வாழ்த்துகள் 🙂 மிகவும் மகிழ்ச்சி! ஜிரா, மோகன், சொக்கன் – உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த பாராட்டு! மேலும் மேலும் தொடர்ந்து எங்கள் அறிவை செம்மைப் படுத்த இது போன்ற பதிவுகளை எழுதுமாறு இந்தத் தருணத்தில் விண்ணப்பிக்கிறேன் 🙂

      அனிச்ச மலர் அவ்வளவு மென்மையானதாச்சே, அதன் மேல் எப்படி படுத்து கசக்குவது? எப்பவும் மஞ்சத்தில் தூவிய மலர்களைத் திரைப்படங்களில் பார்க்கும் பொழுது மலர்களை எண்ணி வருத்தப் படுவேன் 🙂

      amas32

  • mokrish 6:42 pm on September 13, 2013 Permalink | Reply  

    கண்ணை நம்பாதே 

    டிவியில் தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் பாடல் ஓடிக்கொண்டிருந்தது.அதில் ‘கூட இருந்தே குழி பறித்தாலும்  கொடுத்தது காத்து நிக்கும்’ என்ற வரியைக் கேட்டவுடன் கொஞ்சம் அதிர்ந்து போனேன். எந்த சமயத்திலும் தர்மம் தலை காக்கும் என்று  உணர்த்த கண்ணதாசன் சொல்லும் ஒரு extreme சூழ்நிலை – கூட இருந்தவர்கள் குழி பறிப்பது!

    நம்மில் பலருக்கு பள்ளியில், கல்லூரியில்,அலுவலகத்தில், உறவுகளில், நட்பில், வாழ்க்கையில் என்று ஏதாவது ஒரு இடத்தில் இந்த அனுபவம் கிடைத்திருக்கும் The saddest thing about betrayal is that it never comes from your enemies என்று படித்திருக்கிறேன்.

    வள்ளுவர் கூடா நட்பு என்ற அதிகாரத்தில் சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு அஞ்சி ஒதுங்கிட வேண்டும்

    முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா

    வஞ்சரை அஞ்சப் படும்.

    என்று சொல்கிறார். வஞ்சகரின் சிரிப்பு மட்டுமல்ல கண்ணீரும் சதியே என்கிறார். தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் என்ற குறளில் வணங்குகின்ற போதுகூட கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும் என்கிறார்  ஆனால் அடையாளம் காண முடிந்தால்தானே கூடா நட்பு என்று filter செய்ய முடியும்? என்ன வழி ?

    திரைப்படங்களில் நம்பிக்கை துரோகம் கதையின் ஓட்டத்துக்கு பெரிதும் உதவும் என்பதால் பல பாடல்களில் இதே கருத்து தென்படுகிறது. கண்ணதாசன் பறக்கும் பாவை படத்தில் (இசை எம் எஸ் வி பாடியவர் பி சுசீலா)

    http://www.youtube.com/watch?v=5Pg7cM-CsV0

    யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
    அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்

    உறவெல்லாம் முள்ளாகும்
    உயிரெல்லாம் கல்லாகும்

    என்று ஆரம்பித்து வஞ்சம் அதனால் வந்த வலி, விடுபட வழி என்று அசத்துகிறார்.

    அழகைக் காட்டும் கண்ணாடி
    மனதைக் காட்டக் கூடாதோ
    பழகும்போதே நன்மை தீமை
    பார்த்துச் சொல்லக் கூடாதோ
    வாழ்த்தும் கையில் வாளுண்டு
    போற்றும் மொழியில் விஷமுண்டு
    வஞ்சம் சிந்தும் புன்னகையில்லா
    மனிதர் இங்கே எவருண்டு

    அட இப்படி ஒரு கண்ணாடி இருந்தால் அது எப்படி இருக்கும்?

    வாழ்த்தும் கையில் வாளுண்டு என்ற வரியும் வள்ளுவன் சொன்னதுதானே? இதை பஞ்சு அருணாசலம் காயத்ரி படத்தில் வாழ்வே மாயமா என்ற பாடலில்

    http://www.youtube.com/watch?v=NUixEzeTpuI

    சிரிப்பது போல முகமிருக்கும்

    சிரிப்புக்குப் பின்னால் நெருப்பிருக்கும்

    அணைப்பது போல கரமிருக்கும்

    அங்கே கொடுவாள் மறைந்திருக்கும்

    திரைபோட்டு நீ மறைத்தாலென்ன

    தெரியாமல் போகுமா?

    என்ற வரிகளில் சொல்கிறார். கண்ணதாசன் ஒரு கண்ணடி வேண்டும் என்கிறார். பஞ்சு திரை போட்டாலும் இதை மறைக்க முடியாது வெளியே தெரியாமல் போகாது என்கிறார்.

    இன்னொரு பாடல் கிடைத்தது. கண்ணதாசன் திருவருட் செல்வர் படத்தில் வேறு context ல் நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து , நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே என்று எழுதுகிறார். சிவ சிவா!

    மோகனகிருஷ்ணன்

    286/365

     
    • amas32 8:20 pm on September 13, 2013 Permalink | Reply

      எம்மாற்றுவது மனித குணம். டாஸ்கென்ட்டில் மரணித்த லால் பகதூர் சாஸ்திரியின் இறப்பில் மர்மம் உண்டு. அவர் செய்த தர்மம் அவரை அது வரை தான் காத்தது போலும்! அதே தான் மகாத்மா காந்தியின் மரணத்திலும். வணங்கி பின் சுட்டான் கோட்சே. வீரபாண்டியக் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனைப் போல இன்று நம் வாழ்விலும் பலர் உள்ளனர். சில சமயம் அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் அமையும். சில சமயம் புரிந்துக் கொள்ளாமலேயே கூட வாழ்க்கை முடிந்தும் போகும்.

      நீங்கள் தேர்ந்தெடுத்தப் பாடல்கள் மிகவும் பொருள் செறிந்தவை.

      amas32

    • uma chelvan 9:43 pm on September 13, 2013 Permalink | Reply

      The saddest thing about betrayal is that it never comes from your enemies …………100% true.
      நஞ்சை நெஞ்சிலே மறைத்து இருக்கும் நம்பும் நல்லவர் குடி கெடுக்கும் ……….கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும்…

    • rajinirams 12:43 am on September 15, 2013 Permalink | Reply

      கூட இருந்து குழி பறிக்கும் வஞ்சக எண்ணங்களை பல பாடல்களில் நம் கவிஞர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.தென்றல் போன்ற நண்பன் தான் தீயைப்போல மாறினான்,தோழனே துரோகியாய் மாறியே வஞ்சம் தீர்த்த ஒரு நண்பனின் கதை-சட்டம்.யார்யாரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் ஒன்று பூவென்று முள்ளைக்கண்டு புரியாமல் நின்றேன் இன்று=பால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று என துரோகத்தில் நொந்து போன சிம்லா ஸ்பெஷல் வரிகள் -இரண்டும் வாலி. பொய்மையும் வஞ்சமும் உனது பூர்விகமே ரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே.வெற்றி நிச்சயம் என வீர நடை போட்ட வைரமுத்துவின் வரிகள்.நன்றி கொன்ற நெஞ்சங்களை கண்டு கண்டு வெந்த பின்பு உறவு கிடக்கு போடி என்று சொந்தங்களின் துரோகத்தை வேதனையாக வடிக்கும் தர்மதுரையின் அண்ணன் என்ன தம்பி என்ன-இப்படி பல பாடல்கள். நன்றி.

  • என். சொக்கன் 11:42 pm on September 12, 2013 Permalink | Reply  

    நாணத் தங்கமே! 

    • படம்: தெய்வ வாக்கு
    • பாடல்: வள்ளி, வள்ளி என வந்தான்
    • எழுதியவர்: வாலி
    • இசை: இளையராஜா
    • பாடியவர்கள்: இளையராஜா, எஸ். ஜானகி
    • Link: http://www.youtube.com/watch?v=10PSPLEH1D0

    வண்ணப் பூ, வஞ்சிப் பூ, வாய்வெடித்த வாசப் பூ அன்புத் தேன், இன்பத் தேன் கொட்டுமா?

    இந்தப்பூ, சின்னப்பூ, கன்னிப்போகும் கன்னிப் பூ, வண்டுதான் வந்துதான் தட்டுமா?

    என்னை மீண்டும் கொஞ்சத் தூண்டும்

    நாணல் போலே தேகம் தன்னில் நாணம் என்னம்மா!

    சமீபத்தில் ஒரு நடிகை தந்த பேட்டி கண்ணில் பட்டது. ‘நான் மாடர்ன் பொண்ணு, எனக்கு வெட்கம், நாணம்ல்லாம் கொஞ்சம்கூட இல்லை’ என்று சொல்லியிருந்தார்.

    உண்மையில் அவர் சொல்ல வந்தது, ’எனக்குக் கூச்சம் கிடையாது’ என்றுதான். அதற்குப் பதிலாக ’நாணம்’ என்ற சொல்லைப் பயன்படுத்திவிட்டார்.

    அவரைச் சொல்லிக் குற்றமில்லை. தமிழ் சினிமா செய்திருக்கிற வேலை அப்படி. சுற்றிச் சுற்றி எல்லாப் பாடல்களிலும் காட்சிகளிலும் வசனங்களிலும் நாணம் என்றால் வெட்கம், கூச்சம், பெண்களுக்குமட்டுமே சொந்தமான ஓர் உணர்வு என்று காட்சிப்படுத்திவிட்டார்கள்.

    அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்று பெண்களின் இலக்கணமாக(?) வர்ணிக்கப்படும் நான்கு விஷயங்களில் ‘நாணம்’ இடம் பிடித்திருக்கிறது. அப்படியானால் அது ஆணுக்கு இருக்கக்கூடாதா?

    இதுபற்றித் திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?

    ’நாணுடைமை’ என்று அவர் ஒரு முழு அதிகாரமே எழுதியிருக்கிறார். அதன் முத்தாய்ப்பாக வரும் குறள்:

    நாண் அகத்து இல்லார் இயக்கம், மரப்பாவை

    நாணால் உயிர்மருட்டி அற்று

    அதாவது, உள்ளத்தில் நாணம் இல்லாதவர்கள், கயிறால் ஆட்டி வைக்கப்படும் பொம்மைக்குச் சமம். இங்கே அவர் ஆண், பெண் என்று எதுவும் சொல்லவில்லை.

    அப்படியானால் எல்லாருக்கும் நாணம் வேண்டும் என்றல்லவா அர்த்தமாகிறது. எதற்காக நாணுவது?

    அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் தவறுகளுக்கா குறைச்சல்? அந்தத் தவறுகளை எண்ணி நாணுங்கள் என்கிறார் திருவள்ளுவர். அப்போதுதான் அடுத்தமுறை அதே தவறைச் செய்யாமல் இருப்போம்.

    ஆக, ‘எனக்கு நாணமே கிடையாது’ என்று ஒருவர் சொன்னால், அவர் மரப் பொம்மை என்று அர்த்தம்!

    அது கிடக்கட்டும். இந்தக் குறளில் ‘நாண்’ என்ற சொல் இரண்டுமுறை வருகிறதே. ஏன்?

    தமிழில் இந்தச் சொல்லுக்கு இரு பொருள்கள் உண்டு. முதலில் வரும் ‘நாண்’ என்பதன் அர்த்தம், நாணம், அடுத்த வரும் ‘நாண்’ என்பதன் அர்த்தம், கயிறு.

    நாண் = கயிறு? நம்பமுடியவில்லையா?

    அர்ணாக்கயிறு என்று சொல்கிறோமே, அந்தக் கொச்சைச் சொல்லின் உண்மையான வடிவம், ‘அரை நாண்’ என்பதுதான். ‘அரை’ என்றால் இடுப்பு, ‘நாண்’ என்றால் கயிறு. ஆக, ‘அரை நாண்’ என்றால், இடுப்பில் கட்டப்படும் கயிறு. இதனை ‘அரை ஞாண்’ என்றும் சொல்வார்கள்.

    அப்படியானால், ‘அரை நாண் கயிறு’ என்றால், ‘இடுப்புக் கயிறுக் கயிறு’?

    ஆமாம். ‘அரை நாண் கயிறு’ என்று சொல்ல அவசியமே இல்லை. ‘அரை நாண்’ என்று சொன்னாலே போதும். கயிறு அதற்குள்ளேயே இருக்கிறது.

    இந்தமாதிரி வேடிக்கை தமிழில்மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் உண்டு. உதாரணமாக, ‘ATM Machine’ என்று சொல்கிறோமே, அதை ATM என்றுதான் சொல்லவேண்டும், அதன் முழு வடிவம் ‘Automatic Teller Machine’. அதற்குப்பின்னால் கூடுதலாக இன்னொரு மெஷினைச் சேர்க்கவேண்டியதில்லை!

    ***

    என். சொக்கன் …

    12 09 2013

    285/365

     
    • Shenbagaraja 11:52 pm on September 12, 2013 Permalink | Reply

      http://en.wikipedia.org/wiki/RAS_syndrome
      PIN number, LPG gas, LCD display…. there is a huge list… 🙂

    • abdul 12:29 pm on September 13, 2013 Permalink | Reply

      நாணத்துக்கு வெட்கம் – Guiltyness ன்னு எடுத்துக்கலாமா சார்?

    • rajinirams 12:39 pm on September 13, 2013 Permalink | Reply

      அரை ஞான் கயிறு-ATM சூப்பர் விளக்கம் சார். பெண்களின் இலக்கணம் என்று சொல்லிவிட்டு கேள்விக்குறி:-))))-ஹா ஹா. “கை வில்லதனை வளைத்திருக்கும் “நாணும்” இந்த மெல்லியலாள் புருவம் கண்டால் “நாணும்”-காவியக்கவிஞர் வாலியின் அற்புதமான வார்த்தை விளையாட்டு-இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ.

    • amas32 6:42 pm on September 13, 2013 Permalink | Reply

      பேச்சு வழக்கில் நாணம் என்பதனை வெட்கம் – shy என்ற பொருளில் தான் பயன் படுத்துகிறோம். பல பாடல்களிலும் அப்படித் தான் கவிஞர்கள் எழுதியுள்ளார்கள், படமைப்பும் நாணிக் கோணி நிற்கும் பெண்களைத் தான் காட்டுவார்கள். ஆனால் திருவள்ளுவரின் குரள் படி நாணம் என்பது தவறு செய்தப் பின் வரும் மன நிலை என்று புரிகிறது.

      amas32

  • என். சொக்கன் 3:02 pm on August 16, 2013 Permalink | Reply
    Tags: 08 2013, 258/365   

    தளிரே! 

    • படம்: கலைக் கோவில்
    • பாடல்: தங்க ரதம் வந்தது
    • எழுதியவர்: கண்ணதாசன்
    • இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
    • பாடியவர்: பாலமுரளி கிருஷ்ணா, பி. சுசீலா
    • Link: http://www.youtube.com/watch?v=2wWdF_kZhjA

    தங்க ரதம் வந்தது வீதியிலே, ஒரு

    தளிர் மேனி வந்தது தேரினிலே!

    மரகதத் தோரணம் அசைந்தாட, நல்ல

    மாணிக்க மாலைகள் கவி பாட!

    துளிர் தெரியும், அதென்ன தளிர்?

    தமிழ்க் கவிஞர்களுக்கு, குறிப்பாகக் காதல் பாடல் எழுதுகிறவர்களுக்கு மிகவும் பிடித்த வார்த்தை இது. ‘தளிர்மேனி’ என்று வர்ணிப்பார்கள், ‘இளந்தளிரே’ என்று புகழ்வார்கள், ‘மாந்தளிரே’ என்று வகை குறிப்பிட்டுச் சொல்வதும் உண்டு.

    ’தளிர்’ என்றால் இலை என்பது எல்லாருக்கும் தெரியும், அதற்கு ‘இலை’ என்ற வார்த்தையையே பயன்படுத்திவிட்டுப் போகலாமே. ஏன் ‘தளிர்’ என்று சொல்லவேண்டும்?

    இலை என்றால், அது இப்போதுதான் முளைத்ததாகவும் இருக்கலாம், காய்ந்து கரடுமுரடானதாகவும் இருக்கலாம், ஏன், பழுத்துப்போய் உதிர்ந்து கீழே கிடக்கும் சருகுகூட இலைதானே?

    ஆனால் தளிர் என்பது அப்படி இல்லை. அது இலையின் ஒரு குறிப்பிட்ட நிலையைச் சொல்கிறது, முளைத்துச் சிறிதளவுமட்டும் வளர்ந்த (தளிர்த்த) மென்மையான, அழகான இலை.

    திருவள்ளுவர் இந்தச் சொல்லை எப்படிப் பயன்படுத்துகிறார் என்று பாருங்கள்:

    உறுதொறு உயிர் தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு

    அமிழ்தின் இயன்றன தோள்

    ஒரு காதலன் காதலியைப் பார்த்துக் கேட்கிறான், ‘அடியே, உன் தோள்களை எலும்பால, சதையால செஞ்சாங்களா, இல்லை அமுதத்தால செஞ்சாங்களா?’

    ‘ஏன்ய்யா உனக்கு இந்தச் சந்தேகம்?’

    ‘பின்னே? உன்னைப் பிரிஞ்சு வாடின என் உயிர், நீ தொட்டதும் சட்டுன்னு தளிர்க்குதேடி!’

    அதாவது, புதிய இலை அல்ல, ஏற்கெனவே இருந்த உயிர்தான், அவள் தொட்டதும், Refresh ஆகிறது, இளமையாகிறது, என்றும் பதினாறாகிறது!

    அதான் தளிர். காதல் பாடல்களுக்கு மிகப் பொருத்தமான வார்த்தை, காதல்வயப்பட்ட இளம் மேனியை வர்ணிக்கவும்!

    ***

    என். சொக்கன் …

    258/365

     
    • Uma Chelvan 4:30 pm on August 16, 2013 Permalink | Reply

      என்ன ஒரு அற்புதமான பாடல் ஆபோகி ராகத்தில்.!!பின்னே? உன்னைப் பிரிஞ்சு வாடின என் உயிர், நீ தொட்டதும் சட்டுன்னு தளிர்க்குதேடி!’……….காதலில் அழகே அங்கேதானே இருக்கு!. :)))))).

    • Uma Chelvan 5:50 am on August 17, 2013 Permalink | Reply

      அது சாதாரணமாக தொட்டாலும் சரி அல்லது சமயலறையில் கை வேலையை விடிட்டுடு வந்து தொட்டாலும் சரி !!!

    • rajinirams 9:06 pm on August 19, 2013 Permalink | Reply

      அடடா எளிமையாகவும் அருமையாகவும் விளக்கி விட்டீர்கள்-தளிர்”சிறப்பை. நன்றி.

  • என். சொக்கன் 11:04 pm on August 13, 2013 Permalink | Reply  

    சிறு துரும்பும்… 

    • படம்: மிஸ்டர் ரோமியோ
    • பாடல்: ரோமியோ ஆட்டம் போட்டால்
    • எழுதியவர்: வைரமுத்து
    • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
    • பாடியவர்கள்: ஹரிஹரன், உதித் நாராயண்
    • Link: http://www.youtube.com/watch?v=q_Be1aOMeYc

    யாரையும் தூசைப்போலத்

    துச்சம் என்று எண்ணாதே,

    திருகாணி இல்லை என்றால்

    ரயிலே இல்லை மறவாதே!

    ஒரு சின்னத் திருகாணி காணாமல் போய்விட்டால், ஒரு பெரிய ரயிலே பழுதடைந்து நின்றுவிடக்கூடும். அதுபோல, நாம் யாரையும் சிறியவர்கள் என்று அலட்சியமாக நினைக்கக்கூடாது என்கிறார் வைரமுத்து.

    சுருக்கமாக, தெளிவாக, கிட்டத்தட்ட திருக்குறள்மாதிரி இருக்கிறது, இல்லையா?

    மாதிரி என்ன? திருக்குறளேதான். எப்போதோ ’அச்சாணி’யை உவமையாக வைத்துத் திருவள்ளுவர் சொன்ன கருத்தை அழகாக நவீனப்படுத்திப் பாடலில் பயன்படுத்தியிருக்கிறார் வைரமுத்து:

    உருவுகண்டு எள்ளாமை வேண்டும், உருள் பெரும் தேர்க்கு

    அச்சாணி அன்னார் உடைத்து

    உருளுகின்ற பெரிய தேர், ஒரு சிறிய அச்சாணி இல்லை என்றால் ஓடாது. அதுபோல, யாரையும் உருவத்தை வைத்துக் குறைவாக எடை போட்டுவிடாதீர்கள்!

    அது நிற்க. அச்சாணி, திருகாணி இரண்டுமே மிக அழகான தமிழ்ச் சொற்கள்.

    அச்சு + ஆணி = அச்சாணி. வண்டியின் சக்கரங்களில் உள்ள அச்சு (axle) என்ற பாகத்தை விலகாமல் பொருத்திவைப்பதால் அதன் பெயர் அச்சாணி.

    திருகு + ஆணி = திருகாணி. மற்ற ஆணிகளை அடிக்கவேண்டும், ஆனால் இந்த ஆணியைத் திருகவேண்டும். அதனால் அப்படிப் பெயர்.

    கிட்டத்தட்ட அந்தத் திருகாணியில் உள்ள மரைகளைப்போலவே சுருண்டு சுருண்டு செல்லும் கூந்தல் கொண்ட பெண்கள் உண்டு. சிலருக்கு இயற்கையாகவே சுருட்டை முடி, சிலர் அழகு நிலையங்களுக்குச் சென்று கூந்தலைச் சுழற்றிக்கொள்கிறார்கள்.

    பார்வதி தேவிக்கு அப்படிப்பட்ட Curly Hairதான்போல. திருநாவுக்கரசர் தேவாரத்தில் இப்படி அழகாக வர்ணிக்கிறார்: ‘திருகு குழல் உமை!

    ***

    என். சொக்கன் …

    13 08 2013

    255/365

     

     
    • rajinirams 12:12 pm on August 14, 2013 Permalink | Reply

      யாரையும் துச்சம் என்று எண்ணாதே என்ற வைரமுத்துவின் வரிகளையும் உருவு கண்டு எள்ளாமை குறளையும் விளக்கி.பின் திருகாணி -திருகு குழல் உமை என அழகாக சொல்லியுருக்கிறீர்கள்.குரங்கு என்று துச்சமாக நினைத்து அதன் வாலில் தீ வைத்தானே-அது எரித்தது ராவணன் ஆண்ட தீவைத்தானே என்ற வாலியின் வரிகளும் நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ என்ற வாலியின் வரிகளும் நினைவிற்கு வந்தது.நன்றி.

      • amas32 5:12 pm on August 14, 2013 Permalink | Reply

        நீங்க ரொம்ப அழகா விளக்கம் தருகிறீர்கள் 🙂

        amas32

    • Uma Chelvan 5:14 pm on August 14, 2013 Permalink | Reply

      திருகு குழல் உமை! மிக அழகான வர்ணனை !

    • amas32 5:26 pm on August 14, 2013 Permalink | Reply

      எனக்குத் திருகாணி என்றவுடன் காது தோட்டின் திருகாணி தான் நினைவுக்கு வந்தது. காதிலோ மூக்கிலோ நகையை மாட்டிக்கொண்டு திருகாணியைத் திருகுவதும் ஒரு கலை! அதுவும் பல சமயம் திருகாணியைத் தொலைத்துவிட்டு தேடுவதே தான் வேலை -)
      திருகாணியில் thread போய்விட்டால் சுற்றிக் கொண்டே இருக்கும்.

      நச்சென்று இருக்கிறது இந்த நாலு வரி 🙂

      amas32

  • என். சொக்கன் 9:11 pm on July 29, 2013 Permalink | Reply  

    பூவாயி! 

    • படம்: எங்க ஊரு காவக்காரன்
    • பாடல்: அரும்பாகி மொட்டாகி
    • எழுதியவர்: கங்கை அமரன்
    • இசை: இளையராஜா
    • பாடியவர்கள்: தீபன் சக்கரவர்த்தி, பி. சுசீலா
    • Link: http://www.youtube.com/watch?v=Y3BYARCNZLc

    அரும்பாகி மொட்டாகிப் பூவாகி

    பூப்போல பொன்னான பூவாயி!

    ’எங்க ஊரு காவக்காரன்’ என்று கிராமிய மணம் கமழும் படத் தலைப்பு, கிராமத்து மெட்டு, நடிப்பதோ கிராமத்து வேடங்களுக்கென்றே நேர்ந்துவிடப்பட்ட ராமராஜன். ஆனால் பாடல் எழுத உட்கார்ந்த கங்கை அமரன்மட்டும், திருக்குறளில் இருந்து முதல் வரியை எடுத்திருக்கிறார்!

    காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

    மாலை மலரும் இந்நோய்

    வள்ளுவர் ‘நோய்’ என்று சொல்வது காதலைதான். அது காலையில் அரும்பாகிறது, மாலையில் மலர்ந்துவிடுகிறது, பகலெல்லாம் போதாக இருக்கிறது.

    அதென்ன போது?

    மலர்வதற்குத் தயாரான பூவுக்குதான் ‘போது’ என்று பெயர். இன்றைக்கு நாம் மொத்தமாக மறந்துவிட்ட அருமையான தமிழ்ச் சொல் இது.

    என்னைக்கேட்டால், இந்த மெட்டுக்குக் கங்கை அமரன் ‘அரும்பாகிப் போதாகிப் பூவாகி’ என்றே எழுதியிருக்கலாம். ’போது’ என்ற சொல் புழக்கத்தில் இல்லை என்பதால் அதை ‘மொட்டு’ என்று மாற்றிக்கொண்டிருக்கிறாரோ?

    அவர் கிடக்கட்டும், இந்தத் திருவள்ளுவர் காதலை ‘நோய்’ என்று சொல்லிவிட்டாரே, ஆட்டோ வாசகங்களில் ஆடிக்குப் பின்னே ஆவணியும், தாடிக்குப் பின்னால் தாவணியும் என்பதுபோல் தாடிக்கார வள்ளுவர் காதலை வெறுத்துச் சொன்ன உவமையா இது?

    அதற்கு இன்னொரு திருக்குறளில் பதில் இருக்கிறது:

    இருநோக்கு இவள் உண்கண் உள்ளது, ஒருநோக்கு

    நோய், நோக்கு ஒன்று அந்நோய் மருந்து

    இந்தப் பெண்ணுக்கு இரண்டு பார்வை, ஒரு பார்வை நோய் தரும், இன்னொரு பார்வை அந்த நோயைத் தீர்க்கிற மருந்தாகும். டூ இன் ஒன்.

    காதலும் அதேமாதிரிதான். நோய் தரும், அந்த நோய்க்கு அதுவே மருந்துமாகும்.

    ***

    என். சொக்கன் …

    29 07 2013

    240/365

     
    • ranjani135 9:19 pm on July 29, 2013 Permalink | Reply

      ரொம்பவும் ரசித்தேன்!

    • rajinirams 8:52 pm on July 30, 2013 Permalink | Reply

      அருமை. போது பொருள் விளக்கமும் அறிந்து கொண்டேன்.நன்றி

    • amas32 9:37 pm on July 30, 2013 Permalink | Reply

      இறைவனின் பார்வையிலும் ஒரு கண்ணில் சூரியன், ஒரு கண்ணில் சந்திரன். வெப்பம், குளிர்ச்சி இரண்டையும் ஒருசேர வைத்துள்ளார்.

      கங்கை அமரனின் ஞானம் எப்பவும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. அவர் பாடல்களையும் தொகுத்து வெளியிட வேண்டும். ரொம்ப உள்ளது.

      போது என்ற சொல், சொல்வதற்கே மிகவும் இனிமையாக உள்ளது.

      amas32

  • mokrish 11:30 am on June 18, 2013 Permalink | Reply  

    வேப்பமரம் புளியமரம்… 

    வசந்த் டிவியில் தினமும் மாலையில் வெவ்வேறு முருகன் கோவில்களின் படத்தொகுப்பை கந்தர் சஷ்டி கவசம் ஒலிக்க  ஒளிபரப்புகிறார்கள். பலமுறை கேட்டதுதான். ஆனால் அன்று அந்த பட்டியலைக்  கூர்ந்து கவனித்தேன்.

    வல்லபூதம் வலாஷ்டிக பேய்கள்
    அல்லல் படுத்தும் அடங்கா முனியும்,
    பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
    கொள்ளிவாய் பேய்களும் குறளை பேய்களும்
    பெண்களை தொடரும் பிரம்ம ராட்சதரும் ்,
    அடியனைக்  கண்டால் அலறி கலங்கிட

    ‘வலிமையுடைய பூதங்களும், மிகவும் வலிமையுடைய பேய்களும்,உன் அடியவனான என்னைக் கண்டவுடன் அலறிக் கலங்கிட வேண்டும், என் பெயரைச் சொன்னவுடனேயே இடி விழுந்தது போல் பயந்து ஓடிட வேண்டும்’ என்ற வேண்டுதல். http://muruganarul.blogspot.in/2012/10/8.html

    பேய்களில் பூதங்களில் இவ்வளவு variety யா? அதிலும் ‘கொள்ளிவாய் பேய்’ என்ற பிரயோகம் சுவாரஸ்யமாக இருந்தது. கொஞ்சம் கூகிளினால் கிடைத்த தகவல் ஆச்சரியம்.  Marshlands எனப்படும் வயல் நிலங்களில் நடக்கும் ஒருவரை இது நெருப்பாகப் பின்தொடரும், ஓட முற்பட்டால் இதுவும் ஓடும் என்று நம்பினர். நிலத்தின் கீழ் அழுகும் தாவரப் பாகங்களிலிருந்து உயிரிவாயு எனப்படும் மெதேன் வாயு கசிவதாகவும் சதுப்பில் புதையும் கால் வெளியில் எடுக்கப்படும் போது வாயு வெளியேறி காற்றில் தீப்பற்றிக் கொள்ளுவதாகவும் ஒரு விளக்கம் .மெதேன் வாயுவுக்கு ‘கொள்ளிவாயு’ என்ற பெயர் வழங்கப்படுகிறது. இதுதான் கொள்ளிவாய் ஆனதா? ஆங்கிலத்திலும் Swamp Gas பற்றி இதே போல் படித்திருக்கிறேன்.

    பேய்கள் பூதங்கள் என்றால் எனக்கு உடனே ஒரு பழைய திரைப்பாடல் நினைவுக்கு வரும். அரசிளங்குமரி படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய சின்னப் பயலே, சின்னப் பயலே சேதி கேளடா என்ற பாடல்.(இசை ஜி ராமநாதன், பாடியவர் டி எம் எஸ்) அதில் அவர் சொல்வது என்ன?   http://www.youtube.com/watch?v=7tlp04NBTM8

    வேப்ப மர உச்சியில் நின்னு பேய் ஒண்ணு ஆடுதுன்னு

    விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க – உந்தன்

    வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க – அந்த

    வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை

    வேடிக்கை யாகக் கூட நம்பி விடாதே -உந்தன்

    வீட்டுக் குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே – நீ

    அதிரடியான அறிவுரை. மகாகவி பாரதி நெஞ்சு பொறுக்குதில்லையே என்று சொன்னதும் இதுதான்

    வஞ்சனைப் பேய்கள் என்பார் –இந்த

    மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார்;

    அஞ்சுது முகட்டில் என்பார்—மிகத்

    துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்

    மகாநதி படத்தில் வாலியும் பேய்கள நம்பாத பிஞ்சுல வெம்பாதே என்று சொல்கிறார் http://www.youtube.com/watch?v=465RsI5PNOo ஆத்தங்கரையிலே  அரசமரத்தில, கோயில் குளத்துல, கோபுர உச்சியிலே பேய் இருக்குன்னு சொன்னாங்க அதை நம்பாதே என்கிறார் தொடர்ந்து எது பேய் எது பூதம் என்று definition சொல்கிறார்

    அச்சங்கள் என்னும் பூதம்

    உழைக்காம வம்பு பேசி அலைவானே அவன் பேய்

    பணம் சேர்க்க பாதை மாறி பறப்பானே  அவன் பூதம்

    என்கிறார். பயம்தான் பேய் என்பது  பாரதி சொன்னதுதான்

    பயம் எனும் பேய்தனை அடித்தோம்—பொய்மைப்

    பாம்பைப் பிளந்துயிர் குடித்தோம்;

    ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் பேய்’களின் பட்டியலின்தான் வைக்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்கிறார்.

    இது எல்லா மதங்களிலும் இருக்கும் நம்பிக்கை. வேறு வேறு பெயர்கள். அவ்வளவுதான் ஆனால் கொஞ்சம் யோசித்தால் தீய எண்ணங்கள், பேராசை என்று மனிதனை தவறான பாதையில் செலுத்தும் உணர்வுகளுக்கு ஒரு வடிவம் கொடுத்து அதை சாத்தான் / பேய் என்று பல பெயர்களில் அழைத்தார்கள் என்று தோன்றுகிறது. அவற்றிலிருந்து விடுபட இறைவனை நோக்கி வேண்டுதல் வழக்கமாகியிருக்கும். கந்தர் சஷ்டி கவசம் சொல்வதும் அதுதான் கண்ணதாசன்

    ஆரவார பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா

    ஆலய மணியோசை நெஞ்சில் கூடிவிட்டதடா

    என்று சொல்வதும் அதையேதான்.

    மோகனகிருஷ்ணன்

    199/365

     
    • Sakthivel 11:48 am on June 18, 2013 Permalink | Reply

      நீங்கள் சொல்லும் சதுப்பு நில கொள்ளிவாய் பேய்களுக்கான விளக்கம். ,பொன்னியின் செல்வன் 2ஆம் பாகம் முதல் அத்தியாயத்தில் பூங்குழலி சொல்வது போல் கல்கி கூட சொல்லுவார். 🙂

    • rajnirams 11:14 pm on June 18, 2013 Permalink | Reply

      பதிவு அருமை. தமிழ்ல பேய்ப்பாட்டுன்னா “யார் நீ”ல வர்ற நானே வருவேன்,”ஆயிரம் ஜென்மங்கள்”படத்தில் வரும் வெண்மேகமே,”காற்றினிலே வரும் கீதம்”படத்தில் வரும் கண்டேன் எங்கும், சந்திரமுகியில் வரும் ரா ரா ,துணிவே துணை படத்தில் வரும் ஆகாயத்தில் தொட்டில் கட்டும் போன்றவை தான்.நன்றி.

    • amas32 (@amas32) 12:47 pm on June 19, 2013 Permalink | Reply

      In Pranic healing, which is one type of alternate medicine these evil qualities are considered as entities. Clairvoyants have seen them as dark cloud or dark reddish clouds in the aura of a person who is consumed with anger or jealousy. So yes, nothing but bad elements leading us to pitfalls.

      ரொம்ப வித்தியாசமான பதிவு மோகன், talking about an esoteric topic! கந்த சஷ்டி கவசம் படிக்கும் பொழுது வரிசையாக இறைவனிடம் பட்டியலிட்டு ஒவ்வொன்றிலிருந்தும் என்னைக் காப்பாற்று என்று ஏன் வேண்ட வேண்டும், blanket request ஆக எல்லாத் துன்பத்தில் இருந்தும் என்னைக் காப்பாற்று என்று சொல்லிவிட்டுப் போகலாமே என்று எண்ணுவேன். ஆனால் அதிலும் ஒரு காரணம் இருக்கும். ஒவ்வொன்றையும் பட்டியலிடும் பொழுது அதைப் பற்றி மனம் சிந்தித்து இறைவனிடம் அதிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் பொழுது நாமே நம்மை அதிலிருந்து விலக்கிக் கொள்ள subconscious ஆக நடவடிக்கை எடுக்கிறோம்.

      பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல் காலத்தைக் கடந்து நிற்கும் ஒரு பாடல்!

      எப்பவும் போல நல்ல பதிவு 🙂

      amas32

    • pvramaswamy 12:37 pm on November 18, 2013 Permalink | Reply

      அட்டகாசமான பதிவு, ஆரவாரமில்லாமல் அழகாக வந்திருக்கு. Super.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel