காய் நிலவும் கனி நிலவும்
- படம்: பலே பாண்டியா
- பாடல்: அத்திக்காய் காய் காய்
- எழுதியவர்: கண்ணதாசன்
- இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
- பாடியவர்கள்: டி. எம். சௌந்தர்ராஜன், பி. சுசீலா, பி. பி. ஸ்ரீனிவாஸ், ஜமுனா ராணி
- Link: http://www.youtube.com/watch?v=muWBARd3oAk
அத்திக்காய் காய் காய், ஆலங்காய் வெண்ணிலவே,
இத்திக்காய் காயாதே, என்னைப்போல் பெண்ணல்லவோ!
கன்னிக்காய், ஆசைக்காய், காதல் கொண்ட பாவைக்காய்,
அங்கே காய், அவரைக் காய், மங்கை எந்தன் கோவைக்காய்!
ஒரு படை வீரன், கடமை அழைக்க, போர்க்களத்துக்குச் சென்றுவிடுகிறான்.
அவனைப் பிரிந்து வாடும் காதலி, தவிக்கிறாள், துடிக்கிறாள், வானத்தில் இருக்கும் முழுச் சந்திரனும் அவளுக்குச் சூரியனைப்போல் சுடுகிறது. அதைப் பார்த்துப் பேசுகிறாள்:
‘அத்திக்காய்க் காய் காய், ஆலங்காய் வெண்ணிலவே,
இத்திக்காய்க் காய்ந்துனக்கு என்ன பயன்?’
இங்கே அத்திக்காய், ஆலங்காய் என்பவை காய்களின் பெயர்கள் அல்ல, ’ஆலத்தைப்போலக் (அதாவது, விஷத்தைப்போலக்) காய்கிற (அதாவது, சுடுகிற) வெண்ணிலவே, அத் திக்காய் (அதாவது, அந்தத் திக்காக, என் காதலன் இருக்கும் அந்தத் திசையில்) சென்று காய்வாயாக, இத் திக்காய் (அதாவது, இந்தத் திக்கில், நான் இருக்கும் இந்தத் திசையில்) மட்டும் காய்வதால் உனக்கு என்ன பயன்?’ என்கிறாள் அந்தப் பெண்.
இதன் அர்த்தம், ’நிலவே, நீ என்னையே சுட்டுகிட்டிருக்கியே, என்னைப் பிரிவுத் துன்பத்தில வாடவைக்கற அந்தக் காதலன் இருக்கற திசையிலும் போ, அவனையும் கொஞ்சம் நல்லாச் சுடு, அப்போதாவது அந்தப் பயலுக்கு என் ஞாபகம் வருதான்னு பார்ப்போம்!’
அவள் அதோடு நிறுத்தவில்லை, ‘பற்றில் அவரைக் காய், கோவைக் காய்’ என்கிறாள். அதாவது, (என்மீது) பற்று இல்லாத என் காதலனைச் சுடு, அவனைப் போருக்கு அழைத்துச் சென்ற அவனுடைய தலைவன் (கோ) இருக்கிறானே, அவனையும் சுடு!’
இத்தனை சூட்டையும், ஒரு சந்தோஷமான காதல் பாட்டுக்குள் கண்ணதாசன் எப்படிக் கச்சிதமாக இறக்கியிருக்கிறார் என்று மேலே படித்துப் பாருங்கள்!
***
என். சொக்கன் …
11 07 2013
222/365
ranjani135 8:41 pm on July 11, 2013 Permalink |
அருமை, அருமை!
Uma Chelvan 9:00 pm on July 11, 2013 Permalink |
OMG, I never Thought that this song means this way !!! ’நிலவே, நீ என்னையே சுட்டுகிட்டிருக்கியே, என்னைப் பிரிவுத் துன்பத்தில வாடவைக்கற அந்தக் காதலன் இருக்கற திசையிலும் போ, அவனையும் கொஞ்சம் நல்லாச் சுடு, அப்போதாவது அந்தப் பயலுக்கு என் ஞாபகம் வருதான்னு பார்ப்போம்! Wonderful!!.excellent.
ranjani135 10:00 pm on July 11, 2013 Permalink |
அன்புள்ள திரு சொக்கன்,
இந்த கட்டுரையின் இணைப்பை எனது தளத்தில் பகிர்கிறேன், உங்கள் சம்மதத்துடன்.
அன்புடன்,
ரஞ்சனி
அத்திக்காய் காய் காய்… | இரண்டாவது எண்ணம்! 10:03 pm on July 11, 2013 Permalink |
[…] பாடலின் பொருளை திரு சொக்கன் இங்கே […]
Arun Rajendran 11:08 pm on July 11, 2013 Permalink |
இந்தப் பாட்டுல “கனியிருப்பக் காய் கவர்ந்தற்று” பொய்த்துப் போகிறதோ? 🙂
ஆனா படமாக்குன விதம் தான் பாடலுக்குப் பொருந்தி வரல 😦
நன்றிங்க சொக்கன் சார்
pvramaswamy 5:33 am on July 12, 2013 Permalink |
எனக்கு ரொம்பவும் பிடித்தப் பாடல். நான் பிறகு எப்போதாவது எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். உங்கள் எழுத்தில் இன்னும் ‘லாகவ’மாக ( நன்றி: @elavasam ) வந்திருக்கு. ஒரு குறை. பாட்டு முழுவதையும் விளக்கத்தோடு எழுதியிருக்கலாம்.
Saba-Thambi 10:47 am on July 12, 2013 Permalink |
பாடல் முழுவதும் வரும் காய்கள் அத்தனையும் சிலேடை தானே ?
அல்லது ஒரே சொல் பெயராகவும் வினையாகவும் அமையும் பதமா?
amas32 10:56 pm on July 12, 2013 Permalink |
எனக்கு மிகவும் பிடித்தப் பழைய பாடல் இது. பலமுறை கேட்டாலும் புதுசுப் போல தோன்றும். ஒவ்வொரு வரிக்கும் இரு பொருள்கள் வரும். அதுவும் கருத்தும் பாடலின் தேவைக்கேற்ப இருக்கும்.கவியரசரின் ரொம்ப நல்ல பாடல்களில் இதுவும் ஒன்று. நாலு வரி நாட்டிற்கு perfect song selection 🙂
amas32
rajinirams 10:25 am on July 14, 2013 Permalink |
தமிழ் திரையுலகின் மிக முக்கியமான சிலேடை பாடல். தங்கள் விளக்கமும் அருமை.பாடல் முழுக்க கவியரசரின் கவித்திறமை பளிச்சிடும்.
Sakthivel 3:02 pm on July 17, 2013 Permalink |
என்ன ஓர் அர்த்தம் உள்ளே வைத்து இருக்கிறார்…!!! உண்மையில் மிக பெரும் பிரமிப்பை ஏற்படுத்திவிட்டார்.