தெய்வம் உள்ள வீடு
- படம்: சரஸ்வதி சபதம்
- பாடல்: தெய்வம் இருப்பது
- எழுதியவர்: கண்ணதாசன்
- இசை: கே. வி. மகாதேவன்
- பாடியவர்: டி. எம். சௌந்தர்ராஜன்
- Link: http://www.youtube.com/watch?v=-aJ5cuerkpg
தெய்வம் இருப்பது எங்கே?
தெளிந்த நினைவும், திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே!
எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு!
இசையில், கலையில், கவியில், மழலை மொழியில் இறைவன் உண்டு,
இவைதான் தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு!
மேற்கண்ட வரிகளை இன்னொருமுறை படித்துப் பாருங்கள், இது ஆத்திகப் பாட்டா, அல்லது நாத்திகப் பாட்டா?
எழுதியவர் கண்ணதாசன் எனும்போது, இந்தச் சந்தேகம் இன்னும் வேறுவிதமாக எழும். இது அவர் நாத்திகராக இருந்தபோது எழுதியதா, அல்லது ஆத்திகராக மாறியபின் எழுதியதா?
உண்மையில், தெய்வம் கோயிலில் இருக்கிறதா, அல்லது வேறு எங்குமா? ஆத்திகர்கள் என்னதான் சொல்கிறார்கள்?
’தெய்வம் கோயிலில் இல்லை’ என்று கண்ணதாசன் சொல்லவில்லை. ஆனால் வேறு எங்கெல்லாம் இருக்கிறது என்று தெளிவாகச் சொல்கிறார்: தெளிந்த நினைவு, திறந்த நெஞ்சு (Open Mind), நிறைந்த நெஞ்சு, எண், எழுத்து, இசை, கலைகள், கவிதை, ஏன் மழலை மொழியில்கூட இறைவன் இருக்கிறான்!
கடவுளை வெளியே தேடலாகாது என்பது நிச்சயம் நாத்திகக் கருத்தல்ல. அநேகமாகத் தமிழின் பக்தி இலக்கியங்கள் அனைத்தும் திரும்பத் திரும்ப இதைப் பலவிதமாக வலியுறுத்தியுள்ளன.
உதாரணமாக, சிவனின் அடி, முடி தேடி பிரம்மனும் விஷ்ணுவும் திணறிய கதை நமக்குத் தெரியும். அதைக் குறிப்பிட்டுத் திருநாவுக்கரசர் தரும் ட்விஸ்டைப் பாருங்கள்:
’நாடி நாரணன், நான்முகன் என்று இவர்
தேடியும் திரிந்தும் காண வல்லரோ?
மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து
ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே!’
பிரம்மனே, விஷ்ணுவே, நீங்கள் அங்கேயும் இங்கேயும் தேடித் திரிந்து என்ன பலன்? தில்லை அம்பலத்தில் ஆடுகிற சிவன் என்னைப்போன்ற பக்தர்களின் நெஞ்சுக்குள் அல்லவா இருக்கிறான்?!
இறைவனின் வீடு, பக்தர்கள் நெஞ்சம் என்றார் திருநாவுக்கரசர். அதைக் கொஞ்சம் நீட்டி, தெளிவான சிந்தனை உள்ளவர்கள், திறந்த மனம் கொண்டவர்கள், கல்வியில் வல்லவர்கள், கலையில் சிறந்தவர்கள், குழந்தைகள் நெஞ்சிலெல்லாம் அவன் இருப்பான் என்கிறார் கண்ணதாசன்.
சரிதானே? கொஞ்சம் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்!
***
என். சொக்கன் …
09 09 2013
282/365
uma chelvan 9:31 pm on September 9, 2013 Permalink |
இதே பாடலில் வரும் இன்னும் ஒரு வரியும் மிக மிக நன்றாக இருக்கும்.” அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை” !!!
rajinirams 9:19 am on September 10, 2013 Permalink |
அருமையான பதிவு.இறைவன் வேறெங்கெல்லாம் இருப்பான் என்று சொல்லும் வாலியின் வரிகளை பாருங்கள்-” அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்,இசை பூங்குயிலின் தேன்குரலில் இருப்பான்,குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்,தளிர் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்-பல நூல் படித்து நீ அறியும் கல்வி,பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்,பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்,இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்-பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்-அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்-இதோ எந்தன் தெய்வம் முன்னாலே,நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே-படம்-பாபு.
பாபா படத்தில் ரஜினி நாத்திகராக இருக்கும்போது பாடப்படும் பாடல்-டிப்பு டிப்பு குமரி-அந்த பாடலில் ஒவ்வொரு பருவத்தை பற்றியும் பாடும்போது “குழந்தை குழந்தை மனது-அது கடவுள் வாழும் மனது”என்ற வரி வரும்.படத்தின் கதாபாத்திரம் நாத்திகர்-எப்படி கடவுள்? சரி கவிஞர் வைரமுத்து அவர்களிடமே கேட்டு விடலாம் என்று எண்ணி தொலைபேசியில் கேட்டேன்-அவர் கொஞ்சமும் யோசிக்காமல் அடுத்த நொடியே “அதில் ஒன்றும் தவறில்லை-நாத்திகரான அறிஞர் அண்ணாவே சொல்லியிருக்கிறார்-ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று.அது போல தான் இதுவும் என்று சொல்லி தன் திறமையை வெளிப்படுத்தி தெளிவுபடுத்தினார். நன்றி.
uma chelvan 6:37 pm on September 11, 2013 Permalink |
very nice reply & comment.
amas32 1:50 pm on September 10, 2013 Permalink |
ஜேம்ஸ் ஹண்ட் என்ற ஆங்கில கவிஞர் எழுதிய Abou Ben Adam என்ற அற்புதக் கவிதை நினைவுக்கு வருகிறது. (சுட்டி இங்கே http://www.poemhunter.com/poem/abou-ben-adhem/ ) இறைவனை விரும்புவோர் பட்டியலை எழுதும் தேவதையிடம் தன் பெயர் உள்ளதா என்று கேட்கிறார் அபு பென் ஆடம். இல்லை என்று சொல்லும் தேவதையிடம் பரவாயில்லை, என் பெயரை சக மனிதனை நேசிக்கும் பட்டியலில் சேர்த்துவிடு என்பார். அடுத்த நாள் இரவு பெரு ஒளியுடன் வந்த தேவதை அவரிடம் இறைவன் ஆசிர்வதித்த பெயர் லிஸ்டைக் காண்பிகிறது. அதில் அவன் பெயர் தான் முதலிடம் வகித்தது.
கிருஷ்ண பரமாத்மாக்கு ஒரு முறை உடல் நலமில்லாமல் போகிறது. எந்த வைத்தியத்துக்கும் சரியாகாமல் இருக்கும் பொழுது கிருஷ்ணன் கோகுலத்தில் இருக்கும் கோபியர் கால் தூசியை வாங்கி வருமாறு சொல்கிறார். அதைத் தஹ்டவிக் கொண்டாள் தனக்கு உடல் நிலை சரியாகிவிடும் என்கிறார். இதைக் கேட்ட உத்தவர் அரண்டுப் போகிறார். ஆனாலும் கண்ணன் ஆணைப்படி கொகுலத்துக்குப் போகிறார். அவர் வரப் போகிறார் என்று சூக்ஷமாமக்த் தெரிந்து ஏழு வண்டி நிறைய கோபியர்கள் கால் தூசியை சேகரித்து வைத்திருக்கிண்டனர், உத்தவரிடம் கொடுக்க!
இறைவனின் ஊடுருவல் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப் படுத்தி இறைவன் வாழும் ஆலயம் ஆக்குகிறது 🙂 அந்த பக்தனின் பாத துளி இறைவனுக்கே மருந்தாகிறது 🙂
amas32