Updates from May, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • G.Ra ஜிரா 11:07 am on May 29, 2013 Permalink | Reply
    Tags: , விவேக சிந்தாமணி   

    மஞ்சள் நிறத் தவளை 

    சிந்தனை எப்படித் தொடங்கி எந்தப் பக்கம் தவ்வும் என்று யாரால் சொல்ல முடியும்? அப்படி ஒரு சிந்தனை இந்தப் பாடலைக் கேட்ட போது தவ்வியது.

    தண்ணி கருத்திருச்சு கண்ணு தவளச் சத்தம் கேட்டுருச்சு
    ஊரும் ஒறங்கிருச்சு நம்ம ஒதுங்க இடம் கெடைச்சிருச்சு
    பாட்டு – வாலி
    பாடியவர் – மலேசியா வாசுதேவன்
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – இளமை ஊஞ்சலாடுகிறது
    பாடலின் சுட்டி – http://youtu.be/h97Ox17gL4g

    தத்தித் தவ்விய சிந்தனை தவளையைப் பற்றியதுதான். தவளைக்கு ஏன் தவளை என்று பேர் வந்ததென்று ஒரு யோசனை.

    பழைய தமிழ்ப் பெயர்களுக்குப் பின்னால் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். அது போல தவளையின் பெயருக்கும் பின்னால் ஏதேனும் இருக்குமோ என்று இலக்கியங்களைத் தேடிப் பார்த்தேன். நல்லதொரு விடையும் கிடைத்தது.

    மக்கள் படுவதனால் அதற்கு பாடு என்று பெயர். அப்படியே மக்கள் கெடுவதனால் அதற்கு கேடு என்று பெயர். அதுபோல தவ்வுவது தவளை. தவ்விக் குதித்துச் செல்லும் உயிரிக்குத் தவளை என்று பெயர். “தத்து நீர்த் தவளை” என்று சீவகசிந்தாமணியும் கூறுகிறது.

    சிறுவர்கள் சிறிய தட்டையான கல்லை எடுத்து நீர்நிலையின் மேற்புறமாக எறிவார்கள். அது தவளையைப் போல் சிலமுறை தத்திச் செல்லும். அப்படி எறியப்படும் அந்தத் தட்டையான பொருளுக்கு தவளைக்காய் என்று பெயர். அது பின்னாளில் மருவி தவக்களை என்றாகி விட்டது.

    தவளை நீரில் பிறக்கும். நீரிலேயே வளரும். முழுதாய் வளர்ந்த பிறகு நீரிலும் நிலத்திலும் வாழும். அதனால்தான் “தவளைக்கும் பொம்பளைக்கு ரெண்டு எடந்தானே” என்று கத்தாழங்காட்டு வழி என்ற பாட்டில் எழுதினார் கவிஞர் வைரமுத்து.

    தவளையை அறிவுரை சொல்வதற்காகத் தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். அது பற்றி சிறிது பார்க்கலாம்.

    தவளைக்கு நுணல் என்றும் மற்றொரு பெயர் உண்டு. ”நுணலும் தன் வாயால் கெடும்” என்ற பழமொழியும் பிரபலமானது. தவளை கத்துகின்ற ஒலியை வைத்தே பாம்பு கண்டுபிடித்துக் கவ்விவிடும். அதுபோல மடையர்கள் பேசத் தெரியாமல் பேசி மாட்டிக் கொண்டு விழிப்பார்கள்.

    மண்டூகம் என்ற பெயரும் பின்னாளில் தவளைக்கு வழங்கப்பட்டது. இது வடமொழியிலிருந்து வந்த பெயராக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

    தண் தாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்” என்று விவேக சிந்தாமணி கூறுகிறது.

    அதாவது தாமரை குளத்தில் பிறக்கிறது. அதே குளத்தில்தால் தவளை முட்டைகளும் குஞ்சு பொரித்து தலைப்பிரட்டையாகின்றன. ஒரே இடத்தில் பிறந்ததால் தாமரையும் தவளையும் உடன் பிறந்தது என்கிறது விவேக சிந்தாமணி.

    ஆனாலும்… தவளைக்குத் தாமரையின் அருமையும் மென்மையும் புரிவதில்லை. அது போல நல்லவர்களுக்கு நடுவிலேயே இருந்தாலும் கெட்டவர்கள் நல்லவர்களைப் புரிந்து கொண்டு உறவாடுவதில்லை.

    ஆனால் எங்கிருந்தோ வந்த வண்டு தாமரையை உறவாடுவது போல அறிவுடையவர்களும் கற்றவர்களும் எங்கிருந்தோ வந்து கற்றவர்களோடு உறவாடுவார்களாம்.

    பெயர் தெரியாத புலவர் எழுதிய விவேக சிந்தாமணியின் பாட்டை முழுமையாகத் தருகிறேன். படித்து ரசியுங்கள்.

    தண் தாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
    வண்டோ கானத்து இடை இருந்து வந்தே கமல மது உண்ணும்
    பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரை
    கண்டே களித்து இங்கு உறவாடி தம்மில் கலப்பார் கற்றோரே

    குளிர்ந்த தாமரை பிறந்த அதே குளத்தில் பிறந்த தவளை தாமரையை மதிப்பதில்லை
    வண்டோ காட்டின் இடையிலிருந்து வந்து தாமரையின் இனிய தேனை உண்ணும் (அதுபோல)
    முன்பே பழகியிருந்தாலும் புல்லர்கள் நல்லவர்களை அறிந்து கொள்ள மாட்டார்கள்
    ஆனால் கற்றவர்கள் எங்கிருந்தோ வந்து கண்டு களித்து நல்லவர்களோடு உறவாடிக் கலப்பர்

    வெறும் தவளை என்று எடுத்துக் கொண்டு இறங்கினால் கூட சிந்தனை இத்தனை தகவல்களோடு தவளையைப் போலவே தத்தித் தாவுகின்றதே. இப்படியே இன்னும் சிந்தித்தால் இன்னும் எத்தனையெத்தனை கருத்துகள் தத்திக் குதிக்குமோ!

    அன்புடன்,
    ஜிரா

    179/365

     
    • rajinirams 4:53 pm on May 29, 2013 Permalink | Reply

      பிரமாதம்.”தவளை” குறித்து பல தகவல்களை சொல்லியிருக்கிறீர்கள்.முன்பெல்லாம் ஏதோ ஒரு விஷயத்தை காட்டி ஆல் இந்தியா ரேடியோவில் சில பாடல்களை தடை செய்வார்கள்.அதில் இந்த பாடலும் ஒன்று,சிலோனில் அடிக்கடி ஒலிபரப்புவார்கள். சூப்பர் ஹிட் பாடல்.

    • Saba-Thambi 7:35 pm on May 29, 2013 Permalink | Reply

      Title நல்ல சிலேடை

      “தவளைப்பாய்த்து” என்று ஓர் இலக்கணம் இருப்பதாக கேள்வி. யாராவது விளக்கினால் உதவியாக இருக்கும்

    • amas32 9:52 pm on May 30, 2013 Permalink | Reply

      /தண்ணி கருத்திருச்சு கண்ணு தவளச் சத்தம் கேட்டுருச்சு
      ஊரும் ஒறங்கிருச்சு நம்ம ஒதுங்க இடம் கெடைச்சிருச்சு/

      இந்த மாதிரி பாடல் வரிகளில் ஆரம்பித்து விவேக சிந்தாமணியில் உள்ள ஒரு பாடலுக்கு எங்களை அழைத்துச் செல்ல உங்களால் தன முடியும் ஜிரா, அருமை 🙂

      /தண் தாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
      வண்டோ கானத்து இடை இருந்து வந்தே கமல மது உண்ணும்
      பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரை
      கண்டே களித்து இங்கு உறவாடி தம்மில் கலப்பார் கற்றோரே/

      மிகவும் நல்ல கருத்தைச் சொல்லும் அழகிய பாடல்!

      / இப்படியே இன்னும் சிந்தித்தால் இன்னும் எத்தனையெத்தனை கருத்துகள் தத்திக் குதிக்குமோ!/
      தத்தித் தாவுது மனமே என்று மின்சாரக்கனவு படத்தில் அரவிந்த் சாமி பாடிய பாடலுக்குத் தான் மனம் செல்லும் 🙂

      amas32

  • என். சொக்கன் 9:34 am on May 27, 2013 Permalink | Reply  

    குருவிக் கூடு 

    • படம்: வானம்பாடி
    • பாடல்: தூக்கணாங்குருவிக் கூடு
    • எழுதியவர்: கண்ணதாசன்
    • இசை: கே. வி. மகாதேவன்
    • பாடியவர்: பி. சுசீலா
    • Link: http://www.youtube.com/watch?v=fF_P01DOlbI

    தூக்கணாங்குருவிக் கூடு,

    தூங்கக் கண்டார் மரத்திலே,

    சும்மாப் போன மச்சானுக்கு, என்ன நினைப்பு மனசிலே!

    ’தூக்கணாங்குருவி’ என்ற பெயர் மிகப் பிரபலமானது. பேச்சுவழக்கிலும் பல நாட்டுப்புறப் பாடல்கள், சினிமாப் பாடல்களிலும்கூட இடம்பெற்றிருக்கிறது.

    இந்தக் குருவியைவிட, மரத்திலிருந்து தொங்கும்விதமாக அது கட்டும் வித்தியாசமான கூட்டை எல்லாரும் அறிவர்.

    சின்ன வயதில் இதை வைத்து ஒரு கதைகூடப் படித்திருப்போம், பெருமழையில் நனையும் குரங்கு : அதைக் கேலி செய்யும் தூக்கணாங்குருவி : ஓவர் அறிவுரை, கிண்டல், கேலியால் கடுப்பான குரங்கு, மரத்தின் மேலே ஏறி அந்தக் குருவியின் கூட்டைப் பிய்த்துப்போட்டுவிடும்!

    இந்தக் கதை ‘விவேக சிந்தாமணி’யில் வருகிறது. இப்படி:

    வானரம் மழைதனில் நனைய, தூக்கணம்
    தான் ஒரு நெறி சொல, தாண்டிப் பிய்த்திடும்,
    ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
    ஈனர்க்கு உரைத்திடில் இடர் அது ஆகுமே!

    அந்தக் குருவி, மழையில் நனைந்த குரங்குக்கு நல்ல அறிவுரை சொல்லி என்ன பிரயோஜனம்? அதன் கூட்டை இழந்து அதுவும் மழையில் நனையவேண்டியதாகிவிட்டது.

    அதுபோல, பாத்திரம் அறிந்து பிச்சையிடவேண்டும், ஞானமும் கல்வியும் நூல்களும் ஈனர்களுக்குப் போய் உரைத்தால், அப்புறம் நமக்குதான் பிரச்னை வரும்.

    பாட்டு நன்றாகதான் இருக்கிறது. ஆனால், ஏதோ இடிக்கிறது!

    நாம் இதுவரை ‘தூக்கணாங்குருவி’ என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம்? இந்தப் பாட்டில் ‘தூக்கணம்’ என்று வருகிறதே, தட்டச்சுப் பிழையா?

    ம்ஹூம், இல்லை, ‘தூக்கணாங்குருவி’ என்று நாம் சொல்லிவருவதுதான் தவறு, அந்தக் குருவியின் நிஜப் பெயர், ‘தூக்கணம்’தான். இலக்கியங்களில் தூக்கணப் புள், தூக்கணக் குருவி என்றெல்லாம் குறிப்பிடப்படும்.

    ’தூக்கணம்’ என்ற பெயர், அந்தக் குருவி கட்டும் கூட்டின் காரணமாக அமைந்திருக்கலாம். ஏனெனில், இந்தக் குருவியின் கூடுபோன்ற வடிவத்தில் பெண்கள் காதில் அணியும் தொங்கல் / ஜிமிக்கி வகைக்கும் ‘தூக்கணம்’ என்ற பெயர் உள்ளது!

    ***

    என். சொக்கன் …

    27 05 2013

    177/365

     
    • ptcv 10:38 am on May 27, 2013 Permalink | Reply

      தூக்கணம் +. Rope that holds a diver while he is under water; ஆழமான நீருள் முக்குளிப்பவனை முக்குளிக்குங்காலத்துக் கட்டியிருக்குங் கயிறு
      தூக்கணம் tūkkaṇam

      , n. < தூக்கு-. 1. Pendant, anything suspended; தொங்கல். (W.) 2. Suspended net-work of rope for supporting a pot; உறி. (சங். அக.)

      காதணி மட்டுமல்ல, தொங்கும் அணி/பொருட்களுக்கு தூக்கணம் என்று சொல்லுவாங்க போல..

    • amas32 9:56 pm on May 30, 2013 Permalink | Reply

      பாடல் வரிகளை எப்படி நுட்பமாக ஆராய்வது என்று உங்கள் பதிவுகளை இங்கே படித்தாலே அறிந்து கொள்ள முடியும். இன்றும் ஒரு புதிய சொல் அறிமுகம் கிடைத்தது, நன்றி 🙂

      amas32

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel