மென்மஞ்சம்
- படம்: ராஜபார்ட் ரங்கதுரை
- பாடல்: மதன மாளிகையில்
- எழுதியவர்: கண்ணதாசன்
- இசை: எம். எஸ். விஸ்வநாதன்
- பாடியவர்கள்: டி. எம். சௌந்தர்ராஜன், பி. சுசீலா
- Link: http://www.youtube.com/watch?v=ds_8nIPwc2I
அழகு மாணிக்கமா, கட்டில்
அனிச்ச மலரணையா!
வாசலில் தோரணம் உன்னை
வரச்சொல்லும் தோழிகளா!
முதலிரவில் கட்டில்மீது மலர் தூவுவார்கள் என்று தெரியும். அதில் என்ன குறிப்பாக அனிச்ச மலரணை?
அதற்குமுன்னால், கட்டில்மீது எதற்குப் பூவைத் தூவுகிறார்கள்?
என்னதான் மென்மையான மெத்தையாக இருப்பினும், அதில் சில நுட்பமான தூசுகள் இருந்தே தீரும், அவை நாயகன், நாயகியின் உடலை உறுத்திவிட்டால் காதல் நாடகத்துக்கு இடைஞ்சல் இல்லையா?
அதைத் தவிர்ப்பதற்காகதான் மெத்தையின்மீது மலர்களைத் தூவுகிறார்களாம். அவை உடம்பை உறுத்தாது, மென்மையாக ஒத்தடம்தான் கொடுக்கும்.
பொதுவாக எல்லா மலர்களுமே (காலிஃப்ளவர்தவிர) மென்மையானவைதான். அவை செடியில் இருக்கும்வரை அழகு, பறிக்க முயன்றாலே கொஞ்சம் சிதையும், பறித்துவிட்டால் வாடத் தொடங்கிவிடும்.
அதிலும் குறிப்பாக, அனிச்ச மலர் மிகவும் மென்மையானது. அதைப் பறிக்கக்கூட வேண்டாம், சும்மா முகர்ந்து பார்த்தாலே குழைந்து துவண்டுவிடும்.
இதைதான் திருவள்ளுவர் தாடியைத் தடவியபடி சொன்னார், ‘மோப்பக் குழையும் அனிச்சம்!’
’மோத்தல்’ என்றால் முகர்ந்து பார்த்தல், ‘நாய் மோப்பம் பிடிக்கிறது’ என்கிறோமே, அதே மோப்பம்தான் இதுவும்.
இதே சொல் குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு பிரபலமான சொல், ‘முகர்தல்’. ‘அவன் நறுமணத்தை நன்கு முகர்ந்தான்’ என்று படித்திருப்போம்.
சிலர் இதனை ‘நறுமணத்தை நுகர்ந்தான்’ என்றும் எழுதுவார்கள். அது சரியா?
‘நுகர்தல்’ என்றால் பயன்படுத்துதல் என்று அர்த்தம். ’நுகர்வோர் உரிமைச் சட்டம்’ என்று செய்திகளிலும் ‘நுகர்வோரே! விழித்திடுங்கள்’ என்று தூர்தர்ஷன் விளம்பரங்களிலும் இதைக் கேட்டிருப்போம்.
ஆக, ‘நறுமணத்தை நுகர்ந்தான்’ என்றால், நறுமணத்தைப் பயன்படுத்தினான் என்றுதான் அர்த்தம். ‘நறுமணத்தை முகர்ந்தான்’ என்றால் மூக்கால் வாசனை பிடித்தான் என்று அர்த்தம்!
சுற்றிவளைத்துப் பார்த்தால், இரண்டும் ஒன்றுதானோ?!
***
என். சொக்கன் …
27 09 2013
300/365
rajinirams 10:44 pm on September 27, 2013 Permalink |
முதலில் மூவருக்கும் முன்னூறு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.மோப்பக்குழையும் அனிச்சம் என்ற வள்ளுவரின் குறளோடு அனிச்சமலரின் சிறப்பையும்.நுகர்தலுக்கும் முகர்தலுக்கும் உள்ள வித்தியாசத்தை எளிமையாக விளக்கிய நல்ல பதிவு.முதல்வனில் வைரமுத்துவும் அனிச்ச மலரழகே என்று அழகாக வர்ணித்திருப்பார்.நன்றி.
amas32 5:02 pm on September 28, 2013 Permalink |
#300 வாழ்த்துகள் 🙂 மிகவும் மகிழ்ச்சி! ஜிரா, மோகன், சொக்கன் – உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த பாராட்டு! மேலும் மேலும் தொடர்ந்து எங்கள் அறிவை செம்மைப் படுத்த இது போன்ற பதிவுகளை எழுதுமாறு இந்தத் தருணத்தில் விண்ணப்பிக்கிறேன் 🙂
அனிச்ச மலர் அவ்வளவு மென்மையானதாச்சே, அதன் மேல் எப்படி படுத்து கசக்குவது? எப்பவும் மஞ்சத்தில் தூவிய மலர்களைத் திரைப்படங்களில் பார்க்கும் பொழுது மலர்களை எண்ணி வருத்தப் படுவேன் 🙂
amas32