ஆயுத எழுத்து
நேற்று சென்னையில் நடந்த ஆசிரியர் தின விழாவில் இந்தியாவின் பெருமை வாய்ந்த கலாசாரம், குருவை மதிக்கும் பண்பு என்ற வழக்கமான cliche சொற்பொழிவுகள்தான். ஒருவர் தினமும் காலையில் நாளிதழ்களில் செய்திகளைப் பார்த்தால் இது இந்தியாவா என்று சந்தேகம் என்றார். இன்னொருவர் ஊடகங்கள் விதிவிலக்குகள் மேல்தான் வெளிச்சம் போடும், ஆனால் இந்தியா ஒரு உன்னத தேசம் என்றார்.
நிகழ்ச்சியின் இடையில் பாரதியின் வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் பாடலை ஒலிபரப்பினார்கள். இந்தியா ஒரு மகத்தான தேசம் என்பதை பாரதியார் நம்பிய அளவுக்கு வேறு யாருமே நம்பவில்லை என்று தோன்றுகிறது. எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம் என்று நம் நாட்டின் பெருமை சொல்கிறார்
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.
திரையில் கப்பலோட்டிய தமிழன் படத்தில் ஜி ராமநாதன் இசையில் திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல். https://www.youtube.com/watch?v=eYJFwd85SDk
உழவு, நெசவு, தொழிற்சாலைகள், நதி நீர் பங்கீடு, infrastructure, நிலத்தடியில் இருக்கும் வளம், கலை, ஓவியம் என்று உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம் என்று சொல்லும் அற்புதமான வரிகள்.
ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.
இந்திய அமைதி விரும்பும் நாடல்லவா? ஏன் மகாகவி ஆயுதம் செய்வோம் என்கிறார்? மாலன் ஒரு சிறுகதையில் இதற்கு ஒரு சுவாரசியமான twist தருகிறார். வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பும் நாயகன் சில நிகழ்வுகளை கண்டு மனம் வருந்தி மாற்றம் தேவை, அதற்கு ஆயுதம் ஏந்திய புரட்சி வேண்டும் என்றும் ஆனால் இதற்கு எழுத்துதான் சரியான ஆயுதம் என்றும் நினைக்கிறான். Pen is mightier than sword. மகாகவி ஆயுதம் செய்வோம் என்று சொல்லி உடனே நல்ல காகிதம் செய்வோம் என்று அதை qualify செய்கிறார் என்று ஒரு interpretation தருவான். பாரதி நினைத்தது வேறாக இருக்கலாம். ஆனால் எனக்கு மாலன் சொல்லும் கோணம் பிடித்திருக்கிறது.
திரைப்பாடல்களில் ஆயுதம் காதல் கணைகளாகவும் அடித்தட்டு மக்களின் குரலாகவும் அடிக்கடி வரும். வேறு கோணம் இருக்கிறதா என்று தேடினால் ஆயுத எழுத்து படத்தில் வைரமுத்து ஜன கன மன என்ற பாடலில் (இசை / பாடியவர் ஏ ஆர் ரஹ்மான் )
http://www.youtube.com/watch?v=nbUPFfxQzHA
ஆயுதம் எடு ஆணவம் சுடு
தீப்பந்தம் எடு தீமையை சுடு
இருளை எரித்துவிடு
என்று எழுதுகிறார். இதில் அறியாமை என்ற இருள் அழிக்க என்று பொருள் கொண்டால் அதற்கான ஆயுதம் எழுத்தறிவித்தல் தானே? நல்ல காகிதம் என்பது நாளிதழ்கள் மட்டுமல்ல நல்ல கல்வி முறையும் தானே?
மோகனகிருஷ்ணன்
280/365
rajinirams 1:21 am on September 8, 2013 Permalink |
என் அண்ணன் படத்தின் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு பாடலில் “ரெண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து அதில் நீதி வரவில்லையெனில் வா வாளை எடுத்து என்று எழுதி அது ஏற்கப்படாமல் “வெற்றி உன்னை தேடி வரும் பூ மாலை தொடுத்து என்று மாற்றினார்.நீங்கள் மனிதா மனிதா பாடலில் வைரமுத்துவும் “சாட்டைகளே”இனி தீர்வுகள் என்பது சூசகமானதடா”என்று எழுதியிருப்பார் என்றாளும் நீங்கள் சொன்னது போல் அறியாமையை விலக்க கல்வியே சிறந்த ஆயுதம்.நன்றி.
uma chelvan 6:01 pm on September 8, 2013 Permalink |
சிறந்த கல்வி ஒருவரை மிகவும் உயர்வான இடத்திருக்கு கொண்டு செல்லும். வைரமுத்து பாடலில் ” ஆயுதம் எடு ஆணவம் சுடு ” என்பது வேறு ஒரு விஷயம் அவர் மனதில் எப்பவும் கனன்று கொண்டே இருக்குமோ என்று நினைக தோன்றுகிறது.????
amas32 1:58 pm on September 10, 2013 Permalink |
சூப்பர் போஸ்ட் மோகன்
//ஆயுதம் எடு ஆணவம் சுடு
தீப்பந்தம் எடு தீமையை சுடு
இருளை எரித்துவிடு//
Lovely lines!
முன்பெல்லாம் அவதாரங்கள் ஒரு அரக்கனை அழிக்க வடிவெடுத்தன. இன்றோ நம்முள்ளே தான் நல்லதும் தீயதும் அடங்கி இருக்கின்றது. இன்று தேடிப் பார்த்தால் ஒரு முழு நல்லவனும் இல்லை, ஒரு கேட்டவநிடமும் சில நற்குணங்கள் ஒளிந்துள்ளன. அதனால் நம்முள் இருக்கும் தீமையை அழிக்க கல்வி என்னும் ஆயுதத்தைக் கொண்டு தான் நிறைவேற்ற முடியும். அறிவுச் சுடர் கொண்டு தான் இருளை அகற்ற முடியும் 🙂
amas32