Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • mokrish 9:17 pm on November 21, 2013 Permalink | Reply  

    நீ பார்த்த பார்வைக்கொரு 

    இந்த மாதம் கமல்ஹாசன் பிறந்த நாளன்று ஏதோ ஒரு டிவி சானலில் விஸ்வரூபம் படத்தில் வரும்  உன்னைக் காணாது நான் என்ற பாடலை (இசை சங்கர் – ஈசான்- லாய் பாடியவர்கள்  கமல்ஹாசன், சங்கர் மகாதேவன்)  ஒளிபரப்பினார்கள் பண்டிட் பிர்ஜு  மகராஜ் வடிவமைத்த அருமையான கதக் நடனம். கமல்ஹாசனே நாயகி பாவத்தில் எழுதிய பாடல். அதில் வரும் வரிகள்

    http://www.youtube.com/watch?v=XuOgG2QWAgQ

    அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாணுவேன்

    கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்

    ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்

    ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்

    இந்த 2013ல் ‘எவ்வாறு நாணுவேன்’ என்று ஒரு நாயகி யோசிப்பதும் கண்ணாடி முன் ரிகர்சல் செய்து பார்ப்பதும் என்ற interesting கவிதை.

    ஆணும் பெண்ணும் பரிமாறிக்கொள்ளும் காதல் பார்வை கவிஞர்களின் கற்பனைக்கு நிறைய தீனி போட்டிருக்கிறது. உடனே நம் நினைவுக்கு வருவது கம்பன் சொன்ன அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள். இது கண்டதும் காதல் இல்லை தற்செயலாக (Accidentally) ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்’ என்கிறார் புலவர் கீரன்.

    வள்ளுவர் ஒரு முழு அதிகாரமே எழுதியிருக்கிறார். பெண்ணின் ஒரு பார்வை காதல் நோயைத் தரும். அதுவே நோய்க்கு மருந்தளிக்கும்.  நான் பார்க்கும்போது மண்ணை பார்க்கின்றாயே என்று எல்லாமே  ஒரு ஆணின் Point of View. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் என்ற குறளில் பெண்ணின் பார்வை ஒரு படையுடன் வந்து தாக்குவதுபோல் இருக்கிறது என்பதும் ஆண் சொல்வதே.

    இதில் ஒரு பெண்ணின் நிலை என்ன? சில திரைப்பாடல்களில் கிடைத்த சுவாரஸ்ய முத்துகள். இவன் என்ற படத்தில் பழனிபாரதி எழுதிய பாடல்  (இசை இளையராஜா பாடியவர்கள் மாதங்கி, உன்னிகிருஷ்ணன் )

    http://www.youtube.com/watch?v=Tu7Hjb8NOmo

    அப்படி பாக்குறதுன்னா வேணாம்

    கண் மேலே தாக்குறது வேணாம்
    தத்தி தாவுறதுன்னா னா னா
    தள்ளாடும் ஆசைகள் தானா
    என்ன கேட்காமல் கண்கள் செல்ல
    உன் பக்கம் பார்த்தேன்
    மிச்சம் இல்லாமல் வெட்கம் தின்ன
    காணாமல் போனேன்

    கமலின் 2013 நாயகி எப்படி நாணுவது என்று practise செய்கிறாள். பழனிபாரதியின் 2002 நாயகி வெட்கம் தின்ன காணாமல்  போகிறாள். டைம் லைனில் கொஞ்சம் முன்னே போய் 60களில் வந்த சில பாடல்களைப் பார்த்தால் pleasant surprise. பணக்கார குடும்பம் என்ற படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்  (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர்கள் டி எம் எஸ், பி சுசீலா)

    http://www.youtube.com/watch?v=ABRw-iSaCJI

    இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்  தானா

    இப்படி என்று சொல்லி இருந்தால் தனியே வருவேனா …..

    இது ஏய் அப்படி பாக்காதே mode தான். ஆனால் வல்லவன் ஒருவன் படத்தில் கண்ணதாசன் எழுதிய இன்னொரு பாடல் bold & beautiful.  (இசை வேதா பாடியவர்கள் டி எம் எஸ், பி சுசீலா)

    http://www.youtube.com/watch?v=Lu8FNldHluA

    இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது

    இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது

    நான் கேட்டதை தருவாய் இன்றாவது

    கவியரசர் பெண்ணின் கோணத்தில் சொல்லும் அதிரடி வரிகள். 1966ல் வெளிவந்த பாடல் வரிகள் என்று நம்பவே முடியவில்லை. இதை மக்கள் எப்படி விமர்சனம் செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

    மோகனகிருஷ்ணன்

     
    • Uma Chelvan 12:47 am on November 22, 2013 Permalink | Reply

      நினைக்க மறந்தாய் , தனித்து பறந்தேன்
      மறைத்த முகத்திரை திறப்பாயோ
      திறந்து அகத்திரை இருப்பாயோ!!
      இருந்து விருந்து இரண்டு மனம் இணைய …….

      உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன்…

      ராஜா ஒரு மழை போல்!! மழைக்கு காடென்ன, கடெலென்ன, பாரபட்சம் இல்லாமல் எங்கும் பொழிவது போல் .ராஜாவும்…….மோகன், முரளி, ராமராஜன், சிவகுமார், விஜயகாந்த் முதற்கொண்டு அனைவரையும் கட்டி காத்த எல்லைச் சாமி. நல்ல குரல் வளம் கொண்ட வடிவேலும் ராஜவினால்தான் சினிமாவில் பாட ஆரம்பித்தார் என்று நினைகிறேன்.

      மாமழை போற்றுதும்!!!! ராஜாவையும் !!!!!

    • rajinirams 10:38 am on November 22, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு. நீங்கள் சொன்னது போல “ஆணும் பெண்ணும் பரிமாறிக்கொள்ளும் காதல் பார்வை கவிஞர்களின் கற்பனைக்கு நிறைய தீனி போட்டிருக்கிறது”.கவியரசரின் “பார்வையிலேயே”ஏராளம். பார்த்தேன் ரசிந்தேன் என்று ஆரம்பித்து ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்,என்ன பார்வை உந்தன் பார்வை,பார்வை யுவராணி கண்ணோவியம் இப்படி பல. எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன என்ற கேள்விக்கு உன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது என்பது கண்ணதாசனின் பார்வை தான்.ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்,கண் தேடுதே சொர்க்கம்-வாலியின் பார்வை.உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில்-இது கங்கை அமரனின் கற்பனை.பார்வையாலே நூறு பேச்சு,வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு-வைரமுத்துவின் பார்வை. விழிகள் மேடையாம்,இமைகள் திரைகளாம் “பார்வை”நாடகம் அரங்கில் ஏறுமாம்-இது டி.ராஜேந்தரின் பார்வை.பார்க்காதே பார்க்காதே-நீ பார்த்தா பறக்குறேன் பாதை மறக்குறேன்-இது யுகபாரதியின் வருத்தப்படாத வாலிபர் சங்க பார்வை. நன்றி.
      “மார்கழி பார்வை பார்க்கவா” என்ற வார்த்தைகளும் நல்ல கற்பனையே-ராஜாவின் இசையில் உள்ள இந்த பாடலை கேட்டிருக்கிறேன்,எந்த படம் என்று தெரியவில்லை.(உயிரே உனக்காக என்ற பெயரில் எடுக்கப்பட்டு நின்று போனது என்று நினைக்கிறேன்) http://youtu.be/XEvlj_vvgoM

    • amas32 11:57 am on November 22, 2013 Permalink | Reply

      //இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது

      இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது

      நான் கேட்டதை தருவாய் இன்றாவது//

      இந்த வரிகள் தான் நீங்கள் இன்று கொடுத்திருப்பதிலேயே பெஸ்ட். என்ன ஒரு கற்பனை, உண்மைக்கு மிக அருகில். கண்ணதாசனைப் பெற்ற இத் தமிழகம் புண்ணிய பூமி!

      amas32

    • srimathi 10:54 pm on November 22, 2013 Permalink | Reply

      I’m glad that there are so many songs where a woman’s perspective is portrayed. To be exactly in woman’s shoes is possible only when a woman writes it herself. Ondra renda aasaigal from kaakha kaakha is a popular example. Thamarai writes it this way “thoorathil nee vandhaale en manadhil mazhai adikkum, miga piditha paadal ondru udhadugalil munumunukkum”

  • என். சொக்கன் 7:16 pm on October 16, 2013 Permalink | Reply  

    உயர் 

    • படம்: புதிய மன்னர்கள்
    • பாடல்: வானில் ஏணி போட்டு
    • எழுதியவர்: பழநிபாரதி
    • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
    • பாடியவர்: மனோ
    • Link: http://www.youtube.com/watch?v=HWmbi8YCEvs

    வானில் ஏணி போட்டு கொடி கட்டு!

    மின்னல் நமக்கு தங்கச் சங்கிலி,

    விண்மீன் எல்லாம் சின்ன மின்மினி,

    வானவில்தான் நம் வாலிப தேசக்கொடி!

    சென்னையில் ஒரு பெரிய கார்ப்பரேட் அலுவலகம். ஆனாலும் எப்படியோ பெயர்ப்பலகைகளில் ஆங்கிலத்தோடு தமிழுக்கும் சம உரிமை அளித்திருந்தார்கள்.

    என்னுடன் வந்திருந்த நண்பர் ‘மின் தூக்கி’ என்ற பெயரைப் பார்த்துவிட்டு நக்கலாகச் சிரித்தார். ‘அபத்தமான மொழிபெயர்ப்பு’ என்றார்.

    ‘ஏன்? Liftங்கறது ஆங்கிலப் பெயர், அதற்கு இணையான தமிழ்ச்சொல் தூக்குதல், அப்படின்னா மின்சாரத்தால இயங்கற ”தூக்கி”ங்கற பெயர் சரியாதானே இருக்கு?’ என்றேன்.

    ‘அதென்னவோ, எனக்குத் தூக்கிங்கற பெயர் இயல்பாத் தோணலை’ என்றார் அவர், ‘இதையே ஏணின்னு சொல்லிப்பாருங்க, அது ரொம்ப இயல்பா இருக்கு!’

    நண்பருக்கு விளக்க முயன்றேன். ‘நம்மைத் தூக்கிச் செல்லுதல்’ என்பது செயல், அதைச் செய்யும் கருவியைத் ‘தூக்கி’ என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.

    சொல்லப்போனால், ‘ஏணி’ என்ற சொல்லே இப்படி வந்ததுதான்.

    தமிழில் ‘ஏண்’ என்றால் உயர்வு என்று அர்த்தம். ‘ஏணிலேன்’ என்று திருமங்கை ஆழ்வார் தன்னைச் சொல்லிக்கொள்வார். அதாவது, ஏண் இலேன், கடவுளுக்கு முன்னால் நான் எந்த உயர்வும் இல்லாத சாதாரண ஆள் என்று பொருள்.

    ஏண் என்றால் உயர்வு, நாம் உயர்வடைய உதவும் கருவிக்கு ‘ஏணி’ என்று பெயர்.

    அதே முறைப்படி, ‘தூக்கு’ என்ற சொல்லில் இருந்து ‘தூக்கி’ என்ற சொல் வரலாம்தானே?

    ***

    என். சொக்கன் …

    16 10 2013

    318/365

     
    • rajinirams 10:49 pm on October 16, 2013 Permalink | Reply

      “ஏண் என்றால் உயர்வு, நாம் உயர்வடைய உதவும் கருவிக்கு ‘ஏணி’ என்று பெயர்.

      அதே முறைப்படி, ‘தூக்கு’ என்ற சொல்லில் இருந்து ‘தூக்கி’ என்ற சொல்”

      எளிமையான விளக்கம்,அருமையான பதிவு.

    • amas32 9:41 pm on October 17, 2013 Permalink | Reply

      ஏணி, தோணி, அண்ணாவி, நார்த்தங்காய். இவை நான்கும் இருக்கும் இடத்திலேயே இருக்கும் ஆனால் நம்மை உயரவோ அல்லது நல்ல நிலைக்கோ அழைத்துச் செல்லும். ஏணி நம்மை ஏற்றிவிடும். ஆனால் அதற்கு மற்றப்படி மதிப்பில்லை. தோணி இக்கரையில் இருந்து அக்கரைக்கு இட்டுச் செல்லும் ஆனால் அதன் வாழ்வு அந்த நதியில் தான்.அண்ணாவி என்பது ஆசிரியர். அவர் நமக்கு ஆசானாக இருந்து நமக்குச் சொல்லிக் கொடுத்து நாம் மருத்துவராகவோ கலெக்டராகவோ ஆகிவிடுவோம். அவர் அதே ஆசிரியர் நிலைமை தான். நார்த்தங்காய் வேண்டாத சோற்றைக் கூட சாப்பிட உதவும் ஆனால் ஏப்பம் வரும் போதெல்லாம் நார்த்தங்காய் சுவை இருந்துக் கொண்டே இருக்கும். 🙂

      உங்கள் ஏண் என்னை இந்த விளக்கத்தை எழுத வைத்துவிட்டது 🙂

      நல்ல பதிவு, நன்றி 🙂

      amas32

      • Uma Chelvan 3:07 am on October 18, 2013 Permalink | Reply

        amas32…..அண்ணாவி. —ஆசிரியர் …….இதுவரை நான் கேள்வி பட்டதே இல்லை. தமிழ்தானா அல்லது வேறு எதாவது மொழியா?

    • Uma Chelvan 7:30 am on October 18, 2013 Permalink | Reply

      நார்த்தங்காய் பொதுவாக காய்சல் னின் பொது வரும் தலை சுத்தல் , வாய் கசப்பு, மயக்கம், வாந்தி வருவது போன்ற ( ஆனால் வராது, nausea ) உணர்வு போனறவகளை தடுக்கும் எனபதால் காரம் இல்லாமல் சாப்டும் (bland diet ) கஞ்சியுடன் சேர்த்து சாப்பிடவேண்டும்.

  • என். சொக்கன் 10:44 pm on July 20, 2013 Permalink | Reply  

    நரை இல! 

    • படம்: பூவெல்லாம் கேட்டுப்பார்
    • பாடல்: சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே
    • எழுதியவர்: பழநிபாரதி
    • இசை: யுவன் ஷங்கர் ராஜா
    • பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்
    • Link: http://www.youtube.com/watch?v=ccmN5YvrrDI

    நரை கூடும் நாட்களிலே,

    என்னைக் கொஞ்சத் தோன்றுமா?

    அடி போடி!

    காதலிலே நரைகூட தோன்றுமா?

    இந்த வரிகளைக் கேட்கும்போதெல்லாம், வாலி பாணியில் ‘தோன்றுமா’ என்ற வார்த்தையை வைத்துப் பழநிபாரதி அமைத்திருக்கும் நயமான வார்த்தை விளையாட்டை நினைத்துப் புன்முறுவல் தோன்றும். அடுத்து, ‘காதலிலே நரைகூட தோன்றுமா?’ என்கிற வரியை வியப்பேன். நேராக பாரதிதாசனின் ‘குடும்ப விளக்கு’ காவியத்தில் சென்று நிற்பேன்.

    குடும்ப விளக்கின் ஐந்தாவது பாகத்தை, முதியவர் காதலை வடித்துத் தந்திருக்கிறார் பாரதிதாசன். நரையில்லாத அந்தக் காதலைக் கொஞ்சம் ருசிக்கலாம்.

    முதிய கணவர் சொல்வது:

    விதைத்திட்டேன் அவளின் நெஞ்சில்

    ….என்றனை! நேற்றோ? அல்ல!

    இதற்குமுன் இளமை என்பது

    ….என்றைக்கோ அன்றைக் கேநான்!

    கதையாகிக் கனவாய்ப் போகும்

    ….நிகழ்ந்தவை; எனினும் அந்த

    முதியாளே வாழு கின்றாள்

    ….என்நெஞ்சில் மூன்று போதும்!

    இன்னொரு சந்தர்ப்பத்தில், யாரோ அந்தக் கணவரிடம் கேட்கிறார்கள், ‘வயதாகிவிட்டது, உடல் தளர்ந்துவிட்டது, இன்னும் உங்களுக்குள் காதல் இருக்கிறதா?’

    ’ஏன் இல்லாமல்?’ என்று கேட்கும் கணவர் பதில் சொல்கிறார், இப்படி:

    வாய், மூக்கு, கண், காது, மெய் வாடினாலும்

    ….மனைவிக்கும் என்றனுக்கும் மனம் உண்டு கண்டீர்!

    தூய்மை உறும் அவ்விரண்டு மனம் கொள்ளும் இன்பம்

    ….துடுக்கு உடைய இளையோரும் படைத்திடுதல் இல்லை!

    ஓய்வதில்லை மணிச் சிறகு! விண் ஏறி நிலாவாம்

    ….ஒழுகு அமிழ்து முழுது உண்டு, பழகு தமிழ் பாடிச்

    சாய்வு இன்றி, சறுக்கு இன்றி ஒன்றை ஒன்று பற்றிச்

    ….சலிக்காது இன்பம் கொள்ளும் இரண்டு மனப் பறவை!

     

    அருவி எலாம் தென் பாங்கு பாடுகின்ற பொதிகை

    ….அசை தென்றல், குளிர் வீசும் சந்தனச் சோலைக்குள்

    திரிகின்ற சோடி மயில் யாம் இரண்டு பேரும்,

    ….தெவிட்டாது காதல் நுகர் செந்தேன் சிட்டுக்கள்!

    பெரும் தென்னங் கீற்றினிலே இருந்து ஆடும் கிளிகள்!

    ….பெண் இவளோ, ஆண் நானோ என இரு வேறாய்ப்

    பிரித்து உணர மாட்டாது பிசைந்த கூட்டு அமிழ்து!

    ….பேசினார் இவ்வாறு, கூசினாள் மூதாட்டி!

    அவர் இப்படி வெளிப்படையாகச் சொல்கிறாரே என்பதற்காக அந்த மூதாட்டி வெட்கப்பட்டாலும், உள்ளுக்குள் அவருடைய காதலும் நரைத்திருக்காது என்பதுமட்டும் உறுதி!

    அந்த வரியை மறுபடி மறுபடி வாசித்து ரசிக்கிறேன், ‘பெண் இவளோ, ஆண் நானோ என இரு வேறாய்ப் பிரித்து உணரமாட்டாது பிசைந்த கூட்டு அமிழ்து’, நூற்று ஐந்து வயது முதியவர் சொல்வது இது!

    ***

    என். சொக்கன் …

    20 07 2013

    231/365

     
    • rajinirams 11:53 pm on July 20, 2013 Permalink | Reply

      அடடா.அருமை.வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்.ஆனாலும் அன்பு மாறாதம்மா என்ற வாலியின் புதுப்புது அர்த்தங்களை நினைவுபடுத்தும்.பதிவு. பாரதிதாசனின் குடும்ப விளக்கின் மூலம் அழகாக “விளக்கி”விட்டீர்கள்.

    • amas32 7:12 pm on July 24, 2013 Permalink | Reply

      இன்றும் சதாபிஷேகம் செய்து கொள்ளும் தம்பதிகள் ஒருவருக்கொருவர் வாஞ்சையுடன் உதவிக் கொள்வதைப் பார்க்க வயதாக ஆக அன்புப் பெருகும் என்று உணரமுடிகிறது. ஆனால் அந்த அன்பு வளர எத்தனையோ தகுதிகள் தேவையாக உள்ளன. இல்லாவிடின் தாம்பத்திய வாழ்வு இணையாத இரு கோடுகள்/ஒரே திசையில் செல்லும் தண்டவாளம் போலத்தான். அன்பு நிறைந்த வாழ்வு அமைய வரம் பெற்று வந்திருக்கவேண்டும்.

      amas32

  • என். சொக்கன் 10:24 am on July 8, 2013 Permalink | Reply  

    புல்லினுள் சுழலும் இசை 

    • படம்: காதலர் தினம்
    • பாடல்: ரோஜா ரோஜா
    • எழுதியவர்: வாலி
    • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
    • பாடியவர்: உன்னி கிருஷ்ணன்
    • Link: http://www.youtube.com/watch?v=QwCEXv1TXqo

    இளையவளின் இடை ஒரு நூலகம், படித்திடவா பனி விழும் இரவுகள் ஆயிரம்!

    இடைவெளி எதற்கு, சொல் நமக்கு, உன் நாணம் ஒருமுறை விடுமுறை எடுத்தால் என்ன?

    ’என்னைத் தீண்டக் கூடாது’ என வானோடு சொல்லாது வங்கக்கடல்,

    ’என்னை ஏந்தக் கூடாது’ என கையோடு சொல்லாது புல்லாங்குழல்!

    தமிழில் ‘குழல்’ என்ற பெயர்ச்சொல், ‘குழலுதல்’ என்கிற வினைச்சொல்லில் இருந்து வந்தது. இதன் அர்த்தங்கள், சுருள்தல், வளைதல் போன்றவை.

    கம்ப ராமாயணத்தில் சீதையைச் சந்திக்கும் அனுமன், அவளுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக ராமனைப்பற்றி நிறைய பேசுகிறான், அவரது தோற்றத்தை வர்ணிக்கிறான். அதில் ஒரு பாடல், ராமனின் தலைமுடியைப்பற்றியது, ‘நீண்டு, குழன்று, நெய்த்து, இருண்டு…’ என்று தொடங்கும்.

    அதாவது, ராமனின் தலைமுடி நீண்டது, சுருண்டது, நெய் பூசியதுபோல் பளபளப்பானது, இருண்டது (கருமையானது)… இப்படித் தொடங்கி இன்னும் நிறைய வர்ணிக்கிறான் அனுமன்.

    இங்கே நமக்கு முக்கியம், ‘குழன்று’ என்ற வார்த்தை, ‘சுழன்று’ அல்ல, ‘குழன்று’, அதாவது, சுருண்டு, அல்லது வளைந்து!

    இப்படிக் குழன்று வருவதால்தான், தலைமுடிக்கே ‘குழல்’ என்று பெயர் வந்தது. ‘கட்டோடு குழலாட ஆட’ போன்ற பல பாடல்களில் இதைப் பார்த்திருக்கிறோம்.

    அது சரி, ஆனால் அதே பெயரை இசைக்கருவியாகிய குழலுக்கும் வைத்தது ஏன்?

    ஒன்றல்ல, இரண்டு காரணங்கள் சொல்லலாம்:

    முதல் காரணம், வடிவ அமைப்பில் பார்த்தால், குழல் / குழாய் என்பது, ஒரு நீண்ட பட்டை சுருண்டு சுருண்டு அமைந்ததுபோல்தான் தெரியும், சின்ன வயதில் பென்சிலின்மீது நீளப் பட்டைக் காகிதத்தைச் சுற்றி விளையாடியவர்களுக்கும், ஒரு குழலின்மீது உட்கார்ந்திருக்கும் இருவண்ண ஜவ்வு மிட்டாயை இழுத்து வாங்கித் தின்றவர்களுக்கும் இது நன்றாகத் தெரியும்!

    இன்னொரு காரணம், குழலின் ஒரு முனையில் ஊதப்படும் காற்று, உள்ளே வளைந்து ஓடி (அதாவது, குழன்று) வெவ்வேறு துளைகளின் வழியே வெளிவந்து இனிமையான இசையாகக் கேட்கிறது, ‘வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே’ என்று பழநிபாரதி எழுதினாற்போல!

    ‘குழல்’ சரி, அதென்ன ’புல்லாங்குழல்’?

    இந்தச் சொல்லை நாம் புல் ஆம் குழல் என்று பிரியும். அதாவது, புல்லால் ஆன குழல் என்று பொருள்.

    என்னது? புல்லா? அது மூங்கிலால் ஆனதல்லவா?

    உண்மைதான். ஆனால், தாவரவியல்ரீதியில் பார்த்தால், மூங்கில் என்பதே மரம் அல்ல, ஒருவகைப் புல்தான், என்ன, கொஞ்சம் தடிமனான புல்!

    அப்படியானால், குழல்போல இனிமையாகக் கூவும் குயிலைப் ‘புள்ளாங்குழல்’ என்றுகூட நாம் அழைக்கலாமோ?

    ***

    என். சொக்கன் …

    08 08 2013

    219/365

     
    • சிவா கிருஷ்ணமூர்த்தி 3:04 pm on July 8, 2013 Permalink | Reply

      //குழல்போல இனிமையாகக் கூவும் குயிலைப் ‘புள்ளாங்குழல்’//
      கண்டிப்பாய்!

    • rajinirams 10:36 am on July 9, 2013 Permalink | Reply

      புல் ஆம் குழல் -அருமையான விளக்கம். வாலியின் அருமையான வரிகளை எடுத்து காட்டியதோடு “வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே”என்ற பழனிபாரதியின் வரிகளையும் இணைத்தது சூப்பர்.

    • amas32 5:41 pm on July 10, 2013 Permalink | Reply

      இப்பொழுதெல்லாம் கூந்தலைக் குழல வைக்க (hair curling) ஓர் ஐயாயிரமோ பத்தாயிரமோ (Rs) தேவைப் படுகிறது 🙂 பிறகு அதை நீட்டிவிட (hair straightening) அதே amount! நேசுரலாகவே அப்படி இருந்தால் பெற்றோர்களுக்கு பணம் மிச்சம் 🙂

      amas32

  • என். சொக்கன் 9:17 am on May 23, 2013 Permalink | Reply  

    காலையும் மாலையும் 

    • படம்: சித்திரையில் நிலாச்சோறு
    • பாடல்: காலையிலே மாலை வந்தது
    • எழுதியவர்: புலமைப்பித்தன்
    • இசை: இளையராஜா
    • பாடியவர்: சப்தபர்ணா சக்ரபர்த்தி

    காலையிலே மாலை வந்தது, நான் காத்திருந்த வேளை வந்தது!

    இனி காலமெல்லாம், உன்னைத் தொடர்ந்துவர,

    உன் காலடிதான் இனி சரணமென,

    இந்த வானமும் பூமியும் வாழ்த்துச் சொல்ல!

    சென்ற நூற்றாண்டில் சிலேடை என்றால், கிவாஜ. அவர் எழுதிய, பேசிய, அல்லது பேசியதாகச் சொல்லப்பட்ட ஏராளமான சிலேடைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளன. அந்தப் புத்தகமும் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது.

    அது சரி, நாலு வரி நோட்டுக்கும் கிவாஜவுக்கும் என்ன சம்பந்தம்?

    கிவாஜா சினிமாப் பாட்டு ஒன்று எழுதியிருக்கிறார். ஆனால் இங்கே நாம் பார்க்கவிருப்பது, அவருடைய புகழ் பெற்ற சிலேடை ஒன்று.

    வெளியூரில் ஒரு நிகழ்ச்சி. அதில் கலந்துகொள்வதற்காக ரயிலேறிச் சென்றார் கிவாஜ. அதிகாலையில் ரயிலிலிருந்து இறங்கியதும், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அவரை வரவேற்று, ஒரு பூமாலையை அணிவித்தார்கள்.

    கிவாஜ மகிழ்ச்சியுடன் புன்னகை செய்தார். பின்னர், ‘என்ன இது அதிசயம்! காலையிலேயே மாலை வந்துவிட்டதே!’ என்றார் சிலேடையாக.

    இந்த வார்த்தை விளையாட்டைப் பழநிபாரதி ஒரு திரைப்பாடலில் பயன்படுத்தினார், ‘சேது’ படத்தில் வரும் ‘சிக்காத சிட்டொண்ணு’ என்ற பாடலில், ‘காலையிலே மாலை வர ஏங்குதடி’ என்று எழுத, அதை உன்னி கிருஷ்ணன் பாடியிருந்தார்.

    பல வருடங்கள் கழித்து, இப்போது ‘சித்திரையில் நிலாச்சோறு’ படத்தில் புலமைப்பித்தனும் அதே கற்பனையைப் பயன்படுத்தியிருக்கிறார், ‘காலையிலே மாலை வந்தது’ என்று தொடங்கி, ‘நான் காத்திருந்த வேளை வந்தது’ என்று அழகாகத் தொடர்கிறார்.

    ‘காத்திருந்த வேளை வந்தது’ என்பதில் உள்ள ‘வந்தது’ என்ற வார்த்தையை, வேளையோடு சேர்த்து வாசித்தால் ‘the day I was waiting for… இதோ வந்துவிட்டது’ என்ற பொருள் வரும். அப்படியில்லாமல், முதல் வரியோடு சேர்த்து, ‘நான் மாலைக்காகக் காத்திருந்தவேளையில், மாலை வந்து சேர்ந்தது’ என்றும் வாசிக்கலாம். அதுவும் அழகிய சிலேடைதான்!

    அதன்பிறகும் ஓர் அழகான வார்த்தை விளையாட்டு உண்டு, ‘உன் காலடிதான் இனி சரணமென’ என்று பாடுகிறாள் அந்தக் கதாநாயகி… உண்மையில், ‘சரண்’ என்ற வார்த்தைக்குப் பொருளே ‘காலடி’தான் 🙂 ‘நின்னைச் சரணடைந்தேன்’ என்றால், உன் காலடியில் பணிந்தேன் என்று பொருள்!

    ***

    என். சொக்கன் …

    23 05 2013

    173/365

     
    • amas32 9:38 am on May 23, 2013 Permalink | Reply

      “காலையிலே மாலை வர ஏங்குதடி” நீங்கள் குறிப்பிடும் வரை நான் பொருளைக் கூர்ந்து கவனித்ததில்லை. ராகத்தில் மயங்கியிருந்தேன். இப்பொழுதுப் புரிந்து ரசிப்பேன் 🙂

      “காலையிலே மாலை வந்தது, நான் காத்திருந்த வேளை வந்தது!” ரொம்ப அழகான வரி! நீங்கள் சொல்லியிருப்பதுப் போல இரண்டு பொருள்களில் எதை எடுத்துக் கொண்டாலும் மொத்தத்தில் காதலனின் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் சூப்பர் வரி 🙂

      சுடச் சுட போண்டா 🙂 பாடல் வந்தவுடன் நாலு வரி நோட்டு!

      amas32

    • GiRa ஜிரா 11:08 pm on May 23, 2013 Permalink | Reply

      அழகான பாடல் நாகா. இது டிபிகல் எஸ்.ஜானகி பாட்டு. 80களின் எஸ்.ஜானகி பாடியிருந்தா மாஸ்டர் பீசாகியிருக்கும் இந்தப் பாட்டு.

      சிலேடை மிக அழகு. காலையிலேயே மாலை வந்தது. ரெண்டு பொருளும் பொருத்தமாதான் இருக்கு.

    • rajinirams 1:25 am on May 25, 2013 Permalink | Reply

      காலையிலே மாலை வந்தது-புலமைப்பித்தனின் அருமையான வரிகள்.இதே போன்ற வாலியின் சிலேடை- தென்றல் மெல்ல மெல்ல நீந்துகின்ற மாலை.இவள் மார்பினில் நான் ஏந்துகின்ற மாலை. நன்றி.

  • G.Ra ஜிரா 11:02 am on May 13, 2013 Permalink | Reply  

    மருதாணிச் சாறெடுத்து… 

    சென்னை தியாகராயநகரில் பனகல் பூங்காவின் ஓரமாக வரிசையாக வடக்கத்தி இளைஞர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் இளம் பெண்கள் கைகளில் விதம்விதமாக மெஹந்தி இட்டுக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் திருமண அலங்காரத்திலும் மெஹந்தி முக்கியமாக இருக்கிறது.

    மெஹந்தி என்ற சொல் வேண்டுமானால் தமிழர்களுக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் மெஹந்தி புதியதல்ல. மிகமிகப் பழையது.

    என்னுடைய சிறுவயதில் வீடுகளில் மருதாணி அரைத்து பெண்களும் சிறுமிகளும் இட்டுக் கொள்வார்கள். சிறுவர்களும் கூடத்தான்.

    மருதாணி இலையை நன்கு கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை அப்படியே அம்மியில் அரைப்பவர்களும் உண்டு. அத்தோடு கொட்டைப்பாக்கு, புளி, தயிர் ஆகியவைகளையும் சேர்த்து அரைப்பவர்களும் உண்டு.

    வீட்டில் ஒருவர்தான் எல்லாருக்கும் மருதாணி இடுவார். இட்டு முடித்திருக்கும் போது அவர் விரல்கள் தாமாகவே சிவந்திருக்கும். அதெல்லாம் அந்தக்காலம். பிறகு மருதாணிச் செடிகள் வைக்க வீடுகளில் இடமில்லாமல் போன போது மருதாணிப் பொடி பாக்கெட்டுகளில் வந்தது. ஆனால் அது அவ்வளவு பிரபலமாகவில்லை. அதற்குப் பின்னால் வந்த மெஹந்தி கூம்பு மிகவும் பிரபலமாகி விட்டது.

    கை படாமல் இட்டுக் கொள்ள முடியும். மெல்லிதாகவும் இட முடியும். இப்படி வசதிகள் வந்த பிறகு மருதாணி அரைப்பது என்பதே இல்லாமல் போனது. அரைக்க விரும்பினாலும் எத்தனை வீடுகளில் அம்மி இருக்கிறது?

    இந்த மருதாணி திரைப்படங்களில் நிறைய வந்திருக்கிறது.

    மருதாணி விழியில் ஏன்” என்று கண்கள் சிவந்திருப்பதை வாலி அழகாக சக்கரக்கட்டி படத்தில் உவமித்திருக்கிறார்.
    மருதாணி பூவைப் போல குறுகுறு வெட்கப்பார்வை” என்று காதலியின் பார்வையை வம்சம் படத்தில் நா.முத்துக்குமார் வர்ணித்திருக்கிறார்.
    மருதாணி வெச்ச பொண்ணு இவதான்” என்று கிராமத்துப் பெண்ணை அன்னை வயல் படத்தில் இனங்காட்டுகிறார் பழனிபாரதி.
    மருதாணி அரைச்சேனே உனக்காக பதமா” என்று கூட பாட்டு உண்டு.
    இன்னும் எத்தனையெத்தனையோ பாடல்கள் உண்டு. பட்டியல் பெரிது.

    மருதாணிக்கு மருதாணி என்று பெயர் வந்தது எப்படி என்று தெரியுமா? அதன் பழைய பெயர் மருதோன்றி.

    இலையின் சாறினால் சிவந்த மரு தோன்றுவதால் மருதோன்றி என்று அதற்குப் பெயர். பழைய இலக்கியங்களில் சுருக்கமாக தோன்றி என்றே அழைத்திருக்கிறார்கள். ஒரேயொரு எடுத்துக்காட்டு மட்டும் பார்க்கலாம். பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக மதுரை கண்ணங்கூத்தனால் எழுதிய கார் நாற்பதில் இப்படியொரு பாட்டு.

    கருவிளை கண்மலர் போற் பூத்தன கார்க்கேற்
    றெரிவனப் புற்றன தோன்றி – வரிவளை
    முன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறும்
    இன்சொற் பலவு முரைத்து

    இந்தப் பாடலுக்கு இரண்டு விதப் பொருள்கள் தோன்றுகின்றன. இரண்டையும் தருகிறேன். பொருத்தமானதைக் கொள்க.

    கார்காலம் வந்து விட்டது. கருவிளை மலர்கள் மாதரார் மாவடுக் கண்கள் போல விழித்துப் பூத்திருக்கின்றன. எரிகின்ற காட்டைப் போல செக்கச் சிவந்திருக்கிறது மருதாணிப்பூக்கள். ஆனாலும் வளையலை நழுவ விட்டன காதலியின் கைகள். பிரிந்து சென்ற தலைவன் வரவைச் சொல்ல முடியாத நிலையால் எதையும் சொல்லாமல் தவிர்த்தாள் தலைவி.

    அடுத்த பொருள். கார்காலம் வந்து விட்டது. தலைவியின் கண்கள் கருவிளை மலர்களைப் போன்று பூத்து தலைவன் வருகைக்காக விழித்திருக்கின்றன. எரிகின்ற காட்டைப் போன்று செக்கச் சிவந்த மருதாணி அணிந்த கைகளில் வளையல்கள் நழுவி விழுந்தன. பிரிந்து சென்ற தலைவன் வரவைச் சொல்ல முடியாத நிலையால் எதையும் சொல்லாமல் தவிர்த்தாள் தலைவி.

    இந்தச் செய்யுளில் தோன்று என்று அழைக்கப்படுவது மருதோன்றி.

    அது சரி. யாரெல்லாம் தங்கள் கைகளில் மருதாணி இட்டு மகிழ்ந்திருக்கின்றீர்கள்? 🙂

    அன்புடன்,
    ஜிரா

    163/365

     
    • amas32 11:17 am on May 13, 2013 Permalink | Reply

      மருதாணியை மிக்சியில் போட்டு அரைப்பது கடினம். சரியாகவே அரைபடாது. திப்பி திப்பியாக இருக்கும். அதற்கு அம்மி அல்லது கல்லுரல் தான் சரி. மருதாணி இட்டுக் கொள்ள பிடிக்காத பெண்களே இருக்க முடியாது என்று சொல்லல்லாம். சில வீடுகளில் சிறுவர்களும் முன் காலத்தில் இட்டுக் கொள்வர் 🙂 மணமகனுக்கு நலுங்கு வைப்பது போல கையில் மருதாணி இடுவதும் வழக்கம்.

      மருதாணி பூக்களுக்கு நல்ல நறுமணம் உண்டு. இரவு நேரத்தில் கும்மென்று மணம் வீசும். கதம்ப மாலையில் சேர்த்துக் கட்டுவது வழக்கம்.

      மருதாணி இட்ட கைகளால் உண்ணும்போது அந்த உணவுக்கும் தனி மணம் வரும். கையில் இட்ட மெஹந்தி கோலங்கள முதல் சில நாட்கள் நன்றாக இருந்தாலும் அதன் பின் கை மோர்குழம்பு மாதிரி ஆகிவிடும். ஆனால் அரைத்து இட்டுக் கொள்ளும் மருதாணி ரொம்ப நாட்கள் அழியாமல் அழகாகக் காட்சியளிக்கும் 🙂

      amas32

      • GiRa ஜிரா 9:47 am on May 15, 2013 Permalink | Reply

        உண்மை. உரல் அல்லது அம்மியில்தான் அரைக்க வேண்டும். ஒரேயொரு கொட்டைப்பாக்கையும் வைத்து அரைத்துவிட்டால் அட்டகாசம்.

    • vaduvurkumar 1:48 pm on May 13, 2013 Permalink | Reply

      பல முறை இட்டுக்கொண்டுள்ளேன்.

      • GiRa ஜிரா 9:47 am on May 15, 2013 Permalink | Reply

        சிறுவயதில் எல்லாரும் வெச்சிருப்போம்னு நெனைக்கிறேன். 🙂

    • kamala chandramani 2:29 pm on May 13, 2013 Permalink | Reply

      மருதாணிப்பூக்கள் இளம் மஞ்சள் நிறத்தில் சிறியதாக இருக்கும். நல்ல மணம் வீசும். 15 நாட்களுக்கு ஒருமுறை இட்டுக்கொள்ள நகங்கள் நகப்பூச்சு(nailpolish) பூசியதுபோல் அழகாக இருக்கும். கால் நகங்களுக்கு பாதுகாப்பு. கால் ஆணிக்கு மருந்து. உடலுக்கு குளிர்ச்சி. மெஹந்தி சீக்கிரம் போய்விடும். கைமணக்க நிறைய நாள் இருக்கும் மருதாணி.

      • GiRa ஜிரா 9:48 am on May 15, 2013 Permalink | Reply

        மெஹந்தியில் ஏதோ கெமிக்கல் சேக்கிறாங்களாம். அதான் பக்குன்னு ஒடனே பிடிச்சுக்குதுன்னு சொல்றாங்க. என்னைக் கேட்டா மருதாணிதான் சிறப்புன்னு சொல்வேன் 🙂

    • saba 7:54 pm on May 14, 2013 Permalink | Reply

      இயற்கையாக இருக்கும் மருதாணிச் சாறு சந்ததி சந்ததியாக பாவிக்கப்பட்டது. ஒரு பக்க விளைவயும் தோற்றுவிக்கவில்லை.
      தற்போது கூம்புகளில் விற்கப்படும் ஒரு வகை black “ஹென்னா” தோல்களில் கெடுதலை விளைவிக்கிற்து.
      A chemical PPD is added to make the stain darker for the temporary tattoo and it creates rashes on the skin. these are mainly use in Bali , an Indonesian Island.
      check the link below:
      (http://www.expat.or.id/medical/blackhennareactions.html)

      • GiRa ஜிரா 9:48 am on May 15, 2013 Permalink | Reply

        சரியான தகவலை எடுத்துக் கொடுத்தீர்கள். இயற்கையான முறைகளை விட்டுவிடக்கூடாது என்பது எவ்வளவு உண்மை.

  • mokrish 10:15 am on February 28, 2013 Permalink | Reply  

    இரு வரிக் கவிதை 

    பெண்ணை வர்ணிக்கும் பாடல்கள்  காதல் ரச பாடல்கள் முத்தம் தரும் / கேட்கும் பாடல்கள் … எவ்வளவு பாடல்கள் இதழ் பற்றி! விதிவிலக்கின்றி அத்தனை கவிஞர்களும் இது பற்றி பாடல் எழுதியிருக்க, எதைப்பற்றி நான் பதிவெழுத?

    கண்ணதாசன் முதல் இன்று காலை ட்விட்டரில் உதித்த புது கவிஞன் வரை அனைவரும் இதழின் சிவப்புக்கு / சிறப்புக்கு ஒரு கவிதையாவது டெடிகேட்  செய்கிறார்கள்.

    • சிப்பி போல இதழ்கள், மாதுளை செம்பவளம் மருதாணி போல என்று ஓராயிரம் பாடல்கள்.

    • தித்திக்கும் இதழ் உனக்கு , இதழே இதழே தேன் வேண்ட குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும் உதடு -தேன் பழரசம் மது என்று போதையில் இன்னொரு ஆயிரம்.

    • தவிர ஆரிய உதடுகள் திராவிட உதடுகள் , இதழில் கவிதை எழுதும் நேரம், , எந்த பெண்ணிலும் இல்லாத உதட்டின் மேல் மச்சம், , bubble gum ஐ இதழ் மாற்றி – டூ மச்!

    சரி வித்தியாசமாய் ஏதாவது? பார்க்கலாம். முதலில் பழைய பாடல். தங்க ரங்கன் என்ற படத்தில் ஒரு பாடல். MSV இசையில் நா. காமராசன் எழுதியது.

    உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
    அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது

    கவனியுங்கள். அவள் பெயர்தான் ஒட்டிக்கொண்டது. உச்சரிப்பதுதான் தித்திக்கிறது. கண்ணியமான வரிகள்.

    அந்நியன் படத்தில் ஐயங்காரு வீட்டு அழகே என்ற பாடலில்

    உன் உதடு சேர்ந்தால் பூப்படையும் வார்த்தை

    நம் உதடு சேர்ந்தால் பூப்படையும் வாழ்க்கை

    தம்பி படத்தில் சுடும் நிலவு சுடாத சூரியன் என்ற பாடலில் ‘நான்கு உதடு பேசும் வார்த்தை முத்தமாகும்’ என்ற வரி

    ஐஸ்வர்யா ராய் என்றாலே வைரமுத்துவின் கற்பனை உற்சாகமாய் இருக்கும்

    ராவணன் படத்தில் ஒரு பாடல்.

    உசுரே போகுதே உசுரே போகுதே

    உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையிலே

    மேஜர் சந்திரகாந்த் படத்தில் ஒரு நாள் யாரோ என்ற பாடலில் இதழின் நிறம் பற்றி வாலியின் கற்பனை ஒரு அழகிய கவிதை.

    செக்கச் சிவந்தன விழிகள் கொஞ்சம்

    வெளுத்தன செந்நிற இதழ்கள்

    வெள்ளை விழிகளும் செந்நிற இதழ்களும் நிறம் மாறி நிற்கும் பெண்ணின் நிலை. இலக்கியத்தில் இதன் equivalent பற்றி சொக்கனும் ராகவனும் தான் சொல்லவேண்டும்.

    அடுத்து இவன் படத்தில் அப்படி பாக்குறதுன்னா வேணாம் என்ற பாடலில் பழனிபாரதி சொல்லும் கற்பனை இனிமை

    சுற்றி சுழன்றிடும் கண்ணில் இசை தட்டு ரெண்டு பார்த்தேனே
    பற்றி இழுத்தென்னை அள்ளும் பட்டு குழிகளில் வீழ்ந்தேனே
    ரெண்டு இதழ் மட்டும் கொண்டிருக்கும்

    உந்தன் புத்தகத்தில் அச்சானேன்

    கண்களால் கைது செய் என்ற படத்தில் பா விஜய் எழுதிய என்னுயிர் தோழியே என்று ஒரு பாடல்

    மூச்சு முட்ட கவிதைகள் குடித்துவிட்டு

    எந்தன் செவியில் சிணுங்குகிறாய்

    ரெண்டு இதழ் மட்டும் கொண்ட அதிசய பூ

    நீ அல்லவோ சிலுப்புகிறாய்

    அவளை இரண்டு இதழ் கொண்ட அதிசய பூவாய் பார்க்கும் கற்பனை.

    ஆயிரம் தான் இருந்தாலும் காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள்தான் என்பது என் எண்ணம். பழனிபாரதியும் அதைத்தான் சொல்கிறார்.

    இன்னும் நிறைய இருக்கும். நீங்களும் சொல்லுங்களேன்

    மோகனகிருஷ்ணன்

    089/365

     
    • என். சொக்கன் 10:23 am on February 28, 2013 Permalink | Reply

      //சிவந்தன விழிகள், வெளுத்தன இதழ்கள்//

      இதே வரி ‘1000 நிலவே வா’ பாட்டிலும் வரும் (புலமைப்பித்தன்?), அக்னி நட்சத்திரம் ‘நின்னுக்கோரி வர்ணம்’ பாடலில் வாலியே இதே வரிகளை மீண்டும் எழுதியிருப்பார்,

      அனைத்துக்கும் Source ஒன்றே : கந்த புராணம் : ’வெளுத்தன சேயிதழ், விழி சிவந்தன’ 🙂

  • mokrish 12:07 pm on February 11, 2013 Permalink | Reply  

    கொஞ்சும் கொலுசு 

    பெண் அணியும் ஆபரணங்களில் அவளுக்கு எது பிடிக்குமோ தெரியவில்லை. ஆனால் ஆணுக்கு பிடித்தது கொலுசும் சலங்கையும்தானோ என்று தோன்றுகிறது. ‘ஆஹா மெல்ல நட மெல்ல நட’ என்றும் ‘ஆடி வா ஆடி வா ஆடப்பிறந்தவளே ஆடி வா’ என்றும் சொல்லி பெண்ணின் நடையிலும் நடனத்திலும் ஆட்டத்திலும் ஓட்டத்திலும் கொலுசின் சத்தமும் சலங்கையின் ஓசையும் கேட்டு மயங்கிய ஆண், இதை விரும்பியதில் வியப்பில்லை.
    ‘உன் கால் கொலுசொலி போதுமடி பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி’ என்று பாடும் அளவுக்கு இந்த சத்தம் அவனை மயக்கியிருக்கிறது .கொலுசு தமிழ்பண்பாட்டின் தனித்த ஆபரணமாம். கொலுசின் ஒலியில் பெண்ணின் மனநிலை உணர முடியுமாம். நிஜமாகவா? கொலுசு பெண் மன indicator ஆ? அவ்வளவு சிம்பிள் விஷயமா பெண்மனம் அறிதல்?
               கற்பனைக்கு மேனி தந்து கால் சதங்கை போட்டு விட்டேன்
               கால்சதங்கை போன இடம் கடவுளுக்கும் தோன்றவில்லை
    என்று கண்ணதாசன் தெய்வத்தின் தேரெடுத்து தேவியை தேட சொல்கிறார். வைரமுத்துவும் இதயத்தை தொலைத்துவிட்டு அவள் கால் கொலுசில் அது தொலைந்திருக்குமோ என்று காலடியில் தேடுகிறார்…(நிற்க இது ஆதி சங்கரனின் காலடி இல்லை டைரக்டர் ஷங்கர் நாயகியின் கால் அடி)
    வெள்ளி கொலுசு மணியும் பாத கொலுசு சத்தமும் கொஞ்சம் கொஞ்சமாக பாடலில் வர, கொலுசு சத்தம் கேட்கும்போது மனம் தந்தியடிக்குது என்கிறார் முத்துலிங்கம். நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்ற காதலி தன்னைத் தாலாட்ட வருவாளா என்று சந்தேகத்துடன் நடக்கும் காதலன் சட்டென்று ‘கொஞ்சம் பொறு   கொலுசொலி கேட்கிறதே’ என்று நின்று பாடும் கவிஞர் பழனி பாரதியின் வரிகள்.
    வைரமுத்து வந்தபின் தமிழ்பாடலில் கொலுசு சத்தம் சற்றே அதிகம். வெள்ளி சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடிய காலம். ஒரு பாடலில்
             கொலுசே கொலுசே எசை பாடு கொலுசே
             நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன்
             நீ கேளாதிருந்தால் நான் வாழாதிருப்பேன்
    என்னவோ கொலுசின் ஒலி தான் வழிகாட்டி போல் சொல்கிறார். மொத்தத்தில் அவள் தந்த சத்தத்தில் தேன் வந்து ரத்தத்தில் தித்தித்ததே என்று Fasting / PP blood sugar ரிசல்ட் சொல்லி  … கொஞ்சம் ஓவரா போய்ட்டாரோ? இன்னும் இல்லை. மற்ற பாடல்களையும் பார்ப்போம்
    முதல்வன் பாடலில்
              குறுக்கு சிறுத்தவளே என்ன குங்குமத்தில் கரைச்சவளே
    நெஞ்சில் மஞ்ச தேச்சு குளிக்கையில் என்ன கொஞ்சம் பூசு தாயே
    உன் கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம் மாத்து தாயே
    குறுக்கு சிறுத்தவளின் கொலுசுக்கு மணியாக தன்னை கொஞ்சம் மாற்றிக்கொள்ள ஆசைப்படுகிறார். அன்பே அன்பே கொல்லாதே பாடலில்
             கொடுத்து வைத்த பூவே பூவே அவள் கூந்தல் மணம் சொல்வாயா
             கொடுத்து வைத்த கொலுசே கொலுசே அவள் காலளவை சொல்வாயோ
    என்று உலக அழகியை பற்றி பாடும்போதும் விடாமல் கொலுசை கெஞ்சுகிறார்.மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலுக்கு தாய் மாமன் சீராக தங்க கொலுசு தான் தருகிறார். (தங்கத்தை இடுப்புக்கு கீழே அணியக்கூடதாமே, தங்கத்தில் கொலுசு பரவாயில்லையா ?)
    கொலுசும் சலங்கையும் வெறும் சத்தமா ? அதை தாண்டி ஒரு கற்பனை உண்டா? இருக்கிறது. அதுவும் வைரமுத்துவின் வரிகள் தான். சங்கமம் படத்தின் முதல் முறை கிள்ளிப்பார்த்தேன் பாடலில் http://www.youtube.com/watch?v=e6IVUGuENd8 பெண் மனதின் ஓசைகளையும் அவள் இதழின் மௌனங்களையும் சொல்லும் வரிகள்
    ‘கால்களில் கிடந்த சலங்கையை திருடி
    அன்பே என் மனசுக்குள் கட்டியதென்ன’
    என்று காதல் வயப்பட்ட ஒரு பெண் தன் மனதின் ஓசையை சொல்ல, பதிலுக்கு  ஆண்
    சலங்கையை அணிந்தும் சத்தங்களை மறைத்தாய்
    பெண்ணே உன் உள்ளம் தன்னை ஒளித்ததென்ன
    என்று சலங்கை அணிந்தும் மௌனமாய் நிற்கும் பெண்ணை , பெண்ணின் மனதை கேள்வி கேட்டு
    சலங்கையே கொஞ்சம் பேசு
    மௌனமே பாடல் பாடு
    மொழியெல்லாம் ஊமை யானால்
    கண்ணீர் உரையாடும்

    வசீகரிக்கும் வார்த்தைகள். கவிஞருக்கு தேசிய விருது வாங்கி கொடுத்த வரிகள். இன்னும் இன்னும் எழுதுங்கள் கவிஞரே கொலுசின் கொஞ்சலும் சலங்கையின் கெஞ்சலும் சலிக்கப்போவதேயில்லை எங்களுக்கும்.

    மோகனகிருஷ்ணன்

    072/365

     
  • mokrish 10:46 am on January 5, 2013 Permalink | Reply  

    ஆடை கட்டி வந்த… 

    பெண்ணை வர்ணிக்கும் பாடல்கள் பொதுவாக அவள் உடை பற்றி பேசும். வெவ்வேறு காலகட்டங்களில் வந்த பாடல்கள் அன்றைய ரசனைகளையும் விருப்பங்களையும் சார்ந்து இருக்கும். உடை பற்றிய பாடல் என்றால் முதலில் நினைவுக்கு வருவது

    பாவாடை தாவணியில் பார்த்த உருவமா

    இது பூவாடை வீசி வர பூத்த பருவமா

    https://www.youtube.com/watch?v=XMEJZbkQCBE

    இந்த உடை ஒரு பெண்ணின் வயதையும் தோரயமாக விவரிப்பதால், கவிஞர் பழைய நினைவுகளை அசைபோட ஒரு Pivot ஆக எடுத்துக்கொள்கிறார். அந்த நாளில் ஒரு பெண் வேறு ஆடை அணிந்தால்

    பட்டுப் பாவாடை எங்கே

    கட்டி வைத்த கூந்தல் எங்கே

    பொட்டெங்கே பூவும் எங்கே சொல்லம்மா… சொல்லம்மா…

    என்று கேள்வி வருகிறது. வைரமுத்து அந்தி மழை பொழியும்போது தாவணி விசிறிகள்தான் வீசுகிறார். சமீபத்தில் ஒரு கவிஞர் வீட்டுக்கு வந்ததும் தாவணி போட்ட தீபாவளி தான்

    பெண்ணின் சின்ன சின்ன ஆசையில் சேலை கட்ட வேண்டும் என்பதும் உண்டு.வாழ்வின் அடுத்த நிலையில் பெண் சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரும் சித்திர கைத்தறி சேலை கட்டும்பொழுது கவிஞன் தன கற்பனைக்கு றெக்கை கட்டி விடுகிறான். புடவையின் தேர்ந்த மடிப்பு விசிறி வாழைகள் என்று ஒரு பெண் கவி சொல்ல ஆண் கவியோ நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டி என்று கிறங்குகிறான். புலமைப்பித்தன் சேலை சோலையே என்றும் வைரமுத்து சின்னப்பொண்ணு சேலை செண்பகப்பூ போல என்றும் பஞ்சு அருணாசலம் பட்டு வண்ண சேலைக்காரி என்றும் – பல வரிகள் சேலை மகிமை சொல்லும்.

    பழனி பாரதி ‘சேலையிலே வீடு கட்டவா சேர்ந்து வசிக்க’ என்று ஒரு வசீகரமான கேள்வி கேட்கிறார். வைரமுத்து தன் பங்கிற்கு

    சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு

    கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா

    என்று கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் ரேஞ்சுக்கு ஆதங்கப்பட்டு

    சொல்லிவிட்டு இன்னொரு பாடலில் உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்ததே என்பதை கம்பன் பாடாத சிந்தனை என்று அழகாக பொய் சொல்லுகிறார். பரவாயில்லை கவிதைக்கு பொய் அழகுதானே.

    செந்தமிழ் நாட்டு தமிழச்சி சேலை உடுத்த தயங்கி சட்டென்று சுரிதாருக்கு மாறியவுடன் கவிஞர்கள் அதை வர்ணிக்க – சுரிதார் அணிந்து வந்த சொர்கமே என்று பாட்டெழுத வைரமுத்து

    குல்முஹர் மலரே குல்முஹர் மலரே கொல்லப் பார்க்காதே உன் துப்பட்டா வில் என்னை கட்டிதூக்கில் போடாதே தூக்கில் போடாதே தூக்கி எரியாதே

    என்று துப்பட்டாவிடம் பயப்படுகிறார்

    பாவாடையும் தாவணியும், பட்டு, சுங்கிடி கைத்தறி கண்டாங்கி சேலை, சுரிதார் துப்பட்டா -என்னடா இது பழைய பஞ்சாங்கம் என்று வெகுண்டெழும் வாலி

    அக்கடான்னு நாங்க உடைபோட்டா

    துக்கடான்னு நீங்க எடை போட்டா

    தடா உனக்குத்தடா

    என்று அதிரடியாக Section 144 பரிந்துரை செய்கிறார். https://www.youtube.com/watch?v=u6zywS5ptm4

    தொடர்ந்து பிரபுவின் நகைக்கடை புரட்சி போல்

    திரும்பிய திசையிலே எங்கேயும் கிளாமர்தான்

    நான் போட்ட டிரஸ்சுகளை பிலிம் ஸ்டாரும் போட்டதில்லை

    மடிசாரும் சுடிதாரும் போயாச்சு

    ஓரங்கட்டு ஓரங்கட்டு

    உடையெல்லாம் ஓரங்கட்டு

    என்று கேட்பவர்களை மிரள வைக்கிறார்.

    இப்போதெல்லாம் ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹலோ சொல்லி கைகுலுக்க என்று வரிகள். இன்றைய டா போட்டு பேசும் da Vinci ஓவியங்கள் எல்லாம் விவேக் சொல்வது போல மாடர்ன் டிரஸ் மகாலக்ஷ்மிகள் தான்

    திரைப்பாடல்கள் முடிந்த வரை நம் வாழும் சமுதாயத்தை பிரதிபலிக்க தவறவே இல்லை!

    நா.மோகனகிருஷ்ணன்

    035/365

     
    • niranjanbharathi 11:54 am on January 5, 2013 Permalink | Reply

      பாலாடை கட்டி நிற்கும் மேலாடை பற்றிக்கூறும் பாவாடை ரொம்பவே அழகு….

    • @npodiyan 8:49 pm on January 6, 2013 Permalink | Reply

      கலக்கல்!

    • amas32 (@amas32) 3:32 pm on January 13, 2013 Permalink | Reply

      இப்பொழுது பரவாயில்லை திரும்ப திரும்ப தாவணி பேஷன் ஆகி வருகிறது 🙂 நல்ல அலசல்! 🙂

      amas32

    • DEVARAJAN 4:54 pm on January 16, 2013 Permalink | Reply

      nice writing style

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel