தேசிங்கு ராஜா!
வரலாற்றுப் பின்னணியில் இப்போதெல்லாம் படங்கள் வருவதேயில்லை. ஆனாலும் காதற் பாடல்களில் நாயகனை வீரமுள்ளவனாகக் காட்ட வரலாற்று நாயகர்களாகக் குறிப்பிடுவதும் உண்டு. அதிலும் அதிகமாக குறிப்பிடப்பட்டது கட்டபொம்மனாகத்தான் இருக்கும். பாரி வள்ளலும் ராஜராஜசோழனும் திருமலை மன்னனும் கூட பாட்டில் வந்திருக்கிறார்கள்.
இப்படி இவர்கள் வந்த பிறகு புதிதாக யாரையாவது குறிப்பிட வேண்டும் என்று நா.முத்துக்குமாருக்கு தோன்றியிருக்கலாம். அதனால் தேசிங்குராஜாவை அழைத்து வந்து விட்டார்.
தேசிங்குராஜா தேசிங்குராஜா
திருதிருதிருன்னு முழிப்பது ஏன்
தஞ்சாவூரு ராணி தஞ்சாவூரு ராணி
குறுகுறுன்னு பார்ப்பதென்ன
படம் – டும் டும் டும்
பாடல் – நா.முத்துக்குமார்
பாடியவர்கள் – ஹரிஷ் ராகவேந்திரா, சுஜாதா
இசை – கார்த்திக் ராஜா
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=JHTZ43dRtLc
சரி. யார் இந்த தேசிங்கு ராஜா? எந்த ஊர் ராஜா? அதை விளக்கமாகச் சொல்ல சிறிய வரலாற்றுப் பாடம் எடுக்க வேண்டும்.
18ம் நூற்றாண்டிலே செஞ்சியை ஆண்ட சிற்றரசன் தேசிங்கு ராஜா. இன்றைய செஞ்சியில் நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டிய கோட்டைகளும் இடிபாடுகளும் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. ஆனால் நாயக்கர்கள் ஆட்சி மறைந்த பிறகும் செஞ்சியில் சுவாரசியமான வரலாற்று நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.
தென்னாட்டையும் பிடிக்க வேண்டும் என்று ஔரங்கசீப்புக்குக் கனவு. அதனால் அடிக்கடி தாக்குதல்கள். மதுரை, தஞ்சை மற்றும் செஞ்சி நாயக்கர் ஆட்சிகள் வீழ்ந்தன. மராட்டிய சிவாஜியின் மகன் ராஜாராம் ஔரங்கசீப்பிடம் இருந்து தப்பித்து செஞ்சிக் கோட்டைக்கு வந்து பதுங்கியிருந்தார்.
இராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த சொரூப்சிங் தலைமையில் ஔரங்கசீப்பின் படை செஞ்சிக்கோட்டையைத் தாக்குகிறது. கிட்டத்தட்ட பதினோறு மாத முற்றுகைக்குப் பின்னர் செஞ்சிக்கோட்டை வீழ்ந்தது. அந்த வெற்றியைப் பாராட்டி செஞ்சி ஆட்சியை சொரூப்சிங்குக்கே கொடுத்து விடுகிறார் ஔரங்கசீப்.
அந்த சொரூப்சிங்குக்கும் ராதாபாய்க்கும் பிறந்த மகன் தான் தேஜ்சிங். அதாவது தமிழர்கள் உச்சரிப்பில் தேசிங்கு.
வடக்கில் அதற்குள் ஔரங்கசீப் ஆட்சி முடிந்து ஷாஆலம் ஆட்சி தொடங்கியிருந்தது. அவரிடம் ஒரு குதிரை வந்தது. பரிகாரி என்று பெயரிடப்பட்ட குதிரை அழகும் கம்பீரமும் சேர்ந்த உயர்ந்த வகை. ஆனால் அதை யாரும் அடக்கி ஓட்ட முடியவில்லை.
குதிரைப் பயிற்சியில் சிறந்திருந்த சொரூப்சிங் அழைக்கப்பட்டார். சொருப்சிங்காலும் அந்தக் குதிரையை பழக்க முடியவில்லை. ஆனால் அதை முடித்துக் காட்டினான் பதினெட்டு வயது தேஜ்சிங். அந்த வெற்றிக்குப் பரிசாக தேஜ்சிங்குக்கு பரிகாரியே கிடைத்தது. அதுமட்டுமல்ல, தேஜ்சிங்கின் ராஜபுத்ர இனத்திலிருந்தே பெண்ணெடுத்து திருமணமும் செய்து வைத்தார் ஷாஆலம்.
அந்த பெண்ணின் பெயர் ராணிபாய். இவருடைய பெயரில் உருவானதுதான் இன்றைய ராணிப்பேட்டை என்று சொல்கிறார்கள். தலையைச் சுற்றுகிறதா? வரலாற்றுச் சம்பவங்களைச் சுருக்கமாகச் சொன்னால் கொஞ்சம் சுற்றத்தான் செய்யும். 🙂
மிகச் சிறுவயதிலேயே ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை வந்தது தேஜ்சிங்குக்கு. அவனுடைய நண்பன் முகமதுகான் தேஜ்சிங்குக்கு எல்லா வகையிலும் துணையாக இருந்தான். அவனிடமும் ஒரு குதிரை இருந்தது. அதன் பெயர் நீலவேணி. அதன் மேல் முகமதுகானுக்கு உயிர்.
எல்லாம் நன்றாகப் போவது போலத்தான் இருந்தது ஆர்க்காட்டு நவாப் பிரச்சனையைத் தொடங்கும் வரை. ஆர்க்காட்டு நவாய் யார் வரி கேட்பதற்கு என்று போர் தொடங்கியது.
எத்தனையோ திரைப்படங்களிலும் கதைகளிலும் வருவது போன்ற காட்சிதான். முகமதுகானுக்குத் திருமணம் வைத்த நாளில் போர் முரசு கொட்டியதாம். ஆகையால் திருமணத்தை நிறுத்தி விட்டு போருக்குப் புறப்பட்டானாம் முகமதுகான்.
கொடும் போர் நடந்தது. போரில் வீர மரணம் அடைந்தான் தேஜ்சிங். அவனது மனைவி ராணிபாய் தீப்பாய்ந்து உயிர் விட்டார். முகமதுகானும் போரில் உயிரிழந்தான். அவனுடைய குதிரை நீலவேணியும் கொல்லப்பட்டது.
நீலாம்பூண்டி என்னும் சிற்றூரில் தேஜ்சிங்கின் சமாதி உள்ளது. அருகிலேயே முகமதுகானுக்கும் அவனுடைய குதிரை நீலவேணிக்கும்.
அன்புடன்,
ஜிரா
111/365
Arun Rajendran 4:08 pm on March 22, 2013 Permalink |
தமிழ் வகுப்புல வரலாறு பாடத்த நடாத்திக் காட்டி இருக்கீங்க…ஒரு நல்லப் பாட்ட எடுத்து ஞாபகப்படுத்துனதுக்கு நன்றி…தேசிங்கு கதை அரசல் புரசலாத்தான் கேள்விப்பட்டு இருக்கேன்..சுருக்கமா நிகழ்வுகள கோர்த்து கொடுத்து இருக்கீங்க..நன்றிகள் ஜிரா..
GiRa ஜிரா 11:04 pm on March 23, 2013 Permalink |
தேசிங்குராஜனைப் பற்றிய விவரங்களைத் தேடுனா அதீத புனிதப்படுத்துதலோட பக்தி ஜாலம் கலந்துதான் விவரங்கள் கிடைச்சது. பிறகு வேறு இடங்களில் தேடித்தான் பெயர் முதற்கொண்டு சரியான தகவல்களைக் கொடுக்க முடிந்தது 🙂
Saba-Thambi 5:32 pm on March 22, 2013 Permalink |
சிறு வயதில் படித்த ராஜா தேசிங்குவையும் அவனது குதிரையயும் நினவு படுத்தியதற்கு நன்றி. ஆனால் அதன் பின்னால் இருந்த சோகம் இன்று தான் அறிந்தேன். வரலாறு வகுப்பிற்கு நன்றி.
GiRa ஜிரா 11:06 pm on March 23, 2013 Permalink |
ஒவ்வொரு வரலாற்று நாயகனுக்கும் பின்னாடி ஒவ்வொரு சோகம் இருக்கத்தான் செய்யுது. அதுதானே வரலாறு. படாதபாடு பட்டு ஆட்சியைக் காப்பாற்றி ஒப்படைத்த மங்கம்மாளையே சந்தேகப்பட்டு சோறு போடாமல் கொடுமைப் படுத்திய பேரனையும் கண்டதுதான் தமிழகம்
amas32 (@amas32) 7:14 pm on March 22, 2013 Permalink |
கார்த்திக் ராஜாவுக்குத் திறமை இருந்தும் வாய்ப்புகள் இல்லை என்பது என் எண்ணம். அவர் இசையமைப்பில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே அருமை. இந்தப் பாடலில் நடன அமைப்பும் நன்றாக இருக்கும். பூவா தலையா, காயா பழமா என்று வரிகள் வரும் பாடல்களை #4VariNoteல் எடுக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும்? சைலண்டா யாரும் கவனிக்காத போது எஸ்கேப் ஆகி தேசிங்கு ராஜா (Tej Singh Raja) பற்றி சரித்திரக் குறிப்பை அழகாகக் கொடுத்து சூப்பரா ஸ்கோர் செய்து விட வேண்டும்!:-)))) வாழ்க ஜிர!
amas32
GiRa ஜிரா 11:08 pm on March 23, 2013 Permalink |
கார்த்திக் ராஜா திறமையுள்ள இசையமைப்பாளர். மாணிக்கம் என்ற முதற்படத்தில் பி.சுசீலாவைப் பயன்படுத்தி முற்றிலும் புதுமையாக ஒலிக்கச் செய்த இசையமைப்பாளர் அவர்.
// பூவா தலையா, காயா பழமா என்று வரிகள் வரும் பாடல்களை #4VariNoteல் எடுக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும்? சைலண்டா யாரும் கவனிக்காத போது எஸ்கேப் ஆகி //
என்னம்மா செய்யச் சொல்றிங்க? பாட்டுல எதாச்சும் நல்லது இருந்தா எடுத்துச் சொல்லாம போறதில்லையே. இல்லாதப்போ இந்த மாதிரி விவரங்களைச் சொல்ல பாடல்களைப் பயன்படுத்திக் கொள்கிறோம் 🙂