சென்னை செந்தமிழ்!
என்னுடன் லிப்டில் வந்த சிலர் ஒரு குறிப்பிட்ட சமூக / வட்டார மொழியை imitate செய்துகொண்டிருந்தனர். இவர் இப்படி பேசுவார் நமக்கு புரியவே புரியாது என்று யார் தலையையோ உருட்டிக் கொண்டிருந்தார்கள். வழக்கமாக நடக்கும் விஷயம்தான் – திரைப்படங்களில், கதைகளில், பதிவுகளில், சமூக வலைத்தளங்களில் தினமும் பார்க்கும் விஷயம்தான். ஆனால் வட்டார வழக்கு கேலிக்குரியதா ? இடம் சார்ந்து அல்லது சமூகம் சார்ந்து அல்லது தொழில் சார்ந்து வழங்கும் வட்டார வழக்குகள் ஒரு மொழியை சுவாரஸ்யமாக்குகிறது என்பது என் கருத்து.
லிப்டில் பேசியவர்கள் எந்த வட்டாரம் என்று எனக்கு தெரியாவில்லை. ஆனால் அவர்களின் உரையாடலில் ‘மச்சான், பந்தா, பீட்டர், ஃபிலிம் காட்டறது’ போன்ற வார்த்தைகளை மிகவும் சரளமாக தெளித்து மகிழ்ந்தனர். அட இந்த வார்த்தைகளும் மெட்ராஸ் பாஷை என்ற ஒரு வட்டார மொழியின் தாக்கம்தானே? இவர்கள் கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறிந்தார்களா?
சென்னை மாநகரில் பேசப்பட்டு வந்த பிற மொழிச் சொற்கள் கலந்த தமிழ். சோ வின் Madras by night நாடகம் பார்த்ததிலிருந்தே எனக்கு இந்த மெட்ராஸ் பாஷை மேல் மிகுந்த ஆர்வம் இருந்தது, அந்த நாளில் ஜாம்பஜார் ஜக்கு என்ற கற்பனை பாத்திரம் ‘அசால்ட்டா’ பேசும் தமிழை ரசித்தேன். சோ,தேங்காய், லூஸ் மோகன் ஜாலியாக பேசிய மொழி. திரைப்படங்களில் கமல் அதை சிறப்பாக நகைச்சுவை முலாம் பூசி மெருகேற்றினார். இந்த மெட்ராஸ் பாஷைக்கு இணையத்தில் நிறைய crash course பதிவுகள் உண்டு. சில அருஞ்சொற்பொருள் பதிவுகளும் உண்டு.
அறுபதுகளின் இறுதியில் வந்த பொம்மலாட்டம் படத்தில் வாலி இந்த மெட்ராஸ் பாஷையில் எழுதிய ஒரு பாடல் பிரபலமானது (இசை வி.குமார் பாடியவர் மனோரமா).
https://www.youtube.com/watch?v=x5qzl4mKCgE
வா வாத்யாரே வூட்டாண்ட
நீ வராங்காட்டி நா வுடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான்
சைதாபேட்டை கொக்கு
வூட்டாண்ட என்றால் என்ன? வீடு தான் வூடு. அண்டை வீடு என்றால் பக்கத்து வீடு So இதை மாற்றி ‘வீடு அண்டை’ என்ற construction வீட்டுக்கு அருகில் என்ற பொருள் தருகிறதோ ?
வாராவதிலே நின்னுக்கினிருந்தேன்
அமராவதியாட்டம்
சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே
அம்பிகாபதியாட்டம்
வாராவதி ? வார் என்றால் நீர். போக்குவரத்துக்காக ஆற்றின் இரு கரைகளை இணைத்துக் கட்டப்படும் பாலம் தான் வாராவதி. ஆங்கிலேயர் ஒருவர் பெயரால் சென்னையில் ஆமில்ட்டன் வாராவதி எனும் பாலம் ஒன்றுண்டு
லவ்வாப் பாத்து சோக்காப் பேசி
டேக்காக் கொடுத்தே பின்னாலே
சர்தான் வாம்மா கண்ணு படா
பேஜாராச்சு நின்னு
காதலாகி கசிந்துருகி தான் லவ்வாப் பாத்து. ஆனால் சோக்காப் பேசி? ஒருவேளை ஜோக் ஆ பேசி சிரிக்க வைத்தான் என்று சொல்கிறாரா ? இருக்கலாம். அடுத்து இந்த பேஜார் என்ற வார்த்தை. நாம் எல்லாரும் உபயோகிக்கும் சொல். ஆங்கிலேயர்கள் dont badger me (என்னை நச்சரிக்காதே) என்று சொன்ன அந்த badgerஐ, கொஞ்சம் டிங்கரிங் செய்து பட்டி பார்த்து பேஜார் ஆக்கிவிட்டார்கள்.
நைனா உன் நெனப்பாலே நான் நாஸ்தா பண்ணி நாளாச்சு
மச்சான் ஒன் மூஞ்சப் பார்த்தேன்
சால்னா நெனப்பு வந்தாச்சு
ஆயாக்கடை இடியாப்பம் நான்
பாயாக்கறியும் நீயாச்சு
வா வா மச்சான் ஒண்ணா சேந்து
வாராவதிக்கே போகலாம்
நீ காற்று நான் மரம் என்றும் சொல்லலாம். குயிலாக நீ பாட்டாக நான் என்று சொல்லலாம் நான் ஆயாக்கடை இடியாப்பம் நீ பாயாக்கறி என்றும் சொல்லலாம். அதே அர்த்தம் தானே? குறிலாக நான் இருக்க, நெடிலாக நீ வளர்க்க ,சென்னை தமிழ் சங்க தமிழ் ஆனதடி என்று அறிவுமதி சொல்வது சரிதானே?
ஜாலியான மொழி. Kerosene என்பதை ‘கிருஷ்ணா’யில் என்றும் Palm Oil என்பதை ‘பாமா’யில் என்றும் புராண வாசனையுடன் சொன்ன அருமையான மொழி. இதை மறக்க முடியுமா?
மோகனகிருஷ்ணன்
292/365
Chandsethu 1:01 pm on September 19, 2013 Permalink |
Lovely :-))
amas32 1:06 pm on September 19, 2013 Permalink |
என் ஊரைப் பற்றிய பதிவு! பேஷ் பேஷ்! 🙂 டக்கரா இருக்கு! – ரெண்டும் ஒரே பொருள் தான் 🙂
//வா வாத்யாரே வூட்டாண்ட
நீ வராங்காட்டி நா வுடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான்
சைதாபேட்டை கொக்கு//
இதுக்கு equivalent
அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா
அவ ஆத்துக்காரர் சொல்லுறதைக் கேட்டேளா?
அடிச்சாலும் புடிச்சாலும் ஒண்ணா சேந்துக்கறா..
ஆனா அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு
புடவையா வாங்கிக்கறா, பட்டுப் புடவையா வாங்கிக்கறா…
வட்டார வழக்கில் பேசும் மொழி, ஒரு சமூகத்தினரால் பேசும் மொழி, இவற்றை ரசிக்க வேண்டும், ஆராயக் கூடாது :-))
amas32
என். சொக்கன் 9:20 pm on September 19, 2013 Permalink |
isn’t it funny both these are written by Valee? 😉
rajinirams 11:16 am on September 20, 2013 Permalink
செந்தமிழ் சென்னை தமிழ் என்று மட்டுமல்ல பல இந்திய மொழிகளையும் ஒரு(தமிழ்) மொழி பாட்டில் கொண்டு வந்த “ஒரே”கவிஞர் வாலி அவர்கள்-இந்திய நாடு என் வீடு-பாரத விலாஸ்:-)) அவறை பற்றிய சில விஷயங்களை சமர்ப்பிக்காதலால் இந்திய அரசின் சிறந்த கவிஞர் விருது அவருக்கு(அந்த பாடலுக்கு) கிடைக்கவில்லை.
rajinirams 3:54 pm on September 19, 2013 Permalink |
“ஷோக்கா கீதுபா”என்று சொல்லவைக்கும் நகைச்சுவையான பதிவு.”வா மச்சான் வா,வாடி என் கப்ப கிழங்கே”என்று கொச்சை தமிழில் பாடல்கள் வந்தாலும் சென்னை தமிழை சிறப்பிக்கும் (!) பாடல் இன்றளவில் வாலியின் இந்த பாடல் தான்.
க்ருஷ்ணகுமார் 8:56 pm on September 19, 2013 Permalink |
\\\ சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே
அமராவதியாட்டம் \\\
தப்பு….தப்பு….தப்பு
சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே அம்பிகாபதியாட்டம்
mokrish 9:20 pm on September 19, 2013 Permalink |
Will correct it. Thanks
தேவா.. 12:12 pm on September 20, 2013 Permalink |
எனக்கு என் காலத்தில் வந்த வட்டார மொழிப் பாடல்கள் மேல் தனி ப்ரியம். அதில் ஒன்று .
மச்சி மன்னாரு (ராஜா சந்தோஷமாக, சென்னை தமிழில் பாடுவார்). காலத்துக்கு ஏற்றவாறு ஜாம்பாஜார், ஜக்கு எல்லாம் மாறியிருக்கும். உற்று நோக்கினால், பல ஆங்கில வார்த்தைகள், ஆங்கிலமாக தெரியாமல் தமிழாக மாறிருக்கும். சென்னை தமிழ் , பல கூடல் சங்கமம்.