கவலைப்படாதே சகோதரா!
- படம்: ஆனந்த ஜோதி
- பாடல்: காலமகள் கண் திறப்பாள் சின்னையா
- எழுதியவர்: கண்ணதாசன்
- இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
- பாடியவர்: பி. சுசீலா
- Link: http://www.youtube.com/watch?v=lYKYBy6Qzfs
சின்னச் சின்ன துன்பமெல்லாம்
எண்ண எண்ணக் கூடுமடா!
ஆவதெல்லாம் ஆகட்டுமே,
அமைதி கொள்ளடா!
கண்ணதாசனின் பல பாடல்களைப் படிக்கும்போது அல்லது கேட்கும்போது, இவர் ஒரு மனோதத்துவ நிபுணராக இருப்பாரோ என்று சந்தேகம் வரும். இந்தப் பாடல் அந்த வகைதான்.
ஒரு சின்னக் கல்லைச் சிறிது நேரம் கையில் வைத்திருந்தால் வலி ஏற்படாது, அதையே அதே நிலையில் சில மணி நேரங்கள் வைத்திருந்தால் கஷ்டம்தான்.
’நாம் சந்திக்கிற துன்பங்களெல்லாம் அப்படிதான்’ என்று ஒரே போடாகப் போட்டுவிடுகிறார் கண்ணதாசன். ’சிறிய கல்லைக்கூடப் பெரிய பாறையாக்குவது நம் எண்ணங்கள்தான், என்ன நடந்தாலும் சமாளிக்கலாம் என்று அமைதியாக இருப்போம்!’ என்று எளிய சொற்களில் தெளிவாகச் சொல்லிவிடுகிறார்.
ஒரு சிறுவனைப் பார்த்து நாயகி பாடுவதாக வரும் இந்தப் பாடலில் பாதி தன்னம்பிக்கை, மீதி கடவுள் நம்பிக்கை. ‘கல்லிருக்கும் தேரைக்கெல்லாம் கருணை தந்த தெய்வம், கனி இருக்கும் வண்டுக்கெல்லாம் துணை இருந்த தெய்வம், நெல்லுக்குள்ளே மணியை, நெருப்பினிலே ஒளியை உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம் உனக்கு இல்லையா? தம்பி, நமக்கு இல்லையா?’ என்கிற வரிகளைக் கேட்டு நம்பிக்கை பெறும் அந்தச் சிறுவர், பி(இ)ன்னாள் நா(த்தி)யகர் கமலஹாசன்!
அதனால் என்ன? கண்ணதாசனும் முன்னாள் நாத்திகர்தானே!
***
என். சொக்கன் …
24 11 2013
357/365
uma chelvan 2:22 am on November 25, 2013 Permalink |
அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும்
அன்பு மொழி கேட்டு விட்டால் துன்ப நிலை மாறிவிடும்…………அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்……………
இந்த அன்பு மொழிக்குதான் எவ்வளவு சக்தி. ஆறாத வருத்தத்துக்கு, மாறாத கோபத்துக்கு, தீராத நோயிக்கு ” நான் எப்பொழுதும் உன்னுடன் இருக்கிறேன்/ இருப்பேன் என்ற ஒரு சொல்லே உறவுகளின் மீதும் வாழ்கையின் மீதும் மீண்டும் நம்பிக்கை துளிர்க்க செய்கிறது.
“எவ்வளவு கோபம் இருந்தாலும் ஒரு மீன் இன்னொரு மீனை தூக்கி தரையில் போடுவதில்லை” இதை இப்பொழுதுதான் வேறு ஒரு இடத்தில் படித்தேன். Humans are the only species go out of their way to hurt others.
rajinirams 6:16 pm on November 25, 2013 Permalink |
அருமையான பதிவு. கவியரசரின் “ஆறுதல் தரும்” வரிகள்.எம்ஜியாரை திரையுலகில் “சின்னவர்” என்று தான் சொல்லுவார்கள். அதனாலும் “சின்னையா”என்று கவியரசர் எழுதியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
amas32 7:40 pm on November 25, 2013 Permalink |
//சின்னச் சின்ன துன்பமெல்லாம்
எண்ண எண்ணக் கூடுமடா!//
முற்றிலும் உண்மை. பிறர் நம்மை தவறாகவோ கொபமகாகவோ பேசியதை அந்தக் கணத்தில் நாம் feel பண்ணியதை விட நினைத்து நினைத்து மருகும் போது தான் கனக்கிறது மனம். இதைத் தவிர நாம் இப்படி பதில் சொல்லியிருக்கணும் அப்படி பதில் சொல்லியிருக்கணும் என்று லேட்டாக ஞானோதயம் வேறு ஏற்பட்டு மனத்தை கலங்கவைக்கும்.
எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் சிலர் இருப்பார். ஒன்றுமே அவர்கள் மேல் ஒட்டாது toughlan மாதிரி. கொடுத்து வைத்தவர்கள் 🙂
கமல் நாத்திகர் என்று தன்னை பிரகடனப் படுத்திக் கொண்டாலும் என்னால் அவரை நாத்திகர் என்று சொல்ல முடியாது 🙂
amas32
இல்லாதது போல் இருக்குது | நாலு வரி நோட்டு 11:48 pm on November 29, 2013 Permalink |
[…] நாத்திகர்தானே என்று நண்பர் @ncokkan ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார். பழ. கருப்பையா […]