இல்லற ஜோதி
சில தினங்களுக்கு முன்பு ட்விட்டரில் ஒரு சுவாரசியமான உரையாடல். நான் வழக்கம் போல் பெவிலியன் சீட்டில் உட்கார்ந்து ரசித்துக்கொண்டிருந்தேன். விவாதத்தின் இடையில் நண்பர் @nchokkan பாரதிதாசனின் குடும்ப விளக்கு படிக்க link கொடுத்தார். வாழ்வியல் பற்றிய அருமையான வரிகள். படிக்கும்போதே மனதில் காட்சிகள் விரியும் ஒரு விஷுவல் எழுத்து.
ஒருநாள் நிகழ்ச்சி என்ற முதற் பகுதியின் தலைப்பை படித்தவுடன் எனக்கு ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. கண்ணதாசன் பாலும் பழமும் என்ற படத்தில் எழுதிய ஆலய மணியின் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் பி சுசீலா) மனைவி காலை மாலை இரவு என்ற மூன்று காலம் பற்றி பாடுகிறாள்.
https://www.youtube.com/watch?v=GN2a7WO3wkI
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
இளகும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
காலை நேரத்து ஒலிகள், கணவனே கண் கண்ட தெய்வம், மாலையில் அவன் வருகை, யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் என்ற வரிகளில் ஒரு சிறுகதை.
தொடர்ந்து படித்தால் காலை மலர்ந்தது, அவள் எழுந்தாள், கோலமிட்டாள் என்ற தலைப்புகள். அடடா இது போல கண்ணதாசன் பாடல் உண்டே என்றே தோன்றியது. நீ படத்தில் ஒரு பாடல் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் பி சுசீலா)
https://www.youtube.com/watch?v=2tDB6NWrXdg
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்
மஞ்சள் கொஞ்சிடும் மங்கள முகத்தில்
குங்குமம் விளங்கட்டுமே –
கைவளையாடலும் காலடி ஓசையும்
வருகையை முழங்கட்டுமே -பாவை
வருகையை முழங்கட்டுமே
இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை, விடியும் வேளைதான். ’தெருக்கதவு சார்ந்ததாழ் திறந்து, அரிசிமாக் கோலம் அமைத்தனள்’ என்ற வரிதான் ‘வாசலில் கோலமிட்டேன்’ என்று வருகிறதோ?அடுத்த சரணத்தில் மனைவி கணவனை எழுப்பும் ஒரு காட்சி சொல்கிறார்
மார்கழி திங்களை மூடிய பனித்திரை
காற்றினில் விலகட்டுமே -காலை
காற்றினில் விலகட்டுமே
வாடையில் வாடிய மேனியை மூடிய
மன்னவன் விழிக்கட்டுமே – காதல்
மன்னவன் விழிக்கட்டுமே
வாடையில் வாடிய மேனியை மூடிய மன்னவன் … அருமை! கண்ணதாசன் பாடல்களை அடுக்கினால் ஒரு புது குடும்ப விளக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
மோகனகிருஷ்ணன்
289/365
amas32 10:00 pm on September 16, 2013 Permalink |
பாரதி தாசனின் குடும்ப விளக்கில் பொதுவாக ஒரு சராசரி குடும்பத்தில் நடப்பவைகளை அப்படியே பிட்டு பிட்டு வைத்துள்ளார் அவர். ரொம்ப modern household ல் நடப்பவை அல்ல. ஒரு நடுத்தர வர்க்க வீட்டில் இருக்கும் இல்லத்தரசி பாங்காக குடும்பம் நடத்தும் அழகை கண் முன்னே எழுத்தொவியமாக்கிக் காட்சிப் படுத்துகிறார். பெண்ணியம் பேசுபவர்கள் அவர் சொல்வதை criticise செய்வார்கள். ஆனால் உண்மையான இன்ப வாழ்வு மனைவி வீட்டில் இருந்து குழந்தைகளைப் பேணிக் காப்பதில் தான் தொடங்குகிறது. அவரின் குடும்ப விளக்கைப் படித்த பின் இன்றைய பாடலாசிரியர்கள் பலருக்கும் குடும்ப விளக்கின் தாக்கம் உள்ளதைப் பார்க்க முடிகிறது 🙂
//யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே//
தாம்பத்தியம் என்பது கணவன் மனைவிக்குள்ளே ஏற்படும் ஒரு அன்னியோன்னிய தொடர்பு. எப்படி வீட்டை நிர்வகிப்பதில் அவள் திறமை தேவைப்படுகிறதோ அதே திறமை அவள் கணவனை ஆட்சி செய்வதிலும் தேவைப்படுகிறது. அந்த ஆட்சி தழைந்து போவதில் ஆரம்பிக்கிறது. This is one place a woman rules by giving in to a man!
தாய்/ மனைவி என்பதற்கான இலக்கணம் மாறிக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் பத்து மாதம் சுமந்து குழந்தையை இன்றும் சுமந்து பெறுவது பெண் தான். அதனால் அவளுக்குத் தான் குழந்தைகளை வளர்ப்பதில் பெரும் பங்கு உள்ளது. வேலைக்குச் செல்லும் பொழுது மற்றவர் தயவும் தேவையாகிறது, குழந்தை வளர்ப்பில் அவர்கள் பங்கும் சேர்ந்துக் கொள்கிறது. அப்போ வளர்ப்பில் கலப்படம் வருகிறது.
நீங்கள் தேர்ந்தெடுத்த பாடல்கள் அனைத்தும் அருமை 🙂
amas32
rajinirams 10:50 am on September 17, 2013 Permalink |
அருமையான பதிவு,பாரதி தாசன் அவர்களின் குடும்பவிளக்கு கவிதைக்கேற்ற அருமையான பாடல்கள்.இளகும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே-கவியரசரின் அற்புத வரிகள்.
Uma Chelvan 2:33 pm on September 17, 2013 Permalink |
அமாஸ் 32 அவர்களின் கருத்து மிக மிக அருமை . பெண் என்பவள் வீட்டில் இருந்து கணவனையும் குழந்தை , குடும்பம் ,பார்த்து கொள்வதுதுதான் நல்லது . நன்றாக படித்து வேலைக்கு சென்று இங்கும் நிம்மதி இல்லாமல் அங்கும் நிம்மதி இல்லாமல் உழல் பவர்கள் பல பேர். அப்படி மனைவி வீட்டில் இருந்து எல்லாம் பார்த்து கொள்ள வேண்டும் என்றால் கணவனின் அனுசரணை மிகவும் முக்கியம்., அன்பு, அழகு படிப்பு பண்பு பணம் வசதி அனைத்தும் இருந்தும் நல்ல கணவன் அமையாமல் கஷ்டப்படும் பல பேரை நான் அறிவேன்
பந்தமும் பாசமும் நேசமும் அன்னை இல்லத்திலே,
சொந்தமும் காதலும் இன்பமும் (????) கொண்ட உள்ளத்திலே ……..
பேசு மனமே பேசு
பேதை மனமே பேசு
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு