விருந்தினர் பதிவு : நுதல்
- பாடல் : மாசறு பொன்னே வருக
- படம் : தேவர் மகன்
- எழுதியவர் : வாலி
கோல முகமும்,
குறுநகையும், குளிர் நிலவென
நீலவிழியும் பிறை நுதலும்
விளங்கிடும் எழில்!
நுதல் : இந்த வார்த்தை இப்பொழுது அதிக புழக்கத்தில் இல்லை.
பொதுவாக இந்த வார்த்தை நெற்றியைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாட்டிலும் கூட. நிலவைப் போன்ற நெற்றி என்ற பொருளில்
Frontal Bone(derived from Forehead) – இதற்குத் தமிழில் நுதலெலும்பு என்றப் பெயரும் இருக்கிறது. ஆனால் புழக்கத்தில் “நெத்தியில்/மண்டையில் அடிப்பட்டிருச்சு” என தான் பேசிக்கொள்வோம். மருத்துவர்கள் கண்டிப்பாக ஆங்கிலத்தில் தான் குறிப்பிடுவர். ஆக,ஒரு நல்ல வார்த்தை காணாமல் போய்விட்டது.
சங்க இலக்கியங்களில் பல இடங்களில் ”நுதல்” உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
நற்றிணை
சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி,
பெருங் கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே
சுடர் விடும் நெற்றி என்ற பொருளில்
அகநானூறு
விரி மலர் மராஅம் பொருந்தி, கோல் தெரிந்து,
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி,
வரிகளையுடைய நெற்றியைக் கொண்ட யானை.
இவ்வளவு நல்ல வார்த்தை தமிழ்சினிமாவில் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. இருந்தால் சொல்லுங்கள். ”முதல்” “இதழ்” “நுதல்” என ரைமிங் அழகா வருதே :))
இதழ் முத்தம் ,கணவன்-மனைவி,காதலன்-காதலி இடையே தான் பகிரமுடியும்.
நுதல் முத்தம் , யாரும் யாரிடமும் பகிரலாம். :))
பின்குறிப்பு : இது சம்பந்தமாக இணையத்தில் தேடியப்போது , இந்த லிங்க் கிடைத்தது. இதை எழுதியவர் ”நுதல்” என்ற வார்த்தைக்கு “கண்விழி”தான் பொருத்தமாக இருக்கும் என சில உதாரணங்களுடன் விளக்குகிறார். கொஞ்சம் பெரிய பதிவு. கமெண்ட்ஸையும் படிக்கவும்.
http://thiruththam.blogspot.sg/2010/07/blog-post.html
காளீஸ்
பிறந்து வளர்ந்தது நெல்லை மாவட்டம் புளியங்குடி.திருவண்ணாமலையில் எஞ்சனியரிங். Contact Center industry(Voip / IVR)யில் வேலை.சென்னையில் 7 வருடங்கள். இப்பொழுது சிங்கப்பூரில்.
பக்கத்துவீட்டில் தினத்தந்தி,விகடன்,குமுதம் பஸ் பயணங்களில் ராஜேஷ்குமார் என ஆரம்பித்த வாசிப்பு, வலைத்தள அறிமுகத்திற்குப்பிறகு கொஞ்சம் பரந்து விரிந்திருக்கிறது. ட்விட்டரில் 140க்குள் எழுத ஆரம்பித்து இப்பொழுது இங்கே வலைப்பதிவுவரை வந்திருக்கிறது : http://eeswrites.blogspot.sg/
penathal suresh (@penathal) 11:07 pm on May 4, 2013 Permalink |
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே..
தமிழ்த்தாய் வாழ்த்தை மறந்துட்டீங்களே சார்!
anonymous 3:21 am on May 5, 2013 Permalink |
கவிஞர் வாலியின் “நுதல்” கொண்டு “நுதலியது” (துவங்கியது) அழகு, காளீஸ்
குளிர் நிலவென – நீலவிழியும், பிறை நுதலும் -ன்னு தானே ஒரு சந்தம் அமையும் இந்த வாலி பாட்டில்!
வாலி எத்தனையோ முருகன் பாட்டு எழுதி இருக்காரு; ஆனா அன்னையின் பாட்டு?
வாலியின் ஆரம்பமே முருகன் பாட்டு தான் – “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும், கந்தனே உன்னை மறவேன்”
-ன்னு Railway Station -இல் எழுதி TMS கிட்ட குடுத்தது, அதுவே அவர் சினிமா வருகைக்கும் கட்டியம் கூறியது;
வாலி எழுதிய அன்னையின் பாட்டில் மிகச் சிறந்தவை இந்த ரெண்டு தான்
= மாசறு பொன்னே வருக & ஜனனி ஜனனி
—–
தமிழில், “நுதலுதல்” -ன்னா = சொல்லத் துவங்குதல்;
அதாச்சும் முன்னுரை;
முகத்துக்கு முன்னுரை = நெற்றி ; அதனால் “நுதல்” -ன்னு தீந்தமிழில் வழங்கினார்கள்;
நெற்றியில் என்ன இட்டுக்கிட்டு வந்தாலும், அதான் பளிச் -ன்னு முதலில் தெரியும்; அதுவே முன்னுரை; அப்பறம் தான் வைரக் கம்மல் எல்லாம்:)
—-
“சொல்லு” என்ற சொல்லுக்குப் பல பெயர்கள், தமிழில்
=அறை, இயம்பு, உரை, கிள,
=கூறு, சாற்று, செப்பு, சொல்,
=பகர், பறை, பன்னு, புகல்,
=பேசு, மிழற்று, மொழி, விளம்பு
=அந்த வரிசையில், நவில், நுவல், “நுதல்”
ஒவ்வொன்னுத்துக்கு நுண்ணிய வேறுபாடு இருக்கு…
“உரை” -ன்னா விளக்கமாச் சொல்லுதல்
“நுதல்” -ன்னா சுருங்கச் சொல்லுதல்; முன்னுரையாச் சொல்லுதல்
அப்படி வந்தது தான் “நுதல்” (நெற்றி)
anonymous 4:13 am on May 5, 2013 Permalink |
அந்தச் சுட்டியில் பொன். சரவணன் சொல்வது அத்துணை ஏற்புடைத்து இல்லீங்க:)
இதுக்கு முன்னாடி “அல்குல் = புருவம்” -ன்னும் தப்பாச் சொல்லி இருப்பாரு;
*அல்குல் = பெண் உறுப்பு/ இடுப்பு
*அல்குவதால் = அல்குல் (குறுகுதல்)
http://goo.gl/sC67V
நல்ல தமிழ்ச் சொல்லையெல்லாம்… “decency” என்கிற பேரில், மாற்றிப் பொருள் கொள்வதும்,
தரவுகளே இல்லாமல், மொழி வழக்கத்தில் இருந்து விரட்டி விடுவதும்… தமிழுக்குப் பெருங் கேடாய்த் தான் முடியும்:(
ஆக்கல் = அரிது; அழித்தல் = எளிது; All it takes is a post & few friends to propagate
இதுல கூட பாருங்க;
பசலை நுதல் (பசலை பாய்ந்த நுதல்);
ஆனா, பசப்பும் = அழுவும் -ன்னு எடுத்துக்கிட்டு, நெத்தி அழுவாது, கண்ணு தான் அழுவும்-ன்னு எடுத்துக்கிட்டாரு:)
முருகா, எங்கெங்கே, யாரு எப்படிச் சிதைக்கிறாங்க? -ன்னு பாத்துக்கிட்டா இருக்க முடியும்? உன் தமிழை, நீ தான் காப்பாத்திக்கிடணும்;
காளீஸ், நீங்க சொன்ன நுதல் = நெற்றியே சரி; “நுதல் முத்தமே” அழகு:)
anonymous 3:51 am on May 5, 2013 Permalink |
நாமெல்லாம் முருகனைத் துதிக்கிறோம்;
ஆனா முருகன், இன்னொருத்தரைத் துதிக்கிறானாம் = யாரை?
மதிவாள் **”நுதல்”** வள்ளியைப் பின்
துதியா விரதா… சுர பூபதியே
-ன்னு அருணகிரியின் கந்தர் அநுபூதி; “நுதல் வள்ளி”-ம்பாரு;
முருகன் = சரியான பொண்டாட்டி தாசன்:) மாமா, மாலவனைப் போலவே:)
என்னைக்காச்சும் பூலோகம் போ -ன்னு சாபம் குடுப்பாரா திருமகளுக்கு? அந்தம்மா தான் கோச்சிக்கிட்டு போவாக; இவரு பின்னாலேயே கெஞ்சிக்கிட்டு ஓடீயாருவாரு:)
வள்ளியின் காலையே பிடிப்பான் முருகன் = “குறமகள் பாதம் வருடிய மணவாளா”
ஏன்-ன்னா, அவ “காத்திருப்பு” அப்படி;
முருகன், தன்னை ஏத்துக்கிடுவானா? -ன்னு கூடத் தெரியாது; எது-ன்னாலும், “அவனே அவனே” -ன்னு கற்பனையா வாழ்ந்து சீரழிஞ்சவ;
நடையா நடந்தவ… =அதான் “பாதம் வருடிய மணவாளா”
முருகனுக்கு முன்னுரை = வள்ளி;
முருகனுக்கே நெற்றி போன்றவள் = “நுதல் வள்ளி”
——-
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை **”நுதல்”** -ன்னு குறள்
அவன் அவளை இறுக்க அணைக்கிறான்;
அவன் பாகங்கள் எல்லாம் அவள் பாகங்கள் மேல் = “அவிர்ப் பாகம்”
அப்படியொரு ஆசை அந்த அணைப்பில்;
திடீர்-ன்னு என்ன நினைச்சானோ தெரியல, அவளுக்கு வலிக்குமோ?-ன்னு இறுக்கத்தை லேசாத் தளர்த்துறான்;
ஒடனே, அவ நெற்றி (நுதல்) பசலை பாய்ஞ்சிருச்சாம்:) அந்தச் சிறு பிரிவு/ விலகல் தாங்காம;
அகத்தை = முகம் காட்டிக் குடுக்கும்
முகத்தை = நெற்றி காட்டிக் குடுக்கும்;
முகத்தை “நுதலும்” நுதல் வாழ்க!!
Kalees 7:46 am on May 5, 2013 Permalink |
விரிவான கமெண்ட்க்கு நன்றிங்க…
“நுதுலுதல்-தொடங்குதல்-முன்னுரை-நெற்றி” இந்த தொடர்பு நல்லா இருக்கு 🙂
அப்புறம் அந்த லிங்க் , ஒரு மாற்று யோசனை/கற்பனைங்கிற வகையில குடுத்திருந்தேன்.அவ்வ்ளவுதான். உங்களை மாதிரி விசயம் தெரிஞ்சவங்க முன்னெடுத்துப் போவீங்கன்னுதான் 🙂
Mohanakrishnan 5:40 pm on May 5, 2013 Permalink |
பாரதியின் வெள்ளை கமலத்திலே பாடலில் நுதல் சிந்தனை என்று வரும்.
வேதத் திருவிழி யாள்,-அதில்
மிக்கபல் லுரையெனுங் கருமையிட் டாள்,
சீதக் கதிர்மதி யே-நுதல்
சிந்தனையே குழ லென்றுடை யாள்,
என். சொக்கன் 9:09 am on May 6, 2013 Permalink |
Comment From Sushima (Sent Via Email):
மிகப் பெரிய பதிவின் லிங்க் கொடுத்துவிட்டீர்கள் 🙂 நல்ல வார்த்தையைத் தேர்வு செய்து அழகாக விளக்கம் அளித்துள்ளீர்கள். சிவபுராணத்தில் வரும். பேச்சு வழக்கில் இல்லை தான். நெற்றி என்ற பொருள் மட்டும் தான் எனக்குத் தெரியும். லிங்க் பதிவில் நிறைய பொருள்கள் கொடுத்திருக்கிறார் அந்தப் பதிவின் ஆசிரியர்.
நன்றி
amas32