மஞ்சள் நிறத் தவளை
சிந்தனை எப்படித் தொடங்கி எந்தப் பக்கம் தவ்வும் என்று யாரால் சொல்ல முடியும்? அப்படி ஒரு சிந்தனை இந்தப் பாடலைக் கேட்ட போது தவ்வியது.
தண்ணி கருத்திருச்சு கண்ணு தவளச் சத்தம் கேட்டுருச்சு
ஊரும் ஒறங்கிருச்சு நம்ம ஒதுங்க இடம் கெடைச்சிருச்சு
பாட்டு – வாலி
பாடியவர் – மலேசியா வாசுதேவன்
இசை – இசைஞானி இளையராஜா
படம் – இளமை ஊஞ்சலாடுகிறது
பாடலின் சுட்டி – http://youtu.be/h97Ox17gL4g
தத்தித் தவ்விய சிந்தனை தவளையைப் பற்றியதுதான். தவளைக்கு ஏன் தவளை என்று பேர் வந்ததென்று ஒரு யோசனை.
பழைய தமிழ்ப் பெயர்களுக்குப் பின்னால் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். அது போல தவளையின் பெயருக்கும் பின்னால் ஏதேனும் இருக்குமோ என்று இலக்கியங்களைத் தேடிப் பார்த்தேன். நல்லதொரு விடையும் கிடைத்தது.
மக்கள் படுவதனால் அதற்கு பாடு என்று பெயர். அப்படியே மக்கள் கெடுவதனால் அதற்கு கேடு என்று பெயர். அதுபோல தவ்வுவது தவளை. தவ்விக் குதித்துச் செல்லும் உயிரிக்குத் தவளை என்று பெயர். “தத்து நீர்த் தவளை” என்று சீவகசிந்தாமணியும் கூறுகிறது.
சிறுவர்கள் சிறிய தட்டையான கல்லை எடுத்து நீர்நிலையின் மேற்புறமாக எறிவார்கள். அது தவளையைப் போல் சிலமுறை தத்திச் செல்லும். அப்படி எறியப்படும் அந்தத் தட்டையான பொருளுக்கு தவளைக்காய் என்று பெயர். அது பின்னாளில் மருவி தவக்களை என்றாகி விட்டது.
தவளை நீரில் பிறக்கும். நீரிலேயே வளரும். முழுதாய் வளர்ந்த பிறகு நீரிலும் நிலத்திலும் வாழும். அதனால்தான் “தவளைக்கும் பொம்பளைக்கு ரெண்டு எடந்தானே” என்று கத்தாழங்காட்டு வழி என்ற பாட்டில் எழுதினார் கவிஞர் வைரமுத்து.
தவளையை அறிவுரை சொல்வதற்காகத் தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். அது பற்றி சிறிது பார்க்கலாம்.
தவளைக்கு நுணல் என்றும் மற்றொரு பெயர் உண்டு. ”நுணலும் தன் வாயால் கெடும்” என்ற பழமொழியும் பிரபலமானது. தவளை கத்துகின்ற ஒலியை வைத்தே பாம்பு கண்டுபிடித்துக் கவ்விவிடும். அதுபோல மடையர்கள் பேசத் தெரியாமல் பேசி மாட்டிக் கொண்டு விழிப்பார்கள்.
மண்டூகம் என்ற பெயரும் பின்னாளில் தவளைக்கு வழங்கப்பட்டது. இது வடமொழியிலிருந்து வந்த பெயராக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
”தண் தாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்” என்று விவேக சிந்தாமணி கூறுகிறது.
அதாவது தாமரை குளத்தில் பிறக்கிறது. அதே குளத்தில்தால் தவளை முட்டைகளும் குஞ்சு பொரித்து தலைப்பிரட்டையாகின்றன. ஒரே இடத்தில் பிறந்ததால் தாமரையும் தவளையும் உடன் பிறந்தது என்கிறது விவேக சிந்தாமணி.
ஆனாலும்… தவளைக்குத் தாமரையின் அருமையும் மென்மையும் புரிவதில்லை. அது போல நல்லவர்களுக்கு நடுவிலேயே இருந்தாலும் கெட்டவர்கள் நல்லவர்களைப் புரிந்து கொண்டு உறவாடுவதில்லை.
ஆனால் எங்கிருந்தோ வந்த வண்டு தாமரையை உறவாடுவது போல அறிவுடையவர்களும் கற்றவர்களும் எங்கிருந்தோ வந்து கற்றவர்களோடு உறவாடுவார்களாம்.
பெயர் தெரியாத புலவர் எழுதிய விவேக சிந்தாமணியின் பாட்டை முழுமையாகத் தருகிறேன். படித்து ரசியுங்கள்.
தண் தாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
வண்டோ கானத்து இடை இருந்து வந்தே கமல மது உண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரை
கண்டே களித்து இங்கு உறவாடி தம்மில் கலப்பார் கற்றோரேகுளிர்ந்த தாமரை பிறந்த அதே குளத்தில் பிறந்த தவளை தாமரையை மதிப்பதில்லை
வண்டோ காட்டின் இடையிலிருந்து வந்து தாமரையின் இனிய தேனை உண்ணும் (அதுபோல)
முன்பே பழகியிருந்தாலும் புல்லர்கள் நல்லவர்களை அறிந்து கொள்ள மாட்டார்கள்
ஆனால் கற்றவர்கள் எங்கிருந்தோ வந்து கண்டு களித்து நல்லவர்களோடு உறவாடிக் கலப்பர்
வெறும் தவளை என்று எடுத்துக் கொண்டு இறங்கினால் கூட சிந்தனை இத்தனை தகவல்களோடு தவளையைப் போலவே தத்தித் தாவுகின்றதே. இப்படியே இன்னும் சிந்தித்தால் இன்னும் எத்தனையெத்தனை கருத்துகள் தத்திக் குதிக்குமோ!
அன்புடன்,
ஜிரா
179/365
rajinirams 4:53 pm on May 29, 2013 Permalink |
பிரமாதம்.”தவளை” குறித்து பல தகவல்களை சொல்லியிருக்கிறீர்கள்.முன்பெல்லாம் ஏதோ ஒரு விஷயத்தை காட்டி ஆல் இந்தியா ரேடியோவில் சில பாடல்களை தடை செய்வார்கள்.அதில் இந்த பாடலும் ஒன்று,சிலோனில் அடிக்கடி ஒலிபரப்புவார்கள். சூப்பர் ஹிட் பாடல்.
Saba-Thambi 7:35 pm on May 29, 2013 Permalink |
Title நல்ல சிலேடை
“தவளைப்பாய்த்து” என்று ஓர் இலக்கணம் இருப்பதாக கேள்வி. யாராவது விளக்கினால் உதவியாக இருக்கும்
amas32 9:52 pm on May 30, 2013 Permalink |
/தண்ணி கருத்திருச்சு கண்ணு தவளச் சத்தம் கேட்டுருச்சு
ஊரும் ஒறங்கிருச்சு நம்ம ஒதுங்க இடம் கெடைச்சிருச்சு/
இந்த மாதிரி பாடல் வரிகளில் ஆரம்பித்து விவேக சிந்தாமணியில் உள்ள ஒரு பாடலுக்கு எங்களை அழைத்துச் செல்ல உங்களால் தன முடியும் ஜிரா, அருமை 🙂
/தண் தாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
வண்டோ கானத்து இடை இருந்து வந்தே கமல மது உண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரை
கண்டே களித்து இங்கு உறவாடி தம்மில் கலப்பார் கற்றோரே/
மிகவும் நல்ல கருத்தைச் சொல்லும் அழகிய பாடல்!
/ இப்படியே இன்னும் சிந்தித்தால் இன்னும் எத்தனையெத்தனை கருத்துகள் தத்திக் குதிக்குமோ!/
தத்தித் தாவுது மனமே என்று மின்சாரக்கனவு படத்தில் அரவிந்த் சாமி பாடிய பாடலுக்குத் தான் மனம் செல்லும் 🙂
amas32