எல்லாம் சிவமயம்
- படம்: திருவருட்செல்வர்
- பாடல்: சித்தமெல்லாம் எனக்குச் சிவமயமே
- எழுதியவர்: கண்ணதாசன்
- இசை: கே. வி. மகாதேவன்
- பாடியவர்: டி. எம். சௌந்தர்ராஜன்
- Link: http://www.youtube.com/watch?v=trsW6cL9a9o
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே, இறைவா, உன்னைச்
சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே!
அத்தன் இல்லாமல் ஒரு அம்மை இல்லை, அந்த
அம்மை இல்லாமல் இந்தப் பிள்ளை இல்லை!
’அத்தான்’ தெரியும், அது என்ன ‘அத்தன்’?
அடுத்து வரும் ‘அம்மை’யோடு சேர்த்துப் பார்த்தால் பொருள் தெரிந்துவிடும். அத்தன் என்றால் தந்தை என்று பொருள்.
சுந்தரர் தன்னுடைய ஒரு பாடலில் சிவனை ‘பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா! அத்தா!’ என்பார். இந்தத் திரைப்படப் பாடலின் தொடக்கத்திலேயே நாம் அதைக் கேட்கலாம்.
இன்றைக்கும் இஸ்லாமியர்களின் வீடுகளில் தந்தையை ‘அத்தா’ என்று அழைக்கும் பழக்கம் இருக்கிறது. அதேபோல் மலையாளிகள் ‘அச்சா’ (அதாவது, ‘அச்சன்’, ‘அச்சனே’) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.
கம்ப ராமாயணத்தின் ஒரு பாடலில் ராமன் தன் தம்பி லட்சுமணனிடம், ‘அத்தா! இது கேள்!’ என்று தொடங்கிப் பேசுவான். இன்னொரு பாடலில் விபீஷணன் தன் அண்ணன் ராவணனிடம் ‘அத்த! என் பிழை பொருத்தருள்’ என்பான்.
என்ன குழப்பம் இது? ராமனுக்கு எப்படி லட்சுமணன் தந்தை ஆவான்? விபீஷணனுக்கு எப்படி ராவணன் தந்தை ஆவான்?
அது ஒன்றும் பெரிய மர்மம் இல்லை. தம்பியிடமோ அண்ணனிடமோ உரையாடும்போது, ‘அப்படி இல்லைப்பா’ என்று பேச்சுவாக்கில் சொல்கிறோம் அல்லவா? அதுபோலதான் ராமனும் விபீஷணனும் ‘அத்தன்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். இந்த இரண்டு பாடல்களிலும் அதன் பொருள், ‘எனக்கு தந்தையைப்போன்றவனே!’
***
என். சொக்கன் …
12 10 2013
315/365
Uma Chelvan 8:53 pm on October 12, 2013 Permalink |
எப்படி ஆண்கள் தன்னை விட சிறு வயது பெண்களை பாசத்துடன் “அம்மா” என்று சேர்த்து அழைப்பது போல!!!!!
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் இன்று இமைப்பது மறந்தாலும்
நல்ல தவத்தவர் உள்ளிருந்து ஒங்கும்
நமஷிவாயத்தை நான் மறேவேனே
இரக்கம் வாராமல் போனதென்ன காரணம் —என் சுவாமிக்கு
பாடியவர்..பாம்பே ஜெயஸ்ரீ
எழுதியவர் -கோபாலக்ருஷ்ண பாரதி
ராகம்—பெஹாக்
s.anand 3:33 pm on October 14, 2013 Permalink |
pardon my transliteration eventualities
அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்
அருள்நோக்கில் தீர்த்த நீராட்டி கொண்டாய்
எத்தனைஅரியை நீ எளியனானாய்
எனையாண்டு கொண்டிறங்கி ஏன்றுகொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனைகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றோ
இத்தனையும் எம்பரமோ வையவையோ
எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே
amas32 8:47 pm on October 14, 2013 Permalink |
அத்தன், புதிய சொல்லை இன்று கற்றுக் கொண்டேன் 🙂 நாம் தினம் சொல்லும் இறை துதிகளைக் கவனித்துச் சொன்னாலே நிறைய வார்த்தைகளின் பொருள் தெரிந்து கொள்ள முடியும் என்றும் அறிந்து கொண்டேன், நன்றி 🙂
amas32