ஆசை நூறு வகை, அறிவோ ஏழு வகை
தொலைக்காட்சியில் செம்மொழிப் பாடல் ஓடிக் கொண்டிருந்தது. அதில் பி.சுசீலா சிலவரிகளைப் பாடிக் கொண்டிருந்தார். அந்த வரிகளைக் கேட்கும் போது ஒரு சிந்தனை தோன்றியது. முதலில் அந்த வரிகளைத் தருகிறேன். பிறகு எனது சிந்தனையைச் சொல்கிறேன்.
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரனம் வரையிலும்
உணர்ந்திடும் உடலமைப்பைப் பகுத்துக் கூறும்
பாடல் – கலைஞர் கருணாநிதி
பாடியவர் – இசையரசி பி.சுசீலா
இசை – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்
பாடலின் சுட்டி – http://youtu.be/OSP0dxLymcM
ஆறறிவுள்ள மனிதன் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வோம். ஆனால் அந்த ஆறறிவு என்னென்ன என்று யாருக்காவது தெரியுமா? தொல்காப்பியத்தில் அதற்காக விளக்கம் இருக்கிறது. அந்த விளக்கத்தைப் பார்க்கும் முன் அறிவு என்றால் என்ன என்று பார்க்க வேண்டும்.
பழந்தமிழில் பெயர்கள் பொருளோடுதான் வைக்கப்பட்டன. அறிவதனால் அது அறிவு எனப்பட்டது. எண்ணி இடுவது ஈடு. சுடுவது சூடு என்பது போல அறிவது அறிவு.
ஒரு உயிர் எப்படியெல்லாம் தன்னைச் சுற்றியுள்ளவைகளை அறிகின்றதோ அதை வைத்துதான் அந்த உயிர் எத்தனை அறிவுகள் கொண்டது என்று கருதப்படுகிறது. சரி. தொல்காப்பிய வரிகள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம்.
ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே
நூல் – தொல்காப்பியம்
அதிகாரம் – பொருளதிகாரம்
திணை – மரபியல்
ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
ஓரறிவு உள்ள உயிர்கள் உடம்பால் உலகத்தை அறியும். உடம்பினால் தட்பம், வெட்பம், வன்மை, மென்மை ஆகியவைகளை ஓரறிவினால் அறியும்.
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
ஈரறிவு உள்ள உயிரினங்கள் உடம்பினாலும் நாவினாலும் உலகை அறியும். உடம்பினால் ஓரறிவு உயிரினங்கள் அறிகின்ற அனைத்தையும் அறிந்து நாவினால் பலவிதச் சுவைகளையும் ஈரறிவுள்ள உயிரினங்கள் அறியும்.
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
உடம்போடும் நாவோடும் அறிவதோடு மூக்கினாலும் அறிகின்ற உயிர்களை மூன்றறிவுள்ளவை என்பார்கள். மூக்கினால் நாற்றங்களையும் அந்த உயிரினங்கள் அறிந்துகொள்ள முடியும்.
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
உடம்பு, நாக்கு. மூக்கு ஆகியவைகளோடு கண்களாலும் உணர்வது நான்கறிவு எனப்படும். இந்த நான்காவது அறிவினால் மூன்று அறிவுகளை அறிவதோடு கூடுதலாகக் கண்களால் நிறங்களையும் உருவங்களையும் அறிய முடியும்.
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஐந்து விதமான அறிவுகளை உணர்வதற்கு உடம்பு, வாய், மூக்கு, கண்களோடு செவியும் உதவுகின்றது. நான்கு அறிவுகளோடு கூடுதலாக செவியினால் ஓசைகளை ஐந்தறிவு உயிர்கள் அறியும்.
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
ஐந்து அறிவுகள் மாக்களோடு நிற்க, ஆறறிவினால் மனிதன் மேலும் உணர்ந்தான். அதற்குக் காரணம் அவனுடைய மனம். அந்த மனதினால் உண்டாகும் சிந்திக்கும் திறன் ஆறாவது அறிவாகும்.
இப்போது ஆறு அறிவுகளையும் புரிந்து கொண்டிருப்பீர்கள். ஏழாவது அறிவு என்று ஒன்றையும் பட்டியலிட்டிருக்கிறார் வைரமுத்து. ஆம். எந்திரன் திரைப்படத்துக்காக எழுதிய பாடலில்தான் ஏழாம் அறிவு பற்றிச் சொல்லியிருக்கிறார்.
புதிய மனிதா பூமிக்கு வா
எக்கை வார்த்து சிலிக்கான் சேர்த்து
வயரூட்டி உயிரூட்டி ஹார்ட் டிஸ்க்கில் நினைவூட்டி
அழியாத உடலோடு வடியாத உயிரோடு
ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி
ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி
பாடல் – வைரமுத்து
இசை – ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஏ.ஆர்.ரகுமான், கதிஜா
படம் – எந்திரன்
பாடலின் சுட்டி – http://youtu.be/ZkZ6eNBxZ8E
ஆறு அறிவுகளால் ஒரு இயந்திர மனிதனை உருவாக்கி அந்த எந்திரனுக்கு ஏழாவது அறிவைத் தட்டி எழுப்பும் முயற்சியை “ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி” என்று எழுதியிருக்கிறார்.
உயிருள்ளவைகளுக்கு உள்ளது அதிகபட்சமாக ஆறு அறிவுகள்தான். ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்ட எந்திரத்துக்கு உண்டாவது ஏழாவது அறிவு என்பது ஒரு அறிவார்ந்த கற்பனைதான்.
அன்புடன்,
ஜிரா
133/365
amas32 (@amas32) 10:28 pm on April 13, 2013 Permalink |
மூன்று பாடலையும் நன்றாக சம்பந்தப் படுத்தி எழுதியிருக்கீங்க. கலைஞர் பாடலின் முதல் வரியை கவனித்து, ஆறு அறிவை விளக்க தொல்காப்பியப் பாடலைத் துணைக்கழைத்து, வைரமுத்து எழுதிய ரோபோ பாட்டில் குறிப்பிட்ட ஏழாம் அறிவைப் பற்றியும் கோடிட்டுக் காட்டியது அருமை.
amas32
GiRa ஜிரா 11:19 am on April 14, 2013 Permalink |
நன்றி அம்மா 🙂
Saba-Thambi 6:19 am on April 14, 2013 Permalink |
அருமையிலும் அருமை! மிக்க நன்றி.
“ஓரறிவு முதல் ஆறறிவு உயிரனம் வரையிலும்….” அழகான பாடல்
உண்பது நாழி? உடுப்பது ….. ? இன்னும் இந்த வரிகள் எனது அறிவுக்கு எட்டவில்லை.
விளக்குவீர்களா?
GiRa ஜிரா 11:43 am on April 14, 2013 Permalink |
உண்பது நாழி. உடுப்பது முழம்.
முழம் என்பது நீள அளவை. மானம் காக்க ஒரு முழம் துணி போதும். உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவை முழம் துணியும் நாழிச் சோறும் என்பது கருத்து.
Saba-Thambi 11:10 am on April 15, 2013 Permalink
Thanks very much, now it makes sense.
nizamhm1944 5:32 pm on November 23, 2013 Permalink |
றோபோ Robot, தனக்குள் பதிவு செய்யப்பட்டுள்ள குறிப்பட்ட, வரையறுக்கப்பட்ட தகவல்களை நடைமுறைப்படுத்துவது. சொன்னதைச் சொல்லும் கிளியிலிருந்து சற்று மேம்பட்டு, சொன்னதைச் செய்வது. அதன் அறிவு மனித முளையுள் அடங்கியதே!
அது தன்னிடமுள்ள தகவல்களை ஏதோ காரணத்தால் பிழையாக விளங்கிக் கொண்டால்கூட எதையெதை எல்லாமோ செய்துவிடும் . “கையில் கட்டி அதை வெட்டு“ என்பதை “கையைக் கட்டி அதை வெட்டு“ என விளங்கிக் கொண்டால் அதற்குரிய கயிறும், ஆயுதமும் அதன் கையில் வழங்கப்பட்டு இருந்தால், கையைக் கட்டி கையையே வெட்டிவிடும். ஆறாவதறிவு அனைத்தையும் பகுத்து அறிவது.
றோபோவைப் புகழ நினைத்து இறையறிவைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. ஆறாவதறிவின் வெளிப்பாடுதான் றோபோவும்.
ஆறாவதறிவு இவ்வுலகையும் வென்று மறுவுலகிலும் வாழவைக்கும். புலவர்கள் இன்றும் சந்திரனைப் பெண்ணின முகத்திற்கு ஒப்பிட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.
ஆசை நூறு வகை, அறிவோ ஏழு வகை | truthintruth 5:34 pm on November 23, 2013 Permalink |
[…] ஆசை நூறு வகை, அறிவோ ஏழு வகை. […]