விருந்தினர் பதிவு : சூட்டோடு சூடாக
இன்னும் கோடை காலம் ஆரம்பிக்கக் கூட இல்லை ஆனா இப்பொழுதே வெயில் பத்தித்தான் எல்லாரும் பேசறாங்க. ஆனா எல்லாரும் வெயில் பத்திப் பேசறாங்களான்னா இல்லை. சிலர் வெயில் பத்திப் பேசறாங்க மத்தவங்க வெய்யில் பத்திப் பேசறாங்க. வெயில் சரியா, வெய்யில் சரியா? இலக்கணம் என்ன சொல்லுது? சினிமாப்பாட்டுகள்ல என்ன சொல்றாங்க?
சமீபத்திய பாட்டுகளை எடுத்துகிட்டா ஒரு மாலை இளவெயில் நேரம், மஞ்சள் வெயில் மாலையிலே, வெயிலோடு விளையாடின்னு வெயில் பாட்டுகளாத்தான் வருது. கொஞ்சம் முன்னாடிப் போனா, இளையராஜா உமா ரமணன் காம்போவில் மஞ்சல் வெயில் மாலையிட்ட பூவேன்னு ஒரு அருமையான பாட்டு இருக்கு. என்னடா எல்லாப் பாட்டும் வெயில்ன்னு வருதே, வெய்யில் இல்லையான்னு யோசிச்சுக்கிட்டே அதுக்கும் கொஞ்சம் முன்னாடி போய் கண்ணதாசனைக் கேட்டா சரியா குழப்பிட்டாரு!
’அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழை மேகமே’ பாட்டுல ’மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ணமே’ன்னு எழுதினவரு, ’பால் வண்ணம் பருவம் கண்டு’ பாட்டுல ’மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு கொஞ்சும் வண்ண வஞ்சிச் சிட்டு’ன்னு மாத்திட்டாரு. இதுக்கெல்லாம் முன்னாடி எழுதின ’குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று’ பாட்டுல ’உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது’ன்னு வருது.
இலக்கியத்தில் என்ன சொல்லறாங்க. மீசைக்காரனே ’யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல்’ன்னு சொல்லிட்டான். அதைத் தாண்டிப் போகணுமா என்ன?
கம்பன் வெயில்ன்னு பல இடங்கள்ல எழுதி இருக்காரு. உதாரணமா மாலை நேரம் சூரியன் மறையும் சமயம். இதை எப்படிச் சொல்றாருன்னா “மீன் பொலிதர, வெயில் ஒதுங்க”ன்னு சொல்லறார். பால காண்டத்திலும்கூட ” இழையிடை இள வெயில் எறிக்கும் அவ் வெயில், தழையிடை நிழல் கெடத் தவழும்”ன்னு வரும். இப்படிப் பல இடங்களிலும் வெயில்தான். நோ வெய்யில்.
கம்பன் வெயில்ன்னு சொல்லியாச்சு. சரி, தாடி என்ன சொல்லறார்?
”என்பி லதனை வெயில்போலக் காயுமே யன்பி லதனை யறம்” இங்கயும் வெயில்தான்.
வெண்பான்னு வந்தாச்சுன்னா ரூல் எல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட். என்பி லதனை வெயில்போல : இப்படி இருந்தாத்தான் தளை தட்டாது. என்பி லதனை வெய்யில்போலன்னு எழுதினா காலி. மா முன் நேர் வருமாடா, நாலசைச்சீர் வருமாடான்னு வறுத்து எடுத்துடுவாங்க. தளை தட்டலுக்காகவோ, சந்தத்துக்காகவோ அட்ஜெஸ்ட் பண்ணறது பலரும் செய்யறதுன்னாக்கூட திருக்குறளில் பொதுவா அப்படி பார்க்க முடியாது.
கொஞ்சம் விளையாட்டாப் பார்த்தோமானாக் கூட வெய்யில் = வெய் + இல். வெய் அப்படின்னா சூடு. அப்போ வெய்யில்ன்னு சொன்னோமானா சூடு இல்லைன்னு அர்த்தமா? இல்லை இல் = இடம்ன்னு எடுத்துக்கிட்டு சூடு இருக்கும் இடம்ன்னு அர்த்தமா?ன்னு கேள்வி கேட்டு பேஜார் பண்ணலாம். வெயில்ன்னு சொல்லிட்டோமானா இந்த மாதிரி கன்ப்யூஷன் எல்லாம் கிடையாது.
அதனால இனிமே வெயில்ன்னே சொல்லுவோம் வெய்யில் வேண்டாம். சரியா?
இலவசக் கொத்தனார்
ட்விட்டரில் ‘வாத்தி’ என்று செல்லமாக விளிக்கப்படும் இலவசக் கொத்தனார் கோட்டும் டையும் அணிந்த நவீன சீத்தலைச் சாத்தனார். இணையத்தில் எழுத்துப் பிழைகளுக்கே முகம் சுளிக்கிற, இலக்கணப் பிழைகளைத் திருத்த முற்படுகிற மைனாரிட்டி அப்பாவிகளில் ஒருவர். இன்னொருபக்கம், சிலேடை, வெண்பா, வார்த்தை விளையாட்டு, ’எல்லா வார்த்தைகளும் தமிழில் இருந்து சென்றவைதான்’ என்கிற ரேஞ்சுக்கு நகைச்சுவைப் பதிவுகள் எனக் கலவையான ரசனை கொண்டவர். இவரது சமீபத்திய நூலான ‘ஜாலியா தமிழ் இலக்கணம்’ சென்னை புத்தகக் கண்காட்சியில் செம ஹிட்!
இலவசக் கொத்தனாரின் வலைப்பதிவு: http://elavasam.blogspot.in/
GiRa ஜிரா 10:49 pm on April 8, 2013 Permalink |
கோடையிடி கோவிந்தனா குமுறியிருக்கிங்க. இப்பிடி அடிக்கடி வந்து பதிவு போட்டா நல்லாருக்கும்ல 🙂
anonymous 5:52 am on April 13, 2013 Permalink |
வெயில் – வெய்யில் = இரண்டுமே நல்ல தமிழ்ச் சொற்கள் தான்;
எழுத்துக்கள்/எழுத்துகள், வெய்யில்/வெயில்…
நல்ல சொற்களையெல்லாம் “மிகைத் திருத்தம்” செய்து செய்து..
இணையத்தில் குழாம் கொண்டு பரவிப் பரவி..
வளமான இரட்டைத் தமிழ்ச் சொற்களையெல்லாம், ஒற்றைப் படையாக மாற்றும் தட்டையான போக்கு
= தமிழுக்குப் பெரும் கேடாய்த் தான் முடியும்:((( முருகா!
எத்தனையோ முறை இறைஞ்சிக் கேட்டுவிட்டேன்; இனி, முருகனருள்!
——-
1)
திளைத்தலே அனுபவித்தல் செறிதலே நிறை தன் முப்பேர்
இளைத்தலே இளைப்பு இரங்கல் என்றூழே இரவி **” வெய்யில் “**
இது சூடாமணி நிகண்டு;
நிகண்டு, தமிழ்ச் சொல்லில் தப்பு பண்ணாது;
2)
வெய் என்பதே வேர்ச்சொல்
வெய்ய என்றும் வழங்கும்!
“வெய்ய” கதிரோன் விளக்காக -ன்னு முதலாழ்வார் பாசுரம்! (அன்பே தகளியா)
3)
கொய்த வாள் முடி திரண்ட குப்பைகள் ஏறி, **” வெய்யில் “**
பெய்த வான் ஒளியோடு ஆய்ந்த பெருந் தயை பிலிற்றும் செங்கோல்
இது வீரமா முனிவரின் தேம்பாவணி
4)
நிழல் **” வெய்யில் “** சிறுமை பெருமை
குறுமை நெடுமையும் ஆய்
நம்மாழ்வார் திருவாய்மொழி (ஆழ்வார் அருளிச் செயல்)
5)
புயலெனச் சீறி வானில் பொலிந்தது மாடு; **” வெய்யில் “**
கயலென மின்னிற் றக்கால், கையினில் உமறு வாளே;
உமறுப் புலவர்; சீறாப் புராணம்
6)
அண்மைக் காலத்திலும், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை…
ஒளவையை முருகன் மடக்கிய பாட்டிலே…
வேனிற் பருவத்திலே – ஒருநாள்
**” வெய்யில் “** வேளையிலே
ஞானத் தமிழ்க்கடலென் – றிந்த
நாடு புகழும்ஒளவை.
தூரம் மிகநடந்து – களைத்துச்
சோர்ந்து, வரும்வழியின்
ஓரத்தில் ஓர்நாவல் – நிழலில்
ஒதுங்கிச் சற்றுநின்றாள்
——-
மேற்கண்ட பாடல்களில், எங்கேயுமே, எகனை மொகனைக்காக “வெய்யில்” -ன்னு போடலை; இயல்பாவே ஆண்டு வந்திருக்கு;
மேலும் தமிழ்ச் சொற் களஞ்சியமான நிகண்டே, “வெய்யில்” -ன்னு காட்டுது;
இதுக்கு மேலச் சொல்ல ஒன்னுமில்லை!
anonymous 6:19 am on April 13, 2013 Permalink |
மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்..
நம்ம காலத்தவர் தான்; 80 களில் தான் செத்துப் போனாரு;
Media/ Publication செல்வாக்கு அற்றவர்; அதனால் பொதுமக்கள் அதிகம் பேர் அறிய வாய்ப்பில்லை;
ஆனா, அத்துணை தமிழ் அறிஞர்களும், அன்னாரின் தன்னலமில்லாத் தமிழ்ப் பணியை அறிவர்;
அவரோட “வேர்ச்சொல் ஆராய்ச்சிக் கட்டுரைகள்” நூலில் இருந்து, இதோ, சில பகுதிகள்:
—
வெள்-வெய்-வெய்ய = வெப்பமான
“வெய்ய கதிரோன் விளக்காக” (ஆழ்வார் பாசுரம் இயற். 1:1).
வெய்-வெய்யன் = 1. தீத்தெய்வம். 2, கதிரவன். 3. கொடியவன்.
“வெய்யவன் படையை விட்டான்” (கம்ப ராமாயணம் அதிகாய. 203).
“வெய்யோன் ஒளி” (கம்பரா. கங்கை.1)
வெய்-வெய்யில் = வெயில்.
“நிழல் வெய்யில் சிறுமை பெருமை” திவ். (திருவாய். 6 : 3 : 10).
வெய்யில்-வெயில் = 1. கதிரவனின் வெப்பவொளி
—
என்பில் அதனை “வெயில்” போலக் காயுமே – என்று ஐயன் வள்ளுவன் சொல்வதும் நற்றமிழ்ச் சொல்லே!
சூடாமணி நிகண்டும், ஆழ்வார் பாசுரமும் “வெய்யில்” என்று காட்டுவதும் நற்றமிழ்ச் சொல்லே!
இவை இரட்டைச் சொற் பயன்பாட்டால் வந்த ஒருபொருட் பன்மொழிகள்!
இதில் ஒரு வழக்கை மட்டும், “தவறு” -ன்னு மிகைத் திருத்தம் செய்து
அதை இணையத்திலும் “பேஷ் பேஷ்” என்று பரப்புவது, தமிழுக்கு நல்லதல்ல!:((((
————
தேவநேயப் பாவாணர், “நற்றமிழ்/ தனித்தமிழ்” என்பதால், அவரும் “எள்ளல்” கொடுமைக்கு உள்ளாகலாம்;
“எல்லா வார்த்தைகளும் தமிழில் இருந்து சென்றவைதான்” -ன்னு “நகைச்சுவை”; நகைச்சு வைப்போமே; டுமீல் & டுமீலன்ஸ் தானே?:(
கூல வாணிகன் “சீத்தலைச் சாத்தனார்” ஆன்மா “சாந்தி” அடைவதாக! முருகா!
Kannabiran Ravi Shankar (KRS) 1:00 am on April 14, 2013 Permalink
இதே போல் பெயல்/ பெய்யல்
*செம் புலப் “பெயல்” நீர் = (குறுந்தொகை)
*”பெய்யல்” முழங்கத் தளிர்க்கும் இலை = (நான் மணிக் கடிகை)
மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள்; மாலிருள்
நெய்யால் தளிர்க்கும் நிமிர்சுடர் – “பெய்யல்”
முழங்கத் தளிர்க்குங் குருகிலை; நட்டார்
வழங்கத் தளிர்க்குமாம் மேல்
=இதுவும் வெண்பா தான்;
————-
இப்படி “இரட்டைப் பயன்பாட்டுச்” சொற்கள் தமிழில் இருப்பதற்கு காரணம் இருக்கு;
வெம்மை, வெய் = இரண்டுமே வெப்பம் குறிக்கும் சொற்கள்
ஒரே பொருள்-பன் மொழி
a) “வெம்மை” என்னும் சொல்லா எடுத்துக்கிட்டா…
வெம்மை + இல்
= வெம் + இல் (ஈறு போதல்)
= வெய் + இல் (முன் நின்ற மெய் திரிதல்)
= வெயில்
b) “வெய்” என்னும் சொல்லாவே எடுத்துக்கிட்டா… (வெய்யோன்)
வெய் + இல்
= வெய் + ய் + இல் (தன்னொற்று இரட்டல்)
= வெய்யில்
(சிறு+ஊர் = சிறூர் -ன்னு ஆகாமல், சிற்றூர் -ன்னு ஒற்று இரட்டல்)
இதனால் வந்தவையே, இரட்டைப் பயன்பாட்டுச் சொற்கள்;
இவற்றை, இணையத்தில் எள்ளி எள்ளி…
தமிழை விட்டு விரட்டாது இருப்பது நம் கடமை;
வீட்டுக்கு ஒட்டடை அடிப்பதில் தவறில்லை; ஆனா ஒட்டடை மட்டுமே அடிக்கணும்;
ஒட்டடை அடிக்கிறேன் பேர்வழி-ன்னு, தஞ்சைப் பெரிய கோயில் மேற்கூரை ஓவியங்களை அழிச்சாப் போல அழிச்சீறக் கூடாது;
———
Kannabiran Ravi Shankar (KRS) 1:52 am on April 14, 2013 Permalink
தமிழ் இலக்கணம் = சுமைக்கு அல்ல; சுவைக்கு;
=விதிகளைக் காட்டி, விரட்ட அல்ல!
=விதிகளைக் காட்டி, விளைக்க! “தமிழ் அன்பை” விளைக்க;
மாந்தர் வாழ்க்கையில், இலக்கணப் பிழைகள், இயல்பே!
தமிழ் இலக்கணத்தை விடத், “தமிழ் உணர்வு/ தமிழ் அன்பு” முக்கியம்; ஈழமே சாட்சி;
அறியாது பிழை செய்யும் அன்பர்களை, “மொதல்ல டுமீலை ஒழுங்கா எழுதுங்கடா; அப்பறம் டுமீல் கோஷம் போடப் போவலாம்”
-ன்னு எள்ளி எள்ளி, அவங்க “தமிழ் உணர்வையே” கூசிப் போகச் செய்தல்; “டுமீல் & டுமீலன்ஸ்”:((
-“எல்லா வார்த்தைகளும் தமிழில் இருந்து சென்றவை தான்”; Tablet->தேய்ப்பு இலட்டு->தேப்பி லட்டு
-ன்னு இராம.கி ஐயா போன்ற தமிழார்வலர்களை எள்ளி எள்ளி இன்புற்று இருப்பதுவே:((
——–
இப்பிடி, ஊரையெல்லாம் திருத்தும் போது, தப்பேதும் இல்லை;
ஆனா, ஊர்ப் பெரியவா பேச்சுக்கு = மாணவன் ஒரு திருத்தம் சொல்லிட்டா???
=EGO
=தமிழ் பின்னால் போய் விடுகிறது; EGO முன்னால் வந்து விடுகிறது
ஆதாரம்/ தரவு காட்டுறியா? எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரமா? தொல்காப்பியனுக்குத் தொம்பியா?
=இப்படியான தனி நபர் xxxxx
சிலர், வெளிப்படையா வசவுறாங்க;
சிலர், நண்பர்கள் ஏத்திவிட்டு, சமயம் வரும் போது #fb போட்டு தீர்த்துக்கறாங்க:)
ஆனா, “வசவு பேசலையே, தரவு தானே காட்டுறான்?”-ன்னு மட்டும் உணர்வதே இல்லை;
அதுவும், தமிழுக்குத் தானே காட்டுறான்? -ன்னு மட்டும் உணர்வதேயில்லை;
வெறுமனே தரவு தருவதையே, மாட்டை எத்துதல் போல் எடுத்துக்கிட்டா என்ன செய்ய முடியும்?
தாய்த் தமிழை “டுமீல்” -ன்னு பேசுறவங்க எல்லாம் ராசி; ஆனா, தமிழ்ச் சொல்லு போயீறக் கூடாதே -ன்னு தரவை முன் வைத்தலே பாவம்;
உன்னையே நினைத்திருப்பான்; உண்மையைத் தான் உரைப்பான்
ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே
அவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத் தங்கமே!
= இனி எங்குமே வராமல்… கந்தன் கருணையில் ஒளிந்து/ ஒழிந்து போதலே நலம்!
anonymous 6:43 am on April 13, 2013 Permalink |
//வெண்பான்னு வந்தாச்சுன்னா ரூல் எல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்//
நிகண்டுக்கும், தொல்காப்பியத்துக்கும் same logic applies அல்லவா, வெண்பாச் சக்கரவர்த்தியே?
———
//வெய் + இல்
சூடு இல்லைன்னு அர்த்தமா?//
இப்பிடி “வார்த்தா விளையாட்டு” -ங்கிற பேருலயே, நல்ல தமிழ்ச் சொற்கள் எல்லாம் போயீரும் போல இருக்கே:((
ஒங்க வழியிலேயே வரேன்…
கோயில் = கோ + இல்
கோ = இறைவன்; இல் = இல்லை;
“கடவுள் இல்லை” -ன்னு சொல்ல வந்தவையா கோயில்கள்??????
//வெய் + இல் = சூடு + இல்லைன்னு பேஜார் பண்ணலாம்//
வாழ்க “பேஜார்”!
முருகா, என்னை “இல்லாமல்” செய்து விடடா; எதற்கு ஊர்ப் பெரிய மனுஷாள் பகை?
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே;
———-
திரு. சொக்கனைப் போல, மெல்ல/ மெள்ள -ன்னு வேறுபாடு காட்டி விளக்குதல் = நல் போக்கு!
“மெள்ள என்பதே தவறு” -ன்னு ஒரு தமிழ் வழக்காறையே விரட்டி விடுதல் = அல் போக்கு!
சொக்கனின் கெழுதகை நண்பரான தாங்கள், அவரின் இந்த “மென்” போக்கையும் கைக்கொண்டால், உம்மிடம் கடப்பாடு உடையவனாவேன்;
இலவசம் ஐயா,
என்னை அருள் கூர்ந்து மன்னித்து விடுங்கள்; பொதுவிலேயே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்;
ஆனால், தமிழ் மொழியியல் வழக்காறு; அதை “மிகைத் திருத்தம்” செய்யாது, எஞ்ச விடுக; சிறியேனை மன்னித்து அருள்க!
தமிழுக்காக, அடியேன் சொன்ன மொழிகளை என்றேனும் கருத்தில் கொள்வீர் என்ற வேண்டுதலுடன் – நன்றியும், “வாழ்த்துகளும்”
Subramaniam Jaganathan 7:48 pm on June 18, 2014 Permalink |
புயலெனச் சீறி வானில் பொலிந்தது மாடு; வெய்யில்
கயலென மின்னிற் றக்கால் கையினில் உமறு வாளே;
அயல்வரும் மாட்டின் மீதில் அவர்விழி பட்ட போதும்
செயல்படும் படையால் தீமை சிறிதும் ஏற்படவில்லையே!
இது சீறாப்புராணமல்ல; புதுவைக் கவிஞர் துரை.மாலிறையன் இயற்றிய ‘இறை பேரொளி நபிகள் நாயகம் அருட்காவியம்’ என்ற நூலில் உள்ள பாடலிது.
Kannabiran Ravi Shankar (KRS) 7:27 am on April 13, 2013 Permalink |
என் மனமே, மாற மாட்டீயா?
“சோறு”-ங்கிற தமிழ்ச் சொல் ஒழிந்து போய், “சாதம்/ ஸாதம்” -ன்னே ஆனால் தான் என்ன?
ஒனக்கு என்ன வந்துச்சி? ஒன் காசா, பணமா?
எதுக்கு மனசு கெடந்து இப்பிடி அடிச்சிக்குது?
நீ சொல்லியெல்லாம்….. மறையப் போற தமிழ்ச் சொல்லு, நிக்கப் போறதில்ல!
அதெல்லாம், ஊர்ப் பெரிய மனுசங்க தமிழை வாழ வச்சிப்பாங்க;
மொதல்ல, ஒன் வாழ்க்கையப் பாரு; கிழிஞ்சி தொங்குது; அப்பறமாத் தமிழைத் தோய்ச்சித் தொங்கப் போட்டுக்கலாம்;
இந்த முகாமில் கெடைக்குற கொஞ்சூண்டு இணையத்தில், இதெல்லாம் ஒனக்குத் தேவையா?
ஒளிந்து வாழ்! கந்தன் அருளில் ஒளிந்து-ஒழிந்து விடுவதே நல்லது;
ஐயா முருகா,
இனி, இங்கு, என் வாயே திறவாமல் இருத்தப்பா; பகையின்றி இருத்தப்பா;
வாயே திறவாத மெளனத்து இருந்து – வேலா உன் மலர் அடிக்குத்
தீயே நிகர்த்தொளி வீசும் தமிழ்க் கவி செய்குவனே!
இன்னருளால் இனி எனக்கு ஒரு பாரம் ஏற்றாமல் – மால் எந்தை
எம்பெருமான் அடைக்கலங் கொள் என்னை நீயே!