அன்னலட்சுமி
சமீபத்தில் வெளிவந்த Lunchbox திரைப்படம் எனக்கு மீண்டும் ‘டப்பாவாலாக்களை’ நினைவுபடுத்தியது. ஒரு டப்பாவாலா செய்யும் பிழைதான் படத்தின் முக்கியமான முடிச்சு.
டப்பாவாலா என்போர் மும்பையில் அலுவலங்களில் பணி புரிவோரின் வீடுகளில் சமைக்கப்பட்ட உணவைப் பெற்று அவரவர்க்கு உரிய நேரத்தில் சேர்க்கும் பணியைச் செய்யும் தொழிலாளர்கள் ஆவர். பிரமிக்க வைக்கும் அசுர உழைப்பு. இங்கிலாந்து இளவரசர் வந்து பார்த்தது, டாக்குமெண்டரி, சிக்ஸ் சிக்மா என்று நிறைய வெளிச்சம். சிக்ஸ் சிக்மா வாங்கவேயில்லையாம். ஆனால் அதையெல்லாம் தாண்டி ஒரு புனிதமான சேவை.
அந்த நாளில் சென்னையில் அலுவலகங்களுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, மிச்சமிருப்பதை தொழிலாளர்களுக்கு கொடுக்கும் சாப்பாடு கூடைக்காரர்கள் உண்டு. வட சென்னையில் மதிய நேரங்களில் வழக்கமான நிகழ்வு. Unorganised தொழிலாளிகளுக்கு இந்த கூடைக்காரர்தான் டப்பாவாலா, அன்னம் தரும் தெய்வம் எல்லாம். (இப்போது இவர்களெல்லாம் அம்மா உணவகம் போகிறார்கள் என்று நினைக்கிறேன்)
பாபு திரைப்படத்தில் வாலி இதை வரதப்பா வரதப்பா என்ற பாடலில் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் டி எம் எஸ் & குழுவினர்) பதிவு செய்கிறார். கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வரும் கூடைக்காரியை அத்தனை பேர்க்கும் படியளக்கும் அன்னலட்சுமியாக வர்ணிக்கிறார். பசி மயக்கத்தில் இருக்கும் ஒருவனின் contextual வர்ணனை
https://www.youtube.com/watch?v=9oCR6E9LRgY
சாதம் போல சிரிக்கிறா – மீன்
கொழம்பு போல மணக்குறா
ரகசியமா ஏதுஞ் சொன்னா
ரசத்தப் போல கொதிக்கிறா
தொடர்ந்து ஒரு சுவாரசியமான செய்தி சொல்கிறார்.
குலாம் காதர் புலாவிலே கறி கெடக்குது அது
அனுமந்தராவ் அவியலிலே கலந்திருக்குது
மேரியம்மா கேரியரில் எறா இருக்குது அது
பத்மநாப ஐயர் வீட்டு குழம்பில் மிதக்குது
சமையல் எல்லாம் கலக்குது.அது
சமத்துவத்தை வளக்குது .
சாதி சமய பேதமெல்லாம்
சோத்தைக்கண்டா பறக்குது
இப்போது இந்த கூடைக்காரர்கள் உண்டா என்று தெரியவில்லை. ஆனால் தெருவோரங்களில் சாப்பாட்டு கடைகள் மதிய வேளைகளில் பர பரவென்று இயங்குவதைப் பார்க்கலாம். பலரும் எல்லா பேதங்களையும் மறந்து கூடும் இடம் சாப்பிடும் இடமாகத்தான் இருக்கும்.
மோகனகிருஷ்ணன்
304/365
amas32 9:30 pm on October 1, 2013 Permalink |
ஒரு 15, 20 வருடங்கள் முன்பு இருந்த பசிப்பிணி இப்போ தமிழ்நாட்டில் இல்லை என்றே சொல்ல வேண்டும். பள்ளியில் மதிய உணவு, கோவிலில் அன்னதானம், மற்றும் பல செல்வந்தர்கள் ஆங்காங்கே வழங்கும் உணவு பாக்கெட்டுகள் முதலியவை முன்பு ஏழைகளிடம் இருந்த உணவுப் பிரச்சினையை குறைத்துள்ளது. இப்போ பிச்சை எடுப்பவர்கள் பணம் தான் கேட்கிறார்கள். (டாஸ்மாக் போக) உணவு கொடுத்தேன் ஒரு நாள், முகத்தில் வீசியடித்தார் வாசலில் வந்து யாசகம் கேட்ட ஒருவர். உண்மை நிகழ்வு இது.
அம்மா உணவகம், இன்னும் ஒரு படி மேலே போய் தினக் கூலி செய்பவர்களுக்கும் கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கும் வரப்பிராசதமாக அமைந்துள்ளது. ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள மரத்தடியில் உட்கார்ந்து சாப்பாட்டுக் கூடை அம்மா மிச்ச உணவை பலருக்குப் பிரித்துக் கொடுப்பதை நானும் பார்த்திருக்கிறேன். அவள் அந்த ஏழைகளுக்கு கண் கண்ட அன்னலட்சுமி தான். பசிக் கொடுமையை மட்டும் தாங்கவே முடியாது.
ஷிர்டி பாபா கோவிலில் (ஷிர்டி) எல்லா உணவும் கலந்து பிரசாதமாக வழங்கப் படும். அதன் சுவையே அலாதி. அது மாதிரி பசி வேளையில் எந்த மாதிரி கூட்டு சோறாக இருந்தாலும் அது தேவாம்ரிதமாக தான் ருசிக்கும் 🙂
amas32
Uma Chelvan 8:38 am on October 2, 2013 Permalink |
மதுரை கோரி பாளையத்தில் அம்மா மெஸ் என்று ஒன்று உள்ளது ( No No Not that AMMA !!!) அங்கே அயிரை மீன் குழம்பு கிடைக்கும் என்று கேள்விப்பட்டேன். நான் இதுவரை அங்கு சாப்பிடது இல்லை. ஆனால் மதுரைக்கு செல்பவர்கள் மிஸ் பண்ண வேண்டாம். arthritis problem இருபவர்கள் oily மீன் சாபிட்டால் நிவாரணம் கிடைக்கும். நம் பக்கத்தில் கிடைக்கும் oily மீன்கள் அயிரை, கெளுத்தி, வஞ்சிரம் மீன்..
GiRa ஜிரா 11:06 am on October 2, 2013 Permalink |
எத்தன லெச்சுமி பாருங்கடா… இவ என்ன லெச்சுமி கூறுங்கடா….
அத்தன பேர்க்கும் படியளக்கும் அன்னலெச்சுமி ஆகுமடா!
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்னு சொல்றது எவ்வளவு உண்மை. முருகா! எல்லாரையும் காப்பாத்து!
rajinirams 5:09 pm on October 2, 2013 Permalink |
டப்பாவாலாக்களின் பணி அதிசயிக்க தக்கது.70களில் வெளியான பாபுவின் காட்சியமைப்பு ரிக்ஷா தொழிலாளர்கள் சாப்பாட்டு கூடை கொண்டு வரும் பெண்ணை பார்த்து பாடும் வகையில் அமைந்திருக்கும்.இதே போன்று 20ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் உழைப்பாளி படத்திற்கு ராஜா இசையில் வாலி எழுதிய வரிகள்-தலை மேலே சாப்பாடு கொண்டாறும் கப்பக்கிழங்கே-பல வீட்டு பலகாரம் ஒண்ணான கூட்டாஞ்சோறு தான்.பல சாதி இது போல ஒண்ணானா சண்டை வருமா என்று உழைப்பாளர்களை சமத்துவம் பேச வைக்கிறார்.கேரியரில் மறக்க முடியாத “கேரியர்”பாடல்கள்.நல்ல பதிவு.நன்றி.
kamala chandramani 7:54 pm on October 2, 2013 Permalink |
பெங்களூரில் தள்ளுவண்டி உணவகங்கள் மதிய நேரத்தில் பசித்தவர்களுக்கு உணவளிக்கின்றன. ருசித்து சாப்பிடுகிற தொழிலாளிகளைப் பார்க்கும் போது ,’பாரகம் அடங்கலும் பசிப்பிணி நீங்குக’ என்ற வாசகம் நினைவுக்கு வரும். காசுக்கே ஆனாலும் உணவளிப்பவர்கள் அன்னலட்சுமிகள்தான்.